23.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 39


29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 8

.:  அன்றைய சோவியத்துக்கும் இன்றைய தமிழகச் சூழலுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டுதான். அதாவது லெனின் முன்வைத்ததை விடக் கொடுமையான ஒடுக்குமுறையை நம் உழவர்கள் எதிர்கொள்கின்றனர். லெனின் அரசிடம் ஒப்படைத்து எஞ்சியதைத் தங்கள் விருப்பம் போல் விற்றுக்கொள்ளலாம் என்று உழவர்களிடம் பேசி அவர்களின் இசைவுடன் அத் திட்டத்தைப் புகுத்தினார். ஆனால் இந்தியாவில் கொடுங்கோலன் லால்பகதூர் சாத்திரி “செய் சவான்! செய் கிசான்!” என்று வஞ்சகம் பேசிக்கொண்டே வயலில் அறுத்த நெல்லை வீட்டுக்குக் கொண்டுசெல்லக் கூட ஊர்க் கணக்குப்பிள்ளையின் வீட்டுக்கும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் அலைய விட்டான் அவர்களை. உழவன் வீட்டிலும் நெல் - அரிசி வாணிக உரிமம் பெறாதவரிடமும் நெல்லை அரைத்துத் தரும் கூலி அரிசி ஆலைகளிலும் நெல்லை கையிருப்பு வைப்பதற்கும் எல்லை நிறுவப்பட்டது. கூலி அரிசி ஆலைகளைக் கண்காணிப்பது என்ற பெயரில் அங்குள்ள மின்மானிகளின் அளவீடுகள் கண்காணிக்கப்பட்டன. வீட்டிலிருக்கும் நெல்லை அவ்வப்போது கைச்செலவுக்காக விற்கும் இல்லத்தரசிகளிடம் வாங்கி அதை அரிசியாக்கி விற்கும் வறுமைப்பட்ட பெண்களுக்கு விற்பதற்காக மிதிவண்டிகளில் அலையும் அன்றாடங்காய்ச்சிகளைத் திருடர்களை விரட்டுவது போல் வழங்கல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஒநாய்கள் சந்து பொந்து காடு மேடு என்று ஓட ஓடத் துரத்தினார்கள். இன்றும் வழங்கல் துறையில் உரிமம் பெற்ற வாணிகர்கள் தவிர்த்தோர் தவசங்களைச் சாலைகளில் கொண்டுசென்றால் பறிமுதல் செய்ய இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

செ.:“வயலை நம்பி வாழ்ந்திருந்தால் ஒரு பயலை நம்பத் தேவையில்லை” என்ற சொலவடை நம் நாட்டில் இருக்கிறதே?

.:  அதெல்லாம் 1960களுக்கு முன். 10,000, 15,000 வேலிகள் என்று நிலம் வைத்திருந்த மிராசுதார்கள் எனப்படும் பெருநிலக்கிழார்களாகிய பெரும்புள்ளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட தங்கள் நிலங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். அந் நாள் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வருவாய் ஊரிலும் வருவாய்த்துறையின் கணக்குப்பிள்ளை(கர்ணம்) நீங்கலாக அங்கு நிலம் உடைய பெருநிலக்கிழார் ஒவ்வொருவருக்கும் ஒருவர்,
அங்கு சொத்துகளைக் கொண்ட ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என கணக்குப்பிள்ளைகள் உண்டு. அவர்கள் மூலம் கணக்கில் வரும் நெல்லுக்குரிய பணம் மட்டும் பண்ணையாருக்குச் சென்று சேரும். அவர் அதை எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று இசைக் காலம்(சங்கீத சீசன்) போன்ற நிகழ்ச்சிகளிலும் பிற வழிகளிலும் பணத்தைச் செலவழித்து உவப்பார். தேவதாசி முறை ஒழியும் முன் பண்ணையார்களின் வளமனைகளிலேயே களியாட்டங்கள் நடைபெற்றன. பாட்டையும் கூத்தையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குத்தகை உழவர்களின் வியர்வையைப் பாய்ச்சி வளர்த்தார்கள் இவர்கள். இந்தக் களியாட்டத்துக்குத் தோராயமான ஒரு பதத்தை சிந்துபைரவி திரைப்படத்தில் காணலாம்.

     ஆனால் இந்த பெருநிலக்கிழார்கள் அல்லாத ஒரு நிலக்கிழார் வகுப்பு இருந்தது. அது 100 ஏக்கருக்கு உள்பட்ட நிலவுடைமை கொண்டவர்ளாலானது. அவர்களில் பெரும்பாலோர் குத்தகைப் பயிருக்குப் பகரம் நேரடிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். பயிரிடும் காலத்தில் அரிசி ஆலைகளிடம் முன்பணம் பெற்றுக்கொள்வர். அறுவடை முடிந்ததும் வாங்கிய முன்பணத்துக்கு இணையாக அப்போது நடப்பிலிருக்கும், பெரும்பாலும் குறைந்த விலைக்கு நெல்லை அளந்துவிட்டு எஞ்சிய நெல்லை அடுத்த அறுவடைக்கு முன் விலை உச்சியில் இருக்கும் போது விற்று ஆதாயம் பார்த்தனர். இவர்களின் பணம் சென்னையில் முதலீடாகப் பாயத்தொடங்கிய போதுதான் ஒவ்வொன்றான கணைகளைப் பாய்ச்சினார்கள் ஆட்சியாளர்களாகிய பனியா – பார்சிகளின் கூலிப்படையினர்.

செ.:லால்பகதூர் சாத்திரி செய்தவை பற்றிச் சொன்னீர்கள். வேறென்ன தாக்குதல்கள் வேளாண்மை மீது நிகழ்த்தப்பட்டன?

.:  நடந்தவற்றை அசைபோடும் போது நமக்குப் பெரும் ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சோவியத்தின் தலைவர் தாலின் காலம் வரை போதுமை நாடுகள் எனப்படுபவை தவிர்த்த பிற நாடுகளில் ஆயுதப் புரட்சி செய்து பொதுமை அரசுகளை அமைப்பதே அந்தந்த நாட்டுப் பொதுமைக் கட்சிகளுக்கு செயல்திட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1919 புரட்சி நடந்ததைத் தொடர்ந்த நெருக்கடியான சூழலில் குழவிப் பருவத்திலிருந்த சோவியத்துக்கு எதிரிகளைக் குறைத்துக்கொள்வதை முதல் நோக்கமாகக் கொண்டிருந்த லெனினை அணுகினார் இந்தியப் பொதுமைக் கட்சியின் தலைவரான எம்.என்.ராய் என்பவர். மூன்றாம் பொதுமை அனைத்துலகியத்தின்(Communist International) தலைவராகவும் இருந்த லெனினிடம் இந்தியப் பொதுமைக் கட்சியை அனைத்துலகியத்தின் உறுப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டினார். ஆனால் லெனின் பிரிட்டன் பொதுமைக் கட்சியின் உறுப்பாகச் செயல்படுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அதனால் ஆயுதம் தாங்கிய புரட்சி பற்றிப் பேசிய இந்தியப் பொதுமையாளர்கள் உள்நாட்டுக் குடிமக்களைத்தான் கொன்றார்களேயன்றி ஆங்கிலேயருக்கு எதிராக காந்தி கூறியதற்கு அப்பால் செல்லவே இல்லை. ஆங்கிலப் படைத்தலைவனைக் கொன்ற பகத்சிங் கூட அதன் பிறகு சிறைச்சாலையில் இருக்கும் போதுதான் பொதுமை இலக்கியங்களைப் படித்தார் என்பது வரலாறு.   

      இந்தப் பின்னணியில் தாலின் காலத்துக்குப் பின் சோவியத் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆயுதப் புரட்சிக்குப் பகரம் பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு உட்பட்ட செயல்திட்டங்களைக் கைக்கொண்டு பொதுமை ஆட்சியை அமைக்க அறிவுறுத்தினர். அதற்கான செயல்திட்டம் 1844ஆம் ஆண்டில் காரல் மார்க்சும் பிரடரிக் ஏங்கெல்சும் உருவாக்கிய புகழ் பெற்ற பொதுமைக் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ள முற்றிய முதலாளிய நாடுகளுக்கான செயல்திட்டமாகும். அதாவது, முதலாளிகளின் பணத்தை வருமான வரி மூலம் தண்டி ஏழைகளுக்கான நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வது, நிலவுச்ச வரம்பு விதிப்பது போன்றவையாகும் அவை. இதே செயல்திட்டத்தைத்தான் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட நிகர்மை அனைத்துலகியமும்(Socialist International) கொண்டுள்ளது. அதன் வழிகாட்டலில் செயல்பட்ட நிகர்மைக் கட்சிப் பிரிவுகள் 1970களின் முடிவு வரை இந்தியாவில் இயங்கின. பொதுமைக் கட்சியும் நிகர்மைக் கட்சியும் முன்வைத்த வேண்டுகையாலேயே இந்தியாவில் நில உச்ச வரம்பு, குத்தகை ஒழிப்பு முதலியவை நடைமுறைக்கு வந்தன என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். அதாவது இந்த இரண்டு “நிலச் சீர்திருத்தங்”களிலும் அமெரிக்காவுக்குக் கணிசமான பங்கு இருக்க வாய்ப்புண்டு.

செ.:நாம் பேசிக்கொண்டிருப்பவற்றோடு நீங்கள் இப்போது கூறும் செய்திகள் எங்கு பொருந்துகின்றன?

.:  இங்கேதான் சிக்கலின் அடிப்படையே இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் நிலைத்து நிற்க வேண்டுமாயின் அது தன் நடைமுறைத் திறனில் செயல்படும் போது முனைவரின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னும் ஒரு குறிப்பிட்ட விகிதம் மிகுதி வேண்டும்.

செ.:ஆதாயம் எதற்கு? தன்னிறைவு போதாதா?

.:  எந்த ஒரு தொழில் கட்டமைப்பிலும் எதிர்பார்க்கத்தக்க பழுதுகளை, எதிர்பாராத இடையூறுகளை எதிர்கொள்ள ஒரு மிகுதிப்பாட்டுத் திறனும்(Spare capacity) பணக் கையிருப்பு(Reserve)ம் வேண்டும் இந்த பணக்கையிருப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்தித்தான் பங்கு முதலீட்டார்களை பெரும் நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன என்று நாம் முன்பு குறிப்பிட்டது நினைவிருக்கும். முன்பு மக்களுடைமை(தனியார்) பேருந்து நிறுவனங்களில் மிகுதிப் பேருந்து(Spare Bus) என்று எழுதப்பட்ட வண்டிகளைப் பார்த்திருக்கலாம் மூத்த குடிமக்கள். தட உரிமை பெற்ற மொத்த பேருந்துகளின் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இத்தகைய மிகுதிப் பேருந்துகளை ஒவ்வொரு பேருந்து நிறுவனமும் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கண்காணித்தது. இப்போது அரசின் பொறுப்பிலிருக்கும் பேருந்துக் கழகங்கள் அத்தகைய மிகுதிப் பேருந்துகளைப் பராமரிப்பதே இல்லை. எடுத்துக்காட்டுக்கு, மார்த்தாண்டம் – திருப்பூர் என்றும் இடையிலுள்ள பல ஊர்களின் பெயர்கள் பெரிய வண்ண எழுத்துகளில் பெருஞ்செலவில் நான்கு புறங்களிலும் எழுதப்பட்ட பேருந்துகள் நாகர்கோவிலிருந்து பள்ளம் என்ற ஒரு சிற்றூர் பெயர் எழுதப்பட்ட, நெருங்கிச் சென்று பார்த்தால்தான் தெரியும் ஒரு சிறிய பலகையோடு செல்வதையும் பெரிய எழுத்துகளைப் பார்த்து ஏமாறுவோர் பேருந்தைத் தவறவிட்டுத் தவிப்பதையும் காணலாம். இது போன்ற காரணத்துக்காகத்தான் மிகுதி தேவையாகிறது. இனி, வெளியிலிருந்து தொழிலாளர் அமர்த்திச் செயற்படுவதாயின் அவர்களுக்கு தகுதியான கூலியும் பிற சலுகைகளும் வழங்க வேண்டுமானாலும் அதற்கேற்ற விளைப்பு(உற்பத்தி)க் கொள்திறனுடன் அது இயங்க வேண்டும். அதற்கேற்ப பணக்கையிருப்பும் வேண்டும்.

செ.:இதற்கும் நிலச் சீர்திருத்தங்களுக்கும் என்ன உறவு?

.:  நிலச் சீர்திருத்தம் முறைப்படி முதன்முதலில் இடம்பெற்றது பிரான்சில்தான். பெருநிலக்கிழார்களிடம் குத்தகை உழவனாக, நிலத்தை விட்டு வெளியேற உரிமையில்லாத அடிமையாகக் கிடந்த உழவர்களின் புரட்சியால்தான் அங்கு குத்தகை உழவனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட்டது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்பதன் உண்மைப் பொருள் அதுதான். ஆனால் இப்படிக் கிடைத்த நிலத்தை மூலதனமற்ற அவன் பயிர்ச் செய்கைக்குப் பெற்ற கடன்களால் விற்றுவிட்டு புதிதாக உருவாகிக்கொண்டிருந்த தொழில் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றான். இவ்வாறுதான் பொருளியல் வலிமையே இல்லாத குத்தகை உழவர்களின் கைகளில் சிறு சிறு கைப்பற்றுகளாகச்  சிதறி, அதனால் பிற்பட்ட, காலங்கடந்த வேளாண் தொழில்நுட்பங்களால் தேங்கிக் கிடந்த நிலையிலிருந்து பெரும்பண்ணை வேளாண்மை உருவாகி வேளாண் தொழில்நுட்பத்தில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. மார்க்சும் ஏங்கெல்சும் முன்வைத்தது போன்ற நில உச்ச வரம்புத் திட்டம் அதற்கு முன்னரோ பின்னரோ முதலாளிய நாடுகளில் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை.

செ.:அப்படியானால் உழவன், அதாவது குத்தகை உழவன் என்றும் நிலவுடைமையாளனாகக் கூடாது என்கிறீர்களா?

.:  சிறு உழவனின் இடர்ப்பாடுகளை, இழிவுகளை அறியாததால் இக் குற்றச்சாட்டை என் மேல் சுமத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  

      உழவர்களுக்கு அரசு கடன் கொடுக்கிறது என நம்பி ஊராட்சி ஒன்றியத்துக்குப் போனால் உரத்தையும் பூச்சி மருந்தையும் கடன் கணக்கில் கொடுப்பார்கள். அடியுரம் தேவைப்படும் போது மேலுரத்தையும் மேலுரம் தேவைப்படும் போது அடியுரத்தையும் கொடுப்பார்கள். அதை வாங்கி உரக்கடையில் அவர்கள் சொல்லும் விலைக்கு விற்று அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்து தேவைப்படும் உரத்தை வாங்கவும் வேண்டும்.

      நகை நட்டுகளை அடமானம் வைப்பதற்கு முன்பு ஊர் வட்டிக்கடைகள் இருந்தன. மாபெரும் புரட்சி என்று நம் பொதுமைக் கட்சியினர் போற்றிய இந்திரா காந்தியின் கடன் ஒழிப்புச் சட்டத்தால் அவை அனைத்தும் அகன்றன. அவர்களிடம் தண்டல்கார அடியாள்களாகச் செயற்பட்டவர்கள் அந்த இடத்தில் கந்துவட்டிக்காரர்களாக வந்து நிலங்களைப் பறிக்கின்றனர். ஆளையும் அவர்களது வருவாய் அல்லது சொத்தையும் நம்பி கடன் கொடுத்த வாக்குத்தத்தப் பத்திர(பிராமிசரி) முறையும் அச் சட்டத்தால் காணாமல் போய்விட்டது.

      அரசும் கூட்டுறவு வங்கிகள் மூலமும் அரசுடைமை வங்கிகள் மூலமும் குறைந்த வட்டியில் நகைகளின் மீது கடன் கொடுக்கின்றன. ஆனால் ஓராண்டுக்குள் திருப்பாவிட்டால் வட்டிச் சலுகை கிடைக்காது. அதனால் உழவன் நெல்லை உரிமம் பெற்ற வாணிகன் என்ன விலை தந்தாலும் பதற்றத்துடன் விற்றுவிட கட்டாயப்படுத்தப்படுகிறான். மொத்தத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று கந்துவட்டிக்கு விடுவோர்க்கே இக் கடன் பயன்படுகிறது.

நிலவுடைமையாளனான முன்னாள் குத்தகை உழவனுக்கு முன்னாளில் நிலக்கிழாரால் பட்ட இடர்ப்பாடுகள் நீங்கினவே அன்றி அவனது வாழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. முன் போலவே அவன் தன் வயலில் உழைக்க வேண்டியுள்ளது. புதிய வரவாகிய உழுவுந்து, அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. பயிர்ச் செலவுக்கும் விதை, உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருள்களுக்கும் பட்ட கடன்களுக்கான வட்டிக்கும் செலுத்தியது போக எதுவும் எஞ்சாது என்பதுதான் நிலைமை. வெளியே கூலி வேலை செய்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதுதான் அவனது உண்மை நிலை. முன்னாள் குத்தகை உழவன் மட்டுமல்ல முன்னாள் நிலக்கிழார் கூட தங்கள் வாழ்க்கையின் உண்மையான தேவைகளை நிறைவேற்ற ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வருகிறது என்ற பெருமைக்காகவே இன்று தமிழகத்தில் வேளாண்மையில் ஈடுபடும் நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.

மனம் விட்டுப் பேசுவதானால் காலங்காலமாகப் பண்ணையார்கள் முன் துண்டைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு குனிந்து நின்று பழகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஏழை முன்னாள் குத்தகை உழவர்களுக்கு இந்த இழிவுகள் உறைக்கவில்லை என்று தோன்றுகிறது.

     ஆட்சியாளர் வல்லரசியர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்து புகுத்திய விதைகளாலும் உரங்களாலும் பயிர்கள் பலன் தராது போக பட்ட கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட உழவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் பல இலக்கங்களைத் தாண்டுகிறது. தமிழகத்தில் உழவர்களின் உடைமைகள் சிறிதாக இருப்பதாலும் முற்றிலும் வேளாண்மையை நம்பியோர் அரிது என்பதாலும் அந்த அவலங்கள் நிகழவில்லை.

செ.:இதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

.:  இன்றைய குத்தகை ஒழிப்புச் சட்டம் உண்மையில் குத்தகை நிலைப்புச் சட்டமாகும். சட்டத்துக்கு முன்பு நிலவுடைமையாளர் நினைத்தால் குத்தகையாளரை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். அது போல் மழை பொய்த்தல், நோய்த்தாக்கு போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்தாலும் பயிர் கருகினாலும் கூட நிறுவப்பட்ட வாரத்தை குத்தகையாளர் அளந்துவிட வேண்டும். புதிய சட்டத்தின் படி குத்தகையாளர் வாரத்தை ஒழுங்காகச் செலுத்திவந்தால் அவரை வயலிலிருந்து அகற்ற முடியாது. நிலத்தை குத்தகையாளரிடமிருந்து மீட்கவோ விற்கவோ உடைமையாளர் விரும்பினால் நிலத்தின் பரப்பில் பாதியை அல்லது அதற்குரிய விலையைக் குத்தகையாளருக்குக் கொடுக்க வேண்டும். குத்தகையாளர் விரும்பினால் பாதி நிலத்துக்குரிய விலையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மொத்த நிலத்தையும் அவரிடம் விட்டுவிட வேண்டும். இதனால் நிலத்தை விற்க வேண்டிய நெருக்கடியாலன்றி வேறெந்தச் சூழலிலும் குத்தகையில் மாற்றம் ஏற்படாது என்பதனால்தான் இச்சட்டத்தை குத்தகை நிலைப்புச் சட்டம் என்றேன்.

செ.:அப்படியென்றால் வேறு எத்தகைய குத்தகை ஒழிப்புச் சட்டம் வேண்டுமென்கிறீர்கள்?

.: கோயில் நிலங்கள், அறக்கட்டளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களிலும் குத்தகை முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நில உச்ச வரம்பு விதிவிலக்கின்றி 200 எக்டேர் ஆக வேண்டும். விடுதலை பெறும் குத்தகை நிலத்தின் மதிப்பில் பாதியை நிலத்தைப் பெறும் உடைமையாளர் அல்லது குத்தகையாளர் மற்றவர்க்குச் செலுத்த வசதியாக ஒரு பணத்தொகுப்பை அரசு உருவாக்கி நிலத்தைப் பெற்றவர்க்கு எளிய தவணைக் கடனாக வழங்க வேண்டும்.

இத்தகைய ஒரு திட்டத்தை ம.கோ.இரா. முதலமைச்சராக இருந்த போது கோயில் நிலங்களைப் பொறுத்து முன்வைத்ததாக நினைவு. அது என்னவாயிற்று என்று தெரியவில்லை.

செ.:குத்தகை முறையும் ஒழிந்து நிலவுச்சவரம்பையும் உயர்த்திவிட்டால் அதனால் என்ன பயன் கிடைக்கும் என்று கூறுகிறீர்கள்?

.:  அத்துடன் வருமானவரியாயும் ஒழித்துவிட்டால் வேளாண்மையை, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கத்தக்க ஆதாயம் தரும் ஒரு தொழிலாக நடத்தத் தேவையான பரப்புள்ள வேளாண் பண்ணைகளை உருவாக்கலாம். அவற்றுள் மாட்டுப்பண்ணையும் மேடான பகுதியில் குறிப்பிட்ட பரப்பு காடும் வளர்த்து தாழ்வான பகுதியில் ஒரு சிறு குளமும் அமைத்தால் பயிர்களுக்குத் தேவையான உரம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், எரிவளிகள் மூலம் மின்னாற்றல் என்று ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து எந்த இடுபொருளும் இன்றி ஆதாயம் மட்டும் பெறும் நிலையை எட்டலாம். காடுகளாலும் கட்டற்ற கால்நடை மேய்ச்சல் ஒழிக்கப்படுவதால் நிலத்தில் வளரும் செடிகொடிகளாலும் பயிர்களாலும் மண்ணரிப்பு கட்டுப்பட்டு குளத்தின் துணையுடன் நிலத்தடி நீர் வளம் பெருகும். பசுமை போர்த்திய நிலத்தில் வெய்யில் நேரடியாகத் தாக்காது, நிலைத்திணைகள்(தாவரங்கள்) நீராவியை வெளியிட்டு காற்று வெப்பத்தை மட்டுப்படுத்தும். அதனால் வானில் திரளும் மேகம் எளிதில் துளிநிலையை அடைந்து மழைப்பொழிவு சீர்மை எய்தும்.

செ.:அப்படியானால் வழக்கம் போல் பனியா – பார்சி கூட்டம் தமிழக நிலங்கள் அனைத்தையும் வளைத்துவிடுவார்களே!

.:  இப்போது மட்டும் என்னவாம்? ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்பே பார்சியான டாட்டா இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கென்று 20,000(இருபதினாயிரம்) ஏக்கர்கள் வாங்கிப் போட்டிருக்கிறானே! அங்கு விளையும் உப்பையும் இறக்குமதியாகும் அயோடினையும் கலந்துதான் உடலுக்குத் தீங்கு தரும் என்று அறிவியலாரில் ஒரு பகுதியினர் கூறும் அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி முன்பு தெருவில் அரிசி விற்ற அன்றாடங்காய்ச்சிகளைத் துரத்தியது போல் தெருவில் உப்பு விற்றவர்களையும் ஓட ஓட விரட்டினார்களே மறந்துவிட்டதா? நம் ஆட்சியாளர்கள் யாருக்காக ஆள்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

      உண்மை என்னவென்றால் நெல், சோளம் போன்ற ஒற்றைப் பயிர் நிலங்களுக்குத்தான் உச்சவரம்பு, கலப்புப் பண்ணைகளுக்குப் பொருந்தாது. இதைப் பற்றி நிலவுடைமையாளருக்குக்  கூட எடுத்துச்சொல்ல யாருமில்லை. எனவே வருமான வரியையும் குத்தகை முறையையும் ஒழித்தாலே போதும்.

      வெளியிலுள்ளவர்கள் நம் நிலங்களை வாங்கிவிடுவார்களே என்ற உங்கள் கேள்வி இன்றைய நிலைமைக்குப் பொருத்தமானதுதான். இங்குதான் தமிழ் – தமிழகத் தேசியப் போராட்டத்தின் உயிர் மூச்சே அடங்கியுள்ளது. 1956 நவம்பர் 1ஆம் நாள் வேறெங்கும் வேரின்றி இங்கு வாழ்ந்தவர்கள், அவர்கள் வழிவந்தவர்கள் தவிர யாருக்கும் இங்கு நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை கூடாது என்பதுதான் நம் அடிப்படை அணுகல்.

செ.:அப்படியானால் தமிழ்நாட்டில் பண்ணை நடத்துவதற்குத் தகுதியான நிலங்கள் அனைத்தையும் பண்ணைகளாக மாற்றுவதற்குத் தேவையான மூலதனத்தைத் தமிழக மக்களிடம் திரட்ட முடியுமா?

.:  உறுதியாக முடியும். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளில் ஈடுபட்டிருப்போரும் சட்டத்துக்குட்பட்டு ஈட்டி வருமான வரிக்கு அஞ்சி பதுங்கியுள்ள பணம் கணக்கற்றது. அதில் ஒரு கணிசமான நூற்றுமேனி வீட்டுமனைகளில் புதைந்து கிடைக்கிறது. எஞ்சியவை ஒன்றுக்குள் ஒன்றான கள்ளக் கணக்குகளில் புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கள்ளச் சாராயம் காய்ச்சியோர் கைகளில் திரண்டுள்ள கணக்கற்ற பணமும் கந்துவட்டியில் திரண்டுள்ள மாபெரும் தொகைகளும் போக்கிடமற்றுக் கிடக்கின்றன.

செ.:கள்ளச்சாராயம் போன்ற குற்றச் செயல்களில் ஈட்டப்பட்ட பணத்தை சட்டப் பாதுகாப்புள்ள தொழிலில் முதலிட விடுவது எப்படி ஞாயமாகும்?

.:  நீங்கள் கேட்ட கேள்வி மிக ஞாயமானதுதான். ஆனால் இந்தப் பணத்தை அவர்களிடமிருந்து பறிக்க நமக்கு எந்த வழியுமில்லையே. அதனால் அது தறிகெட்டு முழுமையான குமுகப் பகை நடவடிக்கைகளில்தான் பயன்படுகிறது. ஒரு முறை இந்தப் பணத்தை இம் மண்ணை வளப்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைச் சரியான ஓர் உத்தியாக நான் கருதுகிறேன். நம் மக்களிடமிருந்து தவறான வழியில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை குமுக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் அடிப்படையான ஒரு திசையில் முதலிடச் செய்வது தவறல்ல. அயல் நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் அரசியல்வாணரும் அதிகாரிகளும் அடங்கிய ஆட்சியாளரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் திருட்டுத்தனமாக முதலிட்டு பெரும் ஆதாயத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதை மிகப் பெரும் பொருளியல் புரட்சி என்று புளுகும் சூழலில் நம் மக்களைச் சுரண்டி உள்ளுரில் வைத்திருப்பவர்களிடமிருக்கும் பணத்தை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மகிழுந்து, சரக்கிகள் என்று அனைத்துவகை தானோடிகளின்(Automobiles) விற்பனையிலும் பழையவற்றின்  மறுவிற்பனையிலும் ஆங்காங்குள்ள உள்ளூர் முகவர்கள் மூலமாக வட்டித்தொழில் செய்து இந்திய மக்களைப் பனியாக்கள் பிழிவது அந்தந்தத் துறை சார்ந்த அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள ஏறக்குறைய அனைத்துச் சிறு - குறுந்தொழில்களும் அவர்களின் முதலீட்டு, மூலப்பொருள், விற்பனைச் சந்தைக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கோயில்பட்டி, சிவகாசி போன்ற ஊர்களில் பனியாக்கள் வந்தால் தங்குவதற்கென்றே தனி வசதிகளுடன் தங்ககங்கள்(Lodges) ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுவிட்டன. எனவே இவர்களுடைய படையெடுப்பை எதிர்கொள்வதற்கு உள்ளுரில் பயனின்றித் தேங்கி நிற்கும் பணத்தை முதலில் வேளாண்மையில், குறிப்பாக பெரும்பண்ணை வேளாண்மையில் இறக்கிவிடுவதுதான் ஒரே வழி. இதன் மூலம்தான் நம் மண்வளத்தையும் மழைவளத்தையும் காக்கவும் மீட்கவும் முடியும்.

செ.:ஏற்கனவே “விலையில்லா” அரிசி மூலமும் விலைக் கட்டுப்பாடு மூலமும் நெல் வேளாண்மையையே உழவர்கள் கைவிடும் சூழலில் நீங்கள் குறிப்பிடும் கலப்புப் பண்ணைகளை அமைப்பதற்கு நீங்கள் சுட்டிக்காட்டும் பணம் வைத்திருப்பவர்கள் எப்படி மூன்வருவார்கள்?

.:  இதுவும் ஓர் அடிப்படைக் கேள்விதான். வேளாண்மையின் அடிப்படைச் சிக்கலே அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கொடுப்பதில்லை என்பதுதான். மரபு வேளாண்மையில் பயிர்ச் செய்கை காலத்தில் நிலத்தை உழது பணபடுத்தவும் நாற்று நடவும் செறிவான தொழிலாளர் தேவை உண்டு. அது போல் அறுவடைக் காலத்திலும் ஆட்கள் தேவை. இடையில் களை எடுப்பதற்கு பெண்களுக்குக் கொஞ்சம் வேலை கிடைக்கும். எஞ்சிய நாட்களில் வேறு வேலை கிடைத்தால் உண்டு. இல்லையென்றால் அரைப் பட்டினிதான். இந்த மக்களின் அவலங்களைத் தீர்க்க ஆண்டு முழுவதும் வேலை நடக்கத்தக்க பெரும் வேளாண் பண்ணைகளை உருவாக்குவதற்கான போராட்டங்களை நடத்தக் கடமைப்பட்ட பொதுமைக் கட்சியினர் அந்தத் தொழிலாளர்களைத் திரட்டி இந்தச் சிற்றுடைமையாளர்கள், குத்தகை உழவர்களுக்கு எதிராக கூலி உயர்வுப் போராட்டங்களை நடத்தி தமிழக வேளாண்மையைச் சாவுப் படுக்கையில் கிடத்திவிட்டார்கள்.

செ.:நீங்கள் மிகத் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். பாட்டாளிகளுக்காகப் போராடுவதற்காகத்தான் பொதுமைக் கட்சியை மார்கசும் ஏங்கெல்சும் ஆன மாமனிதர்கள் உருவாக்கினார்களே அன்றி தமிழகத் தொழிலாளியைச் சுரண்டும் முதலாளிகளுக்குப் போராடுவதற்காக அல்ல.

.:  மார்க்சும் ஏங்கெல்சும் கூறியவை நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒரே கூரையின் கீழ் வேலைவாங்கும் மாபெரும் தொழிலகத் தொழிலாளர்களைக் குறித்து. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்நாளுக்கு முன்னால் நடந்து முடிந்த, குத்தகை உழவர்கள் குத்தகை முறை ஒழிப்பினால் சிற்றுடைமையாளராகி, தாக்குப்பிடிக்க முடியாமல் புதிய பணக்காரர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த புதிய பெருந்தொழிலகங்களில் வேலை தேடிச் சென்றதைக் குறிப்பிட்டு அவை அனைத்தும் பழைய நிலக்கிழமைக் குமுகத்தை ஒழித்து முழு உரிமை கொண்ட, நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் வேலை செய்து எஞ்சிய நேரத்தைத் தன் விருப்பம் போலச் செலவிட முடிந்த பாட்டாளியர்களைக் கொண்ட புதிய குமுகத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அந்தக் குத்தகை உழவர்கள் மாபெரும் அல்லல்களுக்கு ஆளானாலும் மனித உறவுகளைப் பொறுத்த வரை தாழ்ந்த நிலக்கிழமை நிலையிலிருந்து மேம்பட்ட முதலாளியக் குமுகம் அமைந்ததை அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் பொதுமைக் கட்சி அறிக்கையில் புகழ்ந்திருக்கிறார்கள். அந்த முதலாளியக் கட்டத்திலிருந்து அனைத்தும் பாட்டாளிகளின் கட்டுப்பாட்டினுள் வரும் பொதுமைக் குமுகத்தை அமைப்பது குறித்துத்தான் அவர்கள் பேசினார்கள். அத்துடன் முதலாளியக் குமுகத்துக்கு முந்திய குமுகங்கள் அததற்குரிய வரிசையில்தான் முன்னேற முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
      … And even when a society has got upon the right track for the discovery of the natural laws of motion – and it is the ultimate aim of this work, to lay bare the economic law of motion of modern society - it can neither clear by bold leaps, nor remove by legal enactments, the obstacles offered by the successive phases of its normal development. But it can shorten and lessen its birth pangs.- Karl Mark, Capital, Vol.Ⅰ P.20, Preface to the first German Edition, Progress Publishers, Moscow.

      இயக்கத்தின் இயற்கை விதிகளைக் கண்டுபிடிப்பதற்கான சரியான தடத்தில் வந்தடைந்தாலும் ஒரு குமுகம் - இவ்வாக்கத்தின் அறுதி நோக்கமே இற்றைக் குமுகத்தின் பொருளியல் இயங்குநிலையின் விதிகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதுதான் - தன் இயல்பான வளர்ச்சியின் அடுத்தடுத்து வரும் கட்டங்கள் தரும் தடங்கல்களை துணிச்சலான தாவுதல்களால் அப்புறப்படுத்தவோ சட்ட நிறைவேற்றங்களால் அகற்றவோ முடியாது. ஆனால், பேற்றுக்காலத் துடிப்புகளைக் குறைத்து காலநீட்சியைக் குறுக்க முடியும். - காரல் மார்க்சு, மூலதனம், மடலம் 1, பக்.20, செருமானியப் பதிப்பின் முன்னுரை, முன்னேறப் பதிப்பகம் மாசுக்கோ (ஆங்கிலப் பதிப்பு)

… The country that is more developed industrially only shows, to the less developed, the image of its own future.- Ⅰbid p.19

      தொழில்துறையில் கூடுதலாக முன்னேறிய நாடு குறைவாக முன்னேறிய நாட்டுக்கு அதன் சொந்த எதிர்கால வடிவத்தைத்தான் காட்டுகிறது. - அதேநூல், பக்.19.

      தமிழகத்தைப் பொறுத்தவரை நிக்கிழமைக் குமுகத்தின் மீ இழிந்த வடிவமாகிய சாதியத்தை அழிக்க முதலாளியத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது.

செ.:“பேற்றுக்காலத் துடிப்புகள்” என்று மார்க்சு எதைக் கூறுகிறார்?

.:  ஒர் குத்தகை உழவனுக்கு அவன் பயிரிடும் நிலத்தில் பாதியோ அல்லது நான் முன்வைத்திருப்பது போல் அரசு வைக்கும் பணத்தொகுப்பிலிருந்து கடன் பெற்று முழுவதுமோ கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந் நிலத்தில் பயிர் செய்து வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் நிலத்தை விற்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம். அவனது அகவை(வயது), கல்வி, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் அவனுக்கு உரிய பயிற்சியளித்து பண்ணைகளிலோ வேறு துறைகளிலோ பணியாற்ற வைக்க வேண்டும். அகவை முதிர்ச்சியினால் இயலாதோர்க்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவற்றை அரசு செய்ய வேண்டும். தொடக்க காலத்தில் இத்தகைய வாய்ப்புகளோ வசதிகளோ இல்லாமல் அடித்தட்டு மக்கள் பட்ட துயர்களையே பேற்றுக்காலத் துடிப்புகள் என்று மார்க்சு கூறுகிறார். தங்கள் காலத்தில் நாம் மேலே குறிப்பிட்ட துயர் ஆற்றும் நடைமுறைகள் உருவாகிக்கொண்டிருந்ததை மனதில் கொண்டுதான் அத் துடிப்புகளையும் அவற்றின் காலநீட்சியையும் குறைக்க முடியும் என்கிறார்.  

செ.:பண்ணைகளின் உருவாக்கம் எவ்வாறு சாதிகளை அழிக்கும் என்று நம்புகிறீர்கள்?

.:  உங்களுக்கு நாட்டுப்புறத்து நடவடிக்கைகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வெவ்வேறு சாதியினருக்குத் தனித்தனிக் குடியிருப்புகள் உண்டு. அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றி ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவர் வாழ முடியாது. ஓர் ஊரைச் சேர்ந்த உயர்வு – தாழ்வு கற்பிக்கப்பட்ட இரண்டு சாதிகளைச் சேர்ந்த இருவர் நகர் ஒன்றில் பணியாற்றும் போது நண்பர்களாக ஒரே அறையில் சேர்ந்து வாழலாம், சமைத்து உண்ணலாம். ஆனால் அவர்கள் தங்கள் ஊருக்கு விடுமுறை போன்ற காரணத்துக்காக வந்தால் அதே நடைமுறையைத் தொடர முடியாது. அதாவது சாதிகளின் நிலைக்களன்களில் ஒன்று இன்றைய ஊர்கள். இவற்றைக் கலைக்காமல் சாதிகளை அழிக்க முடியாது.

செ.:பண்ணைகளின் உருவாக்கத்துக்கும் ஊர்கள் கலைவதற்கும் எப்படி முடிச்சுப்போடுகிறீர்கள்?

.:  ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு பண்ணை ஒன்று உருவாக்க விரும்பியதும் அவர் தொழில் நடத்துவதற்குக் கட்டுப்படியாகக் கிட்டத்தட்ட பொருத்தமான ஒரு விலைக்கு அவர் விரும்பும் நிலங்களை விற்க அனைவரும் ஆயத்தமாக மாட்டார்கள். வேறு வழியில்லாமல் ஒவ்வொருவாராகத்தான் நிலங்களை விற்க முன்வருவார்கள். எனவே உடனடியாகப் பண்ணை உருவாகி நிலத்தை விற்றவர்கள் அதில் வேலைக்குச் செல்வார்கள் என்று கூற முடியாது. அத்துடன் நான் முன்பு கூறியது போல் அவர் வேறு தொழில் ஏதாவது செய்துவந்தால் அதைக்கொண்டும் பிழைக்க முடியாத நிலை வந்தால்தான் மாற்று வேலை தேடுவார். அதிலும் இருக்கும் நிலையுடன் ஒப்பிட தாழ்ந்ததென்று கருதத்தக்க இன்னொரு வேலையை உள்ளூரில் ஏற்றுக்கொள்ள மிகப் பெரும்பாலோர் விரும்புவதில்லை. எனவே ஊர் கலையும் நடைமுறை முதலில் பளிச்சென்று கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறாது. பண்ணை உருவாக்கம் எனும் நிகழ்முறை விரைவு பெறப் பெற ஊர்களின் கலைவு விரைவு பெறும். சாதிகளின் நிலைக்களன்களில் மிக அடிப்படையான ஒன்று இல்லாமல் போகும்.

செ.:சாதியை ஒழிக்கவென்று கிளம்பிய திராவிட இயக்கத்தால் சாதி அழியவில்லை. இப்போது சாதியை ஒழிக்கவென்று நீங்கள் புதிதாகக் கூறும் உத்தி மட்டும் வெற்றி பெறும் என்பதற்கு என்ன அடிப்படை.

.:  திராவிட இயக்கம் என்பதில் நயன்மைக் கட்சியையும் திராவிடர், திராவிட என்ற முன்னொட்டுகளைக் கொண்ட அமைப்புகளையும் ஒரே தரத்தில் எடைபோடுவது தவறு என்பது என் நிலைப்பாடு.

செ.:அப்படி அவற்றுக்கிடையில் என்ற வேறுபாட்டை நீங்கள் காண்கிறீர்கள்?

.:  நயன்மைக் கட்சியினர் பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. அதிகார பீடங்களில் அமர்ந்து தங்கள் நலன்களுக்குத் தடங்கலாக இருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக இட ஒதுக்கீடு கேட்டனர். கோயில்களில் இறையன்பர்கள் தட்டில் போடும் சில்லறைக்காகப் பல்லை இளிக்கும் பூசாரிப் பார்ப்பனர்களுக்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை. அரசியலில் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பேசிவிட்டு தனிப்பட்ட முறையில் கோயில் பார்ப்பனப் பூசாரி முன் மண்டியிட்டு முரண்பாடாக நயன்மைக் கட்சியினர் செயல்படுவதாக அண்ணாத்துரையே அவர்களைக் குறைகூறியிருக்கிறார். அதே வேளையில் வடக்கத்தி பனியா – பார்சி பொருளியல் படையெடுப்பு அவர்களை மிகவும் உறுத்திய சிக்கலாக இருந்தது. அத் திசையில் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நன்றாகவே செயல்பட்டனர். இந்த இரு திசைகளில் அவர்கள் முன்வைத்த முழக்கம் அவர்கள் எதிர்பாராமலேயே ஊர்ப்புறங்களில் கோயில் சார்ந்தும் நிலவுடைமை சார்ந்தும் வாழ்ந்த
பார்ப்பனர்களுக்கு எதிராக அங்குள்ள மக்களின் உணர்வுகளைத் தூண்டியது. அன்றைய தமிழகத்தில் பெருங்கோயில் சார்ந்த ஒவ்வோர் ஊரிலும் விதிவிலக்கின்றி வாழ்ந்த பார்ப்பனர் பிற அனைத்துச் சாதியினரையும் இழிவுபடுத்தியதையும், குறிப்பாக, பார்ப்பனப் பெண்கள் தெருவில் வரும் போது எதிரில் வரும் எவரையும் “ஒத்திப்போ, ஒத்திப்போ” என்று துரத்தியதையும் கடந்த இரு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அறியமாட்டார்கள். அதனால் நயன்மைக் கட்சியின் நிலைப்பாடு ஊர்ப்புறகளில் உள்ள படித்த, பணம் படைத்தவர்களை ஈர்த்ததில் வியப்பில்லை. அதனால்தான் அப்போதுதான் உருவாகியிருந்த நாடார் மகாசன சங்கம் தங்கள் பொருளியல் வளர்ச்சி நிலைக்குத் தகுந்த குமுகியல் மதிப்பு வேண்டும் என்பதற்காக நயன்மைக் கட்சியை அணுகி கூட்டணி வைத்துக்கொண்டது.

ஆனால் ஏற்கனவே மக்களிடையில் செல்வாக்குப் பெற்றுவிட்ட பேரவைக் கட்சிக்கு ஈடுகொடுக்க முடியாது வீழ்ந்த நயன்மைக் கட்சி பெரியார் கைக்கு வந்ததும் பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த வெறுப்பு அதே ஊர்ப்புறங்களில் நிலைகொண்டிருந்த நாடார் மகாசன சங்கத்தினரின் பின்னணி வலுவுடன் சேர்ந்து பெரியாருக்கு உதவியது. இப்போது அவரது பங்கு இயக்கத்தை நன்றாக வளர்த்துவிட்டு வளர உதவியவர்களை அகற்றுவது. அதை அவர் நன்றாகவே செய்தார். அதற்கு ஏற்றாற்போல் பல இதழ்களைத் தொடங்கித் தன் பெயரிலும் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வைத்துக்கொண்டார். தங்கள் தங்கள் குமுகக் குறிக்கோளுக்காகப் பெரியாருக்குத் துணை நின்ற ஊ.பு.அ.சொந்திரபாண்டியன், கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் போன்றவர்கள் பெரியாரை நம்பி ஏமாந்தனர். இயக்கத்தின் மீது தன் பிடி உறுதியானதும் 3500 ஈக மறவர்களை கருஞ்சட்டைப் படை என்ற பெயரில் திரட்டினார். தங்கள் குடும்பப் பொறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து எப்போது வேண்டுமாயினும் சிறை செல்லவோ உயிரை இழக்கவோ ஆயத்தமாக இருக்குமாறு விடுத்த அழைப்பின் பேரில் திரண்டவர்கள் அவர்கள்.
   அவர்களை ஒருமுறை தூண்டி விட்டு சீரங்கத்துப் படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த பார்ப்பனர்களின் பூணூல்களை அறுக்க வைத்து அப்புறம் தான் அப்படிச் சொல்லவில்லை என்று பிறழ்ந்தார். இது ஒரு முழுமையான மிரட்டுதல் உத்தி. அவரது கட்சி மாநாடுகளின் தொடக்கத்தில் நடைபெறும் ஊர்வலங்களில் அணிவகுக்கவும், மாநாட்டுப் பாதுகாப்புக்கும் தவிர இப்படையினரை வேறெங்கும் வேறெதற்கும் பயன்படுத்தவில்லை. “அய்யா”வின் ஆணை வரும் வருமென்று வாணாள் முழுக்கக் காத்தருந்ததுதான் மிச்சம். ஆனால் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அங்கு பெரியார் இருப்பார். எடுத்துக்காட்டுக்கு தெற்காசிய நாடுகளிலிருந்து துரத்தப்பட்ட தமிழக வாணிகர்கள், தொழில்முனைவோருக்கு எதிராகவும் இடையூறாகவும் சென்னையில் செயல்பட்ட ஆந்திரம், கர்நாடகம் பேன்ற அண்டை மாநிலங்களைச் சார்ந்த பெரும் புள்ளிகளுக்கு எதிராக உள்ளூர் மக்களை அணிதிரட்டும் உத்தியாக இராசா.அண்ணாமலைச் செட்டியார் ஒருங்கிணைத்த தமிழிசைச் சங்கத்தின் கூட்டத்தில் பெரியார் கலந்துகொண்டார். பெரியாரை நம்புவோர் பெரியாருக்குத் தமிழ், தமிழக நலன்களின் மீது இருக்கும் பேரார்வத்தை இதில் காண விரும்புவர். ஆனால் ஒரு கருஞ்சட்டைப் படையை வைத்திருக்கும் பெரியார் அயல் மாநிலத்தைச் சேர்ந்த வாணிகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் ஓர் அச்சுறுத்தலாகவே இருந்திருப்பார். எனவே அவரை அமைதிப்படுத்த, விலைக்கு வாங்க முனைந்திருப்பர். அவருக்கு பணத்தைக் கண்டால் மறுக்கவே தோன்றாது. சில்லறையான பல செய்திகளை ஏறக்குறைய அனைவரும் அறிவர். கணிசமான தொகைகள் தொடர்பான சில செய்திகளை அவரது தத்துப் பிள்ளை கி.வீரமணி ஆங்காங்கே, தன் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகும் போது எடுத்துவைத்து ஞாயப்படுத்தியுள்ளார். ஆக, வெளியிலிருந்து தமிழகத்துக்குப் பணத்தோடு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் குறிப்பிடும்படியாக சென்னையிலோ தமிழகத்திலோ செழித்ததாகத் தெரியவில்லை.

செ.:நாம் சாதியொழிப்பில் பெரியாரின் பங்கு பற்றியல்லாவா பேசத்தொடங்கினோம்? நீங்கள் வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறீர்களே!

.:  நான் அங்குதான் வர இருக்கிறேன். வெளியிலிருந்து தமிழகப் பொருளியல் நலன்களுக்கு எதிராக வரும் அறைகூவல்களை எதிர்த்து உள்ளூர் பொருளியல் நலக் குழுக்களை அணிதிரட்டி அவர்களே தங்கள் போராட்டங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் துணையைப் பெற, நயன்மைக் கட்சி காட்டிய வழியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கும் குழுவினரே கருத்துப் பரப்பலும் கள நடவடிக்கைகளும் மேற்கொள்ள வைக்க இருந்த வாய்ப்பைக் கெடுத்து வெளிப் பொருளியல் விசைகளுக்கு விலை போய் வெற்று சாதி எதிர்ப்பு, ஒதுக்கீடு என்று போராட்டங்கள் நடத்தி வெளிக் கொள்ளையர்களிடமிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி மக்களுக்குள் பகைமையை மூட்டிவிட்டார் என்ற உண்மையைச் சுட்டவே நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பற்றிக் கூறினேன்.

பெரியார் இதை மட்டும் செய்யவில்லை. சாதி ஒழிப்புக்கு வழி என்று புத்தம், கிறித்துவம், முகம்மதியம் போன்ற வெளிச் சமயங்களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் வேலையையும் செய்தார்.

செ.:யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனையான குற்றச்சாட்டுகளைப் பெரியார் மீது வைக்கிறீர்கள்.

0 மறுமொழிகள்: