20.5.07

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (5)

தமிழுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடுமோ என்று நாம் ஐயுறும் ஒரு நிகழ்வு முன்னர் ஒருமுறை நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. வானிலுள்ள மண்டலங்களுக்குச் சென்று வந்தவர் போல் அவற்றைப்பற்றி கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்ற பொருளில்

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதரும் திசையும்
வறிது நில இய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே
(புறம் 30: 1 - 6)

வலவன் இல்லா வானவூர்தி,

என்ற சீவகசிந்தாமணி வரிகள், பால்வழி எனப்படும் விண்மீன் தொகுதியைச்(Galaxy)த் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் நிலையை குறிப்பிடும் புறநானூற்று பாடல்,

மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
(புறம் 365: 1 - 3)

எரிக் வான் டெனிக்கன் என்பவர் கடவுளர்களின் தேர்கள் (Chariots of Gods) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ள, தொல்லுலகில் நடந்திருக்கும் அணுப்போர், விண் வழிச் செலவுகள், மகாபாரதத்திலுள்ள சிறப்புச் செய்திகள், இவற்றை வைத்துப் பார்க்கும் போது எழுத்தாளர் சுசாதா வியப்புறும் தமிழ் எழுத்தமைப்பு இத்தகைய ஒரு சூழலில் உருவாகியிருககக்கூடும். மறைமொழியாகத் தோன்றிய தமிழ் நாளடைவில் மக்கள் மொழியாகி விட, புதிதாக மறைமொழியும் (வேதமொழி) சமற்கிருதமும் உருவாகியிருக்கலாம்.

உலக வரலாற்றில் முதலில் ஓரணு உயிரியக்கமும் படிப்படையான வளர்ச்சியில் அணுவூழிவரை சென்று போரில் அழிந்து காட்டுவிலங்காண்டிகளிடமிருந்து மீண்டும் பலமுறை நாகரிகம் வளர்ந்து பனிவூழிகள், பனிவூடுருவல், எரிமலைகள், கண்ட நகர்வுகள், நிலப்பகுதிகள் உயர்தல், அமிழ்தல், நிலநடுக்கங்கள், ஆகிய மீள் நிகழ்ச்சிகளால் அனைத்தையும் இழந்து புதிது புதிதாகக் குடியேறிய இடங்களில் மீண்டும் பழைய வளர்ச்சியைப் படிப்படியாக எய்துதல் என்று மறைநூல்கள் சமற்கிருதத் தொன்மங்கள் அடங்கிய நம் பண்பாட்டினுள் ஒன்றின் மீது ஒன்று, ஒன்றனுள் ஒன்று எனப் பல படிவுகளான பதிவுகள் உள்ளன. அவற்றை உரிய அணுகலில் இழை பிரித்து இனங்காண முடியும். வல்லரசுகள் தம் மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பண்டங்களையும் இங்கு கடைவிரிக்கவும் நம்மிடமுள்ள மூலப்பொருட்களை நாமே திரட்டி அவர்களுக்குத் தேவைப்படும் பக்குவத்தில் அவர்கள் “அறப்பணி” என்றும் “தொண்டு” என்றும் அளிக்கும் பயிற்சிகளால் செய்து ஏற்றுமதியால் வளம் பெறுகிறோம் என்ற ஏமாற்றை நம்பி அவர்களுக்கு அளிக்கவும் மார்வாரிகளுக்குப் போட்டி வராமல் தடுக்கவும் செயல்படும் வருமான வரித்துறையையும் தொழில் தொடங்குவதற்கு நம் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற தடைகளையும் மார்க்சியம் என்று பாட்டாளியரைக் காட்டி நம் நாட்டுத் தொழில்வளம் தற்சார்புடையதாக மலராமல் கோட்பாட்டாலும் செயற்பாட்டாலும் தடுப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட ஒட்டுண்ணிகளின் கூட்டாளிகளாக இருந்துகொண்டு பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்ற பொய்யுருத்தாங்கிகளையும் கொண்ட கூட்டணியைக் களத்திலிருந்து அகற்றி மறைநூற்கள், சமற்கிருத நூற்கள், ஆகமங்கள், நம் மக்களிடையே நிலவும் மரபுகள், மருத்துவ நூல்கள், கணிய நூல்கள், ஆகிய அனைத்தையும் ஆய்ந்தால் வல்லரசுகளின் அறிவியல்-தொழில் நுட்பங்களை வெல்லும் வல்iமையை நாம் பெற முடியும். மக்களாட்சி மலரச்செய்து ஆட்சிக்காயினும் கல்விக்காயினும் வழிபாட்டுக்காயினும் மக்கள் பேசும் ஒரு மொழியே போதும் என்ற நிலையை உருவாக்க முடியும்.

ஒலிப்பெயர்வு (Transition) எளிதாக இருக்குமாறு தமிழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
செல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறம்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே

(தொல். எழுத்து: 102)

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

(தொல். எழுத்து: 33)

அந்தணர் மறைகளின் எழுத்திலக்கணம் கூறாது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட மொழிவழக்குகளுக்கே தாம் இலக்கணம் வகுத்திருப்பதாகத் தொல்காப்பியர் தெளிவாகவே கூறுகிறார். ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதும் ஆசிரியர் தான் இங்கு இன்னொரு மொழிக்கு இலக்கணம் எழுதவில்லை என்று கூறத் தேவையில்லை. அவ்வாறு கூறுவது ஏளனத்துக்குரியதாகும். அப்படி இருக்கும் போது இங்கு இவ்வாறு கூறுவதன் பொருள் யாது? அந்தணர் மறைகள் நரம்பின் மறை போன்றவற்றுக்கு வேறு ஒலிப்பு முறைகள் இருந்தன, அவை தமிழக மொழிவரம்பிற்குட்பட்டவை, தமிழ் வரம்புக்குள் வழங்கப்பட்டவை என்று சொல்லுவது தான் முறையாகும்.

இன எழுத்துக்கள் எனப்படும் வல்லெழுத்துகளுக்கு நான்கு ஒலிப்புகள் இந்தியாவுக்கு வெளியில் எந்த மொழியிலும் இல்லை. தமிழில் நாம் சுட்டிக்காட்டிய ஒரே வரியனுக்கு இடத்துக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் வழக்கிலிருப்பதையும் சேர்த்தால் இந்த முறை முற்றிலும் குமரிக்கண்டத்திலேயே உருவானது என்பது ஐயத்திற்கிடமின்றி விளங்கும். கடந்த 50 ஆயிரம் முதல் ஓரிலக்கம் ஆண்டுகளுக்குள் நடைபெற்றிருக்கக்கூடிய இந்த நிகழ்முறையை மனதிற் கொள்ளாமல் சமற்கிருதத்தில் இருக்கிறது என்பதாலேயே அறுபதாண்டுச் சுழற்சி முறையையும் அது சார்ந்த ஐந்திறத்தையும் நமக்குரியனவல்ல என்பது நம் பண்டைநாள் எய்தல்களுக்கான உரிமையை நாமே மறுப்பதாகும்.

மற்றொன்று கூறல் என்ற குற்றமாயினும் இன்று தமிழின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்வது எவ்வாறு என்பதைப் பற்றி சிறிது சிந்திப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

கல்வி என்பது அரசுப் பணி போன்ற ஒட்டுண்ணி வேலைகளுக்கே என்ற மனப்பான்மையின் பின்னணியில் உழைப்பு விளைப்பு சார்ந்தோருக்கு நம் குமுகத்திலுள்ள இழிவு உள்ளது. சாதி உயர்வு தாழ்வும் அதன் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பு - விளைப்பு சார்ந்த “கீழச்சாதி”யினருக்கும் அதனைத் தவிர்த்து விட்ட மேல் சாதியினருக்கும் ஒரு பண்பாட்டு முரண்பாடு உள்ளது. உணவு, உடை, தெய்வம், ஆண் - பெண் உறவு என்று ஏறக்குறைய பண்பாட்டின்[1] அனைத்துத் தளங்களிலும் அது செயற்படுகிறது. மொழி அதில் ஒரு இன்றியமையாத கூறாகும். அந்த வகையில் பொருளியல் நிலையில் உயர்ந்தோர் பிற பண்பாட்டுக் கூறுகளோடு மொழி சார்ந்தும் தங்களை மாறுபடுத்திக் கொள்கின்றனர். “மேற்சாதி” பண்பாட்டுக் கூறுகளைக் கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட பொருளியல் பின்புலம் வேண்டும். அது இல்லாத “கீழ்ச்சாதி” மக்கள் அந்த “மேல்ச்சாதி”ப் பண்பாட்டை உயர்வானதென்ற தவறான கணிப்பில் அந்தப் பண்பாட்டுக் கூறுகளை கடைபிடிக்க முடியாததால் தாம் தாழ்ந்தவரென்றும் கடைபிடிக்க இயல்கின்ற மேற்சாதியினர் உயர்ந்தவர் என்றும் தங்களைத் தாங்களே தாழ்த்தி மதிப்பிட்டுக்கொண்டுள்ளனர். பண்பாடு சார்ந்த இந்த இழுவிசைக்கு “கீழச்சாதி” மக்களிடையிலுள்ள தாழ்வு மனப்பான்மையில் பெரும் பங்குண்டு. “மேல்ச்சாதி”யினர் கடைப்பிடிக்கும் இந்தப் பண்பாட்டுத் தொகுதியைத் தான் நாம் பார்ப்பனியம் என்கிறோம். நெல்லை மாவட்ட ஊர்ப்புறங்களில் சென்ற நூற்றாண்டில் வெள்ளாளக்கட்டு என்றனர். இந்த வெள்ளாளக்கட்டுப் பண்பாட்டுக்கு எதிராக சாதியொழிப்பிலும் தமிழ் வளர்ச்சியிலும் நாட்டம் கொண்டோர் வன்மையாகப் போராடவேண்டும்.

அடுத்து கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் எழுத்தறிவு மனப்பாடம் செய்தல் என்ற ஒரேயொரு திறனை மட்டும் சார்ந்துள்ளது. ஆய்வகப் பயிற்சி என்பது கூட பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படாத உயர் கோட்பாட்டு மட்டத்திலேயே உள்ளது. மருத்துவர் படிப்பிலுள்ள பயிற்சி கூட மேலெழுந்தவாரியாக உள்ளதேயன்றி அடித்தளத்திருந்து ஆழமாக அமையவில்லை. பொறியாளர்கள், குறிப்பாக கட்டுமானம், இயந்திரம், மின்சாரம், போன்ற துறை மாணவர்கள் நடைமுறைக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைத் தங்கள் கல்வி நிலையங்களில் பெறமுடியாதவர்கள்.

நமக்கு, கட்டடம் கட்டுவதிலுள்ள பலதரப்பட்ட வேலைகள், முடிதிருத்துதல், துணி வெளுத்தல், வேளாண்மை தொடர்பான பல்வேறு கருவிகளை இயக்குதல். வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், கால்நடைப் பண்ணையில் உள்ள தொழிலாளர்கள், உணவு விடுதியில் சமையல் மற்றும் பரிமாறுவோர் என்று மக்களின் தேவைகளுக்கான பணிகளைப் புரிவோருக்கு எந்தவித முறையான கல்வியோ பாடத்திட்டமோ இல்லை. இவற்றைப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்தால் நம் நாட்டு மக்களுக்குத் தரமான பணிகளைப் பெற முடியும். உள்நாட்டிலேயே வேலைபெற முடியும். தமிழில் பாடத்திட்டங்களை வகுத்துத் தமிழுக்குப் பள்ளிகளில் இடம் பெற்றுக்கொடுக்க முடியும்.

இருக்கிற ஒரு கல்வி முறையை மாற்றுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாத கடும் பணி. ஆனால் தமிழார்வலர்களுக்கு இருக்கின்ற ஈடுபாடும் அதற்கென்று நாம் செலவிடும் ஆற்றலும் சரியான திசையில் திரும்பினால் இது இயலாத ஒன்றல்ல.

இன்று திசை தெரியாமல் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் நம் ஆட்சியாளர் வாக்களித்துள்ள கடன்களைப் பெற்றும் ஓரிலக்கத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்காகச் செலவிட்டு நாடெல்லாம் நச்சுத் தொழிற்சாலைகள் போல் கல்வி நிலையங்கள் முளைத்துள்ளன. விரும்பும் வேலை கிடைக்காத இலக்கம் பேரில் எஞ்சியோர் அனைவரும் எதற்கும் உதவாமல் தங்களையும் தங்கள் குமுகத்தையும் வெறுக்கும் கும்பலாக மாறிவருகின்றனர். அவர்களிடமுள்ள அனைத்துத் திறமைகளும் கல்வி நிலையங்களுக்குள் அழிந்து போகின்றன. இது நம் குமுகத்துக்கு நல்லதல்ல. தொழில் வளர்ச்சிக்கும் தங்கள் வாழ்க்கைத்தரமும் பண்பாடும் மேம்படவும் பயன்பட வேண்டிய நம் பணத்திரட்சி இவ்வாறு அழிக்கப் பயன்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழருக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ மீட்சியில்லை. சிந்தித்து செயலாற்றுவோமாக!

இனி, இவ்வாறு தமிழும் சமற்கிருதமும் வேத மொழியும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்றால் தமிழ் எழுத்துமறை, சொற்கள், இலக்கணம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது சமற்கிருதத்தோடு கலந்துவிடலாமா, தனித்தமிழ், தூயதமிழ் என்பனவெல்லாம் தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் முழுகிப்போன குமரிக் கண்டத்தில் மக்கள் மொழியாயிருந்து இன்றைய தமிழகத்தில் நிலம் சார்ந்து தொடர்ந்து வரும் ஒன்று. அங்கு உருவாகி இங்கும் தொடர்ந்த மக்களின் உள் முரண்பாடுகளினால் வலுவிழந்து தங்களின் பெரும்பான்மை மக்களை இழிந்தோராக வைத்ததனால் தானும் செல்வாக்கிழந்து இழிமொழியாகி, சேரிமொழியாகிச் சிறுமைப்பட்டு நிற்கிறது. இந்த இழிநிலையை மாற்றி இழிவுக்குள்ளான மக்களின் குமுக செயற்பாடுகளான உழைப்புக்கும் விளைப்புக்கும் உரிய மதிப்பளித்து அவர்களது தொழில்முறைகளை இம்மொழியில் பாடத்திட்டங்களாக்கி கல்விமொழியாக்கி ஒட்டுமொத்த குமுகமும் பொருளியலில் வளர்ந்து மக்களும் மொழியும் நிலமும் உலகில் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கத் தேவையான அரசியலின் ஊடகமாக இந்த மொழியின் இருப்பு தேவையாகிறது. அந்த அரசியலில் வெற்றி பெற்றபின் தேவையானால் இம்மொழியில் மாற்றங்களோ மேம்பாடுகளோ செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்தக் குமுகியல் – பொருளியல் - அரசியல் நடவடிக்கைகளின்றி எவராலும் எந்த உத்தியாலும் இந்த மொழியை இனி காக்க முடியாது.


அடிக்குறிப்பு:

[1]பண்பாடு என்பது பருப்பொருள் பண்பாடு, நடத்தைப் பண்பாடு என்று இருவகையாகக் கூறப்பட்டாலும் இரண்டுக்கும் இடையில் ஒன்றை ஒன்று ஊடுருவும், ஒன்று மற்றொன்றாக மாறும் இயங்கியல் உறவுண்டு. இங்கு நாம் பருப்பொருள் பண்பாட்டு நிலையிலிருந்து பேசுகிறோம்.

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (4)

தமிழ் எழுத்து அமைப்பு மிக உயர்வானதாக, கணினிப் பயன்பாட்டுக்கு பிற எந்த மொழியையும்விட பொருத்தமாக இருப்பதாக எழுத்தாளர் சுசாதா கூறியிருக்கிறார். அவர் அதன் எந்த தன்மையை வைத்துக் கூறினார் என்பது தெரியவில்லை. அனால் இன்றைய தமிழ் எழுத்து முறையில் விடை தேட வேண்டிய பல கேள்விகள் உள்ளன.

1. தமிழ் எழத்துக்கள் 33 என்கிறது தொல்காப்பியம்.
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
சார்பெழுத்துகள் 3 – ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆனால் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் போன்றவை இந்த எண்ணிக்கையில் வரவில்லை.

2. தந்தை, பந்து போன்ற சொற்களில் தகரத்துக்கு முன் நகரத்துக்கு உள்ள ஒலி நகரம் முதலெழத்தாகும் போது மாறுகிறது. னகர ஒலியேமுதலெழுத்தாவதற்குப் பொருந்துகிறது.

3. உ, ஊ, இ, ஈ, எ, ஏ, ஒ, ஓ, ஆகிய எழுத்தக்களுடன் குழம்பும் என்பதால் முறையே வு, வூ, யி, யீ, யெ, யே, வொ, வோ, என்ற எழுத்துக்கள் மொழி முதலாவது தடுக்கப்பட்டுள்ளது சரிதான். ஆனால்,

அ) ச, சை, சௌ, மூன்றும் முதலெழுத்தாவதற்கிருக்கும் தடைக்கு மொழியியல் அல்லது ஒலியியல் காரணம் என்ன?


அ, ஐ, ஒளி எனும் மூன்றலங்கடையே என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு “அவை ஒள எனும் ஒன்றலங்கடையே” என்று பாடவேறுபாடு காட்டினும் சௌ மொழி முதலாவதற்குள்ள தடைக்குக் காரணம் யாது?

தமிழிலும் சரி ஆங்கிலத்தலும் சரி சகர வரிசையிலுள்ள சொற்கள் பிற எந்த வரிசையிலுள்ள சொற்களையும் விட மிகுதி. இந்த விதி தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை மிகவும் குறுக்கிவிடும். ஆதனால் இந்த விதி பற்றிய கருத்துப்போர் நெடுங்காலமாக நடைபெறுகிறது. திருவள்ளுவர் இவ்விதியை ஏற்றுள்ளார்; இளங்கொவடிகள் புறக்கணித்துள்ளார்.

ஆ) ய, யு, யூ, யை, யொ, யோ, யௌ, ட முதல் டௌ வரை, ர முதல் ரௌ வரை, ல முதல் லௌ வரை, ழ முதல் ழெள வரை, ள முதல் ளௌ வரை, ற முதல் றெள வரை, ன முதல் னௌ வரை சொல் முதலில் வரக்கூடாது என்பதன் நோக்கமென்ன?

இ) ட, ர, ல, போன்ற எழுத்துக்களுக்கு இ, உ, எ போன்ற உயிரெழுத்துக்களை முன்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி ஆங்கிலத்தில் Write, Wrong, Wrought போன்ற சொற்களில் கையாளப்பட்டிருப்பதைப் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் வரியனில் இருக்கும் இந்த அமைப்பு ஒலிப்பில் இடம்பெறவில்லை.

Log என்ற ஆங்கிலச் சொல்லுக்கு

1. Log (லோகு) என்ற ஈபுரூச் சொல்லிலிருந்து ஒரு முகத்தலளவைப் பெயர், ஏறக்குறைய ½ லிட்டர் அளவு கொண்டது – தமிழில் உழக்குக்கு இணையானது.

2. Log (லோகு) தடிமனான மரக்கட்டை – தமிழில் உலக்கை.

3. கப்பல் மற்றும் பிறவற்றின் செயற்பாடு அல்லது பட்டறிவுகளின் பதிவு - உலவு - உலா
Log book – உலவுச் சுவடு
அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பதை (உ)லாத்துதல் என்பது வழக்கு. லாந்துதல் என்பது குமரி மாவட்ட வழக்கு.

4. Locus: இடம் --- இலக்கு; பொது வழக்கில் லெக்கு. இதுபோன்று எண்ணற்ற சொற்களைக் காட்ட முடியும்.

இந்தக் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்படும் முன்னரும் பின்னரும் குமரிக்கண்ட மக்கள் அவர்களது மொழி வழக்குகளுடன் உலகில் பரவியுள்ளனர் என்று கொள்ளலாம்.

4. சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் கசடதப ஆகிய 5 வல்லெழத்துகளுக்கும் முறையே நன்னான்கு ஒலியன்களும் வரியன்களும் உண்டு. தமிழில் 6 வல்லெழுத்துகளுக்கும் அவற்றிலிருந்து சிறு மாறுபாட்டுடன் இடத்திற்கேற்ப வெவ்வேறு ஒலிகள் உண்டு.

1. குடம் அகம் அக்காள் அங்கணம் அழகு
2. செல்வம் வசம் வச்சிரம் வஞ்சகம் வீசு
3. -- படம் பட்டம் பண்டம் பாடு
4. தவிடு விதம் வித்தை விந்தை விதை
5. புனுகு கோபுரம் கோப்பியம் கோம்பை கோபி
6. -- முறம் முற்றம் முன்றில் மறை

இந்த ஒலிகள் வரியனின்றி மரபு அடிப்படையில் பேணப்படுகின்றன. மறைகளைக் குறிப்பிட நாம் கையாளும் “எழுதாக் கிளவி”த் தன்மையை இந்த ஒலிப்புகள் தமிழுக்குத் தருகின்றன. அதே நேரத்தில் இத்தன்மையைப் பயன்படுத்தி க,ச,ட,த,ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு ஒலி மட்டும் இருப்பது போல் ஒலிக்கும் முறை தொடங்கிவிட்டது. அகம் என்பதை Aham என்று ஒலிக்காமல் Akam என்றும் பல்கலைக்கழகம் என்பதை Palhalaikkazhaham என்று ஒலிக்காமல் Palkalaikazhakam என்றும் இதுபோன்றும் ஒலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தவறுக்கான அடித்தளம் தமிழ் ஆட்பெயர்களையும் இடப்பெயர்களையும் ஒலிபெயர்த்த சமற்கிருதம் அறிந்தவர்களிடமிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் என்பதை Nahappattinam என்று எழுதாமல் Nagapattinam என்றும் நடராஜன் என்பதை Nadarajan என்று எழுதாமல் Natarajann என்றும் பாலன் என்பதை Palan என்று எழுதாமல் Balan என்றும் கணபதி என்பதை Kanabathi[1] என்று எழுதாமல் Ganapathi என்றும் இவ்வாறெல்லாம் இது தொடங்கியது.

இவ்வாறு பல ஒலிகள் முற்றிலும் கைவிடப்பட்டும் இருக்கின்ற ஒலிகளுக்கு வரியன்கள் இன்றியும் வகுக்கப்பட்ட இந்த இலக்கணம் ஒரு கட்டத்தில் மறைமொழியாக இருந்திருக்கலாமா என்றொரு ஐயம் எழுகிறது.

நாமறிந்த தமிழ் மொழி வரலாற்றைப் பார்ப்போம். கழக இலக்கியங்களாயினும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களாயினும் தமிழக அரசர்கள் மறை வேள்விகளையும் பார்ப்பனப் பூசாரிகளைக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு செய்யும் கோயில்களையும் புரந்தனர் என்பதையே காட்டுகின்றன. பின்னர் சமற்கிருதத்தில் இலக்கியங்களையும் ஆட்சியையும் கண்ட களப்பிரர்[2] ஆட்சியைக் காண்கிறோம்.

அறைபோகு குடிகளோ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்

என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டிய ( அந்திமாலை சிறப்புச் செய்காதை 10-12 ) அறைபோகு குடிகள் (தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்து தம் வளத்தைப் பெருக்கிக்கொள்வோர்) நாள்தோறும் பெருகிவந்தனர். புத்த - சமணத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுரண்டலுக்கு எதிராக வாணிகர்கள் தொடங்கிய இயக்கத்திற்குப் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் தலைமை தாங்க ஒரு மொழி மீட்பியக்கமாகவும் அது வடிவம் கொண்டது. அதனைக் கைப்பற்றி வளர்ந்த சோழப் பேரரசு மக்களைக் கசக்கிப் பிழிந்து எண்ணற்ற ஆகமக் கோயில்களை எழுப்பி பிறமொழிப் பூசாரியரையும் தேவரடியாரையும் இறக்குமதி செய்து சமற்கிருதத்தைப் பூசை மொழியாக்கியது. மக்களின் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க ஓதுவார்களை அமர்த்தி வெளியில் நின்று தமிழைப் பாட வைத்தது.

பேரரசுச் சோழர்களின் ஆண் வழியினருக்கும் இராசராசனின் பெண் வழியினருக்கும் உருவான போட்டியில் ஆண்வழியில் வந்த அதிராசேந்திரன் என்பவன் மக்களின் ஒரு புரட்சியைப் பயன்படுத்தி கொல்லப்பட்டு இராசராசன் அவன் மகன் இராசேந்திரன் ஆகியோரின் பெண்களின் வழியில் வந்தவனும் சாளுக்கிய அரசனாக ஆண்டு கொண்டிருந்தவனுமான இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில் அமர்ந்தான். அவனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடையிலும் மோதல்கள் நடந்ததற்கு தடயங்கள் உள்ளன. எதிர்த்தவர் ஒடுக்கப்பட்டனர்; பக்கஞ்சார்ந்து காட்டிக்கொடுத்தவர் பயன் பெற்றனர். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்தாலும் அன்றிலிருந்து நாட்டைக் காட்டிக்கொடுப்பதே ஆதாயம் என்ற மனப்பான்மை மேல்மட்டத் தமிழர்களிடம் ஆழ வேரூன்றிவிட்டது. தமிழகத்தைக் கைப்பற்ற நினைப்போர் இதைத் தெரிந்து எளிதில் இங்கு காலூன்றிவிட முடிகிறது.

விருதுகள் என்பவை சில அடிப்படை உரிமைகளுடன் சிறப்புரிமைகளும் கொண்ட ஒரு கலப்பாகும் (பட்டங்கள் வழங்குவதையும் விருதுகள் என்ற பெயரில் குறிப்பிடுவதுண்டு). தெருவில் செருப்பணிந்து செல்வது, வெற்றிலைப் பெட்டி வைத்துக்கொள்வது, பல்லக்கில் செல்வது, வாள் வைத்துக்கொள்வது, குடைபிடிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுடன் பகலில் விளக்கேந்திச் செல்வது, நடைபாவாடை மேல் பாவாடை விரிப்பது, முன்னும் பின்னும் சதிராடுதல், முன் சங்கு, பின் சங்கு ஒற்றைச் சங்கு, இரட்டைச்சங்கு ஊதுதல் போன்ற சிறப்புரிமைகளுமாக மொத்தம் 72 விருதுகளை நம் பண்டை அரசர்கள் மக்களுக்கு வழங்கிவந்தனர்.[3] இவற்றுள் அடிப்படை உரிமைகள் சிலவற்றை அடித்தள மக்களில் ஒரு பிரிவினருக்கு மறுப்பதன் மூலம் அவர்களையொத்த பிற பிரிவினருடன் இடைவிடாத கொலைவெறி மோதல்களை உருவாக்கிவிட்டுத் தாங்கள் நடுநிலை தாங்குவோர் போல் காட்டித் தங்கள் மேலாளுமையை உறுதிப்படுத்தியதோடு சிறப்புரிமைகளைத் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் வைத்துக்கொண்டனர். முகம்மதியர் படையெடுப்புகளின்போது தங்கள் பெருநில உடமைகளைக் காப்பதற்காக மதம் மாறி அந்தந்த வட்டார மக்கள் மீது ஆளுமை செலுத்திய சிவனிய வேளாளராயினும் சரி (இவர்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சி உண்பதில்லை) நாயக்கர் காலத்தில் நாடுகள் என்ற ஆட்சியியல் நிலப்பிரிவுகளையும் அவற்றுள் ஆள்வினை புரிந்த நாடான்கள் என்ற பதவிகளையும் ஒழித்து பாளையங்களை உருவாக்கிய அரியநாத முதலியாராயினும் சரி அவருக்குத் துணையாய் நின்று நாடுகளாகிய தங்கள் உடமைகளைக் காத்துக் கொண்ட மறவர் பாளையக்காரர்களாகிய முன்னாள் நாடான்களாயினும் சரி, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அமைத்துத் தந்த முதன் முதல் முல்லை நிலத்தில் அமைந்த பெருமாள் கோயில்களைச் [4] சுற்றியுள்ள நிலங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பணிபுரிந்த ஆயர்களாயினும் சரி (இந்த ஊர்கள் இன்றும் கிருட்டிணாபுரம், முத்துக்கிருட்டிணாபுரம், கிருட்டிணன்கோயில் போன்ற பெயர்களுடன் விளங்குகின்றன) வெள்ளையர் வந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் செயல்பட்டு வாணிகர்களாக வந்தவர்களுக்கு நாடுபிடிக்கும் அவாவை மூட்டி உளவும் சொன்ன அனந்தரங்கம் பிள்ளை (ஆயர்) பச்சையப்ப முதலியார் போன்ற பார்ப்பனரல்லா மேல் சாதியினராயினும் சரி, பின்னர் கோயில் தேவரடியாரைப் பயன்படுத்தி அவர்களது இடத்தைப் பிடித்துக்கொண்ட பார்ப்பனராயினும் சரி, இன்று நம் நாட்டு மக்கள் மீது தம் சாதிய ஒடுக்குமுறையைத் தக்கவைத்துக்கொள்ளவும் இயன்ற வழியிலெல்லாம் பொருள் சேர்க்கவும் சேர்த்த பொருளைப் பாதுகாக்கவும் எந்த வரைமுறையும் இன்றி மேடைபோட்டு காலில் விழுந்து புகைப்படம் எடுத்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் “வீரம் செறிந்த” மரபினராயினும் சரி , திரை நடிகர்கள் போடும் எச்சிற்காசுக்கு அவர்களுக்குக் கொடிபிடித்து கட்சியமைத்து அரியணை நோக்கி அழைத்தச் செல்லத் துடிக்கும் இந்தத் தலைமுறை இளையோராயினும் சரி, நாட்டைக் காட்டிக் கொடுப்பது தமிழ் நாட்டு “மேல் தட்டை” நோக்கிப் போவோரின் இயல்பாகிப் போய்விட்டது. தாங்கள் நாட்டை ஆண்ட சாதி என்று சாதி வரலாற்றாசிரியர்கள்” காட்டும் சான்றுகளை ஆய்ந்தால் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை தம் நாட்டை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தமைக்காக வழங்கப்பட்ட நல்கைகளும் பட்டயங்களுமாகவே (விருதுகளுமாகவே) இருப்பதைக் காணலாம். மொத்தத்தில் இன்றைய நிலையில் மேல் சாதியினரும் கீழ்ச்சாதிகளில் மேல்நிலையிலிருப்போர், குறிப்பாக மரபுரிமையாக பெருநிலவுடைமை கொண்டிருப்போரும் என்றோ ஒருநாள் தம் சொந்த நாட்டைப் பகைவர்களுக்குக் காட்டிக்கொடுத்தோரின் வழியினராக இருப்பதைக் காணலாம்.

நம் மக்களின் இந்தப் போக்குக்கு ஆழமான பண்பாட்டுப் பின்னணி உண்டு. நாம் மிகப்பழமையான நாகரிகம் உள்ள மக்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை மிகத் தொல்பழங்காலத்திலேயே நுட்பமான கலையாக்கியவர்கள். குபேரன் எனும் செல்வக் கடவுளுக்கு மனிதனையே ஊர்தியாக்கி சுரண்டலுக்குத் தெய்வப் படிமம் வகுத்தவர்கள். அதற்கும் அப்பால் சென்று உழைக்கும் மக்களையும் அவர்களோடு நின்று அவர்களை இயக்கும் விளைவிப்போரையும் குமுக மதிப்பில் தாழ்த்துவதற்கென்றே வயிற்றுப்பாட்டுக்கு பாடுபடுவது வினைகளைச் சேர்க்கும் என்றும் அதனால் அவ்வாறு செயல்படுவோர் இழிந்த பிறவியினரென்றும் “அவாவை அறுத்து” உழைப்பவனும் விளைப்பவனும் “கடமையாக”த் தருவனவற்றை வயிராற உண்டு “வீடு” தேடி வாளாவிருப்போரே மேன்மக்கள் என்றும் அவர்கள் பிறப்பறுத்து பேரான்மாவோடு இரண்டறக் கலக்கும் பேறுடையவர்களென்றும் கூறும் வினைமறுப்புக் கோட்பாடென்னும் மலட்டுக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள். இன்னொருபக்கம் பணி செய்வோருக்கும் பண்டம் படைப்போருக்கும் ஒழுக்க வரையறை கிடையாது என்னும் பொருளில்,

“அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்,
கடிவரை யில ………”

என்று அகத்திணை இலக்கணமும் வகுத்து வைத்துள்ளோம். இவற்றின் வெளிப்பாடு தான் ஆசிரியர்கள் பிஞ்சியிலேயே பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சாக “மாடு மேய்க்கத்தான் போகவேண்டும்”, “சுமை தூக்கத்தான் போகவேண்டும்”, “சிரைக்கத்தான் போகவேண்டு”மென்று, உழைப்பு, தொழில் ஆகியவை மீது வெறுப்பையும், கசப்பையும் ஊட்டுவது. இந்த நஞ்சூட்டுதலை ஊடகங்கள் இன்னும் நன்றாகவே செய்கின்றன. இந்தப் பின்னணியில் அவாவறுத்தல் என்ற நச்சுக் கோட்பாட்டோடு உருவாகிய புத்தமும் சமணமும் ஆட்சியாளர் பூசாரியர் கூட்டணியை எதிர்ப்பதென்ற பெயரில் உழைப்பு, விளைப்பு அகியவற்றோடு தொடர்புடைய பங்கீட்டுப் பணியைச் செய்யும் வாணிகரிடமும் அதனைப் புகுத்தி அவர்களை உழைப்போர், விளைப்போரிடமிருந்து முற்றிலும் அயற்படுத்தி வைத்துள்ளன. முகம்மதியமும், கிறித்துவமும் உழைப்போரைத் தாழ்த்தி வைத்திருந்தாலும் விளைப்போரையும் வாணிகர்களையும் மதித்தன. இந்நிலையில் விளைப்பு வாணிக வகுப்புகளுக்கு மதிப்பளித்த ஆங்கிலர் ஆட்சி அகன்றதும் பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் ஒட்டுண்ணி வாழ்க்கையினரான அரசூழியர்களும் ஆசிரியர்களும் - அதிகாரிகளும் மேலேறி அமர்ந்து விளைப்புச் செயல்முறையில் தவிர்க்க இயலாமல் சேர்ந்தியங்க வேண்டிய உழைப்பாளரையும் விளைவிப்போரையும் இணக்கம் காணா எதிரிகளாக்கி நம் விளைப்பு செயல்முறையையே முடக்கிவிட்டனர்.

இது போன்ற ஒட்டுண்ணி வாய்ப்பைத் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்வதற்கு மேற்சாதியினர் கடந்த காலத்தில் சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும், உள்ளுர்ப் பார்ப்பனருக்கும் அயலிலிருந்து வந்த பார்ப்பனருக்கும் மற்றும் பிறருக்கும் போட்டிகள் ஏற்பட்டபோது உள்நாட்டுக் கீழ்ச்சாதி மக்களையும் தமிழ் மொழியையும் இணைத்துத் துணையாக்கிக்கொண்டு வேலை முடிந்ததும் வீசியெறிந்து விட்டனர். இந்நிகழ்சிகளில் கீழ்ச்சாதிகளிலுள்ள சிலர் மேற்சாதிகளில் உட்பிரிவுகளாக ஏறி அமர்ந்து கொண்டனர். இவ்வாறு சிக்கலான பலகலப்பான ஒரு நிகழ்முறையில் தமிழ் தன் இருப்பைக் காப்பாற்றி வந்துள்ளது. அவ்வாறு தமிழ் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பாய் அமைந்தது இந்த மேலடுக்குகளுடன் போதிய தொடர்பின்றி எழுத்தறிவும் இன்றி இருந்த கீழச்சாதி மக்களின் தமிழ் வழக்குகளே. இன்று அந்த இரும்புக் கோட்டையும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களாலும் கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் இலக்கு தவறிய எழுத்தறிவாலும் தகர்ந்து போய்விட்டது. இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறுபாடு காண முடியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குக் காரணம் உள்நாட்டு பண, இயற்கை, மனித வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு மக்களை தாங்கத் தக்க ஒரு பொருளியல் கோட்பாட்டையும் கட்டமைப்பையும் உருவாக்க இயலாத குமுகமும் பிழைப்பு தேடி நாட்டைவிட்டோடுவதும் அயலவருக்காகத் தாய் நாட்டினுள் அடிமை செய்வதும் இழுக்கென்றும் அழிவென்றும் உணராத, உணர்த்தாத “தமிழப் பற்றாளர்களும்” தாம் ஆட்சியிலிருக்கும் போது தமிழை அழிக்கும் சட்டங்களை இயற்றிவிட்டு இன்று செம்மொழிக்கும் தில்லியில் ஆட்சி மொழி உரிமைக்கும் போராடுவதாக பசப்புவோரை தமிழ்க் காவலர், தமிழினக் காவலர் என்று புகழ்வதும் செம்மொழி ஆகவேண்டுமானால் செத்தமொழி ஆகவேண்டுமென்று அப்போது ஆட்சியிலிருந்த நடுவண் அமைச்சர் கூறியதை மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளேயாகும்.

நல்வாழ்வு வாழவேண்டுமாயின் நாட்டைவிட்டுச்செல்ல வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே வெளிநாட்டினருக்கு அடிமை செய்யவேண்டும் என்றிருக்கும் நிலையை மாற்றாமல், அதற்கு நூற்றுக்கு ஒருவருக்கும் குறைவாக இருக்கும் வாய்ப்புக்காக நூறு பேரும் ஆங்கிலமும் இந்தியும் கற்கும் நிலையை, அதற்கான அரசியல், பொருளியல், குமுகியல், பண்பாட்டியல் சூழ்நிலைகளை கண்டுகொள்ளாமல், தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும், கல்விமொழியாக வேண்டும், வழிபாட்டுமொழியாக வேண்டும் செம்மொழியாக வேண்டும் என்று குரல் எழுப்புவது உலகப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புள்ளவையாக அவர்கள் கூறும் ஆய்வு இருக்கைகளில் பணியாற்றத் துடிப்போருக்கன்றி தமிழுக்கோ தமிழ் மக்களுக்கோ எவ்வாறு உதவும்? அவர்கள் அங்கு சென்று நிகழ்த்தும் ஆய்வுகள் கூட தமிழிலிருக்குமா? அந்த ஆய்வுகள் தமிழை வளப்படுத்துமா அல்லது அவ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் மொழிகளை வளப்படுத்துமா?

இன்று மக்களிடையில் எழுத்தறிவு பரவப் பரவ தமிழ் அவர்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பேச இயலாவிடினும் ஓரளவு புரிந்து கொள்ளும் சூழல் பெரும்பான்மையரிடத்து உருவாகிக்கொண்டிருக்கிறது. எனவே மேல்மட்டத்தினரிடையில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை விரிவடைந்து கொண்டிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பணம் பெற்றுத் “தொண்டாற்று”வோராகக் கருதப்படும் அரசு சாரா நிறுவனங்களிலுள்ளோர் இன்று தமக்குள் இந்தி பேசுவோராக மாறிக்கொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் கூட, பொதுவாகப் புரியாத, அவர்களுக்கென்று உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு குழுஉக்குறிப் பிரிவு உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தி என்று இன்று கற்பிக்கப்படும் மொழி கூட இந்தி மண்டலத்தில் வழங்கும் 18 கிளை மொழிகள் எதனொடும் நெருங்கியதல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. ஒருவேளை இன்றைய ஆங்கிலமோ, இந்தியோ ஆட்சிமொழியாகி நாளடைவில் அதே வடிவில் அல்லது தமிழுடன் கலந்து ஒரு புது மொழி உருவாகி அது புழக்கத்திற்கு வந்து தமிழ் வழக்கொழிந்து போனால் அதே மொழி மக்களுக்குப் புரியாது என்ற தகுதியில் ஆட்சிமொழியாகிவிடக் கூடும். இது தான் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு. முழுமையான மக்களாட்சி மலர்ந்து எந்த மறையமும் இன்றி ஆட்சி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும் போது தான் இந்த முரண்பாடு அகலும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]முன்னாள் திருவிதாங்கூரான இந்நாள் குமரி மாவட்டத்தில் மூத்தோர் பலரின் பெயர்கள் Nadarajan, Kangadharan என்றவாறு எழுதப்படுகின்றன. இப்பகுதியில் வழங்கிய தெக்கன் மலையாளம் மொழிவழக்கு இன்றைய மலையாளத்திலிருந்து மாறுபட்டதாகும். திரிவிக்கிரமன் தம்பி என்பார் பதிப்பித்த பறப்பேடி மண்ணாப்பேடி என்ற நூலில் கணபதி (Kanabathi) என்ற சொல்லுக்கு ------ (Ganapathi) என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது. Kanabathi என்பது பழந்தமிழ் மரபைத் தழுவியதாகும்.

[2]மலைவாழ் மக்களாகிய கள்ளர்களையும் முல்லைநில மக்களையும் கொண்ட கலவையே களப்பிரர் - கள்ளர்பிறர் என்பது எமது கருத்து. சமற்கிருதத்தை வைத்து அவர்களை அயலவர் என்று கருதுவது தவறு. கழகக் காலம் தொடங்கி சிலம்பு, மேகலைக் காலங்கள் ஊடாக சமணத் துறவிகள் வடிவில் மலைக் குகைகளில் தங்கி ஊடுருவிய அயலவர் ஒருங்கினைந்தவர்கள் இவர்கள். உள்நாட்டு அட்சியாளர்கள் மூலமாக இன்றுபோல் நாட்டைச் சுரண்டிய இந்த புத்த - சமணர்களை எதிர்த்தே சிவனியமும் மாலியமும் இங்கு மறுமலர்ச்சி பெற்றன. இன்றும் பொருளியல் வளம் பெற்று வரும் "கீழ்ச்சாதி”யினரை பார்ப்பனியம் என்னும் வெள்ளாளக்கட்டினுள் இழுத்து வைக்கும் “இந்து” இயக்கங்களின் பின்னணியில் சமணர்களாகிய மார்வாரிகள் இருப்பதைக் காண்க.

[3]இவற்றுள் சில இன்றைய ஓட்டுநர் உரிமம். துமுக்கி உரிமம் போன்றிருந்தாலும் இப்போது போல் உரிய திறமைகளையும் தேவைகளையும் மெய்பித்தால் மட்டும் போதாது. ஆட்சியளர்களுக்கு வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும்.

[4]நம் நாட்டிலுள்ள பழைய திருமால் கோயில்களில் எதுவும் நம் மரபுப்படி மாயோனின் நிலமாகிய முல்லை நிலத்தில் இல்லை. அனைத்துமே வளமான ஆற்றின் கரைகளிலுள்ள செழிப்பான நிலங்களின் நடுவிலேயே அமைந்துள்ளன. பன்னீராழ்வார்களில் எவரும் ஆயர்குலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. களப்பிரர் காலத்திலிருந்து நிகழ்ந்த சிவனிய மாலிய எழுச்சிகள் இந்த வளமான நிலங்கள் அனைத்தையும் கோயில்கள் வழியாக ஆட்சியாளர் - பூசாரியர் கூட்டணியின் கைபிடிக்குள் கொண்டு வரவே பயன்பட்டன.

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (3)

மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின் மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான். இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான். தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர்[1] எனப்படுவர். பூகு வழி வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர, சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர். கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம்.[2]

யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான். இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள் அரேபியர்களென்றும் கூறப்படுகிறது.

மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.[3] மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள்.

இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும் வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை.[4] அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர் என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும் மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச் சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும் கருதுகிறார்கள். எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும் கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும். மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ், பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார். மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.

மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர்.

தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர்.

இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும் சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக் கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான் கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும் பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.

குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர் சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித் தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து இருவரும் விடுதலை பெறுகின்றனர்.

தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும் உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச் செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது.

பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின் எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக[5] மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.

மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக் கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன். சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும், மகனையும் கடவுள் பாராட்டுகிறார். இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும் கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில் கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின் தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர் இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன என்பதைச் சுட்டி நிற்கிறது.

உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக் கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின் மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து விட்ட வரலாற்று எச்சமாகும்.

இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது. மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல் அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார். காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக[6] முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன. இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி.[7] இது பூசாரியர் – அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம்.

பரசுராமனே இன்றைய சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று அவன் மகன் பிரகலாதனுக்கு[8] பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள் வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது.[9]

நாமறிந்த தமிழரசர் அனைவரும் பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது, இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில் நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும் வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர் பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன் சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில் உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால் நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில் வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன.

இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின் வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம்.

ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச் சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின. அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல் செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும் இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக வேண்டி வந்தது.[10] அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள்.

இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும். புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால் அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை[11] என்றார்.

(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1]அபிதான சிந்தாமணி யது, யாதவர் என்ற சொற்களைக் காண்க.

[2முதற்கழகமிருந்த தென்மதுரையை கடல்கொள்ள கபாடபுரம் எனப்படும் துவரையை (துவார் = கதவு; துவார் → துவாரகை → துவரை. கபாடம் = கதவு) அடைந்தனர் குமரிக்கண்ட மக்கள். அங்கு இரண்டாம் கழகத்தை நிறுவினர். அங்கு அரசனாய் இருந்த ஒருவன் பெயர் துவரைக் கோமான். மகாபாரதக் கண்ணன் வட மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது சராசந்தன் என்பவனுக்கு அஞ்சி குசராத் பகுதியில் இருந்த துவரைக்கு ஓடி தலைநகர் அமைத்து ஆண்டான். மகாபாரதக் கதை, குமரிக் கண்டத்தில் நடந்த பெரும் போரை, பின்னர் அங்கிருந்த மக்கள் குடியேறிய வட இந்தியாவில் நடந்த ஒரு போருடன் இணைத்து எழுதப்பட்டுள்ளது. குமரிக் கண்டத்து நகரங்கள், மலைகள், ஆறுகளின் பெயரைத் தாம் குடியேறிய இடங்களிலும் இட்டுள்ளனர்.

[3]சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் வாழந்த ஆற்றல் மொக்க பலதுறை அறிஞர்கள் அடிப்படை நூல்கள் பலவற்றைத் தொகுத்துள்ளார். அவற்றுள் கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், சிங்காரவேலு முதலியரின் அபிதான சிந்தாமணியும் சிறப்பானவை. அவற்றுள் காணக்கிடக்கும் அரிய செய்திகளுக்குச் சான்றுகளும் தரப்பட்டிருந்தால் மிகப் பயனளித்திருக்கும். நம் முன் தலைமுறையினர் செய்த பணிகளை மேம்படுத்துவதும் பின் தலைமுறையினர் கடமையாகும். செய்வீராக.

[4]வேலைக்காரியின் மகன் வழி வந்தவர்கள் பாண்டவர்களும் கவுரவர்கள் என்பதை மறைப்பதற்காக, சுக்கிரனின் மகள் மனைவி என்றும் அசுர அரசனின் மகள் வேலைக்காரி என்றும் கதையைத் திரித்திருக்கக்கூடும். அசுர ஆசிரியன் சுக்கிரன், தேவர்கள் ஆசிரியன் வியாழன் ஆகியவை இரு கோள்கள். இருவகை மக்களினங்கள் பின்பற்றிய வானியல் முறைகளை இவை குறிக்கின்றன எனலாம். அபிதான சிந்தாமணி சுக்கிரன் A 14 பார்க்க.

[5]மாந்தவியலில் இது தாய்வழித் தலைமகனுரிமை (Male primeogeniture in the matriliueal society) எனப்படும்.

[6]இங்கு அரசனின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலப்பரப்புகளில் வரி போன்ற வருமானங்களை ஆவாக உருவகப்படுத்தியுள்ளனர் என்று விளக்கம் காணலாம்.

[7]நாரிகவசன், மூலகன் என்ற சொற்களைப் பார்க்க. இவனது வழி வந்தவன்தான் இராமன்.

[8]பிரகல் + ஆதன், ஆதன் என்பது சேர அரசர்களின் பெயரிலுள்ள பின்னொட்டுகளில் ஒன்று. பிரகத் என்பதற்கு முதல் என்று பொருள்.

[9]திருமாலின் பதின் தோற்றரவுக் கதைகளில் பரசுராமன், நரசிம்மம், வாமனம் ஆகிய மூன்றும் சேரநாட்டுடனும் மீன் பாண்டிய நாட்டுடனும் பன்றி சாளுக்கியர்களுடனும் (புலிக்கேசியின் கொடி பன்றி) கண்ணனும் பலதேவனும் குமரிக்கண்டத்துடனும் தொடர்புடையவையாக இருப்பது தொன்மங்களுக்கும் அவற்றைப் பதிந்து வைத்திருக்கும் சமற்கிருதத்திற்கும் தமிழர்களுக்கும் அவர்களது பிறந்தகமான குமரிகண்டத்திற்கும் உள்ள உறவைக் காட்டவில்லையா?

[10]Chambers Twentieth Century Dictionary / New Edition 1972, Publishers preface காண்க.

[11]தொல். எழுத்து 33.

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (2)

குமரிக் கண்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு எகிப்திய தொல் வரலாற்றையும் சீனத் தொல்வரலாற்றையும் ஒப்பு நோக்க வேண்டும். தமிழர் வரலாற்றில் உள்ள இடைவெளிகளை அவை நிரப்பும். மறைகள், சமற்கிருத இலக்கியங்கள் துணை இன்றி இதை நிறைவேற்ற முடியாது.

Masks of Gods - Primitive Mythology என்ற நூலில் சோசப் காம்பல் என்பவர் எகிப்தில் பூசாரித் தலைவர்கள் ஒன்றுகூடி சில விண்மீன்கள் ஒன்றுகூடும் ஒரு நாளில் ஒருவனை அரசனாக அமர்த்துவர் என்றும் அடுத்த முறை அதே விண்மீன்கள் கூடும் நாளில் அவனை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்குவர் என்றும் எகிப்தியத் தொன்மங்களிலிருந்து விளக்குகிறார். அதே நடைமுறை இங்கும் இடம் பெற்றுள்ளது. இந்திர பதவியடைவோர் மாறிக்கொண்டே இருப்பர்; இந்திராணி தொடர்வாள்.[1] மகாபாரதத்தில் நகுசன் எனும் பாண்டவர்களின் மூதாதை வேள்வி செய்து இந்திர பதவி அடைந்தான். ஏழு முனிவர்களும் தாங்கிய பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் நோக்கிச் சென்றவன் அவர்களை அதட்ட, சினமுற்ற அகத்தியர் அவனை நாகமாகுமாறு சபித்தார். இந்திரன் அவையில் உருப்பசி ஆடும் போது அவளும் இந்திரன் மகனும் காதல் குறிப்புகளைப் பரிமாறியதால் ஆட்டம் பிசக சினமுற்ற அகத்தியர் அவர்களைப் புவிக்குச் செல்லுமாறு சபித்தார்(சிலம்பு). இந்திரன் அவையில் முனிவர்களுக்கிருந்த மேலாளுமை தொன்மங்களில் தெளிவாகக் காணக் கிடக்கிறது.

வானுலகில் இருப்பவனாக நம் தொன்மங்களில் குறிப்படப்பட்டிருக்கும் இந்திரன் நம் மருத நிலத் தெய்வம். அதாவது குக்குலங்களிலிருந்த மருத நிலப் பூசாரித் தலைவர்களால் மருத நிலத் தலைவனாக அமர்த்தப்பட்டவன். அவனுக்கு அளிக்கப்பட்ட வேலை கோட்டைகளை அழிப்பது.

கோட்டை என்பது ஒரு வகை குமுக அமைப்பென்று தோன்றுகிறது. நடுவில் தலைவனது குடிலும் சுற்றிலும் அவனைச் சார்ந்து வாழ்வோரின் குடில்களுமாக வட்டவடிவில் அமைந்த குடியிருப்புகள் அவை.[2] அண்டை அயலிலுள்ள இது போன்ற குடியிருப்புகளோடு தொடர்பின்றித் தனிமையாக, “தன்னிறைவுடன்” அவை வாழ்ந்தன. ஒரு நிலப்பரப்பில் ஏழு குக்குலங்களில் ஒன்றோ பலவோ குக்குலங்களைச் சார்ந்த இது போன்ற கோட்டைகள் ஒன்றோடொன்று தொடர்பற்று இருந்தன. அவற்றை ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்திரன் போன்ற நிலத்தலைவன் ஒருவனை அவ்வட்டாரத்திலுள்ள குக்குலப் பூசாரிகள் உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுபடுத்தும் தேவை ஏதாவது வெளிவிசையின் தாக்குதலினால் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிவிசை பெரும்பாலும் நெய்தல் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும்.

உலகில் இது போன்று தனித்தனியே வாழும் குழுக்களை ஆங்காங்குள்ள அரசுகளின் முழு அதிகாரத்தினுள் கொண்டு வரும் முயற்சிகள் இன்று வரை முழு வெற்றி பெறவில்லை. குறும்பர் போன்ற சில குழுக்களை கரிகாலன் அடக்கினான் என்று அறிகிறோம். இன்று ஊர் பஞ்சாயங்கள் என்ற அமைப்புகள் அரசின் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். மலைவாழ் மக்களைப் பிற மக்களுடன் இணைக்கும் அரசின் முயற்சிகளை வெளிநாட்டுப் பணத்தில் செயல்படும் “தொண்டர்கள்” பண்பாட்டைக் காப்பது என்ற பெயரால் தடுக்க முயல்கின்றனர். மக்களுக்கிடையிலிருக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க ஒருபுறம் சிலர் உள்ளத் தூய்மையுடன் முயலுகையில் பொதுவான வளர்ச்சிச் சூழலில் சென்ற தலைமுறையில் கீழ்நிலையிலிருந்த சிலருக்குக் கிடைத்த வளர்ச்சி நிலையைத் தம் பிறங்கடையினருக்கு மட்டும் தொடர்ந்தும் கிடைப்பதற்காக படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒதுக்கீடு என்ற சாக்கில் பண்பாட்டைப் பேணுதல் என்ற முழக்கத்தைத் தம் சாதி அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிலர் இவர்களோடு சேர்ந்து முன்வைக்கின்றனர்.

பண்பாடு என்பது பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப எளிதில் மாறக்கூடியது. சில பண்பாட்டு எச்சங்கள் வெறும் சடங்குகளாக மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். சென்ற ஒரு தலைமுறைக்குள் நம் குமுகத்தில் பண்பாட்டின் பல கூறுகள் மாறிவிட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெண்கள் சேலை அணிவதைக் கைவிட்டு வருகின்றனர். ஆனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மட்டும் கட்டாயம் சேலை அணிகின்றனர். அத்தகைய எச்சங்களைக் கூடக் கைவிட்டு ஒரு பண்பாட்டு ஒருமைப்பாடு ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களிடையில் ஏற்படுவது அவர்களது ஒற்றுமைக்கும் வலிமைக்கும் இன்றியமையாதது. அத்தகைய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்திரன் போன்ற நிலம் சார்ந்த தலைவர்களுக்கு அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பூசாரித் தலைவர்கள் வகுத்த கடமையாகும்.

நானிலத் தெய்வங்கள் வரிசையில் “வருணன் மேய பெருமணல் உலகமும்” என்ற தொல்காப்பிய வரியில் வருவதன்றி கழக இலக்கியங்கள், சிலம்பு போன்ற பழந்தமிழ் இலக்கியம் எதிலும் வருணனின் தடமே இல்லை. ஆனால் இந்திரனைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் உள்ளன. இவ்விரு தெய்வங்களைப் பற்றிய விரிவான செய்திகள் மறைகளிலும் தொன்மங்களிலும் உள்ளன.


வருணனைப் புகழ்ந்தும் பழித்தும் கூறும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அது போலவே வருணனால் துன்புற்றவர்களுக்குத் துணை செய்தவனாக இந்திரனைப் புகழ்ந்தும் கொடியவனாகப் பழித்தும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அதே போல் இந்திரனை வென்று ஆயர்களைக் காத்தவனாகக் கண்ணன் தொன்மங்களில் போற்றப்படுகிறான். அவனை ஒரு வேடன் கொன்றதாக மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சேரன்.[3] நாகர்களாகிய சேரர்களின் கொடி நாகத்திலிருந்து வில்லாக மாறியதும் இந்நிகழ்ச்சியின் விளைவாகத்தானோ?[4] உலகில் “பொதுமை” நாடுகள் தவிர செயற்கைப் பொருட்களைக் கொடியில் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், பலதேவனின்(பலராமன்) கலப்பை முதலியன.

இந்நிகழ்ச்சிகளை நாம் இவ்வாறு விளக்கலாம். மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் கடற்கரை முதல் மலைமுகடு வரை தம் ஆளுமையின் கீழும் பின்னர் ஆளுகையின் கீழும் கொண்டு வந்தவர்கள் நெய்தல் நில மக்கள். அந்நிலப் பூசாரியர் குக்குலக் குழுக்களைக் குலைத்து மக்களை ஒன்றுசேர்க்கத் தேர்ந்தெடுத்த தலைவன் வருணன். கடல் வழியாகக் கடலில் விழும் ஆற்றுக் கழிமுகங்களுக்கும் அங்கிருந்து ஆறுகள் வழியாக உள்நாடு செல்லவும் அவர்களால் முடிந்தது. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் வழி என்பது நீரின் வழிதல் எனும் தன்மை தொடர்பாகவும் இருத்தல் காண்க. உப்பு, கருவாடு போன்ற பண்டங்களை வைத்துப் பண்டமாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் அவர்கள் என்று கொள்ளலாம். உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெய்தல் நில மக்களின் உறவாலும் வேளாண்மை வளர்ச்சியாலும் விழிப்புற்ற மருத நிலப்பரப்பிலுள்ள பூசாரிகளின் தேர்வு இந்திரன். இக்காலகட்டத்து மறைப் பதிவுகளே இந்திரனுக்குக் கோட்டைகளை அழிப்பவன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தன. உண்மையில் வருணன் முதல் சேயோன் வரை நானிலத் தெய்வங்களாக கூறப்படுவோர் தத்தம் நிலப்பரப்புகளில் “கோட்டை”களை அழித்தவாகளே.

மருத நில வளர்ச்சி முல்லை நிலத்தின் மீது அதிகாரத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது. அதன் எதிர்வினையாக முல்லை நிலத்து பலதேவன் பாசனத்தையும் கலப்பையையும் அறிமுகம் செய்து அங்கும் வேளாண்மையைத் தொடங்கினான். மலையிலிருந்து ஓடிவரும் ஆறுகள் சுமந்து வந்து பரப்பும் வண்டலில் மருத நில மக்கள் பயிரிட்டனர். பலதேவன் ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீரைத் திருப்பி கலப்பையால் உழுது நிலத்தைச் சேறாக்கி வேளாண்மை செய்ததைக் கலப்பையால் ஆற்றைத் தன் பக்கம் இழுத்தான் என்ற தொன்மக் கதை கூறுகிறது. ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கி உழவு, பாரம்சுமத்தல் வண்டியிழுத்தல் போன்றவற்றில் பழக்கி அதை ஓர் உழைப்புக் கருவியாக்கிய, ஆவின் பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவற்றை உருவாக்கி நெய்யில் எரியும் அக(ல்) விளக்கின் தோற்றத்திற்கு வழியமைத்து வெட்டவெளியில் எரியும் நெருப்பை வீட்டினுள் வெளிச்சம் தருவதாக மாற்றி நந்து எனப்படும் இருளை விரட்டிய கண்ணனை உடன்பிறந்தான் ஆக்கியுள்ளது தொன்மம். இந்தக் கண்ணன் இந்திரனின் மேலதிகாரத்தை முறியடித்ததால் முல்லை நிலத் தெய்வமானான்.

நெய்தல், மருதம், முல்லை முதலிய நிலங்களில் தனியாட்சிகள் ஏற்பட்ட போது அவற்றுக்கிடையில் போர்களும் உருவாயின. யானையை வசக்கிய சேயோன் அது குறிஞ்சி நிலத்தின் பொருளியல் அடிப்படைகளில் ஒன்றான மரங்களைச் சுமப்பதுடன் அது ஒரு போர்க் கருவியாக இருப்பதையும் கொண்டு மலைபடுபொருள் வாணிகத்துடன் மரம், யானை ஆகியவற்றின் வாணிகத்தையும் வளர்த்து அண்டை நிலமான முல்லை நிலத்தார் அதிகாரத்தை முறியடித்து குறிஞ்சி நிலத் தெய்வமானான். வள்ளியை வசப்படுத்த அவளை யானையைக் கொண்டு அச்சுறுத்தியது, அவனது ஊர்தியாகிய யானை, மயில் போன்றவை கொடியாகிய சேவல் ஆகியவை முருகனுக்கு குறிஞ்சி நிலப் பொருளியலிலுள்ள பங்கை காட்டுகின்றன.

தொல்காப்பியம் நானிலங்களை மட்டுமே கூறி அவற்றுக்கு உரிய தெய்வங்களை வரிசைப்படுத்தினாலும் விடப்பட்டுள்ள பாலையும் உட்படும் வகையில் ஐந்நிலத்தைப் பற்றிய குறிப்பும் அதில் உள்ளது.

முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே …….


தொல். பொருள். களவியல் 15

முதற்கழகத் தலைநகரான தென்மதுரை கடலுள் முழுகிய பின்பு கபாடபுறத்தைத் தலைநகராகக் கொண்ட எஞ்சிய நிலத்தில் பாலைநிலம் இல்லாமையால் “அது ஒழிய” எஞ்சிய நிலத்தை வைத்து நூல் யாத்த தொல்காப்பியரின் கவனத்தை மீறி இவ்வரிகள் இடம் பெற்றதாகத் தான் கொள்ள வேண்டும்.

தொல்காப்பியர் பாலை நிலம் இல்லையென்று கூறி அதற்குத் தெய்வம் கூறாது விட்டாலும் உரையாசிரியர்கள் கொற்றவை எனும் பெண் தெய்வத்தைப் பாலை நிலத் தெய்வமாகக் கூறியுள்ளனர்.

பாலை நிலம் மக்கள் வாழத் தகுதியற்ற வளமில்லாப் பகுதி எனவே இங்குள்ள மக்கள் ஆறு அலைத்தல் எனும் வழிப்பறியையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். வழிப்பறிக்கு அவ்வழியில் மக்கள் போக்குவரத்து இன்றியமையாதது. தாங்கொணாக் கொடும் வெய்யிலையும் உயிர் பறிக்கும் வழிப்பறியாளர்களையும், பொருட்படுத்தாமல் அவ்வழியில் செலவு மேற்கொள்வோர் வாணிகராகவே இருக்க வேண்டும். அப்படியானால் பெருமளவு வாணிகமும் ஆதாயமும் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வழிப்பறியை நம்பி அங்கு ஒரு மக்கள் குழு உருவாக முடியும். பாலைக்கு இருமருங்கிலும் உள்ள மருதம், முல்லை நிலங்களிலிருந்து மிகுதியாகவும் பிற நிலங்களிலிருந்து வாணிகக் குழுக்களில் வந்து வழிப்பறியாளர்களாக மாறியோர் சிறுபான்மையராகவும் அவர்கள் இருந்திருக்க வேண்டும் வாணிகர்களும் எப்போதும் வழிப்பறியாளர்களை எதிர்த்து போருக்கு ஆயத்த நிலையில் உள்ள வீரர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள்(பாலை நில மக்கள் நானிலத் தெய்வங்கள் உருவாவதற்கு முன்பிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பதை கொற்றவை வழிபாடு காட்டுகிறது.

இந்த ஐந்து தெய்வங்கள் பற்றிய தொன்ம வரலாறுகள் மறைகளிலும் சமற்கிருதத் தொன்மங்களிலும் விரிவாகக் காணப்படுவதால் இந்நூல்களுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான உறவிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். சீன, எகிப்திய வரலாறுகளில் கூறப்படும் நான்கு தொல் பேரரசுகள் மேலே விளக்கிய நானில ஆட்சிகளைக் குறிப்பதாக இருக்கலாம்.

(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1]இது பெண் தலைமையிலிருந்து ஆண் தலைமைக்கு மாறியதற்கு முந்திய இடைமாற்றக் கட்டத்தைக் குறிக்கலாம். எகிப்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை முழுமையான பெண் தலைமைக் குமுகம் இருந்துள்ளது. பெண்களுக்கே மண்ணுரிமை இருந்துள்ளது. திருமணத்தில் பெண்ணின் அகவை ஆணுடையதை விடக் கூடுதலாக இருந்நது. தமக்கை தம்பி மீது காதல் பா பாடியதும் உடன் பிறந்தார்களிடையில் திருமணமும் இருந்தன. எசு.வி.எசு. இராகவன் மொழிபெயர்ப்பில் எரோடட்டசு பற்றிய நூலையும் வில் டுரான்றின் Story of Civilisation Vol.I Our Oriental Heritage நூலையும் பார்க்க.

[2]கொண்டா ரெட்டிகள் எனப்படும் மலை ரெட்டிகளிடம் இத்தகைய அமைப்பு இருந்ததாக நண்பர் வெள்ளுவன் கூறுகிறார்.

[3]அபிதான சிந்தாமணியில் சேரன் 2 காண்க.


[4]திரு. பூங்குன்றனால் திறனாயப் பெற்றுள்ள நூலில் “பெருஞ்சேற்று உதியஞ்சேரல்” எனும் கட்டுரை காண்க. மகாபாரதப் போரில் ஐவரால் கொல்லப்பட்ட தன் முன்னோருக்காக பெருஞ்சோறு கொடுத்தான் உதியஞ்சேரல் என்பதை முதற்கழகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியுள்ளது பாரதப்போர் முதல்கழகக் காலத்தில் அல்லது அதற்கு முன் தென் அரைக்கோளத்தில் நடைபெற்றது என்பதற்குச் சான்றாகும்
.

17.5.07

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (1)

“வானியல் நோக்கில் வள்ளுவராண்டு” என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட “தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கி நகர்வும்” என்ற கட்டுரையையோ கவனத்துடன் படிக்கவில்லை என்று புரிகிறது.

தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை.

இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து “ஆரிய இனம்” என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே “தூய” ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன்[1] பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த “திராவிடர்களை” (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட“திராவிடர்களை” வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு “ஆரியர்களான” பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது.

“ஆரிய இனம்” இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது.

தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது.

மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும்.

ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும்.

இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும்.

மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது.

உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் “வழக்குரை காதை”யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு “அறுவர்க்கிளைய நங்கை”யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு “ஏழு மாதரில் இளையவளான பிடாரி”[2] என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை “துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி” (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே “வேட்டுவ வரி”யில் கூறுகிறது.

குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது.[3] குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம்.

ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன.

(தொடரும்)

அடிக்குறிப்பு:


[1]F.G. PEARCE - Foot Prints on the Sands of Time - Indian Branch Humhrey Milford - Oxford University Press - 1942 - P: 193 - 194

[2]நா. வேங்கடசாமி நாட்டார் உரை காண்க.

[3]விசை இதழ் “மூதாயர் “ என்ற கட்டுரை பார்க்க.

14.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (5)

கலியாண்டு இயற்கை ஆண்டிலிருந்து 24 நாள் தள்ளிக் கணக்கிடும் இன்றைய முறையிலேயே அமைந்துள்ளது. எகிப்திலிருந்துதான் உரோமுக்கு இன்றைய கிறித்துவ ஆண்டுமுறை சூலியர் சீசரால் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் ஆண்டுக்குப் பத்து மாதங்களாய்ப் பகுத்து அவை ஒவ்வொன்றிலும் அங்குள்ள குக்குலங்கள் ஒவ்வொன்று ஆட்சி புரிவது போல் அமைக்கப்பட்டிருந்தது.

கிரேக்கர்கள் நிலவாண்டையும் கதிராண்டையும் இணைக்க புதுமையான ஓர் முறையைக் கையாண்டனர். 8 ஆண்டுகளில் இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தினர். முதல் ஒலிம்பிக்கில் இரண்டு மாதங்களையும் இரண்டாம் ஒலிம்பிக்கில் ஒரு மாதத்தையும் கழித்துச் சரி செய்து விட்டனர்.

உரோமில் நடைமுறையிலிருந்த ஆண்டுமுறை மட்டுமின்றி சீனக் கடற்கரை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ ஐரோப்பாவில் கலியாண்டிலுள்ள 24 நாள் பிழையில்லாத மேழத்திலிருந்து (மார்ச் 21) தொடங்கிய இயற்கை ஆண்டுகள் பல நாடுகளில் வழக்கத்திலிருந்துள்ளன.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் கிரிகோரி என்பவர் மதமற்றவர்கள் (Pagens) என்று கருதப்படும் தமிழர்களின் பொங்கல் திருநாளும் கிறித்தவ ஆண்டுப்பிறப்பும் ஓரே நாளில் வருவது கண்டு அப்போது உருவாகியிருந்த “விண்மீன் ஆண்டுமுறை” (நட்சத்திரமானம் Sidereal year[1]) என்ற சாக்கை வைத்து 13 நாட்கள் ஆண்டை முன் கூட்டியே கணித்தார். அதற்கு முன் நம் சித்திரை மாதப் பிறப்பு அன்று தான் ஏப்ரல் மாதமும் பிறந்தது.

நம் ஐந்திறங்கள் தென்மதுரையிலோ அல்லது அதற்கும் முன் தென்னிலங்கையிலோ கணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அவற்றிலேயே சான்றுகள் உள்ளன. சித்திரை மாதத்தை எடுத்துக் கொள்வோம். தலைப்பில் “சித்திரை மாதம்”, “மேச ரவி” என்று இருக்கும். ஆனால் 7 முதல் 9 ஆம் நாளுக்கு நேராக “ரிசபாயனம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கதிரவன் மேச ஓரையிலிருந்து ரிசப ஓரைக்குள் நுழையும் நாள் என்பது இதன் பொருள். அந்த மாத பகல்நேரப் பட்டியலில் (அகசு) 5 நாளுக்கொருமுறை நேரம் குறிப்பிட்டு விட்டு ரிசபாயன நாளுக்கு ஒரு நேரமும் குறிக்கப்பட்டிருக்கும். ஓரைகளின் இருப்பைக் காட்டும் பட்டியல் பழைய முறைக்குத் தான் பொருந்துமேயன்றி இப்போதைய முறைக்குப் பொருந்துவதில்லை. புதியவற்றைப் புகுத்தியிருக்கிறார்களேயன்றி பழையவற்றை அகற்றிவிடவில்லை. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட திருக்கணித ஐந்திறம் சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் பிற நிறுவனங்களும் மாற்றங்களைச் செய்துள்ளன. மொத்தத்தில் ஐந்திறங்கள் நம் பண்டை வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உதவும் மிகப் பெரும் கருவூலங்களாகும்.

உலகில் 365¼ (சற்று குறைவாக) நாட்களையும், 12 மாதங்களையும் கொண்ட ஆண்டுமுறைகள் இரண்டே தான். ஒன்று தமிழர்களின் வாக்கிய ஐந்திறம் காட்டும் 60 ஆண்டுச் சுழற்சியுடைய கலியாண்டு. இன்னொன்று அதிலிருந்து தோன்றி மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சீர்மையால் கையாள்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எளிமையான கிறித்துவ ஆண்டு. விடுதலையடைந்த பின் இந்திய அரசாங்கம் அமைத்த குழு வகுத்தளித்த சக ஆண்டு முறையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தென்மதுரையில் கடற்கோளுக்கு முன் நாம் கடைப்பிடித்த ஆண்டுமுறை. ஆனால் மாதப் பெயர்கள் சைத்ரம், வைசாகம் என்றிருப்பதற்கு மாறாக மேழம், விடை என்று மலையாள மாதப் பெயர்களைப் போல் இருந்தன. அதன் வரலாற்றுப் பதிவாக ஐரோப்பிய சோதிடக் குறிப்புக்குப் பயன்படுத்தும் ஓரைவட்டம் (Zodiac) இன்று உள்ளது.

24 நாட்கள் தள்ளி ஆண்டைக் கணக்கிட்டு நம் முன்னோர்கள் அதற்கிசைய மாதப் பெயர்களை மாற்றி விட்டனர். 27 நாண்மீன்களை 12 ஓரை வட்டத்துக்குள் ஓரைக்கு 2¼ ஆக வைத்தால் ஒவ்வொரு ஓரையின் தொடக்கத்திலும் ஒரு நாண்மீன் இருக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் வெள்ளுவா (பவுர்ணமி-முழுநிலா) அன்று நிலவு எந்த ஓரையில் உள்ளதோ அந்த ஓரையின் முதல் நாண்மீனின் பெயரில் அந்த மாதம் அழைக்கப்பட்டது. முன்பு மேழ மாதம் முழுவதும் கதிரவன் மேழ ஓரையில் இருந்தது. இப்போது அதில் பிசகு ஏற்பட்டதால் அதற்கு எதிரில் அதாவது 7-வதாக இருக்கும் அதாவது அம்மாத வெள்ளுவா அன்று நிலவு இருக்கும் துலை ஓரையின் முதல் நாண்மீனாகிய சித்திரையின் பெயர் வைக்கப்பட்டது. இதில் நாண்மீன்கள் வரிசையை கார்த்திகையிலிருந்து தொடங்குவதா, அசுவதியிலிருந்து தொடங்குவதா என்ற குழப்பம் இன்றும் நிலவுகிறது.

தமிழர்கள் தம் அறிவுத் துறைகள் அனைத்தையும் ஓரைவட்டத்துக்குள் அடக்கி வைத்துக் காத்துள்ளனர். இது ஒரு தனித்துறை. இதுபற்றித் தனியாகப் பேசலாம்.

இன்று கிரீன்விச் மைவரை (Meridian) உலகின் நேரக் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருப்பது போல் முன்பு லங்கோச்சையினி மைவரை இருந்தது. முன்பு விளக்கிய, சுறவக் கோட்டில் இருந்த இராவணனின் தென்னிலங்கையையும் இந்தியாவிலுள்ள உச்சையினியையும் இணைக்கும் கோடு இது. இது இலக்கத் தீவுகள், மாலத்தீவு, டீகோகார்சியா, கடல் மட்டத்திலிருந்து 600 அடிக்குள் முழுகிக் கிடக்கும் பழைய இமைய மலையில் திரிகூட மலைகள் என்று சுறவக் கோட்டிலும் நிலநடுக்கோட்டிலும் மேற்கு நோக்கி கிளை மலைகள் பிரிந்து செல்லும் இடத்தில் அமைந்துள்ள இரண்டு இலங்கைகளையும் இணைத்து வடக்கே கடகக் கோட்டில் அமைந்துள்ள உச்சினியில் முடிகிறது. இது 75° கிழக்கில் உள்ளது. இன்றைய இலங்கை 79° கிழக்கில் உள்ளது. இதனை யாமோத்திர ரேகை என்றும் கூறுவர். எமதிசை - தென்திசை, உத்திரம் – வடக்கு; எமம் → யாமம், எம + உத்திரம் - யாமோத்திரம். அப்போதெல்லாம் கதிரவன் இந்தியாவில் அல்லது குமரிக் கண்டத்தில் தோன்றிப் பின் பிற பகுதிகளுக்குச் சென்றது போல் நாள்கணக்கு இருந்தது. இதை மாற்றுவதற்காக போப் கிரிகோரி 16 ஆம் நூற்றாண்டில் ஒரு வியாழக் கிழமையைக் கழித்து புதனுக்குப் பின்னர் வெள்ளிக் கிழமை வருவது போல் நாள்காட்டியை மாற்றியமைத்தார். எனவே இன்றைய கிரீன்விச் நேரம் நம்மை விட 5½ மணி நேரம் முன்னதாக உள்ளது.

இந்திரனைப் பாண்டியன் போரில் தோற்கடித்தது கண்ணனுக்கும் இந்திரனுக்கும் நடந்ததாகத் தொன்மங்கள் கூறும் போராக இருக்கலாம். மதுரை அழிந்து எஞ்சிய பகுதியில் இந்திரன் ஆட்சி நடந்ததற்கு எதிராகக் கண்ணன் நடத்திய போராக இது இருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குறையைப் போக்க மழையைக் கட்டியாண்டான் பாண்டியன் என்று சிலம்பு கூறுகிறது. கபாடபுரம் பகுதி மழை வளம் குறைந்ததாக இருந்திருக்கலாம். இந்திரன் அதுவரை அளித்து வந்த உணவுப் பண்டங்களை நிறுத்தியிருக்கலாம். அதனால் அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பியும் குளங்களை வெட்டி நீரைத் தேக்கியும் பாசன அமைப்புகளைப் பாண்டியன் உருவாக்கியிருக்கலாம். கண்ணனின் மூத்தோனாகக் கூறப்படும் வெள்ளையன் என்ற பலதேவன் அல்லது பலராமன் கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்டவன். அவன் கலப்பையால் கங்கையைத் தன்னிடம் கொண்டு வந்தவன் என்றொரு தொன்மக் கதை உள்ளது. வெண்மையைப் பெயரில் கொண்ட வெண்டேர்ச்செழியன் பலதேவனாயிருக்கலாம். 60 ஆண்டுகளை மழைப் பொழிவின் அடிப்படையில் 20-20-20 எனப் பிரித்து ஆண்டுக்கு ஒரு வானிலையியல் பாடலையும் பாடிய இடைக்காடனார் மழையின் தேவை கருதி அதனைப் பாடியிருக்கலாம். நம் ஐந்திறங்களில் மழை பற்றிய குறிப்புகளுக்கும் இடைக்காடரின் பாடல்களுக்கும் முரண்பாடு உள்ளதா என்பதையும் ஆயலாம். இடைக்காடனார் ஓர் ஆயர்-இடையர் என்பதும் கண்ணனும் இடையன் என்பதும் இணைத்துப் பார்க்கத் தக்கது.

தமிழறிஞர்கள் நம் ஐந்திறங்களிலும் 60 ஆண்டுப் பெயர்களிலும் நாண்மீன், ஓரைப் பெயர்களிலும் உள்ள சமற்கிருத வடிவத்தை நோக்கி அவை நமக்குரியவை அல்லவென்கின்றனர். ஆனால் அப்பெயர்களைத் தமிழ்ப்படுத்தி விட்டால் மட்டும் அவை தமிழர்களுக்குரியவாகிவிடுமாம். வருணன். இந்திரன் போன்ற இருக்குவேத தெய்வங்களைத் தொல்காப்பிய நானிலத் தெய்வங்களில் சேர்த்திருக்கும் நமக்கு இருக்கு வேதமும் சமற்கிருதமும் எவ்வாறு அயலாக இருக்க முடியும்?

சமற்கிருதத்தில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் என்று சொன்னார் பாவாணர். அவருக்குப் பின் வந்தவர்கள் மேலும் பல சொற்களைத் தமிழுக்கு உரியனவென்றனர். அவர்கள் விட்ட சொற்கள் இன்னும் எண்ணற்றவை. சாத்தூர் சேகரன் போன்றவர்கள் ஏறக்குறைய அனைத்துச் சொற்களையும் தமிழ் என்று கூறி அதற்குரிய சொல்லியல் நெறிமுறைகளையும் வகுத்துள்ளார். இவ்வாறு நம் தவறான நோக்கால் தமிழுக்குரிய எண்ணற்ற சொற்களையும் தமிழர்க்குரிய பல்வேறு எய்தல்களையும் படைப்புகளையும் நூல்களையும் அவை சமற்கிருதத்தில் உள்ளன என்ற ஓரே காரணத்தால்; நமக்குரியவையல்ல என்று மறுத்து வெறுங்கையராய் நிற்கிறோம்.

எடுத்துக்காட்டாக, கோயில் நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆகம நூல்கள் கட்டடவியலில் அடிப்படை தோண்டுவதில் தொடங்கி “இறைவனை” இரவில் படுக்க வைப்பது வரை தேவைப்படும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத் துறைகளையும் விளக்குகின்றன. அவை சமற்கிருதத்தில் இருப்பதால் அவற்றைக் காண நாம் மறுக்கின்றோம். அவை கிரந்த மொழியில் உள்ளன என்கின்றனர் சிற்பிகள். கிரந்தம் அவர்களுக்குரிய (குழுஉக்குறி) மொழியாம்.

இங்கு குமரிக் கண்டம் குறித்த மிகக் குறைந்த செய்திகளை, நான் அறிந்தவற்றிலிருந்து ஒழுங்குபடுத்தித் தந்துள்ளேன். இது ஒரு முதல்நிலை முயற்சி தானேயொழிய முடிவானதல்ல. இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு வருங்காலத்தவர் விரிவுபடுத்தலாம். இதில் பல முரண்களும் இருக்கலாம். சிவன், கண்ணன், பலதேவன், முருகன் போன்றவர்கள் இந்திரனைப் போன்று பதவிப் பெயர்களா அல்லது தனிமனிதர்களா என்பது அவற்றுள் ஒன்று. பதவிப்பெயர்கள் என்று கொண்டாலே பல முரண்பாடுகளை விளக்க முடியும்.

1984 இல் குமரிக் கண்ட ஆய்வுக் கழகம் என்ற ஒன்றைத் தொடங்கினேன். உலகளாவிய நிலையில் ஆங்காங்குள்ள பண்பாடுகளுக்குக் குமரிக் கண்ட வரலாற்றோடு ஏதேனும் தொடர்பு இருந்தால் அவை பற்றிய கட்டுரைகளோடு கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிட்டு ஒரு கட்டுரைத் தலைப்புப் பட்டியல் உருவாக்கினேன். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அமைந்த அந்தப் பட்டியலை அடியில் தருகிறேன்.

இன்று தமிழர்கள் உலகளவில் பரவியுள்ளனர். அவர்கள் நினைத்தால் இத்தகைய ஒரு கருத்தரங்கை நடத்த முடியும். அதற்கு இந்த உரையாடல்கள் உதவட்டும்.

உலகப் பேரழிவிலிருந்து தப்பிய மக்களின் வழிவந்தவர்களாக அமைதிவாரி (பசிபிக் பெருங்கடல்)த் தீவுகளில் வாழும் மக்கள் முழுகிப் போன நிலத்தில் வாழ்ந்த தம் முன்னோர் தங்கள் வரலாற்றையும் அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தையும் பளிங்குக் கற்களில் பதிந்து வைத்துள்ளதாக நம்புகிறார்களாம். அவற்றை அவர்கள் வைத்துள்ளதாகவும் லெமூரியா பற்றிய இணைய தளம் ஒன்று கூறுகிறது. இன்று கணினித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழர்கள் ஒரு நாள் அந்தப் பதிவைப் படித்து அறிவார்கள்; உலகுக்கும் சொல்வார்கள் என்று நம்பலாம்.

முன்பு கூறியது போல் வரலாற்று வரைவு என்பது ஓர் அரசியல் பணி. தமிழர்களின் வருங்கால அரசியலுக்கு விதையாக இந்தக் குமரிக் கண்ட ஆய்வு அமையட்டும்.

(இந்த கட்டுரைத் தொடர் திண்ணை இணைய இதழில் "பழைய பாண்டம் - புதிய பண்டம்" என்ற தலைப்பில் வெளிவந்ததின் மீள் பதிவு)


அடிக்குறிப்பு:

[1]ஆண்டு முறைகளை நிலவாண்டு (Lunar year), கதிராண்டு (Solar year), கதிர் நிலவாண்டு (Lumisolar year), விண்மீன் ஆண்டு (Sidereal year) என்று நான்காகப் பகுப்பர். வானில் உள்ள ஒரு விண்மீனுக்கு நேராகக் கதிரவன் அடுத்தடுத்து வரும் கால இடைவெளிக்கு விண்மீன் ஆண்டு என்று பெயர்; இது திருப்புகை (Tropical) அல்லது பருவமுறை ஆண்டை விட ஏறக்குறைய 20 நிமிடங்கள் நீளமானது.

பழைய பாண்டம் - புதிய பண்டம் (4)

வரலாற்று வரைவென்பது ஓர் அரசியல் நடவடிக்கையாகும். எந்த ஓர் அரசியல் இயக்கமும் ஒரு வரலாற்று வரைவைத் தொட்டுத்தான் தொடங்குகிறது. வரலாறு உண்மையாக இருந்தாலும் அந்த உண்மையால் பயன்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை அது தொடங்கி வைக்கிறது.

சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்தில் நுழைந்த போது இங்கு வாழ்ந்து வந்த மக்கள் பாணர், பறையர், துடியர், கடம்பர் என்ற நான்கு குழுக்கள் ஆகும். அவர்களின் எதிர்ப்புக்குரல் கழகப் பாடல் ஒன்றில் மாங்குடிக் கிழாரின் வழியாக வெளிப்பட்டுள்ளது. எனவே தாங்கள் வந்தேறிகள் என்ற உண்மை வெளிப்படாமல் இருக்க குமரிக் கண்டத்தைப் பற்றிய செய்திகளை முடிந்த வரையில் மறைத்தனர் கழக இலக்கியத்தை தொகுத்தோர். அதே வேளையில் மச்ச புராணம் போன்ற சமற்கிருத நூற்களில் எழுதி வைத்தனர் என்றும் கொள்ளலாம்.

இன்றும் ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பழங்குடி மக்கள் வெள்ளை வந்தேறிகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குவதையும் அமெரிக்க வல்லரசு பழம் பெரும் நாகரிக வராலாறுகளை மறைக்கப் புதுப்புது வராலாற்று அணுகல்களை அந்தந்த நாட்டுப் படிப்பாளிகளுக்கு ஆங்காங்குள்ள பல்கலைக் கழகங்கள் மூலமாகப் பரிந்துரைப்பதையும் போன்றது இது.

கடல் வழிச் செல்கையில் கதிரவனின் கரும்புள்ளி புவியை நோக்கி வரும் போது வீசும் காந்தப்புயலால் திசைமானியின் நம்பகத்தன்மை பாதிப்படைகிறது. எனவே அந்த நாளை இனம் காண வேண்டிவந்தது. எனவே வானியல் நிகழ்வுகளைக் காட்டும் ஒரு கையேடு தேவைப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவு செய்தது சிவவாக்கியரின் வாக்கியப் பஞ்சாங்கம். வாக்கியம் என்பதற்கு பட்டியல் என்று பொருள் கூறப்படுகிறது. பஞ்சாங்கம் என்ற ஐந்திறத்தில் தேதி, நாள், திதி, நாண்மீன், யோகம் என்ற ஐந்து உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் விண் கோணங்களை நாழிகையில் கூறும் தரவுகளே. இந்தப் பட்டியல் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பகல் வேளையின் நீட்சி (அகசு), ஓரைகளின் (ராசிகளின்) இயக்கம் ஆகியவற்றைக் காட்டும் பட்டியல்களும் உள்ளன. இவை முற்றிலும் வானியல் சார்ந்தவையே. சோதிடம் எனப்படும் கணியத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. அதற்கு வேண்டிய தரவுகளை இதிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள் அவ்வளவே.

ஐந்திறங்கள் வானிலையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. பண்டை உலகின் மிகச் சிறந்த வானிலையியல் அறிஞரான (Meteorologist) இடைக்காடரின் 60 பாடல்களும் நம் வானிலையியலறிவிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நம் ஐந்திறங்களில் நம் வானிலையியலறிவு பற்றிய மேலும் பல செய்தகள் உள்ளன.

வானிலை சிறப்பாயிருந்தால் நாடு செழிப்பாகும்; மக்களின் வாழ்க்கை சிறப்பாகும்; அரசனின் செல்வாக்கும் வலிமையும் பெருகும். எனவே பருவகாலத்தை முன்னறிவதற்காக நிமித்திகன் இருந்தான். எனவே வானிலை அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அது பிற தலைவர்களுக்கும் கையாளப்பட்டு தனிப்பட்ட மக்களின் வாழ்க்கைக்குக் கையாளப்பட்டு கணியமாக வாணிக வடிவம் பெற்று விட்டது.

இங்கு திசைமானியைத் தமிழ்க் கடலோடிகள் பயன்படுத்தினார்களா என்ற ஐயம் எழக்கூடும். தமிழில் வடக்குத் திசையைக் குறிக்க “ஊசி” என்று ஒரு சொல் உள்ளது. ஊசிக்கும் வடக்குக்கும் உள்ள உறவு காந்த ஊசி வடக்கு நோக்கியே நிற்கும் என்பது. இதிலிருந்து திசைமானியைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது.

நில நடுக்கோட்டில் தலைநகர் அமைத்த தமிழர்கள் தங்கள் தலைநகருக்கு மேலே கதிரவன் வரும் நாளை, அதாவது இன்றைய மார்ச் 21-ஐ ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். ஓரை வட்டத்தின் படி மேழம் விடை(மேசம்,இடபம்) என்று தொடங்கும் மாதங்களின் பெயர்களை இட்டார்கள்.

முக்கழகச் செய்திகளின் படி ஏறக்குறைய கி.மு.6000 ஆண்டளவில் முதற்கடற்கோள் (முந்திய கடற்கோள்கள் பற்றி தமிழிலக்கியங்களில் பதிவுகள் இல்லை. அதிலும் உரையாசிரியர்கள் மூலமாகவே நாம் கூறும் செய்திகளும் கிடைத்துள்ளன.) நிகழ்ந்தது. அது நில நடுக்கோட்டில் இருந்த நிலப்பரப்பையே சிதறடித்து விட்டது. நில நடுக்கம், புவி மேலடுக்கினுள் நிலப்பரப்பு தாழ்தல், சுனாமி எனப்படும் ஓங்கலை என்று பேரழிவை அது ஏற்படுத்தியிருக்கும். இந்தோனேசியப் பகுதியை இன்றைய உலகத் திணைப்படத்தில் பார்த்தாலே அந்தச் சிதறல்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அணுப்போரால் ஏற்பட்ட அழிவு என்றும் விண்கற்கள் வீழ்ந்ததால் நேர்ந்ததென்றும் ஆய்வாளர்கள் விளக்கங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்திரன் இடையில் ஆட்சியைச் செலுத்தினான். இதற்கிடையில் நானும் ஒரு கதை சொல்லுகிறேன்.

மகாபாரதத்தில் யயாதி என்று ஓர் அரசன். அவன் சுக்கிரச்சாரி என்பவனின் மகள் தேவயானியை மணந்தான். ஒரு பூசலில் அவளுக்கு வேலைக்காரியாகப் பணிக்கப்பட்ட அசுர அரசனின் மகளும் உடன் செல்கிறாள். அவள், அரசனைத் தன்வயப்படுத்துகிறாள். இருவரும் மக்களைப் பெறுகின்றனர். இதனால் சினமடைந்த சுக்கிராச்சாரி அவனை முதுமையடையச் சபிக்கிறான். மருமகன் கெஞ்ச தன் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான். மனைவியின் மகன்கள் மறுக்க வேலைக்காரியின் மகன் ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். தனக்குப் பின் அவனை அரசனாக்கி விட்டு மனைவியின் மகன்களைத் துரத்தி விடுகிறான். அவர்களில் ஒருவன் பெயர் யது. அவனது வழி வந்தவர் யாதவர். வேலைக்காரி மகன் வழி வந்தவர்கள் பாண்டவரும் நூற்றுவரும்.

ஊத மறைநூலில் ஒரு கதை. ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லை. அவன் மனைவி வேண்டியதால் வேலைக்காரி மூலம் ஒரு பிள்ளையைப் பெறுகிறான். அவனுக்கு 99-ம் மனைவிக்கு 90-ம் அகவையான போது அவள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். வேலைக்காரியின் பிள்ளையைத் துரத்தி விட்டாள். அவளது பிள்ளை வழி வந்தவர் ஊதர். வேலைக்காரி வழி வந்தவர் அரேபியர். வேலைக்காரி பிள்ளை பெறுதல், முதுமை இரண்டும் இக்கதைகளின் பொதுவான கதைக் கருக்கள். இது போன்ற மிக வியப்பூட்டும் ஒற்றுமைகள் நம் இந்தியத் தொன்மங்களுக்கும் ஊத மறைநூலுக்கும் உள்ளன.

“மிசிரத்தானம்” என்ற சொல்லுக்கு, எகிப்து எனும் நாட்டின் பெயர் என்கிறது தமிழ்மொழி அகராதி. யயாதியின் மகன் யதுவின் வழிவந்தவர்கள் இங்கு குடியேறினர் என்கிறது. மிசிரம் என்றால் கலப்பு என்றும் பொருள் கூறுகிறது.

சீனமும் எகிப்தும் குமரிக் கண்டப் பண்பாட்டோடு தொடர்புடையவை. அவை தங்கள் நாட்டை நான்கு அரச மரபுகள் ஆண்டன என்கின்றன. நம் பண்பாட்டில் மறைகளில் முதலில் வருணன் போற்றப்படுகிறான். அடுத்து அவன் தூற்றப்பட்டு இந்திரன் போற்றப்படுகிறான். தொடர்ந்து தொன்மம் இந்திரனை இகழ்ந்து கண்ணனைப் போற்றுகிறது. மகாபாரதம் கண்ணனை வேடன் கொன்றதைக் காட்டுகிறது. வருணன் தொடங்கி முருகன் வரை நான்கு நிலங்களைச் சார்ந்த அரச மரபுகளால் குமரி தொடங்கி வைத்த பாண்டியப் பேரரசு விளங்கியதை சீன, எகிப்திய மரபுகள் பதிந்துள்ளன எனலாம்.

மகாபாரதப் போரில் துரியோதனன் நாக மரபைச் சேர்ந்தவனாகக் கூறப்பட்டாலும் அவனுக்கு மீனவர் தொடர்பு காட்டப்படுகிறது. அவனது பூட்டனான சந்தனு முதலில் கங்கையையும் பின்னர் மச்சகந்தி எனப்படும் மீனவப் பெண்ணையும் மணந்தான். அந்த மீனவப் பெண் வழி வந்தவர்களே நூற்றுவரும் பாண்டவர்களும். அதில் பாண்டவர்கள் இந்திரன், இயமன், வாயு, அசுவினி தேவர்கள் என்ற பிறருக்குப் பிறந்தவர்கள் என்ற வகையில் மரபு மாறிப் போனவர்கள். நூற்றுவரை எதிர்த்த போரில் கண்ணனும் இந்திரனின் மகனான அர்ச்சுனனும் சேர்ந்து நிற்பதையும் காணலாம். மீனவர்கள் நாகமரபினரே என்று வி. கனகசபையார் போன்றவர்கள் கூறுகின்றனர். நாகர்கோயில் தொடங்கி நாகூர் வரை நாகர்களின் பெயரிலமைந்த கடற்கரை ஊர்களைக் காண்கிறோம். நாகரம்மன் (நாகர்கோயில்), பிடாரி, புற்றடி மாரியம்மன் (சீர்காழி) என்று அம்மன்களின் வழிபாடும் நடைபெறுகிறது.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மதுரை அழிவிற்கும் மகாபாரதப் போருக்கும் கூடத் தொடர்பு இருக்கலாம்.

யாயாதியால் துரத்தப்பட்ட யதுவின் வழிவந்தவர்கள் கபாடபுரத்தில் ஆண்டு கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதுரை அழிந்து சில நூற்றாண்டுகள் சென்று தமிழறிஞர்கள் சேர்ந்து வெண்டேர்ச் செழியன் என்பவன் தலைமையில் புதிய தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்திருக்கலாம். அங்கு நூற்றுவர் வழிவந்த அல்லது அவர்களுக்கு உறவான வேடர்கள் அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் துரத்தி விட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்திருக்கலாம்.

உலகில் ஆண்டுமுறைகள் அனைத்தையும் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்கள் என்கிறோம். அவர்கள் ஐந்து வகையாகத் தொடங்கும் ஆண்டு முறைகளை வகுத்திருந்தனர். சம்வத்சரம், பரிவத்சரம், இடவத்சரம், அனுவத்சரம், உதயவத்சரம், ஆகியவை அவை. சர ராசிகள் எனப்படுபவை மேழம், கடகம், துலை, சுறவம் ஆகிய நான்கும் ஆகும். கடகத் திருப்பம், சுறவத் திருப்பம், வடக்கே செல்லும் போது மேழம் தெற்கே செல்லும் போது துலை என்று கதிரவன் நில நடுக்கோட்டைத் தொடுகையில் இருக்கும் இரண்டு ஓரைகள் என்று இவற்றை இவ்வாறு அழைக்கின்றனர்.; நம்மிடையில் பொங்கல், சித்திரை, ஆடிப் பிறப்பு, ஐப்பசி விசு ஆகியவற்றைக் கொண்டாடும் பழக்கம் உள்ளது. இவ்வகையில் மேழத்தில் பிறக்கும் ஆண்டுக்கு சம்வத்சரம் என்பது பெயர்(அபிதான சிந்தாமணி பார்க்க). பிறவற்றில் எவற்றுக்கு எவை என்பது தெரியவில்லை. இவை நான்கையும் நீக்கி மலையாள ஆண்டு போன்று (மடங்கல்-சிங்கம்) வேறு ஓரைகளில் தொடங்கும் ஆண்டுகள் ஐந்தாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு 5 ஆண்டுமுறை என்பதை ஐந்தைந்து ஆண்டுகளைக் கொண்ட உகம் என்ற தொகுதி என்று ஆய்வாளர் இராமதுரை அவர்கள் கருதுகிறார்.

இப்போது யாதவர் ஆட்சி முடிந்து வேடர்கள் - முருகன் ஆட்சி தொடங்கியது. இவர்கள் ஆண்டு முறையில் ஒரு மாற்றம் செய்தனர். ஏற்கனவே தலைநகரம் நிலநடுக்கோட்டில் இருந்த போது மேழ ஓரை தொடங்கும் இன்றைய மார்ச் 21-இல் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 24 நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. ஏனென்றால் கபாடபுரம் ஏறத்தாழ 6 பாகைகள் வடக்கேயிருந்தது. இதனால் சுறவத்தில் பிறக்கும் ஆண்டு, மேழத்தில் பிறக்கும் ஆண்டு என்று எல்லாமே மாறிப் போய்விட்டன. இந்த மாற்றத்துடன் கலியாண்டு முறை புகுத்தப்பட்டது. கண்ணன் இறந்த நாளிலிருந்து கலியாண்டு தொடங்குவதாக மரபு உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை யாதவர்கள் துவரையம்பதியாகிய கபாடபுரத்திலிருந்து துரத்தப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்பட்டது என்று மாற்றிப் புரிந்து கொள்ளலாம். இந்த எம்முடிவுக்குத் துணையாக ஒரு செய்தி உள்ளது. பண்டை எகிப்தியர் கி.மு. 3100 வாக்கில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டணர் என்பதும் அவர்கள் வெளியிலிருந்து ஓர் உயர்ந்த நாகரிகத்தோடு குடியேறியவர்கள் என்பதும் அதுபோல் தென் அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களும் அதே காலத்தில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டுள்ளனர் என்பதும்.

கரிகால் சோழன் வென்ற வட இந்திய அரசர்களில் ஒருவனான இருங்கோவேள் என்பவன் துவரையை ஆண்ட வேளிர் குடியில் 49 தலைமுறைக்குப் பிந்தியவன் என்று கூறப்படுகிறது. கண்ணன் இறந்தபின் துவரையிலிருந்து வெளியேறிய யாதவர்களாகிய வேளிர்களில் அவனும் ஒருவன் என்று கூறப்படுகிறது. அவன் முன்னோர் விட்டு வெளியேறிய துவரை வடக்கே உள்ள துவாரகையாகவே இருக்க வேண்டும். தலைமுறைக்கு 50 ஆண்டுகள் என்று சராசரியாக வைத்துக் கொண்டால் 2450 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கரிகாலன் காலம் கி.மு. 150 என வைத்துக் கொண்டால் 2450 + 2150 = 4600 ஆண்டுகள். கலியாண்டு கணக்கிலிருந்து 400 ஆண்டுகள் வேறுபாடு இவர்கள் கபாடபுரமாகிய துவரையம்பதியிலிருந்து வடக்கிலுள்ள துவாரகைக்குக் குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்ததற்கு இடைப்பட்ட காலத்தைக் குறிக்கலாம்.


(தொடரும்)

பழைய பாண்டம் - புதிய பண்டம் (3)

உலகில் உள்ள ஆண்டுமுறைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் குமரிக்கண்ட மக்களே. 29½ நாட்களைக் கொண்ட நிலா மாதங்களையும் 354 நாட்களைக் கொண்ட நிலவாண்டையும் வகுத்தவர்கள் அவர்களே. இன்று உலகில் தூய நிலவாண்டு முகம்மதிய ஆண்டே. ஊதர்கள், சீனர்கள், சப்பானியர்கள் மற்றும் தென்கிழக்காசிய, தென்னமெரிக்க நாடுகளில் வழங்கும் 19 ஆண்டுகளைக் கொண்ட சுழற்சியில் 7 ஆண்டுகளுக்கு 13 மாதங்களுடன் ஒரு கதிர்-நிலவாண்டு (நிலா மாதங்களைக் கொண்ட ஆண்டுகளைக் கதிராண்டுகளுடன் இணைத்தல்) முறை உள்ளது. நம் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) இந்த ஆண்டுப் பிறப்பை “துவாபர யுகாதி” என்று குறிக்கிறார்கள். வட இந்தியாவிலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் வழங்கும் ஆண்டுமுறை 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து கதிராண்டுடன் நிலவாண்டை இணைக்கும் முறையாகும். வாரம் → மாதம் → ஆண்டு என்று ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 27 உடன் அபிசித்து எனும் ஒன்றைச் சேர்த்து 28 நாண்மீன்களாக்கி (நட்சத்திரங்களாக்கி) 28 x 12 = 336 நாட்களைக் கொண்ட சாவனம் (அபிதான சிந்தாமணி “சம்வச்சரம்” பார்க்க) எனும் ஆண்டையும் நம் முன்னோர் உருவாக்கிப் பின்னர் கைவிட்டுள்ளனர்.

கதிரவன் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 25⅓ நாட்களாகின்றன. புவி கதிரவனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து பார்க்கும் போது அது ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு ஒரு முறையாகத் தோன்றுகிறது. கதிரவனின் ஊடாகச் செல்லும் ஒரு துளை கரும்புள்ளியாகத் தெரிகிறது. அதுவும் 27⅓ நாட்களுக்கு ஒரு முறை புவியை நோக்கி வருகிறது. அப்போது வீசும் காந்தப் புயலினால் புவியில் தொலைபேசிகளின் இயக்கம் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது. நாம் நோன்பு கடைப்பிடிக்கும் கார்த்திகை நாளுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதை ஆய வேண்டும்.

இந்த அடிப்படையில் வான மண்டலத்தை 27 ஆகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துலக்கமான விண்மீன் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அந்த வடிவப் பெயர்களை அந்த 27 நாண்மீன்களுக்கும் இட்டனர். தனி மீனை விண்மீன் என்றனர். (சமற்கிருதத்தில் நாண்மீன் விண்மீன் இரண்டையும் நட்சத்திரம்; நாள் + சத்திரம் = நாள் இருக்குமிடம் என்றே அழைக்கின்றனர்).

ஒரு நிறைமதி நாளில் நிலவுக்கு அப்பால் இருக்கும் விண்மீன் அடுத்த நிறைமதி நாளில் இருப்பதில்லை. ஏறக்குறைய 12 மாதங்களுக்குப் பின்பே மீண்டும் அவ்வாறு நிகழ்கிறது. எனவே 12 மாதங்கள் கொண்ட ஒரு காலச் சுழற்சியை ஆண்டு எனக் கடைப்பிடித்ததுடன் வான மண்டலத்தை 12 சம பாகங்களாகப் பகுத்;து ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக ஒரு விண்மீன் கூட்டத்தையும் அதிலிருந்து ஓர் உருவத்தைக் கற்பனை செய்து அதற்குப் பெயரையும் வழங்கினர். அதற்கு ஓரை (ராசி) என்று பெயரிட்டனர்.

ஓரை என்ற சொல் நேரம் எனப் பொருட்படும் ஓரா (Hora) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகப் பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழில் ஓரை என்பதற்கு மகளிர் விளையாட்டு மகளிர் சேர்ந்து தங்குமிடம், மகளிர் கூட்டம் என்ற பொருட்களும் உண்டு. விண்மீன் கூட்டங்களாக இருப்பதால் தான் அவற்றை ஓரைகள் என்றனர் நம் முன்னோர். ஓரை என்பதற்கு Team என்ற ஆங்கிலச் சொல் பொருத்தமாக இருக்கும். ஓரை முதலில் கூட்டத்தை, பின்னர் விண்மீன் கூட்டத்தை, அப்புறம் அவ்விண்மீன் கூட்டம் காட்டும் நேரத்தைக் குறிப்பதாகி அந்த வடிவத்தில் கிரேக்கத்துக்குச் சென்றுள்ளது.

கதிரவன் சுழற்சியை நோட்டமிட்டு உருவாக்கிய நாண்மீன் பகுப்பை நிலவுடனும் நிலவின் இயக்கத்தை நோட்டமிட்டு வகுத்த ஓரைப் பகுப்யைச் கதிரவனின் இயக்கத்தைக் கணிக்கவும் தமிழர்கள் பயன்படுத்தினர். கதிரவனைப் பொறுத்து இதற்கு ஒரு தேவையும் ஏற்பட்டது. கதிரவன் ஆண்டுக்கொருமுறை தெற்கு வடக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கே மகரக் கோட்டிலிருந்து புறப்பட்டு வடக்கே கடகத் திருப்பம் சென்று மீண்டும் மகரக் கோட்டுக்கு வருகிறது. இது தெளிவான காலச் சுழற்சி. உலகெங்கும் பருவ காலங்களும் உயிர்களின் இனப்பெருக்கமும் இந்தச் சுழற்சியின் வரிசையிலேயே இயங்குகின்றன.

புவியின் நிலப்பரப்பில் பெரும்பகுதி தெற்கில் இருந்தது. நிலநடுக்கோடு மக்கள் புகமுடியாத அடர்ந்த காடு. மகரத் திருப்பம் பாலையும் பனிப் பகுதியும் நெருங்கி மனிதன் மயிர் உதிர்த்து முழுமை பெற்ற இடம். இங்கு தெற்கே விழும் நிழல் ஒரேயொரு நாள் மட்டும் காலடியில் விழுந்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பிவிடும். இதனை ஆண்டுப் பிறப்பாகக் கொள்வது பொருத்தம். இவ்வாறு இன்றைய தைப்பொங்கலுக்கு இணையான ஒரு நாளில் கதிராண்டு தொடக்கம் வைக்கப்பட்டது. இங்கு தான் இராவணனின் தென்னிலங்கை இருந்தது.

இராவணனின் தமையன் குபேரன். அவன் தன் தந்தையான மாலியவந்த னிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினான். மாலியவந்தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து இராவணனைப் பெற்றான். அவன் இலங்கையிலிருந்து குபேரனைத் துரத்தினான். குபேரன் நில நடுக்கோட்டிலிருந்த மேருவிற்குச் சென்றான் என்கின்றன நம் தொன்மங்கள்.

மேரு என்பது ஒரு மலைமுகடு. பொதுவாக மலைமுகடுகளை மேரு என்பதுண்டு. யாழில் உள்ள மேடுகளை மேரு என்று தான் அழைப்பர். இங்கு மேரு என்பது நில நடுக்கோட்டில் இருந்த மலைமுகடு. பனி மூடிய அதன் உச்சியால் அது வெள்ளி மால்வரை என்று அழைக்கப்பட்டது. அதைத் தான் கயிலை என்று நம் தொன்மங்கள் கூறின. அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்தை “சுமேரு” “சுமேரியா” என்றனர். மேருவே உலக நடு; அதனைச் சுற்றியே மேகங்கள் நகர்கின்றன என்கின்றன ஐந்திறங்கள்.

நம் மரபில் மூன்று இலங்கைகள் உள்ளன. ஒன்று தென்னிலங்கை. அது இராவணனின் தலைநகரம். மகரக்கோட்டில் உள்ளது. இன்னொன்றின் பெயர் “நிரட்ச”லங்கை. அதாவது அட்சம் இல்லாதது. அதாவது 0°அச்சக் கோட்டில், அதாவது நில நடுக்கோட்டில் உள்ளது. இது பற்றிய பதிவு ஐந்திறங்களில் உள்ளது. இந்த நிரட்சலங்கையை “லங்காபுரி” என்று மயனால் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் கூறுகிறது. லங்காபுரி, உரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்கு நகரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று 90° மேற்காக அமைந்திருப்பதாக அபிதான சிந்தாமணி, தமிழ் மொழி அகராதி மற்றும் சூரியசித்தாந்தம் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுக்கு மேகலா நகரங்கள் என்று பெயர். நில நடுக்கோட்டை நம் முன்னோர் மேகலைக்கோடு (மேகலாரேகை) என்றே குறிப்பிட்டனர். மேகலை என்பது “மேல்கலை” அரையில் (உடலின் நடுவில்), உடைக்கு (கலைக்கு) வெளியே அணியும் ஓர் அணி ஆகும்.

மணிமேகலைக் காப்பியத் தலைவி மணிமேகலைக்கு மணிமேகலைத் தெய்வத்தின் பெயரை அவளது தந்தை கோவலன் இட்டான். அதற்குக் காரணம் அவனது மூதாதையரில் ஒருவர் கடலில் கப்பல் உடைந்து தத்தளிக்கையில் மணிமேகலைத் தெய்வம் அவரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பது.

புத்த சாதகக் கதைகள் என்பவை புத்தர் எடுத்த 550 பிறவிகளில் நடந்தவையாகக் கூறப்படும் கதைகளின் ஓரு தொகுதி. அதில் ஒன்றில் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகரான அவர் கடலில் தத்தளிந்த போது அவரது மன ஊக்கத்தை மெச்சி மணிமேகலைத் தெய்வம் காப்பற்றியது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கரை சேர்ந்த வாணிகன் அந்நாட்டு மக்களால் அரசனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அக்கதை கூறுகிறது. தாய்லாந்து மன்னன் அவ்வாறு அரசனாக்கப்பட்டவன் என்று அந்நாட்டு வரலாறு கூறுகிறது. இவ்வாறு நில நடுகோட்டில் சமதொலைவுகளில் நான்கு நகரங்களும் அவற்றுக்கு மேகலா நகரங்கள் என்ற பொதுப்பெயரும் கடலில் கப்பல் கவிழ்ந்து தத்தளிப்போரை மணிமேகலைத் தெய்வம் என்றொரு தெய்வம் காப்பாற்றியதாகப் பழங்கதைகள் பதிந்திருப்பதாலும் இந்நான்கு நகரங்களும் கடல் கண்காணிப்பு நிலையங்கள் என்றும் அவை கப்பல்கள் கவிழ்ந்து தத்தளிப்பவர்களைக் காக்கும் பணியைச் செய்து வந்தன என்றும் கொள்ளலாம். அந்தக் கட்டமைப்பே பின்னர் மணிமேகலா தெய்வம் என்று தொன்ம வடிவம் பெற்றுள்ளது.

பண்டை உலகில் இருபெரும் மக்களினத்தினர் வாழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களில் ஒரு சாரார் மஞ்சள் இனத்தினர். இவர்கள் சுறவ(மகர)க் கோட்டுப் பகுதியில் வாழ்ந்தனர். இன்னொரு பகுதியினர் கறுப்பர்கள். இவர்கள் நில நடுப்பகுதியில் வாழ்ந்தனர். மஞ்சள் இனத்தினர் அடிக்கடி கப்பல்களில் வந்து கறுப்பின மக்களைத் தாக்கிவிட்டுக் விரைந்து கப்பலில் சென்று மறைந்துவிட்டனர். கறுப்பர்களிடையில் தலைவராக இருந்த அகத்தியர் என்பார் தாங்களும் கடலைக் கடக்கும் உத்தியை வகுத்துத் தந்ததும் இருவரும் இணக்கத்துக்கு வந்தனர் என்று கொள்வதற்குத் தடயம் உள்ளது. இவர்களது சண்டையில் ஒருவரையொருவர் அரக்கர் என்று தொன்மங்களில் பதிந்து வைத்துள்ளனர்.

அரக்கன் ஒருவன் தாக்கிவிட்டுக் கடலினுள் மறைந்து விட்டதாகவும் அகத்தியர் கடல் நீர் ழுழுவதையும் குடித்து அவனை வெளியில் கொண்டு வந்ததாகவும் கூறும் ஒரு தொன்மக்கதை இதைத் தான் கூறுகிறது என்று கொள்ளலாம்.

மக்களின் உடல் நிறம் அவர்களது வாழிடங்களைப் பொறுத்து மாறுகிறது. அடந்த காடுகளுக்குள் வாழ்பவர்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் இயற்கையாகவே கருமை நிறம் பெறுகின்றனர். பாலைவனப்பகுதியில் வாழ்பவர்கள் மஞ்சள் நிறமாகவும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழ்பவர்கள் வெண்மையாகவும் ஓரிரு தலைமுறைகளில் மாறிவிடுவார்கள். வீடு உடைகள் போன்ற செயற்கைப் பாதுகாப்புகள் உருவாகும் போது இந்த உடல் நிறமாற்றம் வேகம் குறைகிறது.

மனித வரலாற்றில் கடலில் செல்வோருக்கு திசைகாட்டியின் கண்டுபிடிப்பு ஒரு பெரும் புரட்சி. சீனர்கள் முதலில் ஆமை வடிவிலான ஒரு திசைகாட்டியை வைத்திருந்தனர் என்ற பதிவு உள்ளது. நம் தொன்மத்தில் திருமால் ஆமை வடிவம் எடுத்துக் கொள்ள அதன் மீது மகேந்திர மலையை மத்தாகவும் நிலவைத் தறியாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரரும் தேவரும் கடலைக் கடைந்ததாகக் கூறுவது எதிரெதிராக இருந்த இருவகையின மக்களும் தங்களுக்குள் இணக்கம் கண்டு கடலை ஆண்டனர் என்பதன் தொன்ம வடிவமாகும். நிலவின் கலை(phase) மாற்றங்களைக் கடலில் செல்வோர் காலத்தை அளக்கும் அடையாளமாகக் கொண்டிருந்ததனை அதைத் தறியாகக் கொண்டதாகக் கூறுகிறது. நிரட்சலங்கை என்று நாம் குறிப்பிட்ட நிலநடுக்கோட்டிலிருந்த மேருமலையை நடுப்புள்ளியாக வைத்து உலகை அளந்ததை மகேந்திரகிரியை மத்தாகக் கொண்டதாக இக்கதை கூறுகிறது.

கடைந்ததில் அமுதம் கிடைத்ததாம். அதைத் தேவர்கள் திருடிக் கொண்டார்களாம். உண்மையில் அந்தச் சாவா மருந்து தான் என்ன?

விதேகன் என்பவனைப் பற்றி நம் தொன்மங்கள் கூறுகின்றன (அபிதான சிந்தாமணி). நிமி என்பவன் இறந்து போக அவனுடலை ஓர் எண்ணெய்யில் வைத்துப் பாதுகாத்தனர். பின்னர் அவ்வுடலைக் கடைந்து அதிலிருந்து ஒரு மகனை உருவாக்கினர். அவன் பெயர் தான் விதேகன். அவன் நாடு தான் விதேகம். அங்கு பிறந்தவள் தான் வைதேகி எனும் சீதை.

எகிப்தில் மம்மிகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று கி.மு.ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த எரோடோட்டர் என்பவர் தான் எழுதிய வரலாறு(Historia) எனும் நூலில் எழுதி வைத்துள்ளார். இறந்த உடலிலிருந்து மூளை, குடல், ஈரல் போன்ற பகுதிகளை அகற்றிவிட்டு ஓர் எண்ணெய்க் கலவையில் 41 நாட்கள் ஊற வைத்துப் பின்னர் அதன் மீது துணியைச் சுற்றி மெழுகால் பொதிந்து வைத்தனர். மெழுகு எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து மம்மி என்ற பெயர் வந்தது என்கிறது Chambers Dictiorary. நிமி என்ற சொல்லிலிருந்தும் வந்திருக்கலாம். மம்மிகளின் உடலிலுள்ள உயிரணுக்களில் இன்னும் உயிர் உள்ளது; அவற்றிலிருந்து படியாக்க முறையில் (Cloning) மனிதர்களை உருவாக்கலாம் என்கிறார் எரிக் வான் டெனிகன். நிமியின் உடலிலிருந்து விதேகன் தோன்றியது கற்பனையாயிருக்க முடியாது. ஆக இந்த எண்ணெய் தான் அமுதமா?

உலகை ஒரு பேரழிவு தாக்க இருக்கிறதென்றும் அதிலிருந்து தப்புவதற்காக அனைத்து உயிர்களின் விந்தணுக்களையும் திரட்டி ஒரு குடத்தில் (கும்பத்தில்) அமுதத்தினுள் வைத்து கும்பகோணத்தில் வைத்தனர் என்றும் ஊழி முடிந்ததும் கும்பத்திலிருந்து உயிர்களை மீட்டனர் என்றும் கும்பகோணத் தலபுராணம் கூறுவதாகத் தமிழ் நாடு சுற்றுலாத்துறை வெளியீடு கூறுகிறது. அந்தக் கும்பத்தை கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தின் மீது கொண்டு வரும் போது அங்கு விழுந்து விட்டதாகவும் கும்பமேளா பற்றிய வரலாறு கூறுகிறது. ஊத மறை நூலிலும் மணிமேகலையிலும் அனைத்து உயிர்களிலும் ஒவ்வொரு இணையைக் கப்பலில் எடுத்துச் சென்று பாதுகாத்தனர் என்பதற்கு மேம்பட்ட ஒரு தொழில்நுட்ப மட்டத்தில் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்தனர் என்ற கதை அமைந்துள்ளது. இன்றும் நாம் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறோம். இப்படிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஊடகம் தான் அமுதமா?

மனிதனைச் சாவில்லாதவனாகப் படைத்தார் கடவுள்; அவரது திட்டத்தைச் சிதைத்து அறிவுக் கனியை உண்ணவைத்துச் சாவுடையவனாக மாற்றி கடவுளைத் தோற்கடித்தான் பாம்பு வடிவில் வந்த சாத்தன் என்கிறது ஊத மறைநூல்.

கில்காமேசு என்பது பாபிலோனில் உருவான, இதுவரை நாம் அறிய வந்துள்ளவற்றுள் மிகப் பழமையான காப்பியம்; அதில் ஊத மறைநூலின் நோவாவின் மூலவடிவமான உட்நாப்பிட்டிம் வருகிறான். அவனிடமிருந்து சாவாமருந்தைப் பெற்று வருகிறான் கதைத் தலைவனான கில்காமேசு. அவனிடமிருந்து அதை ஒரு பாம்பு திருடிச் சென்று விடுகிறது. மகாபாரதத்தில் பாம்புகளுக்காக கருடன் இந்திரனிடமிருந்து அமுதத்தைப் பறித்துக் கொண்;டு தருகிறான். அதனை இந்திரன் தந்திரமாக மீட்டுக் கொள்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. ஆக நாகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அமுதத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட பூசல் உலக முழுவதும் பதிவாகியுள்ளது. அமுதத்தை எவரும் ஒளித்து வைக்கவில்லை. உலக அழிவுகளும் நேர்ந்துள்ளன. மனிதர்களும் பிற உயிர்களும் இன்றும் வாழ்கிறோம்.

பனி ஊழிகள் ஓர் இலக்கம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்தன என்று சு.கி. செயகரன் கூறுகிறார், பக்: 88. நீர் பனிக்கட்டியாகப் படிந்து கடல் நீர் மட்டம் குறைவதும் அது உருகி கடல்மட்டம் உயர்வதுமாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போது சுறவக் கோட்டில் மயிர் உதிர்ந்து முழுவடிவம் பெற்ற மனிதன் சிறுகச் சிறுக வடக்கு நோக்கி நகர்ந்தான். நில நடுக்கோட்டை அடைந்தான். அத்தகைய ஒரு சூழலில் தமிழர்கள் நில நடுக்கோட்டிலுள்ள மாதுறை என்ற துறைமுகத்தில் குமரி என்ற பெண் தலைமையில் மீன் கொடியுடன் பாண்டிய அரசமரபைத் தோற்றுவித்தனர். சிலம்பு இவளை மதுராபதி என்கிறது. மீனைக் கொடியாகக் கொண்டு ஆட்சி செய்ததால் மீனாட்சி என்கின்றனர். மீனைப்போல் கண்ணை இமைக்காதவள் என்று கூறுகின்றனர் தொன்மப்பூசாரிகள். கடல் விழுங்கிய தன் பெயரைக் கொண்ட நிலத்தின் ஓரத்தில் நின்று காவலும் காக்கிறாள் குமரி அன்னை.

பாண்டிய நாட்டை பாண்டியா என்ற பெண் ஆண்டாள் என்று சந்திரகுப்த மோரியன் அரண்மனையில் இருந்த கிரேக்கத் தூதன் மெகாத்தனி பதிந்துள்ளதை கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தில் குறித்துள்ளார். பண்டை நாட்களிலிருந்து செவிவழியாக வந்த செய்தியை மெகாத்தனி உசாவிப் பதிந்திருக்கலாம்.

ஒரு பெண் பாண்டிய அரசை உருவாக்கினாள் என்று கூறுவது தமிழர்களின் “ஆண்மைக்கு” இழுக்கு என்று கருதும் தமிழ் அறிஞர்கள் பலர் இன்றும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் குமரி என்ற செடி இருந்தது, காட்டை எரித்து உண்டாக்கப்பட்ட நிலத்துக்குக் குமரி நிலம் என்பது பெயர் என்றெல்லாம் தம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு எண்ணற்ற சான்றுகள் காட்டி வாயடைத்துள்ளார் கார்க்கி. வாழ்த்துகள்.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களும் பெண்களுக்கு உள்ள சிறப்பை, தாய்வழிக் குமுக அடையாளங்களை வெறுப்பவர்கள். நம் குமுகத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் குறிப்பாகத் திருமணத்தில் தாய்மாமனுக்கு அனைத்துச் சாதி மக்களிடையிலும் சிறப்பான பங்குண்டு. ஆனால் கழக இலக்கியத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகத்துறைப் பாடல்களில் ஓரிடத்தில் கூட தாய்மாமனைப் பற்றிய குறிப்பு இல்லை. இது தொகுப்பாளர்களின் மனப்பான்மையின் வெளிப்பாடு. அதுபோல் குமரியைப் பற்றிய செய்திகளும் இல்லை. “குமரியந்துறை அயிரை மாந்தி” என்று ஒரு வரியில் மட்டும் நன்னீர் மீனாகிய அயிரையைக் குறிப்பிடுவதன் மூலம் குமரியாறு பற்றி மறைமுகமாகத் தெரிய வருகிறது. மற்றப்படி குமரிமலை, குமரியாறு போன்ற செய்திகளை இளங்கோவடிகள் தாம் பிற்காலத்தவர்க்காக விட்டுச் சென்றுள்ளார்.


(தொடரும்)

13.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (2)

“கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது”. (அழுத்தம் செயகரனுடையது பார்க்க, அதே நூல் பக்: 59.)

இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:

(1) மனிதர்கள் தோன்றி (135-130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் “ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன”. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்து விட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)

(2) டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.

(3) காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இருபடிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் “உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளை”ப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் “ஆரிய” வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சி தான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்பையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள “ஆரிய இன” வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது.

நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 - 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவது தான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம் (சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் “இலாமுரிதேசம்” என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப்பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.

இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு + மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன.

இனி தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள், உலக மக்களின் வரலாற்றையும் குழப்புவது மாக்சுமுல்லர் வகுத்துத் தந்த “ஆரிய இன”க் கோட்பாடு. அறிவொளிக் காலம் எனப்படும் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியரின் உலக வலம் அவர்களுக்குப் பல்வேறு மொழிகளை அறிய வைத்தது. அவற்றுள் முதலில் அவர்கள் அறிந்த சமற்கிருத்ததுக்கும் கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் இருந்த சில தொடர்புகளை வைத்து “ஆரியர்” என்ற இனத்தை செருமானியரான மாக்சுமுல்லர் உருவாக்கி அவர்களுக்கு செருமானியரின் உடல் தோற்றத்தையே சொந்தமாகக் காட்டினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரும் நண்ணில (மத்திய தரை)க் கடல் பகுதி உட்படட 6 பகுதிகளிலிருந்து “திராவிட இனத்தவர்” இந்தியாவில் குடியேறியதாக தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் எழுதினார். இருவருக்கும் அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மாக்சுமுல்லர் தான் எழுதிய Biography of words என்ற நூலில் தான் ஒன்றோடொன்று உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்ததாகத் தான் சொன்னதாகவும் அதனடிப்படையில் மனித இனங்களைக் கற்பிப்பது “பாவம்” என்றும் கூறி அதை மறுத்தார். அதே போல் 1875 இல் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் பிற்சேர்க்கையாக மனித இனங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் உடலின் நிறம், முகத்தோற்றம், மயிரமைப்பு முதலியவை வாழும் சூழல், உணவு ஆகியவற்றால் எளிதில் மாற்றமடைந்து விடுவதாகவும் மண்டையோட்டு நீள அகல விகிதம் தான் இன அடையாளமென்றும் அந்த வகையில் திராவிட ஆரிய மக்கள் எனப்படுவோரிடையில் வேறுபாடு இல்லையென்றும் எழுதினார். மாக்சுமுல்லர் கூறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பாவில் செருமனி-பிரிட்டன் ஆதிக்க அரசியலுக்கும் இந்தியாவில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்க அரசியலுக்கும் இவை தேவைப்பட்டன. கால்டுவெலாரின் நூலை மொழிபெயர்த்தவர்கள் அவரது பிற்சேர்க்கையைத் திட்டமிட்டு மறைந்துள்ளனர்.

முதலில் மனிதன் தோன்றிய நிலம் குமரிக் கண்டமே. அங்கிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலிருந்த மொழி, நாகரிக வளர்ச்சிகளுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கு தமக்குரிய வளர்ச்சியை அடைந்தோ அல்லது தேங்கியோ நிற்கின்றனர். அதுபோன்றே குமரிக் கண்டத்தில் தோன்றிய மொழியே மேலே கூறிய மாற்றங்களை ஆங்காங்குள்ள மக்களுடன் எய்தி நிற்கிறது. குமரிக் கண்டத்தில் தொழில்நுட்பம், ஆட்சி போன்றவை வளர்ச்சியடைந்த போது உருவான குழுஉக் குறி மொழி பூசகர்கள்-அரசர்கள் கூட்டணியால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு படிப்படியாக வேதமொழியாகவும் சமற்கிருதமாகவும் உருவாகி நிற்கின்றன. உலகில் நாகரிக வளர்ச்சிடைந்த மக்களின் மொழிகளில் அடித்தளத்தில் தமிழின் சாயலையும் மேல் மட்டத்தில் சமற்கிருதத்தின் சாயலையும் காணலாம். ஆங்கிலச் செய்யுளும் தமிழின் உரைநடையும். எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் வைப்பில் இணையானவை. அதுபோலவே தமிழின் செய்யுளும் ஆங்கிலத்தின் உரைநடையும். சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்தவரை அவை சமற்கிருதத்தை விடத் தமிழுக்கு மிக மிக நெருக்கமானவை. உலகமெலாம் எழுத்தறிவற்ற மக்களின் பேச்சுவழக்குகள் தமிழுக்கு மிக நெருக்கமானவை.

உலகில் அகழ்வாய்வுச் சான்று ஒன்று கூட இன்றி அனைத்து வரலாற்றுக் கோட்பாடுகளையும் விடச் செல்வாக்குடன் கேள்வி கேட்பாரின்றி நிற்பது “ஆரிய இனக் கோட்பாடு” ஒன்று தான். அந்தக் கோட்பாட்டைத் தூக்கிக் குப்பையில் வீசினால் தான் உண்மையான குமரிக் கண்ட, தமிழக, இந்திய, ஏன் உலக வரலாறு மட்டுமின்றி மனித வரலாறே வெளிச்சத்துக்கு வரும்.

பாவாணர் முதல் பல்வேறு தமிழ் ஆய்வர்களும் தமிழ் இலக்கியங்களை விட சமற்கிருத நூல்களிலிருந்து தான் குமரிக் கண்டம் பற்றிக் கூடுதலான செய்திகளைத் தர முடிகிறது. தென் அரைக் கோளத்தில் இருந்த “ரூட்டா” என்ற நிலப்பகுதி கடலினுள் முழுகிய போது அங்கிருந்த மக்கள் சீனத்துக்கும் மேற்கு நோக்கியும் பாரதத்துக்கும் குடிபெயர்ந்தனர் என்று கூறுகிறது இருக்கு வேதம். மச்ச புராணம், வாயு புராணம் ஆகியவை கடற்கோள் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி குசராத்துக் கரையில் அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது “பழம் பிறப்புணர்ந்த காதை” மணிமேகலையில். அவர்கள் சிந்துக் கரையில் பரவி மேற்கு நோக்கிப் பாரசீகத்தையும் கிழக்கு நோக்கிக் கங்கைச் சமவெளியையும் அடைந்தனர். காயங்கரை ஆறு மணலிணுள் மறைந்துபோக கங்கையும் தொழுனை(யமுனை)யும் இணையும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மணலினுள் வந்து கலக்கும் சரசுவதி ஆறு என்று அதனை இன்றும் வழிபடுகின்றனர்.

சமற்கிருத நூல்களிலிருந்து அபிதான சிந்தமணி, கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி ஆகியவை திரட்டித் தரும் செய்திகளின் படி இமயமலையும் விந்திய மலையும் நில நடுக்கோட்டின் தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி நீண்டுகிடந்த இரு மலைத் தொடர்கள்; அவற்றுக்கு இடையில் இருந்த நிலம் நடுநாடு (மத்தியப் பிரதேசம்) என்ற செய்திகள் தெரிகின்றன. சீவகசிந்தாமணியில் வருகின்ற சச்சந்தனின் நடுநாடு இதுவாகலாம். இந்தியாவில் இருக்கின்ற மலைகள், ஆறுகளின் பெயர்கள் அனைத்தும் முழுகிப்போன நிலத்திலிருந்த மலைகள், ஆறுகளின் பெயர்களே. இந்தியாவில் கேரளத்திலும், சேலத்திலும் குமரி மாவட்டத்திலும் பறளியாறுகள் ஓடுகின்றன. நெல்லை மாவட்டத்திலும் குமரி மாவட்டத்திலும் தாமிரபரணியாறுகள் ஓடுகின்றன.

துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறம் 1:13-16)

இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?
முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.

குமரிக் கண்டத்திலிருந்து முதலில் வெளியேறியவர்கள் தொலைவான இடங்களுக்கே சென்றனர். ஆறுகளின் கரைகளில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றும் மென்காடுகளையே நாடினர். தாம் சென்ற இடங்களில் இரும்பைக் கண்டுபிடித்து கோடரி செய்த பின்னரே அடர்காட்டுப் பகுதிகளை நாடினர். கங்கைச் சமவெளிக்கும் அவ்வாறே. வட இந்தியாவில் அவர்களுக்கு முன்பே குடியிருந்தவர்களோடு போரிட வேண்டியிருந்தது. அந்தப் போரைப் பாடும் முகத்தான் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்களின் நிலவு மரபு பாண்டவர்-கவுரவர்களுக்கும் சோழர்களின் கதிரவன் மரபு இராமனுக்கும் கூறப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரையில் கோவா வரையுள்ள பகுதி மாவலி நாடு (மகாபலி நாடு) என்று சேரர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் அடர்காட்டுப் பகுதியாக இருந்தது. எனவே இறுதியாகக் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிவர்கள் தாம் அங்கு குடியேறினர். பரசுராமன் கோடரி கொண்டு கடலில் வீசி சேரநாட்டை உருவாக்கினான் என்பது இதனைத் தான். சேரர், அவர்களைத் தெடர்ந்து சோழர், இறுதியில் பாண்டியர் குடியேறியதால் சேர, சோழ, பாண்டியர் என்ற வரிசை முறை வழங்குகிறது. நெல்லை மாவட்டத் தாமிரபரணியாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிடுகிறார். அதன் கரையில் தான் ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுக் களம் உள்ளது. ஆதித்தன் எனும் கதிரவன் குலத்தினர் சோழர்கள். அவர்களைத் துரத்திவிட்டுப் பாண்டியன் அமர்ந்தான்.

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தன்னவன்”.

என்று முல்லைக் கலிப்பாடல் (104 : 1-4) இதனைக் குறிப்பிடுகிறது.

சோழன் இந்திரனுடன் உறவு கொண்டவன். இது சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திரன் அவையில் ஆடல் மகளான ஊர்வசி எனும் மாதவியை இந்திரன் சோழ நாட்டுக்கு நாடுகடத்த அவள் வழிவந்த மாதவி தான் கோவலனின் காதலி என்கிறது சிலம்பு. இந்திரன் வாழ்ந்த நாடு தாய்லாந்து என்கிறார் பாவாணர். இந்தரனின் ஊர்தியாகிய வெள்ளையானை அங்கு தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பெயர் சம்பாபதி. புகார் நகரக் காவல் தெய்வமும் சம்பாபதியே - மணிமேகலை. சம்பா என்ற ஒரு வகை நெல்லைத் தாய்லாந்திலிருந்து சோழன் கொண்டு வந்திருக்கலாம். இன்று பள்ளர்கள் என்று அழைக்கப்படும் மருதர்கள் அங்கிருந்து சோழர்களுடன் வந்திருக்கலாம். இந்திரனை மருத்துக்கள் என்பவர்களோடு எப்போதுமே இணைத்துப் பேசுகின்றன மறைகளும் தொன்மங்களும்.

இந்திரனிடமிருந்து ஒருவகை நெல்லையும் ஒருவகைக் கரும்பையும் சேரன் பெற்றுவந்தான் என்று கழக இலக்கியம் கூறுகிறது.

இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் பகை இருந்ததையும் இந்திரனது மணிமுடியிலிருந்த வளையத்தை உடைத்து அவனது ஆரத்தைப் பிடுங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான் பாண்டியன் என்கிறது சிலம்பு. மறைகளில் வரும் இந்திரனும் வருணனும் பொருளிலக்கணத்தில் மருத, நெய்தல் நிலத் தெய்வங்கள் எனும் போது மறைகளையும் தொல்காப்பியத்தையும் யாத்தவர்கள் தமிழர்களே என்பதும் “ஆரியர்கள்” என்பவர்கள் ஐரோப்பியர் உருவாக்கிய கற்பனை என்பதும் தாமே விளங்காவா?


(தொடரும்)