31.12.07

தமிழ்த் தேசியம் ... 22

மனந்திறந்து... 12

அடுத்து, மொழியின் பெயராலும் பண்பாட்டின் பெயராலும் செயற்படும் வேறு சிலரோடு என் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாயிருக்கும்.

இன்று குமரிமுனையில் நிற்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்ட வை. கணபதிச் சிற்பிக்கும் தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கும் தெய்வச் சிற்பி என்றும் அசுரச் சிற்பி என்றும் ஒரே நேரத்தில் போற்றப்படும் மயனின் படைப்பென்று கூறி ஐந்திறம் என்ற பெயரில் கணபதிச் சிற்பியின் முன்முயற்சியால் தமிழக அரசால் வெளியிடப்பட்ட நூல் பற்றிய மோதல் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டேன். அவர், மயன் என்பவன் குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவன்; சிற்பம், வானியல், வானூர்திப் படைப்பு என்று எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்பங்களின் தந்தை; அவனது ஆக்கங்கள் தமிழிலேயே இருந்தன என்று கூறினார். சென்னையில் அவர் நடத்திய ஒரு கருத்தரங்கிலும் நான் கலந்து கொண்டேன். இந்தியாவில் உள்ள சிற்பிகளில் பலரோடு தொடர்பு வைத்துக் கொண்டு பல கருத்தரங்குகளில் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகளை எனக்கு விடுத்துவந்தார். மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வராக இருந்தபோது பாடநூலாக அவர் எழுதிய சிற்பமாச் செந்நூல் என்பதில் அடங்கியிருந்த தெளிவான தொழில்நுட்பச் செய்திகளை அவருடைய பிற ஆக்கங்களிலும் எதிர்பார்த்தேன். ஆனால் அவற்றில் சிற்பிகள் எனும் சாதியினர்க்குப் பிறவியிலேயே அமைந்த அறிவியல் - தொழில்நுட்பப் பெருமைகளும் அச்சிற்பிகள் படைக்கும் கோயில்களிலும் சிலைகளிலும் தெய்வீகம் தானே வந்துவிடும் என்பன போன்ற கதைப் பொழிவுகள்(காலட்சேபங்கள்) தாம் இருக்கின்றன என்ற உண்மையை நான் சுட்டிகாட்டியதும் என்னுடனுள்ள தொடர்புகளை அவர் முறித்துக்கொண்டார். தமிழில் சிற்ப ஏடுகள் உள்ளனவா என்ற தேடுதலில் அவர் ஆர்வம் காட்டிய போது சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோவிலில் திருவிதாங்கூர் அரசரிடமிருந்து கலாநிதி பட்டம் பெற்ற சிற்பிகள் மரபொன்று உண்டென்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தமிழில் சிற்பத் தொழில்நுட்பம் பற்றிக் கூறும் தமிழ் ஏடுகள் உள்ளனவென்றும் அறிந்து கூறினேன். அவர் அந்த ஏடுகளைப் பெற்றாரா இல்லையா என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தொடர்பாக அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், சமற்கிருதத்தில் தான் சிற்ப நூல்கள் உள்ளன என்ற தலைகீழ்ப் பாடத்தைப் படித்தார். வழக்கம் போல் இது போன்ற தொழில்நுட்பத் தமிழ் நூல்கள் சராசரி மக்களின் பார்வைக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக அவற்றைத் தேடி அழிக்கும் சாதி சார்ந்த, வேதியம் சார்ந்த நிலைப்பாட்டிலிருந்துதான் தொடக்கத்தில் அவர் தமிழ்ப்பற்று நாடகம் ஆடினாரோ என்ற ஐயம் இப்போது எழுகிறது. இன்று தமிழகத்திலும் உலகமெல்லாமும் பரந்து வாழும் தமிழர்களிடையில் புதிதாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கும் ″இறையுணர்வால்″ கோடானு கோடி உரூபாய்கள் கோயில்கள் கட்டுவதற்கான தொழில் வாய்ப்பு கூடி வந்துள்ளதே; சோழர் காலம் மீண்டுள்ளதே அதைத் தன் சாதியினர் தவிர பிறருக்கு விட்டுக்கொடுப்பாரா? ஆகமக் கோயில் மரபிலிருந்து வந்த கருணாநிதியும் அவருடன் கைசேர்ந்து நிற்கிறாரே!

கணபதிச் சிற்பியுடன் மிக நெருங்கி நிற்பவர் பண்டிதர் எசு. பத்மநாபன். கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்திய மாநில வங்கியில் அலுவலராயிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்; இதழாளராகப் பணியாற்றியவர்; எனவே தன் பெயர் அடிக்கடி தாளிகைகளில் வரச் செய்யும் வாய்ப்புள்ளவர். அவர் ஒரு குமரிக் கண்ட ஆய்வுக் கருத்தரங்கு நடத்தினார். அதில் நான் கலந்து கொண்டு பேசும்போது குமரிக் கண்ட வரலாற்றை மட்டுமல்ல, தமிழக வரலாற்றையும் அறிய வேண்டுமானால் நாம் முதலில் ″ஆரிய இன″க் கோட்பாட்டைத் தூக்கியெறிய வேண்டும்; வேதங்களிலும் சமற்கிருதத்திலும் உள்ள செய்திகளைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய வேண்டும்; நம்மிடம் படிந்துள்ள சாதி ஆதிக்க வெறியின் விளைவான குற்றவுணர்வு தான் ″ஆரிய இன″த்தை நிறுத்தி வைத்து அதன் மீது நம் குற்றங்களை ஏற்றிவிடத் தூண்டுகிறது என்றேன். இது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனால் அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய ராவ் என்ற உசுமானியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இலங்காபுரி என்பது இன்றைய ஆத்திரேலியப் பகுதியில் அமைந்திருந்தது என்பதை கடல் மீது பறந்து இலங்காபுரியை அடைந்தவனாகக் கூறப்படும் அனுமன் கடந்த பாதையைக் கூறும் வால்மீகி இராமாயணப் பகுதியை வைத்து இன்றைய புவியியல் செய்திகளோடு ஒப்பிட்டு மிகச் சிறப்பாகக் காட்டினார். கந்தபுராணத்திலிருந்தும் சான்றுகள் காட்டினார். இன்றைய இலங்கைத் தீவு வேறு என்றார். இது குமரிக் கண்டத்தின் நிலக்கிடப்பு பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளோடு மிக ஒத்து வருகிறது. தென் பாலிமுகம் என்பது இன்றைய பாலித்தீவைக் குறிக்கும் என்ற கருதுகோளோடு இது ஒத்துப் போகிறது. நீண்ட ஒரு கட்டுரையை நேரம் கருதிச் சுருக்கிப் படித்தார். அந்தக் கட்டுரையின் படியை நேரடியாகவும் பலமுறை மடல் வழியும் கேட்டும் பத்மநாபனிடமிருந்து எந்த மறுமொழியுமில்லை. அவர் நடத்தும் இதழான ஆய்வுக் களஞ்சியத்திலும் இக்கட்டுரை வெளிவரவில்லை. உசுமானியப் பல்கலைக் கழகத்துக்குப் பேராசிரியர் பெயருக்கு எழுதிய மடலும் திரும்பிவிட்டது.

இப்போது ப-ர்.பத்மநாபன் குமரிக் கண்டத்தையே குமரி மாவட்டத்திற்குள் அடக்க முயன்றுவருகிறார். அவரது விளம்பர உத்திகளாலும் படித்தவர்களின் பொதுவான அறியாமையினாலும் அதுவே உண்மையென்று பலரும் நம்புகிறார்கள். நாகர்கோயிலைத் தாண்டிச் செல்லும் பழையாறு தான் பஃறுளியாறு என்கிறார். நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற புதிய வாய்க்கால் தோண்டப்படுவதற்கு முன் அது பறளியாறு என்று அழைக்கப்பட்டது உண்மையாகவே இருக்கட்டும் (உண்மையில் அந்த ஆற்றின் பழைய பெயர் கோட்டாறு, அதாவது மலையாறு). ஆனால் அதே குமரி மாவட்டத்தில் இன்னொரு பறளியாறும் கேரளத்திலும் சேலம் மாவட்டத்திலும் பறளியாறுகளும் உள்ளன; இலங்கைத் தீவுக்கு சேரன் தீவு, தாமிரபரணி என்ற பெயர்கள் உள்ளன; குமரி மாவட்டத்தில் ஓடும் பறளியாறு எனப்படும் குழித்துறையாற்றுக்கு தாமிரபரணியாறு என்ற பெயர் உள்ளது; நெல்லையில் ஒடும் தாமிரபரணியாற்றுக்கு சோழனாறு, பொருனையாறு என்ற பெயர்கள் உள்ளன. இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் (இதை இந்திரன் இருக்கை என்று கருதலாம்) போர்னியோ, புரூனெய் போன்ற தீவுகள் உள்ளன. சுமத்ரா என்ற நாடும் உள்ளது. இவற்றில் எவை மூலப் பெயருக்குரியவை, எவை இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்தில் தங்கள் பண்டை இருப்பிடத்தின் நினைவாகப் பெயர் சூட்டியவை என்பதைத் தெளிந்தறிய வேண்டும். இலங்கைத் தீவு, தாமிரபரணி ஆறு ஆகியவற்றிற்கு இருந்தனவாக அறியப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் குமரிக் கண்டம் முழுக முழூக வெவ்வேறு நிலப்பகுதி மக்கள் ஒருவர் பின் ஒருவராக அப்பகுதிக்கு வந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளமைக்கு அசைக்க முடியாத சான்றுகளாக இவை உள்ளன. இந்தக் கருத்துகளை அவர் நடத்தும் இதழுக்கு எழுதினால் அவற்றை அவர் வெளியிடுவதில்லை. அதுபோல் திருவள்ளுவரும் தொல்காப்பியரும் குமரி மாவட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்கு ஊர்ப் பெயர்களையும் அவர்கள் கையாண்டுள்ள சில சொற்களையும் காட்டுகிறார்.

சொற்களைப் பற்றிய ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டவுடனேயே அவனது வரலாற்றுக் கதைப்பாடல்கள் தோன்றிவிட்டன. அத்தகைய கதைப்பாடல் ஒன்றைப் பேரா.நா.வானமாமலை அவர்கள் பதிப்பித்துள்ளார்கள். கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பற்றி பண்டிதர் பட்டத்துக்கு ஆய்வு செய்த பேரா. வே. மாணிக்கம் அவர்களுக்குக் கிடைத்த ஓர் ஏட்டுச் சுவடியுடன் அப்புத்தகத்தை ஒப்பிட்டுப் பார்த்த போது, அவ்வேட்டில் இடம்பெற்றிருந்த, இன்று குமரி மாவட்டத்தில் வழக்கிலிருக்கும் ஆனால் நெல்லை மாவட்டத்தில் வழக்கொழிந்து போன பல சொற்களின் பொருள் புரியாமல் அச்சொற்களை மாற்றி அவர் பதிப்பித்திருந்தது தெரியவந்தது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குள் நெல்லை மாவட்டத்தில் வழக்கிலிருந்த பல சொற்கள் வழக்கிழக்கவும் அதே நேரத்தில் அதன் எல்லையிலிருந்த, வேறு அரசின் கீழிருந்த குமரி மாவட்டப் பகுதியில் அவ்வழக்கு தொடரவும் முடியுமானால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளிலும் 9 ஆயிரம் ஆண்டுகள் வரை முந்தியதாகக் கூறப்படும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ள சொற்களை வைத்துக் கொண்டு இதுபோன்ற முடிவுகளுக்கு வர முடியாது. அது மட்டுமல்ல, தமிழகத்தின் உண்மையான சொல்வழக்கை இன்றைய கல்வி நிலையங்களில் ″கற்று″ வந்தோரிடம் நாம் காண முடியாது. நாட்டுப்புறக் ″கீழ்ச்சாதி″ மக்களிடையில் தான் காண முடியும். அதுவும் திரைப்படங்களாலும் அச்சு, மின்னணு ஊடகங்களாலும் பழைய சொல்வழக்குகள் விரைந்து அழிந்துவரும் இன்றைய நிலையில் அறிவது கடினம். கி.இராசநாராயணன் தொகுத்துள்ள அகராதியும் நாட்டுப்புற வழக்கில் எழுதப்பட்டுள்ள அண்மைக் கால இலக்கியப் படைப்புகளும் கூட முழுமையாக உதவ முடியாது.

குமரி மாவட்டத்துக்குப் பெருமை சேர்ப்பதற்காக வலிந்து பெறப்பட்ட ″உண்மைகளை″க் கூறக் கூடாது. உண்மையான உண்மையைத் தேடுவதே உண்மையான ஆய்வாளனின் உண்மையான பணியாக இருக்க வேண்டும். உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும் தொல்காப்பியரும் அதங்கோட்டாசானும் திருவள்ளுவரும் அங்கு பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் குமரிக் கண்டத்தின் பஃறுளியாறு அதனூடாகப் பாய்ந்தாலும் பாயாவிட்டாலும் குமரி மாவட்டத்துக்கென்று தனிப்பெருமைகள் உண்டு. அப்படிப்பட்ட பழம் பெருமைகள் எதுவும் அதற்கு இல்லை என்று கண்டால் நேர்மையாளர்கள் எதிர்காலத்திலாவது அத்தகைய பெருமைகளுக்குரியதாகக் குமரி மாவட்டத்தை மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டுமேயொழிய ஐயத்துக்குரிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

ப-ர். பத்மநாபனின் ஆய்வுக் கருத்துகளைப் பற்றி இவ்வளவு விரிவாக இங்கு கூறவேண்டுமா என்ற கேள்வி இதைப் படிக்கும்போதே ஏற்படலாம். அவரது இன்னொரு பக்கத்தைப் புரிந்துகொண்டால் அதற்கு விடை கிடைக்கும்.

இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள 3½ வட்டங்களையும் அவற்றைத் தொட்டுக் கிடக்கும் 2½ வட்டங்களையும் செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களையும் சேர்த்து மொத்தம் 9 வட்டங்களைத் திருவிதாங்கூர் - கொச்சி சமத்தானத்திலிருந்து பிரித்துத் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று பல்லாண்டு காலம் போராடி தாங்கொணா வன்முறைகளுக்கு ஆளாகி பல உயிர்களைக் களபலி கொடுத்து 1956இல் காமராசர் செய்த இரண்டகத்தால் 9 வட்டங்களில் 4½ வட்டங்கள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டன. அவற்றில் செங்கோட்டை வட்டம் நீங்கலாக 3½ வட்டங்களைக் கொண்டதாகக் குமரி மாவட்டம் பிறந்தது. மீதியுள்ள 4½ வட்டங்களுக்காகவும் போராட்டத்தைத் தொடருவதைக் கைவிட்டுப் பதவி இன்பம் தேடி காமராசரின் கட்சியில் இணைந்தனர் குமரி மாவட்ட விடுதலை இயக்கத் தலைவர்கள். அவரோ இவர்களையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, குமரி மாவட்டத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. திருவிதாங்கூர் தமிழ் மக்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் தொடங்கி காமராசர் 1967 தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரை அவரும் அவரது கட்சியும் குமரி மாவட்ட மக்களுக்குச் செய்த இரண்டகங்களையும் ஓரவஞ்சனைகளையும் கெடுதிகளையும் பட்டியலிட்டால் பெருகும். அப்படிப்பட்டவர் தன்னைத் தமிழகம் அரசியல் களத்திலிருந்து தூக்கியெறிந்தவுடன் தன் சாதியைச் சொல்லிக்கொண்டு குமரி மாவட்ட மக்களிடம் அடைக்கலம் தேடினார். குமரி மாவட்டம் பல காலமாகவே நாடார் - நாடாரல்லாதவர் என இரு சாதி அணிகளாகப் பிளவுண்டு நின்றது. அந்தச் சாதி அணிவகுப்பை உடைத்துக் கொண்டு ஓர் அரசியல் அணிச் சேர்க்கையை உருவாக்கிக் கொண்டிருந்தது திராவிட அரசியல். அதை மீண்டும் சாதியப் படுகுழிக்குள் தள்ளிய கொடுஞ்செயலைச் செய்தவர் காமராசர். அந்தப் படுகுழியிலிருந்து வெளியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது குமரி மாவட்டம். காமராசருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் குமரி மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக அம்மக்களிடையில் மனக்குறை உள்ளது. திருவிதாங்கூர் - கொச்சியுடன் ஓர் உயர்ந்த மட்டத்திலிருந்த ஆட்சியமைப்பையும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான மேம்பட்ட உறவையும் கல்வி வளர்ச்சியையும் கைக்கொண்டு அவற்றை விடத் தாழ்ந்த மட்டத்திலிருந்த தமிழகத்தை மேம்படுத்துவதற்கு மாறாக குமரி மாவட்டத்தைத் தன் மட்டத்துக்குத் தாழ்த்தியது தமிழகம். இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு குமரி மாவட்டம் பழையபடி கேரளத்துடன் இணைய வேண்டுமென்று ஒரு சாரரும் குமரி மாவட்டத்தை நடுவணரசின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டுமென்று இன்னொரு சாரரும் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த வேண்டுகைகளை வெளிப்படையாக முன்வைத்துப் போராடுவதில் தவறில்லை. தமிழகத் தலைவர்களின் கவனம் கொஞ்சம் குமரி மாவட்டத்தின் பக்கம் திரும்பும்; குமரி மாவட்டம் முன்வைக்கும் வேண்டுகைகள் தமிழகத்திலும் அரசியல் அதிர்ச்சி அலைகளை எழுப்பும். ஆனால் ப-ர்.பதம்நாபன் அதற்கு மாறாகக் கமுக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். குமரி மாவட்டத்திலுள்ள மலையாளம் பேசும் நாயர்களும் குறுப்புகள் எனப்படும் கிட்ணவகையினரும் முன்பு அங்குள்ள தமிழ் பேசும் மக்கள் மீது சாதி மற்றும் பொருளியல் ஒடுக்குமுறைகளைச் செலுத்தியவர்கள். ″நாடான்″ என்று ஊர்த்தலைவனை நாடார், அதாவது சாணார் சாதி மக்கள் விளிப்பதும் அதே சாதி மக்களை அவர்களிலும் ″தாழ்ந்த″ சாதியினர் விளிப்பதும் உண்டு. அதுபோல் ″நாயனே″ என்ற விளி நாயர் சாதியினரைப் பார்த்து சாணார்கள் விளித்தது, அடிமை ஏமானைப் பார்த்து ″ஏமானே″ என்று விளிப்பதற்கு இணையானது. ″கடவுளே″ என்று விளிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டது. உண்மையில் நாயர் - சாணார் உறவு இப்படித்தான் இருந்தது. அதை மறைத்துவிட்டு ″நாயனே″ என்ற சொல் வள்ளுவரையே குறிக்கிறது என்று அவர் கூறுகிறார். திருநயினார்க்குறிச்சி என்ற ஊர்ப்பெயரிலுள்ள ″நயினார்″ என்ற சொல் திருவள்ளுவ நாயனார் என்ற சொல்லுடன் தொடர்புடையதல்ல, சமணர்களின் பட்டப்பெயராகும். இன்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் வாழும் தமிழ்ச் சமணர்களை நயினார் என்ற சொல்லால் தான் குறிப்பிடுகின்றனர். எனவே திருநயினார்க்குறிச்சி என்பது சமணர்கள் வாழ்ந்த ஊர் அல்லது ஒரு சமணக் கோயில் இருந்த ஊரையே குறிக்கின்றது.[1]

இன்று நாயர்களுக்கும் நாடார்களுக்குமான உறவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதை விரும்பாத நாயர்கள் கேரளத்துடன் குமரி மாவட்டம் இணைந்துவிட்டால் தங்கள் பழைய ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று நம்புகின்றனர் போலும். அவ்வாறு நடைபெறுமா அல்லது கேரள மக்களும் அரசும் இவர்கள் எதிர்பார்ப்பது போல் இவர்களை நடத்துவார்களா என்பது வேறு கேள்வி. குமரி மாவட்டத்திலுள்ள வளமிக்க மண்ணையும் குமரிமுனை போன்ற எண்ணற்ற சுற்றுலா இடங்களையும் குறிவைத்து கேரளத்தார் ஆதரவு தருவார்கள் தாம். ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் போலத்தான் மனிதர்களை நடத்துவார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மலையாளிகளுடன் சேர்ந்து இவர் முன்னாள் அரச குடும்பத்தினரை ஒவ்வொருவராக அழைத்து வந்து அவர்களது முன்னோர்கள் குமரி மாவட்டத்துக்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவதற்குத் தன் ஆய்வு மையத்தைப் பயன்படுத்துகிறார். ஊர்ப் பெயர்களை காட்டித் தேவார மூவர் பாடிய கோயில்கள் அனைத்தும் கேரளத்தில் தான் உள்ளன என்கிறார். கேரளம் தான் தமிழகம் என்று நிறுவும் திசையில் அவர் சென்றுகொண்டிருக்கிறார். ஒரே பெயரைக் கொண்ட ஊர்கள் தமிழகத்திலும் கேளரம், ஆந்திரம், கன்னட மாநிலங்களிலும் கணக்கற்றவை உள்ளன. வட இந்தியாவிலும் உள்ளன. அதே காரணத்தால் கேரளமும் தமிழகமும் ஆந்திரமும் கருநாடகமும் ஒன்றாகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் வாழும் தமிழக எல்லைப் பகுதிகள் அந்த அயல் மாநிலங்களைச் சேர்ந்தவையுமாகிவிடா.

இவர் எப்போதும் போற்றிப் புகழும் கவிமணி அவர்கள் சிறந்த வரலாற்றாய்வாளராவார். குமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டுகளை அரும்பாடுபட்டுத் தேடி வெளிக்கொணர்ந்தவராவார். கவிமணியின் இந்த முகத்தை எவரும் முறைப்படி வெளிப்படுத்தவில்லை. அவர் கண்டுபிடித்த சான்றுகளை வைத்து சதாசிவம் என்ற தமிழறிஞர் சேரநாடும் செந்தமிழும் என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார். அது தான் திருவிதாங்கூர்த் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வரலாற்றுப் பின்னணி அமைத்துத்தந்தது. கவிமணியாரின் அதே உத்தியைக் கையாண்டு திரைமறைவில் அதே தமிழ்ப் பகுதிகள் மீண்டும் மலையாளிகளின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிடக் களம் அமைத்துக் கொடுப்பது அவருக்கும் நல்லதல்ல, குமரி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையாளிகளுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கு மட்டுமல்ல கேரளத்துக்கும் நல்லதல்ல.

ப-ர்.பத்மநாபன் பழமையை மீட்பதில் வெறியாயிருக்கிறார். முன்பு நிலவிய குமுக ″ஒழுங்கு முறைகள்″, அதாவது சாதிய ஆதிக்கங்கள், ஒடுக்குமுறைகளை மீட்க வேண்டுமென்று விரும்புகிறார். அது, பிறந்த பிள்ளையைக் கருப்பையினுள் நுழைக்கும் முயற்சியாகும். குழந்தையும் தேறாது, தாயும் வாழமாட்டாள்.

கவிமணியார் தன் சாதியில் நடைபெற்ற சில கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர தான் எழுதிய மருமக்கள் வழி மான்மியம் என்ற பாவியத்தை(காவியத்தை)த் தான் கண்டெடுத்த பழஞ்சுவடியென்று பொய்யுரைத்து உயிருக்குத் துணிந்து வெளியிட்டு அச்சாதியினர்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்தக் கொடுமைக்கு முடிவு கண்டார். இன்றைய நிலையில் ப-ர்.பத்மநாபன் தன் சாதியினருக்கு ஏதாவது குறையிருக்குமென்று கருதினால் அவர் வெளிப்படையாகப் பேசிப் போராட முன்வரட்டும். அது ஞாயமாக இருந்தால் என் போன்றோர் தோள்கொடுக்க ஆயத்தமாக உள்ளோம். குமரி மாவட்ட மக்களிடையிலுள்ள பிளவுக்கு முடிவுகட்டுவோம்.

கணபதிச் சிற்பியாரையும் ப-ர்.பத்மநாபனையும் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறக் காரணம் தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று கூறியவுடன் அதைக் கூறுபவர் யார், எவர், உண்மையில் அவர், கூறுவது என்ன என்று பாராமல் அவர் பின்னால் ஓடும் பழக்கம் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு நாணயமாக இருப்பதற்கு அது தான், அது ஒன்று தான் அடையாளம் என்று உள்ளோம். அந்தப் போக்கைக் கைவிட்டு உண்மையான தமிழ்த் தேசிய நலன் என்னவென்பதில் தெளிவுடன் செயற்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டத்தான். இன்று கூடிக் குலவிக் கூத்தாடும் கணபதிச் சிற்பி, பர்.எசு.பத்மநாபன், கருணாநிதி, தமிழ்க்குடிமகன், நெடுமாறன், இவர்களைப் போற்றிப் புகழும் வகையறாக்களிடம் தமிழ்த் தேசிய ஆர்வமுடையோர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கூறத்தான்.

பண்பாடென்பது நிலையானதல்ல. நிலத்தின் தன்மைக்கேற்ப அதன் சில கூறுகள் தொடர்ந்து வந்தாலும் அதன் உள்ளடக்கம் விளைப்புப் பாங்குகள் மாறுந்தோறும் மாறிவரும் மனித உறவுகள் அடிப்படையில் மாறிக்கொண்டிருப்பதாகும். தமிழகத்தின் பண்பாடு நாமறிந்த தமிழலக்கியங்கள் அனைத்திலும் இன்றைய நடைமுறையிலும் சாதி அடிப்படையில் தான் அமைந்திருப்பதை நாம் காணலாம். எனவே இந்தப் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் அழித்துப் புதிய பண்பாட்டை, மனித உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற தெளிவுடன் நாம் செயற்பட வேண்டும்.

இன்று தமிழ்ப் பண்பாடு அழிந்து போகிறது, அதைக் காக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோர், தமிழ்ப் பண்பாடு என்று அவர்கள் கூறுவது எந்தெந்தப் பண்பாட்டுக் கூறுகளை, அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறட்டும். அது குறித்து நாம் ஒரு கருத்தாடல் நடத்தலாம். இதனை நான் விடுக்கும் ஓர் அறைகூவலாகவே(சவாலாகவே) அவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] திருநயினார்க்குறிச்சியை திருநாயனார்க்குறிச்சி என்ற விளக்கத்துக்கு மாறாக நயினார் என்பது சமணர்களைக் குறிப்பதால் ″சமணராகிய″ திருவள்ளுவர் பிறந்ததால் அது அப்பெயர் பெற்றது என்று கூட இவர்கள் வாதிடலாம். உண்மையில் திருவள்ளுவர் சமணர் என்று சொந்தம் கொண்டாடும் மார்வாரிகளின் முயற்சியின் ஒரு வெளிப்பாடு தான் ப-ர். பத்மநாபனின் அண்மைக்கால ஆராய்ச்சிகள் என்று தோன்றுகிறது. தான் அறநூல் எழுதப் பயன்பட்ட மொழியைக் கூறாமல் அகர முதல எழுத்தலாம் என்று பொதுமை கூறிய வள்ளுவருக்கு சமயச் சார்பு கற்பிப்பது பண்பாடற்ற ஒரு செயல். ஆங்கிலர் வெளியேறிய பின் மார்வாரிகளின் அரசாகிவிட்ட இந்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தங்கள் பாடத்திட்டங்கள் மூலமாக தமிழர்களுக்கு நாகரிகம் தந்தவர்கள் சமணர்கள் தாம் என்று ஒரே குரலில் முழங்குகின்றன. அதற்குப் பக்கமேளம் அடிக்க ப-ர்.க.ப.அறவாணன், ப-ர்.பத்மநாபன், ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கொண்ட ஒரு குழுவும் செயற்படுகிறது.

உலகில் வாழும் எந்தவொரு காட்டுவிலங்காண்டிக் கூட்டமும் கூட அரையில் ஒரு தழையாடையையாவது அணிந்திருக்கும். ஆனால் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட அம்மணமாக சாலைகளில் அலையத் துணிந்த விலங்குகள், தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக் கொள்ளும் கிறுக்கர்கள்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுத்தந்தார்கள் என்று சொல்வதற்கு என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் அல்லது மூளை மழுங்கிப்போயிருக்க வேண்டும்! ஆசீவகக் கோட்பாடு தமிழர்க்குரியது என்று குணா கூறுவது ஒருவேளை சரியாயிருக்கலாம். ஆனால் நிறுவனப்பட்டுவிட்ட சமயம் உண்மையில் கோட்பாட்டின் மறுப்பாகும் என்ற உண்மையைப் அறியாதவர்கள் அவரது கூற்றைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

தமிழ்த் தேசியம் ... 21

மனந்திறந்து... 11

புதுப்பா(கவிதை) என்ற ஒன்று 1970-80களில் பரவலான ஏற்பைப் பெற்றது. இது இலக்கணங்களைக் கடந்த படைப்பு என்று புகழப்பட்டது. பாரதியார் இதைத் தோற்றுவித்தார், பிச்சமூர்த்தி வளர்த்தார், சி.சு.செல்லப்பா பரவலாக்கினார் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் கழக(சங்க) இலக்கியங்கள் அனைத்தும் மிகத் தளர்வான இலக்கணக் கட்டுக்கோப்பு கொண்ட இதே வகைப் பாக்களால் இயற்றப்பட்டவை என்பதே உண்மை. அவை காலத்தைக் கடந்து நிற்கும் உள்ளடக்கத்தைக் கொண்டவை. இந்தப் புதுப்பாவினுள்ளும் இந்தப் பரிபாடைக் கூட்டம் புகுந்து தன் அழிவு வேலையைச் செய்தது. படைப்பில் ஆசிரியன் தானாக எந்தச் செய்தியையும் புரிய வைக்கக் கூடாதாம்; அது படிப்பவர் மேல் தன் ஆதிக்கத்தையும் கருத்தையும் திணிப்பதாம்; படிப்பவனே படைப்பினுள் தன் கருத்தைத் தேடிப் படைப்பவனாக மாற வேண்டுமாம். அதாவது ″படைப்பை″ வைத்துக் கொண்டு அதன் மேல் தன் படைப்பாற்றலைத் தேடுவதில் தன் பொழுதைக் கழிக்க வேண்டுமாம்; இது தான் உண்மையான இலக்கியத் தொண்டாம்.

1970-80 காலகட்டத்தில் பாட்டாளியக் கோட்பாட்டாளர்கள் என்ற பெயரில் புதுப்பாக் களம் புகுந்தனர் வைரமுத்து, ந.காமராசன், மு. மேத்தா போன்றோர். அவர்களது நூல்களைக் கையில் வைத்திருப்பதே பெருமை என்று இறுமாந்திருந்தனர் பொதுமைக் கட்சிகளையும் நக்சலிய இயக்கத்தையும் சேர்ந்த இளைஞர்கள். இன்று திரைத்துறையில் நுழைந்து சிதைந்து போன இப்பாவலர்களைக் கண்டு கசந்து போயுள்ளனர் அவர்கள்.

இருப்பினும் பா புனைவதும் கதை எழுதுவதும் இதழ் நடத்துவதும் படைப்புச் செயல்முறை என்ற தவறான எண்ணம் பல இளைஞர்களின் மூளையில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு எருவூட்டி வளர்க்கிறார்கள் தி.க.சி., வல்லிக்கண்ணன் போன்ற சில பெரியவர்கள். இந்தப் ″படைப்பாளி″களில் ″தமிழ்த் தேசியம்″ பேசுவோரும் உண்டு. பண்டத்தைப் படைப்பதை விட இலக்கியம் படைப்பது உயர்வானது என்று இவர்கள் நம்புகிறார்கள். இடைக்காலத்தில் ″குண்டலினிக் கோட்பாடு″ என்ற பெயரில் பல தலைமுறைகளைச் சேர்ந்த ஆற்றல் மிக்க, வசதி படைத்த மக்களை ″ஆசனமிட்டு″ அமர்த்தி மூச்சைக் கண்காணிக்க வைத்து அவர்களது திறன்கள் குமுகத்துக்குக் கிடைக்காமல் செய்த அழிவுக் கோட்பாட்டிலிருந்து இது எந்த வகையிலும் மேம்பட்டதல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

குமுகத்தை மேம்படுத்தும் ஒரு கோட்பாடு, அதனடிப்படையிலான ஒரு செயல்திட்டம் அதைச் செயற்படுத்தத்தக்க ஓர் இயக்கச் செயற்பாடு ஆகிய இவற்றிலிருந்து உருவாகும் இலக்கியம்தான் மக்களுக்குப் பயன்படும். இன்று முந்தைய கோட்பாடுகள் குறியிழந்து ஒன்றோடொன்று மயங்கிச் சிதைந்து நிற்கும் நிலையில் புதிய கோட்பாட்டை வகுப்பதிலும் அதைச் செயலுக்குக் கொண்டுவருவதிலும் தான் நேர்மையான படைப்பாளிகள் ஈடுபட வேண்டும். இது தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட படைப்பாளி இளைஞர்களுக்கு நம் வேண்டுகோள்.

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 20

மனந்திறந்து... 10

திராவிடத்தால் வீழ்ந்தோம் நூல் வெளிவந்த பிறகு நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது நலமென்று கருதுகிறேன். அதுவரை என் பெயரைத் தெரிந்து கொண்டவர்கள் திராவிட, தனித்தமிழ், பொதுமை இயக்க வட்டாரங்களில் கணிசமாக உண்டு. இப்போது புதிதாகவும் பலர் அறிந்து கொண்டனர். அவர்கள் அனைவரிலும் பெரும்பாலோர் என்னைப் பகையுணர்வோடும் வெறுப்புடனும்தான் பார்த்தனர். 1996இல் ஈரோடையைச் சேர்ந்த குறிஞ்சி என்பார் குணாவின் நூலாக்கங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து என்னைப் பேச அழைத்திருந்தார். மேடையில் பேச எழுந்ததும் 5 மணித்துணிகளுக்குள் முடித்துவிட வேண்டும் என்று தலைமை தாங்கியவர் சீட்டுக் கொடுத்தார். நான் ஓரிரு நிமையங்கள் பேசிவிட்டு இறங்கிவிட்டேன். என் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே என்னை அங்கு அழைத்தனர் என்று என்னால் உணர முடிந்தது. அங்கு தான் பேரா.கோ.கேசவனை முதலும் இறுதியுமாகச் சந்தித்தேன். அப்போது தான் பெரியார் மார்வாரிகளிடம் பணம் பெற்றார் என்பதற்கு ஆவணச் சான்றுகள் உண்டா என்று கேட்டார். இல்லை என்றேன். ஊகமா என்றார்; உய்த்துணர்வு என்றேன். ஊகத்துக்கும் உய்த்துணர்வுக்கும் இடைவெளி மிக மெல்லிது. கிடைக்கும் சூழ்நிலைத் தரவுகளை வைத்து முடிவு செய்வது உய்த்துணர்வு. இந்த உய்த்துணர்வு இன்றி வரலாறோ அறிவியலோ வளர முடியாது. உய்த்துணர்வில் கிடைத்த முடிவைக் கொண்டு மேலும் சான்றுகளைத் தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்யலாம். பெரியாரைப் பொறுத்தவரை கூடுதல் தடயங்கள் இக்கட்டுரை எழுதிய பின் கிடைத்துள்ளன. ஆனால் ஆவணச் சான்றுகள் இல்லை என்ற எண்ணத்தில் பேரா.கோ.கேசவன் தன் குணா - பாசிசத்தின் தமிழ் வடிவம் என்ற தன் நூலில் ஊகம் என்றே குறித்துள்ளார்.

அந்த ஈரோடை நிகழ்ச்சியில் தான் கோவை ஞானி அவர்களை மீண்டும் ஒரு முறை சந்தித்தேன். 1980களின் தொடக்கத்தில் வெங்காலூரில் நடைபெற்ற தேனீக்கள் பட்டறையில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அதற்கும் முன்பு படிகள் என்ற இதழில் அவரது எழுத்துகளைப் படித்துள்ளேன். அவரது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் அவர் வெளியிடும் கருத்துகளின் நேர்மை குறித்து எனக்குள் ஐயம் இருந்தது. படிகள் இதழில் தமிழுணர்வு என்பது பற்றிய கேலியும் கிண்டலும் கண்டிருக்கிறேன். தேனீக்கள் பட்டறையில் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மைகள் என்று பேசி முடித்து விட்டு அதே மூச்சில் தமிழ்ப் பண்பாட்டின் இழிவுகள் என்று எந்த உணர்ச்சி மாற்றமும் இன்றிப் பேசி முடித்தார். அதில் அவரது மேதைமையை வெளிப்படுத்தும் ஆர்வம்தான் வெளிப்பட்டதே ஒழிய நேர்மையான ஈடுபாட்டைக் காண முடியவில்லை. ந.ம.கு.போன்று நாட்டாற்றில் விட்டோடும் குழுக்களை தமிழுணர்வாளர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் அயல்நாட்டு உதவியால் செயற்படும் ″தன்னார்வ″க் குழுக்களோடு இணைந்து நிற்பதிலும் அவருக்கு நிறைய ஈடுபாடு உள்ளது. ஈரோடையில் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது கட்டுரைகள் சிலவற்றை அவருக்கு விடுத்தேன். தன்னை கோவை வந்து சந்தித்தால் நிகழ் இதழில் ஒரு நேர்காணல் வெளியிடலாம் என்றார். சந்தித்தேன். குமரிமைந்தன் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஓர் ஆக்கம் வெளிவந்தது. அதில் என் கருத்துகளைப் பற்றிய சில திறனாய்வுகளை வைத்திருந்தார். அவர் எழுப்பியிருந்த இந்தக் கேள்விகளுக்கான விடைகள் ஏற்கனவே குமரிமைந்தன் சிந்தனைகள் என்று அவர் தொகுத்தவற்றில் இருந்தன. இருப்பினும் நான் மீண்டும் ஒருமுறை விளக்கினேன். அவரோ சொன்னதையே திரும்பச் சொல்கிறீர்கள் என்றார். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டதால் அப்படிச் சொல்ல நேர்ந்தது, கொடுத்த விளக்கத்தில் குறை இருப்பதாகத் தோன்றினால் அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம் என்று எழுதினேன். அதற்கு இதுவரை மறுமொழி இல்லை.

அவரது இதழில் ″இயற்கை வேளாண்மை″ பற்றி நம்மாழ்வாரும் மலைவாழ் மக்கள் பற்றி சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் நாஞ்சில்நாடனும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். ″எதிர்வினைகளை″ வரவேற்பதாக ஞானி வலியுறுத்துவார். அந்த நம்பிக்கையில் இவ்விரு கட்டுரைகளையும் திறனாய்ந்து இரு கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கின்ற சிந்தனைகள் நம் நாட்டின் நிலைமைகளிலிருந்து தோன்றவில்லை, அயல்நாட்டார் எழுதிய நூல்களிலிருந்து தோன்றியுள்ளன என்று எழுதினேன். தன் நண்பர்கள் மீது இழிமொழி கூறியுள்ளதாக(″கேவலப்படுத்தும் முயற்சி″) என்று என் மேல் குற்றம் சாட்டினார். அத்துடன் நிகழ் இதழும் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்பும் அவர் நடத்திய இதழ்கள் திடீர் திடீரென நிறுத்தப்பட்டிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளில் இதைச் செய்வார் போலும், பல்லி தன் வாலை அறுத்துப் போட்டுக்கொண்டு ஓடிவிடுவதைப் போல.

பின்னர் எம் இயக்கத்தின் பொருளியல் உரிமைக் கோட்பாடு பற்றிய செய்தி அவரது வட்டத்துக்குள் பரவத் தொடங்கியதும் ″பொருளியலையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்″ என்று கூறத்தொடங்கியுள்ளார். கரூரில் நடைபெற்ற காவிரிக் காப்புக் குழு கருத்தரங்கில் இச்சொற்றோடரைக் கூறுவதை நான் முதன்முதலில் கேட்டேன். பின்னர் ஈரோடையில் பொழிலன் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் ″தமிழகத் தேசிய முதலாளியப் புரட்சிதான் தமிழக மக்களுக்கு விடிவு தரும்″ என்ற என் உரைக்கு மறுப்புக் கூறுவது போல தமிழகத்தில் முதலாளியம் வர இசைய முடியாது என்று வீறார்ப்பாக முழங்கினார். இது தில்லியின் குரலா அல்லது வாசிங்டனின் குரலா என்ற கேள்விக்கு விடையை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்!

உண்மையில் இவருக்கு நான் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மனமில்லை. அதேவேளையில் அவற்றை அவரால் மறுக்கவும் முடியவில்லை. அவர் மட்டுமல்ல முன்பு நான் குறிப்பிட்டதைப் போல சுப.வீரபாண்டியன், இன்னும் பலரின் நிலையும் இது தான். மற்றவர்கள் வாய் திறவாது இருக்கிறார்கள். இவரோ இப்படி முரட்டடி அடிக்கிறார்.

இப்போது தமிழ் நேயம் என்ற பெயரில் அவர் ஓர் இதழ் தொடங்கியிருக்கிறார். முன்பு அவர் திட்டி கிண்டலடித்த அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரையும் தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழியார்வம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் ″தமிழ்த் தேசியம்″ என்ற பெயரில் புகழத் தொடங்கியுள்ளார்.

ஞானி அவர்கள் எவரும் தன் மீது வெளிப்படையான திறனாய்வுகள் வைப்பதை விரும்புவதில்லை. அவரும் அவர் மட்டத்து இலக்கியத் திறனாய்வாளர்களும் படைப்பாளிகளும் தங்களுக்குள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதற்கென்று அவர்களுக்கு மட்டுமே புரியும் குழூஉக்குறி (பரிபாடை → பரிபாசை) ஒன்றை வைத்துள்ளனர். இப்படித் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்று இயல்பாகவே பின்இற்றையியத்தில்(பின் நவீனத்துவம்) போய் நிற்கிறது. அதனால் தான் இவர்கள் படைக்கும் இலக்கியங்கள் இந்தப் பரிபாடையைப் புரிந்த 200 பேர்களுக்கு வெளியே செல்ல மறுக்கிறது. இவர்களில் இன்று உச்சத்தைத் தொட்டவர் செயமோகன் என்னும் எழுத்தாளர். இவர் அண்மையில் எழுதிய விட்ணுபுரம் என்ற புதினத்தை ஒரு ″வாசிப்பில்″ புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தன் ″புரிதல் மட்டத்தை உயர்த்த″ப் பாடுபட வேண்டுமென்றும் புகழ்பெற்ற சுந்தர ராமசாமி கூறியுள்ளார். ஆக, இவர் சொல்வதிலிருந்து இன்றைய 200 பேரையும் விடச் சுருங்கிய ஒரு படைப்பாளர் - படிப்பாளர் வட்டம் உருவாகப் போகிறது என்பது தெரிகிறது. இந்தப் பரிபடையிலிருந்து ஒரு புதிய சமற்கிருதம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாகும் என்று உறுதியாக நம்பலாம்.

(தொடரும்)

30.12.07

தமிழ்த் தேசியம் ... 19

மனந்திறந்து... 9

பொரியாரும் ஆச்சாரியாரும் முறையே ஈரோடையிலும் சேலத்திலும் பிறந்தவர்கள். இருவரும் ஏறக்குறைய சம அகவையினர். (ஆச்சாரியார் பெரியாரை விட ஓராண்டு மூத்தவர்). ஒரே கட்சியில் (பேரவை) பணியாற்றியுள்ளனர். இருவரும் அவரவர் பகுதி நகரவைகளில் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளனர். இறுதிவரை பொதுவாழ்வில் எதிரிகளாகக் காட்சியளித்தவர்கள் தனிவாழ்வில் நண்பர்களாக வாழ்ந்தனர்.

இந்த உண்மைகளிலிருந்து நமக்குத் தோன்றுவதென்னவென்றால் ஏதோவொரு சூழ்நிலையில் இந்த இரு ″நண்பர்களும்″ ஒருவரையொருவர் வீழ்த்திக் காட்டுவதாகச் சூளுரைத்து(பந்தயம் போட்டு)க் களத்திலிறங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட போட்டி சாதி அடிப்படையில் வெளிப்பட்டதா சாதி அடிப்படையில் ஏற்பட்ட போட்டி தனிப்பட்ட போட்டியாக மாறியதா என்று பிரித்தறிவது கடினம். ஏனென்றால் அப்போது பேரவைக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது.

பேரவைக் கட்சிக்கு வெளியே உருவாகி செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்க்கு எதிரான நயன்மைக்கட்சி முன்வைத்த இட ஒதுக்கீட்டைப் பேரவைக் கட்சியினுள்ளும் கொண்டுவரப் பெரியார் முயன்றார். பார்ப்பனர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தீவிரமாக எதிர்த்தனர். பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக உருவான நயன்மைக் கட்சியில், பார்ப்பனர் தவிர்த்த பிற ஆதிக்கச் சாதிகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்பட்ட நாடார் மகாசன சங்கம் போன்றவற்றின் பங்கும் இருந்தது. இவையனைத்தும் சேர்ந்து பெரியாருக்கு ஒரு வளமான வாய்ப்பு இருப்பதைக் காட்டின. எனவே பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறித் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். நயன்மைக் கட்சி அதனுடன் ஒத்துச் செயற்பட்டது. பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதனைச் சாதிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்று விரித்துப் பொருள் கொண்டனர். ஆனால் பெரியாரின் நோக்கம் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டவேயில்லை என்ற உண்மையை வரலாறு நமக்குக் காட்டுகிறது. குமுகம் தலைவனை உருவாக்குகிறது என்ற உண்மைக்குச் சான்றாகப் பெரியார் நிற்கிறார். அத்தலைவன் நேர்மையாகச் செயல்பட்டால் அக்குமுகம் மேம்படும்; ஏமாற்றினால், அதாவது மக்களுக்குத் தெரியாத ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அத்தலைவன் தன் மனதுக்குள் மறைந்து வைத்துக்கொண்டு இயக்கத்தை அதற்குள் முடக்கினால் அக்குமுகம் சிதையும். காந்தியும் பெரியாரும் இவ்வகையில்தாம் செயற்பட்டுள்ளனர். எனவே தான் இந்திய நாடு ஆங்கிலர் வெளியேறுவதற்கு முன்பிருந்ததைவிடக் கூடுதலான வெளிச்சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது; தமிழ்க் குமுகம் பெரியாருக்கு முன்பிருந்தை விடக் கூடுதலாக மக்களிடையில் பிளவையும் பகைமையையும் கண்டுள்ளது. காந்தியையும் பெரியாரையும் நேராகப் பார்க்க வாய்ப்பில்லாத தொண்டர்கள் கூட அத்தலைவர்கள் தம் மனங்களுக்குள் மறைத்துவைத்திருந்த எல்லைகளையும் மீறிச் சாதி ஒழிப்பு, மக்கள் பணி ஆகிய களங்களில் இறங்கித் தங்களைத் தேய்த்து அழித்துக்கொண்டுள்ளனர். ஆனால் இவ்விரண்டு தலைவர்களின் இரண்டகத்தால் அம்மக்களின் ஈகம் வீணாகிப்போயிற்று.

ஆச்சாரியாருடனான போட்டியில் ஒரு நல்வாய்ப்பைப் பெரியாருக்கு ஏற்படுத்தித் தந்தது இந்திப் போராட்டமாகும். அதைப் பயன்படுத்திக்கொண்டு ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுக்கவும் உட்கட்சித் தலைமைப் போட்டியில் தன் கையை வலுப்படுத்தவும் அவர் மடத்தலைவர்களையும் வெள்ளாளச் சாதி சமயச் சிந்தனையாளர்களையும் சேர்த்துக்கொண்டார். இந்தப் போராட்டத்தின் மூலம் அவருக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய தமிழ்த் தேசிய விடுதலை உணர்வு. இது அவரது தன்வளர்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டத்தைக் காட்டியது. அதோடு அண்ணாத்துரை முன்வைத்த மும்பை மார்வாரிப் பொருளியல் ஆதிக்கக் கோட்பாடும் உதவியது. அதே வேளையில் பெரியாரும் ஆச்சாரியாரும் அவ்வப்போது சந்தித்துப் போட்டியில் யார் கை ஒங்கியிருக்கிறது என்று கருத்தாடிக் கொண்டனர்.

தமிழகத்தில் தமிழிசைக்கான போராட்டத்தின் வழியாக வெளிப்பட்ட தமிழுணர்வால் கிலியடைந்த தமிழகத்திலிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கர்களும் கன்னடத்தைச் சேர்ந்த கன்னடரும் தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ளப் பெரியாரை அணுகியதால்தான் போலும் 1944-இல் சேலம் மாநாட்டில் தமிழர் கழகம் என்ற பெயரை மறுத்து திராவிடர் கழகம் என்ற பெயரைப் பிடிவாதமாக வலியுறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார். தமிழிசைச் சங்கத்தைத் தொடங்கிவைத்தவர்கள் அண்ணாமலைச் செட்டியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற தமிழ் பேசும் தொழில் துறையினரும் ′கல்கி′, ஆச்சாரியார் போன்ற தமிழ் பேசும் பார்ப்பனர்களும் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். கருஞ்சட்டைப் படை எனும் மிரட்டல் ஆயுதம் வைத்திருந்த பெரியாரும் அதில் பங்கேற்றார் என்பது தனிக் கவனத்துக்குரியது.

இவ்வாறு 20 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாறு ஒரு தோல்வி வரலாறாகப் போனதற்குப் பெரியார் முழுமுதற்காரணமாவார். அவர், தனக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு அவற்றை வளர்த்து வளப்படுத்தித் தன்னை வளர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், சிந்தனையாற்றல், செயலாற்றல், ஊக்கம், உழைப்பு, சூழ்ச்சித் திறன் என்ற அனைத்தும் வாய்க்கப் பெற்றவர். ஆனால் அரசு ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சுபவர். பணப்பேய் பிடித்தவர், நேர்மையற்றவர். தமிழக மக்களுக்கிருந்த சமத்துவ வேட்கை, விடுதலை வெறி ஆகியவை அவரது இக்குறைகளை அவர்களது கண்களிலிருந்து மறைத்தன.

பெரியார் - ஆச்சாரியார் போட்டியின் தெளிவான வெளிப்பாடுகள் ஆச்சாரியார் இரண்டு முறை முதலமைச்சரான போதும் போராட்டங்கள் நடத்தி அவரைப் பெரியார் பதவியிறங்க வைத்தார். அதே நேரத்தில் இந்தியைத் திணிக்க முயன்றும் சாதிகளை இறுகச் செய்யும் கல்வி முறையைப் புகுத்தியும் அதற்கு ஆச்சாரியார் களம் அமைத்துக் கொடுத்தார் என்ற உண்மையையும் மறுக்க முடியாது. இந்தப் பதவிப் பறிப்புக்குப் பழிவாங்க, பெரியார் ஆதரித்தவரும் பதவி அரசியலில் தனக்குப் போட்டியாளருமான காமராசரின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருதற்காகத் தான் வெறுத்த பொதுமைக் கட்சியை அணைத்து தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து அண்ணாத்துரையைப் பதவியிலேற்றினார் ஆச்சாரியார்.

தலைவர்களிடையிலான இந்தப் போட்டி தமிழகத்தில் பெரியார்-ஆச்சாரியாருடன் நின்று போகவில்லை. கருணாநிதி - ம.கோ.இரா. போட்டியும் இத்தகையதே. இருவரும் இறுதிவரை ″நண்பர்களாக″ இருந்தனர். இன்று கருணாநிதி - செயலலிதா இடையிலான போட்டி வேறு விதமானது. இருவரும் தங்கள் பொதுவாழ்வில் சுருட்டி வைத்திருக்கும் கணக்கில்லாப் பொதுச் சொத்துகளைக் காக்கவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவுமே பதவிப் போட்டியில் உள்ளனர்.

பெரியாரைப் பற்றி திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் வெளிவந்தவை, குறிப்பாக தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் தமிழகத்திலுள்ள ″தமிழுணர்வு″, ″தமிழ் தேசிய உணர்வு″ உடையவர்களிடையில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. அறிவுத்துறை சார்ந்த தனியாள் அரட்டலிய (தனிநபர் பயங்கரவாத) நிகழ்ச்சி போல் அமைந்து விட்டது அது. தனியாள் அரட்டலியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது தோழர் லெனின், அது, எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது என்று குனிந்த தலையுடன் இயங்கும் மக்களை அதிர்ச்சியடையச் செய்து தலைநிமிரச் செய்கிறது; வழக்கத்துக்கு மாறான ஏதோவொன்று நடைபெறுகிறது என்று அனைவரது சிந்தனைகளையும் புலன்களையும் கூர்மையாக்குகிறது; புதிய போக்குகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள் மக்கள்; தங்களை அப்போக்குகளில் இணைத்துக்கொள்ள முற்படுகின்றனர் என்றார். அதைப் போலத் தான் பெரியார் குறித்த இத்திறனாய்வு பயன்பட்டுள்ளது. இது என்னால் திட்டமிட்டுச் செய்யப்படவில்லை. என் கருத்துகளைப் பதிவு செய்தேன். அது குணாவின் நூலில் தற்செயலாக வெளிப்பட்டுத் தன் பணியை முடித்துள்ளது.

பெரியாரின் பெயரைக் கூறிக்கொண்டு இயக்கம் நடத்துவோரும் இதழ் நடத்துவோரும் தாங்கள் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் பார்ப்பனர்களோடும் பார்ப்பனரல்லாத போட்டிக் குழுக்களோடும் தமிழகத்தின் செல்வத்தைப் பறித்துச் செல்லும் ஆட்சியாளரோடும் அயலவரோடும் அக்கொள்ளையைப் பங்குபோடுவதற்காகப் போடும் சண்டையைத் தமிழ்த் தேசப் போராட்டம் என்று கூறுகின்றனர். தங்கள் தங்கள் சாதிக்குழுக்களிலுள்ள அடித்தள மக்கள் கல்வியும் அறிவும் பொருளியல் மேம்பாடும் பெற்றுவிடக் கூடாது என்று திட்டமிட்டு இட ஒதுக்கீட்டுச் சிக்கலை வைத்து அடித்தள மக்களிடையில் சாதி வெறியைத் தூண்டிவிட்டுப் பார்ப்பான் தான் தூண்டிவிட்டான் என்று ஏமாற்றுகின்றனர். பயனைத் தாங்கள், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அறுவடை செய்கின்றனர். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற நோக்கில் செயற்படுவதைத் திட்டமிட்டு மறுக்கிறார்கள். உழைப்பு, விளைப்பு பற்றிக் கவலைப்படாதவர்கள் இவர்கள். பணம் கிடைத்தால் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலையிலுள்ள ஒட்டுண்ணிகளின் கூட்டம். விளைப்பவனையும் உழைப்பவனையும் இழிவாக நடத்தும் பாரதப் பண்பாட்டின், தமிழப் பண்பாட்டின், இந்துப் பண்பாட்டின் வழிவந்தவர்கள். இந்தக் கூட்டம் தான் இன்று பெரியாரின் படிமத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியம் கட்டுரையை எழுதும் போது பெரியாரின் படிமத்தை உடைக்க வேண்டும் என்ற திட்டவட்டமான ஓர் எண்ணம் எனக்கு இல்லை. நானறிந்த உண்மைகளையும் எனது உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் இன்று இராசதுரை போன்றோரும் பெரியாரின் படிமத்தைக் காப்பதில் முனைப்பாக நிற்பதைப் பார்க்கும்போது பெரியாரின் படிமத்தை உடைப்பது தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று உணர்கிறேன். தமிழகம், அதன் வளங்கள், அவற்றின் மீது தமிழக மக்களுக்குள்ள விலக்கவொண்ணா உரிமை முதலிய அடிப்படைத் தமிழ்த் தேசியக் கண்ணோட்டத்திலிருந்து பிற திசைகளில் தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சுப.வீரபாண்டியன் வகையறாக்களின் மூலம் கிடைத்த பட்டறிவில்தான் நான் பெரியாரைப் பற்றிய இந்த முடிவுக்கு வந்தேன் என்பதே திரு.சுப.வீரபாண்டியன் கேட்ட கேள்விக்கு நான் தரும் விடை..

தலைவர்கள் என்பவர்களும் மனிதர்கள் தாம். கோட்பாடுகள் கொள்கைகள் எனும் பகுதிகளாலும் செயல்திட்டங்கள் எனும் ஆணி, பூட்டுகளாலும்(போல்ட்டு நட்டுகளாலும்) இயக்க விதிமுறைகள், அமைப்புமுறைகள் என்ற திட்டப்படி ஒன்றிணைக்கப்பட்ட பொறிகள் அல்ல அவர்கள். அவர்களுக்குச் சொந்தமான உணர்வுகளும் குறைபாடுகளும் உண்டு. இருப்பினும் தாம் வாழும் காலத்தில் நிலவும் குமுகச் சூழல்களிலிருந்து கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள் என்ற வகையில் பிறரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் குமுகத்தின் படைப்பாகவும் விளங்குகிறார்கள். அதே வேளையில் அவர்களிடமுள்ள தனிப்பட்ட பண்புகளும் குறைபாடுகளும் அவர்களின் செயற்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்தப் பாதிப்புகளை இனம்கண்டு கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மேம்படுத்தும் திறனும் நேர்மையுமுள்ள வழித்தோன்றல்கள் உருவாகும்போது தலைவர்களது படிமங்கள் மக்கள் உள்ளங்களில் உயர்ந்து நிற்கின்றன. தலைவரின் படிமத்தை வைத்துப் பிழைப்பு நடத்துவோராக வழித்தோன்றல்கள் தரம் தாழும்போது தலைவர்களின் படிமங்கள் வீழ்ந்து நொறுங்குகின்றன. தலைவர்கள் இயல்பான மனிதர்கள் இல்லை, கடவுள்கள்; அவர்கள் சொன்னவை அனைத்துக் காலத்துக்கும் பொருந்துபவை; அவை மறுபார்வைக்கு உரியன அல்ல என்ற நிலையை வழித்தோன்றல்கள் எடுக்கும் போது அவர்கள் கடவுளாகக் காட்டும் தலைவர்கள் சராசரி மனிதர்கள் தாம், சில வேளைகளில் சராசரி மனிதர்களை விடக் கீழானவர்கள் என்ற உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது. ஐரோப்பாவில் மார்க்சு வாழ்ந்த காலத்திலிருந்த குமுகச் சூழலுக்கேற்றவாறு அவர் தன் கோட்பாடுகளை வளர்த்தார். அவற்றில் காலம் இடம் ஆகிய எல்லைகளைக் கடந்து நிற்கும் வளர்ச்சிக் கோட்பாடுகளாகிய இயங்கியல் பருப்பொருளியமும் வரலாற்றுப் பருப்பொருளியமும் ஊடுருவி நிற்கின்றன. அதே வேளையில் அவர் வாழ்ந்த இடத்துக்கு அதாவது ஐரோப்பாவுக்கு அந்தக் காலகட்டத்துக்கு மட்டும் பொருந்தும் என்று கருதத்தக்க ஒரு செயல்திட்டத்தை எப்போதும் எல்லா இடங்களிலும் பொருந்தும்(பாட்டாளியே எப்போதும் புரட்சிகரமானவன்) என்றும் கூறினார். அது இன்றுவரை ஐரோப்பாவில் கூட செயலுக்கு வரவில்லை. இவ்வாறு அந்தச் செயல்திட்டம் காலாவதியாகிப் போனதை வரலாறு காட்டுகிறது. அந்தச் செயல்திட்டங்களில் தத்தமது நாடுகளுக்குப் பொருந்துவனவென்று தாங்கள் கருதிய சில மாற்றங்களைச் செய்து புரட்சி செய்தனர் லெனின், மாவோ, காட்டிரோ, ஓ சி மின் போன்ற மார்க்சின் வழித்தோன்றல்கள். லெனினின் வழித்தோன்றல்கள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்து அக்கோட்பாட்டைச் செழுமைப்படுத்தாமல் தம் அதிகாரப்பசியை ஆற்றிக்கொள்வதற்காக அதைக் கொச்சைப்படுத்தியதால் உருசியாவில் லெனினின் உருவச்சிலையையே கீழே தள்ளி இழிவுபடுத்தினர் மக்கள். சீனத்தில் மாவோவின் படிமத்துக்கு என்ன நேருமோவென்று நாம் திகைத்து நிற்கிறோம். அதே நேரத்தில் மார்க்சியத்திலுள்ள, காலங்களைக் கடந்துநிற்கும் வலிமை பெற்ற வளர்ச்சிக் கோட்பாட்டை இனங்காண மனமின்றி வேறு எவற்றையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் மார்க்சின் இன்றைய வழித்தோன்றல்கள். தங்கள் அணுகலை மாற்றி மார்க்சியத்தின் வளர்ச்சிக் கோட்பாட்டை இனங்காண்பதில் அவர்கள் வெற்றி பெறவில்லையாயின் லெனினுக்கு நேர்ந்த அவலம் தான் மார்க்சுக்கும் நேரும்.

இந்தியாவில் தோன்றிய நாராயண குருவின் குறிக்கோளை எய்துவதற்கு அவரது வழித்தோன்றலான குமரன் ஆசான் செயற்பட்டு அவருக்குப் பெருமை சேர்த்தார். அவர் போன்ற வழித்தோன்றல்கள் பெரியாருக்கு அமையவில்லை. அதனால் தான் பெரியாரின் வாழ்க்கையை மீளப்பார்க்க வேண்டிய தேவையே ஏற்பட்டது. அத்தகைய ஒரு குமுகத் தேவைக்கன்றி பொழுதுபோக்குக்காக அவ்வாய்வு செய்யப்பட்டிருந்தால் அது எவரது கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்திருக்காது.

சப்பானில் சென்ற நூற்றாண்டின் பாதிக்குப்பின் பேரரசு மீட்பியக்கம் என்ற பெயரில் உருவான இயக்கத்தில் இரண்டு சாமுரைத் தலைவர்கள் தலைமையேற்றனர். புதிதாக முடிசூடிய இளம் பேரரசரும் பங்கேற்றார். ஐரோப்பாவுக்குச் சென்று அவ்விரு தலைவர்களும் நாடுகளைச் சுற்றிப் பார்த்துத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி ஆய்வு செய்து தமது நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு, கல்வி, அறிவியல் - தொழில்நுட்பக் கொள்கை என்று அனைத்தையும் வடிவமைத்தனர். மாற்றங்கள் தேவைப்பட்ட நேரங்களில் மக்களிடையிலிருந்து தலைவர்கள் தோன்றி அவர்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினர். ஆட்சித் தலைவர்கள் போராட்டங்களை ஒடுக்கித் தலைவர்களைச் சிறையிலிட்டனர், அல்லது கொன்றனர். ஆனால் மக்கள் முன்வைத்த வேண்டுகைகளுக்குச் செவிமடுத்து உடனுக்குடன் நிறைவேற்றினர். இதனால் இரண்டு நன்மைகள் கிடைத்தன. நாடும் மக்களும் அவர்களது கைகளை விட்டு ஐயத்துக்குரிய புதிய தலைவர்களின் கைகளில் சிக்குவது தடுக்கப்பட்டது. அதேவேளையில் புதிய உரிமைகளைக் கேட்கும் அளவுக்கு மக்கள் விழிப்புணர்வும் பக்குவமும் அடைந்த போது அவர்களுக்கு அவற்றை வழங்கியதால் குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயர்ந்தது. அதனால்தான் உலகத்தின் ஒரு கோடியில் தனிமைப்பட்டுக் கிடந்த பிற்போக்கு சப்பான் ஒரு வல்லரசாகத் தன்னை வளர்த்துக் கொள்ள முடிந்தது. 1945இல் உலகப் போரில் தாங்கொணாக் கொடுமைக்கு ஆளான நிலையில் தான் அதுவரை கடைப்பிடித்து வந்த படையியல் அணுகலைக் கைவிட்டுப் புதிய தலைமையின் கீழ் இன்று உலகில் தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து நிற்கிறது.

அங்கு அரச மதமாக இருந்த, பழமையடைந்ததும் மனிதனைச் செயலிழக்கச் செய்வதும் நமது ″குண்டலினி″க் கோட்பாட்டுக்கு உற்ற தோழனாகவும் விளங்கிய ஊழ்க(தியான-சென்) புத்த சமயம் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்தில் பண்டைய வீரவழிபாட்டு மதமான சிண்டோயியம் பேரரசு மீட்பியக்கத்தின் போது அரச மதமாக்கப்பட்டது. இன்று அதையும் கைவிட்டுப் புதிய சமயமொன்றைச் சமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலோ, ஆங்கிலேயருடன் உடன்பாடு கண்டு இந்தியப் பொருளியலை அடகுவைத்து மார்வாரிகளுக்கு மட்டும் பணி புரிந்த காந்தியைக் கடவுளாக்கி, காலங்கடந்து போன பண்பாடுகளைக் காப்போராகவும் மக்களின் அறியாமையையும் வறுமையையும் அடிமை நிலையையும் நிலைநிறுத்துவோராகவும் அவரது வழித்தோன்றல்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். கொடுமைகளை எதிர்த்து மக்களின் குரலாகத் தலைவர்கள் தோன்றும் போது அவர்களது படிமங்களைத் தெய்வமாக்கிவிட்டு மக்களை ஏமாற்றிக் கைவிட்டுவிடுகிறார்கள். அதனால் தான் இங்கு மக்களும் நாடும் வலிமையிழந்து எவரெவருக்கோ அடிமைசெய்து கிடக்கின்றன. இந்தக் கேடுகளுக்கு முடிவுகட்ட நேர்மையும் திறனுமுள்ள ஒரு தலைமை உருவாகி வெற்றிபெறும்போது இதுவரை காலங்காலமாகத் தாக்குப்பிடித்து நிற்கும் பிற்போக்கு விசைகள் கட்டிக்காத்து வந்திருக்கும் அனைத்தும், அனைத்துப் படிமங்களும் நொறுங்கித் தூள்தூளாகி மண்ணோடு மண்ணாகி நாளை இந்தியாவுக்கு உரமாகி விடும். பெரியாரின் படிமமும் தான்!

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 18

மனந்திறந்து... 8

1980களின் தொடக்கத்தில் திருச்சி ஈ.வே.ரா. கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய பேரா.வே.தி.செல்லம் அவர்களைச் சந்திக்கத் திருச்சிக்குச் சென்ற போது அவரது முன்னாள் மாணவரும் அப்போது சட்டம் பயின்றுகொண்டிருந்தவருமான திருவாரூரைச் சேர்ந்த கருணாநிதி என்ற இளைஞரைச் சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார். அவ்விளைஞர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். திராவிடர் கழகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு காலத்தில் வினைப்பட்டவர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கள்ளர் வகுப்பைச் சேர்ந்த திராவிடர் கழகத்தினர் தாழ்த்தப்பட்ட கட்சி உறுப்பினர்களைக் கட்சி அமைப்புக் கூட்டங்களில் சாதிப் பெயர் கூறித் திட்டி அடித்த நிகழ்ச்சிகள் பல நடந்ததாகக் கூறினார். அதன் பின்னர்தான் அதுவரை தங்கள் தலைவராகத் தாங்கள் மதித்திருந்த பெரியாரைக் கைவிட்டு அம்பேத்காரை நாடியதாகக் கூறினார். அத்துடன் பெரியாற்று அணையில் என்னுடன் பணியாற்றியவரும் அப்போது தான் பொறியியல் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருந்தவருமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓர் இளைஞருடன் கருத்தாடிய போதுதான் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட இளைய தலைமுறையினருக்கிடையில் எவ்வளவு ஆழமான பிளவையும் பகைமையையும் உருவாக்கியுள்ளன என்பதை உணர முடிந்தது. தொழிற்கல்லூரிகளில் இவ்விரு வகுப்பு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற வன்முறை மோதல்கள், கொலைகளுக்கான உண்மையான விளக்கம் கிடைத்தது.

இந்தப் பட்டறிவுகளின் பின்னணியில் தான் தமிழ்த் தேசியம் கட்டுரை எழுதப்பட்டது. அதில் மேலே குறிப்பிட்ட அனைத்துத் துறைகள் பற்றிய அலசல் இடம்பெறவில்லை. அரசியல் அரங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கே முதன்மை தரப்பட்டது. கூறப்பட்ட செய்திகள் அனைத்திலும் பலரது உள்ளத்தைத் தைத்தது பெரியார் மார்வாரிகளுடன் மறைமுக உறவு வைத்திருந்தார், பணம் பெற்றார் என்பது தான். எமது இயக்கத்தின் நிலைபாட்டை அறிந்தவர்களில் பலர், ″நீங்கள் பெரியாரைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மறுபார்வைக்கு உட்படுத்தினால் நாங்கள் உங்கள் இயக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம்″ என்கின்றனர். ஆனால் அவ்வாறு மாற்றிக்கொள்வதற்கு எந்த அடிப்படையும் இல்லாத நிலையில் என்னதான் செய்வது? உண்மையில் அவர் மீதுள்ள ஐயப்பாடுகள் வலுப்பெறுவதற்கான சான்றுகள்தாம் நமக்குக் கிடைக்கின்றனவே அன்றி வேறில்லை. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறலாம்.

1. சில ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ″மானமிகு″ கி.வீரமணி மீது செயலலிதாவிடம் ஐந்து இலக்கம் உரூபாய் நன்கொடை பெற்றார் என்று அவரது எதிராளிகள் குற்றம் சாட்டியபோது ″ஐயா″வே ஆச்சாரியாரிடம் (இராசாசி) பணம் வாங்கிய உண்மையை வெளியிட்டுத் துண்டறிக்கையாக அது வெளிவந்தது. எனவே தான் வாங்கியதில் தவறில்லை என்றார் அவர். இதன் பின்னணி என்னவென்றால் இந்தியா ″விடுதலை″ பெற்று குடியரசான போது அதுவரை இந்தியாவின் முதலும் இறுதியுமான தலைமை ஆளுநராகப் பணியாற்றிய ஆச்சாரியாரை அகற்றிவிட்டு இராசேந்திரப் பிரசாத்தை முதல் குடியரசுத் தலைவராக்க வடவர்கள் முனைந்தனர். இதனை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டு திரைப்பட முதலாளியும் ஆனந்த விகடன் உரிமையாளருமான எசு.எசு.வாசன் மூலம் உரு 5000-கொடுத்தனுப்பினாராம் ஆச்சாரியார். பணத்தை வாங்கிக்கொண்டாராம் பெரியார். ஆனால் ஆச்சாரியார் கேட்டுக்கொண்டவாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றிப் பிறர் கேட்டபோது, ″கொடுத்தார், வாங்கிக் கொண்டேன்; வேறென்ன செய்ய?″ என்றாராம். ஆக, எவர் பணம் கொடுத்தாலும் அவரால் மறுக்க முடிவதில்லை, பணம் கொடுத்தவர் வெளி உலகுக்குத் தன் அரசியல் எதிரி என்று அவரால் பறைசாற்றப்பட்ட ஆச்சாரியாராயிருந்தாலும் சரி. பணத்துக்கு கைம்மாறாகத் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட பணியைத் தான் செய்யப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும் (பணம் வாங்குவது நேர்மையற்றது என்பது இன்னொரு புறம்). அவரிடம் இருந்தது, சிறப்பானதென்று பலரால் போற்றப்படும் சிக்கனமல்ல, அதைப் பல படிகள் தாண்டிய பணத்தாசை என்பதே இதன் பொருள். இத்தகைய மனமெலிவுக்குள்ளான ஒருவர் எவ்வாறு நேர்மையான அரசியல் அல்லது கடுமையான குமுகியல் இயக்கம் நடத்த முடியும்?

2. பெரியாரின் கடவுள் மறுப்பு உலகறிந்தது. அத்துடன் தமிழகத்திலுள்ள மடங்கள், குறிப்பாகச் சிவனிய மடங்களின் தலைவர்களின் அட்டூழியங்களும் கோயில்களில் நடைபெற்ற அட்டூழியங்களும் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தன. இந்த நிலையில் பார்ப்பனர்களுக்குப் புகலிடங்களாகவும் உள்ள இந்தக் கோயில்களின் நிலங்களை உழவர்களுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்றும் கோயில்களையும் கோபுரங்களையும் வெடிவைத்துத் தகர்த்தும் தேர்களுக்குத் தீயிட்டும் அழிக்க வேண்டுமென்றும் தொண்டர்கள் குமுறிக் கொண்டிருந்தனர். ஆனால் பெரியார் ஆரிய - திராவிடக் கோட்பாட்டை வைத்து அம்மடங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார், பணம் தருமாறு வெளிப்படையாகவே கேட்டார். அத்துடன் மடத்தொடர்புடைய அடியார்களைத் தன் இயக்கத்தில் சேரத் தூண்டுமாறும் வேண்டிக் கொண்டார். பல இலக்கம் கோடி உரூபாய் மதிப்புடைய கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பளித்த பெரியாருக்கு அவர் கேட்ட பணத்தை மடத்தலைவர்கள் வழங்கியிருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். இங்கு மடத்தலைவர்களை ஒருவகையில் மிரட்டிப் பணத்தை வெளிப்படையாகவே கேட்கும் உத்தியைப் பார்க்கிறோம்.[1]

3. கிறித்துவத்துக்கும் முகமதியத்துக்கும் முகவராக வீரமணி செயற்பட்டார் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரே அதைச் செய்துள்ளார். இறைமறுப்பென்பதைப் பெரிய அளவில் செய்துவந்த பெரியார் பிற மதங்களுக்கு மட்டும் பரிந்துரை செய்தது ஏன்? எனக்கு தெரிந்த, காவல் துறையில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்ற ஒருவரது இரங்கத்தக்க கதை இது. முக்குலத்தோர் மரபைச் சேர்ந்த இவர் பெரியாரின் மேடைப்பேச்சைக் கேட்டுத் தன் துனைவியாருடன் முகம்மதியத்தைத் தழுவினாராம். ஒய்வு பெற்ற பின்னர் தான் தங்கியிருந்த இடத்தில் உள்ள சமாத் சபையினர் அவர் தவறாது தொழுகைகளில் பங்குகொள்ளவில்லையென்றால் அவர் இறக்கும் போது பிணத்தைப் பள்ளிவாசல் இடுகாட்டில் புதைக்கவிடமாட்டோம் என்று மிரட்டுவதாகக் கூறிக் கண்ணீர் விட்டு அழுதது இன்றும் மனக்கண்ணில் தெரிகிறது. கிறித்துவர்கள் தி.க.கூட்டங்களுக்குச் சென்று ஆதரித்து ஆரவாரம் செய்தது தெரிந்ததே. மதமாற்றிகள் பணத்துடன் அலைவதைப் பார்க்கும் போது பெரியாரின் இச்செயலிலும் நமக்கு ஐயம் ஏற்படுகிறது.


பெரியாரின் வேறு சில முரண்பாடுகள்:

1. இந்து சமயத்தை எதிர்த்துக் கொண்டே இந்து சமயக் கோயிலொன்றின் தாளாளராக இருந்தது.

2. நான் சிந்தனைகளைத் தருவேன், செயற்பட வேண்டியது மக்கள் பொறுப்பு என்று கூறிக்கொண்டு அதே வேளையில் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் மட்டும் இறங்கியது. தன் சிந்தனைகளைச் செயலாக்க மக்கள் எவ்வகைகளில் செயலாற்ற வேண்டும் என்ற அறிவுரை கூடக் கூறாமல் இருந்தது.

3. தேர்தலில் நிற்பதில்லை என்று கூறிக்கொண்டே பிற கட்சிகளுக்காகத் தேர்தல் பரப்பல்களில் இறுதிவரை ஈடுபட்டது.

4. இவையனைத்துக்கும் மேலாக ஓர் உண்மை நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. திராவிடர் கழகத்தின் கொடி கறுப்புப் பின்னணியில் சிவப்பு வட்டமாகும். இதனோடு ஒப்பிடும் வகையில் அமைந்தது இத்தாலிய முசோலியின் பாசியக் கட்சியின் கொடி. அது சிவப்புப் பின்னணியில் கருப்பு வட்டத்தைக் கொண்டிருந்தது. அத்துடன் பாசியக் கட்சியினர் கருஞ்சட்டை அணிந்திருந்தனர். அதே போல் இன்றும் தி.க.வினர் கருஞ்சட்டையாளர்களாகவே உள்ளனர். பாசியக் கட்சியின் கோட்பாடு வன்முறை மூலம் தங்கள் குமுகத்திலுள்ள தீங்குகளென்று தாங்கள் கருதுவனவற்றைத் தகர்த்து அழிப்பதாகும். பாசியக் கட்சியின் அதே தோற்றத்தில் அமைந்த ஒரு கட்சியின் கீழ் தலைவரின் ஆணைக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் எதையும் இழக்கத் தயங்காத ஒரு கருஞ்சட்டைப் படையைப் பெரியார் உருவாக்கினார். எந்நேரத்தில் அழைத்தாலும் சிறை செல்லவோ உயிரை இழக்கவோ ஆயத்தமான நிலையில் குடும்பப் பொறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு வருமாறு அவர் விடுத்த அழைப்பை நம்பி வந்த 3500 பேர் அடங்கிய தற்கொலைப்படையாக அது விளங்கியது. அத்தகைய படையை அவர் எப்போதுமே பயன்படுத்தவில்லை. அது ஏன்? எதற்காக இந்தப் படையை அவர் உருவாக்கினார் என்ற கேள்விகளுக்கு, ″அது தான் எங்களுக்கு விளங்கவில்லை ஐயா″ என்றுதான் இன்று வாழும் நேர்மையுள்ள மூத்த கருஞ்சட்டைப் படையினர் விடையிறுக்கின்றனர்.

நமக்கு எழும் ஐயம் என்னவென்றால் அவர் இந்த கருஞ்சட்டைப் படையை யார் யரையோ எதெதற்கோ எவ்வெப்போதோ மிரட்டிப் பணம் பறிக்கத்தான் பயன்படுத்தியிருப்பாரோ என்பதுதான்.

சிலர், அண்ணாத்துரை செய்த இரண்டகம்தான் அவரது திட்டங்களைத் தகர்த்துவிட்டது என்கின்றனர். ஆனால் இதை ஏற்பதற்கில்லை. ஏனென்றால் அண்ணாத்துரை பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகளை மறுத்து அவரது கட்சியினரை ஏற்றுக்கொள்ளவைத்துப் பிரித்து எடுத்துச்செல்லவில்லை. பெரியாரின் தனி வாழ்வில் அவர் மேற்கொண்ட ஒரு செயல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறைகூறி வெளியேறிச்சென்று, தனது கட்சி தி.க.வுடன் ஒரே கொள்கை கோட்பாடு கொண்ட ″இரட்டைக்குழல் துப்பாக்கி″ என்றுதான் கூறினார். அண்ணாத்துரை தொண்டர்களை ஏமாற்றுகிறார் என்று பெரியார் எண்ணியிருந்தால் தான் முன்வைத்த குறிக்கோளில் தன் உறுதியைக் கட்டிக்காத்து அண்ணாத்துரை கொள்கைகளைக் கைவிட முடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு கைவிட்டதால் கொள்ளைகள் கைவிடப்படுகின்றன என்று தி.மு.க.வுக்குள்ளிருந்து சம்பத் எதிர்க்குரல் கொடுத்தவுடன் கட்சியின் பெரும்பான்மைத் தொண்டர்கள் அவருடன் சேர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆனால் அவர் தொடங்கிய தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரைக் கேட்டதுமே பழையபடி தி.மு.க.வுக்குத் திரும்பிவிட்டனர். (அன்றைய நிலையில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்ற பொருள் தான் இருந்தது. இன்று கூட அதன் உண்மைப் பொருள் அரங்குகளுக்குள் தான் விளங்கிக் கொள்ளப்படுகிறதேயன்றி அக்கட்சி தோன்றி 38 ஆண்டுகளுக்குப் பின்னும் மக்கள் மன்றத்துக்கு எட்டவில்லை. அந்த அளவுக்குத் தான் நம் ″தமிழ்த் தேசிய விசைகள்″ செயற்படுகின்றன.) ஆனால் சம்பத் நடத்திய அந்தப் போராட்டத்தைப் பெரியார் வெளியிலிருந்து செய்திருந்தால் அத்தொண்டர்கள் அவரை நாடித் திரும்பியிருப்பார்கள். மாறாக பெரியார், அவரது குறிக்கோள்களில் முகாமையானது என்று இன்று பலர் பொய்யாக உரிமை கோரும் தமிழ்த் தேசிய உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடுவதற்கு மாறாக அக்குறிக்கோளுக்கு எதிரியாகிய காமராசருக்குத் தோள்கொடுத்தார். சம்பத்தையும் காமராசரிடத்தில் தள்ளி அழித்தார். எனவே அண்ணாத்துரையின் இரண்டகத்தால் பெரியார் ஆற்றலிழந்து போனார் என்பது தவறு. உண்மையில் கருஞ்சட்டைப் படையை அவர் உருவாக்கியது ஒரு மிரட்டல் ஆயுதமாக அதைப் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான். போராட்டங்கள் என்ற பெயரில் அவர் என்னென்ன போராட்டங்களை அறிவித்தார், அவற்றில் எவ்வெவற்றை நடத்தினார், எந்த நிலையில் முடித்தார் என்பவற்றை நுணுகி ஆய்ந்தால் அந்த மிரட்டல்களின் குறி பணமா இல்லையா என்பதை நம்மால் இனங்காண முடியும்.

5. பெரியாரிடம் வெளிப்படுகிற இன்னொரு முகாமையான முரண்பாடு குடியரசு முதல் இதழ் பற்றியது. பகுத்தறிவுப் பகலவன் என்று அறியப்படும் அவர் தொடங்கிய இந்த இதழின் முதல் வெளியீட்டில் கடவுள் அருளை வேண்டி எழுதியிருக்கிறார் பெரியார்; தன் பெயருடன் நாயக்கர் என்ற சாதி அடைமொழியைச் சேர்த்திருந்தார்; வருணங்களைக் காக்க வேண்டுமென்று கூறும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆனால் அடுத்த இதழிலிருந்து ஒரு மாற்றம். கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்றவை. இந்தச் சிந்தனை மாற்றத்துக்காக நாம் அவரைக் குற்றம் கூறத் தேவையில்லை. தான் நெடுநாள் நம்பி வந்த ஒரு கருத்தைத் தன் நேரடிப் பட்டறிவு காரணமாகவோ உள்ளத்திலே தோன்றிய புதிய சிந்தனைகளினாலோ வேறொருவரின் அறிவுரையாலோ ஒருவர் மாற்றிக்கொள்வது புதிதுமல்ல, தவறுமல்ல. ஆனால் இந்த மாற்றத்தின் நோக்கம் நேர்மையானதுதானா என்பது தான் கேள்வி. நான் இதுவரை விளக்கியவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் விடை ′இல்லை′ என்பது தான்.

இந்தப் பின்னணியில் பெரியாரின் வரலாற்றை ஒரு புதிய கோணத்தில் காண்போம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] திராவிட இயக்கமும் வெள்ளாளர்களும் என்ற ஆ.இரா.வெங்கடாசலபதியின் நூலில் பெரியாருக்கும் சிவனிய வெள்ளாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கும் பின் அவர்களுக்குள் உருவான இணக்கமும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன.

25.12.07

தமிழ்த் தேசியம் ... 17

மனந்திறந்து... 7

குமரிக் கண்ட வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஓர் அமைப்பு தேவை என்று கருதினேன். இன்று வரை குமரிக் கண்ட ஆய்வென்ற பெயரில் எத்தனையோ மாநாடுகள், கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவை அனைத்தும் மேலை நாட்டு அறிஞர்கள் இலெமுரியாக் கண்டம் பற்றிக் கூறிய செய்திகளின் தொகுப்பாகவே அமைந்துள்ளன. கட்டுரையாளரின் வரிசை மாறும் அவ்வளவு தான். இத்துறையில் பலர் நேரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பேரா. இரா. மதிவாணன் அவர்கள் தமிழர் பண்பாடு பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டதால் அவரது ஆய்வு எல்லையும் சுருங்கிக் கிடக்கிறது. ப-ர். நா.மகாலிங்கத்தின் முடிவுகள் உண்மையை நெருங்கி வருவன போல் தோன்றினாலும் அவர் சில எல்லைகளையும் முன்முடிவுகளையும் அரசியல் பாதிப்புகளையும் மீறத் துணிவற்றிருக்கிறார்; வெறும் கணிய(சோதிட) அடிப்படையில் காலக் கணிப்புகளைக் கூறி முகஞ்சுளிக்க வைக்கிறார். ப-ர்.க.ப. அறிவாணன் ஆப்பிரிக்காவில் தான் பணியாற்றிய போது திரட்டிய சில செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தான் குமரிக் கண்ட ஆய்வில் பெரும் பங்காற்றியது போல் பாய்ச்சல் காட்டுகிறார். செங்கம் கு.வெங்கடாசலம் அவர்கள் மோகஞ்சதாரோ, அரப்பா ஆகிய இடங்களில் கிடைத்துள்ள நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளை வைத்து இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட அளவைகள் தாம் அவை எனவும் இதே அளவைகள்தாம் உலகெங்கும் பரவியுள்ளன என்றும் நிறுவியுள்ளார். பேரா. இரா. மதிவாணன் சிந்து சமவெளிக் குறியீடுகள் தமிழ் எழுத்துகள் தாம் என்று அண்மையில் நிறுவியிருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம் குமரிக் கண்டத்திலிருந்து சென்றதுதான், சிலர் கூறுவது போல் சிந்து சமவெளி மக்கள் தமிழகத்தில் வந்து குடியேறவில்லை என்பவற்றை நிறுவவேண்டியிருக்கும். எசு.ஆர்.ராவ் எனும் முன்னாள் இந்தியத் தொல்பொருளாய்வுத் துறைத் தலைவர் கூறியது போல் சிந்து சமவெளிக் குறியீடுகளிலிருந்துதான் வேதங்களும் தொன்மங்களும் சமற்கிருத மொழியும் தோன்றின என்ற கருத்தை எதிர்கொள்ளவும் நாம் அணியமாக வேண்டும். இதற்கு ஆரிய ″இனக்″ கோட்பாடும் சமற்கிருதம் அவர்களின் மொழி என்ற கருத்தும் தடையாக நிற்கின்றன. மாறாக தமிழ் → சிந்து சமவெளிக் குறியீடுகள் → வேதமொழி → சமற்கிருதம் + தொன்மங்கள் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால், அதாவது நாம் கூறுவதையும் எசு.ஆர்.ராவ் கூறுவதையும் இணைந்தால் பல கேள்விகளுக்கு எளிதில் விடை காணலாம். இராமன், வாலி, இராவணன், மயன், கண்ணன், இந்திரன், வருணன் என்று எண்ணற்ற தொன்ம மனிதர்களின் வரலாறுகளையும் வாழ்நாளையும் கூடத் துல்லியமாக மதிப்பிடும் திசையில் நம்மால் முன்னேற முடியும்.

குமரிக் கண்டக் கோட்பாட்டை உறுதிசெய்ய வேண்டுமாயின் இந்து மாக்கடலை அகழ்வாய வேண்டுமென்று அனைவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். ஒருவகையில் இது வல்லரசுகளின் குரல். இந்துமாக்கடலில் என்னென்ன கனிமங்கள், தனிமங்கள் கிடைக்கும், எவ்வெவற்றைக் கொள்ளையடிக்கலாம் என்பவைதாம் அவற்றின் நோக்கம். உலகப் புவியியல் ஆண்டு என்ற பெயரில் அவை இந்து மாக்கடலை ஆய்ந்ததிலும் குமரிக் கண்டம் பற்றி நூல்களை எழுதியதிலும் இந்த நோக்கம் உண்டு. இருந்தாலும் இந்த ஆய்வின் போது உண்மையாகவே குமரிக் கண்ட நாகரிகத்தின் தடயங்கள் எவையாவது கிடைத்துவிட்டால் தமிழர்களின் தன்னம்பிக்கை உயர்ந்து விடுமோ என்ற தயக்கத்தில் தான் நாள்கடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் உளவியல் தாக்குதல்களால் அவர்கள் முழுமையாகச் சொரணையற்றுப் போன பின் அவர்கள் தங்கள் ″ஆய்வுகளை″த் தொடரக் கூடும். சுரணையறச் செய்யும் பணி முழுமூச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

குமரிக் கண்டக் கோட்பாடே புவியியல் சார்ந்த ஒன்று என்ற உணர்வு தான் தமிழக ஆய்வாளர்களிடம் உள்ளது. அது, ஒரு மக்கள் விலங்கு நிலையிலிருந்து படிப்படியாக மேம்பட்டு உலகில் இணையில்லாத ஒரு நாகரிகத்தையும் வரலாற்றையும் படைத்து ஒன்றன் பின்னொன்றாக நிகழ்ந்த கண்டப் பெயர்ச்சிகள், கடற்கோள்களின் ஊடாக வளர்ச்சிகளாகவும் தளர்ச்சிகளாகவும் நிகழ்ந்த தொடர்நிகழ்ச்சிகளைத் தடம்பிடிக்கும் ஆய்வு என்ற எண்ணம் எவருக்குமே இல்லை. இந்த வரலாறுகளை முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து நாலா திசைகளிலும் பெயர்ந்து சென்ற மக்களின் வழியினராக உலக நாடுகளில் வாழும் அனைத்து மக்களிடமும் தடம்பிடிக்க முடியும், தடம்பிடிக்க வேண்டும்; இந்த ஒட்டுமொத்த ஆய்வில் அகழ்வாய்வுக்கு மிகச் சிறிய பங்கு தான் உண்டு என்ற எண்ணமும் எவருக்கும் எழவில்லை. இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனடிப்படையில் புதிய ஆய்வுகளை ஊக்கவும் உருவாக்கப்பட்டது தான் குமரிக் கண்ட ஆய்வுக் கழகம். அதன் தோற்றத்தில் பேரா.தே.லூர்து, பேரா.வே.மாணிக்கம், திரு.சு.முத்துசாமி, வைகை குமாரசாமி ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பு நல்கினர். ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கு. வெங்கடாசலம் அவர்கள் சிந்துவெளி நாகரிகம் பற்றிய கண்காட்சி ஒன்றையும் அமைத்திருந்தார். தொடர்ச்சியாகக் கருத்தரங்குகள் நடத்துவதற்காக 75 தலைப்புகளடங்கிய ஒரு பட்டியலும் வெளியிடப்பட்டு ஏற்கனவே குமரிக் கண்ட ஆய்வில் ஆர்வமுள்ளவர்களென்று அறியப்பட்ட அறிஞர்களுக்கு விடப்பட்டிருந்தது. கருத்தரங்குளில் தமிழகத்திலுள்ள தொழில்முனைவோர், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தோர் ஆகியவர்களின் பொருட்காட்சிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அறிஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தேவையான ஆள்வலிமையும் பொருளியல் வலிமையும் கிட்டாததாலும் இந்த முயற்சி முடங்கிப்போனது.

தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம், குமரிக் கண்ட ஆய்வுக் கழகம் போன்றவற்றை அமைத்ததில் ஆய்வு நோக்கம் தவிர வேறோரு முகாமையான நோக்கமும் இருந்தது. தமிழகக் குமுகத்தைப் பற்றிய கவலையும் செயலார்வமும் உள்ளவர்களை ஓர் அரங்கினுள் இணைத்து தமிழக நலம் குறித்த ஓர் அரசியல் இயக்கத்துக்கு களம் அமைக்கலாம் என்பதே அது. அதாவது பழம் பெருமை பேசுவதற்காக இந்த ஆய்வுகளை நாம் சுருக்கிக்கொண்டால் நம் பண்டைப் பெருமையைப் புகழ்ந்து நம்மைச் சுரண்டுவோர் கூட அங்கு புகுந்துகொள்ள வாய்ப்புண்டு. நாமும் அந்தப் புகழிலேயே மகிழ்ந்து மயங்கிச் சோம்பிவிட வாய்ப்புண்டு. அந்தப் பெருமையை அறிந்து கொள்வது நம் எதிர்காலச் செயற்பாட்டுக்கு ஊக்கம் தந்து நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பது தான் என் திட்டம். ஆனால் இந்த முயற்சிகள் நம் படிப்பாளிகளின் பல்வேறு அடிப்படை இயலாமைகளையும் குறைபாடுகளையும் அவர்களது குறுகிய எல்லைகளையும் காட்டுவனவாகவே முடிந்தன.

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 16

மனந்திறந்து... 6

1986வாக்கில் பொள்ளாச்சி திரு நா.மகாலிங்கம் அவர்களால் திரு.சூ.மி. தயாசு என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தமிழர் பண்பாடு என்ற இதழுக்கு ″ஏற்றுமதிப் பொருளியல்″ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று விடுத்தேன். அது உலகத் தமிழர் என்ற இதழில் வெளிவந்தது. அதே கட்டுரையை விரித்து நலிந்து வரும் நாட்டுப் புறம் என்ற தலைப்பில் எழுதி விடுத்தேன். அது தமிழர் பண்பாடு இதழில் தொடராக வெளிவந்தது. அதை என் சொந்தச் செலவில் நூலாக்கி த.ம.பொ.உ.க. தொடக்க விழாவில் வைத்தேன். இன்றும் அது படிப்போரின் பாராட்டுக்குரியதாக உள்ளது.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு தொடக்கத்தில் தோழர் ஓவியா என்னைத் தொடர்பு கொண்டார். அவரை 1980களின் தொடக்கத்திலிருந்தே எனக்குத் தெரியும். அப்போது அவர் தன் அன்றாடப் பாட்டுக்காகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் பெண்ணுரிமை எனும் குறிக்கோளில் முனைப்பான ஈடுபாடும் செயற்பாடும் கொண்டிருந்தார். பெண்களின் சிக்கலை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்துப் பார்ப்பதில் பயனில்லை என்று நான் அப்போது அவருக்கு எடுத்துரைத்தேன். இந்த நிலையில் அரசுப் பணி பெற்று நாகர்கோவிலிருந்து வந்து அவர் பாளையங்கோட்டையிலிருந்த என்னைச் சந்தித்தார். த.ம.பொ.உ.க. தேக்கநிலையில் இருந்ததை அறிந்து நாம் இணைந்து செயற்படலாம் என்றார். தனக்கும் தன் தோழர்களுக்கும் உலக வரலாறு பற்றி வகுப்புகள் நடத்த வேண்டுமென்றார். எனவே நான் வரலாறு பற்றி ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த செய்திகளோடு வேறு நூல்களையும் தேடிப் படித்து உலக வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டினேன். இது உலக வரலாற்றை நான் ஓரளவு அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஞாயிறு தோறும் தொடர்ச்சியாக சில மாதங்கள் வகுப்புகள் நடந்தன. ஓவியாவும் தோழர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அந்த நிலையில் த.ம.பொ.உ.க.வுக்கு ஒரு செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்ற அவர் தூண்டலினால் ஒரு செயல்திட்ட வரைவு எழுதி அதைத் தோழர்கள் முன் படித்து விளக்கினேன். அதை அவர் செலவிலேயே உருட்டச்சு செய்தார். மதுரையில் பல தோழர்களைக் கூட்டி செயல்திட்ட விளக்கம் ஒன்றும் நடைபெற்றது. பெரியாற்று அணைச் சிக்கல் பற்றியும் நெசவாளர்களின் சிக்கல் பற்றியும் எள் ஏற்றுமதி பற்றியும் நான் அச்சிட்டு வழங்கிய துண்டறிக்கைகளைப் பரப்பியும் பெரியாற்று அணைச் சிக்கலை ஊர்ப்புறத்து உழவர்களிடம் எடுத்துக் செல்லும் களப்பணியிலும் இளம் தோழர்கள் ஊக்கமுடன் செயற்பட்டனர். மதுரையில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வகுப்புகளின் போது பெரியாரைப் பற்றிய சில கேள்விகளை நான் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அது தோழர் ஓவியாவுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் அது எவ்வளவு ஆழமானது என்பதை அப்போது நான் உணரவில்லை. இந்தக் கட்டத்தில் தான் வி.பி.சிங் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடுவணரசு ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, பா.ச.க.வினர் மாணவர்களைத் திரட்டி அதற்கு எதிராகத் கிளர்ச்சிகள் நடைபெற்றன. இந்தச் சிக்கலில் ஒரு முடிவு தெரியும் வரை தன்னால் த.ம.பொ.உ.க. செயற்பாடுகளில் பங்கேற்க இயலாது என்று தோழர் ஓவியா கூறிவிட்டார். மீண்டும் அவர் தொடர்பு கொள்ளவே இல்லை. மதுரையிலுள்ள இளம் தோழர்களைப் பலமுறை சென்று தொடர்பு கொண்ட போது அவர்களும் இயங்கவில்லை.

தோழர் ஒவியா நல்ல அறிவாற்றலுள்ளவர்; சிந்தனைத் தெளிவு மிக்கவர்; தான் நினைப்பதை எந்த ஒளிவும் மறைவுமின்றி அஞ்சாது எடுத்துரைக்கும் இயல்புடையவர்; தனது குறிக்கோளில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்பவர்; தனது கருத்துகளைச் சரியான சொற்களில் எடுத்துரைக்கும் சொல்லாற்றலும் சொற்பொழிவாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர்; செயலாற்றலிலும் சிறந்தவர்; நல்ல ஆள்வினைத் திறனும் ஆளுமைச் சிறப்பும் உள்ளவர்; நானறிந்த வரை அவர் நோர்மையானவர் என்பதே என் கணிப்பு. அத்தகைய தெளிவான சிந்தனையுடைவர் பெரியாரைப் பற்றிய சிறு மாற்றுக் கருத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளாதவராக இருப்பதும் பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் சிந்திப்பவராயிருந்தும் பெரியாரைத் தாண்டி எவரும் சிந்திக்க முடியாது என்று நம்புவதும் விந்தையே. மனிதர்களைப் பற்றிய எத்தனையோ விந்தைகளில் இதுவும் ஒன்று என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. இட ஒதுக்கீடு பற்றிய என் கருத்து, அதாவது அது சாதி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு ஒரு தற்காலிகத்தீர்வே, அதற்கு மாற்று வழிகளைக் காணாமல் அதையே பற்றிக் கொண்டிருப்பது தவறு என்பது, அவரை விலக்கியிருக்கும் என்று தோன்றவில்லை, ஏனென்றால் செயல்திட்டத்தில் கூறப்பட்டிருந்த கல்வித் திட்டத்தை அவர் மிகவும் பாராட்டினார். தொழிற்பயிற்சியோடியைந்ததாகவும் கல்வி, வேலை, கல்வி, வேலை என்று படிப்படியாக உயர்கல்விக்கு மாறவும் வேண்டும் என்பதைச் சாதிகளின் அடிப்படையையே தகர்க்கும் ஓர் அருமையான திட்டம் என்று அவர் புகழ்ந்தார். பெரியாரைப் பற்றிய என் கருத்துகள்தாம் அவரை விலக்கின என்பது இறுதியில் தெளிவாகிறது. அவர் விலகிக் கொண்டது எமது இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவு என்று நான் கருதினாலும் சரி என்று நான் கருதும் ஒரு கருத்தை, அது தவறு என்று நான் கைவிடுவதற்குத் தகுந்த அடிப்படையின்றி என்னால் கைவிடவும் முடியாது.

தோழர் ஓவியா தனது பெண் விடுதலை இயக்கப் பணிகளைத் தொடர்ந்தார். நாகர்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநராக வசந்தகுமாரி என்ற பெண் அமர்த்தப்பட்டது அவரது நீடித்த உழைப்பின் வெற்றியாகும். ஆனால் அமர்த்தம் பெற்ற பெண் ஓவியாவுக்கு நன்றி கூறாமல் அப்போதைய முதலமைச்சர் செயலலிதாவுக்கு நன்றி கூறியது இவரது மனதில் வடுவேற்படுத்தியது. செயலலிதாவை வெறுப்பவர் அவர். கருணாநிநி திராவிட மரபின் ஒப்பற்ற வழித்தோன்றல் என்று அவர் கருதினார்(இன்று எப்படியோ?). இன்று எந்தச் செயற்பாடுமின்றி அவரது பெண் விடுதலை இயக்கம் தேங்கி நிற்கிறது.

பெண் விடுதலை என்ற கோணத்தில் மிக முனைப்பான கருத்துகளைப் பெரியார் கூறியுள்ளார். தாலி மறுப்பு போன்ற சில அடையாள நடவடிக்கைகளை இயக்கத் தோழர்களின் திருமணங்களில் செய்தும் உள்ளார். ஆனால் அவை வெறும் அடையாளங்களே. கட்சித் தோழர்களில் பெண் விடுதலையைப் பெரிதாக எடுத்துக் கொண்டவர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. உண்மையான பெண் விடுதலைக்குத் தேவையான பொருளியல் அடிப்படை பற்றி அவர் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை. திருமணம் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம். பிள்ளைகளைப் பெற்று மனிதன் என்ன கண்டான் என்ற சலிப்பாக அவரது பெண் விடுதலைக் கருத்து நின்றுவிட்டது. தேவதாசி முறை ஒழிப்பில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெண் விடுதலையை நோக்கி உண்மையாகவே நடைபோடுவோர் பார்ப்பனப் பெண்கள் தாம். பெண் கல்வி, பெண் வேலைக்குச் சென்று தன் காலில் நின்று நல்வாழ்வு வாழ்தல் என்று வளர்ந்துவருவோர் அவர்களே. இதற்காக இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் பார்ப்பனத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் போற்றத்தக்கன. நயன்மைக் கட்சி காலம் தொட்டு தங்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலால் சொத்துகளை விற்று நகர்ப்புறங்களுக்கு வந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் அரசிலும் தனியார் துறைகளிலும் ஆணும் பெண்ணும் பணியாற்றிப் பெண்களின் பொருளியல் தற்சார்பு வளர்ந்து நிற்பதும் அவர்களிடையே தான்.

ஆனால் அதற்கு எதிராக நிற்பது பார்ப்பனர்களிடம் இறுகிக் கிடக்கும் பார்ப்பன - வெள்ளாளப் பண்பாடு. அதனைத் தகர்த்து முன்னேறுவதற்குத் தடையாயிருப்பது பிற மக்களின் மீது இந்தப் பண்பாட்டு அடிப்படையில் தமக்கிருக்கும் ஆதிக்கம் தகர்ந்து விடுமோ என்ற அச்சம். இந்த முட்டுக்கட்டை நிலை மாற வேண்டுமாயின் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களும் தம் காலில் நிற்கும் பொருளியல் வளர்ச்சி பெற வேண்டும். ஊர்ப்புறங்கள் கலைந்து அனைவரும் கலந்து வாழும் புதிய குடியிருப்புகள் தோன்ற வேண்டும். இந்த நிகழ்முறை சிறிது சிறிதாக நடைபெற்றாலும் அது வளர்ச்சியின் விளைவானதல்ல. வேளாண்மை, மற்றும் ஊர்ப்புறத் தொழில்களின் வீழ்ச்சியால் நடைபெறுவதாகும். அதோடு இதற்கு எதிரான நடைமுறைகள் மிக முனைப்பாக நடந்தேறுகின்றன. ″திராவிட மரபின் ஒப்பற்ற வழித் தோன்றலான″ கருணாநிதி தொடங்கி வைத்து வளர்ந்து வரும் இலவய வீட்டுமனைப் பட்டாத் திட்டங்கள், நம் பொதுமைப் ″புரட்சியாளரின்″ மிகப்பெரும் ஒத்துழைப்புடன் நகரங்களில் பிற சாதி மக்களுடன் கலந்து வாழ்ந்த எத்தனையோ மக்களைச் சாதி வாரியாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தியுள்ளது. ″பெரியார் சமத்துவபுரக் குடியிருப்புகள்(எவ்வளவு பொருத்தமான பெயர்!) சாதி வாரியாகத் தொகுக்கப்பட்ட புதிய வீடுகளில் மக்களைக் குடியமர்த்தி கலைந்து வரும் ஊர்ப்புறங்களை மீட்டமைத்துள்ளது. தனியார் மனைப்பிரிவுகளில் வீடுகளமைத்து அனைவரும் கலந்து வாழும் நடைமுறையை முறியடிப்பதாகவும் இது உள்ளது. (இது திட்டமிடாமல் நடைபெறுகிறது என்று நம்புகிறீர்களா?) சாதி மீண்டும் இறுக்கமாவதற்கு வேறு துணைக்காரணி தேவையில்லை. சாதி இறுக்கமடையும் போது பெண்ணடிமைத்தனத்தின் கடுமையும் மிகும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் நடுத்தர மக்களிடையில் விரைந்து பரவி வேரூன்றி வரும் பார்ப்பன-வெள்ளாளப் பண்பாடு அவர்களிடமிருந்து நேரடியாகவும் திரைப்படம், இதழ்கள், தொலைக்காட்சிகள் மூலமாக அடித்தள மக்களிடையிலும் பரவி அங்கு ஏற்கனவே பெண்களுக்கு இருக்கும் ஒரே பெண்ணுரிமையாகிய மண விலக்கு - மறுமணம், கைம்பெண் மறுமணம் ஆகியவற்றையும் அடித்துத் தகர்த்து வருகிறது. நாட்டின் பொருளியல் நடவடிக்கைகளை அயலவர் கைகளில் ஒப்படைப்பதிலும் ″திராவிட மரபின் ஒப்பற்ற வழித் தோன்றலின்″ பங்கு சிறிதல்ல. ஆகவே இன்றைய நிலையில் அடிப்படை மக்களின் பொருளியல் அடித்தளம் வலிமை பெறுவதும் அதன் மூலம் பெண்களின் தற்சார்பு நிலை மேம்படுவதும் நினைத்துப்பார்க்க முடியாதவை. எனவே உண்மையான பெண் விடுதலை கைகூட வேண்டுமாயின் மக்களின் பொருளியல் உரிமைக்காகப் போராடுவது தவிர வேறு வழியில்லை.

இந்தக் கட்டத்தில் 1980 முதல் 85க்குள் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் பொன்னீலன் ஒருமுறை நெல்லை மாவட்டத்திலுள்ள ஓரிடத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் 3 வெவ்வேறிடங்களில் குடியேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் அதுவரை சார்ந்திருந்த சாதியல்லாத வேறு மூன்று சாதிகளாக வாழ்ந்துவருவதை எடுத்துக் கூறி சாதி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றார். நான் அதை அடிப்படையாகவும் எனக்குக் கிடைத்த வேறு சில தடயங்களையும் வைத்துப் பார்த்ததில் மக்களின் இடப்பெயர்ச்சியில் போர்கள் முகாமையான பங்கேற்றிருப்பதையும் அதில் சாதி மாற்றங்களும் புதிய சாதி உருவாக்கங்களும் நிகழ்ந்திருப்பதையும் உணர்ந்தேன். எனவே இந்த மாற்றங்களையும் உருவாக்கங்களையும் தடம்பிடித்தால் சாதி என்பது வெறும் மாயை என்பதுடன் அதன் பின்னணியிலுள்ள அரசியல் ஆதிக்கம் மற்றும் வன்முறைக் காரணிகளை வெளிப்படுத்தி மக்களுக்குக் காட்டலாம் என்ற நோக்கத்துடன் தமிழகச் சமூக வரலாறு-வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற நூலை எழுதினேன். இது ஒரு நீண்ட வினாப்பட்டியலைக் கொண்டது. இந்த வினாப்பட்டியலின் அடிப்படையில் கள ஆய்வு செய்வதற்காக தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் (தசவகம்) என்ற அமைப்பையும் உருவாக்கினேன். இந்த அமைப்பை உருவாக்குவதில் புலவர் கு.பச்சைமால் முதன்மைப் பங்கேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். திருவாளர்கள் சுடலை.செண்பகப்பெருமாள், ஆபிரகாம் லிங்கன், கேசவன் தம்பி ஆகியோர் நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். இருப்பினும், பல கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் பல்வேறு இயலாமைகள் காரணமாக கள ஆய்வு எதுவும் செய்ய இயலாமல் அந்த அமைப்பு முடங்கிப் போய்விட்டது. இந்த வினாப்படிவம் நூலை உருவாக்குவதில் அறிவுரைகள் கூறி உதவியதிலும் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடுவதிலும் பேரா.தே.லூர்து, பேரா.வே.மாணிக்கம், நண்பர் நா.இராமச்சந்திரன் ஆகியோர் உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர். குணாவும் தொடக்கத்தில் 12 பக்கங்களைக் கொண்ட ஒரு வினாப்பட்டியலை அச்சிட்டுத்தந்து ஊக்கினார். இறுதியில் இந்த வினாப்படிவங்கள், ″குமுகப் பணிக்காக″ மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டுவது என்ற பெயரில் கிறித்துவ நிறுவனங்கள் செய்திகளைத் திரட்டி அயல்நாடுகளுக்கு அளிப்பதற்குத்தான் பயன்பட்டன. இது போன்ற செய்தி திரட்டல், நூலாக்கல், பதிவு செய்தல் பணிகள் நம் நாட்டுக்கு எதிராகப் பயன்படாமல் நமக்கே பயன்பட வேண்டுமாயின் ஒரு வலுவான மக்களியக்கத்தின் பின்னணி தேவை என்பது எனக்குத் தெரிந்திருந்ததுதான். ஆனால் அதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகள்தாம் பயனற்றுக் கைநழுவிப் போய்க்கொண்டிருந்தனவே!


(தொடரும்)

21.12.07

தமிழ்த் தேசியம் ... 15

மனந்திறந்து... 5

இதற்கிடையில் மதுரையில் அன்று[1] வாழ்ந்திருந்த பெரியவர் திரு. பொன். திருஞானம் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு அவராகவே முன்வந்து திராவிட இயக்கத்தவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அஞ்சல் துறையில் பணிபுரியும் ஓர் இளைஞருடன் ஒரு நாள் பின்னிரவு முழுவதும் உரையாடினேன். பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தான் தன் குறிக்கோள் என்று அடித்துக் கூறிவிட்டார். இட ஒதுக்கீடு முடிவில்லாமல் சென்றால் அது தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்குமான பிளவைப் பகைமையாக மாற்றுமே, சாதி ஒழிப்புக்குத் தடையாகுமே, தமிழ்த் தேசியத்துக்கு எதிராகுமே. இட ஒதுக்கீட்டுக்கு ஒரு மாற்று வேண்டாமா? நிலையான ஒரு தீர்வுக்குப் போராட வேண்டாமா என்ற எந்தக் கேள்வியும் அவரது மனதில் உறைக்கவில்லை. பின்னர் ஒருமுறை பலரை ஒன்று திரட்டி மதுரை மாநகராட்சிப் பயணியர் விடுதியில் ஒரு சந்திப்புக்கும் திரு. திருஞானம் ஏற்பாடு செய்தார். அவர்களிலும் எவருமே எந்தச் செயற்பாட்டுக்கும் முன்வரவில்லை.

இந்தப் பட்டறிவுகளுக்குப் பின்னர் தான் நெல்லையில் திரு.பசல் ரகுமான் என்ற இராசா என்னும் தோழரின் ஊக்குவிப்பால் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் எனும் பெயர் கொண்ட இயக்கம் கருக்கொண்டது. இந்த ஊக்குவிப்பு என்பதற்கு மேல் அவரால் இயக்க வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க எதையும் செய்ய முடியவில்லை. மதுரைத் தோழர்களுடனான தொடர்பு தொடர்ந்தது. 1988ஆம் ஆண்டளவில் மதுரைத் தோழர்கள் இரா. செல்வரசு, பொன்.மாறன் ஆகியோரின் முயற்சியில் மதுரை விக்டோரியா அரங்கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. தலைமைக்கு அழைக்கப்பட்டிருந்த பூ.அர.குப்புசாமி அவர்கள் வராமையால் தோழர் பறம்பை அறிவன் தலைமை தாங்கினார். அதன் பின்னர் 1989 தொடக்கத்தில் என்று நினைவு, திருவரங்கத்தில் தமிழ் இயக்கங்களை இணைத்து தமிழ்த் தேசிய இயக்கம் தொடங்குவதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றுது. நான் மக்கள் பொருளியல் உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்தேன். அது எவர் கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை. அத்துடன் செயல்திட்டமாக அவர் உருவாக்கியிருந்த வரைவில் கோயில் சொத்துகளை உழவர்களிடமிருந்து ″மீட்க″ வேண்டுமென்றிருந்த திட்டம் தமிழ்த் தேசியத்தோடு எங்ஙனம் பொருந்துகிறது என்ற வினா என்னுள் எழுந்தது. இந்தக் கேள்வி கூட எவராலும் எழுப்பப்படவில்லை.

மதுரைத் தோழர் இரா.செல்வரசு திரு.நெடுமாறனோடு தொடர்புகொண்டு அவ்வவப்போது சந்தித்துவந்தார். பழனி அருகில் நடைபெற்ற த.தே.இ.மாநாட்டின்போதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். பின்னர் 1989இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதாகத் திட்டமிட்டுக் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரி எதிர்ப்பு போன்ற தேசியப் பொருளியல் கொள்கைகளைத் தேர்தலில் முன்வைக்க வேண்டுமென்று கருத்துக் கூறினேன். அதற்கும் எவரும் செவி சாய்க்கவில்லை. தேசியப் பொருளியல் சிக்கல்களைப் பற்றி திரு. நெடுமாறனிடம் நான் எடுத்துரைக்கும் போதெல்லாம் தனக்கு அதைப்பற்றி இன்னும் கூடுதலாகத் தெரியும் என்று புதிய செய்திகளைச் சொல்வாரே தவிர அவற்றின் அடிப்படையில் அவரது இயக்க அணுகல்களை அமைக்க அவர் எந்த முனைப்பும் காட்டவில்லை. தேர்தலில் சராசரி அரசியல் கட்சி போன்றே ஈடுபட்டார். கட்சி கடுமையான தோல்வியைத் தழுவியது. தேர்தலுக்குப் பின் தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்ய நான்கைந்து பேர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் கூட்டல் கழித்தல் கணக்கு தான் போடப்பட்டதே தவிர கொள்கைகளைப் பற்றிய அலசல் எதுவுமே நடைபெறவில்லை. எனவே தமிழ்த் தேசிய இயக்கத்தில் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் இணையாது என்று அறிவித்துவிட்டு அந்த உறவுக்கு ஒரு முடிவைக் கட்டினேன்.

இந்த இடத்தில் திரு.பழ. நெடுமாறன் அவர்களைப் பற்றி நான் அறிந்தவற்றைக் கூற வேண்டும்.

1989 தேர்தலுக்குப் பின் அவருடன் நடைபெற்ற கலந்தாய்வின் போது அவர் ஒரு செய்தியைக் கூறினார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் முனைப்பான ஈடுபாடு கொண்டிருந்தாராம். அப்போது ஒரு முறை அவரும் தி.மு.க. மீது ஈடுபாடுடைய வேறு மாணவர்களும் சேர்ந்து அண்ணாத்துரையைச் சந்தித்தனராம். அப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்களைப் போல திராவிட நாடு விடுதலைப் போருக்கு ஆயுதம் தாங்கிப் போராட தாங்களும் ஆயத்தமாகவும் ஆர்வமாகவும் உள்ளதாக அவர்கள் அண்ணாத்துரையிடம் கூறினராம். ஆனால் அண்ணாத்துரையோ, திராவிட நாட்டு விடுதலைக்காக ஒரேவொரு தோட்டாக்கூட சுடப்படாது, ஒரு சொட்டுக் குருதிகூடச் சிந்தப்படாது என்று கூறினாராம். இந்த அண்ணாத்துரை தான் ″ஓட்டு முறை, அது பயன் தரவில்லை எனில் வேட்டுமுறை″ என்று மேடைகளில் அடுக்கு மொழியில் ″வீர வச்சனம்″ பேசியவர் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் தான் போலும் சம்பத்துடன் நெடுமாறனும் பிரிந்து சென்றார். தனிக் கட்சி நடத்த இயலாத நிலையில் சிற்றப்பா பெரியாரின் அறிவுரை, பரிந்துரைகளுடன் பேரவைக் கட்சியில் காமராசரின் அரவணைப்பைப் பெற்ற சம்பத்துடன் பேரவைக் கட்சியினுள் போய்ச் சேர்ந்தார். ஆக மனதில் பதிந்திருந்த கொள்கைகள் கோட்பாடுகளுக்கு நேர் எதிரான ஓர் இயக்கத்தினுள் சென்று சேர்ந்தாயிற்று. இனி அவற்றுக்குப் பகரம் பதவி, அரசியல் செல்வாக்கு, பணம், புகழ் என்று நாட்டம் கொள்வது இயற்கை தானே!

அண்ணாத்துரையும் கருணாநிதியும் கட்சியினுள் கொள்கை, கோட்பாடு, நேர்மை, போன்ற ″கவைக்குதவாத″ கருத்துகளை வைத்திருப்போரை ஆங்காங்கே இனங்கண்டு அவ்வப்போதே அவர்களை ஒதுக்கி வைத்து நேரம் கிடைக்கும் போது கழித்துக்கட்டிவிடுவர். இதைச் செயலாக்கியவர் களப்பணியில் கைதேர்ந்த கருணாநிதிதான். அண்ணாத்துரை களங்கமில்லாத் தூயவர் போன்று இருப்பார்.

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினிலாயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தாரையும் கருவறுக்கும்

சம்பத்தோடு தி.மு.க.விலிருந்து வெளியேறியவுடன் கண்ணதாசன் அண்ணாத்துரையை மனதில் வைத்து தாய்சொல்லைத் தட்டாதே திரைப்படத்துக்காக எழுதிய ஒரு பாடலில் உள்ள சில வரிகள் இவை.

அண்ணாத்துரையுடன் சேர்ந்து நடத்திய இந்தக் கருவறுக்கும் சொல்லுக்கான முழுப்பழியையும் கருணாநிதி தாங்கிக் கொண்டார். ஆனால் அதற்குரிய பலன்களை இரண்டு தலைமுறைகளாக அறுவடை செய்திருக்கிறாரே! ஒரு தேனீரைப் பங்கு போட்டுக் கண்ணதாசனுடன் குடித்தவர் 60 ஆண்டுகளில் ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியலில் இடம் பெறும் அளவுக்குப் பயனடைந்திருக்கிறாரே! ஆனால் பாருங்கள் தமிழக அரசியலில் புதிதாக, நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் உள்ள ஒரேயொரு ஆள்கூடத் தலையெடுக்க முடியாமல் தமிழகம் பாழ் நிலமாக, பாலைநிலமாகப் போய்விட்டதே!

இனி நெடுமாறனுக்கு வருவோம். மதுரையில் தி.மு.க.வின் தொடக்க நாட்களில் பேரவைக் கட்சியினரின் அடியாட்களை எதிர்கொண்டு தன் கீழும் ஓர் அடியாள் கும்பலை வைத்து கழகத்தை வளர்த்தவர் மதுரை முத்து; அதே மதுரையில் அது போலவே அடியாட்களைக் கொண்டு மதுரை முத்துவை எதிர்த்து பேரவைக் கட்சியை மீட்டவர் நெடுமாறன் என்று மதுரை நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அத்துடன் நெருக்கடி நிலைக் காலத்தில் தி.மு.க.வினர் மீது இந்திரா காந்தி நிகழ்த்திய அடக்குமுறை வெறியாட்டத்துக்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் வகையில் 1977 தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட இந்திரா மதுரையில் கலந்துகொண்ட ஊர்வலத்தில் அவரைத் தாக்கத் திட்டமிட்டனர் தி.மு.க.வினர். ஊர்வலத்தின் போது அவருடன் சென்ற நெடுமாறன் தி.மு.க.வினர் வீசிய கல்லடிகளைத் தான் தாங்கிக் கொண்டார். இதனாலெல்லாம் அவர் மாவீரன் என்ற பட்டம் பெற்றார். விருப்பம் போல் கண்டவர்க்கெல்லாம் பட்டங்கள் வழங்கும் வள்ளன்மையில் தமிழர்களை மிஞ்ச உலகில் எவருமே இல்லை.

ஆனால் இந்திராவின் இறுதிக் காலத்தில் தமிழ்நாடு பேரவைக் கட்சித் குழுத் தலைவராக இருந்த இவரை ஒதுக்கிவிட்டு கருப்பையா மூப்பனாரை இந்திரா அமர்த்திய போது வெறுப்படைந்து வெளியேறி தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். இதே காரணத்துக்காக குமரி அனந்தனும் காந்தி - காமராசு காங்கிரசு என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.

இந்தச் சூழலில 1983 இல் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர் மனித வரலாற்றையே இழிவுபடுத்தும் வகையில் கொடுமைகள் புரிந்தனர். தமிழக மக்கள் யாருடைய முன்முயற்சியும் வழிகாட்டலும் தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த பின்தான் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாகக் களம் புகுந்தன. அந்த வகையில் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.)வின் துணையுடன் பழ.நெடுமாறன் இராமர் உருத்தாங்கி கையில் வில்லும் அம்பும் தலையில் மணிமுடியுடனும் படகில் ஏறிச் செல்ல ஒரு படகுகளின் அணி இராமேசுவரத்திலிருந்து இலங்கை நோக்கிச் செல்வதாகப் புறப்பட்டது. வழக்கம் போல் காவல் துறையினர் தளையிட்டுப் பின்னர் விடுவித்தனர். அன்றிலிருந்து அவரது ″தமிழ்த் தேசிய″ப் பயணம் மீண்டும் தொடங்கியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இந்தியாவினுள் தம் பேச்சாளராக அவரை ஈர்த்துக்கொண்டனர்.

புலிகளுக்குப் பணி செய்யப் போகிறவர்களின் பாடு கொஞ்சம் சிக்கல் தான், புலிமீது ஏறியவனின் நிலை தான். அப்படியொன்றும் எளிதாகக் கீழே இறங்கிவிட முடியாது. அந்தச் சிக்கல் தான் அவரை இன்றுவரை அங்கு நிறுத்திவைத்துள்ளது என்று கருதுகிறேன்.

புலிகளின் இயல்பு அத்தகையது. அது தவிர்க்க முடியாதது. போர்க்களத்தில் இருப்பவன், அதிலும் உலகம் முழுவதுமே எதிரிகளாகப் படிப்படியாக மாறிக்கொண்டிருந்த சூழலில், எந்த நண்பன் எப்போது பகையாவான் என்று கணிக்க முடியாத உலகில் அதிலும் ″நட்பும் பகையும் நிலையானவையல்ல″ என்பதைப் பெருமைக்குரிய கொள்கையாக நாள்தோறும் அறிவித்துக்கொண்டிருக்கும் அரசியல் களத்தில் நட்பு, பகை, நன்றி போன்ற உணர்வுகளுக்கு இடமில்லை. இலக்கு நோக்கி முன்னேறுவது ஒன்று தான் நிலையானது. இந்த ஒரே இடத்தில் தான் கண்ணன் அருச்சுனனுக்குக் கூறியதாக வரும் அறிவுரைகளின் அந்தப் பகுதி நடப்பில் தவிர்க்க முடியாததாகிறது. அந்தப் பாணியைக் கைக்கொள்வதால்தான் இன்று விடுதலைப் புலிகளால் களத்தில் நின்றுகொண்டிருக்க முடிகிறது.

தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களை வைத்துத் தமிழக அரசியல்வாணர்கள், குறிப்பாகத் திராவிட மற்றும் தமிழ் இயக்கத் தலைவர்கள் பெயரையும் புகழையும் அரசியல் செல்வாக்கையும் வளர்த்துவந்துள்ளனர். சென்ற(20ஆம்)நூற்றாண்டில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போரட்டம் வெடித்து எண்ணற்றோர் புலம் பெயர்ந்து சென்ற போது இத்தலைவர்களுக்கும் ″அறிஞர்″களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு பெரும் சந்தையாகிவிட்டனர். அத்துடன் ஆங்கிலராட்சிக் காலங்களில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்று அங்கு தமிழ் மொழியையும் பண்பாட்டையும் மறந்துவிட்ட தலைமுறைகள் உருவான நிலையில் அந்நாடுகள் அரசியல் விடுதலை பெற்றன. உள்நாட்டு மக்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கத் தொடங்கினர். இதை எதிர்த்து நிற்பதற்கு அவர்களை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள் தேவைப்பட்டன. அவை தாம் மொழியும் பண்பாடும். அதற்காக அவர்கள் தமிழகத்தை நோக்கினர். தமிழையும் தமிழர்களையும் வாழவைப்போம் என்று அரியணை ஏறியவர்கள் எதையும் செய்யவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பெரும் தமிழறிஞர் திருக்கூட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளுக்குப் படையெடுத்தது. நல்ல வேட்டை, நல்ல தேட்டை.. காலஞ்சென்ற தமிழ்க்குடிமகள், வாழும் வா.மு.சேதுராமன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். காலமுறையில் சென்று வந்தனர், வருகின்றனர். தாளிகைகள் என்று எடுத்துக்கொண்டால் காலச்சுவடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதனுடைய களம் ஈழத்தமிழர்களே. அதிலும் பார்ப்பன - மலையாள மனப்பான்மையுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, இன்னும் பழைய சாதிய மேலாண்மை மனப்பான்மை மாறாமலிருக்கும் புலம் பெயர்ந்த மேட்டுக்குடி ஈழத் தமிழர்களின் கருத்துகளை அது நஞ்சாகப் பரப்பி வருகிறது.

தமிழகத் திரையுலகின் இன்றைய தரங்கெட்ட திரைப்படங்கள் பெரும் வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கில் முதலீட்டில் படங்கள் எடுக்க முடிகிறதென்றால் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் புலம் பெயர்ந்த தமிழர்களின் தேவையை ஓரளவுக்காவது அவை நிறைவு செய்வதால்தான். இத்தகைய சூழலில் தான் நெடுமாறனின் செல்வாக்கு உலகத் தமழிர்களின் தனிப்பெரும் தலைவர் என்னுமளவுக்கு வளர்ந்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தேவை அவர்களை ஒன்றிணைக்கும் அடையாளங்களாகிய மொழியும் பண்பாடும். ஆனால் அதே வாய்ப்பாடு தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருந்தாது. இங்கு அவர்களுக்குத் தாய்மொழி - பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் இல்லை. பொருளியல் திரிபுகளால், திராவிட இயக்கம் கொடுத்த ஒதுக்கீட்டு ″அமுதக் கரைசலை″ உண்டதால், நிலத்திலிருந்தும் அது தரும் செல்வத்திலிருந்தும் கவனம் திருப்பப்பட்டு நாட்டை விட்டோடத் துடிக்கும் துடிப்பால் தாய் மொழியை வெறுத்து அயல் மொழிகளில் எழுதவும் சிறப்பாகப் பேசவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமுறையினர். அவர்களுக்கு நாம் நம் நிலத்தின் மீதும் அதன் வளங்கள் மீதும் நம் ஆற்றல்கள் மீதும் ஈடுபாட்டை உருவாக்கி அந்த வளங்கள் நமக்கு மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராட அவர்களை ஆயத்தப்படுத்துவது தான் தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருத்தமான உத்தி. அதற்குப் பகரம் விதிவிலக்கின்றி அனைவரும் மொழி, பண்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை முன்னிலைப்படுத்திக் கவனத்தைத் திருப்புகிறார்கள். காரணத்தை மறைத்து வினைவை முன்னிலைப் படுத்துகின்றனர். நச்சு மரத்தின் வேரை வெட்டியெறிவதற்குப் பகரம் கிளைகளை வெட்டினால் போதுமென்று ஒன்றுகூடிப் பெருங் கூச்சல் போடுகிறார்கள்.

இவர்கள் இதைச் செய்வதற்கு உள்நோக்கங்கள் உண்டு. காமராசர் வாழ்ந்த போது தன் காலத்துக்குப் பிறகும் நெடுமாறன் குமரிஅனந்தன் போன்றோருக்கு மாதந்தோறும் பணம் கொடுக்குமாறு மார்வாரிகளிடம் ஏற்பாடு செய்திருந்தார் என்றொரு செய்தி உண்டு. அதை அவர்கள் நிறுத்த முயன்றால், மார்வாரி கடைகளுக்கு முன்னால் மறியல் போன்ற போராட்டங்களை அறிவித்து அவர்களை வழிக்குக் கொண்டுவருவர்.

எனவே உள்நாட்டுத் தமிழர்களின் மீட்சிக்கு நெடுமாறன். உதவமாட்டார் என்பது உறுதி. வைக்கோவின் கதையும் அது தான். என்று தில்லி பாராளுமன்றம் போனாரோ அன்றே அவர் மார்வாரிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டார். எனவே தமிழக மக்கள் நிலம் சார்ந்த பொருளியல் வளர்ச்சி சார்ந்த கோட்பாட்டுடன் தமிழ் மொழியின் மீட்சி என்ற குறிக்கோளையும் இணைத்துப் போராடத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பழ.நெடுமாறன் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இன்று போல் சோர்வின்றி உழைப்பார் என்று உறுதியாக நம்பலாம். எனவே அவரது எல்லைகளை நன்கு புரிந்து கொண்டு புதுவழிகாண வேண்டுமென்பதற்காகவே அவரைப் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] பின்பு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து சென்ற 2005ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். தமிழ்த் தேசிய இயக்கங்கள் என்ற கானல் நீரை நம்பி குடும்ப வாழ்க்கையையும் மன அமைதியையும் இழந்து அலைந்த எத்தனையோ நல்லுள்ளங்களில் அவருடையதும் ஒன்று.

தமிழ்த் தேசியம் ... 14

மனந்திறந்து... 4

ந.ம.கு.வினருடன் தொடர்பு கொண்ட நாளிலிருந்தே பெரியவர் திரு.வே. ஆனைமுத்துவுடனும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவரது இயக்கத்தின் பெயர் பெரியார் சமவுரிமைக் கழகம் (இப்போது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி). அந்த இயக்கத்தின் கருத்தாய்வுக் கூட்டங்களில் சென்னை சென்று கலந்துகொண்டேன். சிந்தனையாளன் இதழில் பேயன் என்ற பெயரில் பொருளியல் உரிமை அடிப்படையிலான கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இதழின் பிற ஆக்கங்களிலிருந்து அக்கருத்துகள் தனிமைப்பட்டே நின்றன. இயக்கத்தை வளர்ப்பதற்கும் இதழைப் பரப்புவதற்கும் அவர் கொள்கை அடிப்படையிலன்றி இயந்திரவியலான அணுகல்களையே மேற்கொண்டார்.

உந்துவண்டி(வேன்)களை எடுத்துக் கொண்டு ஒரு முறை தமிழக வலம் வந்தார். அதில் நெல்லை மாவட்டமும் அடக்கம். நெல்லையில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். தமிழகப் பொருளியல் உரிமைகள் குறித்த செய்திகளைத் தொகுத்து நெல்லையில் உழவர், நெசவாளர் சிக்கல்கள் குறித்து துண்டறிக்கை அச்சிட்டு பரவலாக மக்களிடையில் வழங்கியிருந்தேன். அவருக்கும் விடுத்திருந்தேன். அவர் நெல்லை வந்ததும் உடன் வந்திருந்தவர்களுக்கு அத்துண்டறிக்கையை வழங்கினேன். அவர்களில் ஒருவரான சீர்காழி முத்துசாமி அதைப் படித்துப்பார்த்துவிட்டு ″இது நன்றாக இருக்கிறது; இதை நாம் எல்லோருக்கும் வழங்கலாம்″ என்றார். ஆனைமுத்து அவர்கள், ″நம்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? நம் துண்டறிக்கையை ஊரெங்கும் உந்துவண்டியில் சென்று வழங்குங்கள்″ என்று கடுகடுத்தார். அந்தத் துண்டறிக்கை, மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பாகவே இருந்தது. தன்னை மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக உழைப்பவராக முன்னிறுத்தவே அவர் விரும்புகிறார் என்பது தெரிந்தது. எனவே நான் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டு அது என்றும் நிலைக்க முடியாது, இன்றைய நிலையிலேயே இக்கொள்கையினால் பிளவுண்டு நிற்கும் மக்கள் அணு அணுவாகச் சிதைந்துவிடுவார்கள்; தமிழகத் தேசிய உரிமைகளுக்கும் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கும் நடத்தும் போராட்டத்தினாலேயே மக்களிடையிலுள்ள பிளவுகளை அகற்றி ஓரணியில் கொண்டுவர முடியும் என்று விளக்கி ஒரு நீண்ட கட்டுரை விடுத்தேன். அடுத்த முறை அவரைச் சென்னையில் சந்தித்த போது கட்டுரையில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன என்று கூறி என்னைச் சாடினார். அவரது ஆத்திரம் தேவைக்கு அதிகமாக இருப்பதாக எனக்குப்பட்டது. ஒதுக்கீடு என்பது சாதிய ஏற்றத்தாழ்வுக்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இருக்க வேண்டும்; நிலையான தீர்வுக்கான போராட்டத்துக்கு இயக்கத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இரண்டு மணி நேரக் கருத்தாடலுக்குப் பின் அவர் ″மண்டல் ஆணைய நிறைவேற்றம் தான் என் இலக்கு; இறுதியான சாதி ஒழிப்புப் போராட்டம் கடுமையானதாகவும் நீண்ட காலம் நின்று போராட வேண்டியதாகவும் இருக்கும்; அது என்னால் இயாலது″ என்று தீர்த்தறுத்துக் கூறிவிட்டார். அதன் பின்னர் இன்று வரை அவரை நான் சந்திக்கவில்லை.

இந்த இடத்தில் பெரியவர் ஆனைமுத்துவைப் பற்றி நானறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவருக்கு வன்னியர் நலன்தான் உண்மையான குறிக்கோள். அதற்காகவே அவர் பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணியில் ஒதுக்கீடு வேண்டுமென்று பரிந்துரைத்த மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றத்துக்காகப் பாடுபட்டார். வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் இராமதாசு தலைமையில் போராடியதன் விளைவாகத் தமிழகத்தில் 20 நூற்றுமேனி ஒதுக்கீடு மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கி அதில் வன்னியர்களையும் சேர்ந்துக் கருணாநிதி ஆணையிட்ட போது வன்னியர்களுக்கு அதில் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்; ஏனென்றால் அந்த 20 நூற்றுமேனியில் பெரும்பகுதியைத் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு மிகுதி. இவரது அணுகலின் விளைவாக, ஒதுக்கீட்டு நோக்கத்துக்காகத் தமிழகத்தைப் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம் என்று பிரித்து அந்தந்த மண்டலத்திலுள்ள சாதிக் குழுக்களின் விகிதப்படி ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பொ.வீ. சீனிவாசன், பெ.பழனிச்சாமி என்ற இருவர் இதற்கேற்பத் தமிழக வரைபடம் ஒன்றில் வெவ்வேறு வண்ணங்களில் இம்மூன்று மண்டலங்களையும் காட்டியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, முக்குலத்தோர் இன்றுள்ள தமிழகத்தில் ஒரு நாளும் முதல்வராக வர முடியாது; எனவே தென்மாவட்டங்களை இணைத்து மதுரையைத் தலைநகராகக் கொண்ட ஒரு தனி மாநிலம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர் சிலர். ஆக, ஒதுக்கீட்டுக் கோட்பாடு அதன் தவிர்க்க முடியாத இலக்கைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழக மக்களை அணு அணுவாகச் சிதறச் செய்வதுடன் தமிழகம் என்னும் நிலப்பரப்பைப் பிரிக்கவும் தொடங்கியுள்ளது. ஆக, ஒதுக்கீட்டுத் திட்டத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பெரியவர் வே.ஆனைமுத்து இப்போது தன் இயக்கத்துக்கு மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்துள்ளார். பெரியாரியம் தமிழக மக்களை மட்டுமல்ல, தமிழக மண்ணையே சாதி அடிப்படையில் சிதறடிக்கவும் ″மார்க்சியம்″ அவர்களைப் பொருளியல் அடிப்படையில் சிதறடிக்கவும் போதுமல்லவா?

தான் பெரியாரோடு நெருங்கிப் பழகியவன், பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக அறிந்துள்ளவன் தான் ஒருவன் தான் என்று பெருமை பேசுபவர் அவர். உண்மை தான். அதனால் தான் இட ஒதுக்கீட்டைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை. நக்சலிய இயக்கத்தவரும் திராவிட இயக்கத்தவரும் இணைந்து செயற்படுவது என்ற அடிப்படையில் தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இணைந்து செயற்படுவதைப் பற்றி ஒரு சொல் கூடப் பேசாமல், பெரியாரின் சிந்தனைகளை அறிந்தவன் தான் ஒருவன் தான் என்று முழங்கினார். கேட்டவர்கள் சலிப்படைந்தனர். பெரியாரின் சிந்தனைகள் என்ற தொகுப்பை வெளியிட்டவர் அவர் என்பது சரிதான். ஆனால் இப்படி அவர் முழங்கும் போது அவர் மனக்கண்ணில் தன் எதிரே ஒருவரை நிறுத்தி அவரைப் பார்த்துத் தான் முழங்குகிறார். அவர் வேறு எவருமில்லை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணிதான்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகப் பொறுப்பு தனக்குத் தான் வரும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருத்ததை அவரோடு பழகிய நாட்களில் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது கைகூடாமல் போனது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, தான் ஒருவன் தான் பெரியாரின் பின்னடியாக(வாரிசாக) இருக்கத் தகுந்தவன் என்று அவர் முழங்கினார். வீரமணி உந்து வண்டியில் தமிழகத்தைச் சுற்றி வந்ததைப் போலத் தானும் சுற்றி வந்தார்.அதனால் அவர் பொறுப்பில் இருந்த, பங்கு அடிப்படையிலான குழுமம் ஒன்றுக்கு உரு 80.000∕- க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பொதுவாக ஓர் இயக்கத்தில் உடைவு ஏற்படும் போது அதற்குப் பின்னணியாகச் சில காரணங்கள் இருக்கும். கொள்கை முரண்பாடுகள், தனிமனித மோதல்கள், பணம், பதவி ஆகியவை கருதி நடைபெறுபவை என்று அவை இருக்கும். அவற்றின் ஊடாக வெவ்வேறு மக்கள் குழுக்கள் அணி திரள்வதும் உண்டு. உருசியாவில் புரட்சிக்கு முந்திய உருசியப் பொதுமைக் கட்சி(உருசிய குமுக மக்களாட்சிக் கட்சி என்பது அதன் அப்போதைய பெயர்) பெரும்பான்மை (போல்சுவிக்), சிறுபான்மை (மென்சுவிக்) என்று பிரிந்த பின் அவை ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு புரட்சியை விரைவுபடுத்தின. அது போல் இந்தியாவில் காந்தியை எதிர்த்த சுபாசு சந்திரபோசு இந்திய விடுதலை என்பதை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எய்த வேண்டும் என்று செயலில் இறங்கியதன் விளைவாகத்தான் ஆங்கிலரும் காந்தியும் உடன்பாடு கண்டதால் இன்று நமக்கு ஒரு போலி விடுதலை கிடைத்துள்ளது. போசு அதைச் செய்யவில்லையாயினும் ஒரு போலி விடுதலை தான் கிடைத்திருக்கும்; ஆனால் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. தோன்றிய போது அது கொள்கை அடிப்டையிலான பிளவுதான் என்று காட்ட அண்ணாத்துரை முயன்றார். பிளவுபட்ட இரு இயக்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கியென்றார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பொருளியல் முழக்கத்தை முன்வைத்தார். ″திராவிடர்″ என்பது இனத்தைக் குறிக்கிறது; ″திராவிட(ம்)″ என்பது நிலத்தைக் குறிக்கிறது என்றார். ஆனால் பெரியார் இத்தகைய முகமூடி எதையும் அணியவில்லை. திராவிட இயக்கத்தின் அரசியல் எதிரியான பேரவைக் கட்சிக்குள் சென்று காமராசரைத் தூக்கிப்பிடித்தார். இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், திராவிட இயக்கத்தின் உண்மையான குறிக்கோள் என்ன? கடவுள் மறுப்பா, சாதி ஒழிப்பா, பார்ப்பனர் எதிர்ப்பா, பார்ப்பனர் ஒழிப்பா, பார்ப்பனிய ஒழிப்பா, இட ஒதுக்கீடா, தமிழ் மொழிக் காப்பா, இந்தி எதிர்ப்பா, தமிழக விடுதலையா, பொருளியல் உரிமையா, நிகர்மை அல்லது பொதுமையா என்று எவரும் வரையறுத்ததாக நமக்குத் தெரியவில்லை. எனவே மேலே பட்டியலிட்ட குறிக்கோள்களுக்குள் முரண்களோ மோதல்களோ உருவாகும் போது எவ்வெவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கிவைக்கலாம், எவ்வெவற்றைக் கைவிடலாம், எவ்வெவற்றைக் கைவிடக் கூடாது, கைவிட முடியாது என்ற வரையறை எதுவும் இல்லை. ஆனால் நடைமுறையில் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமை என்ற ஒன்று, இடையில் சிறிது காலம் திராவிட இயக்கத்தின் கவனத்தில் இருந்து இப்போது முற்றிலும் அகன்றுவிட்டது. பிறவற்றை அவரவர் தத்தமது வசதிக்கேற்ப அவ்வப்போது கையாண்டு வருகின்றனர். இதனால் இன்றைய இளைஞர்கள் தமிழ்த் தேசியம் என்ன என்ற தெளிவேயின்றி அங்கும் இங்குமாக ஓடி ஓடி ஓய்ந்து போகின்றனர்.

பெரியாருடன் அறிவு, கருத்தாடல் என்ற அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஆனைமுத்துவை விட அவரது வளர்ப்புப் பிள்ளை போல் அவருக்குப் பணிவிடை செய்து வந்த வீரமணி அவருக்கு நெருக்கமானதிலும் இயக்கத்தில் செல்வாக்குப் பெற்றதிலும் வியப்பில்லை. அந்த நெருக்கத்தின் விளைவாகவே, ஆனைமுத்து அடிக்கடி குறிப்பிடுவதைப் போலப் பெரியாரின் இறுதிக் காலத்தில் வீரமணியும் மணியம்மையாரும் அவரை அடித்துத் துன்புறுத்தித் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எத்தனையோ வழிகளில் (தன்னை நம்பிய தமிழக மக்களை ஏமாற்றி) அக்கிழவர் சேர்த்து வைத்திருந்த அப்பெருஞ்செல்வம் அவரது இறுதிக்காலத் துன்பத்துக்கே காரணமாயிருந்திருக்கிறது. சமய மடங்களில் நடைபெறுபவை போன்றதுவே இதுவும்.

ஆனைமுத்து அவர்கள் நிறைய தொடர்புகளைப் பேணியவர். எல்லாக் கட்சிப் பெருமக்களிடமும் அதிகார அமைப்புகளோடும் அவர் நல்லுறவு வைத்திருப்பார். எந்த ஆட்சி நடைபெற்றாலும் எவருக்கும் இடமாற்றுதலோ பதவி உயர்வோ பெற்றுத்தர அவரால் முடியும் என்பதை அவரோடு பழகிய காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.

திரு. ஆனைமுத்து அவர்களின் அணியில் இருந்தவர்களில் பெரியவர் சேலம் சித்தையன் அவர்கள் எனது செயற்பாடுகளைப் புரிந்து ஏற்று ஆதரித்தவர். அவருக்கே எனது சிந்தனை ஓட்டம் இருந்ததை என்னால் அறிய முடிந்தது. ஆனால் எதையும் செய்ய இயலாத நிலையில் மூப்பெய்தியும் தனிமைப்பட்டும் இருந்தார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

(தொடரும்)

17.12.07

தமிழ்த் தேசியம் ... 13

மனந்திறந்து... 3

இதற்கிடையில் முகாமையான சில நிகழ்வுகள் இடம்பெற்றன. 1980-81இல் சென்னையில் பெருஞ்சித்திரனாரைச் சந்தித்தேன். அவரைப் பல வேளைகளில் இழிவான முறையில் ஏமாற்றியவரும் அவரது முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டவருமான கருணாநிதிக்கு வேண்டுகோள்கள் வைப்பதும் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்கத் தன் பற்றாளர்களுக்கு அழைப்பு விடுப்பதுமாகத் தன்னை நம்பித் தன் பின்னால் அணி திரண்டு நிற்கும் தொண்டர்களைக் கருணாநிதியின் வாலாக்குவது பற்றிக் குறை கூறி அவருக்கு நான் எழுதியிருந்த மடலுக்கு அவர் நேரடியாகத் தந்த விடை எனக்கு நிறைவு தரவில்லை. எனவே அவரோடுள்ள தொடர்பை அறுத்துக் கொண்டேன்.

1980ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில் அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி(இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) மாணவர் ஒருவரைக் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். அவருடனிருந்த இரு இளைஞர்கள் துணையுடன் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று அறியப்பட்ட அல்லது தங்களை அறிவித்துக்கொண்ட பலரை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்தேன். அரு.கோபாலன், விடுதலை இராசேந்திரன், அவர் துணைவியார் கோவி. சரசுவதி போன்றோர் அவர்களில் முகாமையானவர்கள். பின்னும் சில தடவைகள் சென்னை செல்லும் போது பேராசிரியர்கள் இளவரசு, பெரியார்தாசன் ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் நா.அரணமுறுவலும் சில வேளைகளில் உடன்வந்துள்ளார். இந்தத் தேடல் சென்னைக்கு வெளியிலும் தொடர்ந்தது. இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஓருண்மை புரிந்தது. இத்தகையவர்களில் மிகப் பெரும்பான்மையினரும் வெறும்பேச்சு பேசிக் கொண்டு தாங்கள் எந்தத் தேசியத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்களோ அத்தேசிய நலன்களின் எதிரிகளோடு இணக்கம் கண்டு அத்தேசியத்தை விற்றோ அடமானம் வைத்தோ கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறுவதற்காகத் ″தேசிய விடுதலை″ என்று கூறி மிரட்டுகிறவர்கள் என்பதுவே அந்த உண்மை. அதிலும் ″தமிழியக்கம்″ பேசும் பேராசிரியர் ஒருவர் ஒரு முறை சந்தித்த போது மீண்டும் வரச் சொன்னார். சென்ற போது வீட்டிலிருந்துகொண்டே இல்லை என்றார்.

மதுரையிலிருக்கும்போது (1981-83) தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி என்ற பேரா. கா.சிவத்தம்பியின் நூலைப் படிக்க வாய்த்தது. அதற்கு மறுப்பாக, கா.சிவத்தம்பியின் அரசியல் பின்னணி என்ற கட்டுரையை எழுதினேன். ஈழ மாணவர் அமைப்பு (ஈரோசு) சார்பில் தா.கோவேந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுமை இதழில் அது தொடர்கட்டுரையாக வந்தது. இங்குள்ள பொதுமைக் கட்சியினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஈழ மாணவர் அமைப்பினர் தங்கள் வெளியீடுகளை விற்பது அன்றிலிருந்து தடைசெய்யப்பட்டது. மதுரையில் இருக்கும்போது பேரா.கோ. கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலைப் படிக்க வாய்த்த போது அதற்கு மறுப்பாக விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை பேயன் என்ற பெயரில் எழுதினேன்.

இந்தக் கட்டத்தில் குணாவின் தமிழக ஆய்வரணைச் சேர்ந்த பொன். பரமேசுவரன் சென்னையிலிருந்தார். அவரோடு தொடர்பு கொண்டு, தேசியச் சுரண்டலில் பல்வேறு துறையினர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர் வாழ்ந்த பகுதியில் செறிந்திருந்த கைத்தறி நெசவாளர்களிடத்தில் பணிபுரிய வலியுறுத்தினேன். அதற்குத் தேவையான ஆள்வலிமையும் அமைப்பும் இருந்தாலும் அவர் போன்றோர் மாவோயியத்தின் பாட்டாளிய மற்றும் பண்பாட்டுப் புரட்சிக் கோட்பாடுகளைத் தாண்டி வர இயலாதிருந்தனர். இளைஞர்களை அறைகளிலிருத்திக் கலந்துரையாடல் என்ற எல்லையைத் தாண்டிக் களத்திலிறக்க ஏனோ விரும்பவில்லை. இந்த நிலையில் ஒரு புதிய தொடர்பு வந்தது. அது கோவை ஞானி மூலமாக வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் எசு. என். நாகராசன் என்பவர் தான் இத்தொடர்புக்கு வழியமைத்தவர். ஞானி ஒரு வகையில் அவருக்கு மாணவர், அவ்வளவு தான். தொடர்பு கொண்டவர்கள் கேரள மாநிலத்தில் வலுப்பெற்றிருந்ததாக அவர்கள் கூறிக் கொண்ட நடுவண் மறுசீரமைப்புக் குழு என்ற மா.லெ., அதாவது நக்சலிய இயக்கத்தவரும் காம்ரேட் என்னும் மலையாள இதழின் ஆசிரியருமான ″காம்ரேட்″ கே.என். இராமச்சந்திரன் என்பவர். அவருடன் நான், நாகராசன், பொன். பரமேசுவரன், எசு.வி. இராசதுரை ஆகியோர் கலந்து உரையாடினோம். ந.ம.கு. இந்தியப் புரட்சியை இந்தியத் தேசியங்களின் விடுதலைப் புரட்சியின் திரட்சியாகக் காண்பதாகவும் அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தத் தாங்கள் ஒத்துழைப்பதாகவும் இராமச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பின்னணியில் தேசிய விடுதலை ஆர்வம் உருவாகியுள்ளது; கேரளத்தில் இது எவ்வாறு தோன்றியது என்று கேட்டோம்.

கேரளத்தில் தாங்கள் கள ஆய்வு செய்த போது அங்கு நிலவும் பொருளியல் வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத, அதனை மிஞ்சிய பண்பாட்டு நிலை, அதாவது பாட்டாளிய இயக்க வளர்ச்சி நிகழ்ந்திருப்பதைக் கண்டதாகவும் அதைத் தடம்பிடித்த போது தேசியங்களை நடுவணரசு சுரண்டுவதால் பொருளியல் வளர்ச்சி தடைப்படுவதைக் கண்டதாகவும் அதிலிருந்து இந்த முடிவை எய்தியதாகவும் கூறினார். எனவே தமிழகத் தேசிய விசைகளோடு ந.ம.கு. ஓர் அணியமைத்துச் செயற்படுவதென்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மார்க்சியம் இன்று என்ற பெயரில் ஓர் இதழ் வெளியிடுவதெனவும் அதற்கு எசு.வி.இராசதுரை ஆசிரியராகச் செயற்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பெரியவர் வே.ஆனைமுத்து அவர்களைச் சென்று சந்தித்து அவரது பெரியார் சமவுரிமைக் கழகத்தையும் இந்த அணியில் இணைத்துச் சில முழக்கங்களை அவரது அச்சகத்திலேயே அச்சிட்டுப் பிரிந்தோம். அடுத்து ஒரு கூட்டம் கல்பாக்கத்தில் நடந்தது. அதில் கேரளத்தைச் சேர்ந்த வேணு என்பவர் கலந்து கொண்டார். இவர் ந.ம.கு.வில் கே.என். இராமச்சந்திரனுக்கு மேல்நிலையில் உள்ளவர் என்று கூறப்பட்டது. அக்கூட்டத்தில் இந்திய அளவில் ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓர் அனைந்திந்தியத் தலைமையின் கீழ் அனைத்துத் தேசிய அமைப்புகளும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை வேணுவும் பிறரும் முன்வைத்தனர். நான் அதை ஏற்கவில்லை. ஒவ்வொரு தேசிய அமைப்பிலிருந்தும் இரண்டு பேராளர்கள் மட்டுமே இந்திய அமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் தேசிய அமைப்புகளின் கருத்தை இந்திய அமைப்பில் எடுத்துச் சொல்வோராகவும் இந்திய அமைப்பு மேற்கொள்ளும் முடிவுகளைத் தேசிய அமைப்புகளிடம் கூறி விளக்குவோராகவும் இருக்க வேண்டும்; அவற்றை ஏற்பதோ மறுப்பதோ தேசிய அமைப்புகளின் உரிமையாயிருக்க வேண்டும்; இந்தப் பேராளர்கள் உட்பட தேசிய அமைப்புகளின் உறுப்பினர் எவரையும் இந்திய அமைப்பு கட்டுப்படுத்தக் கூடாது என்ற கருத்துகளை நானும் மதுரைத் தோழரும் முன்வைத்தோம். இந்திய அமைப்புக்கு முழு அதிகாரம் வேண்டும்; இல்லையென்றால் அது தன் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்றனர். இந்தியாவிலுள்ள தேசியங்கள் வளர்ச்சி நிலையில் தமக்குள் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளன; எனவே முழு அதிகாரமுள்ள அமைப்பு ஒரே நேரத்தில் ஒரே வகையான நடவடிக்கையை எடுத்தால் இப்போது போல் ஒன்றிரண்டு தேசியங்கள் பிற தேசியங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை வரலாம்; அதே நேரத்தில் தளர்வான ஓர் இந்திய அமைப்பு இருந்தால் பின்தங்கிய தேசியங்களில் வளர்ச்சியை ஊக்கும் வழிகாட்டல்களை நடுவண் அமைப்பு மூலமாக மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் வாதிட்டோம். நாங்கள் இன்றியே தமிழக ந.ம.கு. அமைக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், நாம் இங்கிருந்து கலைந்து சென்று களத்தில் மக்களை, அவர்களில் எந்த வகுப்பினரை, எந்தக் குறிக்கோள்களை, முழக்கங்களை முன்வைத்து அணுகுவது என்பது குறித்த ″செயல்திட்டம்″ வேண்டும் என்று கேட்டேன். கூட்டத்தை நெறிப்படுத்திய எசு.வி. இராசதுரை, ″மார்க்சியப் பொருளில்″, ″செயல்திட்டம்″ என்பது அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையைப் போல் வாக்குறுதிகளின் ஒரு பட்டியல்தான் என்பது போல் பொருள் கூறி நழுவ முயன்றார். ″செயல்திட்டம்″ என்ற பெயர் பொருந்தாதென்றால் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் இங்கிருந்து செல்வோர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்று கேட்டதற்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. எனவே இதுவும் அனைவரையும் அறைகளுக்குள் அடைத்துவைத்துக் கலந்துரையாடுவதைத் தாண்டிச்செல்ல மறுப்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அதன்பிறகு, நக்சலிய இயக்கத்தில் செயற்பட்ட போது வெடிகுண்டு செய்தார் என்ற குற்றச் சாட்டில் மரண தண்டனை பெற்றவரும் பொது மக்கள் குடியுரிமை ஒன்றியம்(பி.யு.சி.எல்.)[1] என்ற அமைப்பின் முயற்சிகளால் பிணையில் வெளியில் வந்தவருமான பாவலர் கலியபெருமாள் இப்போது தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட இயக்கம் நடத்தப் போவதாகவும் அதை அறிவிக்கப் பெண்ணாடத்தில் ஒரு கூட்டம் நடக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து ″தமிழ் உணர்வாளர்களும்″ ″தமிழ்த் தேசிய உணர்வாளர்களும்″ பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமே ஓர் ஏமாற்று என்று அதில் உரையாற்ற வந்திருந்த குணா சண்டையிட்டு வெளியேறினார். கலியபெருமாள், தமிழரசன் முரண்பாடு தோன்றி அவர்கள் பின்னர் பிரிந்தனர். கலியபெருமாள் பிணையில் வந்ததற்கும் கூட்டம் நடந்ததற்கும் முயற்சி எடுத்தவர் இராசதுரை தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் மார்க்சியம் இன்று இரண்டு மூன்று இதழ்கள் வந்திருந்தன. அடுத்து தனக்கு அமெரிக்காவிலிருந்து ஓர் ஆய்வுத் திட்டம் கிடைத்திருப்பதாகவும் அதனால் தான் தொடர்ந்து இதழின் ஆசிரியர் பணியைப் பார்க்க முடியாது என்றும் கூறி இராசதுரை விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஒரேயொரு இதழ் வெளிவந்ததாக நினைவு.

நான் எழுதியிருந்த விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை மார்க்சியம் இன்று இதழில் வெளியிட தோழர் பொன்.பரமேசுவரன் மூலம் குணா முயன்றபோது அது மறுக்கப்பட்டதால் அதனை அவரே தன் தமிழக ஆய்வரண் மூலமாக வெளியிட்டார் என்பதை ஓர் இடைக்குறிப்பாகக் கூறுகிறேன்.

நான் அறிந்த வரை இராசதுரை காசுக்காக எழுதுபவர். மார்க்சியம் என்ற பெயரில் அதன் எதிர்ப்புக் கோட்பாடுகளான இருத்தலியத்தையும் அயலாதலை(அந்நியமாதல்)யும் எழுதியவர். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது கோட்பாடுகளை எள்ளி நகையாடியவர். இன்று பெரியாரைக் கடவுளாக்குவதற்காகத் தொடர்ந்து நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு உள்ளிலும் வெளியிலும் பெரியாருக்கு ஒரு கடவுள் படிமம் கொடுப்பதால் பல வகைகளில் ஆதாயம் பெறும் குழுக்கள் உள்ளன. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாணிக வல்லரசியங்களுக்கும் தமிழக அறிவாளிகளின் சிந்தனைகளைப் பொருளியல் சுரண்டல்களிலிருந்து திருப்பவும் ஒதுக்கீட்டு அரசியலாருக்கு வலிமை சேர்க்கவும் இது தேவையாகிறது. இந்திய விடுதலை, தமிழ் மேம்பாடு பற்றிய முயற்சிகளில் அடித்தள மக்களின் பணிகளை உலகுக்கு எடுத்துரைக்கும் ஆர்வம் அவரிடம் வெளிப்பட்டாலும் கூலிக்கு எழுதும் பண்பு அதை மீறி நிற்கிறது என்பது என் கணிப்பாகும். அதோடு இவரும் இவர் போன்று கோவை ஞானி, அ.மார்க்சு போன்றோரும் அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள். கட்சி என்று ஒன்றிருந்தால் அதில் அதிகாரமும் ஆதிக்கமும் உருவாகிவிடும் என்று கூறுபவர்கள். கருத்து(பிரச்சாரம்) இல்லாத இலக்கியம், கட்சி இல்லாத அரசியல், இயங்கியல் இல்லாத மார்க்சியம் (அத்துடன் கரு இல்லாத குழந்தை என்ற ஒன்றையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) பற்றியெல்லாம் கூறுவார்கள். கரு என்ற ஒன்றே கிடையாது, அனைத்தும் உருவெளித் தோற்றம், மாயை, பொய்ம்மை என்பது இவர்கள் வலியுறுத்தும் சிந்தனை. கரு என்ற ஒன்று இல்லை என்பார் அ.மார்க்சு; இந்த நொடி தான் உண்மை, நேற்று, நாளை என்ற தொடர்ச்சியெல்லாம் கிடையாது என்பார் இராசதுரை. நுணுகிப் பார்த்தால் நேற்று என்பது கடந்து போன உண்மை, நாளை என்பது நாம் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் வாய்ப்பு, இந்த நொடி என்பது தான் சொல்லி முடிப்பதற்குள் கடந்து சென்றுவிடும் ″மாயை″, ஆனால் இந்த ″மாயை″ தான் நாம் நேரடியாகப் புலனுணரும் உண்மை, நேற்றையும், நாளையையும் இணைக்கும் பாலம். நம் அறிதல் பிழைகளினால் ஏற்படும் தவறுகளைக் காட்டி இயற்கையையும் உலகையும் வாழ்வையும் காலத்தையும் பொய் என்று கூறும் தவற்றைச் செய்கிறார்கள் இவர்கள். நான் எழுதி தாராமதி இதழில் தொடராக வந்த மார்க்சியம் எனும் கட்டுரையைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் ″இயங்கியல் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் அதை நான் மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது″ என்றார் ஞானி. ஆக, இயங்கியல் இல்லாத மார்க்சியம் அவருடையது. ஆதிசங்கரரின் இரண்டன்மையியத்திலிருந்து (அத்துவைத்திலிருந்து) தான் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். ஆதிசங்கரர் உலகில் அனைத்துமே மாயை, பொய்த்தோற்றம், உண்மையென்று எதுவும் கிடையாது என்றவர். இந்தக் கோட்பாட்டிலிருந்து மார்க்சியத்தைப் பார்ப்பதாகக் கூறும் ஞானியை ஒரு மார்க்சியராகத் தமிழகப் படிப்பாளிகள் ஏற்றுக்கொண்டது ஒரு விந்தைதான். தமிழகத்தில் இவையெல்லாம் விந்தையல்ல என்கிறீர்களா? இந்த ″மாயாவாதி″களுக்கு ஏதோவொரு வகையில் வெளிவிசைகளின் தொடர்பும் இருக்கிறது. ஆனால் நிகழ்காலத் தமிழக வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்ற அரங்குக்குள் இவர்கள் புகுந்து சில காலமாயினும் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள், செலுத்துகிறார்கள்.

ந.ம.கு.வில் ஒரு ″புரட்சிகர மாற்றம்″ வந்தது. கேரள, அதாவது தலைமை அமைப்பில் வேணுவுக்கும் கே.என்.இராமச்சந்திரனுக்கும் தனிப்பட்ட ஏதோ பகைமையால் கே.என். இராமச்சந்திரன் பிரிந்தார். அவருடன் தமிழகக் குழுவும் விலகியது. . இப்பிளவுக்கு இராமச்சந்திரன் (நாகராசனும் சேர்ந்து) கூறிய காரணம், தேசியங்களின் விடுதலைப் புரட்சிகளின் தொகுப்பே இந்தியப் புரட்சி என்ற நிலைப்பாடு ″மக்களிடையிலிருந்து உருவாகவில்லை″யாம் (இதுவரை அது உறைக்கவில்லையா?); வேணு போன்றவர்களால் ″மேலிருந்து திணிக்கப்பட்டதா″ம்; எனவே அது ″மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதா″ம். அவ்வாறு பிரிந்தவர்கள் ஓர் அனைந்திந்நிய ″புரட்சிகரப்″ பொதுமை இயக்கத்தோடு (இவர்கள் சிவப்பு விண்மீன் என்றொரு ஆங்கில இதழ் நடத்துகின்றனர். அவ்விதழின் பெயரில் அவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்) இணைந்தனர் இவர்களுக்குத் தேசியங்களின் விடுதலை என்பதில் உடன்பாடு கிடையாது; ஆனால் ″மக்களாட்சிக் கோட்பாடுகளின்படி″ இயங்குபவர்கள் என்று எசு.என். நாகராசன் ″வழிகாட்டினார்″. ஆக, நாகராசனுக்கு மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ போன்ற மார்க்சியத் தலைவர்களும் அந்த வட்டத்துக்கு வெளியில் உலகில் தோன்றிய தலைவர்களும் அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைக்கவில்லை என்ற அடிப்படையில் ஒதுக்கத்தக்கவர்கள். இவ்வாறு வெவ்வேறு களங்களிலிருந்து ″தமிழ்த் தேசிய விசை″களில் சிலரை இழுத்துச் சென்று நட்டாற்றில் விட்டாயிற்று. இந்த இயக்க நடைமுறைகளில் நாகராசனின் தலைமையை நம்பி முனைப்பாகச் செயற்பட்ட நேர்மையும் தூய்மையும் கடும் உழைப்பும் ஊக்கமும் நிறைந்த தோழர் பொன்.பரமேசுவரன் தான் நம்பிய பாட்டாளியக் கோட்பாட்டினால் தன் வேலையை இழந்து வயிற்றுப் பிழைப்புக்காக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

நானறிந்த வரை எசு.என்.நாகராசன் அதன் பிறகு எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இனி அழிப்பதற்கு உருப்படியான தமிழ்த் தேசிய விசை எதுவுமில்லை என்று மனம் நிறைந்திருக்குக் கூடும். இவர் மாவோவைக் கடவுளாக வணங்குபவர். நாம் இதுவரை குறிப்பிட்ட ″மார்க்சியர்″ அனைவரும் மாவோ வழிபாட்டினர் தாம் என்றாலும் இவர் தான் தலைமைப் பூசாரி. மாவோவைத் திருமாலின் (எத்தனையாவது என்று சொல்ல முடியவில்லை; ஏசுவையும் முகமது நபியையும் கூடத் தோற்றரவுகள் என்று கூறிக் கொள்கின்றனர்) தோற்றரவு என்று கருதும் வீர மாலியர்(வைணவர்). அதே நேரத்தில் தமிழ்த் தேசிய விசைகளைக் கெல்லியெடுத்து அழித்து ஊழித் தாண்டவமாடிய சிவன். இந்தியப் பொதுமை இயக்கத்தில் தேசியங்களின் விடுதலையை முன்வைத்து பொதுமை (மார்க்சியம்), அதாவது இடங்கைப் பொதுமைக் கட்சி பிரிந்து தனியாக வந்ததற்குத் தானே காரணம் என்பவர். நக்சலிய இயக்கத்தினுள்ளும் தேசியங்களின் விடுதலைக் கோட்பாட்டைப் புகுத்தியவன் தானே என்று பெருமையடித்துக் கொண்டவர். இவை உண்மையாக இருந்தால் தேசிய விசைகளை ஏமாற்றி ஈர்த்தெடுத்து அழிப்பது தான் அவரது உள்நோக்கம் என்பது இப்போது புரிந்திருக்கும்.

″மார்க்சியர்″களின் அடுத்துக்கெடுக்கும் பணிக்கு இன்னொரு சான்று: நான் மேலே குறிப்பிட்ட பெரியாற்று அணையில் பணிபுரிந்த நண்பரைப் பற்றி நெல்லைப் பகுதி நண்பர் ஒருவர் கூறியது. அவர் நெல்லையில் பணியாற்றிய போது அங்குள்ள தி.க., தி.மு.க., தனித்தமிழ் இயக்க இளைஞர்களை அணுகி தங்கள் இயக்கம் (இந்திய மா.லெ.இயக்கம்-மக்கள் போர்க்குழு) தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொள்வதாகவும் பெரியாரின் பங்களிப்பை, தனித்தமிழ் இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும் இரண்டாண்டுகள் நம்பவைத்திருக்கிறார். இறுதியில், தமிழக மக்களின் எதிரி தில்லி அரசு, அதன் பின்னணியில் சோவியத்து, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் (அவற்றுள் சோவியத்து தான் உலக மக்களின் முதல் எதிரி!) நிற்கின்றன; இந்த மாபெரும் விசைகளின் படைகளை எதிர்த்துப் போரிட வேண்டுமாயின் தமிழகத்தை மட்டுமே களனாகக்கொண்ட இயக்கத்தால் முடியாது; எனவே ஓர் இந்திய அமைப்பினுள் நீங்கள் வர வேண்டும் என்றிருக்கிறார். பெரும்பாலோர் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவ்வாறு ″மார்க்சிய″க் கட்சிகள் அல்லது பொதுமை என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தை அடுத்துக் கெடுப்பவையாக, அணைத்து அழிப்பவையாகவே உள்ளன.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] அமெரிக்க உளவு முகவாண்மையின் உருவாக்கமான மாவோயிய முனைப்பியர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களைச் செய்யும்போதோ கொலைகளைச் செய்தோ பிடிபட்டுத் தண்டனையடைந்து சிறையிலிருக்கும்போது அவர்களை அணுகி ″தமிழ்த் தேசியம்″ புகட்டி மன்னிப்பு கேட்கவைத்து பிணையில் கொண்டுவந்து அவர்களை ″தமிழ்த் தேசிய மறவர்″களாக உலவவிடுவது அதே உளவு முகவாண்மையின் இன்னொரு படைப்பான பொ.ம.கு.ஆ. என்பது குறிப்பிடத்தக்கது. எ-டு. கலியபெருமாள், தியாகு போன்றோர்.