தேசியம் வெல்லும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியம் வெல்லும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.6.09

தேசியம் வெல்லும் .....13

வெற்றி உறுதி:

ஈழ விடுதலைப் போராளிகள் இன்று பெருமளவில் தற்சார்பு பெற்றுவிட்டார்கள். அவர்கள் அதைக் கொண்டே தங்கள் தேசிய எதிரிகளை முறியடிப்பார்கள். ஒருவேளை எதிர்பாராத பின்னடைவுகள் வந்தாலும் அவர்களுக்கு உதவ நாம் உலகத் தமிழர்களிடையில் தமிழுக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை யூதர்களின் தாய் மொழிக்கும் யூதர்களுக்கும் நேர்ந்த இன்று பாலத்தீன மக்களுக்கு நேர்ந்துள்ள வரலாற்று அவலம் போன்று நேராமல் இருக்க வேண்டுமாயின் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தன்னாட்சி உரிமையுள்ள தாயகம் வேண்டும் என்பதைப் பரப்புவோம். குமுதம் - தீராநதி திசம்பர் இதழில் திரு. அ.முத்துலிங்கம் கூறியுள்ளது போல் தமிழ் வாழ அதற்கு ஓர் நாடு வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களிடையில் பரப்பப்பட்டுவரும் நச்சுக் கோட்பாடான மொழி முதன்மைக் கோட்பாட்டைக் கைவிட்டு மண் முதன்மை - பொருள் முதன்மைக் கோட்பாட்டைக் கைக்கொண்டு செயற்படுவோம். பொருளியல் உரிமைகளையும் பொருளியல் விடுதலையையும் முன்வைத்து அந்தக் களத்தில் முற்போக்குச் சிந்தனையும் குமுகத்தில் புரட்சித்தன்மையுள்ள மாற்றத்தையும் சாதி, சமய வேறுபாடற்ற மனித உறவுகளைக்கொண்ட புதிய குமுகத்தைப் படைக்கும் குறிக்கோளுடையவர்களை முன்னணிப் படையாகக் கொண்டு அவர்களின் பின்னால் தமிழக மக்களை அணிதிரட்டுவோம்.

இன்று தமிழகத்திலும் உலகிலும் வாழும் தமிழக மக்களிடையில் திராவிட, தமிழ் இயக்கங்கள் பரவவிட்ட ஒதுக்கீடு, மொழி முதன்மை போன்ற, தேசியத்துக்கு, தேசியப் பொருளியலுக்கு, தேசியப் பொருளியல் உரிமைக்கு எதிரான நஞ்சுகளினால் புதிய கருத்துகளும் சிந்தனைகளும் வேர்கொள்ள முடியாத அக வறுமை நிலவலாம். ஆனால் காலம் நாள்தோறும் உலகையும் அதனோடு சேர்த்து தலைமுறையையும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. களர் மிகுந்த நிலத்தில் அதனை உண்ணும் உயிரிகள் தோன்றலாம். வானிலிருந்து புது ஆற்றல்கள் பாயலாம். மண்ணின் மீது பொழிந்த அயற்பொருட்களிலிருந்து மண் புதுவளம் பெறலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் விதைகளை ஊன்றுவோம். அவை இன்றே கூட முளைக்கலாம். விதையூன்றும் இந்தச் செயற்பாடே ஒரு புரட்சிகர நடவடிக்கைதான். அதை மனமும் உடலும் சோர்வின்றி செய்து கொண்டிருப்போம். வெற்றி பெறுவோம்.

உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவோம்!


ஈழத் தமிழர்களுக்கு உதவுவோம்!

தமிழகத் தேசியத்தை வளர்த்தெடுப்போம்!

உலகில் ஒடுக்கப்படும் தேசியங்களை ஒருங்கிணைப்போம்!

தேசியம் வெல்லும்!

மார்க்சியம் வெல்லும்!

மனிதம் வெல்லும்!

(சிற்சில மாற்றங்களுடன் தமிழினி பிப்பிரவரி 2009 இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது)


தேசியம் வெல்லும் .....12

காந்தியமும் அமெரிக்காவும்:

இந்தியை உயர்த்திப் பிடித்து தன்னை ஓர் இந்துவாக முன் நிறுத்தி இந்திய மக்களைப் பனியா - பார்சிக் கும்பலுக்கு அடிமையாக்கிய காந்தியைப் போல் அமெரிக்க புசுவின் செயற்பாடு மேற்காசிய நாட்டு மக்களுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான மோதலை கிறித்துவ - முகம்மதிய மதங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக காட்டுவதாக அமைந்துள்ளது. இது ஏற்கனவே அரபு நாட்டுத் தலைமைகளின் பணம் செய்த வேலையை இன்னும் எளிதாக்கிவிட்டது. ஏற்கனவே தத்தம் தேசியங்களிலிருந்து தங்களை அயற்படுத்திக்கொண்டு முகம்மதியத் தேசியம் என்ற மாயைக்குள் சிக்கியவர்களின் தவறான நிலைப்பாட்டுக்கு இது வலுச் சேர்த்துள்ளது. இது அரபு நாடுகளின் ஆவல்களுக்கும் பொருந்திவருவதே. வல்லரசுகள்க்கு எதிரான ஒரு விசையாக உலக முகம்மதிய மக்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஒரு புரட்சிகரத் தலைமை முகம்மதியத் தேசியத்துக்கு இல்லை. அரபு நாடுகளின் அரசர்கள்தாம் அந்த இடத்தில் இருக்கின்றனர். எனவே அது ஒரு மாயமானாகத்தான் இருக்கும். அவர்களது குறிக்கோளோ முகம்மதிய அனைத்துலகியம் என்ற பெயரில் தங்கள் தலைமையில் அமெரிக்காவோடு சேர்ந்து ஒரு கூட்டு வல்லரசை நிறுவுவதாகும். இவர்களின் திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி இருக்கவே இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவர் தன் பதவி ஏற்பின் போது பேசியதும் அதே வேளையில் அரேபியத் தலைவர்கள் தங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசியவையும் நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச்செல்கின்றன.

இன்று முற்றி நிற்கும் பொருளியல் நெருக்கடியில் அண்மை ஆண்டுகளில் உருவான “உலகளாவுதலின்” விளைவாகத் தங்களிடம் குவிந்த மாபெரும் பணக் குவியலைக் கொண்டு அரபுத் தலைவர்கள் அமெரிக்காவின் மதிப்புக்குச் கட்டியம் கூறும் கட்டடங்களையும் நிறுவனங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்காவின் குரல்வளையில் அவர்கள் கைவைத்துவிட்டார்கள் என்றொரு மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த அரபுப் பெருந்தலைகள் தங்களிடம் குவிந்த பணத்தைக் கொண்டு தங்கள் சொகுசு வாழ்க்கையைத்தான் மேம்படுத்தியிருக்கிறார்களே அன்றி தங்கள் அறிவியல் - தொழில்நுட்பத்திறனை மேம்படுத்த ஒரு மின்னணுவளவு கூட முயலவில்லை. அதாவது போர் வலிமை இன்னும் வெள்ளைத் தோலர்களிடம்தான் அளவுமீறிய நிலையில் உள்ளது. எனவே அரபுத் தலைவர்கள் முயன்றாலும் வெள்ளைத் தோலர்களை எதிர்கொள்ள இயலாது. அமெரிக்காவுக்கு எதிர்முகம் காட்டி நிற்கும் ஈரான் அரபு நாடல்ல, அது பாரசீகர்களின் நாடாகும். அந்நாட்டை அரபுத் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

இந்தச் சூழ்நிலையில் அந்தந்த மண் சார்ந்த தேசியங்கள் முதலில் தங்கள் தேசங்களிலுள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இணைந்து நின்றும் உலகளவில் ஒருங்கிணைந்தும் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக்காக நாம் மேலே கூறிய செயல் திட்டத்துடன் இயங்கும் மார்க்சியக் கட்சியின் கீழ் இயங்கி ஒவ்வொரு தேசிய மக்களையும் தங்கள் பொருளியலை அயலவர்களிடமிருந்து விடுவிக்கும் இறுதி இலக்கை எட்டுவதுதான் தேச விடுதலையின் அறுதி நோக்கம் என்பதை மறந்துவிடாமல் போராடும் போதுதான் அந்தந்த மண் சார்ந்த தேசியம் வலுப்பெறும். வல்லரசியத்தின் வேர்களும் கிளைகளும் பரவியிருக்கும் இடங்களிலெல்லாம் அவை வெட்டி எறியப்படும். வல்லரசியத்துக்குத் தேசியங்களிலிருந்து பாயும் மீத்த மதிப்பு வாய்க்கால்கள் அடைபடும்; வல்லரசியம் விழும். இதை நேர்மையும் சிந்தனைத் தெளிவும் தத்தம் தேசியங்கள் மீது பற்றும் கொண்ட மார்க்சியர்களும் முகம்மதியத் தோழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகில் நெடுந்தொலைவால் பிரிக்கப்பட்டிருக்கும் பாலத்தீனமும் ஈழமும் ஒரே நேரத்தில் வல்லரசியத்தின் இரு வேறு கைக்கூலிகளான இசுரேலாலும் இந்தியாவாலும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு தேசிய மக்களையும் ஒற்றுமையுடன் செயற்படவிடாமல் பிரித்து வைக்கும் வல்லரசுகளின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு முகம்மதிய உலகியம் பேசும் கும்பல்களை இனம்கண்டு ஒதுக்க வேண்டும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....11

சீனமும் 21ஆம் நூற்றாண்டின் புத்தன் அடிமைக் குமுகமும்:

மா சே துங் மரணமடைந்து, நால்வர் குழு வீழ்ச்சியடைந்த பின்னர் சீனத்தில் மார்க்சிய வழியில் முதலாளியத்தை எய்துவதாகக் கூறி அமெரிக்க மூலதனத்துடன் “மாபெரும் தொழில் புரட்சி” அங்கு நடைபெற்றுவருகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகளில், குறிப்பாகச் சுரங்கங்களில் ஏதச் சாவுகள் உலக அளவில் அங்குதான் மிகுதி. கொடுமைகள் தாங்காது மக்கள் படகுகளில் தப்பிச் சென்ற போது அவை மூழ்கியும் பெட்டகச் சரக்கிகளில் பதுங்கியவர்கள் நசுங்கியும் செத்த செய்திகள் வந்த வண்ணமாக இருந்ததை நாமறிவோம். திடீரென்று அச்செய்திகள் நின்று போயின. என்னதான் நடக்கிறது?

சீனத்தின் “வளர்ச்சியை” இந்திய மக்களுக்கு எடுத்து விளக்குவதற்காகப் பல்வேறு செய்தியாளர் குழுக்களை இங்குள்ள சீனச் சார்பாளர்கள் விடுத்துவைக்கின்றனர். அப்படிப் போய்வந்த செய்தியாளர்கள் பதிவு செய்தவற்றுக்கு மாறான செய்திகள் அவர்கள் மூலம் கசிந்துள்ளன. அவற்றின்படி, சீனத்தில் தொழிலாளர்கள் காவலிடப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களது நடமாட்டங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன, அதாவது, அவர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது; அவர்களது பிள்ளைகள் என்ன படிப்பது என்ன தொழில் செய்வது என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்யும். ஆனால் அவர்களுடைய உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதிகள் போன்றவற்றை அரசு அல்லது அவர்களின் உழைப்பைப் பெறும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. நம் நாட்டு அடித்தள மக்களுடையதை விட அவர்களது வாழ்நிலை, மனித உரிமைகளின் வெளிப்படையான பறிப்பு (நம் நாட்டில் அது மறைமுகமாக நடைபெறுகிறது என்பதுடன் அவர்களது “உரிமைகள்” எனப்படுபவை அவர்களது பண்பாட்டுச் சீரழிவை ஊக்குவனவாகவே உள்ளன) என்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பல படிகள் உயர்ந்தது என்பதாகும். இப்போதும் நம்முடைய கேள்வி, இவ்வாறு பறிக்கப்படும் மக்களின் மீத உழைப்பு, அதன் மீத மதிப்பு யாரைச் சேருகிறது; அதாவது பெரும்பங்கு யாருக்கு, சீன ஆட்சியாளருக்கா அல்லது அமெரிக்க வல்லரசுக்கா? இன்று என்ன நிலை? நாளை இதில் இவர்களுக்குள் இது குறித்து முரண்பாடு முற்றினால் அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுமா? எப்போது? இது மனித குலத்தைப் பொறுத்தவரை இன்று மிக மிக அடிப்படையான ஒரு கேள்வி.

ஆனால் ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60%க்கும் மேல் நம்பியிருக்கும் சீனம் உள்நாட்டுச் சந்தையை, அதாவது உள்நாட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துமா? அதாவது அந்த மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமும் பண்பாட்டுத் தரமும் உயர்வதற்கு ஏற்றுமதிக்குப் போக எஞ்சிய 40%யிலிருந்து ஏதாவது கிடைக்குமா? அப்படி உயர்த்த அமெரிக்கா இடம் தருமா என்ற கேள்விகளும் நம்முன் விடைதேடி நிற்கின்றன.

ஆனால் நாம் பரிந்துரைப்பது அந்தந்தத் தேசியத்தின் அனைத்துவகை மூலவளங்களையும் அங்கு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் மூலதனத்துடன் அங்குள்ள மூலப் பொருட்களின் உதவியுடன் உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்படும் தொழில்நுட்பங்களில் அம்மக்களே தங்கள் தேவைக்காக, அதாவது தங்கள் சொந்தத் தேசீயச் சந்தைக்கு என்று பண்டங்களைப் படைப்பதும் பணிகளை வழங்குவதுமான ஒரு செயல்திட்டத்தை. அதாவது நாம் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட பொருளியலை எதிர்க்கிறோம். அரசின் பொருளியல் தலையீடு அடிப்படைக் கட்டமைப்புகளை அளவு மீறாமல் அச்சிடப்பட்ட பணத்தாள்களை கொண்டு உருவாக்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் அளவு மீறுதல் என்பது மக்களின் நுகர்வுக்காக நாட்டில் கிடைக்கும் பண்டங்கள், பணிகளின் அளவுக்கு மிஞ்சியதாகப் பணத்தின் வழங்கல் சென்றுவிடக்கூடாது என்பதாகும்.

உலகத் தேசியங்களில் உள்ள மார்க்சியர்கள் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக் களத்தில் இத்தகைய ஒரு செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதுதான் உலக வராலாற்றை, மனித குல மேம்பாட்டின் அடுத்த கட்டத்தினுள் இட்டுச்செல்லும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....10

மார்க்சியமும் தேசியமும்:

பாட்டாளிகளுக்கு நாடு கிடையாது என்று மார்க்சு – ஏங்கெல்சு இணையர் நம்பினர். இந்தியாவில் பழைய குமுகத்தை, அதன் கட்டமைப்பை உடைத்த இங்கிலாந்து அதைப் புது வடிவில் மீளக்கட்டாமல் விட்டுவிட்டது என்று எழுதிய மார்க்சு, இந்தியா உட்பட ஐரோப்பாவின் அடிமை நாடுகளுக்குரிய வரலாற்றுப் பங்கைக் கணக்கிலெடுக்கவில்லை. ஒரு விடுதலைப் போரின் சிறு அறிகுறி கூட அன்று எங்கும் வெளித்தோன்றவில்லை. ஏங்கெல்சு, சிலாவிய நாடுகளை வரலாற்றிலிருந்து அகன்ற தேசங்கள் என்றே கணித்தார். ஆனால் அயர்லாந்து விடுதலைப் போராட்டமும் இங்கிலாந்துக்குள் பணியாற்றிய அயர்லாந்தினரான தொழிலாளர்களை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் தாக்கியதும் மார்க்சையும் ஏங்கெல்சையும் அதிரவைத்தன. அயர்லாந்து மக்களின் தேசிய உரிமைகளை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அயர்லாந்து தொழிலாளர்களும் இங்கிலாந்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து பிரிட்டன் அரசை எதிர்க்க வேண்டுமென்றும் அறிவுரை கூறினர். அது எவர் செவியிலும் ஏறவில்லை. ஏறவும் செய்யாது. இன்றைய வல்லரசிய ஊழியில், (அனைத்துவகைப் பொதுமைக் கட்சிகள் உட்பட) ஆட்சியாளர்கள் வல்லரசியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தாலும் “தாய்நாட்டுப் பற்று” என்ற அவர்களது பரப்பலில் மக்கள் மயங்கிவிடுவது தவிர்க்க முடியாதது. உலகப் போரின் போது இப்போக்குக்கு, குறிப்பாக செருமனியின் காட்கி போன்றோரின் செயற்பாட்டுக்கு எதிராக லெனின் மேற்கொண்ட கொள்கைப் போர் சோவியத்துப் புரட்சி வெற்றிபெற்று உலகப் போரின் முதல் கட்டம் முடிவதுவரை வெற்றிபெறவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதைத்தான், அதாவது ஈழப் பாட்டாளியரும் சிங்களப் பாட்டாளிகளும் இணைந்து இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று, ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இந்தியாவின் மார்க்சியப் பொதுமைக் கட்சியின் நிலைப்பாடு என்று அக்கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் அண்மையில் கூறி, தான் ஈழவிடுதலைப் போரை ஏற்கவில்லை என்றார். இவர்களுக்கு பனியா - பார்சி ஆதரவு வெறியினால் அறிவே பேதலித்து கிடக்கிறதென்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தேசிய விடுதலைப் போரை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் உலாவரும் மார்க்சிய லெனினிய அல்லது மாவோயியப் பொதுமைக் கட்சிகள் எனப்படும் அமெரிக்க - சீனக் கூட்டுறவில் இயங்கும் இயக்கங்கள் பாட்டாளியக் கோட்பாட்டை அதன் மிகக் கொச்சையான வடிவில் எடுத்துரைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, முதலிடுவது என்பதே சுரண்டலுக்கு வழிவகுத்துவிடும் என்கிறார்கள்; இது ஒடுக்கப்படும் தேசியங்களின் மூலதனத்துக்கு மட்டும்தான்!

அத்துடன் அவர்கள் மண் சார்ந்த, பொருளியல் சார்ந்த தேசியத்தைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பயிற்றுவிக்கப்பபட்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டுத் தேசியம் பற்றித்தான் பேசுவார்கள். பொருளியல் மாற்றம் வளர்ச்சி பற்றி யாராவது பேசினால் அடித்தள மக்களின் பண்பாடு சிதைந்துபோகும் என்று முட்டுக்கட்டை போடுவார்கள். தொழில்நுட்பமும் விளைப்புப் பாங்கும் மேம்பட்டால் மக்களின், குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயரும் என்ற மார்க்சியத்தின் அடிப்படைப் புரிதலை இவர்கள் அறியாதவர்கள். விளைப்புப் பாங்கு உயருந்தோறும் மக்களின் பண்பாடு, அதிலும் பண்பாட்டின் அடிப்படையான மனிதர்களிடையிலான உறவு, இன்னும் குறிப்பாக, இந்தியா, தமிழ்நாடு, ஈழம் போன்று சாதிய ஒடுக்குமுறைகளால் காலங்காலமாக வலுவிழந்து கிடக்கும் குமுகங்களில் பண்பாட்டு உயர்வுக்குப் பொருளியல் விளைப்புப் பாங்கின், இன்னும் தெளிவாகச் சொல்வதனால், நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளிய விளைப்புப் பாங்குக்கு மேம்படுவது எவ்வளவு உடனடித் தேவை என்பது அவர்கள் சிந்தனைக்குள் புகவில்லை ஆனால் அதற்கு எதிராக, பண்பாட்டைக் காத்தல் என்ற கூப்பாடு எவ்வளவு தீங்கானது, அந்த முழக்கத்தை முன்வைத்தவர்கள் எத்தகைய கயவர்கள் என்பதை நினைக்குந்தோறும் அவர்கள் மீது எமக்குக் கட்டுக்கடங்காத வெறுப்பும் சினமும் உருவாகின்றன. இவர்கள் முன்வைக்கும் நஞ்சினும் கொடிய இந்தத் தீய கருத்தை இதுதான் மார்க்சியம் என்று நம்பி ஏற்றுக்கொள்வோரின் அறியாமை அல்லது செம்மறியாட்டுத்தனம் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடுகிறது.

இவர்கள் பரப்பலை முறியடித்து, ஏழை நாடுகளிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் இன்று பெருவழக்காய் நிலவுகின்ற விளைப்புப் பாங்குக்கு அடுத்த விளைப்புப் பாங்குக் கட்டத்துக்கு அத்தேசத்தை இட்டுச் செல்லும் செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் உண்மையான மார்க்சியர்கள். அவ்வாறு ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளிலும் குக்குலக் குமுகம் நிலவுவதால் அங்கு அடிமைக் குமுகத்துக்கான செயல்திட்டம் வேண்டும் என்கிறோம். இது சரிதானா? செயற்படுத்த முடியுமா என்றொரு கேள்வி எழும். இதற்கு விடையை இன்றைய சீனம் தருகிறது.

(தொடரும்)

தேசியம் வெல்லும் .....9

யாரைத்தான் நம்புவது மக்கள் நெஞ்சம்?

குணாவைக் குறித்து இன்னும் தொடர்ந்து செல்வதானால், க.ப.அறவாணன் போல் ஐராவதம் மகாதேவன் போல், நம் பல்கலைக் கழகங்கள் போல் தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் சமணர்களிடமிருந்துதான் வந்தன என்ற கேடு பயக்கும் கருத்தை மிகத் திறமையாக முன்வைத்துள்ளார் அவர். சமணர்களை ஆசீவகர்கள் என்றும் அவர்கள் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் போன்றும் அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை உடையவர்கள் என்றும் அவர்கள்தாம் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே வானியல் அறிவைத் தந்தவர்கள் என்றும் அவரை நம்பும் தமிழ், தமிழக, தமிழ்த் தேசிய ஆர்வலர்களை நம்ப வைத்துவிட்டார். உண்மையில் ஆசீவகர்கள் எனப்படுவோர் பிறந்த மேனியோடு திரியும் மனம் பேதலித்த அம்மணர்கள்; அமண்பேய்கள் என்று சம்பந்தர் இழித்துரைத்த, ஒற்றர்களாகவும் தமிழகத்தைப் பொருளியலில் சுரண்டிய வெளிவிசைகளின் திரையாகவும் செயற்பட்ட, திசைகளையே ஆடையாகக் கொண்டவர்கள் எனப் பொருள்படும் திகம்பரர் என்ற பெயரால் அறியப்படும் சமண சமயப் பிரிவினர். சிவனியர்களை வந்தேறிகள் என்று இன்று குணா முன்வைக்கும் ஆய்வுரையைப் பழம் வரலாற்றுடன் ஒப்பிடும் போது சமணர்களாகிய இன்றைய பனியாக்களை நம் கண் முன் கொண்டு நிறுத்தவில்லையா?

அன்று அம்மணர்களைத் தமிழ் மண்ணிலிருந்து அகற்றிய சிவனியம் அயலிலிருந்து வந்ததென்றால், “நம்மவர்”களான அம்மணர்களை “வந்தேறி”களான சிவனியர்கள் வெளியேற்றினர் என்று அன்றைய வரலாற்றுக்குப் பொருள் கொள்வதா? அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தை மிகுந்த விரைவில் கைப்பற்றிக் கொண்டிருக்கும் சமணர்களாகிய மார்வாரிப் பனியாக்களைத் தமிழகத்தின் மூலக் குடிகள் என்றும் தமிழகத்தைத் அவர்களிடம் விட்டுவிட்டு குணா ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தும் தமிழகத்தினுள் வாழும் “வந்தேறி”களை வெளியேற்றுவது என்றும் பொருள்கொள்ள வேண்டுமா?

வரலாறு, மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமை என்பவை அவற்றுக்கு உரிமைகொண்டாடும் மக்களின் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளையே சார்ந்துள்ளன. அப்படித்தான் இன்று இந்தியப் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பனியாக்களே தமிழகத்துக்குப் பண்பாட்டுக் கொடை வழங்கியவர்கள் என்ற “வரலாற்று வரைவு” நம் பல்கலைக் கழகங்களின் மூலம் சம்பளம் பெறுவோர், பெற வாய்ப்பிருப்பதாக நம்புவோர்களின் மண்டையில் படிந்திருக்கிறது. அது போலவே வெள்ளைத் தோலர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவையே மேன்மையானவை என்ற கருத்தும் படிந்துள்ளது. இந்நிலையில் குணாவின் “ஆய்வுரை”களைக் காட்டி ஆசீவகத்தைத் தன் உட்பிரிவுகளில் ஒன்றாகக் கொண்ட சமணத்தைச் சார்ந்த தாங்களே இம்மண்ணுக்கு உரியவர்கள், பிறரெல்லாம் வந்தேறிகள், அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று தங்கள் பொருளியல், அரசியல், படையியல் வலிமையைக் காட்டி அச்சுறுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இன்னுமொரு முகாமையான கேள்வி, வானியலையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் கடலோடிகளும் வாழ்வின் அனைத்துத் தொழிற்பிரிவினரும் வான் குறித்த அறிவியலில் தங்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வாய்ப்பிருக்கும் போது எந்தவொரு தொழிலுக்கும் உரிமை கொண்டாட முடியாத, ஒரு மெய்யியலுக்கு மட்டும் உரியவர்களாக குணா முன்வைக்கும் இந்த ஆசீவகர்கள் எப்படித் தமிழர்களின் ஒட்டுமொத்த வானியலுக்கும் உரிமை கொண்டாட முடியும்? குணாவின் இந்த “ஆய்வு முடிவு” எஞ்சாமையாக அறவாணன், ஐராவதம் அணுகலோடு ஒத்துவருவது எப்படி? இந்த “ஆய்வுக்காக”த்தான் அவரையும் நெடுஞ்செழியனையும் ஒரே இடத்தில் சேர்த்து இருத்தினார்களா? அமர்த்தியவர்கள் யார்? தமிழக மக்களின் நிலையைக் கண்டு இரங்குவதா, கலங்குவதா, அழுவதா, ஆத்திரப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை அம்மா!


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....8

தேசிய மக்களும் வந்தேறிகளும்:

தேசியம் என்பதன் வரையைறை நில எல்லை என்பதை மறந்துவிட்டு மொழிதான் என்று நம் “தமிழ்” அறிஞர்களும் “தமிழ்” இயக்கத்தாரும் “தமிழ்த் தேசிய” இயக்கங்களும் இடைவிடாமல் முழங்கி நம் இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரின் மூளைகளையும் உலர் சலவை செய்து வைத்துள்ளனர். தமிழ்த் தேசியம், பொருளியல் சுரண்டல் பற்றிப் பேசி வந்த வெங்காளூர் குணா, சாதி வெறிபிடித்து அமெரிக்காவின் பண உதவியில் செயற்படும் விடுதலை இறையியல் கூட்டத்தின் கைக்கருவியாகி தமிழகத்தின் ஒவ்வொரு மக்கள் குழுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் வந்தேறிகள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கிறார். இறுதியாக அவர் கையில் எடுத்துக்கொண்டிருப்பது சிவனியத்தையும் சிவனியர்களையும். அவரது பின்னால் நின்றுகொண்டு அவரை ஊக்குவோரோ, தமிழக அடித்தள மக்களை நசுக்குவதற்குத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்யவென்று தம் தலைவர்களால் வெறியேற்றப்பட்டிருக்கும் முக்குலத்தோர் போன்ற “போர்ச் சாதிகள்” எனப்படுபவற்றைச் சேர்ந்த ஒரு படித்த கூட்டத்தினர். இவ்வாறு ஒடுக்கும் சாதியினரது தலைமைகளது பொதுவான வரலாறோ, தமிழகத்தின் மீது படை எடுத்த அயலவர்களுக்கு ஒத்துழைப்புத் தந்ததாகும். அப்படித்தான் இன்றைய ஆதிக்க நிலையை எய்தியுள்ளன தமிழகத்தின் உயர்சாதிகள் எல்லாம். இதில் ஓர் அவலம் என்னவென்றால், முதுகுளத்தூர் கலவரம் முடிந்த உடனே அதைப் பற்றி முதுகுளத்தூர் கலவரம் என்ற தலைப்பில் நூல் ஒன்று எழுதிய தினகரன் என்பவர் தனது பிரிவான காரண மறவர்களுக்கு எதிரான கொண்டயங்கோட்டை மறவர்கள் எங்கோ கன்னட தேசத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். நான் இப்போது குணா வகையறாக்களைக் கேட்கிறேன், தமிழகத்துக்கு உரியவர்கள் என்று புறநானூறு கூறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் எனப்படும் நான்கு வகையினரையும் தவிர்த்துப் பிறர் அனைவரையும் தமிழக எல்லைக்குள்ளிருந்து துரத்தி விடுவோமா? அப்படித் துரத்துவதானால் எந்தக் காலத்தில் இருந்த எந்தத் தமிழகத்தின் எந்த எல்லைக்கு வெளியே அவர்களைத் துரத்துவது?

தெலுங்கர் என்று குணாவுடன் சேர்ந்து அவரைத் தாங்கி நிற்கும் தமிழர் களம் வசைபாடி வந்த, வை.கோபாலசாமியாக இருந்து இன்று வைக்கோவாக மாறியுள்ள கலுங்குப்பட்டியாரை, ஈழத் தமிழர்களை ஒழித்தே தீர்வது என்று தமிழகத்தினுள் கச்சைகட்டிக் கூப்பாடு போட்டுத் திரியும், தமிழ்த் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவராகிய, சி.கே. வாசன் வகையறாவினரின் கொடுமதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்மையில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பாராட்டியது எப்படி?

எம்மைப் பொறுத்தவரை வைக்கோ என்று அவர் தில்லிக்குப் போனாரோ அன்றிலிருந்தே அவர் தன் பிற திராவிட இயக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்றும், “தமிழ்”, “தமிழ்த் தேசிய” அமைப்புகளினதும் இயக்கங்களினதும் தலைமைகளைப் போன்றும் பனியா - பார்சிகளின் சுரண்டல் என்ற அடிப்படைச் சிக்கலிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பும் அரசியலையே செய்துவருகிறார் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

இந்தக் கேள்விகள், குழப்பங்களிலிருந்து தெளிவதற்கு ஓர் அடிப்படையை நாம் உருவாக்க முடியும். அதாவது ஒரு தேசத்தின் இன்றைய எல்லையிலிருந்து ஒருவரைத் துரத்தினால் அவர் சென்று அடைவதற்கென்று பிறிதொரு தேசத்தில் அரத்த உறவினர்களோ நிலபுலன்களோ இருந்து தன் நிலம், தன் வீடு, தன் மக்கள் என்று சென்றடையவும் அங்குள்ளவர்கள் அவர்களைத் தங்கள் மக்கள் என்று தங்கள் தேசத்துக்குள் ஏற்றுக்கொள்ளவும் செய்வார்களானால் அப்படிப்பட்டவர்களைத் துரத்திவிடலாம். அப்படி இன்றி அயல் மண்ணில் உள்ள தங்கள் வேர்களை முற்றிலும் இழந்து தங்கள் அனைத்துப் பொருளியல், பண்பாட்டியல் வேர்களைத் தாங்கள் இன்று வாழும் தேசத்தில் கொண்ட அனைவரும் அத்தேசத்தின் மக்கள்தாம். நம் தேசத்தில் முதலீடுகள் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டு செல்வோர் இன்று இந்த மண்ணில் வேர் கொண்டவர்களாக இருந்தாலும் நம் தேசத்து மக்கள் ஆகமாட்டார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், இந்திய ஆளும் கூட்டமும் தமிழக அரசியல் இரண்டகர்களும் 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளில் உருவாக்கிய தமிழகத்தில் அன்றைய குடிமக்களாக இருந்த அனைவரையும் தமிழகத் தேசியக் குடிமக்களாக வரையறுக்கிறோம். அந்த நாளில் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்து இங்கு முதலிட்டு ஆதாயத்தை வெளியே எடுத்துச் செல்வோரைத் தமிழக மக்களாகக் கொள்ளக் கூடாது என்பதும் எமது உறுதியான நிலைப்பாடு. அத்துடன் அன்றைய நாளில் தமிழக அரசியல் இரண்டகர்கள் “விட்டுக்” கொடுத்ததால் நாம் பறிகொடுத்த நிலங்களும் தமிழகத் தேசத்துக்கு உரியவை. அதன் பின்னால் பறிகொடுத்த கச்சத் தீவும் தமிழகத் தேசத்துக்கு உரியது.

இது போன்ற ஒரு வரையறையில் நாம் மேலே கூறியுள்ளபடி உலக நாடுகள் அனைத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் தேசங்கள் அனைத்தும் ஓர் உலகமாகவும் வல்லரசியத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளெல்லாம் ஓர் உலகமாகவும் பிளவுண்டு கிடக்கின்றன. இந்தப் பிளவில் ஒடுக்கும் முதல் உலகம் தம்மிடையில் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ஒடுக்கப்படும் தேசியங்கள் அத்தகைய ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன. அந்த ஒருங்கிணைப்பு இல்லாமை அல்லது சிதறிய நிலைமைக்கு முகம்மதிய அனைத்துலகியக் கோட்பாட்டுக்கு முகாமையான பங்குண்டு. அமெரிக்கா தலைமையிலான வல்லரசியத்தோடு நெருக்கமான, இறுக்கமான உறவு வைத்துள்ள அரபு நாட்டுத் தலைமைகள் பாயவிடும் பணத்தில்தான் இந்த முகம்மதிய அனைத்துலகியம் இயங்கி வருகிறது. எனவே வல்லரசிய நலன்களுக்கு எதிராக ஒருபோதும் அது செயல்படாது. அதனை நம்பினால் ஒடுக்கும் தேசங்கள் ஒரு நாளும் தங்கள் அடிமை விலங்குகளைத் தகர்க்க முடியாது. அந்தந்தத் தேசங்களிலுள்ள முகம்மதியர்களை இந்த முகம்மதிய அனைத்துலகியம் தம் தேசிய விடுதலைக்காகப் போராடும் அணிகளுக்கு எதிராக நிறுத்தி அதன் போராட்ட வலிமையைச் சிதைத்துவிடும். இதற்கு மறுக்கவொண்ணாத சான்றாகத் திகழ்வது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.

தேசம் என்பது நில எல்லை அடிப்படையானது என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நில எல்லை கூட நிலையானதல்ல. மொழி, மதம், இனம் என்ற பொது அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நில எல்லைக்குட்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் பிற பகுதியினர் மீது மேலாளுமை செலுத்தினாலோ அவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது ஒன்றுபட்ட அந்நாட்டின் வளங்களில் அப்பகுதி மக்களுக்கு நயமாகக் கிடைக்க வேண்டிய பங்கைத் தராமல் தாமே எடுத்துக்கொண்டாலோ நாளடைவில் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட பகுதிகளின் மக்கள் தனித் தேசங்களாகப் புரிந்து செல்லும் முயற்சியில் இறங்குவார்கள். எனவே நாடு எனும் ஒரு நிலப்பரப்பிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமான உரிமைகளுடன் அந்த நிலப்பரப்பிலுள்ள அனைத்து வகை வளங்களின் மீதும் நயமான, சமமான பங்கும் கிடைத்தால் அந்த நாட்டின் நிலப்பரப்பு ஒரு தேசத்தின் நிலப்பரப்பாக மாறும். இந்த சம உரிமையாக்கம் விரிவடையும் போது எவருடைய கட்டாயம் அல்லது தூண்டுதலும் கூட இன்றி உலகமே ஒரு தேசமாக மாறும். எடுத்துக்காட்டாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக மாறியுள்ளதைக் கூறலாம். இந்தப் போக்கை இன்னும் விரிவாக்கினால் உலகமும் தேசமாக மாறும். மனித குலத்தின் குறிக்கோள் இதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பமும் முயற்சியுமாகும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....7

இருவேறு உலகங்கள்:

இன்று உண்மையில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்று அமெரிக்காவின் தலைமையிலான அனைத்து நாடுகள், மறுபக்கம் இந்த நாடுகளின் உள்ளே சிறைப்பட்டுக் கிடக்கும் எண்ணற்ற தேசங்கள்.

இவ்விடத்தில் தேசம் என்பது பற்றித் தோராயமான ஒரு வரையறையை முயல்வோம்.

தேசத்தின் அடிப்படை நிலம். நிலம் இன்றி, நில எல்லை இன்றி ஒரு தேசியத்துக்கு எந்த அடையாளமும் அடிப்படை ஆனதல்ல. நிலம், பொழுது ஆகிய இரண்டுமே முதற்பொருள் என்ற தொல்காப்பியத்தின் அடிப்படைக் கருத்தும் இதை வழிமொழிகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு விடுதலை பெற்ற நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அயல் மொழியான இந்தியைக் கூட பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டனர். காந்தியின் “இந்து” சமயப் பசப்பல்களைக் கூடப் பொறுத்துக்கொண்டனர்.

தமிழ்த் தேசிய எழுச்சியின் போது, அப்போது தேசத்தின் பொருளியலில் முன்னணியில் இருந்த தெலுங்கர்களில் பலர் தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக்கத் தயங்கவில்லை. சாதிப் பட்டங்களை மக்கள் புறக்கணித்தனர். நம்ப முடியா அடிப்படை மாற்றங்களை மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால் தலைமை தாங்கிய கயவர்கள்தாம் தேசியப் பொருளியல் சுரண்டலிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற குறிக்கோளை முன்வைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்து ஒதுக்கீடு, சிலை வைத்தல், மணிமண்டபம் அமைத்தல் என்று அனைத்து மட்டங்களிலும் மக்களை அணு அணுவாகப் பிளவுபடுத்தியும் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பொறுக்கிகளை வளர்த்தும் தங்களை வளர்த்துவிட்டுத் தமிழ்த் தேசத்தையே சிதைத்துப் சின்னாபின்னமாக்கி வைத்துள்ளனர். பொருளியல் விடுதலை அல்லது உரிமை என்ற குறிக்கோள் கைவிடப்பட்டதால் பிறமொழி பேசும் தமிழக மக்களிடையிலுள்ள பிற்போக்கினரின் கை ஓங்கி அனைவரும் இன்று பனியா – பார்சிகளிடம் கடன்வாங்கித் தொழில் செய்யவைண்டிய நிலைக்குத் தாழ்ந்துள்ளனர். அவ்வாறே செல்வம் படைத்த பிற சாதியினரும். அப்படியானால்தான் வருமானவரித் துறையினரின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது இன்றைய நிலை. தொழில் சாராத பிறர் வாக்குவங்கியாக மாற்றப்பட்டுள்ளனர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட வைக்கோ தெலுங்கு பேசும் தமிழக மக்களை உருவாக்கிய வாக்கு வங்கியை உடைக்க தெலுங்கரான விசயகாந்தை ஆயத்தப்படுத்திக் களத்தில் விட்டுள்ளார் தமிழீனத் தலைவர்.

தமிழக எல்லைகளை அண்டை மாநிலங்கள் உரிமை கோரும் போது அதற்கு எதிராக உருவாகியிருக்க வேண்டிய எழுச்சி கூட “தமிழ்த் தேசிய” இயக்கங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டது. எல்லை மாவட்டங்களில் வாழும் அண்டை மாநில மொழி பேசும் தமிழக மக்கள் மீது வெறுப்புப் பரப்பலை இந்த “தமிழ்” அமைப்புகள் தூண்டிவிட்டுள்ளன. அதனால் அண்டை மாநிலங்கள் அம்மக்களிடையில் தங்களுக்குச் சார்பான மனநிலையை எளிதில் உருவாக்க முடிகிறது, அண்டை மாநிலங்கள் தங்கள் விளைநிலங்களுக்கு வழங்கிய நீரை மறுத்த போது தாம் வாழும் தமிழகத்தின் அரசோ அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் மீது தங்கள் தாய்மொழியைக் காரணமாக வைத்துக் காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொட்டும் போது தாங்கள் வாழும் எல்லை மாவட்டத்தைத் தம் தாய்மொழி பேசும் அண்டை மாநிலம் உரிமை கேட்பதற்குத் துணையாக நின்று வென்றால் நம் வேளாண்மைக்கு நீரும் கிடைக்குமே என்று அண்டை மாநிலத்தாரின் பரப்பலுக்குப் பலியாகவும் கூடுமே.

தமிழக மீனவர்களை இலங்கைப் படையும் இந்திய அரசும் சேர்ந்து 400 பேருக்கு மேல் சுட்டுத் தள்ளிய பின்னும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்த மீனவ மக்களிடையிலிருந்து கூட ஓர் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. ஒப்பாரியுடன் பண உதவிதான் கேட்க வைத்துள்ளனர் அங்குள்ள தலைமைகள். இந்தத் தலைமைகள் ஆட்சியாளர்களுடன் கள்ள உறவில்லை, “நல்ல” உறவையே வைத்துள்ளனர். கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கு இத்தகைய “உதவிகள்”தாமே வாய்ப்பாக அமையும்?

தன் கணவன், தந்தை, மகன் ஆகிய எவருடைய உயிருக்கும் விலை வைத்துச் செயல்படும் தங்களைச் சேர்ந்த கங்காணிகளுக்கும் அவர்களை இயக்கும் ஆட்சியாளர்களாகிய கொடும் கொள்ளையர்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புமாறு அந்த அப்பாவிப் பெண்களுக்கு எடுத்துச்சொல்வார் யாருமில்லை. அது போல் தாக்குதலுக்கு ஆளாகி மக்கள் உயிரிழந்ததற்கு எதிர் நடவடிக்கையாகப் படகுகளை முடக்கிப் போட்டுத் தங்கள் பிழைப்பையும் மக்களின் உணவு வழங்கலையும் மட்டும் நிறுத்த வழிகாட்டும் தம் தலைவர்களைப் புறக்கணித்து நாட்டின் உட்பக்கம் திரும்பி ஆட்சியாளருக்குத் தம் குமுறல் சென்றடையும் வகையிலான போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்ட எவருமில்லை. ஒவ்வொரு நாளும் தாமும் தம் குடும்பமும் உயிர்வாழத் தம் உயிரையே பணயம் வைத்து கொடும் கடலோடு போராடி வாழும் மீனவர்களையே இவ்வளவு கோழைகளாக்கிவிட்டார்களே, அப்படி இருக்க சராசரித் தமிழ் மக்களின் மனநிலையை எப்படி ஆக்கியிருப்பார்கள்?

(தொடரும்)

தேசியம் வெல்லும் .....6

மார்க்சியமும் அமெரிக்காவும்:

பதிவாகியுள்ள மனித வரலாற்றில் மனிதனின் மெய்யியல் எய்தல்களில் மிக உயர்வானது மார்க்சியம். அது நடைமுறையை அல்லது களச் செயற்பாட்டை மெய்யியல் அல்லது அறிவியலின் அறுதி நிலையாகக் கொண்டுள்ளது. உலகில் மிக உயர்ந்த மெய்யியலைக் கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நம் அறிவு“சீவி”களில் பலர் முன்வைக்கும் இந்திய மெய்யியலின் “குண்டலினி” எனத் தவறாகக் குறிக்கப்படும் “குண்டிலினி”க் கோட்பாட்டைப் போல் குண்டி மீது அமர்ந்து கண்ணிரண்டையும் மூக்குநுனி மீது அல்லது கொப்புளின் மீது குவித்து மூச்சை எண்ணிக் கொண்டிருப்பதால் மனித இனத்தின் மட்டுமல்ல அண்டத்தின் மறையங்களையெல்லாம் ஒளிவு மறைவின்றி அறிந்துகொள்ளலாம் என்று சொல்லி நாட்டுக்கும் மக்களுக்கும் வளம் சேர்க்க வேண்டிய திறன் மிக்க மனித ஆற்றல்கள் அனைத்தையும் அரங்குகளுக்குள் அமர்த்தி அழிம்பு வேலை செய்யவில்லை மார்க்சியம். இயற்கையும் மனிதனும் நிகழ்த்தும் செயல்களையெல்லாம் கண்டு நாள்தோறும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும் கோட்பாட்டு அடித்தளம் கொண்ட வளமான மெய்யியல் ஆகும் அது. எல்லைக்குட்பட்ட வாழ்நாளைக் கொண்ட நேர்மையான மனிதர்களாகிய மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் டிராட்கியும் சேகுவாரா போன்றவர்களும் தங்கள் வெற்றிகளாலும் தோல்விகளாலும் அக்கோட்பாட்டுக்கு மேலும் மேலும் வளம் சேர்த்துள்ளனர். இவர்கள் அன்றி அமெரிக்க ஆளும் கும்பலும் கூட மானிடத்துக்கு எதிரான தன் அழிம்பு வேலைகளுக்கு நேர்மையான மார்க்சிய மரபின் பெருமை மிக்க மனிதர்களின் குழப்பங்களையும் மயக்கங்களையும் தவறுகளையும் பயன்படுத்தி உலகின் பெரும் கொடுமை மிக்க வல்லரசாகத் தம் நாட்டை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வாறு பயன்பட்டவற்றில் ஒன்று மார்க்சியத்தின் பாட்டாளியப் பிறழ்ச்சி, மற்றொன்று மாந்தவியலுக்கும் குமுகியலுக்கும் மார்க்சியம் தந்துள்ள மிகப்பெரும் பங்களிப்பு. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்சியம் இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது.


1. இயங்கியல் பருப்பொருளியம்.

2. வரலாற்றுப் பருப்பொருளியம்.

இயங்கியல் பருப்பொருளியம், இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை இயங்கியலாகச் செயற்படுகின்றன என்கிறது. இயங்கியல் என்பது எதிரிணைகளின் மோதல், ஒன்றையொன்று அழிக்காத, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் தன்மையுள்ள எதிரிணைகளின் முரண்பாடுகளிலிருந்து மாற்றங்கள் இடைவிடாமல் நிகழ்கின்றன. மாற்றம் மேல் நோக்கியதாகவும் இருக்கலாம்; கீழ் நோக்கியதாகவும் இருக்கலாம். முரண்பாடுகளில் எது வெற்றிபெறுகிறது என்பதைப் பொறுத்தது அது. பருப்பொருளிலிருந்து தோன்றிய சிந்தனையாகிய நுண்பொருளும் கூட பருப்பொருளுடன் இயங்கியலாகச் செயற்படுகிறது என்கிறது மார்க்சியம்.

வரலாற்றுப் பருப்பொருளியம் சொல்வது, ஒரு குமுகத்தின் குமுகத் தன்னுணர்வு ஆகிய பண்பாடுகள் எனப்படும், தெய்வம், குடும்பம், உணவு, அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியங்கள், சட்டம், அரசியல், நம்பிக்கை முதலியவை அக்குமுகம் இருக்கும் பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொரு பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மனித உறவுகள் அமைகின்றன. பண்ட விளைப்புப் பாங்கு மேம்படுந்தோறும் மனித உறவுகளும் மேம்படுகின்றன. குக்குலக் குமுகம் ஒருவகை மனித உறவுகளைக் கொண்டிருந்தது. அப்போது அண்டைக் குழுக்களோடு போர் நடந்தால் பிடிபட்டவர்களைக் கொன்றார்கள் அல்லது கொன்று தின்றார்கள். அடுத்த விளைப்புக் கட்டமான அடிமைக் குமுகத்தில் பிடிபட்டவர்கள் அடிமைகளாயினர். நிலக்கிழமைக் கட்டத்தில் அடிமைகள், அதைவிட மேம்பட்ட உரிமைகள் கொண்ட கொத்தடிமைகள் ஆயினர். அதற்கும் மேம்பட்ட முதலாளியக் கட்டத்தில் கொத்தடிமைகள் தொழிற்சாலைக்கு வெளியே சட்டப்படி பிறருக்குச் சமமான உரிமையுள்ள கூலித்தொழிலாளிகளாயினர், இனி வர இருக்கும் பொதுமைக் குமுகத்திலே தொழிலாளி முதலாளி வேறுபாடு இருக்காது; அனைவரும் சமம் எனும் நிலை உருவாகும் என்பது வரலாற்றுப் பருப்பொருளியத்தின், அதாவது மார்க்சியத்தின் நிலைப்பாடு.

குக்குலக் குமுகம் → அடிமைக் குமுகம் → நிலக்கிழமைக் குமுகம் → முதலாளியக் குமுகம் → பொதுமைக் குமுகம் என்ற வரிசையில் குமுகம் மேலேறிக்கொண்டிருக்கிறது என்று மார்க்சு கூறினார். எந்தச் சட்டத்தாலும் அல்லது நடவடிக்கையினாலும் இந்த வரிசையில் வராமல், ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்துள்ள கட்டங்களுக்குள் நுழையாமல் எந்தக் குமுகமும் தாண்டிச் செல்ல முடியாது என்று வரையறுத்த மார்க்சே உருசியாவில் பழைய குக்குல வடிவாகிய முந்தியல் பொதுமைக் கூறுகள் கொண்ட ஊர் அவைகளைக் கண்டு அதிலிருந்து நேராக பொதுமைக் குமுகத்துக்குள் நுழைந்துவிட முடியுமோ என்று ஐயுற்றார். அதற்கேற்ப லெனின் முழு முதலாளியத்தினுள் நுழையாமல் இருந்த உருசியக் குமுகத்தில் முதலாளியம் முழுமை பெற்றுவிட்டதாகக் கணித்து பொதுமைப் புரட்சியை நடத்தினர். அது போலவே சீனத்திலும் பிற நாடுகளிலும் பொதுமைப் புரட்சிகள் நடந்து தோல்வியைத் தழுவின.

லெனினை மறுத்து அவரது தோழரான டிராட்கி கூறியது போல் உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் முதலாளியம் முழுமை பெற்ற பின்தான் பொதுமைப் புரட்சி நிலையான வெற்றியைத் தரும் என்ற முடிவுதான் சரி என்பதை நடைமுறை தெளிவாக்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஏழை நாடுகளில் முதலாளியம் முழுமைபெற வேண்டும். அதை இயலச் செய்வது மார்க்சியர்களின் கடமையாகும். ஆனால் நடப்பது என்ன? நடந்தது என்ன?

சோவியத்தின் தலைமையில் இருந்த மூன்றாம் பொதுமை அனைத்துலகியம் ஆயுதப் புரட்சி மூலம் தங்கள் தங்கள் நாடுகளில் பொதுமைக் குமுகத்தை அமைக்கும் செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தது. அதற்கு அது முன்வைத்த செயல்முறை நிலத்தை உழுதொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுப்பது, நிலவுச்ச வரம்பு, தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு, சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை வழங்குதல் என்பவையாகும். ஐரோப்பியரின் தலையீட்டினால் நிலக்கிழமையின் ஊடே முதலாளியக் கூறுகள் ஏழை நாடுகளில் அரும்பியிருந்த சூழலில் இச்செயல்முறை அதைக் கருவிலேயே கருக்கியது. அதே நேரத்தில் அமெரிக்கா இதே செயல்முறையைத் தன் கீழிருந்த நிகர்மை அனைத்துலகியத்தின் மூலம் முன்வைத்தது. அனைத்து ஏழை நாடுகளும் இவ்விரண்டு வல்லரசுகளில் ஒன்றின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் வளர்ச்சியைத் திட்டமிட்டன. அதற்கு உதவுவது என்ற பெயரில் ஏழை நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள், மனித வளம், ஆற்றல் வளங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை உறிஞ்சி இரு வல்லரசுகளும் எடுத்துக் கொண்டன. என்புருக்கி நோயாகிய ஆட்சியாளர் - கட்சிவாணர்களின் ஊழலால் பீடிக்கப்பட்ட சோவியத் வீழ்ந்தது. அமெரிக்கா பேயாக, காட்டேரியாக வளர்ந்து நிற்கிறது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. மார்க்சியத்துக்கு ஒப்பற்ற ஒரு பட்டறிவு அதன் நடைமுறைச் செயற்பாட்டிலிருந்து கிடைத்துள்ளது. அடுத்த நடவடிக்கைக்கு, அதாவது அந்தந்த நாட்டில் அல்லது தேசத்தில் பெருவழக்காக இருக்கும் பொருளியல் கட்டத்திலிருந்து அதற்கு அடுத்த பொருளியல் கட்டத்துக்கு அந்தந்த நாட்டை அல்லது தேசத்தை அழைத்துச் செல்வதற்கு அது தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோவியத்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா சீனத்தோடு கூட்டுச் சேர்ந்து உலகிலுள்ள ஏழை நாடுகளில் எல்லாம் அங்கங்கே உள்ள தேசிய முதலாளிய அரும்புகளை அழித்தொழிப்பதோடு அத்தேசியங்களை எதிர்காலத்தினுள் இட்டுச் செல்லத்தக்க துடிப்பும் துணிவும் தெளிவும் நேர்மையும் உள்ள இளம் தலைமுறையினரையும் அழித்தொழிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றி வருகிறது. பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் முதலாளிய உருவாக்கத்துக்கு எதிரான மனநிலையை அனைத்து மட்டங்களிலுள்ள மக்களின் மனதிலும் விதைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது.

இதற்காக வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த நாட்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஒதுக்குவதிலும் குறையாத அளவு பணத்தை ஏழை நாடுகளில் செலவிடுகின்றன. பணத்தை வாரி இறைத்து ஏழை நாடுகளில் “தொண்டு” நிறுவனங்களை இயக்குகின்றன. அவற்றின் முதன்மைப் பணி பாட்டாளியக் கோட்பாட்டு நஞ்சை விதைப்பது. அடுத்து, தாங்கள் செய்யப்போகும் “தொண்டு” பற்றிய தெளிவை அடைவதற்காக உள்ளூர் அடிப்படைச் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்பது. இந்தத் தரவுகள் வல்லரசு நாடுகளுக்கு ஏழை நாடுகளின் அனைத்துக் கூறுகளையும் வெள்ளிடை மலைபோல் காட்டுகின்றன. அவற்றிலிருந்து அந்நாடுகளிலிருந்து எவ்வெவற்றைச் சுரண்டலாம், எவ்வாறு மக்கள் குழுக்களிடையில் மோதல்களை உருவாக்கலாம் எவ்வெவற்றை அழிக்கலாம் என்பவை போன்ற கேள்விகளுக்கு வல்லரசுகளுக்கு நம்பகமான விடைகள் கிடைக்கின்றன.

அடுத்து ஏழை நாடுகளின் பல்கலைக் கழகங்களுக்கு ஆய்வுகளுக்காகவென்று பெரும் மானியங்களை வழங்கி அப்பணத்தைப் பெற்றுக்கொள்வோர் மேற்கொள்ளும் “ஆய்வுகள்” மூலமும் பலவகையான தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன, ஆய்வாளர்கள் தாங்களாக எந்த முடிவுகளையும் ஆய்வுகளில் வெளியிடக்கூடாது என்ற மறைமுகக் கட்டுறவுடன், அதாவது, முந்தைய ஆசிரியர் ஒருவரின் மேற்கோள் அத்தகைய முடிவுகளுக்கு வேண்டும் என்பதன் மூலம்.

தொழிற்சங்கங்களுக்குள் புகுந்து மக்களை, எடுத்துக்காட்டாக, மலைசார் பழங்குடியினர், கடல் சார் பழங்குடியினர் என்பது போல் பிரித்து அவர்களைத் தமக்குள் பகைக் குழுக்களாக ஆக்கி வைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள்.

காந்தியின் உண்மையான படிமத்தை மறைத்து எவ்வாறு கடவுளின் தோற்றரவு(அவதாரம்) என்ற தோற்றத்தை உருவாக்கினார்களோ அதுபோல் இன்று சிதையத் தொடங்கியிருக்கும் பெரியாரின் படிமத்துக்குப் புத்துயிருட்ட எசு.வி.இராசதுரை போன்றாரைப் பயன்படுத்தி நூல்களை வெளியிட வைத்துள்ளனர். அதன் மூலம் அவரது பங்களிப்பான தமிழக மக்களையும் இந்திய மக்களையும் அணு அணுவாகச் சிதைக்கும் ஒதுக்கீட்டு வேண்டுகைக்கு நீண்ட வாழ்நாளை அளித்து வருகின்றனர்.

இந்த எல்லாவகை நடவடிக்கைகளிலும் பாட்டாளியக் கோட்பாட்டுப் பரப்பல் கட்டாயம் இருக்கும்.

இவ்வாறு உலகின் மிகப் பெரும்பான்மை மக்களான ஏழை நாட்டு மக்களின் உழைப்பு, அந்நாடுகளின் அனைத்துவகை வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்கள் என்று அனைத்தும் வல்லரசுகளை, அவற்றின் தலைவனான அமெரிக்காவை அளவுக்கு மீறி, மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகும் அளவுக்கு வளர்த்து வைத்துள்ளன. இதிலிருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும் வழி உண்டா?


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....5

“முகம்மதிய”த் தேசியம்:

இன்று அமெரிக்காவையும் உலகையும் ஆட்டி வைக்கும் யூதப் பெரும் முதலைகள் தங்கள் வரலாற்றை மறந்து செயற்படுகின்றனர். கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரோமின் அரச சமயமாக ஏற்கப்பட்ட கிறித்துவத்தைக் காட்டி, ஏசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் மீது அன்றைய இசுரேலர்கள் மீது படையெடுத்து அவர்களை உலகமெல்லாம் நாடோடிகளாகவும் ஏதிலிகளாகவும் அலையவிட்டவர்களின் வழிவந்தவர்கள்தாம் இன்றைய ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆகிய கிறித்துவர்கள். இந்தியாவுக்கும் சீனம் போன்ற பிற கிழக்கு நாடுகளுக்கும் பெயர்ந்த யூதர்களை அந்நாடுகளின் அரசர்கள், தங்கள் மக்களுக்குத் தாங்கள் வழங்காத உரிமைகளைக் கூட வழங்கி வாழவைத்தனர். ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் பட்ட கொடுமைகள் உலகில் எந்த மக்களும் நாமறிந்த வரலாற்றில் பட்டறியாதவை. யூதர்களின் குடியிருப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கே தனிச் சொல் ஆங்கில அகராதியில் உள்ளது. இன்று சீக்கியர்களை இழிவுபடுத்தும் சர்தார் நகைச்சுவை போல் சில நூற்றாண்டுகளுக்கு முன் நகைச்சுவைகள் யூதர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நிலவின. சேக்சுப்பியரின் வெனிசு வாணிகன் (Merchant of Venice) போன்று அவர்களது கஞ்சத்தனத்தையும் கல்நெஞ்சத்தனத்தையும் காட்டும் கதைகள் ஏராளமாக உண்டு.

கிறித்துவம் வட்டித் தொழிலுக்கு விதித்திருந்த தடையால் கிறித்துவ ஐரோப்பியர்களை மீறி யூதர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். இவர்களுக்கு எதிராக இருந்த உணர்வுகளிலிருந்தே உரோமின் போப்பரசருக்கு எதிரான மார்ட்டின் லூதரின் கோட்பாடுகள் ஐரோப்பாவில் காட்டுத் தீ போல் பரவின. ஆனால் அதன் பயனாக உருவான முதலாளியத்தில் ஏற்கனவே பணம் சேர்த்து வைத்திருந்த யூதர்களைத் தாண்டி ஐரோப்பியர்கள் செல்வது அரிதாகவே இயன்றது. இதன் எதிர்வினைதான் இட்லர் யூதர்களை அழிக்கப் புறப்பட்டது. இருப்பினும் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு ஏதிரான தன் போர் ஆயத்தங்களுக்கு செருமானியிலிருந்த யூத முதலாளிகள் இட்லருக்குப் பயன்பட்டனர்.

சார் காலத்திய உருசியாவிலும் யூதக் குடியிருப்புகள் திடீர் தாக்குதலுகளுக்கு உள்ளாயின. ஆக, கிறித்துவ உலகு யூதர்களுக்கு எந்த விதிவிலக்குமின்றிக் கொடுமை இழைத்தது. இந்தச் சூழலில் ஐரோப்பாவில் “உலக”ப் போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பெரும் முதலாளிகளில் பெரும்பான்மையினரும் அறிவியல் - தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆகிய யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினர். அங்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. போர் முடிவுக்கு வந்த போது இங்கிலாந்து தலைமையிலான ஐரோப்பாவின் வலிமை பழங்கதையானது. அமெரிக்காவும் சோவியத்தும் புதிய வல்லரசுகளாயின.

இந்தச் சூழலில் யூத முதலாளிகள் பாலத்தீன நாட்டின் நிலங்களை அங்குள்ள மக்களிடம் விலைகொடுத்து வாங்கி உலகிலுள்ள ஏழை யூதர்களை அங்கு குடியேற்றி வேளாண்மை, தொழில்கள் ஆகியவற்றில் அவர்களைக் கொத்தடிமைகள் போல் பயன்படுத்திச் சிறிது சிறிதாக வளப்படுத்தினர். இந்தப் பின்னணியில் போர் முடிந்த நிலையில் பாலத்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் ஆன சிக்கலைத் தீர்த்து வைக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்க, ஐரோப்பிய யூதர்கள் யூதர்களுக்கான தாயகமாக இசுரேலை அமைத்து அதன் ஒரு பகுதியாகப் பாலத்தீனத்தை வைத்தனர். பாலத்தீனத்தை விடுவிக்க அம்மக்கள் நடத்திய வீறுமிக்க போராட்டங்களையும் அதைக் காரணமாக வைத்து உலக யூத வல்லரசியம் மேற்காசியா மீது கட்டவிழ்த்துவிட்டுவரும் கொடுமைகளையும் நாம் நன்றாகவே அறிவோம். அதன் உச்சகட்டமாக இன்று இசுரேல் பாலத்தீனத்தினுள் நடத்திவரும் தாக்குதல்களை, இன அழிப்புகளை எதிர்த்து இந்திய அரசு வாயே திறக்காமல் இருப்பது அது அமெரிக்காவின் யூத வல்லரசியத்தின் ஒரு அங்கமாகச் செயற்படுகிறது என்பதற்கு ஐயத்திற்கு இடமில்லாத ஒரு சான்று.

இந்த நிலையில் ஈழ, தமிழக, இந்திய, உலக முகம்மதியர்களின் நிலை என்ன? அவர்கள் உண்மையான உலக அரசியல் பின்னணியை உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்விக்குள் நாம் நுழைந்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தாம் நமக்குக் காத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் ஒளிபரப்பாகும் வின்(Win) தொலைக்காட்சியில் படிக்கப்படும் செய்தியில் உலக முகம்மதிய நாடுகளின் நிகழ்ச்சிகளைச் சொல்லி, பாலத்தீனர்களுக்கு ஆதரவான செய்திகளையும் சொல்லி, ஈழத்தைப் பற்றி வரும்போது அங்குள்ள தமிழர்கள் மீது பகை உணர்வும் சிங்கள, இந்திய அரசுகளின் மீது பரிவுணர்வும் வெளிப்படும் வகையில்தான் அது அமைகிறது. இது முகம்மதியர்களின் முகாமையான செயற்பாடாக வரலாற்றின் ஊடாக நாம் காணும் ஒன்று.

முகம்மதியத் தலைமைகள் எப்போதுமே ஓர் உலக முகம்மதியத் தேசிய உணர்வையே பேணி வந்துள்ளன. இந்தியாவில் முகம்மதிய ஆட்சி நடந்த நாட்களில் இங்குள்ள முகம்மதிய அரசர்கள் தங்களை உலக முகம்மதியக் கட்டமைப்பினுள் ஓர் அரசர் என்று ஏற்றுக் கொள்ளுமாறு, அந்தந்தக் காலத்தில் உலகில் வலிமை பெற்று விளங்கிய காலிபாக்களிடமும் ஆப்கானிய, பாரசீகப் பேரரசுகளிடமும் பெரும் பரிசுப் பொருட்களுடன் தங்கள் தூதுவர்களை விடுத்து அந்தத் தூதுவர்கள் அக்கலீபாக்கள் அல்லது பேரரசர்களின் அரண்மனை வாயில்களில் காத்துக்கிடந்தார்கள். அதை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் தில்லியில் ஆண்ட செர்சா சூரியும் அக்பரும்.

. உலகின் மிக உயர்ந்த சமயம் ஏற்றத் தாழ்வில்லா நயன்மை(நீதி)யே என்று அறிவித்துச் சட்டங்களை இயற்றியவர் செர்சா சூரி. ஆங்கிலருக்கும் இன்றைய இந்திய ஆட்சியருக்கும் இந்தியாவை ஆள்வதற்குப் பயன்படும் பல சட்டங்கள் செர்சா சூரி தன் 4½ ஆண்டுகால ஆட்சியின் போது வடித்தவையாகும்.

தன் நாட்டு மக்கள் தங்கள் மதத் தலைமையகத்துக்குப் போவதாகக் கூறி அயல் நாடுகளுக்குச் செல்லக் கூடாது என்பதற்காகவே அக்பர் மக்காவுக்கு அச்சுப் பயணம் செய்வதைத் தடைசெய்தார். அதற்காகவே இந்தியாவுக்கென்று ஒரு புதிய மதத்தை தீன் இலாகி என்ற பெயரில் உருவாக்கினார். அதில் குறைகள் இருந்த போதிலும் அது வெற்றி பெறாமல் போனாலும் அந்த முயற்சியின் உள்ளடக்கம்தான் நமக்கு முதன்மையானது.

முகம்மதியப் பூசாரிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அவுரங்கசீப்பால் இவர்களது முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்களால் மேற்காசிய நாடுகள் முறியடிக்கப்பட்டு இந்தியாவும் ஆங்கிலர் கைகளுக்குள் வந்த பின்னர் முகம்மதியர்களிடையில் தாங்கள் வாழும் மண் சார்ந்த தேசிய உணர்வு துளிர்விட்டது. அதை முளையிலேயே கிள்ளியெறிந்தது, இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று இந்திய மொழிகளைத் தனித்தனியே எடுத்துக்கொண்டால் இந்திய மக்களில் பெயரளவில் அதைப் பேசும் கூடுதல் மக்களின் ஆதரவைப் பெற்று தான் சமணன் என்பதை மறைத்து இந்துவென்று அடையாளம் காட்டி (சான்று: வில் டூரன்று) இந்திய முகம்மதியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களில் கணிசமானவர்களை இந்தியாவிலிருந்து அகற்றிய, பனியா நலனைக் குறிக்கோளாகக் கொண்டு தன் உயிரையே அதற்காகக் காவு கொடுத்த காந்தியின் செயற்பாடு.

இந்திய ‘விடுதலை’யின் பின் கிழக்காசிய நாடுகளும் இலங்கையும் ‘இந்தியர்’களைத் துரத்தியதால் அவர்களில் மிகப் பெரும்பான்மையராக இருந்த தமிழக மக்கள், அவர்களிலும் பெரும்பான்மையாயிருந்த முகம்மதியத் தமிழர்கள் ஈட்டி வந்த செல்வம் நின்று போனதால் உருவாகிய ஏழ்மையின் விளைவாகத் தாம் வாழும் தமிழ்நாட்டின் மீது அவர்களின் கவனம் பதிந்து தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணையும் போக்கு உருவானது. அதுவும் முடிவுக்கு வந்தது 1967க்குப் பின்னர் கிழக்காசியப் போரின் விளைவாக எகிப்து சூயசுக் கால்வாயைப் பிடித்து மேற்காசிய நாடுகள் கன்னெய்ய(பெட்ரோலிய)த்தை அரசுடமையாக்கிய பின்னர். அதனால் மேற்காசியாவில் திரண்ட செல்வத்துக்கு விலைபோன உலக முகம்மதியத் தலைமைகளால் மீண்டும் உலக முகம்மதியத் தேசியம் களைச்செடி போல் விரைந்து பரந்து வளர்ந்தது. அதன் விளைவாக மேற்காசிய ஆளும் கும்பல்களின் நலன்களை உலக முகம்மதிய நலன்களாகக் காட்டும் போக்கும் அவர்கள் அதனை நம்பும் போக்கும் உருவாகியுள்ளது. முகம்மதியர்களுக்குத் தாம் வாழும் மண்ணுக்குப் புறம்பான தனித்த தேசிய அடையாளமும் பண்பாடும் உள்ளதென்று இந்தத் தலைமைகள் பரப்பி அது ஏறக்குறைய அனைவர் மனங்களிலும் படிந்துவிட்டது. இதற்காகப் பெருஞ் செலவில் “மார்க்க” மாநாடுகள் கடந்த 15 ஆண்டுகளுக்குள் நடத்தப்பட்டன. எனவே பாலத்தீனம் தவிர்த்த எந்த ஒரு தேசத்திலும் உருவாகும் தேசிய இயக்கங்களிலும் இருந்து அத்தேசியத்தினுள் அடங்கிய முகம்மதியர்கள் அயற்பட்டு ஒடுக்கும் தேசியத்தின் பக்கம் நிற்கும் தம் தலைவர்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அதன் விளைவுதான் ஈழ மண்ணில் முகம்மதியர்கள் ஈழத் தேசியத்துக்கு எதிர் நிலைப்பாடு எடுத்திருப்பதும் வின் தொ.கா.வில் வெளிப்படும் காழ்ப்பும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....4

நெளியும் உலகு:

உலகில் கிட்டத்தட்ட தேசிய இயக்கங்கள் வெளிப்படையாக அல்லது குறைந்தது, திட்டவட்டமாக வெளித்தோன்றாமல் கருநிலையிலாவது இல்லாத நாடு ஒன்று இல்லை என்றே சொல்லலாம். உலகின் ஒரே வல்லரசாக வளர்ந்து நிற்கும் அமெரிக்காவில் உலகெங்கும் இருந்து பாயும் கணக்கற்ற செல்வத்தால் வேண்டுமானால் ஒரு துயில் நிலையில் அது இருக்கலாம். ஆனால் 200 ஆண்டுகள் உலகைக் கட்டியாண்ட இங்கிலாந்தின் காட்டுலாந்திலும் வடக்கு அயர்லாந்திலும் வெடித்தெழுந்தது போன்ற எழுச்சிகள் ஒரு நாள் அங்கும் நிகழாமல் போகாது.

தன்தீர்மானிப்புரிமை என்ற அடிப்படையில் அமைந்த சோவியத்தின் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட உருசியத் தேசங்களின் மக்களில் பெரும்பகுதியினர் விடுதலை பெற முடிந்திருக்கிறது. ஆனால் அங்கும் ஒடுக்கப்படும் தேசியங்கள் எஞ்சியுள்ளன.

சோவியத் உடைந்து சில தேசங்கள் விடுதலை பெற்றது கூட அங்கிருந்து உருவாகி வளர்ந்து வந்த தலைமைகளால் நிகழ்த்தப்படாமல் அமெரிக்காவின் கையாட்களாக மாறிவிட்ட கோர்ப்பசேவ், எல்த்சின்களின் மூலமாக நடைபெற்றதுதான் அவலம். உருசியாவின் மூலதனத்தின் பின்னணியில் அதன் முதலாளிய உருவாக்கம் நடைபெறாமல் அமெரிக்க முதலீட்டால் நடைபெறுவதுதான் கேடு. ஆனால் லெனினும் தாலினும் குருச்சேவ் முதலியோரும் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கும் வரை அதன் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் முதலீடு ஒரு தடையாக இருக்க முடியாது.

சீனத்திற்கு எதிராகத் திபேத் மக்கள் நடத்தும் விடுதலைப் போர் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத் தெரியும். ஆனால் எவருக்கும் வெளிப்படாமல் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்வுகள் எத்தனையோ?

நேற்று திபேத்து என்றால் இன்று நேப்பாளம். சீன – அமெரிக்கக் கூட்டுருவாக்கமான மாவோயியர்களின் செயலுக்கு இந்தியா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை, ஏனென்றால் இன்று அமெரிக்காவால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகளே இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்தும். ஆப்கானித்தானை அமெரிக்கா கைப்பற்றிய போதும் இங்கு எதிர்ப்புணர்வு எதுவும் வெளிப்படவில்லை என்பதும் இதனால்தான். அமெரிக்காவின் தொங்குசதையான பாக்கித்தானையும் சேர்த்தால் இவை அனைத்தும் இந்தியாவின் எல்லை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மேற்காசியாவைத் தம் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. ஈராக்கை 1990இல் அமெரிக்கா தாக்கிய போது இந்தியாவின் சந்திரசேகர் தலைமையில் “ஆண்ட” கூட்டத்தினர் அதற்குப் பலவகையிலும் உதவி ஆதாயம் தேடிக்கொண்டனர். ஓர் அமைச்சர், வி.சி. சுக்லா என்று நினைவு, உலக நாடுகளுக்கெல்லாம் சென்று அமெரிக்கா சார்பாகவும் சதாம் உசேனுக்கு எதிராகவும் பரப்பல் செய்ய, இந்தியாவின் வழியாக அமெரிக்காவின் படை வானூர்திகள் செல்லவும் இந்தியாவுக்குள் அவை கன்னெய்யம் நிரப்பிக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுத்தது அந்த அரசு. சந்திரசேகர், அமெரிக்காவை நடுவமாகக் கொண்ட நிகர்மைக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஈராக்கை விழுங்கிவிட்டு ஈரானைக் குறிவைத்துள்ளது அமெரிக்கா. இவை எதற்கும் அரபு “அரசர்கள்” எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 16-19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியப் பகுதிகளில் நிலவிய நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த “அரசர்கள்” அமெரிக்க அரசுடன் குலவுகிறார்கள். குர்து இன மக்கள் போன்றோரின் தேசிய உரிமைகளை நசுக்குவது அரேபிய மக்களின் வலுவின்மைக்கு அடிப்படையான காரணம்.

ஆப்பிரிக்காவை எடுத்துக்கொண்டால், காட்டுவிலங்காண்டி நிலையிலிருந்து குக்குல(பழங்குடி) நிலையைக் கூட முழுமையாக எய்தாத அம்மக்களிடையில் ஐரோப்பிய முதலாளியத்திலிருந்து உருவான பாராளுமன்ற “மக்களாட்சி”யையும் பாட்டாளியக் கோட்பாட்டையும் விதைத்ததினால் இன்று இனப் படுகொலைகளாலும் ஏழ்மையாலும் வெள்ளைத்தோல் காட்டுவிலங்காண்டிகள் அங்கு விதைத்துள்ள செயற்கையான பஞ்சத்தாலும் நோய்களாலும் மக்கள் அழிந்துவருகின்றனர்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....3

தெளிவான நிலையில் “இந்தியா”

இனி, இந்திய அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

ஏற்கெனவே ஆங்கில வல்லரசுடன் கமுக்கமான ஓர் உடன்பாட்டுடன்தான் காந்தி 1919இல் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது. ஆங்கில வல்லரசிய நலன்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி இந்தியாவை பனியா - பார்சிகளுக்கு முழு உரிமையாக்குவதே அந்த உடன்பாடு. அதற்கிசைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலரும் காந்தியும் திறமையாகக் காய்களை நகர்த்தினர். ஆயுதந் தாங்கிய போராட்டங்களால் ஆங்கிலரை வீழ்த்த வேண்டுமென்ற திட்டத்தினால் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த புரட்சிகரத் தனிமங்கள் மேலெழும்பிவிடக் கூடாது என்ற குறிக்ககோளுடன் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களைக் களத்திலிருந்து ஈவிரக்கமின்றி அகற்றினர். ஆனால் பனியா - பார்சிகளின் பொருளியல் போட்டியாளர்களில் முதன்மையானவர்களான வட இந்திய முகம்மதியர்களை அவ்வாறு அகற்ற முடியவில்லை. அவர்களின் தலைமை முன்வைத்தது, முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் ஒரு கூட்டமைப்பை அல்லது தனி பாக்கித்தானை. காந்தியின் கட்சி தனிப் பாக்கித்தானைத் தீர்வாக வைத்தது. அதாவது, ஒருங்கிணைந்த இந்தியா என்ற மடைமைக்காக பனியா - பார்சி நலன்களை விட்டுக்கொடுக்க காந்தி ஆயத்தமாக இல்லை. இந்தியா பனியா -பார்சிகளுக்கும் பாக்கித்தானம் பஞ்சாபி முகமதியர்களுக்கும் வேட்டைக்காடாகியது.

காந்தியின் இந்த “மென்முறைப் புரட்சி” ஒப்பற்றது என்றும் மனித குல வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படத்தக்கது என்றும் 1930களிலேயே வெள்ளைத் தோல் வரலாற்றாசிரியர்கள் காந்தியை ஒரு கடவுளாக்கிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு ‘விடுதலை’ வழங்கத் தீர்மானித்த போது ஆங்கில அரசு, சமத்தானங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று வாக்களித்தது. அதை நம்பி சில சமத்தானங்களின், குறிப்பாகத் திருவிதாங்கூர் சமத்தானத்தின் திவானாக இருந்த சி.பி.இராமசாமி ஐயர் விடுதலை பெற்ற திருவிதாங்கூர் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். ஆட்சியைக் கையிலெடுத்த பனியா - பார்சி நலன்களுக்கான காந்தியின் கட்சி படைகளைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்தது. காந்தி மீது அளவுக்கு மீறிய பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த திரு.வி.க. போன்று இந்தியா முழுவதையும் சேர்ந்த ஓர் ஆர்வலர் கூட்டம் “காந்தியம் வீழ்ந்துவிட்டது, பட்டேலியம்தான் ஆட்சிபுரிகிறது” என்று தவறாகக் கணித்தனர். (அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய்ப் பட்டேல்தான் படைகளைக் காட்டி “இந்திய ஒருமைப்பாட்டை”க் காத்து “இரும்பு மனிதர்” என்று புகழப்பட்டவர்)

இவற்றை அறியாத தமிழ்நாட்டு அறிவிலிகள் இன்றும் சி.பி.இராமசாமியாரைத் தூற்றித் திரிகின்றனர். அவரது உள்நோக்கம் தமிழர்கள் சார்பானது. கேரளத்துடன் இணைந்தால் திருவிதாங்கூர் தமிழர்கள் மிகச் சிறுபான்மையாகிவிடுவர் என்பதுதான் அது. அது போலவே நடந்தது. திருவிதாங்கூரிலிருந்த தமிழர்களில் பாதிப்பேர் தமிழகத்தோடு சேர்வதற்கே பல நூறு உயிர்களைக் களப்பலியாக்க நேர்ந்தது பின் நடந்த வரலாற்று நிகழ்ச்சி.

காசுமீர மக்கள் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. ஆனால் அதை ஆண்ட ‘இந்து’ அரசரைக் கையில் போட்டுக்கொண்டு ஒரு முழுத் தன்னாட்சியுடைய மாநிலமாக ஏற்பதாகக் கூறினர். பின்னர் பாக்கித்தான் ஆட்சியாளரும் நேருவும் சேர்ந்து ஒரு போரை நடத்தி அதனை இரண்டாக உடைத்தனர். பாதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஒன்றிய நாடுகளவைக்குச் சிக்கலைக் கொண்டு சென்று போரை முடித்தவர் நேரு. இது அவரது தவறான அணுகலின் விளைவு என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திட்டமிட்ட செயலே.

நேரு காசுமீரத்திலிருந்து வந்த பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பாரசீகத்திலிருந்து அங்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுவதுண்டு. அவரது மகள் இந்திரா மணம் முடித்தது பிரோசு காந்தி எனும் பார்சியை. அவ்வாறுதான் காந்தி என்ற குடும்பப் பெயர் அவர்களுக்கு அமைந்தது. பெருமுதலாளி டாட்டா ஒரு பார்சி. அரைப் பார்சியான இராசீவை மணந்தவர் இத்தாலியரான சோனியா. ஆக, பார்ப்பன - பனியா - பார்சி - ஐரோப்பியக் கலவையான ஒரு குடும்பத்தின் தலைவியான ஓர் ஐரோப்பியப் பெண் கையில் இன்று இந்தியா இருக்கிறது.

காசுமீரின் தன்னாட்சி உரிமைகளைத் தந்திரமாகக் களவாடினர் தில்லி ஆட்சியாளர்கள். எதிர்ப்புகள் உருவாயின. பாக்கித்தானிய, இந்திய அரசுகள் திட்டமிட்டு அதை மதப் போரட்டமாக்கித் திசைதிருப்பினர். பாக்கித்தானில் சிந்து, பலூச்சித்தானம் போன்ற மாநிலங்களிலும் இந்தியாவில் தமிழகத்திலும் பஞ்சாபிலும் விடுதலைப் போராட்டங்கள் தலைதூக்கின. தமிழகப் போராட்டத்தின் தலைமை நேர்மையாளர்கள் கையில் இல்லை. பஞ்சாபு விடுதலைப் போராட்டத்தையும் மதப் போராட்டமாக்கித் தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஈழப் போரைத் திசைதிருப்ப இந்திய ஆட்சியாளர்கள் செய்த முயற்சிகள் இன்றுவரை பயனளிக்கவில்லை.

1983 இல் ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்களிடையில் வெடித்த போராட்டங்களைக் கண்டு திகைத்த தமிழக அரசியல் கட்சிகள் அந்தப் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல், பொருளியல் ஆதாயங்களை அடையத் தலைப்பட்டன. இந்திய ஆட்சியாளர்களோ, இலங்கை அரசைத் தங்கள் மேலாளுமையினுள் வைக்கவும் ஈழ விடுதலை இயக்கத்தைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் இதுதான் வாய்ப்பென்று ஈழப் போராளிகளுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதம் வழங்குதல் என்று அனைத்து வகையிலும் உதவினர். அமெரிக்கா, தன்னை எதிர்க்கும் இயக்கங்களிலும் தன் கைக்கூலிகளை ஊடுருவ வைப்பது போன்ற உத்தி இது. இன்றும் ஈழ ஆதரவு இயக்கங்கள் என்று தமிழகத்தினுள் செயல்படும் இயக்கங்களின் நடவடிக்கைகள் இது போன்ற ஊடுருவல் தன்மை உள்ளவைதாமா என்ற ஐயத்தை அவற்றின் பொதுவான நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

ஆளுநர் என்ற பெயரில் இருக்கும் நடுவரசின் ஒரு கையாள் மாநில “அரசின்“ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள மக்களாட்சி உரிமையின் உச்சம். சட்டமன்றத்தில் நிறைவேறும் சட்ட வரைவுகள் அந்தக் கையாள் அல்லது தில்லியிலிருக்கும் நடுவரசுத் தலைமை என்ற பொம்மை ஏற்றுக்கொண்டால்தான் சட்டமாகும். இவ்வாறு பனியா - பார்சி கும்பலின் நடுவரசின் மண்டல அலுவலகங்களாக மாநில “அரசுகள்” அமைந்த இந்திய அரசியல் சட்டத்துக்கு மேல் எதையும் ஈழ மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.

இந்தக் குறிக்கோளுடன் அரைப் பார்சியான இராசீவ் ஈழத்துக்குப் படையை விடுத்து, இந்தியா திணிக்க முற்பட்ட அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதறகாக நடத்திய நாடகத்தை ஈழப் போராளிகள் முறியடித்தனர்.

அன்றிலிருந்து எத்தனையோ மாற்றங்கள். உலகில் எல்லா நாடுகளும் ஈழ மக்கள் மீது பரிவு கொண்டிருந்த நிலைமாறி இந்தியா - இலங்கை அரசுகளின் பரப்பல்களால் பல நாடுகள் ஈழப் போராளிகளைத் தடைசெய்யும் நிலை வந்தது. ஆனால் அந்தச் சூழலிலும் அவர்களது போர் வலிமை குன்றவில்லை, மாறாக மிகுந்தது.

இன்று ஈழத்தில் நடப்பது குறித்து எமக்கு ஐயங்கள் உள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு, இந்திய மாநிலங்களுக்கு உள்ளவற்றுக்குக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருக்கக் கூடாது என்பதாகும். அதிலும் தம் அரத்த உறவுகளைத் தமிழகத்தில் கொண்டுள்ள ஈழத்துக்கு அத்தகைய உரிமைகள் கிடைத்துவிடக் கூடாது என்பது இந்தியாவின் உறுதியும் இறுதியுமான நிலைப்பாடு. ஒரு வேளை ஈழ விடுதலைப் போராளிகளை வெற்றி கொள்ள முடியாத சூழலில் இலங்கை அரசு கீழே இறங்கிவந்து ஈழ மக்கள் கேட்கும் உரிமைகளைக் கொடுக்கக்கூடும் என்ற ஐயம் ஏற்பட்ட உடனேயே இந்திய அரசு தலையிட்டு போர்த் தளவாடங்களும் பயிற்சிகளும் கள அறிவுரைகளும், கள ஒருங்கிணைப்பும் தொழில் நுட்ப, தொழில்நுட்பர் உதவியுடன் குறிப்பாக வானூர்திகளையும் வலவன்(பைலட்)களையும் சிங்களர்களுக்கு முனைப்பான போர்ப் பயிற்சியும் வழங்கி ஈழம் – இலங்கைப் போரை ஈழம் - இந்தியப் போராக மாற்றியிருக்கிறதோ என்பது எமது ஐயம். அந்த ஐயம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டும் வருகிறது. நார்வே நாட்டின் நடுமையில் பேச்சுகள் தொடங்கிய உடனேயே இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க் கட்சியினரும் இங்கு அடிக்கடி வந்து போனதும் அவர்களை இந்தியாவிலுள்ள புத்த, “இந்து” சமயக் கோயில்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று விருந்தாட்டயர்ந்தது போன்ற நடவடிக்கைகளும் இங்கிருந்து அரசுமுறை அதிகாரிகளும் படைத்துறையினரும் அடிக்கடி சென்றுவந்ததும் எம் ஐயப்பாட்டுக்கு உரம் சேர்க்கின்றன. பாக்கித்தானம் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற வகையில் தங்களுக்கு ஆயுதங்கள் விடுத்துக்கொண்டிருப்பதாக இலங்கை அரசு விடுத்த அறிக்கை பொய்யாகவும் இருக்கலாம். அல்லது தேசிய விடுதலைப் போராட்டங்களின் எதிரிகள் என்ற நிலையில் இந்தியா, பாக்கித்தானம், சீனம் ஆகியவை மறைமுகக் கூட்டணியுடன் இணைந்தும் செயற்படலாம். அதுதான் சீனச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சி(மார்க்சியம்)யின் பிருந்தா காரத்தின் அறிக்கை மூலம் வெளிப்படுகிறது.

அதே நேரத்தில் உருசியச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சியின் எச்.இராசாவும் தா.பாண்டியனும் ஈழத் தமிழர்களுக்குத் துணையாகத் திடமாகக் குரல் கொடுப்பது உலக வல்லரசியத்தின் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு பிளவின் அறிகுறியா? தங்கள் நாட்டிலுள்ள தேசங்களின் உணர்வுகளை ஒடுக்கி அவர்களது உரிமைகளைப் பறித்துத் தம் நாட்டின் வலுவைக் குறைத்து அமெரிக்க வல்லரசியத்தின் கீழ் ஓர் எடுபிடியாக இருப்பதைவிட தன்னுரிமையுள்ள தேசங்களைக் கொண்ட வலிமை மிக்க ஒரு நாடாக விளங்க அது முடிவுசெய்யலாம். முன்பு உலக ஏழை நாடுகளின் காவலன் என்று தனக்கிருந்த புகழை மீண்டும் நிலைநாட்ட புதின் தலைமையிலான உருசியா விரும்பலாம். வல்லரசுகளின் நோக்கம் உலகிலுள்ள ஒடுக்கப்படும் தேசங்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதாக இருக்க முடியாது. ஆனால் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் ஈழம் போன்று தேச விடுதக்காகக் களமிறங்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை அவர்கள் தாண்டிச்செல்ல ஓர் இடைவெளியை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை நம் நெஞ்சினுள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்கேற்பவே உருசியாவின் அண்மைக்கால உலகளாவிய நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....2

ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்:

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழருக்கும் ஒரு வகையில் பெரும் ஒற்றுமை இருக்கிறது. இரு நிலங்களின் மக்களும் தங்கள் தாய்மண்ணை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. ஆனால் அவர்களிடையிலான வேற்றுமை, ஈழத் தமிழர்களுக்கு தாங்கள் வெளியேறுவதன் காரணம் தெரியும்; தங்களை வெளியேற்றுபவன் யார் என்பதும் தெரியும். அப்படி வெளியேற்றுவோரிடமிருந்து தம் மண்ணை மீட்க வேண்டும் என்ற வெறியும் அவர்களிடையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தமிழகத் தமிழனுக்குத் தான் தன் தாய்மண்ணிலிருந்து துரத்தப்படுகிறோம் என்பதே தெரியாது. தான் ஒளிநிறைந்த ஓர் எதிர்காலத்தைத் தேடி வெளியேறுவதான கற்பனையில் அவன் முழ்கியுள்ளான். அதனால் எந்த விசை தன்னை வெளியேற்றுகிறது என்ற தேடலே அவன் சிந்தனையில் உருவாகவில்லை. இவ்வாறு வெளியேறுவதற்கான “தகுதி”களைப் பெறுவதற்காகத் தன் நிலபுலன்களை விற்றுவிட்டு அவன் வெளியேறுகிறான். அது போலவே ஆட்சியாளரின் நேரடியும் மறைமுகமுமான ஒடுக்கல்களால் நெருக்கப்பட்ட உழவனும் தன் நிலங்களை விற்கிறான் அல்லது தரிசாகப் போடுகிறான். அத்தகைய நிலங்கள் மனைகளாக்கப்பட்டு வெறும் முதலீட்டுக் கருவியாகி தமிழகத்தின் பணவளத்தைச் செயலிழக்கச் செய்கின்றன அல்லது ஆட்சியாளர்களால் கையகப்படுத்தப்பட்டு பனியா – பார்சி - அயல்நாட்டுக் கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து கைப்பற்றப்படுகின்றன. உலகப் பொருளியல் சிதைவினால் பெரும் நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நாட்டை விட்டு ஓடிப்போனவர்கள் திரும்பிவரத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் அயலவர்களுக்குப் பணியாற்றுவோரும் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஈட்டிய பணத்துக்கு இங்கு நேர்மையான முதலீட்டு வாய்ப்புகளை இங்குள்ள பனியா - பார்சி - பொதுமைக் கட்சி - அயல்விசைக் கூட்டணி பறித்து வைத்துள்ளதால் அவற்றை மிகப் பெரும்பாலோர் வீண் செலவுகளில் அல்லது பயனற்ற அசையாச் சொத்துகளில் அழித்துவிட்டு நிறந்கின்றனர். இன்று தமிழக மக்கள் தம் மண்ணின் மீது உரிமையற்ற நிலையை எய்தி நிற்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் பாலத்தீன மக்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு மண்ணிழப்பு நிலைமை பெரியார் போன்ற தலைவர்களாலும் அவர்களது பெயர்களை முழக்கிக் கொண்டு வரிசை வரிசையாகத் தோன்றிய பல்வேறு படி நிலைகளிலுள்ள எத்துவாளிகளாலும் நேர்ந்துள்ளது.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....1

2008 திசம்பர் குமுதம் - தீராநதியில் கி.பி.அரவிந்தன் அவர்களின் மடல் கண்டேன். அவர் பழைய நடப்புகளைத் தமிழகப் படிக்குநருக்கு நினைவூட்ட முற்பட்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தின் நிலை என்ன?

தடுமாறும் தமிழகம்:

தமிழக மக்கள் இந்த மண்ணிலிருந்து தங்கள் வேர்களை இழந்து வருகின்றனர். படித்தால் ஏதோவொரு வெளிநாட்டுக்குச் சென்றாவது பிழைக்கலாமே, ஏதாவது பண்டம் விளைத்தால் ஏதாவதொரு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாமே என்பதாக அவர்களது சிந்தனை சிறகடிக்கிறது.

பெரியாரிலிருந்து தொடங்கிய ஒட்டுண்ணி வாழ்க்கை மீதான வெறி மக்களை அணு அணுவாகப் பிளந்துவைத்துள்ளது. சட்டக் கல்லூரியில் நடந்தது அதன் திட்டவட்டமான வெளிப்பாடு.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு என்பதே நிலையான வாய்ப்பாடாகிப் போனது. அதற்காக, அதனைப் பயன்படுத்தி நம் ஆட்சியாளர்களும் அவர்களின் கைக்கூலிகளான சாதி, சமயத் தலைவர்களும் மக்களைச் சாதிகள், உட்சாதிகள் என்றும் மதங்கள், உள்மதப் பிரிவுகள் என்றும் மொழிக் குழுக்கள் என்றும் நாள்தோறும் அணுக்கள், மின்னணுக்கள் என்ற வகையில் பிளந்து வருகின்றனர். எந்த நொடியில் எந்த இடத்தில் எந்தச் சாதி அல்லது மத அல்லது மொழிக் கலவரம் வெடிக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கி வாழும் வகையில் இன்று தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவும் உள்ளது.

ஒதுக்கீட்டுக்கு மாற்றாக அனைவருக்கும் கல்வி என்ற ஒரு திட்டத்தைப் பற்றி எவருக்கும் சிந்தனை இல்லை. திருவிதாங்கூர் சமத்தானத்தில் திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயர் என்ற தமிழர், தமிழர் வாழும் பகுதிகளில் 1946இல் தொடங்கிய கட்டாயக் கல்வித் திட்டம் அவர் 1948இல் பதவி விலகினாலும் அங்கு முழுமையான எழுத்தறிவை வளர்த்ததைப் பற்றி எவரும் கண்டுகொள்ளவில்லை. அது போல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதைத் தொழில் வளர்ச்சி மூலம் என்பதை மறைத்து அரசு ஒட்டுண்ணி வேலைகள் என்று பொதுமைக் கட்சியினர் திசை திருப்பினர். காமராசர் போன்றோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரைகுறைக் கல்விக் கட்டமைப்பில் கூட இந்திய அரசு முன்வைத்த “மனிதவள ஏற்றுமதி”க் கொள்கையால் தாய்மொழிக் கல்வி அகன்று கொண்டிருக்க, அது பதுங்கியிருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எழுத்தறிவு புகட்டாத “செயல் வழிக் கல்வி”த் திட்டத்தால் மக்கள் அக்கல்விக் கூடங்களை நாடாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற தலைமுறையில் ஆங்கில வாயிலில் பயின்று கல்வி அதிகாரிகளாக வந்திருக்கும் அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளே தங்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்குக் கல்வியளித்து வரும் இப்பள்ளிகளை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. “தமிழ்”, “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இதைக் கண்டுகொள்ளாதது, அவர்களே தங்கள் சாதி ஏழை மக்கள் தங்களுக்கு இணையாக வளர்ந்துவிடுவதை விரும்பாத இவர்களின் உள்மனச் செயற்பாட்டின் விளைவுதான் என்பது எம் துணிபு.

சாதி, சமய, மொழிக்குழுத் தலைவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் குழுக்களின் மேலடுக்கினருக்கு மட்டும் உயர்கல்வியும் உயர்பதவி வாய்ப்புகளும் வேண்டும் என்பதற்காக மக்களுக்குள் குழுவெறியைக் கிளப்பித் தத்தம் குழுவினரைத் தத்தமக்குப் பின்னால் அணிதிரளவைத்துத் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற அவர்களை வாக்கு வங்கிகளாக்கி வைத்துள்ளனர். ஆனால் அந்த ஏழைப் பெரும்பான்மை மக்களுக்கோ வாழ்நிலை நாளுக்குநாள் கேள்விக்குறியாகிவருகிறது. இப்படித்தான் வெவ்வேறு காலங்களில் மேல் நிலைக்கு வந்தவர்கள் தங்கள் நலன்களை நிலைநிறுத்துவதற்காக மக்களின் தாய்மொழியைச் சேரி மொழியாக்கி ஓர் அயல்மொழியை ஆட்சியிலும் ஆலயத்திலும் ஏற்றிவைத்து அங்கு பார்ப்பனனையோ சமண ஒற்றனையோ அமர்த்தித் தம் குமுக மேலாளுமையைப் பேணி வந்துள்ளனர். இன்று ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது, அவ்வளவுதான்.

தமிழக உழவன் விளைநிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டுவிட்டான். உரூபாவுக்கு ஒரு கிலோ அரிசியா, தான் விளைத்த நெல்லுக்குத் தானே விலை வைக்கும் உரிமையா என்ற கேள்வியின் முன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து செய்வதறியாமல் அறிவு மயங்கி வீழ்ந்துவிட்டான், நில உச்சவரம்பாலும் குத்தகை நிலைப்புச் சட்டங்களாலும் துண்டு துக்காணி நிலங்களுக்கு மட்டும் உரியவனாகிவிட்ட தமிழக உழவன்.

குடும்ப வருவாயை ஆடவர்கள் சீமைச் சாராயக் கடைகளின் முன் காத்துநின்று கரைத்துக்கொண்டிருக்க பெண்கள் பங்கீட்டுக் கடைகள் முன்னும் அரசு அலுவலகங்கள் முன்னும் மானிய விலைப் பண்டங்களுக்காகவும் இலவயங்களுக்காகவும் காத்துக்கிடக்கின்றனர்.

குடும்ப அட்டை என்பது அடையாள அட்டை என்பதற்குப் பகரம் மகிழுந்து வைத்திருப்போரைக் கூட இலவயங்களை நாடிச்செல்ல உதவும் பஞ்ச கால அட்டையாக மாறியுள்ளது. மக்களின் மானம், தன்மதிப்பு அனைத்தையும் அவிழ்த்தெறிந்து அம்மணமாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். சாராயத்தில் ஆதாயம், இலவயப் பொருட்கள் கொள்முதலில் தரகு, மானியப் பொருட்களைக் கடத்தி அதிலும் கொள்ளை, சாராயம் காய்ச்சுவதில் அல்லது கொள்முதலிலும் கொள்ளை. சாராயம் விற்றதில் கிடைத்த வரியில் மக்களுக்கு இலவயங்களை அள்ளி வழங்குகிறோம் என்று சட்ட மன்றத்திலேயே பெருமிதம் வேறு!

ஆள வந்தவர்கள் தமிழக நலன்களை அயலவர்களுக்கு விற்று ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியல் எனும் ஏணியில் கிடுகிடுவென்று மேலேறிக்கொண்டிருக்கின்றனர். உலகப் பட்டியல் அடுத்த இலக்கு

இவ்வாறு விற்றுவிட்ட உரிமைகளை மீட்கப் போகிறோம் என்று தமிழகக் கட்சிகளும் “தமிழ்” இயக்கங்களும் நாடகமாடி விற்றவர்களிடம் விற்றதில் பங்குக்காகப் பகரம் பேசுகின்றனர். இந்த இயக்கங்களின் பெரும்பாலான தலைவர்களிடம் நமக்கு நேரடித் தொடர்பு இருந்ததுண்டு. அதனால் அவர்களை நாம் நன்றாகவே அறிவோம்.

“தமிழ் இயக்கங்கள்”, “தமிழ்த் தேசிய இயக்கங்கள்” என்பவற்றின் தலைவர்களும் அவற்றால் வழிநடத்தப்படும் தொண்டர்களும் தமிழகத்தை அறியமாட்டார்கள்; தமிழகத்தின், தமிழக மக்களின் உண்மையான சிக்கல்களை இந்தத் தொண்டர்கள் அறியமாட்டார்கள். “தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்” என்றொரு பொய்யுரையால் திசைமாறிச் செலுத்தப்பட்டவர்கள் இந்தத் தொண்டர்கள். இந்தத் “தமிழ் இயக்கங்களின்” தலைவர்கள் பலருடைய குறிக்கோள் பணி ஓய்வுக்குப் பின் மீண்டும் உள்நாட்டிலோ அயல் நாட்டிலோ ஒரு வேலையைப் பெறுவதுதான்.

இதற்காக இவர்கள் தமிழக வரலாற்று உண்மைகளை விலையாகக் கொடுப்பர் பேரா.இரா.மதிவாணன் போன்று, அண்டை மாநிலங்களை ஆளும் ”இந்திய”க் கட்சிகள் தமிழக மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு பனியா - பார்சிச் சுரண்டலிலிருந்து கவனத்தைத் திருப்பும் வகையில் திரு அரணமுறுவலைப் போல் செம்மொழிச் சிக்கலுக்காகக் கூச்சல் போடுவர். இவர்களில் பெரும்பாலோர் ஆட்சியாளர்களோடு கள்ள உறவு வைத்துக்கொண்டு மேலுக்குக் குறைகூறுபவர்கள். இவர்களுக்கு திரு.கி.பி. அரவிந்தன் எந்தப் பழைய கதையையும் பேசிப் பயனில்லை.

அண்மையில் “தமிழீன”த் தலைவர் 40 மக்களவை உறுப்பினர்களிடம் பதவி விலகல் மடல்களை வாங்கி வைத்துக்கொண்டு தில்லிக்குச் சென்றதே வண்ணமாலை அலை ஒதுக்கீட்டில் சுருட்டப்பட்டதாகக் கூறப்பட்ட உரூ 80,000 கோடிச் சிக்கல் குறித்து சோனியாவை மிரட்டத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் அவரை நம்புவது போல் இவர்கள் அனைவரும் நடித்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் இது போன்ற “நம்புதல்கள்” முறையாக நடந்தேறுகின்றன.

இது போன்ற மிரட்டல்களில் திரைத்துறையினரும் ஒழுங்காக ஒத்துழைப்புத் தருகிறார்கள். மக்கள் மகிழ்ந்து போகிறார்கள். சொல்லிலேயே, காட்சியிலேயே மகிழ்ந்து போய்விடும் தமிழக மக்களுக்கு இறுதி விளைவைப் பற்றி எடுத்துரைத்து வழிநடத்த ஒரு தலைவன் இன்று இல்லை. ஒரு கோட்பாட்டையும் அரசியலையும் முன்வைப்போரை இனங்கண்டுகொள்ளும் பக்குவமும் மக்களிடையில் உருவாக முடியாத ஓர் அவலச் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கும்.


(தொடரும்)