14.2.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 2. சமயம்

தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே நேரடியாகத் தம் தெய்வங்களை வணங்குவதைச் சிறுநெறி என்றும் வகுத்தனர்.[1] பெரும் கோயில்களில் தேர்த் திருவிழா, பார்ப்பனப் பூசாரிகளால் சமற்கிருதத்தில் போற்றி (அர்ச்சனை), ஆறுகால பூசை, நெய்வேதியம், வேள்வி, தேவரடியார்கள், காணிக்கை மற்றும் பெரும் நில மானியங்களோடுள்ள தெய்வங்களைப் பெருந்தெய்வங்களென்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூசை, தெய்வமாடுதல், பலிகொடுத்தல், நேர்த்திக் கடன் செய்தல் ஆகியவற்றோடு வணங்கப்படும் தெய்வங்களைச் சிறு தெய்வங்களென்றும் கூறும் மரபு இன்று நம்மிடம் உள்ளது. ஆனால் இவ்விரு நெறிகளையும் கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த வகைப்பாடு தலைகீழான தென்பது புலப்படும். பெரும்பான்மை மக்கள் வழிபடும் முறையைப் பெருநெறி என்றும் சிறுபான்மையினரின் நெறியைச் சிறுநெறி என்றும் அழைப்பது தான் சரியான நெறி. ஆனால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வழக்கிலுள்ள வகைப்பாட்டையே இங்கு நாம் பின்பற்றுகிறோம்.

மேற்சாதிக் கடவுள்களாகச் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சத்தி ஆகியோர் விளங்குகின்றனர். கீழ்ச்சாதிக் கடவுள்களாக மாரியம்மன், முத்தாரம்மன், காளி, இயக்கி, நீலி, திரவுபதை போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன், வண்ணாரமாடன், இயக்கிமாடன், கொம்பமாடன், பன்றிமாடன், மதுரைவீரன், முனியன், சடையன், சப்பாணி போன்ற ஆண் தெய்வங்களும் மற்றும் எண்ணற்ற குல தெய்வங்களும் குடும்பத் தெய்வங்களும் விளங்குகின்றன.

பெருந்தெய்வங்கள் எனப்படுபவை கூடச் சிறு தெய்வங்களாயிருந்து உருமாறியவையே. ஆண்குறி, பெண்குறி வணக்கங்கள் குறியியல் வடிவம் பெற்று இலிங்கமாக இணைந்தன. சங்க கால அகத்துறைத் தலைவியரின் கிண்டலுக்குள்ளாகிய, உயிர்ப்பலியுண்ட வேலன் இன்று முருகனாகிவிட்டான். இன்றும் இந்த நிகழ்முறை தொடர்கிறது. மாரியம்மன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பணக்கார” மாரியம்மன் கோயில்களெல்லாம் பெருந்தெய்வ வழிபாட்டு முறை நோக்கித் திரும்பிவிட்டன. சிறு தெய்வவழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய தென்பதற்குப் பெருந்தெய்வக் கோயில்களிலேயே சான்றுகள் உள்ளன. எல்லாக் கோயில்களிலுமிருக்கும் பலிபீடம் அத்தகைய சான்றுகளில் ஒன்று. இப்பலிபீடத்துக்கு எத்தனையோ ஆதனிய (ஆன்மீக) விளக்கங்களை மதவாணர்கள் தந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. பல கோயில்களில் பலியிடுவதற்கென்றே கொண்டு வரப்படும் விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விற்கப்படுவதை நாம் காண முடியும். உயிர்ப்பலியிட்டு குருதி சிந்துவதை எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தில் தோய்த்துப் பிழிவதன் மூலம் ஈடுசெய்வதைக் காணலாம். இந்து மத இயக்கத்தினர் பல ஊர்க்கோயில்களில் பெருந்தெய்வ வழிபாட்டைப் புகுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் முயற்சி வெற்றிபெறாது. குமுக அடித்தளத்தில் பண்பியல் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த காலங்களில் போலவே இன்றும் புதிது புதிதாகச் சிறு தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

கீழ்ச்சாதி மக்களின் சமய நெறியாகிய சிறு தெய்வ வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையாகிய பண்டப் படைப்போடு நெருங்கிய தொடர்புடையது. தாங்கள் படைத்த பண்டங்களைப் படையல் செய்து அவற்றை உண்டு வழிபட்டு தொடர்ந்து வரும் தங்கள் உழைப்புக்கு உரிய பலன் வேண்டி கூட்டாக வணங்குவது அவர்களது வழிபாட்டு முறை. தாங்கள் பலி கொடுக்கும் விலங்குகளையும் படையலிட்ட உணவையும் தங்கள் உறவினர்களுடன் உண்டு களிக்கின்றனர். வழிபாட்டைத் தாங்களே கலை வடிவில் நிகழ்த்துகின்றனர். அவர்களது வழிபாட்டில் பண்டங்களின் அழிவு மிகக் குறைவு. வழிபாட்டின் போதே தொடர்ந்து பருவ நிலைகள், செழுமை போன்றவற்றை அறிவதற்காகச் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். (இவை எந்த அளவுக்கு அறிவியலுக்கு உகந்தவை என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டில் “அறிவியல்” பயின்று விட்டதாகக் கொட்டமடிக்கும் எந்த மேதையும் இன்று வரை கருதியதில்லை. ஒருபுறம் அவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்குவோரும் மறுபுறம் அவற்றில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுகிறது என்று போற்றி ஒதுங்குவோருமே உள்ளனர்.) கீழ்ச்சாதியினர் தம் தெய்வத்திடம், அதாவது தெய்வமாடியாகிய ஒரு மனிதனின் மீது ஏறி அவனை ஆட வைப்பதாகத் தாங்கள் நம்பும் தெய்வத்திடம் தம் தாய்மொழியில் முறையிடவோ சண்டையிடவோ அல்லது அதைத் தூற்றவோ கூடத் தயங்குவதில்லை. அவர்களது வேண்டுதல்கள் எப்போதும் இவ்வுலகைப் பற்றியவையே. மேற்ச்சாதியான் தன் வளமையை உலகுக்குக் காட்டவும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் இவ்வுலகிலும் மேலுலகிலும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றும் அல்லது மக்களை ஏமாற்றிக் கோயிற் சொத்துகளையும் ஊராரையும் கொள்ளையடிக்கவும் “பெருந்தெய்வங்”களுக்குக் காணிக்கைகளும் “திருப்பணி”களும் வேடிக்கைகளும் செய்கிறான். சுரண்டப்பட்ட மனித உழைப்பும் நேரடியான மனித உழைப்பும் அளவற்று வீணடிக்கப்படுகின்றன. தனது “வேண்டுகோள்களை” இறைவனுக்குச் சொல்வதற்கென்று இடைத்தரகர்களை வைத்துத் தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் கூறுவதைக் கேட்டுப் பூரித்துப் போகிறான். மேலுலகில் முடிவில்லாத இன்ப விளையாட்டே அவனது இறுதிக் குறிக்கோள்.

இந்த இரண்டு முறைகளில் நாம் ஏன் கீழ்ச்சாதி மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்போம். உலகில் மனித வடிவில் வணங்கப்படும் தெய்வங்களில் பெரும்பாலானவை வீர வணக்கத்திலிருந்து உருவானவையே. கட்டுத்திட்டமான நெறிமுறைகளை உடைய யூத மதத்தின் யகோவா வணக்கம் மோசேயைச் சிந்திக்காமல் நடைபெறுவதில்லை. அதே போல் முகமது நபி இல்லாமல் அல்லா இல்லை. இயேசு ஆகிய மகன் இன்றி ஆண்டவர் ஆகிய “தந்தை” இல்லை. இவையெல்லாம் வீர வழிபாட்டின் திரிந்த வடிவங்களே.

தமிழகத்திலும் வீர வழிபாடு நினைவுக் கெட்டாத காலந்தொட்டு வருவது. வீரச்செயல் புரிந்தோருக்கு நடுகல் நடுவது நமது மரபு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் (தொல். பொருள் 60)

என்று அதற்கு இலக்கணமும் வகுக்கப் பட்டிருக்கிறது.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
(அகம் 131)

போன்ற விளக்கங்களும் காணக்கிடக்கின்றன.

இயற்கையை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு வழிகாட்டியோர், எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்தோர், மக்களுக்குத் தொண்டாற்றியோர், பெருமைக்குரிய முன்னோர், செயற்கரிய செய்தோர், போர்க்களத்தில் வீரமரணம் எய்தியோர், இயற்கையல்லா முறையில் இறந்தோர் சிறு தெய்வங்களாயினர். வன்கொலையாக இளம் பருவத்தில் வாழ்க்கையை நுகரா நிலையில் மாண்டோர், சூலியாக மாண்ட பெண்கள், கொல்லப்பட்டோர் ஆகியோர் பேய் வடிவில் தம் கொலைக்குக் காரணமானவர்களை அல்லது தொய்வுறாத தமது இளமைத் துடிப்பு காரணமாக பொதுமக்களைத் துன்புறுத்துவர் என்ற அச்சத்தாலும் வணங்கப்பட்டனர். மற்றும் நன்மை அல்லது தீமை செய்யும் விலங்குகள், மரங்கள் போன்று உயிருள்ளவையும் உயிரற்றவையாகிய ஆறுகள், மலைகள், கடல்களும், கோள்கள், நாண்மீன்கள் போன்ற வான் பொருட்களும் கூட வணக்கத்துக்கு உரியவையாகின்றன.

இவ்வாறு வீர வணக்கத்திலிருந்து தோன்றி அவற்றின் தோற்றச் சூழலிலிருந்து அயற்பட்டும் அயற்படுத்தப்பட்டும் பல சிறு தெய்வங்கள் “பதவி உயர்வு” பெற்றுப் பெருந் தெய்வங்களாகியுள்ளன. இந்தப் பதவி உயர்த்தம் அனைத்தும் அவற்றை வணங்குவோர் பொருளியலில் அல்லது அரசியலில் உயர்வடைந்ததன் விளைவாகவோ அல்லது அத்தகைய முயற்சிகளுக்குத் துணையாகவோ நடைபெற்றுள்ளன என்பது அவற்றின் வரலாறுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் புலப்படும். அரசியல் காரணியே முனைப்பாகச் செயற்பட்டுள்ளது பெரும்பான்மை.

நம் நாட்டில் சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்துப் பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள அல்லது சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாக்கப் பல முயற்சிகள் நடந்துள்ளன. புதிய சமயங்களின் பின்னணியில் புதிய ஆளும் வகுப்புகள் உருவான காலங்களில் அவற்றின் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து செல்வத்தில் அல்லது செல்வாக்கில் வளர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகிவிட்ட நிலையில் தோன்றிய தலைவர்களும் பொதுச் சீர்த்திருத்தத் தலைவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களைச் சிவன், காளி, திருமால் ஆகியோரோடு உறவுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை எய்த அவர்கள் முனைந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவின. புதிய கதைகளும் புராணங்களின் கட்டற்ற பெருக்கமுமே ஒரே பயனாக இருந்துள்ளது. பழைய தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் போது புதுப் புதுத் தெய்வங்களும் புதுப்புதுப் புராணங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும், ஒவ்வொரு தெய்வத்தின் வரலாற்றையும் அணுகி ஆய்வோருக்கு அவற்றின் மீது படிந்திருக்கும் சமய, அரசியல் சுவடுகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றிலிருந்து தெய்வங்களையும் தெய்வங்களிலிருந்து வரலாற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அணுகல் உதவும்.

நாகரீகத் தொடக்கத்தில் மனிதன் இயற்கையையும் பிற மனிதக் கூட்டங்களையும் எதிர்த்து இடைவிடாத போராட்டம் நடத்த வேண்டியிருந்த சூழ்நிலையில் அவனுக்கு இரு வகைகளிலும் அருந்தொண்டாற்றியவர்களின் நினைவை அவன் போற்றியதில் தவறேதுமில்லை. இன்றும் பொருளியலிலும் அதனால் அறிவு வாய்ப்பிலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளும், இயற்கை ஆற்றல்களை விட மனிதனின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட குமுக ஆற்றல்களின் முன் ஈடு கொடுத்து நிற்க முடியாத குமுகச் சூழல்களும் தலைவர் வழிபாட்டை உருவாக்கியது தவிர்க்க முடியாததாகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கத்தில் மக்களுக்கும் தனியாட்களான தலைவர்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாக இருந்து, பின்னர் அது பகை முரண்பாடாகவும் ஆனால் அகவறுமை காரணமாக மக்களால் புரிந்து கொள்ள முடியாமலும் மாறுகிறது. மக்களிடையில் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் குறையுந் தோறும், அதன் விளைவாகவும் காரணமாகவும் மக்களிடையிலுள்ள உறவுகள் மேம்படுந்தோறும் இந்தப் பகை முரண்பாடு மீண்டும் நட்பு முரண்பாடாக மாறும். அப்போது இந்தத் தலைவர் வழிபாடு என்பது சிறந்தோரைப் போற்றுதல் என்பதாக மாறும். இன்று பொருள் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குமுக அமைப்பிலிருந்து விடுபடும் போது மனிதனை இயக்கும் விசை குமுக ஏற்பு என்ற குறிக்கோளாகவே அமையும். எனவே அப்போது சிறந்தோரைப் போற்றுதல் என்பது குமுகத்தின் நலனுக்கு எதிராக இருக்க முடியாது.

சிறந்தோரைப் போற்றுதல் என்பதிலிருந்த சிறு தெய்வ வழிபாடாகி முழு முதற் கடவுள் வழிபாட்டிற் சென்று நிற்கும் இன்றைய நிலையிலிருந்து சிறந்தோரைப் போற்றுதல் என்ற நிலையைப் புதிய சூழ்நிலைகளில் எய்த வேண்டுமாயின் சிறு தெய்வ வழிபாட்டை நம் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு சிறு தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்வு செய்து அதன் உண்மையான குமுகக் குறிதகவை மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களது பண்பாட்டை உயர்த்த வேண்டும். ஆய்வு நிலையில் பேரா.நா. வானமாமலை சில அடிப்படைப் பணிகளைப் புரிந்து (சில தவறுகள், முற்கோள்கள்[2] இருந்தாலும்) வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த மக்களின் உண்மையான சிக்கல்களைக் கையிலெடுத்து அவற்றின் மெய்யான தீர்வுக்குச் சரியான வழிகாட்டி அவர்களை வழிநடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் இயக்கத்தால் தான் இப்பணியை முழுமையாக்கி நடத்தி வெற்றி பெற முடியும்.

இந்த இடத்தில் வரலாற்றில் “உயர்நிலை”த் தெய்வங்களைக் கைவிட்டு வீர வழிபாட்டுக்கு மாறிய ஒரு மக்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சப்பானியர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட “பேரரசு மீட்பியக்கம்” (Meiji Restoration) அதுவரை அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த மேற்சாதி மதமான புத்தத்தைப் புறக்கணித்து விட்டு வீர வழிபாட்டுச் சமயமான சிண்டோயியத்தை (Shintoism)த் தேசியச் சமயமாக்கியது. அதன் விளைவாக அதுவரை இழிவுபடுத்தப்பட்டு வந்த பெரும்பான்மையான கீழ்ச்சாதி மக்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் உடலுழைப்பின் மீது மதிப்பும் உருவாகி இன்றைய புதிய சப்பான் உருவாவதற்கு அடிப்படையான உளவியல் சூழ்நிலை ஏற்பட்டது. நம் நாட்டில் இத்தகைய வீர வழிபாடான சிறு தெய்வங்கள் கீழ்ச்சாதிகளிலிருந்து அல்லது அவர்களது வாழ்வில் தொடர்பு கொண்ட தனி மனிதர்களிலிருந்து உண்டானவை. எனவே அவ்வழிபாட்டை உயர்த்திப் பிடிப்பதென்பது அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதாகவும் பொருள்படும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகும். அதிலிருந்து புதிய குமுகத்தைப் படைப்பதில் அவர்களது முழு ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைக்கும்.

ஆனால் பழைய மதங்களை நாம் அப்படியே என்றென்றும் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சமயமில்லா, கடவுளில்லா, மூடநம்பிக்கைகளில்லா ஒரு குமுகத்தைப் படைக்க வேண்டுமென்பதே நம் இறுதிக் குறிக்கோள். ஆனால் அதை எய்துவதற்குள் சில இடைநிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இயற்கையாற்றல்களும் குமுக விசைகளும் மனிதனின் கட்டுக்குள் இல்லாமலிருக்கும் வரை கடவுள் நம்பிக்கை ஏதோவொரு வடிவத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். ஆனால் அது குமுக வளர்ச்சிக்குத் தடையாயில்லாத வகையில் இருக்க வேண்டும்.

பெருந்தெய்வ வழிபாடு முழுக்க முழுக்க மன்னராட்சி மற்றும் நிலக்கிழமை மற்றும் வருணக் குமுக அமைப்பின் எதிரொளிப்பாகவும் அதற்கு வலுவூட்டுவதுமாகவே உள்ளது. மன்னர்களுக்குச் செய்யும் 16 வகைப் பணிவிடைகள் (சோடச உபசாரம்) தேர் ஊர்தல், வாகன உலா, கொடியேற்றுதல் முதலிய அனைத்தும் அக்குமுக அமைப்பையே எதிரொளிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் பூசகருக்குக் கருவறை, அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்மண்டபம். வணிகருக்கும் வேளாளருக்கும் திருச்சுற்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வெளிப்புறம் என்று வருண முறையிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

நிறைய சொத்துகளும் பெரும் உண்டியல் வருமானமும் உள்ள கோயில்களில் கூட திருவிழாவின் போது பெரும்பான்மை நாட்களும் பல்வேறு தரப்பு மக்களால் திருப்பணி(உபயம்)யாகவே விழா நடைபெறுகிறது. கோயில் வருமானத்திலிருந்து செய்யப்படும் செலவு மிகக்குறைவே. கோயில் வருமானத்தை தக்கார், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இறுதியில் ஏதாவதிருந்தால் பூசகர் ஆகியோர் கொள்ளையிட்டுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள நன்செய் நிலங்களின் பரப்பில் நான்கிலொரு பங்கு திருக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் உடைமையாயிருக்கின்றன என்று ஒரு புள்ளிக் கணக்கு குறிப்பிடுகிறது. இவற்றின் பயன்பாடு குத்தகையாளான் முழு ஆதிக்கத்தினுள் சென்றால் வேளாண்மைச் செல்வம் பெருகும். அது போலவே பெரும்பரப்புகளில் கோயில்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களும். “ஊர் கூடித் தேரிழுத்தல்” என்ற ஒரு சொலவடையை பழமையாளர்கள் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர். ஆனால் உண்மையில் தேரிழுக்கும் போது வெளிப்படுவது நம் மக்களின் ஒற்றுமையல்ல, வேற்றுமைகளே. தேர் என்னும் பெயரில் மரக்கட்டைகளின் ஒருபெரும் குவியல் மீது ஒரு பொம்மையை வைத்து இழுக்கும் கேலிக்கூத்தே தேரோட்டம். இதில் பூணூலணிந்த பார்ப்பான் தேரில் வைத்து இழுக்கப்படுவான். முதல் வரிசை (மரியாதை)க்காரரென்றும் அறங்காவலரென்றும் தக்காரென்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் என்றும் மேன்மக்கள் வடத்தைத் தொட்டு “இசைவு” வழங்குவர். பிற மக்கள் உடல் வருந்தி இழுப்பர். கட்டை போடுவதற்கென்று தனிச் சாதியார். பெரும்பாலும் மேற்சாதியினர், போற்றி(அர்ச்சனை)த் தட்டைக் காணிக்கையுடன் நீட்டுவர். இவ்வாறு தேரிழுக்கும் நடைமுறையில் நம் குமுகத்தில் நிலவும் அனைத்துச் சாதி, வகுப்பு வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை எல்லாக் கோயில்களிலும் “ஊர் கூடித் தேரிழுத்து” வந்த மக்கள் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டிருப்பார்களானால் வாணிகத்துக்காக இந்நாட்டினுள் நுழைந்த ஐரோப்பியக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆளலாமென்ற எண்ணமும் அதன் அடுத்த கட்டமாக ஆளவேண்டுமென்ற அவாவும் அதனடிப்படையில் அதற்கான முயற்சிகளும் அதன் விளைவாக இருநூறாண்டு அடிமைத்தனமும் விளைந்திருக்காது. இது நிகழ்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய 250 ஆண்டுக்காலம் (1600 - 1850) “ஊர் கூடித் தேரிழுத்த நம் “ஒற்றுமை” எங்கே போய் ஒளிந்து கொண்டது?

பல நூறு தன்கள் எடையுள்ள மரத்தைத் தேர் என்று சொல்லி அதில் ஒரு பொம்மையையும் பார்ப்பனர்களையும் வைத்து இழுப்பதும், மக்களுக்கு உண்மையான ஆர்வமில்லா நிலையில் பாரதிய சனதா கட்சி, இந்து முன்னணி, இரா.சே.ச. போன்ற பழமையாளர்கள் தெருத் தெருவாக மக்களைக் கெஞ்சித் திரிவதும் தேவையற்ற கிறுக்குத் தனங்கள். தேர் மரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு விட்டுத் தேர்த் திருவிழாக்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி முறை நிலவுகிறது. அத்துடன் தனித்தனிச் சாதிகளுக்கு ஒரே தெய்வத்துக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் பல இடங்களில் தோன்றியுள்ளன. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றும் ஒரே கோயிலில் தனித்தனித் திருவிழாக்கள் அல்லது கொடைவிழாக்கள் நடத்தப்படும் அளவுக்கு இப்போராட்டங்கள் முன்னேறியுள்ளன.

மொத்தத்தில் நம் குமுகத்திலுள்ள வழிபாட்டு முறையே சாதிகளற்ற ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு உகந்ததாயில்லை. எனவே அனைத்து மக்களும் சமத்துவத்துடன் அமைதியாகக் கலந்து எளிமையாகத் தம் மன அமைதியைத் தேடும் வகையில் கிறித்தவம், முகம்மதியம் போன்ற சமயங்களில் உள்ளவாறு அகன்ற, காற்றோட்டமும் வெளிச்சமுமுடைய தூய வழிபாட்டு மண்டபங்களில் வழிபாடு செய்யும் வகையில் உள்நாட்டு மதத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துகளைப் பரப்பும் “ஆன்மிக”த் தலைவர் எவராவது உருவானால் அவருடன் தோளோடு தோள் நின்று அந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் பெருங்கோயில்கள் எடுத்து அவற்றுக்கு நிறைய நிலங்களும் எழுதி வைக்கும் பழக்கம் மன்னர்களிடையில் வேர் கொண்டது. சோழப் பேரரசின் காலத்தில் அரசின் ஓர் உறுப்பாகவே கோயில்கள் செயற்படத் தொடங்கிவிட்டன. மக்களிடம் வரி தண்டுவதிலிருந்து நலப்பணிகள் செய்வது, படையணிகள் பராமரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் கோயில்கள் ஈடுபட்டன. இன்றோ அத்தகைய பணிகள் எதுவுமில்லை. கடவுளுக்குப் படையல் செய்வது, இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என்ற அளவில் சிறிய பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் பெரும் பணம் சுரண்டப்படுகிறது. எனவே இயல்பாகவே நிலங்கள் குத்தகையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. இந்நிலங்களை கோயில்களுக்கு மீட்க வேண்டும் என்ற குரல் வலுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்குரல் கொடுப்பவர் எவருமில்லை.

மன்னராட்சிக் காலத்தில் அரசின் அனைத்துப் பணிகளுமே கோயில்கள் மூலம் செய்யப்பட்டதால் அதற்குத் தேவையான பொருளியல் அடிப்படைக்கு நிலங்கள் தேவைப்பட்டன. இன்றோ வழிபாடு தவிர கோயில்கள் வேறெந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.

பண்டைக் கோயில்களில் பெரும்பாலானவை முன்பு கருவறை மட்டும் இருந்து பின்னர் வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் ஒவ்வொரு சுற்றாக விரிவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே கட்டிட வடிவமைப்பு ஒழுங்கற்றதாகவும் உள்ளே செல்லச் செல்ல காற்றும் வெளிச்சமும் புக முடியாத நிலையில் இருளடைந்து வெளவால்களின் உறைவிடமாகி ஈரமும் நாற்றமும் கொண்டு விளங்குகின்றன. ஒரு நலமான வழிபாட்டுக்கு இவை தகுதியற்றவையாகிவிட்டன. எனவே இக்கோயில்களைத் தகர்த்து விடலாம். கோயிலின் சொத்துக்களைக் குத்தகையாளருக்குச் சந்தை விலையில் பாதி விலையை வாங்கிக் கொண்டு கொடுத்துவிடலாம். பொதுமக்களின் குத்தகைச் சொத்துகளில் இந்நடைமுறையே கையாளப்படுகிறது. இதன் மூலம் நிலங்களின் விளைப்புத் திறன் உயரும். அந்நிலங்களில் பயிரிட்டு வரும் கீழ்ச்சாதி மக்கள் இதனால் பயன் பெறுவர். ஆங்காங்கிருக்கும் சிறு தெய்வக் கோயில்களைக் கூட இடித்துவிட்டு ஒவ்வொரு பகுதிக் கென்று மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெறும் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் கொண்ட கோயில்களைக் கட்டலாம். கோயில் பராமரிப்புச் செலவை அவ்வப்பகுதி மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாம். நாள் செல்லச் செல்ல, குமுகம் முன்னேற முன்னேற இந்தக் கோயிலும் செல்வாக்கிழந்து கோயிலில்லா, கடவுளில்லா குமுகம் உருவாகும். கோயில்களைப் பராமரிக்க பணம் செலுத்துவதில் மக்கள் காட்டும் ஆர்வம் அல்லது ஆர்வமின்மையே சமயத்தின் அல்லது கோயிலின் தேவை அல்லது தேவையின்மையை அளக்கும் அளவு கோலாகிவிடும்.

அடிக்குறிப்புகள்:

[1] மிலட்டன் சிங்கர் எனும் மேனாட்டு அறிஞர் இக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று தெரிகிறது.
[2] முற்கோள் : Prejudice

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 1. அறிமுகம்

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச் சகதியினுள் சிக்கித் தடுமாறினர். பின்னர் சீனத்தில் மாசேதுங் பண்பாட்டுப் புரட்சியை நடத்திய பிற்பாடு அவரைப் பின்பற்றியோர் பீக்கிங்கில் பெய்த மழைக்கு இங்கு குடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு மழைவிட்ட பின்னரும் இங்கு குடை பிடிப்பது நிற்கவில்லை; பொருளியல் சிக்கல்களைத் தொழிற்சங்க வாணிகர்களின் மொத்த வேட்டைக் களமாக்கிவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பண்பாட்டுப் பணிகள் என்ற பெயரால் வெறும் கலை இலக்கியங்களைக் கிளறி அதிலேயே இன்பம் காணுகின்றனர். எழுதப் பேனாவும் தாளும் அச்சிட அச்சகமும் சுவர்களில் விளம்பரம் எழுதவும் விற்றுக் கொடுக்கவும் நன்கொடை தண்டவும் இளைஞர் கூட்டமும் இருப்பதால் இதழ்கள் நடத்துவதோடு தங்கள் “பண்பாட்டுப் பணி” நிறைவு பெற்றதாக நம்பிவிடுகின்றனர். அல்லது நம்பச் சொல்கின்றனர். இந்த நிலையில் பண்பாடு என்பது என்ன, பொருளியல் வாழ்வுக்கும் அதற்கும் உரிய உறவு என்ன, பண்பாட்டுப் பணியில் கலை, இலக்கியம் ஆகியவற்றின் இடம் யாது, தமிழகம் இன்றுள்ள நிலையில் பொருளியல், பண்பாட்டுக் கலை இலக்கியப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாகிறோம்.

பண்பாடு என்பதை மார்க்சியம் குமுகத் (சமுகத்) தன்னுணர்வு என்ற சொல்லால் குறிக்கிறது. இதில், ஒரு மக்களின் சமயம், உணவு முறை, திருமண உறவுகள், அவர்கள் அணியும் உடை, சட்டங்கள், அரசியல் அமைப்பு, மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், நம்பிக்கைகள், சடங்குகள், அவர்கள் கொண்டாடும் திருநாட்கள், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை அடங்கும். அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை படைப்பு விசைகளான பொருளியல் அடித்தளத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அதே வேளையில் பொருளியல் அடித்தளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையான வடிவங்களில் வடித்துக் காட்டுவனவாகக் கலையும் இலக்கியமும் செயற்படுகின்றன.

பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் தேக்கி வைத்து அவற்றை வளப்படுத்துவதிலும் அதன் மூலம் தான் வளர்வதிலும் மொழி செயற்படுத்துகிறது. கலை இலக்கிய வடிவங்களில் பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதில் மொழியே எலும்பும் சதையுமாகச் செயற்படுகிறது.

கலை இலக்கியம் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ப் பெரும் புலவர் இளங்கோவடிகள் கூறுகிறார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்(து) ஓங்கிய
பாடலும் எழாலும்[1] பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென்(று) அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநல் நீழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து ….,
த்

தன் நூலை முடிக்கின்றார்.
[2]

சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பற்றி லெனின் பருப்பொருளியமும் பட்டறிவுத் திறனாய்வும்[3] என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.
[4]

ஆனால் வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் பொருளுக்கும் கண்ணாடியில் அதன் நிழலுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. கலை இலக்கியங்கள் தங்கள் தாக்கத்தைக் குமுகத்தின் மீது ஏற்படுத்த முடியும். ஆயினும் அவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி அளவோடு இருந்தால் தான் இது நடைபெறும். இந்த எல்லையைத் தாண்டிக் கலை இலக்கியம் செல்ல முற்பட்டால் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் வேடிக்கைப் பொருளாக அல்லது கனவாக மாறிவிடும். வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள இந்த இடைவெளியும் நிலையானதல்ல. குமுக மாற்ற வேகத்திற்கேற்ப அது கூடிக் குறையும்.

பண்பாடு என்ற பெயரால் கலை இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பது இவ்வகையில் நிழலைப் பிடிக்க முயல்வது போன்றதே. இவ்வாறு பண்பாட்டைத் தொடாத கலை இலக்கிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு பண்பாட்டுச் சிக்கலினுள் நுழைவோம்.

ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் இருவேறு பண்பாடுகள் உள்ளன என்று லெனின் கூறினார். சொற்களில் கூறவதாயின் இவை இரண்டும் உழைக்கும் மக்களின் பண்பாடும் உடமை வகுப்பின் பண்பாடும் ஆகும். நம் நாட்டின் இப்பண்பாடுகள் எவ்வாறு நிலவுகின்றன என்று பார்ப்போம்.

நம் நாட்டில் சாதி அடுக்குகளுக்கும் பொருளியில் வகுப்பு அடுக்குகளுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஓர் ஒத்திசைவு உண்டு. எனவே மேற்கூறபட்ட இரு பண்பாடுகளும் சாதிப் பண்பாடுகளாகவே நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன் நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வரலாற்றுப் போக்கில் பொருளியலில் மேல் நிலையிலிருந்த பல மக்கள் குழுவினர் அரசியல் மாற்றங்களினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களிடம் முன்பு நிலவிய சில உடைமை வகுப்புப் பண்பாட்டுக் கூறுகள் அல்லது கருத்துக்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இன்றைய பொருளியல் நிலைமையின் காரணமாகப் பலர் இப்பண்பாட்டுக் கூறுகளைக் கைவிட்டாலும் இன்று நாம் அவற்றின் இடத்தில் கடைப்பிடிக்கும் புதிய கூறுகளைப் இழித்துக் கூறுவதன் மூலம் தம் முன்னாள் பண்பாட்டையே தாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த நிகழ்முறையை மனதில் கொண்டால் தான் நம் குமுகப் போக்கை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் மேற்சாதியினரும் கீழ்ச்சாதியினரும் அடிப்படையில் முற்றிலும் வேறுவேறான இரு பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் ஒரே மண்ணில் வாழ்வதாலும் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத தொடர்புகளினாலும் பல வேளைகளில் இவ்விரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் துல்லியமாக அறிய முடியாமல் கூட இருக்கும். பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்களால் கீழ்ச்சாதியினரால் சிலர் மேம்பாடு அடையும் போது மேற்சாதிப் பண்பாடுகளைக் கைக்கொள்கின்றனர். இந்த நிகழ்முறை நம் மண்ணில் தொன்று தொட்டே நிலவி வரும் ஒன்றாகும். இதனைப் புதுப்பார்ப்பனியம் என்று நம்மில் சிலர் அழைக்கின்றோம். இந்த நிகழ்முறையை நாம் புதிதாக அறிகிறோமே தவிர நிகழ்முறை புதிதல்ல. எனவே இதனைப் பார்ப்பனியம் என்றே அழைக்க வேண்டும். தான் தன் சாதியினரின் சராசரிப் பொருளியல் நிலையை விட உயர்வடையும் போது தன் சாதியினரையும் அவர்களுடைய பண்பாட்டையும் இழிவாக் கருதி மேல் சாதியினருடன், அவர்கள் எட்டி உதைத்தாலும் அவ்வாறு உதைத்த காலை கட்டிப்படித்துக் கொண்டு உறவாடுவதைத் தான் பார்ப்பனியம் என்று கூற வேண்டும். இதுவே பார்ப்பனர்களின் தொடர்ச்சியான மேலாண்மைக்கு உயிரூற்றாகவும் கீழ்ச்சாதியினரின் மீளா அடிமைத் தனத்துக்கு உரமாகவும் விளங்குகிறது.

பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வெளியே வந்தாலும் கூட நம் நாட்டிலுள்ள மேற்சாதியினர் உட்பட்ட “பார்ப்பனியர்கள்” (புதுப்பார்ப்பனர் என்பதைப் பார்ப்பனியர்கள் என்ற சொல்லால் குறிப்பதே சரி என்று கருதுகிறேன்.) அதை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வேறு வகை வாழ்க்கையில் புக முயன்றால் இந்தப் பார்ப்பனியர்கள் உடனே கூக்குரலிடுவர். வள்ளுவர் கூட,

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

(வேதத்தைப் பார்ப்பான் மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் தன் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது) என்று கூறினார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர் மழை
புருச னைக்கொன்ற பூவையர்க் கோர் மழை
வருசம் மூன்றும ழையெனப் பெய்யுமே.

என்று மழை தப்புவதற்கான காரணங்களை விவேக சிந்தாமணி தொகுத்துக் கூறுகிறது.

“குலவொழுக்கம் குன்றிய் பார்ப்பான் கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடப்படுகிறான். புத்தர் முதல் செயகாந்தன் வரை உண்மையான பார்ப்பனனின் இலக்கணத்தைக் கூறுவதன் மூலம் இதே கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய பண்பாடுகளில் பார்ப்பனர்களும் அவர்களை ஒட்டி பிற மேற்சாதியினரும் பின்பற்றுகிற ஒழுக்கங்களை ஆரிய ஒழுக்கங்கள் என்றும் கீழ்ச்சாதியினர் அவற்றைக் கைகொள்ளுவதைச் சங்கதப்படுத்துதல் (Sanskritisation) என்றும் கூறுகின்றனர் குமுக இயல் ஆய்வாளர்கள்.[5] ஆனால் சங்கதத்துக்கோ வேதத்துக்குரியவர் என்று நம்பப்படும் ஆரியர்களுக்கோ இந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் எந்தத் தொடர்புமில்லை. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை மேற்கொள்வோம்.

வேதங்களோ வேள்வி நடத்தும் பார்ப்பனரோ ஊன் உணவை விலக்கவில்லை. உயிர்க்கொலை வேள்விகளை நடத்துவதே வேதிய (வைதீக) சமயமாகிய பார்ப்பன சமயமாகும். இதனை எதிர்த்தவையே புத்தமும் சமணமும். புத்த தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாறு இதனைத் தெற்றென விளக்குகிறது. வேள்வியில் பலியிடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஆமாட்டை அவிழ்த்து விடுவித்துவிட்டான் என்பதற்காகப் பார்ப்பனர்களால் தன் பார்ப்பன வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவன் துரத்தப்படுகிறான். இதிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பார்ப்பனர்கள் வேள்விகளில் மாட்டை அடித்துத் தின்று வந்தார்கள் அல்லது அத்தகைய கருத்து நிலவியது என்பது புலனாகிறது. பண்டப் படைப்பு வளர்ச்சியாலும் வேளாண்மை மற்றும் வாணிக வளர்ச்சிகளின் தேவைக்காகவும் ஏற்பட்ட மாட்டு உழைப்பின் தேவையால் மாட்டு வேள்வி எதிர்ப்பு உருவாகியது. பின்னர் வாணிகர்களின் மதமாகிய சமணத்தால் உயிர்க்கொலை எதிர்ப்பாக மட்டுமின்றி மூக்கில் திரையும் கையில் மயிற்பீலியும் இருட்டறை வாழ்வுமாகக் கோணல் வடிவம் பெற்றதே மரக்கறி உணவின் தோற்றம். அதே போல் பெண்ணின் அப்பழுக்கற்ற கற்பு வேதங்களிலோ புராணங்களிலோ வேண்டப்படவில்லை. அரசர்களின் மனைவிகள் ஆண்பிள்ளை பெறுவதற்காகக் கணவனின் உடன்பிறந்தோர், தாயாதிகள், குலகுரு, யாராவது ஒரு துறவி அல்லது எந்த ஓர் ஆண்மகன், பலிகொடுக்கப்பட்ட குதிரை இவர்களுடனெல்லாம் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டனர். தலைமகன் உரிமை (Male primogeniture) என்ற அடிப்படையில் அரசன் இறந்த பின் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் குழப்பங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டிய ஒரு குமுகக் கடமையாக அவள் இவையனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. பார்ப்பனத் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் மணமகள் மணமகனுக்குத் தன்னை ஒப்படைக்கும் முன் யார் யாருக்கு உடமைப்பட்டவள் என்பது தொகுத்துக் கூறப்படுகிறது.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத் திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய “உயர்ந்த” பண்பாட்டுக் கூறகளை யெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு ஒவ்வொரு மேற்சாதிப் பண்பாட்டுக் கூறும் பணம் படைத்த பூரியப் பண்பாட்டுக் கூறு என்பதை நாம் பின்னால் விளக்குவோம். மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ்வொழுக்கங்கள் பார்ப்பனர்ககுரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல். பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல். கைம்பென் மறுமணத்தை மறுத்தல். மணவிலக்கு. மறுமணம் ஆகியவற்றை விலக்கல். உழைப்பை வெறுத்தல். சாதிவேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல். ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கையாள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது என்பதை இங்கு சொல்லி விடுகிறோம். எனவே மேற்சாதிப் பண்பாட்டு ஒழுக்கங்களைக் கீழ்ச் சாதியினர் கைக்கொள்ளும் செயல்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதை விட “பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவும் கருத்தைத் தெளிவாக விளக்குவதாகவும் அமையும்.

பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசும் நம் நாட்டிலுள்ள எந்தக் குழுவுக்கும் நாம் இங்கு கூற இருப்பவை தான் நம் நாட்டில் நிலவும் உண்மையான பண்பாட்டுக் கூறுகள் என்ற சிந்தனை கூடக் கிடையாது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். அடுத்து, அவர்கள் கூறும் புதிய பண்பாடு எது என்பதிலோ அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டுமென்பதிலோ சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் சில கலை, இலக்கியங்களைத் திறனாய்வதும் அக்கப்போர் அரசியல் பேசுவதும் “புதிய மக்களாட்சிப் புரட்சி” நடந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதும் தான். எதுவென்று தாங்களே அறியாதவர்கள், எங்கிருக்கிறோம் என்பதையும் அறியாத நிலையில் பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசுவது நம் நாட்டில் உள்ள இரங்கத்தக்க நிலைகளில் மிகக் கொடியது. நிற்கிற இடமும் அறியாமல் கடக்க வேண்டிய பாதையும் புரியாமல் இலக்கிலும் தெளிவில்லாமல் புதிய பண்பாட்டைப் பற்றிக் கூக்குரல் எழுப்பும் இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நமது தேடுதலைத் தொடர்வோம்.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நடக்க வேண்டுமாயின் முதலில் ஒரு காலை நின்ற இடத்தில் ஊன்றிக்கொண்டு மறுகாலைத் தூக்க வேண்டும். நமது குமுகத்தில் இருவேறு பண்பாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எதில் நாம் காலை ஊன்றிக்கொள்ள வேண்டும் எதிலிருந்து காலை நகர்த்த வேண்டுமென்று பார்ப்போம். ஒரு பாட்டாளி வகுப்புப் பண்பாட்டைப் படைப்பது நமது இலக்கு என்ற தெளிவிலிருந்து நாம் தொடங்க வேண்டும். நாம் மேலே கூறிய இரண்டு வகைப் பண்பாடுகளிலும் உழைக்கும் மக்களின் பண்பாடாக விளங்குவது கீழ்ச்சாதியினரின் பண்பாடே என்பதை நாம் காணலாம்.

பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வோம். இந்த ஆய்வில் முற்பட்ட சாதிகள் மேற்சாதிகளென்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் கீழ்ச்சாதிகளென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நாட்டுப்புறங்களில் நிலவுவற்றையும் மேற்சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நகர்ப்புறங்களில் நிலவுபவற்றையும் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இனி பண்பாட்டுக் கூறுகளை பார்ப்போம்.



அடிக்குறிப்புகள்:

[1] எழால் - யாழ்

[2] சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

[3] Materialism and Emprio Criticism

[4] சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மேலை உலகில் தோன்றி வளர்ந்தது. சங்கம் மருவிய காலத்துக்கு (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு) உரிய சிலப்பதிகாரத்தில் இலக்கியம் பற்றிய இத்தகைய தெளிவான கோட்பாடு உருவான குமுகச் சூழல் பற்றிப் பேசினால் நம் “மார்க்சியத்” தோழர்களுக்குக் எரிச்சல் வரும். சங்க காலத்தைக் குக்குலங்களின் (பழங்குடியினர்) காலமென்று காட்டவே அவர்கள் விரும்புவர். தொல்காப்பியத்தில் காணப்படும் எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் காட்டும் உயர்ந்த நாகரீகப் பின்னணியைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்காது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்ததென்று காட்டும் பார்ப்பனியச் சிந்தனை. இன்னொன்று குமுகம் எப்போதும் முன்னோக்கியே நகரும் என்ற தவறான கருத்து அல்லது பொய்யான வாதம். முதல் காரணமே பெரும்பாலும் இரண்டாம் காரணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பேரா.க.சிவத்தம்பி, பேரா. கைலாசபதி ஆகியோர் இச்சிந்தனைகளை வளர்த்துப் பரப்பிய மிகப்பெரும் “மார்க்சியர்கள்” என்ற பெருமைக்கு உரியவர்கள். இப்பணியைத் தொடங்கி வைத்த பேரா.நா.வானமாமலையையும் நாம் மறந்து விடக்கூடாது. மார்க்கியம் என்பது தமிழ்பப் பழிப்பு, தமிழ் ஒழிப்பு என்பதே என்ற மனப்பான்மையைப் பரப்பியோரில் இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

[5] சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச்சொல்லைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச் சண்முகனார் அதை “மேனிலையாக்கம்” என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழிமையும் விட மேம்பட்டவை என்பதைச் “சங்கதப்படுத்தல்” என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவே தான் “மேனிலையாக்கம்” என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் - ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.