1.4.08

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 3

இன்று பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், அசையாச் சொத்துகள் ஆகியவற்றில் மக்கள் முதலிடும் வழிகளை ஆட்சியாளர்கள் சராசரிப் பொதுமக்களுக்கு அடைத்து நுகர்வுப் பண்பாட்டை ஊக்கி நாட்டின் உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியை முடக்கி அயலவருக்கும் ஆட்சியாளருக்கும் அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் வேட்டைக் காடாக நாட்டை ஆக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தைப் பார்க்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம் நாட்டுப் பொருளியல் மீள என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம் போல் வட்டி வீதங்களை நிறுவுவதையும் பணமதிப்பைக் குறைப்பதையும் கைவிட வேண்டும். நில உச்சவரம்பு, நகர்ப்புறச் சொத்து வரம்பு ஆகியவற்றையும் கைவிட வேண்டும். வட்டி வீதங்களை கடன்கொடுப்பவர், கடன் வாங்குபவர் ஆகியோரின் சொந்தப் பொறுப்புக்கு விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் கடன் கொடுப்போரின் நலன் காக்கப்பட வேண்டும். அதாவது ஒருவர் கடன் வாங்குவது என்று முடிவு செய்தால் அதன் தேவை, அதைத் திருப்பிச் செலுத்தும் தன்னுடைய ஆற்றல் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

ஆனால் இப்போதுள்ள சட்டப்படி ஒருவருடைய வருமானத்தில் இத்தனை நூற்றுமேனிக்கு மேல் கடனுக்காக கடன் பெற்றவரைத் திரும்பச் செலுத்தப் பொறுப்பாக்க முடியாது என்று மாதத் தவணையில் திரும்பச் செலுத்துவதாகத் திருப்பிவிட்டு விடுகிறது நயமன்றம். எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பல்வேறு நுகர்வுப் பொருட்களைத் தன் சம்பளத்துக்கு ஒப்பிட மிகுந்த அளவில் வாங்கிக் குவித்தார். அப்புறம் சொன்னார், இவர்கள் வழக்கு மன்றம் சென்றால் என் சம்பளத்தில் 25% க்கு மேல் அதில் பிடித்தம் செய்ய முடியாது என்று. இப்படிப்பட்ட தராதரமற்ற சட்டங்களை ஒழிக்க வேண்டும். தான் செலுத்துவதாக ஒப்புக்கொண்டு பெற்றுக்கொண்ட கடனை அதே கட்டுறவுகளின்படி திரும்பச் செலுத்தாதவர்களின் அசையும் அசையாச் சொத்துகளை அக்கடன் தொகைக்கு ஈடாகப் பறிமுதல் செய்து அத்துடன் ஒப்பந்தத்தை மீறியதற்காகத் தண்டனையும் வழங்க வேண்டியது இன்றைய உடனடித் தேவை.

அரசுடைமை வங்கிகளின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட வேண்டும். அவற்றின் கடன் கொள்கைகளை அவற்றின் செயற்குழுக்களே முடிவு செய்ய வேண்டும். பொருளியலைக் கையாள்வதில் ஆட்சியாளர்கள் தலையீடு கூடாது. ஏமாற்றுகள் செய்வோரைத் தண்டிப்பதும் ஏமாற்றப்பட்டவர்களின் இழப்பை அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டுத் தருவதும் மட்டும் ஆட்சியாளரின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

வருமான வரி முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வருமான வரிக்கு அஞ்சிப் பதுங்கிக் கிடக்கும் நேர்மையான மக்களின் நேர்மையான செல்வத் திரட்சி மூலதனமாகப் புழக்கத்துக்கு வரும். இன்று வருமான வரி குறிப்பிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக வளர்ந்து வருபவர்களை முடக்கிப் போடவும் அரசியல் எதிரிகளை மிரட்டவும் கட்சிக்கு ஆதரவாக ஆள்பிடிக்கவும் மட்டுமல்ல, உள்நாட்டு மூலதனம் வெளிவர அஞ்சிப் பதுங்கிக் கொண்டு, உள்நாட்டில் மூலதனம் இல்லை என்று சொல்லி வெளி மூலதனத்துக்கு இங்கு ஓர் வெற்றிடத்தை உருவாக்கவும் அரசியல்வாணர்களின் கொள்ளையடித்த பணத்தை வெள்ளைப் பணம் ஆக்கவும் நேர்மையாக ஈட்டிய குடிமக்களின் பணத்தைக் கருப்புப் பணமாக்கவும் பயன்படுகிறது. இதற்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உரூ.53 கோடியை வருமானத்துக்கு மிகுதியாக ஈட்டியிருந்தார் என்றது வருமான வரித்துறை. அதில் 17 கோடியை வரியாகப் பிடித்து விட்டு 36 கோடியை அவர் வைத்துக் கொள்ளவிட்டது அரசு. அப்போது ஆட்சியிலிருந்த கட்சியுடன் அவர் மாநிலக் கட்சியைக் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக இந்தப் பரிசு. வரியாகப் பிடித்த உரூ 17கோடி அன்று நடைமுறையிலிருந்த வருமானவரி விதிதத்தைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி வரவு – செலவுத் திட்டத்தில் காட்டப்படும் மொத்த வருவாயில் வெறும் 5% ஆக இருந்து இப்பொதுதான் 13% ஆகக் காட்டப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி வெறும் கணக்குப் பணம். அதாவது, பெரும் பண முதலைகளுக்கு ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொடுக்கப்படும் ″மானியங்″களில் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி கழிக்கப்பட்டு அது வெறும் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். உண்மையான வருமான வரி செலுத்துவோர் மாதச் சம்பளம் வாங்குபவர்கள்தாம். அவர்களிடமிருந்து பறித்த பணத்தை வைத்துக்கொண்டுதான் நாடு முழுக்க கலக்கிக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான இனங்களை நுணுகிப் பார்த்தால் ஒரு தேர்வு பணத்தை ஏதோ ஒரு வடிவில் உயிர் காப்பீட்டுக் கழகம் போன்ற அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் திரும்ப வாங்கும் போது அவர்கள் தரும் வட்டிக்கும் சேர்த்து வரி செலுத்துவதிலிருந்து தப்ப முடியாது.

இதன் நிகரப் பயன் என்னவென்றால் மக்கள் தங்களிடம் சேரும் பணத்தின் ஒரு பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது என்ற பொய்யான நம்பிக்கையில் அதனை ஆட்சியாளர்களின் கையில் ஒரு நீண்ட காலத்துக்கு ஒப்படைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்தப் பணத்துக்கான வருமான வரியிலிருந்து அவர்கள் தப்பவில்லை. தப்பவும் முடியாது. உரிய வரியை முதலிலேயே செலுத்தியிருந்தார்களானால் மீதியுள்ள பணத்தை நல்ல முறையில் முதலீடாவது செய்திருக்கலாம். அப்போது ஆட்சியாளர்கள் தாம் முதலிடுவதற்குள்ள எந்த வழியையும் திறந்து வைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்படி அவர்களை உணராமல் செய்வதும் ஆட்சியாளர்களின் நோக்கங்களில் ஒன்று. அத்துடன் தவறாமல் நம் நாட்டில் பண மதிப்பு இறங்கும் சூழலில் அரசிடம் ஒப்படைக்கும் போது இருந்ததை விடக் குறைந்த மதிப்புள்ள பணமே மக்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது.
இங்கு கையாளப்படும் உத்திக்கு பண மாயை(Money illusion) என்று பெயர். ஆட்சியாளர்கள் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளில் பெருமளவில் இதனைக் கையாள்கிறார்கள்.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இன்னொரு தேர்வு வருமான வரித்துறை விலக்கு அளித்திருக்கும் அறக்கட்டளைகள், கோயில்கள் சார்ந்த பணிகள் போன்றவற்றுக்கு நன்கொடை அளித்தல். இந்தப் பணத்தால் விளைப்பு அல்லது பணி சார்ந்த பயன் எதுவும் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

வருமான வரியை ஒழிப்பதற்கான இன்னும் பல காரணங்களைச் சொல்ல முடியும். நாம் எடுத்துள்ள களத்திலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிடாமல் தவிர்ப்பதற்காக இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை இவை மட்டும் அல்ல.

வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும். முடையிருப்பு என்ற பெயரில் ஏறக்குறைய 2 கோடிக்கும் மேல் டன்கள் உணவுப் பொருளை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வாங்கி அரசே பதுக்கி வைக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். உள்நாட்டுக்குள் உணவு தானிய நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். உணவு தானிய வாணிகத்தில் உரிம முறை கைவிடப்பட வேண்டும். விரும்பும் குடிமக்கள் யாரும் உணவு தானிய வாணிகத்தில் ஈடுபட உரிமை வேண்டும். நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் குடிமைப் பொருள் வழங்கு துறை மூலம் வேளாண் பொருட்கள் குறைந்த விலையில் வழங்குவதை, அதாவது ரேசனை நிறுத்த வேண்டும். இவ்வாறு வேளாண்மையை ஆதாயமான தொழிலாக்கினால் அத்துறையில் மக்கள் முதலிட ஊக்கம் பிறக்கும்.

வீடமைப்புத் தொடர்பான அரசுசார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். நகர்ப்புறச் சொத்து வரம்புச் சட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். வீட்டு உடைமையாளருக்குச் சொத்துப் பாதுகாப்பும் அதே வேளையில் அவர்களின் கொடுங்கோன்மையிலிருந்து குடியிருப்போருக்குப் பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டு மனைகளாகும் விளை நிலங்களின் பரப்பும் நிலத்தடி நீர் வீணாவதும் குறையும்.

மொத்தத்தில் ஆட்சியாளர்களால் கையும் காலும் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்படும் வேளாண்மையும் தொழிலும் அவர்களது கொடும்பிடியிலிருந்து மீட்கப்பட வேண்டும். உள்நாட்டு மூலதனத் சுழற்சியால் விளைப்பும் வேலைவாய்ப்பும் அனைத்துத் துறைகளிலும் பெருகும். மக்களின் வாங்கும் ஆற்றலும் வாழ்க்கைத் தரமும் உயரும்.

எந்தத் துறையையும் முன்னுரிமைத் துறை என்று வரையறுத்து அரசு சலுகைகள் அளிக்கும் முறை முடிவுக்கு வர வேண்டும். குறிப்பாக சுற்றுலா, திரைப்படம் முதலிய துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படக் கூடாது.

மக்களின் வருவாயைப் பாழாக்கும் கள்ளையும் சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும். வாணிகத்தில் இலவசங்கள், பரிசுகள், திடீர் விலைச் சலுகை முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். உண்மையான விலையையும் தரத்தையும் மட்டும் வைத்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். நுகர்வோர் அமைப்பு வலுப்பெற வேண்டும்.

மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தித் தம் பொருளியல் நடவடிக்கைகளை முறைப்படுத்தப் பயில வேண்டும்.
வெளிநாட்டு மூலதனம் முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது போல் வெளிநாட்டுத் தொழில்நுட்பமும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு முழு ஊக்கம் அளிக்க வேண்டும். செய்பொருள் முறையில் (Product Patent) காப்புரிமை வழங்குவதற்கு மாவட்ட அளவிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும். கோ.து.(ஜி.டி.)நாயுடுவுக்கும் எரிநீர் இராமருக்கும் இன்னும் வெளியில் அறியப்படாமலே அழிக்கப்பட்ட பல்லாயிரம் பேருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் இனி யாருக்கும் இழைக்கப்படக் கூடாது.

பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தலையிடவோ அரசு என்பது ஒரு கருவியல்ல என்பது இந்தியாவின் இன்றைய நிலைமை மூலம் மீண்டுமொருமுறை வரலாற்றில் உறுதியாகிவிட்டது. மக்களின் வறுமைக்கு அரசே காரணமாக இருந்துகொண்டு அம்மக்களுக்கு வாழ்வழிக்கிறோம் என்ற பெயரில் பணத்தை வெளியிட்டு அதனை ஆட்சியாளர்களும் அவர்களது கூட்டாளிகளும் கொள்ளையடித்து விட்டு அதற்காக உலகெலாம் கடன் வாங்கி அதிலும் தரகு பெற்று அக்கடனை மக்கள் மீது சுமத்துகின்ற இந்தக் கயமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஆனால் சிக்கல் இத்துடன் முடிந்துவிடவில்லை. வீழ்ந்துவிட்ட பங்குச் சந்தையை எப்படி உயிர்ப்பிப்பது என்ற கேள்வி எஞ்சியுள்ளது.

வருமான வரி, தொழில்களுக்கு உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, முன்னுரிமைத் துறைகள் என்ற பெயரில் தொழில்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் குறிக்கோளும் வசதியும், பட்டறிவும் உள்ளவர்களின் முனைவுகளை நசுக்கிவிட்டு ஒரு வேலைவாய்ப்பையே குறியாகக் கொண்ட படித்த ஏழை அல்லது நடுத்தர இளைஞர்களுக்கு தன்(சுய) வேலைவாய்ப்பு வழங்குகிறேன் என்று கூறி பயிற்சி இது அது என்று இழுத்தடித்துக் கடன் கேட்க வைத்து கடன் மனுவை உருவாக்குவதற்கு அலைச்சலையும் செலவையும் ஏற்படுத்திப் பின் பாதித் தொகை முதலில் வை, மீதித் தொகைக்குக் சொத்து பிணை வை என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தக் கடன் வசதிகளை ஆட்சியாளர்களின் கூட்டாளிகள் பயன்படுத்தி அரசுடமை வங்கிகளில் பல இலக்கம் கோடி உரூபாக்களைக் கொள்ளையடித்துள்ளார்கள். ஆட்சியாளர்களின் சொல்லை நம்பிக் கடன் கொடுத்த சில வங்கி உயரதிகாரிகள் சிறைக் கூண்டையும் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் வங்கிக் கடன்கள் வழங்குவதென்பது ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாகத் தோன்றிய இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (ஐ.டி.பி.ஐ) போன்ற அரசுசார் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாங்கினால் அவை பங்குகளில் முதலீடு செய்து வாடிக்கையாளருக்கு ஆதாயம் பெற்றுத் தரும் என்று ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் இந்நிறுவனங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களின் தரமற்ற நிறுவனங்களில் முதலிட்டு அவை வைப்பாகப் பெற்ற தொகையை விட வாராக் கடன் அது தொடக்க முதல் ஆண்டிலேயே மிஞ்சிவிட்டது என்ற நிலைதான் மிச்சம்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல் பண அமைச்சகமே புரிந்து கொள்ள முடியாத பங்குச் சந்தைக் குறியீட்டு எண் உயர்வைக் கண்ட போதே, 25 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய ஏமாற்று மீண்டும் ஒருமுறை அரங்கேறப் போகிறது என்ற கலக்கம் சிலருக்கு ஏற்பட்டிருக்கும். அவ்வாறே நிகழ்ந்தும் விட்டது. எனவே பொதுமக்களின் பங்குச் சந்தை ஈடுபாட்டுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பலாம். அவர்களை முதலீட்டாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து வெறும் நுகர்வோராக்க நம் ஆட்சியாளர்களும் அவர்களது உள்நாட்டு வெளிநாட்டுக் கூட்டாளிகளும் வைத்திருக்கும் திட்டம் வெற்றி பெறும். பங்குச் சந்தை நடவடிக்கைகள் இவர்களுடைய விளையாட்டுக் களமாகவே தொடரும்.

நம் நாட்டை அயல்நாட்டு நிறுவனங்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றும் நம் ஆட்சியாளர்களின் புதிய பொருளியல் கொள்கைகளையும் அவற்றை முறியடிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதையும் இதுவரை பார்த்தோம். இதன் தொடர்ச்சியாகப் பங்குச் சந்தையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மூலதனம் தேவைப்படும் ஒரு தொழிலில் இறங்குவோர் பாதிக்கும் குறையாத அளவுக்கு மூலதனத்தைப் பங்குகளின் மூலமே திரட்ட வேண்டும்.

வங்கிகள் மூலதனக் கடன் வழங்கக் கூடாது. அவை சேமிப்பு, நகைக் கடன், ஊர்திக் கடன், வீட்டுக் கடன், பட்டியல்களைச் செல்லாக்குதல், வாடிக்கையாளர்களிடமிருந்து உள்ளாட்சிக் கட்டணங்கள், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றை வாங்கிச் செலுத்துதல், வரைவோலை, உண்டியல்கள் போன்ற பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டால் போதும்.

நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் தனி மனிதர்களின் சொத்துகளின் இழப்புக்கு வாய்ப்பு இல்லாத, அதே வேளையில் பங்கு மூலதனத்தையும் பெறும் வகையில் ஒரு புதிய தொழில் முதலீட்டு உத்தியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிகள் அல்லது பண நிறுவனங்கள் மக்களிடம் இருந்து வைப்புகளைப் பெறுவதற்கும் அதே வகை உத்தியை நாம் கையாளலாம். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பங்குகள் மூலமோ கடன் வடிவிலோ ஒருவர் முதலீடு செய்யும் போது அவர் முதலில் எதிர்பார்ப்பது இட்ட மூலதனம் திரும்பக் கிடைக்குமா என்பது. அடுத்தது, போட்ட முதலின் மீது எவ்வளவு ஆதாயம் அல்லது வட்டி கிடைக்கும் என்பது. முதலீட்டுக்குப் பாதுகாப்புக் கூடும் தோறும் வட்டி விகிதம் குறையும் என்பது பொதுவான பொருளியல் விதி. ஆனால் இன்றைய நிலையில் முதலீட்டுக்கான பாதுகாப்பே ஆதாயம் அல்லது வட்டியின் கணிப்பை விட முகாமை பெற்றுள்ளது. கடந்த காலத்தில் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஏமாற்றுகளும் விலைச் சரிவும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியுமே இதற்குரிய காரணங்கள்.

அடுத்து ஒரு தொழிலைத் தொடங்கவோ ஒரு நிதி நிறுவனத்துக்கோ கடன் அல்லது பங்குகளை பொது மக்களிடமிருந்து ஒரு நிறுவனம் பெற முயலும் போது, தான் அவ்வாறு பெற எண்ணியிருக்கும் தொகைக்குக் குறையாத அசையாச் சொத்தை அல்லது தங்கத்தை ஈடாக வைக்க வேண்டும். அந்த ஈட்டுச் சொத்து அல்லது தங்கத்தை ஏம வங்கி போன்ற ஓர் அமைப்பு தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்நிறுவனம் திரட்டும் மூலதனம் அந்த அடமான மதிப்புக்கு மிகாமல் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நிறுவனம் தன் முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெற்று விரிவாக்க வேண்டுமென்று விரும்பும் போதும் அத்தொகைக்குக் குறையாத கூடுதல் சொத்தை மேலே கூறிய நடைமுறைப்படி ஈடு கொடுக்க வேண்டும்.

தொழில் நிலைப்பட்டு ஆதாயம் ஈட்டும் நிலை வந்த பின்னர் அந்நிறுவனத்தைச் சார்ந்த சொத்துகளும் பிணைக்குத் தகுதியாக வேண்டும்.

இந்த முறை கடைபிடிக்கப்பட்டால் தகுந்த பொருளியல் அடிப்படையும் நேர்மையும் முயற்சியும் தன்னம்பிக்கையும் உடையோர் மட்டுமே புதிய தொழில்களில் ஈடுபடுபவர். தங்கள் சொந்தச் சொத்துகள் பிணைப்பட்டுள்ளதால் அதைக் காக்க வேண்டுமென்ற கவலையுடன் செயற்படுவர். ஏமாற்றுவோர் களத்தினுள் வருவது நிற்கும்.

தனியார் நிறுவனங்கள் செயற்படும் போது அதன் ஊழியர்கள் அரசு அல்லது அரசுசார் நிறுவனங்களில் போல் நாளை எண்ணிச் சம்பளம் வாங்குவோராகச் செயற்பட முடியாது. அவர்களது முழு ஆற்றலும் நாட்டுக்குப் பயன்படும்.

இந்த முறை மாவட்டங்கள், வட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். நாட்டின் தொழில்துறை வேளாண்மை ஆகிய அனைத்தும் பங்கு மூலதனத்தின் கீழ் வரவேண்டும்.

இரண்டாம் நிலைச் சந்தை என்பதை ஒழித்து விடலாம். மாறாக முதலீட்டாளர் தன் பங்குகளை விற்க விரும்பினால் அதை அந்த நிறுவனமே முகமதிப்புக்குக் குறையாத விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று ஒரு தனி நிதியை நிறுவனம் பராமரிக்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பங்குகளை மீண்டும் விற்கும்போது கூடுதல் விலைக்கு விற்றால் அதற்குரிய ஆள்வினைச் செலவுகளைக் கழித்துவிட்டு முதலில் பங்கை விற்ற முதலீட்டாளருக்கு அக்கூடுதல் தொகையைக் கொடுத்து விட வேண்டும். பங்கின் இப்புதிய விலையே அந்நிறுவனத்துக்குரிய அனைத்துப் பங்குகளுக்கும் விலையாகக் கணக்கிடப்பட வேண்டும். வழங்கப்படும் ஈவு விகிதம் இந்தப் புதிய முகமதிப்பின் படியே வழங்கப்பட வேண்டும். அதாவது பங்குகளின் முக மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைவெளி எதுவும் இருக்கக் கூடாது. இதன் மூலம் நிறுவனச் சொத்தின் மதிப்பு சரியான விகிதத்தில் முதலீட்டாளர்களிடையில் பங்கிடப்படும். பங்குகளை வாங்கி அவ்வகையில் முதலிடப்பட்ட தொகையைப் போல் பல மடங்கு மதிப்புள்ள நிறுவனங்களைப் பிறர் கைப்பற்றுவதும் இயலாமல் போகும்.

நிறுவனங்களின் ஆதாயத்தில் பெரும் பகுதியை ஏமநிதி(ரிசர்வு) என்று ஒதுக்கி தொழில் முனைவோர் ஏப்பம் விடும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏமநிதிக்கு திட்டவட்டமான வரம்பு நிறுவ வேண்டும்.

நிறுவனத்தின் ஆதாயத்தில் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளாகக் கொடுத்து விட வேண்டும்.

இவ்வாறு தொழில்துறையும் வேளாண்மையும் முற்றிலும் பங்குகளின் அடிப்படையில் மாறும் போது சிறு உடைமைகள், அதனோடிணைந்த பொருளியலடிப்படையில் பயனற்ற சொத்து மாற்றங்கள், பங்குச் சண்டைகள், வழக்குகள், சட்டங்கள் அத்துடன் சீதனமாகத் தங்க நகைகள் போன்ற காலங்கடந்து போன நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

ஆனால் இப்போது நிகழ்ந்தது போல் முதலீட்டில் மாபெரும் வீழ்ச்சியும் மாபெரும் தீங்கு விளைவிக்கத்தக்கதும் எளிதில் தடுத்து நிறுத்த முடியாததுமான ஊதாரிப் பொருளியலின் தோற்றமும் அதன் விளைவாக வெளி மூலதனப் படையெடுப்பைத் தேவையாக்கும் மூலதன வெற்றிடமும் அயல் மூலதனத்தின் மூலமும் நுகர்பொருள் பண்பாட்டின் மூலமும் நம் நாட்டுச் செல்வங்கள் வெளியேறுவதும் இருக்காது.

இத்தகைய பங்கு மூலதனம் வளர்ச்சியடைந்து அது பெரும்பண்ணை வேளாண்மையிலும் தொழிற்துறையிலும் செயற்பட்டால் நாட்டில் விளைப்பும் வேலைவாய்ப்பும் பெருகி பெரும்பாலான மக்கள் தொழிலாளராகச் செல்வம் சேர்க்க முடியும். அத்தொழிலாளர்களும் பங்கு முதலீட்டில் ஈடுபட்டால் மறைமுகமாக அப்பெரும் தொழிற்சாலைகளுக்கும் பெரும் பண்ணைகளுக்கும் கூட்டு முதலாளிகளாவர். அத்தொழிலகங்கள், பெரும் பண்ணைகளின் ஆள்வினையில் மக்களாட்சி அடிப்படையில் அவர்கள் பங்கு கொள்ள முடியும். உடனடிப் பலன்களான ஊதியம் மற்றும் சலுகைகள், நெடுநாள் பயன் தரும் தொழிலகத்தின் பங்கு மூலதனம் ஆகியவற்றிற்கு இடையில் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தறிவுக்கு ஒத்த ஒரு செலவுப் பண்பாடு தொழிலாளர்களான குடிமக்களிடம் இதனால் வேர்கொள்ளும். அதோடு தொழிற்சாலையின் நடைமுறைகளில் ஒரு பங்கீட்டாளர் என்ற வகையில் பங்கு கொள்வதால் நாட்டின் உயிர்நாடியான பொருளியல் இயங்குதிசையைத் தடம்பிடித்து அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் உள்ள ஒரு குடிமகனாக ஒவ்வொரு தொழிலாளரும் விளங்க முடியும்.

ஐரோப்பியர்கள் தோற்றுவித்த வாக்குச் சீட்டு அடிப்படையிலான பாராளுமன்ற ″மக்களாட்சி″ அது கடைப் பிடிக்கும் நாடுகளில் உள்ள வலிமையுள்ளவர்களின் குழுவாட்சியாக(Oligarchy)த் தொடங்கி உலக முழுவதையும் ஆட்டிப் படைக்கும் உலகளாவிய ஒரு குழுவாட்சி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

மெல்ல மெல்ல ஒவ்வொரு நாட்டிலும் புதிய மன்னராட்சி மரபுகள் உருவாவதற்கான தடயங்கள் வெளிப்படுகின்றன. உலகில் மிக உயர்வான மக்களாட்சி மரபுள்ள நாடு என்று வெளியில் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிலும் மன்னராட்சியின் உருவாக்கத்துக்கான சுவடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அது போன்றே அவர்கள் உருவாக்கிய பங்குச் சந்தை என்பதும் தனித் தனி நாடுகளிலும் உலகளாவிய நிலையிலும் இந்தப் பாராளுமன்ற ″மக்களாட்சி″க்கு இணையாகவும் இணக்கமாகவும் கூட்டாகவும் செயற்படும் இன்னொரு குழுவினரின் நடவடிக்கையாக வடிவம் பெற்றுள்ளது. அதனால் இழப்பை எய்தியுள்ள உலக நாடுகளின் பல்வேறு தேசிய மக்களிடமிருந்து முற்றிலும் புதிய, உண்மையான மக்களாட்சி நடைமுறையும் அதற்கு இசைய செயற்படும் ஒரு பங்கு முதலீட்டு முறையும் உருவாக வேண்டும் . அதை நாம் உருவாக்குவோம்.

(முற்றும்)

(இக்கட்டுரை தமிழினி மார்ச்சு-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 2

நகர்ப்புற உச்சவரம்பு ஒருபுறம், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் விளைவாகப் போக்கிரிகளாலும் அல்லது போக்கிரிகளைக் கூலிக்கமர்த்த முடிந்தவர்களாலும்தான் வீடுகளை நேர்மையற்ற சில குடியிருப்போர்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்ற நிலை.

ஒருவர் ஒரு வீட்டில் 12 ஆண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தால் அந்த வீடு அவருக்குச் சொந்தம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம். அத்துடன் வீட்டு உரிமையாளர் குடியிருப்பவரைக் காலி செய்யச் சொன்னால் நயமன்றம் அவருக்குத் தடையாணை வழங்கிவிடுகிறது.

வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதன்படி பொதுப்பணித்துறை ஆண்டுதோறும் பல்வேறு வகைக் கட்டுமானங்களுக்கு நிறுவும் விலை வீதத்தின் அடிப்படையில் கட்டடத்தின் அகவை(வயது)க்கு ஏற்றவாறும் கட்டடத்தின் வகைக் கேற்றவாறும் கழிவுகள் செய்து வரும் தொகையில் ஆண்டுக்கு 6 முதல் 9 நூற்றுமேனி வரை வாடகை கொடுக்கலாம் என்பது போன்ற ஒரு நடைமுறையின்படி தான் வாடகை செலுத்த வேண்டுமென்று அதற்கேற்ப எந்த ஒரு கட்டடத்துக்கும் வாடகையை நிறுவி ஆணையிட முடியும்.

ஒரு குமுகத்தின் வட்டி விகிதம் அக்குமுகத்தின் சராசரி மீத்த மதிப்பு(Surplus Value) உருவாக்கத்துக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். ஒரு கட்டடத்தில் போடும் முதலீட்டுக்கு அதிலும் நடுத்தர மக்கள் முதலிடும்போது அந்த வீதத்துக்குக் குறையாமல் வட்டி கிடைக்குமாறும் ஆண்டுதோறும் அதற்குள்ள மதிப்பிறக்கத்தையும்(Depreciation) பழுது பார்க்கும் செலவுகளையும் ஈடுசெய்யும் வகையிலும் அதன் வாடகை இருக்க வேண்டும். அப்போதுதான் வாடகைக்கு விடுவதற்கென்று கட்டடம் கட்ட முதலிடுவதில் பயன் இருக்கும். அதற்கு வழி இல்லாததால் நடுத்தர மக்கள் அத்துறையிலும் முதலிட முடியவில்லை.

போக்கிரிகளை நாடுவோர்க்கு அப்போக்கிரிகளாலும் பின்னர் தீங்கு. வீட்டுமனைகளில் முதலிடலாமென்றால் பதிவுத்துறையின் கொடுங்கோன்மை ஒருபுறம் என்றால் வீடமைப்பு வாரியம் மற்றும் அரசுத்துறைகளின் கையகப்படுத்தும் மிரட்டல் மறுபுறம்.

நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு நிறுவி அதற்கேற்ப பதிவுக் கட்டணம் தண்டுவதற்கென்று 1970 வாக்கில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அது வழக்கம் போல் ஆட்சியாளர்கள் ஆதாயம் பெறுவதற்கான ஓட்டைகளுடனேயே உருவாக்கப்பட்டது. இதில் 47 ஏ என்ற பிரிவின் படி மறுப்புப் பத்திரம் என்ற பெயரில் பதிவு செய்தால் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசி கைக்கூலி கொடுத்து ஒரு சிறு தொகையை மட்டும் அரசுக்குச் செலுத்தி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதையே வளர்த்தெடுத்து, இப்படிப் பகரம் பேசுவதற்கென்றே உதவி ஆட்சியர் பதவியொன்றை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமர்த்தினர். வழிகாட்டி மதிப்பை ஆண்டுதோறும் கண்டமேனிக்கு உயர்த்தினர். இதனால் ஆட்சியாளர்களுக்குக் கோடி கோடியாக மனை வாணிகர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கொட்டியது.

ஒருவர் அந்த வட்டாரத்து நிலவரத்தின் படி மனைப்பிரிவு செய்து தவணை முறையில் ஆள் சேர்த்து பணமும் வாங்கிப் பத்திரப் பதிவுக்குச் சென்றார். அந்த தரிசு நிலத்துக்கு ஏக்கருக்கு உரூ 12,00,000/ (பன்னிரண்டு இலட்சம்) என்று வழிகாட்டி மதிப்பு இருந்தது. என்னவென்று நுணுகிப் பார்த்ததில் 12,000.00 என்பதில் புள்ளிவிட்டுப் போனதால் ஏற்பட்ட தவறு இது என்று தெரிந்தது. நம் அரசு அலுவலகங்களில் ஒரு தவறு நடந்து விட்டால் அவர்கள் என்றாவது வருத்தம் தெரிவித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற வகையில் பேசுவார்கள். இந்த வழிகாட்டி மதிப்பு அரசு வரை சென்று ஒப்புதல் ஆகி விட்டது; எனவே எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லி விட்டனர். பெரும் செலவு செய்தும் அந்த நிலத்துக்குரிய ஞாயமான வழிகாட்டி மதிப்பை நிறுவ முடியவில்லை. இறுதியில் அவருக்கு இழப்பு. இது இந்தக் குறிப்பிட்ட சிக்கலின் ஒரு சிறு துணுக்கு. முழுமையையும் கூறுவதனால் ஆயிரம் பக்கத்தில் ஒரு நூலே எழுதி விடலாம்.

வீடமைப்பு வாரியம் என்பது முதலில் அரசுழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் தலைமையகங்களில் அவர்கள் வாடகையின் அடிப்படையில் குடியிருக்க என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆனால் இதில் வேலையை ஒப்பந்தத்துக்கு விட்டதில் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ″ஆதாயத்தை″ப் பார்த்ததும் ஆட்சியாளருக்கு நாக்கில் ஆறு ஓடியது. எனவே பொதுமக்களுக்கும் வீடுகட்டிக் கொடுக்கிறோமென்று தொடங்கினார்கள். கட்டுமானத்தில் கொள்ளை அடிப்பதிலிருந்து நிலம் கையகப்படுத்தலிலேயே நில உடைமையாளர்களை மிரட்டும் நோக்கத்துடன் 4(1) அறிவிக்கைகளை விடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு விடுவித்தார்கள். இதில் பொதுமக்கள் மட்டுமல்ல மனை வாணிகர்களும் பெருமளவில் ஆட்சியாளர்களுக்குப் பணம் அழவேண்டியிருந்தது. கட்டுமானத்தின் தரம் சந்தி சிரிக்க வைத்த பின்னும் இந்தக் கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆதாயம் தரும் நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பகற்கொள்ளையைத் தட்டிக் கேட்கத்தான் யாருமில்லை.

ஆனால் இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு தலைவிதியே என்று மக்கள் முதலிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது ஊக்கமான, ஆர்வமான செயலாக இல்லை. பொருளியல் நடவடிக்கைகளில் இருக்கும் மக்களுக்கு தங்கள் நிலையை(Status que)ப் பேணும் அளவுக்குத்தான் ஆதாயம் கிடைக்கும். மீதி எல்லாவற்றையும் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வகையில் பறித்துக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையில்தான் பார்வைக்கு மிகப் பெரிதாகத் தெரிந்தாலும் வெளியில் நிலவும் கந்துவட்டி விகிதத்துடன் ஒப்பிட மிகக் குறைந்த வட்டியே தருவதாக அறிவித்த நிதி நிறுவனங்களை மக்கள் நம்பியதில் தவறில்லை. அவர்களைப் படித்த முட்டாள்களென்றும் பேராசைக்காரர்களென்றும் இழிவுபடுத்தி வெந்த புண்ணில் பழுக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சினர் அறிவில் மேம்பட்டவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்ட சிலர். இவ்வாறு ஆட்சியாளர்களால் துரத்தியடிக்கப்பட்டு பாதுகாப்பானது என்று கருதி முதலிட்ட நிறுவனங்கள் அனைத்தும் எமாற்றியதாகக் கூற முடியாது. மக்கள் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்வது வரை காத்திருந்துவிட்டு நம்பத் தகாத நிறுவனங்கள் என்று பட்டியலிட்டு விளம்பரம் செய்துவிட்டு ஏம(ரிசர்வு) வங்கியும் ஆட்சியாளர்களும் கைகட்டியிருந்தது கடைந்தெடுத்த பொறுப்பின்மை அல்லது கயமை. உண்மையில் இது திட்டமிட்ட அழிம்பு வேலை.

குறிப்பாகத் தமிழகத்தில்தான் பண நிறுவனங்கள் மிகுதியாக இருந்தன. அவற்றில் 36 நிறுவனங்கள் பாதுகாப்பற்றவை என்று தாளிகைகளில் ஏம வங்கி விளம்பரம் கொடுத்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்தால் உலகில் எந்த வங்கியின் முன்னால்தான் அதில் பணம் போட்ட மக்கள் அனைவரும் அடுத்த நாளே அணிவகுத்து நிற்கமாட்டார்கள்? எந்த வங்கிதான் திவாலாகாமல் தப்பும்? இந்த உண்மைகள் நம் படித்த முட்டாள்கள் மண்டையில் ஏறவில்லை. ஞாயமாக ஏம வங்கியின் மீது வழக்குத் தொடுத்திருக்க வேண்டும்.

சீராம் சீட்டு நிறுவனம் இதற்கு ஓர் அசைக்க முடியாத சான்று. அந்த நிறுவனத்தை அழிக்கும் வேலையை ரிசர்வு வங்கி தொடங்கிய உடனே அவர்கள் ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டித் தங்கள் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதை மக்களுக்கு விளங்க வைத்துத் தங்கள் நிறுவனத்தைக் காத்துக் கொண்டனர். கோவையில் ஒரு பண நிறுவனத்தில் ஒரு காவல்துறை உயரதிகாரி ஒரு கோடி உரூபாய் கைக்கூலி கேட்டதாகவும் தராவிட்டால் அந்த நிறுவனம் திவலாகப் போவதாகப் பரப்பப்போவதாக மிரட்டியதாகவும் அந்த நிறுவனத்தார் சொன்னதாகத் தாளிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதே போல் காவல் துறையால் சிறை செய்யப்பட்ட ஒரு பெண்ணும் கதறி அழுதார்.

இன்று மக்களுக்கு முதலிட எந்த வழியுமில்லை. சிறு நகரங்களிலுள்ளவர்களுக்காவது அண்மையில் கிடக்கும் விளைநிலங்கள் அனைத்தையும் வீட்டுமனைகளாக்கி அவற்றில் ஊக வாணிகம் செய்து வேளாண்மையை அழித்துக் கொஞ்ச நாள் சூதாட முடியும். ஆனால் சென்னை போன்று காலிமனைகளிலிருந்து நெடுந்தொலைவில் இருப்போரும் இந்த ஊகவாணிகத்துக்குத் துணியாதவரும் என்ன செய்வர்? வங்கி வட்டி விகிதமும் ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறதே. பொருளியலின் அனைத்து விதிகளும் ஆட்சியாளர்களால் மக்களுக்குத் தீங்கு பயக்கும் வகையில் சிதைக்கப்படுகின்றனவே. இந்தச் சூழலில் மக்களுக்கு ஒரே வழிதான் உண்டு. சேமிப்பின் மூலம் பணத்தின் மதிப்பு ஆவியாகி விடுவதை விட அப்பணத்தைக் கொண்டு வாழ்வின் ″இன்பங்கள்″ எனக் கருதப்படுபவற்றை நுகர்ந்துவிடுவது, நுகர்பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது, குடித்துத் தீர்ப்பது, உணவுச் சாலைகளுக்குச் செல்வது, பரிசுச் சீட்டுகள் வாங்குவது, திரைப்படம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கையரங்குகள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, பிறந்த நாள், திருமண நாள், சுற்றுலா, கோயில் விழாக்கள், கோயில்களுக்கு நன்கொடைகள், ஆடம்பரத் திருமணங்கள், ஆளுக்கு ஒர் இருசக்கர ஊர்தி, வீட்டுக்கு ஒரு மகிழுந்து என்று வாங்கிப் பயன்படுத்துவது என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது என்ற வழிதான் அது. இப்படி மக்கள் செலவு செய்யும் ஒவ்வொரு உரூபாயிலும் அதை விற்கும் நிறுவனங்களிலிருந்து ஆட்சியாளருக்குத் தரகு கிடைக்கும் என்பது தனிக் கதை. இவ்வாறு மக்கள் தங்களை அறியாமலே ஓர் ஊதாரிப் பொருளியல் (Spendthrift economy) பண்பாட்டினுள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இது தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கும் விளைவு. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கொண்டு வந்து குவிக்கும் நுகர்பொருட்கள் செலவாகும். உள்நாட்டு மக்கள் முதலிட வழியின்றிப் போவதால் அயல் மூலதனத்தை இங்கு புகுத்துவதற்கான வெற்றிடமும் கிடைக்கும். அதனால்தான் அயல் நிறுவனங்களுக்கு நடைபாவாடை வரவேற்பும் அயல் மூலதனத்தை ஏதோ பெறற்கரிய நற்பேறு என்று ஆட்சியாளர்களும் அவர்களது அனைத்து செய்திப் பரப்பு வாயில்களும் பேரிகை கொட்டுவதும்.

இவ்வளவு இடையூறுகளுக்கும் நடுவில் வெளிநாடுகளில் பணியாற்றுவோர் நம் நாட்டுக்குப் பணம் அனுப்புவது, ஓய்வூதியங்கள் மூலமும் உயிர்க் காப்பீட்டு முதிர்வு போன்றவற்றாலும் வேறு வகையிலும் உள்நாட்டில் உயர்ந்திருக்கும் பணப்புழக்கம் ஆகியவற்றால் மக்கள் கைகளில் சேமிக்கத்தக்க பணம் வந்துகொண்டே இருக்கிறது. அத்துடன் நடுவரசின் விருப்ப ஓய்வுத் திட்டத்தினால் பல இலக்கம் உரூபாய்களைப் பெற்ற அரசுழியர்கள் வங்கிகளில் கிடைக்கும் குறைந்த வட்டியால் தம் சேமிப்பின் மதிப்பு கரைந்து போகும் என்று அஞ்சி அவர்களும் குறைந்த வட்டியில் கந்துவட்டிக்காரர்களுக்குப் போட்டியாக இறங்கினார்கள். அத்துடன் கந்துவட்டிக்காரர்களின் சந்தையும் ஓர் உச்சத்தை எட்டித் தேங்கியது. இந்த வேளையில் அரசு உருவாக்கிய உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில் கந்துவட்டிக்காரர்கள் முதலிடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்தக் கட்டமைப்புகள் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ளவை. ஆக இங்கும் அவர்களின் கொள்ளை நடக்கிறது.

இவர்களிடம் தேங்கிக் கிடக்கும் மூலதனத்திலிருந்து ரிலையன்சு, வால்மார்ட் போன்ற கொள்ளைக்கும்பல்கள் கூறுவது போன்ற அங்காடிகளைத் தமிழகமெங்கும் உருவாக்க முடியும். சாக்கடை ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் கால் வைக்கக் கூசும் உள்ளாட்சிகளின் வசமிருக்கும் நாளங்காடிகளிலும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் நம் மக்களுக்கு தூய்மையான சூழலில் நிறுவப்பட்டு பேணப்படும் அங்காடிகளைப் பயன்படுத்தும் தேவையும் உரிமையும் உண்டு. ஆனால் ரிலையன்சு போன்றவற்றின் நுழைவைத் தடுக்கிறோம் என்று சொல்லி சில்லரை வாணிகர்களின் பெயரால் போராட்டம் நடத்தும் வாணிகர் சங்கத் தலைவர்களும் ″தமிழ்″த் தலைவர்களும் செங்கொடித் தோழர்கள் செய்வது போல உள்ளூர்க்காரனைத் தடுத்து தேவையான ஒரு வசதி மக்களுக்குக் கிடைக்காமல் செய்து அது வெளியிலிருந்து வரும்போது அதற்கு ஆதரவான மனநிலையைப் பொதுமக்களிடம் உருவாக்கவே செயற்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

இப்படிப் போக்கிடமின்றித் தவிக்கும் மக்களின் பணத்திரட்சி வேறு வழியின்றி அரசுடைமை வங்கிகளிடம் குவிந்தது. இதற்கு மிகக் குறைந்த வட்டியைக் கொடுத்தாலும் அதை வாடிக்கையாளருக்குக் கொடுக்க வங்கிக்கு வருவாய் வேண்டுமே. அதனால் ஒரு பெரும் புரட்சியே நடைபெற்றுள்ளது.

முன்பு நகைக் கடன் பெற வேண்டுமானால், இன்ன நாட்களில் தான் தருவோம் என்பார்கள், இன்ன நோக்கத்துக்குத் தான் தருவோம் என்பார்கள், வங்கிக்குக் தெரிந்தவரைக் கூட்டி வாருங்கள் என்பார்கள், வங்கி ஊழியருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள். மதிப்பீட்டாளர் வரவில்லை என்பார்கள். இப்போது அடையாளம் சரியாகக் காட்டப்பட்டால் போதும். உடனே கடன் கிடைக்கும். அதுவும் வேளாண் கடனென்று நூறு உரூபாவுக்கு மாதத்துக்கு 58 காசு வட்டிக்குக் கிடைக்கும். ஒருவருக்கு மூன்றிலக்கம் உரூபாய்கள் வரை கிடைக்கும்.

வீட்டுக்கடன் என்றால் முன்பு உள்ளாட்சி ஒப்பளித்த வரைபடத்திலிருந்து ஒரு சன்னலை மாற்றி வைத்தாலே திருந்திய வரைபடம் வாங்கிவா என்பார்கள்.

இந்தக் கெடுபிடிகளுக்கு ஊடாகவே இந்திய அரசு வீடமைப்பு வளர்ச்சி பணமளிப்புக் கழகம் – HDFC – என்ற ஒன்றைத் தொடங்கியது. இதில் தொடக்க முதலீடு இந்திய அரசு உரூ.45 கோடி, உலக வங்கி உரூ.250 கோடி, அதாவது மொத்த முதலீட்டில் உலக வங்கியின் பங்கு ஏறக்குறைய 85%.

இந்த நிறுவனத்தில் கடன் பெறுவது மிக எளிது. கடன் பெறுபவரின் திரும்பச் செலுத்தும் திறனை மட்டுமே பார்த்தனர். பிற எல்லாம் பெயருக்குத்தான். அந்த நிறுவனம் சில முகவாண்மை நிறுவனங்களை அமர்த்தியிருந்தது. அவர்கள் சில பால்வினை நோய் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு தொழில் செய்பவர்களைப் போல் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு வந்து வாடிக்கையாளர்களைச் சந்திப்பர். பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பிலையே முதல் தவணைக்கான காசோலையைப் பெற்று விடலாம். அரசுசார் வீட்டுக் கடன் வழங்கு நிறுவனங்கள் தங்களை அணுகுபவர்கள் அவர்கள் வீடுகட்டுவதற்குத்தான் அந்தப் பணத்தைச் செலவிடுவார்களா என்று கடன் வழங்கும் முன்னும் அப்படித்தான் செலவு செய்தார்களா என்று கடன் பெற்ற பின்னரும் உறுதிப்படுத்துவதறகாக அவர்களைப் படுத்திய பாடும் அலைக்கழிப்பும் சொல்லி மாளாது. ஆனால் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒருவன் செய்வது போல் தான் கொடுக்கும் பணத்தைக் கடன் பெற்றவரிடமிருந்து தரும்பப் பெறத் தேவையான உறதிப்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தியது.

இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு நடுவண் வரவு செலவுத் - திட்டத்தில் வீட்டுக் கடன் திரும்பச் செலுத்தும் தொகை வருமான வரி கணக்கீட்டிலிருந்து கழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய அரசு மக்களிடமிருந்து அனைத்து பொருளியல் நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் பிடுங்கித் தன் கையில் வைத்துக்கொண்டு எந்தத் திசையில் செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் ஒரு சுட்டி இது.

இன்றோ எல்லா அரசுப் பண நிறுவனங்களின் நிலைப்பாடும் கட்டடத்தின் அதாவது ஈடுவைக்கப்படும் சொத்தின் பரப்பளவு குறையாமலிருக்க வேண்டும் அவ்வளவுதான். சில கடைக்காரர்கள் போல் தெருவில் நின்று வாடிக்கையாளர்களைக் கூவி அழைக்க வேண்டியதுதான் பாக்கி.

வேளாண் கடன் என்று அதற்கென்று நடுவரசு நிறுவியுள்ள மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறுபவர்களில் உண்மையில் வேளாண்மைக்காகப் பெறுபவர் ஒரு நூற்றுமேனிக் கூடத் தேறாது. தங்க நகைகள் வேண்டிய அளவில் இல்லாதவர்களுக்கு இதனால் எந்தப் பயனுமில்லை. இது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. இந்த நிலையில் வரும் ஆண்டில் உரூ 2,35,000 கோடியை வேளாண் கடனுக்காக ஒதுக்கப் போவதாக நடுவண் பண அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதன் உண்மையான பொருளியல் குறிதகவு என்ன வென்றால் நாட்டுமக்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரைத் தவிர பிறர் அனைவரின் பொருளியல் நடவடிக்கைகளையும் பிடுங்கி ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் கொண்டுவந்துவிட்டனர். அதன் ஒரு விளைவாக அரசுடைமை வங்கிகள் அழிந்து போகும் நிலை உருவாகிவிட்டது. இதைச் சரிக்கட்ட கட்டுப்படியாகாத வட்டியில் கடன்களைக் கொடுக்க வங்கிகளுக்குச் சொல்லிவிட்டு அதில் வரும் இழப்பை அரசு வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. அதாவது மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை பறித்ததால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அதே மக்களின் வரிப்பணத்தையே பயன்படுத்துகிறது.

இதற்குப் பிறகும் மக்கள் கைகளில் மூலதனமாகத் தக்க பணதிரட்சி இருந்தது.

இதை உணர்ந்து நம் அம்பானி வகையறா நடத்திய திருவிளையாடலால் நிதி அமைச்சகமே புரிந்துகொள்ள முடியவில்லை என்னும் அளவுக்கு பங்குகளின் சந்தை மதிப்பு கடும் விரைவில் உயர்ந்து இப்போது முதலீட்டாளர்களுக்கு கிலியூட்டும் அளவுக்குத் தடுமாறிக்கோண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அதிர்ச்சி அலைகள் ஓய்ந்து மீண்டும் பங்கு முதலீட்டுப் பக்கம் போகலாம் என்று நினைக்கத் தொடங்கிய மக்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சி. இந்த விளையாட்டைச் செய்தவர்களின் நோக்கமும் பொதுமக்கள் பங்குச் சந்தைப் பக்கம் வரக்கூடாது என்பதாகவே இருக்கவும் கூடும்.

(தொடரும்)

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 1

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்சியாளர்கள் அரசின் பொருளியல் அணுகலில் தாராளவியம் என்றொரு முழக்கத்தை வைத்தனர். அதை நம்பி பலர் புதிதாகத் தொழில் துறையில் புகுந்த போது பங்கு முதலீடும் சூடு பிடித்து வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியது. நடுத்தர மக்கள் தங்கள் சிறு பணத் திரட்சியையும் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு செய்தனர். இதழ்கள் ஒவ்வொன்றும் பங்குச் சந்தை பற்றி மக்களுக்கு வகுப்புகள் நடத்தின. இதற்கென தனியிதழ்களும் தோன்றின.

பங்குச் சந்தை முறை ஐரோப்பாவில் தொழிற்புரட்சியுடன் தொடங்கியது. தனி மனிதர்களும் கூட்டாளிகளும் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை இழப்பெய்திய போது பலரும் ஓட்டாண்டிகளாயினர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாயின. அந்நிலையில் தொழில்முனைவோருக்குப் பாதுகாப்பளிப்பதாக மட்டுப்பட்ட கடப்பாடுகளுடன் மட்டிட்ட குழுமங்கள் (Limited Companies with limited liabilities) உருவாயின. இதன் மூலம் ஒரு குழுமம் இழப்பெய்தினால் அதற்குரிய இழப்பை அந்நிறுவனத்துக்குரிய சொத்துகளிலிருந்துதான் ஈடு செய்ய முடியுமே ஒழிய நிறுவனர்களின் பிற சொத்துகளைப் பொறுப்பாக்க முடியாது. இதன் மூலம் பங்கு முதலீட்டு முறை தோன்றியது. அதோடு பங்கில் ஊக வாணிகம் செய்யும் பங்குச் சந்தையும் உருவானது. இதற்கு இரண்டாம் நிலைப் பங்கு வாணிகம் என்று பெயர்.

இரண்டாம் நிலைப் பங்கு வாணிகம் என்பது உண்மையில் முதலீடே அல்ல. தொழில்துறைக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. எத்தனை கோடிப் பணம் இந்த இரண்டாம் நிலைபங்குச் சந்தையில் புரண்டாலும் அந்தப் புரளலில் ஒரேயொரு தம்பிடி கூட எந்தவொரு நிறுவனத்துக்கும் முதலீடாகக் கிடைக்காது. பணம் வைத்திருப்போர் அதைச் சுழலச் செய்வதற்கான ஓர் உத்தியாகவும் சூதாட்டமாகவுமே இதனைப் பயன்படுத்தினர். இதற்கு இந்தியா போன்ற குடியேற்ற நாடுகளிலிருந்து அங்கு பாய்ந்த மாபெரும் செல்வம் துணையாக நின்றது. இந்த ஊக வாணிகர்களின் செயற்பாடு உண்மையில் பங்கு முதலீட்டுக்குப் பெரும் ஊக்கியாக விளங்கியது. தாங்கள் முதலிடும் பங்குகளுக்கு தொழில் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாயத்தை விட பங்குச் சந்தை ஊக வாணிகர்களுக்கு அவற்றை விற்பதில் கூடுதல் ஆதாயம் கிடைக்குமென்ற உறுதிப்பாட்டில் மக்கள் பங்குகளில் முதலிட்டார்கள். ஊக வாணிகத்தில் பலர் திடீரென்று ஓட்டாண்டியாகி விடுவதுண்டு, குதிரைப் பந்தயங்களில் போல். ஆனால் சூதாட்டத்திற்கேயுரிய சுவையும் விறுவிறுப்பும் அதனை நிலைநிறுத்தி வைத்துள்ளன.

இந்த இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையால், மக்கள் தொழில் நிறுவனங்களுக்கு முதல் நிலைப்பங்கு வெளியீட்டின் போது செலுத்திய பங்கு மூதனத்தைப் பெற்றுக் கொண்ட தொழில் முனைவோர் அந்தப் பணத்தை எந்த வகையில் கையாளுகின்றனர் என்ற கவலை எதுவும் இன்றி இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் தம் கையிலிருக்கும் பங்குகளின் விலை எப்படி இயங்குகிறது என்று கவனிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது தொழில் முனைவோர் தங்களது ஆதாயத்தை உரிய முறையில் பங்கு முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் ஏமாற்ற வழி செய்கிறது.

நம் நாட்டில் பங்குச் சந்தை என்பது அண்மைக் காலம் வரை ஒரு சிறு வட்டத்துக்குள் மட்டுமே அடங்கியிருந்தது. தொழில் துறையும் ஆட்சியாளரின் அன்புக்குரிய ஒரு சிறு குழுவின் ஆதிக்கத்திலிருந்தது.

ஆனால் தாராளமாக்கல் என்ற பொய் முழக்கத்துடன் ஆட்சியாளர்களின் தூண்டுதலில் ஊடகங்கள் விரித்த வலையில் மயங்கி புதிதாகப் பலர் பங்கு வெளியீட்டில் இறங்கினர். மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாராளமாக்கல் என்பது உண்மையில் அயல் நாட்டினர்க்கே என்பது புதுத் தொழில்முனைவோருக்குப் புரியத் தொடங்கியது. சரியான முகவரியே இல்லாத ஆயிரம் போலி நிறுவனங்கள் இந்தியப் பங்குப் பரிமாற்ற நடுவண வாரியத்தின்(செபி) ஒப்புதல் பெற்று பங்குப் பத்திரங்களை வெளியிட்டு உரூ. 5000/- கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டன. இது ஒரு புறமிருந்தாலும் நேர்மையான நிறுவனங்கள் ஆதாயம் காண முடியவில்லை. பலரால் அரசிடமிருந்து தொழில் தொடங்குவதற்கான இசைவைக் கூடப் பெற முடியவில்லை. அத்துடன் அரசு வங்கிகளின் துணையோடும் ஆட்சியாளரின் அரவணைப்போடும் அர்சத் மேத்தா நடத்திய திருவிளையாடல்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் 10,000 கோடிக்கு மேல் இருக்கும். எவ்வளவுக்கென்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

பங்குப் பத்திரங்கள் காணாமல் போனாலோ ஏதங்களில் அழிந்து போனாலோ புதிய நகல் பங்குப் பத்திரங்கள் வழங்குவது உண்டு. ஆனால் ஆட்சியாளரின் செல்லப் பிள்ளையான அம்பானி வகையறாக்கள் ஏற்கனவே விற்கப்பட்டு பாதுகாப்பாக இருந்த பங்குகளுக்கே நகல் பத்திரங்களை விற்றார்கள். செபியும் ஆட்சியாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்து பங்குச் சந்தை ஊக வாணிகத்திலிருந்து சராசரி குடிமக்களை வெளியேற்றின.

இந்த அம்பானிகள் வளர்ந்ததே ஒரு தனிக்கதை. இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலை அறிவித்த காலத்தில் தன்னை எதிர்த்துக் களமிறங்கிய பெரும் முதலாளிகளை ஒடுக்குவதற்கென்றே 97½% உம்பர் வருமான வரி(Super Income Tax) என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் வெறும் ஆளாக இருந்த திருபாய் அம்பானியின் சொத்துமதிப்பு உரூ 5000/- கோடியாக வளர்ந்தது. அதே கால கட்டத்தில்தான் இன்று உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் பல வட இந்தியப் பணக்காரர்கள் உருவானார்கள். ஆனால் அன்றோடு பணம் படைத்த எவரும் அரசையும் அதன் செயற்பாடுகளையும் குறை கூறி ஒரு மூச்சுக்கூட விடுவதில்லை. குமுகத்தின் வலிமையான மக்கள் அடுக்குகளின் குரல்வளையை நெரித்துத்தான் இன்று இந்திய ″மக்களாட்சி″ பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நேர்மையுள்ளோர் அனைவரும் அரசியல், பொருளியல் களங்களை விட்டு விலகிவிட்டனர். கயவர்களின் ஆளுகையில் அனைத்தும் வந்து விட்டன.

இந்நிலையில் முகமதிப்பைப் போல் பல மடங்கு உயர்மதிப்பில் பங்குகளை விற்கும் பழக்கம் தொடங்கியது.

பங்குப் பத்திரம் என்பது பொதுவாக பத்து உரூபாய்கள் அல்லது நூறு உரூபாய்களை முகமதிப்பாகக் கொண்டிருக்கும். அதாவது ஏழைக் குடிமகனும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் தன் பங்களிப்பைத் தர வேண்டும் என்பது இந்த முறையைப் புகுத்திய பெருமக்களின் நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் குறைந்தது ஆயிரம் அல்லது அதற்கும் மேலே பங்குகளை வாங்கினால்தான் பங்குகள் வழங்கப்படும் என்று கட்டுறவு விதிப்பது வழக்கம். பங்கு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பெருகினால் கணக்கு வைப்பது, பங்கு முதலீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கொள்கை முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் உள்ள இடர்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

முகமதிப்பு என்பது இவ்வாறு பங்கு வெளியீட்டின் போது ஒவ்வொரு பங்குக்கும் நிறுவும் விலையாகும். இது நிலையான ஒரு மதிப்பாகும். சந்தை மதிப்பு என்பது அந்தப் பங்குக்கு இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையாகிய ஊக வாணிகத்தில் அந்நிறுவனப் பங்குக்கு இருக்கும் மதிப்பாகும். உரூ. 10/- முகமதிப்புள்ள பங்குக்கு உரூ. 500/-, உரூ.5000/- என்று கூட சந்தை மதிப்பு இருக்கலாம்.

இவ்வாறு உயர் சந்தை மதிப்புள்ள பங்குகளுக்குரிய நிறுவனத்தின் உண்மையான சொத்து மதிப்பும் அது வெளியிட்டிருந்த பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பும் அதிக ஏற்றத் தாழ்வின்றி இருந்தால் அது ஒரு சிறந்த நிறுவனம் என்று சந்தையில் அறியப்படும். ஆனால் உண்மையில் இதன் பொருளியல் பொருள் என்னவென்றால் மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் இந்தச் சொத்து மதிப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அந்நிறுவனத்தினர் அதன் பங்கு மூதலீட்டாளர்களுக்கு அந்தந்தக் காலத்தில் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர் என்பதே.

சில நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அதன் சொத்தின் சந்தை மதிப்பு அதன் உண்மையான சொத்து மதிப்பைப் போல் பல மடங்குகள் இருந்தாலும் சந்தையில் அதன் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பதுண்டு. நாராயணமூர்த்தியின் இன்போசிசு நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு அந்நிறுவனத்தின் உண்மையான சொத்து மதிப்போடு ஒப்பிட ஏறுமாறாக இருந்த போதும் அந்த ஆள் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சில நிறுவனங்கள் முகமதிப்பு ஒன்றாகவும் விற்பனை விலை அதைப் போல் பல மடங்காகவும் அறிவித்துப் பங்குகளை விற்றன. அரசுடைமை வங்கிகளே இத்தகைய வெளியீட்டில் இறங்கின. இப்போது இந்த முகமதிப்புக்கும் பத்திர விற்பனை விலைக்கும் உள்ள வேறுபாட்டை அதாவது கூடுதல் பணத்தை முனைவோர் என்ன செய்வார்? அந்தக் கூடுதல் பணத்தை எவ்வாறு கணக்கில் எடுப்பார்? வரி முதலியவற்றை எந்தத் தொகைக்குக் கணக்கிடுவார்? இன்னும் விடை காண முடியாத கேள்விகள் எத்தனையோ எழுகின்றன. கொடுத்த, “பங்கு முதலீட்டாளர்” என்று அறியப்பட்ட குடிமகனுக்குத் தான் முகமதிப்புக்குக் கூடுதலாகச் செலுத்திய பணத்துக்கு என்ன உரிமை என்ற கேள்விகளுக்கு நாம் பகுத்தறியத்தக்க ஒரு விடையைக் காண வேண்டியவர்களாகவும் உள்ளோம்.

உரூ. 10/- முகமதிப்புள்ள ஒரு பங்குப் பத்திரத்துக்கு உரூ. 5000/- சந்தை மதிப்புக்கு இருந்தாலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஈவுத் தொகை அதன் முகமதிப்பின் நூற்றுமேனியில்தான். எடுத்துக் காட்டாக அந்த நிறுவனம் 100% ஈவு வழங்குவதாக இருந்தால் அந்த முதலீட்டாளருக்கு பங்குக்கு உரூ.10/-தான் கிடைக்கும். அதாவது உரூ. 5000/- இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் செலுத்தி ஒரு பங்குப் பத்திரம் வாங்குபவருக்கு அப்பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் ஓராண்டில் வெறும் உரூ. 10/- ஐத்தான் ஆதாயப் பங்காக அளிக்கும். ஆனால் உண்மையில் கம்பெனிக்குக் கிடைத்தது அந்த உரூ. 5000/- க்கும் உரிய தகுதியான ஆதாயமாகக் கூட இருக்கலாம். இந்த இடைவெளியை, அதாவது நிறுவனத்தை நடத்துவோர் கொள்ளை அடிக்கும் இந்தப் பணத்தை இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையில் புரளும் பணம் ஈடு செய்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் பங்கு முதலீட்டில் ஈடுபட்டு அந்த நிறுவனம் தான் உருவாகக் காரணமாக இருந்தவர்களை ஏமாற்றி அசுரத்தனமாக வளர்ந்து அவர்கள் மீது பொருளியல் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உதவுகிறது. அதில் புரளும் பல கோடி கோடியான நாட்டின் செல்வம் எந்த விளைப்பு அல்லது பணிப் பயனும் (Produdctive or service function) இன்றி பயனற்ற சுழற்சியில் உள்ளது.

முகமதிப்பைப் போல் பல மடங்கு உயர்மதிப்பில் பங்குகளை விற்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பங்குப் பத்திர பரிமாற்றக் கட்டுப்பாட்டு வாரியம் உடந்தையாயிருக்கிறது.

இரண்டாம் நிலைச் சந்தையாகிய ஊக வாணிகம் வீழ்ந்துவிட்டதால் முகமதிப்பில் வாங்கியவர்களுக்கும் உயர்மதிப்பில் வாங்கியவர்களுக்கும் இழப்புதான் ஏற்பட்டது. தாராளமாக்கல் என்பது உள்நாட்டினர்க்கல்ல என்பது புரிந்துவிட்டதால் புது முனைவோரும் தோன்றவில்லை.

அதே வேளையில் தமிழகத்தில் புற்றீசல்களாகப் புறப்பட்ட நிதி நிறுவனங்களில் மக்கள் முதலிட்டு கணக்கற்ற பணத்தை இழந்தனர். இவ்வாறு மக்களின் முதலீட்டு ஆர்வம் வளர்ந்ததற்கும் ஒரு பின்னணி உண்டு.

இந்தியாவில் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதற்கு ஓர் அரசியல் பின்னணி உண்டு. சவகர்லால் நேரு இறந்த பின் காமராசரின் முன்முயற்சியால் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சர் ஆனார். மொரார்சி தேசாயின் போட்டியை முறியடித்துத்தான் காமராசர் இதை இயலச் செய்தார். சாத்திரி திடீரென்று மரணமடைந்ததும் மீண்டும் மொரார்சி போட்டியிட்டார். அவரை மீண்டும் முறியடித்து இந்திரா காந்தியை தலைமை அமைச்சர் ஆக்கினார் காமராசர். இந்தச் சூழலில் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் ஐயத்துக்குரியவையாக மாறின. குறிப்பாக இந்திய உரூபாயின் மதிப்பை அமெரிக்க டாலரோடு ஒப்பிட 57% குறைத்த நடவடிக்கை காமராசர் உட்பட பழம்பெரும் தலைவர்களிடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்சியிலோ அமைச்சரவையிலோ எவரையும் கலந்து கொள்ளாமலேயே இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார். இதன் மூலம் அவருக்குத் தனிப்பட்ட ஆதாயம் இருக்க வாய்ப்புள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளால் கட்சித் தலைவர்களுக்கும் அவருக்கும் முரண்பாடுகள் முற்றின. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி நிறுத்திய சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரியை இந்திரா நிறுத்தினார். கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் “மனச்சாட்சிப்படி”(!!) வாக்களிக்க வேண்டுமென்று அறிக்கை விட்டார். ஆட்சியில் இருப்பவர்களின் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பது இயல்புதானே! கிரி வெற்றி பெற்றார். கட்சி உடைந்தது. இந்த நிலையில் தன் படிமத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அறிவித்த “புரட்சிகரத் திட்டங்”களில் வங்கிகளை அரசுடைமையாக்குவது முகாமையானது.

இது மாநில மக்களின் மூலதனத்தை, குறிப்பாக இந்தியாவில் வலிமை வாய்ந்த வங்கிகளாக இருந்த இந்தியன், இந்தியன் ஒவர்சீசு ஆகிய வங்கிகளை நடுவரசு, அதைச் சார்ந்து நிற்கும் பொருளியல் விசைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு சேர்த்தது. முன்பு நேரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உயிர் காப்பீட்டு நிறுவனமான இந்திய உயிர் காப்பீட்டு நிறுவனத்தை(எல்.ஐ.சி.) அதன் உரிமையாளரான தமிழகத்து முத்தையா செட்டியாரிடமிருந்து பறித்ததும் தமிழக மக்களின் மூலதனத் திரட்சியைத் தில்லி சார்ந்தவர்கள் கைப்பற்றித்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதில் நம் நாட்டுச் செங்கொடித் தோழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

இந்தியாவின் 50 ஆண்டுகால “விடுதலை” வரலாற்றில் திவாலாகிக் கவிழ்ந்து போன வங்கிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம்தான். ஆனால் வாராக்கடன் என்று அரசியல் பொறுக்கிகள் கொள்ளையடித்த தொகைக்கு அவை தூசு பெறுமா?

இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாதென்று அலகபாத் நயமன்றம் 1974இல் ஒரு தீர்ப்பு சொன்னது. பதவியிலிருந்து கீழிறிங்க வேண்டிய தேவையைத் தவிர்ப்பதற்காக அம்மையார் நாட்டில் ″நெருக்கடி நிலை″யை அறிவித்ததுடன் மீண்டும் “புரட்சிகர” நடவடிக்கைகளில் இறங்கினார். அதில் ஒன்றுதான் கடன் தள்ளி வைப்புச் சட்டம். அதன்படி தங்க ஈட்டுக் கடன்களை எல்லாம் செல்லாதவை ஆக்கினார். அடகுக் கடைக்காரர்களிடமிருந்து வருவாய்த் துறையினர் துணையுடன் ஈட்டுப் பணத்தையும் வட்டியையும் கொடுக்காமலே நகைகள் பிடுங்கப்பட்டன.

பிராமிசரி நோட்டு எனப்படும் வாக்குத்தத்தப் பத்திரம் பணம் வைத்திருக்கும் எவரும் ஏதாவது ஒரு தாளில் வாங்குபவர் கொடுப்பவர் பெயர்களையும் தொகையையும் வட்டியையும் எழுதி ஒரு வருவாய்த் தலையை ஒட்டிக் கையெழுத்து இட்டு பணம் பெற்றுக் கொள்ளும் வழியாகும். மூன்று ஆண்டுகளுக்குள் பத்திரத்தைச் செல்லாக்கவில்லை எனில் வழக்கு மன்றத்துக்குப் போக வேண்டும். இல்லையெனில் பத்திரம் காலாவதியாகிப் போகும். இந்தக் கடனைத் திரும்பச் செலுத்துவதைத் தள்ளிப் போட்டு பாதிப் பணம் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றும் அம்மையார் ஆணையிட்டார். எனவே கடனாகக் கொடுத்த தொகைக்கு எந்த உறுதிப்பாடும் இல்லை, அரசு என்று வேண்டுமானாலும் சட்டம் போட்டுக் கடனைச் செல்லாததாக்கலாம் என்ற அச்சம் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்களிடையில் ஏற்பட்டு அத்தொழிலை விட்டு அனைவரும் ஒதுங்கினர்.

முதலாவதாக, வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் பின்விளைவாகவும் கடன் விடுதலைச் சட்டங்களாலும் சட்டப்படி அமைந்த கடன் பெறும் வாயில்கள் அடைபட்டன. எனவே கந்துவட்டிக்காரர்களாகிய அடியாள் கும்பலிடம் கடன் வழங்கு துறை சிக்கியது. நாட்டு நடப்பில் வட்டி விகிதம் மிக எளிதாக ஆண்டுக்கு 240 நூற்றிமேனியைத் தாண்டி நிற்கிறது. இது தனி வட்டி விகிதம்தான். நாள், கிழமை, மாதக் கூட்டு வட்டியாக நடைமுறையிலிருப்பதை எண்ணிப் பார்த்தால் வட்டி வீதம் நம் கற்பனைகளையும் தாண்டிவிடும். அந்நிலையில் வங்கிகள் அளிக்கும் 10 நூற்றுமேனிக்கும் குறைந்த வட்டியை யார் நாடுவர்?

அடுத்து, நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ச்சி குன்றிய, வளர்ச்சி தடுக்கப்பட்ட மக்கள் பொன், நிலம், வீடு போன்ற பருமையான முறையில் முதலிடுவதுதான் பாதுகாப்பானது. ஆனால் தாரளமாக்கல் என்ற பெயரில் தங்கம் தாரளமாக இறக்குமதி செய்யப்பட்டதால் தங்கத்தின் விலை வீழ்ந்தது அல்லது அதன் விலை உயர்வு பண மதிப்பின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது எதுவுமில்லை என்றாகிப் போய்விட்டது. நிலத்தில் முதலீடுவதற்கு நில உச்சவரம்பும் பசுமைப் புரட்சியின் விளைவான வேளாண்மை வீழ்ச்சியும் தடைகள்.

சில “புரட்சிகர” நடவடிக்கைகளுக்கு செங்கொடித் தோழர்கள் மீது குற்றம் சொல்வதற்காக எம்மை நேயர்கள் பொறுத்தருள வேண்டும். உண்மையில் அவர்களது “புரட்சிகர” முழக்கங்களும் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை அனைத்துலகியத்தின் (Socialist International) முழக்கங்களும் ஒன்றே. தோழர்கள் தெருக்களில் முழங்குவர். அமெரிக்காவின் ஒற்றர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்துகொண்டு கமுக்கமாக நிறைவேற்றுவர். பெயரைத் தோழர்கள் தட்டிக்கொள்வர். ஆட்சியாளர்களுக்குக் குத்துக் குத்தாகப் பணம். தோழர்கள் உண்டியல் தூக்கியும் மகமை(சந்தா) தண்டியும் அவ்வப்போது ஆளும் கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசியும் காலங்கழித்துக் கொள்வர். உண்மையில் தோழர்களின் பங்கு, மக்களின் பொருளியல் உரிமைகளைப் பறிக்கும் போது மக்களிடையில் இருந்து எதிர்ப்புகளோ வெடிப்புகளோ உருவாகாமலிருக்கத் தக்க உளவியலை மக்களிடையில் உருவாக்கி அந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களைச் செயலிழக்க வைப்பதாகும்.

நாம் ஏன் இந்த முன்னுரையை முன்வைக்கிறோம் என்றால், தோழர்கள் வைத்த கோரிக்கையின் பெயரால் கொண்டு வரப்பட்ட நிலவுச்ச வரம்புச் சட்டத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அதில் உணவுப் பொருள் வேளாண்மைக்குத்தான் உச்சவரம்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பயிர்களை இடுவதற்கு விதிவிலக்கு உண்டு. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் டாட்டா நிறுவனம் உப்பளம் அமைப்பதற்கென்று 20,000 ஏக்கர் வாங்கிப் போட்டது. இதற்கு எல்லாம் சட்டத்தில் விலக்கு உண்டு. (இந்த உப்பைக் கொண்டுதான் அயோடின் உப்பு செய்து விற்கிறார்கள். அதை விற்கத்தான் உலகிலுள்ள பொய்களை எல்லாம் அள்ளி வீசி விளம்பரங்களையும் பரப்பல்களையும் செய்து அரசுப் பொறி முழுமூச்சாகச் செயற்பட்டது. கலப்படத் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தியது. எவ்வளவு முன்னேற்பாடுகளுடன் அரசும் அந்த நிறுவனமும் செயற்பட்டுள்ளன பார்த்தீர்களா?)

இந்தச் சட்டத்துடன் குத்தகை ஒழிப்பு என்ற பெயரில் குத்தகை நிலைப்புக்காகவும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். இவ்வாறு பெரு நில உடைமைகள் உடைந்து அல்லது செயலிழந்து துண்டு துக்காணி நில உடைமைகள் எஞ்சின. இந்த வேளையில் 1965இல் ஒரு வறட்சி வந்தது. அதுவரை நாம் நம் மொத்த நுகர்வில் கணிசமான ஒரு பகுதியை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். அப்போது ஆண்ட இலால் பகதூர் சாத்திரி அதையும் நிறுத்தி விட்டு மக்களை வாரத்துக்கு ஒரு நாள் பட்டினி கிடக்கச் சொன்னார். செய் கிசான், செய் சவான் என்று முழங்கிக் கொண்டே உழவர்களின் மீது கொடுங்கோன்மையான ஒடுக்குமுறையை ஏவினார். அறுத்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு செல்லத் தடை, வீட்டில் இருப்பு வைத்திருக்கத் தடை, கடையில் விற்கத் தடை, ஆட்சியாளர்கள் சொல்லும் “உரிமம் பெற்ற” வாணிகனுக்கு அல்லது அரசே திறந்து வைத்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் சொல்லும் விலைக்கு விற்க வேண்டும். அவர்கள் சமயத்தில் சாக்கைக் கட்டுவதற்கு சணல் இல்லை, எனவே இப்போது நெல்லை எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்வார்கள். இந்த நிலைமைகள் இன்று கூடத் தொடர்கின்றன.

உழவர்களின் மீது இப்படித் தொடங்கிய தாக்குதல் இன்று ஒரு கிலோ அரிசி உரூ. 2/-க்கு விற்பது வரை சென்றுள்ளது. 1967 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு உரூபாவுக்கு ஒரு படி அரிசி என்று செயற்படுத்திய போது அது கிலோவுக்கு 60 காசுகளாகவும் ஆண்களுக்குக் கூலி அன்று 75 காசுகளாகவும் இருந்தன. இன்று கூலி உரூ. 120/- முதல் 200/- வரை. உழவனும் வேளாண்மையும் எப்படி உருப்படுவர்?

இந்தத் துண்டு துக்காணி உழவர்களுக்கு வேளாண்மை செய்ய மூலதனம் கிடையாது. அப்படியே வைத்திருந்தாலும் ஆட்சியாளரின் இந்த ஒடுக்குமுறை, வழிப்பறி நடவடிக்கையில் போட்ட முதல் தான் மீண்டு கைக்கு வருமா? (ஏதோ ஆங்காங்கே பணம் படைத்த ஒவ்வொருவர் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக வயலிலிருந்து நெல்லை வீட்டுக்குக் கொண்டுவந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.) வட்டிக் கடைகளை அடைத்தாயிற்று. இப்போது என்ன செய்வது? கூட்டுறவு வங்கிகளையும் பண்டகசாலைகளையும் திறந்தார்கள். அங்கே பணம் கொடுக்க மாட்டார்கள். உரமும் பூச்சி மருந்தும் விதையும் தான் கொடுப்பார்கள். அடியுரம் வேண்டும்போது மேலுரம் கொடுப்பார்கள், மேலுரம் வேண்டும்போது அடியுரம் கொடுப்பார்கள். கிடைத்ததைக் குறைந்த விலையில் விற்றுவிட்டு கூடுதல் விலைக்கு வேண்டியதை அதே கடையில் வாங்க வேண்டும். நிலவுச்ச வரம்புச் சட்டம் குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றால் ஏறக்குறைய முற்றிலும் தாழ்த்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களிலும் ஏழைகளே நேரடியாகச் சிறிதும் குத்தகையாகப் பெரும்பாலும் நெல் வேளாண்மையில் ஈடுபட்டு வந்ததால் காலங்காலமாகக் குனிந்து கொடுத்தே பழக்கப்பட்டுவிட்ட அவர்களிடமிருந்து எதிர்ப்பு எதுவும் பெரிதாக உருவாகவில்லை. ஆனால் புன்செய் உழவர்களை ஒருங்கிணைத்த நாராயணசாமி(நாயுடு) தலைமையில் உருவான இயக்கத்தையும் அமெரிக்க ஒற்றன் வினோத் மிசிராவின் தலைமையில் இருந்த இந்திய மக்கள் முன்னணியின் புரட்டல்காரர்கள் உள்புகுந்து அழித்தனர். சிறை சென்ற போராட்டக்காரர்களிடம் இப்போது பணக்கார உழவர்களின் போராட்டம் முடிந்துள்ளது, அடுத்து சிறு குறு உழவர்களின் போராட்டம் தொடங்க வேண்டும் என்று சொல்லி உழவர்களின் அணிச்சேர்க்கையை உடைத்து அழித்தார்கள்.

உழவனுக்குக் கொடுக்கப்படும் இந்தக் குறுகிய காலக் கடனைச் சரியாகப் பத்து மாதங்களில் செலுத்தியாக வேண்டும். இல்லையென்றால் அடுத்த பூ(போகம்)வுக்குப் பயிரிடக் கடன் கிடைக்காது. அப்போது தானே உழவன் வைத்திருந்து விலை ஏறுவது பார்த்து விற்க முடியாது, உரிமம் பெற்ற வாணிகனை வைத்துப் பறித்துக் கொள்ள முடியும்? இந்தச் சூழலிலும் வட்டித் தொழில் அழிக்கப்பட்டுவிட்டதாலும் கந்துவட்டிக்காரரிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து கடன் பெற்றனர் உழவர்கள். நிலைமை இப்படி இருக்க பணம் வைத்திருப்பவர்கள் எப்படி வேளாண்மையில் முதலிட முன் வருவர்?

(தொடரும்)