பாசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1

08 – 09 - 1995.
பாளையங்கோட்டை.

அன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.

பொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது!

அதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்பு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன்? திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்? ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.

1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.

இது பற்றிய உண்மைகளாவன:


தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.

கேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள்? நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.

உண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.

இந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளைப் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.

1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.

2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.

3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.

4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.

6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.

இவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன? வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.

அரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.

(தொடரும்)

==============

[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்

நாள் : 25.9.95 திங்கள் காலை


இடம் : சத்தியமங்கலம்

தலைமை: தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

காவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.

கர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.

கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தலைமையகம்,
53,ஜமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச் சாலை,
தஞ்சாவூர் - 613 001.

10.7.07

பாசனம் ...3

பாசனப் பணிகளில் குறிப்பாகப் பராமரிப்புப் பணிகளில் பொதுமக்களின் பங்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எடுத்துக்காட்டாக பல்லாண்டுகளாக உலக வங்கி ′′உதவி′′யுடன் நடைபெற்று வரும் காவிரி மேம்பாட்டுத் திட்டத்தில் வாய்க்கால்களில் பதிக்கப்படும் சிமென்றுப் பாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட‌டு மாட்டுத் தொழுவங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டப்படும் வயற்கால் மடைகள் பயன்படுத்தப்படாமல் வாய்க்காற் கரைகளை உடைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆறுகளுக்கும் பாசன அமைப்புகளுக்கும் அவற்‌றின் மூலம் வரும் நீருக்கும் உண்மையான உரிமையாளர்களான உழவர்களே அவற்றைப் பணோமல் சிதைக்க முற்படும் போது கூலிக்கு வேலை செய்யும் அதிகாரிகளிடம் உன்ன அக்கறையை எதிர்பார்க்க முடியும்? எனவே ஒட்டு மொத்தப் பாசனச் செலவில் பங்குடன் அவ்வப்பகுதிப் பராமரிப்புச் செலவுகளையும் அவ்வப்பகுதி மக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். ஆனால் உழவர்களுக்கு ஓர் முதன்மையான உரிமையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்குத் தாங்களே விலை நிறுவும் உரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இதில் தலையிடக் கூடாது.

புதிய பாசன அமைப்பு கீழ்க்காணும் வகைகளில் செயற்படலாம்.

1. பாசன வாரியத்தின் பொறுப்பில் அரசியல்வாதிகளோ ஐ.ஏ.எஸ். அதிகா‌ரிகளோ அமர்த்தப்படக் கூடாது. நேர்மையிலும் தொழில்நுட்பத் திறமையிலும் புகழ் பெற்ற பொறியாளர்களே அமர்த்தப்பட வேண்டும்.

2. பொதுப் பொறியியலில் (Civil Engineering) பட்டயப் படிப்பை நிறுத்தி ஐ.டி.ஐ. மட்டத்தில் ஒன்றும் பட்ட மட்டத்தில் ஒன்று மாகப் பிரிக்க ‌வேண்டும். இப்போது பணியில் இருக்கும் பட்டயப் பொறியாளர்களுக்கு, முன்பு மருத்துவத் துறையில் செய்தது போல் ஓர் ஐந்தாண்டு காலத்திற்குள் உரிய பயிற்சித் திட்டமொன்றை வகுத்து அனைவரையும் பட்டப் பொறியாளராக்க வேண்டும்.

3. அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் முதல் அலுவலக நீர்வாகி வரையிலும் களத்தில் கரைக் காவலர் முதல் வாரியத் தலைவர் வரையிலும் முற்றிலும் பொறியியல் படித்தோரே அமர்த்தப்பட வேண்டும். களப்பணியாளர்களுக்கு இணையான அலுவலகப் பணியாளரை வரையறுத்து அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றத் தக்கவராயிருத்தல் வேண்டும்.

4. ஒவ்வொரு கோட்டம் அல்லது தேவைக்கேற்ப சரக்காளர் அமர்த்தப்பட வேண்டும். சிமென்று, கம்பி போன்ற பொருட்களை ஒப்பந்தக்காரரே வழங்க வகை செய்ய வேண்டும்.

வேலையில் தரத்தில் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியாக ஒப்பந்தக்காரரே தண்டிக்கப்பட வேண்டும். மேற்பார்வை ஊழியர்கள் அல்லது பொறியாளர்கள் தாங்களாகவே அதற்குக் காரணமாயிருந்தாலொழிய அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது.

அளவைச் சரிபார்க்கும் அலுவலர் போன்றோரின் ஒத்துழையாமையால் ஒப்பந்தக்காரருக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் தேவையான உரிமைகளும் ஒப்பந்தக் காரருக்கு வழங்கப்பட வேண்டும்.

பாசனப் புலனாய்வுப் பணியில் உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள பொறியாளர்க‌ளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பொருளியலில் நியாயமான ஊக்குவிப்பும் கொடுத்து அடிப்படை ஆவணங்கள் உருவாக்குதல், இருப்பவற்றைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஒப்படைக்க வேண்டும்.

வக்கணையோடு செயல்படும் தணிக்கை முறையை மாற்றி ஆக்க முறையில் சீரமைக்க வேண்டும். களப் பொறியாளருக்கு ஒரு துளி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5. உழவர் சங்கங்கள், பாசனத்துறை இருவரும் இணைந்த அமைப்புகள் வசதியான பரப்புகளுக்கு ஒவ்வொன்றாக உருவாக்கப்பட வேண்டும். அந்தந்தப் பரப்புக்குத் தேவையான பராமரிப்புப் பணிகளைப் பாசனத்துறை செய்வதும் அதேபோல் பொதுமக்கள் தங்களுக்குப் பயன்படும் பாசன அமைப்புகளுக்குக் கேடுவராமல் நடந்து கொள்வதும் பாசனத் துறை செய்யும் பணிகளுக்குத் தேவையான செலவுகளை உழவர்கள் பாசனத்துறைக்குகுச் செலுத்துவதும் இங்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறனான அமைப்புகளை உருவாக்கிய உடன் போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடைக்கும் இன்றைய பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் பெருந்திட்டம் ஒன்றை வகுத்து உழவர்களின் கண்காணிப்புடனும் துணையுடனும் அதனை நிறைவேற்ற வேண்டும்.

பாசன அமைப்புகளுக்குப் பொறுப்பற்ற பொதுமக்களால் ஏற்படும் சிதைவுகள், திருட்டுகளைத் கண்காணிக்கும் பணியில் உழவர்களுக்கும் பொறுப்பிருக்க வேண்டும்.

தண்ணீர் அருந்தலான நேரங்களில் எவ்வாறு அதனைப் பங்கிடுவது என்பதைச் சங்கங்கள், பாசனத் துறையினரின் விரிவான கூட்டம் மூலம் முடிவு செய்து அதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயிர்களுக்கு அளவுக்கு மேல் நீர் வழங்குவதால் ஏற்படும் தீங்குகளை உழவர்களுக்கு எடுத்துரைத்து நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும். இதற்கும் உழவர் சங்கங்கள், பொறுப்பேற்க வேண்டும்.

குளக்கரைகளைப் பாதிக்காமலும் நீர்த்தேக்கத்துக்கு இடையூறுறில்லாமலும் வயல்களுக்கு கரம்பை அடிப்பதையும் செங்கற் சூளைகளுக்கு மண்ணெடுப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். மண்ணெடுப்பதை முறைப்படுத்துவரைக் கண்காணிக்கும் பொறுப்பை உழவர் சங்கங்களிடம் விட்டுவிட வேண்டும். எடுக்கப்படும் மண்ணுக்குக் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். மண்ணெடுப்பதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். அதே போல் அண்‌மைக் காலமாக இதில் கெடுபிடி செய்து கொ‌ண்டிருக்கும் சுரங்கத்துறையை ஒழிக்க வேண்டும். குளங்களில் மரங்கள் வளர்ப்பது கைவிடப்பட வேண்டும்.

6. குளங்களைத் தூரெடுப்பது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. ஏனென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்துக் குளங்களிலுமுள்ள பெருமளவு மண்ணை வெட்டி வெளியேற்றுவதற்குப் பெரும் செலவு ஆவதுடன் அதற்குத் தேவையான ஆள் பலம் கிடைப்பது கூடக் கடினம்.

  • அவ்வாறு எடுக்கப்படும் மண்ணைக் கரைகளில் போட்டால் குளத்தின் உட்புறத்தில் மடைகளையும் வயல்களையும் பாதிக்கும். எதிர்வாயில் போட்டால் எளிதில் மீண்டும் குளத்தினுள் வந்தவிடும்.

அ‌தற்கு மாற்றாக குளத்தின் உயர்நீர் மட்டத்தைப் பழைய முழுகடை நிலங்களைத் தவிர புதிய நிலங்களை எதிர்வாயில் முழுகடிக்காத அளவுக்கு உயர்த்த வேண்டும். தேவைப்பட்டால் எதிர்வாய் நிலைங்களைத் தேவைப்படும் அளவுக்கு மேடாக்கலாம். மட்டத்தை உயர்த்தும் போது கரையையும் உயர்த்த வேண்டியிருப்பதால் குளத்திலுள்ளிருந்து இதற்காக எடுக்கும் மண்ணாலும் குளத்தின் கொள்திறன் கூடும்.

களத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்குத் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நிலைமைகளை அகற்றி அவர்களது பட்டறிவுக்கும் முன்முயற்சிக்கும் ஊக்கமும் மதிப்பும் தந்தால், பாசனத் துறையின் செயற்பாடுகளோடு உழவர் பெருமக்களின் இன்றியமையா ஒத்துழைப்பும் இருந்தால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நம் நாடு வளம் பெறுமென்பதில் ஐயமில்லை.

9.7.07

பாசனம் ...2

பாசனம் இன்று தமிழகத்தில் பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இத்துறையில் பணம் செலவு செய்யும் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கே மதிப்பு. அடுத்த வரிசையில் வருவோர் பாசன நீரை முறைப்படுத்துவோர். இவ்விரண்டு இடங்களிலும் பணம் நன்கு புரளும். நேர்மை, நாணயம் ‌என்ற பெயரில் பணம் பண்ணாதவர்களை இப்பணிகளில் வைத்திருக்க மேலேயுள்ளவர்களும் கீழேயுள்ளவர்களும் விரும்புவதில்லை. அதேபோல் பிறருக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் ஏப்பம் விட்டு விடுபவர்களை‌யும் வைப்பதில்லை. இவ்விரு சாரரும் புலனாய்‌வுப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் உதவாக்கரைகள் என்று ஒதுக்கப்பட்டவர்களாகையால் இவர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. எனவே நேர்மையானவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னொரு வகையினர் எப்போது பணம் புழங்கும் பகுதிக்குச் செல்லலாமென்று ஒரே குறியாயிருப்பதினால் அவர்கள் வேலையில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இந்தப் புலனாய்வுப் பிரிவுகள்தான் பாசனத் திட்டங்களை வகுக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் நம் பாசனத்துறை ஏன் சரியாகச் செயல்படவில்லை என்பதன் காரணங்களிலொன்று புலப்படும்.

இன்னொரு புறம் குளங்களின் பராமரிப்பு. குளங்களின் பராமரிப்பில் பெரும் பங்கு மண் வேலைக்கு. ஆனால் பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் கூலிகள், விலைகளின் பட்டியல் நிறுவக் கடைப்பிடிக்கும் தவறான நடைமுறையால் மனித ‌உழைப்பில் செய்யப்படும் மண்வேலை கட்டுபடியாவதில்லை. இயந்திரங்கள் கொண்டு செய்யப்படுபவை கட்டுபடியாகும் நிலையில் உள்ளன. எனவே குளங்கள் பராமரிப்பில் பொதுவாக துறையினரும் ஒப்பந்தக்காரர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வெள்ளம், வரட்சிக் காலங்களில் அரசு ஒதுக்கும் பெருந்தொகைப் பணத்தைச் ′′செலவு′′ செய்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. எனவே மழைக் காலங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

அடுத்து பொறியாளர்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையர்களான பொறியாளர்‌கள் மீது வருவாய்த் துறையின் கட்டுப்பாடு கிடையாது. பொதுப்பணித்து‌றை வளாகத்தினுள் காவல்துறையினரோ பிறரோ முன் இசைவின்றி நுழைய முடியாது. இத்துறையின் தனித்தன்மையை பேணுவதற்காகவே காசுக்கணக்கு, பொருட்கணக்குகள், கோப்புப் பராமரிப்பு என்று எல்லா வகையிலும் பிற துறைகளிலிருந்தும் வேறுபட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வனத்துறையிலும் இத்தனித் தன்மை பேணப்பட்டது.

இன்றைய நிலைமை என்ன? இன்றைய பாசனப் பொறியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் இன்னும் துல்லியமாகக் கூறவேண்டுமாயின் மாவட்ட ஆட்சித் தலைவர்களி‌ன் மனைவிகளின் எடுபிடிகள். எனவே பொதுப்பணித்துறையிலடங்கிய பாசனம் அரசியல் விளையா‌ட்டுகளின் களம். பொறியாளர்கள் மேலே மேலே கப்பம் கட்ட வேண்டியிருப்பதும், ஓய்வு பெறக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதும் அனைத்துத் துறைகளிலும் போல் விதிவிலக்கின்றிக் காணப்படுவதால் அதைத் தனியாகக் கூற வேண்டியதில்லை.

பொதுப்பணித் துறையிலுள்ள இன்னுமொரு பெரும் நோய் பொறியாளர்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிளவு; பட்டப் பொறியாளர், பட்டயப் பொறியாளர் என்ற பிளவு. முன்பு மருத்துவத் துறையில் நிலவிய இது போன்ற பிளவைத் தீர்த்தது போல் இதையும் தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்குத் தடையாயிருப்பவர்கள் இவ்விரண்டு காரர் பெயரில் செயற்படும் சங்கங்களில் தலைவர்களே. இந்தப் பிளவைப் போக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இத்தலைவர்கள் மறைமுகமாக அவற்றை முறியடித்து வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பணியின் தரத்தை மேம்படுத்தப் பயன்பட்ட பொறியாளர் சங்கம் இன்று தெருநாய்களில் தலைமையாகி விட்டிருக்கிறது. பிரித்தாளும் நம் அரசும் இப்பிளவைப் பேணிக் காக்கிறது.

பொதுப் பணித் துறையின் அடிப்படை அதிகாரிகளான பிரிவு அலுவலர்களெனும் பொறுப்பிலிருக்கும் பொறியாளர்கள் தலையில் சிமென்று, இரும்பு போன்ற பொருட்களைப் பேணும் சரக்காளர் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. களத்தில் வேலைகளை நேரடியாக மேற்பா‌‌ர்வையிடும் மேற்பார்வை ஊழியர்கள் அவர்‌கள் மேற்பார்வையிடும் வேலைகளின் தரத்துக்குப் பொறுப்பல்ல. அவர்களின் மேல் அதிகாரியான பிரிவு அலுவலான பொறியாளருக்கே முழுப்பொறுப்பும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்களினால் முழு ஈடுபாட்டுடன் பொறியாளர்களால் செயற்பட முடயாமல் போகிறது.

வெள்ளையராட்சிக் காலத்தில் ‌விஸ்வேஸ்வரய்யாக்களையும் கிரு‌ஷ்ணய்யர்களையும் ஏகாம்பரங்களையும் உருவாக்கிய பொதுப்பணித்துறையால் இன்று ஒரு குமாரசாமியை மாநிலத்தை விட்டுத் துரத்தத் தான் முடிந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

அனைத்தையும் அனைவரையும் தங்கள் ஆதிக்கத்தினுள் கொண்டு வந்தவிட வேண்டுமென்ற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளின் பேராசை ஒரு புறம். இன்னொரு புறம் சொன்னால் வியப்பாயிருக்கும். மாநிலப் பணித் தேர்வானையத்தால் இளநிலை - உதவியாளராகத் தேர்வு செய்யப்பட்டதன்றி வேறு தொழில்நுட்பத் தகுதி ஏதுமில்லாமல் தணிக்கையா‌ளர் என்ற பெயரில் செயற்படும் உண்மையான பொறுப்பேதுமற்ற ஒரு வலிமையான கும்பலின் ஆதிக்கத்துக்குப் பொறியாளர்கள் அனைவரும் அஞ்சும் ஓர் இழிநிலை உள்ளது. தணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு காசுச் செலவுக்கும் இவர்கள் கூறும் வக்கணைகளை மீறி முடிவு கூறும் அதிகாரம் இருந்தும் அதனைச் செயற்படுத்தும் துணிவு இன்றைய பொறியாளர்களுக்கு இல்லை.

அதேபோல் தொழில்நுட்பத்தைக் குறித்து ′′தணிக்கை′′ ‌ செய்வதற்கென்று வரைவுப் பிரிவு என்று ஒன்று உண்டு. அது வரைவதெல்லாம் கடிதங்களைத் தான். களப்பணியாளர்கள் செய்யும் பணிகளில் ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா என்ற ஆய்வையே இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். தொழில்நுட்பம் குறித்த ஆக்கமுறையிலான எந்தக் கருத்தும் இவர்களிடமிருந்து வராது. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரின்பணி ′′ஒருவன் வேலை செய்ய ஒன்பது பேர் நொட்டை சொல்ல′′ என்பதாகும். அதுமட்டுமல்ல, இவ்வாறு நொட்டை சொல்லச் சொல்ல அவர்களுக்கு வரும்படியும் கிடைக்கும்.

இதற்கு ஒரு காரணம் துணிவும் திறனும் உள்ள செயற்பொறியாளர் போன்ற உயரதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடக்குமுறையின் முன் அடங்கிப் போய்விடுகிறார்கள். அல்லது ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். பிறர் வரும்படி கருதி இந்தத் ′′தணிக்கை′′ களை ஒதுக்கத் தங்களுக்குள்ள அதிகாரத்தைக் கையாள்வதில்லை. அத்துடன் பொறியாளர்களின் ஒற்றுமை இன்மை வலிமையான ஒரு காரணம்.

இக்காரணங்களால் பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் எவருமில்லை. பொறியியல் படித்த அதிகாரிகளே தான் உள்ளனர் என்ற நிலை தான் இன்று நிலவுகிறது.

பாசனத் துறையில் இன்று ஒருவகைத் தண்ணீர் வாணிகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி உழவர்களும் தத்தமக்குத் தண்ணீர் திறந்துவிடுதல், பாசன அமைப்பு பராமரித்தல் தொடர்பாகப் பொதுப்ப‌ணித்துறையையும் வருவாய்த்துறையையும் அணுகுவதற்கென்று சங்கங்கள் அமைத‌துள்ளனர். இச்சங்கங்கள் முதலில் வரட்சிக் காலங்களில் உழவர்களிடம் பணம் திரட்டி இவ்விரு துறை அதிகாரிகளுக்கும் கொடுத்து தண்ணீர் கொண்டு வந்தனர். இப்போது தண்ணீர் தாராளமாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதில் சங்கத் தலைவர்களுக்கும் பங்குண்டு. பாசனத்துறைக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்!

இனி தொழில் நுட்பப் பக்கத்தைப் பார்ப்போம்,

1. பண்டைக் குளங்களின் கரைகள் வளைவாக ஆழமான இடத்தில் சிறிது உள்வாங்கி இருக்கும். "கொக்கு வெளுத்திருக்கும் குளம் கோணியிருக்கும்" என்ற சொல்வடை கூட வழக்கிலிருக்கிறது. ஆழமான இடத்தில் உள் வாங்கியிருப்பதிலும் முனைகள் வளைந்து இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு.இன்றைய பொறியாளர்கள் அவ‌ற்றை அறியார்.

2. ஓடைகள் அல்லது ஆறுகளுக்குக் குறுக்கே குளங்கள் அமைப்பது முன்பு வழக்கமில்லை. அணைக்கட்டுகள் அல்லது மன்சூரம்புகள் எனப்படும் மண்‌ணைகள் அமைத்து வரத்துக் கால்வாய்‌கள் வழியாகக் குளங்களுக்குத் தண்ணீ‌ரைக் கொண்டு வருவதே வழக்கம் இதனால் குளங்களில் வண்டல் படிவது குறையு‌ம். இப்போது இந்த நடைமுறை ‌புதிய குளங்கள் அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

3. குளங்கள் தொடர்களாக அமைந்துள்ளதால் மேலே ஒரு குளத்தில் உடைப் பெடுத்தால் கீழேயுள்ள அனைத்துக் குளங்களும் உடைக்கும். குளங்கள் தம் போக்கில் கண்ட இடத்தில் குறிப்பாக ஆழமான இடத்தில் உடைப்பெடுத்தால் அதனால் ஏற்படும் இழப்பு மிகப் பெரிது. தண்ணீர் முழுவதும் வீணாகியும் விடும். கரை வரை வயல் இருப்பதாலும் குளத்துப் பக்கம் நீரிருப்பதாலும் உடைப்பு ஆழமாக இருப்பதாலும் உடைப்பை அடைக்க மண் கிடைப்பது கடினம். இதைத் தவிர்ப்பதற்காக மறுகாலுக்கு அருகாமையில் மறுகால் மட்டத்தை விட ஓரடி தாழ்வாகக் கொஞ்ச நீளத்துக்குக் கரையை அமைத்திருப்பது வழக்கம். இன்று அம்முறை கைவிடப்பட்டுள்ளது. உடைப்பெடுப்பது "அனைவருக்கும்" ஆதாயமாயிருப்பதால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைககளில் யாருக்கும் ஆர்வமில்லை.

நடைமுறைக் கோளாறுகள்‌‌:

1. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குளப் புறம்போக்குகளைப் பட்டா போட்டுக் கொடுப்பதால் குளங்கள் அழிந்து வருகின்றன.

2. எதிர்வாயில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதால் குளங்கள் சுருங்குவதுடன் மேடுதட்டியும் வருகின்றன.

3. முன்பு செங்கல் ஆளைகளுக்கும் வயல்களுக்கும் குளங்களில் படியும் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இப்போது கருவேல மரங்கள் வளர்க்‌கப்படுவதாலும் வள்ளுவர் வாய்மொழியில் கூறுவதாயின் "வேலொடு நிற்கும்" வருவாய்த் துறையினர் மற்றும் இப்போது இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சுரங்கத் துறையினரின் அளவு மீறிய அரிப்புத் தொல்லையாலும் நீமையுரங்களின் ஆதிக்கத்தாலும் இம்முறை கைவிடப்பட்டு அதன் விளைவாகக் குளங்கள் மேடிட்டு வருகின்றன.

4. குளங்களில் உள்ள மடைகளை அடைக்கும் சீப்புகள் காணப்படுவதில்லை. அவற்றைப் பராமரிக்க எந்த ஏற்பாடும் இல்லை. எனவே பெருகும் தண்ணீர் விரையில் வடிந்து வெளியேறி வீணாகிறது.

5. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. வல்லான் வகுத்ததே வாய்க்‌கால் என்பது போல் முன் வயல்காரர்கள் தண்ணீரை வீணடித்து கடைமடை உழவர்கள் வாடவிடுகிறார்கள். சமுதாயத்தில் எங்கும் போல் இங்கும் அராசகம் நிலவுகிறது.

இந்நிலையில் பொதுப் பணித்துறையில் பாசனத் துறையைத் தனியாகப் பிரித்துக் தன்னாட்சியுடைய ஒரு வாரியமாக அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கும் வழக்கம் போல் உலக வங்கியில் நெருக்குத‌லே காரணம். இந்த நெருக்குதல் இல்லாமல் நாமாகவே செய்திருக்க வேண்டிய பணி இது. கடன் வாங்குவதற்காகத் திருமணம் ஏற்பாடு செய்த "கடன் வாங்கிக் கல்யாணம்" திரைப் படக் கதாநாயகனின் தந்தையாகி நிற்கின்றனர் நம் ஆட்சியாளர்‌கள்.

(தொடரும்)

பாசனம் ...1

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாயிரமே என்று கப்பலோட்டிய தமிழர் நிறுவியுள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தில் மழையைப் போற்றியே தொடங்குகிறது என்பது புலப்படும். சேர இளவல் மாமழை போற்றும் என்று வாழ்த்துகிறார். சீவகச் சிந்தாமணி பூமகள் இலம்பகத்தில் மழைநீர் ஆற்றிலிருந்து வயலுக்கு இட்டுச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு அறுவடை ஆவது வரை சொல்லோவியமாக்குகிறது.

இவையனைத்தும் ஒருசேர விளக்குவது தமிழக மக்கள் மழையின் அருமையை அதாவது அதன் போதாமையைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள் என்பதையே. அதன் விளைவு பாசனப் பொறியியலின் பிறப்பு. ஓராண்டு முழுவதும் வேளாண்மைக்குத் தேவைப்படும் மொத்த நீரின் அளவுக்கு ஆண்டின் மழைப் பொழிவு போதுமாக இருந்து ஆனால் அந்தந்‌தக் காலத்தில் அவ்வப்போது பெய்‌யும் மழை போதாமல் இருந்தால் அங்கு பாசனம் தேவைப்படும். அந்தந்தக் காலங்களில் பெய்யும் மழையே போதுமானதாக இருப்பதால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாசன முறையோ அமைப்புகளோ இல்லை.

தமிழகத்தில் பாசன முறைகளைத் தொடங்கியவர்‌கள் பாண்டியர்கள் என்பதற்கு ′′மழை பினித் தாண்ட′′ பாண்டியர்களை வாழ்த்துவதன் மூலம் சிலப்பதிகாரம் சான்று ‌தருகிறது. மழையை வான் என்று திருக்குறள் அழைக்கிறது. எனவே ஆகாய கங்கை எனப்படுவது மழையே. அதை நிலத்துக்குக் கொண்டு வந்தவனாகக் கூறப்படும் பகீரதனும் ஒரு பாசன வித்தகன் தானோ?

பெரும் பரப்பில் பாசன அமைப்புகளை அமைத்துப் பராமரிப்பதன் மூலமே பண்டைய அரசுகள் மக்கள் மீது தம் பிடிப்பை வைத்திருந்தன. இறைத்தல் அடியாகப் பிறந்த இறைவன், குடித்தல் தொடர்பாகப் பிறந்த குடி மகன் உறவு இதைத் தான் குறிக்கிறது.

உலகில் நெருக்கமாகக் குளங்களைக் கொண்ட நாடுகள் எகிப்தும் தமிழகமும். அவற்றிலும் தமிழகத்துக்கே முதலிடம். இங்கு சராசரி அரை சதுர மைலுக்கு - ஏறக்குறைய ஒன்றேகால் சதுர கிலோமீற்றருக்கு ஒரு குளம் உள்ளது.

குளங்களின் வடிவமைப்பிலும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் உத்தியே சிறந்தது. இவையன்றி குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் மிக நுணுக்கமான சில உத்திகள் இன்றுவரை யாராலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

தமிழகம் வெள்ளையர் வருகைக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாத போர்களினால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ஊரவைகள் என்ற அமைப்புகள் பாசன அமைப்புகளையும் பாசன நடைமுறைகளையும் ஓரளவு பேணி வந்தன. அத்துடன் பேரரசர்களும் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவ்வப்போது அணைகளைக் கட்டியும் வாய்க்கால்களை வெட்டியும் குளங்களை அமைத்தும் பாசனப் பணியாற்றியுள்ளனர். இருந்தாலும் கரிகாலன் என்ற பெயரில் சங்க காலத்தில் வாழ்ந்த இரு பேரரசர்களும் (கரிகாலர்கள் மூவர் என்று கருதுவாரும் உண்டு) செய்ததுபோல் தமிழகத்தில் மிகப் பேரளவுப் பாசனப் பணி யாரும் செய்ததில்லை. புகழ்மிக்க கல்லணை கட்டியது, காவிரிப் படுகை முழுவதும் காவிரிக்கும் அதன் கிளைகளுக்கும் கரையமைத்தது, திருவளவாய்க்கால், கட்டளைக் கால்வாய் போன்ற நீண்ட நெடுங்கால்வாய்‌களை அகழ்ந்தது ஆகியவை அவர்களது அருஞ்செயல்களாகும். குடகுப் பகுதியில் மறிக்கப்பட்டுத் திருப்பப்பட்ட காவிரியைப் போரிட்‌டுக் கரிகாலன் மீ‌ட்டு வந்ததைப் புராண வடிவில் மணிமேக‌லை கூறுகிறது.

தமிழகத்தில் அரசியல் சீ‌ர்மை சிதையச் சிதையப் பாசனப் பராமரிப்பும் குறைந்தது. வெள்ளையரும் தொடக்கத்தில் இதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள் அவர்களைச் செயலுக்குத் தூண்டின. தம் நாட்டில் பாசனப் பட்டறிவு இல்லாதிருந்தும் எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்த பாசன அமைப்புகளையும் மழையளவுகளையும் நோட்டமிட்டு இன்று நம் நாட்டில் நிலவிவரும் பாசனக் கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினர்.

இந்த வகையில் அவர்கள் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள இறும்பூதுகள் எண்ணினால் நம்மைப் புல்லரிக்க வைக்கும். ஒரு புறத்தில் அணை கட்டி எதிர்ப்புறத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் பெறும் ஒப்பற்ற பெரியாற்று ஆணையை வடிவமைத்து நிறுவிய பென்னிக்குவிக் என்ற பெருமகன் முன்னாள் சென்னை மாநிலத்தி‌லடங்கியிருந்த அனைத்து ஆறுகள், சி‌ற்றாறுகள் ஓடைகள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆற்றுப் பள்ளங்களென்றும்(River Basins) பள்ளங்கள் என்றும்(Basins) சிறு பள்ளங்களென்றும்(Minor Basins) வகுத்து திணைப்படம்(Map) உருவாக்கினார். இப்படம் பென்னிக்குயிக் திணைப்படம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மண்டலத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், கிளைவாய்க்கால்கள் அவற்றின் கிளைகள் என்று முடிவின்றி 10அடி நீளமுள்ள வயற்கால்கள் வரை காட்டும் பாசனத் திணைப்படங்கள் கிராமத் திணைப்படங்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டன. அதே அளவில் வாய்க்கால்கள், வயல்கள், சமமட்ட‌க் கோடுகள் ஆகியவற்றைக் காட்டும் மட்டத் திணைப்படங்கள்(Block level maps) உருவாக்கப்பட்டன. அவற்றின் மட்டங்களுடன் தரப்பட்டுள்ளன. தஞ்சை மண்டலத்தில் உள்ள வடிகால்களைக் காட்டும் வடிகால்‌ திணைப்படங்‌களும் உள்ளன. மிகச் சிறு வயற்கால்கள் உட்பட ஒவ்வொரு வாய்க்காலும் ஓடும் புல எண்களையும் அவை நீர்பாய்‌ச்சும் புலங்களின் எண்களையும் காட்டும் பெரும்பெரும் பாசனப் பதிவேடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆங்கிலப் பொறியாளர் ஒருவர் (அவர் பெயர் ‌நினைவில்‌லை) முன்னாள் சென்னை மாநிலத்திலுள்ள மலைமுகடுகளுக்கெல்லாம் குதிரையில் சென்று ஒவ்வொரு ஓடை, சிற்றாறுகள் ஆகிய அனைத்தின் தோற்றம், பாயும் பாதை, அவற்றின் நீர்வளம் ஆகியவற்றைத் தொகுத்து அவற்றினடிப்படையில் எங்கெங்கு என்னென்ன கொள்திறனில் ‌எந்தெந்தப் பகுதிக்குப் பயன்படும் வகையில் என்னென்ன பாசன அமைப்புகள் அமைக்கலாம் என்று கூறும் நூல் ஒன்றை இயற்றியிரு‌க்கிறார். இன்றைய பாசனத் திட்டங்களில் ஏறக்குறைய எல்லாமே அவரால் பட்டியலிடப்பட்டவையே என்று தெரிகிறது.

பாசனத்துறைக்குப் புறத்தே நிலஅளவைத் துறையி‌னர் நாட்டிலுள்ள அனைத்துக் குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளைக் காட்டும் இந்திய அரசுத் திணைப்படங்களையும் வட்டத் தி‌ணைப்படங்களையும்(Taluk maps) உருவாக்கியுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வருவாய் ஊருக்கும் உரிய தீர்வைப் பதிவேடு (A Register எனப்படும் Settlement Register) அவ்வவ்வூரிலுள்ள பாசன ஆதாரங்களை திணைப்படமாகக் காட்டுகிறது. அடங்கல் பதிவேடு கூட பாசன ஆதாரங்களின் அடிப்படையிலேயே பராமரிக்கப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆற்றியுள்ள இந்த அருஞ் செயல்களுக்கு மாறாக, விடுதலை பெற்ற நாம் என்ன செய்துள்ளோம்? பெரியாற்று நீர்மின் நிலையத்திலிருந்து பாசனமில்லாக் காலத்தில் வெளியேறும் நீரைப் பிடித்து வைப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட வைகை அணையை அளவறியாமல் பெரிதாகக் கட்டிவிட்டமையால் அதன் கீழுள்ள வைகையாறு முற்றிலும் வறண்டு போயிற்று. பெரியாற்றில் நீரிருக்கிறதென்ற மெத்தனத்தால் பெரியாற்று - வைகைப் பாசன மண்டலத்திலுள்ளள பல்லாயிரக்கணக்கான குளங்களையும் சரிவரப் பராமரிக்காமையால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் நம் மூதாதையர் போற்றிய அருமருந்தன்ன மழைநீர் வீணாகிக் கடலினுள் சென்று விடுகிறது.

தமிழக மக்கள் வகுத்துள்ள ஏரிக் கோட்பாடுகள் ஒப்பற்றவை. குளங்கள் தொடர்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளத்திலுள்ள மறுகால் அதன் கீழுள்ள இன்னோர் குளத்தினுள் விழும். அந்தக் குளத்து மறுகால் அடுத்த குளத்தினுள் என்றிவ்வாறு 50 குளங்களையும் மிஞ்சும் தொடர்கள் உண்டு. இந்த அமைப்பு நீரை எந்த இழப்புமின்றி மிகச் சிக்கனமாகப் பிடித்து வைக்க உதவுகிறது. இறுதியிலுள்ள குளத்தின் மறுகால் ஏதாவதொரு ஆற்றில் அல்லது ஓடையில் சேரும். அவ்வாறு சேரும் நீரை அணைகள் மூலம் கீழேயுள்ள குளங்களுக்குத் திருப்பிவிடும் அமைப்புகளும் உள்ளன.

இவ்வளவு சிறப்பாக அமைந்த நம் பாசன முறையின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிகப் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளில் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்‌கள் அவ‌ற்றை மேம்படுத்தவும் செய்தனர். ஆனால் நாமோ விடுதலை கிடைத்த இந்த 50 ஆண்டுகளில் நாமாக எதுவும் செய்யாதது மட்டுமல்ல அவர்கள் செய்து வைத்தவற்றைப் பேணவும் இயலாதவர்களாகி விட்டோம்.
எடுத்துக்கா‌ட்டுக்கு, குளங்கள் சீரமைப்புத் திட்டம் எனும் பெயரில் செயல்படும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். நாம் முதலில் குறிப்பிட்ட பெனிக்குயிக் திணைப்படத்தில் அமைந்த சிறுபள்ளங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குளங்களைப் பெருந் தொகுதிகள், சிறுதொகுதிகள், தனிப்பட்ட குளங்கள் என்று பகுத்து அவற்றிலடங்கிய குளங்களின் முழு விளக்கங்களையும் திரட்டி அவற்றுக்கு வரலாற்றுக் குறிப்புகள் உருவாக்கி ஒரு சிறு பள்ளத்துக்கு ஒரு நூல் என்ற அளவில் உருவாக்கினர். அத்துடன் அமையாது அவ்வரலாற்றுக் குறிப்புகளில் தரப்பட்டுள்ள வரையளவுகளுக்கேற்ப ஒவ்வொரு குளத்தையும் சீரமைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கும் பணி ஒரு பகுதி தான் முடிவுற்றது. சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

இன்றும் குளங்கள் சீரமைப்புக் கோட்டங்கள் செயற்படுகின்றன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் சொன்னால் வெட்கக்கேடு. குளங்களின் அமைப்பில் மறுகால் மட்டம் மடைகளின் தளவடி மட்டம் ஆகியவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இந்த மட்டத்தை நிறுவுவதற்காக மாபெரும் நிலவியல் அளவை மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று சிறிதும் அக்கறை இன்றி மட்டங்கள் நிறுவும் ‌இப்பணி செய்யப்படுவதால் அவற்றிற்குரிய நம்பகத் தன்மையை அவை இழந்து நிற்கின்றன. பெரும்பாலான பாசனத் திட்டங்கள் இவ்வாறு உருவாக்கப்படும் வரலாற்றுக் குறிப்புகளையே சார்ந்து நிற்கின்றன என்பதை வைத்து நம் பாசனத் திட்டங்களின் தரத்தை அறுதியிடலாம்.

பாசன அணைகளின் வடிபரப்புகளில் நீர்மின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கோதையாறு, நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு, மதுரை மாவட்டத்திலுள்ள சுருளியாறு போன்றவை. இவை அமைக்கப்பட்ட நாளிலிருந்தே ஒழுங்காகச் செயற்படுவதில்லை. ஆனால் அவற்றில் பெருமளவு நீ‌ரைத் தேக்கி வைத்துக் கொண்டு பாசனத்துக்கு நீரின்றிப் பயிர்கள் வாடும் நி‌லையிலும் அந்த நீரை வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிடுவதற்கான முன்னமைப்புகளுடன் அந்த அணைகள் கட்டப்படவுமில்லை. பெரியாற்று நீர்மின்திட்டத்தில் பாசன நீர் வெளியேறுவதற்கான அமைப்புகள் சிறப்பாக உள்ளன. இந்‌தப் புதிய அமைப்புகளிலுள்ள இச்சிக்கல் மக்களுக்குத் தெரியவுமில்லை.

(தொடரும்)

13.11.05

ஒரு மொழிபெயர்ப்பின் கதை

"தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி" என்ற திரு. தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03.07.1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது; அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்.

பொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான "பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது. பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி "பொறியியல் கதிர்" என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம். இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் "பொறியியல் கதிரில்" வெளியிட ஒப்புக் கொண்டார். எனவே நூலின் முதலதிகாரத்தை மொழிபெயர்த்து அனுப்பினேன். ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார். ராயல் அளவு எனப்படும் பெரிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும். எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது. அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப் புலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன. எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்.

சில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார். (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை). இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது. சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.

தமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார். அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். இந்தத் "தமிழ் வாணிகத்தை" நான் விரும்பவில்லை. பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை.

இதற்கிடையில் 1972 இல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு. பி. இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன். அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்குப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர். அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார். (எண் வேலை II-1/96787/78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார். (எண் 3/29699/81-1 நாள் 20.11.81)

வந்தது வினை. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர். தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர். (ந.க.எண் இ3/1793/081 நாள் 29.03.91). அத்துடன் தங்கள் "தொழிலில்" கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர். இறுதியில் போகிற போக்கில் "மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப்" பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு.பி. இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார். புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர். நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை.

1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு. ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்.

சில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ.சுப. மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன். தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார். தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்.

1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன். மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து, "நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை. ஆனால் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" இதழில் இம்மொழிப்பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார். அதற்குப் பயனேதும் இல்லை. எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது.

முதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும். இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது. இவ்விரண்டின் தலைவர்களும், சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர். இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் "ஒற்றுமையாகச்" செயற்பட்டு முறியடிப்பர். (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்).

இது போன்ற "சாதி"ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன. ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே - மருத்துவர்களும், வழக்கறிஞர்களும். மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்.

இந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர். அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர். அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன். சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் "தெரிந்து கொள்ளவில்லை," சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார். மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் "ஓ...." என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் "ஏம்பா இது குறித்து ஏதோ ‘பேப்பர்’ வந்தது போலிருக்கே" என்று கேட்டார். எனக்குப் புரிந்தது. "இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இது ஒரு தன் புராணமல்ல. ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது.

பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல.க. இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ.டு. Sulphur - சுற்பொறை. Phosphorous - பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் "தென்மொழி" இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார். காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார். "கடைசல் பொறிகள்" என்ற பெயரில் "லேத்"களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார். பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத "தினமணி"க் கட்டுரையாளர்கள் திரு.கே.என். இராமச்சந்திரன், நெல்லை சு. முத்து போன்றோர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர். நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ.மு. சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகராதியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார். அவர் தமிழப்புலவர் அல்லர். (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணியை அவருக்கு அளித்தது). இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்.

ஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர்" அரசு உருவாக்கிய "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர். அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர். தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர். வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்.

நமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள், சலுகைகள், மானியங்கள், கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் "பணப்பட்டுவாடா" செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது. அது போலவே "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் "பணப்பட்டுவாடா" உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது. அதற்கிசைய வெளியிலுள்ள "தமிழ்த் தொண்டு" அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன. இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் "புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று.

அறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை, உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை. அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள்தாம். இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ "தமிழ்ப்பணி" ஆற்றியவர்களல்ல. வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்.

அந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக, பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது. அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது. ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு. அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு, சம்பளமும் குறைவு, மதிப்பும் குறைவு. அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் "தென்மொழி" இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர். ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர். தமிழே அவர்களது "வாழ்வாகி" விட்டது.

பாவாணர், மற்றும் "தென்மொழி" மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம், கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் தமிழை “வளர்க்கும்” பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

என் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார். முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார். பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளிவாகவே வெளிப்படும். இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள், தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் போன்றோரிடமிருந்தே வருகிறது.

தமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை, பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும். அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது "பணப்பட்டுவாடா" உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்.

(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தென்மொழி இதழிலும் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தது. “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்.)