26.9.08

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

உலகை இன்று ஒரு பொருளியல் நெருக்கடி கவ்விப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடிப்படை விசை மூலமான கன்னெய்யப் பொருட்களின் விலை நஞ்சாக ஏறிக்கொண்டிருக்கிறது. உலகின் பொது நாணயம் என்ற நிலையிலிருந்த அமெரிக்க டாலர் அந்த இடத்தை இழக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் உச்சாணியில் நிற்கிறது. பண்டங்களின் விற்பனை குறைந்து வருகிறது. இதன் இறுதி விளைவாக உலக மக்களில் அடித்தளத்திலிருப்போர் பட்டினியால் மடிய நேரிடும் என்பது இன்றைய நிலை.

இதன் உண்மையான காரணம் என்ன? இதற்கு முன்பு நேர்ந்த பொருளியல் நெருக்கடிகளில் பெரும்பான்மையும் மக்களிடம் பணச் சுழற்சி குறைவால் உருவானவை. இந்தகுறை பணச் சூழற்சி மிகுந்ததால் நெருக்கடி முற்றி நிற்கிறது. இதற்கு முகாமையான காரணம் புலனத் தொழில்நுட்பத்தின் அளவுக்கு மீறிய வளர்ச்சி எனலாம்.

சென்ற 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள் ஏழை நாடுகளைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய நாடுகளையின் மூலமும் தத்தம் நாடுகளிலிருந்தும் பல்வேறு உதவித் திட்டங்களைச் செயற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஏழை நாடுகளிலிருந்து எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்ப, குமுகியல், வரலாற்றியல் தரவுகளைத் திரட்டிக்கொண்டன. அவற்றைத் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சியிலிருந்துதான் கணினித் தொழில்நுட்பம் பாய்ச்சல் நிலை அடைந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு வேண்டிய பணிப்படையை உருவாக்குவதற்கேற்ற வகையில் ஏழை நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களை வடிவமைத்து அவற்றிலிருந்து வெளியேறியவர்களை மலிவாகப் பெற்றுக் கொண்டன. அவர்களுக்குத் தங்கள் நாட்டில் கிடைப்பதுபோல் பலமடங்கு சம்பளத்தை வழங்கியதால் மேலும் மேலும் மக்கள் அந்நாடுகளில் குவிந்தனர். அங்கே இந்த ஊழியர்கள் ஈட்டிய பணம் அவர்களின் தாய்நாடுகளுக்கு வந்தாலும் அதனை ஆக்க வழியிலான முதலீட்டுக்கு அந்த நாடுகளில் வழியில்லை. இந்த வல்லரசுகள் இந்த நாடுகளில் தங்கள் உதவித் திட்டங்கள் மூலமாகப் பரப்பியிருந்த பாட்டாளியக் கோட்பாட்டைப் பற்றிக்கொண்ட ஆட்சியாளர் இந்த முதலீடுகளைத் தடுத்ததுதான் அடிப்படையான காரணம். எனவே இந்தப் பெரும் பணம் அசையாச் சொத்துகள், நுகர்வு என்று பாய்ந்து நிலங்களை வேளாண்மையிலிருந்து விடுவித்தன. இதனை எளிமையாக்கியது பாட்டாளியக் கோட்பாட்டைப் பயன்படுத்தி உழவர்களின் வாழ்வைப் பறித்த ஆட்சியாளர்களின் செயல்பாடுதான். பணப் பாய்ச்சல் ஒருபுறம் என்றால் உணவு விளைப்பு முடக்கம் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவில் மக்களை ஈர்த்துத் தேர்தலில் வெற்றி பெற அங்கு ஆட்சிக்கு வந்த புசு குடும்பத்தினர் 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஈராக்கு மீதும் ஒருமுறை ஆப்கானித்தான் மீதும் படையெடுத்து குண்டுகளை மழையாகப் பொழிந்தார்கள். அங்கே தற்காலிகமாக உருவாகியிருந்த பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வாக அங்கு போர்க் கருவித் தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடந்த ஆயுதங்களை அரசே வாங்கி அயல் நாடுகளில் வானவேடிக்கை காட்டியது. இதனால் அந்தத் தொழிற்சாலைகள் புதிய ஆயுதங்களில் முதலிட்டு பணப் புழக்கத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவற்றை மக்கள் நுகர்பொருட்களாக்க முடியாதே. இந்தப் பணப் புழக்கமும் அங்கு பணவீக்கத்தை ஏற்படுத்தியது.

அதுபோலவே தேர்தல் கவர்ச்சிக்காக காப்பீடு, மருத்துவம் முதலியவற்றிற்கு அரசு வழங்கிய உதவிகள் பணப்புழக்கத்தை மிகுத்தன. மருத்துவ மறுபெயர்ப்பு(Transcription) பணிகள் போன்று எண்ணற்ற வேலைகளை வெளிநாடுகளுக்கு வெளிப்பணியாகக் கொடுத்ததன் மூலம் அந்த நாடுகளிலும் பணப்புழக்கம் உயர்ந்தது. இந்தியாவில் அரசியல்வாணர்கள் ஊழலில் திரட்டிய பணத்தைப் பலவழிகளிலும் கட்சிக்காரர்களுக்கு வாரி வழங்கியதில் உழைக்காமல் பிழைக்கும் ஒரு பெருங்கூட்டம் உருவாகியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் நாள்தோறும் அரசியலில் இறங்கும் திரை நடிகர்கள் அவர்களுக்கு மறைமுகமாகப் பணம் வழங்கும் பெரிய கட்சிகளிடமிருந்து பெற்றுப் புழக்கத்தில் விடும் பணம் ஏராளம். தமிழகத்திலுள்ள இளைஞர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேற்பட்ட, சிலர் நான்கைந்து கூட கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை வைத்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் மிக வரண்ட மாவட்டங்களில் கூட உடலுழைப்புப் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை இருக்கிறது. காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் கருவிகளைக் குறைத்து மனித உழைப்பை மிகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு கூட்டுறவுத் துறையின் தலைவர் ஊர்ப்புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, கருவிக்களை நாடுவது தவிர வேறு வழியில்லை என்று தன் கனப்பட்டறிவிலிருந்து கூறினார்.

ஓங்கலையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தரமான குடியிருப்புகளைக் கட்டித் தந்து அவர்களது தொழில் மேம்பாட்டுக்கும் வழிவகுக்காமல் சகட்டுமேனிக்குப் பணத்தை அள்ளி வீசுவதால் அவர்கள் மீன்பிடிக்கச் செல்வது குறைந்து மீன் விலை கூடியுள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

இதற்கு ஊடாக, நம் நாட்டில் படிப்பவர்கள் எல்லாம் ஏதாவது வெளிநாட்டில் வேலை கிடைக்காதா என்றும் படைப்பவர்கள் எந்த நாட்டுக்காவது ஏற்றுமதி செய்யலாமே என்றும் கருதும் நிலை உறுதியாகிவிட்டது. அப்படியானால் வெளியில் வேலை செய்வோர் பணத்தை உள்ளே விடுவர். பண்டம் படைப்போர் அதனை வெளியே விடுவர். ஆக, பண அளவு கூடும். பண்டத்தின் அளவு கூடாது குறையவும் வாய்ப்புண்டு.

அத்துடன் இன்றைய தொழில் வளர்ச்சி என்பதை ″வெளிநாட்டு நேரடி முதலீடு″ என்ற வளர்ச்சியின் ஒரு வடிவம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. இதன் உள்ளடக்கம் நமக்குப் பயன்படாத பொருட்களை உருவாக்குவதற்கு நமது மின் ஆற்றல், நீர்வளம், நிலவளம், போக்குவரத்து வசதிகள் என்று அனைத்தையும் பயன்படுத்துவது. இதன் மூலம் நமக்கு இந்த வளங்களின் மீதுள்ள ஆளுமை குறைகிறது.

இதுதான் இன்றைய உலகின் நிலை. பணச் சுழற்சி இன்மையால் உருவாக்கி விளைப்புகாரத் துறைகளில் புழங்க விட வேண்டும் என்று கெயின்சு கூறியபடி த்தை சுழல விட்ட பணம் அளவுக்கு மீறி விட்டதால் பணத்தின் மதிப்பும் பண்டங்களின் வழங்கலும் குறைந்து அதனாலேயே மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பண்ட வழங்கலுக்கும் பணப் புழகத்துக்குமான சமநிலையைப் பேண வேண்டிய இன்றியமையாமையை இது விளக்குகிறது.

இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

நம் நாட்டில் நிலவுவது பொருளியலாளர்களின் கருத்துப்படி உண்மையான பணவீக்கம் அல்ல. உண்மையான பணவீக்கம் என்பது அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று முழுமையான, அதாவது தன்னிறைவு பெற்ற தொழில்வளர்ச்சியும் எற்பட்ட பின்னரும் வரும் கூடுதல் பண வழங்கலால் உருவாவது (Monetary Economics, M.L.Seth,1992,p.160–1). அது இல்லாமல் நம் நாட்டில் போல் தன்னிறைவும் இன்றி முழுமையான வேலைவாய்ப்பும் இன்றி இருக்கும் ஒரு நாட்டில் கூடுதல் பணப்புழக்கம் தொழில்வளத்தைப் பெருக்கி மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இங்கே அது நடைபெறாததற்கு செயற்கையான தடைகள்தாம் காரணம். கெடுபிடியான வருமான வரிக்கு அஞ்சிய பணம் அரசின் கணிப்புகளை மீறி நுகர்வுச் சந்தையில் முக்காடு போட்டுக் கொண்டு நுழைவது ஒரு காரணம். ஐரோப்பாவில் பிறந்து நம் நாட்டுக்கு வந்த பங்குச் சந்தைச் சூதாட்டம் தொழில்துறையில் முதலாக வேண்டிய பல கோடி கோடி உரூபாய்களை அந்தச் சூதாட்டச் சந்தைக்குள் சுழலவிட்டிருப்பது ஒரு காரணம். பங்கு மூதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய ஈவுத் தொகை தொழில் முனைவோரால் ஏமாற்றப்பட்டு முன்பேரச் சூதாட்டங்களில் பயன்படுத்தப்பதுவது இன்னொரு காரணம். பெருந்தொழிலாகிவிட்ட கல்வி வாணிகர்களும் இதில் ஈடுபடுகின்றனர். அரசு திட்டமிட்டு மக்களின் முதலீட்டு வாய்ப்புகளை நசுக்கி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்கி எஞ்சிய பணமெல்லாம் நுகர்வுச் சந்தையில் மட்டும் நுழைவது அனைத்துக்கும் அடிப்படைக் காரணம். அமெரிக்காவில் கூட பணித்துறைகளில் முதலீட்டைக் குறைத்து பண்ட விளைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

அனைத்து வளங்களுமே வேளாண்மையில் இருந்துதான் உருவாகின்றன என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. இது 18 ஆம் நாற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த பிராங்கோயி குவிசுனே என்பவரால் உருவாக்கப்பட்டது. இதனை இயற்பாட்சிக் கோட்பாடு(Physiocracy) என்பர். இதனை மார்க்சு ஏற்கவில்லை. வளங்கள் தொழிற்சாலைகளினுள்ளிருந்துதான் வெளிப்படுகின்றன என்பது அவரது கட்சி. ஆனால் அவரது கட்சியை அவரது தலை மாணாக்கராக வெளிப்பட்ட லெனினே உடைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்தது.

சோவியத் புரட்சி நடந்த நிலையில் ஐரோப்பிய முதலீட்டாளர்களையே நம்பியிருந்த உருசியத் தொழில்களை எல்லாம் அவர்கள் இழுத்து மூடிவிட்டனர். எதுவுமே இன்றி வெற்றுத்தாளாக இருந்த சோவியத்தின் பொருளியலை அடியிலிருந்தே பிடித்து வளர்க்க வேண்டிய வரலாற்றுத் தேவை லெனினுக்கு ஏற்பட்டது. எனவே அவர் புதிய பொருளியல் கொள்கை (New economic policy NEP) ஒன்றை வகுத்தார். அதன்படி உழவர்கள் வேளாண்மையில் கிடைக்கும் பண்டங்களில் அரசு குறிப்பிடும் ஒரு பகுதியை அரசு நிறுவும் விலையில் அரசிடம் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தங்கள் விருப்பம் போல் விற்றுக் கொள்ளலாம் என்றார். (நம் ஆட்சியாளர்கள் அனைத்தையும் தாம் உரிமம் வழங்கியுள்ள வாணிகர்களுக்குத்தான் விற்க வேண்டும் என்று கொல்வதை விட தோழர் லெனினின் வேண்டுகோள் எவ்வளவு மாந்தன்மையானது என்று பாருங்கள்). அரசு அந்த உணவுப் பொருட்களை ஆலைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து ஆலைகளிலிருந்து கருவிகளை உருவாக்கி உங்களுக்கு வழங்குவோம் என்றார். ஆக இயற்புக் கோட்பாடு இதன்மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

இதனால் மார்க்சின் பெருமை குறைந்து விடவில்லை. அவரது கோட்பாடு என்றும் கையாளத்தக்கது. அடிமைக் குமுகம், நிலக்கிழமைக் குமுகம், முதலாளியக் குமுகம், பொதுமைக் குமுகம் என்ற ஒவ்வொன்றுக்கும் அவ்வவற்றுக்கே உரிய குமுகக் கட்டமைப்பு இயல்பாகவே அமையும் என்பதும் இயற்கையும் குமுகமும் மனிதச் சிந்தனையும் என்றுமே தேங்கிப் போவதில்லை மாறிக்கொண்டே இருக்கும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதாகும். ஆனால் அவரது செயல்திட்டத்தில்தான் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அல்லது மகமை தண்டும் கட்சிக்காரர்களால் திசை திருப்பப்பட்டது எனலாம். ஐரோப்பாவை நினைத்துக்கொண்டு பாட்டாளியே புரட்சிகரமானவன் என்பதை வல்லரசுகள் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளை நசுக்குவதற்குப் பயன்படுத்திவிட்டன, பொதுமைக் கட்சியினரின் தந்திரமான ஒத்துழைப்புடன்

இதைவிடக் கொடுமையான குழப்பத்தைக் கெளதம புத்தர் ஏற்படுத்தினார். மார்க்சியக் கோட்பாட்டுக்கு இணையானது புத்த மதக் கோட்பாடு உலகில் எதுவுமே நிலையானதல்ல, மாயத்தக்கது, மாயை, அதாவது மாறிக்கொண்டே இருப்பது என்பது. ஆனால் மக்களின் இன்னல்கள் தீர வேண்டுமாயின் அவாவை அறுக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து சங்கத்து உறுப்பினர்கள் கையில் திருவோட்டைத் தூக்கிக் கொடுத்துவிட்டார், இன்று நம் தோழர்கள் பாட்டாளியரின் கைகளில் கொடுத்துள்ளது போல.

பணவீக்கத்தை எதிர்கொள்ள அருண் பிரோடியா என்பவர் பல வழிகளைக் கூறியுள்ளார் (How To Beat Inflation, The Times of India, 08-07-08, p.14). அவற்றில் ஒன்று 1000, 500, 100 உரூபாய்த் நாணயத் தாள்களை ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து செல்லுபடியாகாதென அறிவிக்க வேண்டும். அதற்குள் அவற்றை அனைவரும் வங்கிச் சேமிப்பில் செலுத்திவிட்டு வருமானவரி கட்ட வேண்டும். அல்லது வளர்ச்சிப் பத்திரங்களில் முதலிட்டு வரி விலக்குப் பெறவேண்டும். பணம் வந்த வழியைக் கூற வேண்டியதில்லை என்கிறார். அரசியல் வாணர்களும் அதிகாரிகளும் பணக்காரர்களும் ஏமாற்றி பணமாகவோ எந்தவகை முதலீடாகவோ செய்திருந்தாலும் அவற்றை அறிவித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதை மடை திருப்பினால் ஒரே ஒரு முறை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம் என்று அதில் ஒரு மேம்பாட்டை நாம் முன்மொழிகிறோம்.

உருசியாவில் ″திறந்த செயற்பாடு″ என்ற முழக்கத்தின் பின்னணியில் உருவான மக்கள் எழுச்சியின் போது ஓர் அரசியல் தலைவர் இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்தார். அதை அன்றைய கோர்ப்பசேவும் கூட்டாளிகளும் கேட்டு செயற்பட்டிருந்தால் இன்று அமெரிக்காவின் முன் உரு\சியா கையைப் பிசைந்துகொண்டிருக்க நேரிட்டிருக்காது. தங்கள் நாட்டில் உருவான செல்வங்களையே தங்கள் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி நம்மிடம் உள்ளவற்றில் மிகப் பழம் இலக்கிய இலக்கணமாகிய தொல்காப்பியம் கூறுவதைக் கொஞ்சம் பார்ப்போம்.

....நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப பொருள்வாயின் ஊக்கிய பாலினும் .... தொல். பொருள் .41

அதாவது யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, தாளாண்மை, தகுதி, வறுமை, செல்வம், அன்பு, பிரிவு என்று எட்டுவகை மாந்த இயல்புகளையும் கூறுபாடுகளையும் கைவிட்டுப் பொருள் சேர்த்தல் என்பதனையே குறியாகக் கொண்டவர்களை இது கூறுகிறது. இவர்களை யாராலும் மாற்ற முடியாது. குமுகத்தின் ஒரு நோயாகவே விளங்குவர். ஆனால் அவர்களும் வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற சில நடைமுறைகளால் தற்காலிக உதவிகளைப் பிறருக்குக் செய்யலாம். ஆனால் முதலாளியக் குமுகத்தில் முதலீடு என்ற ஆக்க வழியில் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த செல்வத்திரட்சி தொழிலாளர்களின் கைப்பிடிக்குள் வருவதும் இயல்கின்றன. உலகளாவுதல் என்ற வஞ்சக வலையில் உலகம் சிக்காமல் இருந்திருந்தால் இது என்றோ பணக்கார நாடுகளில் நிகழ்ந்திருக்கும்.

இந்த நற்கூறைச் செயற்பட விடாமல், நிலக்கிழமைக் குமுகத்திலிருந்து நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் குதித்துச் செல்லத் திட்டமிட்டதால் உலகம் இன்று பொறியில் சிக்கிக் கிடக்கிறது. அந்தப் பொறியிலிருந்து விடுபட வேண்டுமாயின் மக்களிடமிருக்கும் அனைத்துச் செல்வங்களையும் வளங்களையும் வளர்ச்சித்துறைகளினுள் பாயவிட வேண்டும். அதற்கு வேளாண்துறையில் முதலீட்டை ஊக்கவேண்டும் அவ்வாறு ஊக்குவதற்கு முதல் தேவை வேளாண்மை மீது பூட்டியிருக்கும் விலங்குகளை உடைப்பது. அதனைச் செய்வோம்!

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

பிண்டத்துள் அண்டம்

பிண்டமாகிய மனித உடலுக்குள் இயற்கையின் ஒட்டுமொத்தமாகிய அண்டமே அடங்கியுள்ளதாம், சொல்கிறார்கள் நம் ஆன்மீகர்கள். பிண்டத்தில் உள்ள அண்டத்தைப் பார்க்க வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள், மான்தோல் அல்லது புலித்தோலை. விரியுங்கள். ஆடைகளைக் களைந்து தாழ்ச்சீலை(கோவணம்) மட்டும் கட்டிக்கொள்ளுங்கள். அம்மணமாக இருப்பது சிறப்பு. விரித்த தோலின் மேல் சப்பணமிட்டு அமருங்கள். முடிந்தால் தாமரை இருக்கையாக(பத்மாசனமாக) அமரலாம். இப்போது உங்கள் இரண்டு கண்களின் பார்வையையும் உங்கள் மூக்கின் நுனியில் குவித்துக்கொள்ளுங்கள். உங்கள் மூச்சு வலது மூக்கில் செல்கிறதா, இடது மூக்கில் செல்கிறதா அல்லது இரண்டு மூக்குகளிலுமே செல்கிறதா என்று நோட்டமிட வேண்டும். அப்புறம் அந்த மூச்சைத் தடம்பிடித்து உடலினுள் எங்கெங்கே செல்கிறது என்று கவனித்துக் கொண்டே சிறிது சிறிதாக மூச்சைக் குறைத்துக்கொண்டே வந்தீர்களானால் நாடித்துடிப்பும் குறையும். இப்படிக் குறையுந்தோறும் நீங்கள் பிறந்தபோது உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மூச்சுகளும் நாடித் துடிப்புகளும் தீர்வதுவரை கூடுதல் காலம் வாழ்நாளை நீங்கள் நீட்டலாம். அது மட்டுமல்ல, மூச்சின் எண்ணிக்கை குறையக் குறைய ஆங்கிலத் திரைப் படங்களில் அண்ட வெளியில் மனிதர்கள் நுழையும் காட்சிகளில் பார்ப்போமே அதுபோல் அப்படியும் இப்படியும் சுழலும் அண்டவெளியை உங்கள் பிண்டத்துக்குள் நீங்கள் காணலாம். முச்சு குறைந்ததனால் வந்த மயக்கத்தில் இவற்றைக் காண்பதாக யாராவது கூறினால் நம்பாதீர்கள். (ஏதாவது ஐயம் இருந்தால் ஞானியின் கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை? என்ற நூலைப் படித்துப் பாருங்கள்.) அது மட்டுமல்ல நீங்கள் இதன் மூலம் கடவுளே ஆகிவிடலாம். இப்படிச் செல்கிறது நம்மவர்களின் ஆன்மீகத் தேட்டம். இப்படி அமர்ந்திருப்பவன் கடவுள், அவனுக்கு மான்தோலோ புலித்தோலோ கொண்டுவருபவனும் வயலிலும் காட்டிலும் மேட்டிலும் உழைத்துப் பாடுபட்டு உண்ணவும் உடுத்தவும் உறங்கவும் தேவைப்படுபவற்றைக் கொண்டு தருபவனும் வினைபுரிந்து மீண்டும் மீண்டும் பிறந்து உழல்பவர்கள் என்று செல்கிறது ஒப்பற்ற நம் ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இப்படி உட்கார்ந்தே இருப்பவன் நீண்ட காலம் வாழ்வதால் அவனுக்கோ உலகுக்கோ என்ன ஆதாயம் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் ஒரு முட்டாள்.

மலை, காடு, கடல் என்று எதையும் விடாமல் அலைந்து திரிந்து மூலிகைகளைத் தேடி அவற்றின் வேர் முதல் விதைவரை உள்ள தன்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நிலைத்திணை வாகடங்களை உருவாக்கி விலங்குகள், மண், கல், கனிமங்கள் என்று அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி வானியலையும் வளர்த்தவர்கள் நம் அறிவியல் - தொழில்நுட்பச் சித்தர்கள். அவர்களின் பெயரால் குத்தகை உழவனின் உழைப்பில் அமர்ந்து உண்டு வாழ்ந்திருந்த ஒட்டுண்ணிகள் ஆகமக் கோயில்கள் தம் சொத்துகளைப் பறித்துக்கொள்ளாமல் காக்கவும் அந்த இடைவெளியில் குத்தகை உழவன் விழித்துக் கொள்ளாமல் இருக்கவும் வகுக்கப்பட்டது இந்த ஒட்டுண்ணிக் கோட்பாடு.

இந்த வித்தகர்களையும் தாண்டிச் சென்றனர் சிலர். பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் உலகத்தைத் எம் கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்றனர். அதற்கு உலகளாவுதல் (Globalisation) என்று பெயரும் இட்டனர். இன்று அவர்கள் தாம் எங்கிருக்கிறோம் எங்கு போகப் போகிறோம் என்று கூட அறிய முடியாமல் தத்தளித்துத் தடுமாறி நிற்கின்றனர்.

உலகளாவுதல் என்பது உலகத்தில் ஒன்றும் புதிதல்ல. வரலாறு அறிந்த நாள் முதல் நடப்பதுதான். அறிந்த வரலாற்றில் உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பினீசியர்கள். அவர்கள் இப்போலசுக்கு முன்பே நடுக்கடலில் பருவக்காற்றை அறிந்து கப்பலோட்டியவர்கள், எகிப்தின் பரோவா மன்னனுக்காக நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தவர்கள், ஐரோப்பியர்களுக்கு பல்வேறு நாகரிக அடிப்படைகளை அமைத்துக் கொடுத்து அ முதல் ன வரை பதினாறு எழுத்துகளையும் வழங்கியவர்கள், கடல்வாணிகத்தையும் கடற் கொள்ளையையும்(இந்த நடைமுறை இன்றுவரை தொடர் அறுபாடமல் தொடர்கிறது) செய்தவர்கள். ஐரோப்பா என்ற பெயரே யுரோபா என்ற பினீசியப் பெண்ணிடமிருந்துதான் வந்ததாம். இலியடு காப்பியத்தில் வரும் பெண் கடத்தலே இவர்கள் நடத்திய ஒரு பெண் கடத்தலின் எதிர்வினைதானாம். இவர்கள் முதலில் இன்றைய சிரியா பகுதியில் வாழ்ந்து லிபியா வரை பரவினர். இந்தியாவின் தென்முனையிலிருந்து சென்று அங்கு குடியேறியவர்கள், அங்கெல்லாம் தென்னை, பனை முதலியவற்றை அறிமுகம் செய்தவர்கள். பனை என்ற சொல்லின் அடிப்படையில்தான் பினிசீயர்கள் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து உள்ளது. (பார்க்க: இரோடோட்டசு, வி.எசு.வி. இராகவன், Athens and Aeschilles, George Thompson.)

இவர்களை இறுதியாக அழித்தவன் அலக்சாண்டர். இவர்களைத் தொடர்ந்து கிரேக்கர்களும் அடுத்து உரோமர்களும் உலக வாணிகத்தைக் கையில் வைத்திருந்தனர். முகம்மது நபிக்குப் பின் அரேபியர்களும், துருக்கர்களும் வைத்திருந்தனர். இறுதியாக ஐரோப்பியர்கள் அதனைக் கைப்பற்றி அமெரிக்காவிடம் பறிகொடுத்து மீட்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை கழகக் காலத்தில் செய்ததைத்தான் நாம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நமது குறுநில மன்னர்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து யானை மருப்பையும், மிளகு, ஏலம், இலவங்கம் போன்ற எண்ணற்ற மலைபடு பொருட்களையும் அவர்களுக்குக் கள்ளை ஊற்றிப் பறித்துக்கொண்டனர். (சான்று: சங்க கால வாணிகம், மயிலை சீனி.வெங்கடசாமி.) பாண்டியர்கள் முத்துக் குளிப்போரிடமிருந்து அதே போல் கள்ளை ஊற்றி முத்துக்களைப் பெற்றனர். (சான்று: தமிழர் வரலாறு, இரா. இராகவையங்கார்.) இவற்றை ஏற்றுமதி செய்து யவனர் (இந்தச் சொல். அரேபியர், கிரேக்கர், உரோமர் ஆகியோருக்குப் பொதுவான பெயர்) தந்த நன்கலத்தில் அவர்கள் தந்த கடுத்த சீமைச் சாராயத்தை யவனப் பெண்கள் ஊற்றித்தர புலவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அருந்தினர் நம் மன்னர்கள். புலவர்களோ அந்த அரசர்களைப் புகழ்ந்து உலகமே போற்றும் பாக்ககளை இயற்றினர். இவற்றைத் திரட்டித் தந்த குடிமக்களோ காய்கனிகளைப் பறித்தும் எலிகளையும் முயல்களையும் வேட்டையாடியும் மீன்களைப் பிடித்தும் உண்டு உயிர்வளர்த்தனர்.

ஆனால் இன்றைய உலகளாவுதல் வேறுபட்டது. இதன் தோற்றம் என்ன? அரேபியருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட இடைவெளியில் ஆட்சியாளர்களைப் புறந்தள்ளி வாணிகர்கள் வளர்ந்ததன் விளைவாக வெடித்தன அறிவியல் - தொழில்நுட்பப் புரட்சியும் முதலாளியமும். அரசர்களின் தலைகள் மக்களின் புதிய ஆற்றலால் பலி பீடங்களில் வெட்டியெறியப்பட்டன. தொழிலகங்கள் என்ற புதிய கட்டமைப்பினுள் எண்ணற்ற கூலி அடிமைகள் அடைக்கப்பட்டனர். பிரிட்டனின் கையில் இருந்த அமெரிக்காவில் கருப்பின அடிமைகளை வைத்து வேளாண்மை செய்தவர்களுக்கும் தொழில் முதலாளிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் பாட்டாளியர் நன்மைகளைப் பெற்றனர். பொதுமைக் கோட்பாடு உருவானது. பங்கு முதலீட்டு முறை வளர்ந்து குறுகிய தனியுடைமை மறைந்து முதலாளி முகமற்றவனானான். தொழில்சங்கங்கள் உருவாயின. தொழிலாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நடப்பில் தொழிலாளர்களின் செல்வாக்குக்குள் தொழிலகங்கள் வந்தன. தொழிலகங்களின் சொத்துகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற தொழிலாளர் வகுப்பின் கேள்வி வலுப்பெற்று செயல்படவும் தொடங்கியது. இப்போது முதலாளியருக்கு இந்த நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தின் நிலை.

வீறுபெற்று எழுந்த ஐரோப்பா தன் வாணிகத்துக்காக இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு வந்தபோது இங்கிருந்த அரசியல் - பொருளியல் - குமுகியல் - நிலைகள் அந்நாடுகளைத் அதன் ஆளுமையினுள் கொண்டுவருவதை எளிமையாக்கின. அங்குள்ள வளங்களும் சந்தையும் ஐரோப்பிய முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆனால் இந்த நாடு பிடிக்கும் கட்டத்தில் பிரிட்டனால் ஏமாற்றப்பட்ட செருமனி (பார்க்க: Foot Prints on the Sands of Time, F.G.Pearce, Ch.ⅩⅩⅣ) இங்கிலாந்தைப் பழிவாங்க இரு உலகப் போர்களைத் தொடங்கி பிரிட்டனின் வல்லரசியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்று அமெரிக்க வல்லரசியம் வளர்ந்து தேய்பிறைக் கட்டத்தில் உள்ளது.

உலகப் போர்கள் முடிவடைந்ததும் ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டிருந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. ஆனால் அவை தங்கள் பொருளியலைத் தொய்வுறாமல் கொண்டு செல்லத் தேவையான மூலதன - தொழில்நுட்பத்தை வளர்க்கத் தினறிய நிலையில் வல்லரசுகள் தாங்கள் உருவாக்கிய உலக வங்கி, உலகப் பணப் பண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் பொருளியலைத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன. ஐரோப்பாவில் உருவான பொதுமைக் கோட்பாட்டின் திரிபால் அந்நாடுகளிலுள்ள வளம் அனைத்தும் அங்குள்ள ஆட்சியாளரின் கைகளுக்கு வந்தன. ஊழிலில் அவர்கள் கொழுத்தனர். கொள்ளையடித்த பணத்தை முதலில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கினார். அதனால் சிக்கல்கள் வரவே பணக்கார நாடுகளின் தொழில்களில் முதலிட்டனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி உலகளாவுதல் என்ற கருத்தை உருவாக்கித் தங்கள் நாடுகளிலிருந்த தொழில்கள் அனைத்தையும் ஏழை நாடுகளுக்கு வெளியேற்றித் தொழிலாளர் இயக்கங்களின் நெருக்குதல்களிலிருந்து வல்லரசுகள் தற்காலிகமாகத் தப்பின.

தன்னுடைய சொந்த வளத்தைப் பயன்படுத்தாமல், உலகிலுள்ள பிறநாடுகளின் வளங்கள் முற்றிலும் செலவழிந்தபின் தானே தனிக்காட்டு அரசனாகக் கோலோச்சலாம் என்று ″பின்″னெச்சரிக்கையுடன் உலகின் வளங்களை எல்லாம் தன் ஆளுமையினுள் கொண்டுவருவதற்குத் தன் செல்வத்தின் பெரும் பகுதியையும் படைப் பெருக்கத்தில் செலவிட்டதால் இன்று பெரும் கடன் வலையில் குறிப்பாக எண்ணெய் நாடுகளின் கடன் வலையில் சிக்கியிருக்கிறது அமெரிக்கா (Business Standard Channai, 15-07-08) அதுமட்டுமல்ல அமெரிக்காவின் பெருமைக்கும் தன்மானத்துக்கும் அடையாளமாகிய கட்டடங்களைக் கூட அரேபியப் பணக்காரர்கள் வாங்கிக்கொண்டுள்ளனர் (THE HINDU Business Line 19-07-08 p.8). உலக அளவில் டாலரின் மதிப்பு இறங்கிப்போயுள்ளது. விலைவாசிகள் ஏறியபடி உள்ளன. அங்குள்ள பணிகள் பிறநாடுகளுக்குக் கொண்டுசெல்லப் படுகின்றன. அரசியல்வாணர்களும் பொருளியலாரும் இப்போது அமெரிக்காவுக்கு உடனடித் தேவை ஆப்கானித்தானிலோ, ஈராக்கிலோ மக்களாட்சியை நிறுவுவதல்ல, அமெரிக்காவில் மக்களாட்சியை உறுதிப்படுத்துவதுதான் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் நிலைமை இன்னும் இரங்கத்தக்கதாக உள்ளது. கணக்கற்றுப் பாய்ந்த பணம் இங்கு படைப்போ பணியோ சார்ந்த வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு மறுக்கப்பட்டதால் அந்தப் பணம் பாய்ந்து அசையாச் சொத்துகளின் விலை உலக அளவில் மிக உயர்ந்துவிட்டது. கட்டடங்களின் வாடகையும்தான். இங்கு பணியாளர்களின் சம்பளம் பலமடங்கு ஏறிவிட்டது. கறிக்கோழி போல் குறுகிய காலத்தில் பட்டம் பெற்றவர்களுடைய திறமை உலக அளவில் ஒப்பிட கீழிறங்கியுள்ளது. கட்டமைப்பு வசதிகளை இங்குள்ள காலங்கடந்து போன ஆள்வினை முறையால் உரிய காலத்தில் உருவாக்க முடியவில்லை. முதலைப் போட்டுத் தொழில் தொடங்குபவர்களுக்கு உரிய உரிமங்கள் ஒதுக்கீடுகள், இசைவுகளைப் பெறுவதற்கு சிவப்பு வார்த் தடங்கல்களும் அளவுக்கு மீறிய ஊழலும் பெரும் சிக்கல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில் இங்கு ஏற்கனவே காலூன்றியவர்களும் புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்களும் கடையைக் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியத் தொழில்நுட்பர்களை விட அமெரிக்கத் தொழில் நுட்பர்கள் இன்று குறைந்த கூலிக்கு வருவதால் அமெரிக்காவிலுள்ள இந்தியத்தொழில் முனைவோர் கூட அமெரிக்கத் தொழில் நுட்பர்களை நாடத் தொடங்கியுள்ளனர். தொழில் முனைவோர் ஒவ்வொரு நாடாக ஓடி அங்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டு அங்கெல்லாம் பணப்புழக்கத்தை அளவுக்கு மீறிப் பெருக்கிவிட்டு அது தங்கள் தொழிலைப் பாதிக்கும் நிலை வந்த உடன் அவற்றை அப்படியே போட்டுவிட்டு அடுத்தடுத்த நாடுகளுக்குத் ஓடத்தொடங்கியுள்ளனர். தங்கள் கைகளுக்குள் வந்துவிட்டது என்று இவர்கள் கொக்கரித்த உலகம் இப்போது இவர்களைப் பார்த்து எக்காளமாகச் சிரிக்கிறது.( The Price of Growth, Business World, 21-07-08, p.30 - 34)

எழுதப்பட்ட வரலாற்றில் ஒரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு சென்று தொழிலகங்களில் விளைப்பு நடவடிக்கையில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் பண்டை எகிப்தியர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மெசப்பொட்டோமியாவின் மீது படையெடுத்து மூலப்பொருட்களையும் அடிமைகளையும் அவர்கள் கொண்டு வந்தனராம். அதற்கு அடுத்தபடி அதைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள்தாம். இன்று உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு எல்லா மூலப்பொருள்களும் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்வது போல் ஒவ்வொரு பொருளும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகி உலக மக்களின் ஆற்றல் வளங்களை வீணாக்கி சிலரை மட்டும் கொழுக்கவைத்துக்கொண்டிருக்கிகிறது.

இந்த நிகழ்முறையில் எந்த நாட்டிலோ யாரோ உருவாக்கிய ஒரு தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கி அதற்குத் தேவையான மூலப்பொருளையும் இறக்குமதி செய்து உள்நாட்டு அறிவியல் - தொழில் நுட்பங்களை கருக்கொள்ள விடாமல் நசுக்கி உள்நாட்டு மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு விடுத்தும் கொள்ளை அடிக்கின்றனர் ஏழை நாடுகளை ஆளுவோர்.

ஓர் உண்மையான அறிவியல் - தொழில்நுட்ப மண்டலம் தத்தம் நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தத்தம் தேவைகளை நிறைவேற்றுவதாகவே இருக்க வேண்டும். எம் பல்தொழில் பயிலகத்தின் இறுதியாண்டில்(1960) உரையாற்றிய இந்திய எல்லைச் சாலை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர், தங்கள் பணியின் தன்மையே வெளியிலிருந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வர முடியாது என்பதுதான்; எனவே அங்கங்கே கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே தங்கள் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறைவேற்றுவதாகக் கூறினார். அவர்களால் முடிவது நம்மாலும் முடியும்.

நம் மக்களிடம் சென்ற தலைமுறைகளில் இருந்து அழிந்தனவும் இன்றும் தொடர்வனவுமாகிய அங்கங்குள்ள மூலப்பொருட்களைக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றுகின்ற தொழில் நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் மீளாய்வு செய்து மேம்படுத்தி ஒரு தேசிய அறிவியல் - தொழில் நுட்ப மண்டலத்தை ஒவ்வொரு தேசிய மக்களும் உருவாக்க வேண்டும்.

தங்கள் மூலதனம், தங்கள் மூலப்பொருள், தங்கள் அறிவியல் - தொழில்நுட்பம், தங்கள் உழைப்பு, தங்கள் சந்தை என்ற அடிப்படையிலான ஒரு தேசிய முதலாளியத்தை உலகின் ஒவ்வொரு தேசியமும் உருவாக்க வேண்டும். இன்றியமையாதவை என்று ஏதாவது தேவைப்பட்டால் மட்டும் பிற தேசியங்களோடு தொடர்பு வைத்துத் தங்கள் பண்டங்கள், பணிகளை, தேசிய மக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பரிமாறிக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேசிய மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் எதனையும் ஏற்றுமதி செய்யக் கூடாது. புதுப்பிக்க முடியாத வனங்களை நேரடியாகவோ, அவற்றைப் பயன்படுத்திச் செய்யும் பண்டங்களாகவோ எக்காரணத்தைக் கொண்டும் எந்தத் தேசியமும் தன் தேசீய எல்லைக்கு வெளியே செல்ல இடம் தரக்கூடாது.

பாராளுமன்ற மக்களாட்சி என்ற பெயரில் செயற்படும் இன்றைய குழுவாட்சி(Oligarchy) முறையில் இன்றிருக்கும் பொருளியல் கட்டமைப்பை உடைப்பது இயலாது. எனவே உண்மையான மக்களாட்சிக்கான ஒரு புதுவடிவை நாம் உருவாக்க வேண்டியது உடனடிப் பணி.

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் உலகளாவுதல் என்ற தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.)

2008 ஆகத்து தமிழினி பற்றி

திரு. கரு.ஆறுமுகத்தமிழன் இன்னும் கற்காலத்தில் இருக்கிறார். இந்திய அரசியல் தலைவர்கள் உள்நாட்டுத் தொழில் முனைவோரை பணத்திற்காக எதிர்நோக்கிய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இந்திரா - இராசீவ் காலத்திலிருந்தே கட்சிக்குப் பணம் பெற இறக்குமதி, அதுவும் ஆயுத இறக்குமதியையும் அயல்நாட்டு ஒப்பந்தங்களையும்தான் சிறப்பாக நம்பியிருக்கிறார்கள். அம்பானிகளை இப்போதைக்கிப் பயன்படுத்திக் கொண்டனர். கையிருப்பும் சேரும் போது நேரு குடும்பத்தை எதிரணியால் எதில்கொள்ள முடியவில்லை. ″சக″ தமிழனின் குருதி நாளும் சிந்தப்படுவதைக் கண்டு கருணாநிதிக்குப் பொறுக்க முடியாமல் போய்விடும் என்ற அவருடைய கற்பனை மிகச் செழுமையானதுதான். அந்தக் கூட்டத்துக்குத் தமிழர்களை விற்றுத் திண்றுதான் பழக்கமே அன்றி வேறில்லை. ″சக″ தமிழர்கள் 400 பேர் குருதி சிந்தியும் வராத வருத்தம் புதிதாக எங்கிருந்து வரும்? மக்களுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சினால்தான் அவர்களுக்கு விடிவு. தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதில் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் நேரடிப் பட்டறிவு உண்டு.

பண வீக்கம் கட்டுரையில் பணவீக்கத்தைப் பற்றிய அடிப்படை சரியாகக் கூறப்படவில்லை. மக்களிடத்தில் மிகுதியாகப் புழங்கும் பணம் பண்டவிளைப்பு, பணிகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்குத் திருப்பிவிடப்பட்டால் பண்டங்கள், பணிகளின் நுகர்வு நோக்கிப் பாய்வது குறையும். விலைவாசி நஞ்சாக ஏறாது.

பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் கட்டுரை களத்தின் நடைமுறைகளுக்குப் பொருந்தவில்லை. 31-12-2006 வரையுள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. கணக்கு எடுக்கப்பட்ட நாளில் கடனாளி செலுத்தியது போக நிலுவையில் நின்ற தொகை மட்டும் தள்ளுபடியானது. 9/2006 இல் பெற்ற கடனுக்கு 1/2008 வரை நான் கட்டிய தொகை போக எஞ்சியதற்கு தள்ளுபடி கிடைத்தது. அரசின் அறிக்கைகளில் உள்ள குளறுபடிகள் அப்படியே கட்டுரையில் இடம் பெற்றுவிட்டன.

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளில் முதலாவது இன்று ஆளுவோர் தூக்கிப்பிடிக்கும் கோடுபாடுகளின் அடிப்படையில் பணவீக்கத்தைப் பேசுகிறது. அதே போல் இரண்டாமவர் கட்டுரை உழவனுக்கு ஆட்சியாளர் வைத்துள்ள தீர்வுகளிலேயே ஒட்டுப்போட முயல்கிறது. அந்தந்தச் சிக்கல்களின் அடி ஆழங்களில் செல்வது என்ற சிந்தனை வட்டத்திற்கு மிகத் தொலைவில் இருவரும் நிற்கின்றனர்.

பரிதிமாற் கலைஞர் உண்மையில் ஒரு பிறவி மேதை என்பது அ.க.பெருமாளின் கட்டுரையைப் படித்த பின்தான் தெரியவருகிறது. அலக்சாண்டர், ஏசு, விவேகானந்தர், கணிதமேதை இராமானுசம் போன்று குறுகிய வாழ்நாளில் மலைப்பூட்டும் அருஞ்செயல்களை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் அனைவரின் அகவையும் இறக்கும் போது கிட்டத்தட்ட 32. கட்டுரையின் இறுதி மேற்கோள் சிறப்பு. அ.கா பெருமாளுக்குப் பாராட்டுகள்.

இந்துவைப் பற்றிய அமலா சத்தியசீலனின் கொதிப்பு புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அணுவிசை ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கான எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டிருந்தால் அவரது நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடங்கை வகையினர் அதில் மனத்தூய்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது இறுதியில்தானே தெரிந்தது?

உலக வணிக அமைவனம் - காத்திருக்கும் கழுகு. ″தோகா″ என்று எழுதினால் கிடைக்கும் அதே ஒலிக்கு ஏன் ஒரு கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒற்றெழுத்து முன்வராமல் இடையிலும் கடையிலும் தனித்து வரும் உயிர்வல்லெழுத்து மென்மையாகவே ஒலிக்கும். காகம், தக, வசம், பேசு, படம், தவிடு, கதவு, ஓது, கூபம், கோபி, மறம், கூறு. வல்லரசு நாடுகள் வலியுறுத்துகின்றன என்பதால் அதை மறுக்காமல் ஏன் ஏழைநாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.

உள்ளூர் மடம் ராச சுந்தரராசனின் மாறுபட்ட படைப்பு. பண்டை மரபுகளை நினைவூட்டுவது சிறப்பு.

சிறுகதை ஈழத்து நடையில் மனதை உருக்குவதாக இருந்தது ஈழத்தில் அந்தக் காலகட்டத்தில் (எண்பதுகளுக்கு முன்பே) இப்படியொரு வறுமையா?

″அட்டம்″ நன்றாக வந்திருக்கிறது அட்டம் என்றால் பொருட்கள் அடுக்கி வைக்கும் Rackக்குக் கான குமரிமாவட்ட வழக்குச் சொல். சட்டம்(ஆறு), சத்தம்(ஏழு) அட்டம் (எட்டு) என்பவை முறையே கதவு நிலை, ஒலியின் ஏழு பிரிவுகள், அட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திய குறியீட்டு வழக்கு.

ஏகம் - ஒன்றையே நினைப்பது - ஏக்கம் – ஒன்று

துவைதம் – துமித்தல் – பிரித்தல் – இரண்டு

த்ரிதம் - திரி – முப்புரி அறாது, சொலவடை – மூன்று

சதுர(ம்) – நான்கு பக்கங்கள் உள்ள வடிவம் – சதுரம் - நான்கு

பஞ்ச(ம்) - ஐந்தாம் திணை – பாலை – பஞ்சம் – ஐந்து

சஷ்ட(ம்) – பழங்காலக் கதவு நிலை - சட்டம் – ஆறு (சட்டம் நிலைக் கல் படியின் மீது ஊன்றப்படும்.)

சப்த(ம்) – ஏழாக ஒலிப்பது – ஏழிசை – சத்தம் – ஏழு

அஷ்ட(ம்) – பொருட்களை அடுக்கிவைக்கும் பல்கையால் ஆன தளவாடம் - அட்டம் – எட்டு

நவம், தசம் – ஒன்று முதல் பத்து வரை மட்டும் எண்ணிக்கை அறிவு வளர்ச்சிக் கட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஒன்று என்று தொடங்குவதற்கு மாறாக இலாபம் என்று இன்று வாணிகர்கள் தொடங்குவது போல் அன்று விளைச்சலில் பத்திலொரு பங்காகிய உழவனுக்குரிய தசக்கூலியை முதலில் வைத்து பத்தாவதாகப் பத்தை வைத்திருக்கிறார்கள். உழவன் கூலியை இறுதியில் அளந்தால் பழைய பத்தைப் பழைய பத்து என்று பொருள்படும் தொல் பத்து → தொன்பது → ஒன்பது என்றானது. இது பழையது எனப் பொருள்படும் தொண்டு என்ற சொல்லாலும் இதைக் குறிப்பிடுவர். இதற்கு எதிர்ச் சொல்லான புதுமை என்ற பொருள்தரும் நவம் என்ற சொல்லை சமற்கிருதம் என்ற செயற்கை மொழியை உருவாக்கியோர் வடித்திருக்கின்றனர். எனவே பத்து தசமாயிற்று.

அட்டமி என்பதற்கு பிரதமை, துவிதை, திரிதியை, சதுர்த்தி என்றிருக்க வேண்டும். ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பவை முறையே 11, 12, 13, 14 ஆகியவற்றைக் குறிக்கும். அட்டமி அன்று கடலில் ஏற்றவற்றம் மிகக் குறைவாக இருக்கும். அன்று கடற்செலவுக்கு மிக ஏற்ற நாள். கடலுக்கு வெளியிலும் அவ்வாறுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்று கதிர், நிலவு ஆகியவை புவியுடன் ஒப்பில் செங்கோணத்தில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசைகளின் நிகரவிளைவு (Equivalency) மிகக் குறைவாகவே இருக்கும். கடலோடிகளை இழிவு படுத்துவதற்காகவே அந்நாளைத் தீய நாளாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக 8 ஒலிகள் உள்ள இசையை (ச, ரி, க, ம, ப, த, நி, ச – Octaves) ஏழாகவும், எட்டாகிய மெய்ப்பாட்டை நவரசம் என்றும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக ஆய்ந்தால் பல துறைகளிலும் இதனுடைய ஊடுருவலைத் தடம்பிடிக்க முடியும்.

திசைகளில் கன்னித் திசை(மூலை) என்பதை அண்மைக் காலமாக நிருதி என்று கூறத்தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில் திரட்டித் தந்துள்ள செய்திகள் மிகப் பயனுள்ளவை. நம் மரபு இலக்கியங்களையும் தொன்மங்களையும் நோக்கித் திரும்புமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் சரியானது.

செல்வ புவியரசனின் கொதிப்பு ஞாயமானது. சீவாவைப் பற்றிய கணிப்பு மிகத் துல்லியமானது. கருணாநிதியையும் செயகாந்தனையும் குறித்து அவர்கள் கூறுகின்ற கோட்பாடுகளுக்குப் பொருத்தமற்ற வெளிப்பாடுகள் அவர்களது இலக்கியப் படைப்புகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பே.

பாதசாரியின் தடப்பதிவும் சிறப்பு

பணக்கார நாட்டு மக்கள் ஏன் செல்ல உயிரிகளை வளர்க்கிறார்கள் என்பதற்கு சுற்றம் சூழ... ஒரு நல்ல விளக்கம். வீட்டில் தனித்திருக்கும் என் மனைவி கோழி வளர்ப்பதை நான் ஊக்குகிறேன்.

″துயர நகரம்″, நகசாகி, இரோசிமா, போல் போபாலையும் எவ்வாறு ஆய்வுக் களமாக அமெரிக்கா கையாண்டது என்பதற்கான ஆவணம். சப்பான் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் துயரங்களை ஆற்ற முன்வந்தனர். நம்மவர்கள் ″ஆய்வாளர்″களுக்குத் துணைநின்றனர்.

தான், தன் குடும்பம் என்பவற்றுக்காக எதையும் செய்யத் தயங்காத இராமதாசின் செயல்கள் காட்டுவிலங்காண்டித்தனமானவை. இவர் போன்றோரது செயல்களைத் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் உருப்படாது. கண்மணிக்கு செயமோகனின் அறிவுரை பாராட்டத்தக்கது.

பாமயனின் கட்டுரை எப்போதுமே அரைக்கிணறு தாண்டுவதுதான். Critical Realism.

யானையை அழித்த பிரான்(அசுரனை என்பது தேவையில்லை) ஒரு பெரும் உண்மையை வெளிப்படுத்துகிறது. யானைத் தோல் போர்த்து என்று கொற்றவையைத்தான் சிலம்பு போற்றுகிறது. அவளது அருஞ்செயல்களைச் சிவனுக்கு ஏற்றியிருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் தமிழினியின் களம் விரிவடைந்துள்ளது. பாராட்டுகள்.

மின்சாரப் பொய்யர்கள்

எலக்கட்டறி விளக்க நம்பி எலையப் போடலாமா?
இந்தத் தண்ணிக் குழாய் நம்பி தலையில் எண்ணெய் வைக்கலாமா?

இது ஏறக்குறைய 60 அல்லது 65 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படப் பாடல். ஆனால் இன்றைய நிலைமை என்றுமே இருந்ததில்லை. மின்சாரத்தைப் பொறுத்தவரை எங்கே எப்பொழுது மின்சாரம் நின்றுபோகும் எப்போது திரும்பிவரும் என்பது யாருக்கும் தெரியாது. மக்களைவிட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் நாளில் பெரும்பகுதியும் மின்சாரம் இல்லாமல் நாள்தோறும் தங்கள் தொழில் நசிந்து வருவதைப் பார்த்து குருதிக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது இன்றைய நிலை.

தமிழகத்தில் ஒரேயொருவரைத் தவிர வேறு யாரையும் சிக்குன்குனியா எனப்படும் மொழி முறித்தான் நோய் தாக்கவில்லை என்று நோயில் நொந்து கிடந்த மக்களைப் பார்த்துக் கொழுப்பேறி தமிழக மக்கள் நலவாழ்வு அமைச்சரும் தலைமைச் செயலரும் கூறிய போதும் தட்டிக் கேட்கவில்லை தமிழக மக்கள்.

பேருந்துக் கட்டணத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உயர்த்தவில்லை என்று கூசாமல் பொய் சொன்னபோதும் வாய்பேசாமல் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாள்தோறும் பல மணிநேரம் மின்வெட்டால் ஏறக்குறைய முக்கால் ஆண்டுக்கும் மேலாக அல்லல்பட்டுவரும் மக்களைப் பார்த்து மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் ஆர்க்காட்டு வீராசாமி திமிருடன் பொய் பேசிய போதும் மக்கள் ஆத்திரம் கொள்ளவில்லை. ஆனால் சிறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த திருப்பூர், கோவைத் தொழில் முனைவோர் போராட்டங்களைத் தொடங்கிய பின்னர்தான் அமைச்சர் கீழிறங்கி வந்து மின்வெட்டு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இடையிடையே பல பொய்களைக் கூறினார். காற்றோட்டம் இல்லை அதனால் காற்றாலைகள் செயற்படவில்லை என்றார். அந்த நேரத்தில் காற்றாலைகள் இயங்கி கொண்டுதான் இருந்தன. இப்போதும் அதையேதான் சொல்கிறார். இப்போதும் காற்று நன்றாக வீசுகிறது, காற்றாலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியானால் இந்த அமைச்சர் ஏன் வேண்டுமென்றே பொய் பேசுகிறார். அவருக்கு என்ன, பொய்பேசும் மனநோயா?

இதன் பின்னணியில் உள்ள வரலாற்றை நாம் பார்ப்போம். நெஞ்சை நடுங்க வைக்கும் மின்வெட்டைத் தமிழகம் கண்டது 1970களின் முற்பகுதியில். அப்போது மின்துறை அமைச்சராயிருந்தவர் ஓ.பி.இராமன். அவர்தான் பின்னாளில் கருணாநிதியின் மகனும் மதுரையின் ″ஆளுநரு″மான மு.க.அழகிரியின் மூத்த சகலர். கருணாநிதிக்கும் அமைச்சர் குடும்பத்துக்குமான நெருக்கமான உறவே இந்தத் திருமணத்தில் முடிந்தது. எனவே அவர் செயல்பாடுகளைச் கருணாநிதியின் செயல்பாடுகளாகவே கொள்ள வேண்டும். அவர் ஓர்அறிக்கை விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அணைகளில் இருந்த நீர்த்தேக்க அளவே அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் இருப்பதாகவும், அந்த முன் ஆண்டில் கோடைகாலத்தில் 25% மின்வெட்டு நேர்ந்தது என்றும் எனவே தான் முந்தியே அந்த அளவு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப் போவதாகவும், கூறினார். இது செயற்கையாகத் தோன்றியது. இந்த இடைவேளையில் மழைபெய்து நீர்த் தேக்க நிலை மேம்படலாம் அல்லவா? அப்படியானால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. அதாவது தொழிற்சாலைகளுக்கு மின்னாற்றல் ஒதுக்கீடு செய்வதில் காசு பார்க்கத் திட்டமிடுகின்றனர் என்று எமக்குத் தோன்றியது, ஏனென்றால் அப்போது இந்த மின்வெட்டு மும்முனைப் பயன்பாட்டுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அன்றிலிருந்து தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் மின்வெட்டு என்றும் தீராத ஒரு நோயாகி விட்டது. 2008 - 2009 ஆம் ஆண்டுக்கான தமிழக வ.செ.திட்டத்தில் உரூ9752 கோடியைப் பற்றாக்குறையாக வைத்துவிட்டு உரூ 84 கோடி மீதம் என்று பொய் சொன்னவர்கள் அல்லவா? (தமிழினி ஏப்பிரல் 2008 ″பொய்யிலே பிறந்து....″ பக்.8 பார்க்க). அவர்கள் காலம் காலமாகச் சொன்ன பொய்களைப் பார்ப்போம்.

1998 மார்ச்சு மாதம் திடீரென்று மாலை 6.00 மணிமுதல் 9.00 வரை மும்முனை மின்சாரம் கிடையாது என்றனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் நிறைய மழை பெய்து நிலத்தடி நீர் உயர்ந்து விட்டதால் இதுவரை ஓடாத மின் எம்பிகள்(பம்புகள்) ஓடத் தொடங்கி விட்டனவாம்! ஆனால் அந்த ஆண்டில் அந்த நேரத்தில் தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகளிலும் குளங்களிலும் தாரளமாக நீர் இருந்தது. அதே ஆண்டு கத்திரி வெய்யிலுக்கு நடுவில் ஒன்றிரண்டு நாட்கள் மழை பெய்தது. அதைக் காட்டி ஏரி குளமெல்லாம் நிரம்பிவிட்டன, எனவே மின்வெட்டு அகன்றுவிடும் என்று அமைச்சர் கூறினார். ஆனால் மின்வெட்டு தொடர்ந்தது. அந்தப் பொய்க்கும் இந்தப் பொய்க்கும் என்ன பொருத்தம் பாருங்கள். ஆனால் சிறுகச் சிறுக சிறு வாணிக நிலையங்கள் கையடக்க மின்னாக்கிகளை வாங்கி விட்டன. இதில் பல நூறு கோடி உரூபாய்கள் மின்னாக்கி நிறுவனங்களுக்குத் வாணிகம் நடந்துவிட்டது. இந்த மூன்று மணி நேரத் தட்டுப்பாட்டை அறிவித்த போது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பெரிய மின்னாக்கிகளை வாங்கினால் 30% மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இது பெரும் மின்னாக்கிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி உரூபாய்கள் விற்பனைக்கு வழிவகுத்திருக்கும்.

கடற்கரையிலிருந்து 1½ மைல்களுக்குள் வேளாண்மை மின் எம்பிகளுக்கு இணைப்பு கொடுக்கக் கூடாது என்று ஒரு தடை இருந்தது. நிலத்தடி நீராகக் கடல்நீர் உட்புகுந்து விடும் என்பதற்காக இந்தத் தடை. ஆனால் 1978, 1979ஆம் ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததைக் காரணமாகக் கூறி தடைசெய்யப்பட்ட அந்த எல்லைக்குள் இருந்த 50 ஆயிரம் வேளாண் எம்பிகளுக்கு இணைப்பு வழங்கினார் பண்டுருட்டி இராமச்சந்திரன். மின்வாரிய நண்பர்களைக் கேட்ட போது பல ஆயிரம் மின் மாற்றிகளும் மிகப் பெரும் அளவில் மின் கடத்திகளும்(மின் கம்பிகள்) வாங்க வேண்டியிருக்கும் என்றனர். ஆக, பக்க வருவாயைக் காரணமாக வைத்துதான் தடைகளும் நீக்கல்களும் செயல்படுகின்றன என்பது தெளிவு. இதில் நாம் அவர்கள் தரும் புள்ளிக் கணக்குகளை வைத்து எப்படி முடிவு எடுக்க முடியும்?

மின் வாரியத்துக்கு இழப்பு இலவய மின்சாரத்தால் என்றார்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டு வ.செ.திட்டத்திலும் இலவய மின்சாரத்துக்கான தொகையை மின்வாரியத்துக்கு அரசு வழங்கிவிடுகிறது.

நடுவரசு தமிழ்நாட்டு எல்லைக்குள் உருவாக்கும் மின் ஆற்றலில் 15 நூற்றுமேனியைத் தமிழகத்துக்குத் தரவேண்டுமாம். ஆனால் 5 நூற்றுமேனியைத் தான் தருகிறது அப்போது அமைச்சர்கள் குறை சொன்னார்கள். இப்போதும் நிலையில் பெரும் மாறுபாடு இல்லை.

இங்கு நிலையான மின்வெட்டு இருந்த காலம் முழுவதும் கேரளத்துக்கு மின்சாரம் விலைக்குக் கொடுத்தார்கள். அன்னை செயலலிதாவுக்கு விருதெல்லாம் வழங்கினர் கேரளத்தார். தமிழினத் தலைவருக்கும் அவரது நிழலான ஆர்க்காட்டாருக்கும் எதை வழங்குகிறார்களோ!

பழைய பொய்களைப் பற்றிய தரவுகள் நிறைய இருந்தாலும் இத்துடன் முடித்துக்கொண்டு புதிய பொய்களினுள் நுழைவோம்.

கடந்த ஏழெட்டு மாதங்களாகத் தமிழகத்தில் ஒரு மணிநேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் நின்றுபோகும். அமெரிக்காவின் நியூயார்க்கில் 1970களில் ஒருமுறை ஒரே ஓர் இரவு மின்சாரம் நின்றுவிட்டது. அடுத்த பத்தாம் மாதம் அங்குள்ள குழந்தைப் பிறப்பு முன் எப்போதையும் விட மிகுதியாக இருந்ததாம். எண்ணற்ற வன்புணர்ச்சிகளாம். நம் ″பண்பாட்டின்″ மேன்மைக்குச் சான்று கூறுவதற்காகவே இத்தகைய ஒரு மின்வெட்டு உத்தியை நம் ″திராவிட″ ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்களோ என்னவோ! அல்லது நம் மரபுப்படி இதை வெளிவராமல் அமுக்கி விடுகிறோமோ என்னவோ! ஆர்க்காட்டார் எப்போதுமே மின்வெட்டு இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த மின்வெட்டு மிக வஞ்சகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு நினைத்திருந்தால் திட்டவட்டமான நேரங்களைக் குறிப்பிட்டு அதைக் கடைப்பிடித்திருக்கலாம். மின்சாரத்தை நம்பியிருக்கும் சிறு தொழில்கள் தங்கள் செயற்பாட்டை அதற்கேற்ப மாற்றியமைத்திருக்கும். இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சிறுதொழில் துறையினரில் திருப்பூரிலும் கோவையிலும் செறிந்திருக்கும் தொழில் முனைவோர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னர்தான் மின்வெட்டு இருப்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டு சென்னையில் நாளைக்கு ஒரு மணி நேரமும் பிற நகரங்களில் இரண்டு மணி நேரமும் 21-07- 2008 முதல் மின்வெட்டு செயற்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த நடைமுறை ஒரே சீராகக் கடைப்பிடிக்கவில்லை. பொய்கள் குவிந்து கொண்டேயிருக்கின்றன.

இருந்தாலும் அவர்கள் இப்போது தந்திருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

தமிழகத்தின் மொத்த மின் தேவை 9500 மெ.வா.


கிடைப்பு - 8500 மெ.வா.

பற்றாக்குறை - 1000 மெ.வா.

மின்சாரம் வரும் வகை:

காற்றுவிசை கட்டமைப்பு - 1260 கிடைப்பு - 1200 (மெ.வா.)

எரிவளி கட்டமைப்பு - 424 கிடைப்பு - 270 (மெ.வா.)

அனல் விசை கட்டமைப்பு - 2970 கிடைப்பு - 2300 (மெ.வா.)

நீர் விசை கட்டமைப்பு - 2180 கிடைப்பு - 900 (மெ.வா.)

மொத்தம் கட்டமைப்பு - 6834 கிடைப்பு -4670 (மெ.வா.)

(நியூ இந்தியன் எக்சுபிரசு 19-07-2008)

இந்தக் கணிப்பில் நடுவரசு வழங்கும் மின்சாரம் பற்றிய செய்தி இல்லை. நடுத் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டியதில் 60 நூற்றுமேனிதான் கிடைக்கிறது என்று மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தம் கிடைப்பு 8500 என்றால் எஞ்சிய 8500 - 4670 = 3830 மெ.வா.வையும் நடுவரசுக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? தமக்கு வர வேண்டியதில் 60 நூற்றுமேனிதான் நடுவரசு ஒதுக்கீட்டில் கிடைக்கிறது என்றால் மொத்த ஒதுக்கீடு 3830 ÷0.6 = 6383 மி.வா.
அப்படித்தானே! அப்படியானால் ஏறக்குறைய பாதிக்குப் பாதி நடுவரசிலிருந்து பெறுகிறோம் என்று கொள்ளலாமா? அப்படியானால் எஞ்சியிருக்கும் மாநிலத்தின் பொறுப்பிலிருக்கும் மின்னாக்கு வகைதுறைகளைக் கூட நடுவரசில் கொடுத்துவிட்டு வழங்கலை மட்டும் மாநிலம் வைத்துக் கொள்ளலாமா? அதில்தான் சிக்கல் என்கிறீர்களா? ஊருக்கு ஊர் அரசியல் கட்சியினரும் மி.வா. ஊழியர்களுக்கு ″வேண்டியவர்களும்″ கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடுவதுதான் 30% மின் இழப்புக்கான காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். மின்வாரியங்கள் உருவாகும் முன்பு குழுமங்களில் 5%க்கு மேல் இழப்பு வந்தால் அடிநிலைப் பொறியாளர்களைப் பிய்த்து எடுத்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மின்வழங்கலைத் ″தனியாரி″டம் அதாவது அயல்நாட்டவரிடம் கொடுத்துவிடலாமென்றால் தொழில் சங்கத்தினர் விட மாட்டார்களே!

இன்றைய மின் பற்றாக்குறைக்கு ஒரு எளிய தீர்வை இந்தியத் தொழில் குழுவின் தமிழ்நாட்டுத் தலைவர் மாணிக்கம் இராமசாமி முன்மொழிந்துள்ளார். மின்வெட்டுக் காலங்களில் பயன்படவென்று தொழில் நிறுவனங்கள் வாங்கி நிறுவியிருக்கும் பெரும் மின்னாக்கிகளை ஓடவிட்டால் 3000 மெ.வா. மின்சாரம் பெற முடியும். இந்த மின்னாக்கிகளில் உருவாக்கும் செலவு வாரியத்தின் மின்கட்டணத்தை விட சராசரியாக நாளொன்றுக்கு உரூ 6 கோடி ஆகும். பருவ மழை வருவதற்குள்ள 150(5 மாதங்கள்) நாட்களுக்கும் 900 கோடி செலவில் சிக்கலை எதிர் கொள்ளலாம் என்பது அவரது கருத்துரை. மாராட்டிய மாநிலம் புனேயில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார். பார்க்க, டைம்சு ஆப் இந்தியா, சென்னை 19-07-2008 பக் 4.

கருத்துரைகளுக்குப் பஞ்சமில்லை. சீரான வெப்பம் நிலவும் தமிழகத்தில்தான் ஏராளமான அளமிய(அலுமினியம்)மும் கிடைக்கிறது. மனம் வைத்திருந்தால் 1970களில் தொடங்கியிருந்தால் இதற்குள் நாம் நம் மின் தேவைகள் அனைத்தையும் அதைக் கொண்டே நிறைவேற்றியிருக்கலாம். அந்தத் தொழில் நுட்பமும் பாய்ச்சல் நிலை கொண்டிருக்கும். மின் ஆற்றலைப் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இவற்றில் நாட்டமே இல்லை. இவர்களின் குறிப்பாகத் தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் பல் முனைப்பட்டது. அதைத் தெரிந்து கொள்ள இன்றைய மின்வெட்டுகளின் தீய விளைவுகளைப் பார்ப்போம்.

தமிழக மக்கள் மின்சார இணைப்பு இருந்தும் இருட்டில் வாழப் பழகி வருகின்றனர். நாளடைவில் மின்சாரம் இன்றியே கூட வாழ்ந்துவிடலாம்.
வசதி உள்ளவர்கள் மின்வாங்கிகளை(இன்வெர்ட்டர்களை) வாங்கி வைத்து இருட்டைத் தவிர்க்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இயன்றவர்கள் அனைவரும் இன்வெர்ட்டர்கள் வாங்கிவிடுவார்கள். மின் வாங்கி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல வாணிகம். அரசாளுவோருக்கும் உரிய பங்கு கிடைத்து விடும்.
சிறு தொழில் முனைவோர் சிறுகச் சிறுகத் தொழிலின் இயங்குதிறனையும் ஆதாயத்தையும் இழந்து தொழில்கள் அடைப்புக்குள்ளாகும். வெளியிலிருந்து வரும் பெருந்தொழில்களுக்கு நாட்டை மொத்தக் குத்தகைக்கு விட்டுவிடலாம்.
மின்வாங்கிகளை வாங்க முடியாதவர்களின் பிள்ளைகள் வாங்க முடிந்தவர்களின் பிள்ளைகளோடு கல்வியில் போட்டி போடும் திறனை இழப்பார்கள். ″சமச்சீர்″ கல்வியையும் சேர்த்து ஏழைகளின் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அணுமின் நிலையங்கள்தாம் மின்விசைச் சிக்கலுக்குத் தீர்வு என்ற இந்திய ஆட்சியாளர்களின் கருத்துக்கும் செயலுக்கும் மக்களிடம் வலுவான ஆதரவு உண்டாகும். எதிர்த்துப் பரப்பல் செய்வோர் செல்வாக்கு இழப்பர். ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதற்காகத் தலைமை அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்லும் சாக்கில் தில்லி சென்று இரண்டு அணுமின் நிலையங்களைத் தமிழ்நாட்டில் அமைக்க இசைவு பெற்றுவிட்டார் தமிழினத் தலைவர்.

1967இலிருந்து தமிழகத்தை ஆளுவோர் காலம் காலமாக அடித்தள மக்களை எண்ணற்ற ஒடுக்குமுறைகளுக்கும், ஒதுக்குமுறைகளுக்கும் ஆளாக்கியவர்களின் வழிவந்தவர்கள். அவர்களுக்குத் துணைநிற்போர் ஐரோப்பியர்களின் தலையீட்டின் பக்கவிளைவால் அந்த ஒடுக்குமுறைகள், ஒதுக்குமுறைகளிலிருந்து தப்பி வெளிப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து மேலேற முடியாமல் அடியில் தங்கிவிட்டவர்களைப் பழைய இருளிலேயே அழுத்தி வைக்க முயல்கின்றனர். அதன் ஓர் அடிப்படைச் செயற்பாடுதான் இந்த வரைமுறையற்ற மின்தடையும் தடையற்ற பொய்களும்.

இந்த நிகழ்முறை அனைத்திலும் நம்மிடமிருந்து மறைக்கப்படும், நாம் கவனிக்க மறந்துவிடும் ஓர் உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நுகரப்படும் மிகப் பெரும்பகுதி மின்சாரமும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கே பயன்படுகிறது. இதற்கும் மேலே பல படிகள் கடந்து நேரடி அயல் முதலீட்டை ″ஈர்த்து″ நாட்டை வளப்படுத்துகிறோம் என்ற பெயரில் நாளொரு ″சிறப்பு″ப் பொருளியல் மண்டலமும் பொழுதொரு தொழில்நுட்பப் ″பூங்கா″வும் தொடங்குவதாகத் தொ.கா.க்களில் பல்லைக் காட்டுகிறாரே ″நம்″ முதல்வர் அவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்(பு.ஒ.க்களில்) தடையில்லா மின்சாரமும் தண்ணீர், எரிபொருள் போன்ற அடிப்படைக் ″கட்டமைப்பு வசதிகளை″யும் அரசு செய்துதர வேண்டுமென்பது தவிர்க்க முடியாத கட்டுறவு. இந்த திடீர் மின்வெட்டின் அடிப்படைக் காரணங்களில் இது முகாமையானது. இப்பொழுது தெரிகிறதா இந்த வளர்ச்சி யாருக்கென்று? ஆமாம், இந்த ″அயல்″ முதலீட்டைச் செய்பவர்கள் உண்மையிலேயே அயலவர்கள்தாமா அல்லது ஆளுவோரின் போலிகளா என்பது பலரது ஐயம்.

நம் தேவைகளுக்கு மட்டும் என்றால் நமக்கு மின் தட்டுப்பாடே இருக்காது. ஏற்றுமதி சார்ந்த ஒரு பொருளியலைத் திட்டமிட்டு அதைக் காரணம் காட்டி எண்ணற்ற பொருட்களை இறக்குமதி செய்து திட்டமிட்ட ஒரு பற்றாக்குறையை உருவாக்கி பெரும்பான்மை மக்களைப் பட்டினிபோடும் இந்த ஏற்றுமதிப் பொருளியலுக்கு ஒரு முடிவுரை எழுதுவோம். உள்நாட்டு மக்களின் நுகர்வு நோக்கிய ஒரு பொருளியல் நடைமுறையை உருவாக்குவோம்.

(இக்கட்டுரை தமிழினி ஆகத்து-2008 இதழில் மின்வெட்டு என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது.)

அணுவைத் துளைத்து......

அணு என்பதற்கு இணையான atom என்ற சொல்லே a = இல்லாதது(எதிர்மறை) tomos = துமிபடும்(பிரிவுடும்) தன்மை என்ற வேர்களைக் கொண்ட atomos என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. அதனாலேயே பிரிபடும் தன்மையுடைய மூலக்கூறுக்கு Compound atom என்ற பெயர் வைத்த பெர்சீலியசு என்பவரது முயற்சியைப் பின்னுக்குத் தள்ளி Molecule என்ற சொல்லை வடித்த அவகட்ரோ என்பவர் பெயரை அன்றைய வேதியியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு பிரிக்க முடியாதது என்று கருதப்பட்ட அணுவைப் பிளக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர் பின்னாளில். அணுக்களின் நடுவாகிய கருவில் எதிர் மின்னணுக்களும் சுற்றிலும் நேர்மின்னணுக்களும் உள்ளன. இதில் எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை நேர் மின்னணுக்களை விடக் கூடுதல் இருந்து அவை கதிர்வீச்சாக வெளிப்படும் தன்மை இருந்தால் அவற்றிலிருந்து ஆற்றலைப் பெறமுடியும். அவ்வாறுதான் யுரேனியம் U₂₃₈ என்ற ஐசோட்டோப்புகளை உடைத்து U₂₃₄ ஐசோடோப்புகள் உருவாகும் போது பெருமளவில் ஆற்றல் வெளிப்படுகிறது.

எந்தப் பொருளையும் பிரிப்பதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. விறகைச் சூடாக்கினால் அது எரியும் பொருட்களாக உடைகிறது. அந்த வெப்பத்தில் அவை உயிர்வளியுடன் சேர்கின்றன. அந்தச் சேர்க்கை நிகழ்முறையைத்தான் நாம் தீ என்கிறோம். அந்த வெப்பத்தில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு விறகு மேலும் மேலும் சிதைந்து தொடர்ந்து வெப்பத்தைத் தருகிறது. அவ்வாறு 234 எண்ணிக்கையிலான U₂₃₈ அணுக்களை உடைத்து 238 எண்ணிக்கையிலான U₂₃₄ அணுக்களை உருவாக்கினால் நிகரமாகக் கிடைக்கும் ஆற்றல்தான் அணு ஆற்றல். இது ஒரு மொட்டைக் கணக்கு.

உலகப் போர் முடிந்து கொண்டிருந்த நிலையில் 1945 பிப்ருவரியில் சோவியத் உருசியாவின் யால்டாவில் உருசியத் தலைவர் தாலின், அமெரிக்காவின் ரூசுவெல்ட்டு, இங்கிலாந்தின் சர்ச்சில் ஆகியோர் ஒன்றிய நாடுகளவையைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்த போது தாங்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ரூசுவெல்ட்டு கூறினாராம். அந்த ஆயுதத்தின் வலிமையையும் கொடுமையையும் உலகத்துக்கு, குறிப்பாகப் பிற வல்லரசுகளுக்குக் காட்டத்தான் 1945 ஆகத்து 7ஆம் நாள் நாகசாகி, இரோசிமா ஆகிய சப்பானிய நகரங்களில் அணுக்குண்டை வீசி 2,80,000 மனித உயிர்களை அமெரிக்கா அழித்துக் காட்டியது. அதன் கொடிய விளைவுகளை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இன்றும் நுகர்ந்து வருகின்றனர்.

போரில் சப்பான் ஒவ்வொரு களமாகச் சரண்டைந்து வந்த நிலையில் தேவையற்ற இந்த அணுக்குண்டு வீச்சு கல் நெஞ்சம் படைத்த அமெரிக்கத் தலைவர்களின் ஒரு கள ஆய்வு நடவடிக்கைதான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

1949இல் சோவியத்து உருசியா அணுக்குண்டு வெடித்து ஆய்வு நடத்தியது. அதற்கு வேண்டிய தொழில்நுட்பம் சோவியத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்று அமெரிக்க அரசு தேடியது. இறுதியில் அமெரிக்கர்களான ரோசன்பெர்க்கு இணையர் என்ற கணவன் - மனைவியரைப் பிடித்தனர்.

ரோசன்பெர்க்கு இணையர் அமெரிக்கப் பொதுமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1933இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போதுதான் அமெரிக்காவில் பொதுமைக் கட்சி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்குண்டு வெடிப்பில் இரு கட்டங்கள் உள்ளன. ஒன்று உள்வெடிப்பு. அதன் மூலம் அணுக்களைப் பிளப்பதற்கு வேண்டிய ஆற்றல் வழங்கப்படுகிறது. அவ்வாறு பிளந்த ஐசோடோப்புகள் இணையும்போது உருவாகும் ஆற்றல் வெளிவெடிப்பை உண்டாக்குகிறது. இவற்றில் இந்த உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தைத் திருடி சோவியத் உருசியாவுக்கு விடுத்து வைக்க வேண்டிய பொறுப்பை திருமதி ரோசன்பெர்க்கு அமெரிக்க அணு ஆற்றல் துறையில் பணியாற்றிய தன் தம்பியின் மூலம் நிறைவேற்றினர். தான் நேரடியாக பங்கெடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது அமெரிக்கக் கூட்டமைப்புக் காவல்துறை. நயமன்றம் இணையரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன்றனர். உலகத் தலைவர்கள் பலரின் வேண்டுகோள்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை அமெரிக்க அரசு.

இந்த வழக்கில் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு, அவர்களது இந்த நடவடிக்கை உலக அமைதிக்கு ஊறு செய்வதாக இருந்தது; குறிப்பாக கொரியா, வியத்தாம், லாவோசு, கம்பூச்சியா போன்ற கிழக்காசிய நாடுகளில் போர்கள் நடைபெற்றது இவர்கள் உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தை சோவியத் உருசியாவுக்கு வழங்கியதால்தான் என்பதாகும். இதன் பொருள் வெளிப்படை. அணுக்குண்டை வைத்து அச்சுறுத்தி உலக மக்களைக் காலாகாலத்துக்கும் தங்கள் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற அமெரிக்கக் கனவை ரோசன்பர்க்கு இணையர் தகர்த்துவிட்டனர். அவர்களது புகழை உயர்த்திப்பிடிக்க வேண்டியது உலக மக்களின் கடன்.

குறிப்பு: இந்த வழக்கு பற்றிய விரிவான செய்திகளை The Case of The Implosion Conspiracy என்ற நூல் தருகிறது. ஓர் அரசும் உள்ளூர் மக்களும் எவ்வாறு தங்கள் பொறுப்புகளைப் பங்குபோட முடியும் என்பதை இந்த வழக்கில் கடைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலோ - சாக்சன் நயமுறையையும் நூல் விளக்குகிறது. ஊரர்கள்(Juror - Jury) எனப்படும் உள்ளூர் மக்களின் குழு குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்பளிக்கிறது. அரசின் நயவர் தண்டனையை முடிவு செய்கிறார்.

அணுக்குண்டு செய்வதற்கு வேண்டிய கதிர்வீச்சுத் தனிமத்தைப் பெறுவதற்கு அணு உலைகளில் வெளியேற்றப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டுகிறார்கள். இந்தச் செறிவூட்டலைச் செய்யாமல் தடுப்பதுதான் அல்லது கட்டுப்படுத்துவதுதான் உலக அணு ஆற்றல் முகவாண்மை(Iiteriational Atomic Eiergy Ageicy – IAEA)யின் பணி. அதில் உலகிலுள்ள அணு ஆற்றல் நாடுகள் என்னும் 35(45என்றும் ஒரு செய்தி கூறுகிறது) நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அணு ஆற்றலுக்குத் தேவையான யுரேனியத்தை வழங்கும் நாடுகளிடமிருந்து பெறப்படும் யுரேனியத்திலிருந்து மின்னாற்றலைப் பெற்ற பின் அதைச் செறிவூட்டி அணு ஆயுதம் செய்துவிடாமல் தடுப்பதற்கான எண்ணற்ற பாதுகாப்புகளை அணு ஆயுதம் அல்லாத நாடுகளின் மீது திணிப்பதும் அதைக் கண்காணிப்பது என்ற பெயரில் அந்த நாடுகளின் உள்நடவடிக்கைகளில் தலையிடுவதும்தான் இந்த முகவாண்மையின் நடைமுறை. சான்று ஈராக்கு.

இந்தியா இதற்கு முன் இரண்டு முறை அணுக்குண்டு வெடித்து ஆய்வு செய்து தாங்களும் ஓர் அணு வல்லரசு என்று குடிமக்களிடம் மார்தட்டிக்கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் யுரேனியப் படிவுகள் மேகாலயத்தில் உள்ளன. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளாலும் சூழியல் குறித்த தடுமாற்றங்களாலும் அதனைத் தோண்டி எடுக்கும் பணி தள்ளிப்போகிறது. ஆனாலும் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்கிறது ஒரு செய்தி(Reflections on the power mix, S.K.N.Nair, THE HINDU Business Line, 19 - 07 – 08).

நம் நாட்டில் ஏராளம் கிடைக்கும் தோரியம் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் நம் ஆற்றல் தேவைகளுக்குப் போதும் என்று எல்லோரும் ஒருமுகமாகக் கூறுகின்றனர். அத்துடன் யுரேனியம் உலைகளை விட தோரியம் உலைகள் பாதுகாப்பானவை என்றும் கூறுகின்றனர். ஆனால் அதைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்த இன்னும் 15 ஆண்டுகள் ஆகுமே என்கின்றனர் ஆட்சியாளர்கள். இப்போது திட்டமிடும் அணு ஆற்றல் திட்டங்கள் முழுமை பெற 25 ஆண்டுகள் ஆகுமே என்ற கேள்விக்கு விடை சொல்ல யாருமில்லை. அதே நேரத்தில் கல்ப்பாக்கத்தில் 500 மெ.வா. திறனுள்ள தோரியத்தை மூலப்பொருளாகக்கொண்ட அதிவிரைவு அணு ஈனுலை 2011இல் செயல்படும் என்று 25 – 07 – 08 தினமணி இதழ்ச் செய்தி (திருநெல்வேலி பக்.7) ஒன்று கூறுகிறது. ஆட்சியாளர்களின் மரபு என்னவென்றால் வெளிநாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்து தரகு பார்ப்பதும் உள்நாட்டில் உள்ள வளங்கள் வெளியாருக்குத் தேவைப்பட்டால் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் காட்டும் இடங்களில் தோண்டி எடுத்து விற்றுத் தரகு பெறுவதும். அதனால் நம் நாட்டிலுள்ள யுரேனியத்தை வெளியே காட்டமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அதுபோல் உள்நாட்டில் உருவாகும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும் மாட்டார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை. ″விடுதலை″ அடைந்த உடன் வெளிப்பட்ட எண்ணற்ற தொழில்நுட்பங்களை நசுக்கி எறிந்தது நேருவின் அரசு. தமிழகத்துச் சான்று கோ.து.நாயுடு. அதைத் தொடர்ந்து எரிநீர் இராமர், தியாகராசன் என்று எண்ணற்றவர்கள். (எரிநீர் இராமர் தன் கண்டுபிடிப்பைச் சொன்னதும் ஒரு நொடி கூடக் காலந்தாழ்த்தாமல் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் மார்க்சியப் பொதுமைக் கட்சியினர். அவரது கண்டுபிடிப்பு உண்மையா போலியா என்பதைக் கண்டுபிடிக்கக் கூட நமக்கு வாய்ப்பளிக்கவில்லை எவரும்). அவ்வாறே பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி - வளர்ச்சித் துறை அறிவியலாளர் எத்தனையோ பேர் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தவற்றைப் பயன்படுத்தாமல் இறக்குமதி செய்கின்றனர் என்று குமுறி இருக்கின்றனர். இறுதியாக அப்துல் கலாம் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் அக்கினி ஏவுகணையைப் பயன்படுத்த இருக்கும் போதே கார்கில் போரின் போது ஏவுகணைகளை இறக்குமதி செய்தனர். கேட்டதற்கு, அக்கினி ஏவுகணை தேவையான அளவு செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றனர்.

அப்போது போபர்சு குண்டுமிழியையும் வாங்கினர். இதே போபர்சு குண்டுமிழி எதற்கும் உதவாது என்று வரிந்துகட்டிக்கொண்டு இந்தியன் எக்சுபிரசில் பா.ச.க.வின் அருண்சோரி கட்டுரைகள் எழுதித்தான் ராசீவ்காந்தியைப் பதவியிறக்கினர். அவர்களே இப்போது அதற்கு நற்சான்றும் வழங்கினர். கலாம் முணுமுணுக்காமலிருக்க அவருக்கு குடியரசுத் தலைவர் பதவியும் வழங்கினர். இன்று அவரே இந்த அணு ஆற்றல் வரைவு ஒப்பந்தத்துக்குச் சான்று வழங்கிவிட்டார் அதைப் பிடித்துக் கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப் பற்று நாடகம் ஆட முடிகிறது. நாட்டு நலனுக்கு அணுமின் ஆற்றல்தான் வேண்டுமென்று. அதைப் பற்றிக்கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப்பற்று நாடகம் ஆட முடிகிறது. தெற்கே தோன்றிய இந்த ″அறிவியல் பகலவனு″க்கு, நம் நாட்டில் ஏராளமாகக் கிடைக்கும் கதிர் ஆற்றல் கண்ணில் படவேயில்லை. காட்டாமணக்கை வளர்க்கச் சொன்னவர்தானே!

இந்த நிலையில் இவ்வளவு எதிர்ப்புகள், ஐயப்பாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தத்தை நீறைவேற்ற மன்மோகன் சிங்கும் சோனியா குடும்பத்தாரும் ஏன் இப்படிப் பறக்கிறார்கள் (Nuclear deal first, government later: Rahul, THE HINDU, 16 – 07 – 08,p.16)? இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள்?

மன்மோகன் சிங் முன்னாள் உலக வங்கி அதிகாரி. உலக வங்கியும் ஒன்றிய நாடுகளவையும் நடப்பில் அமெரிக்காவின் நிறுவனங்கள். அந்த வகையில் மன்மோகன்சிங்கு அமெரிக்காவின் ஊழியர்படையில் ஒருவர். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் இந்தியாவை மறைமுகமாக அந்த வளையத்துக்குள் கொண்டுவர உதவும் ஒரு ஒப்பந்த முன்வடிவை உருவாக்கி அதற்கு உலக அணு ஆற்றல் முகவாண்மையின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம் அவர் தன் முன்னாள் மூதலாளிக்கு மிக நாணயமாகவே பணியாற்றி உள்ளார்.

அப்படியானால் அவர் எது சொன்னாலும் சோனியா அம்மையார் கேட்டுவிடுவார் என்பதா?

இன்னொரு கோணத்தில் இதை நாம் பார்க்க வேண்டும்.

ஒருவரை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு நான்கு உத்திகளைப் பரிந்துரைத்துள்ளனர் நம் பண்டைப் பெரியவர்கள்.

முதலாவது சாமம். அதாவது, பேச்சில் மயங்கவைத்து மசியவைத்தல். அல்லது மந்திரம் முதலியவற்றைப் பயன்படுத்தல். சந்திரசாமி, தீரேந்திர பிரம்மாச்சாரி போன்றவர்கள் இப்படிப் பயன்பட்டிருப்பார்களோ? இப்படிப்பட்ட ″சாமி″கள் அரசியல் களத்தில் இப்படியும் பயன்படுகிறார்களா என்பது ஒரு சுவையான ஆய்வாக இருக்கும். கணியர்களாகிய சோதிடர்களையும் பயன்படுத்தலாம்.

இரண்டாவது பேதம். அதாவது, எதிர் தரப்பினரின் அணியில் பிளவை ஏற்படுத்தல், அவர்களது நண்பர்களிடமிருந்து அவர்களைப் பிரித்தல். அதன் அடுத்த கட்டமாக அவ்வாறு பிரிந்து சென்ற தங்கள் முன்னாள் கூட்டாளிகள் மீது வன்மம் கொண்டு தாங்கள் விரும்பாத காரியத்தைக் கூடச் செய்ய வைப்பது.

மூன்றாவது தானம். பணம், பொருள், பதவி, முதலானவற்றைக் காட்டி எதிர் தரப்பினரை விலைக்கு வாங்கலாம். ஏன் கொள்கை அடிப்படையில் கூட அவாவை ஊட்டி வசமாக்கலாம்.

இவை எதற்கும் புள்ளி மசியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நான்காவது தண்டம். ஆளையே தீர்த்துக்கட்டிவிடலாம். முதலில் அச்சுறுத்திவிட்டு அப்போதும் காரியம் நடக்கவில்லை என்றால் இறுதித் தீர்வை நாடலாம். மிரட்டல் என்பது பாராளுமன்ற மக்களாட்சியில் தவிர்க்க முடியாத ஊழலை அம்பலப்படுத்திவிடுவோம் என்பதாகவும் இருக்கலாம். இராசீவ் காந்தியின் போபர்சு ஊழல் வெளிப்பாடு இத்தகையதுதான்.

இந்த நான்கில் ஒன்றோ பலவோ நடந்திருக்கலாமோ?

சோனியா அம்மையார் குடும்பத்தில் நான்காவது உத்தி இரண்டு முறையாவது கையாளப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் அரண்மனை ஆவலாதிகளின்(ஆவல்களின்) பங்களிப்பும் இருந்திருக்காது என்பதைத்தான் எம்மால் நம்ப முடியவில்லை.

இது பற்றிய சுருக்கமான சில செய்திகளை டெக்கான் கிறாணிக்கிள் சென்னைப் பதிப்பு 15 – 07 – 08 இதழில் பக்கம் 9இல் The Secret History of the American Empire : The truth about how economic hit men, jackals and how to change the world என்ற பெர்க்கின்சு என்பார் எழுதியுள்ள நூலின் மதிப்புரையிலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த நூலின் நோக்கமே உலகை மிரட்டுவதுதான். கிடைத்தால் முன்னாள்களில் அமெரிக்க உளவு நிறுவனமாகிய நடு உளவு முகவாண்மை(சி.ஐ.ஏ.) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்ட தங்கள் செயல்பாடுகள் பற்றிய மிரட்டல் அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.

இது காலங்காலமாக அரசியல் களத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் நாள்தோறும் நடப்பதுதான். இன்று நம் வாழ்நாளில் நடக்கும் விளையாட்டு இது. உலக மக்கள், குறிப்பாக வல்லரசு நாடுகளில் சீனத்தையும் வல்லரசு அல்லாத நாடுகளையும் சேர்ந்த மேல்தட்டினர் தவிர்த்த மக்கள் இதற்கு எப்படித் தீர்வு காணப்போகிறார்கள் என்பது வரலாறு நம் முன் வைத்துள்ள கேள்வி.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமைக் கட்சிகள், குறிப்பாக மார்க்சியப் பொதுமைக் கட்சி அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை எதிர்த்துவந்துள்ளது. ஆட்சிக்கு வெளியிலிருந்து அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று மிரட்டிவந்துள்ளது. இறுதியில் இரண்டு நாள் கெடு, மூன்று நாள் கெடு என்று கூறியது. இதற்குள் ஆளும் கட்சி வெளியிலுள்ள சமாசவாதிக் கட்சியுடன் பகரம் பேசி இணக்கம் கண்டபின் பொதுமைக் கட்சி தன் ஆதரவைப் பின்வாங்கிக்கொண்டது. உண்மை என்னவென்றால் அமைச்சர்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட அதிகாரம் இல்லை. நம் நாடு வேறெந்த நாட்டுடனும் அல்லது நிறுவனத்துடனும் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்ததைக் குறித்தும் பாராளுமன்றத்துக்குக் கூட எந்த அதிகாரமும் கிடையாது. அரசுச் செயலர்களுக்குத்தான் அந்த அதிகாரம். அப்படியானால் உண்மையில் நடைபெற்றிருப்பது என்ன? பொதுமைக் கட்சிகள் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி அந்த இடத்தில் சமாசவாதிக் கட்சியினரும் இன்னும் சில பொறுக்குக் கட்சிகளும் வந்து சேர்ந்ததுதான்.

அணுவிசை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அணு வல்லரசுகள் இந்தியா ஒரு அணு வல்லரசாக வளர்வதை விரும்பவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டிலுள்ள எந்த அணு ஆற்றல் களத்தில் வேண்டுமானாலும் உலக அணு ஆற்றல் முகவாண்மை தலையிட மறைமுகமாக வழி செய்கிறது. அத்துடன் நிலையான அணு எரிபொருள் வழங்கலுக்கு ஒப்பந்தத்தில் வழி செய்யப்படவில்லை. வழங்கும் நாடு அதை நிறுத்திவிட்டால் மாற்றுவழி எதுவும் திட்டவட்டமாகக் கூறப்படாத நிலையில் நம் அணு ஆற்றல் திட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். தாராப்பூர் திட்டத்தில் அந்த நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த ஒப்பந்தம் என்றும் நிலையானது, என்றும் மாற்றத்தக்கதல்ல என்பவை மிக விந்தனையான கட்டுப்பாடுகள். யுரேனியத்தின் விலை கூட நிலையாகவோ மலிவாகவோ இல்லை. கடந்த சில ஆண்டுகளில் அதன் விலை 6 மடங்கு ஏறியிருக்கிறது(பார்க்க Is the nuclear deal really in the national interest?, Vikram Sood, The Deccan Chronicle Chennai, 16–07–08, p.9). ஆனால் விலையைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் வரைவு ஒப்பந்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் யுரேனியக் கழிவை உருசியா தன் நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடும் என்று தெரிகிறது. அதே வேளையில் நம் நாட்டில் இந்தக் கழிவைச் செறிவூட்டி மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கிள்ளோம். இந்த ஒப்பந்தம் இது குறித்து என்ன கூறுகிறது என்பதும் தெரியவில்லை. அவ்வாறு கழிவுகள் எடுத்துச் செல்லப்படுமானால் அது நமக்குப் பெரும் இழப்பில்லையா?

இந்த ஒப்பந்தத்துக்குப் பரிந்து பேசுவோர் அதில் இருப்பனவாகக் கூறும் நற்கூறுகள் எதனையும் ஒப்பந்தம் வெளிப்படையாகக் கூறவில்லை. அதன் முன்னுரையிலேயே உள்ளன. நாளை இது பற்றி கருத்து வேற்றுமைகள் வந்தால் அப்போது ஆட்சியில் இருப்போர் இவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருக்கலாம். அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போகலாம்.

ஆனால் இதுநாள் வரை அந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை, இந்தியாவை ஓர் அணு ஆயுத நாடு என்பதை அந்த ஒப்பந்தம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதை, அந்த ஒப்பந்தம் என்றுமே மாற்றத்தக்கது அல்ல என்பதை, உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு அணு ஆற்றல் எடுத்தாலும் தலையீடு இருக்காது என்பது குறித்த தெளிவு ஒப்பந்தத்தில் இல்லை என்பதை என்று எத்தனையோ குறைபாடுகள் இருந்தும் அவற்றில் எதனைக் குறித்தும் குறிப்பிடாமல் அமெரிக்காவை முதல் நிலைப்படுத்தியே ″தோழர்கள்″ முழங்குவதற்கான விளக்கம் என்ன?

சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களது அறிவுரையுடன் வேறு வசதிகளையும் பெற்றுக்கொண்டு திரும்பிவரும் வரை மன்மோகன்சிங்குக்கு ஒத்துழைப்புத் தந்துள்ளனர் பொதுமைக் கட்சியினர்.

இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியினர் இந்தியாவை விட சீனத்தை அதிகமாக நேசிப்பவர்கள். எனவே அவர்களது செயல்கள் சீனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவனவாகவே இருக்கும். ஆனால் இதெல்லாம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஓர் ஆளும் கூட்டணி மாற்றத்தை அணு ஆற்றல் ஒப்பந்த எதிர்ப்பு என்பது போலக் காட்டிவிட்டனர். சீனம் உலகிலுள்ள வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவோடுதான் மிக நெருக்கமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதிலிருந்து தோழர்களின் உண்மையான உருவத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இன்று உலக வல்லரசுப் போட்டியில் முன்னணியில் நிற்பது அமெரிக்கா. அதற்கு மிக நெருக்கமான போட்டியாளராக இருந்த உருசியாவின் அணு ஆற்றலை, அமெரிக்க ஒற்றர்களாகச் செயற்பட்ட கோர்ப்பசேவும் எல்த்சினும் அணு ஆயுதங்களை அழித்து நிலை குலையச் செய்துள்ளனர். உருசியா தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காக சீனத்தையும் இந்தியாவையும் நாடியது. ஆனால் சீனம் அதை விரும்பவில்லை. தானே ஆசியாவின் ஒரே வல்லரசாக வர வேண்டும் என்று பார்க்கிறது. அதன் நோக்கம் இந்தியா ஓர் ஆணு வல்லரசாக வளர்ந்து விடக் கூடாது என்பது. அதன் திட்டத்தை நிறைவேற்ற தோழர்கள் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டார்கள்.

இந்தியா அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் புசுதான் அதிக நாட்டம் காட்டுகிறார். அவரது ஆட்சி முடிந்தபின் அது ஏற்கப்படுமா என்பது உறுதியில்லை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் புதிய குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடும் ஒபாமாவும் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டியுளார்.

அமெரிக்க அமைச்சர் வில்லியம் பர்ன்சு புசு ஆட்சிக் காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட முனைந்து செயல்படுவதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய அணு உலைகள் அவற்றைவிட மிகப் பாதுகாப்பானவை என்று கூறுகிறார்கள். ஆனால் தவறுகளும் தற்செயல் நிகழ்வுகளும் எங்கும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஏதாவது நேர்ந்தால் இந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் தீய விளைவுகளின் தன்மைகளே அளவுகோல்களாக வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கன்னெய்யத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறதாம். மாற்று ஆற்றல்மூலமாக அணுவிசையைக் கொள்ளலாமாம். ஆனால் அணுவிசைக்கு இப்போது மூலப்பொருளாக இருக்கும் யுரேனியத்தின் விலை ஒன்றும் நிலையாகவோ குறைவாகவோ இல்லை என்பதுதான் உண்மை.

அணு ஆற்றலுக்காகக் பரிந்து பேசுவோரின் கூற்று என்னவென்றால் நிலக்கரியிலிருந்து மின்னாற்றல் எடுக்கும் போது உலகம் மாசுபடுகிறதாம். அணு ஆற்றல் மாசில்லாததாம். செர்னோபிளும் 3 மைல் தீவுகளும் பேய்க் கதைகளைக் கூறும் காலத்தில் எப்படி எல்லாம் துணிந்து பொய் பேசுகிறார்கள் பாருங்கள்..

இதற்கொரு ″பசுமை″ இயக்கத்தை வல்லரசுகள் பெருமளவில் நடத்துகின்றன. இந்த ஓநாய்களிடமிருந்து உலகை யார் காப்பது?

(இக்கட்டுரை தமிழினி ஆகத்து-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

இந்தியாவில் பணவீக்க விகிதம் பல ஆண்டுகளுக்குப் பின் இரட்டை எண்ணைத் தாண்டி நிற்கிறது. அதன் பொருள் விலைவாசி கட்டுக்காடங்காமல் துள்ளிக் குதிக்கிறது என்பதாகும்.

பொதுவாக பேரவை(காங்கிரசு)க் கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டங்களின் வழங்கல் குறைவதும் விலை தாறுமாறாக உயர்வதும் வழக்கம். மாற்று ஆட்சிகள் இதற்கு மாற்றாகச் செயற்படுவதுண்டு. 1977ல் பதவி ஏற்ற சனதாக் கட்சி ஆட்சியின் போது லால் பகதூர் சாத்திரி விதித்திருந்த உணவுப்பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் அரிசி, கோதுமை, சீனி, மண்ணெய் ஆகிய பண்டங்கள் வெளிச் சந்தையில் தாராளமாகக் கிடைத்ததால் அவற்றின் விலை பங்கீட்டுக் கடைகளில் அரசு வழங்கிய விலைக்கு கிட்டத்தட்ட தாழ்ந்துவிட்டது. எனவே பங்கீட்டுக் கடைகளே தேவை இல்லை என்ற நிலை உருவானது. 1979ல் சனதாக் கட்சி அரசை அமெரிக்க ஒற்றன் இராசநாராயணன் கவிழ்த்ததால் பேரவைக் கட்சி பதவிக்கு வந்தது. உணவுப் பொருள் நடமாட்டம் மீண்டும் கெடுபிடியானது. உணவுப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து பதுக்கி வைத்து கெட்டுப் போகவிட்டு பங்கீட்டுக் கடைகளில் தள்ளிவிட்டது. உரிமம் பெற்ற வாணிகர்கள் உழவர்களைப் பிழிந்து கள்ள விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்று ஆதாயம் அடைந்தனர்.

சனதா தள ஆட்சியில் கூட கட்டுப்பாடுகள் தளர்ந்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த பேரவை ஆட்சி கட்டுப்பாடுகளை இறுக்கியது.

பாரதீய சனதா ஆட்சியில் சமையல் வளி நிறுவனங்கள், காலி உருளையை வீட்டு வாயிலில் வைத்தால் போதும், தொலைபேசியில் பதிவு செய்யவே தேவை இல்லை, கதவைத் தட்டி வளியை வழங்குவோம் என்றனர். வந்தது அடுத்து பேரவைக் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சி. ஓர் உருளை வழங்கி 23 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த உருளை வழங்குவோம் என்று கூறிவிட்டார்கள். கணிப்பொறியெல்லாம் வைத்துள்ளனர் வளி வழங்கும் முகவர் நிறுவனத்தினர். அந்த 23 நாட்கள் ஆவதற்கு முன்பு நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், 23 நாட்கள் ஆன பின் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஆணையிடுவர். பதிந்து வைத்து ஏன் உரிய நாளில் வழங்கக் கூடாது என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்ற விடை வரும்.

இவற்றால் பேரவைக் கட்சி தவிர்த்த பிற கட்சிகள் தூய்மையானவை என்ற பொருளில்லை. பிற கட்சிகள் மக்களுக்குச் சிறிது மகிழ்ச்சியூட்டி மடிபறிக்கின்றன என்றால் வன்முறையை மறுத்துப் பேசிய காந்தியின் கட்சி மக்களை மிரட்டி நெருக்கிப் பறிக்கிறது. அத்துடன் அவர்கள் 1950க்குப் பின் 58 ஆண்டுகளும் அதற்கு முன் 1937இல் இருந்து 1942 வரையும் 1947க்குப் பின்னரும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்தப் பட்டறிவுகளெல்லாம் உண்டல்லவா? ஆதனால்தான் இந்த மதர்ப்பும் கொடுமையும். அத்துடன் நேரு குடும்பம் இந்தியா என்ற தன் சொத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு ஆதாயம் தேடலாம் என்பதையே குறியாகக் கொண்டு செயல்படுகிறது. அதன் பெரும் செல்வப் பெருக்குக்கு ஈடுகொடுக்க இன்று எந்தக் கட்சியாலும் இயலாது என்பதனால்தான் இந்த மதர்ப்பு.

இந்தப் பின்னணியில் நரசிம்மராவ் காலத்தில் உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான மன்மோகன் சிங் பண அமைச்சராக வந்ததிலிருந்து வெளிப்படையான உலகளாவுதல் செயலுக்கு வந்தது. ″மனித வள ஏற்றுமதி″ என்ற கருத்துரு முன்வைக்கப்பட்டது.

இந்தியாவின் பண்பாடு உழைப்பு, விளைப்பு போன்ற படைப்புச் செயலில் ஈடுபடும் மக்களை இடங்கையினர் என்று ஒதுக்கி வைத்து அரசு, கோயில் சார்ந்த ஒட்டுண்ணிகளை வலங்கையினர் என்று உயர்த்துவது. உழைப்பவனும், படைப்பவனும் வினைகளைச் செய்து அதன் நன்மை தீமைகளை நுகர மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்கிறான் என்றும் அவ்வாறு வினை எதுவும் செய்யாமல் தான்விடும் மூச்சைத் தானே எண்ணிக் கொண்டு அமர்ந்திருப்பவன் கடவுளாகி விடுவான் என்றும் கூறும் முழுநிறைவான ஒட்டுண்ணிக் கோட்பாட்டுக்கு நாம் சொந்தக்காரர்கள்.

அதன் தொடர்ச்சியாக நம் நாட்டில் ஆங்கிலர்கள் உருவாக்கிய இந்திய பொதுவியல் பணி(ஐ.சி.எசு.) அதிகாரிகள் முடிந்து ஒட்டுண்ணி மரபில் தோன்றிய நேரு பெருமான் உருவாக்கிய இந்திய ஆட்சியியல் பணி ஐ.ஏ.எசு அதிகாரிகள் வந்தனர். ஆங்கிலர் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஒட்டுண்ணி அதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து பொறியாளர்களையும் அறிவியல் அறிஞர்களையும் பாதுகாக்கும் வகையில் தம் ஆள்வினையைக் கட்டமைத்திருந்தனர். ″விடுதலை″க்குப் பின்போ இந்த அதிகாரக் கும்பலின் பிடியில் அவர்கள் சிக்கினர். தங்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் மதிப்பில்லாத இந்தச் சூழலை விட்டு வெளி நாடுகளுக்கு அவர்கள் வேலைதேடிச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மதிப்பும் நல்ல சம்பளமும் கிடைத்தன.

இதன் அடுத்த கட்டமாக இந்த அறிவுத் திறனையும் உழைப்பாற்றலையும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டன வல்லரசு நாடுகள். அதன் விளைவுதான் இந்த ″மனித வள ஏற்றுமதி″த் திட்டம். அதற்கேற்பக் கல்வித்துறையையும் ″மனித வள மேம்பாட்டுத் துறை″ என்று பெயர் மாற்றினர். கல்வித்துறை உள்நாட்டுத் தேவைகளுக்கு என்று எவருக்கும் ஐயம் ஏற்பட்டுவிடக் கூடாது பாருங்கள்!

இப்பொழுது 20 அகவை நிறைவதற்குள்ளாகவே ″மனித வள இறக்குமதி″யாளர்களுக்குத் தேவைப்படும் திறமைகளை ஊட்டி நம் இளைஞர்கள் குறுகிய கால இறைச்சிக் கோழிகளாக (பிராய்லர் கோழிகளாக - தினமணி கட்டுரை ஒன்றில் நெல்லை சு.முத்து இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்) மாற்றி ஏற்றுமதி செய்து வருகிறோம் நாம்.

அடுத்த கட்டமாக வல்லரசின் விழுதுகள் ஏற்றுமதி, புலனத் தொழில்நுட்பம் என்று பல்வேறு பெயர்களில் நம் ஆட்சியாளர்கள் அமைத்துக் கொடுக்கும் ″வளாகங்களி″ல் இறங்கியுள்ளன. அங்கெல்லாம் இந்த இறைச்சிக் கோழிகள் தங்களை ஒப்படைக்கின்றன. இதில் நூற்றுக்கு ஒன்று தவிர மீதியை எல்லாம் 5 அல்லது 10 ஆண்டுகளில் சாறு உறிஞ்சிவிட்டு அந்த வளாகங்கள் வெளியே வீசியெறிந்துவிடுகின்றன. அதற்குள் அவர்களுக்குக் கிடைக்கும் உயர்ந்த சம்பளங்களும் படிகளும் உள்நாட்டுச் சந்தையில் நுழைகின்றன. பொதுமைக் கட்சியினரின் முழு ஒத்துழைப்புடன் உள்நாட்டு விளைப்புத் துறையின் தற்சார்பு வளர்ச்சி நம் ஆட்சியாளர்களால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் துறைகளில் முதலிட வழிகள் இல்லை. உள்நாட்டு விளைப்பு என்பது மார்வாரி - குசராத்தி பனியாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுவைத்து நடைபெறுவதாகவே உள்ளது. எனவே இந்தப் பணப்பாய்ச்சலின் பலன்கள் இந்த தரகு நிறுவனங்களின் வழியாக வல்லரசுகளுக்குப் பாய்கிறது.

உள்நாட்டில் உருவாகும் செல்வத்தில் ஒரு கணிசமான பகுதி ஆட்சியாளர்கள் மூலமும் அரசியல் கட்சிகள் மூலமும் சிற்றூர் வரையுள்ள கட்சித் தொண்டர்களைச் சென்றடைகிறது.

நாட்டில் உள்ள மீளப் பெறத்தக்க செல்வங்களையும் மீளப் பெறமுடியாத கல், மணல், கனிமங்கள் போன்றவற்றையும் பேரளவிலும் சிறு அளவுகளிலும் ஏற்றுமதி செய்வதிலிலிருந்து கிடைக்கும் பணமும் இங்குள்ள சந்தையினுள் பாய்கிறது.

இவ்வாறு பாயும் பணம் பணப்புழக்கத்தை உயர்த்தி விலைவாசியை ஏற்றலாம்.

ஆட்சியாளர்களும் வெளிவிசைகளும் நம் மக்களிடையில் கிளப்பியுள்ள மதவெறி பெரும் அளவிலான பணத்தை நன்கொடைகளாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உறிஞ்சி கட்டுமானங்களாகவும் விழாக்களாகவும் மாற்றுகிறது. இவற்றால் எல்லாம் விளைப்பு சாராத, நுகர்வு சார்ந்த செலவுகளால் விலைவாசி ஏற வாய்ப்பிருக்கிறது.

புளுகு → அண்டப்புளுகு → புள்ளிக் கணக்கு என்றொரு சொலவடை உண்டு. நம் நாட்டில் உண்மையில் ஏற்றுமதி எவ்வளவு இறக்குமதி எவ்வளவு என்று பொதுமக்கள் யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டிலும் வேளாண் விளைச்சல் முன்கணிப்பு என்று ஒரு கணிப்பை வெளியிட்டு இவ்வளவு மிகுதி அல்லது பற்றாக்குறை இருக்கும் என்பர் புள்ளியியல் துறையினர். உடனே ஆட்சியாளர்கள் மிகுதி அல்லது குறைவை ஏற்றுமதி அல்லது இறக்குமதி ஒப்பந்தங்கள் மூலம் ″முன்னெச்சரிக்கை″யாக (நம் ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள்) அதை எதிர்கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

அறுவடைகள் முடிந்ததும் இன்னொரு புள்ளிக் கணிப்பு. இப்போது முண்கணிப்புக்கு மாறாக பற்றாக்குறை அல்லது மிகுதி என்று இது இருக்கும். உடனே பழைய ஒப்பந்தம், இப்போதைய பற்றாக்குறை அல்லது மிகுதியையும் கணக்கிலெடுத்துக்கொண்டு இன்னொரு இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஒப்பந்தம். இந்தப் பின்னணியில் 1964இல் லால்பகதூர் சாத்திரி செய்ததுபோல் இறக்குமதியை நிறுத்திவிட்டார்களா? அதனால்தான் விலைவாசி ஏற்றமா? நமக்குத் தெரியவில்லை.

1964இல் லால்பகதூர் சாத்திரி தொடங்கிவைத்து இன்றுவரை தொடரும் உழவர்களுக்கு எதிரான கெடுபிடிகளின் விளைவாக தமிழ்நாட்டில் நம் கண்ணெதிரே பெருமளவு வேளாண் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. அதற்கும் அதிகமான நிலங்கள் வீட்டு மனைகள் ஆகியுள்ளன. ஆந்திரத்திலும் மாராட்டிரத்திலும் எண்ணற்ற உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நம் உணவுத் தேவையின் வளர்ச்சிக்கு நம் வேளாண்மை ஈடுகொடுக்கிறது என்பது நம்பத்தக்கதாக இல்லை. உணவுத் தவசங்களின் இறக்குமதி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.

இந்தியாவில் நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் கூடி விட்டது; அதனால்தான் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று அழையா விருந்தாளியாக(நமக்குத்தான் அழையா விருந்தாளி. சோனியா, மன்மோகன், சிதம்பரம் கூட்டணிக்கல்ல) அமெரிக்காவின் சியார்சு புசு திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறேரே! அவரது கையாள் சிதம்பரம் இது எதிர்பார்த்ததுதான் என்கிறாரே! இதில் என்ன நுட்பம் அடங்கியிருக்கிறது?

வெளி நாட்டினரைத் தொலைநிலை(ஆண்லைன்)ப் பேரத்தில் விட்டதனால் ஏற்பட்ட விலை உயர்வைப் பயன்படுத்தி வால்மார்ட், அம்பானி வகையறாக்களை தொடக்கத்தில் மலிவு விலையில் விற்க வைத்து மக்களின் ஆதரவு மனநிலையை உருவாக்கவா?

ஈராக்கில் புகுந்து கன்னெய்யச் சுரங்கங்களை வசப்படுத்தி கன்னெய்யப் பொருட்களின் விலையை உயர்த்தியது போல் இந்திய மொத்த, சில்லரை வாணிகங்களைக் கைப்பற்றவா?

சென்ற ஆண்டில் இந்திய அரசு வேளாண் விளைபொருட்களை வாங்க அம்பானிகளுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது. அவர்கள் பெருமளவு உணவுப் பொருட்களை வாங்கிப் பதுக்கி விட்டார்களாம். அதைக் கொண்டு அவர்கள் உணவுப் பொருள் விலையை ஏற்றிவிடாமல் தடுக்க வேண்டுமாம். அதனால் இந்த ஆண்டு அரசே நேரடியாகக் கொள்முதலில் இறங்கியதாம். நடு உணவு அமைச்சர் கூறியிருக்கிறார்.

உணவுத் தவசங்களை ஓராண்டுக்குமேல் இருப்பு வைத்தால் சரக்கின் தரம் கெட்டுப் போகும் என்பதுடன் மூதலீட்டுக்கு வட்டியும் இழப்பாகும். அத்துடன் அறுவடையாகிப் புதுத் தவசம் சந்தைக்கு வந்தால் விலை விழுந்துவிடும். இந்த ஆண்டும் அனைத்தையும் வாங்கிப் பதுக்கவும் பெரும் மூலதனம் தேவை. இந்த இக்கட்டில் இருந்து அம்பானிகளைக் காப்பாற்றத்தான் இந்திய அரசு உணவுத் தவசங்களைக் கொள்முதல் செய்து தானே பதுக்கியுள்ளது. அதனால் சந்தையில் சரக்கு இன்றி உணவுப் பொருள்களின் விலை கூடியுள்ளதோ?

அமெரிக்காவில் உயிரி எரிநீர்(பயோ டீசல்) உருவாக்குவதற்காக பெருமளவு காய்கறிகளை இறக்குமதி செய்கிறார்களாம். அதனால் இங்கு காய்கறி விலை ஏறவிட்டதாம்.

எதுவும் தெரியவில்லை ஐயனே!

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து மக்களைச் சுரங்கங்களிலும் பிற தொழிற்களங்களிலும் நூற்றுக்கணக்காகக் காவு கொடுக்கும் சீனத்தின் ″பாட்டாளியப் புரட்சி″யை நாம் விரைவில் மிஞ்சிவிடுவோம்.

ஒரு குறிப்பு: நம்மிடம் சொன்னால் தமிழ்நாட்டில் குடும்ப விழாக்களிலும் உணவு விடுதிகளிலும் எங்கேயும் எப்போதும் நடைபெறும் அன்னதானங்களிலும் விழும் வாழை இலைகளையும் காய்கறிக் கழிவுகளையும் உயிரி எரிநீர் உண்டாக்க கப்பல் கப்பலாக வழங்கலாமே.

பணப்புழக்கம் மிகுந்திருக்கலாம் என்பதை எற்றுக்கொள்ளலாம். மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியினரிடம் சேரும் பெரும் செல்வம் கீழ் நோக்கிக் கசிந்து கீழ் மட்டத்திலுள்ளவர்களைச் சேரும் என்பது ஊறுதல் கோட்பாடு(Percolation Theory) என்று பொருளியலில வழங்கப்படும். எனவே செல்வம் படைத்தவர்கள் உருவாவது ஒரு குமுகத்துக்கு நல்லது என்பது இக்கோட்பாட்டளர்கள் கூற்று.

இன்று நாட்டில் பாயும் வெளிப்பணம் கீழ்நோக்கிக் கசிந்து அடித்தளத்திலுள்ள பெருவாரி மக்களை நோக்கிச் செல்லும் போது ஒவ்வொரு அடுக்கிலும் மேலுள்ள அடுக்கினை விடக் குறைவான விகிதத்திலேயே பங்காகும். அவ்வாறு கிடைக்கும் கூடுதல் வரவை விட விலைவாசி ஏற்றம் மிகுதியாக ஒரு குறிப்பிட்ட அடுக்கில் நிகழும். அந்த அடுக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த விலைவாசி உயர்வுக்கு எதிர்வினைகள் மக்களிடம் உருவாகும்.

அப்படி உருவானால் என்ன கெட்டுவிடும் அல்லது என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும்? அதற்குத்தான் இருக்கிறார்களே நம் பொதுமைத் தோழர்கள், கொதிக்கும் பதனீருக்கு பதம் போடுவதற்கு.

இலவச வேட்டி, சேலை, நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, மூடிதிருத்துக் கருவிகள், தேய்ப்புப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, வளி அடுப்பு, மண்வெட்டி முதல் உழுவுந்து வரை வேளாண் கருவிகள் என்று இந்தப் பட்டியலில் புதிதாகச் சிலவற்றைச் சேருங்கள் என்று தோழர்களை வைத்து - ஊரூருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்திவிடலாம்.. ஆட்சியாளர்கள் அழகாகச் செய்து கொள்முதலில் தரகும் பெற்றுக் கொள்வர். மக்கள் வாயைப் பிளந்து அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஓடமாட்டார்களா? போராடுவாவது ஒண்ணாவது. இந்த இலவயங்களை வாங்க மகிழுந்து வைத்திருக்கும் அடுக்கினர்களும் வருவார்களே! மக்களின் பண்பாட்டை எந்த உயரத்துக்கு உயர்த்தி காரல் மார்க்சுக்குப் பெருமை சேர்ததிருக்கிறோம் பார்த்தீர்களா!

தமிழர்கள் உலகுக்கே இன்றுவரை வழிகாட்டிகள். இன்றைய இந்தியாவில் எதிர்க்கட்சிகளைக் கவிழ்த்து ஆட்சியமைத்து வழிகாட்டியவர் அரசியலில் அறத்தைக் கடைப்பிடித்தவர் என்று புகழப்படும் ஆச்சாரியார்(இராசாசி). கொள்கையில்லாக் கூட்டணி வைத்துக் காட்டியவர் அண்ணாத்துரை. இந்த வரலாற்றுப் பெருமையால்தான் நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அன்னை சோனியா எங்கள் கலைஞரை அழைத்து அறிவுரை கேட்கிறார். இத்தகைய பெருமை பெற்ற அண்ணாதுரை கூறிய பொன்மொழி என்ன தெரியுமா?

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

ஏழைகள் எப்போதுமே இருக்க வேண்டும். அவர்களை அவ்வப்போது நாம் சிரிக்க வைக்க வேண்டும். அப்போது அந்த இறைவன் நமக்கு ஆட்சிக் கட்டிலை அருளுவார்.

சொல்லுங்கள்,
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

(இக்கட்டுரை தமிழினி சூலை-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

பணவீக்கம்

பணவீக்கம் என்ற சொல் பொருளியல் குறித்த செய்திகளில் அடிக்கடி வருவது, கொஞ்சம் அச்சத்தை ஊட்டுவதும் கூட. ஆனால் உண்மையில் அது அவ்வளவு அஞ்சத்தக்கதன்று, உரிய வழியில் கையாளப்பட்டால் ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த தூண்டுகோலாக அமையக் கூடியது.

பணவீக்கம் என்பது ஒரு நாட்டிலுள்ள விற்கத்தக்க பொருளாகிய பண்டங்களுக்கும் அவற்றை வாங்கக் கிடைக்கும் பணத்துக்குமிடையிலுள்ள ஒரு குறிப்பிட்ட உறவைக் குறிப்பதாகும். பண்டங்கள் குறைவாகவும் பணக்கிடைப்பு கூடுதலாகவும் இருந்தால் பொருட்களின் தேவையும் விலையும் ஏறும். இதனைப் பணவீக்கம் என்பர். பணிகளுக்கும் இது பொருந்தும். பண்டங்கள் மிகுதியாகவும் பணக்கிடைப்பு குறைவாகவும் இருந்தால் பணப் பற்றாக்குறை என்பர். ஒரளவு பணவீக்கம் இருந்து கொண்டே பண்டவிளைப்பு உயர்வுக்கான வாய்ப்புகளும் சிறப்பாக இருந்தால் அது பண்ட விளைப்பு வளர்ச்சியை ஊக்கும். மக்கள் விரும்பும் பண்டங்களின் விளைப்புதான் முனைப்படையும் என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். பணக்கிடைப்பு தாராளமாக இருந்து மக்களுக்குக் கிடைக்கத் தக்க பண்டங்களின் அளவு கூடாமலிருந்தாலோ அல்லது குறைந்தாலோ பணவீக்கம் வாங்கும் ஆற்றலைக் குறைத்து மக்களை வறுமைப்படுத்தும்.

நம் நாட்டில் பணவீக்கம் என்பது நிலையான ஒன்றாகும். அதே வேளையில் அது உள்நாட்டு விளைப்பை ஊக்குவதாகவும் இல்லை. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

பண வழங்கல் கூடுவதாலோ பண்ட வழங்கல் குறைவதாலோ அல்லது இவ்விருவழிகளிலுமோ பணவீக்கம் ஏற்படலாம். நம் நாட்டில் இரு வழிகளிலும் ஏற்படுகிறது. இங்கு பண்ட விளைப்பு ஊக்கப்படுவதில்லை. மாறாகத் தொழிலிலும் வேளாண்மையிலும் எண்ணற்ற கட்டுப்பாடுகளினால் தடுக்கவேபடுகிறது. அதே வேளையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளாலும் வேளாண் மற்றும் கட்டடத் தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களாலும் சம்பள விகிதங்கள் உயர்ந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் வேளாண் பண்டங்களின் விலை10 மடங்கும் சாப்பாட்டு விலை ஏறக்குறைய 35 மடங்கும் உயர்ந்துள்ளன. ஆனால் கூலி 120 மடங்கு உயர்ந்துள்ளது. இது பெரும் பணவீக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. தொழிலாளர்களின் வருமானம் சாராயம், திரைப்படம், குடும்ப நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள் அடிப்படைத் தேவைகள் அல்லாத பல்வேறு வகைச் செலவுகள்,என்று கரைந்து போகின்றன. மாதச் சம்பளம் வாங்குவோர் தொ.கா.பெட்டி என்று தொடங்கி உடல்நலத்துக்கு உதவாத நறுமணப் பொருட்கள், பெப்சி போன்ற குடிநீர்கள், இனிப்புப் பொருட்கள் என்று வெளிநாட்டுப் பொருட்கள், சுற்றுலா, குழந்தைகளுக்கு வரம்பு மீறித் தண்டப்படும் பள்ளிச் செலவுகள், பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள், திருமணம், பூப்பு போன்ற சடங்குகள் ஆகியவற்றில் திருப்பி விடுகின்றனர். கையூட்டு என்ற வகையிலும் பெரும் பணம் சுழல்கிறது. இவ்வாறு பொருளியல் வளர்ச்சியை ஊக்காத ஒரு பணச் சுழற்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை மேலும் கெடுக்கும் வகையில் பொது வழங்கல் முறை மூலம் நெல், கரும்பு உழவர்களின் வயிற்றிலடிக்கும் விலைக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்த வெற்றுச் சுழற்சியை விரிவுபடுத்துகின்றனர். முடையிருப்பு என்ற பெயரில் நெல்லையும் கோதுமையையும் வாங்கி கிடங்குகளிலில் கெட்டுப் போக்கி அழித்தும் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர் ஆட்சியாளர்கள். வாக்கு வேட்டைக்காகவும் ஊழலில் கொழுப்பதற்காகவும் இலவயங்கள், மானியங்கள் என்ற பெயரில் வீட்டு மனைகள், தொகுப்பு வீடுகள், தொழிற் கருவிகள் (செருப்பு தைத்தல், சலவை, முடிதிருத்தல் போன்ற தொழில் சார்ந்த சாதியினருக்கு இலவயக் கருவிகளை வழங்கித் தொழிலடிப்படையிலமைந்த சாதிகளை நிலை நிறுத்துகின்றனர்.) சேலை, வேட்டி, அரிசி, மண்ணெண்ணெய், சீனி, தொ.கா. பெட்டி, வளி அடுப்பு, மிதிவண்டி என்று மக்களை மயக்கத்திலாழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக வேளாண்மை(உணவு), சவளி(உடை), கட்டுமானம்(உறையுள்) துறைகள் உரிய வளர்ச்சியின்றித் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குமாறாக ஏற்றுமதிக்குகந்த பணப்பயிர்களையும் துண்டுகள், உள்ளாடைகளையும் தோல் பொருட்களையும் மட்டும் நாம் விளைத்துக் கொண்டிருக்கிறோம். நகர - ஊரமைப்புத் துறை மற்றும் உள்ளூராட்சிகளின் பகுத்தறிவுக் கொவ்வாத விதிகளின் மூலமாகவும் வருமான வரித்துறையின் அச்சுறுத்தல் மூலமும் மக்கள் கட்டுமானத் துறையில் வளர்சசியடைவதைத் தடுத்து ஊழல் மிகுந்த வீடமைப்பு வாரியங்கள், குடிசை மாற்று வாரியங்கள் மூலம் ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். தம் சொந்த உழைப்பில் சிக்கனமாக பகுத்தறிவுக்கு ஒத்த வகையில் முன்னுரிமைகளை வகுத்துச் செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடமிருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளது; தமக்கு உரிமையில்லாதவற்றின் மீது உரிமை கொண்டாடும் தீக்குணம் படியவிடப்பட்டுள்ளது. அதனை அகற்றி மக்களை நல்லவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, தம் செயல்களைப் பகுத்தறிவுடன் வரைமுறைப்படுத்துபவர்களாக மாற்றியமைக்க வேண்டிய பெரும் பணி ஒரு மக்கள் நலம் நாடுவோருக்கு உள்ளது.

1974இல் அறிவிக்கப்பட்ட ″நெருக்கடி நிலை″யின் போது இந்திரா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று பணப் புழக்கத்தைக் குறைப்பது.அதன் மூலம் மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து ஏற்றுமதிக்கான பண்டங்களை மிச்சப்படுத்துவது. இந்த நோக்கத்தை எய்த சம்பள உயர்வுகளைத் தவிர்த்தல் அகவிலைப்படியை முடக்கல் போன்ற நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இது மக்களிடையில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பற்றவே அவர் திடீரென்று தேர்தலை அறிவித்தார் என்று ஒரு கருத்து உண்டு.

பணப் புழக்கத்தைக் குறைத்தல் என்ற உத்தி சோவியத் ஆட்சியாளர்கள் வகுத்துக் கொடுத்ததாம். 1979இல் இந்திரா புது அரசு அமைத்த போது அமெரிக்கா மாற்றுவழி ஒன்றைப் பரிந்துரைத்தது. பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் அரசின் கையிலிருந்த கன்னெய்யம், இரும்பு, அளமியம், நிலக்கரி போன்ற அடிப்படைப் பண்டங்களின் விலைகளையும் தொடர்வண்டி, பேருந்து, மின்சாரம் போன்ற அடிப்படைப் பணிகளின் கட்டணங்களையும் உயர்த்திவிட்டால் பணமதிப்பு வீழ்ச்சியடைந்து அதனால் மக்களின் வாங்கும் ஆற்றல் சுருங்கி அரசின் நோக்கம் ஈடேறிவிடும்.பொதுமை, நிகர்மைத் தோழர்களை வைத்து ஒரு விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்ட நாடகம் நடத்திவிட்டால் போதாதா? மக்களை ஏமாற்றும் இந்த உத்திக்குப் பொருளியலில் பணமாயை (Money Illusion) என்று பெயர். அரசுடைமை என்ற கோட்பாடு மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்க ஆட்சியாளர்களுக்கு எத்தனை வகைகளில் உதவுகிறது என்பது இப்போது புரிகாறதா?

ஓர் அரசு மக்களின் வாங்கும் ஆற்றலை, அதன் மூலம் அவர்களது வாழக்கைத் தரத்தை வீழ்த்துவது, அதாவது அவர்களை வறுமையில் ஆழ்த்துவதுதான் தனது பொருளியல் கோட்பாடு என்று அறிவித்துச் செயற்படுத்துவதும் அதனை எந்தவோர் அரசியல் கட்சியோ அறிவு″சீவி″யோ பொருளியல்″மேதை″யோ கேள்வி கேட்காததும் ″ஞானத்″தின் ஊற்றுக்கண் என்று பெருமையடித்துக்கொள்ளும் ″பாரதத்″தில்தான் நடக்க முடியும்.

இவ்வாறு உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியின் வேரையே அழித்து விட்டனர் 50 ஆண்டுக்கால ″விடுதலை″ இந்தியாவின் ஆட்சியாளர்கள். இவ்வளவு அழிம்புகளை மீறியும் இந்நாட்டின் வளமான மண்ணிலிருந்து இங்கு வாழும் மக்களின் கடுமையான உழைப்பாலும் அறிவாற்றலாலும் உருவான செல்வத்தை வருமானவரியாலும் அரசுடைமைப் பண நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களாலும் முடக்கியும் முடமாக்கியும் அழித்தும் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கியும் உள்நாட்டில் தேர்தல்கள், பிற அரசியல் நடவடிக்கைகளில் பாழாக்கியும் உள்ளனர். மக்களிடமிருந்து உருவாகும் அறிவியல் - தொழில்நுட்பக் கருத்துகள் கண்டுபிடிப்புகளைக் செயற்பட விடாமல் தடுத்தும் அழித்தும் வந்துள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் வல்லாரை வெளிநாடுகளுக்கு ஓடும் வகையில் இழிவுபடுத்திக் கொடுமைப்படுத்தினர். இவ்வளவு கேடுகளையும் செய்து நம் நாட்டின் வளர்ச்சியாற்றலை அழித்து விட்டு ″நம்மிடம் மூலதனமில்லை; தொழில்நுட்பமில்லை″ என்று காரணம் கூறி நம் துறைமுகங்கள், சாலைகள், வானூர்தி நிலையங்கள் இருப்புப் பாதைகள், மின்துறை ஆகியவற்றை உருவாக்கவும் பராமரிக்கவும் அயலவர்களிடம் விட்டு விட்டு நம் நாட்டு மக்களை நம் நாட்டிலேயே அயலவருக்கு அடிமை செய்ய விட்டுள்ளனர் ″நம்″ தலைவர்கள். அதுபோல் பாசனக் குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள், வயல்கள், காடுகள் என்ற அனைத்தும் உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

இந்தச் சூழலில் நாம் சில கேள்விகளுக்கு விடைகாண வேண்டியவர்களாகவுள்ளோம். வருமானவரியை ஒழித்தும் தொழில் தொடங்குவதற்கு இன்றிருக்கும் தடங்கல்களை அகற்றியும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளரும் வகையில் காப்புரிமப் பதிவு அலுவலகங்களை மாவட்டந்தோறும் நிறுவியும் பொருளியல் வளர்ச்சியைப் பாய்ச்சல் நிலைக்குக்கொண்டு வருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடிப்படைக் கட்டமைப்புகளான தரமான அகன்ற, நேரான சாலைகள், தடங்கலற்ற மின்வழங்கல், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு வகைதுறைகள் முதலியவற்றை அமைப்பதற்கும் பாசன அமைப்புகளைச் சிறப்புறப் பாராமரிப்பதற்கும் மக்களே முதலீட்டு அவற்றிலிருந்து வருவாய் ஈட்டிக் கொள்ளலாமென்று திட்டமிட்டால் கூட அதற்கு உடனடியாகத் தேவைப்படும் மாபெரும் முதலீட்டுக்கு என்ன செய்வது? அரசே இத்தேவைகளை நிறைவேற்றலாமென்றாலும் அவ்வளவு பெருந்தொகையை வரியாக விதித்தால் மக்களால் இன்றைய நிலையில் தாங்கமுடியுமா? இந்த நிலையில் உலக வங்கி போன்ற பண நிறுவனங்களிடம் கடன் வாங்குவதையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் நம் அடிப்படைக் கட்டுமானங்களை ஒப்படைப்பதையும் தவிர வேறு வழி உண்டா?

உண்டு என்பதுதான் நம் விடை. இந்த விடை நம்மால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 75 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் கேயின் என்பவர் பரிந்துரைத்து அமெரிக்க அரசாலும் உலகின் பிற அரசுகளாலும் கடைப்பிடிக்கப்படுவதாகிய பணத்தாளை அச்சிட்டுப் புழங்கவிடும் உத்திதான் அது..

இந்த உத்தி பற்றி நம்மில் பலருக்கு தெரியும். வரவு செலவுத் திட்டத்தில் வரவை மிஞ்சிய செலவைத் திட்டமிட்டுவிட்டு நிலுவையாக நிற்கும் பற்றாக்குறையைப் புதிய அல்லது கூடுதல் வரி விதிப்பு, கடன்கள் அல்லது அவற்றுடன் பணத்தாள்களை அச்சிடுவதன் மூலம் ஈடுகட்டுவதற்குப் பற்றாக்குறை வரவு - செலவுத் திட்டமுறை என்பர். இவற்றில் பணத்தாள்களை அச்சிட்டு ஈடுகட்டும் முறையை பற்றாக்குறைப் பணமுறை என்பர்.

இந்த உத்தியை ஆச்சாரியார்(இராசாசி) போன்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆளும் கட்சி இந்த உத்தியைக் கையாளப்போவதாக அறிவிக்கும் போதெல்லாம் எதிர்க் கட்சிகள் கூச்சலிடுவதுண்டு. அத்தகைய ஒரு திட்டத்தை நாம் இப்போது எப்படிப் பரிந்துரைக்கிறோம்? இதற்கு விடையளிக்கும் முன் மனித உழைப்பு பற்றிய ஓர் உண்மையைத் தெரிந்து கொள்வோம்.

ஒரு மனிதன் தன் உழைப்பின் மூலம் தன் தேவையைப் போல் பல மடங்கு பண்டங்களைப் படைக்க முடியும். தானே பண்டத்தைப் செய்து அவன் சந்தையில் விற்க முனையும் போது அதை அவனிடம் வாங்கி விற்கும் வாணிகன் அவனால் படைக்கப்பட்ட பண்டத்தில் அவனது தேவைக்குப் போதிய அளவுக்கு மட்டும் விலையாகக் கொடுத்துவிட்டு அதன் எஞ்சிய மதிப்பைப் பறித்துக்கொள்கிறான். பண்டத்தைப் படைப்பதற்கு மூலப் பொருட்களைக் கடனாகவோ மூலப்பொருள் வாங்கக் கடனாகப் பணமோ வாங்கியிருந்தால் அந்த வாணிகன் அல்லது வட்டிக்காரனுக்கும் அந்த மீத மதிப்புச் செல்கிறது. கடன் வாங்கித் தொழில் நடத்தும் சிறுதொழில் ″முதலாளி″யின் நிலையும் ஏறக்குறைய இதுதான். ஆனால் பெருந்தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளியின் உழைப்பில் உருவாகும் மீத மதிப்பு அத்தொழில் முதலாளியிடம் சேர்கிறது. நாடு முழுவதும் இது போல் வாணிகர்களாலும் வட்டிக்காரர்களாலும் பெருமுதலாளிகளாலும் கைப்பற்றப்படும் மீத மதிப்பு அவர்களிடம் பணமாகத் தேங்கிப் போவதால் விளைக்கப்பட்ட பண்டங்களை வாங்கத் தேவையான பணம் மக்களிடமில்லாமல் பண்டங்களும் தேங்கிப் போகின்றன. இதனால் தேவை குறைந்து பண்ட விளைப்பு குறைகிறது; இதனால் பெரும்பான்மை மக்களான உழைப்பாளிகளின் வருமானம் குறைந்து பண்டங்களின் தேவை மேலும் குறைகிறது. இறுதியில் வேலையில்லாப் பட்டினி நிலை உருவாகி உழைப்பாளி மக்கள் செத்து மடிகிறார்கள்.

இதே நேரத்தில் நாடெல்லாம் அனைத்துப் பண்டங்களும் தேங்கிக் கிடக்கின்றன. இது 1933 க்கு முன்பு இரண்டு நூற்றாண்டுகளாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சி. இந்தப் பட்டினி நிலையில் பணம் படைத்தோரின் நுகர்வினால் தேங்கிக் கிடந்த பண்டங்கள் சிறிது சிறிதாகச் செலவாக, விளைப்புச் செயல்கள் மீண்டும் தொடங்கி வேகம் பெற்று உச்சத்தை அடைந்து மீண்டும் தேக்கத்தை நோக்கி நகர்வதாகச் சுழன்றது. இதனைப் பெரும் வீழ்ச்சி(கிரேட் டிப்ரசன்) என்றும் பொருளியல் நெருக்கடி என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் உலகில் பொதுமைப் புரட்சி ஏற்படும் என்று காரல் மார்க்சு கூறினார். அது அமெரிக்காவில் மெய்ப்பட இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 1933 இல் தோன்றிய நெருக்கடியால் அமெரிக்காவில் பட்டினிச் சாவுகள் நேரிடத் தொடங்கின. கஞ்சித் தொட்டிகளை நிறுவி பட்டினி கிடந்த மக்களைக் காப்பாற்றியது அரசு. அப்போதுதான் பொதுமைக் கட்சியும் அங்கே வலுப்பெற்றது. ஆனால் பொருளியல் வல்லார் கெயின் வகுத்த புதிய உத்தி அங்கு மட்டுமல்ல உலகில் எங்குமே பொதுமைப் புரட்சி நடைபெறாமல் தடுத்து நிறுத்தியது. அது என்னவென்று பார்ப்போம்.

மனித உழைப்பு இருவகைகளில் செயற்படுகிறது. ஒன்று பண்டங்களைப் படைக்கும் விளைப்புத் துறை, இன்னொன்று பண்டங்களைப் படைக்காத பணித்துறை. விளைப்புத் துறையில், எடுத்துக்காட்டாகச் சவளித் துறையை எடுத்துக்கொண்டால் விதையையும் உரத்தையும் பயன்படுத்தி பருத்தி விளைக்கும் வேளாண்மை, பருத்தியிலிருந்து துணி செய்யும் நெசவாலை, துணியிலிருந்து ஆடை செய்யும் தையலகங்கள் என்ற பல கட்டடங்கள் வரும். அது போல் பணித்துறையில் உடுத்த துணியைச் சலவை செய்யும் சலவைத் துறை வரும். மண்ணில் சாலைகள் அமைப்பதும் சல்லி, மணல், கீல்(தார்) பயன்படுத்திச் சாலை போடுவதும் அதனை முறையாகப் பாரமரிப்பதும், பாசன அமைப்புகளைக் கட்டுவதும் பராமரிப்பதும், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்களைக் கட்டுவதும் பராமரிப்பதும், வீடுகளைக் கட்டுவதும் பராமரிப்பதும், கல்வி நிலையங்களைக் கட்டுவதும் பராமரிப்பதும் போன்றவை பணித்துறையில் வரும். திரைப்படம், நாடகம், போன்ற கலைத்துறைகள், தாளிகைகள் போன்றவை பணித்துறையின் கீழ்வரும். விளைப்புத் துறையில் உருவாகும் பண்டங்களில் சில இத்துறைகளில் நேரடியாகப் பயன்படுகின்றன. அதைவிடப் பெருமளவில் இத்துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் விளைப்புத் துறையின் படைப்புகளை நுகர்ந்து தீர்க்க உதவுகிறது. எனவே பொருளியல் நெருக்கடிகளைத் தவிர்க்க விளைப்புத் துறையில்லாத பணித் துறைகளின் மூலம் மக்களிடம் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெயின் பரிந்துரைத்தார். இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய அரசுகள் எதுவும் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பனிக் காலத்தில் சாலைகளிலிருந்து பனிச் சேற்றை அகற்றுவது போன்ற எளிய பணிகளில் தொடங்கி நாடெங்கும் நேரிய அகன்ற சாலைகளை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு அந்த நெருக்கடியை எதிர்கொண்டார். அதற்கு, பணத் தாள்களை அச்சிடும் பற்றாக்குறைப் பணமுறை உலகில் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக நாடுகளும் இவ்வுத்தியைப் பின்பற்றின. அன்றிலிருந்து இன்று வரை முன் போன்ற பட்டினிச் சாவுகள் உலக மக்களை அச்சுறுத்தவில்லை. சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பட்டினிச் சாவுக்குக் காரணம் உலக வாணிகத்தில் தம்மை முழுமையாக ஒப்படைத்து உள்நாட்டுத் தேவைகளிலிருந்து தம் வேளாண்மையை அயற்படுத்தி அவை ″தற்கொலை″ செய்து கொண்டதுதான்.

நம் நாட்டில் இந்த உத்தி கடைப்பிடிக்கப்பட்டதா? அதன் விளைவுகள் என்ன என்ற கேள்விகளுக்கு இப்போது விடை காண்போம்.

நம் நாட்டில் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் நடைமுறையிலுள்ளது. பற்றாக்குறையை வரிவிதிப்பாலும் ஓரளவு பணத்தாளை அச்சிட்டும் சரிப்படுத்தும் முறைய முன்பு கடைப்படித்ததுண்டு. இப்போது உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள்தாம் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த உத்தியைக் கையாள வேண்டுமாயின் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்குப் பண்டங்கள் தேவை. பண்டம் இருந்து பணம் இல்லாத நிலைதானே முன்பு பொருளியல் நெருக்கடிக்குக் காணரமாக இருந்தது. பணம் இருந்து பண்டங்களின் இருப்பு மிகக் குறைவாக இருந்தாலும் அதே போன்ற நெருக்கடி உருவாகும்.

நாம் ″விடுதலை″ பெற்ற போது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அளவில் உணவு விளைச்சல் இல்லை. அரிசியையும் கோதுமையையும் இறக்குமதிதான் செய்துகொண்டிருந்தோம். எனவே ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பெரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றிப் பாசனப் பரப்பை விரிவாக்கினோம். வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை. நெல் நாற்றுகளை வரிசையாய் நடும் சப்பானிய உத்தியை மட்டும் கடைப்பிடித்தோம். இந்தக் காலகட்டத்தில் நேரு கடைப்பிடித்த போக்கு நம் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்தது. நம் நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட ஓர் ஐரோப்பியர், ஓர் அமெரிக்கர் ஆகிய இருவரை அவர் அமர்த்தினார். உள்நாட்டில் இப்பணிக்குத் தகுதியானவர்களை கிடைக்கவில்லையா? தேடினால் கட்டாயம் கிடைத்திருப்பர். ஆனால் ″இந்திய மரபு″ப்படி தன் நாட்டினரை மதியாமையும் அயல் நாட்டினரை வழிபடலும் அவரது குருதியில் ஊறுயிருந்தன. பல்துறைத் தொழில்நுட்பத்திலும் மேதையாக விளங்கிய கோ.து.(சி.டி.)நாயுடுவின் படைப்புகளான கரிசி(பிளேடு), வானொலிப் பெட்டி போன்றவை தனக்கு நெருக்காமன தொழில் முதலாளிகளுக்குப் போட்டியாக வருமென்று நேரு அஞ்சியிருக்கலாம். ஆனால் அவரது வேளாண் தொழில்நுட்பங்களையும் புறக்கணித்தது ஏன்?

கோ.து.நாயுடுவை மட்டுமா? நாடு முழுவதிலும் தோன்றிய எண்ணற்ற தொழில்நுட்பர்களையும் புறக்கணித்தார். அறிவியல் – தொழில்நுட்பர்களைப் புறக்கணித்து இழிவுபடுத்தும் கேடுகெட்ட நடைமுறையை ″விடுதலை″க்குப் பின் தொடங்கி வைத்த புண்ணியரே நேருதான். தன் படிமம் மட்டும் தனித்து ஒளிர வேண்டும். தனக்கு அருகில் கூட எவரும் வந்து விடக் கூடாது என்பது அவரது எண்ணம். உலகமெல்லாம் தன் பெயர் பரவ வேண்டும் என்பதற்காகவே உலக அரங்குகளில் உரைகள் நிகழ்த்தியதும் அமெரிக்க, சோவியத் தலைவர்களுக்கு இணையாகத் தானும் பேசப்படவேண்டும் என்பதற்காகவே அணிசாரா நாடுகள் அமைப்பைத் தொடங்கி நடத்தியதில் பங்கு கொண்டதும் சீனத்தோடு சேர்ந்து ″பஞ்சசீலக்″க் கோட்பாட்டைப் பறைசாற்றி மூக்கறுபட்டதும். இலங்கையில் வாழும் இந்திய மரபினரின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இலங்கை அரசுத் தலைவர்களுடன் தன் மகளும் தானும் கேளிக்கை ஆட்டங்கள் நடத்திய இந்திய நீரோ அவர். கூட்டிக் கொடுத்த ஊழல் பெருச்சாளிகளை ஊட்டி வளர்ந்த உயர்குடிச் செம்மல் அவர். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சுருண்டு போன சப்பானை ஒரு பொருளியல் வல்லரசாகத் தூக்கி நிறுத்தும் வரை ஒரே ஒரு உலக வரலாற்றுக் கருத்தரங்கில் கூடக் கலந்துகொள்ளாமல் தேசிய மீட்சியில் தம் முழு ஆற்றலையும் செலுத்திய சப்பானியத் தலைவர்களுடன் ஒப்பிட்டால்தான் சட்டையில் செம்முளரி (ரோசா)ப் பூவைச் சொருகிக்கொண்டு மேனா மினுக்கியாக உலகின் முன் படங்காட்டித் திரிந்த நேருவைப் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தின அண்ணாத்துரை, கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன் ஆகியோர் தமிழ் மொழியில் உண்மையான புலமை பெற்ற அனைவரையும் மிதித்து அழுத்தியது போன்று அனைத்துத் துறைகளிலும் உள்ள புத்திளம் படைப்பாளிகளை அழுத்தி அழித்ததுடன் கேடுகட்ட குடும்ப ஆட்சியெனும் கொடும் பிணியை இந்தியாவுக்கு வழங்கிவிட்டுச் சென்றவர் அவர். பெயருக்கேனும் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ″மக்களாட்சி″யின் குரல்வளையை நெரிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356ஐ முதன் முதலில் பயன்படுத்திய கொடியவரும் அவரே!

இந்தப் பின்னணியில் வேளாண் தொழில்நுட்பத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் பொறுப்பை லால்பகதூர் சாத்திரி, சி. சுப்பிரமணியம், மா. சா. சாமிநாதன் ஆகியோர் மீது வரலாறு சுமத்தியது, ஆனால் உழவர்கள் மீது எண்ணற்ற விலங்குகளைப் பூட்டியோராக லால்பகதூரும் சுப்பிரமணியமும் தரம் தாழ்ந்தனர். உள்நாட்டு மரபு விதைகளைத் திரட்டித் திருட்டுத்தனமாக அமெரிக்கர்களுக்கு வழங்கி அவர்கள் அமெரிக்காவில் பதிவுசெய்ய உதவி உள்நாட்டில் அவற்றைத் துடைத்தழித்து இரண்டகம் செய்தார் சாமிநாதன்.

இவர்களது நடவடிக்கைகளால் உணவுப் பொருள் இறக்குமதி குறைந்தது. ஆனால் உரங்களும் பூச்சி மருந்துகள் அல்லது அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

நமது பழைய வேளாண் தொழிலுறவான குத்தகை வேளாண்மையை நிலைநிறுத்தும் ″குத்தகை ஒழிப்பு″ச் சட்டத்தையும் பெரும் முதலாளியப் பண்ணைகள் உருவாகி வேளாண் தொழில் மேம்படுவதைத் தடுக்கும் வகையில் நில வரம்புச் சட்டத்தையும் நிறைவேற்றச் செய்து சோவியத் நலனுக்குப் பாடுப்பட்ட, இன்று சீன - உருசிய நலன்களுக்குப் பாடுபடும் பொதுமைக் கட்சிகளும் அமெரிக்க நலன்களுக்குப் பாடுபட்ட, பாடுபடும் நிகர்மை(சோசலிச)க் கட்சிகளும் இன்று நிலமில்லாதோர்க்கு நிலத்தைப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அதிகாரத் தரகுப் பணி செய்து ஏழை மக்களிடையில் ஒரு பண்பாட்டுச் சீரழிவை உருவாக்கி விட்டுள்ளனர். இந்தத் தடங்கல்களை அகற்றினால் பெரும் பண்ணைகள் உருவாகி மூலதனம், சந்தைப்படுத்தல், தொழில் நுட்பம் ஆகியவற்றுக்காக அரசையோ அயலவரையோ நாடாமல் நாமே நம் வேளாண்மையை மேம்படுத்த முடியும்.

ஒவ்வோர் ஆண்டும் பல கோடி தன் நெல்லும் கோதுமையும் அரசின் கிடங்குகளில் முடையிருப்பாகப் பதுங்கிக் கிடக்கின்றன. அவற்றில் பெருமளவு களஞ்சியக் கோளாறுகளால் கெட்டு அழிக்கப்படும். கெட்டதாகவும் அழிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டப்பட்டு கொள்முதல் செய்யாமலே நடைபெறும் ஊழலும் பெருமளவு உண்டு. இன்னொரு பக்கம் பல இலக்கம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே வெளையில் பற்றாக்குறை என்ற பெயரில் பல இலக்கம் தன் கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இந்தக் குழப்படிகளால் உணவுத் தவசங்களின் தன்னிறைவு பற்றி நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவ்வாறு தான் சவளித்துறையும். பருத்தி, நூல், துணி ஆடைகள் என்று அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன. அனைத்துப் பண்டங்களிலும் நம் ஆட்சியாளர்கள் இதே குழப்படியைக் வேண்டுமென்றே செய்கின்றனர். எனவே வெளிவாணிகத்தில் அரசுக்குள்ள அதிகாரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற தேவை இருக்கிறது.

இன்று நம் மக்களிடையில் குடி, சமய, குடும்ப நிகழ்ச்சிகளில் அளவு மீதிப் பணத்தையும் பண்டங்களையும் வீணாக்குதல் போன்ற தீய வழக்கங்களுக்கு முடிவு கட்டி மூன்று வேளைக்கும் உணவு என்ற முதன்மை அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் திசையில் அவர்களது வருவாயைத் திருப்பினால் அதற்கு இன்றைய உணவு விளைப்பு போதவே போதாது. இந்நிலையில் இப்போது பணத்தாளை அச்சிட்டு மேலே சுட்டிக்காட்டியுள்ள அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க முனைந்தால் உணவுத் தட்டுபாடு ஏற்பட்டு விலை கட்டுக் கடங்காமல் உயர்ந்து பெரும் சிக்கல்களை உருவாக்கும். எனவே முதலில் உணவுப் பொருள் விளைப்பில் நாம் தன்னிறைவு எய்தும் அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தோராயமாக அவை பின்வருமாறு இருக்க வேண்டும்

1) வருமான வரியை ஒழித்தல்
2) நிலவுச்ச வரம்பை ஒழித்தல்
3) குத்தகை முறையை ஒழித்தல்
4) உணவுப் பொருள் நடமாட்டம், கையிருப்பு வைத்தல், விற்பனை, விலை நிறுவுவதல் ஆகியவை குறித்து அரசு நடைமுறைப்படுத்தும் அனைத்துக் கட்டுபாடுகளையும் ஒழித்தல்.
5) வேளாண் நடைமுறையிலுள்ள அனைத்து உடலுழைப்புப் பணிகளையும் பாடத் திட்டமாகவும் பயிற்சித் திட்டமாகவும் கொண்ட கல்வி நிலையங்களை வேண்டிய எண்ணிக்கையில் உருவாக்கல்.
6) முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் உயிரிப் பொருட்கள் வேதிப் பொருட்களைக் கொண்டு உரங்கள், பயிர்ப் பாதுகாப்புப் பொருட்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்தல்.

இவ்வாறு உணவுப் பொருள் வேளாண்மை பாய்ச்சல் நிலையடையத் தேவையான அடிப்படைகளை உருவாக்கிய பின் அடிப்படைக் கட்டுமானத் தேவைகளை நிறைவேற்றப் பணத்தாளை அச்சிடும் உத்தியைச் சிறிது சிறிதாக விரிவுப் படுத்த வேண்டும். வேளாண் விளைபொருள் விற்பனை மூலமாக நாட்டுப்புறங்களில் பாயும் பணம் அங்கு மட்டுமல்ல அம்மக்களின் பிற தேவைகளையும் நிறைவுசெய்யும் தொழில் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும். அனைவருக்கும் இலவயத் தொடக்கக் கல்வியளித்தல். சாலைகளை அமைத்தல், விரிவுபடுத்தல், சிறப்புறப் பராமரித்தல், பாசன அமைப்புகளை மேம்படுத்தல், சிறப்புறப் பராமரித்தல் என்று தொடங்கி களத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தால் விரிவான வேலை வாய்ப்பையும் பண்டங்களின் தேவைகளையும் உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இன்றைய தேங்கிப் போன பொருளியல் – குமுகியல் அடிப்படைகளும் உறவுகளும் உடைந்து ஒரு மேம்பட்ட மட்டத்துக்கு உயரும்.

இதில் உள்ள ஒரு பக்க விளைவையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசு அச்சிட்டுப் பழக்கத்தில் விடும் பணத்தில் மக்கள் சேமிப்பாகப் பிடித்து வைத்தது போக எஞ்சியதில் ஒரு பகுதி வேளாண்மை மற்றும் தொழில் நிறுவனங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், வாணிக நிறுவனங்களிடம் திரளும். இந்நிறுவனங்களிடையில் நலமிக்க ஒரு போட்டியை உருவாக்கிவிட்டால் இப்பணத்திரட்சி ஆய்வு – மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அனைத்துப் பரிமானங்களையும் மேம்படுத்தும். தொழில் புரட்சிக் காலத்தில் அடிமை நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கும் இன்று ஏழை நாடுகளிலிருந்து வல்லரசு நாடுகளுக்கும் பாய்ந்த, பாயும் அளவற்ற செல்வம் அந்நாடுகளின் பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் - குமுகியல் உறவுகளில் எத்தகைய பாய்ச்சல் நிலையை உருவாக்கியதோ உருவாக்குகின்றதோ அதே பணியை நாம் மேலே சுட்டிக் காட்டிய வகையில் செயற்பட்டால் அரசு அச்சிட்டு வெளியிடும் பணத்தாள் செய்ய முடியும்.

தற்சார்புடைய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நாம் மேலே பரிந்துரைத்த பணவீக்கத்தின் ஆக்கத் தன்மையுடன் நம் ஆட்சியாளர்கள் உலக வங்கியுட்பட உலகெல்லாம் கடன் வாங்கி மேற்கொள்ளும் ″வளர்ச்சிப் பணிகளை″ ஒப்பிட்டுப் பார்ப்போம்.

உலக வங்கி உட்பட வெளியிலிருந்து பெறப்படும் கடன் எதுவும் பணமாக வழங்கப்படுவதில்லை. பண்டங்களாகவும் பணிகளாகவுமே வழங்கப்படுகின்றன. கடன் தொகை நம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்தத் தொகைக்கு வெளியிலிருந்து நாம் பண்டங்களை அல்லது பணிகளை இறக்குமதி செய்து செலவெழுதிக் கொள்ள வேண்டும். அவற்றைப் பெறும் உள்நாட்டு மக்கள் அல்லது அரசு அதன் விலைக்கு ஈடான பணத்தை உரூபாயில் வெளியிடுகின்றனர். அதனைக் கொண்டு அரசு தன் ″வளர்ச்சி″த் திட்டங்களை நிறைவேற்றுகின்றது. சில வேளைகளில் அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான கருவிகளையும் பிற பணிகளையும் நேரடியாக இறக்குமதி செய்கிறது. பாசனத் திட்டங்கள், குடிநீர் - வடிகால் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு மூலப்பொருட்கள், தொழில்நுட்பம், பணியாட்கள் எதிலும் வெளி உதவி தேவையில்லை. வேறு எங்கோ தேவைப்படுவது உழவர்கள் உட்பட அனைத்து மக்கள் மீதும் சுமத்தப்பட்டு ″உலக வங்கித் திட்டம்″ போன்ற பொய்ப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் கப்பல்கள், வானூர்திகள், வகைவகையான போர்க்கருவிகள் கூட பிற திட்டங்களின் பெயரில் பற்று வைத்து வாங்கப்படுகின்றன.

இத்திட்டங்களின் இன்னொரு பக்கம், இவ்வாறு பெறப்பட்ட கடனை அடைப்பதென்ற பெயரில் இந்நாட்டிலுள்ள வேளாண் பொருட்கள் போன்று திரும்பப் பெறத்தக்க பொருட்களும் கனிமப் பொருட்கள் போன்று திரும்பப் பெற முடியாத பொருட்களும் நமக்கே எதிராகப் பயன்படுத்தப்படும் மனித வளம் என்ற நம் நாட்டு மக்களின் அறிவாற்றலும் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒரு பக்கம் பணப்புழக்கத்தைத் தூண்டிவிட்டு இன்னொரு பக்கம் பண்டங்களை வெளியேற்றிப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதால் தீங்குதரும் செயற்கையான ஒரு பணவீக்கம் உருவாக்கப்படுகிறது. விலையேற்றம் ஏற்பட்டு உள்நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைகிறது. அத்துடன் வெளிநாட்டினருடன் கள்ள உடன்பாடு கொண்டு உள்நாட்டு நாணயத்தின் வெளிச்செலவாணி மதிப்பைக் குறைப்பதினால் புதிதாகக் கடனெதுவும் பெறாமலே உரூபாய் மதிப்பில் கடன் உயருகிறது. ஒவ்வொரு டாலருக்கும் நாம் செலுத்த வேண்டிய பண்டங்களின் அளவு கூடுகறது. வட்டியால் குட்டி போடுவதுடன் வட்டியோ முதலோ இல்லாமலும் கடன் தொகை கூடும் விந்தையான கந்து வட்டி வலையிலும் மக்கள் சிக்கியுள்ளனர். அத்துடன் கடன் கணக்கில் வழங்கப்படும் பண்டங்கள் உலகச் சந்தை விலையை விடக் கூடுதலாகவும் நாம் ஏற்றமதி செய்யும் பண்டங்கள் உலகச் சந்தை விலையை விடக் குறைவாகவும் கணக்கிடப்படுகின்றன. அதனால் நம் வெளிவாணிக நிலுவை எப்போதும் நமக்கு எதிராகவே நின்று கடன் வலை நம் கழுத்தை மேலும் மேலும் இறுக்குகிறது.

உருபாயின் மதிப்பு இறங்கிக் கொண்டே இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதி வாணிகர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை டாலர்களாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்க முயல்கின்றனர். அதற்கு விலைப்பட்டியல் உத்தி (உயர்பட்டியல் - தாழ்பட்டியல்) பயன்படுத்தப் படுகிறது. இதனாலும் நம் வெளிவாணிகப் பற்றாக்குறை உயர்கிறது. இதனால் மேலும் ஏற்றுமதி – இறக்குமதி – வெளிவாணிகப் பற்றாக்குறை உயர்வு என்று என்று இந்த நச்சு வளையம் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த வெளி நாணயப் பதுக்கலிலிருந்து அவாலா எனப்படும் வெளிநாணயக் கடத்தல் நடை பெறுகிறது. அதில் நம் ஆட்சியாளர்களின் பங்குதான் முதன்மையானது.

அயல் வாணிகத்தின் இன்னுமொரு பக்கமும் உள்ளது. இறக்குமதியாகும் பண்டங்களின் மதிப்பில் குறைந்தது 20 நூற்றுமேனித் தரகு இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யும் ஆட்சியாளருக்கு உண்டு. போபர்சு குண்டுமிழி(பீரங்கி) ஊழல் தொடர்பாக ஒரு தொழில் நிறுவனம் கூறிய உண்மை இது. அதுபோல் ஏற்றுமதியிலும் கணிசமான தரகு உண்டு.

இந்த ஊழல்களைப் பற்றிய முழுச் செய்திகளும் அமெரிக்க நடுவண் நுண்ணறிவு முகமை (சி.ஐ.ஏ.) போன்ற உளவு நிறுவனங்களிடம் உள்ளன. அவை நம் நாட்டு ஆட்சியாளர்களை தம் விருப்பம் போல் ஆட்டி வைக்கின்றன. அமெரிக்க அமைச்சர்கள் உலகவலம் வரும் போது உலகின் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அவர்கள் முன் மண்டியிடுவதன் நுட்பமே இதுதான். அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் போபர்சு பொன்ற ஊழல்கள் அம்பலத்துக்கு வரும். எனவே நம் ஆட்சியாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஏற்றுமதி - இறக்குமதி நச்சு வளையத்திலிருந்து மீள முடியாது. அயல்நாட்டு நெருக்குதல் ஒரு பக்கமென்றால் நிலையான ஆட்சியாளர்களாகிய உயரதிகாரிகள் இன்னொரு பக்கம் நெருக்குவார்கள். புதிதாக ஆட்சியைக் கைப்பற்றும் தலைவர்கள் கூட இந்தப் பொறியிலிருந்து தப்பமுடியாது. ஏனென்றால் இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாயிருக்கும் போதே இந்தக் கொள்ளைகளில் பங்கேற்றுவிடுகின்றனர். தங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்கள் கட்சி பா.உ.க்களை ஓடாமல் நிறுத்தி வைப்பதற்காகவாவது அவர்களுக்கு இது தேவைப்படுகிறது. எதிர்க் கட்சியினருக்கு உரிய பங்கைச் செலுத்துவதற்காகவே பல்வேறு பாராளுமன்றக் குழுக்களும் அமைக்கப்படுகின்றன.

இச்சூழல்களால் ஆட்சியாளர்களின் முன்முயற்சியால் நாட்டை இந்த நச்சுச் சுழலிலிருந்து மீட்க முடியாது. மக்களின் முன்முயற்சியால்தான் முடியும். ஆட்சியாளர்களின் அதிகாரங்களைப் பறித்து அவர்களை மக்கள் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம்தான் இதற்கு முடிவுகட்ட முடியும்.

இன்றும் திடீரென்று விலைகளும் கட்டணங்களும் சராசரிக் குடிமகனால் தொட முடியாத உயரத்தில் ஏறி நிற்கின்றன. தமிழகத்தின் பண அமைச்சர் மக்களிடம் பணப் புழக்கம் கூடிவிட்டதுதான் காரணம் என்கிறார். எதிர்க்கட்சித் தலைவரோ ஆண்லைன் எனப்படும் இணையப் பேரச் சூதாட்டம்தான் காரணம் என்கிறார். நடு பண அமைச்சரோ ஏம வங்கி ஆளுநருடன் சேர்ந்துகொண்டு பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது கடைசியாக, பணவீக்கம் இருந்தாலும் ″நாம்″ 8 நூற்றுமேனி வளர்ச்சியை எட்டிவிட்டோம் என்று மகிழ்ந்திருக்கிறார். அந்த ″நாம்″ யார் என்பதுதான் நம் கேள்வி. இணையப் பேரச் சூதாட்டத்தில் ஆட்சியாளர்களின் பங்கு என்ன என்பதும் ஒரு கேள்வி. பண்டங்களை மக்கள் நுகர முடியாமல் செய்து அவர்களிடமிருந்து பறித்து ஏற்றுமதியில் திருப்பி விடுவதற்காகச் செய்யப்படும் உலகளாவிய சூழ்ச்சியா இது?

வருமானவரி தொடங்கி வேளாண்மை மீதான கட்டுப்பாடுகளையும் பிற பொருளியல் விலங்குகளையும் உடைப்பதற்கும் ஆட்சியாளர்களின் ஏற்றுமதிப் பொருளியல் நடைமுறைகளை முடிவு கட்டுவதற்குமான போராட்டத்தை நாம் உடனே தொடங்கவேண்டும். மக்களிடையில் உறைந்துவிட்ட பல்வேறு ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகளை அகற்றிப் பகுத்தறிவுக்கு உகந்த முன்னுரிமைகளுடன் தங்கள் வருமானத்தைச் செலவு செய்யும் பண்பாட்டை வளர்க்கவேண்டும். இவற்றை நிறைவேற்றும் போது நலன்தரும் ஒரு பணவீக்கத்தை நம் முன்னேற்றத்துக்கு வழியமைப்பதாக உருவாக்க முடியும்.

ஒரு வால் பகுதி:
ஆக்கவழிலான பற்றாக்குறைப் பணமுறையை ஒடுக்கப்பட்ட நாடுகள் கடைப்பிடிப்பதை அமெரிக்காவின் தலைமையில் அமைந்த வல்லரசியம் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது, பொருளியல் தடைகளுக்கு உள்ளான ஈராக்கு பற்றாக்குறைப் பணமுறையைப் பயன்படுத்தி மேலெழ முயன்றதுதான் அமெரிக்காவும் அதன் தோழர்களும் அதைத் தாக்கியதற்கான உடனடிக் காரணமாகுமோ என்று எமக்கொரு ஐயம்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் கடுமையாக நசுக்கப்பட்ட செருமனியை இட்லர் இந்தக் கோடபாட்டைப் பயன்படுத்தித்தான் அன்றைய உலக வல்லரசான பிரிட்டனை அழிக்கும் அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் வளர்த்திருப்பார் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பொசுக்கப்பட்ட சப்பானுக்கு இந்தப் பொருளியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி அமெரிக்கா தன் அரவணைப்பில் வளரத் துணை புரிந்திருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த உள்ளரங்கங்களை ஆட்சியாளர்களோ பல்கலைக் கழகங்களோ வெளியே கசிய விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

(இக்கட்டுரை தமிழினி சூன்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)