மார்க்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.7.09

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.

12.7.09

தமிழக நிலவரம்(2009) .....5

ஆற்றுநீர்ச் சிக்கலைப் பற்றிச் சிலவற்றைக் கூற வேண்டும்.

இச்சிக்கலில் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை நாம் 1956 நவம்பர் 1ஆம் நாள் இழந்த நிலப்பரப்புகளுக்குள்தாம் இழக்கும் நீருரிமைக்குரிய கட்டமைப்புகள் உள்ளன. எனவே அந்நிலப்பரப்புகளை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் குறிக்கோள்களில் முகாமையான ஒன்று.

அதே வேளையில் இது குறித்து சில செய்திகளைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். 1964இல் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு வரட்சியைப் பயன்படுத்தி, வழக்கமாகச் செய்து வந்த உணவுத் தவச இறக்குமதியை நிறுத்தி, அந்த வகையில் தவிர்த்திருக்கத்தக்க செயற்கையான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தி உழவர்கள் மீது மிகக் கொடுமையான ஒடுக்குமுறைகளை ஏவினார். உணவுத் தவச(தானிய)ங்களின் நடமாட்டத்துக்குப் பெரும் கட்டுப்பாடுகள், உழவர்களும் வாணிகர்களும் அரிசி ஆலைகளும் உணவுத் தவசங்களை வைத்திருப்பதற்குக் கொடுமையான கட்டுப்பாடுகள், அரசு கொள்முதல் நிலையங்களிலும் உரிமம் பெற்ற வாணிகர்களுக்கும்தான் உணவுத் தவசங்களை உழவர்கள் விற்கமுடியும் என்ற நிலை, உணவுத் தவசத்தில் சில்லரை வாணிகத்தை ஒழித்தல் என்று தொடங்கிய கொடுமை இன்றும் தொடர்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு கோடி கோடியாக ஊழல் வருமானம் சேர்கிறது. இதில் பங்கு பெறுவதற்காக நடுவரசு அவ்வப்போது மாநிலத்துக்கு மாநிலம் உணவுத் தவச நடைமாட்டத் தடையை நீக்குவதாக அறிவிக்கும். உடனே மாநிலங்கள் தங்கள் ஊழல் பங்கை உரியவர்களிடம் சேர்க்கும். இது இன்றுவரை தொடர்கிறது. முடையிருப்பு என்ற பெயரில் நடுவரசும் மாநில அரசுகளும் பல கோடி தன்கள் உணவுத் தவசங்களை வாங்கி வெட்டவெளியில் போட்டு பெருமளவில் அழிய விட்டுக் கள்ளக் கணக்கு எழுதி அதிலும் கொள்ளையடிக்கிறார்கள். இந்தக் கொடுமை நின்று போகாமல் நம் பொதுமைக் கட்சிகள் கண்கொத்திப் பாம்புகள் போல் கண்காணிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தக் கெடுபிடிகளெல்லாம் செயற்கையானவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1977இல் பதவியேற்ற சனதா அரசு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியதும் பங்கீட்டுக் கடைவிலைக்கும் வெளிச் சந்தை விலைக்கும் இடைவெளியின்றி பங்கீட்டுக் கடைகள் ஏறக்குறைய செயலிழக்கும் நிலை வந்தது. அமெரிக்கக் கையாளான இராசநாராயணன் வகையறாக்கள் அந்த ஆட்சியைக் கவிழ்க்க, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா அக்கட்டுப்பாடுகளை மீண்டும் புகுத்தினார்.

பொதுமைத் தோழர்களைப் பொறுத்தவரை, அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் அரசின் கீழ் வர வேண்டும்; அரசூழியர் படை பெருக வேண்டும்; சங்கங்களை அமைக்க வேண்டும்; அவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும்; அதில் பங்குபெற வேண்டும்; கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் போராட வேண்டும்; கிடைத்ததிலும் பங்கு பெற வேண்டும். தொழில்கள் நட்டமடைந்தால் மக்களின் வரிப் பணத்தை “மானியமா”கக் கொடுக்க வேண்டும்; வருமான வரியை முடுக்கிவிட்டு பனியாக்களுக்குப் போட்டியாகத்தக்க பல்வேறு தேசியங்களின் மூலதனத்தை முடக்க வேண்டும். மாதத்துக்கு 70,000க்கு மேல் சம்பளமும் அதற்கு மேல் கிம்பளமும் எத்தனையோ பக்க வருமானமும் வரவுவைக்கும் உயரதிகாரிகள் அவ்வளவையும் வாங்கி கிழமைக்கு ஏழு மணி நேரம் மட்டும் பணி செய்ய வேண்டிய பேராசிரியர்கள் தலைமையில் சங்கங்களும் கலை – இலக்கியப் பேரவை, முற்போக்கும் இலக்கிய மன்றங்களும் அமைத்துப் “பாட்டாளியப் புரட்சி” பற்றி நீட்டி முழங்க வேண்டும். பத்தாயிரம் உரூபாய் ஈட்டுவதற்கு நாய் படா பாடு படும் சிறுதொழில் செய்வோனையும் சிறு வாணிகனையும் சுரண்டல்காரன், கொள்ளை அடிப்பவன், அரத்தக் காட்டேரி என்று ஈவிரக்கமின்றி வசைபாடி அவன் உள் வலிமையை அழித்து அடித்தாலும் அழமுயலாத திருடன் மனநிலையில் அமிழ்த்தி தேசிய ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் விருப்பம் போல் நம் செல்வங்களைக் கொள்ளை கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? எந்த மூலையில் எந்தக் கடையின் முன்னால், எந்த அலுவலகத்தில் கையேந்திக் காத்துக்கிடந்தால் என்ன? எவன் எந்த நாட்டைக் கொள்ளையடித்தால் என்ன?

நில உச்சவரம்பால் 10 ஆயிரம் கணக்கில் நிலம் வைத்திருந்த பெரும் முதலைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். 100 ஏக்கருக்கு உட்பட்டவர்கள்தாம் இல்லாமல் ஆனார்கள். அதனால் வேளாண்மையில் வலிமையான அரசியல் விசைகள் இல்லாமல் போயின. எனவே நீர் வரத்துகளில் அண்டை மாநிலங்கள் கைவைத்த போது எழுந்து நின்று போராடும் வலிமை வேளாண் மக்களுக்கு இல்லாமல் போயிற்று.

இந்நிலையில் 1990களின் நடுப்பகுதியில் கரூர் பூ.அர.குப்புசாமி அவர்கள் காவிரி நீர் தொடர்பாகத் திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உழவர்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொடுமைகளை விளக்கி இந்தச் சிக்கலையும் சேர்த்து முன்னெடுத்தால்தான் காவிரிச் சிக்கலில் உழவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறினேன். கலந்துகொண்ட வேளாண் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரியவர் குப்புசாமி அது குறித்து எதுவும் கூறவில்லை. அடுத்து அவர் கரூரில் கூட்டிய கட்டத்தில் உழவர் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தொண்டு நிறுவனங்கள்தாம் கலந்துகொண்டன. உழவர்களின் சிக்கல்களுக்கு சீமை உரங்கள் மட்டும்தான் ஒரே காரணம் என்று அவர்கள் அடித்துக்கூறினர்.

பின்னர் எமது இயக்கத்தின் சார்பில் பெரியாற்று அணை நீர் உரிமைப் போராட்டம் குறித்து கம்பம் உழவர் சங்கத் தலைவர் அப்பாசு என்பவரிடம் அவர் வீட்டில் சந்தித்து எம் கருத்தை எடுத்துரைத்தோம். அடுத்த நாள் காலையில் எங்களை அவர் வரச்சொல்ல, சென்ற போது வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்கள் எங்களைத் திட்டி விரட்டினர்.

அதன் பின்னர் மதுரையில் பெரியாற்று நீருரிமை குறித்து ஒரு மாநாடு நடந்தது. அதை திரு.தியாகு அவர்கள் ஒருங்கிணைத்தார் என்று நினைவு. அதில் அந்த அப்பாசும் கலந்து கொண்டார். அவர் தி.மு.க. என்று அறிந்தேன். மாநாட்டு மலருக்காக மதுரை திரு.வி.மாறன் கட்டுரை கேட்டிருந்தார். விடுத்தேன். மாநாட்டில் என் கருத்துகளை எடுத்துரைத்தேன். அனைவரும் பாராட்டினர். மாநாட்டு மலர் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பூ.அர.குப்புசாமியும் கலந்துகொண்டார். பின்னர் அப்பாசு அவர்கள் கேட்டதற்கு இணங்க பெரியாற்று ஆணையைக் கட்டிய ஆங்கிலப் பொறியாளர் பென்னிக்குயிக்குக்கு ஒரு சிலை வைத்துக்கொடுத்தார் கருணாநிதி. பெரியாற்று அணை நீருக்கு நமக்குக் கிடைத்த விலை இந்தச் சிலைதான். ஆனால் கருணாநிதிக்கோ கேரளத்தில் இரண்டு மூன்று தொ.காட்சி வாய்க்கால்கள் கிடைத்தன. நமக்குத் தெரியாமல் என்னென்னவோ, எத்தனை எத்தனையோ! தி.க. தலைவர் கி.வீரமணி செயலலிதாவின் காலடியில் இருந்த போது கருணாநிதியைக் குறைசொல்ல ஒரு வாய்ப்பாகக் காவிரிச் சிக்கலை எடுத்துவைப்பவராகச் செயற்பட்ட பூ.அர.குப்புசாமி, “மானமிகு” வீரமணி கருணாநிதியின் காலடிக்கு வந்ததும் ஓய்வுக்குப் போய்விட்டார்.

மதுரை மாநாடு உண்மையில் பூ.அர.குப்புசாமியின் முயற்சிக்கு இணையாக தி.மு.க. சார்பில் நடத்தப்படதுதான். இரண்டும் ஒரு நாடகத்தின் இரண்டு அங்கங்கள். தமிழகத்திலுள்ள “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் கருணாநிதி பக்கம் இருந்ததற்கு இம்மாநாடும் ஒரு சான்று.

தஞ்சையிலும் ஒரு பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் நடந்தது. நானும் கலந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். இது குறித்து த.தே.பொ.க.தலைவர் மணியரசனுடன் மடல் போக்குவரத்தும் வைத்துக்கொண்டேன். எந்தப் பயனும் இல்லை. இங்கும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு எந்தத் “தமிழ்த் தேசிய” அமைப்பும் முன்வரவில்லை.

இதற்குக் காரணம்தான் என்ன? நாம் மேலே குறிப்பிட்டவாறு “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகளின் கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். தாம் வாழும் மண்ணின் மீது மனத்தளவில் வேர் கொள்ளாதவர்கள் இவர்கள். ஊர்ப்புறங்களிலிருந்து வெளியேறிய பார்ப்பனர்கள் அனைந்திந்தியப் பணிகளிலும் பெரும் நிறுவனங்களின் ஆட்சிப் பணிகளிலும் இடம் பிடித்தனர். அவர்களோடு இவர்கள் ஒதுக்கீட்டின் மூலம் பங்குக்காகப் போட்டியிடப் போராடுகின்றனர். வெளிநாடுகளிலும் பார்ப்பனர்களோடு இதே போட்டி உள்ளது. அதனால் பார்ப்பனர்களே அவர்களின் முதல் எதிரி, பெரிய எதிரி. (எலிக்கு பூனைதான் உலகிலேயே பெரிய விலங்காம் தோழர் லேனின் அடிக்கடி சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டு இது.) அவ்வாறு தமிழகத்திலுள்ள பார்ப்பனரல்லா “கீழ்” (பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட) சாதிகளில் மேல்தட்டிலுள்ள ஒட்டுண்ணி வாழ்க்கையை நாடுவோரின் நலன்களை நிகரளிப்பவர்களாகவே இந்தத் தலைவர்கள் விளங்குகின்றனர்.

இந்த ஒட்டுண்ணிப் பணிகளில் இடம் பிடிப்பதற்காகப் போராடிப் பெற்ற ஒதுக்கீட்டினால்தான் தமிழக மக்கள் அணு அணுவாகச் சிதைந்து சிதறிக் கிடக்கிறார்கள். ஒதுக்கீட்டுக்கான போராட்ட காலத்தில் பார்ப்பனர் தவிர்த்த அனைத்துச் சாதியினரும் தம் சாதிவெறியைச் சிறிது அடக்கி வைத்திருந்தனர். ஆனால் ஒதுக்கீடு கிட்டியதும் முதலில் வெள்ளாளர் உட்பட பிற மேல்சாதியினர் தமக்கு வரும் இழப்பை ஈடுகட்ட அரசுடைமை நிறுவனங்களில் இடம்பிடித்துத் தப்பித்துக்கொண்டனர். அத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் படித்தவர்களை வெளிக்கொணர முடியாததால் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டால் எந்தப் பெரும் சிக்கலும் உருவாகவில்லை. ஆனால் படித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்து அதற்கு வேலைவாய்ப்புகள் ஈடுகொடுக்க முடியாதபோது சிக்கல்கள் உருவாயின. முதலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையில் மாணவர்கள் மட்டத்தில் மோதல்கள் வெடித்தன. அடுத்து பிற்படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்றொரு வகைப்பாட்டுக்காகப் போராட்டம். தாழ்த்தப்பட்டோரில் பறையர், பள்ளர்களிடையில் பிளவு. கிறித்துவர்களிடையில் மேல்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிளவு. புதிய புதிய சாதி அமைப்புகள். தங்கள் சொந்த நலன்களைக்காகவும் மேல்மட்டத்தினர்க்கு ஒதுக்கீடு கிடைக்கவும் அடித்தள மக்களுக்குச் சாதிவெறியூட்டிப் பிற சாதி மக்களோடு மோதவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக்கி விலை பேசி விற்கும் தலைவர்கள் ஒவ்வொரு சாதியிலும் சாதிப் பிரிவிலும் உருவாகிவிட்டது என்று தமிழகத்தில் மக்கள் அணு அணுவாகப் பிளக்கப்பட்டுள்ளனர். சமயங்களுக்குள்ளும் புதிது புதிதாகப் பிளவுகள் தோன்றிவருகின்றன. பிற மொழி பேசும் மக்களிடையிலும் இதே நிலை.

ஒரு நெருக்கடித் தீர்வாக மட்டும் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வென்ற உடனேயே நம் தலைவர்கள் நாணயமானவர்களாக இருந்திருந்தால் அனைவருக்கும் கல்விக்காகப் போராடி திட்டங்களும் தீட்டியிருப்பார்கள். அதுதான் போகட்டும் இன்றைய “சாதி ஒழிப்புப் புரட்சியாளர்”கள் அந்தத் திசையில் சிந்திக்கவாவது செய்திருக்கிறார்களா? செய்யாமல் போனாலும் போகட்டும், கேடாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடும் “தமிழீனத் தலைவர்”தானே 1க்கு 20 ஆக இருந்த ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1க்கு 40 ஆக்கியது? கருணாநிதிதானே பள்ளிகளில் காலியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமலும் தொடக்கப்பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக்கியும் குழந்தைகளை ஆங்கில வாயில் பள்ளிகளுக்குத் துரத்தியது? இன்று புதிய புதிய “திட்டங்களி”ன் பெயரில் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவே இல்லாத நிலையை உருவாக்கி பண்டை வரணமுறையைப் புகுத்திக்கொண்டிருப்பது? கருணாநிதியின் பின்னர் அணிவகுத்து நிற்கும் உங்களுக்கு சாதி ஒழிப்பைப் பற்றியும் வருணமுறை ஒழிப்பைப் பற்றியும் பேச என்ற தகுதி இருக்கிறது? சாதி சார்ந்த, வருணம் சார்ந்த உங்கள் மனச்சாய்வை இது காட்டவில்லையா? சொந்தச் சாதி ஏழை மக்கள் உங்கள் மட்டத்துக்கு உயரவிடாமல் தடையாயிருப்பது நீங்கள் தானே?

மக்களுக்கு எதிராக அரசூழியரை ஊட்டி வளர்க்கும் கருணாநிதி அவர்களுக்கு இடையிலும் பல்வேறு பிரிவுகளை உருவாக்கித் தீர்க்க முடியாச் சிக்கல்களாக்கி வைத்துள்ளார். இதனால் முழுத் தமிழ்க் குமுகமே எண்ணற்ற குழுக்களாகப் பிளவுண்டு ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பது தவிர வேறு நோக்கில்லாமல் போயிற்று. அதனால் ஆட்சியாளர்கள் அயலாருடன் சேர்ந்து நடத்தும் கயமைகள் மக்களின் கவனத்துக்கு வராமலே போகிறது. மார்வாரியையும் மலையாளியையும் விட அண்டை வீட்டுக்காரனே முதல் எதிரியாகத் தெரிகிறான் நமக்கு. அப்படியிருக்க ஈழத்தவரை அழிக்கும் இராசபக்சே மீதோ அவர்களுக்குத் துணையாக இருக்கும் கருணாநிதி மீதோ சோனியா மீதோ நமது கவனம் எப்படிச் செல்லும்?

அண்டை மாநிலங்களைப் பொறுத்தவரை சென்னை மாகாணத்திலிருந்த அண்டை மாநில மொழி பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்கள் தொடர்பாக வந்த மனப் புகைச்சலுடன் பண்டை வரலாற்றுத் தொடர்ச்சியான பகைமையும் உண்டு. இதனையே மூலதனமாகக் கொண்டு அங்கு ஆண்டுவரும் இந்தியக் கட்சிகள் அதைப் பகையாக்கி அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறார்கள். ஆனால் வல்லரசியம், தில்லியின் மேலாளுமைகள் என்ற வகையில் பல நெருக்கடிகள் அம்மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களுக்கும் இருக்கின்றன. எனவே உண்மையான தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் சென்றால் அங்கெல்லாம் தேசிய நலன்களைக் கொண்ட குழுக்கள் வெளிப்பட்டு பகைமை உணர்வுகளைத் தணிக்க முனையும். ஒத்துழைப்புகள் உருவாகும்.

நம் நாடு என்னதான் வல்லரசிய ஊடுருவலால் முதலாளிய நாடு போன்று தோன்றினாலும் அத்தோற்றம் மிக மேலோட்டமான ஒரு போர்வையே. வளர்ச்சி என்பது உண்மையில் வீக்கமே. உண்மையில் அடித்தளத்தில் நிலக்கிழமைக் கூறுகளும் குக்குல(இனக்குழு)க் கூறுகளுமே மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை உடைத்து தேசிய முதலாளியத்தை நோக்கிச் செல்லும்போதுதான் சாதியற்ற நிலைமைக்கான அடித்தளம் உருவாகும்.

தேசிய அரசியல் விடுதலையாயிருந்தாலும் பொருளியல் விடுதலையாயிருந்தாலும் இன்றைய தமிழகத்தில் அதற்கான முலவிசை நிலக்கிழமைக் குமுகத்திலுள்ள முற்போக்கு விசைகளே. அவை வளர்ந்து தேசிய முதலாளியத்தை வளர்த்துப் புரட்சிகரமான பாட்டாளியரை உருவாக்குவது வரை முதலாளியரும் பாட்டாளியரும் இணைந்து தேசிய எதிரிகளையும் நிலக்கிழமைக் கூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் வெளியிலிருந்து இறக்குமதியான பாட்டாளியக் கோட்பாடு தேசிய முதலாளியம் உருவாகத் தடையாக இருக்கிறது. அதனை மாற்றவே நாம் பங்கு வாணிகம் என்ற சூதாட்டம் இல்லாத பங்கு மூலதனத்தில் பாட்டாளியரும் முதலாளியரும் கூடி இயங்கும் ஒரு கூட்டுடைமை முதலாளியத்தைப் பரிந்துரைக்கிறோம்.

“தமிழ்த் தேசிய” இயக்கங்களும் “தமிழ்” இயக்கங்களும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு மாற்றாக ஈழவிடுதலைப் போரைப் பார்த்தும் காட்டியும் மனநிறைவடைந்து வந்தன. இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் பிற அரங்குகளிலும் தமிழக விடுதலை (அது என்னவோ கிட்டிப்புள் விளையாட்டு என்பது போல் – அதுதானே நம் “மரபு” விளையாட்டு) பற்றி அல்லது தமிழ்மொழி வளர்ச்சி, அதற்கு எதிரான நிலைமைகள் பற்றிப் பேசுவர். இறுதியில் ஈழத்துவிடுதலைப் புலிகளின் வெற்றி முழக்கம் பற்றி நெடுமாறன் விரிவான ஒரு உரை நிகழ்த்துவார். தன்னால் இயலாதவன் அடுத்தவன் புணர்வதைப் பார்த்தோ அதைப் பற்றிப் பேசக் கேட்டோ உணர்ச்சியும் உவகையும் மனநிறைவும் கொள்வது போல நம் “தமிழ்த் தேசியர்கள்” மெய்ம்மறந்து மெய்சிலிர்த்துப் போவார்கள். இதுதான் ஆண்டுகள் பலவாகத் தமிழகத்தில் “தமிழ்த் தேசிய”ச் செயற்பாடு. இது உள்நாட்டின் மீது வேர் கொள்ளாத ஒரு நிலைப்பாட்டின் விளைவும் வெளிப்பாடுமன்றி வேறென்ன? ஈழத் தேசிய வெற்றி தமிழ்த் தேசிய வெற்றிக்குக் கொண்டு செல்லும் என்று முடித்துக் கூற முடியாது. ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டம் வலிமை பெற்றிருந்தால் அது கட்டாயம் இந்திய ஆட்சியாளரையும் கருணாநிதியையும் தடுத்து நிறுத்தியிருக்கும். ஈழத் தேசிய வெற்றிக்குக் கைகொடுத்திருக்கும். இன்றைய கையறு நிலை ஏற்பட்டிருக்காது என்பது உறுதியிலும் உறுதி.

எதுவுமே எப்போதுமே காலங்கடந்ததாகி விடாது. காலம் எப்போதுமே புதிய வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருக்கும். உன்னிப்பாகப் பார்த்து முன்னேறுவோம்! வெல்வோம்!

தேசிய விடுதலை என்பது அரசியல் விடுதலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியிருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை பொருளற்றது, பயனற்றது.

பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை தில்லியிலிருக்கும் அதிகாரத்தைச் சென்னைக்குக் கொண்டு வரும்; கருணாநிதி, செயலலிதா வகையறாக்கள் கேள்வி கேட்பின்றிக் கொள்ளையடிப்பார்கள் அவ்வளவுதான்,

நாம் மக்களுக்கான பொருளியல் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம்! அரசின் ஆட்சியாக இருப்பது மக்களின் ஆட்சியாக மாற வேண்டுமென்று கேட்கிறோம்! இந்திய மக்கள் அனைவருக்கும் பொருளியல் உரிமைகள் வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு நாம் நம் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

தமிழக நிலவரம்(2009) .....4

1950கள் வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஊர்ப்புறங்களிலும் கோயில்களைச் சுற்றித் தங்கள் கூட்டாளிகளான தேவதாசிகளுடன் வாழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். கோயில் நிலங்கள் தவிர சொந்த நிலங்களும் வைத்திருந்தனர். குத்தகைப் பயிரிடுவோரிடம் நிலவுடைமையாளர் என்ற வகையிலும் கோயில் பூசாரிகள், கோயிலில் இலவயச் சோறு உண்பவர்கள் என்ற வகையிலும் அடங்காத திமிருடன் நடந்துகொண்டனர். அத்துடன் தேவதாசிகளைக் காட்டி ஆங்கிலரிடம் பெற்ற அரசுப் பதவிகளை வைத்துப் பெரும் நிலக்கிழார்கள், சமீன்தார்களையும் மிரட்டிவந்தனர். இதற்கு எதிர்வினையாக நயன்மைக் கட்சியும் பின்னர் தன்மான இயக்கமும் ஒரு புறமும் பொதுமை கட்சிகளின் உழவர் போராட்டங்களும் மறுபுறமும் அவர்களது செல்வாக்கை இழக்கவைத்தன. விட்டால் போதும் என்று கண்டவிலைக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்தார்கள். அவர்களுக்கு அதுவரை அடியாட்களாக இருந்த “போர்ச் சாதிகள்” எனப்படும், வந்தவர்களுக்கெல்லாம் அடிமைசெய்து தம் சாதி மேலாளுமையை நிலைநிறுத்தக் காத்திருக்கும் கூட்டம் அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றியதுடன் அவர்களிடமிருந்து எளிய மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் வசப்படுத்திக்கொண்டது.

இன்று ஊர்ப்புறங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பார்ப்பனர்களின் குடியிருப்புகள் அழிந்து போய்விட்டன. அவற்றில் புதிதாக மேனிலையடைந்த சாதியினர் குடியேறிவிட்டனர். எதிரில் வந்தால் ”ஒத்திப்போ” என்று பிறரைத் துரத்திய பார்ப்பனப் பெண்களைக் கழிந்த இரண்டு தலைமுறை மக்கள் அறியமாட்டார்கள். ஆனால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றாலோ கையை நீட்டிப் பேசினாலோ அடிக்க வரும் “போர்ச்சாதி”களை, அதாவது எளியவர்களைக் கொடுமைப்படுத்தும் நாயினும் கீழான கோழைகளைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, இன்று கூட திருநெல்வேலி மாவட்டத்தின் சில மூலைகளில், பல்வேறு தொழில்களும் வாணிகமும் செய்து சிலர் படித்து வேலாக்கும் சென்று நாலு காசு பார்த்தவுடன் நாங்கள் ஆண்ட மரபினராக்கும் என்று தம்பட்டமடிக்கும் மேலடுக்கினைக் கொண்ட நாடார் சாதியினர் மறவர் தெருக்களில் செருப்பணிந்தோ மீதிவண்டியிலோ செல்ல முடியாது என்பதை? ஏதோ சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்கும் தோழர்களே, குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, குளத்தில் குளிக்க, சுடுகாட்டுக்குப் போகும் பாதையில் செல்ல உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக, ஒடுக்கும் உங்கள் சாதியினருக்கு எதிராகப் போராட நீங்கள் ஒரு நாளாவது எண்ணியதுண்டா? உங்கள் சாதியாரின் வெறியை உலகின் கண்ணிலிருந்து மறைக்கத்தான் நீங்கள் பார்ப்பனர்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்களா? அல்லது உங்கள் மனச்சான்று உள்ளுணர்வைத் தாக்கி உங்கள் சிந்தனை திசைமாறிப் போய்விட்டதா? சொல்லுங்கள்!

மார்வாரியும் மலையாளியும் நம் நிலங்களைப் பறிக்கிறார்கள் என்று அவ்வப்போது கூறிக் கொள்வீர்கள். ஆனால் மார்வாரிகளின் விளைப்புப் பொருள்களுக்குப் போட்டியாக வளர்ந்துவிட்ட தமிழக மக்களின் தொழில்களை நசுக்கவென்று வருமான வரித்துறையை அந்த மார்வாரி ஏவிவிடுவதற்கு எதிராக என்றாவது நீங்கள் குரல் கொடுத்ததுண்டா? அல்லது வருமான வரித்துறையின் உண்மையான பயன்பாடு பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமா? வருமானவரியால் முடக்கப்படும் பணம் கள்ளப்பணமா? அதாவது சட்டத்துக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட பணமல்லவே அது! அது மூலதனச் சந்தையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை விதிவிலக்குகள்? கொஞ்சம் படித்துப் பாருங்கள் தோழர்களே! ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களிலும் தனியார்களிடத்திலும் மட்டும் வேட்டை நடத்துகிறார்களே அது ஏன்? அரசு தன் வருமானத்துக்கு இவ்வாறு மக்களின் வீட்டையும் நிறுவனங்களையும் பகல் கொள்ளையர் போல் சுற்றி வளைத்து சுவரை உடைத்து பேழையைப் பிளந்து படுக்கையைக் கிழித்து தரையைக் குடைந்துதான் வரி தண்ட வேண்டுமா? தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையில் மிகக் காட்டுவிலங்காண்டித்தனமான இந்த ஒடுக்குமுறை உங்கள் சிந்தையில் உறைக்கவில்லையே ஏன்? “பாட்டாளியப் புரட்சி” வெற்றிநடை போடுகிறது என்றல்லவா மகிழ்ந்து போவீர்கள்? உங்கள் நடவடிக்கைகள் மக்களைச் சார்ந்தவையல்ல, ஆட்சியாளரைச் சார்ந்தவை.

தமிழக எல்லைக்குள் எவர் பணம் ஈட்டினாலும் அது தமிழக மக்களுக்கு உரியது. அதன் பயன் தமிழக மக்களுக்குச் சேரவேண்டும். அதற்கு ஒரே வழி அது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் நுகர் பொருட்களையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து தந்து அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் தமிழகத்தில் முதலீடாக வேண்டும். அதற்குத் தடையாக எந்த வடிவில் யார் என்ன செய்தாலும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்ப்பதோ, சரியான செயல் என்று கோட்பாட்டுச் சான்று தேடுவதோ தமிழகத் தேசியத்துக்கு இரண்டகம் செய்வதாகும். இது தமிழகக் குடிமக்களைக் குறித்ததே அன்றி அயலாரைக் குறித்தல்ல. தமிழகத்தில் தொழில் நடத்தும் உரிமை 1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்திலிருந்து அன்றும் இன்றும் ஆதாயத்தை வெளியில் கொண்டு செல்லாதவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

மார்வாரியும் மலையாளியும் மட்டுமல்ல தமிழகத்து நிலங்களைக் கொள்ளையடிப்பது. அயல்நாட்டு நிறுவனங்களின் பெயரில் மூலதனமிட்டிருக்கும் கருணாநிதி குடும்ப வகையறாக்களும்தான். இந்தியப் பொதுமைக் கட்சிகள் தங்கள் அருஞ்செயலென்று மார்த்தட்டிக் கொள்வது நில உச்சவரம்புச் சட்டங்களை. உண்மையில் அமெரிக்க அமைப்பான நிகர்மை(சோசலிச) அனைத்துலகியத்தின் நெருக்குதல் மூலம் நிறைவேறியவையாகும் அவை. அவற்றில் உணவுப் பொருள் வேளாண்மைக்கு மட்டுமே உச்சவரம்பு என்பதைப் புரிந்து கொள்க. அதனால்தான் வருமான வரியால் தமிழக மக்கள் நசுக்கப்பட அத்துறையைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் மார்வாரியும் மலையாளியும் கருணாநிதியின் கூட்டமும் இங்கு நிலங்களை வாங்கிக் குவிக்க முடிகிறது. அதற்கு நபார்டு எனப்படும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியும் ஊழல் துணையிருந்து பெரும் பகற்கொள்ளை நடப்பதை அறிவீர்களா தோழர்களே!

நில உடைமையைப் பொறுத்தவரை சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சிற்றுடைமை வேளாண்மை என்றும் சோறு போடாது. ஆதாயம் கிடைக்காது என்பதோடு ஆண்டு முழுவதும் வேலையும் கொடுக்காது. சிற்றுடைமையாளன் வேறு சொந்தத் தொழில் இல்லையானால் கூலித் தொழிலாளி என்ற நிலையிலிருந்து உயரவே முடியாது.

தொழிற்புரட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பெரும்பண்ணை முறை புகுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பல எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடித் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிந்தது. இங்கு கடனுக்காகவும் விளைந்ததை விற்பதற்காகவும் ஏழை உழவன் தெரு நாயினும் கீழாகத் துயருறுகிறான். குத்தகை ஒழித்தால் உழவனுக்கு இழப்பீடு வழங்கத் தமிழ்நாட்டுச் சட்டத்தில் இடமிருக்கிறது. அதைப் பங்கு மூலதனமாக்கி அவனை உழைப்பாளியாகவும் கூட்டுடைமையாளனாகவும் ஆக்கலாம். அதற்கு தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் தன் செயல்திட்டத்தில் வகை செய்கிறது

மரபுத் தொழிலை மீட்டெடுப்பது பற்றி தோழர்கள் உரக்கப் பேசுகிறார்கள். மரபுத் தொழில் என்பதே நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்துக்கு உரியது. சாதி - வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைப்பில் பல்வேறு குழுவினர் அவரவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட வகையில் வாழ்வதற்கு வடிவமைக்கப்பட்டவை அவை. இன்று குமுகக் கட்டமைப்பு பெருமளவில் மாறியுள்ளது. மக்களின் தேவைகள் பழைய சிறைக்கூண்டுகளை உடைத்துவிட்டுப் பரவலாகிவிட்டன. அவற்றுக்கு ஈடு கொடுக்க மரபுத் தொழில்கள் உதவா. ஆனால், மரபுத் தொழில்கள் என்ற இந்த முழக்கத்தை வலியுறுத்துவது, வெளியிலிருந்து வரும் நெருக்கல்களை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல்கள் உள்ளே உருவாவதை உளவியலில் தடுக்கும் ஒரு முயற்சியாக முடிய வாய்ப்பிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பங்கள் அயலிலிருந்து மூலப்பொருட்களைத் தேவையாக்குகின்றன. இருக்கும் பல மூலப்பொருட்களை இல்லை என்றே அறிவித்துள்ளார்கள் நம் ஆட்சியாளர்கள். அயலார் அவற்றைக் கண்டு ஆட்சியாளருக்கு பங்கும் கொடுத்தால் அவற்றை எடுத்து அவர்களுக்கு வழங்குவார்கள், அல்லது இங்கேயே பயன்படுத்தி பண்டங்களைச் செய்து ஏற்றுமதியும் செய்து கழிக்கப்பட்ட கடைத் தரத்தை நம் மக்களுக்கு விற்கவும் செய்வார்கள். நம் மரபுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றுபவை. அவற்றை இன்றைய அறிவியலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பெருந்தொழில்களாக வளர்த்து நம் மக்களின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.

இங்கு மரபுத் தொழில்களுக்கும் மரபுத் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுத் தொழில்நுட்பங்களை மூத்த தலைமுறையினரிடமிருந்தும் ஆகம நூல்களிலிருந்தும் எளிதில் திரட்டிவிட முடியும்.

பெருந்தொழில்கள் என்றதுமே சுற்றுச் சூழல் சிக்கலை முன்வைக்கின்றனர் நம் தோழர்கள். இங்கு நாம் ஒரு அடிப்படையான உண்மையை மனங்கொள்ள வேண்டும். இன்று நம் நாட்டில் பெருந்தொழில் என்ற பெயரில் உள்ளது முதலாளிய விளைப்பு அல்ல, வல்லரசிய விளைப்பு ஆகும். அயலவருக்காக நம் நிலம், நீர், ஆற்றல்வளங்கள், சுற்றுச் சூழல்கள் பாழாக்கப்படுகின்றன. திண்டுக்கல்லிலும் இராணிப்பேட்டையிலும் பதப்படுத்தும் தோல் நமக்குப் பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்தும் செருப்பும் பைகளும் நெகிழி(பிளாட்டிக்)யால் செய்யப்படுகின்றன.

திருப்பூரில் செய்யப்படும் ஆடைகளும் அவ்வாறே. தூத்துக்குடியில் டெர்லைட் ஆலையில் தூய்மைப் படுத்தப்படும் செம்புக் கனிமம் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு பணிமுடிந்த பின் திருப்பியனுப்பப்படுகிறது. சூழல் சீர்கேடு மட்டும் நமக்கு. அதுபோல் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வடிவில் நம் மின்சாரமும் குடிநீரும் தூய்மையான காற்றும் இன்னும் என்னென்னவோ மறைமுகமாக ஏற்றுமதியாகின்றன. கல்லும்(சல்லி வடிவில்) மணலும் கருங்கல்லும் என்று எண்ணற்ற வகை மீளப்பெற முடியா இயற்கை வளங்கள் கணக்கின்றிக் கடத்தப்படுகின்றன. நாம் பரிந்துரைப்பது நம் நாட்டில் நம் மூலதனத்தில் நம் தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மக்களின் தேவைகளுக்காக நாமே பண்டங்களை விளைப்பதும் பணிகளைச் செய்வதுமாகும். அதற்கு நம் பண்டைத் தொழில்நுட்பங்களைத் தேடியெடுத்து இன்றைய அறிவியல் வளர்ச்சிநிலைக்கு ஏற்ப மேம்படுத்திப் பயன்படுத்துவதை. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பற்றிய கட்டுரைகளும் எழுத்துகளும் ஒவ்வொரு மூலிகையையும் எந்தெந்த நோய்க்கு எப்படி எப்படிப் பக்குவப்படுத்தலாம் என்று விளக்குகின்றன. அவற்றின்படி பயன்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு மருந்து செய்யும் கட்டமைப்பு வேண்டும், வீட்டிலுள்ள ஒருவர் மருந்து செய்யும் பக்குவத்தைக் கற்க வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மூலிகையில் அடங்கியிருக்கும் குறிப்பிட்ட நோய் தீங்கும் உரிப்பொருளை இனங்கண்டு பிரித்து மாத்திரையாகவோ குளிகையாகவோ, நீர்மமாகவோ கடைகளில் விற்றால் அலோபதி மருந்துகள்போல் பயன்படுத்துவார்களே! இன்றைய சூழலுக்கு அதுதானே பொருந்தும்? எந்த ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல், எதையும் கணக்கிலெடுக்காமல் மரபு, மரபு என்று மந்திரம் போடுவது ஏன்? பழைய சாதி சார்ந்த தொழில்நுட்பங்களை வைத்து அந்தக் கட்டமைப்பை மீட்கும் ஒரு அவாவின் தன்னுணர்வற்ற வெளிப்பாடா? அல்லது தாங்களே தவிர்க்க முடியாத மாற்றங்களைத் தங்களை விடத் தாழ்ந்த படியிலுள்ளோரும் மேற்கொள்வதைப் பொறுக்க முடியாத உள்ளுணர்வின் எரிச்சலா?

நம் தேவைகளுக்காக இயங்கும் பெருந்தொழில்களால் வெளிப்படும் கழிவுகள் சூழல்கேடுகள் ஏற்படும் அளவுக்கு இருக்காது. இருந்தாலும் அவற்றை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்கொண்டுவிடலாம். தேவை மக்கள் உதிரத்தைக் குடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாத ஓர் அரசும் இன்று போல் ஆட்சியாளர்களுக்கு விலைபோகாத “ அறிவாளிகளு”மே.

உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தாத, அதைக் கண்டுகொள்ளவே செய்யாத ஒரு சூழலைப் பார்ப்போம். உலகில் ஆண்டு முழுவதும் பெரும் ஏற்றத்தாழ்வில்லா வெப்பநிலையைக் கொண்டது தமிழ்நாடு. அந்த வெப்பநிலையை மின்னாற்றலாக்குவதற்குத் தேவைப்படும் அளமியம்(அலுமினியம்) தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் “கதிரவ” மின்னாற்றலைப் பயன்படுத்துங்கள் என்று எழுதிவைத்திருப்பர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று அரசு சாராயக் கடையில் எழுதி வைத்திருப்பது போல. மின் செலவை மிகுக்கும் தொ.கா.பெட்டியையும் எரிவளி இறக்குமதியை மிகுக்கும் வளி அடுப்பையும் இலவயமாக கோடி கோடியாக வழங்குவர். ஆனால் கதிரவ மின்னாக்கலுக்கு ஒரு தம்பிடி கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த கறுப்பு அறிவியல் கதிரவன் அப்துல் கலாம் கூட காட்டாமணக்கைப் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுவார். பதவியிலிருந்து இறங்கிய பின் எங்கோ கதிரவ ஆற்றலைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி. “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இது போன்ற சிக்கல்களைப் பேசுவதே இல்லை. தாம் இழந்து விடுவோம் என்று அஞ்சும் சாதி மேலாளுமையை மீட்பதற்காக அல்லது பேணுவதற்காக மரபு பற்றிப் பேசுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மின்சாரம் உருவாக்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கன்னெய்யம்(பெட்ரோலியம்), எரிவளி ஆகியவற்றில் 20 நூற்றுமேனிக்குக் குறையாமல் கிடைக்கும் தரகு, அவற்றுக்கு டாலரில் பணம் திரட்ட இங்கிருந்து ஏற்றுமதியாகும் மூளை வளம் உள்ளிட்டற்றின் மீது கிடைக்கும் தரகு ஆகியவைதான் குறி. அவர்கள் எப்படி உள்நாட்டு வளங்களை உள்நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவர்? இப்படி எதை எடுத்தாலும் தரகு பார்க்காமல் இருந்தால் தேநீருக்கு வக்கில்லாமல் அலைந்தவர்கள் 70 ஆண்டுகளில் 2 இலக்கம் கோடிக்கு மேல் சொத்துள்ள குடும்பத்தின் தலைவராக எப்படி முடியும்? தமிழனை ஈழத்தில் கொன்றழிக்கத் துணையிருந்துவிட்டுப் பாராளுமன்றத்தில் கட்சி பா.ம. உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றால் போதும், இங்கிருக்கும் “தமிழ்த் தேசியர்” களுக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிரெடுத்துவிடும், மன்னிக்க, குளிர்ந்துவிடும்!

மொழியைச் சுமப்பது அதைப் பேசும் மனிதன். மண் இல்லாமல் எப்படி மரம் இல்லையோ அப்படி மனிதன் இல்லாமல் மொழி இல்லை. மனிதனோ உணவின் பிண்டம் என்றார் நம் முன்னோர் (திருமூலரா?).


பார்ப்பனியம் என்பதே ஒட்டுண்ணி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது உடலுழைப்பை, குறிப்பாக, பண்டம் படைத்தல், பணிகள் செய்தல், பண்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாணிகம் போன்றவற்றை வெறுத்து வெள்ளை வேட்டி வேலை செய்வதைப் பெருமையாகக் கருதுவது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகர்களின் எழுச்சியின் போது கிடைத்த பட்டறிவிலிருந்து கடல் வாணிகர்களையும் உள்நாட்டு வாணிகர்களையும் கருவறுத்தனர் நம் ஆட்சியாளர் – பூசாரியர் கூட்டணியினர். அதனால்தான் அரேபியரும் ஐரோப்பியரும் வாணிகர்களாக இங்கு நுழைந்தபோது இங்கு அவர்களை எதிர்க்க விசை எதுவும் இல்லாது போயிற்று. இன்று வல்லரசியத்தின் ஊதுகுழலாகச் செயற்படும் பொதுமைக் கட்சியினரும் உள்நாட்டு வாணிகத்துக்கு எதிராக இருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் அமர்ந்துகொண்டு கொடுமை செய்வதற்கு எதிராகக் கொண்டுவந்த ஒதுக்கீட்டு முறை ஒட்டுண்ணி வாழ்க்கையின் மீதான பார்ப்பனர், வெள்ளாளரின் ஈர்ப்பை முழுக் குமுகத்துக்கும் பொதுவாக்கிறது. அந்த வெறியை மிகுப்பதாக அரசூழியர்க்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் கருணாநிநியின் செயல் அமைகிறது. அதனால் மக்களின் வருவாய், குறிப்பாக படித்துவிட்டுச் சில்லரை வேலைக்குப் போகும் மக்களின் வருவாய் அதனுடன் ஒப்பிட மலைக்கும் மடுவுக்கும் ஆயிற்று. அதோடு பன்னாட்டு முதலைகளின் புலன(தகவல்)த் தொழில்நுட்ப வளர்ச்சி அந்தத் திசையில் மக்களை ஈர்த்தது. ஆக, இன்று நன்றாக வாழ வேண்டுமென்றால் அயல்நாடு செல்ல வேண்டும் அல்லது அயல்நாட்டு நிறுவனத்தில் உள்நாட்டில் வேலை பார்க்க வேண்டும்.

இன்னொரு புறம் தமிழகம் உட்பட எல்லாத் தேசியங்களின் பொருளியலும் இந்திய அரசுடனும் வல்லரசியத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே நடுவரசிடமோ வெளி முகவாண்மைகளுடனோ மாநில அரசு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் மாநில மொழி உதவாது. அத்துடன் பொருளியலே ஏற்றுமதி இறக்குமதி சார்ந்தாக மாறியுள்ள நிலையில் எழுத்துப் பணிகளுக்கு மாநில மொழி உதவாது. இந்தப் பொருளியல் நெருக்குதலின் காரணமாக நம் விருப்பங்களையும் மீறி புதிய தலைமுறையினர் தாய்மொழிகளைக் கைவிட வேண்டிய உளவியல் நெருக்கலில் உள்ளனர். இது இந்தியா மட்டுமல்ல, உலகளாவுதலின் விளைவாக உலக முழுவதும் உருவாகியுள்ள நிலையாகும். இதிலிருந்து விடுபட இன்று உலகைப் பிடித்துள்ள பொருளியல் நெருக்கடியும் அதன் விளைவாக அயல்பணி வாய்ப்புகள் குறைவதும் பணக்கார நாடுகளில் பொருளியல் நெருக்கடியின் விளைவாக இனவெறி வளர்ந்து வருவதும் மிகவும் கைகொடுக்கும். தற்சார்புப் பொருளியல், அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சந்தையாக உள்நாட்டு அடித்தள மக்களை பொருளியல் வலிமையுள்ள நுகர்வோராக வளர்த்தெடுப்பது, அதாவது மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது போன்ற குறிக்கோள்களை முன்வைத்து ஊக்கமுடன் செயற்பட இதுவே சரியான நேரம். அதனோடு தாய்மொழி வளர்ச்சியையும் இணைத்தால் பொருளியலை அடுத்து தேசியத்தின் முகாமையான கூறான தேசியமொழி ஆட்சிக் கட்டில் ஏறுவதும் நிகழும். வேறு எந்த மந்திரத்தாலும் தமிழை அழிவிலிருந்து மீட்க முடியாது.


(தொடரும்)

8.7.09

தமிழக நிலவரம்(2009) .....3

பார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.

ஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா? இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.

சிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.

தொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).

அதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.

மேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.

இவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்
அவன்கட் படுமே
என்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.

திருவள்ளுவரே,
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.

ஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.

சிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.

எனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்புரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.

வருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.

சாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.

நம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை? அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்?

சரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது! இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா? ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள்? மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர்? சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா?

ஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.




(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....2

இன்றைய உலகச் சூழலில் உலகிலுள்ள ஆளும் கணங்களெல்லாம் அஞ்சி நடுங்குவது தேசிய விடுதலை இயக்கங்களைக் கண்டுதான். அவற்றில் பலவற்றை மார்க்சிய - இலெனியக் குழுக்கள் கையிலெடுத்துக் கொண்டு சிதைத்து ஆட்சியாளர்களின் ஆயுதத் திருட்டு விற்பனைக்குத் துணைபோகிறார்கள். மற்றவை முகம்மதிய மதவெறியர்களிடம் சிக்கி முகம்மதியர்களிடமிருந்தே அயற்பட்டு நிற்கின்றன. அது போன்ற அடையாளங்கள் எதுவுமின்றி நிலம், அதன் மக்கள் என்ற தெளிவான, அறிவியல் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடிய இயக்கமும் மக்களும் ஈழத்தவர்களே. அதனால்தான் உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அப்போராட்டத்தை முடக்கிவைத்துள்ளனர்.

தேசிய விடுதலைப் போர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமையானது. சென்ற நூற்றாண்டில் உலகப் போர்களில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் குடியேற்ற நாடுகளும் அரைகுறை அரசியல் விடுதலை பெற்றன. பொருளியல் வழியில் இன்று மறைமுக அரசியல் அடிமைத்தனத்துள் அவை உள்ளன. சோவியத்து வலிமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீட்டில்தான் வங்காளதேசம் அமைந்தது. ஆனால் இருவர் கைகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. இருவருக்கும் அது ஒரு கசப்பான பாடம். தென் அமெரிக்காவும் சிம்பாபுவேயும் அமெரிக்கத் தலையீட்டில் அதன் பொம்மைகளின் அரசுகளை அமைத்தன. செர்பியா போன்றவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தலையீட்டினால் விடுதலை பெற்றன. அத்தகைய எந்தத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கியுள்ளன. மனித உரிமைகள் பெயரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒரு நாடகம். தன் மீதான குற்றத்தைத் தானே உசாவ சிங்கள அரசைக் கேட்டுக்கொள்வது என்ற கோமாளித் தனம்தான் மேற்கு நாடுகள் முன்வைத்த தீர்மானம். திட்டமிட்டபடி அதை உலகம் பார்த்திருக்கவே முறியடித்தாயிற்று. ஈழத்தின் மீளமைப்புக்கு சிங்களர்க்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவ்வரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஈழத்தவர்களுக்கு எதிராகச் சிங்கள அரசுக்கு வலுயூட்டுவதுதான் உண்மையான நோக்கம்.

உலகில் இன்று தேசிய உரிமைச் சிக்கல் வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இல்லாதநாடு ஒன்று கூட இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கூட இப்போதைய பொருளியல் நெருக்கடியில் அது வெளித்தோன்றலாம். ஆத்திரேலியாவில் தோன்றி, இங்கிலாந்தைத் தொட்டுள்ள “இனவெறி” அமெரிக்காவில் தற்காலிகமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அது வெடித்து அடுத்த கட்டமாக தேசியங்களின் முரண்பாடாக வெளிப்படலாம். எனவேதான் உலகின் அனைத்து அரசுகளும் இணைந்து நிற்கின்றன.

பிற நாடுகளை ஈழத்தவர்க்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவைச் சுற்றி சீனம் அமைக்கும் தளங்களில் ஒன்று ஈழத்தில் இருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவைச் சுற்றி வளைக்க அமெரிக்கா இட்ட திட்டத்தை அதன் கூட்டாளியும் அடியாளுமாகிய சீனம் நிறைவேற்றுகிறதோ என்றொரு ஐயம். இந்தத் திட்டத்துக்கு இந்திய ஆளும் கும்பல், கருணாநிதி உட்பட விலை போயிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நேரு குடும்பம் இன்று வெளிநாட்டுக் குடும்பம் ஆகிவிட்டது. ”உள்நாட்டு”த் தலைவர்களின் மகன், மகள், மருமகன், மருமகள், அல்லது அவர்களுடன் பேரன் - பேத்திகள், ஏன், நம்மூர் அரசூழியர்கள், பேராசிரியர்கள் கூட பிறங்கடைகளுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அந்நாடுகளில் குடியேறி விடலாமே! இன்னும் இங்கு இருப்பது கூட அவ்வளவு பாதுகாப்பல்லவே!

இவர்கள் இப்படிப் போய்விட்டால் கூட நல்லதுதான். இங்கு கசடுகள் கழிந்த குமுகத்தைப் புத்தம் புதிதாகக் கட்டியெழுப்பலாமே!

ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் ஓடிப்போய்விடப்போவதில்லை. ஒருவேளை போர் வந்தாலும் போர்க்களத்தில் நிற்கப்போவது இராகுலும் தாலினுமா? உயிரை விற்றுக் குடும்பத்தைக் காப்பதற்கு ஆயத்தமாகத்தான் வயிறு காய்ந்த ஒரு பெரும் படையைக் குடிமக்கள் என்ற பெயரில் தீனி போடாமலே வளர்த்துவைத்துள்ளோமே!

போர் வரவேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை. வராவிட்டாலும் சீன அச்சுறுத்தல் என்ற பெயரில் சீனத்திடமிருந்தே கூட ஆயுதம் வாங்கித் தரகு பார்த்துவிடுவோமே!

இந்தப் பின்னணியில் எந்த ஒரு தேசியமும் தனித்து விடுதலைப் போரை நடத்த முடியாது. தேசியங்களுக்குள் உறுதியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு தேசியத்தின் மக்களிடையிலும் எய்தத்தக்க மிகப் பெரும் ஒற்றுமையை எய்தியாக வேண்டும். அதற்கு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைக் கையிலெடுத்து அவர்களை ஆளுவோருக்கு எதிராக நிறுத்த வேண்டும். ஆனால் “தமிழ்த் தேசிய”, இயக்கங்களும் “தமிழ்” அமைப்புகளும் மக்களைப் பற்றித் துளிக்கூட கவலைப்படவில்லை. அவர்கள் ஆளுவோரின் பின்னால் நிற்கிறார்கள். மக்களும் ஆளுவோரின் பின்னால் நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலே விளக்கியவாறு 2009 தேர்தலின் போது ஒன்றிரண்டு பேரவைக் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்துவிட்டுத் தாங்கள் கருணாநிதியின் கையாட்கள் என்பதைப் பறையறையாமல் அறிவித்தனர்.


(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....1

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய அரசு மற்றும் கடற்படை உதவியுடன் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது குறித்து தமிழீனத் தலைவர் தில்லிக்கு மடல்கள் தீட்டி அதைப் பற்றி தாளிகைகளுக்குத் தெரிவிப்பதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பணம் விளையும் அமைச்சகங்கள் கேட்பதற்காகத் தில்லிக்குப் போவார், ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி தீர்மானம் போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விலகல் மடல்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80,000 கோடி ஊழல் குற்றச் சாட்டைக் கைவிட வைக்க அவற்றை வைத்து மிரட்டவும் செய்வார்.

சிவசங்கரமேனனையும் எம்.கே.நாராயணனையும் வரவழைத்து ஈழத்தவர்களை அழிப்பதற்கும் தமிழக மக்களை ஏய்ப்பதற்கும் அறிவுரைகள் வழங்குவார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகளை எதிர்த்து குறிப்பிடத்தக்க குரல் எதுவும் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து எழவில்லையே ஏன்? மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் போது ஒரு சில ஆயிரங்கள் என்ற அளவில்தானே இவர்களால் தொண்டர்களை ஈர்க்க முடிகிறது, அது ஏன்? அந்த ஒரு சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இவர்களுக்குப் பணம் வந்துவிடுகிறது. உண்ணா நோன்பிருந்த வழக்கறிஞர்களிடையில் காவல்துறையினரைக் கொண்டு கருணாநிதியும் சுப்பிரமணியம்சாமியும் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லையே ஏன்? தன்னெழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களோடு தொடர்பு கொள்ளவும் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? இவை அனைத்துக்கும் முடிவுரை கூறுவது போல் “ஈழச் சிக்கலால் தமிழகத் தேர்தல் களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை” என்று கருணாநிதியின் திருமகன் தாலின் அறிவித்தாரே, அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வந்தது? “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் அனைத்துமே எப்போதுமே கருணாநிதியுடன் இணங்கியே வந்துள்ளதுதான் இதற்கெல்லாம் காரணம். உள்ளே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளியிலிருந்து கூர்ந்து நோக்குவோருக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பக்கம் கருணாநிதியின் “மனிதச் சங்கிலி” என்றால் இன்னொரு பக்கம் நெடுமாறனின் “மனிதச் சங்கிலி” என்று ஈழத்தவர்க்கான தமிழகத்தின் எதிர்வினை கூத்தாடிகளின் தெருக்கூத்தாகிப் போனது.

“தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகளின் இன்றைய திரைத்துறை மின்னல்களான சீமான் வகையறாக்களின் துணையோடு நெடுமாறன் தலைமையில் பேரவைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் தேர்தல் பரப்புரை செய்தனரே, அதன் பொருள் கருணாநிதியின் செயல்பாடுகளில் இவர்களுக்கு முழு உடன்பாடு என்பதா அல்லது அது கருணாநிதியின் நடவடிக்கைகளில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற இவர்களின் கணிப்பின் வெளிப்பாடா?

தேர்தல் முடிவுகளில் ஈழத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசித்திரிந்த பேரவைக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வென்ற வேட்பாளரைச் சரிக்கட்டி சிதம்பரம் மட்டும் “வென்றாரே” அது பற்றிய “ஆதாய – இழப்புக் கணக்கை”க் கொஞ்சம் பார்ப்போமா?

சின்னப் பயல்கள் போல் “கிளாய்த்து”க்கொண்டு(கேட்டது கிடைக்கவில்லை என்றால் முறுக்கிக்கொண்டு சிறுவர்கள் மூலையில் போய் அமர்ந்துகொள்வதை இச்சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்) தில்லியிலிருந்து திரும்பிவந்தாரே தமிழீனத் தலைவர் தன் “சுற்றத்தாருடன்”, அவரைத் தட்டித் தடவிச் சரிக்கட்ட தில்லியிலிருந்து தூதுவர்கள் வந்ததும் கேட்ட அமைச்சகங்களெல்லாம் இவரைவிடக் கூடுதல் உறுப்பினர்களை வத்திருந்த வங்கத்து மம்தாவை விட முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதும் எதனால்? நெடுமாறன் வகையறாக்கள் இன்னும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; நான் நினைத்தால் பேரவைக் கட்சியையே தமிழகத்தில் தடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்ததனால்தானே? அப்படி இல்லாமலா தமிழக அமைச்சரவையில் இடம் கேட்கச் சென்ற பேரவைக் கட்சியினரிடம் இனி கருணாநிதிதான் உங்கள் தலைவர் என்பது போல் சொல்லி விடுப்பார் “தலைவி”?

அரசியலில் பழமும் தின்று பல கொட்டைகளையும் போட்ட, எதிர் எதிர்ப் பக்கங்களிலும் இருந்து ஆதாயங்களைப் பெறுவதில் கைதேர்ந்த தமிழகத்து “மாவீரனு”க்கு(நா, கண், காது கூசுகிறதா? எமக்கும் மனமும் எழுதுகோலும் கூசத்தான்கின்றன பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!) இந்தக் கணிப்பெல்லாம் இல்லாமலா இருக்கும்?

இவையெல்லாம் ஒரு முன்னேற்றப்படிதானே என்று மகிழ்ச்சி காட்டிய “தோழர்” மு.தனராசு வகையறாக்களுக்கெல்லாம் கூட “இவையெல்லாம்” முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?

இந்த நாடகத்தில் “வாழும் கலை” ரவிசங்கர், செயலலிதா, வைக்கோ, இராமதாசு ஆகியோரின் இடம் எது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் களத்தில் செயலலிதா பணம் ஏதும் இறக்கவில்லை என்று கூறப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

நாடகமே உலகம்! தமிழகமே நாடக மேடை! உலகத் தமிழர்களோ நாடகக் காட்சிகளை உண்மைகள் என்று நம்பும் ஏமாளிகள்!

கோடிகளில் கோடிகள் புரள்கின்றன. உலகத் தமிழர்களின் வாழ்வு அதனாலேயே பிறழ்கின்றது.

இரண்டிலக்கம் ஈழத்தவர்களையும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கூசாமல் கொடியவர்கள் கொன்ற பின்னரும் தமிழகத்தில் நிலவிய இந்த பிண அமைதியை நினைத்துப்பாருங்கள்! நாளை, நாள்தோறும் பெருகிவரும் மார்வாரி ஆதிக்கம் ஓர் ஊரில் பசித்துக் கிடக்கும் நம் மக்களையே கூலிப்படையினராக்கி நம் மக்களைத் தாக்கினால் ஓடிச் சென்று நம்மவர்களுக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி ஐயா நம்ப முடியும்? தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேரும் வெளியே இரண்டு கோடிக்கு மேலும் இருந்தும் மொத்தமுள்ள எட்டரைக் கோடிப் பேரும் ஆளற்றவர்களாக தனித்தனி மனிதர்கள் என்றல்லவா அம்மா ஆகிப்போனோம்!

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கான விடையைத் தேடுவோம்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் குழுக்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதியின் அறிவுரையால் அமைந்தவை. ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஒரு துறை சார்ந்த சிலர் அணுகினால் சங்கம் அமைத்துக்கொண்டு வரச் சொல்லுவார். சங்கம் அமைத்துப் பணம் திரட்டிக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்தால் சில வேண்டுகைகள் நிறைவேறும். பணம் திரட்டுவோர் ஒன்றுக்கு இரண்டாகத் திரட்டித் தமக்கு எடுத்துக் கொள்வர். இவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவார்களா?

இன்னொரு வகை, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இங்கு சங்கங்களை அமைத்து நம் ஆட்சியாளரோடும் தொடர்பு வைத்திருப்போர். தமிழ்நாட்டு மீனவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். அதனால்தான் சிங்களர் பறித்த ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றோ இரண்டோ இலக்கங்களைக் கொடுத்து நம் மீனவர்களைக் கருணாநிதி அரசால் அமைதிப்படுத்த முடிந்தது. ஆனால் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் என்ன செய்தன? ஓராண்டுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாநாட்டில் இப்பொருள் பற்றி நான் பேசத் தொடங்கியதுமே எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாகச் சீட்டு வந்தது. பின்னர் பேசிய ஒருவர் நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வெளியே சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

“தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோர் ஒன்றாகக் கலந்துதான் செயற்படுகின்றனர். அவர்கள் தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கின்றனர். ஒரு எடுத்துக்காட்டு மேலே நாம் சொன்னது. இன்னொன்று தமிழகத்தைக், தமிழகப் பொருளியலைக் குலைக்கக் கருணாநிதி அரசு நிகழ்த்தும் தொடர் மின்வெட்டு. 1974இல் இருந்தே தமிழகத்தில் தேவையில்லாமல் மின்வெட்டைக் கொண்டுவந்து தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு என்று ஊழலைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதி. அன்றிலிருந்து எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று எவரும் அறியமுடியாத நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத பகிர்மானக் குளறுபடிகள். இங்கு பற்றாக்குறை என்று கூறிக்கொண்டே அயல் மாநிலங்களுக்கு மின்சார விற்பனை. இன்று அயல் மூலதனம் என்ற பெயரில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் என்றும் பல்வேறு வளாகங்கள் என்றும் கூறிக்கொண்டு ஆளுவோர் தங்கள் சொந்த மூலதனத்தில் நடத்தும் தொழிலகங்களுக்குத் தடையில்லா மின்சாரம். சிறு, குறு தொழில்கள் இன்றைய பகிர்மானக் குழப்பத்திலும் காலம் குறிப்பிடாத, குறிப்பிட்ட காலத்தைக் கடைப்பிடிக்காத மின்வெட்டால் இயங்க முடியாமல், போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போக அதனால் ஆதாயம் அடையும் போட்டிக் குழுக்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டும் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கொடுமையைக் குறித்து “தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பேசும் எவராவது ஒரு மூச்சு விட்டிருக்கிறாரா? அதே நேரத்தில் செம்மொழி அறிவிப்பு, திருவள்ளுவர் சிலை, பாவாணர் சிலை, பாவாணர் கோட்டம் என்று மொழியின் பெயரைக் கூறிக்கொண்டு உண்மையில் மக்களின் வாழ்வுக்கு பயன்படாத வேலைகளுக்காகக் கூக்குரல் இட்டு அதை நிறைவேற்றினார் இதை நிறைவேற்றினார் என்று கூறி கருணாந்திக்குப் பாராட்டும் நன்றியும் கூறித் திரியும்”தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோரால் தமிழக மக்களுடன் என்ன தொடர்பை ஏற்படுத்த முடியும்? மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கும் இவர்களால் தமிழர்களுக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ என்ன நன்மை செய்ய முடியும்?


(தொடரும்)

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1

08 – 09 - 1995.
பாளையங்கோட்டை.

அன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.

பொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது!

அதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்பு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன்? திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்? ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.

1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.

இது பற்றிய உண்மைகளாவன:


தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.

கேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள்? நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.

உண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.

இந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளைப் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.

1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.

2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.

3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.

4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.

6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.

இவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன? வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.

அரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.

(தொடரும்)

==============

[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்

நாள் : 25.9.95 திங்கள் காலை


இடம் : சத்தியமங்கலம்

தலைமை: தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

காவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.

கர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.

கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தலைமையகம்,
53,ஜமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச் சாலை,
தஞ்சாவூர் - 613 001.

28.6.09

தேசியம் வெல்லும் .....13

வெற்றி உறுதி:

ஈழ விடுதலைப் போராளிகள் இன்று பெருமளவில் தற்சார்பு பெற்றுவிட்டார்கள். அவர்கள் அதைக் கொண்டே தங்கள் தேசிய எதிரிகளை முறியடிப்பார்கள். ஒருவேளை எதிர்பாராத பின்னடைவுகள் வந்தாலும் அவர்களுக்கு உதவ நாம் உலகத் தமிழர்களிடையில் தமிழுக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை யூதர்களின் தாய் மொழிக்கும் யூதர்களுக்கும் நேர்ந்த இன்று பாலத்தீன மக்களுக்கு நேர்ந்துள்ள வரலாற்று அவலம் போன்று நேராமல் இருக்க வேண்டுமாயின் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தன்னாட்சி உரிமையுள்ள தாயகம் வேண்டும் என்பதைப் பரப்புவோம். குமுதம் - தீராநதி திசம்பர் இதழில் திரு. அ.முத்துலிங்கம் கூறியுள்ளது போல் தமிழ் வாழ அதற்கு ஓர் நாடு வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களிடையில் பரப்பப்பட்டுவரும் நச்சுக் கோட்பாடான மொழி முதன்மைக் கோட்பாட்டைக் கைவிட்டு மண் முதன்மை - பொருள் முதன்மைக் கோட்பாட்டைக் கைக்கொண்டு செயற்படுவோம். பொருளியல் உரிமைகளையும் பொருளியல் விடுதலையையும் முன்வைத்து அந்தக் களத்தில் முற்போக்குச் சிந்தனையும் குமுகத்தில் புரட்சித்தன்மையுள்ள மாற்றத்தையும் சாதி, சமய வேறுபாடற்ற மனித உறவுகளைக்கொண்ட புதிய குமுகத்தைப் படைக்கும் குறிக்கோளுடையவர்களை முன்னணிப் படையாகக் கொண்டு அவர்களின் பின்னால் தமிழக மக்களை அணிதிரட்டுவோம்.

இன்று தமிழகத்திலும் உலகிலும் வாழும் தமிழக மக்களிடையில் திராவிட, தமிழ் இயக்கங்கள் பரவவிட்ட ஒதுக்கீடு, மொழி முதன்மை போன்ற, தேசியத்துக்கு, தேசியப் பொருளியலுக்கு, தேசியப் பொருளியல் உரிமைக்கு எதிரான நஞ்சுகளினால் புதிய கருத்துகளும் சிந்தனைகளும் வேர்கொள்ள முடியாத அக வறுமை நிலவலாம். ஆனால் காலம் நாள்தோறும் உலகையும் அதனோடு சேர்த்து தலைமுறையையும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. களர் மிகுந்த நிலத்தில் அதனை உண்ணும் உயிரிகள் தோன்றலாம். வானிலிருந்து புது ஆற்றல்கள் பாயலாம். மண்ணின் மீது பொழிந்த அயற்பொருட்களிலிருந்து மண் புதுவளம் பெறலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் விதைகளை ஊன்றுவோம். அவை இன்றே கூட முளைக்கலாம். விதையூன்றும் இந்தச் செயற்பாடே ஒரு புரட்சிகர நடவடிக்கைதான். அதை மனமும் உடலும் சோர்வின்றி செய்து கொண்டிருப்போம். வெற்றி பெறுவோம்.

உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவோம்!


ஈழத் தமிழர்களுக்கு உதவுவோம்!

தமிழகத் தேசியத்தை வளர்த்தெடுப்போம்!

உலகில் ஒடுக்கப்படும் தேசியங்களை ஒருங்கிணைப்போம்!

தேசியம் வெல்லும்!

மார்க்சியம் வெல்லும்!

மனிதம் வெல்லும்!

(சிற்சில மாற்றங்களுடன் தமிழினி பிப்பிரவரி 2009 இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது)


தேசியம் வெல்லும் .....12

காந்தியமும் அமெரிக்காவும்:

இந்தியை உயர்த்திப் பிடித்து தன்னை ஓர் இந்துவாக முன் நிறுத்தி இந்திய மக்களைப் பனியா - பார்சிக் கும்பலுக்கு அடிமையாக்கிய காந்தியைப் போல் அமெரிக்க புசுவின் செயற்பாடு மேற்காசிய நாட்டு மக்களுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான மோதலை கிறித்துவ - முகம்மதிய மதங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக காட்டுவதாக அமைந்துள்ளது. இது ஏற்கனவே அரபு நாட்டுத் தலைமைகளின் பணம் செய்த வேலையை இன்னும் எளிதாக்கிவிட்டது. ஏற்கனவே தத்தம் தேசியங்களிலிருந்து தங்களை அயற்படுத்திக்கொண்டு முகம்மதியத் தேசியம் என்ற மாயைக்குள் சிக்கியவர்களின் தவறான நிலைப்பாட்டுக்கு இது வலுச் சேர்த்துள்ளது. இது அரபு நாடுகளின் ஆவல்களுக்கும் பொருந்திவருவதே. வல்லரசுகள்க்கு எதிரான ஒரு விசையாக உலக முகம்மதிய மக்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஒரு புரட்சிகரத் தலைமை முகம்மதியத் தேசியத்துக்கு இல்லை. அரபு நாடுகளின் அரசர்கள்தாம் அந்த இடத்தில் இருக்கின்றனர். எனவே அது ஒரு மாயமானாகத்தான் இருக்கும். அவர்களது குறிக்கோளோ முகம்மதிய அனைத்துலகியம் என்ற பெயரில் தங்கள் தலைமையில் அமெரிக்காவோடு சேர்ந்து ஒரு கூட்டு வல்லரசை நிறுவுவதாகும். இவர்களின் திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி இருக்கவே இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவர் தன் பதவி ஏற்பின் போது பேசியதும் அதே வேளையில் அரேபியத் தலைவர்கள் தங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசியவையும் நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச்செல்கின்றன.

இன்று முற்றி நிற்கும் பொருளியல் நெருக்கடியில் அண்மை ஆண்டுகளில் உருவான “உலகளாவுதலின்” விளைவாகத் தங்களிடம் குவிந்த மாபெரும் பணக் குவியலைக் கொண்டு அரபுத் தலைவர்கள் அமெரிக்காவின் மதிப்புக்குச் கட்டியம் கூறும் கட்டடங்களையும் நிறுவனங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்காவின் குரல்வளையில் அவர்கள் கைவைத்துவிட்டார்கள் என்றொரு மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த அரபுப் பெருந்தலைகள் தங்களிடம் குவிந்த பணத்தைக் கொண்டு தங்கள் சொகுசு வாழ்க்கையைத்தான் மேம்படுத்தியிருக்கிறார்களே அன்றி தங்கள் அறிவியல் - தொழில்நுட்பத்திறனை மேம்படுத்த ஒரு மின்னணுவளவு கூட முயலவில்லை. அதாவது போர் வலிமை இன்னும் வெள்ளைத் தோலர்களிடம்தான் அளவுமீறிய நிலையில் உள்ளது. எனவே அரபுத் தலைவர்கள் முயன்றாலும் வெள்ளைத் தோலர்களை எதிர்கொள்ள இயலாது. அமெரிக்காவுக்கு எதிர்முகம் காட்டி நிற்கும் ஈரான் அரபு நாடல்ல, அது பாரசீகர்களின் நாடாகும். அந்நாட்டை அரபுத் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

இந்தச் சூழ்நிலையில் அந்தந்த மண் சார்ந்த தேசியங்கள் முதலில் தங்கள் தேசங்களிலுள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இணைந்து நின்றும் உலகளவில் ஒருங்கிணைந்தும் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக்காக நாம் மேலே கூறிய செயல் திட்டத்துடன் இயங்கும் மார்க்சியக் கட்சியின் கீழ் இயங்கி ஒவ்வொரு தேசிய மக்களையும் தங்கள் பொருளியலை அயலவர்களிடமிருந்து விடுவிக்கும் இறுதி இலக்கை எட்டுவதுதான் தேச விடுதலையின் அறுதி நோக்கம் என்பதை மறந்துவிடாமல் போராடும் போதுதான் அந்தந்த மண் சார்ந்த தேசியம் வலுப்பெறும். வல்லரசியத்தின் வேர்களும் கிளைகளும் பரவியிருக்கும் இடங்களிலெல்லாம் அவை வெட்டி எறியப்படும். வல்லரசியத்துக்குத் தேசியங்களிலிருந்து பாயும் மீத்த மதிப்பு வாய்க்கால்கள் அடைபடும்; வல்லரசியம் விழும். இதை நேர்மையும் சிந்தனைத் தெளிவும் தத்தம் தேசியங்கள் மீது பற்றும் கொண்ட மார்க்சியர்களும் முகம்மதியத் தோழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகில் நெடுந்தொலைவால் பிரிக்கப்பட்டிருக்கும் பாலத்தீனமும் ஈழமும் ஒரே நேரத்தில் வல்லரசியத்தின் இரு வேறு கைக்கூலிகளான இசுரேலாலும் இந்தியாவாலும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு தேசிய மக்களையும் ஒற்றுமையுடன் செயற்படவிடாமல் பிரித்து வைக்கும் வல்லரசுகளின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு முகம்மதிய உலகியம் பேசும் கும்பல்களை இனம்கண்டு ஒதுக்க வேண்டும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....11

சீனமும் 21ஆம் நூற்றாண்டின் புத்தன் அடிமைக் குமுகமும்:

மா சே துங் மரணமடைந்து, நால்வர் குழு வீழ்ச்சியடைந்த பின்னர் சீனத்தில் மார்க்சிய வழியில் முதலாளியத்தை எய்துவதாகக் கூறி அமெரிக்க மூலதனத்துடன் “மாபெரும் தொழில் புரட்சி” அங்கு நடைபெற்றுவருகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகளில், குறிப்பாகச் சுரங்கங்களில் ஏதச் சாவுகள் உலக அளவில் அங்குதான் மிகுதி. கொடுமைகள் தாங்காது மக்கள் படகுகளில் தப்பிச் சென்ற போது அவை மூழ்கியும் பெட்டகச் சரக்கிகளில் பதுங்கியவர்கள் நசுங்கியும் செத்த செய்திகள் வந்த வண்ணமாக இருந்ததை நாமறிவோம். திடீரென்று அச்செய்திகள் நின்று போயின. என்னதான் நடக்கிறது?

சீனத்தின் “வளர்ச்சியை” இந்திய மக்களுக்கு எடுத்து விளக்குவதற்காகப் பல்வேறு செய்தியாளர் குழுக்களை இங்குள்ள சீனச் சார்பாளர்கள் விடுத்துவைக்கின்றனர். அப்படிப் போய்வந்த செய்தியாளர்கள் பதிவு செய்தவற்றுக்கு மாறான செய்திகள் அவர்கள் மூலம் கசிந்துள்ளன. அவற்றின்படி, சீனத்தில் தொழிலாளர்கள் காவலிடப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களது நடமாட்டங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன, அதாவது, அவர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது; அவர்களது பிள்ளைகள் என்ன படிப்பது என்ன தொழில் செய்வது என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்யும். ஆனால் அவர்களுடைய உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதிகள் போன்றவற்றை அரசு அல்லது அவர்களின் உழைப்பைப் பெறும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. நம் நாட்டு அடித்தள மக்களுடையதை விட அவர்களது வாழ்நிலை, மனித உரிமைகளின் வெளிப்படையான பறிப்பு (நம் நாட்டில் அது மறைமுகமாக நடைபெறுகிறது என்பதுடன் அவர்களது “உரிமைகள்” எனப்படுபவை அவர்களது பண்பாட்டுச் சீரழிவை ஊக்குவனவாகவே உள்ளன) என்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பல படிகள் உயர்ந்தது என்பதாகும். இப்போதும் நம்முடைய கேள்வி, இவ்வாறு பறிக்கப்படும் மக்களின் மீத உழைப்பு, அதன் மீத மதிப்பு யாரைச் சேருகிறது; அதாவது பெரும்பங்கு யாருக்கு, சீன ஆட்சியாளருக்கா அல்லது அமெரிக்க வல்லரசுக்கா? இன்று என்ன நிலை? நாளை இதில் இவர்களுக்குள் இது குறித்து முரண்பாடு முற்றினால் அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுமா? எப்போது? இது மனித குலத்தைப் பொறுத்தவரை இன்று மிக மிக அடிப்படையான ஒரு கேள்வி.

ஆனால் ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60%க்கும் மேல் நம்பியிருக்கும் சீனம் உள்நாட்டுச் சந்தையை, அதாவது உள்நாட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துமா? அதாவது அந்த மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமும் பண்பாட்டுத் தரமும் உயர்வதற்கு ஏற்றுமதிக்குப் போக எஞ்சிய 40%யிலிருந்து ஏதாவது கிடைக்குமா? அப்படி உயர்த்த அமெரிக்கா இடம் தருமா என்ற கேள்விகளும் நம்முன் விடைதேடி நிற்கின்றன.

ஆனால் நாம் பரிந்துரைப்பது அந்தந்தத் தேசியத்தின் அனைத்துவகை மூலவளங்களையும் அங்கு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் மூலதனத்துடன் அங்குள்ள மூலப் பொருட்களின் உதவியுடன் உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்படும் தொழில்நுட்பங்களில் அம்மக்களே தங்கள் தேவைக்காக, அதாவது தங்கள் சொந்தத் தேசீயச் சந்தைக்கு என்று பண்டங்களைப் படைப்பதும் பணிகளை வழங்குவதுமான ஒரு செயல்திட்டத்தை. அதாவது நாம் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட பொருளியலை எதிர்க்கிறோம். அரசின் பொருளியல் தலையீடு அடிப்படைக் கட்டமைப்புகளை அளவு மீறாமல் அச்சிடப்பட்ட பணத்தாள்களை கொண்டு உருவாக்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் அளவு மீறுதல் என்பது மக்களின் நுகர்வுக்காக நாட்டில் கிடைக்கும் பண்டங்கள், பணிகளின் அளவுக்கு மிஞ்சியதாகப் பணத்தின் வழங்கல் சென்றுவிடக்கூடாது என்பதாகும்.

உலகத் தேசியங்களில் உள்ள மார்க்சியர்கள் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக் களத்தில் இத்தகைய ஒரு செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதுதான் உலக வராலாற்றை, மனித குல மேம்பாட்டின் அடுத்த கட்டத்தினுள் இட்டுச்செல்லும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....10

மார்க்சியமும் தேசியமும்:

பாட்டாளிகளுக்கு நாடு கிடையாது என்று மார்க்சு – ஏங்கெல்சு இணையர் நம்பினர். இந்தியாவில் பழைய குமுகத்தை, அதன் கட்டமைப்பை உடைத்த இங்கிலாந்து அதைப் புது வடிவில் மீளக்கட்டாமல் விட்டுவிட்டது என்று எழுதிய மார்க்சு, இந்தியா உட்பட ஐரோப்பாவின் அடிமை நாடுகளுக்குரிய வரலாற்றுப் பங்கைக் கணக்கிலெடுக்கவில்லை. ஒரு விடுதலைப் போரின் சிறு அறிகுறி கூட அன்று எங்கும் வெளித்தோன்றவில்லை. ஏங்கெல்சு, சிலாவிய நாடுகளை வரலாற்றிலிருந்து அகன்ற தேசங்கள் என்றே கணித்தார். ஆனால் அயர்லாந்து விடுதலைப் போராட்டமும் இங்கிலாந்துக்குள் பணியாற்றிய அயர்லாந்தினரான தொழிலாளர்களை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் தாக்கியதும் மார்க்சையும் ஏங்கெல்சையும் அதிரவைத்தன. அயர்லாந்து மக்களின் தேசிய உரிமைகளை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அயர்லாந்து தொழிலாளர்களும் இங்கிலாந்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து பிரிட்டன் அரசை எதிர்க்க வேண்டுமென்றும் அறிவுரை கூறினர். அது எவர் செவியிலும் ஏறவில்லை. ஏறவும் செய்யாது. இன்றைய வல்லரசிய ஊழியில், (அனைத்துவகைப் பொதுமைக் கட்சிகள் உட்பட) ஆட்சியாளர்கள் வல்லரசியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தாலும் “தாய்நாட்டுப் பற்று” என்ற அவர்களது பரப்பலில் மக்கள் மயங்கிவிடுவது தவிர்க்க முடியாதது. உலகப் போரின் போது இப்போக்குக்கு, குறிப்பாக செருமனியின் காட்கி போன்றோரின் செயற்பாட்டுக்கு எதிராக லெனின் மேற்கொண்ட கொள்கைப் போர் சோவியத்துப் புரட்சி வெற்றிபெற்று உலகப் போரின் முதல் கட்டம் முடிவதுவரை வெற்றிபெறவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதைத்தான், அதாவது ஈழப் பாட்டாளியரும் சிங்களப் பாட்டாளிகளும் இணைந்து இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று, ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இந்தியாவின் மார்க்சியப் பொதுமைக் கட்சியின் நிலைப்பாடு என்று அக்கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் அண்மையில் கூறி, தான் ஈழவிடுதலைப் போரை ஏற்கவில்லை என்றார். இவர்களுக்கு பனியா - பார்சி ஆதரவு வெறியினால் அறிவே பேதலித்து கிடக்கிறதென்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தேசிய விடுதலைப் போரை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் உலாவரும் மார்க்சிய லெனினிய அல்லது மாவோயியப் பொதுமைக் கட்சிகள் எனப்படும் அமெரிக்க - சீனக் கூட்டுறவில் இயங்கும் இயக்கங்கள் பாட்டாளியக் கோட்பாட்டை அதன் மிகக் கொச்சையான வடிவில் எடுத்துரைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, முதலிடுவது என்பதே சுரண்டலுக்கு வழிவகுத்துவிடும் என்கிறார்கள்; இது ஒடுக்கப்படும் தேசியங்களின் மூலதனத்துக்கு மட்டும்தான்!

அத்துடன் அவர்கள் மண் சார்ந்த, பொருளியல் சார்ந்த தேசியத்தைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பயிற்றுவிக்கப்பபட்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டுத் தேசியம் பற்றித்தான் பேசுவார்கள். பொருளியல் மாற்றம் வளர்ச்சி பற்றி யாராவது பேசினால் அடித்தள மக்களின் பண்பாடு சிதைந்துபோகும் என்று முட்டுக்கட்டை போடுவார்கள். தொழில்நுட்பமும் விளைப்புப் பாங்கும் மேம்பட்டால் மக்களின், குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயரும் என்ற மார்க்சியத்தின் அடிப்படைப் புரிதலை இவர்கள் அறியாதவர்கள். விளைப்புப் பாங்கு உயருந்தோறும் மக்களின் பண்பாடு, அதிலும் பண்பாட்டின் அடிப்படையான மனிதர்களிடையிலான உறவு, இன்னும் குறிப்பாக, இந்தியா, தமிழ்நாடு, ஈழம் போன்று சாதிய ஒடுக்குமுறைகளால் காலங்காலமாக வலுவிழந்து கிடக்கும் குமுகங்களில் பண்பாட்டு உயர்வுக்குப் பொருளியல் விளைப்புப் பாங்கின், இன்னும் தெளிவாகச் சொல்வதனால், நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளிய விளைப்புப் பாங்குக்கு மேம்படுவது எவ்வளவு உடனடித் தேவை என்பது அவர்கள் சிந்தனைக்குள் புகவில்லை ஆனால் அதற்கு எதிராக, பண்பாட்டைக் காத்தல் என்ற கூப்பாடு எவ்வளவு தீங்கானது, அந்த முழக்கத்தை முன்வைத்தவர்கள் எத்தகைய கயவர்கள் என்பதை நினைக்குந்தோறும் அவர்கள் மீது எமக்குக் கட்டுக்கடங்காத வெறுப்பும் சினமும் உருவாகின்றன. இவர்கள் முன்வைக்கும் நஞ்சினும் கொடிய இந்தத் தீய கருத்தை இதுதான் மார்க்சியம் என்று நம்பி ஏற்றுக்கொள்வோரின் அறியாமை அல்லது செம்மறியாட்டுத்தனம் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடுகிறது.

இவர்கள் பரப்பலை முறியடித்து, ஏழை நாடுகளிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் இன்று பெருவழக்காய் நிலவுகின்ற விளைப்புப் பாங்குக்கு அடுத்த விளைப்புப் பாங்குக் கட்டத்துக்கு அத்தேசத்தை இட்டுச் செல்லும் செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் உண்மையான மார்க்சியர்கள். அவ்வாறு ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளிலும் குக்குலக் குமுகம் நிலவுவதால் அங்கு அடிமைக் குமுகத்துக்கான செயல்திட்டம் வேண்டும் என்கிறோம். இது சரிதானா? செயற்படுத்த முடியுமா என்றொரு கேள்வி எழும். இதற்கு விடையை இன்றைய சீனம் தருகிறது.

(தொடரும்)

தேசியம் வெல்லும் .....9

யாரைத்தான் நம்புவது மக்கள் நெஞ்சம்?

குணாவைக் குறித்து இன்னும் தொடர்ந்து செல்வதானால், க.ப.அறவாணன் போல் ஐராவதம் மகாதேவன் போல், நம் பல்கலைக் கழகங்கள் போல் தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் சமணர்களிடமிருந்துதான் வந்தன என்ற கேடு பயக்கும் கருத்தை மிகத் திறமையாக முன்வைத்துள்ளார் அவர். சமணர்களை ஆசீவகர்கள் என்றும் அவர்கள் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் போன்றும் அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை உடையவர்கள் என்றும் அவர்கள்தாம் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே வானியல் அறிவைத் தந்தவர்கள் என்றும் அவரை நம்பும் தமிழ், தமிழக, தமிழ்த் தேசிய ஆர்வலர்களை நம்ப வைத்துவிட்டார். உண்மையில் ஆசீவகர்கள் எனப்படுவோர் பிறந்த மேனியோடு திரியும் மனம் பேதலித்த அம்மணர்கள்; அமண்பேய்கள் என்று சம்பந்தர் இழித்துரைத்த, ஒற்றர்களாகவும் தமிழகத்தைப் பொருளியலில் சுரண்டிய வெளிவிசைகளின் திரையாகவும் செயற்பட்ட, திசைகளையே ஆடையாகக் கொண்டவர்கள் எனப் பொருள்படும் திகம்பரர் என்ற பெயரால் அறியப்படும் சமண சமயப் பிரிவினர். சிவனியர்களை வந்தேறிகள் என்று இன்று குணா முன்வைக்கும் ஆய்வுரையைப் பழம் வரலாற்றுடன் ஒப்பிடும் போது சமணர்களாகிய இன்றைய பனியாக்களை நம் கண் முன் கொண்டு நிறுத்தவில்லையா?

அன்று அம்மணர்களைத் தமிழ் மண்ணிலிருந்து அகற்றிய சிவனியம் அயலிலிருந்து வந்ததென்றால், “நம்மவர்”களான அம்மணர்களை “வந்தேறி”களான சிவனியர்கள் வெளியேற்றினர் என்று அன்றைய வரலாற்றுக்குப் பொருள் கொள்வதா? அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தை மிகுந்த விரைவில் கைப்பற்றிக் கொண்டிருக்கும் சமணர்களாகிய மார்வாரிப் பனியாக்களைத் தமிழகத்தின் மூலக் குடிகள் என்றும் தமிழகத்தைத் அவர்களிடம் விட்டுவிட்டு குணா ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தும் தமிழகத்தினுள் வாழும் “வந்தேறி”களை வெளியேற்றுவது என்றும் பொருள்கொள்ள வேண்டுமா?

வரலாறு, மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமை என்பவை அவற்றுக்கு உரிமைகொண்டாடும் மக்களின் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளையே சார்ந்துள்ளன. அப்படித்தான் இன்று இந்தியப் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பனியாக்களே தமிழகத்துக்குப் பண்பாட்டுக் கொடை வழங்கியவர்கள் என்ற “வரலாற்று வரைவு” நம் பல்கலைக் கழகங்களின் மூலம் சம்பளம் பெறுவோர், பெற வாய்ப்பிருப்பதாக நம்புவோர்களின் மண்டையில் படிந்திருக்கிறது. அது போலவே வெள்ளைத் தோலர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவையே மேன்மையானவை என்ற கருத்தும் படிந்துள்ளது. இந்நிலையில் குணாவின் “ஆய்வுரை”களைக் காட்டி ஆசீவகத்தைத் தன் உட்பிரிவுகளில் ஒன்றாகக் கொண்ட சமணத்தைச் சார்ந்த தாங்களே இம்மண்ணுக்கு உரியவர்கள், பிறரெல்லாம் வந்தேறிகள், அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று தங்கள் பொருளியல், அரசியல், படையியல் வலிமையைக் காட்டி அச்சுறுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இன்னுமொரு முகாமையான கேள்வி, வானியலையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் கடலோடிகளும் வாழ்வின் அனைத்துத் தொழிற்பிரிவினரும் வான் குறித்த அறிவியலில் தங்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வாய்ப்பிருக்கும் போது எந்தவொரு தொழிலுக்கும் உரிமை கொண்டாட முடியாத, ஒரு மெய்யியலுக்கு மட்டும் உரியவர்களாக குணா முன்வைக்கும் இந்த ஆசீவகர்கள் எப்படித் தமிழர்களின் ஒட்டுமொத்த வானியலுக்கும் உரிமை கொண்டாட முடியும்? குணாவின் இந்த “ஆய்வு முடிவு” எஞ்சாமையாக அறவாணன், ஐராவதம் அணுகலோடு ஒத்துவருவது எப்படி? இந்த “ஆய்வுக்காக”த்தான் அவரையும் நெடுஞ்செழியனையும் ஒரே இடத்தில் சேர்த்து இருத்தினார்களா? அமர்த்தியவர்கள் யார்? தமிழக மக்களின் நிலையைக் கண்டு இரங்குவதா, கலங்குவதா, அழுவதா, ஆத்திரப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை அம்மா!


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....8

தேசிய மக்களும் வந்தேறிகளும்:

தேசியம் என்பதன் வரையைறை நில எல்லை என்பதை மறந்துவிட்டு மொழிதான் என்று நம் “தமிழ்” அறிஞர்களும் “தமிழ்” இயக்கத்தாரும் “தமிழ்த் தேசிய” இயக்கங்களும் இடைவிடாமல் முழங்கி நம் இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரின் மூளைகளையும் உலர் சலவை செய்து வைத்துள்ளனர். தமிழ்த் தேசியம், பொருளியல் சுரண்டல் பற்றிப் பேசி வந்த வெங்காளூர் குணா, சாதி வெறிபிடித்து அமெரிக்காவின் பண உதவியில் செயற்படும் விடுதலை இறையியல் கூட்டத்தின் கைக்கருவியாகி தமிழகத்தின் ஒவ்வொரு மக்கள் குழுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் வந்தேறிகள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கிறார். இறுதியாக அவர் கையில் எடுத்துக்கொண்டிருப்பது சிவனியத்தையும் சிவனியர்களையும். அவரது பின்னால் நின்றுகொண்டு அவரை ஊக்குவோரோ, தமிழக அடித்தள மக்களை நசுக்குவதற்குத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்யவென்று தம் தலைவர்களால் வெறியேற்றப்பட்டிருக்கும் முக்குலத்தோர் போன்ற “போர்ச் சாதிகள்” எனப்படுபவற்றைச் சேர்ந்த ஒரு படித்த கூட்டத்தினர். இவ்வாறு ஒடுக்கும் சாதியினரது தலைமைகளது பொதுவான வரலாறோ, தமிழகத்தின் மீது படை எடுத்த அயலவர்களுக்கு ஒத்துழைப்புத் தந்ததாகும். அப்படித்தான் இன்றைய ஆதிக்க நிலையை எய்தியுள்ளன தமிழகத்தின் உயர்சாதிகள் எல்லாம். இதில் ஓர் அவலம் என்னவென்றால், முதுகுளத்தூர் கலவரம் முடிந்த உடனே அதைப் பற்றி முதுகுளத்தூர் கலவரம் என்ற தலைப்பில் நூல் ஒன்று எழுதிய தினகரன் என்பவர் தனது பிரிவான காரண மறவர்களுக்கு எதிரான கொண்டயங்கோட்டை மறவர்கள் எங்கோ கன்னட தேசத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். நான் இப்போது குணா வகையறாக்களைக் கேட்கிறேன், தமிழகத்துக்கு உரியவர்கள் என்று புறநானூறு கூறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் எனப்படும் நான்கு வகையினரையும் தவிர்த்துப் பிறர் அனைவரையும் தமிழக எல்லைக்குள்ளிருந்து துரத்தி விடுவோமா? அப்படித் துரத்துவதானால் எந்தக் காலத்தில் இருந்த எந்தத் தமிழகத்தின் எந்த எல்லைக்கு வெளியே அவர்களைத் துரத்துவது?

தெலுங்கர் என்று குணாவுடன் சேர்ந்து அவரைத் தாங்கி நிற்கும் தமிழர் களம் வசைபாடி வந்த, வை.கோபாலசாமியாக இருந்து இன்று வைக்கோவாக மாறியுள்ள கலுங்குப்பட்டியாரை, ஈழத் தமிழர்களை ஒழித்தே தீர்வது என்று தமிழகத்தினுள் கச்சைகட்டிக் கூப்பாடு போட்டுத் திரியும், தமிழ்த் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவராகிய, சி.கே. வாசன் வகையறாவினரின் கொடுமதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்மையில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பாராட்டியது எப்படி?

எம்மைப் பொறுத்தவரை வைக்கோ என்று அவர் தில்லிக்குப் போனாரோ அன்றிலிருந்தே அவர் தன் பிற திராவிட இயக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்றும், “தமிழ்”, “தமிழ்த் தேசிய” அமைப்புகளினதும் இயக்கங்களினதும் தலைமைகளைப் போன்றும் பனியா - பார்சிகளின் சுரண்டல் என்ற அடிப்படைச் சிக்கலிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பும் அரசியலையே செய்துவருகிறார் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

இந்தக் கேள்விகள், குழப்பங்களிலிருந்து தெளிவதற்கு ஓர் அடிப்படையை நாம் உருவாக்க முடியும். அதாவது ஒரு தேசத்தின் இன்றைய எல்லையிலிருந்து ஒருவரைத் துரத்தினால் அவர் சென்று அடைவதற்கென்று பிறிதொரு தேசத்தில் அரத்த உறவினர்களோ நிலபுலன்களோ இருந்து தன் நிலம், தன் வீடு, தன் மக்கள் என்று சென்றடையவும் அங்குள்ளவர்கள் அவர்களைத் தங்கள் மக்கள் என்று தங்கள் தேசத்துக்குள் ஏற்றுக்கொள்ளவும் செய்வார்களானால் அப்படிப்பட்டவர்களைத் துரத்திவிடலாம். அப்படி இன்றி அயல் மண்ணில் உள்ள தங்கள் வேர்களை முற்றிலும் இழந்து தங்கள் அனைத்துப் பொருளியல், பண்பாட்டியல் வேர்களைத் தாங்கள் இன்று வாழும் தேசத்தில் கொண்ட அனைவரும் அத்தேசத்தின் மக்கள்தாம். நம் தேசத்தில் முதலீடுகள் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டு செல்வோர் இன்று இந்த மண்ணில் வேர் கொண்டவர்களாக இருந்தாலும் நம் தேசத்து மக்கள் ஆகமாட்டார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், இந்திய ஆளும் கூட்டமும் தமிழக அரசியல் இரண்டகர்களும் 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளில் உருவாக்கிய தமிழகத்தில் அன்றைய குடிமக்களாக இருந்த அனைவரையும் தமிழகத் தேசியக் குடிமக்களாக வரையறுக்கிறோம். அந்த நாளில் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்து இங்கு முதலிட்டு ஆதாயத்தை வெளியே எடுத்துச் செல்வோரைத் தமிழக மக்களாகக் கொள்ளக் கூடாது என்பதும் எமது உறுதியான நிலைப்பாடு. அத்துடன் அன்றைய நாளில் தமிழக அரசியல் இரண்டகர்கள் “விட்டுக்” கொடுத்ததால் நாம் பறிகொடுத்த நிலங்களும் தமிழகத் தேசத்துக்கு உரியவை. அதன் பின்னால் பறிகொடுத்த கச்சத் தீவும் தமிழகத் தேசத்துக்கு உரியது.

இது போன்ற ஒரு வரையறையில் நாம் மேலே கூறியுள்ளபடி உலக நாடுகள் அனைத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் தேசங்கள் அனைத்தும் ஓர் உலகமாகவும் வல்லரசியத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளெல்லாம் ஓர் உலகமாகவும் பிளவுண்டு கிடக்கின்றன. இந்தப் பிளவில் ஒடுக்கும் முதல் உலகம் தம்மிடையில் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ஒடுக்கப்படும் தேசியங்கள் அத்தகைய ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன. அந்த ஒருங்கிணைப்பு இல்லாமை அல்லது சிதறிய நிலைமைக்கு முகம்மதிய அனைத்துலகியக் கோட்பாட்டுக்கு முகாமையான பங்குண்டு. அமெரிக்கா தலைமையிலான வல்லரசியத்தோடு நெருக்கமான, இறுக்கமான உறவு வைத்துள்ள அரபு நாட்டுத் தலைமைகள் பாயவிடும் பணத்தில்தான் இந்த முகம்மதிய அனைத்துலகியம் இயங்கி வருகிறது. எனவே வல்லரசிய நலன்களுக்கு எதிராக ஒருபோதும் அது செயல்படாது. அதனை நம்பினால் ஒடுக்கும் தேசங்கள் ஒரு நாளும் தங்கள் அடிமை விலங்குகளைத் தகர்க்க முடியாது. அந்தந்தத் தேசங்களிலுள்ள முகம்மதியர்களை இந்த முகம்மதிய அனைத்துலகியம் தம் தேசிய விடுதலைக்காகப் போராடும் அணிகளுக்கு எதிராக நிறுத்தி அதன் போராட்ட வலிமையைச் சிதைத்துவிடும். இதற்கு மறுக்கவொண்ணாத சான்றாகத் திகழ்வது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.

தேசம் என்பது நில எல்லை அடிப்படையானது என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நில எல்லை கூட நிலையானதல்ல. மொழி, மதம், இனம் என்ற பொது அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நில எல்லைக்குட்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் பிற பகுதியினர் மீது மேலாளுமை செலுத்தினாலோ அவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது ஒன்றுபட்ட அந்நாட்டின் வளங்களில் அப்பகுதி மக்களுக்கு நயமாகக் கிடைக்க வேண்டிய பங்கைத் தராமல் தாமே எடுத்துக்கொண்டாலோ நாளடைவில் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட பகுதிகளின் மக்கள் தனித் தேசங்களாகப் புரிந்து செல்லும் முயற்சியில் இறங்குவார்கள். எனவே நாடு எனும் ஒரு நிலப்பரப்பிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமான உரிமைகளுடன் அந்த நிலப்பரப்பிலுள்ள அனைத்து வகை வளங்களின் மீதும் நயமான, சமமான பங்கும் கிடைத்தால் அந்த நாட்டின் நிலப்பரப்பு ஒரு தேசத்தின் நிலப்பரப்பாக மாறும். இந்த சம உரிமையாக்கம் விரிவடையும் போது எவருடைய கட்டாயம் அல்லது தூண்டுதலும் கூட இன்றி உலகமே ஒரு தேசமாக மாறும். எடுத்துக்காட்டாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக மாறியுள்ளதைக் கூறலாம். இந்தப் போக்கை இன்னும் விரிவாக்கினால் உலகமும் தேசமாக மாறும். மனித குலத்தின் குறிக்கோள் இதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பமும் முயற்சியுமாகும்.


(தொடரும்)