29.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 40


 29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்? - 9

.:  நானே ஒரு நேர்வை அறிவேன். தமிழ்த் தேசிய உணர்வுள்ள இளைஞர்கள் சிலரை 1980களின் தொடக்கத்தில் நெல்லையில் திரட்டி சில முயற்சிகளில் ஈடுபட்டேன். அவர்களில் தி.க.வினர் மிகுதி. அப்போது அறிமுகமான முகம்மதிய இளைஞரின் தந்தையான பணிநிறைவு பெற்ற தலைமைக் காவலர் நண்பரானார். ‘முகம்மதியம் பகுத்தறிவுச் சமயம் என்ற பெரியாரின் கூற்றை நம்பி மதம் மாறினேன். இப்போது பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்லவில்லை என்பதற்காக ஊரிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுகிறார்களே’ என்று அவர் ஒரு முறை கண்ணீர் வடித்தார். மகனும் சமய வெறி பிடித்து அலைவதாக வருந்தினார்.

      குமரி மாவட்டத்தில் திராவிடர் கழகக் கூட்டங்களில் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் பெருமளவில் கலந்து கொண்டதையும் இந்து சமய வெறியர்கள் கிறித்துவ, முகம்மதிய சமயங்களைக் குறைகூறிக் கலகம் விளைத்ததையும் மூத்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  

      அம்மணர்கள், அதாவது பனியாக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை, அவர்களது முற்றுடைமையான தொழில் – வாணிகத் துறைகளில் போட்டியாளர்கள் நுழைய அது வழி வகுத்துவிடுமே! ஆனால் திராவிட இயக்கத்தினர் அம்மண சமயம் பகுத்தறிவுள்ள, வருண முறைக்கு எதிரான சமயம் என்ற பொய் பரப்பலில் முழுமூச்சுட்ன் ஈடுபட்டு பனியாக்களின் குமுக மதிப்பை உயர்த்தினர்.

செ.:அப்படியானால் தமிழகத்தில் சாதி உணர்வுகள் மங்கியதில் பெரியாரின் பங்கு எதுவும் இல்லை என்கிறீர்களா?

.:  அப்படிக் கூறவில்லை. அண்ணாத்துரை தீர்மானம் எனப்படும் சேலம் மாநாட்டுத் தீர்மானத்தில் கழக உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்பதில் நயன்மைக் கட்சியிலிருந்து தொடர்ந்து வந்த சிலரை அகற்றும் நோக்கமும் உண்டு, இந்திப் போராட்டத்தைத் தான் தொடங்கியது இந்தி மீதான வெறுப்பாலோ தமிழ் மீதான பற்றாலோ அல்ல, அது அரசியல் நோக்கம் கொண்டது என்று சொன்னாரே அது இதற்கும் பொருந்தும். அப்படியானால் இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்திராத, சாதிப் பெயர் ஒழிப்பின் பின்னணி என்றவென்று கேட்கிறீர்களா? எப்படி காந்தியை நம்பி நம்மூர் பேரவைக் கட்சிப் பெரியவர்கள் பலர் சாதி ஒழிப்பில் முனைப்புக் காட்டினரோ அப்படித்தான் திராவிட இயக்கத்தில் பெரியாரின் சொற்களை தலைமேல் தாங்கி தங்கள் சாதி மறுப்பு உள்ளுணர்வுக்கு வடிகால் வகுத்தனர். வருண முறையைப் போற்றிய, சாதிகள் நிலைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடனேயே நாட்டுப்புறங்கள்தாம் இந்தியாவின் உயிர்நாடி என்று பறைசாற்றிய, சாதிகளை ஒழிக்க வேண்டாம், தீண்டாமையைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கூறிய காந்தியைத் தாண்டி தமிழகத்தில் சாதி ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்ற பேரவைக் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் இதில் திராவிட இயக்க உள்ளூர்த் தலைவர்களுக்குத் தரத்தில் குறைந்தவர்களில்லை.     

செ.:ஆக, சாதி ஒழிப்புக்கு இட ஒதுக்கீடு என்ற ஒற்றைத் தீர்வைப் பெரியார் வைத்தது இன்று சாதிய ஏற்றத்தாழ்வு என இருந்த இடத்தில் சாதியப் பகைமையை உருவாக்கியுள்ளது என்று கூறலாமா? அரசுக்கு எதிரான மக்கள் பொருளியல் உரிமைப் போராட்டம் சாதிப் பகைமைகளையும் பிளவுகளையும் மங்கவைக்கும் என்ற நிலைப்பாட்டையும் கொள்ளலாமா?

.:  மிகத் துல்லியமாகத் தொகுத்துக் கூறிவிட்டீர்கள்.

செ.:சாதிகளின் ஒழிப்புக்கு வேறு என்ன பின்புலம் வேண்டுமென்று கூறுகிறீர்கள்?

.:  ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் குழுவினர் தங்களை ஒடுக்குவோரை எதிர்த்துப் போராட வேண்டுமாயின் ஒன்று ஒடுக்கப்படுவோர் பிரான்சில் போல் எண்ணிக்கையில் ஒடுக்குவோரைப் பார்க்கிலும் மிக உயர்ந்திருக்க வேண்டும். அங்கு அரசர்களுக்கும் மேற்குடியினருக்கும் இருந்த கூர்மையான முரண்பாடும் அவர்களுக்கு உதவியது. தமிழகத்தில் நிலைமை இரு தன்மைகளில் மாறுபடுகிறது. முதலாவது ஒடுக்கப்படும் சாதியினர் எண்ணிக்கையில் ஒடுக்கும் சாதியினரின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருப்பதாகக் கணிப்புகள் காட்டுகின்றன, அதாவது பிரான்சில் போலன்றி இங்கு ஒடுக்குமுறை பொருளியல் ஒடுக்குமுறையை மறைக்கும் குமுகியல் ஒடுக்குமுறையாக உள்ளது. இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த பொருளியலில் மேம்பட்ட குழுவினர் பொருளியலில் வலுவற்ற தம் சாதியினரை பொருளியலிலும் குமுகியலிலும் ஒடுக்கப்படும் சாதியைச் சார்ந்தவர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டுவிடுகின்றன.

செ.:தமிழகச் சூழலில் பொருளியலில் ஒடுக்கப்படும் மக்கள் சாதி வரம்புகளை மீறி ஓன்றுபட்டு நின்ற நிகழ்வே இல்லையா?

.:  ஒப்பற்ற ஒரு முன்னிகழ்வு உண்டு. பேரரசுச் சோரர்கள் கோயில்களுடன் சேர்ந்து நடத்திய கொடும் வரிக் கொள்ளையைத் தாக்குப்பிடிக்க முடியாத மக்கள் தங்களுக்குள் வலங்கை – இடங்கை எனப்பட்ட இரு பிரிவாகிய சாதிகளையும் சேர்ந்த மக்களும் ஒன்று திரண்டு பெரும் புரட்சியை நடத்தி ஓர் அரசனை(அதிராசேந்திரன்)க் கொன்று கோயில்களை இடித்து பார்ப்பனப் பூசகர்களைக் கொன்றதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஆனால் அதில் இரங்கத்தக்க ஒரு பக்கம்  என்னவென்றால் பிரான்சில் போல் மேற்குடி மக்கள் திரண்டு மன்னனுக்கு மரண தண்டனை வழங்கியது போலன்றி அரண்மனைதச் சூழ்ச்சியின் ஒரு நிகழ்வாக இராசராசனின் ஆண்வழி அரசனைக் கொன்று பெண்வழியில் வந்த சாளுக்கிய அரசனின் தந்திர நடவடிக்கையாக அந்தப் புரட்சி இழிந்து போனது. அத்துடன் அது நிற்கவில்லை. புரட்சியின் போது ஒன்றிணைந்த மக்களை, சில சாதிகளுக்கு விருதுகள் எனப்படும் சில குடியுரிமைகளை அளிப்பதன் மூலம் பிற குழுக்களுக்குள் பொறாமையை விதைத்து வலங்கை, இடங்கைப் பிரிவினரிடையில் கொலைப் பகையை உருவாக்கி அடுத்த 8 நூற்றாண்டுகள், ஆங்கிலர்கள் வந்து முடிவுகட்டும் வரை எப்போது எங்கு எதனால் நிகழும் என்று கணிக்க முடியாத கொலைவெறிச் சண்டைகளுக்கு வழியமைத்தான். இரு குழு மக்களும் தங்களுக்கு இக் கலவர இழப்புகளிலிருந்து துயர்துடைப்புக்காகவும் “நயன்மை” வேண்டியும் தங்கள் உண்மையான பகைவர்களான அரசர்கள், பார்ப்பனர்கள் முன் கைகட்டி நின்றார்கள். 

.:  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஊழல் கலை வித்தகர் கருணாநிதி அவ் வப்போது தான் எந்தெந்த சாதியினருக்கு, சமயத்தினருக்கு என்னென்ன உயர் பதவிகள் வழங்கியுள்ளதாக பட்டியல்களை வெளியிட்டு பிற குழு மக்களுக்கு அம் மக்கள் மீது பொறாமையும் பகைமையும் மூட்டி விடுவது போலல்லவா இருக்கிறது? உயர் பதவிகள் அனைத்தையும் ஏறக்குறைய குடும்பச் சொத்துகள் போலக் கைப்பற்றும் உயர்சாதியினர் அந்தப் பதவிகளில் எத்தனை பெற்றனர் என்ற செய்தி எதுவும் அந்தப் பட்டியலில் இருப்பதுமில்லையே!

செ.:விருதுகள் என்றால் என்ன?

.:  இன்றைய நிலையில் பார்த்தால் இவற்றில் பெரும்பாலானவை மக்களின் சராசரியான குடிமை (சிவில்) உரிமைகளே. தலைப்பாகை கட்டுதல், செருப்பணிதல், குடை பிடித்தல், சிறு கத்தி வைத்திருத்தல், பல்லக்கில், குதிரையில் செல்லுதல், பெண்கள் மார்பகங்களை மறைத்தல், பொன்ம(உலோக)க் கலன்களில் சமைத்தல், தாளிதம் செய்தல் போன்றவை அவை. இவை போக உயர் வகுப்பினர், அதிகாரிகளுக்கென்று சிறப்பான உரிமைகள் உண்டு. அவர்கள் செல்லும் போது முன்னும் பின்னும் ஒற்றைச் சங்கு, இரட்டைச் சங்கு ஊதுதல், கோயில் கணிகையர் முன்னாலும் பின்னாலும் சதிர் எனப்படும் நாட்டியம் ஆடுதல், செல்லும் பாதையில் நடைபாவாடை எனப்படும் துணி விரித்தல், தலைக்கு மேலே மேல்பாவாடை எனப்படும், துணியைப் பிடித்தல் போன்றவை அவை. மொத்தத்தில் 72 விருதுகள் வழங்கப்பட்டனவாம். பாலத்தீனத்திலிருந்து உரோமானியர்களால் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் துரத்தப்பட்ட யூதர்களில் சேரக் கடற்கரையில் வந்து இறங்கியவர்களுக்கு இந்த விருதுகள் 72ஐயும் கேரள அரசன் வழங்கியுள்ளான்.

.:  நம் ஆட்சியாளர்கள் எப்போதும் மக்கள் பகைவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். வெளியிலிருந்து வருவோரைப் பிற நாடுகளில் கொஞ்சமாவது எச்சரிக்கையுடன் அணுகுவார்கள். ஆனால் நம்மவர்களோ அயலவர்களை உள்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்துவதைத் தங்கள் பொது அணுகலாகக் கொண்டுள்ளனர்.

.: இது பெரும்பாலும் வந்தேறிகளான சேர, சோழ, பாண்டியர்கள் இந்த மண்ணின் மக்களை, குறிப்பாக பறையர்களை அடக்க ஏறக்குறைய 13 நூற்றாண்டுகள் நடத்திய கடும் போரின் விளைவான மனநோயாக இருக்க வேண்டும்.

செ.:வலங்கை – இடங்கைப் பிரிவனரின் வரையறை என்ன?

.:  பொதுவாக, தொழில் வாணிகக் குழுக்கள் அனைத்தும் இடங்கைப் பிரிவினராகவும் அரசு, கோயில்கள் சார்ந்தவர்கள் வலங்கையினராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வலங்கை 98, இடங்கை 98 என்ற எண்ணிக்கையில் சாதிகள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன். ஒரே சாதியில் பெண்கள் வலங்கை வகைப்பாட்டினுள்ளும் ஆண்கள் இடங்கை வகைப்பாட்டினுள்ளும் அடக்கப்பட்ட விந்தையும் இந்தப் பாழாய்ப் போன தமிழகத்தில் நடந்துள்ளது.

.:  அது எந்தச் சாதி?

.: கைக்கோள முதலியார்கள் எனப்படும் கைக்கோளர்கள்தாம் அவர்கள். கைக்கோளப் பெண்கள் கோயில்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர்கள், அதனால் வலங்கையினர். ஆடவர்கள் நெசவாளிகள், அதனால் இடங்கையினர்.

.:  இதனால் அவர்களது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாதா?

.:  ஏற்பட்டவற்றைச் சிக்கல் என்றா குறிப்பிடுவது? கொடுமை என்பதா, இழிவு என்பதா, விலங்குத்தனம் என்பதா, அதைக் குறிப்பிடுவதற்கு தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் சொற்கள் இருக்குமென்று நான் நம்பவில்லை.

செ.:இப்படி நீங்கள் பதறுமளவுக்கு என்னதான் நடந்தது?

.:  சொல்கிறேன். நான் ஏற்கனவே கூறினேனல்லவா, எப்போது, எங்கு வேண்டுமானாலும் வலங்கை – இடங்கை கோலைவெறிக் கலகங்கள் நிகழுமென்று, அவ் வேளைகளில் கைக்கோளர்களைப் பொறுத்தவரை இடங்கையினரான கணவர்களை வலங்கையினர் தம் கண் முன்னே கொலை செய்யும் போது வலங்கையினரான அவர்களின் மனைவிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களாம்.

செ.:நம்ப முடியவில்லையே, நீங்கள் சொல்வது உண்மையா?

.:  அவர் சொல்வது உண்மைதான். கே.கே.பிள்ளை தன் தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் நூலில் தந்திருக்கும் செய்திதான் இது.

செ.:சேச்சே! தூ! தமிழன் என்று சொல்லவே, ஏன் நினைக்கவே வெட்கமாக, அருவருப்பாக இருக்கிறது. இந்த வலங்கை – இடங்கைப் பூசல் எப்போது எந்தச் சூழலில் தோன்றியது என்பது குறித்துக் கூற முடியுமா?

.: ஓரளவு தடம் பிடிக்க முடியும். வரலாற்றில் நாம் அறிந்த வரை வரலாற்றில் முதன் முதல் வலது – இடது என்ற பிரிவு பற்றிய பதிவு கி.மு.671 – 617 வரை எகிப்தை ஆண்ட சம்மாட்டிக்கசு காலத்தின் அவன் படைவீரர்களிடையில் ஏற்பட்டதைக் குறித்ததாகத் தெரிகிறது. இது பற்றி திரு. எசு.வி.எசு.இராகவன் அவர்கள் எழுதியுள்ள ஃஇராடாட்டசு (484 – 408) வரலாறுகள் என்ற நூலில் தரப்பட்டுள்ளவை: சம்மேட்டிக்கசு சீதோ மன்னருக்குப் பின் மற்ற அரசர்களால் நாடுகடத்தப்பட்டு அயோனியர், காரியர் இனத்துக் கொள்ளையர்களின் துணையோடு எகிப்தின் அரசரானார். வெளிநாட்டினர் பணியிலமர்த்தப்பட்டதன் காரணமாக 2,40,000 எகிப்திய வீர்ர்கள் எத்தியோப்பியாவில் குடியேறினர்……. டெசர்ட்டர்கள் எனும் மக்கள் நைல்சு ஆற்றின் கரையில் வாழ்கின்றனர். இவர்கள் பெயர் அஷாம் என்பதாகும். சம்மேட்டிக்கசு காலத்தில் வெளியேறிய 2,40,000 எகிப்திய வீரர்கள் இவர்கள். அஷாம் என்றால் கிரேக்க மொழியில் அரசரின் இடப்பக்கம் நிற்பவர் என்று பொருள்[1]. இவர்கள் 3 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தனர். இது பிடிக்காமல்தான் எத்தியோப்பியாவுக்குச் சென்றனர். சம்மேட்டிக்கசு அவர்களை ஓரிடத்தில் சந்தித்து உங்கள் மனைவி, குழந்தைகள் தெய்வங்கள் யாவரையும் தவிக்விட்டுச் செல்வது நியாயம்தானா உடன் திரும்பி விடுங்கள் என்று பணிந்து இரங்கி அழைப்பு விடுத்தார். ஆனால் அவ் வீரர்களின் தலைவன் தன் மறைவிடத்திலிருந்த ஆண்குறியைத் தொட்டுக் காண்பித்து இது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் மனைவிகளையும் மக்களையும் சம்பாதித்துக் கொள்வோம், தாங்கள் அதற்குக் கவலற்க என்று மிடுக்காகப் பதிலளித்தான். அந்த வீரர்களை எத்தியோப்பிய அரசன் வரவேற்றுத் தன் அரசில் இருக்குமாறு செய்து தனக்குப் பகையாக விளங்கிய சில எத்தியோப்பிய மக்களை ஒழித்துக் கட்ட அவர்களைப் பயன்படுத்திக் கொண்டான். – உலகின் பெரும்பான்மை அரசர்களுக்கோ படைஞர்களுக்கோ நாடு, மக்கள் நலன் பற்றிய கவலைகள்  என்றுமே இருந்ததில்லை என்பதற்கான ஒரு வரலாற்றுப் பதம் இது என்பது நம் குறிப்பு.
     
அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே பண்டை ஏகுபதியம் அழிவைக் கண்டுவிட்டது. தமிழகத்தில் கழக இலக்கியக் காலத்திலேயே அரண்மனைகளில் யவனப் பெண்கள் யவனத்துக் கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றித் தந்த, யவன வாணிகர் கொண்டு இறக்கிய சாராயத்தை அரசனுடன் அமர்ந்து குடித்துவிட்டு அவனது புகழைப் பாடினர் புலவர்கள். பண்டியனின் கோட்டை வாயிலை யவனக் காவலர்கள் காத்ததைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. அப்போதே கழகக் காலத் தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. பல்லவர்கள் தொடங்கிவைத்த பெருங்கோயில் பண்பாட்டின் ஒரு வளர்ச்சி நிலை கோயில் சார்ந்ததாக நாட்டின் பொருளியலையும் அத்துடன் ஆட்சி நடவடிக்கையையும் மாற்றியது. எனவே அரசு, அதன் உள்ளூர் ஆட்சி அலகுகளாகத் திகழ்ந்த கோயில்கள் ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர் வலங்கைச் சாதியினராகவும் கைத்தொழில் உட்பட அனைத்துத் தொழில்களிலும் ஈடுபடுவோர் இடங்கைச் சாதியினராகவும் வகுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன எனலாம்.

.:  பல்லவர்கள் காலத்திலிருந்து இது தொடங்கிவிட்டதாகக் கூறலாமா?

.:  கூறலாம் என்றே தோன்றுகிறது. இராசராசனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் காலத்தில்தான் வலங்கை – இடங்கைப் பூசல் நிகழ்ந்ததைக் காட்டும் முதல் பொறிப்பு உள்ளதாக கே.கே.பிள்ளை கூறுகிறார்.

.:  அதிராசேந்திரன் கொலைப்பட்ட புரட்சியை வழிநடத்தியவன் குலோத்துங்கன் என்பதற்கான சான்றுகள் உள்ளனவா?

.:  பொறிப்புகள் செப்பேடுகள் போன்ற சான்றுகள் இல்லை. ஆனால் தடயங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் உண்மைகளை உய்த்தறியலாம்.

செ.:அப்படிக் கிடைத்த தடயங்கள் யாவை?

.:  ஒன்று, சாணார்கள் என்றும், சான்றோர்கள் என்றும் அறியப்படும் நாடார்களின் வரலாற்றைக் கூறும் வலங்கை மாலை, வலங்கையர் கதை ஆகியவை. சோழ அரசன் நீண்ட கால வரட்சியைப் போக்க என்ன வழி என கொலுவில் ஆயும் போது, ஒரு பத்தினி அரசவைக்கு வந்து மழை பெய்ய ஆணையிட்டால் மழை பெய்யும் என்று ஒருவர் கூற, பத்தினிப் பெண் ஒருத்தியை இனங்கண்டு கூற மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறான். கிணற்றில் நீரெடுத்துக்கொண்டிருந்த ஒரு பொற்கொல்லன் மனைவி கணவன் கூப்பிட்டதும் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வீட்டினுள் ஒட, விட்ட கயிறு அப்படியே (திருவள்ளுவர் கதையில் போல்) நிற்பதைப் பனையிலிருந்து பார்த்த சாணான் அதை அரசனுக்கு அறிவிக்க, அரசன் அவளை அவைக்கு வரவழைத்து மழை பெய்யுமாறு ஆணையிட வேண்ட, தன்னை அரசவை நடுவில் கொண்டுவிட்ட சாணான் குலம் அழியும் அளவுக்கு மழை பெய்ய சாவம் இட்டாள் அவள். ஆற்று உடைப்பை அடைக்க ஆள் திரட்டும் போது பனை ஓலைக் கூடை தவிர வேறு கூடையைத் தொட அவர்கள் மறுக்க, அவர்கள் தலைவர்கள் எழுவரைப் பிடித்து கழுத்துவரை மண்ணில் புதைத்து தலைகளை யானையைக் கொண்டு இடற அரசன் ஆணையிட, இடறப்பட்ட முதல் இரண்டு தலைகளும் அத்தனை தலைகளை இடறினாலும் வேறு கூடை தொடோம் என்று சூளுரைத்ததைக் கண்டு மிரண்ட அரசன் மீதி ஐவரையும் விடுதலை செய்ததாக அந் நூல்கள் கூறுகின்றன.

செ.:இதை வைத்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?

.:  இராசுக்குமார் என்பவர் நெல் வேளாண்மையை விரிவாக்கும் கழகக் கால கரிகாலனின் நடவடிக்கைகளில் பனைக் காடுகளை அழிக்க முற்பட்ட போது ஏற்பட்ட பூசலை இது சுட்டுகிறது என்கிறார். நான் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதே வேளையில் இந்த மோதலில் சாணார்கள் காட்டிய வீரத்தால் அவர்களுக்கு படைத்துறையில் பதவிகள் வழங்கியிருப்பான் என்ற முடிவுக்கும் வரலாம். அத்துடன் இக் கதையில் வரும் நிகழ்வு போல் பனையேறிகளின் பணித் தன்மையால் மேலிருந்தே சுற்றி நடப்பவற்றைக் காண முடியும். அவர்களது இத்தன்மை பற்றி பின்னால் வந்த நாட்டுப்புறக் கதைப்பாடல்களும் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியும் கூறுகின்றன.

செ.:அதனால்?

.: இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம் என்பது உண்மையில் கோபுரமே அல்ல, கருப்பக்கிரகம் எனப்படும் கருவறையின் மீது கட்டப்படும் விமானம் எனப்படும் மேற்கட்டே
. இது உட்புறத்தில் மேலே ஏறிச்செல்ல முடியாத அமைப்பு கொண்டது. பல்வேறு அடுக்குகளைக் கொண்ட, உட்புறமாக மேலேறிச் செல்லத்தக்க மாடக் கோபுரங்கள் கோவிலின் சுற்றுச் சுவர் நுழைவாயிலில்தான் அமைக்கப்பட்டன. மேற்கட்டு மூலவரின் மேலே அமைந்துள்ளதால் அதன் மேல் யாரும் செல்ல முடியாது. கோபுரத்தில் அவ்வாறு ஏறிச்செல்லத் தடை இல்லை. இந்தக் கோபுரங்களின் மேல் மாடங்களில் கண்காணிப்புக்கு ஆட்களை அமர்த்த முடியும். இந்தப் புதிய கட்டடக்கலை உத்தியால் பனைகளில் இருந்து கண்காணிப்போரின் செல்வாக்குக்கு அறைகூவல் வந்திருக்கலாம். ஆனால் இந்தக் கோயில்களையும் கோபுரங்களையும் கட்டும் ஐந்தொழில் கொல்லர்கள் இடங்கைச் சாதியராக ஒதுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்தனர்.

செ.:ஆனால் அவர்கள் செய்வது கோயில் தொடர்பான பணிதானே?

.:  இருந்தாலும் கட்டுமான, வனப்பூட்டுதல் பணிகள் முடிந்ததும் அவர்களைக் கீழே இறக்கிவிட்டு  அவர்களால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்கத்தானே குடம் குடமாக பாலை ஊற்றி குடமுழுக்கு செய்கிறார்கள். ஆனால் இந்தத் தீட்டுக் கழிக்கும் பணி தச்சர்களிடமே இருந்தது என்பதற்கு அண்மைக் காலம் வரை நம் ஊர்ப்புறங்களில் புது வீடுகளுக்கு பால் காய்ச்சும் முன் நடு இரவில் யாரும் காணாமல் கோழிச் சேவலின் கழுத்தை அறுத்து அதன் குருதியை வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தெளித்துவிட்டு அவர்கள் போகும் மரபிலிருந்து அறிய முடிகிறது. அதன் பின்னர் வீட்டு உடைமையாளர் பழைய வீட்டிலிருந்து ஒரு விளக்கை ஏந்தி வந்து அதிலிருந்து அடுப்பு மூட்டிப் பால் காய்ச்சுவர். இன்று அந்தச் சடங்கு கிரகப் பிரவேசம் என்றும் புதுமனை புகுவிழாவாகவும் வடிவம் எடுத்துள்ளது. இங்கு பார்ப்பனப் புரோகிதர் கடாபுடா என்று மந்திரம் உளறி நெய் வார்த்து தீ வளர்த்து வீட்டின் உள்ளும் புறமும் “கங்கை தீர்த்தம்” தெளிக்கிறார்.

செ.:அரசுக் கட்டுமானப் பணிகளில் மட்டும் இன்று என்ன நிகழ்கிறதாம்? பொறியியல் துறையினர் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் முடித்து திறப்பு விழாப் பந்தல், பாதுகாப்புத் தடுப்புகள் என்று எல்லாம் முடித்த பின் வருவாய்த் துறை கடைநிலை ஊழியர் வந்து அனைவரையும் வெளியேற்ற வருவாய் அலுவலர் தொடங்கி வருவாய்த் துறையினர் வரிசைமுறையில் ஒவ்வொருவராக வந்து இடத்தைப் பிடிப்பர். பொறியியல் துறையினர் முகம் சோர்ந்து எங்கோ ஒரு மூலையில் வாடி நிற்பர்.

.:  ஆனால் ஆங்கிலர் நடைமுறையே வேறு, ஆள்வினை அலுவலர்களிலும் சிறப்பான இடத்தைப் பொறியாளர்களுக்கு வழங்கினர். பொதுப்பணித்துறை வளாகங்களுக்குள் காவல்துறை உட்பட வேறெந்தத் துறையினரும் வளாகப் பொறுப்பு அலுவலரின் முன்னிசைவு இன்றி நுழைய முடியாது. பணக்கணக்கு, பண்டங்களின் கணக்கு, கோப்பு பராமரித்தல் ஆகியவற்றுக்கு பிற அனைத்துத் துறைகளிலிருந்து மாறுபட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மாகாணம் முழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகங்களுடன் அமைந்திருந்த உண்ணோட்டக வளமனைகள்(Inspection Bunglows) பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன. மாவட்ட ஆட்சியர் உட்பட எந்த அலுவலர் தங்கியிருந்தாலும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வந்தால் காலி செய்து தர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இப்போது அந்த வளமனைகள் அனைத்தும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வளமனைப் பதிவுக்குப் பொதுப்பணித்துறையினர் இவர்கள் முன் காத்துக்கிடக்க வேண்டும். இப்போது ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் பாசன மாநாடு ஆங்கிலராட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் அங்கு வந்து கலந்துகொள்வார். 1960களில்தான் பொறியாளர்கள் படிப்படியாக வருவாய்த் துறையின் ஏவலாளர்களாகத் தரம் இறக்கப்பட்டனர். அறிவியல் தொழில்நுட்பர்களுக்கும் வழங்கிய முன்னுரிமையும் மதிப்பும்தாம் ஒரு சின்னஞ்சிறு நாட்டினரான ஆங்கிலர்கள் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் ஏன் முழு உலகையும் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தது. தொழில் – வாணிகத்துறையினர் மீது வன்மையும் பகைமையும் கொண்டு இயங்கியதால்தான் மாபெரும் “இந்தியா” வழியில் போனவன் வந்தவனெல்லாருக்கும் காலங்காலமாக அடிமைப்பட நேர்ந்தது.

      இதுதான் உண்மையான வலங்கை – இடங்கை முரண்பாட்டின் அடிப்படை, இதுதான் உண்மையான பார்ப்பனியம். விசுவகர்மர்கள் என்று கூறப்படும் ஐந்தொழிற் கொல்லர்கள் களப்பிரர் காலத்துக்குப் பின் உருவானவர்களாகவே தோன்றுகிறது. அம்மணர்கள் என்று அழைக்கப்படும், அவிழ்த்துப் போட்டு, தம் மயிரைத் தாமே பிடுங்கிக் கொண்டு அலையும் மனம் பேதலித்த அம்மணர்கள் தமிழகப் பகைவர்களால் ஏவி விடப்பட்டவர்கள். தமிழக மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட 12 குறுநில மக்களின் குடிகளான குறிஞ்சி, முல்லை மக்களுக்கு வெறியேற்றி மூவேந்தர்கள் மீது அவர்களை ஏவிவிட்டனர். களப்பிரர்கள் என்று அறியப்பட்ட இவர்கள் பண்டைத் தமிழ் நாட்டின் அரண்மனைகள், கோட்டைகள்,  கோயில்கள் என்று ஒன்று விடாமல் அடையாளம் எதுவுமின்றி அழித்தனர். இங்கிருந்த நுண்கலை, கவின்கலைச் சுவடுகளை அழித்தனர். பாணர், கூத்தர் போன்றவர்களின் வாழ்நிலைகளைத் துடைத்தெறிந்தனர். இலக்கணத்தில் கூட தொல்காப்பியத்தில் இசைப் பாடல்களுக்கு இருந்தவற்றை அழித்துவிட்டு இசையில்லா வரட்டுச் செய்யுள் இலக்கணத்தைப் புகுத்தினர். இத்தகைய ஒரு எதிர்காலத்தைக் கூர்த்தறிந்ததால்தான் இளங்கோவடிகள் எழுத்தில் பதிக்கத்தக்க தமிழக நுண்கலை - கவின்கலைச் செல்வங்களைப் பாதுகாப்பதற்கு மிகப் பொருத்தமாக வாய்த்த கண்ணகி கதையைப் பயன்படுத்தினார்.      

.:  எந்த அடிப்படையில் நீங்கள் இதைக் கூறுகிறீர்கள்?

.:  முதலில் மாந்தைப் புராணம்.

செ.:அது என்ன?

.: இலங்கையைச் சேர்ந்த மாதோட்டம் எனும் மாந்தையில் பிறர் புக முடியாத ஒரு கோட்டையில் சிற்பிகள் வாழ்ந்தனராம். அந்தக் கோட்டையை எதனாலும் அழிக்க முடியாதாம். அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு புல்லைப் போட்டு நெருப்பூட்டினால் மட்டும் கோட்டை அழியுமாம். ஒரு பார்ப்பனப் பெண் இந்தக் கோட்டையில் வாழும் இளைஞன் ஒருவனை மணந்து கோட்டையினுள் நுழைந்தாள். சில காலம் சென்ற பின் திடீரென்று ஒரு நாள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த கணவனைத் திடீரென எழுப்பி கோட்டை தீப்பற்றி எரிவதாகக் கூறினாள். அவனோ அரைகுறைத் தூக்கத்தில் அந்தப் புல்லின் பெயரைக் குறிப்பிட்டு அதை எதிரிகள் கண்டுபிடித்துவிட்டனரோ என்று புலம்பினான். அவள் உடனே வெளியேறி தன்னை விடுத்தவர்களிடம் கோட்டையை அழிக்கும் புல்லைப் பற்றிய உண்மையைக் கூற கோட்டை எரித்து அழிக்கப்பட்டதாக அக்கதை கூறுகிறது.

.:  இதிலிருந்து என்ன முடிவை நாம் பெறுவது?

.:  தமிழகத்திலிருந்த கட்டட, சிற்பக் கலைகளும் கலைஞர்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் புத்தர்களான சிங்களர்களும் தமிழகத்தில் குறிஞ்சி முல்லை மக்களைத் திரட்டிய அம்மண வெறியர்களும் தாம் இதைச் செய்திருக்க வேண்டும்.
   
      புகாரில் இருந்ததாக இளங்கோவடிகள் கூறிய நெடுநிலை மாடம் கொண்ட வளமனைகள், வேயா மாடங்கள், வியன்கல இருக்கை, மான்கண் காலதர் மாளிகை(நிலா முற்றங்கள், பெரிய அணிகலம் பெய்த அறைகள், மானின் கண் போலக் கோலம் செய்த காற்று இயங்கும் நெறியாகிய சாளரங்களையுடைய மாளிகை)கள் என்னவாயின? அல்லது படிப்போரை மலைக்க வைக்கும் எண்ணற்ற பொறிகள் பொருத்தப்பட்ட மதுரைக் கோட்டை போன்றவை எங்கு போயின? முற்றுகைக்கு ஆளாவதும் அதை முறியடிப்பதுமாகத் தொல்காப்பியம் கூறும் பழங்கோட்டைகளில் ஒன்று கூட நமக்கு மிஞ்சவில்லையே, இது எப்படி நேர்ந்தது? மாந்தைப் புராணம் கூறுவது போன்ற ஒரு முழுமையான திட்டமிட்ட அழிப்புக் கூத்தால்தான் அவை இன்று தடந்தெரியாமல் போயுள்ளன. பின்னர் பல்லவர்கள் சிறிது சிறிதாக எளிய கோயில்களைக் கட்டினர். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் அவற்றில் ஒன்றிரண்டைக் காணலாம். அவர்களின் கட்டடம், சிற்பக் கலைகளின் திட்டமிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தை மாமல்லபுரத்தில் காண்கிறோம். அடுத்த கட்டம் இராசராசனிலிருந்து தொடங்குகிறது. கோயில்களை அடிப்படையாக வைத்து ஓர் ஆள்வினை(நிர்வாக) உத்தியை அவன் வகுக்க முற்பட்ட போது ஆடல் பாடல்களுக்கு பாணர் கூத்தர் மரபினர் அம்மணர்களால் தமிழ்நாட்டில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதால் ஆந்திரத்திலிருந்து அவர்களை வரவழைத்தான்.

      அவனுக்குப் பின் மேற்கட்டுகள் முகாமையை இழந்து மாடக் கோபுரங்கள் வளர்ந்தன. கோயில்கள் படைப் பராமரிப்பு நடுவங்களாயின. இந்த நிகழ்முறையில் ஒரு புதிய, ஆனால் நம் பண்டை கட்டட, சிற்பத் திறனுக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஒப்ப வைத்துக் கூறும் தரமற்ற ஒரு கட்டட, சிற்பத் தொழில்நுட்பம் இங்கு உருவானது.

.:  எதை வைத்து இதைக் கூறுகிறீர்கள்?

ம.: வட இந்தியக் கோயில்களுடன் ஒப்பிடும் போது நம் நாட்டுக்கோயில்கள் மிக எளிமையாகக் காணப்படுகின்றன. ஆனால் கம்போசம் என்று நம் பண்டை நூல்கள் கூறும் கம்போடியாவிலும் தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகளின் அடர்காடுகளுக்குள்ளும் அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் கோயில்கள், தான் தோன்றிய தமிழகத்தில் அழிக்கப்பட்டுவிட்ட நம் பண்டை கட்டட, சிற்பக் கலைகளின் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. அதாவது, புத்த, அம்மண காட்டுவிலங்காண்டிகளின் கொலை வெறியிலிருந்து தப்பிய தமிழக ஐந்தொழில் கொல்லர்கள் வட இந்தியாவுக்கும் கிழக்காசியாவுக்கும் தப்பி ஓடியிருக்கிறார்கள் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

.:  அப்படியானால் தமிழகக் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டவர் யார்?

.:  ஊர்ப் புறங்களில் அம்மணக் காட்டுவிலங்காண்டிகளின் கண்ணுக்குத் தப்பிக் கிடந்தவர்களிலிருந்து புதிய தேவைக்கேற்பத் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் புதிய கட்டட, சிற்ப வல்லுநர்களாக வளர்ந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

.:  இப்படி நிகழ முடியுமா என்று ஐயமாக இருக்கிறது.

  .: முடியும் என்பதற்கு சென்ற நூற்றாண்டில் இன்றைய குமரி மாவட்டப் பகுதியில் சான்றுகள் உள்ளன திருவிதாங்கோட்டு (திருவிதாங்கூர்) அரசர்களால் அரசியல் காரணங்களால் எண்ணிப்பார்க்க ஒண்ணா ஒடுக்குமுறை –
ஒதுக்குமுறைகளுக்கு ஆட்பட்ட சாணார்களுக்கு வேலை செய்ய மரபுத் தச்சர்கள் முன்வராததால் அவர்களே அப் பணியில் ஈடுபட்டுத் தங்கள் திறனை மரபு தச்சர்களை மிஞ்சும் வகையில் வளர்த்துள்ளனர். அது போல் தங்கள் விளைநிலங்களில் மண் வளத்தைப் பேண ஆட்டுக்கிடை வைக்க மரபு இடையர்கள் முன்வராததால் அவர்களில் ஓர் ஊரினர் அனைவரும் ஆட்டிடையர்களாயினர். இப்போது நெல்லை மாவட்டத்திலிருந்து ஆட்டிடையர்கள் வருவதாலும் அவ் வூரினர் படிப்பிலும் செல்வ நிலையிலும் மேம்பட்டுவிட்டதாலும் அத் தொழிலைக் கைவிட்டுவிட்டனர். ஆடுமேய்ச்சி விளை என்றிருந்த தங்கள் ஊர்ப் பெயரையும் கீழப் பால்கிணற்றான் விளை என்று மாற்றிக்கொண்டுவிட்டனர். குமரி மாவட்டத்தில் மதுரைக்கு வடக்கேயும் மனிசந்தான் குயவன் என்றொரு சொலவடையே உண்டு. அதாவது மனிதனாகப் பிறந்த யாரும் எத் தொழிலிலும் வல்லவராகலாம் என்பது இதன் பொருள்.

      பிற்காலச் சோழர் காலக் கோயில்களைக் கட்டிய ஐந்தொழிற் கொல்லர்கள் புதிதாக உருவானவர்கள் என்பதற்கு வேறொரு தடயமும் உள்ளது.

.:  அது என்ன?

.:  இரதகாரர் எனும் புதுச் சாதியினர் பற்றிய செய்திதான் அது. சத்திரியத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர்கள் மாகிசியர்கள், வைசியத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர்கள் கரணீகள், மாகிசியத் தந்தைக்கும் கரணீத் தாய்க்கும் பிறந்தவர்கள் இரதகாரர்கள். கட்டடம் கட்டுதல், இரதங்களைச் சமைத்தல், வேதியரின் வேள்விக்கு வேண்டிய சட்டுவங்கள், தட்டுகள் முதலியவற்றைச் செய்து கொடுத்தல், மண்டபங்களைக் கட்டுதல், மன்னர்களுக்கு மணிமுடிகள் வனைதல் ஆகியவற்றை இவர்கள் செய்தனர் என்ற செய்திகள் கே.கே.பிள்ளையின், நான் முன்பு குறிப்பிட்ட நூலின் பக்கங்கள் 331 – 2 ஆகிய பக்கங்களில் உள்ளன.

      மிகுந்த ஈட்டம் தரும் பணிகளில் ஈடுபட்ட இப் பிரிவினர் இடங்கைப் பிரிவினரான தங்களுக்கு வலங்கையினர் போன்று உரிமைகள் வேண்டும் என்று விரும்பியதில் வியப்பில்லை. சோழ அரசர்கள் கோயில்கள் கட்டுவதற்கும் இடைவிடாத போர்களுக்கும் வரிகளை விதித்து அளவு மீறிக் கொடுமை புரிந்ததன் விளைவான மக்களின் வெறுப்பைப் பயன்படுத்தி ஐந்தொழிற் கொல்லர்களான இவர்கள் வலங்கை – இடங்கை வேறுபாட்டை மீறிய ஒற்றுமையை உருவாக்கி அதிராசேந்திரனைக் கொன்று குலோத்துங்கனை அரியணை ஏற்றிய கலகத்தைத் தலைமை தாங்கியிருக்கின்றனர் என்று தோன்றுகிறது.

.:  அதன் மூலம் அவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைத்து?

.:  வலங்கையருக்கே உரிய ஆட்சிப் பணியாகிய ஊர்க் கணக்குப் பிள்ளை, அதாவது கர்ணம் பதவி கிடைத்திருக்கலாம் என்று கருதத்தக்க ஒரு தடயம் உள்ளது. அதாவது விசயநகர அரசை நிறுவிய அரிகரன் தம்பி புக்கன் ஒரு பொற்கொல்லப் பெண்ணை மணக்க விரும்பிப் பெண் கேட்டதாகவும் பெண்ணைக் கொடுக்க அவர்கள் மறுத்ததால் பொற்கொல்லர்களை கணக்குப் பிள்ளை பதவியிலிருந்து அகற்றியதாகவும் கே.ஏ.நீலகண்ட சாத்திரி எழுதியுள்ள தென்னிந்திய வரலாறு கூறுகிறது. கோட்பாட்டு அடிப்படையில் பார்த்தால் இடங்கையினரான அவர்களுக்கு ஆட்சிப் பதவிக்குத் தகுதி கிடையாது. ஆனால் அவர்கள் அப் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். அப்படியானால் குலோத்துங்கன்தான் இந்தப் பதவிகளை அளித்திருக்க வேண்டும். சாணார்களின் வரலாற்றைக் கூறுவதாகத் தோன்றும் வலங்கை மாலை, வலங்கையர் கதை ஆகிய நூல்களின் பெயர்களும் வலங்கையினராகிய தங்களுக்குரிய பதவிகள் பறிக்கப்பட்டு இடங்கையினரான ஒரு சாதியினருக்கு வழங்கப்பட்டதைக் குறைகூறும் வகையில் அமைந்துள்ளதாகவே தோன்றுகிறது. பொற்கொல்லன் மனைவி சாவமிடுவது திட்டவட்டமான சான்றாக விளங்குகிறது.

செ.:அப்படியானால் ஐந்தொழிற் கொல்லர்கள் நாட்டை அயலானுக்குக் காட்டிக்கொடுத்துத் தங்கள் குமுகத் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள் என்கிறீர்களா?

.:  இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் அரண்மனைச் சூழ்ச்சிக்கும் இடமிருப்பதைக் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. இன்று ஒரு நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்படுத்த வல்லரசுகள் பணத்தைக் கொடுத்து எண்ணற்ற ஒற்றர்களைத் “தொண்டு நிறுவனங்கள்” என்ற பெயரில் உருவாக்கிப் போராட்டங்களை நடத்தவில்லையா அது போல் ஐந்தொழிற் கொல்லர்களை குலோத்துங்கனான சாளுக்கிய நரசிம்மன் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களை மட்டும் நான் சொல்லவில்லை, தமிழகத்தில் உயர் சாதியினர் மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோரில் மேல்நிலையில் உள்ளவர்கள் கூட தன் அரசனுக்கு எதிராக வெளிப்படையெடுப்பாளனுக்கு கைக்கூலிகளாகச் செயற்பட்டவர்களே. தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்தக் கொடு நோயை, கழகக் கால கரிகாலன் இறந்து நாடு வலுவிழந்த நிலையில் நாட்டைக் கைப்பற்றிக்கொண்ட தொண்டைமான் இளந்திரையன் காலத்திலிருந்தே தடம் பிடிக்க முடிகிறது. இதைப் பற்றி இளங்கோவடிகள், இறை செலுத்தும் மக்கள் துயருற, அவ்வாறு இறை செலுத்தாது காட்டிக்கொடுக்கும் குடிகளை ஒருதலையாகப் பற்றி வெற்றி பொருந்திய மன்னர் இல்லாத நேரம் அறிந்து மக்களின் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து சேர்ந்த குறுநில மன்னர் போல என்ற பொருளில்,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப                                                                     
அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
      என்று அந்திமாலை சிறப்புச்செய் காதை வரிகள் 9 – 12 ஆகியவற்றில் கூறியிருக்கிறார்.

      இதற்கு பிற்காலத்து வரலாற்றுச் சான்று நாயக்கர்களுக்கு தளவாய் அரியநாத முதலியார் செய்ததாகும். ஆனால் அவர் அப்படிச் செய்ததறகு ஒரு காரணம் இருந்தது. அக் காலகட்டத்தில் வெள்ளாளப் பெண்களை அப்போது நாடுகள் என்றிருந்த ஆட்சிப் பிரிவுகளின் அதிகாரிகளாக இருந்த நாடான்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்ததற்கான சான்றுகளை வேணாட்டு அரசர் பொறித்த இரு கல்வெட்டுகள் மூலமாக The Dravidian Lineages – Nadars Through The Ages என்ற நூலில் ப-ர்.எம்.இம்மானுவேல் தந்துள்ளார். அந்த நாடான்களை வெள்ள நாடான்கள் என்று அக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. பெரும்பாலும் நீர்நிலைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உழுதொழில் செய்வோரை அதிகாரம் செய்யும் அதிகாரிகளாக அவர்கள் இருக்கலாம். அவர்களில் இருவரைத் தண்டிப்பது பற்றி இக் கல்வெட்டுகள் பேசுகின்றன. வெள்ளாளப் பெண்களுக்குப் பாலியல் நெருக்கடி கொடுப்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. இந்தக் காலகட்டத்தில்தான் அரியநாத முதலியார் மதுரையில் நாயக்க அரசரிடம் பணியாற்றுகிறார். பாண்டிய அரசு மிக வலுக்குன்றிய நிலையில்தான் நாயக்கர்கள் கைகளுக்கு வருகிறது. எனவே உள்ளூர் ஆட்சி அதிகாரிகளான நாடான்களின் கொடுமைகள் எல்லை மீறிப்போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஆர்வம் கொண்ட நாயக்க மன்னரின் தேவைகளுடன் தன் சாதியினர் படும் கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டிய தேவையும் இணைந்து நாடான்களை அகற்றி நாடுகளை ஒழித்து பாளையங்களை உருவாக்கும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது.

      அரியநாதரின் நடவடிக்கைகளில் அவருக்குத் தோள் கொடுத்தவர்களில் தெலுங்குப் படையினரை விட தமிழர்களின் பங்கு மிகுதியாக இருந்திருக்கிறது. அவர் உருவாக்கியதாகக் கூறப்படும் 72 பாளையங்களில் 30க்கும் மேற்பட்டவை மறவர் பாளையங்கள் என்று ஒரு செய்தி கூறுகிறது.


      அந்தக் காலகட்டத்தில் பாளையங்கோட்டைக்குத் தெற்கிலுள்ள பகுதிகள் வேணாட்டரசர்கள் கைகளில் இருந்ததால் ஊர்த் தலைவர்களுக்கு நாடான்கள் என்ற பட்டம் அங்கெல்லாம் தொடர்ந்தது. பின்னர் நாடான் என்ற ஊர்த் தலைவன் பட்டம் “அர்” விகுதியுடன் நாடார் என்று   மாற்றம் பெற்று சாணார்களின் சாதிப்பட்டமாக மாறியது வேறு கதை. இன்று தமிழகத்திலுள்ள அனைத்துச் சாதிப் பட்டங்களுக்கும் இந்தத் திரிவாக்கம்(படிமுறைவளர்ச்சி) பொருந்தும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  

செ.:மீண்டும் நீங்கள் தடம் மாறிப் போவதாக உணர்கிறேன்.

   ம.: இல்லை, இல்லவே இல்லை. சண்டைகளில் தோற்ற பக்கங்களில் நின்றவர்கள் ஒடுக்கப்படுவது என்ற நிகழ்வுக்கு வேணாட்டுச் சாணார்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இராமவர்மன் என்ற அரசன் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு அரசு செல்லும் என்று அறிவித்துவிட்டு மண்டையைப் போட்டுவிடுகிறான். ஆனால் அவனது உடன்பிறந்தாள் மகன் மார்த்தாண்டன் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறான். திருப்பாப்பூர் நாடான் அனந்தபத்மநாபன் அவனுக்கு உதவ முனைந்து பிற 39 நாடான்களையும் அழைத்து உதவி கேட்கிறான். நடப்பிலுள்ள மரபுக்கு எதிராகச் செயற்பட அவர்கள் மறுத்துவிடுகின்றனர். பின்னர் குமரி முனை அருகிலுள்ள பொற்றையடி திருமாலயப்பெருமாள் நாடான் உதவியுடன் அரசனின் மகன்களுடன் நம்பூதிரிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெற்றிகொண்டு அரசனானான். ஆனதும் நாடான்களின் முதன்மையான அதிகாரங்களைப் பறித்து நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களுக்கும் நாயர்களுக்கும் கொடுத்தான். சாணார்கள் மீது மிக அருவருப்பான ஒடுக்குமுறைகளைப் புகுத்தினான். பெண்கள் தோள் சீலை அணிதல், இடுப்பில் குடம் வைத்தல், தாளிதச் சமையல் செய்தல், பொன்மக் கலன்களைப் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கெல்லாம் தடைவிதித்தான். அந்த ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நாடான்களுக்கே கொடுத்தான். நம்பூதிரிக் குடும்பப் பெண்களை மீனவர்களுக்குக் கட்டாய மணம் செய்துவைத்தான். தலைநகரை இன்றைய குமரி மாவட்ட பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றினான். ஆனால் தன் மெய்க்காப்பாளனாக அவன் தன்னுடன் வைத்துக்கொண்ட அனந்தபத்மநாபன் அரண்மனையில் கொல்லப்பட்டான். இறுதியில் நம்பூதிரிகளைப் பகைத்துக்கொண்டு ஆள முடியாது என்பதை உணர்ந்து திருவனந்தபுரத்தில் கோயில்கொண்டுள்ள பத்மநாபனுக்கு அரசையும் நாட்டையும் உரிமையாக்கி அவனது அடிமையாக(பத்மநானதாசன்) நாட்டை ஆள்வதாக அறிவித்து நம்பூதிரிகளின் கால்களில் முற்றிலுமாக வீழ்ந்துவிட்டான். இந்த நிகழ்வின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் நான் மேலே குறிப்பிட்ட ப-ர். எம்.இம்மானுவேல் அவர்கள் அனந்தபத்மநாப நாடானும் அவனது தூதுவனாக(ஓட்டன்  - Runner)ச் செயற்பட்டு அதில் உயிரைக் கொடுத்தவனும் நாடார் சாதியினர்க்குப் பெருமை சேர்த்தவர்கள் என்று நிறுவ Anatomy of a folklore, “Ottan Kathai”, A Deified Spy and his King Vira Martanda Varma என்றொரு நூல் எழுதியுள்ளார். அனந்தபத்மனாபனுக்கு மார்த்தாண்டன் முற்றூட்டு நிலங்கள் அளித்த ஆவணங்களைச் சான்றாகக் காட்டுகிறார் அவர்.

செ.:இவற்றை வைத்து நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்?

.:  புரியவில்லையா? மூற்றூட்டு அல்லது விருதுகள் குறித்த கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகளை வைத்துக்கொண்டு தாங்கள் மூவேந்தர்களின் அல்லது குறிப்பிட்ட ஒரு அரசனின் மரபினர் என்று சாதி “வரலாற்றாசிரியர்கள்” கூறுபவை இப்படிப்பட்ட தவறான புரிதல்களின் அடிப்படையில் அல்லது போலிப் பெருமை கூறுவதுதான் என்பதை வலியுறுத்தத்தான் இதைக் கூறுகிறேன். இவற்றில் எவையெவை தன் சொந்த நாட்டரசனுக்குத் துணைநின்று அவனுக்கு வெளிப் பகைவர்களிடமிருந்து வெற்றி ஈட்டித்தந்ததற்காக வழங்கப்பட்டவை, எவையெவை வெளிப்படையெடுப்பாளனுக்குத் துணை நின்று நாட்டைக் காட்டிக்கொடுத்ததற்குப் பரிசாகப் பெறப்பட்ட இழிவு ஆவணங்கள் என்பதை அலசிப் பார்த்தால் எதிர்மறையான விடைகள்தான் பெரும்பாலும் கிடைக்கும்.

      அது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் குமுக இயங்குமுறையில் செல்வம் பெற்று அடுத்த வேளைச் சோற்றுக்கு ஒடுக்கும் மக்கள் கைகளை எதிர்பார்க்கத் தேவையில்லை என்ற நிலையை எய்தும் போது பல நேர்வுகளில் புதிய மதங்கள் உள் நுழைந்திருக்கின்றன. அவை அடித்தள மக்களை எட்டுவதற்கு முன்னரே மேல் சாதியினர் அங்கே புகுந்திருக்கின்றனர். பின்னர் தங்கள் புதிய மதத்தின் ஆள் வலிமையைக் கூட்டுவதற்காக அவர்களே முன்னின்று ஒடுக்கப்பட்டோரை மதம் மாற்றுவதில் ஈடுபடுகின்றனர். இதை முகம்மதியத்திலும் கிறித்துவத்திலும் காண முடிகிறது.

.:  நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே!

.:  ஆனால் இது உண்மை. நாகூர் தர்காவில் பூசகர்களாக இருப்போர் மதம் மாறிய ஐயங்கார்கள் என்றும் அவர்கள் மதம் மாறாத தம் உறவினர்களுடன் இன்றும் போக்குவரத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்த காலஞ்சென்ற அய்யூர் அப்பாசு மந்திரி

அவர்கள் கூறினார். நெல்லை மாவட்ட மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றி எங்களுக்குள் நடைபெற்ற உரையாடலில் அவர் பொங்கும் மகிழ்ச்சியுடன், தமிழகம் முழுவதும்
இது போல் நடந்தால் என்னாகும் என்று கேட்டார். அங்கேயும் நம் சாதிகள் அனைத்தும் புகுந்துவிடும் என்றேன். அடக்க முடியாத சிரிப்புடன் அப்போதுதான் நாகூர் பூசகர்கள் பற்றிக் கூறினார். அத்துடன் பா.ச.க. தூக்கி வைத்துக் கொண்டாடிய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை முகம்மதியர்களும் பார்ப்பனராயிருந்து மதம் மாறியவர்கள்தாம் என்று அண்மையில் நண்பர் ஒருவர் அடித்துக் கூறுகிறார். பாமினிப் பேரரசின் கீழிருந்த ஐந்து சுல்தானியங்களில் இரண்டின் சுல்தான்கள் மதம் மாறிய பார்ப்பனர்கள், எஞ்சியோர் ஆப்கானியர். அவ் விரு பிரிவினரிடையிலும் நடைபெற்ற மோதல்தான் பாமினிப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கே.ஏ.நீலகண்ட சாத்திரி தன் தென்னிந்திய வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.
        
      நெல்லை மாவட்டத்தில் இராவுத்தர் பிரிவு முகம்மதியர்களில் தென்காசி, வல்லநாட்டுக்குத் தெற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் மதம் மாறிய சிவனிய வெள்ளாளர்கள் என்பது அங்குள்ள ஒருவர் தந்த சேதி. அதனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்றும் அவர் கூறினார். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து மதம் மாறியவர்களை லெப்பை என்ற பிரிவாக வைத்துள்ளனர். கடையநல்லூரில் இராவுத்தருக்கென்றும் லெப்பைகளுக்கென்றும் தனித்தனிப் பள்ளிவாசல்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

      கால்டுவெல் ஐயர் ஒடுக்கப்பட்ட சாணார்களை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக வடக்கே உயர்சாதியினர்க்கு கல்வி வழங்கிச் செயற்பட்டுவந்த விடையூழியர்கள்(Missionaries) லண்டன் தலைமையகத்தில் குறைகூறியதற்கு விளக்கமளிக்கவே அவர் THE TINNEVELLY SHANARS, A  Sketch  OF THEIR RELIGION, AND THEIR MORAL CONDITIONS AND CHARACTERISTICS AS A CASTE WITH SPECIAL REFFERNCE TO THE FACILITES AND HINDRANCES TO THE PROGRESS OF CHRISTIANITY AMONGST THEM என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலை எழுதினார். வடக்கில் லால் கிசன் அத்துவானி போன்ற பணக்கார மேற்சாதியினர்தான் கிறித்துவக் கல்வி நிறுவனங்களால் பயன் பெற முடிந்திருக்கிறது.

      உரோமன் கத்தோலிக்கத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை சிவனிய வெள்ளாளர்களை ஆள்வினை உச்சியிலிருந்து இறக்குவதற்கான அவர்களுக்கு அடுத்த அடுக்கிலுள்ள சாதியினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

      கத்தோலிக்கம், சீர்திருத்தவியம் ஆகிய இரு பிரிவு கிறித்துவத் தலைமைகளும் தத்தம் பிரிவு தாழ்த்தப்பட்டோருக்கு “இந்து” தாழ்த்தப்பட்டோரோடு சேர்த்து ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்திருக்கிறார்களே! அது போல் லெப்பைகளுக்கும் உள் ஒதுக்கீடு கேட்கும் நாள் தொலைவில் இல்லை.

செ.:மதமாற்றம் சாதி ஒழிப்பைக் கொண்டுவரும் என்றும் தமிழகத்தில் புத்தமும் அம்மணமும் சாதியை ஒழிக்கப் பாடுபட்டது என்று கூறுவதெல்லாம் பிழை என்கிறீர்களா?

.:  உறுதியும் அறுதியுமாகக் கூறுவேன். இது பற்றி விரிவாகவே பேசவேண்டும். தமிழகத்தில் அம்மண சமயம் குறித்த பருப்பொருள் தடயங்கள் ஆங்காங்கே காணப்படும் குகைப் படுக்கைக
ள் நீங்கலாக குமரி மாவட்டத்தில் இருப்பவையாகக் கூறப்படும் சில தொல்லியல் களங்களே. ஆனால் புத்த சமயத் தடயங்களாக ஆங்காங்கே இன்றும் புதிது புதிதாக புத்தர் சிலைகள் வெளித்தோன்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அம்மணர்களின் படைப்புகளாக எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. அவற்றில் கூறப்பட்டிருக்கும் அறநெறிகள் அம்மண சமயத்துக்குரியனவா அல்லது தமிழ் மண்ணுக்குரியனவா என்ற கேள்வியை அம்மணர்களை வானிலிருந்து குதித்து தமிழர்களுக்கு நாகரிகமும் பண்பாடும் புகட்ட வந்தவர்கள் என்று
கைகூப்பி நிற்போர் இன்றுவரை கேட்கவில்லை. அதாவது அம்மணத் தலைவர்கள் புகுத்திய வருண, சாதிய முறைக்கு எதிராக உள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்கள்தாம் தமிழுக்கு அம்மணர்களின் கொடை என்று கூறப்படும் அறநெறி நூல்கள் என்று தோன்றுகிறது.

 .:      நீங்கள் கூறுவது அடிப்படை இல்லாத கூற்றாக எனக்குத் தோன்றுகிறது.

.:  அடிப்படை இருப்பதால்தான் கூறுகிறேன். கேளுங்கள். புகார் நகருக்கு வெளியே வந்த கோவலன் - கண்ணகியரைக் கண்டு அவர்களது நிலையறிந்து அவர்களுக்குத் துணையாகச் செல்வது துறைவியாகிய தனது மனித நேயக் கடமை என்று முடிவு செய்து, மதுரைக்குச் சென்று அங்குள்ள சமயப் பெரியோரின் அறவுரையைக் கேட்க நெடுநாளாக ஆவலுற்றுருப்பதாகக் கூறி கவுந்தி அடிகள் உடன் செல்கிறார்.
( பாடகச் சீறடி பரற்பகை யுழவா
 காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
 அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ
 உரிய தன்றீங் கொழிகென வொழியீர்
 மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
 அறவுரை கேட்டாங் கறிவனை யேத்தத்
 தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்
 கொன்றிய வுள்ள முடையே னாகலின்
போதுவல் யானும்….நாடுகாண் காதை  வரி 52 – 60)

வழியில் திருவரங்கத்தில் சிலாதலம் எனப்படும் ஓர் அம்மணர் வழிபாட்டிடத்தில் சாரணர் எனப்படும் ஊர் சுற்றும் சமயப் பணியாளர் தோன்றினர். அவர்களை கவுந்தி அடிகளும் கோவலன் - கண்ணகியும் காலடியில் வீழ்ந்து வணங்குகின்றனர். அவர்களுக்கு வரப் போகும் கேட்டினை அறிந்தும், அதனால் எந்த உணர்வும் கொள்ளாமல் (ஆர்வமுஞ் செற்றமு மகல நீக்கிய வீர னாகலின் விழுமம் கொள்ளான்), செய்த வினைகளின் பலன்களைத் தவிர்க்க முடியாது என்று “தத்துவம்” பேசியதுடன் இப்படி வழியில் செல்வோரின் மீதெல்லாம் பற்று வைத்து உன்னைக் கெடுத்துக்கொள்ளாதே என்று(பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று) அறிவுரை வேறு கூறிச்சென்றனர். அதுவும் கால் நிலத்தில் பாவாமல் ஒரு முழ உயரத்தில்          ( நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கி) பறந்தனராம். இளங்கோவடிகள் எவ்வளவு ஆழமாகக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்! அதாவது அம்மணம் ஒரு மக்கள் தொண்டு சமயம் என்று அடிமட்டத் தொண்டர்கள் நம்பிச் செயல்பட, மக்களின் சிக்கல்களில் தலையிடுவது துறவுக் கொள்கைக்கு எதிரானது என்று மேல் மட்டத்தினர் நடந்துகொண்டனர். கொல்லாமை என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து, நடக்கும் போது காலுக்குள் சிக்கி பூச்சி புழுக்கள் செத்துவிடும் என்ற காரணம் காட்டி மயிற்பீலியால் தாம் நடந்து செல்ல வேண்டிய நிலத்தைப் பெருக்கித் தூய்மை செய்யும் மனப்பேதலிப்புக்கு ஆளான அம்மணத் தலைமைகள் உழுது மண்ணைப் புரட்டிப் போடுவதால் உயிர்க்கொலை புரியும் உழவனை இழிவாக நடத்துவது இயல்புதானே. அது போல் புலாலுண்ணல் என்பதைச் சாதிய உயர்வு - தாழ்வுக்கு அளவுகோலாகக் கொள்வதை இத்தகைய ஒரு சமயமல்லாமல் வேறெவர் செய்ய முடியும்? இச் சமயத்தின் தாக்கத்தினால்தான் தமிழகப் பார்ப்பனர்கள் புலாலுண்ணாமையில் கடுமையாக இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள பிற அனைத்து மாநிலப் பார்ப்பனரையும் விட புலாலுண்ணாமையில் மிகவும் முறுக்கிக்கொள்பவர்கள் தமிழகப் பார்ப்பனர்கள்தாம் என்ற நிலைக்கு இந்த அம்மணக் கிறுக்கர்கள்தாம் காரணம். குறிஞ்சி – முல்லை நிலங்களிலிருந்து களப்பிரர்களாகத் தமிழகத்தின் நன்செய்ப் பகுதிகளுக்கு வந்து இங்கிருந்த நிலங்களைக் கைப்பற்றிப் பெருநிலக்கிழார்களாகிய படைத்தலைவர்கள் பின்னர் சிவனியத்தால் அம்மணம் வீழ்த்தப்பட்ட போது சிவனியத்தைத் தழுவி சிவனிய வேளாளராயினர். அந்தப் பழைய அம்மணத் தாக்கம்தான் தாங்கள் பார்ப்பனர்களை விடத் தூய்மையான புலால் மறுப்பினர் என்று அவர்கள் வாய்வீச வாய்ப்பளிக்கிறது. அவர்களை மறைமுகமாகப் பாராட்டத்தான் பெரியார் பார்ப்பான் மாட்டைத் தின்றான் என்பதற்கு வேதத்தில், உபநிடதத்தில் அல்லது ஆகமத்தில் சான்றுகள் உள்ளதாகக் கூறித் திரிந்தார். சிவனிய வெள்ளாளர்களின் புலால் மறுப்பைப் பற்றி என்றுமே வாய் திறந்ததில்லை. ஆக மொத்தத்தில் இன்றைய தமிழகத்தின் சாதியம், பெண்ணடிமைத்தனம் போன்ற அனைத்துச் சீரழிவுப் பண்பாட்டுக்கும் அம்மணமே அடிப்படைக் காரணம். அந்த அடிப்படையில், நடப்பிலிருக்கும் தமிழர்களின் இன்றைய பண்பாட்டை வழங்கியவர்கள் அம்மணர்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அந்தக் கேடுகள் இங்கு பரவப் பரவ அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கவுந்தியடிகள் போன்ற மனித நேயர்களின் படைப்புகள்தாம் அக் காலகட்டத்தில் உருவான அறநூல்கள். கவுந்தியடிகள் மயிற்பீலியைக் கையில் வைத்திருந்தாலும் அதைப் பயன்படுத்தியதாகத் தோன்றவில்லை. அம்மணத் துறவிகளின் அடையாளங்களில் ஒன்றாகத்தான் கைப் பீலியுங் கொண்டு என்ற இளங்கோவடிகளின் காட்சிப்படுத்தலைப் பார்க்க வேண்டும்.

      புத்தத்தின் பங்களிப்பாக நமக்கு வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது, மணிமேகலையைப் பயன்படுத்திச் சோழத் தலைநகர் புகாரை இலங்கைக் கயவாகு அழித்ததுதான்.

செ.:என்ன, நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு புதுப்புதுக் கரடிகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?


[1] வலியுறுத்தம் எமது

0 மறுமொழிகள்: