27.11.07

தமிழ்த் தேசியம் ... 11

மனந்திறந்து... 1

தமிழ்த் தேசியம் கட்டுரைக்கு அச்சேறும் முன்பே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய விறுவிறுப்பான ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் தினமணி நாளிதழ் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் சில தலைப்புகள் தந்து அத்தலைப்புகளில் கட்டுரை கேட்டிருந்தார். அவற்றுள் ஒரு தலைப்பு ″தமிழ்த் தேசியம்″ என்பது. அத்தலைப்பில் இக்கட்டுரையை எழுதி அவருக்கு விடுத்தேன். திரு.இரா. சனார்த்தனம் திராவிட இயக்கம் சார்ந்தவர். தி.மு.க.வின் உறுதியான பற்றாளர். அவருக்கு இக்கட்டுரை உவப்பாயிராது என்று எனக்குத் தெரியும். அதற்கேற்பவே இந்தக் கட்டுரை வந்து சேர்ந்தது குறித்துக்கூட அவரிடமிருந்து எந்தக் குறிப்பும் வரவில்லை.

வழக்கம் போல் இந்தக் கட்டுரையைப் படியெடுத்துச் சிலருக்கு விடுத்தேன். படி பெற்றவர்களில் வெங்காலூர் குணாவும் ஒருவர். எவரிடமிருந்தும் கட்டுரை பற்றிய கருத்து எதுவும் வரவில்லை. கட்டுரையை அச்சிட்டு வெளியிடும் விருப்பம் இருந்தாலும் நூலை உரிய முறையில் விற்பனை செய்து உண்மையான ஆர்வலர்களைச் சென்றடைய உதவும் வகையில் யாரும் கிடைக்காததால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பின் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படி வந்தது. பெரியாரின் திராவிடக் கோட்பாட்டைத் திறனாய்ந்து, தமிழக மக்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களைத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரிகளாகக் காட்டுவதே அந்நூலின் நோக்கமாக இருந்தது. இது தமிழ்த் தேசியம் கட்டுரையின் அடிப்படை அணுகலுக்கு நேர் எதிரானதாகும். இருப்பினும் பெரியாரைப் பற்றியும் அண்ணாத்துரை போன்றோர் பற்றியும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குணாவின் நூல் தமிழன்பர்களிடையில் பரவலான ஈர்ப்பைப் பெறுவதில் தினமலர் நாளிதழ் பெரும் பங்காற்றியது. தமிழ், தமிழகம், தமிழக மக்கள் மீது பகையுணர்வு கொண்ட இந்த நாளிதழ் திராவிட - தமிழ் இயக்கத்தினுள்ளிருந்து வெளித்தோன்றிய இந்த முரண்பாட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்து மனநிறைவு கொண்டது. இவ்வாறு இந்த நூலால் திராவிட - தமிழ் வட்டாரங்களிடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியாரைப் பற்றிய திறனாய்வுகள் சிலருக்குக் கொதிப்பேற்றியது. அதன் விளைவாக குணா ஒரு பொய் வழக்கின் அடிப்படையில் ″தடா″ சிறையில் அடைக்கப்பட்டார். ″தமிழ்ச் சான்றோர்″ ஒருவர் குணாவைக் கொல்ல ஆளமர்த்தினார் என்று கூட அண்மையில் ஒரு பேச்சு அடிபட்டது. அதை நம்மால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை அந்நூலில் படிக்கும் போது முதல் பார்வையில் அவை குணாவின் கூற்றுப் போல் தோன்றுகின்றன; எனவே குமரிமைந்தன் மேல் பாய வேண்டிய கொதிப்பு குணாவின் மீது பாய்ந்துவிட்டது என்று கருதுவாரும் உள்ளனர். எது எப்படியாயினும் பெரியார் தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் என்ற பொய்ப் படிமத்தில் விரிசல் ஏற்படச் செய்ததில் இந்தக் கட்டுரைக்கு முகாமையான பங்கு உண்டு.

இந்தச் சூழலில் 1998 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பெரியாற்று நீருரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசி முடித்து இருக்கையில் அமர்ந்த போது அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த திரு. சுப.வீரபாண்டியன் அவர்கள் என்னைப் பார்த்து ″இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களே; ஆனால் பெரியார் குறித்து மட்டும்...?″ என்று கேட்டார். அதைப் பற்றி நாம் பேசலாம் என்று கூறினேன். நிகழ்ச்சி முடிந்த பின் பேசலாம் என்றார். இது நடந்தது நண்பகல் வேளையில். மாலை 6.00 மணிக்கு அவரைத் தேடியபோது அவர் 4.00 மணிக்கே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அறிந்தேன். பின்னரும் கூட எம் இயக்க இதழான பொருளியல் உரிமை தொடர்ந்து அவருக்கு விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தும் அவர் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி விடை தேடி நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு விடையளிக்கும் போது என் வரலாற்றின் ஒரு பகுதியினுள் சென்று வர வேண்டியுள்ளது.

(தொடரும்)

11.11.07

தமிழ்த் தேசியம் ... 10

பிற்சேர்க்கை – 2

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் பார்ப்போம்.

அண்ணாத்துரையும் அவரது தோழர்களும் வழித்தோன்றல்களும் அவ்வப்போது கூறும் ஒரு சொற்றொடர், "நாங்கள் திராவிடநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் நிலவுகின்றன" என்பது.

இந்தச் சொற்களை அன்று அண்ணாத்துரையும் இன்று அவரது தம்பிகளும் மேடைகளில் பேசும் பொழுது மக்கள் ஆரவாரமிட்டு தம் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஆனால் இச்சொற்றொடரின் உண்மையான பொருள் யாது?

திராவிட நாடு விடுதலை (அவர்கள் சொல்லில் பிரிவினை) கேட்பதற்கான காரணங்கள் அகலவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் சொந்த நலன்களுக்காக (இதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?) அக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்பதல்லவா?

இந்தச் சொற்றொடருக்காக மக்கள் கொதிப்படைந்திருக்க வேண்டும். "அட கயவாளிகளே! எங்களை இந்நாள்வரை ஏமாற்றி ஆதரவைப் பெற்றுக் கொண்டு இப்போது எங்களை நட்டாற்றில் விட்டதுமல்லாமல் பெருமை வேறு பேசுகிறீர்களே" என்று கேட்டிருக்க வேண்டும். ஏனோ இன்றுவரை எவரிடமிருந்தும் இந்தக் கேள்வி எழவில்லை. ஒருவேளை தேசியம் என்ற சரியான உணர்வு இன்னும் தமிழக மக்களிடம் உருவாக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அல்லது இந்த இயக்கத்தில் உண்மையான தேசிய உணர்வை ஊட்டத்தக்க ஆற்றல் உள்ள தலைவன் ஒருவன் இதுவரை உருவாகாதது காரணமாக இருக்கலாம். அல்லது தமிழகத்தில் ஓர் உண்மையான தேசியச் சிக்கலே இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழகத்திலுள்ள மக்களின் உணர்வுக் காற்றை நுகரும் திறனுள்ள மனச்சாட்சியுள்ள எவரும் இங்கு ஒரு தேசியச் சிக்கல் இல்லை என்று கூறத் துணியமாட்டார்.

இவர்களின் இந்தக் கூற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. "நாங்கள் எங்களை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டு ஏமாற்றி வைத்திருக்கிறோம். அதற்குரிய எங்கள் பலனை நாங்கள் அடைவதில் குறுக்கிடாதீர். அப்படிக் குறுக்கிட்டால் அதன் விளைவுகளுக்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்கும்" என்று தில்லியுடன் பகரம் பேசுவதற்கான எச்சரிக்கையாக இச்சொற்றொடார் பயன்பட்டது.

இவ்வாறு எச்சரிக்கை விடும் நிலையில் எந்தத் திராவிடத் தலைவரும் இல்லை என்பது தான் இன்றைய நிலை.

இந்திரா காந்தி ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்து ஒரேயொரு முறை ஆட்சியைத் கலைத்த உடனேயே இந்த மிரட்டல் உத்தி ஆவியாகிப்போய்விட்டது. தில்லித் தலைமையின் காலைப் பற்றிய கைகள் இன்னும் நகரவில்லை. மொரார்சி தேசாய் "இந்திரா காந்திக்குத் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆதரவளிக்கப் போகிறாயா" என்ற ஒரே கேள்வியிலேயே ம.கோ. இராமச்சந்திரனின் அனைத்து நாடிகளும் ஒடுங்கிப்போய்விட்டன.

இன்று சுப்பிரமணியம்சாமி ஊழலைப் பற்றியும் ஆட்சிக் கலைப்பைப் பற்றியும் மிரட்டிக்கொண்டேயிருக்கிறார். அம்மையார் அவ்வப்போது தில்லி சென்று உயரிடங்களில் "பாத தரிசனம்" செய்து வருகிறார்.

தமிழக வரலாற்றில் நினைக்க நினைக்க மனதில் ஆழமான துயரத்தையும் நம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கழிவிரக்கத்தையும் ஏமாற்றையும் இரண்டகத்தையும் பற்றிய குமுறலையும் நம் நாட்டுக்கு ஏற்பட்ட இழுக்கு பற்றிய ஆத்திரத்தையும் கடுஞ்சினத்தையும் எழுப்பும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. மதுரையை ஆண்ட நாயக்கர் மரபைச் சேர்ந்த அரசி மீனாட்சியின் வரலாறே அது. ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிப்பின் தாக்குதலிலிருந்து தன் ஆட்சியைக் காப்பற்ற அவள் ஒரு கோடி உரூபாய் கையூட்டாக அவனுக்கு வழங்கினாள். (முகலாயர்களிடமிருந்து தன் ஆட்சியைக் காத்துக்கொள்ள புகழ் பெற்ற அரசி மங்கம்மாள் இந்தப் பழக்கத்தைத் தொடங்கி வைத்தாள். 18 ஆம் நூற்றாண்டில் ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரும் தொகை. ஐரோப்பாவில் மக்களிடம் திரண்ட பணம் தொழிற்புரட்சி மூலம் வளர்ந்து உலகைக் கைப்பற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நம் மக்களின் உழைப்பும் வியர்வையும் தேடிய செல்வம் ஆட்சியாளர்களால் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது நம் குருதி கொதிக்கிறது. இன்னும் நிலைமை மாறவில்லை. எனவே தான் நம் நாட்டில் மக்களுக்குக் குருதிக்கொதிப்பு நோய் மிகுதி). அப்பணத்தைப் பெற்றுக் கொண்ட விலங்கினும் கொடிய கயவன், சமயத்தின் பெயரைக் கூறிக்கொண்டு இந்நாட்டின் செல்வமனைத்தையும் உறிஞ்சிக் கரியாக்கிக் குருதியாறுகளை ஓடவிட்ட கும்பலின் கடைகெட்ட ஒரு பேராளனான சந்தா சாகிபு அப்பேதையை ஏமாற்றிச் சிறைசெய்ய அவள் மனமுடைந்து சிறைக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.

இன்றும் தில்லிக்குப் பேழைகள் பறக்கின்றனவோ என்ற ஐயம் தோன்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதுரை மீனாட்சிக்கு நேர்ந்த நிலை சென்னை மீனாட்சிக்கும் ஏற்படுமா?[1]

திராவிட இயக்கம் தமிழ்த் தேசியத்தை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டதுதான் வரலாற்று உண்மை. எவ்வளவு ஆழத்தில் தோண்டிப் புதைத்திருந்தாலும் அது முளைவிட்டு மண்ணைப் பிளந்து வெளிவருவதற்கு ஒருவேளை அதிக நாளாகலாம். ஆனால் கட்டாயம் வெளிவந்தே தீரும். இது உலக வரலாறு இடைவிடாது மெய்ப்பித்துக்கொண்டிருக்கும் உண்மையின் சாரம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இது கட்டுரை எழுதிய காலகட்டத்து அரசியல் சூழலை வைத்துக் கூறிய கருத்தாகும்.

தமிழ்த் தேசியம் ... 9

பிற்சேர்க்கை - 1

திராவிட இயக்கம் ஒரு தமிழ்த் தேசிய இயக்கம் என்பது ஒரு மாயை. ஒரு காலகட்டத்தில் அது தமிழகத்தின் அரசியல் - பொருளியல் மீட்சிக்காகக் குரல் கொடுத்தது உண்மை தான். ஆனால் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை காய்தல் உவத்தலன்றி ஒரு மீள்பார்வையிட்டால் (மிகை நாடி மிக்க கொண்டால்) கிடைக்கும் விடை:

1. பெரியார் தமிழர்களின் உரிமை என்று சொன்னது பார்ப்பனர்களுக்கு எதிரானதேயொழிய நில எல்லைக்கு வெளியே இருந்து நம் மீது மேலாண்மையும் சுரண்டலும் நிகழ்த்துகிறவர்களுக்கு எதிரானதல்ல. எப்போதாவது தமிழக விடுதலை (இதைக் கூட பிரிவினை என்ற தவறான சொல்லால் தான் அவர்கள் குறிப்பிட்டனர், குறிப்பிடுகின்றனர். சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களுக்கு அதில் உண்மையான ஈடுபாடு இல்லை) பற்றிப் பேசினால் அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான மிரட்டலாகத்தான் இருக்கும். நிலம், அதன் அடிப்படையிலான பொருளியல் அடிப்படையில்லாமல் இனம் என்ற அடிப்படையிலேயே திராவிடர்கழகம் இயங்கியதால் அதனை ஒரு தேசிய இயக்கம் என்பது தவறு. தமிழினம் என்ற திராவிட இயக்கத்தின் சொல்லாட்சியே இது நிலம் தழுவிய ஒரு தேசிய இயக்கம் அல்ல என்பதற்குச் சான்று கூறும்.

கிறித்துவர்கள் வீட்டிற்குச் சென்றால் ″ஏசு கிறித்து இந்த வீட்டின் தலைவர்″ என்பது போன்ற எழுத்துக்களை வாயிலில் பதித்திருப்பார்கள். முகம்மதியர்களின் வாயில்களில் அரபு எழுத்துக்கள் இருக்கும். சில இந்துக்களின் வாயிலில் ″ஓம்″ இருக்கும். அதுபோல் திராவிடர் கழகத்தவர் வீடுகளின் முகப்பில் ஒரு காலத்தில் ″திராவிட நாடு திராவிடருக்கே″ என்றும் பின்னர் ″தமிழ்நாடு தமிழருக்கே″ என்றும் சொற்களைப் பார்க்க முடிந்தது. இதுவும் நம்மை ஏமாற வைத்தது. இந்தச் சொற்றொடர்களின் உண்மையான பொருள் திராவிடர் அல்லது தமிழர் என்ற சொல் நில அடிப்படையில் அமைந்ததல்ல, இன அடிப்படையில் அமைந்தது என்பதாகும். ஆரியர் எனும் ஆரிய நாட்டை(ஆரிய வர்த்தத்தை)ச் சேர்ந்த அயலவர்களுக்கு எதிரான திராவிடர் அல்லது தமிழர்களைக் குறிக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவரும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட, ஆனால் ஐரோப்பியரின் வரலாற்று வரைவுக் குளறுபடிகளினால் உலக வரலாற்றில் காலத்தின் கோலமாக இடம்பெற்றுவிட்ட ஆரிய இனத்தவரென்று தவறாகக் கருதப்படும் தமிழகப் பார்ப்பனர்க்கு எதிரானதாக அச்சொற்றொடர் அமைந்தது.

ஒரு தேசிய இயக்கத்தின் முகாமையான இயல்பு நிலம் சார்ந்து நின்று அந்த நிலத்தின் மேம்பாட்டில்தான் தம் வாழ்வையும் வளத்தையும் கொண்டவர்களும் அவ்வாறு நம்பிச் செயற்படுகிறவர்களுமாகிய மக்களைச் சிதறாமல் ஒன்று திரட்டுவதில் ஈடுபடுவதாகும். அத்தகைய ஒரு வலிய சூழல் திராவிடர் கழகம் உடைவதற்கு முன்பு உருவானது. அப்போது குமுகத்தின் பிற்போக்கு விசைகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில தலைவர்களின் மூலம் அறைகூவல்களை விடுத்தன. அன்றைய நிலையில் நம் சமுகத்தின் வரலாற்று வகைப்பட்ட இப்பிற்போக்கு விசைகளின் இறுதி முயற்சியான அதை எளிதில் முறியடிக்கும் வலிமை அன்றைய திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் திராவிடர் கழகத்தின் கோழைத் தலைமை பின் வாங்கி எண்ணிக்கையிலும் வன்முறை எதிர்ப்பிலும் வலிமையற்றவர்களாகிய பார்ப்பனர்கள் பக்கம் கை காட்டிக் கொண்டு வரலாற்றின் ஒரு நல்வாய்ப்பைக் கைவிட்டுப் பெரும் இழப்புக்கு வழிகோலியது.

பின்னர் அதே திராவிடர் கழகம் அதே பிற்போக்கு விசைகளைத் தன்னுள் சேர்த்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது முன்பு பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் பிற சாதியினர் மீது என்னென்ன ஒடுக்குமுறைகளைக் கையாண்டார்களோ அதே ஒடுக்குமுறைகளை இயக்கத்தினுள்ளும் நடத்தியது. அதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிட இயக்கத்திலிருந்து மட்டுமல்ல தமிழக மண்ணிலிருந்தே அயற்பட்டுப் போனார்கள். அதன் அடையாளம் தான் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் அம்பேத்கார் சிலைகள்.

தீமை இத்துடன் நின்றுவிடவில்லை. தங்களுக்கு மற்றவர்களுடன், குறிப்பாகத் தங்களை எல்லாத் திசைகளிலும் அடுத்து வாழும் பிற்படுத்தப்பட்டோருக்கு இணையான உரிமைகள் - பொதுக் கிணறு அல்லது குடிநீர்க் குழாயில் நீரெடுக்கும் உரிமை, சுடுகாடு இடுகாடுகளுக்குச் செல்லும் பாதை உரிமை ஆகியவற்றுக்காகப் போராடும் ஒர் அறிகுறியாக நாட்டுப்புறக் கோயில்களில் மோதல்கள் உருவாயின. அதன் அடுத்த கட்டமாக மிகுந்த ஆரவாரத்துடனும் ஆர்வத்துடனும் நாட்டுப்புறக் கோயில்களில் விழாக்கள் அளவின்றிப் பெருகி வருகின்றன. இதன் பொருளியல் - பண்பாட்டியல் இழப்பை அதைப் பற்றிய விழிப்புணர்வும் குமுக முனனேற்றம் பற்றிய தெளிவும் பொருளியல் துறையில் ஈடுபாடும் உள்ளவர்களால் தான் உணர முடியும்.

பகுத்தறிவு இயக்கம் என்ற பெயரில் கடவுள் சார்ந்த அனைத்து நிறுவனங்களின் செல்வாக்கையும் கிட்டத்தட்ட அழித்து வெற்றிவாகை சூடி மக்களின் தலைவனாக இருந்த திராவிட இயக்கம் தன் குற்றத்தினால் இன்று தமிழகத்தில் பகுத்தறிவு நிலையைக் கற்பனை செய்ய முடியா அழிவு நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. இந்த அழிவிலிருந்து தமிழகத்தை மீட்க இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது போன்ற இன்னுமொரு நல்வாய்ப்பு என்று கிடைக்குமோ என்று தெளிவான சிந்தனை படைத்தோரை மலைக்க வைத்துத் திகைக்க வைத்து ஏங்க வைத்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் திராவிடர் கழகம் தமிழக மண்ணிலிருந்து அயற்படுத்தவில்லை. அரசு வெள்ளை வேட்டி வேலையை மட்டும் நோக்கமாகக் கொண்ட கல்வி, அடிமை ஒட்டுண்ணி அரசுப் பணியில் இடம்பெறுவது என்ற அடிமைக் கோட்பாட்டுக்கு அளவுக்கு மீறிய பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் செல்வாக்கிலும் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சாதியினர் பலர் தமிழகத்துக்கு வெளியிலும் தோழமைச் சாதிகளைச் சேர்த்து இயங்கி அயற்பட்டு நிற்கின்றனர். இப்படித் தனித்தனிச் சாதியினர் மட்டும் அயற்பட்டுப் போகவில்லை. திராவிடர் கழகமே தமிழ் மண்ணிலிருந்து அயற்பட்டுத்தான் நிற்கிறது.

தமிழகம் என்ற எல்லையை விட்டுத் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியப் பணிகளிலும் ஒதுக்கீடு வேண்டும் என்று தொடங்கி பின்னர் தமிழகத்துக்கு வெளியேயுள்ள பிற்படுத்தப்பட்டோர் பெயரையும் சேர்த்துக்கொண்டு மண்டல் ஆணையத்துக்குப் பாடுபட்டு அதன் பின் ஆணைய அறிக்கையைச் செயற்படுத்துவதற்காகவும் போராடித் தான் ஒரு தமிழ்த் தேசிய இயக்கமல்ல என்பதை வெளிப்படுத்திக்கொண்டதுடன் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனையோ அவர்களுடைய நல்லெண்ணத்தையோ ஒத்துழைப்பையோ பற்றிக் கவலைப்படாத இயக்கம் என்பதையும் பறைசாற்றி நிற்கிறது. இதில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற திரு.ஆனைமுத்துவும் வீரமணியோடு போட்டி போட்டுக் களத்தில் நிற்கிறார். அவர் தான் கன்சிராம் போன்றோரின் துணையை நாடிச்சென்று இதைத் தொடங்கிவைத்தவர்.

எல்லாவற்றை விடவும் மிகப் பெரிய தீங்கு தமிழகத்தில் வேரோடிப்போயிருக்கும் "பிற்படுத்தப்பட்ட மனநோய்". தாமே தம் சொந்த முயற்சியால் போராடி உழைத்து வெற்றிபெற்று தம் நிலையை உயர்த்தித் தமிழகக் குமுக மக்களிடையில் மட்டுமல்ல உலகக் குமுகவியல் ஆய்வாளர்களின் மனதிலும் சிறப்பிடம் பெற்றுவிட்ட நாடார் சாதியினர் கூட தங்களை முற்பட்ட சாதியராக்க வேண்டுமென்று கேட்டுப் பெருமிதமடைய வேண்டிய ஒரு காலகட்டத்தில் தங்களை மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பதற்காகப் பெரும் உழைப்பில் உறுப்பினர் சேர்த்துப் பெருமிதமிழந்து நிற்கிறார்களென்ற ஒரே ஒரு நிகழ்வே இக்குமுகச் சீரழிவின் தெள்ளத் தெளிவான சான்றாகும்.

தமிழகத்திலும் தமிழகத்துக்கு வெளியிலும் இருந்துகொண்டு தமிழக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களும் பிற விசைகளும் ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டுள்ளனர். பண்டைக் கால மரக்கலங்கள் கடலில் செல்லும்போது கூனிகள் எனும் இறால் வகையைச் சேர்ந்த மிகச் சிறிய மீன்கள் மிகப் பெருங்கூட்டமாக வந்து மரக்கலத்தையே மறித்துக் கொள்ளுமாம். அப்போது மாலுமிகள் இதற்கென்றே ஆயத்தமாக வைத்திருக்கும் உமியை அல்லது தவிட்டை அள்ளிக் கடலில் வீசுவார்களாம். உடனே அந்தக் கூட்டம் கலைந்து சிதறிக் கப்பலுக்கு வழி விட்டுவிடுமாம். அது போல் நம்மை ஆளுவோரும் தமிழக மக்களின் கவனத்தைக் சிதறடிக்க வேண்டிய வேளைகளில் ஒதுக்கீட்டில், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டில் ஒரு சிறு கோளாறைச் செய்துவிட்டால் போதும் கொஞ்ச நாளைக்குக் கவலையற்றுத் தம் வேட்டையையும் தேட்டையையும் தொடரலாம் என்பது அவர்களுக்குத் திராவிட இயக்கத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பு.

உண்மையில் நின்று தெளிந்து பார்த்தால் ஒதுக்கீடு என்பது இன்னும் தேவை தான். யாருக்கு? இன்று கல்வியையோ அரசு அதிகாரத்தையோ கண்டறியாத மலைவாழ் மக்கள், நடோடிப் பிழைப்பு நடத்துவோர், துப்புரவுத் தொழிலாளர் ஆகியோருக்குக் கட்டாயம் அது தேவை. அவர்களை வரலாற்று வகைப்பட்ட காரணங்களால் மனிதன் என்ற உயிர் வகையிலிருந்து தாழ்ந்ததாகிய ஒர் உளவியல், பண்பாட்டியல் நிலைகளிலிருந்து விடுவித்து தம் குமுகச் சிறைக்கூடங்களிலிருந்து வெளிப்படுத்தி திறந்த வெளிச்சத்தையும் காற்றையும் கண்டு பிறருக்கு இணையான குடிமக்களாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தேவையும் இக்குமுகத்துக்கு உண்டு. அரசு வேலைவாய்ப்புகள் அருகி வரும் இந்நிலையில் இனி வரும் வேலைவாய்ப்புகள் அனைத்தையுமே அவர்களுக்கு ஒதுக்கிவிடலாம். அதற்கு முழுக் குமுகத்திலுமிருந்து உருவாகும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய ஒரு மாபெரும் இயக்கம் தேவை. அதைச் செய்யும் அடிப்படை ஆற்றல்களுடன் தோன்றிய திராவிட இயக்கம் உண்மையில் மாண்டுவிட்டது பெருந்துயரம். உண்மையான ஓரியக்கத்தை மீண்டும் தொடங்குவது உண்மையான தமிழ்நில உணர்வுடையோரின் கடமையாகும்.

(தொடரும்)