அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.7.15

தேசியப் பொருளியலைக் காப்பதில் விழிப்புடனும் உறுதியுடனும் இருப்போம்.

இந்திய பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டரசு அண்மையில் குறுந்தொழில்கள் - குடிசைத் தொழில்களுக்கு இருந்த சிறப்புச் சலுகைகளைக் விலக்கிக்கொண்டு பெருந்தொழில்களுடன் போட்டியிட்டு நிலைக்க முடியாத நெருக்கடியை அத் தொழில்கள் சார்ந்த முனைவோருக்கும் தொழிலாளர்களுக்கும் அவற்றோடு தொடர்புடைய பல்வேறு துறை சார்ந்தோருக்கும் உருவாக்கியுள்ளது. இத்தகைய 200 தொழில்களில் 180 தொழில்களுக்கு இச் சலுகைகளை ஏற்கனவே விலக்கி எஞ்சியிருந்த 20 தொழில்களில் இப்போது கைவைத்துள்ளது. தீப்பெட்டி, பட்டாசு போன்ற தென் தமிழ்நாட்டைச் சார்ந்த தொழில்கள் இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் வளங்குன்றிய இப் பகுதி மக்களின் வாழ்வின் அடித்தளம் அழிந்துபோகும் என்ற அச்சம் அம் மக்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது பற்றிய சில செய்திகளை தமிழக மக்கள் முன் வைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.

தமிழக மக்களின் தொழில் முனைவுகளை அழிப்பது என்பது வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டத் தொடங்கியதுமே காந்தி – ஆங்கிலர் கூட்டுத் திட்டமாகிவிட்டது. “விடுதலை”க்கு முன் சென்னை மாகாணத்தில் அமைந்த பேரவைக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தமிழக மக்களின் தொழில் முனைவு ஒழிப்பு நடவடிக்கைகளை அண்ணாத்துரை தன் பணத்தோட்டம் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்(பின்னாளில் அவர் மக்களைத் திசை திருப்பியது வேறு கதை, அவர் நாணயமாகச் செயற்பட்டிருந்தாராயின் இன்று இத்தகைய ஆய்வுரை ஒன்றை நாம் எழுத வேண்டியிருந்திருக்காது).

இந்தப் பின்னணியில் 1980களின் தொடக்க ஆண்டுகளில் இராசத்தான், மத்தியப் பிரதேச அமைச்சர்கள் சிலர் தமிழக சிவகாசிப் பகுதிகளில் நடைபெறும் தொழில்களைப் “பார்வையிட” வந்தார்கள். வந்து திரும்பியவர்கள் சிவகாசியிலும் சுற்றிலும் குழந்தைகளைத் தொழிலகங்களில் கொடுமைப்படுத்துவதாகக் கூக்குரல் எழுப்பினர். இந்திய ஆட்சியாளர்களிடமும் வல்லரசிய நாடுகளிலிருந்தும் நன்கொடைகள் என்ற பெயரில் கூலி வாங்கி வளவாழ்வு நடத்தும் “தன்னார்வத் தொண்டு” நிறுவனங்கள் என்ற பொருந்தாப் பெயர் கொண்ட கூட்டம் இது பற்றிப் பெருங்கூச்சல் இட்டது. இவற்றைச் சாக்காக வைத்து இந்திய பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டரசு 1986இல் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. இதன் அடிப்படையில் ஓர் உணவு விடுதி உரிமையாளருக்கு அவரிடம் வேலை பார்த்த “குழந்தை”த் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்விக்காகவும் மறுவாழ்வுக்காகவும் என்ற பெயரில் தலைக்கு 20,000 உரூவா தண்டம் விதித்தது தமிழக நய மன்றம் ஒன்று. ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பப்படி குழந்தை என்பதற்கான அகவை வரம்பை வரையறுப்பார்கள், அதற்கேற்ப அக் “குழந்தை”களின் செயல்திறன்களை முடக்கிப்போட்டு எதற்கும் உதவாத ஏட்டுக் கல்வி வழங்கத் தம்மால் இயலவில்லை என்றால் சும்மா ஊர் சுத்த விட்டுவிட வேண்டும், அப்படித்தானே. வேலைக்கும் போக முடியாத சட்டப் பின்னணியில் இவர்களுக்குச் சோறு போடுவது யார்? இக் குமுகத்தில் சிறுவர்களை வேலைக்கு விட்டுத்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறதென்றால், அவ்வாறு சிறுவர்கள் வேலைக்குச் சென்று பிழைப்பது தவறு என்று ஆட்சியாளர்கள் கருதுவார்களென்றால் அதற்கு இந்த ஆட்சியாளர்கள்தாம் பொறுப்பே அன்றி பெற்றோரோ தம் வயிற்றுப்பாட்டுக்காக உழைக்கும் சிறுவர்களோ அவர்களுக்கு வேலை வழங்கிப் பாதுகாக்கும் உணவு விடுதி போன்ற சிறு நிறுவனங்களை நடத்துவோரோ அல்லர். அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்சா அபியான்) என்ற பெயரில் குடிமக்களின் வரிப்பணத்தில் பல பத்தாயிரம் கோடிகளை ஒதுக்கி அதனை ஆசிரியர்களுக்குப் பயிற்சி என்ற பெயரில் போக்குவரத்துக்கும் சாப்பாட்டுக்குமாகக் கரியாக்கியது போக எஞ்சியதை தேவையான இடங்கள் என்று பார்க்காமல் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு தேவையில்லாவிட்டாலும் புதிய கட்டடங்களைக் கட்டிக் காசு பார்த்தனர். “குழந்தை”த் தொழிலாளர்களுக்குக் கல்விக்கென்று பணம் ஒதுக்கியிருந்தாலும் அதைப் பயன்படுத்தவில்லை. அதைச் செய்திருப்பார்களென்றால் குழந்தைத் தொழிலாளர் தடை தேவை இருக்காது, ஏனென்றால் நம் நாட்டின் உடனடி தேவை உழைப்பு சார்ந்த கல்வி. அதற்கான கட்டமைப்பை உருவாக்க வக்கற்ற திமிர் பிடித்த, தோல் தடித்துப் போன நம் அதிகாரிகளும் கொள்ளையடிப்பது தவிர வேறெதுவும் மண்டையில் ஏறாத நம் அரசியல் புள்ளிகளும் இருக்கும் கட்டமைப்புகள் பயன்படுவதையாவது ஊக்குவதற்கு மாறாக அவை பயன்படுவதைத் தடுக்கவே செய்துள்ளனர். காலங்காலமாக அடித்தள மக்கள் கல்வி பெறுவதைத் தடுத்துவந்த கூட்டம் வேறு என்ன செய்யும்?

இந்தச் சட்டத்தின் பின்னர் குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கப்பட்ட அகவையைத் தாண்டாதவர்கள் என அதிகாரிகள் குறிப்பிடுவோரை வேலைக்கு வைத்திருப்போர் தண்டம் செலுத்த வேண்டி வந்தது. பெண்கள், அதாவது இவர்கள் மொழியில் பெண் குழந்தைகள் இவர்களுக்காகவே தங்கள் அகவைக்குப் பொருந்தா வகையில் தாவணி அணிய வேண்டியிருந்தது. கெடுபிடிகள் தாங்க முடியாத போது, தொழிலகங்களுக்கு வெளியே செய்ய முடியாத பணிகள், எடுத்துக்காட்டாக, பட்டாசுத் தொழிலில் மருந்துக் கலவைகள் இடித்துச் சேர்ப்பது போன்றவை தவிர்த்த பிற பணிகள் தொழிலாளர்களின் வீடுகளில் செய்யப்பட்டன. இதன் மூலம் விரிந்த பரப்பும் காற்றோட்டமும் உள்ள கொட்டகைகளுக்குள் வீடுகளில் கிடைக்காத கழிவறை போன்ற வசதிகளுடன் வேலை செய்த வாய்ப்பு அவ் விளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. பல்வேறு வசதிகளும் அவற்றுக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களும் கொண்ட தொழிற்சாலைகளாக அங்கிருந்த தொழிலகங்கள் வளர்ந்து உருவாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. அத் தொழில் கட்டமைப்பு உடைந்து சிதைந்து அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு வழியற்ற அன்றாடங்காய்ச்சிகளின் குடிசைகளுக்குள் பதுங்கி ஒடுங்க வேண்டியதாயிற்று. கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல் அரசுக்குத் தெரியாமல் தொழில் நடத்த வேண்டிய அவலம் உருவாகி விட்டது. உரிய கண்காணிப்பு இல்லாததால் அடிக்கடி ஏதங்கள்(விபத்துகள்) ஏற்பட்டு அப்பாவித் தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாகச் செத்துவிழும் கொடிய நிலை உருவாகியிருக்கிறது இன்று.

இத்தகைய ஒரு கொடுஞ்சட்டம் நிறைவேற்றப்பட்டு செயலுக்கு வந்த போது அதனால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஏன் அதை எதிர்க்கவில்லை என்ற ஞாயமான கேள்வி எழுவது இயற்கை. அங்குதான் வருகிறார்கள் நம் “தன்னார்வத் தொண்டர்கள்”. உள்நாட்டு அரசும் வல்லரசு நாடுகளின் தொழில்துறைப் பூதங்களும் ஒன்றிய நாடுகளவையின் பல்வேறு கிளை அமைப்புகளும் அள்ளி வீசும் கணிசமான எச்சில் காசில் உயர்தர உடைகளும் நுனிநாக்கு ஆங்கிலமுமாகத் திரியும் ஒரு கூட்டம் குமுக ஆர்வத்துக்கும் மனித நேயத்துக்கும் தாங்கள்தான் உடமையாளர்கள் என்பது போல் இங்கு பெரும் பரப்பல் கூச்சல் இடுவார்கள். ஓய்வு பெற்ற உயர் பதவியாளர்களும் இவர்களில் கணிசமானோர் உண்டு. இதற்குப் பக்க மேளம் கொட்டுவது தங்கள் மேதாவித்தனத்துக்கு அடையாளம் என்று படித்த ஒரு கூட்டம் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் மேடேயேறிக் கூக்குரல் இடும். இதைப் பார்த்து இந்தத் தொழில்களை நடத்தும் குறுந்தொழில், குடிசைத்தொழில் முனைவோரும் வயிற்றுப்பாட்டுக்கு முழுக் குடும்பமும் படாத பாடுபடும் அன்றாடங்காய்ச்சிக் கூட்டமும் கூனிக் குறுகி யார் என்ன கொடுமை செய்தாலும் மூச்சுவிடவும் அஞ்சி திருடனைத் தேள் கொட்டிய ஒரு மனநிலையில் ஒடுங்கிவிடுகிறார்கள். பாட்டாளிகளுக்காகவே பிறந்து அவர்களுக்காகவே உயிர்வாழ மூச்சு விட்டுக்கொண்டிருப்பதாகப் பசப்பித் திரியும் பொதுமைக் கட்சித் “தோழர்கள்” பட்டினிக்குள் வீழ்த்தப்படும் இரக்கத்துக்குரிய இந்த ஏழைகளுக்கு உதவியாக ஒரு சொல் கூடக் கூறியதில்லை.

இந்தக் கூலிப்படைக் கும்பலின் பணி அடிப்படை உண்மைகளை மறைத்து அரைகுறை உண்மைகளைக் கூறி அடி மட்டத்துத் தொழில்முனைவோரையும் அவர்களைச் சார்ந்திருக்கும் கணக்கற்ற அன்றாடங்காய்ச்சித் தொழிலாளர்களையும் குமுகத்தில் தங்கள் உண்மை நிலையையும் தம் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வுக்கு ஆளாக்கி எதிர்த்துப் போராட வேண்டும், போராடுவதற்கான ஞாயமான காரணங்கள் உள்ளன என்ற சிந்தனையே தோன்றாமல் செய்வதாகும். எடுத்துக்காட்டாக தோல் பதனிடும் தொழிலை எடுத்துக்கொள்வோம். இங்கு பதனிடப்படும் தோலில் செய்யப்பட்ட செருப்பை நம்மில் எத்தனை பேர் அணிகிறோம்? தோலில் செய்யப்பட்ட பைகளையோ மேலாடைகளையோ நம்மில் யாராவது பயன்படுத்துகிறோமா? அனைத்தும் வெளிநாட்டு மேனா மினுக்கிகளுக்குத்தானே பயன்படுகின்றன? இவ்வாறு பதப்படுத்திய தோலையும் பிற பொருட்களையும் ஏற்றுமதி செய்து ஆதாயம் காணும் இடத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் வடக்கத்தி பனியாக்கள்தாமே! அவர்களுக்காகவே இந்திய பனியா அரசு ஏம(ரிசர்வு) வங்கி மூலம் உரூபாய் மதிப்பைத் தாழ்த்திப் பணி புரிகிறது. இது இங்கு செயல்படும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களைக் கொழுக்க வைக்கும் புரவலர்களான இந்திய பனியா அரசு, வெளிநாட்டுப் பெருமுதலைகளின் நலன்களுக்காக உள்நாட்டு சிறு – குறுந்தொழில் முனைவர்களை அரக்கர்களாகக் காட்டிப் பெருங்கூச்சல் போடுவர். ஏற்றுமதியே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று உண்மைக்குப் புறம்பான ஒரு கோட்பாட்டை முன்வைத்து இந்த நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டி குற்றுச்சூழலை அழித்து நிலத்தைப் பாழாக்கி அளவிறந்த மின்சாரத்தை வழங்கி இந் நாட்டின் மிகப்பெரும்பான்மை மக்கள் வாழும் பரப்பை நரகமாக்கி வைத்துள்ளனர். நம் நாட்டில் வேளாண்மைக்குத் தேவைப்படும் நீரின் அளவுக்குக் குறையாமல் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குச் செலவாகிறது. உள்நாட்டு மக்களுக்கும் அவர்கள் நுகர்வு சார்ந்த தொழில்களுக்கும் தேவைப்படுவதை விட மிகுதியாக மின்சாரம் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குச் செலவாகிறது. இத் தொழிலகங்கள் வெளியிடும் நச்சுகள் பற்றிக் காட்டுக்கூச்சல் போடும் இவர்கள் ஏற்றுமதிக்காகவே நம் சூழலும் நீர், மின்சார வளங்களும் நிலக்கரி இரும்பு, கல், ஆற்று மணல், கடற்கரை மணல், செம்மண் என்று மீட்க முடியா கனிம வளங்களும் பறிபோகின்றன என்ற உண்மையை மறைக்கின்றனர். இதன் பின்னணியில் வல்லரசியத்தின் இன்னொரு நோக்கமும் செயல்படுகிறது. அவ்வப்போது அவர்கள் மாசு நீக்கவென்று உருவாக்கும் கருவிகளை இங்கு இறக்குமதி செய்யக் கட்டாயப் படுத்துவதாகும் அது.

நமக்குத் தேவைப்படும் அனைத்து மூலப்பொருள்களும் நம் நாட்டில் உள்ளன. எனவே ஏற்றுமதியோ இறக்குமதியோ தேவையில்லை. உள்நாட்டு, வெளிநாட்டுத் தரகர்கள் சிலருக்கே இதனால் பயனுண்டு. உள்நாட்டில் வேளாண்மை. போக்குவரத்து, கல்வி மற்றும் எண்ணற்ற கட்டமைப்புகளை உருவாக்கவும் பின்னர் அவற்றை எவ்விதத் தொய்வுமின்றிப் பராமரிக்கவும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் வற்றாத வேலைவாய்ப்புகள் உள்நாட்டில் உண்டு. எனவே ஏற்றுமதியும் இறக்குமதியும் இருந்தால்தான் நல்வாழ்வு என எண்ணாது உள்நாட்டுத் தொழில்கள் மீது இந்திய பனிய – பார்சி – வல்லச்சிய கூட்டரசு நிகழ்த்தும் தாக்குதல்களை மனத்தளர்ச்சியும் குற்றவுணர்வும் இன்றி எதிர்த்துப் போராடுவோம். இந்தக் கூலிப்படைகளின் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவோம்.

இவ்வாறு குழந்தைத் தொழிலாளர் பெயரில் இல்லாத சிக்கலைக் காட்டி வளர்ந்து வந்த தொழில்களைச் சிதைத்து அவற்றின் பொருளியல் மற்றும் கட்டமைப்பு, அதாவது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரே கூரையின் கீழ் செயல்படுவது கலைக்கப்பட்டதால் அவர்கள் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், இந்த இடைக்காலத்தில் அத் தொழில்துறைகளில் பெருந்தொழிற்கட்டமைப்புகளை இந்தியத் தேவைகளையும் ஏற்றுமதிக் கேட்புகளையும் நிறைவேற்றும் அளவுக்கு தாங்கள் உருவாக்கிவிட்டதால் 1986இல் நிகழ்த்தப்பட்ட முதல் தாக்குதலுக்கு அடுத்து இந்த இறுதித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் இந்திய பனியா – பார்சி – வல்லரசிய கூட்டரசினர். ஏற்கனவே சிறப்புரிமை பறிக்கப்பட்ட 180 தொழில்களிலும் பெரும்பாலானவை அயல் மாநிலஙங்ளைச் சார்ந்த உள்ளூர் தொழில்முனைவோருக்குரியவை என்பதும் விளங்குகிறது. இந்தச் சூழலில் இன்றும் நாம் தயங்கி, மயங்கி, கலங்கியிருந்தோமாயின் நமக்கு எதிர்காலமும் இல்லை, மீட்சிக்கு வழியும் இல்லை.

ஆட்சியாளர்களுக்கும் இந்தக் கூலிப்படைக்கும் ஏதோ முரண்பாடு இருப்பது போல் அவ்வப்போது பாய்ச்சல் காட்டுவார்கள். முன்பு இந்திரா ஆட்சிக் காலத்தில் நடந்தது போல் இப்போது மோடி ஆட்சியிலும் அத்தகைய நாடகம் நடக்கிறது, தேர்தலுக்கு முன் தன் நாட்டுக்கு வர மோடிக்கு அமெரிக்கா தடை விதித்து நடித்தது போல.

தமிழகத் தேசியப் பொருளியலுக்கு எதிராக நடக்கும் இந்தக் கருவறுப்பு இந்தியாவின் அனைத்துத் தேசிய மக்களிடையிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, மதம், எல்லை, நீர்வளப் பங்கீடு போன்ற சிக்கல்களை உருவாக்கி அத் தேசிய மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி வைத்துள்ளது ஆளும் கும்பல். எனவே சரியான திட்டமிடலுடன் அணுகினால் இந்திய மாநிலங்கள் அனைத்திலுமிருந்தும் நம் போராட்டங்களுக்குத் துணை திரட்டலாம். தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் முன்னணிப் படையாகச் செயற்படும்.

பின்குறிப்புகள்:

1. குழந்தைத் தொழிலாளர் பற்றி எமது இயக்க இதழான பொருளியல் உரிமையின் முதல் இதழில்(1997 சனவரி – பெப்ருவரி உரிமை 1 – முழக்கம் 1) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு – சில கேள்விகள் என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளோம். kumarimainthan.blogspot.com என்ற இணைய பக்கத்திலும் பார்க்கலாம்.

2. 14 அகவைக்கு எய்தியவர்கள் பெற்றோருக்கு உரிய மரபுத் தொழில்களில்(பள்ளி நேரத்துக்குப் பின்னர்) பணிபுரியலாம் என்ற ஒரு திருத்தத்தை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தில் கொண்டு வர மோடி அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது 1950களில் ஆச்சாரியார் எனப்படும் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது கொண்டு வந்து, குலக் கல்வித் திட்டம் என்று அனைவராலும் தூற்றப்பட்டு அவரது பதவி விலகலுக்குக் காரணமான சட்டம் மறுபிறவி எடுத்து முழு இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்படுவதே இது ஆகும். பள்ளிக்குப் போகும் பிள்ளைகளைப் பொறுத்தவரை இதுவென்றால் பள்ளிக்குப் போகாமல் உழைத்தால்தான் வாழ்வு என்ற நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் எமது கேள்வி.

கல்வி என்பது எழுத்தறிவு மட்டுமல்ல, பிறந்தது முதல் சாவு வரை நாம் அறிந்துகொள்ளும் அனைத்தும் கல்விதான். கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நம் நாட்டில் இயங்குபவை அனைத்தும் எழுத்தறிவை மட்டுமே புகட்டுகின்றன, கல்வியை அல்ல. அதனால்தான் இன்று புற்றீசல் போல் முளைத்து நிற்கும், கல்வி நிலையங்கள் எனப்படுபவற்றிலிருந்து வெளிவந்தோர் எதற்கும் தகுதியற்றோராகத் திகைத்து நிற்கின்றனர். உடலுழைப்பே இழிவு என்ற இந்தியக் குமுகியல் கோட்பாட்டிலிருந்தும் ஒட்டுண்ணி, குறிப்பாக ஆள்வினைப் பதவிகளில் இருந்து அனைவர் மீதும் அதிகாரம் செலுத்தி சாதிய ஒடுக்குமுறையாக அதை மாற்றிய பார்ப்பனரை அகற்றவென்று கல்வி முறையைப் பற்றிய எந்தக் கண்ணோட்டமும் இன்றி உருவாகி, விரிவாகி இன்று எங்கு போவதென்று தடுமாறி நிற்கிறது கல்விக் கட்டமைப்பு. எனவே அவரவர் அகவைக்கேற்றவாறு செய்தொழிலோடு இணைந்த கல்விக் கட்டமைப்பை உடனடியாக அரசு உருவாக்க வேண்டும். அதே வேளையில் சிறாரை வேலைக்கு வைத்திருக்கும் தொழிலகங்களோடு இணைந்த கல்விக் கூடங்களை உடனடியாக உருவாக்கி தரமான கல்வியை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு அவர்களின் வேலை நேர நீட்சியையும் நேரத்தையும் வரையறுக்க வேண்டும். இரவும் பகலும் மாற்று ஆசிரியர்களை அமர்த்திக் கற்பிக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும் தொழில்களின் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்களை உருவாக்கி அவர்களைக் கொண்டு தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

பொதுக் கல்வியைப் பொறுத்த வரை அகவைக்கேற்ற உடலுழைப்பு இணைந்த கல்வியை வரையறுத்து அத்தகைய உடலுழைப்பு உள்ள தொழில் கட்டமைப்புச் சூழலில் மட்டும் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும். சில நாடுகளில் கட்டாய படைப்பயிற்சி இருப்பது போல் உடலுழைப்பு சார்ந்த கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளியல் நிலை, சாதி, சமய, மொழி, இன, பால் வேறுபாடின்றி கட்டாயமாக்க வேண்டும். உடலுழைப்பை இழிவாக வகைப்படுத்திய நம் பண்டைப் பண்பாட்டுக் குற்றத்தைத் திருத்த இது ஒன்றே வழி. எல்லாப் பண்டங்களையும் போல் குடிமக்களையும் ஏற்றுமதிப் பொருளாக்கி விட்ட மனித வள ஏற்றுமதி என்ற இழிவான கோட்பாட்டுக்குத் துணையாக கல்வித்துறைக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை என்று பெயர் கொடுத்த கயமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். பணமும் பதவியும் செல்வாக்கும் உள்ள சிலரின் பிள்ளைகளுடன் விரல் விட்டு எண்ணத்தக்க வேறு சிலரும் வெளிநாடு செல்ல, அல்லது உள்நாட்டிலிருந்து கொண்டு வெளிநாட்டினர்க்குப் பணிபுரியவும் அதை நம்பி ஏழை பாழைகளும் நிலபுலன்களை விற்றும் கடன்பட்டும் தரமற்ற கல்வி நிலையங்களில் தங்களுக்கு ஆர்வமில்லாத படிப்புகளை மேற்கொண்டு எதிர்காலத்தைப் பறிகொடுத்து நிற்பதை முடிவுக்குக் கொண்டு வருவோம். கல்வித் கூடங்கள் அனைத்தையும் அரசின் பொறுப்பிலும் அவற்றின் தரத்தையும் செயல்பாட்டையும் மக்களின் கண்காணிப்பிலும் வைப்போம்!

வருமான வரியை ஒழித்து முதலீட்டுக்கான முதல் தடையை அகற்றுவோம்!

தொழில் தொடங்க உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றிய அளவில் விரிவடையப் போராடுவோம்!

புதிய தொழிலகள் தொடங்கும் உரிமை உள்ளூர் முனைவோருக்கு மட்டுமே கிடைக்கப் போராடுவோம்!

ஏற்றுமதி – இறக்குமதி சார்ந்த போருளியல் கொள்கையை இந்திய அரசு கைவிடும் வரை இடைவிடாது போராடுவோம்!

குழந்தைத் தொழிலாளர் அகவை வரம்பை 12 ஆகக் குறைக்கப் போராடுவோம்!

சிறுதொழில்கள், குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களுக்கு இப்போதுள்ள சலுகைகளும் சிறப்புரிமைகளும் தொடர விட்டுக்கொடுப்பில்லாமல் போராடுவோம்!

இந்திய நாணய மதிப்பை உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்புக்கு இணையாக படிப்படியாக உயர்த்த வேண்டிப் போராடுவோம்!


தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம், மதுரை.

தொடர்புக்கு: செல்பேசிகள் 9790652850, 9443962521, 9789304325

"கட்டாய மதமாற்றம்"

கட்டாய மதமாற்றம் என்ற கூக்குரல் நாலாபக்கமும் இன்று ஒலிக்கிறது. ‘இந்து’ மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் பலபட்டரைச் சமயத்தில் பிற சமயங்களைப் போல் ஒரு திட்டவட்டமான மெய்யியலோ வழிபாட்டு முறையோ சமயக் கட்டமைப்போ தெய்வமோ கிடையாது. அதன் கட்டமைப்பைப் பெரும்போக்கில் இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று பார்ப்பனரைக் கொண்டு சமற்கிருதத்தில் மக்களுக்கும் பூசகருக்கும் புரியாத மந்திரங்களை முழங்கி மக்களுக்குப் பயன்படத்தக்க எண்ணற்ற பொருள்களை வேள்வி என்ற பெயரிலும் வகைவகையான முழுக்குகள் என்ற பெயரிலும் அழித்தும் திருவிழாக்கள் என்ற நிகழ்ச்சிகளில் தேர் என்ற பெயரில் பல நூறு தன்கள் மரக்கட்டைகளாலான ஒன்றில் சாமி என்ற ஒரு பொம்மையை வைத்து சாதியடிப்படையில் முதல் ‘வரிசை’(மரியாதை) இரண்டாம் வரிசை என்று மக்களைப் பாகுபடுத்தி ஊரைச் சுற்றி இழுத்துவிடும் குழந்தை விளையாட்டைக் கொண்டது. இன்னொன்று மக்களின் வட்டாரம், தொழில், குமுக அடுக்கு போன்ற அடிப்படைகளில் அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற வகையில் வடிவம் பெற்ற விழாக்களில் தாங்கள் தெய்வம் என்று வழிபடும் உருவையோ பிற பொருள்களையோ தங்கள் தாய் மொழிகளில் வாழ்த்தி வழிபடுவதாகும். இவற்றில் முதலாவதைப் பெருந்தெய்வ வழிபாடென்றும் இரண்டாவதைச் சிறுதெய்வ வழிபாடென்றும் வகைப்படுத்தியுள்ளனர். வழிபாட்டினர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் வகைப்பபாட்டைத் தலைகீழாக்க வேண்டும். பெருந்தெய்வ வழிபாடென்பதை ஆகம வழிபாடென்றும் குறிப்பிடுவர். தெய்வஙங்ளின் எண்ணிக்கை நம்மைத் திகைக்க வைத்திடும் அதனால்தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற கூற்று உருவாகியிருக்கிறது.

. இந்த இரு முறைகளுக்கும் இன்று உள்ள அடிப்படையான வேறுபாடு முதலதில் உயிர்ப்பலி கிடையாது, இரண்டாவதில் உண்டு என்பதாகும். அடுத்த வேறுபாடு முதலதில் தெய்வம் மக்களிடம் பேசுவதில்லை, பார்ப்பனப் பூசகன் இடைத்தரகனாகச் செயற்படுவான். இரண்டாவதில் தெய்வங்கொண்டாடி என்ற சாமியாடி தன் மேல் சாமி ஏறியதற்கு அடையாளமாக தன்னிலை மறந்தவன் போன்று ஆடும் நிலையில் மக்கள் தங்கள் குறைகளைக் கூறும் போது அதற்கான ஆறுதலையோ அச்சுறுத்தலையோ செய்து தனக்கு இன்னின்ன நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டுமென்பான். அது போல குறிப்பிட்ட வேண்டுதல்களுக்கு ஒவ்வொரு சாமிக்கும் குறிப்பிட்ட நேர்ச்சைகள், எடுத்துக்காட்டாக, பிள்ளைப் பேற்றுக்கு தொட்டிலில் பொம்மை செய்து தொங்கவிடுதல் போன்றவை வரையறுக்கப்பட்டுள்ளன. 


பெருந்தெய்வக் கோயில்களில் இதே வேண்டுதலுக்கு ஒரு தனிப் பூசையை இறைவனுக்கு நடத்த வேண்டுமென்று பார்ப்பனப் பூசகன் சொல்லி சில ஆயிரங்களுக்கு ஒரு மதிப்பீடு வழங்குவான். பணத்தை அவனிடம் ஒப்படைத்தால் பூசை நடத்தப்படும். இவை எல்லாம் பலிக்குமா என்று கேட்கிறீர்களா? அப்படிப் பலிப்பதாயிருந்தால் ஊருக்கு ஊர் கருவூட்டும் சிறப்பு மருத்துவர்கள் இவ்வளவு விரிவாகக் கடை நடத்துவார்களா? இயற்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் போன்று மகப்பேறும் தற்செயலும் விதிகளும் இணைந்த ஒன்றே, ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் ஒன்றுகூட வேண்டுமென்பது விதியென்றால் அந்த இணைவு ஒரு தற்செயல் நிகழ்வு. முன்பு இந்த இணைவு ஆண் – பெண் புணர்ச்சியால் நிகழ்ந்தது என்றால் இன்றைய மருத்துவத்தில் புணர்வு இன்றி கூடுதல் வாய்ப்பைப் பெறுகிறது. இதில் நம் தெய்வங்களின் பங்கு எதுவும் இல்லை. இது நம் இருவகைத் தெய்வங்களுக்கும் கடவுள் என்ற கருத்துருவத்துக்குமான கேள்வியினுள் நம்மை இழுத்துக்கொண்டுவிடுகிறது. இதினுள் இப்போது நுழையாமல் மதமாற்றம் என்ற சிக்கல் பற்றிய அலசலைத் தொடர்வோம்.


இந்த இரண்டு வழிபாடுகளுக்கும் இடையில் குறிப்பிட்ட வகுப்பு வேறுபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. அரசர்கள், அவர்களுக்குக் கல்வியும் அறிவுரையும் வழங்குவோருமாகத் தம்மை வைத்துக்கொண்ட பூசகர்களான பார்ப்பனர்களுடன் சற்சூத்திரர் எனத் தங்களைக் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிவனிய வெள்ளாளர்களும் ஆகமக் கோயில்களில் செல்வாக்குள்ளோராகவும் வைசியர்கள் எனப்படும் வாணிகர்களும் உடலுழைப்பாளர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரும் ஊர்க்கோயில்களை நாடுவோராகவும் இருந்தனர். ஆகமக் கோயில்கள் வருண அடிப்படையில் அமைந்தவை. பார்ப்பனப் பூசாரியும் அவர்களின் ஒட்டுச் சாதியும் கோயில் பரத்தைகளுமான தேவதாசிகளும் மட்டும் மூலத்தானம் எனப்படும் கருவுறைக்குள் நுழையலாம். அரசர்கள், சிற்றரசர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் போன்ற ‘சத்திரிய’ வருணத்தார் மட்டும் மண்டபம் வரை நுழையலாம். வைசிய வருணத்தவர் உள் பிரகாரம் எனப்படும் உள்சுற்றைத் தாண்டிச் செல்ல முடியாது. அவர்கள் மூலவர் எனப்படும் கருவறைத் தெய்வப் படிமத்தைப் பார்க்க முடியாதபடி கொடிமரமும் பலிபீடமும் மறைத்திருக்கும். சூத்திரர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் மதிள் சுவருக்கு வெளியே வாயிலில நின்று கொடிமரத்தையும் நந்தி, கருடன் போன்ற இறைவனின் ஊர்தியின் பின்புறத்தையும் பார்த்து வழிபடுவதோடு மனநிறைவடைய வேண்டியதுதான். ஐந்தாம் வருணமென வகைப்படுத்தப்பட்டிருக்கும் பஞ்சமர்கள் தேரோடும் வீதிக்குள் கூட நுழைய முடியாது. ஊர் எல்லையில் நின்று கோபுரத்தைப் பார்த்து கையைத் தலைமேல் வைத்து நிறைவுகொள்ள வேண்டியதுதான்.


ஆகமக் கோயில்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் உயிர்ப்பலி கொள்ளாதவையல்ல. அம்மண சமயம் வரும் வரை பலி ஏற்றவைதாம். முருகன் உயிர்ப்பலி ஏற்றதைத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அதன் அடையாளமாகத்தான் அனைத்து ஆகமக் கோயில்களிலும் பலிபீடம் நிறுவப்பட்டு அதில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமத்தில் தோய்த்துப் பலிபீடத்தில் குருதியின் குறியீடாகப் பிழிகிறார்கள். இந்தத் தெய்வங்களை வழிபட்ட மக்கள் செல்வத்திலோ செல்வாக்கிலோ மேம்பட்ட காலங்களில் அவற்றின் வழிபாட்டை ஆகம வழி சார்ந்ததாக ஆக்கிக் கொண்டனர் என்பதே உண்மை.

இந்தக் கட்டமைப்பில் மேலிரண்டு வகுப்புகளுக்கும், அதாவது அரசர்களுக்கும் பார்ப்பன அமைச்சர்களுக்கும் முரண்பாடுகள் முற்றும் காலங்களில் இங்கு அயல் மதத்தவரான அயலவர்கள் அரசர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளனர். பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கொலு மண்டபத்தில் முகம்மதிய அறிவுரையாளர்கள் இருந்துள்ளதாக கே.கே.பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். அயல்நாட்டு முகம்மதியர்களின் வலிமையை அறியும் வாய்ப்புடைய இடத்தில் இருந்த பார்ப்பனர்கள் முதலில் மதம் மாறினர். இதற்குச் சான்றாக அய்யூர் இ.அப்பாசு மந்திரி என்ற பொறியாள நண்பர் கூறிய செய்தி உள்ளது. நாகூர் தர்காவிலுள்ள பூசகர்கள் அய்யங்கார்கள் என்றும் அவர்கள் தங்கள் பழைய சாதி உறவுகளை இன்றும் பேணுகின்றனர் என்றும் அவர் கூறினார். மதுரையில் சில முகம்மதியப் பெரியோர்கள் அன்றாடம் நடை பயிலும் சாக்கில் மீனாட்சியம்மன் கோயிலை வலம் வருகின்றனர் என்று சில ஆண்டுகளுக்கு முன் பெரியவர் ஒருவர் கூறினார். நெல்லை மாவட்டத்தின் தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தின் கொங்கராயக் குறிச்சி வட்டாரங்களிலுள்ள முகம்மதியர்கள் சிவனிய வெள்ளாளர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று ஒரு பெரியவர் கூறினார். இவர்கள் கட்டில்தான் நெல்லையில் செயல்படும் முசுலிம் அனாதை நிலையம் உள்ளது. அவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை.


பாமினிப் பேரரசு உடைந்து உருவான ஐந்து சுல்தானியங்களில் இரண்டின் சுல்தான்கள் மதம் மாறிய பார்ப்பனர்கள். விசயநகரப் பேரரசை அமைத்த அரிகரனும் புக்கனும் பதவிக்காக மதம் மாறி தில்லிப் பேரரசரிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். தெற்கே ஒரு கலகத்தை அடக்க வந்த அவர்கள் இங்கே வித்தியாரண்யர் என்ற பார்ப்பனரின் அறிவுரையால் புகுந்த மதத்திலிருந்து வெளியேறியவர்கள். அவர்களின் நோக்கம் முழுமையாக முகம்மதியத்தை எதிர்ப்பதில்லை. அரசராவது முதன்மை நோக்கமென்றால், அந்த வட்டாரத்தில் வேதங்களையும் சாதியத்தையும் அம்மணர்களையும் எதிர்த்து தன் அக்காள் கணவனான அம்மண அரசனைக் கொன்று பதவியேற்ற பார்ப்பனனான பசவன் என்பவன் உருவாக்கிய வீர சிவனியம் எனப்படும் லிங்காயதம் என்ற சமயம் வளர்ந்துவந்ததுடன் ஒடுக்கப்பட்ட மக்களாகிய சக்கிலியர்கள் தோல் தொழிலின் வளர்ச்சியால் வலிமை பெற்று ஓர் அரசையும் அமைத்த காலகட்டமாகும் அது. அதனால் முகம்மதியத்தை எதிர்ப்பதை விட ‘இந்து’க்களுள் பார்ப்பனிய மேலாளுமையை நிலைநிறுத்துவதாகவே இருந்தது அவர்களின் நோக்கம். விசயநகரத்தார் அவ்வப்போது முகம்மதிய அரசர்களுடன் கூட்டணி சேரத் தயங்கியதில்லை.


இவ்வாறு மதம் மாறிய மேல் சாதியினர் தாங்கள் புதிதாகப் புகுந்த சமயத்தின் வலிமையைப் பெருக்குவதற்காகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களைத் தம் புதிய சமயத்தினுள் இழுத்தனர். அப்படி மாற்றப்பட்டவர்கள்தாம் லெப்பைகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேல் சாதியினர் மரைக்காயர்கள் என்றும் இராவுத்தர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். 1970களில் நான் கடையநல்லூரில் இருந்த போது இராவுத்தர்களுக்கென்றும் லெப்பைகளுக்கென்றும் தனித்தனி பள்ளிவாசல்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இங்குள்ள லெப்பைகள் அனைவரும் நெசவாளர்கள். புளியங்குடி, கடையம், மேலப்பாளையம், பகுதிகளிலும் குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலோரும் லெப்பைகள்தாம். குமரி மாவட்டத்தின் ஒரு கோடியில் புகழ் பெற்ற பள்ளம் துறைக்கு அருகிலுள்ள ஒரு முகம்மதியக் குடியிருப்பின் பெயர் குறுஞ்சாலியன் விளை. பள்ளர்களில் சாலியப் பள்ளர்கள் எனப்படுவோர் நெசவாளர்களாகும். குறுஞ்சாலியன்விளைக்குச் செல்லும் பேருந்துத் தடங்களில் ஒன்றில் அமைந்துள்ள தெங்கம்பதூரில் நெசவுத்தொழில் செய்யும் சாலியப் பள்ளர்கள் இருப்பதும் அவர்களை அடுத்து சாலைக்கு இப் புறம் நெசவுத்தொழில் செய்த முகம்மதியர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான முகம்மதியக் குடியிருப்புகளின் வீதிகளும் நெசவுக்கான பாவு ஆற்றும் வகையிலேயே அமைந்துள்ளதைக் காணலாம். இவர்களைத் தவிர தோல் பதனிடும் தொழிலில் கூட பெரும்பாலும் தமிழகத்தில் முகம்மதியர்கள் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சவளியும் தோலும் தமிழகத்தில் ஏற்றுமதிப் பொருள்கள், அயல்நாட்டு முகம்மதியர்கள் கடல் வாணிகத்தில் முன்னணியில் உள்ளவர்கள் என்பதோடு இங்கு உடலுழைப்போரை இடங்கையினர் என்று ஒதுக்கி ஒடுக்கி வைத்திருந்த சூழலில் மதம் மாறிய மேற்சாதியினருடன் அயல் முகம்மதியரும் இணைந்து இந்த மத மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மத மாற்றத்தால் ‘இந்து’க்களின் இழிவுபடுத்தல்களிலிருந்து விடுபட்டார்களையன்றி முகம்மதியத்தினுள்ளும் முழுமையான சமத்துவம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பட்டாணி என்ற பொதுப் பெயரில் அறியப்படும் அயல்நாட்டு முகம்மதியர்கள் மிகக் குறைவு. வடக்கிலோ அவர்கள் மிகுதி. அவர்கள்தான் பனியாக்களான மார்வாரி – குசராத்திகளின் உண்மையான போட்டியாளர்கள். அவர்களின் வலிமையை உடைப்பதும் வெளியேற்றுவதும்தான் குசராத்தி பனியாவான காந்தியின் குறிக்கோளாக இருந்தது. எஞ்சியவர்களின் வலிமையை உடைப்பதைத்தான் குசராத்தியான மோடியின் அரசின் பின்னணியில் ‘இந்து’க் குடும்ப(பரிவார்) அமைப்புகள் செய்கின்றன.


நாயக்கர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக, அரசி மங்கம்மா, திருமலை ஆகியோரின் காலத்தில் அவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான முரண்களால் ஐரோப்பாவிலிருந்து மதம் பரப்ப வந்த கிறித்துவ மதகுருக்களுக்கு மதிப்பளித்துப் பாதுகாப்பும் வழங்கியிருக்கிறார்கள். முகம்மதியர்களின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் அவர்களின் உதவி தேவை என்று கருதியிருக்கக் கூடும். வேணாட்டரசர்கள் ஐரோப்பியர்களுக்கு அஞ்சியிருக்கின்றனர். குமரி மாவட்டத்தின் ஆசாரிபள்ளம் என்ற ஊரிலுள்ள செக்காட்டிகளான வாணிகர்கள் ஆண்டு தோறும் அரசுக்குச் செய்ய வேண்டிய ஊழியத்தை(இலவயமாக வழங்கப்படும் பண்டங்கள்) ஓர் ஆண்டில் ஏதோவொரு காரணத்தால் செலுத்தத் தவறிவிட்டதால் அரசனின் சீற்றத்திலிருந்து தப்புவதற்காக போர்ச்சுக்கீசியரிடம் மதமாற்றம் பெற்றுத் தப்பியுள்ளனர். மார்த்தாண்ட வரமன் என்பவன் தன் மாமனுக்குப் பின் அவனது மகன்களுக்குச் செல்ல வேண்டிய அரசுரிமையைக் கைப்பற்ற நினைத்த போது சாணார்களின் ஊர்த்தலைவர்களான 39 நாடான்களில் இருவர் தவிர அனைவரும் உதவ மறுத்துவிட்டனர். இறுதியில் அரசனின் மகன்களைக் கொன்று ஆட்சியமைத்த பின் அவன் அந்த நாடான்களின் அதிகாரத்தைப் பறிக்க முற்பட்டான். அதிலிருந்து தப்ப மேற்கு வட்டங்களிலுள்ள நாடான்களில் ஏறக்குறைய அனைவரும் கத்தோலிக்கத்துக்கு மாறித் தம் சொத்துகளைக் காப்பாற்றிக்கொண்டனர். குமரி மாவட்டம் தொடங்கி இராமநாதபுரம் கடற்கரை வரை உள்நாட்டில் அரசர்கள் கொடுமைகளாலும் கடல் வழியாக முகம்மதியர்களின் சூறையாடல்களாலும் அல்லலுற்ற மீனவர்களுக்கு, போர்த்துக்கீசிய அரசர்களின் குடிமக்களானால் அவர் ஆயுதங்களும் பாதுகாப்பும் வழங்குவார் என்ற உறுதி மொழியின் பெயரில் மதம் மாறியிருக்கின்றனர். ஒரே நாளில் 3500 பேர் கத்தோலிக்கத்தைத் தழுவியதாக கே.கே.பிள்ளையவர்கள் தெரிவிக்கிறார். குமரி மாவட்டத்தில் நாடார்கள் கிழக்கு வட்டங்களில் ஓரளவும் மேற்கு வட்டங்களில் பெருமளவிலும் மதம் மாறியுள்ளனர். கிழக்கே அரசர்களின் கெடுபிடிகளாலும் கல்வி வாய்ப்பு போன்றவற்றாலும் மதம் மாறியுள்ளனர். ஆனால் மேற்கு வட்டங்களில் நாயர்கள், குறுப்புகளின் கொடுமைகளிலிருந்து தப்பவே மாறியுள்ளனர். ஆங்கிலராட்சிக் காலத்தில் குமரி மாவட்டத்திலும் தொட்டுக்கிடக்கும் நெல்லை மாவட்டத்திலும் ஊர்த் தலைவர்களான நாடான்களல்லாத சாணார்கள் பெருமளவில் மதம் மாறியுள்ளனர். அவர்களுக்கு கல்வியளித்து ஆங்கில மதகுருக்கள் ஆற்றியுள்ள பணிகள் போற்றத்தக்கன. குறிப்பாக, கால்டுவெல் ஐயர் இது குறித்து இங்கிலாந்திலுள்ள தலைமையகத்தினரின் உதவியைப் பெறுவதற்காக எழுதியுள்ள திருநெல்வேலிச் சாணார்கள் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும். நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் சீர்திருத்தக் கிறித்துவத் திருநெல்வேலித் திருமண்டலத்தால் நடத்தப்படும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டும் 300க்கு மேல் உள்ளன. ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுவிக்கவென்று அவர் பணியாற்றிய காலத்தில் களத்திலிறங்கி இயக்கங்கள் நடத்திய வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டியடிகளும் இராமலிங்க வள்ளலாரும் தங்களை கடவுளின் தோற்றரவு என்றோ ஒப்பற்ற தெய்விக ஆற்றல் பெற்றவர்கள் என்றோ காட்டவும் மக்களுக்குச் சோறு போடவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஒரு துளியளவு கூட கல்விக்கோ தொழில் வளர்ச்சி குறித்தோ எடுக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவருக்கும் பின் கேரளத்தில் ஈழவர்களுக்காகச் செயல்ப்பட்ட நாராயண குரு கல்வி நிலையங்கள் நிறுவியும் தகுந்த மாணவர்களை அயல்நாடுகளுக்கு விடுத்தும் ஆற்றிய பணிகள் அவர்களை அம் மாநிலத்தில் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்த்துவிட்டிருக்கினறன. அவரது மாணவர்களான குமரன் ஆசான் போன்றோரின் உயர்தரச் செயற்பாடுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட தமிழ்நாட்டுச் சீர்திருத்தர்களின் பெயரைக் கூறிக்கொண்டு அன்றும் இன்றும் திரிந்த, திரிகின்றவர்களின் செயற்பாடுகள் வெட்கித் தலைகுனியத் தக்கவை.


முகம்மதியம் போலவே கிறித்துவத்துக்கு, குறிப்பாக கத்தோலிக்கத்துக்கு சிவனிய வேளாளர்களே முதலில் மாறியுள்ளனர். புதுச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளைக்குப் போட்டியாளராக அத்தகைய ஒருவரே செயற்பட்டுள்ளார். அதனால் இன்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் அவர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் என்ற ஊரில் உருவான கத்தோலிக்கக் கோயிலினுள் நாடார்கள் நுழைய வெள்ளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் வெள்ளைக்கார மதகுருக்களின் இணக்க முயற்சிகள் பலனளிக்காமல் இரு சாதியினரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு மண்டபத்தில் V வடிவச் சுவரை எழுப்பியதும் பழைய கதை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளாளரான ஆறுமுக நாவலர் என்பவர்(இவர் யாழ்ப்பணத்து ஆறுமுக நாவலர் அல்லர்) வடக்கன்குளத்து நாடார்களில் பெரும்பான்மையரை ‘தாய்’ மதத்துக்குத் திருப்பியதும் பின்னர் நடந்தவை. பணக்காரர்கள் நிறைந்த இந்தத் தாய் மதத்தினரால் ஒரு திருமண மண்டபத்தை அமைக்கும் அளவுக்குப் பொது உணர்வோ தன்மானமோ இல்லாததால் தங்கள் திருமணங்களை கத்தோலிக்க வெள்ளாளரான ‘சர்தார்’ ராசாவின் மண்டபத்தில் கூடி அங்கு ‘இந்து’ மணச் சடங்குகளுக்குத் தடை உள்ளதால் பின்னர் கோயிலில் சென்று தாலி கட்டும் இழிநிலையில் உள்ளனர்.


கத்தோலிக்கத்தில் மேற்சாதியினருக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு கத்தோலிக்கம் உரிய வகையில் வழங்கவில்லை. பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தாம் அவர்களுக்குக் கல்வியை வழங்குகிறது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடலுக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் உள்ள தொலைவு குறைவானதால் நடந்தே கூட அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியும். அதிலும் நாகர்கோயில் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் கார்மெல் என்ற கத்தோலிக்கப் பள்ளி சென்ற நூற்றாண்டில் பேருந்து மூலம் கடலோர மாணவர்களை இலவயமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் இருந்த போதும் மேல் சாதியினரே அவற்றால் பயனடைந்தனர். பா.ச.க.வின் பெருந்தலைகளில் முதன்மை பெற்ற அத்துவானி கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் கற்றவரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அண்மைக் காலமாக குமரி மாவட்டத்தில் படித்த மீனவர்களிடையில் யூதச் சார்புள்ள, பெந்தகோத்தே எனப்படும் ஐம்பதாம் நாள் விழாவினர் மிகுந்த செல்வாக்குப் பெற்று வருகின்றனர். தாழ்த்தப்பட்டோரில் நெல்லை மண்டலம் தவிர கிறித்துவத்துக்கு மாறிய பள்ளர்கள் குறைவாகவே உள்ளனர். கத்தோலிக்கத்துக்கு மாறியோரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இல்லை. பறையர்களைப் பொறுத்தவரை ஆங்கிலரிடம் வீட்டுப் பணியாளராக இருந்த வாய்ப்பால் மதமாற்றமும் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றவர்கள் மிகுதி. அதே போல் நெல்லை குமரி மாவட்டங்களில் இரட்சண்ணிய சேனை என்ற சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவு பறையர்களை மட்டும் கொண்டதாகும். இந்த உண்மையின் உறுத்தலால்தான் பட்டியல் சாதியினர் என்ற தாழ்த்தப்பட்டோரில் பறையர்கள் தங்களை விட மிகுந்த வாய்ப்பைப் பெற்றுவிட்டார்கள் என்றும் அதனால் அந்தப் பட்டியலில் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பேரா.தங்கராசு, ப-ர்.குருசாமிச் சித்தர் போன்ற பள்ளர் தலைவர்கள் பரப்பல் செய்து வருகின்றனர். அத்துடன் நில்லாமல், மாட்டிறைச்சியை உண்ணும் அவர்களோடு ஒரே பட்டியலில் தாங்கள் இருப்பது இழுக்கு என்றும் கூறுகின்றனர். செந்தில் மள்ளர் என்பவர் எழுதி அண்மையில் வெளிவந்த மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற நூலில் அவர் பறையர்களை மட்டுமீறிப் பழித்துக் கூறியுள்ளார். பறையர்களின் ஒரு பிரிவினர் என்று கூறப்படும் வள்ளுவர்கள் தமிழர்களின் அனைத்து அறிவியல்களையும் வகுத்தவர்கள் என்று பொருந்தாப் புகழுரைத்துக்கொண்டிருக்கும் ‘ஆய்வறிஞர்’ குணா அவர்கள் இந் நூலை வானளாவப் புகழ்ந்து அணிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் விந்தை. இவ்வாறு எங்கு ஓடினாலும் எந்தச் சமயத்தில் அடைக்கலம் புகுந்தாலும் சாதியக் கொடுமைகளும் ஒதுக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை விடாமல் துரத்தும் ஒரு மிக மிக இழிந்த குமுகமாக இந்தியாவும் அதிலும் மிக மிக இழிவானவர்களாகத் தமிழர்களும் உள்ளனர்.


அண்மைக் காலமாக பல்வேறு பெயர்களில் முளைக்கும் கிறித்துவ நிறுவனங்கள் மக்களிடம் ஒருவகையான வசிய உத்தியைக் கையாண்டு நம்பிச் செல்வோரிடம் பணம், நகைகள் போன்றவற்றைப் பறிக்கின்றன என்று கூறப்படுகிறது. ஒரு பெண்மணி இவர்களால் ஈர்க்கப்பட்டு தன் தங்க நகைகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டதாகவும் கணவன் நண்பர்களுடன் சென்று அவற்றை மீட்டுவந்ததாகவும் கூறினர். நெல்லையில் கந்துவட்டிக்காரர்களும் முன்னாள் கள்ளச் சாராய பெருந்தலைகளும் இந் நிறுவனங்கள் மூலம் மதம் மாறி வீட்டுமனைத் துறையில் நுழைந்து சமயப் பரப்புரையாளர்கள் அம் மனைகளை ‘கர்த்தரின் ஆசீர்வாதம்’ பெற்றவை, அவற்றில் குடியேறினால் வாழ்வின் உச்சியையே தொட்டுவிடலாம் என்று குருக்கள் ‘அருள்வாக்கு’ கூறத் தொழில் ஓகோவென்று நடத்துகிறார்களாம்.


வெளியில் எதிரிகளாகக் காட்டிக்கொடள்ளும் சமயத் தலைமைகள் தங்களுக்குள் மறைமுகமான ஒருங்கிணைப்புடன் மத மோதல்களை நிகழ்த்துகின்றன. 1982இல் நடைபெற்ற குமரி மாவட்டக் கலவரத்துக்கான ஆயத்தப் பணிகள் பல ஆண்டுகளாகவே நடைபெற்றதை அப்போதே உணர முடிந்தது. ஒரு புறம் எங்கு பார்த்தாலும் நாளுக்கொரு ‘நற்செய்திக் கூட்டம்’, விவேகானந்தர் நடுவத்தினரின் வழிகாட்டலில் முன்னாள் ஊர் நாடான் வழியினரும் தங்களுக்குக் கிடைக்காத வேலை வாய்ப்புகள் தங்களுக்குச் சமமான கல்வித் தகுதியுள்ள கிறித்தவர்களுக்கு அவர்களின் கல்வி நிலையங்களிலும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களிலும் கிடைத்துவிடுவதாலும் படிப்புத் தகுதியுள்ள தங்கள் பெண்மக்களுக்குக் கிடைக்கத்தக்க மாப்பிள்ளைகளை அதே கல்வித் தகுதியுள்ள கிறித்துவப் பெண், வெளி உலகில் இயல்பாகப் பழகும் பண்பாட்டுப் பின்னணியில் கவர்ந்து சென்று விடுவதாலும் ஏற்பட்ட கசப்புணர்வில் பலவேறு பெயர்களில் கடை விரித்த ‘இந்து’ இயக்கங்களில் மொய்த்தனர். இதைப் பின்னணியாக வைத்து வல்லரசியமும் பனியா – பார்சிகளும் திட்டமிட்டதே அக் கலவரம்.


ஆங்கிலருக்கு எதிராக பார்ப்பனிய முனைப்பியர்கள் தொடங்கிய போராட்டத்தில் சாதி சமய வேறுபாடுகளிலிருந்து விடுபட்டு இந்திய மக்கள் ஆயுதம் தாங்கியதையும் தமிழரான வ.உ.சி. கப்பல் குமுகம் அதைத்து ஆங்கிலரின் போட்டியை வெற்றியுடன் எதிர்கொண்டதையும் கண்டு நடுங்கிய ஆட்சியாளர்கள் பனியா – பார்சி நலன்களை மனதில் தாங்கிய காந்தியை இனம் கண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவந்து களத்தில் இறக்கி முனைப்பியர்களைக் ‘களையெடுத்து’ ஆங்கிலரான, இறையியற் கழகத்தின்(பிரம்மஞான சபை) அன்னி பெசன்றுடன் ஒரு போட்டி நாடகம் நடத்தி இருவரும் இந்திய விடுதலை இயக்கத்தினுள் சமயத்தைப் புகுத்தி நாட்டை உடைத்து பனியா – பார்சிகளின் போட்டியாளர்களில் மிக வலியவர்களான முகம்மதியர்களை பாக்கித்தானத்துள் அடைத்து வெளியேற்றிவிட்டார், பிறரை எண்ணற்ற மந்திர – தந்திர ஏமாற்று - எத்துவாளித் தனங்களைக் கையாண்டு எமாற்றி இந்தியாவை பனியா – பார்சி – வல்லரசியர்களின் வேட்டைக்காடாக்கும் ஒற்றையாட்சியை நிறுவி தன் வகுப்பினரான பனியாக்களுக்காக உயிரையும் ஈந்து அனைவருக்கும் உயிர்விட்டவராகப் புகழையும் பெற்றுக்கொண்டார்.


முகம்மதியத்தில் முதன்மையாக மரக்காயர்கள், இராவுத்தர்கள், லெப்பைகள், பட்டாணிகள், என நான்கு பிரிவுகள் தமிழகத்தில் உள்ளன. மரக்காயர்கள் முன்னாள் தமிழகக் கடல் வாணிகர்களான மரக்கலராயர்களின் வழி வந்தவர்கள். கடலில் செல்வோரை இழிவானவர் என ஒதுக்கி வைத்த ‘இந்து’ மரபின் விளைவான குமுறலினால் கடல் வாணிகர்களான அயல் முகம்மதியர்களால் மதமாற்றம் பெற்றுள்ளனர். இராவுத்தர் என்பவர் பெரும்பாலும் இந் நாட்டுக் குதிரைப் படை வீரர்களாக இருக்க வாய்ப்புள்ளது. குதிரையின் உடலை முறைப்படி தேய்த்து விடுவதே குதிரைப் பராமரிப்பில் முதன்மையானது. சிவனையும் இராவுத்தன் என்ற பெயரால் அடியார்கள் குறித்துள்ளனர். இவர்களுடன் மேற்சாதி மதம் மாறிகளும் ஒக்க வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கைவன்மைத் தொழிலாக தகர வேலை செய்வோர் கிட்டத்தட்ட அனைவரும் முகம்மதியர்களே. கைத்தொழில் செய்வோர் அனைவரும் இடங்கைச் சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்டதால் இவர்கள் மதம் மாறி சாலியப் பள்ளர்கள், பறையர்களுடன் லெப்பைகளாகியுள்ளனர். இவர்களில் லெப்பைகள் தந்தையை வாப்பா என்றும் இராவுத்தர்கள் அத்தா என்றும் பட்டாணிகள் பாவா என்றும் மரக்காயர்கள் அப்பே என்றும் அழைக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனோ என்னவோ கடந்த 1980களில் உருது பேசுபவனே உண்மையான முகம்மதியன் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அதில் பெரும் பலன் கிட்டவில்லை. சிலர் உருது பேச முயன்றதைக் காண முடிந்தது. பின்னர் 1990களின் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வட்டாரத்தில் ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. அங்கு செய்தியாளர்கள் செல்லத் தடை இருந்தது. பாதுகாப்புக்குக் காவல்துறையினரையும் உள்ளே விடவில்லை. உணவு, தேநீர் என்று அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். அங்கு, ‘முகம்மதியர்களுக்கென்று தனி நாடு கிடையாது, உலக முகம்மதியர்கள் அனைவருமே ஒரே தேசியத்தை, முகம்மதியத்தை, சேர்ந்தவர்கள்’ என்று வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டு மரபு என்று கண்டிப்பான முகம்மதியத்துக்கு எதிரான எதையும் கடைப்பிடிக்கக் கூடாது என்றெல்லாம் ‘மார்க்க’ அறிஞர்கள் சென்றிருந்தோரின் உள்ளங்களில் உருவேற்றினர். அங்கு சென்று வந்தவர்களில் பெரும்பாலோர் பின்னர் தாடி வைத்தனர், தொழுகைகளைத் தவிர்த்தோர் பலர் தவறாமல் தொழுகைக்குச் சென்றனர். பெண்கள் கருப்புத் துணியில் உடலை மூடும் முக்காடுகளை அணியத் தொடங்கினர்.


இந்த முக்காட்டு வரலாறு சுவையானது. சென்னையில் பட்டாணிகள் எனப்படும் பழைய அரசர் மரபினர் கண்களுக்கு மட்டும் வலைபோன்ற ஓட்டைகளைக் கொண்ட, முழுமையாக உடலை மறைக்கும் கருப்பு முக்காடுகள் அணிந்திருப்பதை 60களில் கண்டுள்ளேன். தஞ்சை மாவட்டம் பாவநாசம், குத்தாலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் முகத்தைத் திறந்து வைக்கும் வசதியுள்ள வெள்ளை நிற முக்காட்டைப் பார்த்துள்ளேன். மற்றப்படி தமிழகத்தில் நான் பார்த்தது பெரும்பாலும் முந்தானையால் தலைமுடியை மட்டும் மறைப்பதையே. இதில் ஒரு சுவையான நடைமுறையை நான் கடையநல்லூரில் கண்டுள்ளேன். அங்கு யாரும் திரைப்படம் பார்க்கக் கூடாது என்ற கட்டு லெப்பைகளிடையில் இருந்தது. தாழ்த்தப்பட்டோருக்கும் அத்தகைய கட்டுப்பாடு இருந்தது. இந்த மக்களை நம்பி மங்கள சுந்தரி திரையரங்கைக் கட்டிய இராவுத்தராகிய, நான் அங்கு இருந்த போது பல உதவிகளைச் செய்து நட்பு பேணிய முதலாளி இந்தத் தடையைச் சுட்டிக்காட்டி வருந்துவார். இந்த லெப்பைகளில் படித்து வெளியூர்களில் வேலை பார்ப்போர் ஊருக்கு வரும் போது இந்தத் தடையைத் தவிர்க்க மனைவியுடன் தென்காசி செல்வர். பேருந்து சிறிது தொலைவு சென்றதும் மனைவியின் தலைமீது போர்த்திய முந்தானை நழுவித் தோளில் விழும். தென்காசியில் திரைப்படம் பார்த்துப் பொழுது போக்கி திரும்பி வரும் வழியில் கடையநல்லூர் எல்லையைப் பேருந்து நெருங்கும் போதுதான் முந்தானை மீண்டும் தலைக்குத் திரும்பும்.


பாளையங்கோட்டையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வீட்டுக்கு மாடி கட்டும் பணியில் இருந்த போது அவரது மகள் எதிர்வீட்டுப் பெண்ணுடன் ஈருருளியில் செல்வாள். சுடிதார், சால்வை மட்டுமே அணிந்திருப்பாள். பெரும்பாலோர் முக்காடு அணிந்திருக்கும் போது உங்கள் மகள் இப்படிச் செல்கிறாளே என்று பெண்ணின் தாயிடம் கேட்டேன். பணம் வந்ததும் மினுக்குகிறார்கள் என்று குறைகூறுவார்கள் என்பதால் முக்காடு அணியவில்லை என்று அந்த அம்மையார் விடை கூறினார். அன்று செல்வநிலையின் குறியீடாக இருந்த முக்காடு இன்று அனைவருக்கும் பொதுவானதாக மாறிவிட்டது தெளிவு. இருப்பினும் கடும் வறுமையிலிருப்போரும் முதியோரில் பலரும் முந்தானையைத் தலையில் போர்த்தியே செல்கின்றனர்.


மதம், சமயம் என்பவற்றுக்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது முற்றும் முழுமையுமான அரசியல் நிறுவனமாகும். ஒரு குமுகத்தில் ஒரு காலகட்டத்தில் நிலவும் முரண்களுக்குத் தீர்வாய் ஒரு மேதைமை உள்ளம் முன்வைக்கும் குமுகம் - இயற்கை பற்றிய கோட்பாடு மதம் எனப்படுகிறது. அக் கோட்பாட்டை முன்வைக்கும் போது தவிர்க்க முடியாமல் உளதாகிய குமுக அமைப்பால் ஆதாயம் பெற்றுக்கொண்டிருக்கும் பூசகர் கூட்டம் முன்னிறுத்தும் எதிர்ப்பை எதிர்கொள்ள ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆக, ஒரு புதுக் கடவுள் உருவாகிறார். புத்தர், மகாவீரர் போல் தாம் எடுத்துக்கொண்ட சிக்கல்களுக்குள் கடவுள் வரவே இல்லை என்றும் கூறலாம். ஆனாலும் ஏசு உட்பட அனைத்து மத முன்னவர்களையும் இறை மறுப்பாளர்களென்று குற்றம் சாட்டியதை நாம் அறிவோம். ஆக கடவுளே தன்னைப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு மக்களுக்குத் தோற்றம் காட்டி அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டுத் தம்மைத்தாமே அழித்துக்கொள்ள விடுகிறார் என்று நம்பும் எவரும் கடவுளுக்கும் மதங்ளுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதிக்கொள்ளலாம்.


வெளிப்படையான அரசியலை முன்வைத்துப் போராடுவதை விட கடவுளின் பெயரைக் கூறி அரசியல் நடத்துவதில் பெரும் ஆதாயங்கள் உண்டு. இதில் உணர்வுகள் மட்டுமே பங்கேற்பதால் பொருளியல் பங்கு குறித்த எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடமிருந்து வருவதில்லை. வெளிப்படையான அரசியல் நடத்துவோராக நம்பப்படுவோரான இன்றைய தேர்தல் கட்சிகளும் பொருளியல் கோட்பாடுகளைக் கையிலெடுக்காமல் மொழி, பண்பாடு, சாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுவதைக் கூறலாம். திருவள்ளுவரையும் திருக்குறளையும் கையிலெடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் தருண் விசய்யும் அவர் பின்னால் ஓடும் சில ‘தமிழ்’ப் பெரிய மனிதர்களும் இன்றைய எடுத்துக்காட்டுகள். தமிழர் மனங்களில் ஆழ வேரூன்றி இருக்கும் தாழ்வுணர்ச்சிக்கும் இதில் முதன்மைப் பங்குண்டு


மதமும் சமயமும் துல்லியமாகப் பார்த்தால் வெவ்வேறானவை. மதம் என்பது கொள்கை, கோட்பாடு, மெய்யியல் எனப்பொருள் தரும் சொல். தமிழ் இலக்கணமான நன்னூல் கொள்கைகளைக் கையாளும் வகைகளை ஏழு மதங்கள் என்று கூறுவதைக் காணலாம்.


எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே


சமயம் என்பது அக் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும், சமைக்கப்படும் அதாவது அமைக்கப்படும் அமைப்பைக் குறிப்பதாகும். இத்தகைய ஒரு சொல் வேறுபாடு ஆங்கலத்திலோ சமற்கிருதத்திலோ இல்லை என்பது, நாம் அறியாத ஒப்புயர்வற்ற நம் மீப் பழம் நாகரிக உச்சத்தைக் காட்டுகிறது.


எந்த மதத்தினரும் தத்தம் சமய முன்னவர்களை விட்டுத் தூய கடவுளை மட்டும் வழிபடுவதே இல்லை. மோசே இன்றி யூதர் யகோவாவை வழிபடுவதில்லை. இயேசு இன்றி அவரது தந்தையான கடவுள் இல்லை. முகம்மதியர்கள் அல்லாவை ஒருமையில் அழைப்பதைப் பொறுத்துக்கொள்வர். ஆனால் நபியை ஒருவர் அவ்வாறு குறிப்பிட்டுத் தப்பிக்க முடியுமா? ஆதன்(ஆன்மா) இல்லாதவை(அனாத்ம மதங்கள்) என்று கூறப்படும் புத்த, அம்மண சமயத்தினர் கூட தத்தம் சமய முதல்வர்களைத் தெய்வங்களாகத்தானே வழிபடுகின்றனர்?


‘இந்து’ மதத்திலுள்ள எண்ணற்ற தெய்வங்களும் ஏதோவொரு வகையில் மனிதர்களாகிய தலைவர்கள், அரசர்கள், அருஞ்செயலாற்றியோரின் குறியீட்டு வடிவங்களே. பிள்ளையார் போன்று போர் யானை போன்றவையும் தெய்வமாகியுள்ளன (வைணவமாகிய மாலியத்தில் ஆனைமுகனை சேனைமுதலி என்றே அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது). அரக்கர்கள் அல்லது இராக்கதர்கள் என்று பழிக்கப்படுவோரில் பெரும்பாலோர் தெய்வங்களாக வழிபடப்பட்டு, வழிபட்டவர்கள் வெல்லப்பட்டு ஓடுக்கப்பட்டதால் அல்லது வரலாற்றுச் சூழல்களால் புறக்கணிக்கப்பட்ட பழங்காலத் தெய்வங்களே. எடுத்துக்காட்டுக்குத் தக்கன், மாவலி(மகாபலி) பாணாசுரன் ஆகியோரைக் கூறலாம். இயமன் வழிபாடு சிவன் வழிபாட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒன்று(இன்றும் தென் மாவட்ட மக்களிடையில் இயமன் – காலசாமி வழிபாடு தொடர்கிறது). இங்கும் தெள்ளத்தெளிவான அரசியலைக் காணலாம்.


இன்றைய நிலையில் ஊர்ப்புற ‘சிறுதெய்வ’க் கோயில்கள் விரிவுபடுத்தப்பட்டு பார்ப்பனப் பூசாரியைக் கொண்டு பெரிய அளவில் குடமுழக்கு, ‘சம்ரோச்சணம்’ ஆகியவை நிகழ்த்தப்பட்டாலும் இன்னும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை திருவிழா என்ற பெயரில் ஊர் மக்களிடம், வீட்டிலுள்ள ஆடவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரக் கணக்கில் கட்டாயத் தண்டல் செய்து குடித்துக் கூத்தடிக்க ஊருக்கு ஓர் இளைஞர் படை கச்சை கட்டி நிற்கிறது. குடிக்கும் கஞ்சிக்கே அல்லாடும் ஏழைகள் கூட்டம் வகை வகையான நல்வாழ்வுத் திட்டங்களுடன் வெளிநாட்டுப் பணத்துடனும் கோயில் ஆட்சி எல்லைக்குட்பட்டோர் கோயில்களுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் பத்திலொரு வருவாய் பணத்தையும் கையாளும் கிறித்தவர்களின் பக்கம் சாய்வதை எப்படிக் குறை சொல்ல முடியும்? பெரும்பாலும் தாயால் தெருவில் அல்லது குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படும் குழந்தையை எடுத்து வளர்க்க குழந்தைப் பேறில்லா ‘இந்து’ப் பெற்றோர் விரும்பினாலும் என்ன சாதியோ என்ற கேள்வியுடன் அகன்றுவிட கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அத்தகைய குழந்தைகளை ஆர்வத்தோடு எடுத்து வளர்த்துத் தங்கள் சமயத்தார் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்வதையும், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி முதலியவற்றுக்குப் பொறுப்பேற்று வளர்த்துத் தம் மதத்தில் சேர்த்துக்கொள்வதை பணம் படைத்த முகம்மதியர்கள் குமுகக் கடமையாகச் செய்கிறார்கள் என்பதையும் எத்தனை பேர் அறிவர்?


பணத்தினவு எடுத்து குமரி முனையிலிருந்து திருப்பதி சென்று இலக்கம் இலக்கமாக உண்டியலில் கொட்டி மொட்டையும் போட்டுத் திரும்பும் பெரியோரிடம் அப் பணத்தை உங்களை அடுத்திருக்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு நல்வாழ்வு அமைக்கும் விதத்தில் செலவிட்டு மக்கள் அயல் மதங்களில் அடைக்கலம் புகுந்து அயலவர் கட்டுக்குள் போய்விடாமல் தடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க ஒரு கணமாவது நம் ‘இந்து’த் தலைவர்கள் நினைத்ததுண்டா? சாதிகளை மறந்துவிடுங்கள், அனைத்து ‘இந்து’க்களையும் ஒன்றாக நடத்துங்கள் என்று ‘கவுரவக் கொலை’ செய்வோரிடம் எடுத்துரைப்பீர்களா? கலப்பு மணத்துக்கு எதிராக அணி திரட்டும் மரு.ச.இராமதாசு வகையறாக்களுக்க எதிராகக் கருத்துக் கூறுவீர்களா? கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பார்ப்பனர் ஆகிய சம்பந்தர் வாணிகப் பெண்ணை மணக்க முன்வரும் அளவுக்கு சாதிக்கு எதிரான கருத்து உருவாகியிருந்தது. ஆனால் அவர்கள் சமயப் பரப்பலின் பின்னணியில் ஆட்சியமைத்த பேரரசுச் சோழர்களைப் பற்றிக்கொண்டு நம் ‘இந்து’ப் பெரியவர்கள் முன்னைவிடக் கொடுமையான சாதி, வருண வகைப்பாட்டைப் புகுத்தவில்லையா? 12ஆம் நூற்றாடில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பூணூல் அணிவித்து சமற்கிருதமும் கற்பித்து தமிழ் வேதம் எனும் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களை மாலியக் கோயில் கருவறைக்குக் கொண்டு சென்றதை பின் வந்த வேதாந்த தேசிகர் கலைத்துப் போடவில்லையா? பனியா – பார்சி – வல்லரசியச் சுரண்டல்களால் அடித்தள மக்கள் என்றுமில்லா வறுமைக்குள் வீழ்ந்து கிடக்கும் இன்றைய சூழலில் சிலரை மீண்டும் ‘தாய்’ மதத்துக்குக் கொண்டுவந்துவிட்டதாகப் பிதற்றிக் கொள்வதில் பெருமையில்லை. நாளைக்கு உங்கள் பிறங்கடையினர்(சந்ததிகள்) முன் போலவே அவர்களை கொடுமைப்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?


இன்று இத்தகைய ‘மத’ மாற்றங்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் கவடறியாத பெரியோர்களுக்கு ஓர் உண்மையைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். நம் இன்றைய ஆட்சித்தலைவர்கள் நாட்டை முற்றமுழுதாக அயலவர் கூட்டோடு தாம் பதுக்கிவைத்திருக்கும் கள்ளப் பணத்தை அயல் நேரடி முதலீடு என்றும் ‘இந்தியாவில் செய்வோம்’ என்றும் புதுப்புது முழக்கங்களடன் உள்ளிறக்கி நம் நாட்டின் விளைநிலங்களையும் காடுகளையும் மலைகளையும் எண்ணற்ற இயற்கை வளங்களையும் முந்தைய ஆட்சியாளர்களை விட முனைப்பாகக் கொள்ளையடிப்பதிலிருந்து சராசரிக் குடிமக்களின் கவனத்தைத் திருப்புவதறகே இந்த ‘மத’ மாற்றச் சிக்கலைக் கையிலெடுத்திருக்கிறார்கள், மதம் சார்ந்த கட்சிகள் தொடங்கி முற்போக்கு நாடகம் ஆடும் கட்சிகள் வரை அதற்குப் பின்னணி வழங்குகின்றனர் என்பதே அது. எனவே இவர்கள் கிளப்பும் புழுதி நம் பார்வையை மறைத்துவிடாமல் நம் நாட்டின் அனைத்து வளங்களும் நமக்கே உரிமை என்ற கண்ணோட்டத்திலிருந்து நழுவாமல் விழிப்புடனிருக்க வேண்டும் என வேண்டுகிறோம்.


சமயம் என்பது அரசியல் இயக்கம் என்றோம். அதை நம் முன்னோர் தெளிவாகவே வரையறுத்திருந்தனர். வருணன், இந்திரன், கொற்றவை, திருமால், முருகன் என்ற ஐந்து தெய்வங்களை வணங்கும் ஐந்து நிலங்களாகப் பண்டைத் தமிழகம் இருந்த போது ஒரு தெய்வத்தை வணங்கும் நிலப் பரப்பில் இன்னொரு நிலத்துக்குரிய தெய்வத்தை யாராவது வழிபடுவது தெரிந்தால் அங்கு ஆளுவோரின் அதிகாரிகள் சென்று அதற்கு முடிவு கட்டுவர் என்கிறது தொல்காப்பியம்,


மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே
-- தொல்., பொருள்., அகத்திணையியல், 30


நால்வகை நிலத்திலும் மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும் முறைமையில் தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் காரணமாகவும்(தலைவனின்)பிரிவுஉளதாம் என்று இளம்பூரணரால் இதற்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.


சமயங்களின் இந்த அரசியல் தன்மையைத் தெளிவாகப் புரிந்து செயல்பட்டவர் இந்திய அரசர்களில் மாமன்னர் அக்பர்தான். ஆப்கானியரான செர்சா சூரி உண்மையான சமயம் நடுநிலை தவறாத நயன்மைதான் என்று சமயச்சார்பின்மையைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாலும் பிள்ளைப் பருவத்தை ஈரான் அரண்மனையில் தந்தையுடன் ஏதிலியாகக் கழித்த காலத்தின் பட்டறிவாலோ என்னவோ இந்த நாட்டுக்கு வெளியே திருத்தலத்தைக் கொண்டிருந்த அயல் மதமான முகம்மதியத்தை அவர் விரும்பவில்லை. மெக்கா செல்வதைத் தடை செய்ததுடன் தீன் இலாகி என்ற புதிய சமயத்தையும் அறிமுகம் செய்தார். அவருடைய இந்தச் செயலால் வெறுப்புற்றிருந்த முகம்மதியப் பூசகர்கள் பின்னாளில் ஔரங்கசீப்புக்குக் கல்வியளிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை ஒரு மத வெறியராக்கினர்.


சீனத்தில் மத மாற்றங்கள் நிகழவில்லை. அங்கு பிறப்படிப்படையிலான சாதிகள் இல்லை. அரசுப் பணியை யார் வேண்டுமானாலும் உரிய தேர்வை எழுதிப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு குத்தகை உழவன் பணம் சேர்த்தால் பண்ணையாரின் நிலத்தை வாங்கித் தானும் பண்ணையாராகலாம்.


சப்பானியர்கள் அயலவர்களையும் மத மாற்றங்களையும் பொறுத்துக்கொள்வதே இல்லை. போர்ச்சுக்கீசியர்கள் தமிழகத்தில் மத மாற்றம் செய்த அதே வேளையில் சப்பானிலும் குறுகிய காலத்தில் ஓரிலக்கத்துக்கும் அதிகமானோரை மத மாற்றினர். உள்ளூர்க் கோயில்களை இடித்தனர். அங்கு ஆட்சிக்கு வந்த ஒருவன் மத மாறிய ஓரிலக்கம் பேருக்கு மேற்பட்டோரை ஒரே நேரத்தில் கொன்றொழித்தான்.


19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்று சப்பானியத் துறைமுகம் ஒன்றில் குண்டுவீசி துறைமுகத்தைத் திறந்துவிட ஆணையிட்டது. அங்குள்ள சிற்றரசர்கள் ஒன்றுகூடி அப்போதைக்கு துறைமுகத்தைத் திறந்து அமெரிக்கர்கள் திணித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். அடுத்த கட்டமாக அங்குள்ள போர்ச் சாதியான சாமுரையைச் சேர்ந்த இருவர் அதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிற்றரசர்களில் வலிமையான ஒருவரின் கட்டுப்பாட்டிலிருந்த பேரரசருக்கு உண்மையான அதிகாரம் கிடைக்குமாறு சிற்றரசர் பதவிகளை ஒழித்து அங்கிருந்த நால் வருண முறையைச் சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து பேரரசு மீட்பியக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினர். ஓக(தியான) மதமான சென் புத்த மதத்தைக் கைவிட்டு பண்டை வீர வழிபாட்டு மதமான சிண்டோயியத்தைப் புகுத்தினர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று அங்கு பல துறைகளிலுமுள்ள வளர்ச்சி நிலைகளைக் கண்டு அவற்றில் தங்கள் நாட்டுக்குத் தேவையானவற்றைக் கடைப்பிடித்து மாணவர்களை அங்கெல்லாம் சென்று கல்வி கற்கச் செய்து இருபதே ஆண்டுகளில் சப்பானை ஓர் இற்றை(நவீன) நாடாக்கினர். பழைய ஒப்பந்தத்தை மாற்றி இருவரும் சம நிலையில் இருக்குமாறு புதிய ஒப்பந்தம் உருவாக்க அமெரிக்காவை வலியுறுத்தினர்.


நம் நாட்டுச் சிற்றரசர்களோ ஒரு சிறு துணிச்சலியர் கூட்டத்துடன் பாபர் நுழைந்த போது, கசினி முகம்மது போல் கோயில்களைக் கொள்ளையடித்துப் போய்விடுவான், தில்லியின் பாதுசாவின் கொட்டம் அடங்கிவிடும் போன்ற கணிப்புகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இங்கு சாதி ஒழிப்பிற்காகப் பாடுபட்ட பசவனின் புதிய இயக்கமாகிய இலிங்காயதத்தையும் சக்கிலியர்கள் அமைத்த ஓர் அரசையும் அழிக்கவே முகம்மதிய அரசில் மதம் மாறி படையில் இருந்த அரிகரன் புக்கனைப் பயன்படுத்தினார் இங்கிருந்த பார்ப்பனக் குரு வேதாரண்யர். இலிங்காயதர்களையும் சக்கிலியர்களையும் பயன்படுத்தி அயலவரும் அயல் மதத்தினருமான தில்லி ஆட்சியாளருக்கு எதிராக அவர்களைத் திருப்பியிருந்தால் இந்தியாவில் முகம்மதிய ஆட்சி அன்றே அழிந்திருக்கும். இன்று இங்கு மதப் பூசல் நம் வலிமைக்கு அறைகூவலாக இருந்திருக்காது. அது போல் இங்குள்ள போர்ச் சாதித் தலைமைகளும் தங்கள் குழு நலன்களுக்காக எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து உள்நாட்டுக்கு இரண்டகம் செய்வார்களே ஒழிய உள்நாட்டு மக்களோடு இணக்கம் கண்டு அயல் எதிரிகளைத் துரத்த முன்வரமாட்டார்கள். இந்த அவலம் இன்றும் தொடர்கிறது.


நம் ஆகமப் பூசகர்களும் ஒன்றும் குறைந்தவர்களில்லை. எந்த நாடு, மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் ஆட்சியில் அமர்ந்தவர்களுக்குப் பரிவட்டம் கட்டி ‘பூரண கும்ப மரியாதை’ செலுத்துவதற்குத் தயங்கியதில்லை. கோயில் பரத்தையர்களைக் கூட்டிக் கொடுத்தும் தங்கள் சாதி நலன்களைக் காத்துக்கொண்டனர்.


சப்பானைப் போல் தமிழகத்துள் மட்டும் அடங்கிய ஒரு வழிபாட்டுமுறை இன்று தமிழகத்தில் இல்லை. சிவனும் திருமாலும் முருகனும் காளியும் தமிழர்களின் தெய்வங்கள் என்று நாம் பெருமையடித்துக்கொள்ளலாம். ஆயினும் அவை அனைத்தையும் இமயத்தோடும் கங்கையோடும் யமுனையோடும் தொடர்பு காட்டிக் கதை எழுதி வைத்துள்ளனர். எனவே முற்ற முழுக்க தமழக எல்லைக்குள் அடங்கியதாகிய ஒரு புதிய சமயம் நமக்குத் தேவை. அதை மட்டுமே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது நம் தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது என்று தோன்றுகிறது. சப்பானைப் போல் சாதி, மொழி, இன வேறுபாடின்றி அனைவரையும் இணைப்பதும் தமிழகத்துள் மட்டும் அடங்கியதுமான ஒரு சமயம் உருவாகாதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.


பிற நாடுகளைப் பிடிக்கவும் மதம் மாற்றவும் என்றும் ‘இந்து’க்கள் முயன்றதில்லை என்றும் இரா.சு.சே.(ஆர்.எசு.எசு.) என்று பெருமையாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் குருமூர்த்தி 21 - 12 – 2014 தினமணி கட்டுரையில்(விவாதிப்போம் வாருங்கள்) என்று கூறுகிறார். அயோத்தியில் பாபர் பள்ளிவாசலை இடித்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது? 8000 அம்மணர்களைத் தமிழ்நாட்டில் கழுவேற்றியதைப் போன்ற ஈவிரக்கமற்ற செயல் உலகில் எந்த மதத்தினர் பிற மதத்தினர் மீது நிகழ்த்தியுள்ளனர்? புலன்கள் வழியாக நாம் அறியும் அனைத்துமே மாயை என்று சாதியத்துக்குச் சப்புக்கொட்டிய ஆதிசங்கரன் புத்தக் கோயில்களை அழித்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது? ஆமக வழிபாட்டுக்கு எதிராக வேதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளும் வேதிய(வைதிக சமய)த்தை நிலைநிறுத்தப் போவதாகக் கிளம்பி இழிவான தோல்வியை அவன் சந்தித்த அவலத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உள்நாட்டுச் சமயம் என்று இவர் உரிமை கொண்டாடும் புத்தத்தையும் அம்மணத்தையும் மட்டுமல்ல விரிவான வகைப்பாட்டில் பார்ப்பனியச் சார்பான ஆகம வழிபாட்டையே பொறுத்துக்கொள்ளாத இவர்கள், காஞ்சிபுரத்தில் வரதராசப்பெருமாள் தேர்வலத்தின் போது தடிகள் கொண்டு தாக்கியும் கல்வீசியும் கொலைத்தாக்குதல்களில் ஈடுபட்ட, நாமம் போடும் உரிமைக்காக நய மன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி மானமிழந்த ‘மொட்டை’ நாமக்காரர்களும் ‘பாத’ நாமக்காரர்களுமான(வடகலை, தென்கலை)ப் பார்ப்பனர்களாகிய ஐயங்கார்கள், உலகின் தலைசிறந்த சமயப் பொறையாளர்களாம்! உலக வரலாற்றிலேயே மாறா இழிவைப் பதிய வைத்துள்ள இவர்கள் எவ்வளவு துணிச்சலாக இந்தப் பொய்களைக் கூறுகிறார்கள் பார்த்தீர்களா? இவர்களின் நாவுக்குக் கூச்ச உணர்வு கிடையாது என்பதற்கு இதுவன்றி வேறு சான்று எதுவும் தேவையில்லை.


‘இந்து’க்கள் என்றுமே அயல் நாடுகளைக் கைப்பற்ற விரும்பியதில்லையாம்! ‘இந்து’ என்ற சமயப் பெயரும் இந்தியா என்று ஓர் அரசியல் நிலப்பரப்பும் அயலவனான ஆங்கிலன் காலத்துக்கு முன்பு வரை உலகில் எங்கே இருந்தது? இந் நிலப்பரப்பின் மீது அவ் வப்போது படையெடுத்துக் கொள்ளையடித்தவர்களும் நாடு பிடித்தவர்களும் வாணிகக் கொள்ளையடித்தவர்களும் தங்கள் வசதிக்காக வைத்த பொதுப் பெயர்கள்தாமே அவை. (கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து ஆற்றுப் படிகைப் பரப்பைக் கைப்பற்றிய பேரரசுப் பாரசீகர்களுக்கு தங்கள் மொழி மரபுக்கேற்ப வைத்த பெயரே இந்து என்பது.) இங்குள்ள எண்ணற்ற ‘தேசங்கள்’(56 தேசங்கள்) ஒன்றுக்கொன்று ஓயாமல் போட்ட சண்டைகள்தானே ‘இந்திய’ வரலாறு. அப்படியிருக்க அயலவர் ஒரு ‘தேசத்’தின் மீது படையெடுக்கும் போது அடுத்த ‘தேசத்’தவர் வேடிக்கை பார்த்ததும் படையெடுப்பாளர்களுக்கு உதவியதும்தானே இயல்பாக இருந்தது? வெள்ளையர் ஒவ்வொருவராக இங்கு நாடு பிடித்த போதும் இறுதியில் ஆங்கிலர் அனைத்தையும் விழுங்கிய போதும் நிகழ்ந்தவை விலாவாரியாக அதைத்தானே விளக்குகின்றன!


‘இந்து’ ஒற்றுமை பற்றி வாய் கிழியக் கூச்சல் போடும் பெரியவர்களிடம் இறுதியாக ஒரேயொரு கேள்வி, ‘இந்து’ ஒற்றுமைக்கு ஒரே இடையூறாக இருக்கும் சாதியத்தின் அடையாளமான பூணூலை அதை அணிந்திருக்கும் ‘ஒற்றுமைப் போராளிகள்’ மக்கள் முன் மேடை போட்டு கழற்றி எறிந்து பிறருக்கு முன்னோடிகளாக இருப்பார்களா? சங்கராச்சாரியாரோடு நாற்காலியில் சமமாக உட்கார்ந்திருக்கும் சுப்பிரமணியம் சாமி போல் நடுவமைச்சர் பொன். இராதாகிருட்டினன் உட்காருவாரா?
.

22.7.09

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20000 ⁄-ரூபாய்கள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லாம் சேர்ந்து விரைவில் குழந்தைத் தொழிலாளர்களை "ஒழித்து" விடுவார்கள் போல் தோன்றுகிறது. இந்நேரத்தில் நமக்கு எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

1. குழந்தைகள் ஏன் உடலுழைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்?

இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால் நம் வேளாண்மை வீழ்ந்துவிட்டது. நிலம் தரிசாகப் போடப்பட்டுப் பாலைவனமாக மாறி வருகிறது. அதன் விளைவுதான் நீண்ட வறட்சியும் திடீர் வெள்ளங்களும். அதனால் பெரியவர்களின் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இருப்பவை எல்லாம் குழந்தைகளைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் தாம். எனவே குடும்பத்தை நடத்தப் பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

வேலையில்லா நிலையில் பெற்றோர்கள், குறிப்பாக ஆடவர்கள் குடிப்பதற்கும் பரிசுச் சீட்டு வாங்குவதற்கும் கூட இக்குழந்தைகளின் உழைப்பையே சுரண்டுகின்றனர். பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட சாராயம், பரிசீச் சீட்டு போன்றவற்றில் அவ்வருமானம் கரைந்து போனதால் ஏற்படும் வறுமையும் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கான ஒரு முகாமையான காரணம்.

2. குழந்தை உழைப்பைத் தடை செய்துள்ள அரசு அதன் விளைவாகிய குடும்ப வருமான இழப்பை ஈடு செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

ஒன்றுமே இல்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியதுடன் அதற்குச் தோதான ஒரு மனநிலையைப் பொதுமக்களிடையில் ஏற்படுத்துவதற்காக அரசே நேரடியாகவும் தன் ஆளுகையின் கீழிருக்கிற மற்றும் மக்களுக்கு(தனியாருக்கு)ச் சொந்தமான பொதுத் தொடர்பு வகைதுறைகளின் மூலமாகவும் "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் மூலமாகவும் பலவகைகளிலும் கருத்துப் பரப்புவதற்குப் பல கோடி உரூபாய்களைச் செலவு செய்வதோடு சரி.

3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

முதலாவதாக, உழைப்பிலிருந்து விடுபட்ட குழந்தைகளும் அவர்களது உழைப்பை நம்பி வாழும் குடும்பமும் இப்போது கிடைக்கும் அரைவயிற்றுக் கஞ்சியிலிருந்தும் "விடுபடுவர்". அதன் தொடர்ச்சியாகப் பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும். மக்களின் இடப்பெயர்ச்சி கூடும்.


மானத்தோடு உழைத்துப் பிழைத்து வந்த சிறுவர்கள் இனி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டியிட்டு எச்சில் இலைகளுக்காகச் சண்டை போடுவர். குப்பைகளில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகும்.

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவர். குமுகப் பகைக் கும்பல்களுக்கு ஆள் வலிமை சேரும். விலைமகளிராக மாறும் சிறுமிகளின் எண்ணிக்கை பெருகும். இத்துறைத் தரகர்களுக்கு நல்ல வேட்டையாகும்.

இரண்டாவதாகக் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து மலிவாகப் பண்டங்கள் செய்த நிறுவனங்கள் வெளிப்போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படும். தொழில் குறிப்பிட்ட பகுதிகளில் அழித்து போகும். எனவே அங்குள்ள பெரியவர்களுக்கிருக்கும் வேலைவாய்ப்புகளும் அழிந்து போகும். அப்பகுதிகள் ஆளற்ற பாலைவனங்களாகும். இப்போது பெருகி வரும் வழிப்பறிகளும் கொள்ளைகளும் இனிமேல் விரைந்து பெருகும்.

மூன்றாவதாக இத்தொழில்களின் மூலம் செய்யப்பட்ட பொருட்களைச் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக வெளிச்செலாவணித் தேவை கூடும்.

நான்காவதாகச் சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் கூலியும் குறையும். இவ்வாறு குறைவதால் மிச்சப்படும் தொகை இச்சட்ட மீறலை மறைப்பதற்கான கையூட்டாக ஆட்சியாளரைச் சென்றடையும்:

4. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வளவு முனைப்புக் காட்டும் ஆட்சியாளரின் உள்நோக்கம் என்ன?

முன்பு "நெருக்கடி நிலை"யின் போது மக்களிடையில் "பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக" ஊதிய முடக்கம், பஞ்சப்படி முடக்கம் எல்லாம் செய்தார்களல்லவா அதே நோக்கம் தான். அதாவது மக்களின வாங்கும் ஆற்றலைக் குறைப்பது தான். அதாவது தங்கள் தேவைகளை வாங்க இயலாத வறியவர்களாக்குவது தான். இதன் மூலம் மிஞ்சும் பண்டங்களை ஏற்றுமதி செய்யலாம். இப்போது ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சம் டன் உணவுத் தவசங்களை(தானியங்களை) இன்னும் கூட்டலாம்.

குழந்தைத் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வழக்கமான தரகு கிடைக்கும். இறக்குமதியால் ஏற்படும் வெளிச் செலாவணிக்காக புதிதாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் தரகு கிடைக்கும்.

5. "தொண்டு" நிறுவனங்களின் உள்நோக்கம் என்ன?

இத்"தொண்டு" நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்தும் உலகின் பெரும் தொழிற்பேரரசுகள் நடத்தும் அறக்கட்டளைகளிலிருந்தும் பணம் பெறுவதால் அப்பேரரசுகள் செய்யும் கருவிகளை இறக்குமதி செய்வதற்குத் தோதான சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகின்றன. குழந்தைகளுக்குக் குறைவான கூலி கொடுத்து ஏழை நாடுகள் மலிவாக பண்டங்களைப் படைத்துத் தங்களுடன் போட்டியிடுவதிலிருந்து அவற்றைத் தடுப்பது முகாமையான நோக்கம்.

6. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்போர் தான் வேலைக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20,000⁄-உரூபாய்கள் மறுவாழ்வுக்காக வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கும்?

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் தண்டமாகும் இது. குழந்தைகள் வேலையிழக்கும் வேகத்தை இது கூட்டும். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்போர் தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கம், மாந்தநேய உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு அவர்களைத் தெருவில் இறக்கிவிடத் தூண்டும்.

7. குழந்தைத் தொழிலாளர் பற்றிய இந்த நிலைப்பாடு சரிதானா?

பதின்மூன்று அகவைக்குட்பட்ட குழந்தைகள் உழைத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை வருந்தத்தக்கது தான். ஆனால் குழந்தைகளின் உழைப்பில் குடும்பம் வாழ வேண்டுமென்றிருக்கும் நிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே இன்றி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குழந்தை உழைப்புக்கு எதிராக முனைப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறு மட்டுமல்ல இரக்கமற்ற கொடுஞ் செயலுமாகும். அதே வேளையில் உடலுழைப்பு இழிவானது என்ற உணர்வு எழுத்துறிவுடன் கூடவே பள்ளிகளில் உருவாகி விடுகிறது. இது நெடுங்காலமாகப் பெருந்திரள் மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதன் விளைவாகும். அத்துடன் உழைப்போருக்கு உரிய ஊதியமோ குமுக மதிப்போ இல்லை. அதனால் இன்று இருக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீண் பொழுது போக்குவதுடன் குமுகத்துக்குத் தொல்லை தருபவர்களாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள். எனவே இதில் ஒரு மாற்றத்தின் தேவையுள்ளது. குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து உடலுழைப்பையே தவிர்த்து வருவதால் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களிடத்தில் உழைப்பை ஏற்றுக்கொள்ள ஓர் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. அதை மாற்ற எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு மூன்றாண்டுக் காலம் உடலுழைப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க வேண்டும். மூன்றாண்டு உடலுழைப்பிற்குப் பின் மேற்படிப்புக்கு மாணவன் கட்டணம் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு மட்டத்தில் மனமும் உடலும் முற்றிப் போகாவாகையால் உழைப்பு பற்றிய சிந்தனையிலும் உடல் வணக்கத்திலும் எதிர்ப்பு இருக்காது.

கட்டிடத் தொழிலிலாயினும் வேறு எந்தக் தொழிலிலாயினும் ஈடுபடுவோருக்கு அத்தொழில் குறித்த அடிப்படைத் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தொழில்களின் தரம் மேம்படுவதுடன் புதியன படைக்கும் ஆர்வமும் உண்டாகும்.


8. இது பற்றி மேலையாடுகளின நிலை என்ன?

மேலை நாடுகளில் பதினபருவம்(Tennage) எனப்படும் பதின்மூன்று அகவை எட்டிய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர். அப்போதிலிருந்து பெற்றோரைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் அகலுகின்றனர். பகுதி நேர உழைப்பின் மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது அவர்களின் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாகிறது. தன்னம்பிக்கை, குமுகத்துடன் நெருக்கமான உறவு, பொது அறிவு, குமுக உணர்வு ஆகியவற்றை வளர்க்கப் பெருந்துணை புரிகிறது. மாறாக நம் நாட்டு இளைஞர்கள் பெற்றோர் நிழலிலேயே நெடுங்காலம் ஒதுங்கி, ஒடுங்கி உடலியல், உளவியல் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சியின்றி இருவகைகளிலும் மெலிந்து போகின்றனர்.

9. இது குறித்து நம் பண்டைமரபுகள் ஏதேனும் உண்டா?

உண்டு. சில சாதியினர் தங்கள் மகன்களைத தங்களையொத்த பிற தொழில் நிறுவனங்களில் கூலி வேலைக்குப் பயிற்சியாளர்களாய் அனுப்புவதுண்டு. மாதவி ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின் பன்னீரண்டாம் அகவையில் அரங்கேறியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மகாபாரதத்தில் நளாயினி கதையில் வரும் ஆணி மாண்டவியர் வரலாற்றில் ஒரு குறிப்பு உள்ளது. தவறுதலாகத் தான் கழுவேற்றப்பட்டதற்கு எமனிடம் விளக்கம் கேட்கிறார் ஆணி மாண்டவியர். அதற்கு, அவர் சிறுவனாயிருக்கும் போது ஒரு முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதன் விளைவே அது என்று கூறுகிறான் எமன். பதின்மூன்று அகவைக்குள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடையாதென்ற அறநூல் கூற்றைத் காட்டித் தவறிழைத்த எமனுக்குச் சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து பதின்மூன்று அகவையடைந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தக்கவர் என்ற கருத்து மிகப் பண்டை நாட்களிலேயே நம் குமுகத்தில் நிலவியது தெளிவாகிறது.

10. குழந்தைத் தொழிலாளர் குறித்த நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, ஏழைச் சிறுவர்களின் வாழ்வின் அடிப்படையையே தகர்க்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் அரசும் இணைந்து அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களது வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்க அம்முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைத் தொழிலாளர் கல்வி நிலையங்கள் அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க நிலவுச்சவரம்பு, வேளாண் விளைபொருள் ஆணையம், உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், உணவுப் பொருளின் வாணிகத்தில் உரிம முறை, வருமான வரி போன்ற தடைக்கற்களை உடனடியாக அகற்றி வேளாண்மைக்கு மறு உயிர் கொடுத்து பெரியவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

வருமானவரியை முற்றாக ஒழித்து உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு போன்ற தடைக் கற்களை அகற்றி உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியும் உள்ளூர் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தும் தொழில் வளர்ச்சியை பாய்ச்சல் நிலைக்குக் கொண்டு வந்து அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.

சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.

மூன்றாவதாக, குழந்தைத் தொழிலாளர்களை அகற்ற உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உள்நாட்டில் உருவான கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.

நான்காவதாக, அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கும் உலக வங்கியிடம் நாட்டை அடகு வைக்கக் கூடாது. இத்தொடக்கக் கல்வி முழுவதும் அரசாலேயே செல்வநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எட்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு உடலுழைப்புக்குப் பின் மேற்படிப்புக்குத் தகுதியான ஏழையர் தவிர அனைவரிடமும் கட்டணம் பெற வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகப் போலி மாந்தநேயத்தைக் காட்டி நம் பொருளியல் நடவடிக்கைகளில் தலையிடும் வெளியுதவி பெறும் "தொண்டு" நிறுவனங்களின் நடவடிக்கைகளை மிகக் கூர்மையாகக் கண்காணித்து அவர்களது இது போன்ற அழிம்பு வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

14.7.09

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

12.7.09

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடி திட்டங்கள்:

1. மூலதனம்:

· வருமான வரியை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· இரண்டாம் நிலை பங்குச் சந்தையை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· பங்குகள் மறு விற்பனையை வெளியிடும் நிறுவனங்களே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். மறுவிற்பனை விலையே பங்குகளின் புதிய முகமதிப்பாக வேண்டும்.

· 10 கோடி உரூபாய்க்கு மேல் மூலதனமுள்ள நிறுவனங்கள், 51 நூற்றுமேனிக்கும் குறையாத மூலதனத்தைப் பங்கு முதலீட்டின் மூலமே பெற வேண்டும்.

· வங்கிகள் பங்குகள் மூலமோ கடன்கள் மூலமோ தொழில் முதலீட்டில் இறங்கக் கூடாது.

· தமிழகத்தில் வெளியார் யாரும் முதலிடக் கூடாது.

· வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடனைக் கொடுப்பவர்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டியுடன் சட்டப் பாதுகாப்பு வேண்டும். கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்குச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும்.

2.நிலமீட்பு:

மாநிலங்கள் சீரமைப்பின் போது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட

· நெய்யாற்றின்கரை, செங்கோட்டையில் பாதி, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகியவற்றைக் கேரளத்திடமிருந்தும்,

· சித்தூர்,புத்தூர், நெல்லூர், திருப்பதி, ஆகியவற்றை ஆந்திரத்திடமிருந்தும்,
· வெங்காலூர், தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவற்றைக் கன்னடத்திடமிருந்தும்,

· கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்தும் மீட்க வேண்டும்.

3. குடியுரிமை:

· 1.11.1956க்குப் பின் தமிழகத்திலும் தமிழகத்துக்குரிய மேற்கூறப்பட்ட பகுதிகளிலும் குடியேறியவர்களுக்குத் தமிழகத்தில் குடியுரிமை கூடாது. அவர்கள் தமிழகத்திலும் தமிழகத்திற்குரிய பகுதிகளிலும் நிலங்கள் வாங்கவோ தொழில்கள் தொடங்கவோ வாணிகம் செய்யவோ உரிமை கூடாது. ஏற்கனவே நிலம் வாங்கியவர்கள், தொழில்கள் தொடங்கியவர்கள், வாணிகம் செய்தவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். 1.11.1956க்கு முன்பே வெளியிலிருந்துவந்து தொழில் வாணிகம் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டுசென்றவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்படும்.

4. நிலவுடைமை:

· நில உச்சவரம்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

· குத்தகைப் பயிர்முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
உடமையாளருக்கும் பயிரிடுவோருக்கும் 50:50 என்ற வாய்பாட்டைக் கையாள வேண்டும். இதில் கோயில்களுக்கோ அறக்கட்டளைகளுக்கோ பிற நிறுவனங்களுக்கோ எந்த விலக்கும் கூடாது.

· உரிமை மாற்று ஆவணமின்றி பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமைமாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத்துறையின் பொறுப்பில் விட வேண்டும்.

· பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி விலை நிறுவுவதைக் கைவிட வேண்டும்.

5. வேளாண்மை:

· வேளாண் விளைபொருட்களைத் தமிழகத்தின் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ, அண்டை மாநிலங்களுக்கோ கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து கொண்டுவருவதற்கும் எந்தத் தடையும் கூடாது.

· வேளாண் விளைபொருட்களில் வாணிகம் செய்ய உரிமம் பெற்ற வாணிகர் முறையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கு உரிமை வேண்டும்.

6. தொழில்வளம்:

· தொழில் தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

· ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஓர் அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிம அலுவலகம் தொடங்க வேண்டும். தேவையானால் மக்களே அவற்றை அமைக்க வேண்டும்.

7. வாணிகம்:
· சில்லரைக் கடைகளில் எந்த வகையான வரியும் தண்டக் கூடாது. எல்லாப் பொருட்களையும் அனைத்து வரிகளும் அடங்கியவாகிய பொதியல்களாகவே விற்க வேண்டும். அவ்வாறு பொதிய முடியாப் பண்டங்கள் இருந்தால் அவற்றுக்கு வரிகளை நீக்க வேண்டும்.

· வாணிகர்கள் அமைப்பாக இணைந்து கூட்டாக பெரும் வாணிக வளாகங்களை அமைப்பதை ஊக்க வேண்டும். நாகர்கோயில் அப்டா சந்தையை ஒரு முன்னோடி அமைப்பாகக் கொள்ளவேண்டும்.

· டாலரின் நாணய மதிப்பை உரூ.30 ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும்.(நம் நாணய மதிப்புக்குச் சமமாக்குவது இறுதி இலக்கு.)

8. பண்பாடு:

· சாதிக்கு பார்ப்பனர், ஆரியர் என்ற பிறர் மீது குற்றம் கூறி நம்மிடையே உறைந்திருக்கும் சாதிவெறியை மறைப்பதைக் கைவிட்டு தத்தம் சாதிகளுக்குள் இருக்கும் சாதி ஆதிக்க வெறியை ஒவ்வொருவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.

· ஆணுக்குப் பெண் இளைத்தவள் என்று அவளுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தும் நம் பண்பாட்டை எதிர்த்து மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பெண்களிடையில் பரப்பல் செய்ய வேண்டும்.

· பல நூறு தன்கள் எடையுள்ள மரக்கட்டை மீது பொம்மையை வைத்து இழுக்கும் மடமையும் கயமையும் நிறைந்த, வருணக் குமுக அமைப்பைக் காட்டும், ஆகமக் கோயில்களை இடித்து நிரவி அனைவரும் சமமாக அமர்ந்து தமிழ் மொழியில் வழிபாடு நிகழ்த்தும் சமய நெறியைப் புகுத்த வேண்டும்.

· பண்டம் விளைப்போரையும் உழைப்போரையும் வினைசெய்து மீண்டும் மீண்டும் பிறந்து உழலும் தீவினையாளர்கள் என்று இழிவுபடுத்தி குண்டியிலிருந்து ஆற்றலை எழுப்பி கடவுளாகலாம் என்று கூறும் உலகில் எங்குமில்லாத கடைகெட்ட ஒட்டுண்ணிக் “குண்டிலினி”க் கோட்பாட்டை அடியோடு ஒழிக்க வேண்டும்.

· ஊருக்கு இளைத்தவனாக அனைவருக்கும் ஏளனத்துக்குரியவனாகத் தமிழனை ஏமாளியாக்கும், இங்குள்ள ஏமாற்றுக்காரர்களுக்கு வாழ்வளிக்கும் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற மடைமையைக் கைவிட்டு தமிழகமே எம் ஊர், தமிழக மக்களே எம் உறவினர் என்ற உறுதியான நிலையை எடுக்க வேண்டும்.


9. கல்வி:

· கட்டாய இலவயக் அகல்வி முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

· தொடக்கக் கல்வி முழுவதும் பத்தாம் வகுப்பு வரை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

· தமிழகம் முழுவதும் பிற மொழிப்பாடங்கள் தவிர தமிழே பாடமொழியாக வேண்டும்.

· உடலுழைப்பு தொடர்பான அனைத்துத் தொழில்களும் குறித்த பாடத்திட்டங்கள் கல்வித் துறையில் புகுத்தப்பட வேண்டும்.

· இளஞ்சிறார்களின் திறமை, மனச்சாய்வு அறிந்து அவர்களை இளங்காணும் உளவியலில் தேர்ந்த ஆசிரியர்களையே மழலை மற்றும் தொடக்க நிலை வகுப்புகளுக்கு அமர்த்த வேண்டும். இயற்கையான திறமைகளை வளர்க்கவும் தீங்கான மனப்போக்குகளை நீக்கவும் தொடக்கக் கல்வியை இந்த வகையில் திட்டமிட வேண்டும்.

· துறைக் கல்விகளில் சான்றிதழ் கல்வி → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டயம் → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டப் படிப்பு என்று இடை முறித்து வழங்க வேண்டும். பணிகளில் நேரடி உயர்பதவி முறையை ஒழிக்க வேண்டும்.

· ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20க்குக் குறையக் கூடாது. அதாவது ஒரு வகுப்பறையல் ஓர் ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

10. சட்டம்:

· இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.

· முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அரசியல் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

11. தேர்தல்:

· வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

· நிறுவப்பட்ட தகுதிகளை உடைய குடிமக்களிலிருந்து அனைத்து வகை ஆள்வினையாளர்களையும் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஊராட்சியின் நடவடிக்கைகளை அதனுள் அடங்கிய குடிமக்களின் ஊர்க்கூட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

· தேர்தல்களை நடத்துவதற்கென்று தனியான ஊழியர்களுடன் நிலையான ஓர் ஆணையம் இயங்க வேண்டும்.


தொடர்புக்கு:
குமரிமைந்தன்
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
72அ. என்.சி.ஓ. நகர், சவகர் நகர் 12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம் - 625 706, பேசி: 97906 52850.
மின்னஞ்சல் kumarimainthan@gmail.com

திரு. பொன். மாறன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (மதுரைக் கிளை)
80ஏ, மேலமாசி வீதி, மதுரை - 625 001, பேசி: 94439 62521.

திரு. இரா.தமிழ்மண்ணன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (பறம்புக்குடி கிளை),
3/538, எம்.சி.ஆர்.நகர், பொன்னையாபுரம், பறம்புக்குடி - 623 707, பேசி: 97893 04325.

தமிழக நிலவரம்(2009) .....5

ஆற்றுநீர்ச் சிக்கலைப் பற்றிச் சிலவற்றைக் கூற வேண்டும்.

இச்சிக்கலில் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை நாம் 1956 நவம்பர் 1ஆம் நாள் இழந்த நிலப்பரப்புகளுக்குள்தாம் இழக்கும் நீருரிமைக்குரிய கட்டமைப்புகள் உள்ளன. எனவே அந்நிலப்பரப்புகளை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் குறிக்கோள்களில் முகாமையான ஒன்று.

அதே வேளையில் இது குறித்து சில செய்திகளைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். 1964இல் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு வரட்சியைப் பயன்படுத்தி, வழக்கமாகச் செய்து வந்த உணவுத் தவச இறக்குமதியை நிறுத்தி, அந்த வகையில் தவிர்த்திருக்கத்தக்க செயற்கையான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தி உழவர்கள் மீது மிகக் கொடுமையான ஒடுக்குமுறைகளை ஏவினார். உணவுத் தவச(தானிய)ங்களின் நடமாட்டத்துக்குப் பெரும் கட்டுப்பாடுகள், உழவர்களும் வாணிகர்களும் அரிசி ஆலைகளும் உணவுத் தவசங்களை வைத்திருப்பதற்குக் கொடுமையான கட்டுப்பாடுகள், அரசு கொள்முதல் நிலையங்களிலும் உரிமம் பெற்ற வாணிகர்களுக்கும்தான் உணவுத் தவசங்களை உழவர்கள் விற்கமுடியும் என்ற நிலை, உணவுத் தவசத்தில் சில்லரை வாணிகத்தை ஒழித்தல் என்று தொடங்கிய கொடுமை இன்றும் தொடர்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு கோடி கோடியாக ஊழல் வருமானம் சேர்கிறது. இதில் பங்கு பெறுவதற்காக நடுவரசு அவ்வப்போது மாநிலத்துக்கு மாநிலம் உணவுத் தவச நடைமாட்டத் தடையை நீக்குவதாக அறிவிக்கும். உடனே மாநிலங்கள் தங்கள் ஊழல் பங்கை உரியவர்களிடம் சேர்க்கும். இது இன்றுவரை தொடர்கிறது. முடையிருப்பு என்ற பெயரில் நடுவரசும் மாநில அரசுகளும் பல கோடி தன்கள் உணவுத் தவசங்களை வாங்கி வெட்டவெளியில் போட்டு பெருமளவில் அழிய விட்டுக் கள்ளக் கணக்கு எழுதி அதிலும் கொள்ளையடிக்கிறார்கள். இந்தக் கொடுமை நின்று போகாமல் நம் பொதுமைக் கட்சிகள் கண்கொத்திப் பாம்புகள் போல் கண்காணிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தக் கெடுபிடிகளெல்லாம் செயற்கையானவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1977இல் பதவியேற்ற சனதா அரசு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியதும் பங்கீட்டுக் கடைவிலைக்கும் வெளிச் சந்தை விலைக்கும் இடைவெளியின்றி பங்கீட்டுக் கடைகள் ஏறக்குறைய செயலிழக்கும் நிலை வந்தது. அமெரிக்கக் கையாளான இராசநாராயணன் வகையறாக்கள் அந்த ஆட்சியைக் கவிழ்க்க, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா அக்கட்டுப்பாடுகளை மீண்டும் புகுத்தினார்.

பொதுமைத் தோழர்களைப் பொறுத்தவரை, அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் அரசின் கீழ் வர வேண்டும்; அரசூழியர் படை பெருக வேண்டும்; சங்கங்களை அமைக்க வேண்டும்; அவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும்; அதில் பங்குபெற வேண்டும்; கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் போராட வேண்டும்; கிடைத்ததிலும் பங்கு பெற வேண்டும். தொழில்கள் நட்டமடைந்தால் மக்களின் வரிப் பணத்தை “மானியமா”கக் கொடுக்க வேண்டும்; வருமான வரியை முடுக்கிவிட்டு பனியாக்களுக்குப் போட்டியாகத்தக்க பல்வேறு தேசியங்களின் மூலதனத்தை முடக்க வேண்டும். மாதத்துக்கு 70,000க்கு மேல் சம்பளமும் அதற்கு மேல் கிம்பளமும் எத்தனையோ பக்க வருமானமும் வரவுவைக்கும் உயரதிகாரிகள் அவ்வளவையும் வாங்கி கிழமைக்கு ஏழு மணி நேரம் மட்டும் பணி செய்ய வேண்டிய பேராசிரியர்கள் தலைமையில் சங்கங்களும் கலை – இலக்கியப் பேரவை, முற்போக்கும் இலக்கிய மன்றங்களும் அமைத்துப் “பாட்டாளியப் புரட்சி” பற்றி நீட்டி முழங்க வேண்டும். பத்தாயிரம் உரூபாய் ஈட்டுவதற்கு நாய் படா பாடு படும் சிறுதொழில் செய்வோனையும் சிறு வாணிகனையும் சுரண்டல்காரன், கொள்ளை அடிப்பவன், அரத்தக் காட்டேரி என்று ஈவிரக்கமின்றி வசைபாடி அவன் உள் வலிமையை அழித்து அடித்தாலும் அழமுயலாத திருடன் மனநிலையில் அமிழ்த்தி தேசிய ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் விருப்பம் போல் நம் செல்வங்களைக் கொள்ளை கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? எந்த மூலையில் எந்தக் கடையின் முன்னால், எந்த அலுவலகத்தில் கையேந்திக் காத்துக்கிடந்தால் என்ன? எவன் எந்த நாட்டைக் கொள்ளையடித்தால் என்ன?

நில உச்சவரம்பால் 10 ஆயிரம் கணக்கில் நிலம் வைத்திருந்த பெரும் முதலைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். 100 ஏக்கருக்கு உட்பட்டவர்கள்தாம் இல்லாமல் ஆனார்கள். அதனால் வேளாண்மையில் வலிமையான அரசியல் விசைகள் இல்லாமல் போயின. எனவே நீர் வரத்துகளில் அண்டை மாநிலங்கள் கைவைத்த போது எழுந்து நின்று போராடும் வலிமை வேளாண் மக்களுக்கு இல்லாமல் போயிற்று.

இந்நிலையில் 1990களின் நடுப்பகுதியில் கரூர் பூ.அர.குப்புசாமி அவர்கள் காவிரி நீர் தொடர்பாகத் திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உழவர்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொடுமைகளை விளக்கி இந்தச் சிக்கலையும் சேர்த்து முன்னெடுத்தால்தான் காவிரிச் சிக்கலில் உழவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறினேன். கலந்துகொண்ட வேளாண் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரியவர் குப்புசாமி அது குறித்து எதுவும் கூறவில்லை. அடுத்து அவர் கரூரில் கூட்டிய கட்டத்தில் உழவர் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தொண்டு நிறுவனங்கள்தாம் கலந்துகொண்டன. உழவர்களின் சிக்கல்களுக்கு சீமை உரங்கள் மட்டும்தான் ஒரே காரணம் என்று அவர்கள் அடித்துக்கூறினர்.

பின்னர் எமது இயக்கத்தின் சார்பில் பெரியாற்று அணை நீர் உரிமைப் போராட்டம் குறித்து கம்பம் உழவர் சங்கத் தலைவர் அப்பாசு என்பவரிடம் அவர் வீட்டில் சந்தித்து எம் கருத்தை எடுத்துரைத்தோம். அடுத்த நாள் காலையில் எங்களை அவர் வரச்சொல்ல, சென்ற போது வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்கள் எங்களைத் திட்டி விரட்டினர்.

அதன் பின்னர் மதுரையில் பெரியாற்று நீருரிமை குறித்து ஒரு மாநாடு நடந்தது. அதை திரு.தியாகு அவர்கள் ஒருங்கிணைத்தார் என்று நினைவு. அதில் அந்த அப்பாசும் கலந்து கொண்டார். அவர் தி.மு.க. என்று அறிந்தேன். மாநாட்டு மலருக்காக மதுரை திரு.வி.மாறன் கட்டுரை கேட்டிருந்தார். விடுத்தேன். மாநாட்டில் என் கருத்துகளை எடுத்துரைத்தேன். அனைவரும் பாராட்டினர். மாநாட்டு மலர் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பூ.அர.குப்புசாமியும் கலந்துகொண்டார். பின்னர் அப்பாசு அவர்கள் கேட்டதற்கு இணங்க பெரியாற்று ஆணையைக் கட்டிய ஆங்கிலப் பொறியாளர் பென்னிக்குயிக்குக்கு ஒரு சிலை வைத்துக்கொடுத்தார் கருணாநிதி. பெரியாற்று அணை நீருக்கு நமக்குக் கிடைத்த விலை இந்தச் சிலைதான். ஆனால் கருணாநிதிக்கோ கேரளத்தில் இரண்டு மூன்று தொ.காட்சி வாய்க்கால்கள் கிடைத்தன. நமக்குத் தெரியாமல் என்னென்னவோ, எத்தனை எத்தனையோ! தி.க. தலைவர் கி.வீரமணி செயலலிதாவின் காலடியில் இருந்த போது கருணாநிதியைக் குறைசொல்ல ஒரு வாய்ப்பாகக் காவிரிச் சிக்கலை எடுத்துவைப்பவராகச் செயற்பட்ட பூ.அர.குப்புசாமி, “மானமிகு” வீரமணி கருணாநிதியின் காலடிக்கு வந்ததும் ஓய்வுக்குப் போய்விட்டார்.

மதுரை மாநாடு உண்மையில் பூ.அர.குப்புசாமியின் முயற்சிக்கு இணையாக தி.மு.க. சார்பில் நடத்தப்படதுதான். இரண்டும் ஒரு நாடகத்தின் இரண்டு அங்கங்கள். தமிழகத்திலுள்ள “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் கருணாநிதி பக்கம் இருந்ததற்கு இம்மாநாடும் ஒரு சான்று.

தஞ்சையிலும் ஒரு பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் நடந்தது. நானும் கலந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். இது குறித்து த.தே.பொ.க.தலைவர் மணியரசனுடன் மடல் போக்குவரத்தும் வைத்துக்கொண்டேன். எந்தப் பயனும் இல்லை. இங்கும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு எந்தத் “தமிழ்த் தேசிய” அமைப்பும் முன்வரவில்லை.

இதற்குக் காரணம்தான் என்ன? நாம் மேலே குறிப்பிட்டவாறு “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகளின் கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். தாம் வாழும் மண்ணின் மீது மனத்தளவில் வேர் கொள்ளாதவர்கள் இவர்கள். ஊர்ப்புறங்களிலிருந்து வெளியேறிய பார்ப்பனர்கள் அனைந்திந்தியப் பணிகளிலும் பெரும் நிறுவனங்களின் ஆட்சிப் பணிகளிலும் இடம் பிடித்தனர். அவர்களோடு இவர்கள் ஒதுக்கீட்டின் மூலம் பங்குக்காகப் போட்டியிடப் போராடுகின்றனர். வெளிநாடுகளிலும் பார்ப்பனர்களோடு இதே போட்டி உள்ளது. அதனால் பார்ப்பனர்களே அவர்களின் முதல் எதிரி, பெரிய எதிரி. (எலிக்கு பூனைதான் உலகிலேயே பெரிய விலங்காம் தோழர் லேனின் அடிக்கடி சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டு இது.) அவ்வாறு தமிழகத்திலுள்ள பார்ப்பனரல்லா “கீழ்” (பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட) சாதிகளில் மேல்தட்டிலுள்ள ஒட்டுண்ணி வாழ்க்கையை நாடுவோரின் நலன்களை நிகரளிப்பவர்களாகவே இந்தத் தலைவர்கள் விளங்குகின்றனர்.

இந்த ஒட்டுண்ணிப் பணிகளில் இடம் பிடிப்பதற்காகப் போராடிப் பெற்ற ஒதுக்கீட்டினால்தான் தமிழக மக்கள் அணு அணுவாகச் சிதைந்து சிதறிக் கிடக்கிறார்கள். ஒதுக்கீட்டுக்கான போராட்ட காலத்தில் பார்ப்பனர் தவிர்த்த அனைத்துச் சாதியினரும் தம் சாதிவெறியைச் சிறிது அடக்கி வைத்திருந்தனர். ஆனால் ஒதுக்கீடு கிட்டியதும் முதலில் வெள்ளாளர் உட்பட பிற மேல்சாதியினர் தமக்கு வரும் இழப்பை ஈடுகட்ட அரசுடைமை நிறுவனங்களில் இடம்பிடித்துத் தப்பித்துக்கொண்டனர். அத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் படித்தவர்களை வெளிக்கொணர முடியாததால் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டால் எந்தப் பெரும் சிக்கலும் உருவாகவில்லை. ஆனால் படித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்து அதற்கு வேலைவாய்ப்புகள் ஈடுகொடுக்க முடியாதபோது சிக்கல்கள் உருவாயின. முதலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையில் மாணவர்கள் மட்டத்தில் மோதல்கள் வெடித்தன. அடுத்து பிற்படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்றொரு வகைப்பாட்டுக்காகப் போராட்டம். தாழ்த்தப்பட்டோரில் பறையர், பள்ளர்களிடையில் பிளவு. கிறித்துவர்களிடையில் மேல்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிளவு. புதிய புதிய சாதி அமைப்புகள். தங்கள் சொந்த நலன்களைக்காகவும் மேல்மட்டத்தினர்க்கு ஒதுக்கீடு கிடைக்கவும் அடித்தள மக்களுக்குச் சாதிவெறியூட்டிப் பிற சாதி மக்களோடு மோதவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக்கி விலை பேசி விற்கும் தலைவர்கள் ஒவ்வொரு சாதியிலும் சாதிப் பிரிவிலும் உருவாகிவிட்டது என்று தமிழகத்தில் மக்கள் அணு அணுவாகப் பிளக்கப்பட்டுள்ளனர். சமயங்களுக்குள்ளும் புதிது புதிதாகப் பிளவுகள் தோன்றிவருகின்றன. பிற மொழி பேசும் மக்களிடையிலும் இதே நிலை.

ஒரு நெருக்கடித் தீர்வாக மட்டும் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வென்ற உடனேயே நம் தலைவர்கள் நாணயமானவர்களாக இருந்திருந்தால் அனைவருக்கும் கல்விக்காகப் போராடி திட்டங்களும் தீட்டியிருப்பார்கள். அதுதான் போகட்டும் இன்றைய “சாதி ஒழிப்புப் புரட்சியாளர்”கள் அந்தத் திசையில் சிந்திக்கவாவது செய்திருக்கிறார்களா? செய்யாமல் போனாலும் போகட்டும், கேடாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடும் “தமிழீனத் தலைவர்”தானே 1க்கு 20 ஆக இருந்த ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1க்கு 40 ஆக்கியது? கருணாநிதிதானே பள்ளிகளில் காலியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமலும் தொடக்கப்பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக்கியும் குழந்தைகளை ஆங்கில வாயில் பள்ளிகளுக்குத் துரத்தியது? இன்று புதிய புதிய “திட்டங்களி”ன் பெயரில் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவே இல்லாத நிலையை உருவாக்கி பண்டை வரணமுறையைப் புகுத்திக்கொண்டிருப்பது? கருணாநிதியின் பின்னர் அணிவகுத்து நிற்கும் உங்களுக்கு சாதி ஒழிப்பைப் பற்றியும் வருணமுறை ஒழிப்பைப் பற்றியும் பேச என்ற தகுதி இருக்கிறது? சாதி சார்ந்த, வருணம் சார்ந்த உங்கள் மனச்சாய்வை இது காட்டவில்லையா? சொந்தச் சாதி ஏழை மக்கள் உங்கள் மட்டத்துக்கு உயரவிடாமல் தடையாயிருப்பது நீங்கள் தானே?

மக்களுக்கு எதிராக அரசூழியரை ஊட்டி வளர்க்கும் கருணாநிதி அவர்களுக்கு இடையிலும் பல்வேறு பிரிவுகளை உருவாக்கித் தீர்க்க முடியாச் சிக்கல்களாக்கி வைத்துள்ளார். இதனால் முழுத் தமிழ்க் குமுகமே எண்ணற்ற குழுக்களாகப் பிளவுண்டு ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பது தவிர வேறு நோக்கில்லாமல் போயிற்று. அதனால் ஆட்சியாளர்கள் அயலாருடன் சேர்ந்து நடத்தும் கயமைகள் மக்களின் கவனத்துக்கு வராமலே போகிறது. மார்வாரியையும் மலையாளியையும் விட அண்டை வீட்டுக்காரனே முதல் எதிரியாகத் தெரிகிறான் நமக்கு. அப்படியிருக்க ஈழத்தவரை அழிக்கும் இராசபக்சே மீதோ அவர்களுக்குத் துணையாக இருக்கும் கருணாநிதி மீதோ சோனியா மீதோ நமது கவனம் எப்படிச் செல்லும்?

அண்டை மாநிலங்களைப் பொறுத்தவரை சென்னை மாகாணத்திலிருந்த அண்டை மாநில மொழி பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்கள் தொடர்பாக வந்த மனப் புகைச்சலுடன் பண்டை வரலாற்றுத் தொடர்ச்சியான பகைமையும் உண்டு. இதனையே மூலதனமாகக் கொண்டு அங்கு ஆண்டுவரும் இந்தியக் கட்சிகள் அதைப் பகையாக்கி அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறார்கள். ஆனால் வல்லரசியம், தில்லியின் மேலாளுமைகள் என்ற வகையில் பல நெருக்கடிகள் அம்மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களுக்கும் இருக்கின்றன. எனவே உண்மையான தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் சென்றால் அங்கெல்லாம் தேசிய நலன்களைக் கொண்ட குழுக்கள் வெளிப்பட்டு பகைமை உணர்வுகளைத் தணிக்க முனையும். ஒத்துழைப்புகள் உருவாகும்.

நம் நாடு என்னதான் வல்லரசிய ஊடுருவலால் முதலாளிய நாடு போன்று தோன்றினாலும் அத்தோற்றம் மிக மேலோட்டமான ஒரு போர்வையே. வளர்ச்சி என்பது உண்மையில் வீக்கமே. உண்மையில் அடித்தளத்தில் நிலக்கிழமைக் கூறுகளும் குக்குல(இனக்குழு)க் கூறுகளுமே மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை உடைத்து தேசிய முதலாளியத்தை நோக்கிச் செல்லும்போதுதான் சாதியற்ற நிலைமைக்கான அடித்தளம் உருவாகும்.

தேசிய அரசியல் விடுதலையாயிருந்தாலும் பொருளியல் விடுதலையாயிருந்தாலும் இன்றைய தமிழகத்தில் அதற்கான முலவிசை நிலக்கிழமைக் குமுகத்திலுள்ள முற்போக்கு விசைகளே. அவை வளர்ந்து தேசிய முதலாளியத்தை வளர்த்துப் புரட்சிகரமான பாட்டாளியரை உருவாக்குவது வரை முதலாளியரும் பாட்டாளியரும் இணைந்து தேசிய எதிரிகளையும் நிலக்கிழமைக் கூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் வெளியிலிருந்து இறக்குமதியான பாட்டாளியக் கோட்பாடு தேசிய முதலாளியம் உருவாகத் தடையாக இருக்கிறது. அதனை மாற்றவே நாம் பங்கு வாணிகம் என்ற சூதாட்டம் இல்லாத பங்கு மூலதனத்தில் பாட்டாளியரும் முதலாளியரும் கூடி இயங்கும் ஒரு கூட்டுடைமை முதலாளியத்தைப் பரிந்துரைக்கிறோம்.

“தமிழ்த் தேசிய” இயக்கங்களும் “தமிழ்” இயக்கங்களும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு மாற்றாக ஈழவிடுதலைப் போரைப் பார்த்தும் காட்டியும் மனநிறைவடைந்து வந்தன. இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் பிற அரங்குகளிலும் தமிழக விடுதலை (அது என்னவோ கிட்டிப்புள் விளையாட்டு என்பது போல் – அதுதானே நம் “மரபு” விளையாட்டு) பற்றி அல்லது தமிழ்மொழி வளர்ச்சி, அதற்கு எதிரான நிலைமைகள் பற்றிப் பேசுவர். இறுதியில் ஈழத்துவிடுதலைப் புலிகளின் வெற்றி முழக்கம் பற்றி நெடுமாறன் விரிவான ஒரு உரை நிகழ்த்துவார். தன்னால் இயலாதவன் அடுத்தவன் புணர்வதைப் பார்த்தோ அதைப் பற்றிப் பேசக் கேட்டோ உணர்ச்சியும் உவகையும் மனநிறைவும் கொள்வது போல நம் “தமிழ்த் தேசியர்கள்” மெய்ம்மறந்து மெய்சிலிர்த்துப் போவார்கள். இதுதான் ஆண்டுகள் பலவாகத் தமிழகத்தில் “தமிழ்த் தேசிய”ச் செயற்பாடு. இது உள்நாட்டின் மீது வேர் கொள்ளாத ஒரு நிலைப்பாட்டின் விளைவும் வெளிப்பாடுமன்றி வேறென்ன? ஈழத் தேசிய வெற்றி தமிழ்த் தேசிய வெற்றிக்குக் கொண்டு செல்லும் என்று முடித்துக் கூற முடியாது. ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டம் வலிமை பெற்றிருந்தால் அது கட்டாயம் இந்திய ஆட்சியாளரையும் கருணாநிதியையும் தடுத்து நிறுத்தியிருக்கும். ஈழத் தேசிய வெற்றிக்குக் கைகொடுத்திருக்கும். இன்றைய கையறு நிலை ஏற்பட்டிருக்காது என்பது உறுதியிலும் உறுதி.

எதுவுமே எப்போதுமே காலங்கடந்ததாகி விடாது. காலம் எப்போதுமே புதிய வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருக்கும். உன்னிப்பாகப் பார்த்து முன்னேறுவோம்! வெல்வோம்!

தேசிய விடுதலை என்பது அரசியல் விடுதலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியிருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை பொருளற்றது, பயனற்றது.

பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை தில்லியிலிருக்கும் அதிகாரத்தைச் சென்னைக்குக் கொண்டு வரும்; கருணாநிதி, செயலலிதா வகையறாக்கள் கேள்வி கேட்பின்றிக் கொள்ளையடிப்பார்கள் அவ்வளவுதான்,

நாம் மக்களுக்கான பொருளியல் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம்! அரசின் ஆட்சியாக இருப்பது மக்களின் ஆட்சியாக மாற வேண்டுமென்று கேட்கிறோம்! இந்திய மக்கள் அனைவருக்கும் பொருளியல் உரிமைகள் வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு நாம் நம் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!