7.5.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை

தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை கட்டுதல் போன்றவற்றுக்கு அரசனின் இசைவு வேண்டும். இவ்வகை இசைவு விருது எனப்பட்டது. அரசர்கள் வலுவிழந்து பின்னர் இல்லாது மறைந்து போய்விட்டாலும் இந்த முறை இன்றும் சாதிகளிடையில் நிலவுகிறது. மேற் சாதியினரின் தெருக்களில் நடமாடும் போது கீழ்ச் சாதியினர் இன்னின்ன உடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நிலவுவதை நாமறிவோம்.

பெண்கள் அணியும் உடைவகைகளைப் பற்றி ஆய்ந்தால் சில விந்தையான செய்திகளை அறிய முடியும். தமிழகம் முழுவதும் பெருவழக்காக நிலவும் சேலை எப்போது இங்கு புகுந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. சோழர் காலச் சிற்பங்கள், ஓவியங்களில் காணப்படுவது உடலின் மேற்பகுதியில் ஒரு கச்சு அல்லது இரவிக்கை எனப்படும் குப்பாயம், இடையில் பாவாடை போன்ற ஓர் ஆடை, மார்பின் குறுக்கே ஒரு துண்டு இவைதான். இன்றைய சேலையைத் தெலுங்குச் சேலை என்று கூறுவர். வலது தோளில் முந்தானையிட்டுச் சேலையைத் தாழ்ப்பாய்ச்சி முதிய பார்ப்பனப் பெண்களைப் போல் கட்டுவது தான் தெலுங்குச் சேலை என்று சிலர் கூறகின்றனர். தெலுங்கு பேசும் துப்புரவுத் தொழில் செய்வோரில் பலர் வலது தோளில் தான் முந்தானை இடுகின்றனர்.

பரத நாட்டியத்தில் நாம் இன்றைய சேலை முறையைக் காணலாம். இராசராசன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து அவன் கொண்டு வந்த தளியிலாப் பெண்டிர் மூலம் இச்சேலை முறை தமிழகத்தில் பரவியிருக்கலாம். ஒற்றைத் துணியில் உடல் முழுவதையும் மறைக்க இயல்வதாலும், துவைத்துக் குளித்து உலர்த்துவதற்குக் கூட மாற்றுத்துணி தேவையில்லாததாலும் சிக்கனம் கருதி ஏழைகளுக்கும் பொருந்தியதாலும் அது விரைவில் பரவியிருக்க வேண்டும்.

கேரளத்தில் இன்றும் பெண்கள் பழந்தமிழ் ஆடையாகிய இரவிக்கை, அரையாடை, மேல்துண்டையே அணிகின்றனர். முகம்மதியத்துக்கு மாறியோரிடையில் முதிய பெண்கள் இன்றும் ஏறக்குறைய இதுபோன்ற ஆடையையே அணிகின்றனர். மேலே அணியும் இரவிக்கையைக் குப்பாயம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, பழந்தழிழ் அணியாகிய மேகலை போன்ற ஓர் இடையணியையும் அவர்கள் அணிகின்றனர்.

சென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் தெலுங்குச் சேலை என்று கூறப்படும் இன்றைய தமிழ்நாட்டு உடைக்கும் பழந்தமிழ் உடையான மலையாள உடைக்கும் ஒரு மோதல் நடைபெற்றது. இதற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று பெயர். இரு மக்களிடையில் நடைபெற்ற போராட்டத்தின் பண்பாட்டு வடிவங்களில் ஒன்றாகும் இது.

இன்று தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒரே வகையில் சேலையை அணிந்தாலும் நகர்ப்புறப் பெண்களுக்கும் நாட்டுப் புறத்திலுள்ள கீழ்ச் சாதிப் பெண்களுக்கும் ஒரு வேறுப்பாட்டைப் பார்க்க முடியும். வயல்களில் வேலை செய்யும் போது பெரும்பாலான பெண்கள் முந்தானையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெறும் இரவிக்கையோடிருப்பதை நாம் பார்க்க முடியும். முதிய பெண்களில் பலர் மார்பை மறைப்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. வேலை செய்யும் பெண்கள் முழங்காலுக்குக் கீழேயும் மறைப்பதில்லை. சேலை இந்த வகையிலும் ஒரு நெகிழ்மை பெற்றுள்ளது.

உடையைப் பொறுத்தவரை இன்று மேற்சாதி, கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சில வேறுபாடுகளை முன்பு நாம் சுட்டிக் காட்டினாலும் அவற்றுள் ஒற்றுமைக் கூறுகளே மிகுதி. நம் நாட்டுப் பெண்கள் அணியும் சேலை, உடுத்தும் முறையிலும் விலை மதிப்பிலும் பெரும் பணக்காரர்களுக்கும் மிக ஏழைகளுக்கும், உழைக்காத சொகுசுப் பெண்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் பொருந்துமாறு நெகிழத்தக்கது. இருந்தாலும் இன்று நகரங்களில் சில கல்வி நிலையங்கள் வற்புறுத்தும் சீருடைகளாலும் மிதிவண்டி போன்ற ஊர்திகளில் செல்ல வேண்டியிருப்பதாலும் மேலை நாட்டு நாகரிக வீச்சாலும் மேலே சட்டையும் கீழே குறும்பாவாடையும் அணியும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த உடை உழைக்கும் பெண்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் விலை, தையல் கூலி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சேலையே மலிவானது. அதே போல் தலைமயிரை வெட்டி விடுவதை விட நாட்டுப்புறத்துப் பெண்கள் போன்ற கோடாரிக் கொண்டையோ மணிக் கொண்டையோ மலிவானது. அதே வேளையில் தேவையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விரும்பும் வகையில் தலை அலங்காரம் செய்து கொள்ளவும் முடியும்.

அண்மையில் நகர்ப்புறங்களில் விரைவாகப் பரவி வரும் வட நாட்டு உடையாகிய சல்வார்-கம்மீசு உழைக்கும் பெண்களுக்குப் பொருந்தாது. இந்த உடையின் வரவால் உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கும் பிறருக்கும் வெவ்வேறு வகை உடைகள் நடைமுறைக்கு வரலாம்.

ஆண்களின் அணியைப் பொறுத்தவரை பூணுலைப் பற்றிய வரலாறு கவனத்துக்குரியது. பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றுக்கான விடையை நம்மால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. ஆனால் ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் குமுகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். அவ்வாறு தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம். இன்றும் பல சாதிகளில் இழவுச் சடங்கின் போது தலைமகன் பூணூல் அணிந்து பரிவட்டம் கட்டுவதைக் காணலாம். இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. அதுபோல் திருமணத்தின் போது மணமகனும் பூணூல் அணிந்து கொள்கிறான். திருமணமாகும் போது ஆடவன் ஒரு குடும்பத் தலைவனாகிறான். இன்று இவ்விரு சடங்குகளும் ஒரே மனிதனின் வாழ்வின் இருவேறு கட்டங்களில் நடந்தாலும் உண்மையில் அவை இரண்டும் நம் குமுகத்தின் இருவேறு வளர்ச்சி நிலைகளின் தொல்பொருள் தடையங்களாகப் பதிந்துள்ளன.

மனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது கீழ்ச்சாதி மக்களுக்குக் குடும்பம் வைத்திருக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கும் முகமாகப் பூணூல் அணிவதின்றும் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் முதலில் தெளிவான பொருளியல் முழக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர். இதனால் அவர்களது “மேன்மை நிலை” காப்பாற்றப்பட்டது. ஆனால் நாடு என்புருக்கி நோயால் தாக்குண்டவன் போன்று உருக்குலைந்தது. உள்நாட்டினுள் மொகலாயர்களும் கடற்கரையில் அரேபிய ஐரோப்பிய வணிகர்களும் நம் நாட்டைத் தாக்கிய போது எதிர்த்து ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து நொறுங்கியது.

இந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். முன்பு குடும்பத் தலைமை, குமுகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதை இது.

இந்தச் சடங்குக்குத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்ற பெயரும் உண்டு. அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரேகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.

இது போன்ற இருபிறப்புக் கோட்பாடு முந்துநிலை (Primitive) மாந்தர்களின் தீக்கை (Initiation)ச் சடங்கின் எச்சமேயாகும். இதுபோன்ற முந்துநிலைப் பழக்கங்களை நம் நாட்டின் பிற மக்கள் கைவிட்ட பின்னரும் அனைவரிலும் நாகரிகத்தில் உயர்ந்தோராகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர் இந்த விலங்கு மாந்தக் காலத்து மரபை இன்றும் பெருமையாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பார்த்துப் பிற சாதிப் பணக்காரர்கள் தாங்களும் பூணூல் அணிய முண்டியடித்துக் கொண்டிருப்பதும் நம் நாட்டு விந்தைகளில் ஒன்றாகும்.

பழங்குடி மக்களிடையில் வாழும் சாமன்கள் (Shamans) இதுபோல் ஒரு ஆன்மீக மறுபிறவி எடுப்பதாகக் கருதப்படுகிறார்கள். இந்த “மறுபிறவி” எடுப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தற்கொலை என்று கருதத்தக்க அளவில் உடலை வருத்தித் தம் மனஆற்றலை வளர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. நம் தொன்மங்களில் (புராணங்களில்) வரும் முனிவர்கள் தவமியற்றும் போது கைக்கொள்வதாகக் கூறப்படும் உடல்வருத்த முறைகளும் இவையும் பொருந்தி வருகின்றன. அவர்கள் பெற்றதாகக் கூறப்படும் ஆற்றல்களும் சாமன்களின் ஆற்றல்களாகக் கூறப்படுபவையும் இணைகின்றன. இவ்வாறு பழைய சாமனியமும் குமுகத் தலைமையைக் குறிக்கும் ஓர் அணியாகிய பூணூலும் சேர்ந்ததே இருபிறப்பு எனப்படும் உபநயனம். இவ்வாறு இந்தச் சடங்கை விடாமல் வைத்திருப்பதன் மூலம் நம் பண்பாட்டை எவ்வளவு காட்டுவிலங்காண்டி (காட்டுமிராண்டி) நிலையில் பார்ப்பனர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.

பூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.

சைவம் எனப்படும் சிவனியம் பூணூல் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு வைத்துள்ளது. அது முற்றிலும் பொருளியல் அடிப்படையிலமைந்தது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே இருபிறப்புக்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டும் பூணூல் அணிந்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் பூணூல் அணிந்து கொள்ள வேண்டுமாயின் திருமணம் புரியக்கூடாது. அத்துடன் ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். அவற்றில் இறுதி இரண்டு நிலைகளையும் எய்துவதற்குப் பெருஞ்செலவில் பூசை, கொடை முதலியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பணக்காரர்கள் மட்டுமே பூணூல் அணியத் தகுதி பெறுவர். இதன் மூலம் பூணூல் அணிவது செல்வச் செழுமைக்கு அடையாளமாக வேளாளர்களின் சிவனியம் ஆக்கியது. எனவே இப்பார்ப்பனியத்தை வெள்ளாளக் கட்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!

அத்துடன் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சில ஒழுக்கங்களைத் தவறாமல் கைக்கொள்ள வேண்டுமென்று வேறு விதித்துள்ளர்கள். அன்றாடம் காலை குளித்து ஈர உடையுடன் தெய்வ உருவப்படத்தின் முன் மந்திரம் ஓதிப் பூச்சொரிந்து பூசை செய்தல், மாலையில் சந்தியாவந்தனம் எனப்படும் மாலைத் தொழுகை மேற்கொள்ளல், முன்னோர்க்குத் திவசம் கொடுத்தல் என்ற பெயரில் பார்ப்பனர்க்குக் கொடையளித்தல், குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருத்தல், வேதம் படித்து ஓதல், முதலிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளத் தக்க ஒழுக்க விதிகள் சிலவாகும். இதனால் பணக்காரர்களாகிய சில கீழ்ச்சாதியினர் இந்த ஒழுக்க விதிகளை மேற்கொண்டு பூணூல் அணிந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், அகத்தீசுவரம் போன்ற ஊர்களில் வாழும் “மேற்சாதி” நாடார்கள் இத்தகைய பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை முழுமையாக மேற்கொண்டோரில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்றை உருவாக்கியவர்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியுண்டதாகக் கூறப்படுவது உண்மையில் பொற்கொல்லர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மக்கள் எழுச்சியே என்று ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டபோது அதில் பங்கு கொண்டோரில் குமுகத்தை நன்கு நோட்டமிட்டு வைத்திருக்கும் ஒருவர் பொற்கொல்லர்கள் அத்தகைய போராட்ட உணர்வுக்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். இன்றைய நிலைமையில் அக்கருத்து உண்மைதான். பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் முற்றிலும் அவர்கள் கரைந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் நகர்ப் புறத்தில் உள்ள அளவு நாட்டுப் புறத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படி இருந்தாலும் குறைந்தது எட்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற வலங்கை-இடங்கைப் போராட்டத்தில் இடங்கையினருக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் அவர்களே என்பதையும் இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் “உரிமை” பெற்றவர்களும் அவர்களே என்பதையும் கருத்தில் கொண்டால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். ஒரு நீண்ட எட்டு நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் தமக்கு மட்டும் தம் பின்னால் அணி திரண்ட மக்களுக்குக் கிட்டாத சில சிறப்புரிமைகள் கிடைத்தவுடன் தம்மை ஒடுக்கியவர்களின் வாலாகிவிட்டார்கள் என்பது ஒரு வரலாற்று விதியாக இங்கு செயற்பட்டுள்ளது. அச்சிறப்புரிமையின் பயனாக இன்று அவர்கள் தம்மை “விசுவகர்மர்கள்” என்றும் “விசுவப்பிரம்மர்கள்” என்றும் “விசுவப்பிராமணர்கள்” என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலர் திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஆவணி அவிட்டத்தின் போது பூணூலைப் புதுக்குவதும் உபநயனம் நடத்துவதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.

ஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம். வழக்கில் எவ்வாறு விளக்கம் கூறினார்கள் என்பது நமக்குத் தெரியாது.

வலங்கை-இடங்கைப் போர்களைப் பற்றிய தெளிவான செய்திகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்று ஆய்வு என்ற பெயரில் இடிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் புதுப்பிக்கப் பரிந்துரைக்கும் முயற்சிகளேயன்றி உண்மையான குமுகியல் வரலாற்றாய்வு மேற்கொள்ளயாருமில்லை. மார்க்சியர்கள் எனப்படுவோர் தம் முன் விரிந்து கிடக்கும் தமிழக வரலாறு என்ற பரந்த களத்தை வெறும் கால ஆராய்ச்சியாகக் குறுக்கி வரலாற்றாசிரியர்களைப் பயனற்ற வீண் வழக்காடல்களில் சிக்க வைத்துத் திருப்பி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கு தெறித்து விழும் சில செய்திச் சிதறல்கள் சில செய்திகளை நமக்கு மறைமுகமாகத் தருகின்றன.

12ஆம் நூற்றாண்டில் தெக்காணத்தில் கன்னட நாட்டில் விச்சலன் என்றொரு அரசன் இருந்தான். அவன் பத்மாவதி எனும் பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவள் உடன்பிறந்தவனான பசவன் என்பவனை முதலமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் அமர்த்தினான்.

இந்தப் பசவன் சிறு அகவை முதல் பார்ப்பனியத்தை வெறுத்தவன். வேதங்களின் தலைமையையும் பூணூலையும் சாதி அமைப்பையும் சிறார் மணம், கைம்மை ஆகியவற்றையும் மறுத்து லிங்காயதம் எனும் புதிய சமய ஒழுக்கத்தைப் பரப்பியவன். மன்னனான விச்சலன் சமண சமயம் சார்ந்தவன். அவனது அதிகாரிகளும் அச்சமயத்தையே சார்ந்திருந்தனர். பசவன் அவர்களை மாற்றித் தன் ஆட்களை அமர்த்தினான். இதில் அரசனுக்கும் பசவனுக்கும் ஏற்பட்ட மோதலில் விச்சலன் பசவனால் கொல்லப்பட்டான். பசவன் அதிகாரத்தைக் கைப்பற்றினான். ஆனால் நெடுநாள் அவனால் அதிகாரத்திலிருக்க முடியவில்லை. விச்சலனின் மகன் ராயமுராரி சோவி பசவனைத் துரத்திக் கொண்டேயிருந்தான். இனித் தப்பமுடியாது என்ற நிலையில் பசவன் ஒரு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது ஒரு செய்திப் பொறி.

ஒரு பார்ப்பனனாக இருந்து கொண்டு பார்ப்பன மேலாண்மைக்குக் கருவிகளான பூணூல், வேதங்கள், சாதியமைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஒரு சமயத்தை உருவாக்கியவன் என்ற வகையில் பசவன் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத் தக்கவன். அத்துடன் இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவன் வன்முறையை நாடினான் என்பது அவனைத் தனித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதனால் தான் வரலாற்றாசிரியர்கள் இவனுக்கு உரிய இடத்தைத் தராமல் இருட்டடிப்புச் செய்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது. லிங்காயதச் சமய நூல்கள் சங்கதக் கலப்பில்லாத பழங்கன்னடத்தில் உள்ளன என்பதும் கருதத்தக்கது.

பசவனின் சமயத்தைத் தழுவியர்களை வீரசைவர் என்று அழைக்கின்றனர். இவர்கள் புலால் உண்பதில்லை. பார்ப்பனியப் பண்பாட்டை முற்றிலும் ஒழிக்காத ஒரு நிலையையே இது காட்டுகிறது. பெரும்பான்மையினரான கீழ்ச் சாதியினரை இச்சமயத்திலிருந்து ஒதுக்க இதுவே போதும்.

14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது விசயநகரப் பேரரசு. இதைத் தோற்றுவித்தவர்கள் அரிகரன், புக்கன் என்ற இரு உடன்பிறந்தோர். வாரங்கல்லிலும் பின்னர் கம்பிலியிலும் உள்நாட்டு அரசர்களிடம் பயணியாற்றியவர்கள். முசுலீம்களால் கம்பிலி கைப்பற்றப்பட்ட போது சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகமதிய சமயத்தைத் தழுவி சுல்தான் முகம்மது பின் துக்களக்கிடம் பணியாற்றினார்கள்.

முசுலீம்கள் சமயத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தது பசவனின் புதிய சிவனியம். இந்த வீரசிவனியர் தங்கள் கோட்பாடுகளை ஏற்காதவர்களை இறைமறுப்பாளர்கள் என்று வெறுத்தார்கள். இவர்களின் இயக்கத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு அரசர்கள் நாட்டின் பல பகுதிகளை முகம்மதிகளிடமிருந்து விடுவித்தார்கள். எதுவுமே செய்ய இயலாதிருந்த சுல்த்தானின் கம்பிலி ஆளுனன் தன் நிலையைச் சுல்த்தானுக்கு அறிவித்தான். நிலைமையச் சீர் செய்ய சுல்த்தான் அரிகரனையும் புக்களையும் கம்பிலிக்கு அனுப்பினான்.

தென்னகத்துக்கு வந்த அரிகரனுக்கும் புக்கனுக்கும் தம்முன் விரிந்து கிடந்த ஒரு நல்வாய்ப்பு நன்றாகப் புலப்பட்டது. பார்ப்பனராகிய வித்தியாரண்யர் என்பவரை ஆசானாக ஏற்று இந்து “தர்மத்தை”க் காப்பதற்காக ஓர் அரசை நிறுவினர். இதுதான் விசயநகரப் பேரரசு.

இப்பேரரசை நிறுவி ஆண்ட முதலாம் அரிகரன் சில சீர்திருத்தங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று ‘கர்ணம்’ என்ற ஊராட்சி அலுவல் செய்துவந்த பொற்கொல்லர்களையும் வெலமர்களையும் அகற்றி அவ்விடங்களில் பார்ப்பனர்களை அமர்த்தினான். இந்தச் செய்தியைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் தென்னிந்திய வரலாறு ஆசிரியர் நீலகண்ட சாத்திரி. ஆனால் வலங்கை-இடங்கைப் போருடன் இதனை இணைத்துப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட விருதுகள் எனப்படுபவை ஒரு குழு மக்களுக்கு அரசியல் வினைகளில் ஈடுபடுவதற்குரிய உரிமையின் அடையாளங்கள். அத்தகைய உரிமைகள் வாணிகம் மற்றும் செய்தொழில் வகுப்புகளுக்கு மறுக்கப்பட்டமையால் தோன்றியவையே வலங்கை-இடங்கைப் பூசல்கள். இந்தச் சூழ்நிலையில் பொற் கொல்லர்களாகிய செய்தொழில் வகுப்பினர் ஊராட்சிப் பொறுப்பிலிருந்தனரென்றால் அது வலங்கை-இடங்கைப் போரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்ததைக் காட்டும் ஒரு தடயமே.

அதே போல் இன்னொரு தடயம் பார்ப்பனர்கள் மீதும் பிற மேல் சாதியினர் மீதும் ஆந்திரத்து மடிகர்கள் எனப்படும் கீழ்ச் சாதி மக்கள் பெற்றிருந்த வெற்றியைக் குறிப்பதாகும். மடிகர்கள்[1] எனப்படுவோர் தமிழகத்திலுள்ள சக்கிலியச் சாதியினருக்கு இணையானவர்கள். இவர்கள் இப்போதுள்ள துப்புரவுத் தொழிலினர் அல்ல. மாடு, குறிப்பாக எருமை மாடு மேய்ப்பதும் தோல் தொழில் செய்வதும் இவர்கள் தொழில்கள்.

ஆந்திரத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு தற்கால இந்து சமயத்தில் திராவிடத் தெய்வங்கள் என்ற நூலை எல்மோர் என்பவர் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் காட்டியுள்ள தெய்வ வழிபாடுகள் பலவற்றில் இம்மடிகர்கள் பார்ப்பனர்களையும் பிற மேற்சாதியினரையும் அரசர்களையும் வென்ற நிகழ்ச்சிகளின் தடயங்கள் வழிபாட்டு முறைகளில் மறைந்து கிடப்பதைக் காண முடிகிறது. பார்ப்பனர்கள் எருமையைக் கொன்று கறி சமைத்து மடிகர்களுக்கு விருந்து வைப்பது, பார்ப்பனப் பூசாரியைக் காவு கொடுப்பது போன்ற சடங்குகள் என்று வகை வகையான தடயங்கள் உள்ளன.

பசவனின் புதுச்சமயம், இடங்கையினரின் வெற்றிகள் போன்றவற்றின் எதிர்வினையே விசயநகர “இந்து”ப் பேரரசின் தோற்றத்தின் உடனடிக் காரணமேயன்றி முகம்மதியர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பதல்ல என்பதை அடுத்து நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காணலாம்.

இவற்றில் எதுவும் இங்குள்ள பண்பாட்டு(கலாச்சாரப்)ப் புரட்சியாளர்கள் கவனத்தில் வருவதில்லை.

இவ்வாறு விருதுகள் எனப்படும் அணிமணிகள் தொடர்பான பூசல்கள் இன்று மங்கிவிட்டன. இருந்தாலும் பூணூல் இன்றும் அறுபடவில்லை. பறைச்சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் கட்டிவிட்டார் என்பதால் அதைப் பாரதியார் செய்த புரட்சியாகக் கூறும் இன்றைய “மார்க்சியார்கள்” பூணூலைக் கழற்றி எறிந்த வ.ரா.வை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டினாலும் அவர் பூணூலை அறுத்தெறிந்த செய்திக்கு விளம்பரம் தருவதில்லை. பட்டு நூல்க்காரர்கள் எனப்படும் சௌராட்டிரர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்தொழிற் கொல்லர்களால் வளர்ந்து வரும் பூணூல் பண்பாட்டுக்கு ஒரு முடிவு காணுவது சாதியத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சியின் ஒரு இன்றியமையாக் கூறு ஆகும்.

இவ்வாறு பூணூல் எனப்படும் ஒருமுழ நூல்த்துண்டு நம் குமுகத்தைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. இத்துண்டு நூலை அணிவதாலேயே தாம் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரிகிறது ஒரு சிறு கூட்டம். அப்படி அணிய முடியவில்லையே என்று பிறர் எல்லோரும் ஏங்கவில்லையாயினும் அவர்களிலும் பணக்காரர்களாகிவிட்ட ஒரு மிகச்சிறு கூட்டம் தானும் ஏங்கி அவ்வாறு ஏங்குவதாலேயே முதற்கூட்டத்தின் இறுமாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இறுமாப்பை உடைக்க இருமுனைகளில் தாக்குதல் தொடுக்கலாம். ஓராண்டு அழுக்கைத் தனக்குள் அடக்கியிருக்கும் இந்த நூல்துண்டை வாய்ப்புள்ள போதெல்லாம் ஏளனம் செய்வது ஒரு முனை. இன்னொரு முனை இந்து மக்களின் ஒற்றுமை, பாரத தேச ஒற்றுமை என்று ஏமாற்றித் திரியும் இந்து முன்னணிப் பார்ப்பனத் தலைவர்களை அவர்கள் உண்மையிலேயே அத்தகைய ஒற்றுமையை விரும்புகிறவர்களானால் வெளிப்படையாக, ஊரறியத் தங்கள் “மேன்மை”யைக் குறிப்பதற்காகத் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் பூணூல்களைக் கழற்றி எறிய முன் வருவார்களா, தம் சாதியினரையும் அதுபோல் செய்ய வலியுறுத்துவார்களா என்று அறைகூவல் விடுப்பது.


அடிக்குறிப்பு:

[1] மையிடம் → மயிடம் → மகிடம் → மகிஷம் = எருமை. மகிடர்கள் → மடிகர்கள்.
“மாமயிடற் செற்றுகந்த” - சிலம்பு, வேட்டுவவரி.

29.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 4. திருமண உறவுகள்

திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கீழ்ச்சாதிகளில் பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமண உரிமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஆடவனை விடப் பெண்ணுக்கு இதில் அதிக உரிமை உண்டு. அது மட்டுமல்ல, நாட்டுப் புறங்களில் கீழ்ச்சாதி மக்களிடையில் நகர்ப்புறத்து மக்களிடை நிலவுவது போன்று பெண்ணின் “கற்பு” பற்றிய அவ்வளவு “பதற்றம்” இல்லை. சீதனம் அவர்களிடையில் பெரும்பாலும் வேண்டிய அளவு வசதி படைத்தோரிடையே மட்டுமே உண்டு. மணப்பெண்ணுக்கு மணமகன் பரியம் கொடுப்பது இன்றும் பெருவழக்காக உள்ளது.

திருமண உறவுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு நம் குமுகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நிலவுகிறது. மேற்சாதிகளில் பெண் பொதுவாக இரண்டே வகைக் கடமைகளை நிறைவேற்றுகிறாள். ஒன்று, ஆடவனின் சொத்துகளுக்கு உரிமை பெறத்தக்க அவனுக்கே உரிய மக்களைப் பெறுவது; இன்னொன்று வீட்டில் அடிமைத் தொழில் புரியும் “இல்லத்தரசி”யாகவும் அவனுக்கு இன்பம் அளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும் இருப்பது. அவன் விரும்பும் வகை இன்பத்தை அவளால் வழங்க முடியவில்லை என்று அவன் கருதினால் வேறு பெண்களிடம் அதை அவன் நாடுவதை அவள் தடுக்க முடியாது. ஆனால் அதே பெண் தன் கணவனிடமிருந்து தனக்கு வேண்டிய இன்பத்தைப் பெற முடியாத போது இன்னொரு ஆடவனை அவள் நாட முடியாது (திருட்டுத்தனமாக உறவுகள் உரிமைகளாகா). அதே நேரத்தில் “கணவனுக்கே உரிய” குழந்தைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண் தன் திருமணத்துக்கு முன்போ அல்லது கணவனைச் சாவிலோ சச்சரவிலோ பிரிந்த பிறகோ கூட இன்னொரு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது.

ஆனால் கீழ்ச்சாதிப் பெண் இத்தகைய கொடிய ஒடுக்குமுறைக்கு ஆளாவதில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் மணவிலக்குச் செய்து கொள்ளலாம். சாதியார் பஞ்சாயம் கூடி மணவிலக்குச் செய்து வைப்பர். மணவிலக்குப் பெற்ற பெண்ணும் கைம்பெண்ணும் மீண்டும் மணம் செய்து கொள்ளலாம். முந்திய திருமணத்தில் பிறந்த குழந்தைகளை அவள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

கீழ்ச்சாதிகளில் ஓரளவு சொத்துடைமை இருந்தாலும் அவர்களுக்குச் சோறு போடுவது அவர்களது உழைப்பு தான். திருமணத்தால் ஆடவனுக்குக் குடும்பத்தில் வரும் அதிகச் செலவை மனைவியாக வருபவள் உழைத்து ஈட்டி விடுகிறாள். அத்துடன் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பேணுவதும் பெரும்பாடல்ல, ஏனென்றால் மிக இளம் பருவத்திலேயே அக்குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் உழைத்து ஈட்டத் தொடங்கி விடுகின்றனர். அதனால் கீழ்ச்சாதிகளிடையில் திருமணம் நடத்தப் பெரும்பணம் திரட்ட வேண்டும் என்பதற்காகக் காலங்கடத்தத் தேவையில்லாததால் ஆணும் பெண்ணும் பருவமடைந்த உடனேயே மணம் முடித்து விடுகின்றனர். அத்துடன் மணப்பெண் ஏற்கனவே மணமானவளா, குழந்தைகள் உள்ளவளா என்பதும் பெரும் கேள்வியல்ல, ஏனென்றால் குழந்தைகளோ மனைவியோ அவனுக்குத் தனிச் சுமை எதையும் கொடுக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதற்கென்று பெரும் செல்வம் எதுவும் இல்லாததால், ஆண் தனக்கேயுரிய குழந்தை வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.

மாறாகப் பணம் படைத்தோராகிய மேல் சாதியினரிடையில் மேலே கூறப்பட்டது போல் சொத்துரிமைக்காகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதோடு மனைவி ஆடவனுக்குப் புதிய சுமைகளைக் கொண்டு வருகிறாள். நம் குமுகத்தில் ஒருவனுடைய வாழ்க்கைத் தரம் அவன் மனைவியிடம் காணப்படும் ஆடம்பரத் தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடப் பெறுகிறது. இந்தத் “தோற்றத்தை”ப் பேணி வருவதற்கும் குழந்தைகளை “நல்ல நிலைமைக்கு”க் கொண்டு வருவதற்கும் தேவையான அடித்தளம் உருவாவதுவரை ஆடவன் காத்திருக்க வேண்டியுள்ளது. பெண்ணிடமிருந்து முடிந்த அளவு சீதனத்தைக் கறப்பதற்காகப் பல பெண்களைப் பார்த்துத் தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அக்கம் பக்கத்தில் பெண்ணே இல்லாதது போல் நாடு நகரம் கடந்து பெண் தேட வேண்டியுள்ளது. இதனால் ஆண், பெண் இருவர் திருமணங்களுக்கும் காலம் கடந்து கொண்டே போகிறது. (இதனால் ஏற்படும் உடன் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்).

கீழ்ச்சாதிகளில் மணவிலக்கு மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதால் மணப் பொருத்தத்துக்கென்று சோதிடம் போன்ற மிக நுணுக்கமான பொருத்தங்கள் பார்த்துக் காலத்தை வீணாக்குவதில்லை. கோயில்களில் “பூக்கட்டிப் போட்டு”த் திருவுளம் அறிவதோடு சரி. “பூவா, தலையா” பார்ப்பதற்கு இணையானதே இது. ஆனால் மேற்சாதிகளில் மணமக்களுக்குள் முறிவோ, கணவன் சாவோ பெண்ணை நிலையான வாழாவெட்டியாக்கிவிடும். எனவே பன்னிப் பன்னிப் பொருத்தம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழ்ச் சாதிகளில் மணவிலக்கு, மறுமணம் ஆகிய உரிமைகள் இருந்தாலும் அவர்களில் பொருளியலில் உயர்ந்து விட்டவர்களிடையில் பெண் இந்த உரிமைகளைக் கொண்டாட முடிவதில்லை. ஏனென்றால் இங்கு பெண் கணவனுக்குச் சுமையாகிறாள். எனவே “கைபடாத கனிகள்” கிடைக்க வாய்ப்பிருக்கும் போது அவன் ஏன் “எச்சிற் கனிகளை” நாட வேண்டும்? அதே நேரத்தில் இருக்கிற வளவாழ்வை விட்டு ஏழ்மை நிலையிலுள்ள ஒரு கணவனையே நாட வேண்டி வரும் என்பதால் பெண் தன் மணவிலக்கு-மறுமண உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை. எனவே இங்கு பார்ப்பனியம் எனப்படும் “வெள்ளாளக் கட்டு” தன் முழு வலிமையோடு செயற்படுகிறது.

எனவே பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புவோர் அதனை இன்றும் நம் குமுகத்தில் கடைப்பிடித்து வரும் கீழ்ச்சாதியினரின் பண்பாட்டைப் பற்றிக் கொண்டே அப்பணியைத் தொடங்க வேண்டும்.

பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமண உரிமைகள் பற்றிக் கூறும்போது அது வரைமுறையில்லாத புணர்ச்சியைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் வரைமுறையில்லாமல் பெண் யாருடனும் எப்போதும் தன் விருப்பம் போல் உறவு கொள்ளலாம் என்பது இதன் பொருளில்லை.

பெண்ணுரிமை என்பதற்கு “ஒரு பெண் ஓர் ஆடவன் மேல் ஏற்பட்ட விருப்பம் தவிர்த்த வேறெந்தப் பொருளியல் அல்லது குமுகச் சூழலாலும் அவனோடு உறவு கொள்ளக் கட்டாயத்துக்கு உள்ளாகாமலிருப்பதே” என்றார் லெனின். விலைமகளிர் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பல பெண்கள் பெற்றோரின் நெருக்குதலுக்குப் பணிந்தும் பல பெண்கள் வளமான வாழ்வுக்காகவும் தம் விருப்பத்துக்கு மாறான ஆடவர்களுடன் உறவு கொள்ள நேரிடுகிறது. அதே போல் மனம் ஒன்றாத கணவனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிலையிலும் பல பெண்கள் உள்ளனர்.

மறுபுறம் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் ஓர் ஆடவன் தொடர்புறும் போது அதன் விளைவு ஆடவனை உலகுக்குக் காட்டிக் கொடுப்பதில்லை. பெண் மட்டும் அதன் விளைவுக்குப் பலியாகிறாள். தாய்மையே பெண்மையின் சிறப்பு என்று மேலுக்குப் பறைசாற்றும் நம் குமுகம் மணமாகாத பெண்ணின் தாய்மையை எண்ணிப்பார்க்க முடியாத அளவு இழிவுபடுத்துகிறது. இந்த நிலையை மாற்ற சோவியத்து நாட்டு அரசு திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற பெண்களைத் “திருமணமாகாத அன்னையர்” என்று அழைத்து அவர்களுக்கு வாழ்க்கைப் பணமும் வழங்குகிறது. இருந்தாலும் அங்கு அத்தகைய பெண்களைப் பற்றிய பழைய கருத்துகள் இன்றும் வலிமையாக இருப்பதால் சில கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டிருப்பனவாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் கருவுறும் பெண்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துணியாமல் அடிக்கடிக் கருக்கலைப்புச் செய்து கொள்வதால் மலடாகி விடுவதாகவும் அதனால் அங்கு, அதிலும் குறிப்பாகத் தொழில் வளர்ச்சி மிகுந்த உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பெண்களுக்குப் பாலியல் உறவில் ஆண்களோடு சரிசமமான உரிமை தேவை என்பது, குறிப்பாகப் பெண்கள் மனதில் பதியும் படியாக உணர்த்தப்பட வேண்டும்.
[1]

இன்று பல பெண்கள் படித்து மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போனாலும் கூட பெண்ணின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. பெண்ணின் வாழ்வு மேம்பட வேண்டுமென்பதிலோ பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ சிறிதும் கவலை கொள்ளாதவரும் எதிர்ப்பவர்களும் கூட படித்த, வேலை பார்க்கும் பெண்களையே மணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். படிக்கும் பெண்களைப் பற்றியும் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து கொண்டே தன் தங்கை, மனைவி அல்லது மகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தம் தங்கை, மனைவி, மகள் ஆகியோரைப் பணத்திற்காகப் பிறரின் காட்சிப் பொருளாகவோ, விலைமகளிராகவோ பயன்படுத்தினால் என்ன மனநிலையிலிருப்பார்களோ அதே மனநிலையில் தான் அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார்கள். நாளுக்கு நாள் நஞ்சு போல் ஏறிவரும் கொடும் விலைவாசியும் அணைபோட்டுத் தடுக்கமுடியாத ஆவலாதிகளும் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதில் ஏற்படும் கட்டுக் கடங்காச் செலவுகளும் கட்டாயப் படுத்தி ஆடவர்களை இந்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. படித்த பெண் இதனால் உண்மையில் விடுதலை பெறவில்லை. மாறாக முன் எப்போதையும் விட அதிகத் தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளாள். கல்வி பெற்று வேலை வாய்ப்புகளும் பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று திரு.வி.க.வும், மு.வ.வும் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நிகழ்வுகள் அமைந்துள்ளன. கல்வியும் வேலை வாய்ப்பும் இன்று உரிமைகளாயில்லை, சலுகைகளாகவே உள்ளன. இச்சலுகைகளைப் பெற அவளது பெண்மை முன்னிலும் பன்மடங்கு பல வேளைகளில் இழிவுபடுத்தப்படுகிறது. படித்து வேலை பார்க்கும் பெண் தன் வேலை, தன் குடும்பம் என்ற இரண்டு சிறைகளினுள் அடைக்கப்பட்டுத் தன் பண்பாட்டு வளர்ச்சி முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையில் நிற்கிறாள். இதிலிருந்து அவளை விடுவிக்கப் பெண் விடுதலை என்ற பெயரில் செயற்படும் இயக்கங்கள் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகின்றன.

மாறாக, நாட்டுப்புறத்திலும் நகர்ப்புறங்களிலும் வாழும் படிப்பால் பிழைக்காத கீழ்ச்சாதிப் பெண்களில் ஏறக்குறைய எல்லோருமே உழைக்கிறார்கள். வேளாண்மை, கட்டுமானத் தொழில், நெசவு, பீடிசுற்றுதல், தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில், பனைஓலைத் தொழில், பாய்முடைதல் மற்றும் எண்ணற்ற வகை வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் ஆண்களை விடப் பெண்களே மிகுதி. இவ்வகைக் குடும்பங்கள், பெரும்பாலானவை பெண்ணின் உழைப்பாலேயே வயிற்றைக் கழுவுகின்றன. இன்று பெரும்பாலான ஊர்ப்புறத்து ஆடவர்களுக்கு வேலைவாய்ப்பு அருகி வருகிறது. எனவே பெண் ஈட்டும் பணத்தில் தான் குடிப்பதற்கும் சூதாட்டத்துக்கும் திரைப்படத்துக்கும் ஆடவன் செலவு செய்கிறான். பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டு ஆடவன் மட்டும்தான் இவ்வாறு செய்கிறான் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு விதியாகவே செயற்படுகிறது என்பது பெண்களுக்குத் தெரிவதில்லை. பெண்ணின் இந்த அறியாமையினால் இன்னொரு வகைத் தீமைக்கும் அவள் ஆளாகிறாள். தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஏதோவொரு தொழில் செய்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவதாக அவள் கருதுவதால் தன் உழைப்பின் உண்மையான மதிப்பை உணராமல் ஏதோ கிடைத்தவரை ஆதாயம் என்று நினைக்கிறாள். எனவே அவளது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகிறது. தன் உழைப்பினால்தான் குடும்பமே நடைபெறுகிறது என்பதை உணராததால் அவள் தன் உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்படுகிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் ஆணுக்கு அடங்கியவள் என்று அவள் காதில் ஓதப்பட்டவை, அவள் பார்க்கும் திரைப்படங்கள், எப்போதாவது அவள் படிக்கும் அல்லது கேட்கும் கதைகள் இவையனைத்தும் சேர்ந்து அவளைத் தன் உரிமைக்காகப் போராடாமல் தடுத்து வைத்துள்ளன. குடும்பப் பொருளியலில் அவள் ஆற்றும் பங்கைப் புலப்படுத்தி, தான் உள்ளாக்கப்படும் சுரண்டலுக்கெதிராகப் போரிட அவளை ஆயத்தப்படுத்தும் போது தான் தன் அடிமை விலங்கனை உடைத்தெறியத் தேவையான தெளிவு அவளுக்குப் பிறக்கும். படிப்பால் பிழைக்கும் பெண்களின் விடுதலைக்கும் வழி பிறக்கும்.

ஒரு குமுகத்திலுள்ள ஆண்-பெண் உறவுநிலைக்கும் அக்குமுகத்திலுள்ள மக்களின் ஒற்றுமைக்கும் ஒரு தொடர்புண்டு. தனிக் குடும்பத்தின் வளர்ச்சி பற்றி ஆய்ந்த ஏங்கல்சு குமுகியல் ஆய்வாளர்களின் ஒரு முடிவைச் சுட்டிக் காட்டுகிறார்.[2] இவ்வாய்வாளர்கள் விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து எந்த ஒரு இனத்தினுள்ளும் கூடி வாழ்தலும் பாலியல் பொறாமையும் எதிர்விகிதத்தில் அமைந்துள்ளன என்பதே அது. பாலியல் பொறாமை குறைவாக உள்ள இனங்கள் பெருங்கூட்டங்களாக வாழ்கின்றன; பொறாமை மிகுந்த இனங்கள் தனித்தனிக் குடும்பங்களாக வாழ்கின்றன என்பது இதன் பொருள். பெரும்பாலான மனித இனங்களும் இன்று தனித்தனிக் குடும்ப அமைப்பில் இருந்தாலும் பலவற்றில் அக்குடும்பங்கள் நெகிழ்ச்சி உள்ளனவாய் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பியர்களிடையில் மணவிலக்கு, மறுமணம் போன்ற இறுக்கமில்லாத திருமண விதிகள் மட்டுமல்ல திருமண உறவை மீறிய பாலியல் உறவுகளும் இயல்பானவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கூட்டுணர்வு அவர்களின் வலிமைக்கு ஒரு முகாமையான காரணமாகும்.

அதே நேரத்தில் நம் நாட்டிலும் திருமண உறவை மீறிய பாலியல் உறவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் பாலியல் ‘உரிமம்’ சில குறிப்பிட்ட சாதிகளின் உள்ளே மட்டுமே கிடைக்கிறது. இது அந்தச் சாதியின் ஒற்றுமை உணர்வை வளரச் செய்கிறது. அதே நேரத்தில் அந்தச் சாதியினர் பிற சாதியினருடன் தமக்குள்ள பிரித்துணர்வையும் இது இறுக்குகிறது. இப்படிச் சில சாதிகளில் தமக்குள் அடங்கிய இந்தப் பாலியல் உரிமம் நாடு அல்லது தேசியம் என்ற அளவிலான ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறது. எனவே பெண்ணுக்கு நாம் விரும்பும் பாலியல் ‘உரிமம்’ என்பது சாதி வரம்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான தேசியம் என்ற வலிமையான உணர்வு தோன்றி வளர வழி ஏற்படும்.

இந்த இடத்தில் புலாலுணவு, பெண்ணுரிமை என்ற இரு பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் பெரியார் மேற்கொண்ட நிலையையும் அவற்றை அவர் அணுகிய முறையையும் நாம் சற்று நோக்க வேண்டும். புலாலுணவுக்கு மேற்சாதியினர் காட்டிய எதிர்ப்பை முறியடிக்கும் முறையில் தான் நடத்திய தீமிதிப்பு (பூக்குளி) நிகழ்ச்சிகளில் பன்றி இறைச்சியை அவரது தொண்டர்கள் உண்டார்கள். பெண்ணடிமையின் அடையாளமாகிய தாலியை அகற்றுவதை அவர் ஓர் இயக்கமாக நடத்தினார். ஆனால் புலாலுணவின் மேன்மையையும் எளிமையயும் பற்றியோ நாட்டுப் புறங்களில் பெண்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றியோ மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துப் பரப்பலை அவர் செய்யவில்லை. அவரது அணுகல் ஒருவகை “அடாவடி” அல்லது மறுப்பியல் (Nihilist) அணுகலாகவே இருந்தது. அவரது இயக்கம் மேற்சாதியினரை அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கியதாகவே அமைந்தது.

ஆண்-பெண் உறவுகளில் சீதனம், வரதட்சினை என்பவற்றைப் பற்றி ஒரு விரிவான ஆய்வு செய்யவில்லையெனில் அது முழுமையாகாது.

குமுகம் உடையாமல் இயற்கையிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்களைத் திரட்டி நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த நாட்களில் பெண்ணே குடும்பத் தலைவியாயிருந்தாள். ஆடவர் இரண்டாம் நிலையிலிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல மனிதனின் அறிவியலும் தொடர்புகளும் விரிவடைந்த நிலையில் இந்தக் குமுகக் கூட்டுழைப்பிலிருந்து ஆடவன் விடுபட்டான். வாணிகம், படைப் பணி, அரசுப் பணி போன்றவற்றுக்காக ஆடவர்கள் குமுகத்திலிருந்து பிரிந்தபோது பெண்ணும் அவனுடன் செல்ல வேண்டியவளானாள். எனவே குடும்பத்திலுள்ள அவளது சொத்தின் பகுதிக்கு இணையாக அசையும் சொத்துக்கள் சீதனமாக, பெண்ணின் சொத்தாக அவளுக்கு வழங்கப்பட்டன. அவை பெரும்பாலும் வீட்டுப் புழக்கப் பொருட்களாகவும் அணிகலன்களாகவும் இருந்தன. நாள் செல்லச் செல்ல பணமும் இதனோடு வழங்கப்பட்டதுண்டு. இந்தப் பொருட்களெல்லாம் என்றுமே அவளுக்குரியனவே. ஒருவேளை மகப்பேறில்லாமல் அவள் இறந்து விட்டால் அவை அவளது பிறந்தகத்துக்கு உரிமையாகும். இது பார்ப்பனர் உட்பட அனைத்துச் சாதிகளிலும் இன்றுவரை நடைமுறை.

பெண்ணின் சீதனத்துடன் பணம் கொடுக்கப்பட்டால் அதற்கு ஈடாக ஏதாவதொரு சொத்தைப் பெண்ணின் பெயருக்கு எழுதிவைப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல கீழ்ச்சாதிகளில் நடைமுறையாக இருந்தது. ஆனால் அம்முறை இன்று வழக்கிழந்துவிட்டது. இன்று அது வரதட்சிணை (மணமகனுக்கு அளிக்கும் காணிக்கை) என்ற பெயரில் மணமகன் வீட்டாரால் கைக்கொள்ளப்பட்டு விடுகிறது.

வரதட்சிணை என்பது இன்றைக் குமுகக் கொடுமைகளில் மிக இழிவான ஒன்றாக நிலவுகிறது. கூடுதல் வரதட்சிணைக்காக மனைவியைக் கணவனும் அவனது உறவினர்களும் கொடுமைப்படுத்துவதும் அவளைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணம்செய்து வரதட்சினை பெறுவதும் இன்று அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. படித்து வேலை செய்தாலும், சீதனமும் வரதட்சிணையும் கொண்டு சென்றாலும் பெண்மகளின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. அத்துடன் கணவன் தன் பெற்றோர்களுடனும் உடன் பிறந்தோருடனும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் கணவனின் அன்பை அல்லது அவன் மீது ஆதிக்கத்தைப் பெறுவதில் மனைவிக்கும் அவனது தாய், உடன்பிறந்தோர் ஆகியோருக்கும் இடையில் ஏற்படும் போட்டியில் பெண் தன் கணவன் குடும்பத்துப் பெண்களாலேயே இரக்கமற்ற கொடுமைக்காளாகிறாள். இதன் விளைவாகக் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனமாகின்றனர். எனவே பெரும்பாலான நேர்வுகளில் கணவனின் பெற்றோர் கைவிடப்படுகின்றனர். ஆண்மகன் பொறுப்பிலேயே பெற்றோர் விடப்படுவதாலும் பெண்கள் கணவனோடு சென்று விடுவதாலும் இச்சூழ்நிலை தாய்தந்தையரை ஆதரவற்றவர்களாக்கி விடுகிறது. இது நம் நாட்டில் மிக இயல்பான நிகழ்ச்சியாகிவிட்டது. அரசூழியம் செய்து ஓய்வூதியம் பெறுவோர்க்குக் கொஞ்சம் பணமாவது கிடைக்கும். மற்றையோருக்கு அதுவும் கூட இல்லையாதலால் அவர்கள் இரவலர்களாக வேண்டியுள்ளது.

வரதட்சிணை எதிர்ப்பு என்பது பெண்ணுக்கு அவள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பங்கை இழக்கச் செய்யும் வகையில் ஆண்மக்களுக்கு ஆதாயம் தரும் முழக்கமாக மாறிவிடக்கூடாது. அதே நேரத்தில் அவளுக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கு அவளுக்கு உதவாமல் கணவனுக்கும் அவள் குடும்பத்தாருக்குமாகப் பறிபோய்விடவும் கூடாது. எனவே அவளது பணம் மணமகனுக்குக் கொடுக்கப்பட்டால் முன்பு கீழ்ச்சாதியினரிடையில் வழங்கியது போல் அதற்கிணையான ஈட்டாவணம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதியவர்களுக்கான பராமரிப்புக்கு வேறொரு ஏற்பாடு செய்யலாம். பெண்கள் தத்தம் வீடுகளிலிருந்து கொண்டு மனைவி வீட்டுக்குக் கணவன் வாழவரலாம் அல்லது ஒவ்வொருவரும் தத்தம் முதுமைக்கென்று தமக்குப் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் உருவாக வேண்டும்.

பெண் எதனால் இவ்வாறாக ஆதரவற்ற நிலைக்கு வருகிறாள்?
இதற்கு நேரடிக்காரணம் கற்பு, மறைமுகக் காரணம் தாய்மை.

திருமணத்துக்கு முன் ஆடவரோடு கூடுவது கற்புக்குக் களங்கம். ஆனால் அதற்குச் சான்று கருவுறுவதே. எனவே கருவுறுவதாகிய தாய்மையே அவளுக்குப் பகையாகிறது. மணமான பின் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் கருவுற்றால் அவள் கள்ள உறவு கொண்டிருந்தால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. அதுபோல் கணவன் இறந்த பின் கருவுற்றாலும் களங்கம். இவ்வாறு ஒரு பெண் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் போது கற்பு தவறிவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முயலப்படுகிறது. இந்தப் பதற்றத்தில் மணமகன் வீட்டார் வரைமுறையின்றி மனம்போன போக்கில் “வரதட்சிணை” கேட்கிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மணமகனின் உடன்பிறந்த பெண்களுக்கு வரதட்சிணை கொடுப்பதற்காகவே பல நேர்வுகளில் மணமகளின் வரதட்சிணை பயன்படுகிறது. இவ்வாறு மணமகனின் வரவும் செலவும் சரியாகவே போய்விடுகின்றன. எனவே வரதட்சிணை வாங்காமலிருந்தாலும் இதே சமநிலை உருவாகும். ஆனால் அதை எங்கே எப்போது தொடங்குவதென்பது தான் கேள்வி.

இவ்வாறு பெண் எப்போதும் கணவனுக்குக் கட்டுப்பட்டும் கணவன் இல்லாத போது அஞ்சி அஞ்சியும் வாழ நேரிடுவதற்கு கற்பு பற்றிய பதற்றமே காரணம் என்பது முடிவாகிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகள் தாங்க முடியாமற் போகும்போது இந்தக் கற்புக் கோட்பாடு தானே உடையும். அப்போது பெண்கள் உண்மையில் விடுதலை பெறுவார்கள்.

ஆண்-பெண் சமத்துவத்தின் முதற்படியாக நாம் செய்யக் கூடுவது கல்வி நிலையங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனி நிறுவனங்கள் இருக்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் அனைத்து நிலையிலும் கலந்து பழக அனுமதிக்கப்பட வேண்டும். இதன் பக்க விளைவாகக் கல்வி நிறுவனங்கள் சில சமய நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கும் நிலைமாறும்.


பேருந்துகளில் ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி இருக்கைகள் ஒதுக்கியிருக்கும் முறை மாற்றப்பட வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் ஒரு பிற்போக்கு முறையாகும்.
மனிதப் பிறவியில் தாய்மைக்குரிய அமைப்புகளுடன் விளங்குவதால் பெண் மேம்பட்டவள். ஆனால் இந்த மேம்பட்ட நிலையே அவளுக்குச் சுமையாக கழுத்திலும் காலிலும் கட்டித் தொங்கவிடப்பட்ட பாரமாக மாறிவிட்டது. இதிலிருந்து அவள் விடுவிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் தாய்மைக்காகவே வணங்கப்பட்டாள். பெண் கருவுற்ற பின்னரே அவளுக்கு மணமுடிக்கப்பட்டது. அவள் யாரால் கருவுற்றாள் என்பது ஆராயப்படவில்லை. அவளால் தாய்மை எய்த முடியுமா என்ற கேள்விக்கு விடையாகவே அவளது தாய்மை மதிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு கருவுறுவதே திருமணத்துக்கான அவளது தகுதியாகக் கருதப்பட்டது. அன்று பெண் ஆணின் ஈட்டத்தை அடையவிருக்கும் வழித்தோன்றல்களை ஈனும் கருவியாக இருக்கவில்லை. மாறாகத் தங்கள் குழுவுக்கு உழைக்கவும் அதைப் பாதுகாத்துப் போரிடவும் தேவையான குலப் பெருக்கத்துக்குத் தேவையானவளாகக் கருதப்பட்டாள். இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது பெண்ணுக்குச் செய்யப்படும் வளைகாப்பு தான் உண்மையான பழைய திருமணம். ஏனென்றால் முன்பு கணவன் இறந்தால் பெண் தன் கைவளையல்களை உடைத்தே கைம்மையினுள் நுழைந்தாள். கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறிய போது தன் கைவளையல்களைத்தான் உடைத்துக் களைந்துவிட்டுப் போகிறாள். வளைகாப்புதான் முந்தியல் திருமணச் சடங்கு என்பதற்கு இது ஒரு தடயமாகும்.

இன்றும் சில குக்குல மக்களிடையில் பெண் கருவுற்ற பின்பே திருமணம் நடைபெறுகிறது. பெண் கருவுறக் காரணமானவன் கணவனாவதில்லை. கோவை இருளர்களைப் பற்றிக் கூறும் வனாந்தரப் பூக்கள் எனும் நூலில் இது கூறப்படுகிறது.
[3]

இன்றைய குமுகத்தை ஆணாதிக்கக் குமுகம் என்று அழைக்கிறோம். ஆனால் மனித இனத்தின் தொடக்க காலத்தில் அது ஒரு பெண்ணாதிக்கக் குமுகமாக இருந்தது. ஆண் பெண் புணர்ச்சிக்கு வரைமுறை கிடையாது. எனவே எந்தக் குழந்தைக்கும் தந்தையை அறிய முடியாது. ஆகவே தாய் மட்டுமே அறியத்தக்க ஒரே பெற்றோர். உறவுகள் அனைத்தும் தாயின் வழியிலேயே இருந்தன. குலங்கள் தாயின் பெயரிலேயே அறியப்பட்டன. நம் நாட்டிலும் ஏழு பெண்களே அனைத்துச் சாதிகளின் மூலவர்களாகக் குறிப்பிடுப்படுகின்றனர்.

வரைமுறையில்லாத பாலுறவு நிலையில் இனப்பெருக்கத்துக்குப் பல பெண்களுக்கு ஒரே ஆண் போதுமானவன். ஆனால் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஏறக்குறைய சம எண்ணிக்கையிலேயே அமைவர். இதனால் ஆடவன் அன்றைய குமுகத்தில் அதிகப்படியானவனாகவே கருதப்பட்டான். பெண்கள் தத்தம் மக்கள் மீது தமக்கிருந்த செல்வாக்கினால் ஆடவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இது நாளடைவில் ஆடவர்களிடத்தில் எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள், பெண்களை எதிர்ப்பதற்கு ஒரு வகையான இயக்கத்தைத் தொடங்கினர். இதனைத் “தலைமறைவுச் சங்கங்கள்” என்று மாந்தநூலார் அழைக்கின்றனர். ஆடவர்கள் அண்டையிலுள்ள காடுகளுக்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினர். தத்தம் கூட்டத்தில் உள்ள சிறுவர்கள் பருவமெய்தியதும் அவர்களைக் கடத்தி வந்து அவர்களின் சிந்தனையைத் திருப்பித் தம்மோடு வைத்துக் கொண்டனர். இதனால் இருபாலருக்கும் நெருக்கடிகள் தோன்றின. அதிலும் ஆண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே மிகுதி. ஏனென்றால் பெண்களிடையில் எப்படியாவது சில ஆடவராவது எஞ்சியிருந்தனர். எனவே ஆண்கள் செயற்கையான பாலுறவு முறைகளை வளர்த்தனர். பெண்களிடையிலும் செயற்கை முறைகள் உருவாயின. அவற்றின் விளைவாகப் பாலியல் நோய்களும் உருவாயின. ஆண்குறியின் மேல்தோலை அகற்றுதல், பெண் குறியிலுள்ள நாக்குப் பகுதியை அகற்றல் போன்ற நடைமுறைகள் இப்பழக்கங்களின் பின்தொடர்ச்சியே. தன்னினப் புணர்ச்சிக்கு பல்வேறு சமயங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளும் இதன் விளைவேயாம்.

ஆடவர்களின் இந்தப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? ஒரு கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஆடவர்கள் பிற கூட்டத்தைச் சேர்ந்த பெண்களைத் தூக்கி வந்து கூட்டாகப் புணர்ந்தனர். பின்னர் நாளடைவில் ஒவ்வொரு கூட்டத்து ஆடவரும் பிற கூட்டத்து பெண்களுடன் உறவு கொள்ளும் புற மண வழக்கம் உண்டாகியது. அது மட்டுமல்ல முன்பு ஒரு தாயாதிக் குடும்பத்தினுள் நிலவி வந்த பாலுறவு மறைந்து அதன் இடத்தில் பல்வேறு வடிவங்களிலான மண உறவு முறைகள் உருவாயின.

மனித இனம் இயல்பில் வரைமுறையற்ற பாலுறவு கொண்டது. அதனால் ஏற்பட்ட இறுக்கமான ஒற்றுமை பிற உயிரினங்களை வெற்றி கொண்டு வளர்வதற்கேற்ற வலிமையை அதற்குக் கொடுத்தது. ஆனால் அதே வளர்ச்சியே நாளடைவில் அந்த ஒற்றுமைக்கு அறைகூவலாக அமைந்தது. அதற்கு விளைப்பு உத்திகளில் ஏற்பட்ட மேம்பாடுகளும் அதனால் ஏற்பட்ட விளைப்புப் பெருக்கமும் காரணமாக அமைந்தன. வாணிக வளர்ச்சி, அதனால் உருவான பாதுகாப்புச் சிக்கல்கள், வாணிகத்திற்குத் தேவைப்பட்ட படைப் பாதுகாப்பு அதன் வளர்ச்சியிலிருந்து உருவான அரசு போன்ற அமைப்புகள் குமுகக் கூட்டு உழைப்பிலிருந்து ஆடவரில் ஒரு பகுதியினரை விடுவித்தன. பெண்ணின் தாய்மை, அதன் தொடர்ச்சியான குழந்தையைப் பேணுதல் முதலியன அவளை இத்துறைகளில் ஆணுடன் போட்டியிட முடியாதவளாக்கின. சிறிது சிறிதாக பெண்ணின் தலைமை வலுவிழந்தது. ஆணின் நிலைமை வலுப்பெற்றது. அப்போதும் கூட ஆண்-பெண் உறவில் ஈரடுக்கு அமைப்பு ஒன்று இருந்தது. குழுவின் தலைவனின் குடும்பம் ஆண் தலைமையுடையதாகவும் மற்றவை பெண் தலைமையுடையவையாயும் இருந்தன. கேரளத்து நாயர்களின் முன்னாள் குடும்ப அமைப்பு இத்தகையது. தமிழகத்திலும் இத்தகைய அமைப்பு இருந்தமைக்குத் தடையங்கள் உள்ளன.

கூட்டுழைப்பிலிருந்து விடுபட்டு ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு உயர்ந்த ஆடவனுடன் வாழப் பெண்கள் புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்டவர்கள் கைவிடப்பட்ட போது நெருக்கடிகள் உருவாயின. விலைமகளிர் உருவாயினர். திருமணம் என்ற ஒப்பந்த முறையும் உருவானது. பெண் ஆடவனை அண்டி வாழ வேண்டியவளானாள்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
(தொல்காப்பியம்)

அதே போல் நிலத்தை ஆள்கின்ற நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் கூட துணைவியான பெண் அவனை அண்டி வாழ வேண்டியவளானாள். கூட்டுழைப்பில் வாழ்ந்த பெண்ணுக்கிருந்த தற்சார்போ, துணிவோ, வழிவகையோ அவளுக்கில்லை.

இவ்வாறு பெண்ணின் அடிமைத் தனத்தின் வடிவமாகத் தனிக் குடும்பம் உருவானது. பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்தன.


தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவின் பல்வேறு நிலைகளை நம்மால் உய்த்துணர முடிகிறது. காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு அவனைப் புணர்ந்து பிரிந்து செல்லும் “கூடல்” கட்டத்துக் குறிஞ்சித் திணை, தாம் விரும்பும் வரை மட்டும் சேர்ந்திருந்து வாழும் “இருத்தல்” கட்டத்து முல்லைத் திணை, வாணிகமோ, படைப்பணியோ, அரசூழியமோ செய்வதற்காகத் தம் கூட்டத்தை விட்டுச் செல்லும் ஆடவனுடன் பெண்ணும் “பிரிந்து” செல்லும் பிரிவு காட்டும் பாலைத் திணை, கணவன் பிற பெண்கள், அதாவது பரத்தையருடன் உறவு கொள்வதை அறிந்தும் அவனைப் பிரிந்து செல்லும் துணிவைத் தராத பொருளியல் சூழலில் “ஊடல்” செய்ய மட்டும் உரிமை கொண்டிருந்த மருதத் திணை, கணவனைப் பிரிவிலோ, சாவிலோ இழந்து விட்டால் அத்துடன் வாழ்வையே இழந்து பிரிவை நினைத்து இரங்கி வாழும் கைம்மை நிலையைக் காட்டும் நெய்தல் திணை என்பவை பொருளிலக்கணத்தின் மூலம் வெளிப்படும் கட்டங்களாகும். தொல்காப்பியத்தில் பெண்கள் கடற்பயணம் செய்யக் கூடாது என்ற தடையைக் காண்கிறோம். பெண்களின் குமுகச் செயற்பாடுகளில் இடப்பட்ட தடைகளுக்குத் திட்டவட்டமான ஒரு சான்றாகும் இது.

தமிழக மக்களின் பண்டை வரலாற்றின் சில மிக முகாமையான செய்திகளைத் தன்னகத்தே வைத்துள்ள சிலப்பதிகாரம் பெண்ணின் நிலைமையைப் பற்றிய சிறப்பான சில செய்திகளைக் கூறுகிறது.

1. குன்றக் குரவையில் குறவர் பெண்கள் தங்கள் காதலர்களையே மணம் செய்யவும் பிறரை மணம் செய்வதை விலக்கவும் வரமருளுமாறு கண்ணகியை வேண்டுகின்றனர். குறிஞ்சி நிலப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காட்டும் காட்சி இது.

2. தலைக்கோல் பெற்ற கணிகையாகிய மாதவி தன் குமுகக் கடமையாக இந்திர விழா போன்ற நிகழ்ச்சிகளில் ஆடச் செல்வதைக் கோவலன் விரும்பவில்லை. அதனை மீறி அவள் நடப்பதற்காக அவன் ஊடியிருந்ததைக் கடலாடு காதையில் காண்கிறோம்.

3. அதே போல் கோவலனிடம் தன் உள்ளடக்கிடக்கையை எடுத்துக் கூறிய கண்ணகி தனக்கு அவன் இழைத்த கொடுமைகளில் பெரியதாக அருளாளர்களையும் விருந்தினர்களையும் பேணுவதாகிய குமுகப் பணிகளைச் செய்யவொட்டாமல் தடுத்ததே என்று கூறுகிறாள் (கொலைக்களக் காதை).

4. கோவலன் கொலையுண்டதை அறிந்து கண்ணகி பெண்கள் மீது சுமத்தப்படும் கைம்மைக் கொடுமைகளை எடுத்துக் கூறி அத்தகைய கைம்மையைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறாள். அந்தச் சூளுரையின் விளைவு தான் அவளது தொடர்ந்த செயற்பாடுகள்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் பெண்ணுரிமை, பெண்ணடிமை போன்ற கருத்துகள் பற்றிய கலந்துரைகள் வெளிப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலையின் தலைவி திருமணம் இல்லாமலேயே வாழ்கிறாள். மக்கள்தொண்டு புரிகிறாள். அரசனை எதிர்த்து இயக்கமே நடத்துகிறாள்.

இதற்கும் மேலே சென்றுள்ளது குண்டலகேசி காவியம். அக்காவியத்தின் தலைவியாகிய வாணிக குலப்பெண் கொடியவனான கொள்ளையன் ஒருவனைக் காதலித்துப் பின்னர் அரசனால் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவனை மீட்டுத் திருமணம் புரிந்து கொண்டாள். பின்னர் ஒரு முறை அவர்கள் கேளிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த போது கணவனை விளையாட்டாகக் கொள்ளைக்காரன்தானே என்று கூறியதை அக்கொடியவன் மனதில் வன்மமாக வைத்திருந்தான். மலை வளம் காண்போமென அழைத்துச் சென்று மலை உச்சியிலிருந்து அவளை உருட்டி விடப் போவதாகக் கூறுகிறான். அவளோ அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து தானே முந்தி அவனை உருட்டி விட்டுக் கொன்று விடுகிறாள்.

இந்தக் கதையின் தலைவி, இக்கதையின் திரைப்படத் தழுவலாக வந்த ‘மந்திரிகுமாரி’யின் தலைவியைப் போலவோ “அந்த நாள்” தலைவியைப் போலவோ நாட்டுப்பற்றுக்காகத் தன் கணவனை “ஈகம்” செய்யவில்லை. தனக்காக, ஒரு மனிதப் பிறவியாகிய தன் உயிரைக் காத்துக் கொள்ளத் தன்னைக் கொல்ல வந்த கணவன் எனும் உறவு கொண்டவனாயினும் இன்னொரு மனிதப் பிறவியைத் தானே முந்திக் கொன்றாள். அவ்வாறு ஒரு மனிதப் பிறவியாகத் தனக்குள்ள தன்னுயிர் காக்கும் உரிமையைக் காத்து நின்றாள். அக்காவியமும் அவளைத் “தற்கொல்லியை முற்கொல்லி” என்று அழைத்து அவளுக்குள்ள உயிர்வாழும் உரிமையை வலியுறுத்துகிறது.

இக்கதைத் தலைவி துறவு மேற்கொண்டு புத்த சமயத்தைத் தழுவிப் பெரும் புகழ் பெற்றதாக அந்தக் கதை கூறுகிறது.

புத்த சமயத்தின் இக்கதைக்குப் போட்டியாகக் கணவனால் கொல்லப்பட்டுப் பேயாகிப் பின்னர் அவனைக் கொன்று பழிவாங்கிய நீலி மறுபிறவியில் நீலகேசியாகப் பிறந்து சமணத் துறவியாகிப் புகழ்பெற்றதாக நீலகேசி காவியம் கூறுகிறது.

இவையெல்லாம் பெண்ணுரிமை குறித்து அவ்வப்போது தோன்றிய இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகள் எந்த அளவுக்கு உண்மையில் பெண்களின் உரிமைகளின் வெளிப்பாடுகள் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றமும், பொருளியலில் ஓரளவு தற்சார்பும் பெற்ற நிலையிலும் கூட நம் இலக்கியம் பெண்ணுரிமையைப் பொறுத்த வரை இந்த உயரத்தை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு பெண்ணுரிமையைப் பொறுத்து ஒன்றோடொன்று போட்டி போட்ட இவ்விரண்டு சமயங்களும் பிற்காலத்தில் பெண்களைப் பாவப் பிறவிகளென்று கூறின.

சிவனியத்தின் எழுச்சிக்குப் பல்லாண்டு பாடியவர் காரைக்காலம்மையார். அதன் முன்னேற்றத்துக்குத் திலகவதி, மங்கையர்க்கரசி போன்ற பெண்கள் ஆற்றிய தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் வெற்றி பெற்ற சிவனியம் பெண்களை இழி பிறவிகளாகவே மதித்தது.

மாலியத்திற்கு ஆண்டாளின் பணி அளப்பரியது. ஆனால் வலுப்பெற்ற மாலியம் பெண்களை மதிக்கவில்லை.

இவையனைத்தும் சுட்டிக்காட்டுவது ஒரே உண்மையைத்தான். குமுக இயக்கங்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு உத்தியாகவே பெண்ணுரிமையை எடுத்துரைக்கின்றனவேயன்றி பெண்ணுரிமை மீதுள்ள ஆர்வத்தினாலல்ல என்பதே அது. இதைத் தான் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் கூறுகிறார். இந்த நிலையில் பெண்களே தலைமை தாங்கி நடத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து பணத்தையும் முழக்கங்களையும் இரவல் வாங்கிச் செயற்படும் இயக்கங்கள் என்று பல உள்ளன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வரதட்சிணை ஒழிப்பு என்ற முழக்கங்களை இவை வைக்கின்றன. பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு என்ற கேள்வி மெல்லியதாகவே கேட்கிறது.

பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு, அனைத்துத் தொழிலிலும் ஈடுபட உரிமை என்ற கேள்விகள் எழுந்தாலும் அதனுள்ளே இருக்கும் ஒரு பெரிய சிக்கல் பெரும் தடங்கலாக இருக்கிறது. இதன் விளைவாக உண்மையிலேயே பெண்ணுரிமையை விரும்புவோரும் விரும்புவோர் போலக் காட்டிக் கொள்வோரும் ஒரு குறையை முன் வைக்கிறார்கள். பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்க முன் வந்தாலும் அவர்கள் பின்னணியிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்பது தான் அந்தக் குறை. இப்படி ஒரு நிலைமை இருப்பது உண்மைதான். இதற்கு மூன்று காரணங்களை முகாமையாகக் கூறலாம்.

முதற்காரணம் ஒருவகைக் கூச்சம். இதுவரை வீட்டினுள்ளும் மிஞ்சிப் போனால் கல்வி நிலையங்களுக்குள்ளும் அடங்கிப் போயிருந்த பெண்கள் திடீரென்று வெளியில் வந்து தாராளமாகப் பழகுவதில் உள்ள கூச்சம். இந்தக் கூச்சம் பெரும்பாலான ஆடவர்களிடமும் கூட உண்டு. இதனாலேயே பலர் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் அதை அவர்கள் தவிர்க்கக் காரணமாகிறது. பெண்களிடையில் குமுகச் சூழலால் உருவான கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலகி அதனால் இக்கூச்சமும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இரண்டாவது காரணம் மெத்தனம். இப்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்குச் சில வசதிகள் இருப்பதாகக் கருதுகிறார்கள். தம் தலை மீது சுமைகள் எதையும் தாங்க வேண்டியதில்லை. பணம் ஈட்டல், அவற்றுக்கு ஏற்றவாறு செலவுகளை முறைப்படுத்தல், செலவுகளின் முன்னுரிமையை முடிவு செய்தல், பணம் ஈட்டுவதிலுள்ள ஒழுக்கம், தன்மானம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளல் போன்ற பொறுப்புகளிலிருந்து தப்புவது போன்றவை குடும்பத்தினுள் உள்ள வசதிகள்.

பேருந்துகள், திரைப்பட அரங்குகள் போன்றவற்றில் பெண்களுக்கென்று மட்டும் ஒதுக்கீடுகள், சில துறைகளில் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கருத்து நிலவுதல் போன்ற சிறப்புச் சலுகைகள் போன்றவை பெண்களை இன்று நிலவும் அமைப்பை உடைத்து விடுபட வேண்டுமென்ற வேட்கையைப் பரவலாக ஊட்டவில்லை.

மூன்றாவது காரணம் முகாமையானது மட்டுமல்ல பிற இரண்டு காரணங்களுக்கும் அடிப்படையானது. புறமனதில் வெளிப்படாமல் உள்மனதில் மறைந்து நின்று செயற்படுவது. அதை நாம் பெண்மை அச்சம் என்று குறிப்பிடலாம். தாய்மை அச்சம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்.

பெண் புறவாழ்வில் ஈடுபட்டால் பலதரப்பட்ட ஆண்களோடும் பழக வேண்டியிருக்கும். இரவு, பகல் என்ற வேறுபாடு, உள்ளூர், வெளியூர் என்ற வேறுபாடு இன்றிப் பழகவேண்டியிருக்கும். அத்தகைய சூழல்களில் அவள் விரும்பியோ விரும்பாமலோ திருமணத்திற்கு முன்பாக அல்லது திருமணத்துக்குப் புறம்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளநேரும். அது வெளிஉலகுக்குத் தெரியாமலிருந்தாலும் தாய்மை மூலம் வெளிப்படலாம். அதன் மூலம் அவள் குடும்ப வாழ்வும் குமுக வாழ்வும் பாதிக்கப்படுவது இன்றைய நிலையில் உறுதி. இன்று ஒரு பெண் பிற ஆடவர்களுடன் தன் தொழில் தேவைகளுக்காகக் கூட குமுகம் விதித்திருக்கிற வரம்புக்கு அதிகமாகப் பழகினால் அவள் மீது ஐயங்கொள்கிறது. குமுகக் கட்டுபாட்டை மீறுபவளென்று குற்றம் சாட்டுகிறது. அவளை ஒதுக்கி வைக்கிறது. பெண்கள் அவளை ஏளனம் செய்கின்றனர். ஆண்கள் அவள் பெண்மையை மலிவாகக் கருதுகின்றனர். வீட்டினுள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கணவனும் அவளை நம்ப மறுக்கின்றனர். அவள் தன்மானத்துடன் வாழ்வது இயலாமற் போகிறது. அளவிலாத் துணிவும் திறமையும் பெற்ற சிலர் இச்சூழலிலும் புறவாழ்வில் வெற்றி பெறுகின்றனர். பலர் பொருளியல், அரசியல் பின்னணியினால் நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் பற்றி இழிசொற்கள் கூறப்பட்டாலும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் எல்லையை அவர்கள் தாண்டி நிற்கிறார்கள்.

வரலாற்றில் குறிப்பாகப் பிற்போக்கு நிலவிய இடைக்காலத்திலும் பெண்கள் புறவாழ்வில் ஈடுபட்டுப் புகழெய்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் ஏதோவொரு விலைகொடுக்க வேண்டியிருந்தது. காரைக்காலம்மையார் பேயுருக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் சரியாகப் புரியவில்லை. ஆனால் பெண்ணென்ற வகையில் ஆண்கள் நெருங்க முடியாத ஓர் உருவத்தை அவர் பூண்டார் என்பது புலனாகிறது. ஒளவையார் என்ற பெயரில் அழைக்கப்படும் பெண்கள் கிழவிகளாகவே குறிப்பிடப்படுகின்றனர். முதுமை எய்திய பின்னர் தான் புறவாழ்வில் ஈடுபட்டனர் என்பது இதன் பொருளாயிருக்கலாம். திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் வீட்டினுள்ளிருந்தே தம்பியைச் சமயமாற்றம் கொள்ள வைத்ததன் மூலம் புகழ் பெற்றவர். அவரது புறவாழ்வு வீட்டினுள்ளேயே அடங்கிவிட்டது. கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி அரசனின் மனத்தை மாற்றியதினால் புகழ் பெற்றவள். ஆனால் அவளது ஒழுக்கத்தைப் பற்றிக் கேலி பேசுபவர்கள் உண்டு. மதுரை அரசி மீனாட்சி மகனின் பெயரால் நாட்டை ஆண்டவள். அதிகாரியாக இருந்த தாயுமானவரை அவளோடு தொடர்புபடுத்தியதால் அவர் துறவு பூண்டார். ஆனால் இக்குறைகள் பெரிதாய்ப் பேசப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களின் சமயச் சார்பு அவர்களைக் காத்து நிற்கிறது. ஆண்டாளுக்கு அரசனின் முழுத்துணையும் இருந்தது. ஆனால் அரங்கனோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்ற கதையின் பின்னால் என்ன ஒளிந்துகொண்டிருக்கிறதோ அறியோம்.

மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம். பணக்கார நாடுகளில் பெண்களின் நிலையைப் பார்ப்போம். புதினங்களின் மூலமாகவும், தாளிகைகளின் மூலமாகவும் அறிந்தவற்றைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

பொதுவாகவே ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின் பாலியல் பொறையுடைமை இருந்தது. ஒரு பெண் கணவனல்லாத ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரியவந்தால் ஆடவர் இருவரும் தனிப் போர் நடத்தி வெல்பவர் அப்பெண்ணை வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் அடிப்படையில் வானம் வசப்படும் என்ற தொடர்கதையை தினமணிகதிர் இதழில் பிரபஞ்சன் எழுதினார். ஆளுநர் டியூப்ளேயின் மனைவியின் மகள் (மனைவிக்கு டியூப்ளே இரண்டாம் கணவன்) வேறொருவனோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவனைக் கையும்களவுமாகப் பிடிப்பதற்காக அவளது கணவன் வருகிறான். மனைவியும் அவள் காதலனும் தனியறையில் கலவியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து நாகரிகத்துடன் பொறுமையாக வெளியில் காத்திருக்கிறான். அவர்கள் வெளியில் வந்த பின் மனைவியின் காதலனைத் தனிப் போருக்கு அழைக்கிறான். போரில் காதலன் பின்னடைய மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறான். செல்லப் பிள்ளையாக வளர்ந்து உலகம் அறியாதவளாக வாழ்ந்து விட்ட அப்பெண் மனம் கருகி உண்ணாமலிருந்து செத்துப் போகிறாள்.

கிறித்தவ சமயம் மணவிலக்கை ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் மணவிலக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் வழக்கு மன்றம் செல்லாமலே வழக்குரைஞர்கள் மூலம் மணவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். பொருட்படுத்தத் தேவையற்றவை என நமக்குத் தோன்றும் காரணங்களுக்கெல்லாம் கூட அங்கு மணவிலக்கு வழங்கப்படுகிறது. தன் துணை வேறொருவருடன் உடலுறவு கொள்வதைக் கண்டு அது அவருக்கும் தெரிந்துவிட்டால் இருவரும் உடனடியாக மணவிலக்குப் பெற்றுக் கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே வாழ்வர். ஆனால் தன் துணை இன்னொருவருடன் காதலுடன் பழகுவதைப் பொறுத்துக் கொள்வதும் அதைப் பிறர் அறிந்தாலும் மற்றவரை அதற்காக இழிவாக நினைப்பதும், தூற்றுவதும் இல்லை. கழகப் பாடல்களில் குறிப்பிடப்படுவது போல் “அலர்” எழுவது உண்டு.

இவ்வளவு இருந்தும் அமெரிக்கப் பெண்களுக்கு நிறைவு இல்லை. திருமணத்தையே தங்களுக்கு இடப்படும் விலங்காகக் கருதுகிறார்கள். என்னதான் கணவன்கள் கண்டும் காணாமலுமாக நடந்து கொண்டாலும் மனைவி தனக்கென்று நேரத்தையும் மனத்தையும் கொஞ்சமாவது ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அதற்குக் கூட அமெரிக்கப் பெண்கள் ஆயத்தமாயில்லை. அதே நேரத்தில் உடலின்பத்தையும் குழந்தைப் பேற்றையும் புறக்கணிக்கவும் விரும்பவில்லை. எனவே தன்னிடம் நெருங்கிப் பழகவரும் ஆடவர்களிடம் எவ்வளவு காலம் வேண்டுமாயினும் இருவரும் விரும்பும் வரையில் சேர்ந்து வாழலாம்; ஆனால் அவன் என்றும் தன்னை மணம் புரிந்து கொள்ளக் கேட்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கின்றனர்.

தமக்குப் பிறக்கும் குழந்தைகளை காப்பகங்களில் வளர்க்கிறார்கள். கிழமை இறுதிகளில் தங்களோடு வைத்துக் கொள்கின்றனர். அங்கு பொதுவாக வேலை வாய்ப்புகளில் பெரும் இடரில்லை. வேலையிலிருக்கும் போது உள்ள ஈட்டத்தைச் சேமித்து முதலீடுகள் செய்து வேலையில்லாக் காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு மீண்டும் தந்தை என்ற உறவு இல்லாமலே குழந்தைகள் வாழும் சூழ்நிலை உலகில் உருவாகிறது.


அண்மையில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவர் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதைத் துணிவுடன் ஊரறிய வளர்த்து வருகிறார். இதுவும் அந்த அமெரிக்கப் பாணிதான்.

இதனுடன் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் வாழும் ஓரினப் புணர்ச்சி இப்போது மேலைநாடுகளில் மலிந்து வருகிறது. பிரிட்டன் ஒலிபரப்புக் கழகம் புதுமண இணைகளுக்கு வழங்கி வந்த தேனிலவுச் செலவுச் சலுகையை இத்தகைய ஓரினப் புணர்ச்சியாளருக்கும் மணமின்றிச் சேர்ந்து வாழ்வோருக்கும் விரிவுபடுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

பெண் தன் உரிமைகளில் எதனையும் ஆடவரோடு பகிர்ந்து கொள்ள மனமின்மையும் ஆடவன் தன் மனைவிக்குச் சமஉரிமை வழங்க விரும்பாமையுமே இத்தகைய ஓரினத் திருமணங்களுக்குக் காரணங்கள்.

இந்த வேளையில் கிறித்தவ மறைநூலில் காணப்படும் ஒரு செய்தி ஆர்வ மூட்டுவதாக உள்ளது. மக்கள் மீண்டும் உயிர்த்தெழுதலைப் பற்றி ஏசுவிடம் கேட்டனர். ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒருவர் பின் ஒருவராகக் கணவர்கள் இறந்து போக மீண்டும் மீண்டும் ஏழு முறை மணக்கிறாள். உயிர்த்தெழுதலின் போது அவள் அந்த ஏழுவரில் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது அந்தக் கேள்வி.

அவர் கூறிய விடை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உயிர்த்தெழலின் போது கணவன் மனைவி போன்ற உறவுகள் இருக்காது என்பதே அந்த விடை. இந்த விடை இக்கட்டான ஒரு கேள்வியிலிருந்து நழுவுவதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்குமோ? இருந்திருக்க முடியாது. ஏனென்றால் விடை கேள்வியைவிடச் சிக்கலானதாகும். பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை என்ற சிக்கல்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளிலிருந்தே இத்தகைய ஒரு விடை பிறக்க முடியும். ஏசுபிரான் கூறிய இந்த நிலையை நோக்கியே பணக்கார நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

நம் பண்டைத் தொன்மங்களில் கந்தருவர் என்றொரு இன மக்கள் வருகின்றனர். அவர்களை யாழோர் என்றும் விஞ்சையர் என்றும் இயக்கர் என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அங்கு ஆடவரும் பெண்களும் மணமின்றியே கூடுவர். பொருளிலக்கணத்திலுள்ள குறிஞ்சித் திணைக்கு யாழோர் மணத்தையே தொல்காப்பியர் ஒப்பிட்டுக் காட்டுவார். தொன்மங்கள் இதைக் கந்தருவ மணம் என்று குறிப்பிடும். துசியந்தனும் சகுந்தலையும் காட்டில் கந்தருவ மணம் புரிந்து கொண்டனர் என்றே மகாபாரதம் கூறும். கந்தர்வர்கள் வானில் பறப்பவர்கள். அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் போல் அறிவியலிலும் செல்வத்திலும் உயர்ந்திருந்த இவர்களிடையில் அவர்களை விடவும் மேம்பட்ட ஆண்-பெண் உறவுகள் சுட்டப்படுவதைப் பார்க்கும் போது இவர்கள் புராண வடிவில் காட்டப்படும் உண்மையில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமோ என்ற ஐயுறவு நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் நாட்டில் கணவனில்லாமல் பெண்கள் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. ஆடவர்கள், அதிலும் குறிப்பாகப் படித்த ஆடவர்கள் பணத்துக்காக மனைவிகளைத் தீக்குளிப்பாட்டும் வழக்கம் பெருகி வருகிறது. எனவே பெண்கள் உயிருக்கஞ்சித் திருமணத்தைத் தவிர்க்க முற்படுவர். அதற்காகவே தம் சொந்தக் காலில் நிற்கும் பயிற்சியையும் அவர்கள் மேற்கொள்வர்.

பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதும் பிறக்கும் முன்பே கண்டறிந்து கருக்கலைப்பதும் இன்று பொது வழக்கிலிருப்பவை. இது நம் நாட்டுப் பெண்ணியர்கள் நடுவில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவர்களால் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நடைமுறை பெண் அளவுககு மீறிக் கொடுமைப் படுத்தப்படுவதின் விளைவே. இந்த விளைவே ஆணின் ஆதிக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாக முடியும்.

வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவளை ஆடவரிடமிருந்து விலகி நிற்கத் தூண்டும் அதே வேளையில் பெண் குழந்தைக் கொலையும் கருக்கலைப்பும் எதிர்கால ஆண்-பெண் சமநிலையைக் குலைத்துப் பெண் ஒரு அரும்பொருளாய் மாறி விடுவாள். ஆண் மண்டியிட்டுத் தான் ஆக வேண்டும்.

மனிதன் இன்னும் பெருமளவு விலங்காகவே வாழ்கிறான். எனவே அவனால் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடிந்தாலும் தன் செயல்களை மாற்ற முடிவதில்லை. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்த பின்னரே அவன் இக்கொலைகளை நிறுத்த முயல்வான்: அதன் பின்னர் தான் உண்மையான ஆண்-பெண் சமநிலை உருவாகும். அதுவரை பெண்ணுரிமை இயக்கங்களும் அயராது பாடுபடவேண்டும்.


அடிக்குறிப்புகள்:

[1] இப்பகுதி சோவியத்து நாடு உடைபடுவதற்கு முன் எழுதப்பட்டதாகும்.
[2] எப். ஏங்கல்சு குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை.
[3] நியூசெஞ்சுரி புத்தக நிலைய வெளியீடு.

28.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு

மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம் நாட்டு மரபு. இன்று மேற்சாதிகளாகக் கருதப்படும் சிலவற்றில் புலால் உண்பவர் இருந்தாலும் தாம் புலால் உண்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் அச்சாதிகளிலுள்ள பணக்காரர்கள் மிகக் குறியாயிருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்ச்சாதிகளில் சில விதிவிலக்குகள் நீங்கலாக அனைவரும் புலால் உணவினரே. மாடு, பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியைத் தவிர்ப்பவர் வேண்டுமானால் இருக்கலாம்.

இயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடியாகப் பெறுகிறான். எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும்.[1] அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கன மற்றதுமாகும். எனவே தான் மேற்சாதியினரால் பொருளியலில் தாழ்ந்துவிட்டோர் தாமாகவே புலாலுணவுக்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் பொருளியலில் உயர்ந்துவிட்ட கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் வகைவகையாகக் காய்கறிகள் வாங்கவும் சமைக்கவும் பணமும் நேரமும் வந்தவுடன் மரக்கறி உணவுக்குத் தாவி விடுகின்றனர்.

புலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

புலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது குமுக உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்ற பழமொழி வட மாவட்டங்களில் நிலவுவது இதற்குச் சான்று. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.

நம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை. மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்கு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.

பாலின் புலாலுணவுத் தன்மையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு நூல் திறம்பட எடுத்துக் கூறுகிறது. காய்கறி உணவுகள் இருக்கும் சமையலறையில் பூனை அவற்றில் எதனையும் நாடாது உறியிலிருக்கும் பால்படு பொருட்களையே நாடுவதையும், பால் கெட்டுப் போனால் அதிலிருந்து எழும் கெட்ட நாற்றத்தையும் சான்றுகளாக எடுத்துக்காட்டியிருக்கிறது அந்நூல். வருண ஒற்றுமை விளக்கம் என்பது நூலின் பெயர். ஆசிரியர் பெயர் இராசகோபால பாரதி என்பது. பாரதத்தின் மக்களெல்லோரும் பாரதி என்ற பட்டத்தை மட்டுமே சூட்ட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் இவர் தன் பெயருக்குப் பின்னால் பாரதி என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. நூலின் படிகளைப் பெரியாரின் குடியரசு இதழுக்கும் அனுப்பியுள்ளார். அவ்விதழ் மட்டுமல்ல வேறு பல இதழ்கள், தனி மனிதர்களின் திறனாய்வுகளையும் நூலில் வெளியிட்டுள்ளார்.

இருந்தும் பெரியார் இந்த உண்மையைத் தன் கருத்துப் பரப்பலில் சேர்க்கவே இல்லை. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் முடிவு இதுதான். பெரியார் புல்லுணவு உயர்ந்தது என்றிருக்கும் கருத்தை உண்மையாகவே உடைக்க விரும்பவில்லை. உண்மையான புல்லுணவாளர்கள் சைவ வெள்ளாளர்களும் சமணர்களுமே, பார்ப்பனர்களல்ல என்று நிலைநிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேள்விகளின் போது மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று வேதம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செய்திப் பரப்பல் மாட்டிறைச்சியின் பெருமையை எடுத்துரைத்து, ‘எனவே ஒரு காலத்தில் பார்ப்பனரே புலாலை உண்டனர், ஆகையால் நாமும் அதை உண்பதில் தவறில்லை’ என்று கூறுவதற்கல்ல. பார்ப்பனர்கள் உண்மையான புல்லுணவினர் அல்ல என்றும் உண்மையான புல்லுணவினர் யாரென்றும் குறிப்பிட்டுச் சொல்லும் ஓர் உத்தியேயாகும் இது.

இன்னொரு புறம் புலால் உணவுக்கெதிரான கருத்துப் பரப்பல் வல்லரசுச் சுரண்டலுக்குக் கருவியாக இன்று செயற்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறைச்சியையும் மீனையும் பிடுங்கிச் செல்வதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்திப் புல்லுணவின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. மனிதத் தேவைக்கு மிக அதிகமான அளவில் புலாலுணவு தின்று நோய்களுக்கு ஆளாகும் மேலை நாட்டினரைச் சான்று காட்டி “அறிவியலாளர்கள்” அறிவுரைகள் வழங்குவர். சில முகம்மதியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு தம் சாதிப் பண்பாட்டைக் காக்க எப்போதும் முனைந்து நிற்கும் கூட்டம் அதற்குப் பெரும் விளம்பரம் கொடுக்கும். மக்கள் தம்மால் இந்த “இழிந்த” புலாலுணவை விட முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமைந்து நிற்பர், அல்லது அதை விட்டு விடவும் செய்வர். இங்குள்ள ஆடும் மாடும் இறைச்சியாகி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்குள்ளோரின் உடலையும் பணப்பைகளையும் கொழுக்க வைக்கும். எனவே ஏழை எளியவர்க்கும் எளிதில் ஊட்டச்சத்தைத் தருவனவும் மனிதன் நேரடியாக உட்கொள்ள முடியாத புல்பூண்டுகளை உட்கொண்டு வளருவனவுமாகிய விலங்குகளின் இறைச்சி உணவே நமக்குப் பொருத்தமானது என்ற வகையில் புலால் உணவாகிய பண்பாட்டுக் கூற்றினை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தொல்பழங்காலத்திலேயே வாணிகம்(போக்குவரத்து), வேளாண்மை, பால்படு பொருட்கள் ஆகிய தேவைகளின் பொருட்டு மாட்டைக் கொல்வதற்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நம் நாட்டில் நடந்துள்ளமைக்குச் சான்றுகள் நம் பண்பாட்டில் விரவிக் கிடக்கின்றன. வேள்விகளில் மாடுகள் பலியிடப்பட்டதால் வேள்விகளை எதிர்த்துப் பல போர்கள் நடந்துள்ளமை புராணங்களிலிருந்து புலப்படும். தக்கன் வேள்வியை அழித்த உமையை(தக்காயணி)த் தவிர வேள்விகளை அழித்தோர் அனைவரும் அரக்கர்களாக்கப்பட்டனர். (வேள்விகளை அழித்தவளென்று இராமனால் கொல்லப்பட்டவளாகக் கூறப்படும் தாடகை கூடத் தென்தமிழ் நாட்டில் உள்ள ஓர் மலையின் பெயராக நிலவுகிறாள். உமையாக மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியாகிய தடாதகைப் பிராட்டியின் இன்னொரு வடிவம் தானோ இவளும்?) புத்த சமண சமயங்களும் வேள்வியை எதிர்த்து எழுந்தனவே.

இன்று போக்குவரத்திலும் வேளாண்மையிலும் மாட்டின் தேவை மிகக் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பாலுக்கு வளர்ப்பதை விடக் கன்று ஈனுவதற்கென்றே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அடிவாரத்துக்குக் கொண்டு வராமலே மேற்குத் தொடர்ச்சி மலையினுள் கன்றுகளை ஈனுவதற்கென்றே மாடுகளை அம்மலையின் அடிவாரத்திலுள்ள மக்கள் மலைத்தொடர் நெடுகிலும் வளர்க்கிறார்கள். முன்பு காளைக் கன்றுகள் வளர்ந்ததும் வண்டியிழுப்பதற்கும் உழவுக்கும் விற்கப்பட்டன. சமநிலத்திலும் இதுவே பெரும்பான்மை வழக்கம். கன்றுக்குப் பால் கொடுப்பதைத் தவிர மனிதத் தேவைக்காகப் பால் கறக்கப்படாமையால் தமிழ்நாட்டு மாடுகளில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பால்மடி வளர்ச்சியடையவில்லை. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள பால்மாட்டு இனங்கள் உருவாகவில்லை. அதே வேளையில், முன்பு போல் கன்று ஈனும் மாடுகள் ஈன்று கொண்டே இருக்கின்றன. கன்றுகள் அண்டையிலுள்ள கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றமதியாகின்றன.

இந்த நிலையில் மாட்டிறைச்சி மீது மக்களுக்கிருக்கும் தவறான கருத்துகளை மாற்றி அதனை உணவாகக் கொள்ளுவதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் மலிவு விலையில் அவர்களால் இறைச்சியைத் தாராளமாகப் பெற முடியும். உலகில் உடல் நிறத்திலும் தோற்றப் பொலிவிலும் உயரம், உடல் வலிமை, மூளை வலிமை ஆகியவற்றிலும் மேம்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டை இறைச்சியாக நேரடியாகவோ அல்லது பால், நெய் என்று மறைமுகமாகவோ உண்போரேயாவர். எனவே நம் மக்களும் வளமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டிறைச்சி உண்பதற்குத் தேவையான மாட்டையும் அதை உண்பதற்கான மன இசைவையும் வளர்த்தெடுப்பது தேவையாகும்.

சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்நாட்டில் அந்தணர் முதல் அடியோர் வரை இறைச்சியை உட்கொண்டதை அறிய முடிகிறது. அதில் இன்று போன்று இழிவுணர்ச்சி எதுவும் புலப்படவில்லை. சோற்றோடு இறைச்சியை வேகவைத்து உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. இன்று பிரியாணி என்று முகம்மதியார்கள் விரும்பி உண்ணும் உணவு வகை அன்று புலவுச் சோறு என்று வழங்கப்பட்டது. அதில் பயன்பட்ட மெல்லிய அரிசி இன்று புலவரிசி (புலவு அரிசி) என அழைக்கப்படுகிறது. இந்த உண்மைகளிலிருந்து இறைச்சிக்கெதிரான கருத்துகள் பிற்காலத்திலேயே உருவாயின என்பது புலப்படும். இவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

புலாலுணவுக்கெதிரான கருத்துப் பரப்பல்களிலொன்று விலங்குக் கொழுப்பு உடல் நலத்துக்குத் தீங்கானது என்பதாகும். அதில் அடங்கியிருக்கும் கொலற்றரால் எனும் பொருள் குருதி நாளச் சுவர்களில் படிந்து குருதியோட்டத்தைத் தடுத்து குருதிக் கொதிப்பிற்கும் நெஞ்சாங்குலை நோய்க்கும் மார்படைப்புக்கும் இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவக் கருத்தை எதிர்க்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. அத்துடன் விலங்குக் கொழுப்புகளை விட நிலத்திணைக் கொழுப்புகளே பெரும்பான்மையாகக் கொலற்றராலைக் கொண்டுள்ளன. மீன் கொழுப்பு உண்மையில் கொலற்றராலைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது. கோழிக் கொழுப்பில் கொலற்றரால் கிடையாது. ஆனால் நிலைத்திணைக் கொழுப்பில் நாட்டில் புழக்கத்திலிருப்பவற்றில் நல்லெண்ணைய் ஒன்று தான் கொலற்றரால் இல்லாதது. இந்நிலையில் விலங்குக் கொழுப்புக்கெதிரான இந்தப் பரப்பல் பொய்ம்மையானது, குறும்புத்தனமானது.

அதே நேரத்தில் நம் நாட்டு மக்களின் சராசரி கனலி (Calorie) நுகர்வோ உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. புலாலுணவு நுகர்வோ அதை விடவும் குறைவு. அப்படியிருக்க நம்மிடையில் “கொழுப்புச் சத்து மிகுதி தொடர்பான நோய்கள்” மட்டும் மிகுதி. இது ஏன்? அரேபியர்களும், ஆத்திரேலியர்களும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உருசியர்களும் உணவில் பெரும்பகுதியாகப் புலாலையே உட்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுடன் ஒப்பிட நம் மக்களுக்கு இந்நோய்கள் ஏன் மிகுதி?

இதற்குப் பொருளியல், குமுகியல் சூழல் தான் காரணம். இந்நாட்டில் ஆண்மகன் குடும்பம் எனும் மிகப்பெரும் தளையால் பிணைக்கப்பட்டவன். மனைவி அவன் கால்களுக்குக் கட்டுப்போடுகிறாள். தன் மக்களுடன் சேர்ந்து அவன் தோள் மீது அமர்ந்து கொள்கிறாள். நிலவும் சூழ்நிலையில் என்னதான் பாடுபட்டாலும் குடும்பத்தின் தேவைகளை அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. வெளிஉலகிலோ தலைவிரித்தாடும் ஊழல், ஏமாற்று, உழைப்புக்கு மதிப்பின்மை, நேர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு, உண்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பகைமைகள், அடாவடி அரசியல், உலகம், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு செய்யும் கயவர் கூட்டங்களுடன் காவல்துறையின் கூட்டு இவையனைத்தும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளியல் வாழ்வு, கல்வியியல், வேலைவாய்ப்பு என்ற அனைத்திலும் கைக்கூலியே நோக்கமாகக் கொண்ட சட்டதிட்டங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டும், அலைக்கழிக்கும் ஆட்சி முறை என்று அமைதியில்லா மனம்.

பெண்ணுக்கோ பிறந்ததிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படும் நிலை. பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடபுத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்துவிட்டு நடைமுறையில் பெற்றோர் நிகழ்த்தும் கொடுங்கோண்மை. அரசூழியம் போன்ற வேலைக்குச் சென்றால் அவ்வேலையுடன் அவ்வாறு செல்லாத பெண்கள் செய்யும் பணிகளில் இவளுக்கு எந்தச் சலுகையுமின்மை. அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் கணைவீச்சுகள், அதனால் பாதிப்புறும் அவளுக்கு மறுபுறத்தில் சற்றும் நெகிழ்ந்து கொடுக்காத காலத்துக் கொவ்வாத கற்பு நெறி அளவீடுகள். பழமையை விட்டுக்கொடுக்காத குமுகச் சூழ்நிலையில் மாறிவரும் நடைமுறைகளை நாடிப்போகும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமை என்று பலதிசை இழுவிசைகளுக்குள் அவளுக்கு அமைதியில்லா மனம்.

வேலைக்குச் செல்லாத பெண்கள் வெளி உலகின் கவர்ச்சிகள் இழுத்தாலும் அதற்கு இடங்கொடுக்க முடியாத மனச்சூழல். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உண்டாகும் இறுக்கம், பிறரெல்லாரும் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்வது போன்ற மாயத்தோற்றம் தன் மீதும் கணவன் மீதும் ஏற்படுத்துகின்ற வெறுப்பு என்று அனைவருக்கும் இந்தக் குமுகச் சூழல் அமைதியின்மையை உருவாக்கி விட்டிருக்கிறது.

வாணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு உட்பட்டாலும் வரித்துறையினரின் அதிலும் வருமானவரித் துறையினரின் அச்சுறுத்தல் அவர்களை விழிப்பிலும் தூக்கத்திலும் விரட்டுகிறது. இவற்றாலெல்லாம் நம் மக்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுக்குத் தொடர்பில்லாத நோய்கள் உருவாகின்றன.

புறநானூற்றில் பிசிராந்தையார் தனக்குத் தலை நரைக்காமைக்குக் கூறிய காரணங்கள் உயர்வு நவிர்ச்சியல்ல என்பதற்கு இன்றைய நம் நாட்டு மக்களே சான்று.

அதே நேரத்தில் புல்லுணவு உயர்வானதென்று கூறித் தம் மேன்மையை நிலைநாட்ட விரும்பும் பொய்ம்மையாளர் இச்சூழலை எல்லாம் மறைத்து புலாலுணவு தான் இதற்குக் காரணம் என்று கூறிப் பொய்ப் பரப்புகிறார்கள்.

அத்துடன் இயற்கை மருத்துவம் என்ற பெயரால் முகாம்கள் நடத்துவதில் பெரும் ஊக்கம் காட்டுகிறார்கள். வல்லரசு நாடுகள் இதற்குப் பெரும் பணம் செலவழிக்கின்றன.

வளர்ந்தவர்களையும், முதியவர்களையும் நோக்கியதென்ற பெயரால் பொதுத் தொடர்புக் கருவிகள் (வானொலி, தொலைக்காட்சி, தாளிகைகள், திரைப்படம்) மூலமாகச் செய்யப்படும் இப்பரப்பல் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைப் பற்றிக் கொண்டு “இதில் கொழுப்பிருக்கிறது”, “அதில் கொலற்றரால் இருக்கிறது” என்று சொல்லி சத்தான உணவு வகைகளைப் புறக்கணிக்க வைக்கிறது. அதனால் நடுத்தர வகுப்பினரின் வளரும் தலைமுறையே உடல் வலிமையிலும் மூளை வலிமையிலும் சுண்டிப்போய் விட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் வலுமிக்க வளருந் தலைமுறையின் நலனுக்காகவும் மக்களுக்கு இன்றியமையாத புலால், ஏற்றுமதி என்ற பெயரால் கடத்தப்பட்டு நமக்குக் கிடைக்காமற் போவதைத் தடுத்து நிறுத்தவும் புலாலுணவின் மேன்மையையும் புல்லுணவின் போதாமை, இயலாமைகளையும் மக்களிடம் வலிமையாகப் பரப்ப வேண்டும்.



அடிக்குறிப்பு:

[1] நம் நாட்டு மரபு மருத்துவ முறையிலும் சீன மருத்துவ முறையிலும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு நோயுற்றால் அல்லது வலிமை குன்றினால் கால்நடைகளின் அதே உறுப்பை உண்பதன் மூலம் அதனைச் சரி செய்ய முடியும் என்ற கருத்து உள்ளது. அதனை மேலைநாட்டு மருத்துவம் படித்த நம் நாட்டினர் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் கல்லீரல் பிழிவுகள் ((Liver extracts) போன்ற மருந்துகள் பயன்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

14.2.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 2. சமயம்

தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே நேரடியாகத் தம் தெய்வங்களை வணங்குவதைச் சிறுநெறி என்றும் வகுத்தனர்.[1] பெரும் கோயில்களில் தேர்த் திருவிழா, பார்ப்பனப் பூசாரிகளால் சமற்கிருதத்தில் போற்றி (அர்ச்சனை), ஆறுகால பூசை, நெய்வேதியம், வேள்வி, தேவரடியார்கள், காணிக்கை மற்றும் பெரும் நில மானியங்களோடுள்ள தெய்வங்களைப் பெருந்தெய்வங்களென்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூசை, தெய்வமாடுதல், பலிகொடுத்தல், நேர்த்திக் கடன் செய்தல் ஆகியவற்றோடு வணங்கப்படும் தெய்வங்களைச் சிறு தெய்வங்களென்றும் கூறும் மரபு இன்று நம்மிடம் உள்ளது. ஆனால் இவ்விரு நெறிகளையும் கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த வகைப்பாடு தலைகீழான தென்பது புலப்படும். பெரும்பான்மை மக்கள் வழிபடும் முறையைப் பெருநெறி என்றும் சிறுபான்மையினரின் நெறியைச் சிறுநெறி என்றும் அழைப்பது தான் சரியான நெறி. ஆனால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வழக்கிலுள்ள வகைப்பாட்டையே இங்கு நாம் பின்பற்றுகிறோம்.

மேற்சாதிக் கடவுள்களாகச் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சத்தி ஆகியோர் விளங்குகின்றனர். கீழ்ச்சாதிக் கடவுள்களாக மாரியம்மன், முத்தாரம்மன், காளி, இயக்கி, நீலி, திரவுபதை போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன், வண்ணாரமாடன், இயக்கிமாடன், கொம்பமாடன், பன்றிமாடன், மதுரைவீரன், முனியன், சடையன், சப்பாணி போன்ற ஆண் தெய்வங்களும் மற்றும் எண்ணற்ற குல தெய்வங்களும் குடும்பத் தெய்வங்களும் விளங்குகின்றன.

பெருந்தெய்வங்கள் எனப்படுபவை கூடச் சிறு தெய்வங்களாயிருந்து உருமாறியவையே. ஆண்குறி, பெண்குறி வணக்கங்கள் குறியியல் வடிவம் பெற்று இலிங்கமாக இணைந்தன. சங்க கால அகத்துறைத் தலைவியரின் கிண்டலுக்குள்ளாகிய, உயிர்ப்பலியுண்ட வேலன் இன்று முருகனாகிவிட்டான். இன்றும் இந்த நிகழ்முறை தொடர்கிறது. மாரியம்மன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பணக்கார” மாரியம்மன் கோயில்களெல்லாம் பெருந்தெய்வ வழிபாட்டு முறை நோக்கித் திரும்பிவிட்டன. சிறு தெய்வவழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய தென்பதற்குப் பெருந்தெய்வக் கோயில்களிலேயே சான்றுகள் உள்ளன. எல்லாக் கோயில்களிலுமிருக்கும் பலிபீடம் அத்தகைய சான்றுகளில் ஒன்று. இப்பலிபீடத்துக்கு எத்தனையோ ஆதனிய (ஆன்மீக) விளக்கங்களை மதவாணர்கள் தந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. பல கோயில்களில் பலியிடுவதற்கென்றே கொண்டு வரப்படும் விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விற்கப்படுவதை நாம் காண முடியும். உயிர்ப்பலியிட்டு குருதி சிந்துவதை எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தில் தோய்த்துப் பிழிவதன் மூலம் ஈடுசெய்வதைக் காணலாம். இந்து மத இயக்கத்தினர் பல ஊர்க்கோயில்களில் பெருந்தெய்வ வழிபாட்டைப் புகுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் முயற்சி வெற்றிபெறாது. குமுக அடித்தளத்தில் பண்பியல் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த காலங்களில் போலவே இன்றும் புதிது புதிதாகச் சிறு தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

கீழ்ச்சாதி மக்களின் சமய நெறியாகிய சிறு தெய்வ வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையாகிய பண்டப் படைப்போடு நெருங்கிய தொடர்புடையது. தாங்கள் படைத்த பண்டங்களைப் படையல் செய்து அவற்றை உண்டு வழிபட்டு தொடர்ந்து வரும் தங்கள் உழைப்புக்கு உரிய பலன் வேண்டி கூட்டாக வணங்குவது அவர்களது வழிபாட்டு முறை. தாங்கள் பலி கொடுக்கும் விலங்குகளையும் படையலிட்ட உணவையும் தங்கள் உறவினர்களுடன் உண்டு களிக்கின்றனர். வழிபாட்டைத் தாங்களே கலை வடிவில் நிகழ்த்துகின்றனர். அவர்களது வழிபாட்டில் பண்டங்களின் அழிவு மிகக் குறைவு. வழிபாட்டின் போதே தொடர்ந்து பருவ நிலைகள், செழுமை போன்றவற்றை அறிவதற்காகச் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். (இவை எந்த அளவுக்கு அறிவியலுக்கு உகந்தவை என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டில் “அறிவியல்” பயின்று விட்டதாகக் கொட்டமடிக்கும் எந்த மேதையும் இன்று வரை கருதியதில்லை. ஒருபுறம் அவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்குவோரும் மறுபுறம் அவற்றில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுகிறது என்று போற்றி ஒதுங்குவோருமே உள்ளனர்.) கீழ்ச்சாதியினர் தம் தெய்வத்திடம், அதாவது தெய்வமாடியாகிய ஒரு மனிதனின் மீது ஏறி அவனை ஆட வைப்பதாகத் தாங்கள் நம்பும் தெய்வத்திடம் தம் தாய்மொழியில் முறையிடவோ சண்டையிடவோ அல்லது அதைத் தூற்றவோ கூடத் தயங்குவதில்லை. அவர்களது வேண்டுதல்கள் எப்போதும் இவ்வுலகைப் பற்றியவையே. மேற்ச்சாதியான் தன் வளமையை உலகுக்குக் காட்டவும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் இவ்வுலகிலும் மேலுலகிலும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றும் அல்லது மக்களை ஏமாற்றிக் கோயிற் சொத்துகளையும் ஊராரையும் கொள்ளையடிக்கவும் “பெருந்தெய்வங்”களுக்குக் காணிக்கைகளும் “திருப்பணி”களும் வேடிக்கைகளும் செய்கிறான். சுரண்டப்பட்ட மனித உழைப்பும் நேரடியான மனித உழைப்பும் அளவற்று வீணடிக்கப்படுகின்றன. தனது “வேண்டுகோள்களை” இறைவனுக்குச் சொல்வதற்கென்று இடைத்தரகர்களை வைத்துத் தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் கூறுவதைக் கேட்டுப் பூரித்துப் போகிறான். மேலுலகில் முடிவில்லாத இன்ப விளையாட்டே அவனது இறுதிக் குறிக்கோள்.

இந்த இரண்டு முறைகளில் நாம் ஏன் கீழ்ச்சாதி மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்போம். உலகில் மனித வடிவில் வணங்கப்படும் தெய்வங்களில் பெரும்பாலானவை வீர வணக்கத்திலிருந்து உருவானவையே. கட்டுத்திட்டமான நெறிமுறைகளை உடைய யூத மதத்தின் யகோவா வணக்கம் மோசேயைச் சிந்திக்காமல் நடைபெறுவதில்லை. அதே போல் முகமது நபி இல்லாமல் அல்லா இல்லை. இயேசு ஆகிய மகன் இன்றி ஆண்டவர் ஆகிய “தந்தை” இல்லை. இவையெல்லாம் வீர வழிபாட்டின் திரிந்த வடிவங்களே.

தமிழகத்திலும் வீர வழிபாடு நினைவுக் கெட்டாத காலந்தொட்டு வருவது. வீரச்செயல் புரிந்தோருக்கு நடுகல் நடுவது நமது மரபு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் (தொல். பொருள் 60)

என்று அதற்கு இலக்கணமும் வகுக்கப் பட்டிருக்கிறது.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
(அகம் 131)

போன்ற விளக்கங்களும் காணக்கிடக்கின்றன.

இயற்கையை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு வழிகாட்டியோர், எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்தோர், மக்களுக்குத் தொண்டாற்றியோர், பெருமைக்குரிய முன்னோர், செயற்கரிய செய்தோர், போர்க்களத்தில் வீரமரணம் எய்தியோர், இயற்கையல்லா முறையில் இறந்தோர் சிறு தெய்வங்களாயினர். வன்கொலையாக இளம் பருவத்தில் வாழ்க்கையை நுகரா நிலையில் மாண்டோர், சூலியாக மாண்ட பெண்கள், கொல்லப்பட்டோர் ஆகியோர் பேய் வடிவில் தம் கொலைக்குக் காரணமானவர்களை அல்லது தொய்வுறாத தமது இளமைத் துடிப்பு காரணமாக பொதுமக்களைத் துன்புறுத்துவர் என்ற அச்சத்தாலும் வணங்கப்பட்டனர். மற்றும் நன்மை அல்லது தீமை செய்யும் விலங்குகள், மரங்கள் போன்று உயிருள்ளவையும் உயிரற்றவையாகிய ஆறுகள், மலைகள், கடல்களும், கோள்கள், நாண்மீன்கள் போன்ற வான் பொருட்களும் கூட வணக்கத்துக்கு உரியவையாகின்றன.

இவ்வாறு வீர வணக்கத்திலிருந்து தோன்றி அவற்றின் தோற்றச் சூழலிலிருந்து அயற்பட்டும் அயற்படுத்தப்பட்டும் பல சிறு தெய்வங்கள் “பதவி உயர்வு” பெற்றுப் பெருந் தெய்வங்களாகியுள்ளன. இந்தப் பதவி உயர்த்தம் அனைத்தும் அவற்றை வணங்குவோர் பொருளியலில் அல்லது அரசியலில் உயர்வடைந்ததன் விளைவாகவோ அல்லது அத்தகைய முயற்சிகளுக்குத் துணையாகவோ நடைபெற்றுள்ளன என்பது அவற்றின் வரலாறுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் புலப்படும். அரசியல் காரணியே முனைப்பாகச் செயற்பட்டுள்ளது பெரும்பான்மை.

நம் நாட்டில் சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்துப் பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள அல்லது சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாக்கப் பல முயற்சிகள் நடந்துள்ளன. புதிய சமயங்களின் பின்னணியில் புதிய ஆளும் வகுப்புகள் உருவான காலங்களில் அவற்றின் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து செல்வத்தில் அல்லது செல்வாக்கில் வளர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகிவிட்ட நிலையில் தோன்றிய தலைவர்களும் பொதுச் சீர்த்திருத்தத் தலைவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களைச் சிவன், காளி, திருமால் ஆகியோரோடு உறவுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை எய்த அவர்கள் முனைந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவின. புதிய கதைகளும் புராணங்களின் கட்டற்ற பெருக்கமுமே ஒரே பயனாக இருந்துள்ளது. பழைய தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் போது புதுப் புதுத் தெய்வங்களும் புதுப்புதுப் புராணங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும், ஒவ்வொரு தெய்வத்தின் வரலாற்றையும் அணுகி ஆய்வோருக்கு அவற்றின் மீது படிந்திருக்கும் சமய, அரசியல் சுவடுகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றிலிருந்து தெய்வங்களையும் தெய்வங்களிலிருந்து வரலாற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அணுகல் உதவும்.

நாகரீகத் தொடக்கத்தில் மனிதன் இயற்கையையும் பிற மனிதக் கூட்டங்களையும் எதிர்த்து இடைவிடாத போராட்டம் நடத்த வேண்டியிருந்த சூழ்நிலையில் அவனுக்கு இரு வகைகளிலும் அருந்தொண்டாற்றியவர்களின் நினைவை அவன் போற்றியதில் தவறேதுமில்லை. இன்றும் பொருளியலிலும் அதனால் அறிவு வாய்ப்பிலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளும், இயற்கை ஆற்றல்களை விட மனிதனின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட குமுக ஆற்றல்களின் முன் ஈடு கொடுத்து நிற்க முடியாத குமுகச் சூழல்களும் தலைவர் வழிபாட்டை உருவாக்கியது தவிர்க்க முடியாததாகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கத்தில் மக்களுக்கும் தனியாட்களான தலைவர்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாக இருந்து, பின்னர் அது பகை முரண்பாடாகவும் ஆனால் அகவறுமை காரணமாக மக்களால் புரிந்து கொள்ள முடியாமலும் மாறுகிறது. மக்களிடையில் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் குறையுந் தோறும், அதன் விளைவாகவும் காரணமாகவும் மக்களிடையிலுள்ள உறவுகள் மேம்படுந்தோறும் இந்தப் பகை முரண்பாடு மீண்டும் நட்பு முரண்பாடாக மாறும். அப்போது இந்தத் தலைவர் வழிபாடு என்பது சிறந்தோரைப் போற்றுதல் என்பதாக மாறும். இன்று பொருள் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குமுக அமைப்பிலிருந்து விடுபடும் போது மனிதனை இயக்கும் விசை குமுக ஏற்பு என்ற குறிக்கோளாகவே அமையும். எனவே அப்போது சிறந்தோரைப் போற்றுதல் என்பது குமுகத்தின் நலனுக்கு எதிராக இருக்க முடியாது.

சிறந்தோரைப் போற்றுதல் என்பதிலிருந்த சிறு தெய்வ வழிபாடாகி முழு முதற் கடவுள் வழிபாட்டிற் சென்று நிற்கும் இன்றைய நிலையிலிருந்து சிறந்தோரைப் போற்றுதல் என்ற நிலையைப் புதிய சூழ்நிலைகளில் எய்த வேண்டுமாயின் சிறு தெய்வ வழிபாட்டை நம் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு சிறு தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்வு செய்து அதன் உண்மையான குமுகக் குறிதகவை மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களது பண்பாட்டை உயர்த்த வேண்டும். ஆய்வு நிலையில் பேரா.நா. வானமாமலை சில அடிப்படைப் பணிகளைப் புரிந்து (சில தவறுகள், முற்கோள்கள்[2] இருந்தாலும்) வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த மக்களின் உண்மையான சிக்கல்களைக் கையிலெடுத்து அவற்றின் மெய்யான தீர்வுக்குச் சரியான வழிகாட்டி அவர்களை வழிநடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் இயக்கத்தால் தான் இப்பணியை முழுமையாக்கி நடத்தி வெற்றி பெற முடியும்.

இந்த இடத்தில் வரலாற்றில் “உயர்நிலை”த் தெய்வங்களைக் கைவிட்டு வீர வழிபாட்டுக்கு மாறிய ஒரு மக்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சப்பானியர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட “பேரரசு மீட்பியக்கம்” (Meiji Restoration) அதுவரை அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த மேற்சாதி மதமான புத்தத்தைப் புறக்கணித்து விட்டு வீர வழிபாட்டுச் சமயமான சிண்டோயியத்தை (Shintoism)த் தேசியச் சமயமாக்கியது. அதன் விளைவாக அதுவரை இழிவுபடுத்தப்பட்டு வந்த பெரும்பான்மையான கீழ்ச்சாதி மக்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் உடலுழைப்பின் மீது மதிப்பும் உருவாகி இன்றைய புதிய சப்பான் உருவாவதற்கு அடிப்படையான உளவியல் சூழ்நிலை ஏற்பட்டது. நம் நாட்டில் இத்தகைய வீர வழிபாடான சிறு தெய்வங்கள் கீழ்ச்சாதிகளிலிருந்து அல்லது அவர்களது வாழ்வில் தொடர்பு கொண்ட தனி மனிதர்களிலிருந்து உண்டானவை. எனவே அவ்வழிபாட்டை உயர்த்திப் பிடிப்பதென்பது அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதாகவும் பொருள்படும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகும். அதிலிருந்து புதிய குமுகத்தைப் படைப்பதில் அவர்களது முழு ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைக்கும்.

ஆனால் பழைய மதங்களை நாம் அப்படியே என்றென்றும் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சமயமில்லா, கடவுளில்லா, மூடநம்பிக்கைகளில்லா ஒரு குமுகத்தைப் படைக்க வேண்டுமென்பதே நம் இறுதிக் குறிக்கோள். ஆனால் அதை எய்துவதற்குள் சில இடைநிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இயற்கையாற்றல்களும் குமுக விசைகளும் மனிதனின் கட்டுக்குள் இல்லாமலிருக்கும் வரை கடவுள் நம்பிக்கை ஏதோவொரு வடிவத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். ஆனால் அது குமுக வளர்ச்சிக்குத் தடையாயில்லாத வகையில் இருக்க வேண்டும்.

பெருந்தெய்வ வழிபாடு முழுக்க முழுக்க மன்னராட்சி மற்றும் நிலக்கிழமை மற்றும் வருணக் குமுக அமைப்பின் எதிரொளிப்பாகவும் அதற்கு வலுவூட்டுவதுமாகவே உள்ளது. மன்னர்களுக்குச் செய்யும் 16 வகைப் பணிவிடைகள் (சோடச உபசாரம்) தேர் ஊர்தல், வாகன உலா, கொடியேற்றுதல் முதலிய அனைத்தும் அக்குமுக அமைப்பையே எதிரொளிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் பூசகருக்குக் கருவறை, அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்மண்டபம். வணிகருக்கும் வேளாளருக்கும் திருச்சுற்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வெளிப்புறம் என்று வருண முறையிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

நிறைய சொத்துகளும் பெரும் உண்டியல் வருமானமும் உள்ள கோயில்களில் கூட திருவிழாவின் போது பெரும்பான்மை நாட்களும் பல்வேறு தரப்பு மக்களால் திருப்பணி(உபயம்)யாகவே விழா நடைபெறுகிறது. கோயில் வருமானத்திலிருந்து செய்யப்படும் செலவு மிகக்குறைவே. கோயில் வருமானத்தை தக்கார், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இறுதியில் ஏதாவதிருந்தால் பூசகர் ஆகியோர் கொள்ளையிட்டுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள நன்செய் நிலங்களின் பரப்பில் நான்கிலொரு பங்கு திருக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் உடைமையாயிருக்கின்றன என்று ஒரு புள்ளிக் கணக்கு குறிப்பிடுகிறது. இவற்றின் பயன்பாடு குத்தகையாளான் முழு ஆதிக்கத்தினுள் சென்றால் வேளாண்மைச் செல்வம் பெருகும். அது போலவே பெரும்பரப்புகளில் கோயில்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களும். “ஊர் கூடித் தேரிழுத்தல்” என்ற ஒரு சொலவடையை பழமையாளர்கள் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர். ஆனால் உண்மையில் தேரிழுக்கும் போது வெளிப்படுவது நம் மக்களின் ஒற்றுமையல்ல, வேற்றுமைகளே. தேர் என்னும் பெயரில் மரக்கட்டைகளின் ஒருபெரும் குவியல் மீது ஒரு பொம்மையை வைத்து இழுக்கும் கேலிக்கூத்தே தேரோட்டம். இதில் பூணூலணிந்த பார்ப்பான் தேரில் வைத்து இழுக்கப்படுவான். முதல் வரிசை (மரியாதை)க்காரரென்றும் அறங்காவலரென்றும் தக்காரென்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் என்றும் மேன்மக்கள் வடத்தைத் தொட்டு “இசைவு” வழங்குவர். பிற மக்கள் உடல் வருந்தி இழுப்பர். கட்டை போடுவதற்கென்று தனிச் சாதியார். பெரும்பாலும் மேற்சாதியினர், போற்றி(அர்ச்சனை)த் தட்டைக் காணிக்கையுடன் நீட்டுவர். இவ்வாறு தேரிழுக்கும் நடைமுறையில் நம் குமுகத்தில் நிலவும் அனைத்துச் சாதி, வகுப்பு வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை எல்லாக் கோயில்களிலும் “ஊர் கூடித் தேரிழுத்து” வந்த மக்கள் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டிருப்பார்களானால் வாணிகத்துக்காக இந்நாட்டினுள் நுழைந்த ஐரோப்பியக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆளலாமென்ற எண்ணமும் அதன் அடுத்த கட்டமாக ஆளவேண்டுமென்ற அவாவும் அதனடிப்படையில் அதற்கான முயற்சிகளும் அதன் விளைவாக இருநூறாண்டு அடிமைத்தனமும் விளைந்திருக்காது. இது நிகழ்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய 250 ஆண்டுக்காலம் (1600 - 1850) “ஊர் கூடித் தேரிழுத்த நம் “ஒற்றுமை” எங்கே போய் ஒளிந்து கொண்டது?

பல நூறு தன்கள் எடையுள்ள மரத்தைத் தேர் என்று சொல்லி அதில் ஒரு பொம்மையையும் பார்ப்பனர்களையும் வைத்து இழுப்பதும், மக்களுக்கு உண்மையான ஆர்வமில்லா நிலையில் பாரதிய சனதா கட்சி, இந்து முன்னணி, இரா.சே.ச. போன்ற பழமையாளர்கள் தெருத் தெருவாக மக்களைக் கெஞ்சித் திரிவதும் தேவையற்ற கிறுக்குத் தனங்கள். தேர் மரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு விட்டுத் தேர்த் திருவிழாக்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி முறை நிலவுகிறது. அத்துடன் தனித்தனிச் சாதிகளுக்கு ஒரே தெய்வத்துக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் பல இடங்களில் தோன்றியுள்ளன. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றும் ஒரே கோயிலில் தனித்தனித் திருவிழாக்கள் அல்லது கொடைவிழாக்கள் நடத்தப்படும் அளவுக்கு இப்போராட்டங்கள் முன்னேறியுள்ளன.

மொத்தத்தில் நம் குமுகத்திலுள்ள வழிபாட்டு முறையே சாதிகளற்ற ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு உகந்ததாயில்லை. எனவே அனைத்து மக்களும் சமத்துவத்துடன் அமைதியாகக் கலந்து எளிமையாகத் தம் மன அமைதியைத் தேடும் வகையில் கிறித்தவம், முகம்மதியம் போன்ற சமயங்களில் உள்ளவாறு அகன்ற, காற்றோட்டமும் வெளிச்சமுமுடைய தூய வழிபாட்டு மண்டபங்களில் வழிபாடு செய்யும் வகையில் உள்நாட்டு மதத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துகளைப் பரப்பும் “ஆன்மிக”த் தலைவர் எவராவது உருவானால் அவருடன் தோளோடு தோள் நின்று அந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் பெருங்கோயில்கள் எடுத்து அவற்றுக்கு நிறைய நிலங்களும் எழுதி வைக்கும் பழக்கம் மன்னர்களிடையில் வேர் கொண்டது. சோழப் பேரரசின் காலத்தில் அரசின் ஓர் உறுப்பாகவே கோயில்கள் செயற்படத் தொடங்கிவிட்டன. மக்களிடம் வரி தண்டுவதிலிருந்து நலப்பணிகள் செய்வது, படையணிகள் பராமரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் கோயில்கள் ஈடுபட்டன. இன்றோ அத்தகைய பணிகள் எதுவுமில்லை. கடவுளுக்குப் படையல் செய்வது, இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என்ற அளவில் சிறிய பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் பெரும் பணம் சுரண்டப்படுகிறது. எனவே இயல்பாகவே நிலங்கள் குத்தகையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. இந்நிலங்களை கோயில்களுக்கு மீட்க வேண்டும் என்ற குரல் வலுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்குரல் கொடுப்பவர் எவருமில்லை.

மன்னராட்சிக் காலத்தில் அரசின் அனைத்துப் பணிகளுமே கோயில்கள் மூலம் செய்யப்பட்டதால் அதற்குத் தேவையான பொருளியல் அடிப்படைக்கு நிலங்கள் தேவைப்பட்டன. இன்றோ வழிபாடு தவிர கோயில்கள் வேறெந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.

பண்டைக் கோயில்களில் பெரும்பாலானவை முன்பு கருவறை மட்டும் இருந்து பின்னர் வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் ஒவ்வொரு சுற்றாக விரிவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே கட்டிட வடிவமைப்பு ஒழுங்கற்றதாகவும் உள்ளே செல்லச் செல்ல காற்றும் வெளிச்சமும் புக முடியாத நிலையில் இருளடைந்து வெளவால்களின் உறைவிடமாகி ஈரமும் நாற்றமும் கொண்டு விளங்குகின்றன. ஒரு நலமான வழிபாட்டுக்கு இவை தகுதியற்றவையாகிவிட்டன. எனவே இக்கோயில்களைத் தகர்த்து விடலாம். கோயிலின் சொத்துக்களைக் குத்தகையாளருக்குச் சந்தை விலையில் பாதி விலையை வாங்கிக் கொண்டு கொடுத்துவிடலாம். பொதுமக்களின் குத்தகைச் சொத்துகளில் இந்நடைமுறையே கையாளப்படுகிறது. இதன் மூலம் நிலங்களின் விளைப்புத் திறன் உயரும். அந்நிலங்களில் பயிரிட்டு வரும் கீழ்ச்சாதி மக்கள் இதனால் பயன் பெறுவர். ஆங்காங்கிருக்கும் சிறு தெய்வக் கோயில்களைக் கூட இடித்துவிட்டு ஒவ்வொரு பகுதிக் கென்று மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெறும் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் கொண்ட கோயில்களைக் கட்டலாம். கோயில் பராமரிப்புச் செலவை அவ்வப்பகுதி மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாம். நாள் செல்லச் செல்ல, குமுகம் முன்னேற முன்னேற இந்தக் கோயிலும் செல்வாக்கிழந்து கோயிலில்லா, கடவுளில்லா குமுகம் உருவாகும். கோயில்களைப் பராமரிக்க பணம் செலுத்துவதில் மக்கள் காட்டும் ஆர்வம் அல்லது ஆர்வமின்மையே சமயத்தின் அல்லது கோயிலின் தேவை அல்லது தேவையின்மையை அளக்கும் அளவு கோலாகிவிடும்.

அடிக்குறிப்புகள்:

[1] மிலட்டன் சிங்கர் எனும் மேனாட்டு அறிஞர் இக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று தெரிகிறது.
[2] முற்கோள் : Prejudice

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 1. அறிமுகம்

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச் சகதியினுள் சிக்கித் தடுமாறினர். பின்னர் சீனத்தில் மாசேதுங் பண்பாட்டுப் புரட்சியை நடத்திய பிற்பாடு அவரைப் பின்பற்றியோர் பீக்கிங்கில் பெய்த மழைக்கு இங்கு குடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு மழைவிட்ட பின்னரும் இங்கு குடை பிடிப்பது நிற்கவில்லை; பொருளியல் சிக்கல்களைத் தொழிற்சங்க வாணிகர்களின் மொத்த வேட்டைக் களமாக்கிவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பண்பாட்டுப் பணிகள் என்ற பெயரால் வெறும் கலை இலக்கியங்களைக் கிளறி அதிலேயே இன்பம் காணுகின்றனர். எழுதப் பேனாவும் தாளும் அச்சிட அச்சகமும் சுவர்களில் விளம்பரம் எழுதவும் விற்றுக் கொடுக்கவும் நன்கொடை தண்டவும் இளைஞர் கூட்டமும் இருப்பதால் இதழ்கள் நடத்துவதோடு தங்கள் “பண்பாட்டுப் பணி” நிறைவு பெற்றதாக நம்பிவிடுகின்றனர். அல்லது நம்பச் சொல்கின்றனர். இந்த நிலையில் பண்பாடு என்பது என்ன, பொருளியல் வாழ்வுக்கும் அதற்கும் உரிய உறவு என்ன, பண்பாட்டுப் பணியில் கலை, இலக்கியம் ஆகியவற்றின் இடம் யாது, தமிழகம் இன்றுள்ள நிலையில் பொருளியல், பண்பாட்டுக் கலை இலக்கியப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாகிறோம்.

பண்பாடு என்பதை மார்க்சியம் குமுகத் (சமுகத்) தன்னுணர்வு என்ற சொல்லால் குறிக்கிறது. இதில், ஒரு மக்களின் சமயம், உணவு முறை, திருமண உறவுகள், அவர்கள் அணியும் உடை, சட்டங்கள், அரசியல் அமைப்பு, மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், நம்பிக்கைகள், சடங்குகள், அவர்கள் கொண்டாடும் திருநாட்கள், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை அடங்கும். அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை படைப்பு விசைகளான பொருளியல் அடித்தளத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அதே வேளையில் பொருளியல் அடித்தளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையான வடிவங்களில் வடித்துக் காட்டுவனவாகக் கலையும் இலக்கியமும் செயற்படுகின்றன.

பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் தேக்கி வைத்து அவற்றை வளப்படுத்துவதிலும் அதன் மூலம் தான் வளர்வதிலும் மொழி செயற்படுத்துகிறது. கலை இலக்கிய வடிவங்களில் பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதில் மொழியே எலும்பும் சதையுமாகச் செயற்படுகிறது.

கலை இலக்கியம் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ப் பெரும் புலவர் இளங்கோவடிகள் கூறுகிறார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்(து) ஓங்கிய
பாடலும் எழாலும்[1] பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென்(று) அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநல் நீழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து ….,
த்

தன் நூலை முடிக்கின்றார்.
[2]

சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பற்றி லெனின் பருப்பொருளியமும் பட்டறிவுத் திறனாய்வும்[3] என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.
[4]

ஆனால் வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் பொருளுக்கும் கண்ணாடியில் அதன் நிழலுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. கலை இலக்கியங்கள் தங்கள் தாக்கத்தைக் குமுகத்தின் மீது ஏற்படுத்த முடியும். ஆயினும் அவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி அளவோடு இருந்தால் தான் இது நடைபெறும். இந்த எல்லையைத் தாண்டிக் கலை இலக்கியம் செல்ல முற்பட்டால் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் வேடிக்கைப் பொருளாக அல்லது கனவாக மாறிவிடும். வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள இந்த இடைவெளியும் நிலையானதல்ல. குமுக மாற்ற வேகத்திற்கேற்ப அது கூடிக் குறையும்.

பண்பாடு என்ற பெயரால் கலை இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பது இவ்வகையில் நிழலைப் பிடிக்க முயல்வது போன்றதே. இவ்வாறு பண்பாட்டைத் தொடாத கலை இலக்கிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு பண்பாட்டுச் சிக்கலினுள் நுழைவோம்.

ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் இருவேறு பண்பாடுகள் உள்ளன என்று லெனின் கூறினார். சொற்களில் கூறவதாயின் இவை இரண்டும் உழைக்கும் மக்களின் பண்பாடும் உடமை வகுப்பின் பண்பாடும் ஆகும். நம் நாட்டின் இப்பண்பாடுகள் எவ்வாறு நிலவுகின்றன என்று பார்ப்போம்.

நம் நாட்டில் சாதி அடுக்குகளுக்கும் பொருளியில் வகுப்பு அடுக்குகளுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஓர் ஒத்திசைவு உண்டு. எனவே மேற்கூறபட்ட இரு பண்பாடுகளும் சாதிப் பண்பாடுகளாகவே நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன் நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வரலாற்றுப் போக்கில் பொருளியலில் மேல் நிலையிலிருந்த பல மக்கள் குழுவினர் அரசியல் மாற்றங்களினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களிடம் முன்பு நிலவிய சில உடைமை வகுப்புப் பண்பாட்டுக் கூறுகள் அல்லது கருத்துக்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இன்றைய பொருளியல் நிலைமையின் காரணமாகப் பலர் இப்பண்பாட்டுக் கூறுகளைக் கைவிட்டாலும் இன்று நாம் அவற்றின் இடத்தில் கடைப்பிடிக்கும் புதிய கூறுகளைப் இழித்துக் கூறுவதன் மூலம் தம் முன்னாள் பண்பாட்டையே தாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த நிகழ்முறையை மனதில் கொண்டால் தான் நம் குமுகப் போக்கை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் மேற்சாதியினரும் கீழ்ச்சாதியினரும் அடிப்படையில் முற்றிலும் வேறுவேறான இரு பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் ஒரே மண்ணில் வாழ்வதாலும் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத தொடர்புகளினாலும் பல வேளைகளில் இவ்விரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் துல்லியமாக அறிய முடியாமல் கூட இருக்கும். பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்களால் கீழ்ச்சாதியினரால் சிலர் மேம்பாடு அடையும் போது மேற்சாதிப் பண்பாடுகளைக் கைக்கொள்கின்றனர். இந்த நிகழ்முறை நம் மண்ணில் தொன்று தொட்டே நிலவி வரும் ஒன்றாகும். இதனைப் புதுப்பார்ப்பனியம் என்று நம்மில் சிலர் அழைக்கின்றோம். இந்த நிகழ்முறையை நாம் புதிதாக அறிகிறோமே தவிர நிகழ்முறை புதிதல்ல. எனவே இதனைப் பார்ப்பனியம் என்றே அழைக்க வேண்டும். தான் தன் சாதியினரின் சராசரிப் பொருளியல் நிலையை விட உயர்வடையும் போது தன் சாதியினரையும் அவர்களுடைய பண்பாட்டையும் இழிவாக் கருதி மேல் சாதியினருடன், அவர்கள் எட்டி உதைத்தாலும் அவ்வாறு உதைத்த காலை கட்டிப்படித்துக் கொண்டு உறவாடுவதைத் தான் பார்ப்பனியம் என்று கூற வேண்டும். இதுவே பார்ப்பனர்களின் தொடர்ச்சியான மேலாண்மைக்கு உயிரூற்றாகவும் கீழ்ச்சாதியினரின் மீளா அடிமைத் தனத்துக்கு உரமாகவும் விளங்குகிறது.

பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வெளியே வந்தாலும் கூட நம் நாட்டிலுள்ள மேற்சாதியினர் உட்பட்ட “பார்ப்பனியர்கள்” (புதுப்பார்ப்பனர் என்பதைப் பார்ப்பனியர்கள் என்ற சொல்லால் குறிப்பதே சரி என்று கருதுகிறேன்.) அதை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வேறு வகை வாழ்க்கையில் புக முயன்றால் இந்தப் பார்ப்பனியர்கள் உடனே கூக்குரலிடுவர். வள்ளுவர் கூட,

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

(வேதத்தைப் பார்ப்பான் மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் தன் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது) என்று கூறினார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர் மழை
புருச னைக்கொன்ற பூவையர்க் கோர் மழை
வருசம் மூன்றும ழையெனப் பெய்யுமே.

என்று மழை தப்புவதற்கான காரணங்களை விவேக சிந்தாமணி தொகுத்துக் கூறுகிறது.

“குலவொழுக்கம் குன்றிய் பார்ப்பான் கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடப்படுகிறான். புத்தர் முதல் செயகாந்தன் வரை உண்மையான பார்ப்பனனின் இலக்கணத்தைக் கூறுவதன் மூலம் இதே கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய பண்பாடுகளில் பார்ப்பனர்களும் அவர்களை ஒட்டி பிற மேற்சாதியினரும் பின்பற்றுகிற ஒழுக்கங்களை ஆரிய ஒழுக்கங்கள் என்றும் கீழ்ச்சாதியினர் அவற்றைக் கைகொள்ளுவதைச் சங்கதப்படுத்துதல் (Sanskritisation) என்றும் கூறுகின்றனர் குமுக இயல் ஆய்வாளர்கள்.[5] ஆனால் சங்கதத்துக்கோ வேதத்துக்குரியவர் என்று நம்பப்படும் ஆரியர்களுக்கோ இந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் எந்தத் தொடர்புமில்லை. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை மேற்கொள்வோம்.

வேதங்களோ வேள்வி நடத்தும் பார்ப்பனரோ ஊன் உணவை விலக்கவில்லை. உயிர்க்கொலை வேள்விகளை நடத்துவதே வேதிய (வைதீக) சமயமாகிய பார்ப்பன சமயமாகும். இதனை எதிர்த்தவையே புத்தமும் சமணமும். புத்த தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாறு இதனைத் தெற்றென விளக்குகிறது. வேள்வியில் பலியிடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஆமாட்டை அவிழ்த்து விடுவித்துவிட்டான் என்பதற்காகப் பார்ப்பனர்களால் தன் பார்ப்பன வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவன் துரத்தப்படுகிறான். இதிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பார்ப்பனர்கள் வேள்விகளில் மாட்டை அடித்துத் தின்று வந்தார்கள் அல்லது அத்தகைய கருத்து நிலவியது என்பது புலனாகிறது. பண்டப் படைப்பு வளர்ச்சியாலும் வேளாண்மை மற்றும் வாணிக வளர்ச்சிகளின் தேவைக்காகவும் ஏற்பட்ட மாட்டு உழைப்பின் தேவையால் மாட்டு வேள்வி எதிர்ப்பு உருவாகியது. பின்னர் வாணிகர்களின் மதமாகிய சமணத்தால் உயிர்க்கொலை எதிர்ப்பாக மட்டுமின்றி மூக்கில் திரையும் கையில் மயிற்பீலியும் இருட்டறை வாழ்வுமாகக் கோணல் வடிவம் பெற்றதே மரக்கறி உணவின் தோற்றம். அதே போல் பெண்ணின் அப்பழுக்கற்ற கற்பு வேதங்களிலோ புராணங்களிலோ வேண்டப்படவில்லை. அரசர்களின் மனைவிகள் ஆண்பிள்ளை பெறுவதற்காகக் கணவனின் உடன்பிறந்தோர், தாயாதிகள், குலகுரு, யாராவது ஒரு துறவி அல்லது எந்த ஓர் ஆண்மகன், பலிகொடுக்கப்பட்ட குதிரை இவர்களுடனெல்லாம் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டனர். தலைமகன் உரிமை (Male primogeniture) என்ற அடிப்படையில் அரசன் இறந்த பின் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் குழப்பங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டிய ஒரு குமுகக் கடமையாக அவள் இவையனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. பார்ப்பனத் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் மணமகள் மணமகனுக்குத் தன்னை ஒப்படைக்கும் முன் யார் யாருக்கு உடமைப்பட்டவள் என்பது தொகுத்துக் கூறப்படுகிறது.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத் திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய “உயர்ந்த” பண்பாட்டுக் கூறகளை யெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு ஒவ்வொரு மேற்சாதிப் பண்பாட்டுக் கூறும் பணம் படைத்த பூரியப் பண்பாட்டுக் கூறு என்பதை நாம் பின்னால் விளக்குவோம். மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ்வொழுக்கங்கள் பார்ப்பனர்ககுரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல். பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல். கைம்பென் மறுமணத்தை மறுத்தல். மணவிலக்கு. மறுமணம் ஆகியவற்றை விலக்கல். உழைப்பை வெறுத்தல். சாதிவேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல். ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கையாள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது என்பதை இங்கு சொல்லி விடுகிறோம். எனவே மேற்சாதிப் பண்பாட்டு ஒழுக்கங்களைக் கீழ்ச் சாதியினர் கைக்கொள்ளும் செயல்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதை விட “பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவும் கருத்தைத் தெளிவாக விளக்குவதாகவும் அமையும்.

பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசும் நம் நாட்டிலுள்ள எந்தக் குழுவுக்கும் நாம் இங்கு கூற இருப்பவை தான் நம் நாட்டில் நிலவும் உண்மையான பண்பாட்டுக் கூறுகள் என்ற சிந்தனை கூடக் கிடையாது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். அடுத்து, அவர்கள் கூறும் புதிய பண்பாடு எது என்பதிலோ அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டுமென்பதிலோ சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் சில கலை, இலக்கியங்களைத் திறனாய்வதும் அக்கப்போர் அரசியல் பேசுவதும் “புதிய மக்களாட்சிப் புரட்சி” நடந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதும் தான். எதுவென்று தாங்களே அறியாதவர்கள், எங்கிருக்கிறோம் என்பதையும் அறியாத நிலையில் பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசுவது நம் நாட்டில் உள்ள இரங்கத்தக்க நிலைகளில் மிகக் கொடியது. நிற்கிற இடமும் அறியாமல் கடக்க வேண்டிய பாதையும் புரியாமல் இலக்கிலும் தெளிவில்லாமல் புதிய பண்பாட்டைப் பற்றிக் கூக்குரல் எழுப்பும் இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நமது தேடுதலைத் தொடர்வோம்.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நடக்க வேண்டுமாயின் முதலில் ஒரு காலை நின்ற இடத்தில் ஊன்றிக்கொண்டு மறுகாலைத் தூக்க வேண்டும். நமது குமுகத்தில் இருவேறு பண்பாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எதில் நாம் காலை ஊன்றிக்கொள்ள வேண்டும் எதிலிருந்து காலை நகர்த்த வேண்டுமென்று பார்ப்போம். ஒரு பாட்டாளி வகுப்புப் பண்பாட்டைப் படைப்பது நமது இலக்கு என்ற தெளிவிலிருந்து நாம் தொடங்க வேண்டும். நாம் மேலே கூறிய இரண்டு வகைப் பண்பாடுகளிலும் உழைக்கும் மக்களின் பண்பாடாக விளங்குவது கீழ்ச்சாதியினரின் பண்பாடே என்பதை நாம் காணலாம்.

பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வோம். இந்த ஆய்வில் முற்பட்ட சாதிகள் மேற்சாதிகளென்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் கீழ்ச்சாதிகளென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நாட்டுப்புறங்களில் நிலவுவற்றையும் மேற்சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நகர்ப்புறங்களில் நிலவுபவற்றையும் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இனி பண்பாட்டுக் கூறுகளை பார்ப்போம்.



அடிக்குறிப்புகள்:

[1] எழால் - யாழ்

[2] சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

[3] Materialism and Emprio Criticism

[4] சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மேலை உலகில் தோன்றி வளர்ந்தது. சங்கம் மருவிய காலத்துக்கு (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு) உரிய சிலப்பதிகாரத்தில் இலக்கியம் பற்றிய இத்தகைய தெளிவான கோட்பாடு உருவான குமுகச் சூழல் பற்றிப் பேசினால் நம் “மார்க்சியத்” தோழர்களுக்குக் எரிச்சல் வரும். சங்க காலத்தைக் குக்குலங்களின் (பழங்குடியினர்) காலமென்று காட்டவே அவர்கள் விரும்புவர். தொல்காப்பியத்தில் காணப்படும் எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் காட்டும் உயர்ந்த நாகரீகப் பின்னணியைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்காது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்ததென்று காட்டும் பார்ப்பனியச் சிந்தனை. இன்னொன்று குமுகம் எப்போதும் முன்னோக்கியே நகரும் என்ற தவறான கருத்து அல்லது பொய்யான வாதம். முதல் காரணமே பெரும்பாலும் இரண்டாம் காரணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பேரா.க.சிவத்தம்பி, பேரா. கைலாசபதி ஆகியோர் இச்சிந்தனைகளை வளர்த்துப் பரப்பிய மிகப்பெரும் “மார்க்சியர்கள்” என்ற பெருமைக்கு உரியவர்கள். இப்பணியைத் தொடங்கி வைத்த பேரா.நா.வானமாமலையையும் நாம் மறந்து விடக்கூடாது. மார்க்கியம் என்பது தமிழ்பப் பழிப்பு, தமிழ் ஒழிப்பு என்பதே என்ற மனப்பான்மையைப் பரப்பியோரில் இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

[5] சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச்சொல்லைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச் சண்முகனார் அதை “மேனிலையாக்கம்” என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழிமையும் விட மேம்பட்டவை என்பதைச் “சங்கதப்படுத்தல்” என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவே தான் “மேனிலையாக்கம்” என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் - ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.