எட்டுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எட்டுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.8.07

புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வுக்கு மறுமொழி

அன்புடையீர் வணக்கம்.

எனது 8 கட்டுரைகள் அவை குறித்த 19.4.95 நாளிட்ட தங்கள் திறனாய்வுடன் கிடைத்தன. அதில் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடைகளையும் என் சில ஐயப்பாடுகளையும் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

குமரிமைந்தன் யார்?

இயற்பெயர்
செ. பெரியநாடார்

புனைபெயர்கள்
குமரிமைந்தன், பேயன்

பிறந்த இடம்
குமரி மாவட்டம்

பிறந்த நாள்
04-05-1939

பெற்றோர்
செல்லப்பெருமாள் - அன்னவடிவு

கல்வி
பொது - இடைநிலை வகுப்பு

தொழில் - எல்.சி.இ. (பொதுப் பொறியியல் உரிமம்)

வேலை
1960 முதல் 1983 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அலுவராகப் பணி. பின்பு விருப்ப ஓய்வு பெற்று சொந்தத் தொழில்.

அரசியல் சார்பு

தோற்றம் - திராவிட இயக்கம்
மலர்ச்சி - தனித் தமிழ் இயக்கம்
முதிர்ச்சி - மார்க்சியம்.

எழுத்துப்பணி

ஆக்கிய நூல்கள்
1. பஃறுளி முதல் வையை வரை
2. தமிழகச் குமுக வரலாறு-வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும்
3. விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும்
4. நலிந்து வரும் நாட்டுப்புறம்

தமிழாக்கம்
1. பொறியியற் கல்லூரிக் கைநூல்-பாசனம் ஆசிரியர் டபுள்யூ.எம். எல்லிசு.
2. சோசலிச நடப்பியமும் இன்றைய இலக்கிய நிகழ்முறையும் ஆசிரியர்: ஓவ்ச்சாரெங்கோ வெளியீடு: நியூ செஞ்சரி புத்தக நிலையம்.

இனி கட்டுரைகளுக்கு வருவோம்:

பாசனம், பாலைத்திணை, தைப்பொங்கல் பற்றிய கட்டுரைகளை மனந்திறந்து பாராட்டியுள்ளமைக்கு என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிவு மறைவில்லா உங்கள் நேர்மையான திறனாய்வுப் பண்புக்கு என் பாராட்டுகள்.

வீட்டைக் கட்டிப்பார்:

'வங்கிக் கடன்களினால் பயம்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்' என்று நான் கூறியிருப்பதற்குக் கொதித்துப் போயிருக்கிறீர்கள். அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான் என்று சாவடியிருக்கிறீர்கள். முதலில் நான் குறிப்பிட்டிருப்பது வீடுகட்டும் கடன் பற்றி. நீங்கள் ஒரு அரசியல் வாதியாகவோ தொழில் முதலாளியாகவோ இல்லாமலிருந்தால் நகைக்கடன் போன்ற சில்லரைக் கடன்களுக்குத் தான் வங்கியை நாடுவோம். அந்த மட்டத்திலிருந்து நான் பேசுகிறேன். இரண்டாவதாக, வங்கியோடு தொடர்பில்லாத அரசியல்வாதி எப்படி வங்கிப் பணத்தை விழுங்க முடிந்தது? 45.000 கோடி உரூபாய் திரும்பப்பெற முடியாத கடனாய் எப்படிப் பாழானது? நாட்டுடைமையாக்கம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் கையில் உங்கள் கட்சியினர் கொண்ட முயற்சி தானே காரணம்? நாற்பத்தைந்து ஆயிரம் கோடி மக்கள் பணம் பாழாவது எத்தனை தனியார் வங்கிகள் திவாலாலும் நிகழாதே! இப்போதாவது அரசுடைமைக்கு எதிராள நீங்கள் குரல்கொடுக்க ஆயத்தமா? உயரதிகாரிகளின் கைகளிலும் அரசியல்வாதிகளின் கைகளிலும் 85 கோடி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை, பொருளியல் வாழ்வினை அடகுவைப்பது தான் சோசலிசமா? கூட்டுறவுத்துறை போன்றவையும் அத்தகையவை தானே?

வருமான வரி தேவையா?

உங்கள் எதிர்ப்பில் சாரமில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருப்பதால் இங்கும் தேவை என்கிறீர்கள். யாருடைய நோக்கம் நன்னோக்கம்? முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்காமல் மக்களை அவர்கள் கொள்ளையடிக்க விட்டுவிட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்வதைக் கட்டுரை தெளிவாகக் கூறியுள்ளதே! முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்களென்றால் அரசு அதைத் தடுக்க வேண்டும். இல்லாத நிலையில் அது சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் தானே! அதில் எத்தனை நூற்றுமேனி கருப்புப் பணம் என்ற கணிப்பே வருமானவரித்துறை அவ்வப்போது நிறுவும் வரியில்லா வருமானத்தின் உச்சவரம்பு அடிப்படையில் தானே! அரசியல்வாணர்களும் கொள்ளைக்காரர்களும் சுருட்டும் பல கோடிக்கணக்கான கள்ளப்பணம் சட்டப்படி ஈட்டப்பட்ட இந்தக் ′′கருப்புப் பணம்′′ போல் பறிமுதல் செய்யப்படுவதில்லையே! ஆளும் கும்பலில் இந்த அடாவடியினால்லவா பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்கள் முடங்கிப் போய் பன்னாட்டு நிறுவனங்களும் உலகவங்கியும் பணக்கார நாடுகளிலுள்ள கயவாளிகளெல்லாம் இந்த மண்ணில் முதலை விதைத்து வளமெல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் வகையில் மூலதன வெற்றிடம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது? இதற்கு உங்கள் அணுகல் தானே மூலகாரணம் .

அந்த ஆறடி நிலம் யாருக்கு?

வீடு கட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளையல்ல அரசு தரும் தொல்லைகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன். வீட்டைக் கட்டிப்பார் கட்டுரையோடு தொடர்புடையது இது. உலக வங்கியின் முதலீட்டுக்களமான வீடமைப்பு வாரியத்துடன் சேர்ந்து தமிழக அரசு பொது மக்களின் வீடுகட்டும் நடவடிக்கைகளை முடமாக்குகிறது என்பது கட்டுரையின் கரு. உங்களுக்கத் தான் அரசும் அதன் உறுப்புகளும் அவற்றின் அதிகாரிகளும் புரட்சியின் மூலவிசைகளாயிற்றே! இத்தகைய கட்டுரைகளின் சாரம் எங்கே புரியப் போகிறது?

நிலவுடைமைக் குளறுபடிகள்

நிலப் பிரச்சனை என்ன?
பொதுமை இயக்கம் ஊழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை வைத்துள்ளது. இதில் உழுபவன் என்பது நிலத்தைக் குத்தகைக்குப் பயிரிடுவோனையும் உழுதொழிலாளியையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகும். இதில் பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம் என்பது சரியான நிலைப்பாடு, ஏனென்றால் குத்தகை முறை என்பது பண்டை நிலக்கிழமை(நிலப்பிரபுத்துவம் - Feudalism)யின் தொடர்ச்சி அல்லது நிலத்தைத் தீண்டாத நிலவுடைமை (Absentee landlordism)யின் விளைவு. முதல் முறையில் உழவன் நிலத்திலிருந்து விடுபட முடியாதவாறு தளைப்பட்டிருக்கிறான். நிலமும் அவ்வாறே தளைப்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை அகற்றி நிலம் அதன் உடமையாளரால் நேரடியாகப் பயிர்செய்யப்படுவதால் நிலவுடைமையாளனின் கவனிப்பும் ஈடுபாடும் அதன் மூலம் நிலத்தின் விளைதிறனும் உயர்கின்றன. நிலவுடைமையாளனும் பயிரிடுவோனும் ஒன்றாகிவிடுவதால் அவன் தன் நிலத்தை விற்றுவிட்டு மாற்றுத் தொழிலில் இறங்கும் உரிமையையும் பெற்றுவிடுகிறான். இதன் மூலம் பெருநிலவுடைமைகள் உருவாகி முதலாளிய வேளாண்மை உருவாவதற்கு வழியேற்படும். ஐரோப்பாவின் நிலக்கிழமைச் குமுகம் உடைந்து முதலாளியம் தோன்றுவதற்கு இந்தக் குத்தகை ஒழிப்பு தான் வழிகோலியது. இதைத்தான் நானும் பரிந்துரைத்துள்ளேன். உழுதொழிலாளியை நிலவுடைமையாளனாக்குதல் அவனைப் புதிய அடிமைத் தனத்துக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பட்டறிவுள்ள குறு உழவன் ஒருவனைக் கேட்டீர்களாயின் புரிந்து கொள்ளலாம்.

நில உச்ச வரம்பு என்பது இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் குழப்பமானது. குத்தகையாக நிலங்களை விட்டிருக்கும் ஒருவன் அதே நிலையில் உச்சவரம்புக்கு ஆளானால் உச்சவரம்புக்குட்பட்ட நிலம் குத்தகையொழிப்புக்கு ஆளாகுமா? சொந்தப் பயிரிடும் நிலம் உச்சவரம்புக்கு மிகுந்திருந்தால் அது பறிக்கப்படுமா? என்பதெல்லாம் தெளிவாக இல்லை. சொந்தப்பயிரில் இருக்கும் நிலம் உச்ச வரம்புக்கு ஆளாவது அதாவது துண்டு துணுக்குகளாவது குமுக வளர்ச்சித் திசைக்கு எதிரான செயலாகும்.

இங்கு மார்க்சியத்தில் அடிப்படை ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். குமுக வளர்ச்சி என்பது முந்தியல் பொதுமை, அடிமைச் குமுகம், நிலக்கிழமையியம், முதலாளியம், பொதுமை என்ற வரிசையில் நிகழ்கிறது என்பது மார்க்சின் முடிவு. இவற்றில் எந்தவொரு கட்டத்தினுள்ளும் நுழையாமல் தாண்டி இன்னொரு கட்டத்தினுள் தாவிக்குதிக்க முடியாது என்பது அவரது திட்டவட்டமான முடிவு. புதிய கட்டத்தின் பேறுகால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்பது அவரது கூற்று. இந்த அடிப்படையில் முதலாளியத்துக்கு முந்தியதாகிய நமது குமுகம் (பணக்கார நாடுகள் தங்கள் மூலதனத்தையும் தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு நிறுவியுள்ள தொழிற்சாலைகளை வைத்து நம் நாடு முதலாளிய நாடு என்று வாதிடுவது தவறு. பழைய சாதி சார்ந்த விளைப்பு முறைகள் முற்றிலும் உடைபட்டு, மலைகளில் வாழும் ஆதிவாசிகளும் நிலத்துக்கு வந்து முதலாளிய விளைப்பு முறையில் ஈடுபட்டு, குடும்ப அமைப்பு தகர்ந்து, சமயம் கேள்விக்குரியதாகி வரும் நிலை தான் நாம் முதலாளியத்தினுள் முழுமையாக நுழைந்து விட்டதற்கு அறிகுறி. இந்நிலை வராமல் தடுப்பதற்கே இயக்கங்களை மார்க்சிய இயக்கங்கள் நடத்துவது தான் வரலாற்று அவலம்) முதலாளியத்தினுள் நுழைய வேண்டுமானால் கோயில் நிலங்கள் உட்பட (கோயில் நிலங்களைப் பற்றி நீங்கள் மூச்சுவிடுவதே கிடையாதே ஏன்?) அனைத்துக் குத்தகை நிலங்களும் பயிரிடுவோர்க்குச் சொந்தமாக வேண்டும். அதன் மூலம் பெருநில உடைமைகள் உருவாகி சிறு நில உடைமையாளர்கள் முதலாளிய வேளாண்மையின் தொழிலாளர்களாக வேண்டும். இந்த இடைமாற்றத்தின் போது சிறு உடைமையாளர்களுக்குப் பெரும் இன்னல்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது தான் மார்க்சியர்களின் கடமை.

நிலக்கிழமைச் குமுகத்திலிருந்து முதலாளியச் குமுகத்துக்கு மாறிச் செல்வது ஒரு குமுக முன்னேற்றம என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொதுமைக் கட்சி அறிக்கையில் ஐரோப்பாவில் முதலாளியச் குமுகம் உருவாகிய நிலையில் பழைய மூடநம்பிக்கைகள், கீழ்ந்தரமான குமுக உறவுகள் போன்றவை எவ்வாறு உடைந்து சிதறின என்பதை விளக்கி அந்தக் கட்டத்தில் முதலாளியத்தின் இந்த முற்போக்குத் தன்மை பற்றி மார்க்சும் ஏங்கல்சும் மனம் மகிழ்ந்து பாராட்டியிருப்பதைப் படித்திருப்பீர்கள். எனவே குத்தகை நிலம் சொந்த நிலமாவது முற்போக்கு தான்.

சிறுவுடைமை பெருவுடைமையாவது முற்போக்கு தான். சொந்தப் பயிரிடும் நிலம் உடைந்து சிதறுவது வளர்ச்சிக்கு எதிரானது தான். பெருவுடைமையும் அது வேளாண்மையாயிருந்தாலும் தொழில்துறையாயிருந்தாலும் அதில் உழைக்கும் தொழிலாளர்களும் முதலாளியத்துக்கு அடுத்த கட்டமாகிய சோசலிசத்தின் இன்றியமையாத உறுப்புகள். அந்த உறுப்புகளை உருவாக்குகவதே மார்க்சியர்களின் வரலாற்றுக் கடமை.

நிலவுடைமையராகியுள்ள முன்னாள் குத்தகையாளர்கள் விரைந்து வளர்வதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ. ஆனால் அது இன்று நடைமூறை உண்மை.

நேரு மரபினரும் நரசிம்மராவும் நிலஉச்சவரம்பைச் செயற்படுத்தவில்லை என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் உச்சவரம்புச் சட்டம் நிலத்தை முடமாக்கவே பயன்படுகிறது என்னும் என் கருத்தில் என்ன பிழை?

உழுபவன் என்பவன் பயிரிடுவோனா? உழுதொழிலாளியா? குத்தகை ஒழிப்பு பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன அருள்கூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நிலச்சுவான்தார் எனும் சொல் நிலப்பிரபு அல்லாத சொந்தப் பயிரிடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? குத்தகைக்கு நிலத்தை விடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? அல்லது மூவருக்கும் பொதுவானதா? நான் வேளாண்மையை. முதலாளிய முறையில், முழுவதும் சொந்தப் பொறுப்பில் செய்பவரிடம் நிலங்கள் திரள வேண்டுமென்று கூறுகிறேன். அது தான் மார்க்சியம் காட்டும் வழி.

ஒதுக்கீடும் ஏழ்மையும்:

ஆடம்ஸ்மித்தைக் குறை சொல்லியிருப்பதை ஒரு குறையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

வரலாறு தெரிந்த நாள் முதல் உலக வாணிகம் என்பது உலக வாணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குழுவுடன் அந்தந்த நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்நாட்டுக் குழுக்கள் கூட்டுச் சேர்ந்து அனைத்து மக்களையும் கசக்கிப் பிழிவதாகும். பினீசியர்கள் தொடங்கி இன்றைய ′′காட்′′ ஒப்பந்தக்காரர்கள் வரை நிலமை மாறவில்லை. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியே இவ்வகை வாணிகக் குழுக்களின் நடவடிக்கைகளிலிருந்து தான் உருவானது. அத்தொழிற்புரட்சியின் பொருளியல் கணக்கனான ஆடம்ஸ்மித் அத்தகைய வாணிக நலன்களை முன்னிட்டுத் தானே கோட்பாடுகளை வகுத்துள்ளார்?

இந்தப் பொருளியல் பின்னனியில் உருவாள பாராளுமன்ற மக்களாட்சி அரசியல்வாணர்களும் அதிகாரிகள் கூட்டமும் இவ்விருசாரார்க்கு வேண்டியவர்களுமாக நடத்தும் குழவாட்சி நிலையிலிருந்து மீளவில்லை. குழுக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்கேற்ற குழுவினராட்சி(Oligarchy) தான் பாராளுமன்ற மக்களாட்சி. பணக்கார நாடுகளில் உள்ள 25 நூற்றுமேனி மக்களுக்கு உலக முழுவதுமுள்ள செல்வங்கள் சென்று பாய்வதால் பாராளுமன்ற வடிவத்தில் குழுவாட்சி உள்ளடக்கம் அவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றவில்லை. ஏழை நாடுகளில் அது துலக்கமாகத் தெரிகிறது. எனவே இக்குழுவினராட்சிமுறையை ஒழித்துப் பொதுமக்கள் யாவரும் பங்கு கொள்ளும் புதிய வகையிலான மக்களாட்சி மலர வேண்டுமாயின் ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தம் நாட்டு வளங்களைத் தத்தம் நாட்டு மூலதனத்துடனும் உழைப்புடனும் தத்தம் நுகர்வுக்கேற்ற வகையில் உழைத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வந்நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு அவ்வந்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டும். அதற்கு முதற்படித் தேவை அரசிடமிருந்து உள்நாட்டு, மற்றும் எல்லைக் காவல், நீதிமன்றங்கள், பணப்புழக்கம், வெளிச் செலாவணி போன்ற துறைகள் தவிர பொருளியல் நடவடிக்கை அனைத்தையும் பிடுங்கி அவற்றில் உள்நாட்டு மக்களுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலமைந்த ஐரோப்பியப் பொருளியல் கோட்பாடுகளைக் குறை கூறியுள்ளேன்.

சோசலிசத்தைக் குறை கூறவில்லை, போலி சோசலிசத்தைத் தான் குறை கூறியுள்ளேன். அண்மைக் காலத்தில் 1953க்குப் பின்னர் பொதுமைக் கட்சி கடைப்பிடித்து வரும் செயல் திட்டத்தைத் தான் குறை கூறியுள்ளேன். வங்கிகளை அரசுடைமையாக்குதல், கூட்டுறவு அமைப்பின் கீழ் மரபுத் தொழில்களைக் கொண்டு வருவது, தொழில்களை அரசுடைமையாக்குவது, உணவுப் பொருட்கள் அனைத்தின் கொள்முதலையும் விற்பனையையும் அரசே மேற்கொள்வது நிலத்தை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பது, வருமானவரி மூலம் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவது என்பதாகும் அது.

இதே கோட்பாடுகளைக் கொண்டு உருவான இன்னொரு இயக்கம் சோசலிச அனைத்துலகியம். இது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. லோகியா, ராசநாராயணன், சார்சு பெர்ணாண்டோ ஆகியோர் இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள். இவ்வியக்கம் மார்க்சு காலத்திலேயே உருவாகி விட்டது. இதைக் கற்பனைச் சோசலிசம் என்று மார்க்சு குறிப்பிட்டுள்ளார். தான் பரிந்துரைக்கும் சோசலிசத்தை அறிவியல் சோசலிசம் என்றும் பொதுமையியம் என்றும் குறிப்பிட்டார். அதைப் புரட்சிகர சோசலிசம் என்றும் கூறினார். இருக்கும் அரசுப் பொறியைத் தகர்த்தெறிந்து பாட்டாளி மக்களின் முற்றதிகாரத்தின் கீழ் அனைத்து விளைப்பு வகைதுறைகளையும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக்கி வகுப்பில்லா ஒரு குமுகத்தை நோக்கிச் செலுத்தி அரசே தேவையில்லா நிலையை உருவாக்க வேண்டுமேன்று அவர் கூறினார். இதை சோசலிசக் கட்டம் என்றும் பொதுமைக் கட்டம் என்றும் இரண்டாய்ப் பிரித்தவர் லெனின் தான். உருசியாவில் நடந்தது ஒரு சோசலிசப் புரட்சியா இல்லையா என்பதில் அவர் பெரும் குழப்பம் அடைந்திருந்தார் (லெனினையமா குறை சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா! மார்க்சும் லெனினும் மனிதர்கள் தானே! வளர்ச்சியென்பது தட்டுத்துதருமாறிய முன்னேற்றம் தானே!) அதனால் முதலாளியத்துக்குள் நுழையாமல் நிலக்கிழமையிலிருந்து நேரடியாக பொதுமையினுள் நுழையும் முயற்சி தோல்வியுற்றது. மாறாக முதலாளியத்தினுள் நுழைவதாகத் திட்டம் தீட்டியிருந்தால் சப்பானைப் போல் 20 ஆண்டுகளில் முதலாளியத்தை நோக்கித் தான் மட்டுமல்ல ஏழை நாடுகள் அனைத்தையும் இட்டுச் சென்று இன்று உலக மக்கள் பண்பாட்டில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குள் நுழைய ஆயத்தமாக்கியிருக்கலாம்.

இன்று நீங்கள் கைக்கொண்டிருக்கும் செயல் திட்டமும் மார்க்சும் ஏங்கல்சும் கற்பனைச் சோசலிசம் என்று நகையாடிய போலிச் சோசலிசமும் ஒன்று தான். நீங்கள் சோவியத் முகாமுக்கு ஆதரவாக நின்றீர்கள்; அவர்கள் அமெரிக்க முகாமுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அடிப்படையில் இரு குழுவினரும் வல்லரசு நாடுகள் எளிதாக இங்கு நுழைந்நு தம் பொருளியல் பேரரசுகளை அமைத்துக் கொள்வதற்குத் தேவையான பொருளியல் வெற்றிடங்களை உருவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.

தவறான அணுகுமுறையால் மக்களாட்சிப் பட்டறிவில்லாத சோவியத் மக்களை அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் சுரண்டிக் கொழுந்திருந்தனர்; அதனை உடைக்கக் கோர்ப்பசேவ் முயன்றபோது அவரது துனைவர் ஒருவர் கூறினார், ஊழலால் ஆட்சியாளர்களிடம்(அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும்) திரண்டிருக்கும் செல்வத்தை ஏற்றுக் கொண்டு அதை அவர்கள் தொழில்களில் முதலீடு செய்ய வகைசெய்தால் சோவியத்தின் பொருளியல் நெருக்கடியிலிருந்து தப்பலாம் என்று. கோர்ப்பசேன் மாறாக அமெரிக்காவின் கால்களில் வீழ்ந்தார். குடும்பத்தைப் பட்டினிபோட்டு காரல்மார்க்சு உருவாக்கிய கோட்பாடு, வாழ்நாளின் பெரும் பகுதியைத் தலைமறைவாகக் கழித்த லெனினின் கனவுகள் கோடிக்கணக்கான சோவியத் மக்களின் குருதி அனைத்தும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்ததாலும் தெளிவின்மையாலும் இரண்டகங்களாலும் வீணாயின.

இந்தப் பாடங்களிலிருந்து பெறப்படுவது என்னவென்றால் மார்க்சு முதலாளியத்தை எய்திய நாடுகள் நிகர்மையை எய்துவதற்காக செயல்திட்டத்தைத் தான் வகுத்துத் தந்தாரேயோழிய ஏழை நாடுகள் முதலாளியத்தினுள் நுழைவதற்கான செயற்திட்டத்தை வகுத்துத் தரவில்லை. அது இப்போது தேவைப்படுகிறது. எனவே ஏழை நாடுகள் முழுமையான முதலாளியத்தினுள் நுழைவதற்காக செயற்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்கு வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் முதலாளிய விளைப்பு முறைகளை வேளாண்மையிலும் தொழில்துறையிலும் புகுத்துவதற்கு வசதியாக பெருநிலஉடைமை (நிலப்பிரபுத்துவமோ குத்தகை வேளாண்மையா அல்ல) பெருந்தொழில் அமைப்புகள் வேண்டும் என்கிறேன்.

எனக்கொரு ஐயம் Capialism என்ற சொல்லுக்கு தனியுடைமை என்று பொருள் கொண்டிருக்கிறீர்களோவென்று. ஏழைநாடுகளில் இன்று நிலவுவது தனியுடைமை மட்டும் தான். பணக்கார நாடுகளில் தான் அதாவது மார்க்சின் சுற்றுப்படி Classical Capitalism நிலவுகிறது. அனைத்து விளைப்பு வகைதுறைகளும்(Means of Production) விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கைகளில் குவிவது, பெரும்பான்மை மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாறுவது. இது தான் பொதுமையியத்துக்கு முந்தியதாக அதற்கு முன்னோடியாக அமையத்தக்க பொருளியல் அமைப்பென்று மார்க்சு கூறினார். இங்கு மாற்றம் மிக எளிது. தனிஉடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க அந்த ஒரு சிலரை அகற்றிவிட்டால் பெரும்பெரும் பொருளியல் அமைப்புகளைத் தொழிலாளர்களே கையாண்டுவிடலாம். எனவே பெரும் முதலாளியத்தைப் பரிந்துரைத்தன் மூலம் மார்க்சியத்திலிருந்து நழுவி விட்டதாக நான் கருதவில்லை.

சோவியத் ஒன்றியம் கலைந்து போய்விட்டதால் மார்க்சியம் தோற்றுவிட்டதாய் நான் கருதவில்லை. மழலைப் பருவத்து மார்க்சியம் தன் தவறுகளின் விளைவைச் சந்தித்துவிட்டது. தவறுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறது. இக்காலகட்டத்தில் அதுபற்றிய ஒரு கலந்துரை தேவையென்று நீங்கள் கருதினால் என் கட்டுரையை உங்கள் திறனாய்வுகளுடனும் என் விளக்கங்களுடனும் வெளியிடலாம். முடிவு உங்கள் கையில்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

பெறல்:
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.

31.7.07

குமரிமைந்தனின் கட்டுரைகள் பற்றி புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வு

NEW CENTURY BOOK HOUSE PRIVATE LTD.,
PUBLICATION UNIT,
6, NALLATHAMBI STREET,
ANNA SALAI, MADRAS - 600 002.

நாள்:19-4-1995.

அன்புடையீர்,

தங்களின் 11-04-95 தேதியிட்ட கடிதம் கிடைத்தது.

தங்கள் கட்டுரைத் தொகுப்பை எமது ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில் அவர்களின் கருத்துரை திருப்திகரமாக இல்லாததினால் தங்களின் ஸ்கிரிப்டை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளோம்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

இங்ஙனம்,

திருமதி. மீனாட்சி,
செயல் அலுவலர்
நூல் வெளியீட்டுத்துறை

இணைப்பு: மேற்கண்டவாறு.



திறனாய்வுகள்


குமரிமைந்தன் - இவர் யார் என்று தெரியவில்லை.

1. வீட்டைக் கட்டிப்பார்

′வங்கிக் கடன்களால் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்′ என்று கூறுகிறார். இதை நடைமுறை உண்மை என்று வலியுறுத்துகிறார். இந்தத் தகவலை எங்குப் பெற்றார் என்று தெரியவில்லை. இது கடும் குற்றச்சாட்டு. வங்கிக்கடன்களால் பயன் பெறுவோர் அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான். அனைந்திந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்திய முதலாளிகள் எவ்வாறு வங்கி மூலதனத்தைக் கபளீகரம் செய்துவருகிறார்கள் எவ்வாறு பல வங்கிகள் மூடப்படும் நிலையில் உள்ளன என்று விளக்கமான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் நடைமுறையைப் பரிசீலித்த நரசிம்மம் குழு கூட இத்தகைய கடுமையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசியதில்லை. இக்கட்டுரை தினமணியில் 21.10.93ல் வெளிவந்ததாகவும் கூறுகிறார்.

2. வருமானவரி தேவையா?

எல்லா நாடுகளிலும் வருமானவரி அங்கீகரிக்கப்பட்ட வரி. ஆனால் வருமான வரி இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் வழி தீமையானது. நாட்டு முன்னேற்றத்திற்கும் ஏழைமக்களின் நல்வாழ்வுக்கும் வருமானம் பெறுவோர் பங்களிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுந்த வரி வருமானவரி. ஆசிரியர் வருமானவரியையே நீக்க வேண்டும் என்று வாதிக்கிறார். கொள்ளையடிக்கும் முதலாளிகளுடைய வாதம் வரியை நீக்கிவிட்டால் கறுப்புப்பணம் வெள்ளைப் பணமாகிவிடும் என்பது. ஆசிரியருடைய வாதமும் இதுவே.

3. அந்த ஆறடி நிலம் யாருக்கு?

இது வீடுகட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளை விவரிக்கிறது. ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது புரியவில்லை.

4. நிலவுடைமைக் குளறுபடிகள்.

தமிழகத்தில் இருந்த நில உரிமைகளை உறவுகளை எடுத்துக் காட்டுகிறார். உழுபவனுக்கே நிலம். நில உச்சவரம்பு என்னும் இரண்டு கோரிக்கைகளையும் நகையாடிச் சாடுகிறார். இதிலிருந்து இவர் நிலப்பிரச்சினையைச் சரியான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை என்பது தெரிகிறது. அவர் அளிக்கும் ஆலோசனைகளில், 1) வருவாய்த் துறைக்கு வரிதண்டுவது தவிர நிலவுடைமையில் எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பது. இது ஏறத்தாழ உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை மறைமுகமாகத் தாக்குவது எனலாம். 2) நில உச்சவரம்பு நிலம் முடமாக்குவதற்குப் பயன்படுகிறது. எனவே நில உச்ச வரம்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆலோசனைகள் பொதுவாக நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக உள்ளது காணலாம்.

5) பாசனம்.

இது ஒரு நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது.

6) ஒதுக்கீடும் ஏழ்மையும்.

இக்கட்டுரைத் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் ஆடம் ஸ்மித்தின் பொருளியல் கோட்பாடுகளையும் சோஷலிசத்தையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். நிலவுடைமை, தொழில் உடைமை (Landlordism, Capitalism) நாட்டுக்கு நலம் பயக்கும் என்று கூறுகிறார்.

7) பாலைத்திணை விடு(வி)க்கும் புதிர்கள்.

இது நல்ல தரமான கட்டுரை. ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

8) தைப் பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்.

பண்டைய தமிழகத்தில் வழக்கத்திலிருந்த வான நூல் பற்றிய ஆய்வுக் கட்டுரை இது. நல்ல முயற்சி. அரிய கருத்துக்கள் கொண்டது.

இதிலிருந்து பாசனம் என்ற கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகள் 2ம் தவிர மற்றவை என்.சி.பி.எச் ஆல் வெளியிடத்தக்கவையல்ல என்பது என் கருத்து.

- ஆசிரியர் குழு.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...4

முரண்பாடுகள்:

தொல்காப்பியம்தான் பொருளிலக்கணத்தை முழுமையான வடிவில் தமக்கு அளிக்கும் ஒரே நூல். நாம் மேலே கொண்‌டிருக்கும் முடிவுகளுக்கு முரண்பட்ட செய்திகளை அது தன்னுள் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. ஆனால் பாலைத்திணை எனும் புதிரை விடுவிக்கும்போது இருவேறு நிலப்பரப்புகளில் இருவேறு காலங்களில் இருவேறு சூழ்நி‌லைகளில் வாழ்ந்த மக்களிடையில் தோன்றிய பண்பாட்டுக் கோட்பாடுகள் ஒன்றன்மீதொன்று இந்நூலி‌ல் படிந்திருப்பதைப் பாலைத் திணை சுட்டி நிற்கிறது. ஒருவகை கோட்பாட்டை உருவாக்கிய மக்கள் தாம் வாழ்ந்த பகுதி அழிந்துவிடவே புதிய இடத்தில் குடியேறி உருக்குலைந்துவிட்ட தம் வாழ்வை மீட்பதில் ஒரளவு வெற்றிபெற்ற நிலையில் உருவான புதிய கோட்பாடு‌களைக் கொண்டு ‌பழைய கோட்பாடுகளை ‌மீட்டெழுதிய முயற்சியே தொல்காப்பியம் என்பதை பாலைத் திணை சுட்டி நிற்கிறது. இந்த இரண்டு அடுக்குகளிலிருந்தும் முதன் முதலில் தோன்றிய கோட்பாடு வரிசையை மீட்டமைக்கும் முயற்சியின் விளைவே மேலே தரப்பட்டிருக்கும் முடிவுகள்.

பொருளிலக்கணம், மாந்நநூல், குமுகவியல்:

இன்றைய மாந்த அறிவியலான மாந்தநூல் பொருளிலக்கணம் கையாண்டுள்ள அதே பொருட்களையே கையாள்கிறது. அவை,

1. பருப்பொருள் பின்புலம் - நிலமுமம் கால நிலையும்
2. சமயமும் நம்பிக்கைகளும்
3. உணவு
4. தொழில் நுட்பம்
5. நிகழ்த்து கலைகளும், நுண்கலைகளும் (கலை, இலக்கியம்)
6. குடும்பம்
7. குமுகியல் அமைப்பு
8. அரசியல்
9. மொழி

இவ‌ற்றையே பொருளிலக்கணத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை.

மாந்தநூல் எழுத்தறிவு பெறா மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை. எழுத்தறிவு பெற்ற மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை குமுகவியல் (சோசியலாஜி) எனப்படும். பொருளிலக்கணம் காட்டும் குமரிக் கண்ட‌த்தில் வாணிகப் பெருக்கமும் அரசியல் வளர்ச்சியும் எழுத்தறிவையும் இலக்கிய மேன்மையையு‌ம் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்குப் பொருளிலக்கணமே சான்று. ஒருவேளை குறிஞ்சி நில மக்கள் எழுத்தறிவை எய்தாமலிருந்திருக்கலாம். நெய்தலில் மிக உயர்ந்த் இலக்கிய வளர்ச்சியும் குறிஞ்சியில் மிக எளிமையான இலக்கியமும் அமைந்திருக்கலாம். அந்த வகையில் பொருளிலக்கணம் மாந்நூல் கலந்த குமுகவியல் நூல் என்பதே பொருந்தும்.

பொருளிலக்கணத்தின் நோக்கம்:

ஒரு ‌குமுகம் இன்னொரு குமுகத்தை அடக்கியாள்வதற்காகத் தான் அடக்க நினைக்கும் அல்லது அடக்கி வைத்திருக்கும் குமுகத்தின் பண்பா‌ட்டுக் கூறுகளை முழுமையாக அறிந்து கொள்ள முயல்கிறது. இவ்வாறுதான் எரோடோட்டசு முதல் எட்கார் தர்சுட்டன் வரையும் இன்று வல்லரசுகளின் பல்வேறு நிறுவனங்களும் பிற மக்களின் வரலாற்றையும் பண்பா‌ட்டுக் கூறுகளையும் ஆய்ந்து வந்திருக்கின்றனர். அதேபோல் குறிஞ்சி தொடங்கி நெய்தல் வரை தங்க‌ள் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த நெய்தலின் ஆட்சியாளர்களின் முயற்சியால் உருவானதே பொருளிலக்கணம். இப்போது தமிழ்க் கழகம்(சங்கம்) தோன்றுவதற்கான தேவையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பொருளிலக்கணம் காட்டும் குமுக வளர்ச்சி நிலை:

பொருளிலக்கணம் வெறும் மொழியிலக்கணமல்ல. மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பெரும் அறிவியல் சாறு அது. அதன் பல்வேறு சிதறல்களைத் தொல்காப்பியத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நம்மால் காண முடிகிறது. இதிலும் குறிப்பாகத்

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்......

என்று மனிதனி‌ன் தனித்தன்மையை வளர்த்தலைப் பிரித்துக் காட்டுவது உயர்ந்த ஒரு குமுகவியல் ஆய்வுத் துறையின் வளர்ச்சியையும் அதனோடு இணைந்து நடைபோட்ட பல்துறை வளர்ச்சியையும் நமக்குக் காட்டுகிறது. இதுவும் பாலைத்திணைக்கு உரியதே. இந்த வகையில் பாலைத் திணை தொல்காப்பியத்‌தின் எந்தக் கூறையும் புரிந்த கொள்ள உதவுவதால் தொல்காப்பியத்தைப் "பாலையியல்" என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று தோன்றுகிறது.

மனிதக் குழுக்கள் முதலில் தத்தம் மூதாதையரான ஒவ்வொரு பெண்ணின் பெயரில் அமைந்த வெவ்வேறு கூட்டங்களாக மலை முகடுகளிலிருந்து கடலோரம் வரை வாழ்ந்து வந்தனர். தங்கள் மூதாதையர் பெயரிலமைந்த இந்தக் கூட்டங்களுக்கு அம்மூதாதையரே தெய்வம். அத்தெய்வப் பூசாரியரே அவர்களின் தலைவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தத்தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களோடு தடங்கலின்றி பாலுறவு கொண்டு வந்தனர். தம் கூட்டத்தினர் ஒருவரின் இரத்தத்தைச் சிந்தும் வெளியார் எவரையும் பழி வாங்குதல் ஒவ்வொருவருரின் கடமையாகும். இத்தகைய மக்கட் கூட்டங்கள் மூலக்குடிகள் அல்லது குக்குலங்கள் எனப்படும்.

ஆனால் நாளடையில் மலையிலிருந்து கடல்வரையில் வாழ்ந்த இந்த மக்களிடையில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புகளுக்கேற்பப் பொருளியல் வேறுபாடுகளும் அதனடிப்படையில் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் வேறுபாடுக‌ளும் தோன்றின. ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த பிற கூட்டத்து மக்களிடமிருந்து தம் பண்பாடு வேறுபடுவதைவிட பிற பகுதியில் வாழ்ந்த தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகமாக மாறுவதை அவர்கள் கண்டனர். எனவே பழைய குக்குல உறவுகள் உடைபட்டு நிலஞ்சார்ந்த உறவுகள் வலுப்பெற்றன. பழைய குக்குலத் தெய்வங்களின் வழிபாடும் பூசாரித் தலைவர்களும் செல்வாக்கிழந்தனர். அவ்வாறு தான் தாய்த் தெய்வங்களுக்குப் பகரம் வருணன், இந்திரன், மாயோன், சேயோன் போன்ற தெய்வங்கள் தோன்றின. ஆனால் இந்த நானிலங்களிலுமிருந்து பிரிந்து பாலையில் ஒதுங்கிய மக்கள் மட்டும் தம் குக்குலத் தெய்வங்களின் எச்சமான ஐயை என்ற தாய்த் தெய்வத்தை வழிபட்டனர்.

இவ்வாறு குமரிக் கண்டத்தில் தோன்றிய பல்வேறு குக்குல மக்கள் தங்களிடையில் வளர்ச்சி ஏற்படுத்திய வேற்றுமைகளின் விளைவாக நிலத்தால் பிரிந்தும் அதே காரணத்தால் தோன்றிய ஒற்றுமையால் நிலத்தால் இணைந்தும் நாகரிகத்தில் ஓர் உயர்ந்த மட்டத்தை எய்திய ஒரு கட்டத்தைப் பொருளிலக்கணம் காட்டுகிறது. இதில் பாலைநிலம் ஒரு நடுவான இடத்தை நிலத்தில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் பெறுகிறது.

அ‌ன்றும் இன்றும்:

மேலே குறிப்பிட்டுள்ளவாறு குமரிக் கண்டத்தில் உயர்நிலை எய்திய நாகரிகம் நிலவியது என்ற தமது கருத்து கற்பனையானதாகவும் தற்பெருமை கூறுவதாகவும் தோன்றுவது இயல்பு. ஏனென்றால் அத்தகைய ஒரு வளர்ச்சி நிலையில் நம் மு‌‌ன்னோர்கள் இருந்திருப்பார்களென்பதை இன்று நாமே நம்ப முடியாத அளவுக்கு நம் நிலை தாழ்ந்திருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள முடிவுகளை எய்த ஐரோப்பிய நாகரிகம் இன்று வளர்த்தெடுத்திருக்கும் அறிவியல்களின் துணை வேண்டியிருக்கிறது. அவ்வறிவியலின் முடிவுகளே நமது தொல் நாகரிகச் சிறப்பின் உயர்வை அளந்து காண உதவும் கருவியாகவும் அளவுகோலாகவும் ஆகுமளவுக்கு நாம் பின்னடைந்து விட்டோம். பின்னடைவு என்பது இங்கு பின் தங்குதலைக் குறிப்பிடவில்லை, பின் வாங்குதலை, பின்நோக்கிச் சென்றதைக் குறிக்கிறது.

மார்க்சின் தோழர் ஏங்கல்சு தான் எழுதிய குடும்பம், த‌னிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் அரசு தோன்றுவதற்கு முதற்படியாக மக்கள் குக்குலங்களாகப் பிரிந்‌திருப்பதிலிருந்து நிலத்தினடிப்படையில் பிரியத் தொடங்குகின்றனர் என்று கூறுகிறார்.


தொல்காப்பியத்தின் மூலம் நாம் காணும் பொருளிலக்கணமும் அப்பொருளிலக்கணத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற அறிவியற் துறைகளின் செறிவும் இப்பல்வேறு துறைகள் தத்தமக்குரிய நூல்களைக் கொண்டு விளங்கியமையைக் கா‌ட்கிறது. இவற்றைச் சுட்டிக்கா‌ட்டுவதன் நோக்கம் தற்பெருமை பேசுவதற்கோ தருக்கித் திரிவதற்கோ அல்ல. நம் முன்னோர் எய்தி‌யுள்ள இம்மேன்மையை எய்தும் திறன் நமக்குண்டு என்ற தன்னம்பிக்கையையும், அத்தகைய உயர்நிலையை மீண்டும் எய்த வேண்டும் என்ற ஊக்கத்தையும் நாம் பெற வேண்‌டும் என்பதற்காகத் தான். வரலாறு என்பது ஓர் உரிமை முறி ம‌ட்டுமல்ல போர்க்கருவியுமாகும். அதனை இன்னும் கூராக்குவோம்.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...3

ஐந்திணைகளுக்கும் உரிய வாழ்க்கை முறைகள்:

மாந்தநூல் எனப்படுவது பழங்குடிகள் அல்லது ‌மூலக்குடி மக்களின் எழுத்தறிவுக்கு முந்திய வாழ்க்கை முறைகளை ஆயும் துறையாகும். மூலக்கு‌டிகள் மணவுறவில் அகமணக் குழுக்கள், புறமணக் குழுக்கள் என்ற பிரிவுகளைக் கொண்டவை. ஒவ்வொரு மூலக்குடியும் ஒரு அகமணக் குழுவாகும். அகமணக் குழு என்பது தமக்கு வெளியே மணவுறவு தடை செய்யப்பட்ட மக்கள் தொகுதியாகும். அவ்வகையில் இன்றைய சாதி ஒவ்வொன்றும் ஓர் அகமணக் குழுவாகும். ஆனால் இந்த அகமணக் குழு சிறு பிரிவுகளாகப் பிரிந்து புறமணக் குழுக்களாகின்றன. இந்தக் குழு‌க்கள் ஒவ்வொன்றின் உறுப்பி‌னரும் தமக்குள் மணவுறவு கொள்வதில்லை. தமக்கு வெளியிலுள்ள இன்னொரு பிரிவின் உறுப்பினர்களோடு தான் உறவு கொள்வர்.

குறிஞ்சித் திணை:

ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதி தொடக்க நிலையில் மனிதர்களிடையில் இருந்ததில்லை. ஒரு புறமணக் குழுவின் உறுப்‌பினர்கள் தமக்கு மணமுறையுள்ள இன்னொரு புறமணக் குழுவின் எதிர்பால் உறுப்பினரனைவருடனும் கட்டுப்பாடற்ற உறவு கொள்ளும் நிலை ஒரு கட்டத்தில் இருந்தது. திருமணம் என்ற ′′கரணம்′′ தோன்றுமுன் இவ்வாறு புணர்ந்த இருவர் சேர்ந்து வாழ்வதும் பழக்கமில்லை. எனவே இத்தகைய புறமணக் குழுக்கள் இரண்டு தனித்தனி இடங்களில் வாழ்ந்ததால் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு மணவுறவு கொள்வது? இதைத் தான் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய புணர்ச்சி குறிக்கிறது.

குறிஞ்சித் திணையின் ஆண் - பெண் ஒழுக்கம் என்பது புணர்ச்சி ம‌ட்டுமே. மணமுறைக்குரிய இரு வேறு புறமணக் குழுக்களைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தத்தமது வாழ்வி‌டங்களுக்கு வெளியே சந்திக்கும்போது ஒருவரையொருவர் விரும்பினால் கூடிப் பிரிவர். கூட்டத்தின் விளைவாகப் பிறக்கும் குழந்தை பெண்ணின் குழுவைச் சேரும். இது தாய்வழிக் குமுகத்துக்குரியது. அதே இணை மீண்டும் கூடுவது தற்செயலானதே. அவர்கள் வேறெவரோடும் கூட உறவு கொள்ளலாம். இதையே,

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப........


என்கிறார் தொல்காப்பியர். அதே இணையோ, வேறு இணையோ என்பதை வெவ்வேறு பிறவிகளில் என்று வருவித்துப் பொருள் கூறுவார் இளம்பூரணர். அவர் வருவித்த பிறவிகளை விட்டுவிட்டால் நமது முடிவுக்குத் தடை எதுவுமில்லை.

குறிஞ்சித் திணைக்குப் புறம் வெட்சி எனும் வேற்றுப் புல ஆநிரை கவர்தலாகும். இது உணவுக்காக முல்லை நிலத்தின் ஆநிரைகளைக் களவாடுதலும் அதினிமித்தம் நிகழும் போருமாகும். குறிஞ்சி மக்களின் உணவுக்கு வேட்டையும், காய், கனி கிழங்குகளைத் திரட்டலும் நிலவிய காலம். சிறிது பண்டமாற்றும் தொடங்கியிருக்கலாம். எனவே உணவுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முல்லை நிலத்து மாட்டைத் திருடினர் போலும்.

முல்லை:

முல்லை நிலத்தின் அகம் இருத்‌தல் ஆகும். இருத்தல் என்ற சொல் இன்று வழங்கும் அதே பொருளில் இங்கு கையாளப்பட்டிருக்கிறது. ஓர் ஆணும், பெண்ணும் திருமணமின்றிப் பொருந்தியிருப்பதை இன்று இருத்தல் என்கிறோம். அதேபோல் ஓர் ஆணும், பெண்ணும் தாம் இருவரும் விரும்பும் வரையில் பொருந்தியிருப்பதே முல்லையின் அகத்தினை உரிப்பொருள். கோவை இருளர் போன்ற மலைவாழ் மக்களிடையிலும் நாட்டுமக்கள் சிலரிடமும்(பெண்டுக்கு மேய்க்கி எனப்படும் ஆயர் பிரிவினரிடமும்) இம்முறை இன்றும் நிலவுகிறது.

இங்கு புறத்திணை வஞ்சி, மண்ணுக்காகப் போரிடல், (மண் நசைஇ வேந்தன்....) ஆநிரைகளைப் பெருக்குவதற்காக மேய்ச்சல் நிலத்துக்காகப் போரிடுவது, ஆநிரைகள் உணவுக்காகவன்றி விற்பனைக்காக ‌வளர்க்கப்படுகின்றன. வண்டி மாடுகள், உழவு மாடுகள், பொதி மாடுகள், கறவை ஆக்கள் என்றவாறு.

பாலை:

பாலை என்னும் அகத்திணை பிரிவு. இதுபற்றி இங்கு நாம் முன்பே கூறியுள்ளோம். பாலை மக்களின் வாழ்வு ஆறலைத்தலைச் சார்ந்தது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பாலை நிலத்தில் இயற்கையிலி‌ருந்து உணவை‌ப் பெற முடியாது. எனவே வழிப்பறித்துத் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த ஆறலைத்தலையும் பாலையின் கொடுமையையும் எதிர்கொள்ளும் து‌ணிவுடன் பாலையைக் கடப்போர் யா‌ர்? அவர்களின் நோக்கமென்ன? அவர்களை அதற்குத் தூண்டுவது யாது?

வாணிகம் என்று நமக்குத் தெரியும். எனவே பாலையின் இரு மருங்கும் உள்ளோர்க்கு இன்றியமையாதவை ஆகிவிட்ட பொருட்களில் வாணிகம் செய்வதற்காக வாணிகர்கள் இடர்கள் நிறைந்த பாலையைக் கடக்கிறார்கள். இந்த இடர்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு வாணிகம் ஆதாயம் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும். ஒருபுறமிருந்து மாடும் மலைபடு பொருட்களும் மறுபுறமிருந்து துணிமணிகள் பொன்ம(உலோக)ப் பொருள்கள், நெல், உப்பு, கருவாடு போன்றவையும் பாலையைக் கடந்திருக்கும். இந்த நிகழ்முறை குமுகத்தில் ஏற்பட்ட பிரிவின் விளைவாகவும் காரணமாகவும் அமைகிறது.

பண்டமாற்றும் அதிலிருந்து வாணிகமும் தோன்றும்வரை தனி மனிதர் எவருக்கும் தான் பிறந்து வளர்ந்த கூட்டத்துக்கு வெளியே வாழ்வென்பது கிடையாது. ஆனால் வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வாணிகக் குழுக்களின் உறுப்பினர்கள் தத்தம் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்துவந்து புதிய கூட்டமாக உருவானவர்கள். வாணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியில் வளம் குறைந்த இடங்களில் வழிப்பறியை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் வாணிகர்கள் தவிர்க்க முடியாதபடி போர்க்கலையில் சிறந்தவராயிருக்க வேண்டியது இன்றியமையாதது. எனவே போர்க்கலை வல்லவர்கள் வாணிகர்களாக மாறலாம் அல்லது வழிப்பறியாளர்களாக மாறலாம். அத்தகைய வழிப்பறியாளர்க்குச் சிறந்த வாழிடமாக அமைந்தது மனிதன் இயற்கையில் நிலைத்து வாழத்தக்க வளங்களைத் தராத பாலை நி‌லம்.

வாணிகம் செழித்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகவும் பின்னர் அதன் விளைவாகவும் அமைந்தது தொழில் வளர்ச்சி. நெசவு, கம்மியம், அணிகலன், தோல்தொழில் போன்ற இத்தொ‌ழில்க‌ளில் ஈடுபட்டவர்கள், தாம் இதுவரை பிறந்து வளர்ந்த மக்கள் கூட்டம் உழைத்து வாழ்ந்த நிலத்திலிருந்தும் த‌ம் கூட்டத்திலிருந்தும் பிரிந்தவர்கள். முன்பு தாம் பிறந்து வளர்ந்த கூட்டத்திலிருந்தும் அவர்களது வாழ்வின் அடித்தளமாக இருந்த நிலத்திலிருந்தும் பிரிந்து தனியே வாழ முடியாத தனி மனிதர்கள் இப்போது வாணிகராகவும், போர் வீரராகவும், வழிப்பறியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் பிரிந்து செல்ல முடிந்தது. அதனால் காதலர் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவும் உடன் போகவும் நேர்ந்‌தது. இந்‌த‌ப் பிரிவைச் சுட்டிநிற்பது பாலைத்திணை.

பாலைத் திணை காட்டும் வா‌ழ்வு அந்த நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வை மட்டுமல்ல ஐந்நிலங்களின் வாழ்நிலைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதையே உடன்போக்கும் பிரிவே என்ற புதிர் மூலம் அது விடுவித்துக் காட்டுகிறது. பாலையின் புறத்திணை வாகை. தத்தமக்குரிய திறனை மிகுதிப்படுத்துதல் என்று விளக்கம் கூறுகிறது தொல்காப்பியம். இதைச் சுருங்கக் கூறினால் மனிதன் தன் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். இதுவரை தத்தம் மக்கள் கூட்டத்தினுள் ஒவ்வொருவரது தனித்தன்மையும் அமுங்கிக்கிடந்தது. தனி வாழ்வும் கூட்டு வாழ்வும் பிரிக்க முடியாமலிருந்தால் தனி வாழ்வென்று ஒன்று கிடையாது. தனித்தன்மைகளின் வளர்ச்சிக்குக் கூட்டு வாழ்க்கை தவிர்க்க முடியாத ஒரு தடையாக இருந்தவந்தது. அத்தடை இப்போது உடைபட்டுவிட்டது. மனிதர்களின் தனிப் பண்புகள் வளரும் ‌சூழ்நிலையில் அவை ஆற்றலுடன் வெளிப்பட்டு குமுகத்தைப் புதுப்புதுப் துறைகளில் ஒரு பாய்ச்சலுடன் முன்தள்ளிச் செல்கிறது.

பாலை நிலப் போரில் ஈடுபடும் இரு கட்சியினரும் பிறரைத் தாம் மிஞ்சினால் தான், அதாவது எதிரியை அழித்தால்தான் தான் உயிர் பிழைக்க முடியும் என்று போரிடுகின்றனர். ஆறலைப்பவர் வென்றால்தான் அவர்கள் வாழ்வதற்கு உணவு கிடைக்கும். தாக்குதலுக்கு உள்ளானவர் வென்றால்தான் தாம் படு‌கொலைக்குத் தப்ப முடியும். இந்த வகையிலும்,

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.......

என்ற தொல்காப்பியர் கூற்று பொருந்தி வருகிறது.

மருதம்:

இங்கு குமுக அமைப்பே மாறித் தோன்றுகிறது. நீர்வளமும் நிலவளமும் வேளாண்மையை வளர்க்கின்றன. துணைத் தொழில்கள் பெருகுகின்றன. செல்வமும் வளமும் பெருகுகிறது. மருதமும் பாலையும் மயங்கும் வளம் குறைந்த பகுதி மக்களின் கொள்ளைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க நிலையான படையும் தலைவனும் உருவாகின்றனர். அவர்கள் பொறுப்பில் கோட்டைகள் கட்டப்பட்டுப் பாதுகாப்பு ஒப்படைக்கப்படுகிறது. கோட்டைக்குள் வேளாண்மையில் ஈடுபடாத மக்களும் வெளியே உழவர்களுமாக மக்கள் பிரிகிறார்கள். தலைமக்கள், புலமக்கள் என்ற பாகுபாடு கூர்மையடைகிறது. தலைமக்கள் சொத்துக்கு உரியவராகிறார். சொத்துடைமையின் விளைவாக ஆண் பெண் உறவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. கரணம் எனும் திருமணமுறை வருகிறது. நிலத்திலிருந்து விடுபட்ட தலைமக்களை மணந்து கொண்ட பெண்கள் தங்கள் நிலச் சொத்துரிமையை இழந்து கணவனோடு வாழ நேர்கிறது. எனவே பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை இருந்தாலும் சொத்துரிமை இல்லா நிலையில் கணவனைப் பிரிவதால் ஏற்படும் பொருளியல் விளைவுகளால் அவள் அந்த உரிமையைக் கையாள முடியாதவளாகிறாள். பிற பெண்களுக்காகவோ, பணியின் நிமித்தமோ தன்‌னைக் கணவன் பிரிந்து சென்றால் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது தவிர அவளுக்கு வேறு வழியில்‌லை. எனவே ஊடல் தான் மருதத்தின் அகத்திணை உரிப்பொருள்.

மருதத்தின் புறத்திணை உழிஞையாகும். இது ‌கோட்டையை முற்றுகையிட்டுக் கைக்கொள்வதற்கான போர். கோட்டையினுள் நிறைந்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிப்பது இதன் நோக்கம்.

நெய்தல்:

நெய்தல் நிலம் கடலை ஆள்பவரைத் தலைமக்களாகக் கொண்டவர்களின் நிலம். இங்கு கடல் வாணிகமு‌ம் கடலாதிக்கமும் மேலோங்கிய நிலை. கடலாதிக்கம் பிற நிலங்களின் மீதும் உள்நாட்டின் மீதும் ஆதி‌‌க்கத்திற்கு வழிவகுக்கும். உள்நா‌ட்டு வாணிகம் முழுவதும் இவர்கள் கையில். எனவே இவ‌ற்றை எய்தவும் காக்கவும் நிலையான வலிமை மிக்க படையும் அரசும் தேவை. இங்கு ஆணாதிக்கம் தன் உச்ச நிலையை எய்தியது. பெண் தன் கணவனைப் பிற பெண்களாலோ, சாவாலோ பிரிய நேர்ந்தால் கைம்மை[1] என்ற சிறை தவிர வேறு போக்‌கிடம் அற்றவளாகிறாள். கணவனையும் தன் விதியையும் எண்ணி இரங்குவதே அவள் நிலை.

நெய்தலின் புறத்திணை உரிப்பொருள் தும்பை. இதற்கு வலிமையைக் காட்டும் போர் என்று விளக்கம் கூறியுள்ளார் தொல்காப்பியர் (மைந்து பொருளாக.....). அதாவது ஆதிக்கம் தான் இதன் நோக்கம். ஆதிக்கத்தின் அடையாளமாகத் திறை பெறுவதும் அடிமைகளைப் பெறுவதும் இதன் நோக்கங்களாகலாம்.

வரலாற்றில் மெசப்பொட்டோமியாவில் ஆண்ட அசிரிய, பாரசீக அரசுகள் கொ‌ள்ளையை நோக்கமாகக் கொண்டு அமைந்த அரசுகள். படை வலிமையால் எதிரிககளை அழித்து அவர்கள் நாடுகளிலிருந்து கொள்ளைகள் மூலமும் திறை மூலமும் வாழ்ந்தவை. எனவே போர்களின் கொடுமை பெ‌‌ரிது. ஆனால் அலக்சாந்தரின் படையெடுப்பு அந்த அளவுக்குக் கொடியதல்ல என்று கூறப்படுகிறது. அவனது நோக்கம் தன் நாட்டுக்கு அடிமைகளை அனுப்புவதாகவே இருந்தது. எனவே எதிரிப் படைகளைக் கொன்றொழிப்பது கொள்கையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. பெர்சுப்போலிசு எனப்படும் பாரசீகத் தலைநகரை அழித்ததுகூடச் சோர்ந்துபோன தன் படை வீரர்கள் கொள்ளையின் மூலம் ஊக்கம் பெறவே எனக் கருதப்படுகிறது. மருத நிலத்தில் கொள்ளைக்காக கோட்டை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் நெய்தல் நிலத்தில் ஆதிக்கத்துக்காக நடத்தப்படும் போருக்கும் இவற்றை ஒப்பிடலாம்.

நெய்தல் நிலத்தில் வென்றவர் விரும்புவது அதிகாரத்தையும் அதற்கு அடையாளமான திறையையும் தான்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]கைம்மை என்பது கைவண்மை என்பதன் திரிபு. கைம்பெண்களைப் பருத்திப் பெண்டிர் என்றும் கூறுவதுண்டு. ‌துணையற்ற பெண்கள் உயிர் வாழ்வதற்காக கைத்தொழில் செய்து பிழைப்பதலி‌ருந்தே கைம்மை என்ற சொல் பிறந்தது. எனவே கணவனை இருவகையிலும் பிரிந்த பெண்களைக் கைம்பெண் என்று கூறலாம்.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...2

ஐந்நிலப் பிரிவும் ஆற்றோட்டமும்:

ஐந்நிலப் பிரிவைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் ஒரு ‌பேராற்றை அதன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்து செல்ல வேண்டும். ஆறுகள் மலைகளில் தொடங்குகின்றன. முதலில் அவை நெருக்கமான அறுத்தோடிகள் எனப்படும் சிற்றோடைகளின் மூலம் மழைநீரை அல்லது பனிக்கட்டி உருகிய நீரை மலையின் குத்துச் சரிவான பரப்பில் பெறுகின்றன. இத்தகைய சிற்றோடைகள் பல சேர்ந்து சிற்றாறுகளாக மலையடிவாரத்தை அடைகின்றன. இந்நிலப் பகுதியே குறிஞ்சி நிலமாகும். இங்கு மழைக்காலம் நின்ற பிறகும் மழையின் போது மலையினு‌ள் இறங்கியிருக்கும் மழைநீரின் கசிவால் சிற்றோடைகளில் நீரோட்டம் இருக்கும். எனவே மலைப்பகுதி நீர்வளத்தில் சிறந்திருக்கும்.

மலைய‌டிவாரத்தில் நல்ல சரி‌வுடனிருக்கும் நிலத்தில் மலையைக் கடந்து வரும் சிற்றாறுகள் பாறைகளாகிய தடைகளால் தடுக்கப்ப‌ட்டு ஏறக்குறைய மேல் மட்டத்திலேயே ஒன்றுக்கொன்று பெரும் இடைவெளியின்றி ஓடும். இப்பரப்பில் பெருமரங்களும் செழிப்பான புல்வெளிகளும் தழைக்கும் அளவுக்கு நீர்வளம் இருக்கும். இது முல்லை நிலம்.

முல்லை நிலம் முடியும் இடத்தில் இச்சிற்றாறுகள் பல இணைந்து பேராறுகள் உருவாகும். இப்பேராறுகள் ஒன்றுக்கொன்று பெருந்தொலைவில் இருக்கும். அத்துடன் அவை நில மட்டத்துக்குக் கீழே ஓரளவு ஆழத்தில் ஓடும். இந்தப் ‌பேராறுகளுக்கிடைப்பட்ட நிலத்துக்கு ஆற்றில் ஓடும் நீர் கிடைப்பதில்லை. மலையிலிருந்து தொலைவாகிவிடுவதால் மழையும் குறைவாகவே இருக்கும். இங்கே பாலை நிலம் உருவாகிறது.

ஆற்று நீர் விரைந்து ஓட முடியாமல் நிலம் தட்டையாக மாறுமிடத்தில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றுகிறது. இங்கு ஆற்று மட்டம் உயர்ந்‌து விடுகிறது. பெருவெள்ளங்களின் போது ஆறு கரைபுரண்டு கிளையாறுகளையும் புதிய பாதைகளையும் ஏற்படுத்துகிறது. பழைய பாதைகள் அடைபட்டு இயற்கை ஏரிகள் உருவாகின்றன. ஆற்று நீரில் வந்த வண்டல் படிகிறது. நிலமட்டம் மேலும் உயர்கிறது. ஆறு தாறுமாறாக ஓடுகிறது. இவ்வாறு இங்கு நீர்வளமும் நிலவளமும் கொழிக்கின்றது.

ஆறு கடலை நோக்கிச் செல்லும் ‌போது கடலலைகளால் ஒதுக்கப்பட்ட மணல் திட்டுகள் அவற்றைத் தடுக்கின்றன. ஆறு தேங்குகிறது. எங்காவது ஓரிடத்தில் உடைத்துக் கொண்டு ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது. கடல் நீர் ஆற்றினுள்ளும், ஆற்று நீர் கடலினுள்ளும் மாறிமாறிப் பாய்கின்றன. பெரும் காயல்களும் உப்பங்கழிகளும் தோன்றுகின்றன. ‌நெய்தல் நிலம் இது தான்.

ஐந்திணைப் பாகுபாடு எங்கு தோன்றியிருக்க வேண்டும்:

இத்தகைய ஐந்நிலப் பிரிவு முழுமையாக இடம் பெற வேண்டுமாயின் ஆறு தோன்றும் மலைக்கும் அது கலக்கும் கடலுக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு இருக்க வேண்டும் இன்னும் குறிப்பாக முல்லை நிலம் முடிவதற்கும் மருத நிலம் தொடங்குவதற்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு வேண்டும். எடுத்துக்காட்டாக கங்கையாறு 2400 கி.மீ. நீளமிருந்தும் அதன் வடக்கே இமய மலையும் தெற்கே விந்திய, சாத்புர மலைகளின் கிழக்கு நோக்கிய தொடர்ச்சியும் மேற்கே ஆரவல்லி மலைகளும் ஆற்றை நெருக்கி நிற்கின்றன. அதனால் ஆற்றுக்கும் மலைகளுக்கும் இடையில் பாலை தோன்ற இடமின்றி அடர்த்தியான காடே இருந்தது. இந்த அடர்த்தியான காட்டையழித்து ‌வேளாண்மை செய்ய இரும்புக் கருவிகள் தோன்றிய பின்னரே இயன்றது. அதனால் கங்கைச் சமவெளியில் மக்கள் குடியேற்றம் பிற பகுதிகளை விட காலத்தாழ்த்தியே இடம் பெற்றது. இது வரலாற்றாசிரியர்கள் கூற்று.

மாறாக நீலாறு, யூப்பிரடிசு-டைகரீசு, சிந்தாறு போன்றவற்றில் இடையில் பாலை நிலம் இருந்ததால் பாலையும் மருதமும் மயங்கும் இடைநிலத்தில் அடர்த்தியில்லாத மென்காடுகளில் பழம் பெரும் நாகரிகங்கள் தோன்றிச் செழித்தன.

இன்றைய தமிழகத்தில் மலையடிவாரங்களிலிருந்து மருத நிலத்துக்குள்ள தொலைவு மிகக் குறைவு. இதனால் இங்கு பேராறுகளும் இல்லை, தனியான பாலை நிலமும் இல்லை. விரிவான மருத நிலம் காவிரிக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு தனியான பாலை நிலம் இன்மையால் பொருளிலக்கணத்ததில் கூறப்படும் ஐந்திணைப் பண்பாடும் அதற்குரிய ஐந்நிலப் பகுப்பும் இன்றைய தமிழகத்துக்கு உரியதல்ல. நாம் ஏற்கனவே கூறியது போல் இந்த ஐந்திணைப் பாகுபாட்டுக்குரிய தடயங்கள் உலகின் வேறு நாகரிகங்கள் எவற்றிலும் காணப்படாமையால் இது தோன்றிய இடம் கடலில் முழுகியதாகத் தமழிகத்தில் நீண்ட நெடுங்கால மரபாக இடம் பெற்றுள்ள குமரிக் கண்‌டமே என்று முடிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

பலர் எழுப்பும் ஒரு கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை எனும் படிவம் கொள்ளும் என்ற வகையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கக் கூடாதா என்ற கேள்வி தான் அது. தனியாக ஒரு நிலப்பரப்‌பில்லாத நிலையில் கோடையின் திரிபாகப் பாலையைக் கொள்வதற்குப் பகரம் இவை இரண்டின் இயற்கை இயல்பாகப் பாலைத் தன்மை கொள்ளப்பட்டிருக்குமேயன்றி ஒரு தனி நிலப்பரப்புக்குரிய பண்பாகக் கூறப்பட்டுப் பாலை தனியாகப் பிரிக்கப்பட்டிருக்காது.

மனிதன் பருப்பொருளான உலகிலிருந்தே தன் கருத்துக்களைப் பெறுகிறான். அவ்வாறு முதனிலையில் பருப்பொருட்களிலி‌ருந்து பெறப்பட்ட கருத்துக்கள் ஒன்றோடொன்று வினைப்பட்டு பருப்பொருளியற்கையில் இல்லாத இரண்டாம் நிலை கருத்துகளும் கற்பனையும் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் இரண்டாம் நிலைக் கருத்துகளிலிருந்து அறிவியலும் புதுப்‌புனைவுகளும் மாயைகளும் உருவாகின்றன.

மனிதச் சிந்தனை பற்றிய மேலே கூறிய அறிவியற் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் ஐந்திணைப் பண்பாட்டை உருவாக்கிய மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தில் இருந்த உண்மையான நிலைமைக்கொப்ப ஐந்திணைக் கோட்பாட்டை உருவாக்கினர். அந்த இடத்திலிருந்து புதிய நிலப்பரப்புக்கு வந்த பின்னரும் அவர்கள் தங்கள் பழைய கருத்தைக் கைவிடாமல் புதிய இடத்தில் கையாண்டனர். இருந்த உண்மை நிலையை எடுத்துக் கூறிய தொல்காப்பியர் ′′நடுவண தொழிய′′ என்று கூற வேண்டியதாயிற்று. இந்த முரண்பாட்டை நீக்க முனைந்த இளங்கோவடிகள் இங்கு நிலவிய நிலையினடிப்படையில் ஒரு ‌தீர்வைக் கூறினார். இன்றைய தமழிகத்‌தின் நிலத்தன்மை இதற்‌கு மிகப் பொருந்துகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான முகடு தமிழகத்தின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது. இந்த முகட்டுக்கு மேற்கே உள்ளதைப் போல் தமிழகத்து மலைப்பகுதி பன்மலை அடுக்கம் உள்ளதாக இல்லை. எனவே இங்கு மழைக்காலத்தில் பெருமளவில் மலையினுள் நீர்பிடித்து வைக்கப்படுவதில்லை. எனவே இங்கு த‌‌மிழகத்தின் குறிஞ்சிப் பகுதியும் முல்லைப் பகுதியும் ஏறக்குறைய அரைப்பாலைவன நிலையிலேயே உள்ளன. இந்தத் தன்மையும் இளங்கோவடிகளின் கருத்து உருவாவதற்குக் காரணமானது.

இளங்கோவடிகள் குமரிக் கண்டம் முழுகியதை அறிந்திருந்தும் மனக்குமுறலுடன் அதை நமக்குக் தெரிவித்திருந்தும் பாலைத் திணையின் முரண்பாட்டை குமரிக் கண்டம் முழுகியதுடன் இணைத்துப் பார்க்காததே இந்‌தத் தீர்வை மேற்கொண்டதன் காரணமாகும்.

பாலைத்திணை விடு(வி)க்கும் மிகப் பெரிய புதிர்:

பாலைத் திணை தன்னகத்தே கொண்டுள்ள புதிர் ஐந்தினைக் கோட்பாடு தோன்றிய இடத்தைப் பற்றிய கேள்விக்கு ம‌ட்டும் விடை காணும் திறவு கோலாக இல்லை. ஐந்தினைக் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இது எவ்வாறு?

இன்று உரையாசிரியர்களைப் பின்பற்றி நாம் ஐந்திணை உரிப்பொருள்களுக்குத் தரும் விளக்கம் பின்வருமாறு:

குறிஞ்சி : புணர்தல்
முல்லை : பிரிவை ஆற்றி இருத்தல்
பாலை : பிரிதல்
மருதம் : பிரிவிற்காக ஊடல்
நெய்தல் : பிரிவை நினைத்து இரங்கல்

இவற்றைத் தொகுத்தால் நமக்குக் கிடைப்பவை இரண்டே திணை உறவுகள் தாம்; ஒன்று புணர்தல் இன்னொன்று பிரிதல். ஆனால் உண்மை அது தானா என்ற ஐயத்தை எழுப்புவது பாலைத் திணை.

பிரிவு இருவகைப்படும் என்கிறது தொல்காப்பியம்.

அவை உடன்போக்கும் தலைவியைத் தலைவன் பிரிதலும் எனவும் கடல் வழிப் பிரிவும் நிலவழிப் பிரிவும் எனவும் வெவ்வேறு உரையாசிரியர்கள் கூ‌றியுள்ளனர். ஆனால் இத்தகைய ஐயத்திற்கிடமின்றி

கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவன் இரங்கலும்
உ‌‌ண்டென மொழிப ஓரிடத்‌தான

என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்திவிட்டார்.

அவ்வாறாயின் உடன்போக்கும் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது புலனாகிறது. தலைவ‌ன் தலைவியைப் பிரியாதபோதும் பிரிவு எனும் கருத்துப்‌ பெறுமாயின் உண்மையில் அந்தப் பிரிவு எதைக் குறிக்கிறது? யார் யாரை அல்லது எதனைப் பிரிவதைப் பிரிவென்று பொருளிலக்கணம் குறிக்கிறது? இதைத் தடம்பிடித்துச் சென்றால் பொருளிலக்கணம் கூறும் ஐந்திணை ஒழுக்கம் குறி‌ப்பது ஒரு தலைவனையும் தலைவியையும் மட்டும் பற்றியதல்ல, முழுக் குமுகத்தையும் பற்றியதென்பது புலப்படும். பிரிவு என்பது தலைவன் தலைவியைப் பிரிவதை மட்டுமல்ல, அவர்கள் இருவரும் தாம் வாழும் குமுகத்தையும் தம் நிலத்தையும் விட்டுப் பிரிவதையும் குறிக்கிறது. இந்தப் புலனத்திலிருந்து நாம் இப்போது ஐந்திணை ஒழுக்கம் எதைக் குறிக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மானிடவியல் எனப்படும் மாந்தநூல் நமக்குத் துணை செய்யும்
.

(தொடரும்)

30.7.07

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1

பொருளிலக்கணமும் தொல்காப்பியமும்:

தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகைப்படுத்தியிருப்பது தொல் தமிழ் மரபு. இன்று இம்மூன்று இலக்கணங்களும் ஒருசேர அமைந்ததாக நமக்குக் கிடைத்திருக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம், கோட்பாடு வகுத்தல் என்ற வகையில் முதல் நூலல்ல. ஏற்கனவே வழக்கிலிருந்த கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல்.‌ நூற்பாக்களில் 'என்மனார் புலவர்', 'என்ப' என்ற சொல்லாட்சிகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். அத்துடன் ஏற்கனவே அடிப்படை இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவது போலும் தொல்காப்பியம் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக,

அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப

ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிரென மொழிப

னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப

என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர எங்கும் எழுத்துக்கள் வரிசையிட்டுக் காட்டப் படவில்லை. அதேபோல் பொருளதிகாரத்திலும் ஏழுதிணைகளும் வரிசைப்படுத்தப் படவில்லை. இவ்வாறு இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவதால் நிலவிவரும் இலக்கண மரபில் அக்காலச் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்நூல் செய்யப்பட்டிருப்பதாக நாம் கருதினோமாயின் அந்த வகையில் புதிய ஒரு கோட்பாட்டைப் படைத்த முதல் நூல் என்றும் கூறலாம்.

பொருளிலக்கணம் என்றால் என்ன?

எழுத்தும் சொல்லும் இலக்கியத்தின் வடிவத்தைத் தரும் மூலப்பொருளாகிய ஓசையின் இரு நிலைகள். இந்த மூலப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்ட இலக்கியத்தின் உள்ளடக்கம் தான் பொருள். அதாவது பொருள் என்பது இலக்கியத்தின் நுவல் பொருளாகும். இந்த நுவல் பொருளை அன்று நிலவிய பல்வேறு துறை அறவி‌ய‌ல்களின் துணை கொண்டு வரையறுப்பதே பொருளிலக்கணத்தின் நோக்கம். இந்த நம் முடிவுக்குத் திணை என்றால் என்ன என்ற ஆய்வு துணை செய்யும்.

திணை என்றால் என்ன?

திணை என்பதற்கு ஒரு வரையறை கூறவேண்டுமாயின் திணைக்குரியனவாகக் கூறப்படும் முப்பொருட் பிரிவுகளையும் நாம் காண வேண்டும். அவை முதல், கரு, உரிப் பொருட்களாகும். முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இரண்டுமாகும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என முதலது ஆண்டையும் மற்றது நாளையும் அவ்வாறாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகைப்பாட்டின் விரிவு‌ தரப்பட்டிருந்தாலும் அவ்வாறு இருவகைப் பிரிவு உண்டு என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இலக்கணமறிந்தோர்க்கே தொல்காப்பியம் கூறப்பட்டுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று.

கருப்பொருள் என்ற தலைப்பின் கீழ் வருபவை:


அவ்வகை பிறவும் என்று கூறப்படுவதால் இந்தப் பட்டியல் இன்னும் விரியும் என்பது புலனாகிறது. அத்துடன் இந்த நீண்ட பட்டியலை அறிந்தோரை நோக்கியே தொல்காப்பியம் செய்யப்பட்டுள்ளது என்பதும் பு‌லனாகிறது. எனவே ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள் எவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை‌.

மூன்றாவது, உரிப்பொருள்:

உரிப்பொருள் எனப்படுவது திணைக்கு உரிய பொருளாகும். அவை
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.


ஆனால் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் திணையும் உரிப்பொருளும் கூட மேலே குறிப்பிட்ட வரிசையில் கூறப்படவில்லை. புறத்திணையியலில் நடுவிலுள்ள பாலை தனியாக‌க் கூறப்பட்டு எஞ்சியவை இதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி இரு திணைகள் முதற்பொருள் கருப்பொருட்களின்றி உள்ளன. அவை, கைக்கிளை - ஒருதலைக்காமம், பாடாண்திணை - வெற்றி பெற்றோனைப் பாடுதல், பெருந்திணை - ஒவ்வாக்காமம், காஞ்சி - வாழ்க்கை நிலையாமை கூறல்.

இந்த ஏழு திணைகளுள்ளும் உள்ள வேறுபாட்டைத் தொகுத்தல் கிடைப்பது

முதல் நான்கில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கு அதற்குரிய பொழுதுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இறுதி இரண்டும் எல்லா நிலப் பிரிவுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் உரியன. பாலை மட்டும் நிலமில்லாத ஒன்றாக நிற்கிறது.

தொல்காப்பியத்தில் முழுமை பெற்ற வடிவத்தில் காணப்படும் முதல் நான்‌கு திணைகளையும் அணுகிப் பார்த்தால் திணையின் அடிப்படைப் பண்பு புரியும்.

மக்களின் பருப்பொருட் பின்னணியான நிலத்தையும் காலநி‌லையையும் முதற்பொருளாகவும் அம்முதற்பொருட்களுடன் வினைப்பட்டு அதன் விளைவாக அமைந்த வாழ்க்கைமுறையைக் கருப்பொருளாகவும் குடும்பம் எனும் ஆண் - பெண் உறவாகவும் போர் எனும் அரசியல் உறவாகவும் மக்கள் தமக்குள் கொண்டுள்ள குமுக உறவுகளை உரிப்பொருளாகவும் கொண்டதாக திணை எனும் கருத்துருவம் விளங்குகிறது. இந்தக் கருத்துருவத்தில் முதற் பொருளாகிய நிலத்தை மட்டுமே இழந்து முரண்பட்டு நிற்கிறது பாலை.

பாலையின் முரண்பாடு:

பாலைத் திணையிலுள்ள இந்த முரண்பாடு முன்பே கண்டுணரப்பட்டுள்ளது. உலகின் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான இளங்கோவடிகள் இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளார். இதற்குத் தீர்வாக பாலை நிலத்தை குறிஞ்சி முல்லை என்ற வேறு இரண்டு நிலங்களின் கோடைகாலத் திரிபு நிலையாக் கூறியுள்ளார்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

இளங்கோவடிகள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்து இந்தத் தீர்வைத் தந்துள்ளார். இருந்தாலும் இந்தத் தீர்வு சிக்கலைத் தீர்த்துவிடவில்லை.

முதற்பொருள் கோடைகாலத்தில் பாலை வடிவம் கொள்ளலாம். ஆனால் கருப்பொருட்களும் மக்களும் ஆண்டுதோறும் இந்த மாற்றத்தைப் பெற முடியுமா? உரையாசிரியர்கள் குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலங்களுக்கும் கொடுத்துள்ள கருப்பொருள் வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முரண்பாட்டை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஐந்நிலத் தெய்வங்களும் தமிழகமும்:

மேலே தொடருமுன் ஐந்நிலத் தெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களில் வருணன், இந்திரன் என்ற இரு தெய்வங்களும் ஆரியருக்குரியனவாகக் கருதப்படும் வேதங்களில் இடம் பெற்றுள்ளமையால் ஆரியத் தெய்வங்ககளாகக் கூறப்படுகின்றனவே அப்படியாயின் அவை எவ்வாறு தொல்காப்பியத்தில் இடம்பெற்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியைத் தொடந்து இன்னும் எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எழுப்பி அவற்றுக்கு விடைதேடிக் கொண்டிருப்பது இங்கு நம் நோக்கமல்ல. இத்தெய்வங்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் உருவானவையா இல்லையா என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே விடை தேடுகிறோம்.

வருணன், இந்திரன் என்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தொல்லாய்வுகளின் மூலம் ஐரோப்பா, நடு ஆசியா ஆகிய பகுதிகளிலும் வட இந்தியாவில் தொகுக்கப்பட்டவையாகக் கூறப்படும் வேதங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் தொல்காப்பியத்தில் போல் திட்டவட்டமான நிலப்பகுதியின் நாகரிகத்‌தின் கூறுகளில் ஒன்றாக அவை கூறப்படவில்லை. அப்படியிருக்க அத்தெய்வங்களை வேறு நிலத்து மக்களுக்குரியவை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டு அறிவியலின் அடிப்படையையே புறக்கணிப்பதாகும். இந்த வகையில் உலகில் பண்பாட்டுக் கூறுகளுடன் தெய்வத்தை இணைத்து எழுதப்பட்டு தமக்குக் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. எனவே இந்தத் தெய்வங்கள் தமிழருக்கு மட்டுமே உரியவை.

(தொடரும்)

10.7.07

பாசனம் ...3

பாசனப் பணிகளில் குறிப்பாகப் பராமரிப்புப் பணிகளில் பொதுமக்களின் பங்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எடுத்துக்காட்டாக பல்லாண்டுகளாக உலக வங்கி ′′உதவி′′யுடன் நடைபெற்று வரும் காவிரி மேம்பாட்டுத் திட்டத்தில் வாய்க்கால்களில் பதிக்கப்படும் சிமென்றுப் பாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட‌டு மாட்டுத் தொழுவங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டப்படும் வயற்கால் மடைகள் பயன்படுத்தப்படாமல் வாய்க்காற் கரைகளை உடைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆறுகளுக்கும் பாசன அமைப்புகளுக்கும் அவற்‌றின் மூலம் வரும் நீருக்கும் உண்மையான உரிமையாளர்களான உழவர்களே அவற்றைப் பணோமல் சிதைக்க முற்படும் போது கூலிக்கு வேலை செய்யும் அதிகாரிகளிடம் உன்ன அக்கறையை எதிர்பார்க்க முடியும்? எனவே ஒட்டு மொத்தப் பாசனச் செலவில் பங்குடன் அவ்வப்பகுதிப் பராமரிப்புச் செலவுகளையும் அவ்வப்பகுதி மக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். ஆனால் உழவர்களுக்கு ஓர் முதன்மையான உரிமையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்குத் தாங்களே விலை நிறுவும் உரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இதில் தலையிடக் கூடாது.

புதிய பாசன அமைப்பு கீழ்க்காணும் வகைகளில் செயற்படலாம்.

1. பாசன வாரியத்தின் பொறுப்பில் அரசியல்வாதிகளோ ஐ.ஏ.எஸ். அதிகா‌ரிகளோ அமர்த்தப்படக் கூடாது. நேர்மையிலும் தொழில்நுட்பத் திறமையிலும் புகழ் பெற்ற பொறியாளர்களே அமர்த்தப்பட வேண்டும்.

2. பொதுப் பொறியியலில் (Civil Engineering) பட்டயப் படிப்பை நிறுத்தி ஐ.டி.ஐ. மட்டத்தில் ஒன்றும் பட்ட மட்டத்தில் ஒன்று மாகப் பிரிக்க ‌வேண்டும். இப்போது பணியில் இருக்கும் பட்டயப் பொறியாளர்களுக்கு, முன்பு மருத்துவத் துறையில் செய்தது போல் ஓர் ஐந்தாண்டு காலத்திற்குள் உரிய பயிற்சித் திட்டமொன்றை வகுத்து அனைவரையும் பட்டப் பொறியாளராக்க வேண்டும்.

3. அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் முதல் அலுவலக நீர்வாகி வரையிலும் களத்தில் கரைக் காவலர் முதல் வாரியத் தலைவர் வரையிலும் முற்றிலும் பொறியியல் படித்தோரே அமர்த்தப்பட வேண்டும். களப்பணியாளர்களுக்கு இணையான அலுவலகப் பணியாளரை வரையறுத்து அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றத் தக்கவராயிருத்தல் வேண்டும்.

4. ஒவ்வொரு கோட்டம் அல்லது தேவைக்கேற்ப சரக்காளர் அமர்த்தப்பட வேண்டும். சிமென்று, கம்பி போன்ற பொருட்களை ஒப்பந்தக்காரரே வழங்க வகை செய்ய வேண்டும்.

வேலையில் தரத்தில் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியாக ஒப்பந்தக்காரரே தண்டிக்கப்பட வேண்டும். மேற்பார்வை ஊழியர்கள் அல்லது பொறியாளர்கள் தாங்களாகவே அதற்குக் காரணமாயிருந்தாலொழிய அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது.

அளவைச் சரிபார்க்கும் அலுவலர் போன்றோரின் ஒத்துழையாமையால் ஒப்பந்தக்காரருக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் தேவையான உரிமைகளும் ஒப்பந்தக் காரருக்கு வழங்கப்பட வேண்டும்.

பாசனப் புலனாய்வுப் பணியில் உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள பொறியாளர்க‌ளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பொருளியலில் நியாயமான ஊக்குவிப்பும் கொடுத்து அடிப்படை ஆவணங்கள் உருவாக்குதல், இருப்பவற்றைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஒப்படைக்க வேண்டும்.

வக்கணையோடு செயல்படும் தணிக்கை முறையை மாற்றி ஆக்க முறையில் சீரமைக்க வேண்டும். களப் பொறியாளருக்கு ஒரு துளி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5. உழவர் சங்கங்கள், பாசனத்துறை இருவரும் இணைந்த அமைப்புகள் வசதியான பரப்புகளுக்கு ஒவ்வொன்றாக உருவாக்கப்பட வேண்டும். அந்தந்தப் பரப்புக்குத் தேவையான பராமரிப்புப் பணிகளைப் பாசனத்துறை செய்வதும் அதேபோல் பொதுமக்கள் தங்களுக்குப் பயன்படும் பாசன அமைப்புகளுக்குக் கேடுவராமல் நடந்து கொள்வதும் பாசனத் துறை செய்யும் பணிகளுக்குத் தேவையான செலவுகளை உழவர்கள் பாசனத்துறைக்குகுச் செலுத்துவதும் இங்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறனான அமைப்புகளை உருவாக்கிய உடன் போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடைக்கும் இன்றைய பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் பெருந்திட்டம் ஒன்றை வகுத்து உழவர்களின் கண்காணிப்புடனும் துணையுடனும் அதனை நிறைவேற்ற வேண்டும்.

பாசன அமைப்புகளுக்குப் பொறுப்பற்ற பொதுமக்களால் ஏற்படும் சிதைவுகள், திருட்டுகளைத் கண்காணிக்கும் பணியில் உழவர்களுக்கும் பொறுப்பிருக்க வேண்டும்.

தண்ணீர் அருந்தலான நேரங்களில் எவ்வாறு அதனைப் பங்கிடுவது என்பதைச் சங்கங்கள், பாசனத் துறையினரின் விரிவான கூட்டம் மூலம் முடிவு செய்து அதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயிர்களுக்கு அளவுக்கு மேல் நீர் வழங்குவதால் ஏற்படும் தீங்குகளை உழவர்களுக்கு எடுத்துரைத்து நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும். இதற்கும் உழவர் சங்கங்கள், பொறுப்பேற்க வேண்டும்.

குளக்கரைகளைப் பாதிக்காமலும் நீர்த்தேக்கத்துக்கு இடையூறுறில்லாமலும் வயல்களுக்கு கரம்பை அடிப்பதையும் செங்கற் சூளைகளுக்கு மண்ணெடுப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். மண்ணெடுப்பதை முறைப்படுத்துவரைக் கண்காணிக்கும் பொறுப்பை உழவர் சங்கங்களிடம் விட்டுவிட வேண்டும். எடுக்கப்படும் மண்ணுக்குக் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். மண்ணெடுப்பதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். அதே போல் அண்‌மைக் காலமாக இதில் கெடுபிடி செய்து கொ‌ண்டிருக்கும் சுரங்கத்துறையை ஒழிக்க வேண்டும். குளங்களில் மரங்கள் வளர்ப்பது கைவிடப்பட வேண்டும்.

6. குளங்களைத் தூரெடுப்பது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. ஏனென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்துக் குளங்களிலுமுள்ள பெருமளவு மண்ணை வெட்டி வெளியேற்றுவதற்குப் பெரும் செலவு ஆவதுடன் அதற்குத் தேவையான ஆள் பலம் கிடைப்பது கூடக் கடினம்.

  • அவ்வாறு எடுக்கப்படும் மண்ணைக் கரைகளில் போட்டால் குளத்தின் உட்புறத்தில் மடைகளையும் வயல்களையும் பாதிக்கும். எதிர்வாயில் போட்டால் எளிதில் மீண்டும் குளத்தினுள் வந்தவிடும்.

அ‌தற்கு மாற்றாக குளத்தின் உயர்நீர் மட்டத்தைப் பழைய முழுகடை நிலங்களைத் தவிர புதிய நிலங்களை எதிர்வாயில் முழுகடிக்காத அளவுக்கு உயர்த்த வேண்டும். தேவைப்பட்டால் எதிர்வாய் நிலைங்களைத் தேவைப்படும் அளவுக்கு மேடாக்கலாம். மட்டத்தை உயர்த்தும் போது கரையையும் உயர்த்த வேண்டியிருப்பதால் குளத்திலுள்ளிருந்து இதற்காக எடுக்கும் மண்ணாலும் குளத்தின் கொள்திறன் கூடும்.

களத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்குத் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நிலைமைகளை அகற்றி அவர்களது பட்டறிவுக்கும் முன்முயற்சிக்கும் ஊக்கமும் மதிப்பும் தந்தால், பாசனத் துறையின் செயற்பாடுகளோடு உழவர் பெருமக்களின் இன்றியமையா ஒத்துழைப்பும் இருந்தால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நம் நாடு வளம் பெறுமென்பதில் ஐயமில்லை.

9.7.07

பாசனம் ...2

பாசனம் இன்று தமிழகத்தில் பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இத்துறையில் பணம் செலவு செய்யும் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கே மதிப்பு. அடுத்த வரிசையில் வருவோர் பாசன நீரை முறைப்படுத்துவோர். இவ்விரண்டு இடங்களிலும் பணம் நன்கு புரளும். நேர்மை, நாணயம் ‌என்ற பெயரில் பணம் பண்ணாதவர்களை இப்பணிகளில் வைத்திருக்க மேலேயுள்ளவர்களும் கீழேயுள்ளவர்களும் விரும்புவதில்லை. அதேபோல் பிறருக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் ஏப்பம் விட்டு விடுபவர்களை‌யும் வைப்பதில்லை. இவ்விரு சாரரும் புலனாய்‌வுப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் உதவாக்கரைகள் என்று ஒதுக்கப்பட்டவர்களாகையால் இவர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. எனவே நேர்மையானவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னொரு வகையினர் எப்போது பணம் புழங்கும் பகுதிக்குச் செல்லலாமென்று ஒரே குறியாயிருப்பதினால் அவர்கள் வேலையில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இந்தப் புலனாய்வுப் பிரிவுகள்தான் பாசனத் திட்டங்களை வகுக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் நம் பாசனத்துறை ஏன் சரியாகச் செயல்படவில்லை என்பதன் காரணங்களிலொன்று புலப்படும்.

இன்னொரு புறம் குளங்களின் பராமரிப்பு. குளங்களின் பராமரிப்பில் பெரும் பங்கு மண் வேலைக்கு. ஆனால் பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் கூலிகள், விலைகளின் பட்டியல் நிறுவக் கடைப்பிடிக்கும் தவறான நடைமுறையால் மனித ‌உழைப்பில் செய்யப்படும் மண்வேலை கட்டுபடியாவதில்லை. இயந்திரங்கள் கொண்டு செய்யப்படுபவை கட்டுபடியாகும் நிலையில் உள்ளன. எனவே குளங்கள் பராமரிப்பில் பொதுவாக துறையினரும் ஒப்பந்தக்காரர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வெள்ளம், வரட்சிக் காலங்களில் அரசு ஒதுக்கும் பெருந்தொகைப் பணத்தைச் ′′செலவு′′ செய்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. எனவே மழைக் காலங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

அடுத்து பொறியாளர்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையர்களான பொறியாளர்‌கள் மீது வருவாய்த் துறையின் கட்டுப்பாடு கிடையாது. பொதுப்பணித்து‌றை வளாகத்தினுள் காவல்துறையினரோ பிறரோ முன் இசைவின்றி நுழைய முடியாது. இத்துறையின் தனித்தன்மையை பேணுவதற்காகவே காசுக்கணக்கு, பொருட்கணக்குகள், கோப்புப் பராமரிப்பு என்று எல்லா வகையிலும் பிற துறைகளிலிருந்தும் வேறுபட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வனத்துறையிலும் இத்தனித் தன்மை பேணப்பட்டது.

இன்றைய நிலைமை என்ன? இன்றைய பாசனப் பொறியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் இன்னும் துல்லியமாகக் கூறவேண்டுமாயின் மாவட்ட ஆட்சித் தலைவர்களி‌ன் மனைவிகளின் எடுபிடிகள். எனவே பொதுப்பணித்துறையிலடங்கிய பாசனம் அரசியல் விளையா‌ட்டுகளின் களம். பொறியாளர்கள் மேலே மேலே கப்பம் கட்ட வேண்டியிருப்பதும், ஓய்வு பெறக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதும் அனைத்துத் துறைகளிலும் போல் விதிவிலக்கின்றிக் காணப்படுவதால் அதைத் தனியாகக் கூற வேண்டியதில்லை.

பொதுப்பணித் துறையிலுள்ள இன்னுமொரு பெரும் நோய் பொறியாளர்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிளவு; பட்டப் பொறியாளர், பட்டயப் பொறியாளர் என்ற பிளவு. முன்பு மருத்துவத் துறையில் நிலவிய இது போன்ற பிளவைத் தீர்த்தது போல் இதையும் தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்குத் தடையாயிருப்பவர்கள் இவ்விரண்டு காரர் பெயரில் செயற்படும் சங்கங்களில் தலைவர்களே. இந்தப் பிளவைப் போக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இத்தலைவர்கள் மறைமுகமாக அவற்றை முறியடித்து வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பணியின் தரத்தை மேம்படுத்தப் பயன்பட்ட பொறியாளர் சங்கம் இன்று தெருநாய்களில் தலைமையாகி விட்டிருக்கிறது. பிரித்தாளும் நம் அரசும் இப்பிளவைப் பேணிக் காக்கிறது.

பொதுப் பணித் துறையின் அடிப்படை அதிகாரிகளான பிரிவு அலுவலர்களெனும் பொறுப்பிலிருக்கும் பொறியாளர்கள் தலையில் சிமென்று, இரும்பு போன்ற பொருட்களைப் பேணும் சரக்காளர் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. களத்தில் வேலைகளை நேரடியாக மேற்பா‌‌ர்வையிடும் மேற்பார்வை ஊழியர்கள் அவர்‌கள் மேற்பார்வையிடும் வேலைகளின் தரத்துக்குப் பொறுப்பல்ல. அவர்களின் மேல் அதிகாரியான பிரிவு அலுவலான பொறியாளருக்கே முழுப்பொறுப்பும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்களினால் முழு ஈடுபாட்டுடன் பொறியாளர்களால் செயற்பட முடயாமல் போகிறது.

வெள்ளையராட்சிக் காலத்தில் ‌விஸ்வேஸ்வரய்யாக்களையும் கிரு‌ஷ்ணய்யர்களையும் ஏகாம்பரங்களையும் உருவாக்கிய பொதுப்பணித்துறையால் இன்று ஒரு குமாரசாமியை மாநிலத்தை விட்டுத் துரத்தத் தான் முடிந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

அனைத்தையும் அனைவரையும் தங்கள் ஆதிக்கத்தினுள் கொண்டு வந்தவிட வேண்டுமென்ற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளின் பேராசை ஒரு புறம். இன்னொரு புறம் சொன்னால் வியப்பாயிருக்கும். மாநிலப் பணித் தேர்வானையத்தால் இளநிலை - உதவியாளராகத் தேர்வு செய்யப்பட்டதன்றி வேறு தொழில்நுட்பத் தகுதி ஏதுமில்லாமல் தணிக்கையா‌ளர் என்ற பெயரில் செயற்படும் உண்மையான பொறுப்பேதுமற்ற ஒரு வலிமையான கும்பலின் ஆதிக்கத்துக்குப் பொறியாளர்கள் அனைவரும் அஞ்சும் ஓர் இழிநிலை உள்ளது. தணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு காசுச் செலவுக்கும் இவர்கள் கூறும் வக்கணைகளை மீறி முடிவு கூறும் அதிகாரம் இருந்தும் அதனைச் செயற்படுத்தும் துணிவு இன்றைய பொறியாளர்களுக்கு இல்லை.

அதேபோல் தொழில்நுட்பத்தைக் குறித்து ′′தணிக்கை′′ ‌ செய்வதற்கென்று வரைவுப் பிரிவு என்று ஒன்று உண்டு. அது வரைவதெல்லாம் கடிதங்களைத் தான். களப்பணியாளர்கள் செய்யும் பணிகளில் ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா என்ற ஆய்வையே இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். தொழில்நுட்பம் குறித்த ஆக்கமுறையிலான எந்தக் கருத்தும் இவர்களிடமிருந்து வராது. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரின்பணி ′′ஒருவன் வேலை செய்ய ஒன்பது பேர் நொட்டை சொல்ல′′ என்பதாகும். அதுமட்டுமல்ல, இவ்வாறு நொட்டை சொல்லச் சொல்ல அவர்களுக்கு வரும்படியும் கிடைக்கும்.

இதற்கு ஒரு காரணம் துணிவும் திறனும் உள்ள செயற்பொறியாளர் போன்ற உயரதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடக்குமுறையின் முன் அடங்கிப் போய்விடுகிறார்கள். அல்லது ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். பிறர் வரும்படி கருதி இந்தத் ′′தணிக்கை′′ களை ஒதுக்கத் தங்களுக்குள்ள அதிகாரத்தைக் கையாள்வதில்லை. அத்துடன் பொறியாளர்களின் ஒற்றுமை இன்மை வலிமையான ஒரு காரணம்.

இக்காரணங்களால் பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் எவருமில்லை. பொறியியல் படித்த அதிகாரிகளே தான் உள்ளனர் என்ற நிலை தான் இன்று நிலவுகிறது.

பாசனத் துறையில் இன்று ஒருவகைத் தண்ணீர் வாணிகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி உழவர்களும் தத்தமக்குத் தண்ணீர் திறந்துவிடுதல், பாசன அமைப்பு பராமரித்தல் தொடர்பாகப் பொதுப்ப‌ணித்துறையையும் வருவாய்த்துறையையும் அணுகுவதற்கென்று சங்கங்கள் அமைத‌துள்ளனர். இச்சங்கங்கள் முதலில் வரட்சிக் காலங்களில் உழவர்களிடம் பணம் திரட்டி இவ்விரு துறை அதிகாரிகளுக்கும் கொடுத்து தண்ணீர் கொண்டு வந்தனர். இப்போது தண்ணீர் தாராளமாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதில் சங்கத் தலைவர்களுக்கும் பங்குண்டு. பாசனத்துறைக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்!

இனி தொழில் நுட்பப் பக்கத்தைப் பார்ப்போம்,

1. பண்டைக் குளங்களின் கரைகள் வளைவாக ஆழமான இடத்தில் சிறிது உள்வாங்கி இருக்கும். "கொக்கு வெளுத்திருக்கும் குளம் கோணியிருக்கும்" என்ற சொல்வடை கூட வழக்கிலிருக்கிறது. ஆழமான இடத்தில் உள் வாங்கியிருப்பதிலும் முனைகள் வளைந்து இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு.இன்றைய பொறியாளர்கள் அவ‌ற்றை அறியார்.

2. ஓடைகள் அல்லது ஆறுகளுக்குக் குறுக்கே குளங்கள் அமைப்பது முன்பு வழக்கமில்லை. அணைக்கட்டுகள் அல்லது மன்சூரம்புகள் எனப்படும் மண்‌ணைகள் அமைத்து வரத்துக் கால்வாய்‌கள் வழியாகக் குளங்களுக்குத் தண்ணீ‌ரைக் கொண்டு வருவதே வழக்கம் இதனால் குளங்களில் வண்டல் படிவது குறையு‌ம். இப்போது இந்த நடைமுறை ‌புதிய குளங்கள் அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

3. குளங்கள் தொடர்களாக அமைந்துள்ளதால் மேலே ஒரு குளத்தில் உடைப் பெடுத்தால் கீழேயுள்ள அனைத்துக் குளங்களும் உடைக்கும். குளங்கள் தம் போக்கில் கண்ட இடத்தில் குறிப்பாக ஆழமான இடத்தில் உடைப்பெடுத்தால் அதனால் ஏற்படும் இழப்பு மிகப் பெரிது. தண்ணீர் முழுவதும் வீணாகியும் விடும். கரை வரை வயல் இருப்பதாலும் குளத்துப் பக்கம் நீரிருப்பதாலும் உடைப்பு ஆழமாக இருப்பதாலும் உடைப்பை அடைக்க மண் கிடைப்பது கடினம். இதைத் தவிர்ப்பதற்காக மறுகாலுக்கு அருகாமையில் மறுகால் மட்டத்தை விட ஓரடி தாழ்வாகக் கொஞ்ச நீளத்துக்குக் கரையை அமைத்திருப்பது வழக்கம். இன்று அம்முறை கைவிடப்பட்டுள்ளது. உடைப்பெடுப்பது "அனைவருக்கும்" ஆதாயமாயிருப்பதால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைககளில் யாருக்கும் ஆர்வமில்லை.

நடைமுறைக் கோளாறுகள்‌‌:

1. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குளப் புறம்போக்குகளைப் பட்டா போட்டுக் கொடுப்பதால் குளங்கள் அழிந்து வருகின்றன.

2. எதிர்வாயில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதால் குளங்கள் சுருங்குவதுடன் மேடுதட்டியும் வருகின்றன.

3. முன்பு செங்கல் ஆளைகளுக்கும் வயல்களுக்கும் குளங்களில் படியும் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இப்போது கருவேல மரங்கள் வளர்க்‌கப்படுவதாலும் வள்ளுவர் வாய்மொழியில் கூறுவதாயின் "வேலொடு நிற்கும்" வருவாய்த் துறையினர் மற்றும் இப்போது இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சுரங்கத் துறையினரின் அளவு மீறிய அரிப்புத் தொல்லையாலும் நீமையுரங்களின் ஆதிக்கத்தாலும் இம்முறை கைவிடப்பட்டு அதன் விளைவாகக் குளங்கள் மேடிட்டு வருகின்றன.

4. குளங்களில் உள்ள மடைகளை அடைக்கும் சீப்புகள் காணப்படுவதில்லை. அவற்றைப் பராமரிக்க எந்த ஏற்பாடும் இல்லை. எனவே பெருகும் தண்ணீர் விரையில் வடிந்து வெளியேறி வீணாகிறது.

5. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. வல்லான் வகுத்ததே வாய்க்‌கால் என்பது போல் முன் வயல்காரர்கள் தண்ணீரை வீணடித்து கடைமடை உழவர்கள் வாடவிடுகிறார்கள். சமுதாயத்தில் எங்கும் போல் இங்கும் அராசகம் நிலவுகிறது.

இந்நிலையில் பொதுப் பணித்துறையில் பாசனத் துறையைத் தனியாகப் பிரித்துக் தன்னாட்சியுடைய ஒரு வாரியமாக அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கும் வழக்கம் போல் உலக வங்கியில் நெருக்குத‌லே காரணம். இந்த நெருக்குதல் இல்லாமல் நாமாகவே செய்திருக்க வேண்டிய பணி இது. கடன் வாங்குவதற்காகத் திருமணம் ஏற்பாடு செய்த "கடன் வாங்கிக் கல்யாணம்" திரைப் படக் கதாநாயகனின் தந்தையாகி நிற்கின்றனர் நம் ஆட்சியாளர்‌கள்.

(தொடரும்)

பாசனம் ...1

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாயிரமே என்று கப்பலோட்டிய தமிழர் நிறுவியுள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தில் மழையைப் போற்றியே தொடங்குகிறது என்பது புலப்படும். சேர இளவல் மாமழை போற்றும் என்று வாழ்த்துகிறார். சீவகச் சிந்தாமணி பூமகள் இலம்பகத்தில் மழைநீர் ஆற்றிலிருந்து வயலுக்கு இட்டுச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு அறுவடை ஆவது வரை சொல்லோவியமாக்குகிறது.

இவையனைத்தும் ஒருசேர விளக்குவது தமிழக மக்கள் மழையின் அருமையை அதாவது அதன் போதாமையைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள் என்பதையே. அதன் விளைவு பாசனப் பொறியியலின் பிறப்பு. ஓராண்டு முழுவதும் வேளாண்மைக்குத் தேவைப்படும் மொத்த நீரின் அளவுக்கு ஆண்டின் மழைப் பொழிவு போதுமாக இருந்து ஆனால் அந்தந்‌தக் காலத்தில் அவ்வப்போது பெய்‌யும் மழை போதாமல் இருந்தால் அங்கு பாசனம் தேவைப்படும். அந்தந்தக் காலங்களில் பெய்யும் மழையே போதுமானதாக இருப்பதால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாசன முறையோ அமைப்புகளோ இல்லை.

தமிழகத்தில் பாசன முறைகளைத் தொடங்கியவர்‌கள் பாண்டியர்கள் என்பதற்கு ′′மழை பினித் தாண்ட′′ பாண்டியர்களை வாழ்த்துவதன் மூலம் சிலப்பதிகாரம் சான்று ‌தருகிறது. மழையை வான் என்று திருக்குறள் அழைக்கிறது. எனவே ஆகாய கங்கை எனப்படுவது மழையே. அதை நிலத்துக்குக் கொண்டு வந்தவனாகக் கூறப்படும் பகீரதனும் ஒரு பாசன வித்தகன் தானோ?

பெரும் பரப்பில் பாசன அமைப்புகளை அமைத்துப் பராமரிப்பதன் மூலமே பண்டைய அரசுகள் மக்கள் மீது தம் பிடிப்பை வைத்திருந்தன. இறைத்தல் அடியாகப் பிறந்த இறைவன், குடித்தல் தொடர்பாகப் பிறந்த குடி மகன் உறவு இதைத் தான் குறிக்கிறது.

உலகில் நெருக்கமாகக் குளங்களைக் கொண்ட நாடுகள் எகிப்தும் தமிழகமும். அவற்றிலும் தமிழகத்துக்கே முதலிடம். இங்கு சராசரி அரை சதுர மைலுக்கு - ஏறக்குறைய ஒன்றேகால் சதுர கிலோமீற்றருக்கு ஒரு குளம் உள்ளது.

குளங்களின் வடிவமைப்பிலும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் உத்தியே சிறந்தது. இவையன்றி குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் மிக நுணுக்கமான சில உத்திகள் இன்றுவரை யாராலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

தமிழகம் வெள்ளையர் வருகைக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாத போர்களினால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ஊரவைகள் என்ற அமைப்புகள் பாசன அமைப்புகளையும் பாசன நடைமுறைகளையும் ஓரளவு பேணி வந்தன. அத்துடன் பேரரசர்களும் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவ்வப்போது அணைகளைக் கட்டியும் வாய்க்கால்களை வெட்டியும் குளங்களை அமைத்தும் பாசனப் பணியாற்றியுள்ளனர். இருந்தாலும் கரிகாலன் என்ற பெயரில் சங்க காலத்தில் வாழ்ந்த இரு பேரரசர்களும் (கரிகாலர்கள் மூவர் என்று கருதுவாரும் உண்டு) செய்ததுபோல் தமிழகத்தில் மிகப் பேரளவுப் பாசனப் பணி யாரும் செய்ததில்லை. புகழ்மிக்க கல்லணை கட்டியது, காவிரிப் படுகை முழுவதும் காவிரிக்கும் அதன் கிளைகளுக்கும் கரையமைத்தது, திருவளவாய்க்கால், கட்டளைக் கால்வாய் போன்ற நீண்ட நெடுங்கால்வாய்‌களை அகழ்ந்தது ஆகியவை அவர்களது அருஞ்செயல்களாகும். குடகுப் பகுதியில் மறிக்கப்பட்டுத் திருப்பப்பட்ட காவிரியைப் போரிட்‌டுக் கரிகாலன் மீ‌ட்டு வந்ததைப் புராண வடிவில் மணிமேக‌லை கூறுகிறது.

தமிழகத்தில் அரசியல் சீ‌ர்மை சிதையச் சிதையப் பாசனப் பராமரிப்பும் குறைந்தது. வெள்ளையரும் தொடக்கத்தில் இதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள் அவர்களைச் செயலுக்குத் தூண்டின. தம் நாட்டில் பாசனப் பட்டறிவு இல்லாதிருந்தும் எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்த பாசன அமைப்புகளையும் மழையளவுகளையும் நோட்டமிட்டு இன்று நம் நாட்டில் நிலவிவரும் பாசனக் கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினர்.

இந்த வகையில் அவர்கள் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள இறும்பூதுகள் எண்ணினால் நம்மைப் புல்லரிக்க வைக்கும். ஒரு புறத்தில் அணை கட்டி எதிர்ப்புறத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் பெறும் ஒப்பற்ற பெரியாற்று ஆணையை வடிவமைத்து நிறுவிய பென்னிக்குவிக் என்ற பெருமகன் முன்னாள் சென்னை மாநிலத்தி‌லடங்கியிருந்த அனைத்து ஆறுகள், சி‌ற்றாறுகள் ஓடைகள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆற்றுப் பள்ளங்களென்றும்(River Basins) பள்ளங்கள் என்றும்(Basins) சிறு பள்ளங்களென்றும்(Minor Basins) வகுத்து திணைப்படம்(Map) உருவாக்கினார். இப்படம் பென்னிக்குயிக் திணைப்படம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மண்டலத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், கிளைவாய்க்கால்கள் அவற்றின் கிளைகள் என்று முடிவின்றி 10அடி நீளமுள்ள வயற்கால்கள் வரை காட்டும் பாசனத் திணைப்படங்கள் கிராமத் திணைப்படங்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டன. அதே அளவில் வாய்க்கால்கள், வயல்கள், சமமட்ட‌க் கோடுகள் ஆகியவற்றைக் காட்டும் மட்டத் திணைப்படங்கள்(Block level maps) உருவாக்கப்பட்டன. அவற்றின் மட்டங்களுடன் தரப்பட்டுள்ளன. தஞ்சை மண்டலத்தில் உள்ள வடிகால்களைக் காட்டும் வடிகால்‌ திணைப்படங்‌களும் உள்ளன. மிகச் சிறு வயற்கால்கள் உட்பட ஒவ்வொரு வாய்க்காலும் ஓடும் புல எண்களையும் அவை நீர்பாய்‌ச்சும் புலங்களின் எண்களையும் காட்டும் பெரும்பெரும் பாசனப் பதிவேடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆங்கிலப் பொறியாளர் ஒருவர் (அவர் பெயர் ‌நினைவில்‌லை) முன்னாள் சென்னை மாநிலத்திலுள்ள மலைமுகடுகளுக்கெல்லாம் குதிரையில் சென்று ஒவ்வொரு ஓடை, சிற்றாறுகள் ஆகிய அனைத்தின் தோற்றம், பாயும் பாதை, அவற்றின் நீர்வளம் ஆகியவற்றைத் தொகுத்து அவற்றினடிப்படையில் எங்கெங்கு என்னென்ன கொள்திறனில் ‌எந்தெந்தப் பகுதிக்குப் பயன்படும் வகையில் என்னென்ன பாசன அமைப்புகள் அமைக்கலாம் என்று கூறும் நூல் ஒன்றை இயற்றியிரு‌க்கிறார். இன்றைய பாசனத் திட்டங்களில் ஏறக்குறைய எல்லாமே அவரால் பட்டியலிடப்பட்டவையே என்று தெரிகிறது.

பாசனத்துறைக்குப் புறத்தே நிலஅளவைத் துறையி‌னர் நாட்டிலுள்ள அனைத்துக் குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளைக் காட்டும் இந்திய அரசுத் திணைப்படங்களையும் வட்டத் தி‌ணைப்படங்களையும்(Taluk maps) உருவாக்கியுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வருவாய் ஊருக்கும் உரிய தீர்வைப் பதிவேடு (A Register எனப்படும் Settlement Register) அவ்வவ்வூரிலுள்ள பாசன ஆதாரங்களை திணைப்படமாகக் காட்டுகிறது. அடங்கல் பதிவேடு கூட பாசன ஆதாரங்களின் அடிப்படையிலேயே பராமரிக்கப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆற்றியுள்ள இந்த அருஞ் செயல்களுக்கு மாறாக, விடுதலை பெற்ற நாம் என்ன செய்துள்ளோம்? பெரியாற்று நீர்மின் நிலையத்திலிருந்து பாசனமில்லாக் காலத்தில் வெளியேறும் நீரைப் பிடித்து வைப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட வைகை அணையை அளவறியாமல் பெரிதாகக் கட்டிவிட்டமையால் அதன் கீழுள்ள வைகையாறு முற்றிலும் வறண்டு போயிற்று. பெரியாற்றில் நீரிருக்கிறதென்ற மெத்தனத்தால் பெரியாற்று - வைகைப் பாசன மண்டலத்திலுள்ளள பல்லாயிரக்கணக்கான குளங்களையும் சரிவரப் பராமரிக்காமையால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் நம் மூதாதையர் போற்றிய அருமருந்தன்ன மழைநீர் வீணாகிக் கடலினுள் சென்று விடுகிறது.

தமிழக மக்கள் வகுத்துள்ள ஏரிக் கோட்பாடுகள் ஒப்பற்றவை. குளங்கள் தொடர்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளத்திலுள்ள மறுகால் அதன் கீழுள்ள இன்னோர் குளத்தினுள் விழும். அந்தக் குளத்து மறுகால் அடுத்த குளத்தினுள் என்றிவ்வாறு 50 குளங்களையும் மிஞ்சும் தொடர்கள் உண்டு. இந்த அமைப்பு நீரை எந்த இழப்புமின்றி மிகச் சிக்கனமாகப் பிடித்து வைக்க உதவுகிறது. இறுதியிலுள்ள குளத்தின் மறுகால் ஏதாவதொரு ஆற்றில் அல்லது ஓடையில் சேரும். அவ்வாறு சேரும் நீரை அணைகள் மூலம் கீழேயுள்ள குளங்களுக்குத் திருப்பிவிடும் அமைப்புகளும் உள்ளன.

இவ்வளவு சிறப்பாக அமைந்த நம் பாசன முறையின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிகப் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளில் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்‌கள் அவ‌ற்றை மேம்படுத்தவும் செய்தனர். ஆனால் நாமோ விடுதலை கிடைத்த இந்த 50 ஆண்டுகளில் நாமாக எதுவும் செய்யாதது மட்டுமல்ல அவர்கள் செய்து வைத்தவற்றைப் பேணவும் இயலாதவர்களாகி விட்டோம்.
எடுத்துக்கா‌ட்டுக்கு, குளங்கள் சீரமைப்புத் திட்டம் எனும் பெயரில் செயல்படும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். நாம் முதலில் குறிப்பிட்ட பெனிக்குயிக் திணைப்படத்தில் அமைந்த சிறுபள்ளங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குளங்களைப் பெருந் தொகுதிகள், சிறுதொகுதிகள், தனிப்பட்ட குளங்கள் என்று பகுத்து அவற்றிலடங்கிய குளங்களின் முழு விளக்கங்களையும் திரட்டி அவற்றுக்கு வரலாற்றுக் குறிப்புகள் உருவாக்கி ஒரு சிறு பள்ளத்துக்கு ஒரு நூல் என்ற அளவில் உருவாக்கினர். அத்துடன் அமையாது அவ்வரலாற்றுக் குறிப்புகளில் தரப்பட்டுள்ள வரையளவுகளுக்கேற்ப ஒவ்வொரு குளத்தையும் சீரமைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கும் பணி ஒரு பகுதி தான் முடிவுற்றது. சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

இன்றும் குளங்கள் சீரமைப்புக் கோட்டங்கள் செயற்படுகின்றன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் சொன்னால் வெட்கக்கேடு. குளங்களின் அமைப்பில் மறுகால் மட்டம் மடைகளின் தளவடி மட்டம் ஆகியவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இந்த மட்டத்தை நிறுவுவதற்காக மாபெரும் நிலவியல் அளவை மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று சிறிதும் அக்கறை இன்றி மட்டங்கள் நிறுவும் ‌இப்பணி செய்யப்படுவதால் அவற்றிற்குரிய நம்பகத் தன்மையை அவை இழந்து நிற்கின்றன. பெரும்பாலான பாசனத் திட்டங்கள் இவ்வாறு உருவாக்கப்படும் வரலாற்றுக் குறிப்புகளையே சார்ந்து நிற்கின்றன என்பதை வைத்து நம் பாசனத் திட்டங்களின் தரத்தை அறுதியிடலாம்.

பாசன அணைகளின் வடிபரப்புகளில் நீர்மின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கோதையாறு, நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு, மதுரை மாவட்டத்திலுள்ள சுருளியாறு போன்றவை. இவை அமைக்கப்பட்ட நாளிலிருந்தே ஒழுங்காகச் செயற்படுவதில்லை. ஆனால் அவற்றில் பெருமளவு நீ‌ரைத் தேக்கி வைத்துக் கொண்டு பாசனத்துக்கு நீரின்றிப் பயிர்கள் வாடும் நி‌லையிலும் அந்த நீரை வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிடுவதற்கான முன்னமைப்புகளுடன் அந்த அணைகள் கட்டப்படவுமில்லை. பெரியாற்று நீர்மின்திட்டத்தில் பாசன நீர் வெளியேறுவதற்கான அமைப்புகள் சிறப்பாக உள்ளன. இந்‌தப் புதிய அமைப்புகளிலுள்ள இச்சிக்கல் மக்களுக்குத் தெரியவுமில்லை.

(தொடரும்)