7.5.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை

தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை கட்டுதல் போன்றவற்றுக்கு அரசனின் இசைவு வேண்டும். இவ்வகை இசைவு விருது எனப்பட்டது. அரசர்கள் வலுவிழந்து பின்னர் இல்லாது மறைந்து போய்விட்டாலும் இந்த முறை இன்றும் சாதிகளிடையில் நிலவுகிறது. மேற் சாதியினரின் தெருக்களில் நடமாடும் போது கீழ்ச் சாதியினர் இன்னின்ன உடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நிலவுவதை நாமறிவோம்.

பெண்கள் அணியும் உடைவகைகளைப் பற்றி ஆய்ந்தால் சில விந்தையான செய்திகளை அறிய முடியும். தமிழகம் முழுவதும் பெருவழக்காக நிலவும் சேலை எப்போது இங்கு புகுந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. சோழர் காலச் சிற்பங்கள், ஓவியங்களில் காணப்படுவது உடலின் மேற்பகுதியில் ஒரு கச்சு அல்லது இரவிக்கை எனப்படும் குப்பாயம், இடையில் பாவாடை போன்ற ஓர் ஆடை, மார்பின் குறுக்கே ஒரு துண்டு இவைதான். இன்றைய சேலையைத் தெலுங்குச் சேலை என்று கூறுவர். வலது தோளில் முந்தானையிட்டுச் சேலையைத் தாழ்ப்பாய்ச்சி முதிய பார்ப்பனப் பெண்களைப் போல் கட்டுவது தான் தெலுங்குச் சேலை என்று சிலர் கூறகின்றனர். தெலுங்கு பேசும் துப்புரவுத் தொழில் செய்வோரில் பலர் வலது தோளில் தான் முந்தானை இடுகின்றனர்.

பரத நாட்டியத்தில் நாம் இன்றைய சேலை முறையைக் காணலாம். இராசராசன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து அவன் கொண்டு வந்த தளியிலாப் பெண்டிர் மூலம் இச்சேலை முறை தமிழகத்தில் பரவியிருக்கலாம். ஒற்றைத் துணியில் உடல் முழுவதையும் மறைக்க இயல்வதாலும், துவைத்துக் குளித்து உலர்த்துவதற்குக் கூட மாற்றுத்துணி தேவையில்லாததாலும் சிக்கனம் கருதி ஏழைகளுக்கும் பொருந்தியதாலும் அது விரைவில் பரவியிருக்க வேண்டும்.

கேரளத்தில் இன்றும் பெண்கள் பழந்தமிழ் ஆடையாகிய இரவிக்கை, அரையாடை, மேல்துண்டையே அணிகின்றனர். முகம்மதியத்துக்கு மாறியோரிடையில் முதிய பெண்கள் இன்றும் ஏறக்குறைய இதுபோன்ற ஆடையையே அணிகின்றனர். மேலே அணியும் இரவிக்கையைக் குப்பாயம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, பழந்தழிழ் அணியாகிய மேகலை போன்ற ஓர் இடையணியையும் அவர்கள் அணிகின்றனர்.

சென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் தெலுங்குச் சேலை என்று கூறப்படும் இன்றைய தமிழ்நாட்டு உடைக்கும் பழந்தமிழ் உடையான மலையாள உடைக்கும் ஒரு மோதல் நடைபெற்றது. இதற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று பெயர். இரு மக்களிடையில் நடைபெற்ற போராட்டத்தின் பண்பாட்டு வடிவங்களில் ஒன்றாகும் இது.

இன்று தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒரே வகையில் சேலையை அணிந்தாலும் நகர்ப்புறப் பெண்களுக்கும் நாட்டுப் புறத்திலுள்ள கீழ்ச் சாதிப் பெண்களுக்கும் ஒரு வேறுப்பாட்டைப் பார்க்க முடியும். வயல்களில் வேலை செய்யும் போது பெரும்பாலான பெண்கள் முந்தானையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெறும் இரவிக்கையோடிருப்பதை நாம் பார்க்க முடியும். முதிய பெண்களில் பலர் மார்பை மறைப்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. வேலை செய்யும் பெண்கள் முழங்காலுக்குக் கீழேயும் மறைப்பதில்லை. சேலை இந்த வகையிலும் ஒரு நெகிழ்மை பெற்றுள்ளது.

உடையைப் பொறுத்தவரை இன்று மேற்சாதி, கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சில வேறுபாடுகளை முன்பு நாம் சுட்டிக் காட்டினாலும் அவற்றுள் ஒற்றுமைக் கூறுகளே மிகுதி. நம் நாட்டுப் பெண்கள் அணியும் சேலை, உடுத்தும் முறையிலும் விலை மதிப்பிலும் பெரும் பணக்காரர்களுக்கும் மிக ஏழைகளுக்கும், உழைக்காத சொகுசுப் பெண்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் பொருந்துமாறு நெகிழத்தக்கது. இருந்தாலும் இன்று நகரங்களில் சில கல்வி நிலையங்கள் வற்புறுத்தும் சீருடைகளாலும் மிதிவண்டி போன்ற ஊர்திகளில் செல்ல வேண்டியிருப்பதாலும் மேலை நாட்டு நாகரிக வீச்சாலும் மேலே சட்டையும் கீழே குறும்பாவாடையும் அணியும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த உடை உழைக்கும் பெண்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் விலை, தையல் கூலி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சேலையே மலிவானது. அதே போல் தலைமயிரை வெட்டி விடுவதை விட நாட்டுப்புறத்துப் பெண்கள் போன்ற கோடாரிக் கொண்டையோ மணிக் கொண்டையோ மலிவானது. அதே வேளையில் தேவையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விரும்பும் வகையில் தலை அலங்காரம் செய்து கொள்ளவும் முடியும்.

அண்மையில் நகர்ப்புறங்களில் விரைவாகப் பரவி வரும் வட நாட்டு உடையாகிய சல்வார்-கம்மீசு உழைக்கும் பெண்களுக்குப் பொருந்தாது. இந்த உடையின் வரவால் உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கும் பிறருக்கும் வெவ்வேறு வகை உடைகள் நடைமுறைக்கு வரலாம்.

ஆண்களின் அணியைப் பொறுத்தவரை பூணுலைப் பற்றிய வரலாறு கவனத்துக்குரியது. பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றுக்கான விடையை நம்மால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. ஆனால் ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் குமுகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். அவ்வாறு தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம். இன்றும் பல சாதிகளில் இழவுச் சடங்கின் போது தலைமகன் பூணூல் அணிந்து பரிவட்டம் கட்டுவதைக் காணலாம். இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. அதுபோல் திருமணத்தின் போது மணமகனும் பூணூல் அணிந்து கொள்கிறான். திருமணமாகும் போது ஆடவன் ஒரு குடும்பத் தலைவனாகிறான். இன்று இவ்விரு சடங்குகளும் ஒரே மனிதனின் வாழ்வின் இருவேறு கட்டங்களில் நடந்தாலும் உண்மையில் அவை இரண்டும் நம் குமுகத்தின் இருவேறு வளர்ச்சி நிலைகளின் தொல்பொருள் தடையங்களாகப் பதிந்துள்ளன.

மனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது கீழ்ச்சாதி மக்களுக்குக் குடும்பம் வைத்திருக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கும் முகமாகப் பூணூல் அணிவதின்றும் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் முதலில் தெளிவான பொருளியல் முழக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர். இதனால் அவர்களது “மேன்மை நிலை” காப்பாற்றப்பட்டது. ஆனால் நாடு என்புருக்கி நோயால் தாக்குண்டவன் போன்று உருக்குலைந்தது. உள்நாட்டினுள் மொகலாயர்களும் கடற்கரையில் அரேபிய ஐரோப்பிய வணிகர்களும் நம் நாட்டைத் தாக்கிய போது எதிர்த்து ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து நொறுங்கியது.

இந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். முன்பு குடும்பத் தலைமை, குமுகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதை இது.

இந்தச் சடங்குக்குத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்ற பெயரும் உண்டு. அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரேகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.

இது போன்ற இருபிறப்புக் கோட்பாடு முந்துநிலை (Primitive) மாந்தர்களின் தீக்கை (Initiation)ச் சடங்கின் எச்சமேயாகும். இதுபோன்ற முந்துநிலைப் பழக்கங்களை நம் நாட்டின் பிற மக்கள் கைவிட்ட பின்னரும் அனைவரிலும் நாகரிகத்தில் உயர்ந்தோராகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர் இந்த விலங்கு மாந்தக் காலத்து மரபை இன்றும் பெருமையாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பார்த்துப் பிற சாதிப் பணக்காரர்கள் தாங்களும் பூணூல் அணிய முண்டியடித்துக் கொண்டிருப்பதும் நம் நாட்டு விந்தைகளில் ஒன்றாகும்.

பழங்குடி மக்களிடையில் வாழும் சாமன்கள் (Shamans) இதுபோல் ஒரு ஆன்மீக மறுபிறவி எடுப்பதாகக் கருதப்படுகிறார்கள். இந்த “மறுபிறவி” எடுப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தற்கொலை என்று கருதத்தக்க அளவில் உடலை வருத்தித் தம் மனஆற்றலை வளர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. நம் தொன்மங்களில் (புராணங்களில்) வரும் முனிவர்கள் தவமியற்றும் போது கைக்கொள்வதாகக் கூறப்படும் உடல்வருத்த முறைகளும் இவையும் பொருந்தி வருகின்றன. அவர்கள் பெற்றதாகக் கூறப்படும் ஆற்றல்களும் சாமன்களின் ஆற்றல்களாகக் கூறப்படுபவையும் இணைகின்றன. இவ்வாறு பழைய சாமனியமும் குமுகத் தலைமையைக் குறிக்கும் ஓர் அணியாகிய பூணூலும் சேர்ந்ததே இருபிறப்பு எனப்படும் உபநயனம். இவ்வாறு இந்தச் சடங்கை விடாமல் வைத்திருப்பதன் மூலம் நம் பண்பாட்டை எவ்வளவு காட்டுவிலங்காண்டி (காட்டுமிராண்டி) நிலையில் பார்ப்பனர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.

பூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.

சைவம் எனப்படும் சிவனியம் பூணூல் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு வைத்துள்ளது. அது முற்றிலும் பொருளியல் அடிப்படையிலமைந்தது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே இருபிறப்புக்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டும் பூணூல் அணிந்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் பூணூல் அணிந்து கொள்ள வேண்டுமாயின் திருமணம் புரியக்கூடாது. அத்துடன் ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். அவற்றில் இறுதி இரண்டு நிலைகளையும் எய்துவதற்குப் பெருஞ்செலவில் பூசை, கொடை முதலியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பணக்காரர்கள் மட்டுமே பூணூல் அணியத் தகுதி பெறுவர். இதன் மூலம் பூணூல் அணிவது செல்வச் செழுமைக்கு அடையாளமாக வேளாளர்களின் சிவனியம் ஆக்கியது. எனவே இப்பார்ப்பனியத்தை வெள்ளாளக் கட்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!

அத்துடன் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சில ஒழுக்கங்களைத் தவறாமல் கைக்கொள்ள வேண்டுமென்று வேறு விதித்துள்ளர்கள். அன்றாடம் காலை குளித்து ஈர உடையுடன் தெய்வ உருவப்படத்தின் முன் மந்திரம் ஓதிப் பூச்சொரிந்து பூசை செய்தல், மாலையில் சந்தியாவந்தனம் எனப்படும் மாலைத் தொழுகை மேற்கொள்ளல், முன்னோர்க்குத் திவசம் கொடுத்தல் என்ற பெயரில் பார்ப்பனர்க்குக் கொடையளித்தல், குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருத்தல், வேதம் படித்து ஓதல், முதலிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளத் தக்க ஒழுக்க விதிகள் சிலவாகும். இதனால் பணக்காரர்களாகிய சில கீழ்ச்சாதியினர் இந்த ஒழுக்க விதிகளை மேற்கொண்டு பூணூல் அணிந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், அகத்தீசுவரம் போன்ற ஊர்களில் வாழும் “மேற்சாதி” நாடார்கள் இத்தகைய பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை முழுமையாக மேற்கொண்டோரில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்றை உருவாக்கியவர்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியுண்டதாகக் கூறப்படுவது உண்மையில் பொற்கொல்லர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மக்கள் எழுச்சியே என்று ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டபோது அதில் பங்கு கொண்டோரில் குமுகத்தை நன்கு நோட்டமிட்டு வைத்திருக்கும் ஒருவர் பொற்கொல்லர்கள் அத்தகைய போராட்ட உணர்வுக்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். இன்றைய நிலைமையில் அக்கருத்து உண்மைதான். பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் முற்றிலும் அவர்கள் கரைந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் நகர்ப் புறத்தில் உள்ள அளவு நாட்டுப் புறத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படி இருந்தாலும் குறைந்தது எட்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற வலங்கை-இடங்கைப் போராட்டத்தில் இடங்கையினருக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் அவர்களே என்பதையும் இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் “உரிமை” பெற்றவர்களும் அவர்களே என்பதையும் கருத்தில் கொண்டால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். ஒரு நீண்ட எட்டு நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் தமக்கு மட்டும் தம் பின்னால் அணி திரண்ட மக்களுக்குக் கிட்டாத சில சிறப்புரிமைகள் கிடைத்தவுடன் தம்மை ஒடுக்கியவர்களின் வாலாகிவிட்டார்கள் என்பது ஒரு வரலாற்று விதியாக இங்கு செயற்பட்டுள்ளது. அச்சிறப்புரிமையின் பயனாக இன்று அவர்கள் தம்மை “விசுவகர்மர்கள்” என்றும் “விசுவப்பிரம்மர்கள்” என்றும் “விசுவப்பிராமணர்கள்” என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலர் திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஆவணி அவிட்டத்தின் போது பூணூலைப் புதுக்குவதும் உபநயனம் நடத்துவதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.

ஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம். வழக்கில் எவ்வாறு விளக்கம் கூறினார்கள் என்பது நமக்குத் தெரியாது.

வலங்கை-இடங்கைப் போர்களைப் பற்றிய தெளிவான செய்திகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்று ஆய்வு என்ற பெயரில் இடிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் புதுப்பிக்கப் பரிந்துரைக்கும் முயற்சிகளேயன்றி உண்மையான குமுகியல் வரலாற்றாய்வு மேற்கொள்ளயாருமில்லை. மார்க்சியர்கள் எனப்படுவோர் தம் முன் விரிந்து கிடக்கும் தமிழக வரலாறு என்ற பரந்த களத்தை வெறும் கால ஆராய்ச்சியாகக் குறுக்கி வரலாற்றாசிரியர்களைப் பயனற்ற வீண் வழக்காடல்களில் சிக்க வைத்துத் திருப்பி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கு தெறித்து விழும் சில செய்திச் சிதறல்கள் சில செய்திகளை நமக்கு மறைமுகமாகத் தருகின்றன.

12ஆம் நூற்றாண்டில் தெக்காணத்தில் கன்னட நாட்டில் விச்சலன் என்றொரு அரசன் இருந்தான். அவன் பத்மாவதி எனும் பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவள் உடன்பிறந்தவனான பசவன் என்பவனை முதலமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் அமர்த்தினான்.

இந்தப் பசவன் சிறு அகவை முதல் பார்ப்பனியத்தை வெறுத்தவன். வேதங்களின் தலைமையையும் பூணூலையும் சாதி அமைப்பையும் சிறார் மணம், கைம்மை ஆகியவற்றையும் மறுத்து லிங்காயதம் எனும் புதிய சமய ஒழுக்கத்தைப் பரப்பியவன். மன்னனான விச்சலன் சமண சமயம் சார்ந்தவன். அவனது அதிகாரிகளும் அச்சமயத்தையே சார்ந்திருந்தனர். பசவன் அவர்களை மாற்றித் தன் ஆட்களை அமர்த்தினான். இதில் அரசனுக்கும் பசவனுக்கும் ஏற்பட்ட மோதலில் விச்சலன் பசவனால் கொல்லப்பட்டான். பசவன் அதிகாரத்தைக் கைப்பற்றினான். ஆனால் நெடுநாள் அவனால் அதிகாரத்திலிருக்க முடியவில்லை. விச்சலனின் மகன் ராயமுராரி சோவி பசவனைத் துரத்திக் கொண்டேயிருந்தான். இனித் தப்பமுடியாது என்ற நிலையில் பசவன் ஒரு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது ஒரு செய்திப் பொறி.

ஒரு பார்ப்பனனாக இருந்து கொண்டு பார்ப்பன மேலாண்மைக்குக் கருவிகளான பூணூல், வேதங்கள், சாதியமைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஒரு சமயத்தை உருவாக்கியவன் என்ற வகையில் பசவன் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத் தக்கவன். அத்துடன் இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவன் வன்முறையை நாடினான் என்பது அவனைத் தனித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதனால் தான் வரலாற்றாசிரியர்கள் இவனுக்கு உரிய இடத்தைத் தராமல் இருட்டடிப்புச் செய்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது. லிங்காயதச் சமய நூல்கள் சங்கதக் கலப்பில்லாத பழங்கன்னடத்தில் உள்ளன என்பதும் கருதத்தக்கது.

பசவனின் சமயத்தைத் தழுவியர்களை வீரசைவர் என்று அழைக்கின்றனர். இவர்கள் புலால் உண்பதில்லை. பார்ப்பனியப் பண்பாட்டை முற்றிலும் ஒழிக்காத ஒரு நிலையையே இது காட்டுகிறது. பெரும்பான்மையினரான கீழ்ச் சாதியினரை இச்சமயத்திலிருந்து ஒதுக்க இதுவே போதும்.

14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது விசயநகரப் பேரரசு. இதைத் தோற்றுவித்தவர்கள் அரிகரன், புக்கன் என்ற இரு உடன்பிறந்தோர். வாரங்கல்லிலும் பின்னர் கம்பிலியிலும் உள்நாட்டு அரசர்களிடம் பயணியாற்றியவர்கள். முசுலீம்களால் கம்பிலி கைப்பற்றப்பட்ட போது சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகமதிய சமயத்தைத் தழுவி சுல்தான் முகம்மது பின் துக்களக்கிடம் பணியாற்றினார்கள்.

முசுலீம்கள் சமயத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தது பசவனின் புதிய சிவனியம். இந்த வீரசிவனியர் தங்கள் கோட்பாடுகளை ஏற்காதவர்களை இறைமறுப்பாளர்கள் என்று வெறுத்தார்கள். இவர்களின் இயக்கத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு அரசர்கள் நாட்டின் பல பகுதிகளை முகம்மதிகளிடமிருந்து விடுவித்தார்கள். எதுவுமே செய்ய இயலாதிருந்த சுல்த்தானின் கம்பிலி ஆளுனன் தன் நிலையைச் சுல்த்தானுக்கு அறிவித்தான். நிலைமையச் சீர் செய்ய சுல்த்தான் அரிகரனையும் புக்களையும் கம்பிலிக்கு அனுப்பினான்.

தென்னகத்துக்கு வந்த அரிகரனுக்கும் புக்கனுக்கும் தம்முன் விரிந்து கிடந்த ஒரு நல்வாய்ப்பு நன்றாகப் புலப்பட்டது. பார்ப்பனராகிய வித்தியாரண்யர் என்பவரை ஆசானாக ஏற்று இந்து “தர்மத்தை”க் காப்பதற்காக ஓர் அரசை நிறுவினர். இதுதான் விசயநகரப் பேரரசு.

இப்பேரரசை நிறுவி ஆண்ட முதலாம் அரிகரன் சில சீர்திருத்தங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று ‘கர்ணம்’ என்ற ஊராட்சி அலுவல் செய்துவந்த பொற்கொல்லர்களையும் வெலமர்களையும் அகற்றி அவ்விடங்களில் பார்ப்பனர்களை அமர்த்தினான். இந்தச் செய்தியைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் தென்னிந்திய வரலாறு ஆசிரியர் நீலகண்ட சாத்திரி. ஆனால் வலங்கை-இடங்கைப் போருடன் இதனை இணைத்துப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட விருதுகள் எனப்படுபவை ஒரு குழு மக்களுக்கு அரசியல் வினைகளில் ஈடுபடுவதற்குரிய உரிமையின் அடையாளங்கள். அத்தகைய உரிமைகள் வாணிகம் மற்றும் செய்தொழில் வகுப்புகளுக்கு மறுக்கப்பட்டமையால் தோன்றியவையே வலங்கை-இடங்கைப் பூசல்கள். இந்தச் சூழ்நிலையில் பொற் கொல்லர்களாகிய செய்தொழில் வகுப்பினர் ஊராட்சிப் பொறுப்பிலிருந்தனரென்றால் அது வலங்கை-இடங்கைப் போரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்ததைக் காட்டும் ஒரு தடயமே.

அதே போல் இன்னொரு தடயம் பார்ப்பனர்கள் மீதும் பிற மேல் சாதியினர் மீதும் ஆந்திரத்து மடிகர்கள் எனப்படும் கீழ்ச் சாதி மக்கள் பெற்றிருந்த வெற்றியைக் குறிப்பதாகும். மடிகர்கள்[1] எனப்படுவோர் தமிழகத்திலுள்ள சக்கிலியச் சாதியினருக்கு இணையானவர்கள். இவர்கள் இப்போதுள்ள துப்புரவுத் தொழிலினர் அல்ல. மாடு, குறிப்பாக எருமை மாடு மேய்ப்பதும் தோல் தொழில் செய்வதும் இவர்கள் தொழில்கள்.

ஆந்திரத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு தற்கால இந்து சமயத்தில் திராவிடத் தெய்வங்கள் என்ற நூலை எல்மோர் என்பவர் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் காட்டியுள்ள தெய்வ வழிபாடுகள் பலவற்றில் இம்மடிகர்கள் பார்ப்பனர்களையும் பிற மேற்சாதியினரையும் அரசர்களையும் வென்ற நிகழ்ச்சிகளின் தடயங்கள் வழிபாட்டு முறைகளில் மறைந்து கிடப்பதைக் காண முடிகிறது. பார்ப்பனர்கள் எருமையைக் கொன்று கறி சமைத்து மடிகர்களுக்கு விருந்து வைப்பது, பார்ப்பனப் பூசாரியைக் காவு கொடுப்பது போன்ற சடங்குகள் என்று வகை வகையான தடயங்கள் உள்ளன.

பசவனின் புதுச்சமயம், இடங்கையினரின் வெற்றிகள் போன்றவற்றின் எதிர்வினையே விசயநகர “இந்து”ப் பேரரசின் தோற்றத்தின் உடனடிக் காரணமேயன்றி முகம்மதியர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பதல்ல என்பதை அடுத்து நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காணலாம்.

இவற்றில் எதுவும் இங்குள்ள பண்பாட்டு(கலாச்சாரப்)ப் புரட்சியாளர்கள் கவனத்தில் வருவதில்லை.

இவ்வாறு விருதுகள் எனப்படும் அணிமணிகள் தொடர்பான பூசல்கள் இன்று மங்கிவிட்டன. இருந்தாலும் பூணூல் இன்றும் அறுபடவில்லை. பறைச்சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் கட்டிவிட்டார் என்பதால் அதைப் பாரதியார் செய்த புரட்சியாகக் கூறும் இன்றைய “மார்க்சியார்கள்” பூணூலைக் கழற்றி எறிந்த வ.ரா.வை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டினாலும் அவர் பூணூலை அறுத்தெறிந்த செய்திக்கு விளம்பரம் தருவதில்லை. பட்டு நூல்க்காரர்கள் எனப்படும் சௌராட்டிரர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்தொழிற் கொல்லர்களால் வளர்ந்து வரும் பூணூல் பண்பாட்டுக்கு ஒரு முடிவு காணுவது சாதியத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சியின் ஒரு இன்றியமையாக் கூறு ஆகும்.

இவ்வாறு பூணூல் எனப்படும் ஒருமுழ நூல்த்துண்டு நம் குமுகத்தைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. இத்துண்டு நூலை அணிவதாலேயே தாம் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரிகிறது ஒரு சிறு கூட்டம். அப்படி அணிய முடியவில்லையே என்று பிறர் எல்லோரும் ஏங்கவில்லையாயினும் அவர்களிலும் பணக்காரர்களாகிவிட்ட ஒரு மிகச்சிறு கூட்டம் தானும் ஏங்கி அவ்வாறு ஏங்குவதாலேயே முதற்கூட்டத்தின் இறுமாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இறுமாப்பை உடைக்க இருமுனைகளில் தாக்குதல் தொடுக்கலாம். ஓராண்டு அழுக்கைத் தனக்குள் அடக்கியிருக்கும் இந்த நூல்துண்டை வாய்ப்புள்ள போதெல்லாம் ஏளனம் செய்வது ஒரு முனை. இன்னொரு முனை இந்து மக்களின் ஒற்றுமை, பாரத தேச ஒற்றுமை என்று ஏமாற்றித் திரியும் இந்து முன்னணிப் பார்ப்பனத் தலைவர்களை அவர்கள் உண்மையிலேயே அத்தகைய ஒற்றுமையை விரும்புகிறவர்களானால் வெளிப்படையாக, ஊரறியத் தங்கள் “மேன்மை”யைக் குறிப்பதற்காகத் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் பூணூல்களைக் கழற்றி எறிய முன் வருவார்களா, தம் சாதியினரையும் அதுபோல் செய்ய வலியுறுத்துவார்களா என்று அறைகூவல் விடுப்பது.


அடிக்குறிப்பு:

[1] மையிடம் → மயிடம் → மகிடம் → மகிஷம் = எருமை. மகிடர்கள் → மடிகர்கள்.
“மாமயிடற் செற்றுகந்த” - சிலம்பு, வேட்டுவவரி.