31.12.17

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 6

இந்த மூன்றடுக்குப் பாதுகாப்பு எவ்வாறு ஓங்கலைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் என்ற கேள்விக்கு இப்போது விடை காண்போம். ஓங்கலை என்பது சூறாவளியையோ ஏற்றவற்றம் எனப்படும் வீங்கலையையோ போன்று கடலின் மேல் பரப்பைத் தாக்குவதல்ல. புவிக்கு அடியிலிருந்து வெளிப்படும் புவியதிர்ச்சியின் பேராற்றல் கடலடித் தரையைத்தொட்டு மணிக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மைல்கள், அதாவது ஒலியின் விரைவைப் போல் மூன்று மடங்கு விரைவில் பாய்ந்துவருவதாகும். கரையை நெருங்கும் போது கடலடித் தரை கரையிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவிலேயே மேல் நோக்கி உயருமானால் அங்கேயே செங்குத்தாக அவ் விசை நீரை மேலெழுப்ப அது அருகிலேயே வீழ்ந்துவிடும். கரையை எட்டும் போது ஆற்றல் குறைந்துவிடும். கடலடித் தரை கரை அருகு வரை ஆழமாக இருந்து கரையின் அருகில் மேலெழுந்தால் ஓங்கலை கரையை ஒட்டி மேலெழுந்து கரை மீது பெரும் தாக்குதலை நடத்தும். இது ஓங்கலை நிகழ்ந்த பின் கள ஆய்வுகளிலிருந்து தெரிந்த உண்மை. இப்படி கடலடித் தரையைத் தொட்டு வந்த மாபெரும் விசை அள்ளிக்கொண்டு வந்த அரிய கனிமங்களை ஓங்கலை தாக்கிய உடனேயே பன்னாட்டு நிறுவனங்கள் ஆய்ந்தறிந்து நம் ஆட்சியாளர்களின் உட்கையுடன் உள்நாட்டு முகவர்களைக் கொண்டு அள்ளிச் சென்றுவிட்டனர். அனைத்தையும் அள்ளி முடிக்கும் வரை ஏதும் அறியாதவர்கள் போல் இருந்த “குமுக ஆர்வலர்கள்” இப்போது அவ்வப்போது கூக்குரல் இடுகின்றனர். ஓங்கலையின் இந்த நிகழ்முறையில் முதலில் குறுக்கிடும் கப்பலோடையின் தோண்டப்பட்ட பகுதிகள் அதன் விரைவைப் பக்கவாட்டில் திருப்பித் தணிக்கப் பயன்படும். அடுத்துக் கடற்கரையைத் தாண்டி வரும் நீரை தேரி மேடு நேரடியாகவே தடுக்கும். எஞ்சியிருப்பது ஆறுகள் வழியாக உள் நுழையும் நீரின் ஆற்றல். இதில் ஒரு பகுதி கடல் நீரின் பொது மட்டத்தில் நீரைக் கொண்டிருக்கும் உள்நாட்டு நாவிக வாய்க்காலில் திரும்பி விடும். இவற்றின் விளைவாக ஓங்கலையின் தாக்கம் குடியிருப்புகளை நெருங்கும் போது பெருமளவில் மட்டுப்பட்டுப்போகும். இந்தக் கண்ணோட்டத்தில் எதிர்காலக் கடற்கரையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய பதமாக முன்னீடு ஒன்றை எமது புதுமையர் அரங்கம் காந்தி கிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் கூட்டுடன் நடுவரசு அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் முன்வைத்தது. அது ஏற்கப்பட்டு ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் பல்கலைக் கழகத்தில் உருவான சில சிக்கல்களால் தடைபட்டுப் போனது. அதை இங்கு தருகிறேன்.

உயர் ஓத மட்டம்(உ.ஓ.ம. – High Tide Level – H.T.L.) எனும் ஏற்றவற்றத்தின் உயர் மட்டத்தின் மேல் 20 அடிகளாவது உயரம் கொண்ட தேரியை கடற்கரையின் முழு நீளத்துக்கும் உருவாக்கி அதன் மீது ஒரு நால்வழிச் சாலையையும் முன்னிடுகிறது இத் திட்டம். தேரியின் நிலப்புறச் சாய்வுக்கு அப்பால் கணிசமான இடைவெளி விட்டு உள்நாட்டு நாவிக வாய்க்காலைத் தோண்ட வேண்டும். வாய்க்கால் இருக்குமிடங்களில் அதன் கிடப்பை இத் திட்டத்துக்குப் பொருந்துமாறு சீரமைக்க வேண்டும். நடுத்தரச் சரக்குப் படகுகள் எதிரெதிர் செல்லும் அளவுக்கு வாய்க்காலின் அகலமும் தாழ் ஓத மட்டத்துக்கு(தா.ஓ.ம. – Low Tide Level – L.T.L.)க் கீழே ஆழமும் இருக்க வேண்டும். வாய்க்காலின் நிலப்புறக் கரை உ.ஓ.ம. அல்லது அண்மைப் பக்கத்தில் கடலில் விழும் ஆற்றின் மேலிற்று வெள்ள மட்டத்தின்(M.F.L.) மேல் தேவையான மிகு உயரத்துடன் இருக்க வேண்டும். வாய்க்கால் ஆறுகளைக் கடக்கும் இடங்களில் ஆற்று வெள்ளத்தின் இழுப்புக்கு படகுகள் ஈடுகொடுக்கும் வகையில் ஆற்றின் ஒரு மேல் எட்டத்துக்குச் சென்று ஆற்றில் இறங்கும் வகையில் ஆற்றின் அந்த மேல் எட்டம் வரை வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும்.

ஆறுகளுக்கிடையில் கடலை நோக்கி வரும் மழைநீர் விழுவதற்காக தோதான இடங்களில் இயற்கை நிலக்கிடப்பைப் பயன்படுத்தியோ செயற்கையாகவோ நன்னீர்க் காயல்களை உருவாக்க வேண்டும். மழைக் காலங்களில் அக் காயல்களில் விழுகின்ற மேலீற்று வெள்ளத்தை நாவிக வாய்க்காலினுள் கழிக்கின்ற வகையில் உயர் ஓத மட்டத்துக்கு மேல் உச்சியைக் கொண்ட கலிங்குகளை அமைக்க வேண்டும்.

தேரியின் இரு சாய்வுகளிலும் தாழை, கடல் மணலில் வேர் பதித்துப் படர்கின்ற, கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள முள் பொன்ற இலையுள்ள புல், அடப்பன் கொடி எனப்படும் கடம்பாக் கொடி போன்றவற்றை வளர்க்க வேண்டும். தடிக்கோ விறகுக்கோ பயன்படும் மரங்களைத் தவிர்த்து தேரி மணலுக்கேற்ற குத்துச் செடிகளையே வளர்க்க வேண்டும்.












தேரியின் நிலப்புறச் சாய்வுக்கும் நாவிக வாய்க்காலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் தடி மரங்களைத்தான் வளர்க்க வேண்டும். உள் நாட்டிலிருந்து கடற்கரை நோக்கி வரும் சாலைகளை நாவிக வாய்க்கால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லா வகையில் மேம்பாலங்கள் அமைத்து தேரி உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். வாய்க்காலின் நிலப்புறத்தில் ஒரு சாலையுடன் கரை அமைக்க வேண்டும். அது ஆறுகளைக் கடக்கும் இடத்தில் தேவைப்படும் இடங்களில் அடியில் நாவிகப் போக்குவரத்துக்கு வசதியாக தூக்குப் பாலங்கள் அமைக்க வேண்டும். தேரி மேலுள நால்வழிப்பாதை ஆறுகளைக் கடக்கும் இடத்திலும் இதே உத்தியைக் கையாள வேண்டும்.

உள்நாட்டுக்குள் கப்பல் செல்ல வாய்ப்புள்ள நேர்வுகள் தவிர ஆற்றினுள் துறைமுகங்கள் அமைக்கக் கூடாது. மீன்பிடி துறைமுகங்கள் உட்பட அனைத்துத் துறைமுகங்களையும் நாவிக வாய்க்காலில்தாம் அமைக்க வேண்டும். கடலுக்குள் செல்லும் கப்பல்கள், படகுகள் அனைத்தும் ஆற்றுக் கழிமுகங்களுக்குச் செல்லாமல் துறைமுகங்களை அடுத்து அகழ்ந்து பராமரிக்கப்படும் கால்வாய்கள் வழியாகவே செல்ல வேண்டும்.

ஆற்றுக்குள் ஆற்றுக் கழிமுகத்திலோ மேலேயுள்ள எட்டங்களில் குறிப்பிட்ட தொலைவுக்கு புதர்களோ மரங்களோ வளர்க்கக் கூடாது. ஓதம் ஆகிய வீங்கலை, சூறாவளி, ஓங்கலை ஆகியவற்றின் வீச்சு ஆற்றுக்குள் எட்டும் தொலைவு என்று கள நிலைமைகள் காட்டும் எட்டம் வரை அதற்கேற்ற உயரத்துக்கு ஆற்றின் கரைகளை உயர்த்தி நிலைத்திணைகளையும் நட்டுப் பராமரித்து வாய்க்காலுக்கு அப்பால் நிலப்புறத்திலுள்ள குடியிருப்புகளையும் பிற கட்டுமானங்களையும் விளைநிலங்களையும் காக்க வேண்டும்.

தேரிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் மக்கள் இறங்கி பொழுது போக்கு, பல்வகை மணல்சார், கடல்சார் விளையாட்டுகளில் ஈடுபடலாம். அவர்களுக்குத் தேவைப்படும் சிற்றுண்டி விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் போன்றவை தற்காலிக அமைப்புகளாகவே இருக்கும். நிலையாக ஆட்கள் தங்கக் கூடாது. நிலையான கட்டடங்களும் கூடாது.

மீன்பிடி துறைமுகங்களில் கீழ்க்காணும் வசதிகள் செய்யப்பட வேண்டும்:
1. மீன்பிடி தொழிலாளர் தங்கும் விடுதி,
2. பொருள் காப்பறை,
3. படகு பழுது தளம்,
4. மீன் வகைப்படுத்திச் சிப்பமிடும் தளம்,
5. வலை மற்றும் தூண்டில் பழுது தளம்,
6. வலை உலர்த்து தளம்,
7. மீன் உலர்த்து தளம்,
8. குளிர்பதன சேமிப்புக் கிடங்கு,
9. பனிக்கட்டித் தொழிலகம்,
9. உணவகம்,
11. மனமகிழ் மன்றம்,
12. மருத்துவ மையம்,
13. மீன் பிடித்தல் மற்றும் நாவிகம் தொடர்பான பயிற்சி மையங்கள்,
14. நூல் நிலையம் மற்றும் படிப்பகம்,
15. வானிலை கண்காணிப்பகம் மற்றும் குறியறி மையம்,
16. பேரிடர் எச்சரிக்கை மையம்,
17. பேரிடர் புகலிடம்
முதலியவை.

மேலே விளக்கப்பட்டுள்ள முன்னீடுகள் பற்றி எழக்கூடிய ஐயங்கள், வினாக்களுக்கான விளக்கங்களைக் கீழே தருகிறேன்.

1. தேரி உருவாக்க வேண்டிய இடங்களில் முதலில் வாய்க்காலைத் தோண்டும் பணியைத் தொடங்கி ஒரு முதனிலைத் தேரியை உருவாக்க வேண்டும். மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் மணலைப் பற்றிப்பிடிக்கும் வேர்களுடைய, தேரியில் செழித்து வளரும் கொடிகள் குத்துச் செடிகளை நட்டால் கடலிலிருந்து வீசும் காற்று சுமந்து வரும் கடல் மணலை அவை பிடித்துவைப்பதோடு கடலை நோக்கி வீசும் காற்று அதைக் கொண்டுசெல்லாமலும் தடுக்கும்.
2. தேரியின் சாய்வுகளில் விறகு மரங்களும் தடி மரங்களும் வளர்க்கப்பட்டால் விறகுக்காகவும் தடிக்காகவும் அவற்றைத் திருடர்கள் வெட்டி அகற்றக்கூடும். அதனால் அவை தேரிக்கு நம்பகமான பாதுகாப்புப் போர்ப்பாக இருக்கமாட்டா.
3. தேரியின் மீது முன்னிடப்பட்டுள்ள நால்வழிச் சாலை மிக முகாமையான போக்குவரத்துத் தடமாக மாறும் வாய்ப்பு உண்டு. அதில் செல்வது மிக இன்பமான ஒரு பட்டறிவாகவும் இருக்கும். அதனால் அச் சாலையின் பராமரிப்புத் தேவைக்காக தேரியும் நிலைத்து நிற்கும் வண்ணம் பராமரிக்கப்படும்.
4. தேரிக்கும் நாவிக வாய்க்காலுக்கும் இடையிலுள்ள நிலத்தில் தடி மரங்கள் வளர்க்க வேண்டுமென்பதன் நோக்கத்தைக் கூறுகிறேன். கடல் நிலத்தை நோக்கி வளைந்த இடங்களில் ஓங்கலைத் தாக்குதல் கடுமையாக இருந்தது. குமரி மாவட்டத்தின் கீழ முட்டம் கடற்கரையின் ஓங்கலையின் பின்னர் எடுத்த கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.




























இந்த வளைவுகளை நேராக்க முடியும். எடுத்துக்காட்டுக்கு குமரி மாவட்டம் பெரியகாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தூண்டில் வளைவு எனப்படும் மேலேயுள்ள குரம்புகளை(groynes)ப் பாருங்கள். இவற்றின் இடையில் மணல் படிந்து மேடாகி கரை கடலை நோக்கி நகர்ந்து நேராகியிருக்கிறது. ஆனால் இந்தக் கல் குரம்புகளால் பல கேடுகள் உள்ளன. அந்த வட்டாரத்து மலைகளை உடைத்து ஆண்டு முழுவதும் கடலுக்குள் கொட்டுகிறார்கள். அதனால் பல குன்றுகள் காணாமல் போயுள்ளன. மலைகள் மறைந்து வருகின்றன. இதனாலும் இங்கெல்லாம் மழையின் சீர்மை கெட்டுவருகிறது. கடலுக்குள் கொட்டுவதால் அளந்து சரிபார்ப்பது கடினம் என்பதால் அதிகாரிகள், அரசியல்வாணர்கள் நன்றாகக் கொள்ளையடிக்க முடிகிறது. இந்த உண்மைகளை அறியாத மீனவ மக்களைத் திரட்டி கண்ட இடங்களிலெல்லாம் கற்குரம்புகள் அமைக்குமாறு அரசியல்வாணர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆனால் வேறு பொருட்களை, குறிப்பாக மரத்தைக் கொண்டும் குறம்புகளை அமைக்க முடியும். பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள். மரம் புதுப்பிக்கத்தக்க ஒரு இயற்கை வளம், பாறை இரும்பு போன்றவை மீளப் பெற முடியாதவை. ஆனால் பாருங்கள் நம் மாநில, நடு அரசுகள் காடுகள் அழிவதைத் தவிர்க்கிறோம் என்ற போர்வையில் தங்கள் கட்டடங்களில் கதவுகள், சன்னல்களுக்கு மரங்களைத் தவிர்த்து இரும்பைப் பயன்படுத்தி வருகின்றன. கணக்கற்ற பரப்பில் விரிந்து கிடக்கின்றன தரிசு நிலங்கள் நாடு முழுவதும். திறந்தவெளி மேய்ச்சலை முடிவுக்குக் கொண்டுவந்து கால்நடைகளைத் தொழுவங்களில் வளர்த்து மக்களைக் காடு வளர்க்க ஊக்கினால் நம் நாட்டில் தடி மரங்களுக்குக் குறைவே இருக்காது. மக்களுக்கு நல்ல முதலீட்டு வாயில்கள் திறக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும். ஆனால் இதையெல்லாம் செய்து ஆட்சியாளருக்கு என்ன ஆதாயம்? இருப்பதை மாற்றிப் புதியவற்றைப் புகுத்தி மக்களோடு ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்? மரத்தை இறக்குமதி செய்வதால் கிடைக்கும் தரகுப் பணம் இதில் கிடைக்குமா?

மீண்டும் கடற்கரைக்கு வருவோம். தேரியின் நிலப்பக்கச் சாய்வுக்கும் நாவிக வாய்க்காலுக்கும் நடுவில் வளர்க்கப்படும் மரங்களைக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் குரம்புகளை அமைத்து தேரியையும் நாட்டையும் கடல் சீற்றங்களிலிருந்து காக்கலாம். இதற்குப் பொருத்தமான உள்நாட்டு மரங்களைத் தேர்ந்து நட்டால் மட்டும் போதாது பேணி வளர்க்கவும் வேண்டும்.
5. ஆற்று முகப்புகளில் துறைமுகங்கள் அமைக்கக் கூடாது என்றோம். இதற்கு முதற்காரணம் கயவாய்களில் அமைக்கப்படும் துறைமுகக் கட்டுமானங்கள் ஆற்றின் பாய்ச்சலில் குறுக்கிட்டு உள்நாட்டில் வெள்ளத்தால் அழிவுகள் மிகுவதற்குக் காரணமாகும். அத்துடன் இது போன்ற வெள்ளக் காலங்களில் கப்பல்கள் துறைமுகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இடையூறாவதுடன் நிற்கும் கப்பல்களும் ஏதத்துக்குள்ளாகும். ஓங்கலைப் பணியின் போது கொள்ளிடத்தின் பழையாற்றுக் கழிமுகத்தில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்க மீன்வளத்துறை திட்டத்துக்கு ஒப்புதலளித்துள்ளதாகவும் அவ்வாறு அமையும் துறைமுகத்துக்கு அமைக்கப்படும் தூண்டில் வளைவு ஆற்றில் வரும் வெள்ள நீரைத் தடுக்குமாதலால் உள்நாட்டில் பேரழிவு ஏற்படும் என்பதால் அத் திட்டத்துக்கு ஒத்திசைவு வழங்க தமிழகப் பொதுப்பணித் துறை மறுத்துவருகிறது என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர். இது உண்மையாயிருந்தால் மீன் வளத்துறைத் துறைமுகப் பொறியாளர்களின் மழுமண்டைத்தனம் நமக்கு வியப்பளிக்கிறது, இந்தக் கழிமுகத்துக்கு ஏறக்குறைய இரு கி.மீ.க்களுக்கு ஆற்றின் மேல் எட்டத்திலிருந்து தென்புறம் ஒரு நீர்த்தடம் உருவாக்கி அங்கு படகுகளைக் கொண்டு நங்கூரமிட்டு நிறுத்தியும் தேவைப்படும் பழுதுகள் பார்த்தும் புதுப் படகுகள் கட்டியும் வருகிறார்கள் அங்குள்ள மீனவர்கள். மீன் வளத்துறையினர் அந்த இடத்தைப் பயன்படுத்தித் திட்டம் தீட்டியிருக்கலாம் அல்லது வேறு பொருத்தமான ஓரிடத்தில் இது போன்ற நீர்த் தடத்தை உருவாக்கி அங்கு துறைமுகத்தை அமைக்க முன்னிட்டிருக்கலாம்.

(பழையாற்றில் கொள்ளிடம் கழிமுகத்தையும் அதற்கு மேற்கில் பக்கிங்காம் கால்வாய்க்கும் மேற்கில் தெற்கு நோக்கிச் செல்லும் நீர்வழியைக் காட்டும் படம்)

இந்த நோட்டங்களிலிருந்துதான் ஆற்றுக் கழிமுகங்கள் துறைமுகம் அமைக்கப் பொருத்தமற்றவை என்ற முடிவு என்னுள் முகிழ்த்தது, அது மட்டுமல்ல மேலே முன்னிடப்பட்டுள்ளவாறு நாவிக வாய்க்காலில் துறைமுகத்தை அமைத்தாலும் அங்கு வருவதற்குக் கூட கப்பல்களோ படகுகளோ ஆற்றுக் கழிமுகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கும் வந்தேன். இந்த நேரத்தில் குமரிக் கண்டம் பற்றி ஆய்வதாகக் கூறி என்னை அடிக்கடி சந்தித்த ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியிடம் இக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சில நாட்கள் சென்று என்னைச் சந்தித்த அவர் ஒரு முகாமையான கருத்தைக் கூறினார். குமரி மாவட்டத்து மணக்குடியில் கடலில் விழும் பழையாறு என்னும் கோட்டாறுக்கு(கோடு = மலை) ஒரு காலத்தில் பறக்கைக் கால் எனப்படும் கால்வாயும் இப்போது அது வீழும் சிமிந்தக் குளம் எனப்படும் சுசீந்திரம் குளமும் அதைத் தொட்டுத் தெற்கில் கிடக்கும் பறக்கைக் குளமும்(இரண்டையும் இணைத்து பறக்கைக் குளம் என்றே ஆவணங்கள் குறிப்பிடுகின்றன) அதன் தொடர்ந்த பாதையாகவும் இருந்து அவற்றைத் தாண்டி இன்னொரு குளத்தையும் தாண்டி கடலில் விழுந்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவர் கூறிய செய்தி சிறப்பானதாகும். மேலே கூறியவாறு இன்றைய குளங்களின் கிடப்பிடத்தைக் கொண்ட பழைய கோட்டாற்றின் வழியாக பழம்பெருமை வாய்ந்த கோட்டாறு நகருக்குக் கப்பல் போக்குவரத்து நடந்துள்ளது என்பதே அது. அதாவது இன்று நாகர்கோயில் தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் கோட்டாற்றின் எச்சங்கள் நீர் நிறைந்து சம்பு எனப்படும் நீர்ப் புல்வகை அடர்ந்து காணப்படுகிறது. அது மேலும் வடக்கே தொடர்ந்து ஒழுகினசேரி பாலத்துக்கு மேற்கில் தொடர்வதைக் களத்திலும் கீழை தரப்பட்டுள்ள திணைப்பட(map)த் துணுக்கிலும் பார்க்கலாம். இந்தத் துறைமுகத்துக்கு வந்த பாதையில் சேரும் வண்டலை அகற்றுவதற்கு கப்பல்களில் அமைந்த தூரகற்றிகளும் இருந்துள்ளன என்றார். பின்னர் கப்பல் போக்குவரத்து நின்று ஆற்றின் பராமரிப்பு முடிவுக்கு வந்த பின்னர் ஆறு கிழக்குப் பக்கமாக உடைப்பெடுத்து இன்றைய பாதை உருவாகியிருக்கிறது.
(சுசீந்திரத்துக்குத் மேற்கில் பறக்கைக் குளத்துக்குத் தெற்கில் கடற்கரை வரையும் வடக்கில் ஒழுகினசேரி பாலம் வரையும் தொடர்ந்து கிடக்கும் நீரோட்டத்தைக் காட்டும் படம்)

கோட்டாறு பண்டைத் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு வாணிக நகரம். அதன் எச்சமாக இன்றும் அதன் கூலக்கடைத் தெருவும் சாலையோரக் கடைகளும் காணப்படுகின்றன. அந் நகரின் தெருக்களைக் கவனித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட நகரமைப்புப் பகுதிகளை இனம் காண முடிகிறது. இது ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த ஆய்வுக்களமாகும்.

6. ஆற்று முகப்புகளிலும் மரங்கள் போன்ற தடங்கல்கள் இருக்கக் கூடாது என்கிறோம் ஏனென்றால் புயல், ஓதம், ஒங்கலை போன்று கடல் நீர் மட்டத்தில் திடீர் உயர்வுகள் நிகழும் போது அவற்றை மட்டுப்படுத்த உதவுவது கடலுக்குள் கழியும் ஆறுகளே. அவற்றின் வழியில் தடங்கல்கள் இருந்தால் கடல்நீர் எந்தத் தயக்கமும் இன்றி அண்டையிலிருக்கும் தேரியைத் தாக்கும். தேரி இல்லாத இடங்களில் 2004 ஓங்கலையில் நிகழ்ந்தது போல் ஈவிரக்கமின்றி எதிர்ப்பட்டவற்றையும் பட்டவர்களையும் அழித்து வெறியாடிவிடும். அது மட்டுமல்ல கடல் பரப்பில் தாழ்வழுத்த நிலைகள் உருவாகும் போது தன்னூடு நிலத்தின் தாழ் அடுக்குகளில் உள்ள அழுத்தம் கூடிய காற்றை வெளிப்படுத்தி தாழ்வழுத்தம் மிகாமல் அடக்குவதுடன் அத் தாழ்வழுத்தத்தைத் தன்னூடு மலை முகடுகள் வரை இழுத்துச் சென்று சூறாவளிகள் உருவாகும் முன்பே மழையைப் பெய்ய வைக்கிறது.

மா.சு.சுவாமிநாதன் வகையறா போலியான காரணங்களைக் கூறி ஆற்று முகப்புகளில் மண்குதிர்க் காடுகளை(mangrove forests) வளர்க்கத் தொடங்கிய பின்னர்தான் தமிழகக் கடற்கரைப் பகுதியில் உருவாகும் தாழ்வழுத்த நிலைகள் நிலத்தினுள் புக வழியின்றி நகர்ந்து இலங்கைக்கு அல்லது வடக்கு நோக்கி ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் போதே வலிமை பெற்று பேரழிவுப் புயல்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. தமிழகத்திலும் தொடர்ந்து மழை வாய்ப்பைக் குறைக்கின்றன. முன்பு தமிழகத்தின் எண்ணிலடங்கா மரபு விதைகளைத் திருடி பிலிப்பைன்சு அமெரிக்க வேளாண் ஆய்வகத்துக்குக் கடத்தியதான குற்றச்சாட்டுக்கு உள்ளான சுவாமிநாதனிடம் இது போன்ற செயலைத்தான் எதிர்பார்க்க முடியும்.

7. சிறிய படகுகள், தோணிகள், வள்ளங்கள் கட்டுமரங்கள் போன்றவற்றின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து குறைந்தது நடுத்தர அளவுள்ள படகுகளையாவது பயன்படுத்தும் குறிக்கோளை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்பது என் அவா. கிட்டத்தட்ட 1000 கி.மீ. நீளம் கடற்கரையைக் கொண்ட தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழக மக்களுக்குச் சத்தும் எளிமையும் கலந்த மீனுணவு கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் தவறல்ல என்று கருதுகிறேன். இன்று நமக்கு எதிரி அரசு போல் செயல்படும் இந்திய அரசின் கடலோரக் காவற் படையின் துணையுடன் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்களர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் துணை சேர்க்கவாவது நாம் உள்நாட்டு மக்களுக்குரிய மீன் வழங்கலை உயர்த்த நம் மீன்பிடித் தொழிலின் தொழில்நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் நம் பண்டைய மரபு அறிவுகளின் அடிப்படையில் மேம்படுத்திப் பயனுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த இடைமாற்றக் காலத்தில் இப்போது பணியாற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு அவர்களின் அகவைக்கும் கல்விக்கும் ஏற்றவாறு பயிற்சியளித்துப் புதிய சூழலில் பயன்படுத்த வேண்டும். முதுமையடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற வசதிகளை வழங்க வேண்டும்.

ஓங்கலைப் பணியின் போது கிடைத்த செய்திகளும் படிப்பினைகளும் பட்டறிவுகளும் பலப்பல. அவற்றில் பின் வருபவை முகாமையானவை. ஓங்கலைத் தாக்கல் நிகழ்ந்த உடனே எங்கெங்கெல்லாமோ இருந்து உதவிகள் வந்து குவிந்தன. உதவ வந்தவர்கள் துயருற்ற மக்களுக்கு உடனடியான மீட்புதவிகளையும் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தவும் மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதிலும் முனைப்பாக ஈடுபட்டனர். இன்னொரு புறம் ஒங்கலையால் குடியிருப்புகளை இழந்தோருக்கு புதிய குடியிருப்புகளை அமைப்பது பற்றிய ஆயத்த வேலைகள் ஆட்சியாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்றன. இது குறித்து தமிழக அரசும் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி களத்திலிருப்போர்க்கு அளித்தது. அதில் முகாமையானது, புதிய குடியிருப்புகள் கடற்கரையிலிருந்து 2 கி.மீ.க்கு அப்பால் இருக்க வேண்டுமென்பது. இது மிகச் சரியான அணுகலாகும். இந்தத் தொலைவு நிலக் கிடப்புக்கு அதாவது கடலை அடுத்த நிலத்தின் மேல் நோக்கிய சாய்வைப் பொறுத்து மாற்றத்தக்கதாகலாமே ஒழிய பாதிப்புக்குள்ளாகத்தக்க மட்டத்துக்கு மேலே இருக்க வேண்டுமென்பது சரிதான். கடலோரக் குடியிருப்புகளும் அவற்றையொட்டியே படகுகளை ஒதுக்கி வைத்திருப்பதும் பெரும் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் என்பதைக் கீழையுள்ள புகைப்படங்கள் விளக்கும். வலது புறத்திலுள்ள குமரி மாவட்ட கீழ மணக்குடி மாதா கோவிலைத் தகர்த்தெறிந்தவை ஓங்கலையின் பேய்க் கரங்களால் தூக்கி வீசப்பட்ட கரையில் கிடந்த படகுகள்தாம்.











ஆனால் இந்தத் திட்டம் சிலருக்கு, குறிப்பாக தமிழகக் கடற்கரை மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினருக்கு உவப்பாயில்லை. சங்கத்தைப் பயன்படுத்தி கடற்கரையில் படும் மீனை மொத்தமாகக் கொள்முதல் செய்து கொள்ளையடிப்பவர்கள் இவர்கள். இருக்கும் கட்டமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது தங்கள் மேலாளுமைக்கு அறைகூவலாக அமையும் என்று நினைத்தனர். கடற்கரை மதகுருக்களும் அவ்வாறே உணர்ந்தனர். விளைவு 2கி.மீ. 1கி.மீ.யாகி பின்னர் ½ யாகி இறுதியில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என்றாயிற்று.

பழையாற்றில் பாதுகாப்பான மட்டத்துக்கு மேல் இருக்க வேண்டுமே என்று என் போன்றவர்கள் தேடித்தேடி பொருத்தமான ஓர் இடத்தைத் தேர்வு செய்து நில அளவை ஆவணங்களைத் திரட்டிக்கொண்டிருந்த போது பழைய பெருநிலக்கிழார்(மிராசுதார்), குன்னியூர் சாம்பசிவ ஐயர் என்று நினைவு, அவருடைய நிலத்தில் நில உச்சவரம்பின் போது யாரும் ஏற்றுக்கொள்ளாமல், ப.வாய்க்காலுக்கு வெளியே நிலப்புறத்தில் காலங்காலமாக பாசியோடி நீர் தேங்கி அழுகிக் கிடந்த இடத்தைப் பேசி முடித்தார்கள். அதை நான் எதிர்த்தேன். இது போன்ற சிக்கல்கள் காரைக்கால் வட்டாரத்திலும் குமரி மாவட்டத்திலும் எழுந்தன. குடியிருப்புகளின் அமைப்பும் இப்போது நாம் பட்டறிந்துவரும் இடர்பாடுகள் இல்லாத மேம்பட்ட கண்ணோட்டத்தில் இருக்குமாறு வடிவமைப்புகளை முன் வைத்தேன். இதுவும் மேலேயுள்ளவர்களுக்கு உவப்பாயில்லை. இதற்குள் வெளிநாட்டுத் “தொண்டு” நிறுவனங்கள் கொட்டும் பணத்தில் உண்டு களித்த ஒரு கூட்டம் ஆரவாரத்துடன் உள் நுழைந்தது. கட்டுமானங்களின் தரம் போன்ற என் முன்வைப்புகளை விரும்பாத அந்தக் கூட்டம் என்னைக் குறிப்பிட்டு வெளியேற்ற வற்புறுத்தியது. அதோடு கடற்கரையோடுள்ள அப்போதைய உறவு முடிவுக்கு வந்தது.

இந்தக் கால கட்டத்தில்தான் அமெரிக்கப் பின்புலமுள்ள ஒரு தொழிற்சங்கம் பழையாறு வட்டாரத்தில் புகுந்து படகு உரிமையாளர்களுக்கு எதிராக மீன்பிடித் தொழிலாளரை ஒருங்கிணைத்து தூண்டிவிட்டு இரு சாரருக்கும் அடிதடி வெட்டுக்குத்து எல்லாம் நடைபெற்றன. இதனாலும் ஏழை மீன்பிடி தொழிலாளர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான ஒரு குடியிருப்பு வேண்டும் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. பிற பகுதிகளிலும் இந்த அமெரிக்கக் கையாட்கள்தாம் மீனவர்களைக் கடலோரப் பழங்குடியினர் என்று மூளைச் சலவை செய்து தமிழகத்தின் பிற மக்களிடமிருந்து மனதளவில் பிரித்து வைத்துள்ளனர். இந்தியக் கடலோரக் காவற்படையின் ஒத்துழைப்போடு சிங்களக் கடற்படை நம் மீனவர்கள் மீது இடையீடின்றி நடத்தும் கொலைவெறித் தாண்டவம் அவர்களை மட்டுமல்ல தமிழக உணர்வுடைய உள்நாட்டு மக்களையும் ஒன்றிணைய வைக்கும் என்பதில் ஐயமில்லை.

கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். உள்நாட்டில் வாழ்வோரின் நிலையும் மேம்பட்டதல்ல. நேப்பாளத்தில் அடுத்தடுத்து நிகழும் நில நடுக்கம் இதற்கு முன் நிகழ்ந்தவற்றிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றுகிறது. இப்போதைய நிலநடுக்கத்தின் பின்னே இமயத்தின் உயரம் குறைந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை இதழ்களில் வெளியானது. இதன் பொருள் மிக அச்சம் தருவது. இந்தியக் கண்டத்தட்டு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத் தட்டோடு மோதி சிறுகச் சிறுக உயர்ந்து வந்தது. இந்த உயரத்தின் சுமையைத் தாங்கும் சுற்றியுள்ள நிலத்தின் உராய்வு ஆற்றல் எல்லையை மலையின் உயரம் தாண்டும் போது பக்கத்து நிலம் விட்டுக்கொடுக்க மலை கீழ் நோக்கி விரைந்து இறங்க நேரலாம். இமயம் இறங்கியுள்ளது என்ற ஆய்வர்களின் கூற்று உண்மையானால் உலக அளவில் பேரழிவுகள் நேரலாம். எனவே அனைவரும், குறிப்பாகக் கடலோர மக்கள் கடல் அலைகள் தொடும் எல்லையிலிருந்து விலகியிருப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மேலே நான் தந்துள்ளது போன்ற ஓரு திட்டம் முழுக்க முழுக்க கடலோர மக்களுக்கு முன்னுரிமையுடன் தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் செயல்படுத்தப்பட்டால் இன்று மீன்பிடிப்பதை மட்டுமே வாழ்வின் ஒரே வழியாகக் கொண்டிருக்கும் கடலோர மக்களுக்கு தேரியைப் பராமரித்தல், மரங்களைப் பராமரித்தல், நாவிக வாய்க்காலில் அமையவுள்ள சிறு, குறு, நடுத்தர, பெரும் துறைமுகங்களிலும் பொருள், ஆள் போக்குவரத்து, வாய்க்காலிலும் கடலிலும் பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்தால் அதன் மூலமும் உருவாகும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. எனவே இந்த மேம்பாட்டுப் பணியை தமிழகம் தவிர்த்த எவருடைய பங்களிப்பும் இன்றி மேற்கொள்வதற்காக இந்திய அரசை வலியுறுத்தும் போராட்டத்தைத் தொடங்க தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் பின் அணிதிரளுமாறு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்!

ஓங்கலைப் பணியின் போது நான் அறிந்த ஓர் உண்மை, ஏறக்குறைய தூத்துக்குடிக்கு வடக்கில் வாழும் மீனவர்கள் கடற்கரையில் மரபு வழியில் வாழ்ந்தவரில்லை என்பது. நாகை மாவட்டத்தின் பழையாற்று மக்கள் தாங்கள் கடந்த 200 ஆண்டுகளுக்குள் அங்கு குடியேறியவர்கள் என்று கூறுகிறார்கள். இராமேசுவரம் பகுதி மீனவர்களைப் பொறுத்தும் அவ்வாறே கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர்களது சிந்தனைகள் மீன்பிடிப்புக்கு அப்பால் செல்லவில்லை. அத்துடன் குமரி மாவட்டத்தில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற கல்விப் புரட்சி பிற இடங்களில் நிகழவில்லை. அங்கு மீனவர்கள் கல்வியின் துணையுடன் பல துறைகளிலும் பணியாற்றுகிறார்கள். கப்பல் துறைக் கல்வி கற்று கப்பல்களிலும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் கடலோடிகளுக்கு எதிராக காலங்காலமாக நம் ஆளும் கணங்கள் வளர்த்து வந்திருக்கும் எதிர்மறை அணுகலால் கப்பல் தொழிலுடனான அவர்களது தொடர்பு அறுந்து போயிற்றென்றே கூற வேண்டும். வெள்ளையர்கள் இங்கு வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த கப்பல் கட்டும் தளங்களில் தங்களுக்குத் தேவையான கப்பல்களைக் கட்டினர் என்று சில செய்திகள் உள்ளன. ஆனால் மேலை நாடுகளில் வளர்ந்த கப்பல் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அத் தொழில் மீன்பிடி படகுகளைக் கட்டுவதாகச் சுருங்கிப் போனது. இந்த முட்டுக்கட்டை நிலையை உடைக்கக் கிடைத்த ஒரே வாய்ப்பான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முயற்சியை குசராத்து பனியாவான காந்தி – ஆங்கிலர் கூட்டணி சிதறடித்துவிட்டது. இன்று மதிப்பு மிக்க தமிழகக் கடற்கரையை மீன்பிடிப்புக்கு அப்பால் பயன்படுத்துவது பற்றிய கேள்விக்கு விடைகாண வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் தமிழகக் கடலோர மக்கள், குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர். வளர்ச்சி என்ற சாக்கில் அயல்நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் நம் ஆட்சியாளர்கள் இந்த 67 ஆண்டுகளில் அடித்த கொள்ளையின் தொகுப்பான, வெளிநாடுகளில் அங்குள்ள குசராத்தி – வல்லரசு நிறுவனங்களின் மூலமாக நுழைந்து தமிழர்களைத் தங்கள் தாயகத்திலிருந்து அகற்றுவதை வேடிக்கை பார்த்திருந்து எந்த நாட்டில் குடியேறுவது என்று ஆய்வதா, நம் சொந்தச் செல்வங்களைத் திரட்டி நம் கடற்கரையை நம் பல்வகை – பல்துறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைத் தொடங்குவதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலக்கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது கடலோர மக்களை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் முன்னால் நிற்கும் பல கேள்விகளில் ஒன்று.

வருமான வரியை ஒழிப்போம்!
உள்நாட்டு மூலதனத்தைப் புரப்போம்!
வெளிநாட்டு மூலதனத்தை வேரறுப்போம்!
தமிழகமே நமது ஊர்!
1956 நவம்பர் 1ஆம் நாளுக்குப் பின்னர் குடியேறியவர் தவிர்த்த தமிழக மக்களே நமது உறவினர்!
☀ ☀ ☀
முடிவுரையாக…….
2004 திசம்பர் 24ஆம் நாள் தமிழக மக்கள் மீது ஊழி வெள்ளமாகப் பாய்ந்து நாம் பார்த்தறியாத அழிவுகளை ஏற்படுத்திய ஓங்கலையின் கொடும் விளைவுகளைப் பார்க்கவென்று தானே முன்வந்து என்னை அழைத்துச் சென்ற பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர்(ஓய்வு) நண்பர் பொறி.இரத்தினசாமியுடன் குமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்கு கட்டுமரங்களும் சிறு படகுகளும் வீடுகளின் மீது மோதி அவற்றை உடைத்து வீடுகளின் மேல் கவிந்திருந்ததைக் கண்டோம். இளைஞர்கள் சிலர் அவற்றில் ஒன்றை அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். படகுகளுக்கு அடியிலிருந்து பிண வாடை வீசியது, ஓருவரோ பலரோ அந்த வீட்டினுள்ளோ படகின் அடியிலோ சிக்கியிருக்கலாம் என்று தோன்றியது. கிடைத்த ஓர் இடுக்கு வழியாக அந்த இடத்தைத் தாண்டி கடலருகே சென்றோம். அந்தக் கூட்டத்திலிருந்த, நடுப்பருவத்தைத் தாண்டிய எளிய தோற்றமுடைய ஒருவர் எங்களைப் பின்தொடர்ந்தார். அங்கிருந்து மேற்கில் காணப்பட்ட கீல்(தார்) சாலையையும் அதன் இரு பக்கங்களிலும் நொறுங்கிக் கிடந்த வீடுகளையும் காட்டி இந்த வீடுகள் அண்மைக் கடந்த காலத்தில் உள்ளூர் அரசியல்வாணர்களால் தேரியின் கடற்பக்கத்தை நிரத்தி அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் என்றும் இங்கு சாலைகள், குடிநீர்க் குழாய்கள், மின்விளக்குகள் போன்ற வசதிகளுக்காக அங்கு குடியேறிய மக்களைத் திரட்டி அரசியல்வாணர்கள் போராட்டங்கள் நடத்தி தங்கள் வாக்குவங்கியையும் வருவாயையும் வளர்த்துக்கொண்டனர் என்றும் மனக் கொதிப்புடன் கூறினார். கடற்கரையிலிருந்து திரும்பிய போது படகை நகர்த்த முயன்ற இளைஞர்கள் தம்மால் முடியாது என்று கூறிக் கலைந்துகொண்டிருந்தனர். அந்த இடம் மேலே குறிப்பிட்ட புதிய குடியிருப்பிலிருந்து பழைய தேரி மட்டத்திலிருக்கும் குடியிருப்பை நோக்கிய இடை நிலத்தில் இருந்தது. தேரி மேலிருந்த குடியிருப்புகளும் பேருந்துத் தடமான சாலையும் பாதிக்கப்படவில்லை.

பாதிப்பென்று குறிப்பிடும் படியாக எதுவுமே நிகழாத இராசாக்கமங்கலம்துறையில் பேருந்து நிறுத்த நிழல் கூடத்தில் கூடி இருந்த மீனவர்கள் சிலரிடம் உரையாடிய போது கடற்கரையில் கட்டுமரங்களையும் வீட்டுக்குள் வலைகளையும் கருவாடுகளையும் வைத்து நடத்தும் இந்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேறிய மீன்பிடி உத்திகளை என்று கையாளப் போகிறீர்கள் என்று கேட்டேன். நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை பேருந்தில் நன்றாக உடை உடுத்தியிருந்த ஒரு பெண்மணியின் அருகில் உட்கார நேர்ந்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மாள் ‘கருவாட்டு வாடை அடிக்குதா கண்ணு’ என்று கேட்டார், கேட்டுவிட்டு, என்னதான் பாதுகாப்பாக பேழையுள் வைத்திருந்தாலும் வீட்டினுள் இருக்கும் கருவாட்டு வாடை துணிகளில் வந்துவிடுகிறது என்று அமைதியும் கூறினார். கடற்கரை ஊர்களிலுள்ள, பெரும்பாலும் பெண்கள் பொறுப்பிலிருக்கும் கடைகளில் வெற்றிலை போடும் என் தந்தையிடம் அவர்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், கோயில் விழா, பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரங்களை கொடுத்தனுப்புவார்கள். சில வேளைகளில் வீட்டுக்கு வருவோரும் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலும் சிறிது கருவாடு வாடை இருக்கும். இவ்வாறு அவர்களது வாழ்க்கை முறைகளையும் வாழ்க்கை நிலைகளையும் அறிந்திருந்த என் கேள்வியின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் என் பொதுக்கருத்தை ஏற்று மறுமொழி கூறினார்கள். ஆனால் முன்பு ஓலைக்குடிசைகளில் வாழ்ந்தவர்கள் இப்போது கான்கிரீட் கூரை போட்ட வீடுகளில் வாழ்ந்தாலும் வலைகளையும் பிற மீன்பிடி தளவாடங்களையும் வீட்டிலிருந்து தனியாக இருக்கும் ஓலைப் புரைகளில் வைத்திருந்தாலும் அடிப்படை மீன்பிடி உத்திகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடு எதையும் அடையவில்லை.

ஓரிரண்டு நாளில் என் நெருங்கிய நண்பரும் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தரான ப-ர்.தி.கருணாகரன் அவர்களின் வீட்டருகில் இருந்தவருமான நண்பர் ஆ.கோபாலகிருட்டினன் துணைவேந்தர் ஓங்கலைப் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வந்திருப்பதாகவும் விரும்பினால் நானும் கலந்துகொள்ளலாமென்றும் கூறினார். ப-ர்.தி.கருணாகரன் என் நெருங்கிய உறவினர், சிறு பருவதிலிருந்தே நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு, பிற்காலத்தில் அவரவர் பணிகளின் சூழலில் எங்கள் தொடர்பு குறைந்திருந்தது. இப்போது தொடங்கிய எங்கள் தொடர்பு நான் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் தங்கி ஏறக்குறைய ஓராண்டுக்காலம் கடற்கரையிலும் கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பணியாற்ற வாய்ப்பளித்தது. என் நண்பரும் கணினிக் கையாட்சியிலும் எனக்கு ஆர்வமுள்ள துறைகளிலும் ஈடுபாடுடையவருமான பள்ளி ஆசிரியர் ம.எட்வின் பிரகாசு அவர்களும் அவ்வப்போது என்னுடன் இணைந்துகொண்டார். துணைவேந்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஓங்கலை, தேரிகள், மண்குதிர்க் காடுகள், கடற்கரைப் பாதுகாப்பு போன்றவை குறித்த அடிப்படைச் செய்திகளை வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து தந்தார். இந்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை நடத்திய ஓங்கலை பற்றிய கருத்தரங்கில் என்னைக் கலந்துகொள்ள துணைவேந்தர் ஏற்பாடு செய்தார். அவர் வழிகாட்டலில் அக் கருத்தரங்கில் முன்வக்கவென்று எட்வின் துணையுடன் உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவில் உள்ளவைதாம் மேலே தரப்பட்டுள்ள புகைப்படங்கள். கடற்கரை பற்றிய குறுக்குவெட்டு நான் கையால் வரைந்ததை, அப்போது பல்கலையில் ஆய்வு மாணவராக இருந்தவரும் கட்டடக் கலைப் பொறியாளரும் துணைவேந்தரின் இணைய மகளுமான செல்வி புதுமா கணினியில் அழகுற வரைந்தது. இவ்வாறு என் இளமைக் காலம் தொட்டு என் சிந்தனையில் பதிந்துள்ள துறைகளில் முகாமையான இடத்தைப் பிடித்துள்ள தமிழகக் கடற்கரையின் மீட்சிக்கும் ஆட்சிக்கும் உதவும் என்று நான் நம்பும் இந்தப் படைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமங்கலம் அன்புடன்
18 – 06 – 2015 குமரிமைந்தன்

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 5

ஒங்கலை காட்டும் வழி
இந்தக் குறிக்கோளை மனதில் கொண்டு 2004 ஓங்கலையின் போது காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழகக் கடற்கரையில் செய்யத்தக்க சில மேம்பாடுகள் குறித்து எமது அறக்கட்டளையாகிய புதுமையர் அரங்கம் உருவாக்கிய ஓரு திட்டம் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

என் இளைமையில் குமரி மாவட்டக் கடற்கரை நெடுகிலும் அங்கிங்கெனாதபடி பல்வகைச் செடிகொடிகளுடன் கண்களைக் கவரும் தேரி எனப்படும் மணலால் ஆன கரை இருந்தது. ஓங்கலையின் பின்னர் அங்கெல்லாம் சென்ற போது குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் மங்கலம் எனும் இராசாக்கமங்கலத்து பண்டை வாய்க்காலாகிய பன்றி வாய்க்காலின் கழிமுகத்துக்கு மேற்கில் மட்டும் கொஞ்சம் எஞ்சியுள்ளது.











பண்டை வாய்க்காலின் கழிமுகத்தின் மேற்கிலுள்ள தேரி மேடு

பெரியகாடு என்னும் கடற்கரை ஊரில் ஒரு 1000 அடிகள் நீளத்துக்கு ஆற்றின் கரை போன்ற அமைப்பில் கோட்டை போல் தேரி மேடு நிலத்தைக் காவல்காக்கும் இனிய காட்சியைக் காண முடிந்தது.












பெரியகாட்டின் கிழக்கில் கற்கோட்டை போல் நிமிர்ந்து நிற்கும் தேரி மேடு
பெரியகாட்டில் தேரி மேட்டின் மீது கட்டப்பட்ட குடியிருப்புகளும் கோயிலும் ஓங்கலையின் வீச்சுக்கு ஆட்படாமல் மதர்த்து நிற்பதைப் பாருங்கள். அதைப் போலவே கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் தேரி மேட்டுக்கு மேலே கட்டப்பட்ட குடியிருப்புகளும் பிற கட்டுமானங்களும் ஓங்கலை தாக்குதலிலிருந்து தப்பியுள்ளன.

ஏறக்குறைய 65 ஆண்டுகளாக, குறிப்பாக “விடுதலை” அடைந்த பின் அரசியல்வாணர்கள் தேரி
மேட்டின் கடல் நோக்கிய பக்கத்திலும் தேரி மேட்டை நிரத்தியும் குடியிருப்புகளைக் கட்டி சாலைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி மீனவர்களைக் குடியமர்த்தி தங்கள் வாக்கு வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இப் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிப் பந்தல்களில் விரிப்பதற்காகவும்








தேரிமேட்டிலிருக்கும் பெரியகாடு ஊரின் வீடுகளும் கோயிலும் – கடல் பக்கமிருந்த தோற்றம்
தென்னை நடுவதற்காகவும் என்று கடல் மணல் கொண்டு செல்வதுண்டு. அவர்களைத் தங்கள் பகுதியிலிருந்து மணல் அள்ள இவ்வாறு குடியிருப்புகள் அமைப்போர் வேண்டுவதும் நடந்திருக்கிறது. இப் பகுதிகளில் ஓங்கலை முழுக் குடியிருப்புகளையும் மக்களையும் அழித்துத் தண்டித்திருக்கிறது. சில காட்சிகளைப் பாருங்கள்:












கீழ மணக்குடி











செருதூர் – நாகை மாவட்டம்
இவை அனைத்திலும் மறுக்கமானதும் மறக்க முடியாததுமான நிகழ்வு இடம்பெற்றது குமரி மாவட்டத்தில் கொட்டில்பாடு என்ற ஊரில்தான். தமிழகக் கடற்கரையில் தொடர்ந்த கடற்கோள்களினால் நம் முன்னோர் உருவாக்கியிருந்த ஒரு மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பின் தடயங்களை ஓங்கலைப் பணியின் போது காண முடிந்தது. அவற்றில் ஒன்று தேரி மேடு, இன்னொன்று ஒரு கடலோர நாவிக வாய்க்கால். ஆந்திரத்திலுள்ள ஆறுகளிலிருந்து ஒரு வாய்க்கால் வெட்டி நிலச் சாய்வுக்கு பூட்டிகள் என்ற அமைப்பை உருவாக்கி இந்த வாய்க்காலில் கொண்டு சேர்த்தனர் ஆங்கில ஆட்சியாளர்கள். அந்த வாய்க்கால் வழியாக வாழ்க்கைத் தேவையின் அனைத்துப் பண்டங்களின் போக்குவரத்தும் படகுகள் மூலம் நடைபெற்றது. இதைப் பராமரிப்பதற்கென்று சென்னையில் பொதுப்பணித்துறைக் கோட்டம் ஒன்று இயங்கியது. இதையும் இந்தக் கடலோரக் கால்வாயையும் சேர்த்துத்தான் பக்கிங்காம் வாய்க்கால் என்கிறோம். கடலோரத்தில் ஓடும் வாய்க்காலுக்கு முன்பு வழங்கிய பெயர் உப்பனாற்று ஓடை என்பது 1900ஆம் ஆண்டுவாக்கில் ஆங்கில ஆட்சியாளர்கள் உருவாக்கிய நில அளவு வரைபடங்களிலிருந்து தெரிகிறது. இப்போது பக்கிங்காம் பெயரிலான வாய்க்கால் சீர்காளி பொதுப்பணித்துறை சிறு கோட்டத்தின் பொறுப்பிலிருப்பதாக அவ் வலுவலக ஆவணங்களில் மட்டும் காணப்படுகிறது. தெற்கில் ஓடும் ஓடையின் பெயர் வேதாரணியம் வாய்க்கால். அதற்குத் தெற்கில் எந்தத் தடயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகமான பழையாறு என்ற ஊரிலுள்ள மீனவர்களிடையில் இவ் வாய்க்கால் குமரி முனை வரை செல்வதான மரபு உள்ளது.
(சீர்காளி வட்ட வரைபடத்தில் பழையாற்றுக்குத் தெற்கில் ‘பக்கிங்காம் கால்வாய்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் பழையாறு என்றிருப்பதையும் காட்டும் பகுதி)

மேற்குக் கடற்கரையில் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா(ஏ.வி.எம்.) வாய்க்கால் என்ற பெயரில் வாய்க்கால் ஒன்று ஆங்கிலராட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஆள், பொருள் ஆகியவற்றின் பொக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் வாய்க்கால் அமைக்கத் திட்டமிட்டு இன்றைய கேரளத்திலிருக்கும் பூவாற்றுமுகம் என்ற இடத்திலிருந்து தொடங்கி பண நெருக்கடியால் குமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காட்டோடு நிறுத்திவிட்டதாக ஒரு கூற்று உள்ளது. ஆனால் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு அரசர் வாய்க்கால் மூலம் வந்து செல்வார் என்று என் சிறு அகவையில் பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஓங்கலைப் பணியின் போது இராசாக்கமங்கலத்துக்கு அண்மையிலுள்ள தெக்குறிச்சி என்ற ஊரில் மிக அகலமுடைய அழி என்று அங்கு கூறப்படும் கழியைப் பார்த்தேன் (இதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கழிக்கானல் என்கின்றன). அதற்கும் கடலுக்கும் இடையில் தேரியை நிரத்தி, அதாவது மட்டப்படுத்தி அதில் சவுக்குத் தோப்பு உருவாக்கி அதை அறுவடை செய்து ஓங்கலைத் தாக்குதலுக்கு எந்தத் தடையுமில்லாமல் செய்திருந்தனர். அரசுப் பணியிலிருப்பவர்களுக்குக் கொள்ளையடிப்பது தவிர வேறு எந்தத் திசையிலும் மூளை வேலை செய்யாது என்பதற்கு இது ஒரு சான்று. இன்னும் ஒரு சான்றுக்கு நாகை மாவட்டம் செறுதூரில் பிடித்த கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.











அ.வி.மா. வாய்க்காலுக்கு மீண்டும் வருவோம். இந்தக் கழி நீரில் தேங்காயை உரித்தெடுக்கும், தேங்காய் மட்டை என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பிடப்படும் கதம்பலை ஊற வைத்திருந்ததைப் பார்த்தேன். தமிழக மேலைக் கடற்கரையில் அடர்ந்து காணப்படும் தென்னந்தோப்புகளில் கிடைக்கும் கதம்பலை 6 மாதங்கள் வரை நீரில் ஊற வைப்பார்கள். இந் நோக்கத்துக்குப் பயன்படும் களத்துக்கு கதம்பல் பாந்து என்பது பெயர். தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள கதம்பலின் மேல் முதலில் மண்ணைப் பரப்பி வைத்திருந்திருப்பார்கள். பின்னர் நாளடைவில் கதம்பலிலிருந்து தென்னந்தும்பை அகற்றும் செயல்முறையில் கிடைக்கும் கதம்பல் தூள் என்னும் கழிவைப் பரப்பினர். இது கீழிருக்கும் நீரை உறிஞ்சி கதம்பல் நீருள் அமுங்கியிருக்கும் விளைவைத் தரும்(மண்ணடுக்கும் குறைந்த கனம் வரை இவ்வாறு நீரை உறிஞ்சும்). ஊறிய கதம்பலின் மேல் தோல் ஆகிய நெட்டியை அகற்றிவிட்டு தும்பை கல்லின் மீது வைத்து கனத்த இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்து தும்பிலிருந்து மேலே குறிப்பிட்ட தூளை உதறி அகற்றுவாகள். பாந்திலிருந்து 5 கிலோமீற்றர்கள் வரை தொலைவிலிருந்து பெண்களும் சிறுவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இப் பணியில் ஈடுபட்டார்கள். பின்னர் கருவிகள் வந்து இவர்களை அகற்றின. நெட்டி எனும் கழிவை வாங்கி அடுப்பெரிக்கப் பயன்படுத்துவார்கள். நெட்டியை அகற்றும் போது வெளியேறாமல் நெட்டியில் ஒட்டியிருக்கும் தும்பை அகற்றிவிட்டுத்தான் அடுப்பில் வைப்பார்கள். கொஞ்சம் சேர்ந்ததும் தும்பை இராட்டை வைத்திருப்பவர்களுக்கு விற்பார்கள். அண்மைக் காலமாக கடலிலிருந்து அகன்றிருக்கும் உள்நாட்டில் சிறு தொட்டிகளில் கதம்பலை ஊற வைத்து அங்கேயே நிறுவப்பட்டிருக்கும் கருவி மூலம் தும்பைப் பிரித்தெடுக்கும் முறை பரவலாகி இருக்கிறது. இங்கெல்லாம் பல நாட்கள் கதம்பலை ஊற வைப்பதில்லை. நீரில் முக்கி உடனேயே ஆலையிலிட்டுவிடுவார்கள். கருவி வருவதற்கு முன் முற்றிய அல்லது காய்ந்த கதம்பலை தும்பெடுக்கப் பயன்படுத்துவதில்லை, அடுப்பெரிக்கத்தான் பயன்படுத்தினார்கள். இப்போது காய்ந்த கதம்பலையும் நனைத்து அடித்துவிடுகிறார்கள். இருப்பினும் பழையபடி பாந்துகளில் 6 மாதங்கள் ஊற வைத்த பச்சைக் கதம்பலிலிருந்து பெறப்படும் தும்பு நிறத்திலும் உழைப்பிலும் உயர்ந்ததாகச் சந்தை மதிப்பு மிகுந்திருப்பதால் பாந்துகளுக்கு இன்றும் மதிப்பு உள்ளது.

முன்பு இந்தத் தும்பைப் பயன்படுத்தி இராட்டை என்ற மரக் கருவியில் 8 பேர் வரை கொண்ட ஒரு குழுவினர் 3 புரி கயிறு முறுக்கினர். இதற்கு நல்ல கேட்பு இருந்தது. மாலை நெருங்கும் போது புரி முறுக்கும் பணியாளர்களின் உள்ளங்கைகள் தேய்ந்து குருதி தோன்றத் தொடங்கிவிடும் மிகக் கொடிய பணி இது. இப்போது இப் பணி முடிவுக்கு வந்துவிட்டது. தும்பாகவே வெளியை சென்றுவிடுகிறது. குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுடன் சிறிய இராட்டில் 2 புரி கயிறு முறுக்குதல் மிக அரிதாகவை நடந்தது.

காலையில் வேலை தொடங்கும் போது முதலில் அன்றைய வேலைக்குத் தேவைப்படும் கச்சா தும்பில் நீர் தெளித்து அதற்கென்று உருவாக்கப்பட்ட பிரம்பினால் அனைவரும் சுற்றிச் சுற்றி நகர்ந்து கொண்டே அடித்து தும்பில் ஒட்டியிருக்கும் தூளை அகற்றுவார்கள். முதலில் இயல்பாகவும் இறுதியில் ஓங்கியும் அடிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வளவையும் அடித்து உலர விரித்த பின் கயிறு முறுக்கத் தொடங்குவார்கள். முறுக்குவதற்குத் தும்பை எடுக்கும் முன் தூள் ஏதாவது ஒட்டியிருந்தால் அதை அகற்றுவதற்காக பிரம்பால் தும்பை சிறிது சிறிதாக எடுத்து மென்மையாக உதறுவர் இதற்கு தெளித்தல் என்று பெயர்.

முன் இராட்டை என்பது மூன்று கதிர்களைக் கொண்டது. கதிரில் தும்பைச் செலுத்திச் சுற்றியதும் அது பிடித்துக்கொள்ளும். மூவர் தங்கள் கட்கம் ஒன்றில் தும்பை வைத்து விரல்களைக்கொண்டு தும்பைப் பக்குவமாக வெளியிட இராட்டையில் உள்ளவர் நிலையான விரைவில் சுழற்றுவார். மறுமுனையில் இருக்கும் பின் இராட்டையின் ஒரே கதிரில் மூன்று புரிகளையும் சிறு நீளத்துக்குக் கயிறாக்கி அதன் முன் புறம் மூன்று புரிகளுக்கும் தடங்களைக் கொண்டிருக்கும் மரத்தினால் அமைந்த சோங்கு என்ற சிறு கருவியைச் சொருகி கயிற்றைப் பிணைப்பார். சோங்கைப் பிடித்தபடி முன் இராட்டை நோக்கி புரி விடுவோரில் ஒருவர் நகர்வார். முன், பின் இராட்டுக்காரர்கள் இராட்டைகளை விரைந்து சுற்றுவார்கள். பின் இராட்டுக்குத் தனி ஆள் கிடையாது. புரி விடுபவரில் ஒருவர் அதைப் பார்த்துக்கொள்வார். பின்னிராட்டுக்கு நகரும் வகையில் பைதாக்கள்(சக்கரங்கள்) உண்டு. புரிகள் கயிறாகுந்தோறும் நீளம் குறையுமாதலால் பின்னிராட்டுக்காரர் காலால் இராட்டை முன்னோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார். முறுக்கி முடிந்ததும் முன்னிராட்டிலிருந்து புரிகளை அறுத்தும் பின்ராட்டுக் கதிரிலிருந்து கயிற்றை விடுவித்தும் இரு முனைகளிலும் உள்ளவர்கள் கயிற்றை நன்றாக இழுத்துத் தொய்வு நீக்கி உரிய வகையில் கயிற்றை மடித்துக் கட்டுப் போட்டு அடுக்குவார்கள்.

தும்பு அடிக்கும் பிரம்பு வாங்கும் போது காய்ந்ததாக இருக்கக் கூடாது. ஏறக்குறைய 5 அடி. நீளமுள்ள அதை நெருப்பில் வாட்டி அரையரைக்கால் நீளத்தில் ஒரு 15〫சாய்வு கிடைக்குமாறு வளைக்கப்படும்.

கதம்பல் தூள் ஈரத்தைப் பிடித்துவைக்கும் என்பதால் தென்னை மூட்டைச் (மூடு, மரத்தின் அடிப்பாகத்தைக் குறிக்க குமரி மாவட்டத்தில் வழங்கும் சொல்) சுற்றிக் குழி தோண்டிப் புதைப்பபதுண்டு. தும்பு ஆலைகளுக்கு அருகில் முன்பு பெரும் அரிசி ஆலைகளில் நேர்ந்தது போல் பெரும் குவியலாக வளர்ந்து நெருப்பிட்டு அழித்தார்கள். பல மாதங்கள் தொடர்ந்து பொசுங்கிப் பெரும் சுற்றுச் சூழல் கேட்டை உருவாக்கியது. இப்போது தோட்டங்களில் நீர்ச் சிக்கனத்துக்காக செடிகளின் அடியில் புதைப்பதற்கான கட்டிகள் செய்வதற்காக வெளியே செல்கிறது. இசுரேலில் தோட்ட வேளாண்மையில் மணல் மேல் இந்தத் தூளைப் பரப்பி அதன் மேல் செடிகளை நட்டுப் பயிர் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்தத் துறை பற்றிய ஒரு செய்தி, இரு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள மணவாளக்குறிச்சியிலிருந்து ஏற்றுமதியான கயிற்றில் ஒட்டியிருந்த மணலில் தோரியம் என்ற அரிய கனிமம் இருந்ததை அறிந்த செருமானியர்களின் தூண்டுதலில் உருவானதே மணவாளக்குறிச்சி அருமணல் தொழிற்சாலை. இங்கு பிரித்தெடுக்கப்படும் தோரியம் ஏற்றுமதியாகிறது என்கிற உண்மை நாம் எப்படிப்பட்ட கடைந்தெடுத்த மடையர்களை, கடையர்களை, கயவர்களை, கள்ளர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறது.

கயிறு முறுக்குவது முடிவுக்கு வந்துவிட்டதால் தும்பு அப்படியே கேரளத்துக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கயிற்றையும் தும்பையும் கொண்டு பல்வேறு பொருள்கள் செய்யும் ஒரு தொழிற்சாலையை ஈத்தாமொழி என்ற ஊரில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு உருவாக்கியது. சரியான ஆள்வினை இன்றி அதுவும் ஏறக்குறைய முடங்கிக் கிடக்கிறது. உள்ளூர் முனைவுகளை ஒடுக்கும் அரசின் நடைமுறையால் மக்களும் இத் தொழிலில் புதுமையைப் புகுத்த நாட்டமின்றி இருக்கின்றனர். இப் பகுதி வளமானதாக இருப்பதால் இது ஒரு சிக்கலாக உணரப்படவில்லை. புதிதாக தென்னை வேளாண்மையில் இறங்கிய தமிழகத்தின் பிற பகுதிகளில் புதிய முயற்சிகள் நடைபெறுகின்றன.

கடந்த காலத்துள் மறைந்துவிட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பதியக் கிடைத்த வாய்ப்பைக் கைவிட மனமின்றி சற்று விலகிச் சென்றுவிட்டமைக்குப் பொறுத்தருள்க.

தெக்குறிச்சியில் நான் கண்ட கதம்பல் பாந்துகளைப் போன்று அதற்குப் பல மைல்கள் கிழக்கில் மங்காவிளை என்ற ஊருக்குக் கிழக்கில் கொஞ்சம் தொலைவு வரை விட்டு விட்டு பார்த்துள்ளேன். மங்காவிளைக்குக் கிழக்கில், கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்வதாகிய சாலைரோடு எனப்படும் கடலோரச் சாலைக்கும் கடலுக்கும் நடுவில் நிலம் தாழ்வாகக் காணப்படுகிறது. இந்தப் பகுதி முழுவதும் திறந்த வெளியாக, கழியாக இருந்து பிற்காலத்தில்தான் கடல் காற்றில் அடித்துவரப்பட்ட மணலால் மறைந்திருக்கிறது. சாலைக்கு வடக்கில் வெறும் தேரி மணலும் கொல்லமா எனப்படும் முந்திரி மரங்களும் தாம் இருந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்குள்தான் அங்கு தென்னந்தோப்புகள் தோன்றின. அனைத்து இடங்களிலும் இக் கழி இச் சாலைக்கும் கடலுக்கும் இடையில்தான் உள்ளது என்பதையும் குறிப்பிட வேணணடும்.

மேலே குறிப்பிட்ட கடலோரச் சாலை கிழக்கிலுள்ள பழையாறு எனும் கோட்டாற்றை மணக்குடி என்ற கடலோர ஊரில் தாண்ட ஒரு பாலம் இன்றியே இருந்தது. ஆற்றைத் தாண்ட வேண்டுமானால் ஏற்றவற்றத்தின் போது பொழி வாங்கல், அதாவது வற்றத்தின் போது நடந்து கடக்க வேண்டும், மற்ற நேரங்களில் படகில் செல்ல வேண்டும். பல ஆண்டுகள் போராட்டத்தின் பின் ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சாலைகளுக்கு நேராகப் பாலம் கட்டும் பணி தொடங்க ஆயத்தங்கள் நடந்தன. இந் நிலையில் மேலே குறிப்பிட்டது போல் தேரிக்கு உட்புறமும் தேரியை நிரத்தியும் கடலை ஒட்டி குடியிருப்புகளை அமைத்திருந்தவர்கள் தங்கள் குடியிருப்பை ஒட்டிப் பாலம் அமைய வேண்டுமென்று விடாப்பிடியாக நின்று போராட்டங்கள் நடத்தியதால் பாலத்தின் அமைவிடம் கடலுக்கு மிக நெருக்கமாக மாற்றப்பட்டது. ஓங்கலை நீரை இந்தப் பாலம் தடுத்ததால் பாலத்தின் பாளங்களைத் தூக்கி வீசியதுடன் இரு புறங்களிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது. முன்பு கீழ மணக்குடி பற்றி காட்டியுள்ள படத்துடன் கீழையுள்ள படங்களையும் பாருங்கள்.

இந்தப் பாலம் முதலில் முன்னிட்டது போல் ஆற்றின் இரு மருங்கிலுமுள்ள பழைய சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்திருந்தால் கடலுக்கும் அதற்கும் ஒரு மைல் வரை தொலைவு இருந்திருக்கும், பாலத்தின் நீளம் மிகக் கூடுதலாக இருந்திருக்கும், பாலத்தின் உயரம் 20 அடிகள் வரை சென்றிருக்கும், இவ்வாறு நீரோட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லாமல் ஓங்கலையின் தாக்குதலில்











பாலம் எந்தக் கூடுதல் விளைவையும் ஏற்படுத்தியிருக்காது. காலங்காலமாகப் போராடிப் பெற்ற பாலம் 6 மாதம் கூடப் பயன்படவில்லை. ஒன்றன் மீதொன்றான மனிதத் தவறுகளை இயற்கை இரக்கமின்றித் தண்டித்த மிகத் திட்டவட்டமான ஒரு சான்று இது. நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலை ஒட்டியிருக்கும் நீர்வழியும் அவற்றுக்கு இடையிலிருக்கும் பாலமும் பெரும் அழிவுக்குக் காரணமாயிருந்ததை அங்குள்ளவர்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள்.

இனி கொட்டில்பாட்டுக்கு வருவோம். இந்த ஊர் மண்டைக்காட்டுக்கு மேற்கில் உள்ளது. இங்கு அ.வி.மா. வாய்க்கால் நல்ல நிலைமையில் உள்ளது. வாய்க்காலுக்கும் கடலுக்கும் நடுவில் இருந்த தேரி முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு குடியிருப்பும் இருந்தது. ஓங்கலையின் போது தாக்கிய அலை மிகப் பெரும்பாலான வீடுகளையும் கட்டடங்களையும் துடைத்தழித்து மக்களையும் பிற உயிரினங்களையும் அதனுடன் சேர்த்து அள்ளிச் சென்று குடியிருப்பைத் தொட்டு ஓடிய வாய்க்காலில் கொட்டிப் புதைத்துவிட்டு சாலையையும் தாண்டிச் சென்று வந்த வேகத்தில் திரும்பி அரைகுறை உயிருடன் இருந்தோரை இன்னுமொரு புரட்டுப் புரட்டிவிட்டுப் போயிருக்கிறது. அது உண்டாக்கியிருந்த தடத்தைப் பாருங்கள்.









ஓங்கலைக்கு எதிராக நம் முன்னோர் உருவாக்கியிருந்ததாக மேலே நான் குறிப்பிட்ட மூன்றடுக்குப் பாதுகாப்பில் கடலூருக்குத் தெற்கில் தடமின்றி நிரந்து போன வாய்க்காலை நில அளவை மற்றும் வருவாய் ஊர் ஆவணங்களின் துணை கொண்டு தோண்டும் பணியை அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக ககன் சிங் பேடி தொடங்கினார். பின்னர் அப் பணி எக் காரணத்தாலோ கைவிடப்பட்டது. சீர்காளி வட்டம் பழையாற்றில் கடலில் விழும் கொள்ளிடம் ஆறு பிரிந்து ஒரு பிரிவு வடக்கு நோக்கி 8 கி.மீ.யில் கடலில் சேர்கிறது. ப.வாய்க்கால் தொடர்ந்து வடக்கில் வெள்ளாற்றையும் தாண்டிச் செல்கிறது. தெற்கிலும் நெடுந்தொலைவு செல்கிறது. காரைக்காலில் நன்றாயமைந்த கட்டுமானங்களின் இடிந்து போன பகுதிகளைக் காண முடிகிறது. வேதாரண்ணியம் என்று சமற்கிருதவாணர் தவறாக மொழிபெயர்த்த பெயரைக் கொண்டு அறியப்படும் திருமரைக்காட்டுக்கு அப்பால் வாய்க்கால் செல்வதாகத் தெரியவில்லை. இதன் காரணத்தை நம் பண்டை வரலாற்றில் தேட வேண்டும்.
கழக இலக்கியங்களில் கூறப்படுத் இரண்டாம் கடற்கோள் கி.மு.1700 வாக்கில் நிகழ்ந்ததற்கு வலுவான சான்றுகள் உள்ளன. அப்போது இன்றைய தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் புகுந்து இலங்கைத் தீவை உருவாக்கியது. அதனால் இன்றைய இலங்கையைச் சார்ந்திருந்து கடலில் முழுகிய நிலப்பரப்பின் கடற்கரையை ஒட்டி தோண்டப்பட்டிருந்த உள்நாட்டு நாவிக வாய்க்கால் கடலினுள் அமிழ்ந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அப்போது கடலினுள் தோண்டப்பட்ட கப்பலோடை வழியாகத்தான் இன்றைக்குக் கொழும்புக்குக் கப்பல்கள் செல்கின்றன.

இந்தக் கடற்கோளுக்குப் பின்னர் கடற்கரையில் கழிகள் உருவாகியிருக்கின்றன. கீழைக் கடற்கரையில் கால்டுவெல் ஐயர் செயற்பட்ட இடையன்குடி வட்டாரத்தில் கழிகளும் சதுப்பு நிலக் காடுகளும் இருந்ததையும் அதை ஆங்கிலக் குழும ஆட்சியாளர்கள் அழித்து அப் பகுதி மக்களுக்கு வாழ் வளித்ததாகவும் திருநெல் வேலிச் சாணார்கள் என்ற தன் நூலில் குறிப்பிட்டி ருக்கிறார். அதை அதற்கு முன் படகுப் போக்கு வரத்துக்குப் பயன் படுத்தினார்களா என்பது தெரியவில்லை. ப.வாய்க்கால் கன்னியாகுமரி வரை செல்கிறது என்ற பழையாறு மக்களிடையில் வழங்கும் மரபுச் செய்திக்கு இது சான்றாகுமா என்று தெரியவில்லை.

மேலைக் கடற்கரையில் கி.மு.1700 இடம்பெற்ற கடற்கோளுக்குப் பின்னர் கி.பி.825 ஒரு கடற்கோளில் கொல்லம் துறைமுகம் முழுகியது. அதன் நினைவாகத்தான் கொல்லம் ஆண்டுமுறை அறிமுகமானது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நம் முன்னோர் அமைத்திருந்த நாவிக வாய்க்கால் கடலினுள் சென்றிருக்க வாய்ப்புண்டு.

இனி கடலோர மூன்றாம் அடுக்குப் பாதுகாப்பைப் பார்ப்போம். இதைக் கப்பலோடை என்ற பெயரில் கன்னியாகுமரி மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள். குமரி முனையிலிருந்து ஏறக்குறைய 12 கி.மீ. தொலைவில் ஒரு கடல் வழி இருந்ததாகவும் அங்கு வந்து நிற்கும் கப்பல்களில் குமரி முனையிலிருந்து படகுகளில் பண்டங்களைக் கொண்டு சென்று ஏற்றுவதும் அங்கிருந்த கரைக்கு இறக்குவதும் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். ஆக, இரண்டாம் கடற்கோளுக்கு முந்திய தமிழகத்தில் கடற்கரையை அணைத்தவாறு கதவபுரத்தைச் சுற்றிச் செல்லும் ஒரு கடற்கால்வாய் இருந்திருக்கிறது. கடலில் ஆழம் குறைந்த இடங்களில் செயற்கையாகக் கடற்கால் தோண்டியிருக்கிறார்கள். இந்த உண்மையை, குணாஅது கரைபொரு தொடுகடல் – கிழக்கில் கரையைக் கரைக்க இடைவிடாது போராடுவதும், தோண்டப்பட்டதுமான கடலைக் கொண்ட தமிழகம் – என்ற புறநானூறு 6ஆம் பாடல் வரி கூறுகிறது. கடற்கோளின் போது இலங்கை துண்டிக்கப்பட்டதால் இந்தக் கடற்கால்வாயும் தொடர்பு அறுந்து போயிருக்கிறது. அந்தக் கடற்கால்வாய்தான் இப்போது கேரளக் கடற்கரையிலிருந்து கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் கடல் வழியாகப் பயன்படுகிறது. இந்த வரலாற்றுச் செய்திகளை அறியாமலே நம்மை ஆண்ட அயலவரான ஆங்கிலர் இந்த நாட்டைச் சுற்றி ஒரு கடற்பாதை வேண்டுமென்ற இன்றியமையாமையைக் கருதி சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாயைத் திட்டமிட்டனர். அதைச் சீர்குலைக்கத்தான் வழக்கம் போல் உள்நாட்டில் காலங்காலமாகத் தற்சார்புப் பொருளியல் – அரசியல் வளர்வதைச் சீர்குலைத்துவந்தவர்களின் குரலை ஒலிக்கும் தினமலர் மற்றும் குழுவினர் முட்டி மோதி வருகின்றர்.

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 4

வாணிகக் குழுக்கள் பேரரசுகளை மட்டும் உருவாக்கவில்லை. உலக மொழிகளையும் அவைதாம் படைத்துள்ளளன. வாணிகத்துக்காக உலகின் பல்வேறு பகுதிகளை இணைத்த வாணிகக் குழுக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மொழிக் கூறுகளைச் சுமந்து சென்றன. ஒவ்வொரு குழுவிலுமிருந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோரின் இணைவும் சேர்ந்து புதுப் புது மொழிகள் உருவாயின. இவ்வாறு உலக மொழிகளுக்குப் பொதுவான கூறுகளும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் உரிய தனித் தன்மைகளைக் கொண்ட மொழிகளும் அவற்றின் அடிப்படையிலமைந்த பேரரசுகளும் என்று தேசிய எல்லைகளுக்குப் புதுப்புது பண்புகள் வந்து சேர்ந்தன.

இவ்வாறு விளைப்போர் தாம் விளைக்கும் பொருளுக்கு வாங்குவோரையும் வாங்குவோர் தமக்கு வேண்டும் பொருட்களுக்கு விற்பனையாளர்களையும் வழங்கும் வகையில் தவிர்க்க முடியாமல் வாணிகன் உருவாகிறான். இன்று உழவனாயினும் தன்தொழில் செய்யும் கைவினைஞனாயினும் தன் விளைப்பை விற்பதற்காகத் தெருத்தெருவாக அல்லது வீடுவீடாக அலைந்தானென்றால் அவனது உழைப்புத் தொழில் என்னவாகும். “உழவர் சந்தைக்கு” சரக்குக் கொண்டு வந்து விற்கும் உழவனின் நிலையும் அத்தகையதுதானே! இன்று உழவர் சந்தைகள் அரசுப் பொறியால் தூக்கி நிறுத்தப்படுகின்றன. உழவர் என்று அரசு அதிகாரிகள் அடையாள அட்டை வழங்குகிறவர்களே சரக்குக் கொண்டுவருகிறார்கள். அதிகாரிகளே விலையை முடிவு செய்கிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகங்களே இலவயமாக உழவர்களையும் அவர்களது விளைபொருட்களையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. அரசு வரும் இடத்தில் அரசியல் கட்சியின் ஆதிக்கமும் செல்வாக்கும் வரும். நாளடைவில் வாணிகர்கள் நுழைவார்கள் அல்லது உழவர்களிலிருந்து புதிய வாணிகர்கள் உருவாவர். அந்த நிகழ்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. உழவர் சந்தைகளின் நிகர விளைவு நகரங்களிலும் பேரூர்களிலும் உருவாகியுள்ள புதிய குடியிருப்புப் பகுதிகளுக்குத் தேவையான புதிய நாளங்காடிகளையும் புதிய வாணிகர்களையும் உருவாக்குவதாகவே இருக்கும். (நாகர்கோவில் வடசேரி கனக மூலம் சந்தையின் வளாகத்தை ஒட்டி உழவர் சந்தைக்காக இடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உலகப் பெரும் முட்டாள்கள் பட்டம் வழங்கலாம்).

அப்படியாயின் வாணிகர்களின் கொள்ளையை எவ்வாறு தவிர்ப்பது? அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பயன் தராது என்று பார்த்தோம். ஆனால் இந்தக் கேள்விக்கான விடையை முதலாளிய விளைப்பு முறை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. பண்டங்களை விளைக்கும் நிறுவனங்களே வலைப்பின்னல் போன்ற முகவாண்மை(ஏசென்சி) நிறுவனங்கள் மூலமாகச் சில்லரை விற்பனை நிலையங்களாகிய”கடை”களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து அவை மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்கின்றன. பண்டத்தின் விலையை விளைக்கும் நிறுவனமே முடிவு செய்கிறது. முகவாண்மைகள் தங்கள் கூலியைப் பண்டத்தின் நிறுவப்பட்ட விலையில் விளைப்பு நிறுவனத்தால் நிறுவப்பட்ட நூற்றுமேனியில்(சதவீத்த்தில்) பெற்றுக்கொள்கிறது. அதில் ஒரு பகுதியைச் சில்லரை விற்பனைக் கடைகளுக்கு முகவாண்மைகள் கொடுக்கின்றன. வேளாண்மையில் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணைகள் பண்டங்களை விளைத்துத் தங்களே நேரடியாக பேரங்காடிகள் மூலம் அல்லது முகவாண்மைகள் மூலம் விற்பனை செய்கின்றன.

இந்த முறையில் வாணிகர்கள் விளைப்போரையும் மக்களையும் சுரண்டுவது மாறி விளைப்போர் மக்களைச் சுரண்டி முகவாண்மைகள், சில்லரைக் கடைகள் ஆகியவற்றோடு பங்கிட்டுக் கொள்கின்றனர். பணக்கார நாடுகளில் இந்தச் சுரண்டலை மட்டுப்படுத்தத்தான் அதிக பக்க விலை (எம்.ஆர்.பி.) குறிக்கும் முறை உருவானது. ஒரு நிறுவனம் தான் விளைக்கும் பண்டங்களின் விலையைத் தன் விருப்பம் போல் உயர்த்திவிட முடியாது. அதற்கான காரணங்களைச் சான்றுகளுடன் எடுத்துவைத்து அதற்குரிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இசைவைப் பெற வேண்டும். நாம் வடிவங்களைத்தான் அயலவரிடமிருந்து எடுத்துக் கொள்கிறோமேயொழிய உள்ளடக்கங்களையல்ல. எவ்வாறு “நுழைவு”த் தேர்வு இங்கு பொருளற்றுப் போய் சில குழுக்கள் பெற்றோரைக் கொள்ளையடிக்கும் உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதோ அது போல்தான் மே.சி.வி. (எம்.ஆர்.பி.) குறிக்கும் முறையும். 1975ஆம் ஆண்டில் அப்போதிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா “நெருக்கடி நிலை” என்று ஒரு முற்றதிகார(சர்வாதிகார) அறிவிப்பை வெளியிட்டார். அதிலிருந்துதான் மே.சி.வி. குறிக்கும் முறை நம் நாட்டில் அறிமுகமானது. அந்த “நெருக்கடி நிலையை” எதிர்த்த குழுக்களைச் சேர்ந்த முதலாளியர், குறிப்பாக சவளித் துறையினர் வேண்டுமென்றே மிகக் கூடுதலாக மே.சி.வி.யைக் குறித்துவிட்டு அதில் பாதிக்கும் குறைவான சில்லரை விலைக்கு விற்க வைத்து அந்த முறையையே கேலிக்குரியதாக்கினர்.

இது போன்ற முரண்பாடுகளுக்குக் காரணம் இந்த முறைகள் நம் நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சியினால் எதிர்ப்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக நாமே வடிவமைத்தவையல்ல, நம் கல்விமுறையைப் போல் அயலவர்களால் அயலவர்களுக்காக நம் மீது வலிந்து திணிக்கப்பட்டவை என்பதாகும். காலங்கடந்து போன விளைப்பு மற்றும் விற்பனை முறைகள் ஆட்சி செய்யும் சூழ்நிலையில் இது போன்ற சிக்கல்களில் மக்களின் கவனம் திரும்பவில்லை. பெரும்பான்மை மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது இருப்பதை மேம்படுத்துவதைப் பற்றி அவர்களால் எவ்வாறு சிந்திக்க முடியும்?

பணக்கார நாடுகளில் அங்குள்ள நிறுவனங்களை அரசுகள் உரிய வகையில் கண்காணிக்கின்றன. மக்களும் விழிப்பாயிருக்கின்றனர். அதே நேரத்தில் ஏழை நாடுகளிலுள்ள அவற்றின் கிளைகளைக் கண்காணிக்கும் கடமை அவ் வரசுகளுக்கு இல்லை. இங்குள்ள அரசை அவ்வாறு கண்காணிக்குமாறு வலியுறுத்திச் செயலிலிறக்கும் தெளிவும் ஒற்றுமையும் கல்வியறிவற்றுக் கிடக்கும் மக்களிடமும் அனைத்துத் தப்பெண்ணங்களும் நிறைந்த கற்றவர்களிடமும் இல்லை. அதனால் நம் செல்வங்களை இந்த அயல் நிறுவனங்கள் தடங்கலின்றிக் கொள்கையடிக்கின்றன. அதில் ஒரு பங்குக்காகக் கையேந்தி நிற்கின்றனர் ஊழல் மலிந்த நம் ஆட்சியாளர்கள்.

இதற்கு நாம் முன்வைக்ககும் தீர்வு விளைப்புத் துறைகள், பணித்துறைகள் அனைத்தும் முதலாளிய முறைக்கு மாற வேண்டும். விளைப்பு பெரும் நிறுவனங்களிடமும் விற்பனை முகவாண்மை நிறுவனங்களிடமும் விடப்பட வேண்டும். பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் தரமும் விலைகளும் கட்டணங்களும் உரிய வகையில் கண்காணிக்கப்பட வேண்டும். வேளாண்மை, கடல் தொழில் போன்றவற்றில் விளைச்சல் மிகுதியாகக் கிடைக்கும் காலங்களில் அறுவடை செய்து பண்டங்களைப் பதப்படுத்திச் சேர்த்து வைத்து அவற்றை விளைச்சல் குறையும் பருவங்களில் பங்கிட வேண்டும். பதப்படுத்தும் பணி கட்டங்கட்டமாக ஆண்டு முழுவதும் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இங்கு நாம் முதலாளியம் என்று குறிப்பிடுவது அயலவர் பங்கு சிறிதும் இன்றி மூலதனம், தொழில்நுட்பம், மனிதவளம், மூலப் பொருட்கள் என்று அனைத்தும் உள்நாட்டைச் சார்ந்தனவாகி நுகர்வோர் அனைவரும் நம் நாட்டைக் சேர்ந்தோராகவும் அமைந்த தேசிய முதலாளியம் என்பதை ஐயம் திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்தின் போது இன்று சொந்தத் தொழிலில்(தன்தொழிலில்) ஈடுபட்டிருப்போர் நிலை என்ன என்று பார்க்கவேண்டும். வாய்க்கும் கைக்குமாகத் தொழில் செய்து கொண்டிருப்போருக்கு அத் தொழிலை விட நிலையான வேலைவாய்ப்புடைய தொழிலாளியின் நிலை மேலானதே. தொழிலகங்களில் வேலை கிடைத்தால், சொந்தத் தொழிலைக் கைவிட்டுச் செல்வோரை நாம் நாள்தோறும் காண்கிறோம். தொழிலை நடத்துவதற்கான மூலதனம், மூலப் பொருட்களுக்கான தேடல்கள், கவலைகள், விளைத்த பண்டத்தை விற்பதற்கான சந்தையைப் பிடித்தலும் அதைவிட்டுவிடாமல் பேணுதலும், விற்றுமுதல் உருப்படியாகக் கைக்கு வந்து சேர்தல் என்று பொழுது விடிந்தால் பொழுது போனால் அதே கவலையுடன் வாழ்வதும் எந்த நொடியிலும் நலிவுக்கு ஆளாகிப் பட்டினியை எதிர்நோக்குவதுமான நிலையில்லா வாழ்வாக இருந்த நிலைமாறி நிலையான கூலியும் நம்பகமான வேலைவாய்ப்பும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலையும் நாளின் மிகுதி நேரத்தைத் தான் விரும்பும் வகையில் செலவிடும் வாய்ப்பும் உரிமையும் கிடைக்கின்றன. சிறு தொழில்கள் என்ற பெயர் கொண்ட தொழில்களில் அன்றாடங் காய்ச்சித் தன்தொழில் செய்வோரைப் போன்ற அதே சிக்கல்கள் அளவில் பெரியவையாக இருக்கும். அங்கும் எப்போது நசிவும் நலியும் வரும் என்று சொல்ல முடியாது. இவர்கள் பெரிய தொழில்களில் தங்கள் திறமைக்கேற்ற பதவிகளின் மூலம் பங்கேற்கலாம். அல்லது தங்களுக்கு விருப்பமுள்ள வேறு துறைகளில் ஈடுபடலாம். அவர்களிடம் வேலை செய்யும் கூலியாட்கள் புதிய தொழில்களில் மேம்பட்ட நிலையில் வாழலாம். நாம் முன்போரிடத்தில் நம் நாட்டில் நாம் உருவாக்கத்தக்க புதிய வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளோம். உண்மையில் பொருளியல் விளைப்பின் ஒரு கட்டத்திலிருந்து மேம்பட்ட இன்னொரு கட்டத்துக்கு மாறும் இடைமாற்றக் காலம் மிக நெருக்கடி வாய்ந்தது. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் போது தன்னியல்பாக மக்களின் ஓர்மையின்றி இந்த மாற்றங்கள் நேர்ந்தன. மக்கள் தாங்கள் ஈடுட்டிருந்த தொழில்கள் திடீர் திடீர் என்று நலிவடைந்ததும் மாற்று வழி இல்லாமல் பட்டினி கிடந்து செத்தனர் அல்லது புதிதாக உருவாகிக் கொண்டிருந்த தொழில் நகரங்களுக்குச் சென்று வேலை தேடிச் சேரிகளில் குவிந்து பட்டினியாலும் நோய்களாலும் செத்து மடிந்தனர். அந்த நெருக்கடிகளின் பயனாக இன்று உழைக்கும் மக்களுக்கென்று எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாகியுள்ளன. அரசு என்பதன் நோக்கமும் பார்வையும் தலைகீழாக மாறியுள்ளன. அவற்றுக்கேற்ப அரசின் செயல்பாடுகளும் மாறியுள்ளன. முழுமையான மக்களாட்சி நோக்கிய நகர்வைக் குறிக்கும் இந்த மாற்றம் முதலாளியத்தின் இன்னொரு பயன். (நிலக்கிழமைப் பொருளியல் நிலையில் தேங்கி நிற்கும் நம் நாட்டில் வடிவத்தில்தான் நம்மிடம் மக்களாட்சி நிலவுகிறது. உள்ளடக்கத்தில் மேடை போட்டுத் தலைவர்களின் கால்களில் அவர்களை விட முதியவர்களும் வீழ்ந்து வணங்கும் மன்னராட்சியை விட இழிந்த அடிமைக் காலப் பண்பாடே நிலவுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.) இன்று எந்த நெருக்கடியையும் எதிர்கொண்டு தீர்த்துவிடும் வகையில் அரசைக் கையாள முடியும் என்று முதலாளியம் காட்டியுள்ளது. இத்தகைய நூற்றாண்டுகளின் பட்டறிவின் பின்னணியில் நாம் திட்டமிட்டுப் பழைய நிலக்கிழமை விளைப்பு முறைகளைக் கைவிட்டுப் புதிய தேசிய முதலாளிய விளைப்பு முறையினுள் நுழைய வேண்டும்.

வாணிகத்தைப் பற்றிய இந்தப் பகுதியை முடிக்கும் முன் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பிடிக்க முயல்வோம். கடை என்ற சொல்லுக்குத் தமிழில் கடைசி, கதவு என்ற பொருட்களும் உண்டு. இன்றைய வாணிகவியலில் சில்லரைக் கடைகளை, அவற்றில் விற்பனையாகும் பண்டங்களை விளைக்கும் பெரும் நிறுவனங்கள் தங்கள் வெளிச்செல் வாயில்கள்(அவுட்லெட்கள்) என்கின்றன. இந்தக் கண்ணோட்ட்தில் பார்த்தால் தமிழில் விற்பனை நிலையத்தைக் கடை என்ற சொல்லால் குறிப்பதன் பின்னணியில் பெரும் விளைப்பு நிறுவனங்கள் என்றோ ஒரு நாள் நம் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவை தம் பண்டங்களை விற்பதற்காக ஏற்படுத்தியிருந்த பெரும் மண்டலத்தின் இறுதியாக, அதாவது “கடை” நிலையில் இருந்த விற்பனை நிலையங்களுக்கு இப் பெயர் வழங்கியதென்றும் கொள்ளத் தோன்றுகிறது. அந்த நாள் வரலாற்றுக் காலத்தினுள் இருந்திருக்க முடியாது. குமரிக் கண்டக் காலத்தில் இருந்திருக்கலாம்.

கடலோர மக்களின் வாழ்க்கை இரங்கத்தக்கது. மீன் பிடிக்கச் செல்வோர் கட்டுமரங்கள் எனும் மிதவைகளில் மூங்கிலைப் பாய்மரமாக்கிக் கடலில் வீசும் கட்டுக்கடங்காக் காற்றுக்கும் அதன் விளைவான அலைக்கும் தங்களைத் தாங்களே ஆட்படுத்திக்கொண்டு உயிரை வளர்ப்பதற்காக உயிரைப் பணயம் வைத்துத் தங்கள் தொழிலான மீன்பிடித்தலில் ஈடுபட வேண்டும். எப்போதுமே எதுவும் நேரலாம். திசை தெரியாமல் நடுக்கடலில் சிக்கிப் பட்டினி கிடந்து சாகலாம். எல்லையற்ற நீர்ப் பரப்பில் குடிநீருக்குத் தவித்தும் சாகலாம். பெருஞ்சுறா, திமிங்கலம் போன்வற்றால் தாக்கப்பட்டு கட்டுமரம் கவிழ்ந்தும் அவற்றால் கடிபட்டும் சாகலாம். கடலிலுள்ள கொடிய நச்சுப் பாம்புகள் வலைகளில் சிக்கி அவை கடித்தும் சாகலாம். (இன்று கடற்செலவில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மேம்பாடுகள் இம் மக்களுக்கு எட்டாமலிருப்பதும் அதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத “மாந்தநேயர்கள்” மரபுத் தொழில்நுட்பப் பெருமை பேசித் திரிவதும் எவ்வளவு இரக்கமற்ற செயல்!) இவர்களது வாழ்க்கை நிலை தாமும் தம் குடும்பமும் பட்டினியின்றி உயிர்வாழ்வதற்காக உயிரையே விலையாகக் கொடுத்துப் பணிபுரியும் எல்லைக் காவல் படை வீரர்களை விடக் கொடியது. எல்லையில் பணியாற்றும் போது வழங்கப்படும் குமுகப் பாதுகாப்பும் கடலில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் மீனவர்க்கு இல்லை. நில எல்லையைப் பற்றி இவ்வளவு பதற்றம் காட்டும் இந்திய அரசு கடல் எல்லையை, குறிப்பாகத் தமிழகத்தை ஒட்டிய கடல் எல்லையைச் சிங்களரின் வினைக்களமாக்கிக் களிக்கிறது. சிங்களக் கடற்படை நம் கடற்கரை வரை வந்து நம் மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. அது போதாதென்று இந்தியக் கரைக் காவல் படையும் தன் பங்குக்குக் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று மகிழ்கிறது.

முதலில் தமிழகத்துக்கு உரிய கச்சத் தீவை இந்திரா சிங்களத்தாருக்குத் கையூட்டாக அளித்தார். இந்தக் கைக்கூலி எதற்கு? மக்கள் நலனுக்கெதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் குரல்(வாய்சு ஆப் அமெரிக்கா) என்ற அமெரிக்க அரசின் வானொலி மூலம் அமெரிக்கா ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இந்தியா சோவியத்து நாட்டுக்குச் சார்பாகச் செயற்பட்டதின் எதிர்வினையே இது. பாக்கித்தானிலிருந்து மட்டும் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த ஒலிபரப்பு தென்கோடியைத் தெளிவாக எட்டுவதற்காக இலங்கையின் திரிகோண மலையில் ஓர் ஒலிபரப்பு நிலையத்தை அமைப்பதற்காக அமெரிக்கா முயன்றுகொண்டிருந்தது. அதற்கு இலங்கை அரசு இடங்கொடுக்காமல் தடுக்கத்தான் இந்தக் கைக்கூலி. உண்மையில் இந்திரா அரசு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. அப்போது தமிழகத்தை “ஆண்டு”கொண்டிருந்த கருணாநிதியும் இது குறித்து வாய் திறக்கவில்லை. கருணாநிதி அவரது எந்த ஊழல் நடவடிக்கையைக் காட்டி மிரட்டப் பட்டாரோ அல்லது அவருக்குத் தனியாக ஏதாவது நலன்கள் வழங்கப்பட்டனவோ நாமறிவோம். இதன் விளைவாகக் கச்சத் தீவில் அதுவரை வலை உலர்த்தி வந்த தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது. தமிழகத் தாய் நிலத்திலிருந்து கச்சத் தீவுக்கு 12 மைல்கள் தொலைவு. அங்கிருந்து ஈழக்கடற்கரைக்கு 16 மைல் தொலைவு. அதில் பாதி 8 மைல் ஆகத் தமிழகத் தாய் நிலத்திலிருந்து 12+8 = 20 மைல்கள் வரை மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு முன்பு இருந்தது. இப்போது அது தமிழகத் தாய் நிலக் கடற்கரைக்கும் கச்சத் தீவுக்கும் உள்ள தொலைவில் பாதியாகிய 6 மைல்களாகச் சுருங்கிவிட்டது. அது மட்டுமல்ல, நம் நாட்டுக் கடல் எல்லைக்கு வெளியே அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையைக் கூடச் சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து பறித்துவிட்டன. இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைப் போலப் பன்மடங்கு எண்ணிக்கையினர் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிடித்த பல கோடி உரூபாய்கள் பெறுமான மீன்களும் வலைகள் உட்பட அவர்களது தளவாடங்களும் பறிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. படகுகளும் கட்டுமரங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பிற நாடுகளால் சிறு ஊறு நேர்ந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுகின்றன. அமெரிக்கா உலகிலுள்ள எந்தப் பகுதியிலாவது மோதலோ பதற்றமோ ஏற்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியில் வாழும் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது, அல்லது அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கிறது. அந் நாட்டின் இரு தூதரகங்களில் குண்டு வெடித்ததும் அதற்குக் காரணம் பின் லேடன் தானென்று அவருக்குத் இருப்பிடம் அமைத்துக் கொடுத்துள்ள ஆப்கானித்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறது. செக்கோசுலெவேக்கியாவில் சீனத் தூதரகம் மீது நேட்டோ படைகளின் குண்டுகள் தவறுதலாகத் தாக்கிய போது அதற்குப் பொறுப்பான அமெரிக்காவை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது அந் நாடு. ஆனால் தன் நாட்டுக் குடிமக்களில் நானூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஓர் அண்டை நாடு சுட்டுக்கொல்வது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியாயினும் இன்று வரை ஒரேயொரு கண்டனக் குரலைக் கூட எழுப்பவில்லை மானங்கெட்ட இந்திய அரசு. தமிழர்களுக்கென்று அது ஒரு தனி அளவுகோலை வைத்திருப்பது உண்மைதான். முந்தி இருந்த இந்திய ஆட்சியாளர்கள் பிற மாநில மக்களுக்காகவாவது சிறு குரல் எழுப்பினர். இங்கிலாந்தில் நுழைந்த இந்தியப் பெண்களுக்குக் கன்னிமை ஆய்வு என்ற ஒன்றை அந் நாட்டரசு புகுத்திய போது அப்போது இந்தியப் தலைமை அமைச்சராயிருந்த இந்திரா கடும் கண்டனம் தெரிவித்து அந்த இழிவை முடிவுக்குக் கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கணினி அறிவியலாளர்களைக் கைவிலங்கிட்டுத் தெருவில் இழுத்துச் சென்ற அமெரிக்கக் காவல்துறையின் செயல் குறித்து ஒரு மூச்சுக் கூட விடவில்லை, மானங்கெட்ட பா.ச.க. அரசு. அமெரிக்காவிலிருக்கும் பல இலக்கம் “இந்தியர்களோ” கார்கில் நாடகத்தில் இறந்த வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் “தேசபக்தியை” ஆறாக ஓடவிட்ட “பாரத புத்திரர்களோ” கூட மூச்சுவிடவில்லை. இங்கிலாந்திலுள்ள “இந்தியர்களை”க் காணச் செல்லும் உறவினர்களுக்கு தங்காணை(விசா) மறுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான கட்டணத்தை உரூ 10,000/= த்திலிருந்து ரூ 33, 500/=ஆக உயர்த்தி இங்கிலாந்து அரசு பிறப்பித்திருக்கும் ஆணையை எதிர்த்தும் அந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தாம் குரல் எழுப்பினரேயன்றி “தேச பக்தியே” மனித உரு எடுத்தவர்களைக் கொண்ட பா.ச.க. அரசு வாய் திறக்கவில்லை. இதுதான் “பாரத மனித் திருநாட்டின் பண்பாட்டுப் பெருமை”. தன் நாட்டு மக்களை மதிக்காததும் அயலவன் காலை நக்குவதுமான இந்தப் பண்பாட்டுப் பெருமையை என்னவென்று புகழ்வது!

தமிழகக் கடற்கரைக்கு எதிர்க்கரையில் உள்ள ஈழத்து மீனவர்கள் காலங்காலமாகத் தமிழகத்து மீனவர்களுடன் உறவுடையவர்கள். ஈழத்திலும் நெல்லை குமரி மாவட்டக் கடற்கரையிலும் குமரி மாவட்டத்தின் உள்ளேயும் கல்குளம் விலவங்கோடு வட்டங்களிலும் வாழும் மக்களின் சொல்வழக்குகளும் ஒலிப்பு முறையும் ஒத்திருக்கின்றன . ஈழ விடுதலைப் போரை முன்னின்று நடத்தும் ஈழத்து மீனவர்களின் வீரம் தமிழக மீனவர்களுக்கும் உண்டு. நாள் முழுவதும் கடலில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் அவர்களது வாழ்க்கை முறை அவர்களிடம் இயல்பாகவே வீரத்தை உருவாக்கியுள்ளது. எனினும் தங்களுக்கெதிராக நடத்தப்படும் இந்த மனித நேயமற்ற, அனைத்துச் சட்டங்களுக்கும் ஞாயங்களுக்கும் புறம்பான விலங்காண்டித்தனமான இந்த இருமுனை வன்கொடுமைக்கு எதிராக ஒரேயொரு குரல் கூட அவர்களிடமிருந்து எழவில்லை. அதற்குக் காரணம் மீனவர் சங்கங்களின் தலைமைகள்தாம். அரசியல் கட்சிகள் சார்ந்தனவையும் சாராதவையுமான இந்தச் சங்கங்களின் தலைவர்கள் அவ்வப்போது வீரார்ப்பாகப் போராட்டங்களை அறிவித்து விட்டு பின்னர் அவற்றைக் கைவிட்டு ஆட்சியாளர்களிடம் தங்கள் நலன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இதே உத்தி உள்நாட்டுத் தமிழர்களிடத்திலும் கையாளப்பட்டு வருகிறது. 1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் மக்கள் காட்டிய வீரம் திராவிட இயக்கங்களால் விலையாக்கப்பட்டது. 1970களில் தமிழக உழவர்கள் காட்டிய அதை விடக் கூர்மையான வீரம் உழவர் தலைவர்களால் முதலாக்கப்பட்டது. நாள்தோறும் இவ்வாறு அனைத்து முனைகளிலும் தமிழக மக்கள் எண்ணற்ற சங்கங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்களால் காயடிக்கப்பட்டுத் தங்கள் வீர உணர்வை இழந்து விட்டார்கள். ஆனால் அது இன்னொரு முனையில் இத் தலைவர்களால் திருப்பி விடப்பட்டுள்ளது. சாதி, சமய மோதல்களில் ஈடுபட்டு நம் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வின் அடித்தளத்தை தாங்களே அழித்துக் கொள்ளும் வகையில் அவர்களது ஞாயமான சீற்றங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்கள் ஆகியோருக்காக நடத்தப்படும் போராட்டங்களைச் சீர்குலைக்க உலக வல்லரசுகளும் அவற்றிடம் கூலி பெறும் “குமுகத் தொண்டர்களும்” முனைப்பாகச் செயற்படுகின்றனர். ஒரு சிறு எடுத்துக்காட்டு இதோ: தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தாக்குவதை எதிர்த்தும் ஈழத் தழிழர்களுக்கு ஆதரவாகவும் பிரான்சு சேவியர் என்ற கிறித்துவம் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் தமிழகக் கடற்கரை மீனவர் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் அதே நாளில் அதுவரை தென் தமிழகத்துக்கு வெளிப்படையாக வந்திராத உலகப் புகழ் பெற்ற “குமுகத் தொண்டர்” மேதா பட்கர் எனும் பெண்மணி நாகர்கோவிலுக்கு வந்து விசைப் படகுகளுக்கு எதிரான கட்டுமர மீனவர்களின் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்துவிட்டுப் போனார். ஆக, வெளிநாட்டு உதவி பெறும் இத் தொண்டு நிறுவனங்களிலிருந்துகொண்டு உண்மையான தன்னார்வத்தோடு எவராவது செயற்பட்டு அது வல்லரசிய நலன்களுக்கு ஊறு செய்வதாக அமையுமாயின் அதை முடக்கத் தேவையான கண்காணிப்பை மிகக் கவனமாகச் செய்து அத் தொண்டர்களைத் “தடுத்தாட் கொள்வதற்கான” முன்னேற்றபாடுகளை வல்லரசுகள் செய்து வைத்துள்ளன என்பதை இந் நிகழ்ச்சி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதுவரை பல்வேறு இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பிரான்சிசு சேவியாரின் பெயர் முற்றிலுமாக மறைந்தே போனது. வல்லரசியத்துக்கு எதிராகத் தமிழக நலன்களுக்காகப் பாடுபடுகிறவர் என்று நாம் நம்பும் எவராவது தொடர்ந்து வெளி உதவிகளைக் கொண்டு செயற்பட முடிகிறதென்றால் அவரது செயல்கள் உண்மையில் வல்லரசியத்தின் நலன்களுக்கு எதிராக அமையவில்லை என்றும் மாறாக அறிந்தோ அறியாமலோ அவர் வல்லரசியத்துக்கு உதவுகிறார் என்றும்தான் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நம் சிக்கல்களைத் தீர்க்க நாம்தான் நமக்குத் தேவையான இயக்கங்களை நம் சொந்த வலிமையில் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குத்தான் தமிழ்த் தேசிய முதலாளிய வகுப்புகளை வளர்த்தெடுத்துக் களத்தினுள் இறக்க வேண்டும். அவர்கள் மூலம்தான் வெளிநாட்டுப் பணத்தால் இங்கு ஒற்றர்களாக இயங்கும் அமைப்புகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் பொருள் வலிமை கிடைக்கும். இந்திய அரசும் அதன் கிளை நிறுவனங்களான மாநில அரசுகளும் தமிழக முதலாளிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கெதிராக வகுத்து வைத்திருக்கும் வருமான வரி, நிலவுச்சவரம்பு, உரிமம், மூலப் பொருள் ஒதுக்கீட்டு முறை, மின்சார வாரியம், மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு போன்ற போலித் தடைகளை உடைப்பதற்கான போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

இன்று தமிழகத்தில் தேசிய முதலாளிய வகுப்பென்று எதுவும் இல்லை. இந்தியாவிலும் இல்லை. அவ்வாறு இருந்தவற்றைத் திராவிட இயக்க ஆட்சியாளர்களும் குமரி அனந்தன் போன்ற பொய்யர்களும் நெடுமாறன் போன்ற போலித் தமிழ்த் தேசியர்களும் வேரோடு கிள்ளி எறிந்துவிட்டனர். ஆனால் தேசிய முதலாளியத்துக்கான விதைகளாக இங்குள்ள மூலவளங்களும் மூலதனமாகத் திரளத்தக்க ஏராளமான பணமும் அறிவுத் திறனும் பெரும் உழைப்பாற்றாலும் தொழில் முனைவும் கொண்ட மாபெரும் மனித வளமும் 6 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரும் சந்தையும் உள்ளன.

நீண்ட வரட்சியின் கொடுமையில் நிலம் பொட்டலாகிக் காட்சியளிக்கும். குளங்களும் வரண்டு மண் வெடித்துக் காணப்படும். ஒரேயொரு நாள் பெரும் மழை பெய்து குளத்தில் நீரும் பெருகிவிட்டால் ஒரு கிழமைக்குள்(வாரத்துக்குள்) பொட்டலெல்லாம் புல்வெளியாகி நிற்கும். குளத்தில் மீனும் தவளையும் தண்ணீர்ப் பாம்பும் நீந்திக் குதிக்கும். பட்டுப் போன புற்களின் விதைகள் முளைத்து குளம் வற்றிய போது தாம் இறக்கும் முன் மீன்கள் இட்ட முட்டைகள் பொரித்து அண்டையில் பதுங்கி உயிரைக் காத்துக் கிடந்த தவளைகளும் பாம்புகளும் குளத்தை அடைந்து நிலைமையைத் தலைகீழாக மாற்றுகின்றன. இதே போன்ற நிலையைத் தேசிய முதலாளியத்தைப் படைப்பதில் நாம் திட்டமிட்டுச் செயற்பட்டால் தமிழகத்தில் எய்த முடியும். இன்று கண்ணுக்குத் தெரியாத தமிழகத் தேசிய முதலாளியர் முளைத்துக் கிளம்புவர். துள்ளி விளையாடுவர். அவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டியதுதான் பாக்கி.

தமிழகக் கடற்கரையில் மீன்பிடித் துறைமுகங்களைக் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றைப் பார்ப்போம். குமரி மாவட்டத்துக் குளச்சலில் சில ஆண்டுகளுக்கு முன் நார்வே அரசின் “உதவி”யுடன் ஒரு மீன்பிடி துறைமுகம் திட்டமிடப்பட்டது. உதவி என்றால் இலவயமல்ல, கடன்தான். இந்தக் கடனுக்கும் அதற்கான வட்டிக்குமாக அத் துறைமுகத்தில் பிடிக்கும் மீன்களை நாம் நார்வேக்குக் கொடுத்துவிட வேண்டும். இதன் பொருள் என்ன? நாம் நம் நாட்டுக் கடற்கரையில் நம் நாட்டு மக்களின் உழைப்பால் நம் நாட்டில் கிடைக்கும் கல், மண் போன்ற கட்டடப் பொருட்களைக் கொண்டு ஒரு துறைமுகம் அமைக்கிறோம். இவையனைத்துக்கும் நம்மூர் நாணயத்தில்தான் செலவு செய்கிறோம். அதற்காக நாம் நம் நாட்டுக் கடலில் பிடிக்கும் மீன்களைப் பிடித்து “உதவி” செய்ததாகக் கூறப்படும் நாட்டுக்குக் கொடுக்கிறோம். உலக வங்கிக் கடன், ஆகிய வளர்ச்சி வங்கிக் கடன் அல்லது பல்வேறு நாடுகள் வழங்கும் கடன்கள் இவ்வாறுதான் செயற்படுகின்றன. நாம் நம் நாட்டினுள் நம் நாட்டு மக்களின் உழைப்பினால் நம் நாட்டுப் பொருட்களைக் கொண்டு செய்யும் பணிகளின் பெயரிலான கடனுக்கென்று அங்கு உருவாக்கப்படும் பண்டங்களை வெளியே விடுக்கிறோம். இந்த மாயம் என்ன? இந்திய அரசு ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி உரூபாய்களைப் போர்க் கருவிகள் வாங்குவதற்கென்று ஒதுக்குகிறது. அவற்றை இறக்குமதி செய்வதற்கென்று டாலரில் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உலக வங்கி அல்லது கடனளிக்கும் நாடுகள் நம் நாட்டின் பெயரில் கணக்கில் எழுதிக் கொள்கின்றன. அது போலவே கன்னெய்யப் பொருட்களின் இறக்குமதியும். இவ்வாறு கணக்கெழுதப்படும் டாலர்களுக்கு நிகரான உள்நாட்டுப் பணத்தை “உதவும்” நிறுவனம் அல்லது நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகக் கூறிச் செலவிடுகிறது “நம்” அரசு. இதற்காக உலக வங்கி முதலிய கடன் வழங்கு நிறுவனத்தின் திட்டத்திற்கான மதிப்பீடு போடுதல் அம் மதிப்பீடு தொடர்பான அனைத்தையும் அந் நிறுவன அதிகாரிகள் வந்து சரிபார்த்து இசைவு வழங்கல், வேலைகளை எந்த முறையில் யாருக்குக் கொடுக்க வேண்டும், வேலை செய்யப்பட வேண்டிய முறை என்று ஒவ்வொரு கட்டத்திலும் மட்டத்திலும் தலையிட்டு நம் மீது மேலாண்மை செலுத்துகின்றன.

நம் ஆட்சியாளர்கள் இத்தகைய ஒரு நாடகத்தை ஏன் நடத்துகிறார்கள்? முதலில் ஆயுதங்கள் வாங்கத்தான் அயற் செலவாணியான டாலர் தேவைப்படுகிறது என்று மக்களுக்குத் தெரிந்தால் இவர்களது சாயம் கலைந்துவிடும். ஆயுதங்களை வாங்கி அதில் தரகு பெறுவதற்காகப் பாக்கித்தானோடு மோதல் நிலையைக் பேணிக் காக்கின்றனர். பாக்கித்தானை ஆளுவோர்களும் அவ்வாறே. மக்களுக்கு வெளிப்படையாக இந்த உண்மை தெரிந்தால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். இந்த வாணிகம் இடையறாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே படைத்துறை ஆராய்ச்சிப் பிரிவினரின் கண்டுபிடிப்புகளை வெளிவந்துவிடாமல் போட்டுப் புதைக்கிறார்கள். அப்துல் கலாம் போன்ற கண்டுபிடிப்பாளர்கள் உண்மைகளைப் போட்டு உடைத்து விடக் கூடாதே என்பதற்பாக அவரை ஊடகங்களை விட்டுப் புகழ்ந்து தள்ளுகிறார்கள், பல்கலைக் கழகங்கள் அவருக்குப் பட்டங்கள் கொடுத்துக் குளிப்பாட்டுகின்றன. அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.

இரண்டவாது காரணம் நம் நாட்டிலுள்ள அடிப்படைக் கட்டுமானங்களுக்குக் கடன் தருகின்றன என்ற பொய்யான எண்ணத்தை மக்கள் மனதில் விதித்துவிட்டு கடன் தரும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் நாம் நன்றிக் கடன் பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் முன் நம் ஆட்சியாளர்கள் பணிந்து ஒருங்கியிருப்பதைப் பார்த்து நம் ஆட்சியாளர்களை விட அதிகாரம் படைத்தவர்கள் உள்ளனர்; அவர்களுக்கு நம் ஆட்சியாளர்கள் பணிந்து நடப்பதைப் போல் நாமும் நம் ஆட்சியாளர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஊன்றுகின்றார்கள். அதன் மூலம் மக்களாட்சியில் ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற வேறுபாடு கிடையாது, அனைவரும் சமமான அதிகாரமும் கடமைகளும் உடையவர்கள் என்ற சமன்மை எண்ணம் உருவாகிவிடக் கூடாது என்று பார்க்கிறார்கள். இதைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம்.

மூன்றாவது முகாமையான காரணம் கடன் “வழங்கும்” போதும் அதைத் திருப்பிச் செலுத்தும் போதும் ஒரு காசு கூடப் பணம் கைமாறுவதில்லை. அனைத்தும் பண்டங்களின் இறக்குமதியும் ஏற்றுமதியும்தான். பணம் கணக்கில்தான் வரும். கடன் வழங்கப்படுவது ஆயுதங்கள். கன்னெய்யம் போன்ற பண்டங்களின் கணக்கில். திருப்பிச் செலுத்துவது நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் வடிவில். இந்தத் தொடர் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. நாம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகத் துணி வகைகளை ஏற்றுமதி செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இறக்குமதி செய்யும் நாடுகள் நம் நாட்டில் கிடைக்காத நீண்ட இழைப் பருத்தி கொண்டு நெய்யப்பட்ட துணிகள்தான் தேவை என்று முறுக்கிக்கொள்ளலாம். அப்போது நீண்ட இழைப் பருத்தியை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். அவ்வாறு இறக்குமதி செய்தற்குத் தேவையான வெளிச் செலவாணியை ஈட்டுதவற்கு நாம் வேறு பண்டங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதோடு நமக்குக் கடன் வழங்குவோர் நமக்குக் கடன் கொடுப்பது என்ற வடிவில் வழங்கப்படும் பண்டங்களுக்கும் கடனை அடைப்பதற்காக நாம் ஏற்றுமதி செய்யும் பண்டங்களுக்கும் விலை வைப்பவை கடன் கொடுக்கும் நிறுவனங்கள்தாம். வாங்கும் பொருளுக்கு அளவுக்கு மீறிய விலையையும் விற்கும் பொருளுக்குக் குறைந்த விலையும்தாம் வைப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வகையில், கடன் வாங்குவது, அதற்காக ஏற்றுமதி, ஏற்றுமதிக்காக இறக்குமதி, இறக்குமதிகாக ஏற்றுமதி என்று சுழன்று சுழன்றடிக்கும் நச்சு வளையத்தில் நம் மீது கடன் சுமை நாளுக்கு நாள் ஏறத்தான் செய்யுமேயொழிய குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு நம் மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி அயலார் ஆதாயம் ஈட்டுவதற்கு வழி வகுத்துக் கொடுக்கும் நம் ஆட்சியாளரின் தரகுப் பணிக்கு உரிய தரகு அவர்களுக்குப் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. முன்பு சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மறைமுகக் கணக்குகளில் பதுக்கப்பட்டன. அவை உரியவர்களின் பிறங்கடைகளுக்கு(சந்ததிகளுக்கு)க் கிடைக்காமல் போயின. எனவே இப்போது அவை அயல்நாட்டு நிறுவனங்களாகிய பன்னாட்டு நிறுவனங்களில் முதலிடப்படுகின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கு ஆட்சியாளர்கள் தங்கள் பின்னடி(சந்ததி)களை அந் நாடுகளில் குடியேற்றுகின்றனர். வெளி நாட்டுக்குக் குடியேறுவோருக்கு நம் நாட்டு அரசு கொடுக்கும் மதிப்புக்கு இதுவெல்லாம் காரணங்கள். ஏற்றுமதி - இறக்குமதியில் நம் ஆட்சியாளர்கள் எவ்வளவு கூச்சமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. அண்மையில் ஒன்றிரண்டு: சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபு உழவர்கள் கோதுமைக்குத் கூடுதல் விலை கேட்டுப் போராடினர். அதை மறுத்துவிட்டு அந்தப் போராட்டத்தை முறியடிப்பது என்ற சாக்கில் அவர்கள் கேட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குக் கோதுமையை இறக்குமதி செய்தனர் ஆட்சியாளர்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் மிகுதி, சேமித்து வைக்க இடமில்லை என்று கூறி கிலோ உரூ 4.00க்கு ஏற்றுமதி செய்கிறார்கள். உள் நாட்டில் கிலோ உரூ 9.00 வீதம் விற்கப்படும் கோதுமை பங்கீட்டு (ரேசன்) கடைகளில் இருப்பு இல்லை. அதே போல்தான் அரிசியும் பங்கீட்டுக் கடை விலையை விடக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

படைத்துறையில் ஆராய்ச்சிப் பிரிவில் கண்டுபிடிக்கப்படும் கருவிகளைப் பெருமளவு விளைக்காமல் உடனடித் தேவை என்ற சாக்கிட்டு அதற்காகவே பாக்கித்தானுடன் உரசலை ஏற்படுத்திப் பெருமளவில் நம் ஆராய்ச்சிப் பிரிவு கண்டுபிடித்தவைகளை விடத் தரம் குறைந்தவற்றை இறக்குமதி செய்வதையும் அது பற்றிய முனகல்களும் புலம்பல்களும் படைத்துறை இரும்புத் திரையையும் மீறி நம் காதுகளுக்கு வருவதையும் கூறினோம். கன்னெய்யத்தை எடுத்துக் கொண்டால் ஏரி நீர் இராமர் தான் மூலிகையிலிருந்து கன்னெய் கண்டுபிடித்தாகக் கூறினார். அது கன்னெய் அல்ல என்றனர் நம் ஆட்சியாளர்களின் எடுபிடிகளான “ஆராய்ச்சியாளர்கள்”. இவர் அதற்கு எரிநீர் என்று பெயர் வைத்தார். அப்போதும் அவர்கள் அவருக்குக் காப்புரிமம் வழங்கவில்லை. இன்று ஏமாற்று என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவரை எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பதே கேள்விக்குறி. இது போன்று மாற்று எரிபொருட்கள் அல்லது எரிபொருட் சிக்கனத் தொழில்நுட்ப மேம்பாடுகள் கண்டுபிடித்ததாக அறிவித்த எவரையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. இவையனைத்தும் ஏற்றுமதி இறக்குமதியில் நம் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அவற்றில் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெரும் ஆதாயத்தையும் காட்டுகின்றன.

நூற்று முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் ஒரேயொரு காப்புரிமம் வழங்கும் அலுவலகம்தான் உள்ளது. அங்கும் உருப்படியாக எவருக்கும் காப்புரிமம் வழங்குவதில்லை. வருகின்ற வேண்டுகைகளை அழிக்கின்றனர் அல்லது அவ் வேண்டுகைகளில் தரப்பட வேண்டுமென்று வலியுறுத்தும் கண்டுபிடிப்பு மறையங்களை அயலவர்களுக்கு விற்றுவிடுகின்றனர். அல்லது இங்கு அலைந்து பார்த்து அலுத்துப் போன கண்டுபிடிப்பாளர்கள் கிடைக்கும் காசுக்கு அயல் நாட்டினர்க்கு விற்றுவிடுகின்றனர். அவை வெளி நாட்டுத் தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் நம் நாட்டுக்குள் புகுந்து உரிமைத் தொகை(ராயல்டி) அல்லது ஆதாயமாக நம் செல்வத்தைச் சுரண்டிச் செல்கின்றன. உலக வாணிக ஒப்பந்தப்படி காப்புரிமப் பதிவு இரு கட்டங்களில் செய்யலாம். முதலில் செய்பொருள் காப்புரிமம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கலாம். இதற்கு செய்முறை மறையங்களை காப்புரிமம் வழங்கும் நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை மறையங்களைத் தெரிவித்துச் செய்முறை காப்புரிமம் பெற்று அதை உறுதி செய்யலாம். இந்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியிருந்தும் செயலுக்குக் கொண்டு வரவில்லை. இந்திய நிலைமைக்கு மாவட்டத்துக்கு ஒரு காப்புரிமம் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும். அரசு செய்யவில்லையாயின் மக்களே அதைச் செய்ய வேண்டும். அதே போல் பங்குச் சந்தை, பண நிறுவனங்கள் ஆகியவற்றை உருவாக்கி அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தவறு செய்வோர் மீது தண்டனை விதித்துக் கண்காணிக்கும் அமைப்புகளையும் மக்களே அமைக்க வேண்டும்.

ஒட்டுண்ணிக் கூட்டத்தின் பிடியில் சிக்கி காட்டுவிலங்காண்டி நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நமக்கு அரசியல், பொருளியல், வளர்ச்சி மனப்பான்மை என்ற அனைத்தையும் ஊட்டி வழிகாட்டியவர்கள் ஆங்கிலரும் பிற ஐரோப்பியர்களும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்கள் இந் நாட்டை விட்டு அகன்ற உடனே பழைய ஒட்டுண்ணிப் பிடியை இறுக்கிய ஏமான் (எசமான்)களுக்கும் நாட்டை அயலாருக்கு விற்றுவிட்ட கயவர்களுக்கும் எதிராகப் போராடி அவர்களை வென்று ஆங்கிலரும் பிறரும் காட்டிய அறிவியல் வழியைக் கடைப்பிடித்து சப்பானைப் போல் ஆசானுக்கு மிஞ்சிய மாணவனாக மாற வேண்டியது நம் வரலாற்றுக் கடமை.

தமிழகக் கடற்கரையில் துறைமுகங்கள் அமைக்கும் பணியை அரசு பணத்தை அச்சிட்டு அதைக் கொண்டு மேற்கொள்ளாமல் அயலாரின் கடன் கொண்டு செய்வதாயின் துறைமுகங்கள் வேண்டுமென்று அரசை நோக்கி நாம் கேட்க வேண்டியதில்லை. மக்களே தங்களுக்குள் பணம் திரட்டித் துறைமுகங்களை அமைக்கும் உரிமை கேட்டுப் போராட வேண்டும். அவ்வாறுதான் பெரிதாகப் பேசப்படும் சேது கால்வாய்த் திட்டமும். வெளிக்கடனில் கால்வாயை அமைத்து அக் கடனுக்காக அதில் தண்டப்படும் கட்டணத்தைக் கடன் கொடுத்தவன் பெற்றுக்கொண்டால் நம் நாட்டின் ஒரு பகுதியைக் கடன் கொடுத்தவனுக்கு இலவயமாகக் கொடுத்ததாகிவிடும். அதைக் கட்டுவதற்கான பொருட்களையும் உழைப்பையும் நாம்தானே வழங்கப் போகிறோம்!

இவ்வளவுக்கும் நம்மிடம் பணம் இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். நாம் நாள்தோறும் வீணாக்கும் பண்டங்கள், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றைச் சிக்கனம் செய்து, திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளையும் சமய நிகழ்ச்சிகளையும் எளிமைப் படுத்தி நம் பெண்களும் ஆண்களும் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கைவிட்டால் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பணம் திரளும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வருமான வரியை ஒழித்துவிட்டாலே சட்டத்துக்கு உட்பட்டு ஈட்டி வருமான வரிக்கு அஞ்சி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடானு கோடானு கோடிக்கணக்கான உரூவாய்கள் வெளிப்பட்டு நம்மைத் திக்குமுக்காட வைக்கும் என்பது உறுதி.

உலகில் தங்கள் தங்கள் கடற்கரைகளை நன்கு பயன்படுத்திய நாடுகள் எவ்வளவு சின்னஞ்சிறியவையாய் இருந்தாலும் உலக நாடுகளின் மீது குறிப்பிடத்தக்க ஆளுமையைச் செலுத்தியுள்ளன. வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் பினீசியர்கள், பின்னர் கிரேக்கர்கள், உரோமர்கள் அரேபியர்கள் என்றால் இற்றை (நவீன) நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, சப்பான் போன்வற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். அவற்றுள் சப்பானின் வரலாறு மிகக் குறிப்பிடத் தக்கது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில்(1853) ஓர் அமெரிக்கக் கப்பல் சப்பானியத் துறைமுகம் ஒன்றினுள் நுழைய விட வேண்டுமென்று குண்டு வீசி மிரட்டியது. அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சப்பானியர் விட்டுக்கொடுத்துத் தம் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் உடனடியாகச் செயலில் இறங்கினர். நம் நாட்டில் இன்று சாதிச் சிக்கலின் தீர்வுக்கு இடையூறாயிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக அங்கிருந்த சாமுரைகள் என்ற வகுப்பினர் சிக்கலைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். அங்கு அப்போது பேரரசுருக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. சிற்றரசர்களே உண்மையான அதிகாரத்தை வைத்திருந்தனர். நம்மைப் போல் சப்பானியக் குமுகமும் நான்கு வருணங்களாகப் பிளவுண்டிருந்தது. அதாவது சப்பான் ஒரு முழுமையான நிலக்கிழமை நாடாக இருந்தது. இந்த நிலைமைகளை மாற்றிச் சிற்றரசர்கள் தங்கள் அதிகாரங்களையும் பதவிகளையும் விட்டுக்கொடுக்க இணங்கினர். வருண வேறுபாடுகளை ஒழித்து அனைவருமே சமமென்று அறிவித்தனர். ஐரோப்பாவுக்குச் சென்று அங்கிருந்த வளர்ச்சி நிலைகள் அனைத்தையும் அறிந்துவந்தனர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாணவர்களை விடுத்து அவர்கள் மூலம் அனைத்துத் துறை அறிவுகளையும் திரட்டிக்கொண்டனர். இருபதே ஆண்டுகளில் தங்கள் நாட்டை ஒரு முழுமையான முதலாளிய நாடாக வளர்த்துவிட்டனர். தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலையான ஒப்பந்தங்களைப் பின்வாங்க வைத்தனர். 50 ஆண்டுகளில் (1905) உருசியப் பேரரசைக் கடற்போரில் படுதோல்வி அடையச் செய்தனர். இன்று உலகப் பொருளியல் வல்லரசுகளில் அமெரிக்காவுக்கு இணையான நிலையை எய்தியுள்ளனர். இவையனைத்துக்கும் தங்கள் கடற்கரையின் ஆளுமை மீது அவர்களுக்கிருந்த இமை நொடியும் பிசகாத விழிப்புணர்வுதான் அடிப்படை என்பதுதான் நமக்குப் பாடம். அந் நாட்டில் மூலப் பொருட்களே மிக அரிது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இந்தியக் கடற்கரையின் நீளத்துக்குச் சமமான நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட நாடுகள் உலகில் குறைவு. ஆனால் அக் கடற்கரை நமக்கு வலுவளிப்பதற்குப் பகரம் எப்போதும் மெலிவையே அளித்திருக்கிறது. கடற்கரை வலிமையடைந்தால் பகுத்தறிவுக்கொவ்வாத தங்கள் ஆதிக்க வெறிக்கு ஊறு வருமென்று கடற்கரை மக்களை அளவுக்கு மீறி அடக்கி ஒடுக்கி வைத்திருத்தனர், வைத்திருக்கின்றனர் உள்நாட்டு ஒட்டுண்ணிக் கூட்டத்தினர். இதுதான் இந்த நம் மெலிவுக்குக் காரணம். இதனால், நினைத்தவர்களெல்லாம் தட்டுத் தடங்கலின்றி நுழையும் வாயில்களாக நமது கடற்கரையும் அங்கு வாழும் மக்களும் அமைந்தனர். கடற்கரையைப் பேணும் நாடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் பகுதிகள் உள்நாட்டுப் பகுதிகள் மீது ஒரளவுக்கேனும் தம் பிடியை வைத்திருக்கும். ஆனால் இந்தியாவில் கடற்கரை மாநிலங்கள் மீது உள்நாட்டு மாநிலங்கள்தாம் தம் பிடியை இறுக்கி வைத்துள்ளன. இந்தியக் கடற்கரை மாநிலங்கள் மீது உள் நாட்டு மாநிலங்களான இந்தி பேசும் உத்திரப் பிரதேசம், இராசத்தான், மத்தியப் பிரதேசம், அரியானா, இமாசலப் பிரதேசம், ஆகியவை அரசியலிலும் அம் மாநிலங்களைச் சேர்ந்த மார்வாரிகள் அரசியல், பொருளியல் அடங்கிய அனைத்துத் துறைகளிலும் ஆட்டிப் படைப்பவர்களாக உள்ளனர். விதிவிலக்காக, பனியாவான காந்தி பிறந்த குசராத் மாநிலம் மட்டும் செல்வாக்குள்ள கடற்கரை மாநிலமாக உள்ளது. இவர்களின் பொருளியல் ஆதிக்கம் உண்மையில் நம் நாட்டு வலிமையைப் பெருக்கவில்லை. அயலவர்களின் தரகர்களாக தாங்கள் மட்டும் வீங்கி நாட்டின் பிற மக்களை மெலிய வைத்து மொத்த இந்தியாவின் வலிமையை அழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை முறியடித்து அனைத்து மக்களும் நலன் பெற வேண்டுமாயின் கடற்கரை மாநிலங்கள் அரசியலிலும் பொருளியலிலும் வலிமை பெறப் போராட வேண்டும். அந்தப் போராட்டம் கடற்கரையிலும் உள்நாட்டிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். நம் வளங்களும் ஆற்றல்களும் ஒன்று கலந்து புதிய குமுகமும் பண்பாடும் கண்ணோட்டங்களும் உருவாக வேண்டும். அனைத்துத் தளங்களிலும் களங்களிலும் நாம் வீறு கொள்ள வேண்டும். அதற்கு நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள தப்பெண்ணங்களைத் தகர்த்து உண்மை வழி நிற்க நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வோம்! தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம்! புதிய தமிழகம் படைப்போம்! வெற்றி உறுதி.

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 3

முதலாளிய முறைக்கு எதிராகக் கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு நம் மரபுத் தொழில்கள் நம் மக்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்பளிக்கின்றன ; இந்த நிலையில் முதலாளிய விளைப்பு முறைக்கு மாறினால் மரபுத் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் வேலையிழப்பர் என்பதாகும். ஆனால் நம் சிந்தனைக்கு எட்டாமல் உள்ள எத்தனையோ பணிகள் நம் நாட்டை வளமுடனும் நலமுடனும் வைத்துக்கொள்ளத் தேவைப்படுகின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அகன்ற நேரான சாலைகளை நாடு முழுவதும் அமைத்து அவற்றை மாசுறாமல் அழகுறப் பராமரித்தல், ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைச் சீராகவும் துப்புரவாகவும் அழகுறவும் பராமரித்தல், இன்று சீர்படுத்த முடியாத அளவுக்குப் பழமை எய்திப் போன நகர்களையும் ஊர்களையும் கைவிட்டுப் புதிய சாலைகளுக்கேற்பப் புது நகர்களையும் ஊர்களையும் உருவாக்குதல், மின்சாரம், குடிநீர் போன்றவை தடையின்றிக் கிடைக்கும் வகையில் அவற்றின் வழங்கலை மேம்படுத்தல், நாட்டில் ஒரு காலடி நிலம் கூடத் தரிசாக இல்லாத அளவு எங்கும் காடுகளை வளர்த்தல், பயிர்களையும் மரங்களையும் மரக் கன்றுகளையும் தின்று அழித்து நாட்டைப் பாலைவனமாக்கும் ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்க அறிவியல் அடிப்படையில் தொழுவங்களையும் பண்ணைகளையும அமைத்தல்; நேராக இன்று சந்தைக்கு வரும் உணவுத் தவசங்களை(தானியங்களை)ப் பகுதிப் பக்குவம் செய்த நிலைக்கு மேம்படுத்தல், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் ஏராளமாக விளைந்து இன்று அழிவுக்குள்ளாகும் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், வாழைக்காய், மாம்பழம், மீன்வகைகள் என்ற கணக்கிலடங்கா வகைப் பொருட்களையும் பதப்படுத்தி பகுதிப் பக்குவம் செய்த நிலையில் அல்லது தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பக்குவம் செய்து வைத்தல், மக்கள் குடியிருப்புகளிலும் தொழிலகங்களிலும் சேரும் குப்பைகளிலும் நீர்க் கழிவுகளிலும் இருந்து உயிர்வளி, எரிபொருட்கள் போன்வற்றைப் பிரித்தெடுத்து மின்சாரம், எரிவளி போன்ற ஆற்றல்களை உருவாக்கல், மிஞ்சும் கழிவுகளிலிருந்து உரம் உட்பட எண்ணற்ற பொருட்களைப் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்குக் கொண்டுவரல், ஊர்திகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களைக் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் கைவிட்டு அவற்றிலுள்ள மூலப் பொருட்களை மறுசுழற்சிக்குக் கொண்டு வந்து மக்கள் எப்போதும் புதுமை மாறாத கருவிகளைப் பயன்படுத்துவதும் அதனால் இயக்காற்றல்(எரிபொருள் மின்சாரம் போன்றவை) செலவைக் குறைக்க வழி கோலுதல், உலகின் எந்த நாட்டையும் விட மிகுதியாகக் கிடைக்கும் சூரிய ஒளியாற்றலை வீணாக்காமல் முழுவதும் பயன்படுத்தத் தக்க அமைப்புகளை நாடெங்கும் அமைத்தல், நீர் நிலைகளிலும் நிலத்திலும் இடையூறாக வளரும் செடி கொடிகளைத் திரட்டி எரிவளி, உரம், தீவனங்கள், மருந்துகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்குதல் என்று திரும்பிய பக்கமெல்லாம் எல்லையில்லாத வேலைவாய்ப்புகள் நம் கவனிப்புக்காகச் காத்திருக்கின்றன. நாம் மேலே விளக்கியுள்ள தடங்கல்களை அகற்றுவது மட்டுமே தேவை. எடுத்த எடுப்பில் விரிவான வேலை வாய்ப்பை உருவாக்கும் ஓர் முயற்சி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவயக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகும். அதற்காகத் தரமான பள்ளிக் கட்டடங்களையும் வளாகங்களையும் அமைத்தல், தேவைக்குச் சற்றும் குறையாத ஆசிரியர்களை அமர்த்தல், அந்த ஆசிரியர்கள் தடங்லின்றிக் கிடைக்கும் வகையில் முழு நிறைவான ஆசிரியப் பயிற்சி நிலையங்களை நிறுவுவதல் என்ற ஒரு துறை மட்டுமே வேலையின்மையின் ஒரு பெரும் பகுதிக்குத் தீர்வு கண்டுவிடும்.

இப்போது எழும் கேள்வி, இவ்வளவு பெரும் பணிகளுக்குத் தேவையான மூலதனத்துக்கு என்ன செய்வது என்பதாகும். விலைக்கு விற்கத்தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்வதற்கு வேண்டிய பணத்தைப் பொதுமக்களிடமிருந்தே திரட்ட முடியும். அந்த அளவுக்குப் பணப் புழக்கம் உள்ளது. அதைத் திரட்டுவதில்தான் சிக்கல். ஏற்கனவே பங்கு மூலதனம் பற்றிக் கூறினோம். இங்கு, சிறு பண நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாக எழும் கூச்சலைப் பற்றிப் பார்ப்போம். இங்கும் ஆட்சியாளர்களின் கை உண்டு. முதலில், தமிழகத்தில் உள்ள 36 நிறுவனங்கள் நம்பகமானவை அல்லவென்று ஏம (ரிசர்வு) வங்கி விளம்பரம் செய்துவிட்டு வாளாவிருந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை ஒரே நேரத்தில் திரும்பக் கேட்டதால் அனைத்து நிறுவனங்களும் வீழ்ந்தன. உண்மையிலேயே ஏமாற்று நிறுவனம் எதுவென்று இனம் காண முடியாது போயிற்று. இவ்வாறு ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் பணம் கேட்டால் ஏம வங்கி கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. காவல்துறையினர் கேட்ட கைக்கூலியைக் கொடுக்க இயலாததால் முதலீட்டாளர்களைத் தூண்டிவிட்டு வீழ்ந்த நிறுவனங்களும் உண்டு. வழக்கு மன்றமும் காவல்துறையும் சேர்ந்து முதலீட்டாளர்களை ஏமாற்றுவதும் நடைபெறுகிறது. பல நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனையை நம்பித்தான் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றன. அன்று வீட்டுமனை வாணிகம் இருந்த நிலையில் அந் நிறுவனங்கள் அறிவித்த வட்டியையும் பிற சலுகைகளையும் வழங்கினாலும் கணிசமான ஆதாயம் கிடைக்கும். ஆனால் வருமான வரித்துறையினர் உள் நுழைந்தனர். இந் நிறுவனங்களிடம் மனை வாங்குவதற்கு முன்பணம் செலுத்தியவர்களின் முகவரிகளைப் பெற்று அவர்களைத் “தேடுதல்” வேட்டையாடினர். மனை வாணிகமும் கட்டுமானத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ப.சிதம்பரம் இந்தியப் பண அமைச்சராக இருந்த போது இது நடைபெற்றது. நடுவரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்பைக் கைவிட்ட கையோடு அதற்கு உட்கையாகச் செயற்பட்ட பனியா - பார்சிக் கும்பல்கள் அசையாச் சொத்துத் துறையில் காலடி எடுத்துவைக்க ஆயத்தமான போது போட்டியாளர்களைக் களத்திலிருந்து அகற்ற ப.சிதம்பரம் எடுத்ததுதான் இந் நடவடிக்கை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இவ்வாறு அரசின் திட்டமிட்ட அழிம்பு வேலைகள் புதிய முனைவர்களுக்கு மூலதனத் திரட்சியைத் தடுக்கின்றன. வருமான வரித்துறை இதில் முதன்மைப் பங்காற்றுகிறது. வருமான வரியை முற்றாக ஒழித்து பண நிறுவனங்கள் திரட்டும் பணத்துக்கு உறுதியான பிணைகளை ஏற்படுத்தி, இரண்டாம் நிலை பங்குச் சந்தையையும் ஒழித்து முதல்நிலை பங்குச் சந்தைக்கு வலுவூட்டி அவற்றை மக்களின் ஒத்துழைப்போடு கண்காணித்தால் கிடைக்கும் பணத்தால் நாம் மேலே கூறிய விற்கத் தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிவிடலாம்.

பண நிறுவனங்களை அழிப்பதற்கு ஏம வங்கி திட்டமிட்டுச் செயலாற்றியது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்: சீராம் சீட்டு நிறுவனம் வலிமை குன்றியிருப்பதாக ஏம வங்கி அறிவித்தது. அந் நிறுவனம் தாளிகை(பத்திரிகை)கள் மூலமாகவும் நேரடியாகவும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு உண்மை நிலையை விளக்கியது. ஏம வங்கி வலுவற்றவை என்று அறிவிக்காத நலப் பண நிறுவனங்கள்(பெனியிட் பண்டுகள்) பலவும் தனியார் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றியுள்ளன. மக்களின் பணத்தை முதலீடாகப் பெற்று நாட்டின் பொருளியல் நடவடிக்கையில் முகாமைப் பங்காற்றும் பண நிறுவனங்களில் வலுவற்ற நிலையில் உள்ளன என்பதை அறிவிப்பதோடு வாளாயிருந்துவிட்ட ஏம வங்கி பண மூலதனத்தின் இயக்கத்தைக் கண்காணிக்கும் தலைமை அமைப்பு என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றவில்லை என்பதோடு அதற்கு எதிராகச் செயற்பட்டது என்பதுதான் உண்மை. உடனடியாக மக்களின் மூதலீட்டைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குதிரை ஓடிய பின் கொட்டிலை அடைத்த கதையாக அனைத்தும் அழிந்த பின் பண நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை அறிவித்தது.

இனி, அரசால் மட்டும் செயல்படுத்தக்க கட்டணம் பெற முடியாத பணிகளுக்கும் விலைக்குப் விற்க முடியாத பண்டங்களுக்கும் மூலதனத்துக்கு என்ன செய்வது என்று பார்ப்போம். அதனை முழுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெற முடியாது. இதற்கென்று ஒரு வழியை 20ஆம் நூற்றாண்டின் பொருளியல் மேதையான கெயின்சு என்பார் வகுத்து அதைப் பணக்கார நாடுகள் கையாண்டு வலிமை பெற்றுள்ளன. இத்தகைய பணிகளுக்குத் தேவையான பணத்தை அரசே அச்சிட்டு வெளியிடுவதுதான் அவர் கூறிய வழி. இவ்வாறு வெளியிடப்படும் பணம் மேலே கூறிய இலக்குகளை எய்தப் பயன்படுவதுடன் மக்களிடையில் பணப் புழக்கத்தை உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் நிலையைத் தோற்றுவித்து நாட்டின் வளம் பெருகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழியமைக்கும் .

19ஆம் நூற்றாண்டில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கடும் பொருளியல் நெருக்கடிகள் ஏற்பட்டு உலக முழுவதும் மக்கள் பட்டினியால் செத்தார்கள். இதன் காரணம் தொழிற்சாலைகளில் படைக்கப்பட்ட அளவுக்குமீறிய பண்டங்களை வாங்க அத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய மக்களாகிய பெரும்பான்மையினருக்குப் போதிய கூலி வருவாயில்லாததால் அவை தேங்கின; அதனால் பணி முடக்கம் ஏற்பட்டு வேலையிழந்த மக்கள் பட்டினியால் செத்தனர். நாடு முழுவதும் பண்டங்கள் தேங்கிக் கிடந்த நிலையில் மக்கள் பட்டினியால் செத்த இந்த இரங்கத்தக்க விந்தைச் சூழலில் இருந்துதான் பாட்டாளியப் புரட்சியாகிய பொதுமைப் புரட்சி ஏற்படும் என்று காரல் மார்க்சு 19ஆம் நூற்றாண்டில் கருதினார். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் 1933 - 36இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போது மேலே குறிப்பிடப்பட்ட கெயின்சு அறிவுரையை ஏற்ற அமெரிக்க அரசினர் நடவடிக்கையால் உலகில் இப் பட்டினிச் சாவுகள் முடிவுக்கு வந்தன. இந்த உத்திக்குப் பற்றாக்குறைப் பணமுறை(டிபிசிட் பினான்சிங்) என்று பெயர். இதில் சாலைகளை, பாசனம், மின்சாரம், துறைமுகங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்களைக் கட்டுவதற்காகப் பணத்தை அச்சிட்டுப் புழங்கவிடுவதன் மூலம் மக்களின் வாங்கும் ஆற்றல் வளர்ந்து தொழிற்சாலையில் விளைக்கப்படும் பண்டங்கள் விலையாகும்; தொழில் சுழற்சி முறையாக இயங்கும். இந்த அடிப்படைக் கட்டுமானங்களில் பண்டங்கள் நேரடியாகப் பயன்படுவதன் மூலமும் தொழில் தேக்கம் முடிவுக்கு வரும்.

முந்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தங்கம் போன்ற பொருட்களை எடுத்து அவற்றை அடித்தளமாகக் கொண்டு வல்லரசுகளாக வளர்ந்தன. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் உலகப் போர்களால் வலிமையிழந்திருந்த சப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பற்றாக்குறைப் பணமுறையைப் பயன்படுத்தி வல்லரசு நிலையை எய்தியுள்ளன. ஆனால் நம் ஆட்சியாளர்களும் கூலிக்கு மாரடிக்கும் போலிப் “பொருளியல் வல்லாரும்” பற்றாக்குறைப் பணமுறையைப் பற்றிப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்- பணவீக்கம் ஏற்பட்டுவிடும் என்று. பற்றாக்குறைப் பண்முறையில் இடையூறு உண்டு. அரசு புழக்கத்துக்கு விடும் பணத்தைப் பெறும் மக்கள் அதைக் கொண்டு வாங்கத்தக்க பண்டங்கள் வேண்டிய அளவில் சந்தையில் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் பண்டங்களின் கேட்பு அளவு மீறி அவற்றின் விலை விரைந்து ஏறி ஏழைகளின் வாழ்வைப் பாதிக்கும். இதற்குப் பணவீக்கம் என்று பெயர் கொடுத்துள்ளனர். இந்தப் பணவீக்கம் ஓர் அளவுக்குள் இருந்தால் பண்டங்களை விளைப்போர் கூடுதல் ஆதாயம் கிடைக்குமென்பதால் ஊக்கத்துடன் பண்ட விளைப்பைப் பெருக்குவார்கள். பண்ட விளைப்போ பணவீக்கமோ அளவு மீறும் போதுதான் சிக்கல். எனவே பண்ட விளைப்புக்கேற்ப அரசு வெளயிடும் பணத்தைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல.

பணப்புழக்கம் பெருகுவதால் மட்டும் பணவீக்கம் ஏற்படுவதில்லை. பண வீக்கம் என்பது பணப்புழக்கத்துக்கும் பண்ட விளைப்புக்கும் இடையிலான ஒரு விகிதமே. பணப்புழக்கம் அளவு மீறுவதாலும் வரலாம், பண்டங்களின் வழங்கல் குறைவதாலும் வரலாம். நம் ஆட்சியாளர்கள் இரண்டையும் செயற்பட வைக்கிறார்கள். வெளிக் கடன்களை வாங்கி உள்நாட்டில் பணப்புழக்கத்தைப் பெருக்குகிறார்கள். அதே வேளையில் அக் கடன்களை அடைப்பதற்காக என்று கூறிப் பண்டங்களை ஏற்றுமதி செய்து வழங்கலைக் குறைக்கிறார்கள். இவ்வாறு பொருளியலில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமலும் எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்தும் தலைகீழாக நிற்கிறார்கள். எல்லாம் வெளியார் தரும் தரகின் திருவிளையாடல். இன்று வரம்பின்றி வெளிநாடுகளில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்து உள்நாட்டுத் தொழில்களை அழித்து மக்களின் பணப்புழக்கத்தை முறித்து சென்ற நூற்றாண்டின் பட்டினிச் சாவுகளை மீண்டும் அரங்கேற்றிக் காட்டப்போகிறார்கள்.

நம் நாடு முதாளியத்துக்கு மாறாமல் இருப்பதற்கு இன்னொரு முகாமையான காரணம் தொழில்களைத் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவதற்கும் மூலப் பொருட்களுக்கு அரசின் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கும் உள்ள சிக்கலாகும். நெல்லை அவித்து உலர்த்தி அரிசியாக்கும் ஒரு சராசரி அரிசியாலைக்கு தில்லி வரை சென்று உரிமம் பெற வேண்டியுள்ளது. மூலப் பொருட்களை வாங்குவதற்கு, அது தாராளமாகக் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளை விதித்து ஒதுக்கீடுகளை வகுத்து அதன்படிதான் வழங்கின்றனர். இதனால் போலி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றிடம் இருந்து கள்ள விலையில் மூலப்பொருட்களைப் பெறவேண்டியுள்ளது. மின்சார வழங்கல் அரசின் வாரியங்களின் கைகளுக்குச் சென்ற பின் மின் இணைப்புக் கொடுப்பதற்குத் தம் துறைக்குத் தொடர்பில்லாத சிக்கல்களையெல்லாம் கிளப்புகிறார்கள். மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்று புதிது புதிதாகச் சிக்கல்களை உருவாக்கித் தடங்கல் செய்கிறார்கள். இதில் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருப்பதில்லை, வேண்டுமென்றே பொய்க் காரணங்களைக் கூறுவார்கள். கைக்கூலி பெறுவதே அவர்கள் நோக்கம். இவர்களைத் தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் தண்டிக்கவும் நம் நாட்டில் ஓர் அமைப்பு இல்லாமையே காரணம். நம்மை ஆண்ட ஆங்கிலர் அடிமைகளாகிய நம் மக்களை அடக்கியாளவென்று தான் உருவாக்கிய உள்நாட்டு அதிகார வகுப்புக்குப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல அதிகாரங்களையும் பாதுகாப்புகளையும் எண்ணற்ற சலுகைகளையும் வழங்கியிருந்தனர். அந்த அமைப்பே “விடுதலை” அடைந்த பின்னும் தொடர்கிறது. ஆங்கிலரும் போய்விட்டதால் தட்டிக் கேட்பாரின்றி அவர்கள் துள்ளாட்டம் போடுகின்றனர். ஆங்கிலரிடமிருந்த ஓரளவு மக்களாட்சிப் பண்பும் மனிதநேயமும் சாதி - வருணங்களின் அடிப்படையில் அமைந்த நம்மவரிடையில் குறைவு என்பதால் ஆங்கிலர் வருவதற்கு முன்பிருந்த நிலையை நோக்கி நாம் விரைந்துகொண்டிருக்கிறோம்.

நம் ஆட்சியாளர்கள் ஒருவருடைய வேண்டுகை தொடர்பாக ஏதாவது தவறு செய்துவிட்டால், தான் செய்த விட்ட தவற்றைத் திருத்துவதற்குப் பலருடைய ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது எனவே பணம் கொடு என்று கேட்பார்கள் இந்த வெட்கங்கெட்டவர்கள். கைக்கூலியே அவர்களது இலக்கு. இவர்கள் கேட்கும் அளவுக்கு உள்நாட்டு முதலாளிகளால் கைக்கூலி கொடுக்க இயலவில்லை. கர்னாடகத்தில் ஒரு வானூர்தி நிலையம் அமைக்க ஒப்புதல் பெறுவதற்கு தன்னால் இயலாத அளவுக்குக் கைக்கூலி கேட்கிறார்கள் என்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாட்டாவே அத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது என்றால் பாருங்களேன். எனவே இவர்களையும் விடக் கூடுதல் கைக்கூலி தரத்ததக்க பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவோ உள்நாட்டு நிறுவனங்களுடன் மூலதனம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் என்று ஒன்றிலோ, கூடுதலாகவோ கூட்டு வைத்துக்கொண்டால்தான் ஒப்புதல் பெற முடியும் என்பதுதான் நிலை. இதை விரும்பாத வெளிநாட்டு நிறுவனங்கள் பின்வாங்குவதால்தான் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு “தாராளமயம்” இங்கு நடைபோடவில்லை. பெருங்கையான டெர்லைட் ஆலையின் நச்சுச் சூழலால் சுற்றிவாழும் மக்கள் துயரிழந்தும் உயிரிழந்தும் நடவடிக்கை எடுக்காத அரசும் “நய மன்றமும்” திருப்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் பல சிறு தொழிற்சாலைகளை மூடவைத்தன. அத் தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த மாற்று ஏற்பாடும் செய்ய நேரமும் வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கவில்லை. இவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இத்தனை தடங்கல்களையும் செய்துவிட்டு, நம் குடியரசுத் தலைவர்களும் அமைச்சர்களும் நம் அரசின் ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை நம் நாட்டுத் தொழில் முனைவோர் பின்பற்ற முன்வருவதில்லை என்று கூசாமல் மேடையேறிப் பொய் பேசுகின்றனர்.

முதலாளியத்துக்கு மாறாமல் நம்மைத் தடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் எனப்படும் உலக வாணிக குழுக்கள் ஏராளமான பணத்தை இங்கு பாயவிட்டு பல முனைகளிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஒற்றர்களை நாடெங்கும் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆதாயம்?

முதலாளிய விளைப்பு முறையில் தொழிலகம் கட்டவும் உயர் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவவும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் தொழிலாளர்களுக்கேற்ற அடிப்படை வசதிகளையும் உருவாக்கவும் அவற்றை முறையாகப் பராமரிக்கவும் ஏராளமான முதலீடும் நாளாவட்டச் செலவுகளும் தேவைப்படுகின்றன. ஒரே தொழிலகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு தங்களுக்குக் கூடுதல் சம்பளம், சலுகைகள் வசதிகள் வேண்டுமென்று வேலைநிறுத்தப் போராட்டம் செய்து முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தான் செய்திருக்கும் பெரும் முதலீடு செயலற்றுக் கிடப்பதைத் தவிர்ப்பதற்காக முதலாளி தன்னால் இயன்றவரை முயல்வார். தொழிலை மூடுவதை விட தொழிலாளர்களின் கேட்புகள் இழப்பேற்படுத்தும் அளவுக்குச் சென்றால் ஒழிய அத்தகைய முடிவுக்கு வரமாட்டார். இதைத்தான் தொழிலாளர் இனத்தின் “பகரம்(பேரம்) பேசும் வலிமை” என்பர். வீடுகளில் அல்லது சிறு பட்டறைகளில் வைத்துச் செய்யப்படும் தன் தொழில்கள், குறுந்தொழில்களில் “முதலாளி” என்ற பொருந்தாப் பெயர் கொண்ட உழைப்பாளிக்குக் கிடைக்கும் கூலி என்பது அவன் செய்த பண்டத்தின் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் இடுபொருட்களுக்காகச் செய்த முதலீடு, அதைக் கடனாகப் பெற்றிருந்தால் அதற்குரிய வட்டி, உதவிக்கு ஆள் வைத்திருந்தால் அவனுக்குரிய கூலி ஆகியவற்றைக் கழித்துக் கிடைப்பதேயாகும். இங்கு தன் கூலியை அதாவது தன் பண்டத்தின் விலையைக் கூட்டித் தரும்படி எவரையும் எதிர்த்து அவன் போராட முடியாது. வேலைநிறுத்தம் செய்தால் அவன் வயிறுதான் காயுமே யொழிய வேறெவருக்கும் இழப்பு கிடையாது. பகரம் பேசும் வலிமை என்பது அவனுக்கு அறவே கிடையாது. சந்தையைக் கையில் வைத்திருக்கும் வாணிகன் வைத்ததுதான் சட்டம். எனவே பண்டத்தின் அடக்கவிலையை(இதில் அவன் கூலியும் அடக்கம்) விடக் குறைத்து விற்றுவிட்டு அவன் பட்டினியும் கிடந்து கடனாளியாகவும் மாறலாம். அதன் மூலம் அவன் கந்துவட்டிக்காரனுக்கும் வாணிகனுக்கும் கொத்தடிமையாவான். அவனது இந்த இழப்பு வாணிகர்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும் இறுதியில் உலகவாணிகக் குழுக்களாலும் ஆதாயமாக வரவு வைக்கப்படுகிறது. வாணிகர்கள், கந்துவட்டிக்காரர்கள் பெறும் பங்கைத் தவிர்ப்பதற்கு அரசு உருவாக்கியுள்ள வங்கி உட்பட்ட பல்வேறு கடனளிப்பு நிறுவனங்களும் கூட்டுறவு அமைப்புகளும் பல்வேறு தொழில் வாரியங்களும் கழகங்களும் களத்திலுள்ளன. அவை விளைப்போனிடம் வட்டியும் பெற்றுக்கொள்கின்றன. தங்கள் அமைப்புகளிலுள்ள மாபெரும் ஊழியர் படையின் செலவையும் அவன் மீது சுமத்துகின்றன. அது போதாதென்று ஊழலும் கையூட்டும் “நல்லூதியமாக”(போனசாக) அவனுக்குக் கிடைத்துள்ளது. இப்போது தன்னுதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் விளைப்போர், குறிப்பாகப் பெண்கள் பணம் சேமிக்க ஊக்கப்படுகின்றனர். அவ்வாறு சேமிக்கப்பட்ட பணத்திலிருந்தே கடன் பெற்று தொழில் செய்து உருவாகும் பண்டங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றன, அல்லது அதற்கென இயங்கும் பிற நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்கின்றன. இந்தத் திட்டத்தின் பின்னணியில் “தாராளமயத்”துக்குத் தோதான சில கூறுகள் உள்ளன. இப்போது பல்வேறு வேலைவாய்ப்பு நலத்திட்டங்களின் பேரில் ஏழைகளுக்கு அரசு வங்கிகளின் மூலம் வழங்கும் கடனுதவிகள் முறையாகத் திரும்பச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வங்கிகள் சிக்கல்களுக்குளாகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு வங்கிகள் இங்கு நுழையப் பார்க்கின்றன. அரசுடைமை வங்கிகளை அயலவர்க்கு விற்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்ப்போர் முன்வைக்கும் கருத்து என்னவென்றால் இப்போது அரசுடைமை வங்கிகள் மூலம் நடைபெறும் “மக்கள் நலப்பணிகளை” அயலார் வங்கிகள் ஏற்றுச் செயற்படுத்தா என்பதாகும். எனவேதான் கடன்பெற்றுத் தொழில் செய்வதற்கு மாறாகச் சேமித்து அதிலிருந்து கடன்பெறும் பழக்கத்துடன் சொந்தத் தொழில் செய்வாரின் எண்ணிக்கையையும் பெருக்கிப் பலவழிகளில் அயலவருக்கு ஆதாயம் தரும் இந்தத் திட்டம் செயற்பட்டு வருகிறது. இப்போது கடன் மூலம் வங்கிக்கு வெளியே பணம் நிலுவையில் நிற்பதற்குப் பகரம் சேமிப்பின் மூலம் சொந்தத் தொழில் செய்வோரின் பணம் வங்கியின் கைகளுக்கு வந்து வங்கியின் வைப்பு(டெபாசிட்) நிலையை மேம்படுத்துகிறது. சேமிப்புக்குப் கொடுக்கும் வட்டியை விடக் கடனுக்குக் கூடுதல் வட்டி விதித்து ஆதாயம் பெறலாம். சொந்தத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையைக் கூட்டி அவர்களின் விளைப்புகளை வாங்கி விற்பதன் மூலம் உலக வாணிகக் குழுக்களுக்கு ஆதாயம்.

இப்படி எல்லாம் கூறித் தொடங்கிய இந்தத் தன்னுதவிக் குழுக்கள் இப்போது அயல்நாட்டு நிறுவனங்களின் முத்திரையோடு விற்கப்படும் பல்வேறு நுகர்பொருட்களை நம் பெண்கள் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்ப்பனவாகவே செயற்படுகின்றன.

இது போலக் கிறித்துவத் திருமண்டலங்கள், மறை மாவட்டங்கள் மற்றும் எண்ணற்ற “ஆர்டர்கள்” எனப்படும் தொண்டமைப்புகள் மூலம் ஏழை எளிய பெண்களைத் திரட்டி அவர்கள் மூலமாகப் பண்டங்களைச் செய்து அவர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அல்லது விலையைக் கொடுத்து வாங்கி வெளிநாடுகளில் விற்றுக் கொள்ளை ஆதாயம் பெறுகின்றனர். இந்த ஆதாயம் நூறு மடங்கு வரை செல்லும். இவ்வாறு உழைப்பாளர்களின் வருவாயைப் பறிப்பதன் மூலம் அவர்களது நுகர்வும் அதனால் வாழ்க்கைத் தரமும் குறைகின்றன. அதனால் உள்நாட்டில் மிஞ்சும் பண்டங்கள் ஏற்றுமதிக்கென்று குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இத் தொண்டு நிறுவனங்கள் கிறித்துவ நிறுவனமாயினும் அல்லவாயினும் இவையனைத்தும் முதலாளியத்துக்கு எதிரான ஓர் அரைகுறை மார்க்சியத்தைக் கற்பித்து மக்களுக்கு முதலாளியத்தின் மீது வெறுப்பை ஊட்டுகின்றன.

நேற்றுவரை பெருந்தொழிலகத் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துத்தான் அனைத்துக் கட்சிகளும் செயற்பட்டு வந்தன. முதலாளிகளின் ஆதாயத்திலிருந்துதான் தொழிலாளர்களுக்கு நலன்கள் பெறப்பட்டன என்று கருதப்பட்டாலும் நம் நாட்டில் விலை உயர்வு கண்காணிக்கப்படாததால் வாடிக்கையாளரிடமிருந்து பறித்து ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை முதலாளியே வைத்துக்கொள்வதாகத்தான் ஊதிய உயர்வுப் போராட்டங்களின் “வெற்றி” அமைகிறது. புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு விளைப்பைப் பெருக்கினால் மட்டுமே மக்களைக் கொள்ளையடிக்காமல் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியம் பெற முடியும். அல்லது முதலாளியின் ஆதாய விகிதம் குறைக்கப்பட வேண்டும். இரண்டுமே இங்கு நடைபெறவில்லை. அதே வேளையில் அரசுடைமையாக்கப்பட்ட தொழில்களில் இழப்பு ஏற்பட்டாலும் தொழிலாளர்களுக்கு நலன்களும் சலுகைகளும் அதுவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் அடம்பிடிக்கின்றன. ஆட்சியாளர்களின் தேர்தல் நடுக்கத்தால் வெற்றியும் பெறுகின்றன. எ-டு. அரசுப் போக்குவரத்து ஊழியர்கள். அரசுடைமையானால் முதலாளிகள் கைக்குச் செல்லும் ஆதாயம் அரசுக்குக் கிடைக்கும்; அதன் மூலம் மக்களின் வரிப்பளு குறையும் என்று கூறப்பட்டது. இன்று தலைகீழாக அரசுடைமை நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்யவும் அவற்றின் ஊழியர்களுக்குக் கேட்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கவும் மக்களின் மீது வரிச்சுமையும் கடன் சுமையும் ஏறிக்கொண்டே போகின்றன. தொழிற்சங்கங்கள் இந் நிறுவனங்களுக்கு அரசு “மானியம்” வழங்கவேண்டுமென்று கேட்டுப் பெற்றுவிடுகிறார்கள். இதனால்தான் தொழிற்சங்கங்களும் பொதுமை பேசும் கட்சிகளும் மக்களுடைமை(தனியார் உடைமை)யை எதிர்க்கின்றன. அரசுடைமை நிறுவனங்களைப் போல் எந்த மக்களுடைமை நிறுவனமும் இழப்பைச் சுமந்து கொண்டே ஊழியர்களுக்கு மேலும் மேலும் சலுகையளிக்க இயலாது. அவை உயிர் வாழவே முடியாது. (தனியார் உடைமை என்ற சொல்லில் அயலாரும் அடங்குகின்றனர். பொதுமைக் கட்சிகளும் ஆளும் கணங்களும் அயலாருக்கும் உள்நாட்டினருக்கும் உள்ள வேறுபாட்டை மறைத்து நம்மை ஏமாற்றுகின்றன. எனவே உள்நாட்டுத் “தனியார்” நிறுவனங்களை மக்களுடைமை என்ற அடைமொழியால் குறிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அரசுடைமை X மக்களுடைமை)

அரசுடைமை நிறுவனங்களின் இழப்புகளுக்குக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர்களின் அட்டூழியங்களும் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களும்தாம் காரணங்கள். இந் நிறுவனங்கள் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் கடமை உணர்வற்ற பொறுப்பில்லாத் தொழிலாளர்களுக்கும் பொன்முட்டையிடும் வாத்து. தொழிலாளர் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் நச்சுச் கிடங்குகள். நாம் எடுத்துக்கொண்ட அரசு போக்குவரத்து நிறுவனங்களின் வண்டிகளையும் மக்களுடைமை வண்டிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பணிகளின் தரத்தை அரசுடைமையின் மூலம் எந்த அளவுக்குப் பறிகொடுக்கிறோம் என்று.

இவ்வாறு “ஒருங்கிணைக்கப்படத்தக்க” துறைகளின் தொழிலாளர்கள் ஆதாயம் பெறும் போது தாமே ஒருங்கினைய வழியற்ற உதிரித் தொழிலாளர்களை விடக்கூடாதல்லவா? (முதலாளிய விளைப்பு முறையில் அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே களத்தில் இணைகிறார்கள் என்பதைத் தொழிலாளர் ஒருங்கிணைவுக்கு வழி என்று நம் கூறியதை நினைவுபடுத்திக் கொள்க) அதனால் வெளிநாட்டுப் பண உதவியுடன் இயங்கும் சிலர் இத்தகைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள் என்று தொடங்கி பால்வினை(விபச்சார)த் தொழிலாளர் உட்பட ஒரு துறை விடாமல் இது விரிவடைந்துள்ளது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு போராட்டங்கள் நடத்தி அந்தந்தத் துறைப் பணியாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்கப் போராடி வெற்றியும் ஈட்டுகின்றனர். உடலுழைப்புத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், வாணிகர்கள் என்று வாக்கு வங்கியாகத் திகழத்தக்கவரும் ஆட்சியாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றவர்களுமான அனைத்துத் தரப்பினரின் வேண்டுகைகளும்(கோரிக்கைகளும்) ஏற்கப்படுகின்றன . ஒரு தொழிலாளி இறந்தால் ஏதத்துக்கு(விபத்துக்கு) உட்பட்டால் நோய்வாய்பட்டால், மகள் பருவமெய்தினால், மகளுக்குத் திருமணமென்றால் இவ்வளவு பணம் என்று இலவயமாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறெல்லாம் உதவுவது மனித நேய அடிப்படையிலும் மக்கள் நல ஆட்சி என்ற வகையிலும் தக்கதாய்த் தோன்றும். ஆனால் ஓர் உண்மையைத் தெரிந்துகொண்டால் இதிலுள்ள கொடுமை புரியும். கேரளத்தில் கட்டடத் தொழிலாளர் நலநிதிக்கு ஒவ்வொரு தொழிலாளியும் செலுத்துவதற்குச் சமமான பணத்தை அரசும் செலுத்துகிறது. அந்த அளவுக்குத்தான் அவருக்குப் பலன்கள் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் கட்டடம் கட்டுவோர் அதற்கு உரிமம் எனப்படும் இசைவு பெறும் போது அவரிடமிருந்து கணிசமான தொகை நலநிதியாகத் தண்டப்படுகிறது. எந்தத் தொழிலாளிக்கு எவ்வளவு என்ற வரைமுறையில்லை. அரசியல் தொடர்பு உள்ளவர்ககும் கைக்கூலி கொடுப்பவர்க்கும் அவர் தொழிலாளியில்லையாயினும் “நல உதவிகள்” கிடைக்கும். இது ஓர் ஊழல் களம்.

இதில் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். தொழிலாளர் இயக்கம் மார்க்சியத்தோடு தொடர்புபடுத்தப்படுவது வழக்கம். மார்க்சியம் பொதுமை என்ற அரசியல் – பொருளியல் – குமுகியல் உலக அமைப்பைப் பரிந்துரைக்கிறது. அது, பகுத்தறிவும் மனிதப் பண்பும் மனித நேயமும் தன்மானமும் பொறுப்புணர்வும் போன்ற முழுமையான மக்களாட்சிப் பண்பு நிறைந்த மக்களைக் கொண்ட ஓர் உலகை அமைப்பதை மனித குலத்தின் இலக்காகத் தந்ததுள்ளது. ஆனால் அதன் பெயரால் நடத்தப்படும் தொழிலாளர் இயக்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பண்பாட்டை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் சிதைத்து வைத்துள்ளன. ஒரு தொழிலாளி எவருக்காவது அல்லது பொதுவிலாவது தவறிழைத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் உடனே வேலை நிறுத்தம், மறியல், வன்முறை என்ற காட்டுவிலங்காண்டி நிலைக்குச் சென்று விடுகின்றனர். இதன் மூலம் தொழிலாளர் வகுப்பு மீதும் சங்கங்கள் மீதும் மக்களுக்குப் பெரும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதைவிடப் பெருங்குறை, தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டை இச் சங்கங்கள் வளர்த்தெடுக்காதது. இன்று தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் ஈட்டும் வருவாயைக் குடியிலும் பரிசுச் சீட்டுகளிலும் அழிக்கிறார்கள். பெண்கள் வேலை செய்யும் குடும்பங்களில் அவர்கள் வருவாய்தான் குடும்பம் நடத்தப் பயன்படுகிறது. அந்தப் பணத்தையும் பறித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. குழந்தைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு விடுவது முதலியவற்றுக்குக் காரணமே இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான குடும்பத் தலைவர்கள்தாம். ஆனால் நம் தோழர்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. குடிப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறார்கள் போலும். முன்பு காந்தி குடியால் ஏழைகளின் வாழ்வு சிதைவுறும் கொடுமையை எடுத்துரைத்து அதற்கெதிராகப் போராடிய போது, அவர் முதலாளிகளின் சுரண்டலை மறைத்துத் திசைதிருப்புவதற்காக அதைச் செய்கிறார் என்றனர். இன்று ஒட்டு மொத்ததமாகக் சாராயத்துக்கு எதிராகப் போராடாமல் “கள்ள”ச் சாராயத்துக்கு எதிராக மட்டும் போராடுகின்றனர், ஆக, “நல்ல” சாராயமாகிய “உள்நாட்டில் செய்யப்படும் அயல்நாட்டுச் சாராயத்”தைக் குடித்துத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் குமுகத் தரத்தையும் ஒட்டுண்ணிகளுக்கு இணையாக வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றனர் போலும் . இதில் அயல்நாட்டுச் சாராய நிறுவனங்கள், கள்ளச் சாராயம் காய்ச்சும் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள போட்டியில் இவர்கள் நிலைப்பாட்டையும் நமக்குக் கோடி காட்டுகிறது.

இந்த இடத்தில் குடிப்பது பற்றி நம் குமுகத்தில உருவாக்கி வைத்துள்ள ஒரு தீய கருத்தை நாம் அலச வேண்டியுள்ளது. உடலுழைப்பில் ஈடுபடுவோர் உழைப்பால் உண்டான உடல் நோவைத் தீர்த்துக் கொள்ள குடிப்பது இன்றியாமையாதது என்பது அந்தக் கருத்து. குடிப்பவன் உண்மையில் தன்னினைவின்றி உடலைத் தள்ளாட விடுவதாலும் கீழே விழுந்து புரள்வதாலும் தன் உடலுக்கு ஊறு விளைவிக்கிறான். பசியுணர்வு குன்றி உடல் நலம் கெடுகிறது. மறுநாள் காலையில் தலை கிறுகிறுப்பும் உடல் சோர்வும் ஏற்பட்டு அவன் செயல்திறன் குறைகிறது. மாறாக உழைப்பினால் வரும் பசிக்கேற்ற உணவை வயிராற உண்டபின் அவனுக்கு வரும் தூக்க மயக்கம் சாராயத்தால் வரும் மதிமயக்கத்தை விட எவ்வளவு உயர்வானது? இனிமையானது? அது சுவைத்துணரத்தக்கது. அவ்வாறு உறங்கி விழிந்த பின் அவனது உடலும் மனமும் எவ்வளவு புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் ஊக்கத்துடனும் செயற்படும்? இவற்றை அறியாத, உழைத்தறியாத சோம்பேறி வாழ்க்கையினர், உழைக்காததால் உடல் சோர்வே அறியாமல் தூக்கம் வராமல் சாராயம் அருந்திப் பழகிய சோம்பேறிகளான “அறிஞர்”களும் தலைவர்களும்தாம் குடி உடல் நோவைத் தீர்க்கும் என்ற பொய்யான தீக் கருத்தைப் பரப்புகின்றனர். கருணாநிதி 1971இல் மதுவிலக்குச் சட்டத்தின் செயற்பாட்டை “நிறுத்தி வைத்ததற்கு” முன்பு 20 ஆண்டுகள் மிகப் பெரும்பாலான மக்கள் குடியையே மறந்திருந்தனர். தொழிலாளர்களும் சாராயமோ கள்ளோ குடிக்காததால் உடல் நோவால் துடிக்கவில்லை. தன் கட்சிக்காரர்களும் கள், சாராயத்துக்கு எதிராக ஒரு காலத்தில் பேரியக்கம் நடத்திய பேரவைக் கட்சியினரும் கொடுத்த நெருக்குதலால்தான் கருணாநிதி இந்த நடவடிக்கையை எடுத்தார். அதுவரை மதுவையே அறியாத இளைய தலைமுறையினரைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார். தி.மு.க.வினருக்கும் பேரவைக் கட்சியினருக்கும் கள், சாராயக் கடைகள் நடத்திப் பணம் சேர்க்க வேண்டுமென்ற திட்டம் இருந்தது. நம் பொதுமைக் கட்சித் தோழர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்காதது ஏன்?

அடுத்தது பரிசுச் சீட்டு “விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற முழக்கத்துடன் “பேரறிஞர்” அண்ணாத்துரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கேடு தரும் திட்டம் தமிழகத்தின் உயிராற்றலையே உறிஞ்சி நிற்கிறது. தங்கள் வருவாயை முறையாகச் செலவு செய்து சேமித்து வளம் காண விரும்பாத, தன்னம்பிக்கையற்ற மன நோயாளிகளின் புகலிடங்களாகப் பரிசுச் சீட்டுக் கடைகள் விளங்குகின்றன. பல்வேறு பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளைப் பற்றிய ஒரு புள்ளிக் கணக்கு ஆய்வை மேற்கொண்டால் தமிழகத்தில் பரிசுச் சீட்டு விற்கும் கடைகளே முதலிடம் பெறும். பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் பரிசுச் சீட்டை பொறுத்தவரை போதை அடிமைகள் நிலைக்கு வந்து விட்டனர். இங்கு தமிழக அரசை விட வெளி மாநில அரசுகளும் அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தமிழகத்திலிருந்து அள்ளிச் செல்லும் பணமோ ஏராளம். போலிச் சீட்டுகளால் மக்களை ஏமாற்றுவோர் ஒரு புறம், மார்வாரிகள் வருமான வரியிலிருந்து தப்ப பரிசுச் சீட்டு பயன்படுகிறது .

திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்குத் தங்கள் ஆற்றலுக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவழிப்பதாலும் தொழிலாளர் வகுப்பு வறுமையெய்திக் கடன்பட்டுச் சிரழிகிறது. சங்கம் என்ற அமைப்பின் கீழ் அவர்களுக்கு இத் தவறான பழக்கங்களிலிருந்து விடுபடும் பயிற்சிகளை அளிக்கலாம். ஆனால் ஆயுத பூசை போன்ற விழாக்களை ஆரவாரத்தோடு நடத்துவதும் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணத்தை வீணடிக்க நல்லூதியம்(போனசு) கேட்டுப் போராட வைப்பதுமாக தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டைச் சீரழிக்கின்றன சங்கங்கள். நல வாரியங்கள் தொழிலாளர்களின் குடும்பச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களும் ஊதாரித்தனம், குறிப்பாகக் குடி, பரிசுச் சீட்டு, குடும்ப நிகழ்ச்சிகளிலும் சமய நிகழ்ச்சிகளிலும் பொருட்களை வீணடித்தல் என்ற வகையில் அவர்களுக்கோ நாட்டுக்கோ பயன் தராத வகையிலும் ஒட்டுமொத்தப் பண்பாட்டுச் சீரழிவை நோக்கித் தொழிலாளர்களை இட்டுச் செல்கின்றன.

இந்த முற்போக்கர்களின் இரண்டகம் தவிர்த்து தொழிலாளர்களின பண்பாட்டு வீழ்ச்சிக்கு வேறொரு உளவியல் அடிப்பையும் உண்டு. உடலுழைப்பையும் உடலுழைப்போரையும் இழிவாகப் பார்த்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது நம் மரபு. அதனால் அம் மக்களுக்கு இயல்பாகவே தம் மீதும் தம் தொழில், வாழ்நிலை ஆகியவை பற்றியும் இழிவுணர்ச்சியும் வெறுப்பும் உள்ளது. குமுகத்தின் உயர் மட்டத்திலுள்ளோர் போன்று தங்களை மென்மையாக, உயர்ந்த நடத்தையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவாவோ அவ்வாறு காட்டிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோ அவ்வாறு உண்மையாகவே நடந்து கொண்டாலும் குமுகம் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோ அவர்களுக்கு இல்லை. உழைப்பின் மீதும் உழைப்போர் மீதும் நாம் மதிப்பு வைத்து அவர்களுக்குக் குமுகத்தில் உள்ள முகாமையான இடம் பற்றிய உண்மையை உணர்த்திக் காட்டினால்தான் அவர்களை இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளிலிருந்து மீட்க முடியும்.

இவ்வாறு நாம் பட்டியலிட்டுள்ள மேற்கூறிய தடைகளை உடைத்து முதலாளியப் பொருளியலை அமைத்தால் அதன் மூலம் உருவாகும் கூடுதல் பண்டங்களை எங்கு எவ்வாறு விற்றுமுதலாக்குவது? இங்குதான் ஓர் அடிப்படைப் பொருளியல் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று உலகில் மக்கட் தொகையில் ஒரு குறுகிய குழுவே நுகர்கிறது. பிறரெல்லாம் பல்வேறு காரணங்களால் தங்கள் வாங்கும் ஆற்றலை இழந்து நிற்கிறார்கள். இந்தப் பெரும்பான்மைப் பண்டங்களும் உலக வாணிகக் குழுக்களால் கையாளப்படுகின்றன. இது இன்று நேற்று உருவானதல்ல. தொல்பழங்காலத்திலேயே உருவானதாகும். கழக இலக்கியங்கள் காட்டும் காலத்திலேயே நம் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னரும் கள்ளைக் கொடுத்தே மக்களிடமிருந்து பண்டங்களைப் பெற்றனர். யானை மருப்பு(தந்தம்) தொடங்கி பல்வேறு விலைமதிப்புள்ள மலைச் சரக்குகளைக் கள்ளைக் கொடுத்தே நம் அரசர்கள் பெற்றனர். கொற்கையில் மீனவர் குளித்தெடுத்த முத்துக்களைக் கள்ளைக் கொடுத்துப் பெற்றான் பாண்டியன். இப் பண்டங்கள் கப்பலேறி கிரேக்கத்துக்கும் உரோமைக்கும் சென்றன. அங்கிருந்து திராட்சை மதுவும் கண்ணாடி, பீங்கான் பொருட்களும் தமிழ்நாட்டு அரண்மனைகளையும் வளமனை(பங்களா)களையும் வந்தடைந்தன. மதுவைக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்க யவன மகளிரும் இறக்குமதி செய்யப்பட்டனர். ஆனால் அப் பண்டங்களைத் திரட்டிக் கொடுத்த மலைவாழ் மக்களும் அலைவாய்க்கரை(கடற்கரை) மக்களும் காட்டில் காய்கனிகள், எலி, முயல்களையும் மீனையும் நண்டையும் தின்று வாழ்ந்தனர். உடுத்த உடைதான் நமக்குத் தேவையில்லையே! தாழ்ச்சீலை(கோவணம்) போதுமே! இயற்கை தந்த “வரம்” அல்லவா அது, அதாவது நம் நாட்டுத் தட்பவெப்பம். அதனால்தான் வெள்ளையரைப் போல் சட்டையும் முழுக்காற் சட்டையும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்த “மனித நேயர்கள்” பலர் திறந்த உடம்புதான் நம் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் பனியிலும் பாடுபடும் உழைப்பாளிகளுக்கு நம் “மரபுப்படி” ஏற்றது என்று அறிவுறுத்துகிறார்கள்! அதே நிலையை இன்றும் தொடர்ந்து இங்குள்ள பாட்டாளி மக்களின் நுகர்வு மட்டத்தைத் தாழ்த்தி அவர்களை வறுமைக்குள்ளாக்கி அவர்களது பகரம் பேசும் ஆற்றலை அழித்து அவர்களது உழைப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த விலைக்குத் தட்டிப்பறிப்பதற்காகத்தான் முதலாளிய விளைப்பு நம் நாட்டில் வேர் கொண்டு விடாமல் தடுக்க இத்தனை முனைகளில் முயல்கிறார்கள்.

உலக மக்களில் மிகப் பெரும்பாலான மக்களை விலங்குகள் போல் வாழ்க்கையின் அடிமட்டத்தில் அமிழ்த்தி ஒரு சிறு குழுவுக்கு உலக வளங்களையெல்லாம் பகிர்ந்து கொடுக்கும் உலக வாணிகக் குழுக்களின் பிடியில்தான் இன்று வரையிலான உலகின் அரசுகளெல்லாம் சிக்கியிருந்துள்ளன. அரேபியர்களிடமிருந்து வெள்ளையர் தம் கடலாதிக்கத்தை மீட்ட போது அதன் உடனிகழ்வாக தொழிற்புரட்சியும் முதலாளிய வடிவில் வல்லரசியமும்(ஏகாதியத்தியம்) உருவாயின. அப்போது தோன்றிய பொருளியல் கோட்பாடுகள் உலக வாணிகத்தை, அதாவது ஏற்றமதி -இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டே தோன்றின. பணத்துக்காகத் தங்க ஈடு, நாணயமாற்று குறித்த அடிப்படை விதிகள் இந்த நோக்கிலேயே உருவாயின. பண்டத்தைப் படைத்த நாட்டு மக்களின் நுகர்வும் தம் நாட்டுப் பண்டங்கள் மீது அவர்களுக்கிருந்த பிரிக்க முடியாத நுகர்வு உரிமையும் எவராலும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அதனால்தான் எந்த மூலப் பொருளும் இல்லாத சப்பான், குடிக்கும் தண்ணீரைக் கூட இறக்குமதி செய்யும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் மக்கள் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை எய்த முடிந்திருக்கும் முரண்பாட்டை நாம் காண வேண்டியுள்ளது.

மக்களாட்சி என்பதன் உண்மையான நோக்கம் அல்லது அடிப்படை ஒரு நாட்டின் வளங்கள் மீது அம் மக்களுக்குள்ள பிரிக்க முடியாத உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும். வாக்குரிமை, கருத்துரிமை, செயலுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்ற எந்த உரிமையை விடவும் இந்த உரிமைதான் முதலிடம் பெற வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றாத எந்த உரிமையாலும் பயனில்லை. இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி மக்களின் கையில் வாக்குச் சீட்டைக் கொடுத்து அவர்கள் “தேர்ந்தெடுக்கும்” ஆட்கள் பாராளுமன்றம் என்ற ஓர் அவையில் மேற்கொள்ளவிருக்கும் முடிவுகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வகுப்பு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அவை மக்களுக்குப் பெருங்கேடு விளைவிப்பவையாயிருந்தாலும் முன் கூட்டியே ஒப்புதல் கொடுப்பதாகும். தேர்தலில் போட்டியிடுவோரை முடிவு செய்யும் உரிமை மக்களுக்கில்லை. கட்சியும் அரசு நிறுவனமான தேர்தல் ஆணையமுமே அதைச் செய்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மக்களுக்குக் கட்டுப்பட்டவரல்ல, கட்சிக்குக் கட்டுப்பட்டவர், அதாவது கட்சியின் பேராளர். இத்தகைய ஆட்சியை எப்படி மக்களாட்சி என்று கூற முடியும்? அத்துடன் பராளுமன்றம் மேற்கொள்ளும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை சட்ட முன்வரைவு வடிவிலும் பிறவகையிலும் தீர்மானிப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளே. உண்மையில் பாராளுமன்ற மக்களாட்சி என்பது பாராளுமன்றம், தேர்தல், கட்சிகள், கொள்கைகள் என்ற முகமூடிகளை அணிந்து கொண்ட அதிகாரிகளின் ஆட்சியே, அதாவது அரசின் ஆட்சியே, “அரசாட்சியே”, மக்களாட்சி அல்ல.

உண்மையான மக்களாட்சி என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பண்டப் படைப்பிலிருந்து தொடங்க வேண்டும். முதலாளிய விளைப்பு முறையில் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களிலிருந்து பெறும் நல்னகளின் ஒரு பகுதியை அவர்களுக்கு அந் நிறுவனத்தின் மூலதனப் பங்குப் பத்திரமாக வழங்கச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்தும் தாங்கள் பணியாற்றும் அல்லது வேறு நிறுவனப் பங்குகளிலும் முதலிடலாம். இவ்வாறு அவர்கள் ஒரே நேரத்தில் முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும் செயற்பட முடியும். தொழிற்சாலைகளின் ஆள்வினையை (நிர்வாகத்தை) முடிவு செய்வதில் அவர்கள் பங்கேற்க முடியும். சம்பளம் போன்ற உடனடிப் பலன்கள், ஆதாய வடிவிலான சேமிப்பு, அதாவது சம்பளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு உறுதுணை புரிந்து அதன் மூலம் தன் பங்கை வளர்த்துக் கொள்வது என்ற நீண்டகால நலன்கள் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தின் மூலம் பொருளியல், பண்ட விளைப்பு, நுகர்வு, சேமிப்பு, ஆள்விணை இவையனைத்தும் தழுவிய அரசியல் அறிவும் விழ்ப்புணர்வும் அவற்றின் அடிப்படையிலமைந்த அரசியல் செயற்பாடும் என்று மக்களாட்சிக்கு இன்றியமையாத அடிப்படைத் தகுதிகளையும் பயிற்சிக்களையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதோடு கூடவே கூட்டுப் பொறுப்புணர்வும் கூட்டுச் செயற்பாடும் பிறரை மதிக்கும் பண்பும் அவர்களிடையில் உருவாகும். இந்த மக்களாட்சியிலும் ஏதோவொரு வடிவிலான தேர்தல் முறை இருக்கலாம். ஆனால் அவ்வாறு தேர்த்தெடுக்கப்பட்டவர்களை மக்களின் கூட்டு நடவடிக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஏற்றுமதி - இறக்குமதி, உலக வாணிகம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். உள்நாட்டு அனைத்துத் தேவைகளையும் அங்குள்ள மூலவளங்களைக் கொண்டே நிறைவேற்றுவதே உண்மையான அறிவியல் - தொழில்நுட்பங்களின் இலக்கணம் என்றாக வேண்டும். உள்நாட்டு மக்களின் தேவைகளையும் மீறிக் கிடைக்கும் மீட்கத் தக்க வளங்களை மட்டும் பிற நாட்டு மக்களுடன் நேரடியாகப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை உருவாக வேண்டும். இந்த அடிப்படையை நோக்கிய ஒரு பொருளியல் கோட்பாட்டை உருவாக்க வேண்டும்.

நம் கடலோரத்தில் வாழும் மக்களின் தேவைகளை இன்றைய விளைப்புமுறை, தொழில்நுட்பங்கள், வாணிக முறைகள் ஆகியவற்றால் நிறைவு செய்ய இயலாமையால் அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் சூழ்நிலையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்று அலசத் தொடங்கினோம். இந்தச் சிக்கலை மீனவர்களின் சிக்கலாக மட்டும் தனித்துப் பார்க்க இயலாது; இதனுள் அனைத்து மக்களின் பண்பாடு, தொழில்நுட்பங்கள், மரபுகள், பொருளியல் நிலை, குமுக அமைப்பு ஆகிய அனைத்தும் பின்னிக் கிடக்கின்றன; உண்மையில் பிற மக்கள் அனைவருக்கும் உரிய சிக்கல்களுக்கு நடுவில் மீனவர்கள் சிக்கிக் கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். தமிழகம் அளாவிய முதலாளிய விளைப்பு முறைதான் இந்த ஒட்டுமொத்தச் சிக்கலின் தீர்வு என்பதையும் அதை எய்துவதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் தடைகளையும் அவற்றை எவ்வாறு தகர்க்கலாமென்பதையும் பார்த்தோம். இப்போது மீண்டும் கடற்கரைக்கு வருவோம்.

மீன்பிடிப்பதற்கு இன்று விசைப்படகுகள் புழக்கத்தில் வந்தாலும் இன்னும் கட்டுமரங்களே கூடுதலாகத் தொழிலில் உள்ளன. இதனால் விசைப் படகுகள் கூட துறைமுகங்களோ இறங்கு தளங்களோ இன்றி வெறும் கடல் மணலிலேயே “மடியை” இறக்குகின்றன. நம் நாட்டில் நாம் நிலத்தை எவ்வாறு வைத்திருக்கிறோமோ அது போலத்தான் கடற்கரையையும் திறந்த கழிவறையாக வைத்துள்ளோம். அதனால் மீனெனும் உணவுப் பண்டம் அதற்குத் தேவையான தூய்மையுடன் கையாளப்படவில்லை. மீன்பிடித் துறைமுகங்களும் தூய்மையான நிலையில் பேணவோ கையாளவோ படவில்லை. அதனால்தான் நம் நாட்டுக் கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அவை தூய்மையான நிலையில் கையாளப்படவில்லை என்று குறை கூறுகின்றன. ஏற்றுமதி சார்ந்திருக்கும் மனநிலையை நாம் வளர்த்து விட்டதனால் இதைக் காட்டி நம்மைக் கையேந்தும் நிலைக்கு அயலவர்கள் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்காக என்றில்லாமல் நமக்காகவும் நாம் நம் உணவுப் பொருட்களைத் தூய்மையான நிலையில் கையாள வேண்டும்.

கடலுணவுப் பொருட்கள் என்றில்லை, நாம் உண்ணும் காய்கறிகள், கீரைகள் என்று அனைத்துமே தூய்மையற்ற சூழ்நிலையில் விளைக்கப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் கடவப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் விற்கப்படுகின்றன. தினசரிக் சந்தைகள் எனப்படும் நாளங்காடிகள் தூய்மைக் கேட்டின் பிறப்பிடங்களாக உள்ளன. மழைக் காலங்களில் அவற்றினுள் நடப்பதற்குத் தமிழர்கள் போன்ற “தனிப் பிறவிகளால்”தான் முடியும். பல நகரங்களில் நாளங்காடிகள் சாலையின் இரு மருங்குகளிலும்தாம் கூடுகின்றன. சாலையில் ஒடும் பல்வேறு ஊர்திகள் கிளப்பும் புழுதி, மழைக்காலங்களில் அவை அள்ளி வீசும் சேறும் சகதியும், சாலையின் இரு மருங்குகளிலும் உள்ள கட்டடங்களிலிருந்து வெளிவரும் கழிவுகள், அங்காடி கூடும் முன் அவ்விடத்தில் மக்கள், கழிக்கும் கழிவுகள் என்பவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் உணவு நம் தொண்டைக்குள் இறங்காது.

இந்த நிலையில் உழவர் சந்தைகளைக் கருணாநிதி அறிமுகம் செய்துள்ளார். இனி மீனவர் சந்தையும் அறிமுகம் செய்யவுள்ளார். அவற்றைப் பற்றிச் சில கூறியாக வேண்டும்.

வாணிகன் என்பவன் மனித இனத்தில் ஓர் இன்றியமையாத சூழலில் தோன்றியவன். மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே இயற்கையிலிருந்து திரட்டிப் பயன்படுத்திவந்தனர். தாங்கள் வாழும் பகுதிகளில் வளங்கள் போதாதபோது அடுத்த இடம் நோக்கி நகர்ந்தனர். புதிய இடத்தில் ஏற்கெனவே மக்கள் கூட்டம் இருந்தால் இரு கூட்டங்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. தொடர்கதையான இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு பகுதியில் கிடைக்காத, ஆனால் இன்னொரு பகுதியில் தேவைக்கு மேல் கிடைக்கின்ற பொருட்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். இதுதான் நில எல்லைகளும் அதனடிப்படையிலான தேசியங்களும் உருவான பொருளியல் அடிப்படை. இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களுடன் பண்டங்களை மாற்றிக் கொள்ளும் நிலை வந்ததும் அவ்வாறு பண்டங்களைக் கொண்டுசெல்லவும் மாற்றுப் பண்டங்களை வாங்கி வரவும் ஒவ்வொரு குழுவிலும் தனித்தனி ஆட்கள் அல்லது குழுக்கள் உருவாயினர். அடுத்த கட்டமாக இந்த நிகழ்முறை விரிவடைந்த போது தன்னிடம் இருக்கும் பொருளைத் தேடும் இன்னொரு குழுவிடம் தான் விரும்பும் பொருள் இல்லாதிருந்தால் அதே போல் தான் விரும்பும் பொருளை வைத்திருக்கும் மூன்றாவது ஒரு குழுவுக்குத் தன்னிடம் இருக்கும் பொருளின் தேவை இல்லாதிருந்தால் இந்தப் பரிமாற்றம் சிக்கலாகிறது. அப்போது பண்டங்களைச் சுமந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட குழுவினரை அணுகி ஒன்றோடொன்று மாற்றி இறுதியில் தாம் விரும்பும் பண்டத்தைத் பெற வேண்டும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத்தான் பணம் என்ற ஒரு செயற்கைச் செல்வம் மனிதனால் படைக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு குழுக்களிலும் பண்டப் பரிமாற்றத்துக்கென்று ஒதுக்கப்பட்ட தனி மனிதர்கள் இணைந்து வாணிகக் குழுக்கள் உருவாயின. பணம் அனைத்துப் பண்டங்களோடும் மாற்றத்தக்கது. தன்னிடம் இருக்கும் பொருளுக்குப் பணத்தையும் பணத்துக்குத் தனக்கு வேண்டும் பொருளையும் எளிதில் மாற்றிக்கொள்ள முடிந்தது. அனைத்துப் பொருட்களும் குவியும் அங்காடிகள் உருவாயின. பணம் முதலில் உப்பு, மாடு, தோல் ஆகிய வடிவங்களில் இருந்தன. பின்னர்தான் பொன்மத்தில்(உலோகத்தில்) செய்யப்பட்டு நாணயங்களை வாணிகக் குழுக்கள் வெளியிட்டன. அந் நாணயங்கள் குறிப்பிட்ட வடிவங்களில் இருந்தன. உருண்டை வடிவத்தில் சிறிது தட்டை, வட்டத்தில் சிறு ஓட்டை போன்றவை அந்த வடிவங்கள். நாளடைவில் அரசர்கள் தலையிட்டு நாணயங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டனர். இதனை வாணிகக் குழுக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் அரசன் நாணயங்கள் அச்சிடும் வேலையைத் “தம்பட்டம்” (தன் + பட்டம்) அடித்தல் என்று அழைத்தனர். “தம்பட்டம்” அடித்தல் ஒரு கேலிச் சொல்லாய் இருப்பது அதனால்தான் போலும்.

உலகில் தொலைவிலுள்ள பகுதிகளை வாணிகர்கள்தாம் இணைத்தனர். பெரும் பேரரசுகளுக்கு வழிகோலினர். இயற்கை வழிகளான கடல், ஆறுகள் மூலம்தான் இது தொடக்கத்தில் இயன்றது. உலகின் மிகத் தொன்மையான அசர மரபான பாண்டிய மரபு மீனவர்களால் அவ்வாறுதான் அமைந்தது. உள் நாட்டிலும் வாணிகர்களால்தான் அரசுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வெவ்வேறு நிலப்பகுதிகளை இணைக்கும் பாதைகளை அவர்கள்தான் வகுத்தனர். எடுத்துக்காட்டாக மனிதன் கடக்க வொண்ணாத பாலை நிலத்தை ஒருபுறம் முல்லை நிலத்திலிருந்தும் மறுபுறம் மருத நிலத்திலிருந்தும் கடந்தவர்கள் வாணிகர்களே. அவர்களின் போக்குவரத்தின் விளைவாகவே பாலை நிலத்தின் இரு மருங்கிலுமிருந்து வழிப்பறிக் கள்ளர்கள் பாலை நிலத்தில் குடியேறினர். இதுவும் தமிழ்ப் பொருளிலக்கணம் நமக்குக் காட்டும் சான்று. ஆக நிலத்திலும் ஆட்சியமைத்தவர்கள் வாணிகர்களே. அதற்கு அடிப்படையாயமைந்தது வழிப்பறிக்காரர்களை எதிர்கொண்ட அவர்கள் ஒரு போர்ப் படையாக இயங்க வேண்டியிருந்த வரலாற்றுத் தேவையே.