கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

14.7.09

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1

08 – 09 - 1995.
பாளையங்கோட்டை.

அன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.

பொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது!

அதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்பு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன்? திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்? ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.

1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.

இது பற்றிய உண்மைகளாவன:


தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.

கேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள்? நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.

உண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.

இந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளைப் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.

1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.

2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.

3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.

4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.

6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.

இவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன? வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.

அரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.

(தொடரும்)

==============

[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்

நாள் : 25.9.95 திங்கள் காலை


இடம் : சத்தியமங்கலம்

தலைமை: தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

காவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.

கர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.

கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தலைமையகம்,
53,ஜமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச் சாலை,
தஞ்சாவூர் - 613 001.

தஞ்சை நெல் கொள்முதல்

“தஞ்சை நெல் கொள்முதல்” - தினமணிக்கு மடல்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

7.2.95 தினமணியில் தஞ்சையில் நெல் கொள்முதலில் தனியார் கை ஒங்குவது பற்றிய செய்தியைப் படித்தேன். தனியாரின் போட்டியை எதிர்கொள்வதற்காக அரசு தன் அரியாசனத்திலிருந்து இறங்கி மக்களிடம் வரத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் தனியாரின் கையை முறுக்கி வழிக்குக் கொண்டும் வரும் வசதிகள் அரசுக்கு உண்டு.

தஞ்சையில் பெரும்பாலும் விளைவிப்பது மோட்டா ரகம் எனப்படும் பருக்கன் நெல்லாகும். இது கேரளத்து மக்களுக்கென்றே விளைவிக்கப்படுகிறது. இது தஞ்சை மண்டலத்து உழவர்களுக்கும் தெரியும், ஆள்வோருக்கும் தெரியும், வாணிகர்களுக்கும் தெரியும். இருந்தாலும் தமிழகம் அரிசியில் பற்றாக்குறை மாநிலமென்றும் அதனால் கேரளத்துக்கு நெல் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. உண்மையில் கேரளத்து மக்களுக்குத் தேவையான அரிசி தமிழகத்திலிருந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லையை "அடைத்து" விடுவதனால் கேரளத்து மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த அதிக விலையில் வாணிகர்களும் அதனை விட அரசாள்வோரும் பங்கு பெறுகிறார்கள். விளைப்போராகிய தஞ்சை உழவர்களும் உண்போராகிய கேரள மக்களும்தான் இழப்பெய்துகிறார்கள்.

இப்போது தஞ்சையில் முற்றுரிமைக் கொள்முதலைக் கைவிட்டதனால் ஊக்கம் பெற்றுவிட்ட வாணிகர்களை எல்லைகளை இன்னும் "இறுக்கமாக" மூடுவதன் மூலம் நெருக்கடிக்குள்ளாகிப் பைகளை நிரப்பிக் கொள்வர் ஆள்வோர்.

தஞ்சை, மேற்குமலைத் தொடரின் அடிவாரம் ஆகிய இடங்களில் கேரளச் சந்தையை மனதில் கொண்டு நெல் விளைவிக்கப்பட்டு தமிழக அரசாள்வோருக்குக் கப்பம் கட்டப்பட்டு கேரளத்துக்குச் செல்கிறது. அதே போல் ஆந்திர நெல்தான் எப்போதும் தமிழக மக்களின் பசியைப் போக்குகிறது. இவ்வாறு ஆந்திரம், தமிழகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் நெல்லைப் பயன்படுத்துவதில் ஓரே மண்டலமாகச் செயற்படுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி இம்மாநிலங்களை ஆள்வோர் தத்தம் எல்லைகளை அடைத்து மக்களின் உணவு எனும் அடிப்படைத் தேவையைப் பயன்படுத்தி ஏறக்குறைய முப்பதாண்டுகளாக வழிப்பறி செய்து வருகின்றனர்.

மேற்படி மூன்று மாநிலங்களும் ஒரே மண்டலமாகச் செயற்படுவதை மறைத்துத் தமிழகம் பற்றாக்குறை மாநிலமென்ற பொய் அரங்கேற்றப்பட்டுள்ளது. ம.கோ.இரா. ஆட்சிக் காலத்தில் ஆந்திர எல்லையைக் "கண்காணிக்காமல்" இருந்ததனால்தான் அக்காலகட்டத்தில் என்றென்றும் தமிழகத்தில் மக்களுக்கு அரிசிப் பஞ்சமே வரவில்லை.

1989இல் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வந்தபோது உணவமைச்சரான ஆர்க்காட்டு வீராசாமி ஆந்திர எல்லையில் விளையாடியதும் அதன் காரணமாக அரிசி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததும் இதைக் காரணமாகக் காட்டி திருச்சி வட்டார அரிசி ஆலைகளுக்கு அவர் பெரும் தொல்லை கொடுத்ததும் அவரது அட்டூழியங்களைப் பொறுக்க முடியாதபோது அவரை வெளியேற்றித் தன்னைக் கருணாநிதி தற்காத்துக் கொண்டதும் இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகள்.

இன்று ஆந்திர முதலமைச்சர் 2 உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழக முதல்வர் அடிக்கடி கூடிக் குலாவி வருகிறார். இரு மாநில உழவர்கள் வயிற்றிலும் மூன்று மாநில மக்கள் வயிற்றிலும் மண்ணள்ளிப் போட என்ன இரகசியத் திட்டம் வகுத்திருக்கிறார்களோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.

சாராயம், போதைப் பொருட்கள், வெடி மருந்து போன்ற நச்சுப் பொருட்களின் கடத்தல் தங்கு தடையின்றி அரசாள்வோரின் ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கிறது. காற்று, நீர் போன்று மக்களின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருளின் போக்குவரத்தில் குறுக்கீடு செய்து அந்தப் போக்குவரத்தைக் "கடத்தல்" என்ற இழிசொல்லால் குறிப்பிடுவதும் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் பொறுத்துக்கொள்வதும் கொடுமை. வெடிப் பொருள்கள், நச்சுப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனைக்குத் தேவைப்படுவது போல் உணவுப் பொருட்கள் வாணிகத்திலும் உரிமம் பெற வேண்டுமென்பது பகுத்தறிவற்ற செயல். விருப்பமும் வாய்ப்பும் உள்ள எவருக்கும் உணவுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டும். குறிப்பாகச் சில்லரை வாணிகர்கள் உணவுப் பொருள் விற்பனையில் தங்கு தடையின்றி ஈடுபட வேண்டும். அப்போதுதான் விளைப்போருக்கும் உண்போருக்கும் இடையில் ஏறக்குறைய நேரடியான தொடர்பு ஏற்படும். தேவைக்கும் வழங்கலுக்குமாக உறவு பேணப்படும். பதுக்கல்காரர்களின் முயற்சிகளை நுண்ணுயிரிகள் போல் சிதைக்கும் ஆற்றல் இந்தச் சில்லரை வாணிகர்களுக்கு உண்டு.

நம் நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை என்பது நாமனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க போக்குவரத்துக் கட்டுப்பாடும் வாணிகத்துக்கு உரிமமும் எதற்காக? பொது வழங்கலுக்காக என்றால் அரசு வெளிச் சந்தையில் வாங்கி வழங்கட்டுமே. ஏழைகளின் பெயரைச் சொல்லி உழவனின் வயிற்றிலடித்து வேளாண்மையை நசுக்கி மண்ணைத் தரிசாக்கினால் இந்த நாட்டு ஏழைக்கு எங்கிருந்து வாழ்வு கிடைக்கும். இந்தக் கேள்வி அனைவர் அறிவிலும் உறைக்க வேண்டும்.

குமரிமைந்தன்,
12, தெற்குக்கடைவீதி(மாடி),
பாளையங்கோட்டை - 627002.

விடுதலை பெற.....

08-09-1995,
ஆதளவிளை.

அன்புடன் அண்ணாச்சிக்கு,

வணக்கம்.

தீவட்டி இதழை பாளை இளைஞர் பீட்டர் மூலம் உங்களுக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தொ.பேசி மூலம் கேட்டபோது நீங்கள் சென்னை சென்றிருப்பதாக அறிய முடிந்தது.

தாராமதி இதழ் கட்டுரைகளைப் படித்தேன், மார்க்சியம் கட்டுரை எழுதி முடித்து வைத்திருக்கிறீர்களா? அக்கட்டுரை வந்த தாராமதி இதழ்கள் இருக்கின்றனவா?

நீங்கள் எழுதியிருந்த தமிழ்த் தேசியம் கட்டுரையின் ஒரு பகுதி விடுதலை பெற..... என்ற தலைப்பில் தீவட்டியில் வெளியிடப்பட்டதற்கு கடிதமொன்று வந்துள்ளது.


இதற்கு விடை மடல் எழுத வேண்டும். அடுத்த இதழில் வெளியிட 2 (அ) 3 பக்க அளவில் நிற்குமாறு ஒரு கட்டுரை தேர்ந்தெடுத்து வையுங்கள் அல்லது எழுதுங்கள்.

அன்புடன்
அசுரன்
தீவட்டி, "விடியல் இல்லம்" ஆதள விளை, வெள்ளமடம் (அஞ்), குமரி – 629 305.


===============

கடிதம்:

குமரிமைந்தன் எழுதிய விடுதலை பெற... என்ற கட்டுரையினை வாசிக்கும் போது தீவட்டியின் நோக்கம், குறிக்கோள் என்ன என அறிய ஆர்வம் ஏற்படுகிறது.

தேசிய இனச் சிக்கலில் ஒடுக்கும் தேசம்/ஒடுக்கப்படும் தேசியம் என இரு கூறுகள் இருக்கும். இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசியமாக தமிழ் தேசியம் உள்ளது. ஆனால், அதே சமயம் ஒடுக்கும் தேசமாக இந்திய தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக, தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே ′இந்திய தேசிய′ மாயையாகும்.

இதில் பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியினை பெறுவதற்கான போராட்டமே வகுப்புரிமைப் போராகும். இன்றைய சமுகம் சாதி எனும் கொடிய அமைப்பால் மக்களை பிரித்து வைத்துள்ளது. இத்தகைய சாதியினை ஒழிக்க வழிதான் என்ன? மனிதனின் பிறப்பு என்பதும் அவனது தொழில் என்பதையும் அவனது சாதியே நிர்ணயிக்கிறது. சாதியின் பெயராலேயே அவனுக்கு தரப்படும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எனவே, எந்தச் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியின் பெயரால் உரிமைகளைப் பெறுவதே வகுப்புரிமை எனப்படும் இட ஒதுக்கீட்டு முறையாகும். இதனைக் கொச்சைப்படுத்தி வெறும் வேலைவாய்ப்பு என சுருக்கியுள்ளார் குமரிமைந்தன்.

மேலும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாக பார்ப்பனர்களே உள்ளனர். எனவே பார்ப்பனர்களே நமது எதிரிகள். மேலும் பிற மாநிலத்தவர் இங்கு சுரண்டுவதும் கண்டிக்கத் தக்கதே. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பன ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.


மேலும், பொருளியல் விடுதலையும், மண் விடுதலையும் மட்டுமே ஒரு நாட்டின் விடுதலையைப் பெற்றுத் தராது. மக்கள் விடுதலை மட்டுமே உண்மையான விடுதலையாக அமையும். மண்ணுக்கு மட்டும் விடுதலை வாங்கி எவ்வித பயனுமில்லை. வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற ′விடுதலை′ என்பது மண்ணுக்கான விடுதலையே மக்களுக்கான விடுதலை அல்ல. பெரியார் கூற்றுப்படி ′மேடோவர்′ செய்யப்பட்ட ′அதிகார மாற்று′ ஆகும்.

மக்களுக்கான விடுதலை என்பது மக்களைச் சாதியத் தளையிலிருந்து விடுவித்து, பெண்ணடிமையை ஒழித்து, பெறும் விடுதலையே சிறந்ததாகும்.

சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக SC/BC ஒற்றுமையை வசப்படுத்துவதே, ஏற்படுத்துவதே சரியானதாகும். அதற்கான வழிமுறை இட ஒதுக்கீட்டு முறையே ஆகும்.

எனவே, தமிழ் தேசியத்திற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பு (SC/BC ஒற்றுமை), பெண் விடுதலை, போன்றவற்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

பூ. மணிமாறன்
மதுரை.

=================

விடை மடல்:

தமிழக் மக்களைத் திராவிட இயக்கம் எவ்வளவு குழப்பி வைத்துள்ளது என்பதற்குத் தோழர் மணிமாறனின் கடிதம் ஒரு சிறந்த சான்றாகும்.

1. இந்தியத் தேசியம் ஒடுக்கும் தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே இந்தியத் தேசியம்.


2. பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவதே ஒதுக்கீட்டின் நோக்கம். வேலைவாய்ப்பு தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்பது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

3. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பனர்களின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

4. மண்ணின் விடுதலை என்பது மக்களின் விடுதலை அல்ல.

5. சாதியை ஒழித்து, பெண்ணடிமையை ஒழித்துவிட்டுத்தான் தேசிய விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

6. சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்ததப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகும்.

முதலில் தேசிய ஒடுக்குமுறையின் நோக்கம் பற்றிய தோழரின் கருத்து என்னவென்பதே குழப்பமாக இருக்கிறது. ஆனால் இதில் முதலில் தெளிவு வேண்டும்.

1. தேசிய ஒடுக்குமுறையின் இறுதி நோக்கம் பொருளியல் சுரண்டலே. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேச மக்களின் உழைப்பினையும் செல்வங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மார்வாரிகள், அவர்களுக்கும் துணைபுரிந்து வல்லரசுகளுக்கும் இந்நாட்டின் செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்து அதில் பங்கு பெற்று இந்நாட்டின் மீது முழு ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்திய அரசின் அதிகாரக் கூட்டம். அந்த அதிகாரக் கூட்டத்துக்கு மூடுதிரையாக அமைந்து இந்தத் தேசியக் கொள்ளையில் பங்கு போடுவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

இந்த அதிகாரிகள் கும்பலில் பார்ப்பனர்கள் பெரும்பான்மையினர். பிற சாதியினர் இந்த அணியில் சேர்ந்தாலும் கொள்ளை நோக்கத்தில் மாறுபடுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துவோர் பார்ப்பனரே, பிற சாதியைச் சேர்ந்த கட்சியினரிடமும் இந்தக் கொள்ளையிலோ அல்லது அதற்குத் துணைபோவதிலோ மாற்றமில்லை.

2. மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவது தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்று உறுதிபடக் கூறுகிறார் தோழர். ஆனால் அதற்கு ஒதுக்கீடு ஏன் என்று தான் தெரியவில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வி இருந்தால் தானே அனைவரும் கல்வி பெற முடியும். ஆனால் கல்வியை விரிவுபடுத்து, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக்கு வகை செய் என்ற முழக்கத்தை இந்த ஒதுக்கீட்டுப் போராளிகள் இதுவரை முன் வைக்கவில்லையே ஏன்? தோழர் சிந்தித்துப் பார்க்கட்டும். கல்வி விலைப் பொருளாகிறதே. நாளுக்கு நாள் கீழ்மட்டத்து மக்களின் வறுமை பெருகுகிறதே; கல்வியின் செலவு உயர்கிறதே; பணம் படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே இதற்கு எதிராக இந்த ஒதுக்கீட்டு முழக்கம் செயல்படுகிறதா? கல்வியை இன்னும் ஒரு சலுகையாகக் காட்டுவது தானே ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் உட்பொருள். ஆகவே ஒதுக்கீடு என்ற முழக்கம் தானாகவே கொச்சைப்பட்டு நிற்கிறது. இன்று வேறு யாரும் அதைக் கொச்சைப்படுத்தத் தேவையில்லை. எனவே அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்ற போராட்டமே மறுக்கப்பட்ட கல்வியை அனைவரும் பெறுவதற்குரிய வழி.

3. தமிழகத்துப் பார்ப்பனர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூட முதலிடத்திலில்லை. தொழில் முதலாளிகள் என்ற நிலையிலும் தமிழக மக்களில் அவர்களுக்குத் தான் முதலிடம். (அவர்களுக்கு இணையாகவோ அல்லது அடுத்த கட்டத்திலோ செட்டியார்களும் அதற்கடுத்து நாடார்களும் வரக்கூடும்.) அவர்களது தொழில் நிறுவனங்களை விழுங்க மார்வாரிகள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தொழில் நிறுவனங்களின் ஆள்வினைக்கு (நிர்வாகத்துக்கு)த் தேவையான கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் என்பதாலேயே பார்ப்பனர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் அயலவர்க்குத் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே காலங்காலமாக விற்றுவிற்றே ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும் தமிழகத்திலுள்ள வெள்ளாளர்களும். இதுவும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்றாகும்.

4. மண்ணின் விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல. பொருளியல் விடுதலை தான் உண்மையான மக்களின் விடுதலை. மண்ணின் வளத்தின் மீதும் அந்த வளத்திலிருந்து உருவாகும் செல்வத்தின் மீதும் அந்த மக்களுக்குக் கிடைக்கும் தடையற்ற உரிமை தான் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமை. அந்த உரிமையிலிருந்துதான், அந்த உரிமைக்கான போராட்டத்தின் போதுதான், அந்தப் போராட்டம் கூர்மை பெற்று உச்ச கட்டத்தை அடையும் போதுதான் அனைத்து மக்களின் ஒற்றுமையின் தேவை அனைவராலும் உணரப்பட்டு அதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அம்முயற்சிகள் தாம் உண்மையான மக்கள் ஒற்றுமையை உருவாக்கும்.

5. மண்ணின் உரிமைக்கான, அதாவது பொருளியல் உரிமைக்கான போராட்டத்தில்தான் சாதிய ஒழிப்புக்குரிய களம் உருவாக முடியும். அப்போராட்டத்தில்தான் பெண்ணடிமைக் கருத்துகள் தளரும். பொருளியல் உரிமையோடு அனைவருக்கும் கல்வியும் கைவந்து வேலைவாய்ப்புகள் மட்டின்றிப் பெருகிப் பெண் தன் காலில் நிற்கும் சூழலில்தான் பெண் உரிமை முழுமை பெறும். சாதிகள் தொழிலடிப்படையில் அமைந்தவை தானே. அத்தொழில்கள் சிதைந்து அனைவரும் ஈடுபடத்தக்க பெருந்தொழில்களால்தான் சாதியத்தின் தொழிலடிப்படை முடிவுக்கு வரும். அது மட்டுமல்ல இன்று இருக்கின்ற ஊர்களின் அமைப்பே சாதித் தகர்ப்புக்குத் தடையானவையாகும். இந்த ஊர் மக்கள் தங்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறுமளவுக்குப் பொருளியல் வேகம் பெற்றால்தான் சாதியம் கலைந்து சிதையத் தேவையான பின்னணி உருவாகும். இந்த உண்மைகள் நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும். அதுவரை சாதி ஒழிப்பும் பெண்ணடிமை ஒழிப்பும் வெற்றுக்கனவாகவும் வெறும் முழக்கமாகவும் தானிருக்கும்.

6. சாதிய ஒழிப்புக்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகுமாம். இதற்கு ஏதாவது வசிய மருந்து வைத்திருக்கிறாரா தோழர். இன்று பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தான் முரணி நிற்கின்றனரா? பிற்படுத்தப்பட்டோர் என்ற வகைப்பாட்டினுள் வரும் அனைத்துப் பிரிவினரும் ஒதுக்கீட்டில் தத்தமக்கு அதிகப் பங்கு வேண்டும் என்பதற்காகத் தானே தனித்தனிச் சங்கங்கள் அமைத்து அனைவருக்கும் சாதி வெறியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் கண்ணையும் காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டுள்ளாரா? அல்லது நாம் அவ்வாறு பொத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இல்லாத அல்லது அருகி வரும் வேலை வாய்ப்புக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிகளாகப் பிரிந்தும் சாதிகள் உட்சாதிகளாகப் பிரிந்தும் சண்டை போடுவது அவருக்குப் புரியவில்லையா?

தாழ்த்தப்பட்டோரிலும் வேலை வாய்ப்புக்காகவும் சாதிய ஒடுக்குமுறையினாலும் தம்முள் பள்ளர், பறையர், சக்கிலியர் எனப் பிரிந்து நிற்பதைத் தோழர் அறியாரா?

பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. சாதியக் கொடுமைகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டும் தான் காரணமா? இந்த மக்களின் குருதியோடு கலந்து விட்ட ஒரு செயற்பாட்டின் உச்சியிலிருப்போர் தானே பார்ப்பனர். மக்களுக்குள் நிலைத்துவிட்ட இந்தச் சாதிக் கொடுமையின் அடையாளம் தான் பார்ப்பனர்களே ஒழிய வேறில்லை. சாதியம் அனைத்து மக்களிலும் நிலைத்து நிற்கிறது. இந்தச் சாதியம் இந்த நூற்றாண்ணில் இருமுறை தமிழகத்தில் இளகியது. ஒருமுறை ′இந்திய′ விடுதலைப் போரின் போது, மறுமுறை திராவிட இயக்கம் தமிழக அதாவது திராவிட விடுதலையையும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போதும் அந்த ஒதுக்கீடு என்று கிடைத்ததோ அன்றே அதில் பங்குச் சண்டைக்காகச் சாதிச் சங்கங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கி விட்டன. எனவே இன்றைய நிலையில் இல்லாத வேலை வாய்ப்புக்காக வலிந்து ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்துவது தமிழ்க் குமுகத்தைச் சிதைத்து அழித்துவிடும்.

கண்முன் நடப்பது தமிழக வளங்கள் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுச் செல்வத்தை வைத்திருப்போர் மார்வாடிகளாலும் வல்லரசு விசைகளாலும் இந்திய மாநில அரசுகளாலும் ஒடுக்கப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதுமாகும். அந்தச் செல்வத்துக்குத் தமிழக மக்கள் அனைவரும் உரிமையுள்ளவர்கள். அதற்காகப் போராடுவோம். அப்போராட்டத் தீயில் சாதி வேற்றுமைகளைப் பொசுங்க வைப்போம். இதைத் தன்னுணர்வுடன் திட்டமிட்டுச் செய்வோம்.

பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் மட்டும் வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை. எண்ணற்ற தங்கள் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் பெறுகிறார்கள். அதே போல் பிற சாதியினரும் சாதி வேறுபாடின்றி தங்கள் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தங்களிடமிருக்கும் வளங்களைத் திரட்டித் தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தடையாக நிற்கும் அரசின் சட்ட திட்டங்களையும் கட்டுத்திட்டங்களையும் எதிர்த்து அனைவரும் சாதிவேறுபாடின்றிப் போராடி வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த ஒதுக்கீடு என்ற மாயமான் பிற சாதிகளிடையில் செய்யும் சிதைவு வேலையைப் பார்த்தீர்களா? தமிழகத்தில் பார்ப்பனர்களை அடுத்துச் செல்வம் படைத்தவர்களாகிய நாடார்கள் பணம் திரட்டி மாநாடு கூட்டி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோரென்று அறிவிக்கக் கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைக்கும் இன்று அவர்கள் எய்தியிருக்கும் உயர் நிலைக்கும் அவர்களை பந்தயத்தில் முதலில் வந்தவன் போன்று இறுமாப்பெய்தித் தங்களை முற்பட்டவர்களென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு தமிழக மக்களின் ″பிற்பட்டோர் மனப்பான்மை″யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிப்பதற்காகக் கையூட்டு கொடுக்கவும் இன்று அவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இது எவ்வளவு கொடுமை? இந்த ″பிற்படுத்தப்பட்டோர் மனக்கோளாறு″ நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறது பார்த்தீர்களா? ″நாங்கள் எவருக்கும் சளைத்தவரில்லை″ என்று ஒவ்வொரு குழுவினரும் போட்டி போட்டு முன்னேறி வெளி எதிரிகளை அடித்துத் துரத்த வேண்டிய ஒரு சூழலில் என்னைப் பிற்படுத்து, மிகப்பிற்படுத்து என்று கைக்கூலி கொடுத்துக் காலைப் பிடித்துத் தன்மானமிழந்து கெஞ்சும் நிலைக்கு இந்த ஒதுக்கிட்டு முழக்கம் தமிழக மக்களைக் கொண்டு நிறுத்தியிருப்பது உங்கள் மனதைக் கலக்கவில்லையா? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புரட்சிகரமாக இருந்த இந்த முழக்கம் தமிழக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிச் சாதி வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நெருங்க வைத்தது. அப்போதே பொருளியல் உரிமைகளுக்காகவும் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியிருந்தால் ஒதுக்கீட்டிலும் வெற்றியடைந்திருப்போம்; ஒட்டு மொத்தமான வேலைவாய்ப்பிலும் நிறைவை எய்தியிருப்போம்; தமிழக மக்களின் உரிமைகள், தன்மானம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

கானல் நீரைத் தேடி ஓடும் மான்களாகத் தமிழக மக்கள் திசையறியாமல் ஓடுவது மனதை வாட்டுகிறது தோழரே. அருள்கூர்ந்து அவர்களுக்குச் சரியான வழி காட்டுங்கள்.

குமரிமைந்தன்.

29.11.08

செங்கொடி அவர்களுக்கு மடல்

28-11-08

அன்பு நண்பர் செங்கொடி அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களுக்கு முன்தான் பார்க்க முடிந்தது. எனக்கு வரும் மின்னஞ்சல்களையும் எனது வலைப்பக்கப் பதிவுகளையும் கையாள்பவர் நண்பர் எட்வின் பிரகாசு. இந்திய அரசு தொலைத் தொடர்பு அமைப்புத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் செலவு அவருடைய பொருளியல் நிலைக்கு அப்பாற்பட்டதுடன் அதன் செயற்பாடும் சரியில்லை என்று ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி வழி முயன்றார். தொடக்கத்தில் ஓரளவு கிடைத்த தொடர்பு பின்னர் தொய்ந்து போய் விட்டது. பின்னர் கம்பியில்லாத தொலைபேசி (WLL) மூலம் அரசுத்துறையில் உரூ3000/- செலவில் எடுத்ததும் ஊர்ப்புறத்திலுள்ள அவர் வீட்டுக்கு ஓரளவு கிடைக்கிறதே அன்றி நகரத்திலிருக்கும் எம் அலுவலகத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர் இரவில் வீட்டுக்குச் சென்றபின்தான் அதைப் பயன்படுத்த முடிகிறது. அத்துடன் நம் ஆட்சியாளர்களின் மின்சாரக் கெடுமதி வேறு. இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவரால் வலைதளத்தையோ மின்னஞ்சலையோ பயன்படுத்த முடியாத நிலை. இவ்வளவையும் மீதுற்று அவர் எடுத்து வந்த பிறகுதான் நான் படித்தேன். ஏறக்குறைய உரூ 10,000/- வரை அவர் இதற்காகச் செலவு செய்துள்ளார். அரசுடைமை என்பது மக்கள் நலன்களை பனியாக்கள், பார்சிகளுக்கு அயலவருக்கும் விற்பதாக மாறும் நிகழ்முறையின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது.

இனி உங்கள் பதிவுக்கு வருவோம். திரு. சு.கி.செயகரனின் நூல் ஒரு பொன்மாற்று(பம்மாத்து). புவி இயங்கியலாளர் என்று சொல்லிக் கொள்ளும் அவர் குமரிக் கண்டக் கோட்பாட்டுடன் தொடர்புடைய ஒரேயொரு புவியியங்கியல் செய்தியைக் கூடத் தன் நூலில் தரவில்லை. எடுத்துக் கொண்ட பொருளாகிய குமரிக்கண்டம் இருந்ததாகக் கருதத் தக்க குமரி(இந்து)மாக் கடலின் நடுப் பகுதிக்கு வரும்போது ‘விரிவஞ்சி விடுகிறோம்’ என்று நழுவிடுகிறார். அவர் கொடுத்ததெல்லாம் வரலாறு, இலக்கியம், தொல்பொருளாய்வு என்ற எந்தத் துறையையும் சாராத ஒரு சிலரது ஆய்வேடுகளை மேற்கோள் காட்டியதே. இது போன்ற “படைப்பு”கள் வெளிவரும் போது அவர்கள் கூறும் “அறிவியல்” செய்திகளை அலசிப்பார்க்க முயலாமல் அவர்கள் “அறிவியல் ஆய்வு” என்று சொன்னவுடன் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வது அல்லது நழுவி விடுவது என்பது நம் படிப்பாளிகளிடையில் உள்ள ஒரு இயல்பாகி விட்டது. அதனால்தான் அறிவுத்திறன் வாய்ந்த வையாபுரியார் போன்றவர்களும் வெறும் பட்டத்தையும் பதவியையும் காட்டி மிரட்டும் செயகரன் போன்றோரும் பகட்டால் படம் காட்டும் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் இங்கு புகழ்பெற முடிகிறது. செயகரனுடைய நூலுக்கு மறுப்பாக குமரிக்கண்ட அரசியல் - காலத்தின் சுவடுகள், குழப்பத்தின் முடிவுகள் என்ற தலைப்பில் எனது குமரிக்கண்ட அரசியல் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடியவில்லை. முடிந்த பகுதி வரை என் வலைப்பக்கத்தில் உள்ளது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

நன்றி
குமரிமைந்தன்.

28.11.08

அரணமுறுவல் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

நாள்: 23-08-2008

அன்பு நண்பர் அரணமுறுவல் அவர்களுக்கு வணக்கம்.

ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டறிக்கை நேற்று கிடைத்தது. நன்றி. கன்னடம் செம்மொழி ஆனால் உங்களுக்கு என்ன? தமிழைச் செம்மொழி ஆக்கி அதற்கென்று தனி அடிப்படையை வகுத்த போதே அதை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு அடுத்தவன் மொழியைப் பற்றிய கவலை எதற்கு? தமிழ் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று உரிய நேரத்தில் உரிய வகையில் போராடாமல் ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி வருகிறது என்றதும் வரிந்து கட்டி நின்ற நம் தமிழமைப்புகளை அப்படியே போலச்செய்கிறீர்கள். நமக்கு என்ன தேவை என்று முடிவு செய்யத் தெரியாதவர்களுக்கு இயக்கங்கள் எதற்கு?

சித்த மருத்துவர் சங்கங்கள், கழகங்கள் என்று வைத்துக்கொண்டு வெறும் பதிவு பெற்றுத் தரும் தரகு வேலை செய்பவர்கள் அம்மருத்துவ முறை மக்களை ஈர்க்கும் வகையான மேம்பாடுகளை அடைவதைத் திட்டமிட்டுத் தடுத்து அம்மருத்துவ முறை சிறிது சிறிதாக மக்களிடமிருந்து அயற்பட்டு அழியச் செய்துகொண்டிருப்போரின் செயல் போன்றதே தங்களுடையதும்.

தமிழ் சிறுகச் சிறுகத் தொடங்கி இன்று மிக விரைவாக மக்களின் நாவிலிருந்து அகன்றுகொண்டிருப்பதையும் பல கல்வி நிலையங்களும் நீங்கள் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடலைப் பாடியுள்ள சுந்தரனார் பெயரில் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் கூடத் தமிழில் மாணவர்கள் பேசுவதைத் தடை செய்திருப்பதையும் கண்டுகொள்ளாமல் யாரோ விரல்விட்டு எண்ணத்தக்க ″தமிழறிஞர்களு″க்கு மட்டும் பயன் தரக்கூடிய ″இருக்கை″ வசதிக்காக இப்படி இளைஞர்களையும் ″தலைவர்களை″யும் கூட்டி நடத்தும் இந்த நிகழ்ச்சியின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

தாங்கள் கூறியது போல் சமற்கிருதத்துக்கு ஒதுக்கப்படுவது போல் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆய்வுக்காகப் பணம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகை வைப்பதிலிருந்து எது உங்களைத் தடை செய்கிறது என்பது தெரியவில்லை.

இந்திய ″விடுதலை″க்குப் பிறகு உள்நாட்டு அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல்கள் வளர்ந்து விடாமல் தடுத்து வெளிநாட்டு இறக்குமதித் தொழில்நுட்பத்தில் தொழில் நடத்தும் பனியாக்களுக்குப் போட்டியாக எவரும் வரவிடாமல் தடுத்து இந்திய ஆட்சி மொழியாகிய இந்தியையும் ஆங்கிலத்தையும் படித்தவர்களுக்கு மட்டும் வளவாழ்வு என்ற சூழ்நிலையைக் கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையை உருவாக்கியதால் தாய் மொழிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மாநில மக்களைத் திரட்டி இந்தக் கொடுமைகளிலிருந்து மாநில மொழிகளைக் காப்பாற்ற பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப விடுதலைக்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் நிகழ்காலம், எதிர்காலங்களிலிருந்து மக்களின், மாணவர்களின், இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் செம்மொழிச் சிக்கல் அல்லது மொழியைத் தனிமைப்படுத்தி அதற்காக என்று போராடுவது உண்மையில் தமிழை முற்றாக அழிக்கும் பணியாக இருக்கும். அதை நீங்கள் அறியாமையால் செய்கிறீர்கள் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. உங்கள் இந்த திசைதிருப்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் நீருரிமைகளை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் வடமேற்கிலும் உள்ளவர்கள் பறிக்கிறார்கள். நிலத்தை நேரடியாகவே பறிக்க முயல்கிறார்கள். கிழக்கில் கச்சத் தீவைச் சிங்களனுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்துத் தமிழர்களை இந்தியப் படையும் இலங்கைப் படையும் சுட்டு வீழ்த்துகிறார்கள். தமிழ் நாட்டை ஆள்வோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற வழிகளில் தமிழக நிலங்களை அயலவருக்குப் பிடுங்கிக் கொடுக்கிறார்கள். இந்த அனைத்துக் கொடுமைகளையும் எதிர்த்து உரிய கோட்பாட்டை உருவாக்கி மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அதிலிருந்து இங்குள்ள உணர்வுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்களின் கவனத்தைத் திருப்புவதாகத் தங்கள் நடவடிக்கை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். தமிழக, அல்லது இந்திய மக்களின் பொருளியல் - அறிவியல் - தொழில்நுட்ப உரிமைகளுக்காகப் போராடத் தாங்கள் ஆயத்தமானால் நாம் இணைந்து செயல்படலாம் என்று மீண்டும் ஒருமுறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின், தமிழ் மக்களின் நலன்கள் அனைத்தையும் அயலவருக்கு விற்றுத் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்த கும்பலையும் வளர்த்துவரும் கருணாநிதியைப் புகழவும் பாராட்டவும் எங்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுத் திரியும் தமிழமைப்புக் கூட்டமைப்பின் நோக்கும் போக்கும் மாறாத வரை தமிழகமும் தமிழக மக்களும் வாழமாட்டார்கள், விளங்க மாட்டார்கள். தமிழும் வாழாது, விளங்காது.

இலங்கைத் தமிழர்கள் மீது உங்கள் அளவுக்குக் குறையாமல் எனக்கும் கவலை உண்டு. அதற்கும் நாம் நம் உரிமைகளுக்காகப் போராட வீறு கொண்டு ஒருங்கிணைந்து நின்றால்தான் நம் நடவடிக்கைகளால் ஈழத் தமிழர்கள் உட்பட எந்த அயலகத் தமிழனுக்கும் பயனுண்டு. இல்லையென்றால் இதுவும் இளைஞர்களைத் திசை திருப்பும் செயலாகவே முடியும்.

அன்புடன்
குமரிமைந்தன்
பொறியாளர்
நிறுவனர்: தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
மேலாண்மை அறங்காவலர்: புதுமையர் அரங்கம் (அறக்கட்டளை)
தமிழ்க் குடில், தெற்குச் சூரங்குடி (அஞ்சல்), குமரி மாவட்டம் – 629 501.
☎ இல்லம்:04652-208194 செல்பேசி:9790652850

இணைப்பு: துண்டறிக்கை

கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 22.8.2008 வெள்ளி பிற்பகல் 2.00 மணி
இடம்: தொடர்வண்டி நிலையம் எதிரில், திருநெல்வேலிச் சந்திப்பு

தலைமை : தோழர் செம்மணி
தமிழக மக்கள் உரிமைக் கழகம்

கண்டன உரை : தோழர் ப. பொற்செழியன்
வளர்மதி மன்றம்

வழக்கறிஞர் இரா. சி. தங்கச்சாமி
உலகத் தமிழ்க் கழகம்

தோழர் லோக சங்கர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

தோழர் செந்தில் மள்ளர்
மள்ளர் மீட்புக் களம்

தோழர் இளங்கோ பாண்டியன்
தென்மொழி அவையம்

தோழர் மை.பா. சேசுராசா
தமிழர் களம்

தோழர் செ. பசும்பொன்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ம. சுதர்சன்
தமிழ்ச் சான்றோர் பேரவை

தோழர் தமிழீழன்
பாவேந்தர் மன்றம்

தோழர் சங்க. வள்ளிமணாளன்
தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்றம்

தோழர் பொருநை மைந்தன்
தமிழர் கழகம்

தோழர் வேல்முருகன்
சட்டக் கல்லூரி மாணவர்

தோழர் சத்தியா
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

நிறைவுரை முனைவர் ந. அரணமுறுவல்
இந்திய - இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழ் உரிமை காக்க

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, திருநெல்வேலி மாவட்டம்


கன்னடம் செம்மொழியா?

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த போதே செம்மொழிகளின் கால வரையறை குறைபாடுடையது என்று அறிஞர் மணவை முசுதபா போன்றவர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். தமிழ் அறிஞர்களின் எதிர்ப்பால் செம்மொழிக்கான காலவரையறை ஆயிரம் ஆண்டு என்பது ஆயிரத்து ஐநூறாக மாற்றியமைக்கப்பட்டது.

தமிழைச் சமசுகிருதத்திற்கு இணையான தொன்மை மொழிப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்ட தமிழர்களின் குரல் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுப் புதிய பட்டியலில் வைக்கப்பட்டது.

தமிழ் உலக முதன் மொழி; உயர்தனிச் செம்மொழி. இருந்தும் அதற்குரிய மதிப்பை நடுவண் அரசு தர மறுக்கிறது.

செம்மொழி என்று ஒரு மொழியை வரையறை செய்ய 10 வகையான வரையறைகளை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகத்திலேயே அந்தப் பத்து வகை இலக்கணங்களுக்கும் பொருத்தமான மொழி தமிழே ஆகும். தொன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கே உள்ளது. தமிழுக்குள்ள அனைத்துத் தகுதிகளும் சமசுகிருத்ததிற்கு இல்லை. இருந்தாலும் சமசுகிருதம் நடுவண் அரசின் செல்லப் பிள்ளையாய் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை விழுங்கி ஏப்பம் விட்டு வருகிறது.

இந்தக் சூழலில்தான் நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த கையோடு கன்னடத்தையும், தெலுங்கையும் செம்மொழிகள் என அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

கன்னடமும் தெலுங்கும் தேசிய மொழிகள் என்பதிலோ அவை தமிழுக்குச் சமமாக இந்திய அரசால் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலோ கருத்து வேறுபாடில்லை. இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மக்கள் தொகைக் கணக்குக்கேற்ப நூற்றுக்கணக்கான கோடி உரூபாக்களை இந்திய அரசு ஒதுக்கி அவற்றை வளர்த்தால் அதை நாம் வரவேற்கலாம்.

உலக மொழியியல் அறிஞர்கள் இந்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்துள்ளார்கள்.

செம்மொழி இலக்கணத்துக்கு எந்தவகையிலும் பொருந்திவராத தெலுங்கையும் கன்னடத்தையும் இந்திய அரசு செம்மொழிகள் என்று அறிவிக்குமானால் அது வெட்கக் கேடான செயலாகும். வேதனை அளிக்கும் செயலாகும்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துயிர்த்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறன்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

என்ற மனோன்மணியம் சுந்தரனார் வரிகளை நீக்காமல் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டில் உலவ விட்டிருந்தால் தமிழ் மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு விளங்கியிருக்கும்.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டு அதன்சேய் மொழிகளையும் செம்மொழி என்று அறிவிக்க உள்ளது பொருத்தமில்லாததாகும். எனவே, இந்திய நடுவண் அரசு கன்னடத்தையும் தெலுங்கையும் செம்மொழிகள் என்று அறிவிக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்ப் பெருமக்களே!

உலகமே வியந்து போற்றும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகளை இனியேனும் உணர்ந்துகொள்வோம்! நம் உரிமையைக் காக்க அணி திரள்வோம்!!

20.11.08

குணா அவர்களுக்கு 29 - 08 - 2008 நாளிட்ட மடல்

நாகர்கோயில்,
29-08-2008.

அன்பு நண்பர் குணா அவர்களுக்கு வணக்கம்.

நேற்று நண்பகலில் தாங்கள் தொலைபேசியில் கூறிய செய்திகள் குறித்து என் வருத்தத்தைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். 1982 இறுதி அல்லது 83 தொடக்கம் என்று நினைவு, சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அப்போது சென்னையில் இருந்தேன். எனவே நானும் சென்றிருந்தேன். அங்கு திரு.அரணமுறுவலிடம் திரு.பொன்.பரமேசுவரன் காசோலை கொடுத்தபோது தான் பஃறுளி முதல் வையை வரை நூலை அச்சிடும் பொறுப்பை அரணமுறுவலிடம் ஒப்படைத்திருந்தீர்கள் என்று தெரிந்தது. நூலுக்கான முன்னுரையில் அரணமுறுவலின் பங்கு பற்றிக் குறிப்பிடாத என் தவறைப் பின்னர் உணர்ந்தேன். நிற்க, அரணமுறுவல்தான் பின்னொரு நேரம் பேசும் போது ″ஆய்வரணுக்கு அயல் நாட்டுப் பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?″ என்று கேட்டார். நாம் பின்னர் ஒருமுறை சந்தித்த போது இதைச் சொன்ன போது உங்கள் விடை ″அதனால் என்ன?″ என்றிருந்தது. இப்பொழுது தாங்கள் தொலைபேசியில் பேசிய போது கூறிய செய்தியை அப்போது சொல்லவில்லை. அதாவது தாங்கள் பணியாற்றிய இந்திய ஏம வங்கி அலுவலகத்தில் உரூ.16,000/- (பதினாறாயிரம்) கடன் வாங்கித்தான் அந்த நூலை வெளியிட்டீர்கள் என்ற செய்தி இந்தத் தொலைபேசி உரையாடலில்தான் வெளிவந்தது. இந்தச் செய்தி இடைவெளிதான் நான் செய்த தவறுக்குக் காரணம். இருந்தாலும் நடப்புக்குப் புறம்பான ஒரு பதிவு என் மூலமாக நேர்ந்ததற்கு நான் மிக வருந்துகிறேன். எந்தக் கட்டுறவும் இல்லாத மன்னிப்பைத் தங்களிடம் கேட்கிறேன். என்னைப் பொறுத்தருள்க.

இது குறித்து மனந்திறந்து..... பகுதியின் இறுதியில் ஒரு பதிவும் செய்துள்ளேன். இணையத்திலும் பார்க்கலாம். இந்த மடலையும்தான். அந்தப் பதிவின் படியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

அனைவரையும் குறை கூறுகிறேன் என்று அன்று நீங்கள் தொலைபேசியில் கூறியது இரண்டாவது முறை. இது பற்றி நான் ஏற்கனவே தமிழ்த் தேசியம் ″மனந்திறந்து….″ பகுதியில் எழுதியுள்ளேன்.

நான் சில குறிப்பிட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளேன். ″தமிழ்″, ″தமிழ்த் தேசிய″ இயக்கங்கள் நடத்துவோரில் பெரும்பாலோருக்கு அவை குறித்த கட்டுரைகளை விடுத்துள்ளேன். நான் வேலையை விட்டுத் தொழில் செய்து ஐந்து குழந்தைகளைக் கொண்ட என் குடும்பத்தைத் தாங்கிய வறுமை மிகுந்த சூழலிலும் என் வரவில் கணிசமான பகுதியை இதற்குச் செலவு செய்தேன். என் செலவில் எங்கெங்கோ சென்று நிகழ்ச்சிகளில் பங்குகொண்டேன். என் கருத்துகளை ஆணித்தரமாகத் தயங்காமல் எடுத்துரைத்தேன். அவர்கள் நடத்திய இதழ்கள் குறித்து மனம் திறந்த திறனாய்வுகளை எழுதி அவர்களுக்கு விடுத்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் முன்வைப்புகள் பற்றிய தங்கள் உணர்வுகளை, திறனாய்வுகளை முன்வைத்ததில்லை. பொறுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கின்றனர். அது பற்றி எனக்கு வருத்தமோ கவலையோ இல்லை. என் கருத்துகள் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ என்னைப் புகழின் வெளிச்சத்தில் நிறுத்திவிடும் என்றோ நான் எப்போதும் நினைத்ததில்லை.

இந்த இயக்கங்களுடன் நான் தொடர்பு கொள்ளத் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் இருந்த நிலையிலிருந்து நாள்தோறும் தமிழகத்தின் நிலை இறங்குமுகமாகவே இருக்கிறது. தங்கள் விருப்பங்களையும் மீறி தங்கள் மனதுக்குள் தாங்கள் போற்றும் அல்லது போற்றுவது போல்காட்டிக் கொள்ளும் தமிழகத் தலைவர்களை குறைகூறுவதைத் தவிர்க்க முடியாத நிலைக்குப் பலர் வந்துள்ளனர். அவர்களிலும் பலர் சிக்கல்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். என் கருத்து நோக்கி வரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதேவேளையில் இவர்கள் முற்றிலும் மாற்றமடைந்து என்னுடன் தோழமை கொள்வார்களென்று நான் கனவு கூடக் காணவில்லை, ஏனென்றால் அவர்களின் வகுப்புப் பின்னணி அத்தகையது. திராவிட இயக்கத்தால், குறிப்பாகப் பெரியாரின் அரசியல் செயற்பாடுகளால் தமிழகத்தில் உருவாகிவிட்ட செல்வாக்கு மிக்க ஒட்டுண்ணிகளின் நலம் காப்பவர்கள் இவர்கள். ஆனால் விளைப்பு விசைகளை தமிழ்த் தேசிய முதலாளியர் - தொழிலாளர் - வாணிகர்கள் என்ற வகுப்புகளை அரசியல் களத்தில் கொண்டுவந்து நிறுத்துவதுதான் என் பணியின் முதல் கட்டமாக இருக்கும். அதற்கான எந்தக் களப் பணியிலும் இதுவரை என்னால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைய முடியவில்லை. இதுவரை அதற்கான துணை கிடைக்கவில்லை. என் வாழ்நாளில் அது கிடைக்காமலே கூடப் போகலாம். அந்தப் பணி பிறரால் கூட, பின் இன்னொரு நாளில் நிறைவேறலாம்.

நான் உறவுகளைத் தேடியோ நட்புகளை நாடியோ இங்கு வரவில்லை. புற உறவுகளோ நட்புகளோ இன்றி வாழ்ந்து பழகிவிட்டவன் நான். என் குடும்பம் என்ற மிகச் சிறு வட்டம் என் அந்தத் தேவைக்குப் போதுமானது. அது அரசியல் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் அமைந்ததல்ல என்பதால் அது தொடர்வதில் பெரும் சிக்கல் இருக்காது.

எனது ஒட்டுமொத்த குறிக்கோள் தமிழக மக்கள் உலகிலுள்ள வேறு எந்த மக்களுக்கும் அடிப்பட்டவர்களாய், அடிமைகளாய் இல்லாமல் உலகிலுள்ள எந்த மனிதக் குழுவுக்கும் இணையாக வரவேண்டும்; தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களும் அவ்வாறே; உலகிலுள்ள எல்லா மக்கள் குழுவினரும் சமநிலையில் வாழ வேண்டும்; அந்தப் பணியைத் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்; அதற்கு நல்ல கோட்பாட்டு வழிகாட்டி மார்க்சியத்தின் வரலாற்றுப் பருப்பொருளியம், இயங்கியல் பருப்பொருளியம் ஆகியவையே என்பது என் நிலைப்பாடு. பொதுமையியம் இப்போதைக்கு மனித குல வரலாற்றில் இடம் பெற முடியாது; இன்றைய பொதுமைக் கோட்பாடும் பொதுமைக் கட்சிகளும் இயக்கங்களும் மார்க்சியத்தின் மறுப்பு அல்லது அகற்றலே(Negation) என்பது எனது கருத்து. ஏழை நாட்டு மக்களின் இன்றைய துயரங்களுக்கெல்லாம் மட்டுமல்ல வல்லரசுகளின் எல்லையற்ற அரக்கத் தனமான வளர்ச்சிக்கும் காரணம் அந்த ஏழை நாடுகளின் வளர்ச்சி நிலைக்கும் பொருந்தாத பொதுமைக் கோட்பாடும் செயல்திட்டங்களும்தாம் என்பதும் என் உறுதியான கருத்து.

நாம் சந்தித்த ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடையே கருத்துகளில் இடைவெளி தொடங்கி இன்று நெருங்கி வர முடியாத தொலைவில் நாம் இருப்பது போன்ற புரிதல் எனக்கு உள்ளது. மீண்டும் நாம் பழைய புரிதலுக்கு வருவோமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் அணுவியம் என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை வள்ளுவத்தின் வீழ்ச்சி என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள் செயற்படுகின்றனவோ அவையே கர்னாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்னாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவுச் சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ் பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் உள்ள முரண்பாடுகளை தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன் பிறந்த(வட இந்தியப் பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழகத் தேசியத்துக்குக் கேடுசெய்வதாக உள்ளது.

இன்றைய வானியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் சாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா? அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றுக்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

வானியல் உன்னிப்புக்கு அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவை இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை பின்னிரவில் எழுந்திருந்து சிறுநீர் கழித்துவிட்டு ″ஏழாங்கோட்டை வெள்ளி″ மேலே இருக்கிறது என்று சொல்லி விட்டுப் படுத்துவிடுவார் அல்லது சாய்ந்து விட்டதென்று கூறி ஊளையிடுவார். அதற்கு மறுமொழியாக வேறு ஊளைகள் கேட்கும். முகத்தைக் கழுவி விட்டுச் சந்தைக்குப் புறப்படுவார். பல வேளைகளில் அவரோடு சந்தைக்குச் செல்பவர்கள் விழித்துக் கொண்டு ஊளையிட்டு இவரை எழுப்புவதும் உண்டு.

என் மனைவியின் ஊர் சற்று ஒதுக்குப் புறமானது. பேருந்து வருமிடமும் ஒலி கேட்காத தொலைவு. பேருந்து வரும் நேரத்தை அறிய வெட்ட வெளியில் நின்று நிழலை அளந்து நேரத்தை அறிவதாக என் மாமனார் கூறுவார்.

அதுபோல் ஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால் கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். பல வேளைகளில் அவர்களது கணிப்புகள் தவறாகப் போய்விடுவதும் உண்டு. ஆனால் இன்றைய வானியல் முன்னறிவிப்பை விட அவர்களது கணிப்புகள் சிறப்பாகவே இருந்தன. இதுபோல் குமுகத்தில் மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலை தேவைகளுக்காக தத்தமக்குரிய வானியல் உள்ளடங்கிய, பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன், இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர் நம் குமுகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளனர். இடையர்கள் என்று எடுத்துக்கொண்டால் இடைக்காடரை விட்டுவிட்டு தமிழர்களின் வானியலை நடுநிலைச் சிந்தனை உடைய எவராலும் பேச முடியுமா? அவரைப் பற்றிய ஒரு தொன்மைக் கதையைப் புறக்கணிக்க முடியுமா? பன்னிரண்டு ஆண்டு வரட்சிக்குப் பின் அவரைப் பார்க்க ஒன்பது கோள்களும் வந்ததாகவும் அவர்களுக்கு தினையை மண்ணில் கலந்து குழைந்து தான் கட்டிய சுவரிலிருந்து தினையைப் பிரித்து ஆட்டின் பாலில் கஞ்சி வைத்து ஊட்டி தலைமாடு, கால்மாடு மாறித் தூங்கிய அவர்களை ஒழுங்காகப் படுக்க வைத்தார் என்ற கதையின் உட்பொருளைத்தான் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அறுபது ஆண்டுகளுக்கும் அவர் பெயரில் இருக்கும் பாடல்களில் உள்ள தட்ப வெப்பநிலை, வேளாண்மை, செய்தொழில்கள் ஆகியவற்றுக்கான உறவு நிலைகள், விளைந்த முகாமையான உணவுப் பண்டங்களும் ஆமணக்கு போன்ற கொழுப்புப் பொருட்களும், உப்பு போன்ற பண்டமாற்று ஊடகங்களும் என்று அதிலடங்கிய செய்திகள் உலகில் வேறெங்காவது உண்டா? அதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

சேம்சு பெர்க்குசன் என்றொருவர், பெயர் சரிதானா என்று ஐயமாக இருக்கிறது, தொடக்கப் பள்ளியில் படித்தது, எட்டாவதோ, பன்னிரண்டாவதோ கடைக்குட்டி, பள்ளிக்கு விடுக்கவில்லை. அண்ணன்மாரைப் பார்த்து எழுத்தறிவை வளர்த்துக் கொண்டவர். சிறுவனாக இருக்கும் போதே இரவில் ஆடுகளுக்குக் காவலிருந்தார். கையில் செபமாலையை வைத்துக் கொண்டு விண்மீன்களை நோட்டமிட்டு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். பல கதிர்க்கடிகைகளை யாத்தவர்.

இடையர்கள் ஆடுமாடுகளை மேயவிட்டு விட்டு ஓய்வு வேளைகளில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல் அரிய சிந்தனைகளையும் உருவாக்க முடியும். இரவில் இடைக்கடரைப் போல், சேம்சு பெர்க்குசன் போல் வானியல் இறும்பூறு பற்றிய புதிர்களை விடுவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. நீங்கள் குறிப்பிடும் வள்ளுவர்களுக்கு அப்படி இருந்த வாய்ப்பு என்ன?

இனி கடலோடிகளுக்கும் மீனவர்களுக்கும் வருவோம். கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும் கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்ற நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும்? அதனால்தான் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளிலும் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால் நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் காலமழையின் போது எப்படித் திசையறிய முடியும்? அவ்வேளைகளில் அவர்கள் கடற் செலவைத் தவிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் கால், காற்று, காலம், கால மழை போன்ற சொற்கள் வழக்குக்கு வந்தன போலும்.

இந்த இடர்ப்பாடுகளுக்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர். அதற்குச் சான்றாக காந்த ஊசி தன்னை நிறுத்திக் கொள்ளும் வட திசைக்கு ஊசித் திசை என்ற பெயர் வந்தது. இந்தக் காந்த ஊசியை ஆமை வடிவில் அமைந்த கொள்கலனில் உள்ள எண்ணெயில் மிதக்கவிட்டனர், இரும்பாலான அந்த ஊசி துருப்பிடிக்காமல் இருக்கவும் நூல் போன்றவற்றில் தொங்கவிட்டால் துல்லியம் இருக்காது என்பதாலும். இந்த ஆமை தொன்ம வடிவில் திருமாலின் தோற்றரவுகளில் ஒன்றாக மறைந்து கிடக்கிறது. சீனர்களின் வரலாற்றில் அம்மணமான உண்மையாகப் பதிவாகியிருக்கிறது. தமக்குள் முரண்பாடு கொண்ட இரு நிலப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ″ஆமை″யைப் பயன்படுத்தி குமரிக் கடலைக் கலக்கியதில் எத்தனை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை இயற்றினர் என்று நம் தொன்மங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் உங்கள் ″வள்ளுவர்″களின் பங்கு யாது? இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும் பொதுமக்களிடையிலும் பரந்துகிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார்? அவர்களுக்கு ″வள்ளுவர்″களோடு ஏதாவது உறவு உண்டா என்றாவது உங்களால் காட்ட முடியுமா?

தெற்கன் ஆகிய தட்சன் தன் மக்களில் 27 மகள்களை நிலவுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் என்று தொன்மம் கூறுகிறது. கதிரவன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் புவியிலிருந்து பார்க்கும் போது 27⅓ நாட்கள், கிட்டத்தட்ட (உண்மையாக அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வது 25⅓ நாட்களில் கிட்டத்தட்ட) அந்த 27⅓ நாட்களை 27 ஆகப் பிரித்து 27 நாண்மீன்களாக வகுத்துள்ளனர். அவற்றை நிலவின் இயக்கத்தோடு சேர்த்துக் கணித்தவன் தெற்கன் என்பது இந்தத் தொன்மக் கதையின் உள்ளடக்கம். ஆனால் நீங்களோ, யாரோ எழுதியவற்றை வைத்துக்கொண்டு, தொன்மங்கள் வான்பொருட்களின் இயக்கங்களை விளக்குகின்றன என்று தலைகீழ்ப் பாடம் படிக்கிறீர்கள். தொன்மங்களின் மனித வரலாற்றுக் குறிதகவுகளிலிருந்து உங்கள் படைப்புகளைப் படிக்கும் மக்களின் கவனத்தைத் திருப்புகிறீர்கள். சிவன் காலனை உதைத்தாக வரும் கதை உண்மையில் காலசாமி வழிபாட்டை ஒழித்துச் சிவன் வழிபாட்டை நிறுவிய நடைமுறையின் ஒரு பதிவு. (எங்கள் வட்டாரத்து அம்மன் கோயில்களில் இன்றும் காலசாமி பீடங்கள் உள்ளன. கொடைவிழாவின் போது மார்க்கண்டன் கதையை வில்லில்பாடும் போது காலசாமி வந்து ஆடுகிறார். இவ்வாறு பல சிறுதெய்வங்களையும் பெருந்தெய்வங்கள் அகற்ற முயன்று தோற்றுப்போன வரலாற்றுண்மையின் புதைபடிவங்களாக ஊர்ப்புற வழிபாடுகள் நிலவுகின்றன.) அதில் வான் பொருட்களின் இயக்கத்தைத் தடம்பிடித்து, இந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திருப்புகிறது. ஒவ்வொரு நாண்மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள். ஒருவேளை அந்தத் தலைவர்கள் தாம் அந்தந்த நாண்மீனை இனம் கண்டவர்களாக இருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு அரிய கருப்பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு சாதிப் பெருமைபேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

நாள், பக்கம், நாண்மீன், யோகம், கரணம் என்ற ஐந்து உறுப்புகளைக் கொண்ட பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறத்தை, இந்த ஐந்து உறுப்புகளுக்கும் ஒரு பட்டியல், பகல் நேர நீட்சியான ″அகசு″க்கொரு பட்டியல், கதிரவனின் ஒரு நாளின் 60 நாழிகைக்குள் இடம்பெற்றிருக்கும் ஓரையைக் காட்டும் ஒரு பட்டியல், அந்தந்த மாதத்தில் ஓரைகளின் இருப்பைக் காட்டும் ஓர் ஓரை வட்டம் ஆகியவற்றைக்கொண்டதாகப் படைத்துள்ளனர். வாக்கியம் என்பது பட்டியலைக் குறிக்கும் சொல். எனவே இதனை வாக்கிய ஐந்திறம் என்கின்றனர். புலனங்களை எடுத்துவைப்பதற்கு வாகாக(வாக்காக என்பதுதான் குமரி மாவட்ட வழக்கு) இருப்பதால் பட்டியலை வாக்கு என்று குறித்திருக்கலாம். அதை உருவாக்கியவர் சிவவாக்கியராக இருக்கலாம். இந்த ஐந்திறம் பாண்டியர்களின் தலைநகர் நிலநடுக்கோட்டில், தென் மதுரையில் அமைந்திருந்தபோது அல்லது அதற்கும் முன்பு உருவாகியிருக்க வேண்டும், ஏனென்றால் இப்போதிருக்கும் ஐந்திறத்தில் முதன்மைப் பட்டியல் தலைநகர் கபாடபுரத்துக்கு மாறி ஆண்டுப்பிறப்பு 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்த பின்னுள்ள காலத்துக்கு உரியவையாக இருந்தாலும் பழைய நிலைமைக்கு உரிய பதிவுகளையும் அவை கொண்டுள்ளன. இது நம் மரபின் ஒரு சிறப்புக் கூறு. மாற்றங்கள் வரும்போது பழையவற்றின் இடைச்சொருகலாகப் புதியவற்றை வைப்பது ஓர் உத்தி. இங்கே புதியவற்றின் இடைச்சொருகலாகவும் பழையவற்றை அப்படியேயும் இரு உத்திகளையும் கையாண்டுள்ளனர். மாதத் தலைப்பில் மிதுனரவி என்று போட்டிருந்தால் 7, 8, அல்லது 9ஆம் நாளில் கடகாயனம் என்ற குறிப்பு உள்ளது. அன்றே கதிர் உண்மையில் மிதுனத்திலிருந்து கடகத்தினுள் நுழைந்துவிடுகிறது என்பது இதன் பொருள்.

″அகசு″க்கான பட்டியலில் 1, 5, 15 என்று ஐந்தைந்து நாட்களுக்காக பகல் நேர நீட்சியைக் கொடுத்திருக்கையில் 5க்கும் 15க்கும் இடையில் மட்டும் கடகாயனம் என்று குறிப்பிட்டிருக்கும் நாளுக்குக் கொடுத்திருக்கிறது.

அதுபோலவே ஒவ்வொரு மாதத்திலும் கதிர் தோன்றும் நேரத்தில் குறிப்பிட்ட ஓரையின் இருப்பு நேரத்தைக் காட்டும் பட்டியலும் அடுத்த மாதத்துக்குத்தான் பொருந்தும்.

அதுமட்டுமல்ல 12 நேர் கோடுகளில் 12 ஓரைகளையும் காட்டும், நம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரைவட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும் சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு, பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம்.

இதைச் செய்தவர் அல்லது செய்தவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா?

நானறிந்தவரை வள்ளுவர்கள் என்ற சாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் சாதகம் கணித்துப் பலன் சொல்பவர்கள் என்பது தெரியும். ஆனால் குமரி மாவட்டத்தில் அவர்கள் செயற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. நெல்லையில் ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும். அவருக்கு வள்ளுவர் எழுதிக்கொடுத்திருந்த சாதகக் கட்டின் கனத்தைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். நான் அதுவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் கூட ஒற்றைப் பனை ஓலை நறுக்கில் எழுதப்பட்ட சாதகக் குறிப்பை அல்லது ஒரு சிறு குறிப்பேட்டில் எழுதப்பட்டதைத்தான் பார்த்திருக்கிறேன். நிற்க, நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல் இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து சாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது பேருந்து, சரக்கி ஓட்டுநர் அனைவரும் ஒன்றுசேர்ந்து தாங்கள்தாம் உள்ளெரிப் பொறிகள்(Internal combustion engines) உட்பட உந்துத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சி அல்ல, குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது கூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தியப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரெனத் திசைமாறி தமிழக மக்களிடையில் மொழி அடிப்படையில் பகைமை வேர்கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில் கூட சிவனியத்துக்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயல்களின் தன்மையையும அவற்றின் விளைவுகளையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது. வேறு வகையான சிந்தனைகள் உங்களை ஆட்கொண்டு விடாதபடி விடுதலை இறையியல் கூட்டம் அரணிட்டுக் காத்து நிற்பது ஊரறிந்த உண்மையாகிப் போனது. இதைப் பயன்படுத்தி படையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக்கொண்டு தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்துநின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் சாதி வெறிபிடித்த ″தமிழ்″ச் சாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.

தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும் ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல மூத்தவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக்கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்கள் பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக் கெட்டாத கடும் போரில் உள்முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலே எழுதிய கருத்துகளின் மூலம் தங்கள் மனதுக்கு ஏதாவது வருத்தம் நேர்ந்திருந்தால் அதற்காகவும் என்னை மன்னித்திருங்கள்.

நான் தங்களுக்குப் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவற்றைப் பற்றி ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். அதனை மீண்டுமொருமுறை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
குமரிமைந்தன்.

2.6.08

தமிழினி மாத இதழ் (ஏப்பிரல் 2008) - ஒரு பார்வை

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

″வல்லான் வகுத்ததே வாய்க்கால்″ ′ஊழ்′ எது உலகப் போரா? நன்று. ″காலம் உலர்த்திய கண்ணீர்த் துளி″ அண்ணாத்துரை தான் நினைத்தால் பெரியாருக்குப் போட்டியாக வரமுடியும் என்று ஒரு முறை கூறியதாக சென்ற தலைமுறைத் தலைவர் ஒருவர் நினைவு கூர்ந்ததைப் படித்துள்ளேன். அண்ணாத்துரையின் நெருக்கமான தோழர்கள் உட்பட பெரியாரிடம் சம்பளத்துக்குத்தான் வேலை பார்த்து வந்தனர். நூல் எழுதுவது, திரைப்படத்துக்குத் கதை - உரையாடல் எழுதுவது என்று எல்லாமே அவரது ஆணைக்கு உட்பட்டே என்ற நிலையிலிருந்து உடைத்து வெளியேற மணியம்மை திருமணம் உதவியது. என் தமிழ்த் தேசியம் ஆக்கத்தை வலையில் பாருங்கள்.

1961-62இல் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டு சம்பத்தோடு கண்ணதாசன் வெளியேறிய காலகட்டத்தில் ம.கோ.இரா. நடித்து வெளிவந்த தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ஒரு பாடல் வரிகள்,

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தாரையும் கருவறுக்கும்

இது அண்ணாத்துரையைப் பற்றிய ஒரு துல்லியமான படப்பிடிப்பு என்பது என் கருத்து.

கே.பி.எசு.கில் அழித்தது பஞ்சாப் போராளிகளை மட்டுமல்ல, கொக்கிப் பந்து விளையாட்டையும்தான். நம் ஊர்ப்புறங்களில் அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டு வந்த எத்தனையோ ஆட்டங்களை இன்றைய ″இறக்குமதி″ ஆட்டங்களில் இனம் காண முடிகிறது. இந்திய ஆட்சியாளர்கள் நம் விளையாட்டுகளை மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு உரிமைப்பட்ட அனைத்தையுமே அழித்து வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் அரசின்மையால்(அரசகத்தால்) மண்ணின் மீதுள்ள உயிர்கள் அனைத்தையும் விரைவில் அழித்து விடுவார்கள். அதன் ஒரு படிதான் யானைகளுக்கு வந்துள்ள நெருக்கடி. படங்கள் மிகச் சிறப்பு. கட்டுரையாளரின் புகைப்படத் தொகுப்புக்குப் பாராட்டுகள்.

குமரி மாவட்ட நாஞ்சில் குறவனைப் பற்றிய ஒரு கட்டுரையை நண்பர் எட்வின் எழுதக் கூடும்.

″சிறுத்தை″, கணிணி பயன்படுத்துவோருக்குப் பயன்படும். எனக்கு இன்னும் போதிய பயிற்சி இல்லை.

″π வாழ்த்துக்கள்″இல் πயில் இந்தியர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சில உண்மைகள்:

வண்டிச் சக்கரம் 6 பகுதிகளைக் கொண்டது. ஒரு ஆரைக்காலும் ஒரு வட்டத் துண்டும் கொண்டது ஒரு பகுதி. சக்கரத்தின் வெளிவிளிம்பு வரை ஆரத்தின் அளவு 21 ஒன்றிகள். வட்டத் துண்டின் நீளம் 22 அலகுகள். ஆக ஒரு சக்கரத்தின் சுற்றளவு 6 x 22 = 132 அலகுகள். இதை ஆரையின் நீளத்தால் வகுத்தால் கிடைப்பது 132/21 = 44/7 = 2 x 22/7 = 2π. வட்டத்தின் சுற்றளவுக்கான வாய்ப்பாடு: 2 π x ஆ(ரை) = π x வி(ட்டம்). வண்டிச் சக்கரம் செய்யும் கொல்லர்கள் இதற்கென்று ஒரு அளவுகோலை வைத்துள்ளனர். செங்கம் வளையாம்பட்டைச் சேர்ந்த நடுவரசு அளவைத்துறையிலிருந்து பணி நிறைவு பெற்ற திரு.கு.வெங்கடாசலம் என்பார்(நன்னன் நாடு என்ற இதழை நடத்தியவர்) ஒரு நிகழ்ச்சியின் போது அதைக் காட்டி விளக்கினார். தன் ஆய்வுகளைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளும் விருப்பத்தை அவர் தெரிவித்த போது துணை வேந்தராயிருந்த திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் ″எம் பேராசிரியர்களே அதைச் செய்வர்″ என்று மறுத்துவிட்டதாகக் கூறினார்.

வட்டத்தில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்கினால் பரப்பு கிடைக்கும் என்பது கிணறு தோண்டுகிறவர்கள் கையாளும் ஓர் எளிய வாய்ப்பாடு. இதைச் சரிபார்ப்போம்:

வட்டத்தில் பாதி என்பது π x ஆ
விட்டத்தில் பாதி என்பது ஆ
எனவே பரப்பளவு = π x ஆ x ஆ = π x ஆ²

பழைய திருவிதாங்கூர் சமத்தானத்தில் ஒரு நாணயத்தின் பெயர் சக்கரம். வண்டி உருளைப் பைதா அல்லது பைசா என்றனர். தமிழ்நாட்டில் அவற்றை முறையே பைசா, சக்கரம் என்ற சொற்களால் இன்று குறிக்கின்றனர். எனவே இந்தப் பைதா அல்லது பைசாவோடு πக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்பது நண்பர்கள் வெள்ளுவன், எட்வின் ஆகியோர் கருத்து.

இன்னும் ஒரு செய்தி. மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼அடி, அதாவது 63 அங்குலங்கள். அதன் சுற்றளவு 16½ அடிகள். சக்கரம் 4 சுற்றுகள் சென்றால் செல்லும் தொலைவு 66 அடிகள், அதாவது ஒரு அளவுத் தொடரி(சங்கிலி). பத்து தொடரி நீளம் ஒரு படைசால்(பர்லாங்). 8 படைசால் ஒரு மைல் என்பதுதான் தெரியுமே. ஒரு சதுர மைல் 640 ஏக்கர். ஒரு ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் எனபது முன்னாள் நடைமுறை. இன்றைய எக்டேர் 2.47 ஏக்கர்கள். ஒரு மீற்றர் 3.28அடிகள் என்பதற்குப் பகரம் 3.3 என்றிருந்தால் நமது பழைய ஏர் அளவும் இன்றைய எக்டேரும் ஒன்றாகவே இருந்திருக்கும்.

சக்கரவர்த்தி என்ற சொல் சக்கர வழுதி என்பதன் திரிபாகலாம் என்பது குணா கருத்து. குயவர்களின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் மண்பாண்டங்கள் பண்டங்களின், குறிப்பாக நீர்மங்களின் போக்குவரத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதனால் விளைந்த செல்வப் பெருக்கும் வலிமையும் ஒரு பேரரசை உருவாக்க உதவியிருக்கும். அதனால்தான் ஆணை உருள்(ஆக்கினா சக்கரம்) ஆழி என்ற சொல்லாட்சிகள் அரசனின் ஆட்சி அதிகாரத்தைச் சுட்டுவதற்குக் கையாளப்படுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறு உருளால் வலிமை பெற்று உருளை அடையாளமாகக் கொண்டு ஆண்டவர்களைச் சக்கராசுரன் என்றும் அவர்களை அடக்கியதை கண்ணன் சக்கராசுரனை வதைத்தான் என்றும் தொன்மங்கள் கூறுகின்றன என்பது என் கருத்து. இன்னொரு சக்கரம் நெசவாளர்களின் நூல் சுற்றும் இராட்டை(நூல் நூற்கும் இராட்டையை இங்கு குறிப்பிடவில்லை). நெசவினால் வலிமை அடைந்த கலிங்கர்களின் அடையாளமாக அது இருந்திருக்கும் போலும். கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்ற பொருள் தமிழில் உண்டுதானே! அசோகன் கலிங்கத்தை வென்ற பின் அங்கிருந்த சக்கர அடையாளத்தைத்தான் தன் இலச்சினையில் பொறித்தான் என்று படித்த நினைவு. அதுதான் இன்று இந்திய அரசின் இலச்சினையில் பெருமை தரும் உறுப்பாக விளங்குகிறது.

போதுமா நமக்கும் πக்கும் உள்ள உறவு பற்றி. சரியான வரலாற்றுக் கருப்பொருள்களைப் பற்றிய தெளிவே இல்லாத நிலையில் நம் பண்டை வரலாற்றின் உண்மையான வரைவு இன்றுவரை தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் நம் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை நூல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியாது, மக்களிடமிருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும்.

கம்பனை என்னால் சுவைக்க முடிவதில்லை. இலக்கியத்தில் வடிவத்தை விட உள்ளடக்கத்துக்கும் கட்டடத்தில் தோற்றத்தை விட பயன்பாட்டுக்கும் முதன்மை கொடுப்பது என் வழக்கம்.

விபுலானந்தரைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவனவாக இருந்தன. ஆனால் சிலப்பதிகாரத்தின் கானல் வரியில் உளங்கோ விளக்கும் யாழ் இன்றைய வீணையே என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுதான் பேரியாழ்.

இராமானுசன் பற்றிய புதினத் திறனாய்வு என்னை ஈர்த்தது. என் ″ஆய்வு″ முறைகளும் பிறர் அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் ஏற்கும் சான்றுகளைக் கொண்டு அமைவதில்லை. ஆனால் பல முடிவுகளுக்கு பின்னால் சான்றுகள் கிடைத்துள்ளன. என் பல முடிவுகளை மனத்தூய்மையுடன் சரிபார்த்து உறுதிப்படுத்தவும் அல்லது மறுக்கவும் வரும் தலைமுறையினரை எதிர்பார்க்கிறேன்.

சார்லசு டிக்கன்சின் ஆலிவர் டிவிச்டு காட்டுவது போன்ற சூழலை நோக்கி திருப்பூர் சென்று கொண்டிருக்கிறதா? அல்லது பழமைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றனவா? ″மணல் கடிகை″.

எனக்கு சோதிடத்தைக் கற்றுக் கொள்ள அடிப்படைத் தேவையான ஓரை, நாண்மீன்கள் பெயர்களையும் அவற்றின் வரிசை எண்களையும் மண்டையில் புகுத்திக் கொள்ளும் திறமை முற்றிலும் கிடையாது. நம் பண்டை வானியல் அறிவைப் பற்றி மட்டுமல்ல உடலியல், உளவியலில் வான் பொருட்கள் கொள்ளும் தாக்கம் என்பது பற்றியும் ஆய்வு செய்யத் துணை புரியும் ஒருவரை நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். ″கூட்டம்″ நன்றாக இருக்கிறது. இரண்டு ″செல்″லக் கட்டுரைகள்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் பள்ளியுலா ஒன்று சென்றாராம். ஒரு வகுப்புள் புகுந்தாராம். தொடக்கப்பள்ளி மாணவனைப் பார்த்து ′நம் நாட்டில் பிறந்த பெரிய மனிதர்கள் யார், யார்? சொல்லு′ என்றாராம். அவன் எழுந்து, ′ஐயா, நம் நாட்டில் குழந்தைகள்தாம் பிறக்கின்றன. பெரிய மனிதர்கள் பிறப்பதில்லை′ என்றானாம். அது போல் பாரதி மட்டுமல்ல இராமலிங்க அடிகள், பாரதிதாசன் அனைவருக்கும் பருவத்துக்கேற்ற வளர்ச்சி அதாவது திரிவாக்கம் - படிமுறை வளர்ச்சி- உண்டு. முருகனைப் பற்றி எழுந்த அடிகளார் சிவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து ஒரே கடவுளை நோக்கி ஓடி முடித்து கடவுளே இல்லை என்று முடிக்க இருந்த நிலையில் அவரை முடித்துவிட்டனர் என்கிறார்கள்.

பாரதிதாசன் ′எங்கு நோக்கினும் சக்தியடா′ என்று தொடங்கியவர் இறை மறுப்பாளரானார். குடும்ப விளக்கை ஏற்றியவர் பின்னர் பெண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து விட்டதை எண்ணி வருந்தினார். தன் ஆக்கங்களைத் தூய தமிழுக்கு மாற்றி எழுதினார்.

அதுபோல்தான் பாரதியும். அத்துடன் நமக்குத் தெரிந்த அவரது தனித்தன்மை நீண்ட நெடுங்காலமாகப் பழமையில் ஊறிய நம் குமுகத்தின் மிக பிற்போக்குத் தன்மையிலுள்ள ஒரு குழுவில் தோன்றி அது தன்னை மூடிவைத்திருந்த, காலங்களால் உறைந்து இறுகிப் பாறையாகிக் கிடந்த போர்ப்புகளை உடைத்து வெளியே வர முழு மனதுடன் பாடுபட்டதுதான். இந்த வளர்ச்சி நிலையில் தொடக்க காலத்திலும் பின்னர் தவறான கோட்பாடுகளாலும் நேர்ந்த தவறுகளைச் சிலர் அவருடைய சாதி சார்ந்த நிலைப்பாடு என்று பழிசுமத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வள்ளலாரைப் போல் அன்றி தன் கனவுகள் நிறை வேறா என்ற நிலை வந்த போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி என்று மனம் நொந்தவர் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய் என்ற கையறு நிலைக்கு வந்து மதம் பிடித்திருக்கிறதென்று தெரிந்திருந்தும் அதன் முன் சென்று தன்னை முடித்துக் கொண்டார்.

படைப்பாளிகளிடம் நாம் காணும் ஒரு முரண்பாடு புனைவு அல்லது செய்யுள் படைப்பாளிகளாக செயற்படும்போது வெளிப்படும் கருத்துகளுக்கும் கட்டுரைகள் அல்லது மேடைப் பேச்சுகளில் வெளிப்படும், கருத்துகளுக்கும் உள்ளவையாகும். பொன்னீலனின் கரிசல் புதினத்திலும் கருணாநிதியின் வெள்ளிக் கிழமையிலும் இதைப் பார்க்கலாம். ஏன், செயமோகனின் ரப்பர் புதினம் பரிவ பெற்றதே சுற்றுச் சூழல் குறித்த அதன் பரப்பல் பயனுக்காகத்தானே! பாரதியார் எழுத்து நடையில் ஆரியம் – இந்தியம் - சமற்கிருதம் தூக்கலாகத் தெரிந்தாலும் செய்யுள்களில் தமிழ், தமிழன், தமிழ் நாடு பற்றிய பெருமிதம் நிறையவே இருக்கிறது என்பது என் கணிப்பு.

அன்புடன்,
குமரிமைந்தன்.

தமிழினி 2008 மார்ச்சு மாத இதழ் ஒரு பார்வை

நாகர்கோயில்,
11.04.2008.

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

2008 மார்ச்சு மாத தமிழினி பற்றிய கருத்தைத் தாங்கள் கேட்டிருந்தீர்கள். அம்மாதம் முழுவதும் இருந்த பணிச்சுமைகளால் அது இயலவில்லை. இப்போது அதை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

திரு. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் நம் பெரும்பான்மை தமிழார்வலர்களைப் போல் மொழியை ஒரு தனித்த பொருளாகவே பார்க்கின்றார். மொழி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்ததாக, அவர்களை வாழவைப்பதாக இருக்க வேண்டும். கல்வியும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி மீதும் கல்வி மீதும் மக்களுக்கு இயல்பான ஆர்வம் ஏற்படும். கல்வி என்பதே சராசரி குடிமக்களை விட, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் எண்ணிறந்த துறைகளில் பணியாற்றும் மக்களைவிட, அம்மக்களிலிருந்து மேம்பட்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவோராகத் தங்களை வளர்த்துக் கொள்ளும் வழி என்ற நிலையில்தான் பிற மொழிகளின் நுழைவு தொடங்குகிறது. நாமறிந்த வரலாற்றில் நேற்று சமற்கிருதம், இன்று ஆங்கிலம், நாளை இந்தி என்று சராசரி மனிதனுக்குப் புரியாத ஒரு மொழி ஆட்சியிலும் ஆலயத்திலும் இவ்வாறுதான் பயன்பட்டிருக்கிறது. பயன்பட இருக்கிறது. இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்திய ஐரோப்பாவிலும் கிரேக்கமும் இலத்தீனமும் இவ்வாறுதான் பயன்பட்டன. வளர்ச்சியடைந்த முதலாளியமும் அதன் விளைவான மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அம்மொழிகளை ஆய்வுக் கூடங்களுக்குள் அடைத்துவிட்டன.

நம் நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி அரசதிகாரம் பெறுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. அந்தத் தேவையை ஈடு செய்ய முடியாதவனைப் பார்த்து ஆசிரியக் கூட்டம் கூச்சலிடுகிறது, நீ மாடு மேய்க்கத்தான் போவாய் என்று. அந்த இந்த ஆசிரியக் கூட்டத்தை அடித்துத் துரத்திவிட்டு மாடு மேய்ப்பதை, சிரைப்பதை, வெளுப்பதை என்று பள்ளிக் கூடங்களில் சொல்லித் தருகிறோமோ அன்று தமிழும் வாழும் தமிழகமும் வாழும் தமிழனும் வாழ்வான்.

அதைப் போலவே நமது பொருளியல் அனைத்தும் மேலை நாடுகளை, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளை முற்றிலும் சார்ந்து நிற்பதால் அவர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் நம்மவற்றை அழிக்கின்றன. நம் அறிவு″சீவிகள்″ அன்று பிரிட்டன் அடுத்து உருசியா அதற்கடுத்து சப்பான் இன்று அமெரிக்க மக்களின் பண்பாட்டு உயர்வுகளை வானளாவப் புகழ்ந்து வந்திருப்பதும் வருவதும் இதனால்தான். நம் பொருளியல் வளவாழ்வு என்று நம் சொந்த மண்ணின் மீது வேரூன்றி நிற்கிறதோ அன்றுதான் நம் மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் தம் தேசியத் தன்மைகளைப் பேண முடியும் என்பது எனது கருத்து.

கோசொவா அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு ″விடுதலை″ பெற்ற நாடு என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார் அகில்.

உள்ளூர் முனைவுகளை பாட்டாளியம் பேசி நசுக்கிவிட்டு அயலாரை அமர்த்துவதற்காக மண்ணின் மக்களைக் கூசாமல் கொலை செய்த கட்சிக்கும் அவர்களின் ஆட்சிக்கும் மனச்சாட்சி இல்லாமலிருக்கலாம். நம் ஊர் தோழர்களாவது பழைய தவறை உணர்ந்து உள்ளூர் மக்களின் முனைவுகளுக்குத் தடைக்கற்களாயிருப்பதிலிருந்து விலகி நிற்பார்களா?

இந்தியாவில் ஒரேயொரு குழு, மார்வாரிகளும் குசாரத்திகளும் முழுப் பொருளியலையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. அதனோடு இன்று ஆட்சியாளர்களும் உலக விசைகளுடன் கூட்டுச் சேர்ந்து மக்களின் நிலங்களை அரசியல் - பொருளியல் நெருக்குதல்களால் மறைமுகமாகவும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நேரடியாகவும் பறித்து வருகின்றனர். வாழ்விழந்த மக்கள் தங்கள் தேசங்களை(மாநிலங்களை) விட்டு ஓடுகிறார்கள். அரசியல்வாணர்கள் தங்கள் வாக்கு வேட்டைக்காக எல்லை தாண்டிய மக்கள் மீது போர் தொடுக்கின்றனர். இந்தச் சூழலில் இந்திய - உலக அளவிலான பொருளியல் விசைகளிடமிருந்து தத்தம் நிலத்தைக் காக்க, 1956 நவம்பர் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட மாநில எல்லைகளுக்கு வெளியிலிருந்து நிலம் வாங்கியவர்கள், தொழில் அமைத்தவர்கள், பெருவாணிகத்தில் நுழைந்தவர்களை அப்புறப்படுத்த வேண்டும். வேலை செய்ய வந்த மக்களுக்குத் தங்கள் சொந்த மாநிலம் தவிர வேறெங்கும் முழுக் குடியுரிமை கூடாது என்பது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதி. அத்துடன் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரையில் பாதி, சித்தூர், திருப்பதி என்று மாநிலச் சீரமைப்பின் போது அண்டை மாநிலங்களிடம் பறிகொடுத்த பகுதிகள் மீட்கப் பட வேண்டும் என்பதும் அதில் அடக்கம். 1956 நவம்பர் 1 வரையறையை அப்பகுதிகளிலும் நிறைவேற்ற வேண்டும். இதுதான் இந்திய மக்களின் உண்மையான தன்னாட்சிக்கான வழி என்பது எமது கருத்து. இன்றைய செய்திப்படி மராட்டிய முதல்வர் இதே கருத்தை நேற்று முன்வைத்திருக்கிறார்.

பாமயனை நன்றாகத் தெரியும். உழவனின் துன்பங்களுக்கெல்லாம் சீமை உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும்தாம் காரணம் என்பவர். அரசியல் காரணியைச் சுட்டிக் காட்டினால் திசை திருப்புவார். ஏழை நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே அமெரிக்கா பொதிந்து காப்பாற்றி வரும் கியூபாவை முன்சுட்டாகக் காட்டுபவர்.

நாட்டிய சரசுவதியின் சிற்பநூல் விளக்கம் அத்தெய்வத்தின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு புதைந்து கிடப்பதைக் காட்டுகிறது. ″மாடன் - ஒரு தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்″ என்று ஒரு கட்டுரை அரைகுறையாக நிற்கிறது. இதில் அத்தெய்வத்தின் பின்னணியில் மறைந்து கிடக்கும் எல்லைக்கெட்டாப் பழம் வரலாற்றை மீட்க முயன்றிருக்கிறேன்.

இன்றைய வேலூர் - சேலம் மாவட்டங்களுக்கு இடையில் ஏறக்குறைய 100 கி.மீ. நீண்டு கிடக்கும் மலையாளக் காடுகளில்(இதனைச் சவ்வாது மலை என்பர்) வாழும் பழங்குடி மக்கள்(தமிழர்களான அவர்களை அப்பகுதியில் மலையாளிகள் என்று அழைப்பர்) சித்திரை முழு நிலவன்று ஆற்றில் கூடி தத்தம் விருப்பத்துக்கேற்ற இணையரைக் கூடுவர் என்று அப்பகுதியில் பணியாற்றிய போது 1968இல் அறிந்திருக்கிறேன். மதுரையில் அதே நாளில் அழகர் ஆற்றில் இறங்குவது போல் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. திருவிதாங்கூரில் அது ஆறாட்டு என்ற பெயரில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது. உண்மையில் இது மார்ச்சு 21இல் நடைபெற வேண்டிய நிகழ்ச்சியே. ″தமிழன் கண்ட ஆண்டு முறைகள்″இல் நான் குறிப்பிட்டது போல் தென்மதுரையிலிருந்து கபாடபுரத்துக்குத் தலைநகர் மாறியதால் வந்த குழப்பத்தின் விளைவாகும் இது. இது குறித்து ″பங்குனி உத்திரமும் சித்திரை வெள்ளுவாவும்″ என்ற கட்டுரையை நானும் நண்பர் வெள்ளுவனும் இணைந்து எழுதியுள்ளோம். வேர்கள் என்ற இதழில் அது வெளிவந்துள்ளது.

″பாபா ஆம்தே″ ″கால்களின் கடவுள்″ இரண்டு கட்டுரைகளும் ஒரு குறிப்பிட்ட துறையில் உலக மக்களுக்குப் பெருந் தொண்டாற்றிய உயர்ந்த மனிதர்கள் என்ற வகையில் சிறந்த படைப்புகள். சுசாதாவின் படைப்புகள் எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால் அவர் அறிமுகம் செய்த நடை ஒரு சுற்று வரும் என்று நம்பலாம். குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கிய கருப்பும் சிவப்பும் என்ற தொடர்கதையில் ″கள்ளச் சாணான்″ என்று அவர் பயன்படுத்திய ஒரு சொல்லால் அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் அவரது எழுத்தின் திசையையே மாற்றியிருக்குமோ என்றொரு ஐயம். தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
விளையாட்டுக்கென்று ஒரு கட்டுரை வருவது மகிழ்ச்சியே. இந்தியாவில் தெருக்களில் அலைந்து திரிந்து வித்தைகாட்டும் உடல்திறன் பெற்ற சிறுவர்களை ஊக்கினாலே உலகின் மிகத்திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கிவிடலாம். இருப்பதிலேயே இவ்வளவு ஆதாயம் பார்க்கிறவர்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை என்கிறீர்களா?

உணர்ச்சிப் பாக்களாக அரசியல் சார்ந்து பாடியவை தரங்குறைந்தவை என்றும் அவர் பொதுவாழ்வில் நுழையாமலிருந்ததால் மேலான படைப்புகளை உருவாக்கியிருப்பார் என்றும் கூறியுள்ள கட்டுரை ஆசிரியரின் கலை இலக்கியங்கள் பற்றிய கண்ணோட்டம் மிகக் கண்டிக்கத் தக்கது. நூலின் நோக்கம் நல்ல மனிதனை உருவாக்குவது என்று இறையனார் அகப்பெருள் கருத்தின் அடிப்படையில் நன்னூல் ஆசிரியர் தந்துள்ள மிக உயர்வான கருத்தைப் பாருங்கள்.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.

பாரதியாரைப் பற்றிய இந்தக் கருத்துரைப்பு கலை இலக்கியங்களைப் பற்றிய இரக்கமற்ற ஓர் இழிவுபடுத்தலாகும்.

கவிதை எந்தப் பிரசாரத்துக்கும் போகாது என்பது இலக்கியத்தைப் பற்றிய ஒரு மிகவும் அரைகுறையான பார்வை. பரப்பல் இலக்கியம் மருந்து போன்றது, அறிவு இலக்கிய உணவு போன்றது, சுவை இலக்கியம் தின்பண்டம் போன்றது என்று சொல் புதிதுவில் வெளிவந்த ″அழகியலும் மெய்ப்பாட்டியலும்″ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

செயமோகன் கிண்டல் செய்கிறாரா உண்மையைக் கூறுகிறாரா என்று புரியவில்லை. அதே நேரத்தில் புதுக் கவிதை எழுத வேண்டும் என்று நினைப்போருக்குத் தேவையான உதவியும் ஊக்குவிப்பும் உள்ளன. கழக இலக்கியங்கள் என் பார்வையில் புதுக்கவிதைகளே. அவற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம் தனி மனிதர்கள் தங்கள் உணர்வுகளை வெளியிடப் பயன்படுத்திய வடிவம் அது என்பது. பொதுவாக இலக்கணச் செய்யுள்கள் அதனுடைய வரிகளின் நீளத்தின் அடிப்படையில் ஒரு செவ்வகத்தைப் போல் இருக்கும். புதுக்கவிதைகள் அவ்வாறு இருப்பதில்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும்.

புதுக் கவிதை தனிமனித உணர்ச்சிகள் என்றால் வெண்பா போன்ற இறுக்கமான செய்யுள்கள் பலர் சேர்ந்து அல்லது தனியாள் இசையுடன் பாடுவதற்காக யாத்ததிலிருந்து திரிவாக்கம் பெற்றிருக்கலாம் என்பது எனது கருத்து.

″நூற்றுவர் கன்னர் - சிலம்பில் வரலாறு″ என்ற கட்டுரையில் உள்ள செய்தியை ″பெருஞ்சோற்று உதியஞ்சேரல்″ என்ற கட்டுரையில் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளோம் நானும் நண்பர் வெள்ளுவனும். கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலில் வெளிவந்துள்ளது.

அன்புடன்,
குமரிமைந்தன்.