ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.7.09

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.

25.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....8

நாடுகளும் நாடுகளின் பகுதிகளும் தத்தம் தனித்தன்மைகளையும் தன்னுரிமைகளையும் தமக்குரிய வளங்களைப் பறிகொடுக்காமலும் பிறவற்றின் வளங்களைப் பறிக்காமலும் தனித்தும் அதே நேரத்தில் மனித இனம் நாடுகளாகவும் பகுதிகளாகவும் சிதறிச் சென்று விடாத அதே நேரத்தில் உலகளாவிய ஓர் சுரண்டல் கூட்டம் மறுபடியும் உலகில் உருவாகி விடாதவாறு ஓர் உறவு வடிவையும் உருவாக்குவோம்.

இந்த வளர்ச்சிப் பண்பை எய்துவதற்காக உடனடியாகச் செயற்படுத்த சில வேண்டிய திட்டங்களை நாம் முன்வைக்கிறோம்.


1. வரியை மதிப்பிடுவதற்கென்று குடிமக்களின் வீட்டிலுள்ளும் பணியிடங்களிலும் நுழைந்து சுவர்களையும் பேழைகளையும் உடைத்துப் பார்க்கும், படுக்கைகளைக் கிழித்துப் பார்க்கும், தரையைத் தோண்டிப் பார்க்கும் அங்கு இருப்பவர்களைக் குறிப்பாகப் பெண்களை இழிவான கேள்விகள் கேட்கும், வாயிலிலும் தொலைபேசி அருகிலும் காவல் நின்று பகற்கொள்ளையர்கள் போல் செயல்படும் வருமானவரியை ஒழித்து, எளிதில், குடிமக்களுக்கு இழிவு நேராமல் மதிப்பிடத்தக்க, வேண்டுமானால், தலைக்கு இவ்வளவு என்று உள்ள வரிகளைக் கொண்டு அரசு தன் வருமானத்தை ஈட்ட வேண்டும். பணக்காரனிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு கொடுக்கிறோம் என்ற ஏமாற்று தேவை இல்லை. எல்லா வளமும் உழைக்கும் மக்களிடமிருந்தே வருகின்றன; எவரிடம் இருந்து எந்த வரியைக் கைப்பற்றினாலும் இறுதியில் அது உழைப்பவனிடமிருந்தே கைப்பற்றப்படும் என்பது உண்மை.

2. ஒன்றியத்துக்கு ஒன்று அல்லது குறைந்தது மாவட்டத்துக்கு ஒன்றாவது அறிவியல் - தொழில்நுட்ப காப்புரிமப் பதிவகங்கள் வேண்டும். அங்கு பதியப்படுபவற்றை வட்டார மற்றும் நாடு தழுவிய தாளிகைகள் மூலம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3. தொழில் உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஒன்றிய ஆள்வினையாளருக்கும் பரவலாக்க வேண்டும்.

4. வேளாண்மையை விளைப்புச் செலவும் ஆதாயமும் பிற தொழில்களில் எந்த விகிதத்திலிருக்கிறதோ அதற்குக் குறையாத அளவில் இருக்குமாறு பேண வேண்டும். இதிலும் அரசியல் கூடாது. உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம் வழங்குவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தாங்கள் உண்ணும் உணவுக்கு உரிய விலையைக் கொடுக்கும் அடிப்படைப் பண்பாட்டை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

5. இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி முடிமன்னர்கள் காலத்திலிருந்ததைப் போன்று, ஆனால் முடிமன்னரின் அதிகாரம் நீங்கிய ஒரு குழுவாட்சியாக இன்று வெளிப்படையாக அனைவரும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. அதற்கு மாற்றாக, மக்களே உண்மையான ஆட்சியாளர்களாகச் செயற்படும் பங்கேற்பு மக்களாட்சி நோக்கிச் செல்லும் ஓர் அமைப்பு குறித்த உரையாடலை உடனே தொடங்க வேண்டும்.

6. ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். இயற்கை வளங்களை, குறிப்பாக புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களை எந்தச் சூழலிலும் எற்றுமதி செய்யக்கூடாது. புதுப்பிக்கத் தக்க வளங்களை எற்றுமதி செய்யும் சூழல் வந்தாலும் அவற்றில் முதல் தரமானவை நம் நாட்டு அடித்தள மக்களின் தேவைகளை நிறைவு செய்து மிஞ்சினால்தான் செய்ய வேண்டும்.

இன்று சந்தனம், ஈட்டி, தோதகத்தி என்ற பெயர்களில் வழங்கும் Rosewood மரம், சில மீன் வகைகள், இலைத் தேயிலை இன்னும் இது போன்ற எத்தனையோ பண்டங்களை உள் நாட்டினர் பயன்படுத்த தடை உள்ளது. ஆங்கிலர் ஆடசிக் காலத்தில் இத்தகைய தடை இல்லை. நம் நாட்டிலுள்ள அனைத்து வளங்கள் மீதும் நம் மக்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த அலசலை முடிக்கும் முன் நாம் இந்தியாவின் பொதுமைக் கட்சி வரலாறு பற்றிய வேறு சில உண்மைகளை அறிந்துகொள்வது நல்லது.

இந்தியாவில் பொதுமைக் கட்சி உருவாகிய நிலையில் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய் லெனினை அணுகி கடசியை மூன்றாம் பொதுமை அனைத்துலகியத்தில்(Communist International) சேர்ககுமாறு கேட்டார். ஆனால் லெனின் கட்சியை பிரிட்டனின் பொதுமைக் கட்சியின் கீழே ஓர் உறுப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தினார். ஒரே ஒரு நாட்டில் மட்டும் உருவாகியிருந்த புத்தம் புதிய இளம் பொதுமை சோவியத்தை வல்லரசுகளின் பகைமையிலிருந்து பொதிந்து காக்க வேண்டியிருந்ததுதான் அவரது இந்த அணுகலுக்குக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்திருந்த பொதுமைக் கட்சிகள் தங்கள் போராட்டங்கள் மூலம் சோவியத்துக்கு எதிரான தங்கள் நாட்டு அரசுகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வைத்திருந்தன என்றாலும் அவரது எச்சரிக்கை உணர்வு ஞாயமானதுதான். ஆனால் இங்கும் டிராட்கியின் கருத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இதுதான் சாக்கென்று நம் நாட்டு்த் தோழர்கள் பிரிட்டன் கட்சியைவிட பிரிட்டனுக்கே நாணயமாக நடந்துகொண்டனர். ஆயுதம் தாங்கிய புரட்சி என்ற பெயரில் உள்நாட்டினரையும் கட்சி உறுப்பினர்களையும் தீர்ததுக்கட்டினார்களே அன்றி ஒரேயொரு வெள்ளையனுக்கு எதிராகக் கூட அவர்களது ஆயுதங்கள் திரும்பவில்லை. பகத்சிங் கூட மரண தண்டனை பெற்று சிறையிலிருந்த போதுதான் பொதுமைக் கோட்பாடுகளைப் படித்து அவற்றில் ஈடுபாடு கொண்டார்.

தாலின் காலத்துக்குப் பிறகுதான் இந்தியப் பொதுமைக் கட்சி அனைத்துலகியத்தினுள் நுழைந்தது. ஆனால் சீனச் சார்பாக இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சி உருவான போது தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் அதில் இடம் பிடித்துக்கொண்டனர். அவர்கள் சோவியத்தை வெறுத்தனர் என்பதற்கு இதை ஓர் அடையாளமாகக் கொள்ளலாமா அல்லது தமிழ்நாட்டுப் பொதுமைக் கட்சிக்குள் நிலவிய பார்ப்பனர் - வெள்ளாளர் போட்டியைக் காரணமாகக் கொள்ளவாமா? இரண்டும் இணைந்து செயற்பட்டன என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் இந்தியா, பாக்கித்தான், சீனம் போன்ற நாடுகளுக்கு ஒரு நல்வாய்ப்பு. இந்நாடுகளிலிருந்து பண்டங்களை இறக்குமதி செய்துவந்த நாடுகள் இப்போது தங்கள் இறக்குமதி அளவைக் குறைத்துவருகின்றன. அதேவேளையில் நம் நாட்டில் பண்டங்களின் தட்டுப்பாட்டால் அவற்றின் விலைகள் ஏறிக்கிடக்கின்றன. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஏற்றுமதியாளர்கள் தங்கள் பண்டங்களை இங்கேயே சந்தைப்படுத்துவதற்கான ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களின் சிந்தனை வேறு திசையில் செல்வதாகத் தெரிகிறது. ஏழை மக்களுக்கு ″நலத்திட்ட உதவிகள்″, விளைப்பாளர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்புகள், இதுதான் சாக்கென்று திரும்பப் பெற முடியாத, தலைமுறைகளுக்கும் நம் மக்களுக்கு உரிமைப்பட்ட மூல வளங்களான இரும்புக் கனிமம் போன்றவற்றைப் பெருமளவில் ஏற்றுமதி!

இன்றைய பணப் புழக்கம் கூட நெடுநாள் தொடரப்போவதில்லை. நம் பொருளியலே வெளியிலிருந்து வரும் பணத்தை நம்பியிருப்பதால் இந்த உலகப் பொருளியல் நெருக்கடியால் நம் நாட்டில் பணப் புழக்கத்தில் விரைவில் பெரும் முட்டுக்கட்டை நிலை வரப்போவது உறுதி. இதை எதிர்கொள்வதற்கு இந்திய அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அமெரிக்காவில் ஏற்கனவே உள் கட்டமைப்பு வசதிகள் ஏறக்குறைய முழுநிறைவாக உள்ளன. உருசியாவில் பொதுமைக் கட்சி ஆண்ட காலத்தில் அங்கும் ஏறக்குறைய முழுமை அடைந்துவிட்டது. செருமனியில் இட்லர் தன் நாட்டுக்குச் செய்த மிகப்பெரும் பணியே அனைத்து உள் கட்டமைப்புகளையும் உருவாக்கியதுதான். ஆனால் இந்தியா ″விடுதலை″ அடைந்து 61 ஆண்டுகளைத் தாண்டிய போதும் எந்த ஒரு துறையிலும் உள் கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது என்று சொல்வதற்கில்லை. அதை மேம்படுத்த வேண்டும் என்ற கவலை கூட எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்துத் துறைகளிலும் பெரும் தேக்கமும் பின்வாங்கலும் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக பொதுமைத் தோழர்கள் தங்கள் பெரும் அருஞ்செயல் என்று பெருமையடித்துக் கொள்ளும் அரசுடைமைக்கு உள்ளான பெரியவையும் நாட்டு வாழ்வுக்கு இன்றியமையாதவையும் ஆன தொடர்வண்டித் துறையும் மின் துறையும் ஆங்கிலர் அகன்ற பின் பின்னோக்கிச் சென்றுள்ளன. ஆனால் ஆளும் கூட்டம் அயல்நாடுகளில் முதலிடுவதில் முன்னணியில் நிற்கிறது.

இன்றைய உலகப் பொருளியல் நெருக்கடி நம் நாட்டுக்கு ஒரு நல்வாய்ப்பை நல்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி நம் அரசு பணத்தாள்களை வெளியிட்டு உள் கட்டமைப்புகளைப் போர்க்கால விரைவில் செயற்படுத்தி மக்களிடம் பணப் புழக்கத்தை மிகுத்து ஏற்றுமதியில் ஏற்படும் என்று எதிர்பார்க்கும் வீழ்ச்சியை ஈடுசெய்வதி மட்டுமல்ல அதற்கு அப்பாலும் செல்ல முடியும். நம் ஆட்சியாளர்கள் தம் போக்கை மாற்றிக்கொண்டு களத்தில் இறங்குவாரகளா?

அவர்களாக மாறமாட்டார்கள். நாம்தான் அவர்களை மாற்ற வேண்டும். ஆட்களை மட்டுமல்ல, ஆட்சிமுறையையும் ஆளும் கோட்பாடுகளையும்.

இந்தியாவிலுள்ள நேர்மையான அறிவுத்துறையினர் கிளர்ச்சியூட்டும் உணர்ச்சி வயப்பட்ட சிந்தனைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு நோய் வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் மழலையை, உயிர் பிழைக்க வேறு வழி இல்லாத நிலையில் அறுவைப் பண்டுவக் கூடத்தினுள் விடுத்து வைக்கும் போது என்ன மன நிலையிலிருப்பாளோ அதே மனநிலையில் நின்று செயல்படுவோம்! இன்று ″ஏழை″ நாடுகளுக்கு அத்தகைய ஒரு அறுவைப் பண்டுவம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயற்படுவோம்! அமெரிக்கா உருவாக்கியுள்ள நெருக்கடியை அங்கும் உலகெங்கும் இந்தியாவிலும் உள்ள ″தலைர்வர்கள்″ எப்படி எதிர்கொள்வார்களோ நாமறியோம். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அவர்களால் உலகிலுள்ள சராசரிக் குடிமகனின் அல்லல்களை தீர்த்து வைக்க முடியாது. அந்த எல்லையை என்றோ தாண்டிவிட்டது உலகு. எனவே காலம் கடந்தாவது சரியான திசையைக் காட்டுவோம்.

மார்க்சு வாழ்ந்த காலத்திலிருந்து இன்று காலம் எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல ″பேற்றுக்கால நோவின் கடுமையையும் கால சீட்சியையும்″ குறைக்கும் திறன் இன்று பெருமளவு வளர்ந்திருக்கிறது.

வல்லரசியத்தை வேரறுப்போம்!

முதலாளியத்தை வளர்ப்போம்!
உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் நம் ஒட்டுண்ணிப் பண்பாட்டுக்கு முடிவுகட்டுவோம்!


(நவம்பர்2008, திசம்பர்2008 & சனவரி2009 தமிழினி இதழ்களில் இக்கட்டுரை தொடராக வந்துள்ளது.)

முதலாளியமும் வல்லரசியமும் .....7

வரலாற்றில் இந்திய, தமிழக பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களைப் பற்றி சில ஐயப்பாடுகள் நமக்கு எழுகின்றன. குமரி மாவட்டம் இரணியலில் 1936 வரை அடிமைச் சந்தை இருந்ததாக மேலே குறிப்பிட்ட புலவர் கு.பச்சைமாலின் நூல்(குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, பக்.34இல்) கூறுகிறது.

அப்படியானால் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளபடி அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர் என்பது அடிமைகளைப் பற்றிய குறிப்பா?

கழக இலக்கியத்தில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது தொகுத்தோர் தேர்வின் விளைவா? சென்ற நூற்றாண்டில் சரசுவதி மகால் நூல்நிலையத்தில் ஆங்கிலர் ஒருவர் தொகுத்து வைத்திருந்த நாட்டுப் புறப்பாடல்களில் பெரும்பான்மைப் பாடல்களையும் தீயில் அழித்த கி.வா.சகன்னாதன் செயல் போல் முன்பும் நடந்திருக்கிறதா?

அப்படியானால் தொல்காப்பியம் காட்டும் மருதத் திணை பண்பாடு, நெய்தல் திணைப் பண்பாடு ஆகியவை நிலக்கிழமைப் பண்பாடு என்று எடுத்துக் கொண்டாலும் குக்குலப் பண்பாடு, அடிமை நிலைப் பண்பாடு, நிலக்கிழமைப் பண்பாடு வரையிலான கலப்பு வெள்ளையர் காலம் வரை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர்தான் இன்றைய பெருமளவிலான நிலக்கிழமைப் பண்பாடும் அதற்கு அடுத்தபடி முறையே குக்குலப் பண்பாடும் அடிமைப் பண்பாடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அவ்வப்போது வெளிவிசைகள் வந்து இந்த மனித உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முழக்கங்களை வைத்துத் அடித்தள மக்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்திவிட்டு இறுதியில் கைவிட்டுவிடுகிறார்கள். மீ்ண்டும் பழைய நிலை திரும்பிவிடுகிறது.

இந்தத் தேக்க நிலைக்குக் காரணமே விளைப்புப் பாங்கிலும் தொழில்நுட்பத்திலுமான தேக்கமே. எனவே இந்தத் தேக்க நிலையை மாற்றி முதலாளியத்தினுள் நாம் திட்டமிட்டு நுழைவது உடனடித் தேவையாகிறது.

வரலாற்றில் திட்டமிட்டு முதலாளித்தை லளர்த்த நாடு ஒன்று உண்டு. அதுதான் சப்பான். நாம் முன்பு(தமிழினி அக்டோபர் 2008, மதமும் சமயமும்) குறிப்பிட்டுள்ளது போல், அயலவரை ஐயக்கண் கொண்டு பார்ககும் சப்பானின் துறைமுகம் ஒன்றில் 1853இல் ஒரு அமெரிக்கப் போர்க் கப்பல் குடியரசுத் தலைவரின் ஓலையுடன் நங்கூரம் பாய்ச்சியது. வணிகத்துக்காக வாயில்களைத் திறந்துவிட வேண்டும் என்றது ஓலை. இல்லை என்றால் போர். நிலக்கிழமை ஆள்வினைத் தலைவர்களாகிய டைமியோக்களைப் பேரரசர் கலந்தார். அமெரிக்காவின் கேட்பை ஏற்றுக்கொள்வதென்று முடிவாகியது. ஐரோப்பிய நாடுகளும் பின் தொடர்ந்தன. உள் நுழைவதற்கான இசைவைப் பெற அவை படை வலிமையைக் காட்டவேண்டியிருந்தது.

1868இல் புதிய பேரரசராகப் பதவியேற்ற 14 அகவை இளைஞனை இணங்கவைத்து இந்தியாவில் போல் வருணங்களாக இருந்த சப்பானியக் குமுக அமைப்பைச் சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாகி இருந்த வளர்ச்சி நிலைகளைக் கண்டுவந்து தம் நாட்டில் புகுத்தி ஒரு பின்தங்கிய நிலக்கிழமைக் கொண்டிருந்த சப்பானை இருபதே ஆண்டுகளில் ஒரு முதலாளிய நாடாக மாற்றிய அரும் பணியைச் செய்தவர்கள் ஈட்டோ, இனூயி என்பவர்கள். இவர்கள் அங்குள்ள போர்ச் சாதியாகிய சாமுரையைதச் சேர்ந்தவர்கள். அரச மரபு அல்லது மாநிலங்களின் ஆட்சியாளர்களான சோகன்கள் அல்லது ஆள்வினைப் பொறுப்பிலிருந்த டோமியோக்கள் ஆகியோரிடையிலிருந்து வந்தவர்கள் அல்லர் அவர்கள். வாள் வைத்துக்கொள்ளும் உரிமை பெற்ற, ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு போர் வந்தாலொழிய எந்த வேலையுமில்லாத, ஒட்டுண்ணிகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் எளிய மக்களிடையிலிருந்து தோன்றியவர்கள். போர்க்குணம் உள்ள இச்சாதியினரின் ஒரு பகுதியின் பின்னணி இருந்ததனாலும் முன்பு ஆயுதம் ஏந்த உரிமை இல்லாதிருந்த உழவர்களும் அவரகளுக்கும் கீழே இருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களுக்குக் கிடைத்த உரிமைகளைக் காத்துக்கொள்ள வீறார்ப்புடன் துணைநின்றதாலும் இந்த மாற்றங்களை எதிர்த்து நடைபெற்ற இயக்கங்களை அவர்களால் எளிதில் முறியடிக்க முடிந்தது.

வெள்ளையர்கள் நுழைந்து இந்தியாவின் பகுதிகளைப் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்குப் பல வழிகளில் துணைநின்ற மரபுப் பெருமை மிக்க அரசர்களுக்கு மாறாக அவர்களை எதிர்த்து வீறுடன் போரிட்ட திப்பு சுல்தான் ஆகட்டும் நாட்டு மக்களைத் திரட்டி 1801 முதல் 6 ஆண்டுகள் தமிழகத்திலும் தென்னகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள பாளையக்காரர்களையும் சிற்றரசர்களையும் ஒரு கூட்டமைப்பில் இணைத்துப் போரிட்டதுடன் நம் வரலாற்றிலேயே முதன்முதலாக மக்களின் ஓர் உரிமைப் பட்டயத்தையும் வெளியிட்ட மருது பாண்டியர்களும் ஆகட்டும் அவர்களெல்லாம் எளிய குடும்பங்களிலிருந்து தோன்றியவர்கள். ஆனால் அவர்களுக்கு சப்பானியர்களுக்கு வாய்த்தது போல் ஒரேயொரு அரசனின் துணை கூடக் கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று அவலம்
[1].

சப்பானிலும் தென்னிந்தியாவிலும் 19ஆம் நூற்றாண்டில் போர்ச் சாதிகளின் நடத்தை இவ்வாறிருக்க 20, 21ஆம் நூற்றாண்டுகளில் காந்தி ஊழியிலும் பின்னர் பெரியார் ஊழியிலும் வழக்கம் போல் தம் நாட்டு மக்கள் மீது மேலாளுமை செலுத்துவதற்காக அயலவரான பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் வல்லரசியல்களுக்கும் தமிழ்நாட்டை விலை பேசுவதாகவும் அதில் பங்குச் சண்டை அரசியல் நடத்துவதாகவும் தங்கள் மேலாளுமையை நிலைநிறுத்துவதற்காகத் தங்கள் எண்ணிக்கை வலிமையையும் பொருளியல், அரசியல் செல்வாக்குகளையும் பயன்படுத்தி அயலவர் எவராயிருந்தாலும் அவர்களுக்கு அடிமை செய்யத் தயங்காத கோழைகளின் செயலாகவும் மானமில்லாவர் செயலாகவுமே அவர்களது நடவடிக்கைகள் உள்ளன.

நம் சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு நேர்மையாகச் செயற்படும் ஒரு தலைவன் நம்மிடையிலிருந்து உருவாகவில்லை; அல்லது அத்தகைய தலைவர்களை இனங்கண்டு முன்னணியில் கொண்டுவந்து நிறுத்தும் பக்குவம் நமக்கு இன்னும் கைகூடவில்லை; அல்லது அவர்களை முன்னிறுத்தத்தக்க சிக்கல்களை உணரத்தக்க வகுப்புகளிடம் உரிய அகமை, அதாவது சிந்தனை வறட்சி நிலவுகிறது; அல்லது அவர்களின் சிந்தனை திசைதிருப்பப்பட்டுள்ளது என்பதுதான் இப்போது நம் நாட்டின் முன்னுள்ள மாபெரும் சிக்கல். தலைவர்கள் என்ற வகையில் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் வெறும் தற்செயல் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

முடியாது, கட்டாயமாக முடியாது. ஏனென்றால் இந்த அக வறுமைக்கும் வெறுமைக்கும் மார்க்சியத்தின் மறுப்பும் திரிபுமான பொதுமைக் கோட்பாட்டுக்கு முழுப் பொறுப்பு உண்டு. நம் நாட்டில் முதலாளியத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டிய தொழில் முனைவுள்ள உடைமை வகுப்புகளின் உளவியல் மீது திட்டமிட்ட ஒரு கொடும் தாக்குதலை அக்கோட்பாடு நடத்தி வெற்றி பெற்று நிற்கிறது. அயல் சமயங்களின் மூலமாகவும் உள்நாட்டுக் கட்சிகள் மூலமாகவும் தொண்டு என்ற பெயரில் அளந்து அறிய முடியாத அளவில் பாயும் அயல்நாட்டுப் பணத்தின் மூலமாகவும் இது இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் மிகக் குறைந்த முதலீட்டிலும் உழைப்பிலும் மிகப் பெரும் வருவாயை ஈட்டும் கல்லூர்ப் பேராசிரியர்களும் அரசூழியர்களும் அவர்களுக்கு இணையாக வருவாய் ஈட்டுவதற்கு ஒரு வாணிகனோ ஒரு சிறுதொழில் முனைவரோ முதலீட்டு இழப்பை எதிர்நோக்குதல், பல்வேறு வகையான சந்தை நெருக்கடிகள், ஊழியர் சிக்கல்கள், ஆட்சியாளர் செய்யும் அட்டூழியங்கள், குறிப்பாக வருமான வரித் துறையின் வரம்பு மீறல்களால் அடையும் மானக்கேடு ஆகியவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அவர்களைச் சுரண்டல் பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள், இரத்தக் காட்டேரிகள் என்றெல்லாம் ஈவிரக்கமின்றி வசைபாடி மக்கள் நடுவில் அவர்களைப் பற்றிய ஒரு கொடுமையான படிமத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதைவிடவும் கொடுமை அவர்களே தங்களைப் பற்றிய அத்தகைய ஒரு படிமத்தைத் தங்கள் மனதில் ஏற்றிவைத்துவிட்டார்கள் என்பதுதான். அதனால்தான் யார் எந்தக் கொடுமையைத் தங்களுக்கு இழைத்தாலும் எதிர்த்துப் போராடாமல் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத் தவிர்க்க முயல்காறார்கள். இது நம் நாட்டுப் பொருளியல் வளர்ச்சிக்கும் தற்சார்புக்கும் மக்களின், குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் எவ்வளவு தடையாக இருந்திருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இந்தத் தப்பெண்ணங்களிலிருந்து அவர்கள் தப்புவதற்கு உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியின் இன்றியமையாமையையும் தொழில் முனைவோரும் முதலீட்டாளரும் ஆற்றுகின்ற பெருமை மிக்க இன்றியமையாப் பொதுநலத் தொண்டு குறித்தும் அவர்களது தன்மதிப்பை அவர்களே உணரும் வகையில் செறிவான, முனைப்பான பரப்பல் செய்ய வேண்டும்.

பணம் படைத்தவர்களின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் நாட்டையே குட்டிச்சுவராக்கிவிடும் என்பதை அமெரிக்கப் பட்டறிவும் அளவுமீறிய கட்டுப்பாடு நாட்டைச் சிதறடித்துவிடும் என்பதை உருசியாவின் பட்டறிவும் அண்மைக்கால நிகழ்வுகள் மூலம் நமக்கு ஐய்யத்துக்கு இடமின்றிக் காட்டியுள்ளன. எனவே நயமான கண்காணிப்புக்கு உட்பட்ட தேசிய முதலாளியமே அமைதியான மனிதகுல முன்னேற்றத்துக்கு உகந்தது.

சங்கக் குடும்பங்கள்(சங் பரிவார்) உட்பட்ட அயல் சமய அமைப்புகள் இன்னொரு புறம் தங்களுக்கு அயல் நாடுகளிலிருந்தும் பனியாக்கள், பார்சிகளிடமிருந்தும் கிடைக்கும் கணக்கற்ற பணத்தைப் பயன்படுத்தி மக்களிடையில் மதவெறியை ஊட்டி இவர்களது கொள்ளைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி வைத்துள்ளன.

இன்னொரு புறம் தமிழகத்தைப் பொறுத்தவரை பொருளியல் உரிமைக்கான போரட்டம் நடக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் ஒரு ″மொழி முதன்மைக் கோட்பாட்டை″க் காட்டி தமிழகத்தில் உள்ள செயல் ஊக்கம் உள்ள மக்களின் ஒரு பகுதியினரின் சிந்தனையைக் குழப்பி வைத்துள்ளனர். இவர்களிடையிலும் பணப்புழக்கம் தாராளமாக உள்ளது.

″இந்தியத் தேசிய″, அதாவது அனைத்திந்தியக் கட்சிகள் எனப்படுபவை பல்வேறு மாநில மக்களுக்கு இடையில் திட்டமிட்ட வகையில் பகைமையை வளர்த்துத் தம் தேசியக் கொள்ளைகள் மீது மக்களின் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்கின்றன.

சுரண்டல் விசைகளின் இந்தத் திசை திருப்பல்களிலிருந்து மக்களின் கவனத்தைப் பொருளியல் உரிமையின் இன்றியமையாமை, அதாவது, நம் மக்களிடம் திரளும் பணத்தை ஆக்கமான வகையில் முதலிட உரிமை, நம் நாட்டு மூலவளங்கள் மீது அந்தந்தப் பகுதி மக்களுக்கு உள்ள மறுக்க முடியாத உரிமை, நம் அறிவியல் - தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த நமக்குள்ள உரிமை ஆகியவை மீது ஈர்க்க வேண்டு்ம்.
மார்க்சிய அறிதல் கோட்பாட்டில் நடைமுறை மிக முகாமையான இடத்தைப் பிடித்துள்ளது. எவ்வளவுதான் சிந்தித்தாலும் ஆயிரம் பேர் சேர்ந்து அலசினாலும் நடைமுறையில் செய்து சரிபார்ப்பதற்கு இணையாக நிற்க முடியாது. இற்றை அறிவியலும் செய்மூறை ஆய்வைத்தான் தன் இறுதி உத்தியாகக் கொண்டுள்ளது. நம் நாட்டில் ″அறிதல்″ உத்திகளாகக் கொள்ளப்படும் ″யோகமு″ம் ″தியானமு″ம் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை நாம் நமது தேவை ஒவ்வொன்றுக்கும் வல்லரசுகளையே நாடி நிற்கும் நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

செல்வத்தில் திளைத்து தினவெடுத்து ஒய்யார வாழ்வின் உச்சத்துக்குச் சென்ற உரோமப் பேரரசு அங்கிருந்த அடிமைகளால் முடிவுக்கு வந்து இருண்ட காலத்துக்குள் நுழைந்த ஐரோப்பா அதிலிருந்து வெளியேற 12 நூறாண்டுகள் பிடித்தது. அது போல் அமெரிக்க ஆளும் கூட்டம் தினவெடுத்து நிற்கிறது. உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு அடிமைகள் அவர்களது கொட்டத்தை அடக்கப் போகிறார்களா அல்லது உலகத்தின் மூலை முடுக்கிலெல்லாம் தன் படையை நிறுத்தி வைத்து கொழுப்பெடுத்து ஆங்காங்கே உரசிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கிறுக்குத்தனத்தால் ஓர் உலக அணுப்போர் தொடங்க இருக்கிறதா என்பது உலகில் உள்ள சரியாகச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் முன் எழுந்து நிற்கும் பெரும் கேள்வி.

புதிதாகக் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றிருக்கும் கறுப்பரான ஒபாமா அமெரிக்க அணுகலில் புரட்சிகர மாற்றம் எதையோ கொண்டுவரப் போகிறார் என்று கணிக்கின்றனர். ஆனால் நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின் ஒரு கறுப்பர் இப்பதவியைப் பெற்றிருப்பதால் உலகில் அமெரிக்க நலன்கள் என்று அமெரிக்கர்கள் கருதும் இனங்களில் அவர் மிகுந்த எச்சரிக்கையுடனேயே செயற்பட வேண்டியிருக்கும். முன்னிருந்தவர்களைவிட மிக முனைப்பாகச் செயற்படும் உளவியலுக்குக்கூட அவர் ஆட்படலாம். அயலுறவு அமைச்சர்களாகச் செயற்பட்ட காலின்சு பாவெல் மன அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளியேறியதையும் கண்டலீசா ரைசு தன் முன்பு இருந்தவர்களிலிருந்து எந்த வகையிலும் மேம்பட்டவராக நடந்துகொள்ளவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒபாமாவினது தொடக்க கால நடைமுறைகள் நம் கருத்தை வலியுறுத்துவனவாகவே உள்ளன.

அமெரிக்கர்களுடைய பொதுவான குமுகியல் அணுகல் வெள்ளையரோடு நிறமுள்ளவர் (Coloured people) என்று அவர்கள் குறிப்பிடும் அயல்நாட்டினரின் கலப்பில் பிறந்தவர்கள் மீண்டும் மீண்டும் எத்தனை முறை வெள்ளையரோடு கலந்தாலும் கூட அவர்களைத் தங்களுக்கு இணையானவர்களாக அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக தென்னமெரிக்காவில் ஒருவர் பிறந்த நாட்டையோ அவருடைய நிறத்தையோ பார்ப்பதைவிட அவர் கடைப்பிடிக்கும் பண்பாடு ஐரோப்பிய, சிவப்பிந்திய கலப்பில் உருவாகியுள்ள இலத்தீன் அமெரிக்கப் பண்பாடா அல்லது பண்டைய சிவப்பிந்தியப் பண்பாடா என்பதைத்தான். இவ்வாறு ″இனத்தூய்மை″யில் விடாப்பிடியாக இருந்த வட அமெரிக்கர்கள் இன்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் அண்மைக் காலத்து வந்தேறிகளுக்கும் கலப்பினத்தாருக்கும் சிறுகச் சிறுக இடமளித்து இப்போது இறுதியில் குடியரசுத் தலைவராகவே ஒரு கலப்பினத்தவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அங்கே வெள்ளையரின் ஆற்றல் வீழ்ச்சி அடைந்து பிற இன மக்கள் அவர்களது இடத்தைப் பிடிக்கத்தக்கதாகத் தம் ஆற்றலை வளர்த்துள்ளனர் என்பதுதான் அதன் பொருள். ஆனால் இதனால் அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள ஐரோப்பியர் அல்லாத மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என்று நினைத்தால் நாம் ஏமாந்தவர்களாவோம், ஏனென்றால் பொருளியல் நலன்கள் எப்போதும் நிலம் சார்ந்துதான் செயற்படும். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் வாழும் தமிழ் பேசும் ஓர் உழவன் காவிரி நீர் தொடர்பாகக் கன்னட மாநிலத்துக்குச் சார்பாகத்தான் செயற்பட முடியும். அதுதான் தேசியம் என்பதன் உண்மையான இயல்பும் உள்ளடக்கமும்.

அடுத்து பாராளுமன்ற ″மக்களாட்சி″யின் எல்லைப்பாடுகளையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இந்தியாவுடன் ஒப்பிட அமெரிக்காவின் ″மக்களாட்சி″ உயர்வானது என்று கூறப்பட்டாலும் அங்கு பாராளுமன்றத்துக்குத்தான் இந்தியாவில் உள்ளதைவிடக் கூடுதல் அதிகாரமே அன்றி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அங்கும் வரிசையில் காத்து நின்று வாக்குப் பதியும் வெறும் கருவிகளே. அங்கு நடப்பதும் உலக வாணிகத்தைக் கையில் வைத்திருப்போரின் (இன்று அது யூதர்களைக் கொண்டுள்ளது) வெறும் குழுவாட்சிதான். இந்தியாவைப் பொறுத்தவரை மோகன்தாசு கரம்சந்து காந்தியின் புண்ணியத்தால் பனியா - பார்சி கும்பலின் குழுவாட்சிக்குப் போட்டியாக இன்றுவரை எவரும் களத்தில் இறங்க முடியவில்லை.

இவ்வாறு நாம் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்தகவுகளும் மெய்யாகாமல் இருக்க வேண்டுமாயின் உலக நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்படும் வகையில் ″ஏழை″ நாடுகளிலிருந்து வல்லரசுகளுக்குப் பாயும் செல்வம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிகழ வேண்டுமாயின் ″ஏழை நாடுகளிலுள்ள மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்படும் அளவுக்குச் செல்வ உருவாக்கமும் பங்கீடும் சீர்செய்யப்பட வேண்டும். அது நிகழ வேண்டுமாயின் மலை உச்சிகளிலும் கடல் ஓரங்களிலும் மனிதன் எட்டாத மூலை முடுக்குகளிலும் வாழும் அனைத்து மக்களும் தேசியங்களின் நீரோட்டங்களுக்குள் பிற மக்களுக்கு இணயாகவும் சமமாகவும் கொண்டுவரப்பட வேண்டும். பெருமரபியல் தேசிய முதலாளியம் ஒன்றால்தான் இதைச் செய்ய இயலும்.

உலகுக்கு கறிக்கோழி போன்ற மிக விரைந்த ஆனால், சிறு தட்பவெப்ப மாறுபாட்டைக் கூடத் தாங்க முடியாத வளர்ச்சி தேவையில்லை. உலகின் அனைத்து வளங்களையும் ஒரு சில நாடுகளில் உள்ள பணமுதலைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும், உலகிலுள்ள இளைஞர்களைப் பொறுக்கி தமக்கு வேண்டிய திறன்களை வளர்த்து பிற திறன்களை அழித்துத் தங்களுக்குப் பயன்படுத்திவிட்டு வீசியெறிந்து விடும் உலகளாவிய கல்வி கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும், நாட்டுக்கு நாடு, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வெவ்வேறு பகுதிக்குப் பகுதி, ஒவ்வொரு பகுதிக்குள்ளும் மக்களுக்கு மக்கள் எட்டமுடியா ஏற்றத்தாழ்வை வளர்த்து வைத்திருக்கும் இந்த ″வளர்ச்சி″ என்ற பெயரிலான அழிவு தேவையிலை. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அதன் பகுதிகளுக்குள்ளும் வாழும் மக்களின் வாழ்நிலையில் கேடுதரும் அளவுக்கான ஏற்றத்தாழ்வுகள் இன்றி சீரான வளர்ச்சியை எய்தும் படியான, ஒரு கோடியிலுள்ள வளர்ச்சியின் பயன்கள் மறுகோடியை எட்டுவதற்குரிய கால இடைவெளியைத் தரும்படியான விரைவில் வளர்ச்சி இருந்தால் போதும். ″திறன் மிகுந்த″ மூளைகளைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்துகிறோம் என்று மேல்தட்டினர் மேன்மேலும் பிற மக்களிடமிருந்து தங்களை எட்டாத உயரத்துக்குக் கொண்டு செல்லும் தொடர்ச்சியான உயர்கல்வி முறை தேவை இல்லை. பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவும் மாறி மாறி, ஒன்றையொன்று தொடர்ந்து வரும் சீரான வளர்ச்சி தரும் கல்விமுறையைப் புகுத்துவோம். குழந்தைகளுக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும் திறன்களை அறிவதற்கும் அவற்றை குமுகத்துக்கு ஆக்க வழியல் பயன்படும் வகையில் வளர்த்தெடுப்பதற்கும் உரிய தொழிலியல், வேளாண்மையில், கலையியல், படிப்பியல் கட்டமைப்புள்ள கல்வி நிலையங்களை, அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் அமைப்போம். அவர்களிடம் பிறவியிலேயே குமுக வாழ்க்கைக்குக் கேடுதரும் பண்புகள் அமைந்திருந்தால் கல்வி மூலமும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்திப் பயிற்சிகள் அளிப்பதன் மூலமும் அவற்றை அகற்றுவோம். கல்விக்காகக் குமுகச் செல்வத்தில் பாதியைக் கூட, ஆனால் சரியான முறையில் நாம் செலவிடலாம்.

(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1] இந்தப் போர் பற்றிய செய்திகளை ப-ர். இராசதுரை அவர்கள் எழுதியுள்ள South Indian Rebellion என்ற நூலில் பார்க்கலாம்

23.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....6

மார்க்சிய மெய்யியல் இரண்டு பகுதிகளைக் கொண்டது:

1. வரலாற்றுப் பருப்பொருளியம் (Historical Materialism)


இதன் சாரம் நாம் முன்பு குறிப்பிட்டுள்ளவாறு, மனித இனம் முந்தியல் பொதுமை, அடிமைக் குமுகம், நிலக்கிழமைக் குமுகம், முதலாளியக் குமுகம் என்ற, விளைப்புக் பாங்கில் மாறுபட்ட, ஒன்றிலிருந்து அடுத்தது தொழில்நுட்பத்திலும் மனித உறவுகளிலும் மேம்பட்ட பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. அந்தந்த வளர்ச்சிக் கட்டத்துக்கு உரிய விளைப்புப் பாங்குக்கு ஏற்றவாறு மேம்பாட்டைந்தவையாக அதன் சமயம், திருமண உறவுகள், அறிவியல் - தொழில்நுட்பங்கள், உணவு முறைகள், சட்டங்கள், கலை இலக்கியம், அரசியல், மனித உறவுகள் என்று நீண்டு செல்லும் ″குமுகத் தன்னுணர்வின்″ வெளிப்பாடுகள் அமைகின்றன.

2.இயங்கியல் பருப்பொருளியம் (Dialectical Materialism)


இதன் அடிப்படை:

1.இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கின்றன; மாறாமல் நிலையானது என்று எதுவுமே கிடையாது; மாறாமல் இருப்பது மாறுதல் ஒன்றுதான் என்பது.


2.இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை எதிரிணைகளின் முரண்பாட்டினால் இயங்குபவை; இந்த இயங்கியல் எதிரிணைகள் ஒன்றையொன்று அழிப்பதில்லை; ஒன்று இல்லாமல் மற்றொன்று இருப்பதில்லை.

இவற்றின் தன்மைகள் இயங்கியல் விதிகள் என்ற வகைப்பாட்டினுள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை மூன்று:


1.எதிரிணைகள் ஒன்றையொன்று ஊடுருவுதல்.
ஒரு நிகழ்முறையில் செயற்படும் எதிரிணைகள் ஒன்றை ஒன்று ஊடுருவுகின்றன, ஒன்று மற்றொன்றாக மாறுகின்றன என்பது. முட்டையும் கோழியும் இதற்குச் சான்றாகலாம். தாய் குழந்தையைப் பெறுகிறாள்; குழந்தை தாயாகிறது என்ற வகையிலும் கூறலாம்.


2.அளவு மாற்றம் பண்புமாற்றமாதல்.
பெண்கள் வெளியில் வேலை பார்க்கச் செய்வது ஒரு காலத்தில் விதிவிலக்காக இருந்தது. இப்போது இயல்பாக மாறிவிட்டது. இன்னும் சில காலம் சென்றால் அதுவே விதியாகிவிடும்.


3.அகற்றுவது அகலல்.
ஒரு நிலைமை இருந்து அதனை அகற்றிவிட்டு புதிய ஒரு நிலைமை வருகிறது. சில காலத்தில் அதனையும் அகற்றிவிட்டு புதிதாக இன்னொன்று வருகிறது.

இந்த மூன்று விதிகளையும் ஒரே விதிக்குள் கொண்டு வருவோமா?

தாய் பெண் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தை வளர்ந்து வளர்ச்சி ஒரு கட்டத்தை அடைந்ததும் அவள் தாயாகும் பக்குவத்தை அதாவது பண்பைப் பெறுகிறாள். வளர்ச்சி அதாவது அளவு மாற்றம் எல்லையை எட்டியதும் அது பண்பு மாற்றமாக மாறுகிறது. இந்தத் தாய் ஒரு மகளைப் பெறும்போது மூன்றாம் விதி செயற்படுகிறது. இந்தத் தாய் பிறந்த போது அவள் தன் தாயை அகற்றினாள். இப்போது இவள் மகள் இவளை அகற்றுகிறாள். அகற்றிவிட்டு வந்தது அவளால் அகற்றப்பட்டது அல்ல, புதிய ஒன்று.

சீனத்தில் உள்ள ஒரு கோட்பாடு நாம் இறுதியில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முரண்பாட்டை ஒரே தொடராகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஏங்கெல்சு வகுத்த இயங்கியல் கோட்பாடு தவறு என்று வாதிட்டனர் மூன்றாம் அணி எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனம் படைத்த அறிவுத்துறையினர். சீனத்தில் உள்ள வடிவம் இதோ:

முரண்பாடுகள், முதன்மை முரண்பாடுகள் என்றும் முதன்மை இல்லா முரண்பாடுகள் என்றும் இரு வகைப்படும். வளர்ச்சிப் போக்கில் முதன்மை முரண்பாடு பின்னணிக்குச் சென்றுவிட முதன்மை இல்லா முரண்பாடு முதன்மை முரண்பாடாகும். அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் அந்த முதன்மை முரண்பாடு பின்னணிக்குச் சென்றுவிட புதிதாக ஒரு முரண்பாடு முதன்மை முரண்பாடாக வரும். இதுதான் முரண்பாடுகள் என்ற தலைப்பில் மா சே துங் பெயரில் வெளிவந்துள்ள நூலின் சாரம். இதில் அகமுரண்பாடுகள், புறமுரண்பாடுகள் என்ற எதிரிணைகளும் ஒன்று மற்றொன்றாக மாறும் என்றே கூறப்பட்டுள்ளது.

வடிவம்தான் வேறே ஒழிய உள்ளடக்கத்தில் வேறுபாடு இல்லை என்பது மேலே உள்ளவற்றிலிருந்து உறுதிப்படுகிறது.

நாம் முன்னோரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போல் மார்க்சை வெளிப்படையாக மறுதலிக்கத் துணிவின்றி மார்க்சின் படிமத்தை முழுமையாகப் பேணிவைத்து அவர் பெயரைக் கூறியே அவரது கோட்பாட்டைத் திரிப்பது அவர்களது நோக்கம்.

இயங்கியலைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த மாபெரும் இயங்கியல் மெய்யியலாளரான செருமனியின் எகல் என்பவரை அடியொற்றி மார்க்சிய இயங்கியலை நுண்பொருளிய(Idealsim) அணுகலிலிருந்து பகுப்பொருளிய(Materialism) அணுகலுக்கு மாற்றியவர் மார்க்சே. சிந்தனையிலிருந்து பருப்பொருள் உருவாகிறது என்ற எகலின் கருத்தை மறுத்து பருப்பொருளிலிருந்து சிந்தனை உருவாகிறது என்று மாற்றியது மட்டுமே மார்க்சினுடைய பணி. அதனை முறையான வடிவில் எழுத்தாக்கிய பணியை ஏங்கெல்சு செய்தார், அவ்வளவே.

இனி, முரண்பாடுகளே இயற்கை, குமுகம், சிந்தனை ஆகியவற்றை இயக்குகின்றனவென்றால், பொதுமைக் குமுகம் முரண்பாடுகளற்ற ஒரு குமுகமாக இருக்கும் என்றும் சொன்னால் அந்த குமுகம் இயக்கம் இன்றித் தேங்கி நிற்குமா? அப்படி இயற்கையில் எதுவும் தேங்கி நிற்காது. முன்னே போக வேண்டும் .அல்லது பின்னோக்கிப் போக வேண்டும். மேலே போக வேண்டும் அல்லது கீழ்நோக்கிப் போக வேண்டும், (நம்மூர் பொதுமைத் தோழர்கள் பின்னோக்கிச் செல்லும் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எப்போதும் முன்னோக்கித்தான் எதுவுமே நகரும் என்பார்கள். தமிழக வரலாற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னுக்குத் தள்ளுவதற்குத் தோதாக இருக்கிறது என்பதுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்பது அவர்களது ″வரலாற்று″ அணுகல்களைப் பார்த்தால் புரியும்.)

மாற்றம் என்பது இயற்கையிலும் குமுகத்திலும் மனிதச் சிந்தனையிலும் இடைவிடாது நிகழ்வது என்பது இயங்கியல் பருப்பொருளியத்தின் அடிப்படைக் கோட்பாடு அல்லவா? இயற்கையிலிருந்து மனிதன் உருவாகி அவனது சிந்தனையும் உருவானாலும் அவை மூன்றும் ஒன்று பிறவற்றைச் சார்ந்தும் சாராமலும் இயங்கி ஒன்றை ஒன்று இயங்கவக்கின்றன, அதாவது மாற வைக்கின்றன. இந்த வகையில் எந்தக் குமுகமும் மாறாமல் நிலைத்து, உறைந்து போகாது என்ற வகையில் அரசு என்பது ″உதிர்ந்து போன″ நிலைமாறி மீண்டும் புதிய மனித உறவுகள் தோன்றலாம்.

இயங்கியல் எதிரிணைகள் என்ற வகையில் வகைதிணை(Catagories)களாக சிலவற்றைக் குறிப்பிடலாம். அவை:


1.காரணம் - விளைவு

2.வியத்தி(இயற்காட்சி) - சாரம்

3.வடிவம் - உள்ளடக்கம்

4.அமைப்பு - பயன்பாடு

5.விதி - தற்செயல்

6.நிகழ்தகவு - பட்டாங்கு

இவை மீப்பொதுவான வகைத்திணைகள். மற்றப்படி இயங்கியல் வகைத்திணைகள் எல்லையற்றவை. ஒவ்வொரு வகை இயக்கத்துக்கும் அதற்கே உரிய ஒன்றோ பலவோ இயங்கியல் வகைத்திணை உண்டு.

மனித அறிதல் குறித்த ஒரு கோட்பாடு அறியொணாமையியம் (அஞ்ஞானவாதம்- Agnosticism) என்பதாகும். இயற்கையை நம்மால் முழுமையாக அறிய முடியாது என்று அது கூறுகிறது அது. மார்க்சியம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இயற்கை இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதால், மாறிக் கொண்டிருப்பதால் மனித அறிவும் அதற்கேற்ப மாறிக் கொண்டிருக்கும், அறிவு தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் என்கிறது. அது போலவே குமுகமும் அதனுள் காலம் கொண்டுவரும் புதிய மாற்றங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.

எந்த ஓர் இயங்குதிணையும் முரண்பாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இன்றி நிகழாது. நீர் மட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் அது ஓடும். காற்று அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் அது வீசும். மின்னாற்றலில் பொதியல் வேறுபாடு (Potential Difference) இருந்தால்தான் மின்னோட்டம் இருக்கும். அதே வேளையில் அளவுக்கு மீறிய முரண்பாடு நமக்குப் பயன்படுவதற்கு மாறாகப் பெருங்கேட்டை விளைக்கும். அணையில் மறுகால் இயங்காமல் நீர் மட்டம் உயர்ந்தால் அணை உடைந்து பேரழிவை உண்டாக்கும். காற்றழுத்த வேறுபாடு மிகுதியானால், ″மிகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்நிலை″ அளவுமீறினால் புயல் வீசிப் பேரழிவை ஏற்படுத்தும். மின்சாரம் இரு வீச்சுக் கம்பிகள்(Phase wires) ஒன்று சேர்ந்து போனால் மின்தளவாடங்கள் அனைத்தும் தீய்ந்து போகும். அது போல்தான் நாடுகளுக்கிடையிலும் நாட்டுக்குள் மக்களுக்கு இடையிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் வந்தால் அதனால் நிகழும் பேயாட்டம் உலகத்தை அல்லது நாட்டை அழிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

இன்று அமெரிக்காவில் தாங்கள் கட்டிய வீட்டுக்கு வாங்கிய கடனை அடைத்து உரிமையாக்க முடியாத ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருக்கிறது. அங்குள்ள வெள்ளையர்கள் பயன்படுத்தி வீசியெறியும் புதுமை மாறா தொ.கா.பெட்டி, குளிர்பதனப் பெட்டி போன்ற பல்வேறு பயன்படு பொருட்களைப் பொறுக்கிப் பயன்படுத்தும் கூலி வேலை தேடிப் போன ″ஏழை″ நாட்டு மக்கள் பெருமளவில் அங்கு குவிந்துள்ளனர். அங்கு வேலைக்குச் சென்று அளவின்றி ஈட்டும் நம் நாட்டு ″இறைச்சிக் கோழிகள்″ தம் ஊரிலும் தம் வீட்டிலும் தமக்குத் தேவையான வசதிகளும் சூழல்களும் இல்லை என்பதற்காக அவர்கள் வந்து தங்கி தன் உற்றோருக்கும் மற்றோருக்கும் திருக்காட்சியளிப்பதற்காக நம் நாட்டிலுள்ள நகரங்கள் தோறும் ″விண்மீன்″ தரமுள்ள விடுதிகள் எழும்பி வருகின்றன. அதே வேளையில் ஆப்பிரிக்காவின் ஆள் நுழைய முடியாத, அன்றாடம் பிற்பகலில் மழை பெய்து பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும் குருதியை உறிஞ்சும் செடிகொடிகளுக்கும் நடுவில் வாழும் குறளி(குள்ள) மனிதர்களுக்கு இணையாக, மெய்யியலிலே உலகுக்கு வழிகாட்டியவர்கள் நாம் என்று நண்பர் செயமோகன் போன்றவர்கள் போற்றிப் புகழும் நம் நாட்டிலும் மலைகளில் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நிலை மேம்பட்டால் அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் பண்பாடு கெட்டுப் போகும் என்று கூசாமல் பேசும் வெளிநாட்டு பணத்தில் புரளுகிறவர்களும் சொந்தப் பணத்தில் வாழுகிறவர்களுமாகிய படித்த ஒட்டுண்ணிகள் ஓயாமல் பரப்பி வருகிறார்கள்.


(தொடரும்)

22.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....5

இந்தியா, பாக்கித்தான், சீனம் போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு நிகர விளைப்பில் (உ.நி.வி.யில்) ஏறக்குறைய பாதி அளவுக்கு ஏற்றுமதி சார்ந்த சந்தையையே நம்பியுள்ளன. சீனம் உ.நி.வி.யில் 35.3% அளவுக்கே உள்நாட்டு நுகர்வைக் கொண்டுள்ளது(Financial Chronicle, 30-09-2008 p.Ⅱ). அதன் ஏற்றுமதி 64.7% என்பது இதன் பொருள். அப்படியானால் சீனத்தின் படைப்புகளை நுகரும் நாடுகளில் வாங்குதிறனில் விழும் ஒவ்வொரு அடியும் சீன மக்களின் வாழ்க்கையின் அடிப்படையைக் குலுங்க வைக்கும்.

இந்தியாவிலும் பண்டப் படைப்பும் ″மனித வள மேம்பாடும்″ கூட ஏற்றுமதியைச் சார்ந்தே அமைந்துள்ளன. எனவே உலகம் முழுவதும் வரவிருப்பதாக ஏறக்குறைய அனைத்து வல்லுநர்களும் ஒரே குரலில் கூறும் உலகின் இரண்டாவது மீப்பெரும் பொருளியல் பின்வாங்கலில் இந்நாட்டின் இடைத்தர மக்கள் படப்போகும் அல்லல்களுக்கு அளவே இருக்காது. இந்த அல்லல்களிலிருந்து மீள்வது எப்படி?

நாம் கூறியுள்ள தேசிய முதலாளியம் கைகொடுக்கக் கூடும். அனைத்துவகை விளைப்புகளும் பணிகளும் பங்கு முதலீட்டில் செயற்படும் பெரும் நிறுவனங்களாகவும் பண்ணைகளாகவும் மாறி மிகப் பெரும்பான்மை மக்களும் அவற்றில் தொழிலாளர்களாவார்கள். அவர்களது வாங்கு திறன் உயரும். நம் நாட்டில் விளைக்கப்படும் பண்டங்களுக்கும் கிடைக்கத்தக்க பணிகளுக்கும் நம் நாட்டிலேயே சந்தை உருவாகும்.

இந்த வளர்ச்சி நிலை உருவாவதற்கு கணிசமான கால இடைவெளி தேவைப்படும்தான். ஆனால் இதை விட்டால் வேறு வழி இல்லை. இத்தனை காலமும் நாம் செய்த தவறுகளுக்குக் கழுவாயாக, இப்போது கிடைத்திருக்கும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து மக்களையும் நாட்டின் முதன்மைப் பொருளியல் நீரோட்டத்தினுள் கொண்டுவரும் இன்றியமையாப் பணியை உடனே தொடங்குவோம்.

அந்நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டுப் பங்குகள் இருந்தால் தேசத்தின் மிகப் பெரும்பாலான குடிமக்களில் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் இருப்பர். அப்போது தமது ஒவ்வொரு நடவடிக்கையும் தமது உடனடி ஆவல்களை நிறைவேற்றுவதா, தனது எதிர்கால, நீண்டநாள் நலனுக்கு உகந்ததா என்று எடை போட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம் அல்லது சிந்தனை உருவாகும். அதுவே தனி நலன், குமுக நலன் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு சமநிலையைப் பேண வேண்டிய தேவையை வாழ்க்கையின் நடைமுறைகள் அனைவருக்கும் உணர்த்தி படைப்புச் செயல்முறைக்கு எதிராக நிற்பதைவிட அதற்கு ஆதரவாக அவர்களது செயற்பாடுகள் அமையும். மக்களின் பண்பாட்டு மட்டம் உயரும். இலவயங்களையும் வெற்று ஆரவாரங்களையும் நம்பி ஆட்சியாளர்களை எடைபோடுவதைக் கைவிட்டு கோட்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சியாளர்களின் செயல்களை எடைபோடும் பக்குவம் உருவாகும்.

மார்க்சியமும் பொதுமைக் கோட்பாடும்

பொதுமைக் குமுகத்தின் முதல்படி நடவடிக்கைகள் எப்படி என்பது பற்றி மார்க்சும் ஏங்கெல்சும் பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கையில் கூறியிருப்பவை:

″இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக வெவ்வேறு நாடுகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.

″இருந்தாலும் மீமுன்னேறிய நாடுகளில் கீழே உள்ளவை ஓரளவு பொதுவாகக் கையாளத்ததவை.

″1. நிலத்தில் தனியுடைமையை ஒழித்தலும் அனைத்து நிலவாடகையையும் பொது நோக்கங்களுக்காகக் கையாளுதலும்.


″2. சிறுகச் சிறுக உயர்ந்து செல்லும் கனத்த ஒரு வருமான வரி.

″3. அனைத்து மரபுவழிச் சொத்துரிமையையும் ஒழித்தல்.

″4. நாட்டைவிட்டு வெளியேறுவோர், கலகக்காரர் ஆகியோர் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தல்.

″5. கடன் வழங்குவதை நடுப்படுத்தி ஒரு தேசிய வங்கி மற்றும் அரசு மூலதனத்துடன் அரசின் கைக்குள் கொண்டு வருதல்.

″6. செய்தித் தொடர்பு மற்றும் போக்குவரத்துகளை அரசின் கைக்குள் நடுப்படுத்தல்.

″7. அரசுக்குச் சொந்தமான தொழிலகங்களையும் விளைப்புத் தளவாடங்களையும் விரிவுபடுத்தல்; ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் தரிசு நிலங்களைப் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்தல்.

″8. அனைவருக்கும் உடலுழைப்புக்குக் கடப்பாடுண்டு. தொழிற்படைகளை, குறிப்பாக வேளாண்மையில் நிறுவுதல்.

″9. வேளாண்மை மற்றும் பண்ட விளைப்புத் தொழில்களை ஒன்றிணைத்தல்; நகருக்கும் ஊருக்குமான வேறுபாட்டைச் சிறுகச் சிறுக, மக்கள் செறிவை இன்றை விடவும் சமநிலையிலான பரவல் ஆக்குவதன் மூலம் ஒழித்தல்.

″10. அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகள் மூலம் இலவயக் கல்வி. தொழிலகங்களில் இன்றிருக்கும் வடிவிலான, குழந்தை உழைப்பை ஒழித்தல். கல்வியையும் தொழிலியல் விளைப்பையும் இணைத்தல் போன்று இன்னும் இன்னும்.

″வளர்ச்சி முன்னேறி வகுப்பு வேறுபாடுகள் மறையும் போது, முழுத் தேசத்தின் ஒரு பரந்த விரிந்த கூட்டமைப்பின் கைகளில் அனைத்து விளைப்புகளும் வரும்போது பொது அதிகாரம் என்பது தன் அரசியல் பண்பை இழந்துவிடும். அரசியல் அதிகாரம் என்று சரியாக அழைக்கப்படுவது, ஒரு வகுப்பு இன்னொன்றை ஒடுக்கும் நோக்கம் கொண்ட கட்டமைக்கப்பட ஆதிகாரமாகும். பாட்டாளியர், சூழல்களின் கட்டாயத்தால் தங்களை ஒரு வகுப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானால், ஒரு புரட்சியால் தன்னை ஆளும் வகுப்பாக ஆக்கி அதிகாரத்தைக்கொண்டு விளைப்பின் பழைய நிலைமைகளுடன் வகுப்புப் பகமைகளும், பொதுவாக வகுப்புகளும் இருப்பதற்கான நிலமைகளைத் துடைத்து அகற்றிவிட்டால் அப்போது அதன் மூலம் தான் ஒரு வகுப்பென்ற முறையில் மேலாளுமை செய்வதையும் அகற்றிவிடும்."[1
]

இந்த இறுதி நிலையை "அரசு உதிர்ந்து போதல்" என்று ஏங்கல்சு கூறினார்.
[2]

இது தொடர்பாக ஒரு நிகழ்வை நாம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். புரட்சி பற்றி லெனினுக்கும் டிராட்கிக்கும் ஓர் அடிப்படையான கருத்து வேறுபாடு இருந்தது. உலக நாடுகளிலெல்லாம் முதலாளியம் வந்த பின் உலகம் தழுவிய ஒரே பொதுமைப் புரட்சியாகவே நடத்த வேண்டும் என்றார் டிராட்கி. லெனினோ ஒரு நாட்டில் மட்டும் பொதுமைப் புரட்சியை உடனே நடத்திவிட முடியும் என்று பிடிவாதமாகக் கூறினார்.

தன் கருத்துப்படி, எடுத்த எடுப்பிலேயே பொதுமைக் குமுகத்தை அமைக்கும் ″நிலையான″ புரட்சியாக புரட்சி இருக்க வேண்டும் என்பது டிராட்கியின் கருத்து. லெனினோ, புரட்சி என்பது அரசைக் கைப்பற்றுவதோடு நின்றுவிடாது, இன்றைய குமுகத்திலிருந்து நிகர்மைக் குமுகத்தினுள் செல்வது, அங்கிருந்து படிப்படியாகப் பொதுமைக் குமுகத்தினுள் நுழைவதுவரை இடைவிடாமல் ″நிலைத்து″ நின்று புரட்சி செய்ய வேண்டும் என்றார். இருவரும் ″நிலையான புரட்சி″ (Permanent Revolution) என்ற சொல்லை வைத்துக் கொண்டு சிலம்பம் ஆடினார்கள்.

டிராட்கியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் புரட்சியை நடத்திய லெனின் அவரைத் தன் அரசில் அயலுறவுத்துறை அமைச்சராக வைத்திருந்தார். லெனின் காலத்துக்குப் பின் தாலினுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தான் வேட்டையாடப்படுவதிலிருந்து தப்பிக்க அவர் அமெரிக்காவில் குடியேறி அங்கேயே காலமானார். அவர் பெயரில் டிராட்கியர்கள் என்று செயற்பட்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் படைப்புகளாகவே இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வுகளிலிருந்து லெனின் தன் நடவடிக்கைகளில் பருவம் தவறி, அவர் குறிப்பிட்ட புரட்சிக்கு உரிய பருவத்தை அடையாத குமுகத்தின் மீது அந்தக் குமுகத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தாத ஒரு புரட்சியைத் திணித்துவிட்டார் என்பது தெளிவாகிறது. அவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது.

குமுகியல் புரட்சியாளர்கள்(Social Revolutionaries) என்றொரு அமைப்பு உருசிய உழவர்களது சிக்கல்களை முன்னெடுத்து வைத்து ஒரு செயல்திட்டம் தீட்டியிருந்தது. அந்தத் திட்டத்தைப் பொடிப் பூரிய(Petty bourgiois)த் திட்டம் என்று புரட்சிக்கு முன்பு திறனாய்ந்திருந்தார் லெனின். புரட்சியில் அந்த இயக்கம் லெனினது கட்சியோடு தோழமை கொண்டு செயற்பட்டு சோவியத் ஆட்சியிலும் பங்கேற்றது. அப்போது சோவியத் அரசின் வேளாண் கொள்கை என்னவென்ற கேள்வி எழுந்தபோது அந்தக் கட்சியின், இவர் திறனாய்ந்திருந்த அதே செயல்திட்டத்தை எடுத்து முன்வைத்தார். பின்னால் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் திட்டத்தை முழுமையாக, ஒரே ஒரு மாற்றம் கூட இல்லாமல் தான் பயன்படுத்தியதாகக் கூறினார்(Left Wing Communism - An infentile Disorder, V.I.Lenin,Novosti Press Agency Publishing House, Moscow, 1970, p.72-73. வலியுறுத்தம் லெனினுடையது). அது மட்டுமல்ல, முதலாளியத்துக்குத் தேவையான மின்னாக்கல் போன்ற பெரும் பெரும் திட்டங்களைத் தொடங்கும் போது நிகர்மை வளர, இத்தகைய திட்டங்கள் வேண்டும் என்று கூறுவார். அவர் மனதில் நிகர்மை என்ற பெயரில் முதலாளியத்தை முழுமையாக வளர்க்க வேண்டும் என்றிருக்கலாம். தொழிலகங்களின் தொழிலாளர்கள், தங்கள் தொழிலகத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று அணுகிய போது, முதலில் தங்கள் தொழிலகங்களை வெளி உதவி இல்லாமல் ஆதாயத்தில் இயங்குபவையாக வளர்த்துவிட்டு வாருங்கள் என்று கூறுவார். ஆனால் நீருக்குள் முழுகிய பின் நீச்சல் பழக முடியுமா என்ன?

பொதுமைக் குமுகத்தைப் பற்றிய மார்க்சின் கூற்றுப்படி நாம் முதலில் முழுமையான, பெருமரபு முதலாளிய நாடாக, தேசிய முதலாளிய நாடாக, அயல்நாடுகளைச் சுரண்டாமலும் நம்மை அயலவர்கள் சுரண்டாமலும் உள்ள ஒரு முதலாளிய நாடாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புலனாகிறது.

ஆனால் மார்க்சின் பொதுமைக் குமுகம் என்ற செயல் திட்டம் மார்க்சியம் என்ற மெய்யியலிலிருந்து மாறுபடுவதாக எமக்குத் தோன்றுகிறது.


(தொடரும்)

அடிக்குறிப்பு:


[1] மேல்படி நூல் பக்.75-76.
[2] பிரெடரிக் ஏங்கெல்சு, டூரிங் மறுப்பு, மேற்கோள், State and Revolution, V.I.Lenin, Progress Publishers, Moscow, 1972, P.16-17

4.5.09

முதலாளியமும் வல்லரசியமும் .....4

பெருமரபு முதலாளியம் (Clasical Capitalism)

முதலாளியம், வல்லரசியம் என்ற இந்த வகைப்பாட்டைப் பற்றிய ஓர் உரையாடல் 1982 இல் வெங்காளூரில் குணாவின் தோழர்களின் முயற்சியில் நடைபெற்ற ″தேனீக்கள் பட்டறை″ என்ற நிகழ்வில்ர நான் அப்போதுதான் முதன்முதல் சந்தித்த சத்தியமங்கலம் எசு.என்.நாகராசன் (இவர் தமிழகப் பொதுமை இயக்கத்தினுள் தமிழகத் தேசிய விடுதலைக் கருத்தை முதன்முதலில் முன்வைத்தவன் தான்தான் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்), கோவை ஞானி ஆகியோரின் தனி உரையாடலில் வெளிப்பட்டது. வல்லரசியத்துக்குப் புறம்பான முதலாளியத்தை பெருமரபு முதலாளியம்(Classical Capitalism) என்ற சொல்லால் குறிப்பிடுவதை நான் அங்குதான் அறிந்தேன். ஆனால் பின்னால், எசு.என். நாகராசனின் நடவடிக்கைகள் அணைத்துக் கொடுப்பவை என்று தெரிந்தது. ஞானி அவர்களோ இன்று வல்லரசியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாகவே காட்டி தான் முதலாளியத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ″தமிழ்″ மேடைகளில் முழங்கிவருகிறார். நாகராசனைத் தன் கொள்கை ஆசான் என்று தான் கருதுவது போல் எனக்குத் தோற்றம் தந்துள்ளார்.

தமிழ்ப் பற்று காட்டுபவர்களைப் பெருமளவில் பகடி பேசியவர் இவர். இன்று இவரும் பெருஞ்சித்திரனார் குடும்பமும் அ.மார்க்சும் சேர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழுக்காகவும் உயிரை விடப்போவதாகச் சொல்ல வேண்டியதுதான் குறை.

″மார்க்சியர்″களைப் பொறுத்தவரை, மார்க்சோடு பொருளியல் சிந்தனைகள் முற்றுப்பெற்றுவிட்டது. அதனால் மனித வரலாறும் அத்துடன் தேங்கிப்போய்விட வேண்டியதுதான். வேறெதாவது நடந்திருந்தாலும் அது வெறும் மாயை. எனவே கெயின்சு என்று ஒருவர் அவர்களைப் பொறுத்தவரை உலகில் பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.

ஆக, இதுவும் ஒரு சமயமாக இறுகிப் போய் விட்டது. முகம்மதியத்தில் ஒரு புதிய கிளையாக அகமதியம் என்பது பற்றி நாம் குறிப்பிட்டோம் (அக்டோபர் 2008 தமிழினி). அது பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி. நெல்லையில் வாழ்ந்த ஒரு முகம்மதியர் சென்னை சென்றிருந்தாராம். அண்ணா சாலையில் சென்ற போது நண்பகல் தொழுகைக்கான அழைப்பொலி கேட்டு ஒலிவந்த பள்ளிவாசலில் சென்று தொழுகையில் ஈடுபட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்குப் புரிந்துவிட்டது, தாம் அகமதியா பள்ளிவாசலுக்கு வந்திருப்பது. தொழுகை முறையிலுள்ள வேறுபாட்டை அவர் உணர்ந்தது போல் அங்கிருந்தவர்களும் இவரைப் பொறுத்து உணர்ந்து கொண்டனர். அரக்கப் பரக்கத் தொழுகையை முடித்து வெளியே வந்தவர் பள்ளிவாசலைத் திரும்பிப் பார்த்திருக்கிறார். அங்கே அவர் அமர்ந்து தொழுகை நடத்திய இடத்தை மட்டுமல்ல முழுப்பள்ளிவாசல் தளத்தையும் விறுவிறுவென்று கழுவிக் கொண்டிருந்தார்களாம். அவ்வளவு பெரிய ″தீட்டு″

நம் மார்க்சியர்களும் கெயின்சை இவ்வாறுதான் பார்க்கின்றனர் என்று நம்மால் கூற முடியாது. அவர்களின் எத்தனை பேர் அவரை அறிந்திருக்கிறார்களோ நாம் அறியோம். அப்படி அறிந்தால் நாம் மேலே முகம்மதியம் - அகமதியம் போன்ற வெறுப்புணர்ச்சியுடன்தான் பார்ப்பர். கெயின்சு மார்க்சைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் என்ன கூறினார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்சைப் போலவே அவரும் ″இயற்கை தன் வழியில் செல்லட்டும்″(Laisses-faire)கோட்பாட்டை எதிர்த்தார். அதே வேளையில் மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின்படி மீந்து போகும் பண்டங்களாலும் அதன் விளைவான பட்டினிச் சாவுகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுமைப் புரட்சியின் வாய்ப்பு கெயின்சால் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் வேறு வழிகளில் அதற்கான சூழல் உருவாகியது என்னவோ உண்மை.


வல்லரசு நாடுகளில் முதலாளியத்தின் அடிப்படைக் கட்டமைப்பான பெருந்தொழில்கள், பெரும் பண்ணைகள், அவற்றுக்குள் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாக ஒன்று திரளுதல் என்ற நிகழ்முறையில் தொழிலாளர்களுடைய பகரம் பேசும் திறன் அளவின்றிப் பெருகியது. பங்குச் சந்தை முறையால் தனிப்பட்ட முதலாளி முகமிழந்துவிட்டான். இயக்குநர் குழுவும் மேலாளர்கள், அதிகாரிகள் என்ற நிலையில் முதலாளி ஒரு அருவமாக மாறிக்கொண்டிருந்தான். இந்தச் சூழலில் தொழிலாளர்கள் தங்களுக்குத் தொழிற்சாலைகளில் பங்குகள் வடிவிலான பங்கேற்பைக் கேட்டனர். அது செயலுக்கும் வந்துகொண்டிருந்தது. மார்க்சு கூறிய பொதுமை நெருங்கிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்கான வல்லரசுகளின் முயற்சிக்குத் தோதாக இருந்தது ″ஏழை″நாடுகளிலிருந்து அவற்றின் தலைவர்களும் அதிகாரிகளும் பதுக்கி வைத்திருந்த பணமும் வல்லரசு நிறுவனங்களில் இட்டிருந்த மூலதனமும். அவைதாம் உலகளாவுதல் என்ற நடைமுறைக்குத் தோற்றுவாயாகவும் நேரடி அயல் முதலீடு என்பதன் உட்கருவாகவும் இருக்கின்றன. இப்படிக் கூறுவதனால் ″ஏழை″ நாடுகளின் தலைவர்களுக்கு என்று தனித்தன்மையுடன் கூடிய முதலீடுகளும் தொழில்முனைவுகளும் இருப்பதாகப் பொருளாகாது. அவர்கள் அனைவரும் உலக வல்லரசியத்துடன் இரண்டறக் கலந்துள்ளார்கள். இருப்பினும் வல்லரசுகளை இருப்பிடமாகக் கொண்ட பொருள் வல்லரசுகளுக்கும் நம் ஆட்சியர்களாகிய ஊழல் வல்லரசியர்களுக்கும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அவை ″வாணிக″ மாநாடுகளில் ஒவ்வொரு முறையும் ஒலிப்பதை நாம் காணலாம். தெற்கு உலகம் என்றும் கீழை உலகம் என்றும் மூன்றாம் உலகம் என்றும் வளரும் நாடுகள் என்றும் அவற்றுக்கான உரிமைகள் என்றும் அந்நாடுகளில் ″நம்″ தலைவர்கள் முழங்குவதே தங்கள் நலன்களுக்காகத்தான். தங்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அயல்நாடு சென்று மாநாடுகளில் கலந்துகொண்டு தங்கள் நலன்களுக்காக இவர்கள் வாதாடி வருகின்றனர். இந்த உண்மையை எந்த அரசியல் கட்சியும், குறிப்பாக ″புரட்சி″ பொங்கிவழியும் பொதுமைக் கட்சியின் அனைத்து வகையினரும் கூட வெளிப்படுத்துவதில்லை. முதலாளியத்தின் கைக்கூலிகள், வல்லரசியத்தின் அடிமைகள், நாட்டை விலை பேசிவிட்டார்கள் என்று பொதுப்படையாகவே பேசுகின்றனர்.

சிறப்புப் பொருளியல் மண்டலம் என்பது உட்பட நம் நாட்டின்(சீனத்திலும்தான்) தொடங்கப்படும் பல்வேறு வளாகங்களில், அவற்றில் கையெழுத்திடும்போது நம் ஆட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கும் பங்கு மூலதனத்துடன் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் பங்குகளும் சேர்ந்துகொள்கின்றன. ″புரிந்துணர்வு″ ஒப்பந்தங்களின்படி இந்த வளாகங்களுக்குத் தடை இல்லாத மின்சாரம், குடிநீர் தரத்திலான தண்ணீர் எல்லாம் வழங்க வேண்டும். இவ்வாறு நாட்டின் சராசரி குடிமகனுக்கு எட்டாத அளவுக்கு நிலப்பரப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அவர்களது தேவைப்பாடுகளைப் பறித்துக் கட்டமைப்புகளையும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் தமக்கு மட்டுமே பயன்படுத்தல் என்று பொருளியல் மற்றும் ஊழல் வல்லரசியம் நம் ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் புகுந்து மடிபறித்து நிற்கிறது.

பங்கு முதலீட்டில் முற்றாளுமை:

பங்கு முதலீடு என்பது நாம் குறிப்பிட்டது போல் பங்காளிகள் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை நொடித்துப்போனால் தம் மொத்தச் செல்வத்தையும் இழக்கும் நிலையைத் தவிர்க்க, தம் முதலீட்டு அளவுக்கு இழப்பை எல்லைப்படுத்தி அதனைப் பங்கீட்டாளருடன் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் முதலாளியத்தின் வளர்ச்சியோடு தோன்றி வளர்ந்தது. அவ்வாறு முதலிட்டவர்களில் ஒருசிலருக்கு உடனடியாகப் பணம் தேவைப்படும் போது அவர் தொழில் முனைவாளரிடம் போய் நின்றால், அல்லது போட்டியாளர் ஒருவர் பங்கீட்டாளர்களைத் தூண்டிவிட்டால் அல்லது நிறுவனத்துக்கு ஒரு சிறு இடையூறு நேர்ந்தவுடன் பங்கீட்டாளர்கள் தங்கள் தங்கள் முதலீட்டைக் கேட்டு வரிசையில் வாசலில் நின்றால் என்னாவது? அதனால்தான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற தரகாண்மை உருவானது. அதாவது நிறுவனத்தின் உள் நிகழும் சிறு சிக்கல்கள் பங்கு முதலீட்டாளர்களிடையில் ஏற்படுத்தும் எதிர்வினையால் நிறுவனத்தை முற்றிலும் வீழ்த்துவதாக மாறிவிடக் கூடாது என்பதுதான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை தோன்றியதன் பின்னணி.

ஆனால் முதலீட்டாளர்களின் பதற்றங்களிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென்று உருவான இந்தப் பங்குச் சந்தை, பங்கீட்டாளர்களுக்கு உரிய ஆதாயப் பங்கை நிறுவனங்கள் பெருமளவில் சுருட்டுவதற்கும் பங்கு முதலீடு என்ற கோட்பாட்டுக்குப் புறம்பாக குமுகச் செல்வத்தை நிறுவன முனைவாளர்கள் தங்கள் கைப்பற்றுக்குள் கொண்டுவருவதற்கும் அதைவிடப் பல மடங்கு குமுகச் செல்வம் பங்கு வாணிகம் எனும் சூதாட்டத்தினுள் சென்று விழுவதற்கும் வழியமைத்தது.

ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் எத்தனை மடங்கு விலைக்கு நீங்கள் வாங்கியிருந்தாலும் உங்களுக்கு நிறுவனம் தரும் ஆதாயப் பங்கு அதன் முகவிலையின் நூற்றுமேனியில்தான். 10 உரூபாய் பங்கு உரூ 500/க்குச் சந்தையில் விற்கலாம். ஆனால் 100% ஈவு வழங்குவதாக நிறுவனம் அறிவித்தால் உங்களுக்கு உரூ10/-தான் கிடைக்கும். எனவே நீங்கள் கொடுத்த விலைக்கு உரிய வட்டி அல்லது ஆதாயம் வேண்டுமென்றால் விலை கூடும்போது சந்தையில் உங்கள் பங்கைக் விற்க வேண்டும். தொடர்ந்து வாங்கி விற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பண நெருக்கடி என்றால் அப்போதைய சந்தை விலையில் உங்கள் தேவைக்கேற்ற பகுதியை விற்றுக் கிடைத்தது ஆதாயம் என்று அமைய வேண்டியதுதான்.

உங்கள் பங்குக்குரிய நிறுவனமோ தன் ஆண்டைய நிகர ஆதாயத்தில் கிட்டத்தட்ட 80%க்கும் குறையாத அளவுக்கு ஒதுக்கம் அல்லது ஏமம் (Reserve) என்ற பெயரில் தன் கையில் வைத்துக்கொள்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாரா இழப்புகள், வளர்ச்சி என்ற பெயர்களில் அது ஒதுக்கும் தொகை முதலீட்டாளர்களை ஏமாற்றி முனைவாளர்கள் சுருட்டிக் கொள்வதாகும். மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்கும் ஒரு இயைபு இருக்க வேண்டும். இல்லை என்றால் பங்கீட்டாளர்களுக்கு உரிய பங்கைப் பணமாகவோ இலவயப்பங்குளாகவோ வழங்கி அதைச் சரிக்கட்ட வேண்டும் ஆனால் இரண்டுமே நடைபெறுவதில்லை.

இதைவிடப் பெரிய கொடுமை ஒரு குறிப்பிட்ட முகமதிப்புள்ள பங்குகளை அதைப் போல் பல மடங்கு விலைக்கு நிறுவனமே பட்டியலிடுவது. ஒரு இந்திய அரசுடைமை வங்கி சில ஆண்டுகளுக்கு முன் உரூ10/- முகமதிப்புள்ள பங்குகளை உரூ 70/- விலைக்கு வெளியிட்டது பங்கு ஒன்றுக்கு முகமதிப்புக்கும் வெளியீட்டு மதிப்புக்குமான இந்த உரூ60/- வேறுபாடு எந்த வகையில் எப்படி கணக்கு வைக்கப்படும்? அது யார் யாருக்குப் போய்ச் சேரும்? இந்தக் கேள்வியே எங்கும் எவரும் எழுப்பவில்லை. நம் மக்களின், குறிப்பாகப் பங்குச் சந்தையிலே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் கூட எதுவும் கூறவில்லை. தொடக்கத்தில் 7 மடங்காக இருந்த இந்த விகிதம் பிற நிறுவனங்களால் உயர்ந்து கொண்டே போகிறது.

நம் பொதுமைத் தோழர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ″ஓம் மார்க்சாய நமக″, ″ஓம் லெனினாய நமக″ ″ஓம் மாவோயாய நமக″, ″ஓம் காசுட்டுரோவாய நமக″, ″ஓம் சேகுவராய நமக″,″ஓம் தமிழரசனாய நமக″, ″ஒம் அம்பேத்காராய நமக″, ″ஓம் திருவள்ளுவராய நமக″, ″ஓம் திருக்குறளாய நமக″, ″ஓம் பெரியாராய நமக″, ஓம் பாவாணராய நமக″, ″ஓம் பெருஞ்சித்திரனாராய நமக″ ″ஒம் பக்தவத்சலமாய நமக″, ″ஓம் சிறுபான்மையினராய நமக″ (இந்தச் சிறுபான்மையினரில் பார்ப்பன - பனியாக்கள் அடக்கப்பட்டுள்ளார்களா என்பது மந்திர உச்சடனம் செய்கிறவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை), ″ஓம் பண்பாட்டுப் புரட்சியாய நமக″.

இந்த நாமாவளியில் ஏங்கெல்சின் பெயரை மட்டும் நம் புரட்சி பொங்கி வழியும் தோழர்கள் கூறுவதில்லை. ஏனென்றால் மார்க்சை நேரடியாகக் குறைசொல்லத் துப்பற்றவர்கள் ஏங்கல்சின் மூலமாகத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் ஒவ்வொரு ஆக்கத்தையும் இருவரும் கலந்து முடிவெடுத்துத்தான் அச்சுக்குக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.

17 ஆண்டுக்காலம் நூல் நிலையத்திலேயே அடைந்து கிடந்த மார்க்சின் பணத் தேவைகளை நிறைவேற்றியவர் ஏங்கெல்சு. எண்ணற்ற படைப்புகளை மார்க்சுடன் இணைந்தும் தனித்தும் எழுதியுள்ள அவர் போர்க் களத்திலும் இருந்துள்ளார், பணமும் ஈட்டியுள்ளார். மார்க்சுக்குத் தேவைப்படும் நூல்களையும் ஆவணங்களையும் திரட்டியும் தந்துள்ளார். பல்வேறு திறன்கள் கைவரப் பெற்ற ஒரு மாபெரும் வரலாற்று மனிதர் அவர்.

பங்கு முதலீட்டின் இந்தச் சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எம்மைப் பொறுத்தவரை முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒரு தொழிலைத் தொடங்க விரும்பும் முனைவாளர் தான் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கும் தொகைக்குச் சமமாக, அல்லது பட்டறிவிலிருந்து அக்குமுகம் எய்தும் ஒரு விகிதத்தில் ஒரு நிலை வைப்பை, அரசு நிறுவும் ஒரு நிலையான அமைப்பில் ஈடுசெய்ய வேண்டும். நிறுவனம் ஆண்டுதோறும் ஈட்டும் ஆதாயத்தில் உரிய பங்கைப் பணமாகவோ இலவயப் பங்குகளாகவோ வழங்கி நிறுவனத்தின் உண்மையான சொத்துக்களை விட பங்குகளின் மொத்த விலை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலவயப் பங்குகள் வழங்கும்போது அவற்றுக்கு ஈடாக நாம் மேலே கூறிய நிலை வைப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு முன்னமைவு செய்த பின்னர்தான் வழங்க வேண்டும். புதிய பங்குகள் வெளியிடும் போதும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாம் நிலை பங்குச் சந்தை தேவையில்லை. தேவையானால் தொழில் நிறுவனங்கள் தம் நிறுவனப் பங்குகளை விற்க வருவோருக்கும் வாங்க விரும்புவோருக்கும் அவற்றில் உதவுவதற்கான துணை நிறுவனங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலை வைப்புகளுக்கான பணம் செயற்படாத மூலதனமாகத் தேங்கிக்கிடக்காதா என்றொரு கேள்வி எழலாம். இன்று மூலதனப் பங்குகளை வெளியிட்டு மூலதனம் சேர்த்துச் செயற்படும் உலகின் அனைத்து நிறுவனங்களினதும் மொத்தச் சொத்து மதிப்புக்கும் கூடுதலான பணம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தில் புழங்குகிறதே, அதை இவ்வகையில் திருப்பி விடலாமே. எந்த நோக்கத்துக்காக இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உருவானதோ அதற்கு எதிரானதொரு திசையில் அது சென்று கொண்டிருப்பதால் வரலாற்றிலிருந்து பாடம் பெற்று இப்புதிய முறையைக் களத்தில் இறக்கலாமே!

இவை தவிர, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வரம்புக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மொத்த மதிப்பில் பாதிக்கும் கூடுதலான முதலீட்டைப் பங்கு முதலீடாகவே திரட்ட வேண்டும் என்று வரையறுக்க வேண்டும்.

வங்கிகளைப் பொறுத்தவரையில் அது தொழில்களுக்கு முதலீட்டுக் கடன் கொடுப்பது கூடாது. சேமிப்புகள், சிறுவைப்புகள், பட்டியல் செல்லாக்குதல், பணத்தை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றுதல், நகைக்கடன், வீட்டுக் கடன், ஊர்திக் கடன் போன்ற சிறு கடன்கள் வழங்குதல், உள்ளூராட்சிகளுக்கான கட்டணங்கள், மின்கட்டணம், தொலை பேசிக் கட்டணம் போன்றவை செலுத்துதல் என்ற அளவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது நாம் சில ஆண்டுகளுக்கு முன் வரையறுத்த ஒரு திட்டம். அமெரிக்காவில் தொடங்கிய இன்றைய நெருக்கடியைப் பற்றி அலசும் ஒரு கட்டுரை தரும் சில செய்திகள் இதனோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

"It is just as impartant that business keep out of government as that government keep out of business"

Herbert Hoover, Republican President of America between 1929, and 1933, the era of notorious in history as the Great Depression. (Quotation in Business Economy, 19 September to 2 October P.64)

(தொழில்-வாணிகத்துறை அரசில் தலையிடாமலிருப்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசு தொழில் - வாணிகத்துறையில் தலையிடாமலிருப்பது. சொன்னவர் பெரும்பெயர் பெற்ற மாபெரும் பொருளியல் வீழ்ச்சி ஊழியாகிய 1929 முதல் 1933 வரை அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கடியரசுத் தலைவர் எர்பர்ட்டு ஊவர்)

ஒருவேளை, அரசு தொழில் - வாணிகத்தில் தலையிடாமலிருக்கலாம். ஆனால் தொழில் - வாணிகம் அரசில் தலையிடாமல் இருப்பது கிடையாது என்பது உண்மை. எனவே மேலேயுள்ள இந்த முழக்கமே தொழில் - வாணிக குழுக்களின் முழக்கம் என்பது உறுதி.

ஊவரின் இந்தக் கருத்தை உடைத்து, கெயின்சின் தலையிடும் கொள்கையை ஏற்றுச் செயற்பட்டு, உலகப் பொருளியலில் ஒரு புதிய பார்வை பரவலான ஏற்பைப் பெற வழிவகுத்தவர் அவரை அடுத்து பதவிக்கு வந்த பிளங்கிளின் டி.ருசுலெட்டு. கிளாசு டீகால் சட்டம் (Glass - Steagall Act) மூலம் வாணிக வங்கிளையும் முதலீட்டு வங்கிளையும் தனித்தனியாகப் பிரித்தார். ஒரே வங்கி இரு பணிகளிலும் ஈடுபடுவதைச் சட்டம் தடைசெய்தது.

அதை உடைக்க 1988, 1996 ஆண்டுகளில் குடியரசுக் கட்சி இருமுறை முயன்று தோற்றது. ஆனால் 1990இல் அமெரிக்க ஏம வங்கித் தலைவர் ஆலன் கீரிசுப்பான் என்பவர் ஒரு வாணிக வங்கிக்கு உறுதி ஓலைகளை (Securities) வழங்கும் அதிகாரம் வழங்கி இதை உடைத்தார். பின்னர் 1999இல் கிராம் - லீக் - பில்லி சட்டம் வந்து கிளாசு டீகால் சட்டத்தின் பகுதிகளை அகற்றிய பின் அனைத்துமே மாறின. இந்தச் சட்டத்தின்படி, ″வீழ்ச்சியடைய முடியாத அளவுக்குப் பெரிய பண நிறுவனங்களி″டமிருந்து பணவியல் கட்டமைப்பையும் பண்டுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படுத்தபட்ட கடன்களைப் பயன்படுத்தலாம்.
[1] அடிப்படுத்தப்பட்ட கடன் என்றால் ஈடு -> மறுஈடு -> மறுஈடு என்று செல்வது. எடுத்துக்காட்டாக, செருமன் மக்களில் பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை அல்லது ஓய்வூதியப் பலன்களை அமெரிக்கப் பண நிறுவனங்கள் வழங்கிய சான்றுகளின் மீது பணம் கொடுத்து உறுதிச் சான்றுகளைப் பெற்று ஏமாந்துள்ளனர்.

பணம் என்பது ஒரு நிழல். பண்டங்கள் அல்லது பணிகளின் நிழல். ஒருவனிடம் ஒரு மாடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு செங்கல் சூளைக்காரரிடம் கொடுத்து 5 வண்டி செங்கல் வாங்குகிறான். செங்கல் சூளைக்காரன் தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டும் என்பதற்காக ஒரு பட்டுச் சேலை நெய்வோனிடம் மாட்டைக் கொடுத்துவிட்டுச் சேலையைப் பெற்றுச் செல்கிறான். இவ்வாறு மாடு கைமாறிக் கொண்டே இருக்கும்.

மாடானதால் அதுவாகவே நடந்து சென்று விடும். மாறாகச் செங்கல் சூளைக்காரனுக்குப் பட்டுச் சேலை வேண்டுமானால் அவன் 5 வண்டிகளில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். பட்டுச் சேலைக்காரனுக்கு நெல் வாங்க வேண்டுமென்றால் அந்தச் செங்கல்லை அவன் வண்டியிலேற்றிக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு சந்தை இருந்தால் இந்தக் கொடுக்கல் வாங்கல், அதாவது பகருதல்((Barter) எளிதாக இருக்கும். ஆனால் பணம் போன்று சுமை குறைந்த ஒரு பொருள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

மாடு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளுண்டு. மாடல்ல மற்றயவை என்ற வள்ளுவர் சொல்லாட்சியும் உள்ளது.

உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்து உள்ளது. ஆனால் கொண்டு செல்லும் வழியில் மழை வந்து நனைந்தால் அது கரைந்து இல்லாமல் போய் விடுமே! அதைத் தவிர்க்க எந்த உத்தி கையாளப்பட்டிருக்கும் என்ற பெருங்கேள்வி அந்த வாய்ப்பை மறுதலிக்கிறது.

இறுதியில் பொன் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. அதன் சந்தை விலைக்கும் பண்டமாற்று மதிப்புக்கும் முதலில் தொடர்பிருந்தது. நாளாவட்டத்தில் அந்தத் தொடர்பு அறுந்து நாணயம் ஒரு அடையாளமானது. அப்போதே பணம் அல்லது நாணயம் பண்டங்களின் அல்லது பணிகளின் நிழலாகியது.

பணத்தைப் பண்டங்களின் பண்டம்(Commodity of commoditive) என்பார் மார்க்சு. நாணயம் தாள்பணமாக மாறிய போது முழுமையான நிழலாகப் பணம் மாறிவிட்டது. இந்தப் பணத்தை ஒரு வங்கியில் கொடுத்து அதற்கு ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்தச் சான்றிதழ் நிழலின் நிழலாகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் உடைந்து போனால் அந்தச் சான்றிதழ் வெறும் தாளாகிப் போகிறது. பணத்தாளுக்கு நாட்டின் அரசு பொறுப்பேற்றுள்ளது போன்ற பொறுப்பேற்பு அரசின் பொறுப்பேற்றைப் பெறாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு இல்லை என்றால் இதுதான் முடிவு. அமெரிக்க அரசு அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.

அங்கே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ள வீட்டுக் கடன்கள் இது போன்ற சான்றிதழ்களைப் போன்றவை அல்ல. வீடுகளை விற்றுப் பணத்தை உடனடியாக மீட்க முடியாமைதான் உண்மையான சிக்கல். ஆனால் அத்தகைய பத்திரங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி ஆதாயம் பார்க்கச் சில பண நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம். இவை நீண்டகால அடிப்படையில் செயற்படும் நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது பணத்தின் உடனடித் தேவை இல்லாத பெரும் பணம் படைத்தவர்களின் முதலீட்டில் இயங்குபவையாக இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே! அப்படி மதிப்பிடப்பட்ட வங்கிகள்தாம் வீழ்ந்துள்ளன.

நீண்ட கால முதலீடு என்றதும் நாம் கேள்விப்பட்ட வரையில் பிரான்சிலுள்ள சேம்பெய்ன் எனும் சீமைச் சாராய நிறுவனம்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் சாராயம் வடிப்பதற்கான ஊறலை (குமரி மாவட்டத்தில் இதனைக் கோடை போடுதல் என்பார்கள்) நூறாண்டுகள் நொதிக்க வைப்பார்களாம். மரப்பறைகளில் (பீப்பாய்களில்) கோடையை நிரப்பி மண்ணைத் தோண்டிப் புதைத்து மேலே நாளைக் குறித்து விடுவார்களாம். அவர்களது முதலீடு 100 ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட ஒன்று.

நம் நாட்டிலும் பனை நடுவோர்களைப் பற்றிக் கூறுவார்கள், பனை, நட்டதிலிருந்து பலன் தர 40 ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் பின்னர் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேல் பலன் தந்துகொண்டிருக்கும். தென்னை மரத்தின் பழைய வகைகளும் அத்தகையவே. பயன்தர 20 வருடங்கள் வரை ஆகும். தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஆனால் தேங்காய் வெட்டுகிறவர்கள் அவ்வளவு உயரம் ஏற மாய்ச்சல் படுகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது 5 ஆண்டுகளில் காய்த்து 10 ஆண்டுகளில் ஓய்ந்துவிடும் குறுகிய கால குட்டை வகை. இது காய்க்கத் தொடங்கியதும் மரங்களுக்கு நடுவில் புதிய கன்றுகளை நட்டுவிட வேண்டும். கன்றுகள் காய்க்கத் தொடங்கியதும் முதியவற்றை வெட்டி அகற்றிவிட்டுப் புதிய கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு இடைவிடாத வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாருங்கள், இப்போது உடலுழைப்புக்கு ஆள் கிடைக்கவில்லை.

உடனடிப் பலன் என்று இப்போது எங்கும் வாழை பயிரிடுகிறார்கள். ஆனால் வாழைக்காயை அறுவடை செய்வது, வண்டியில் ஏற்றுவது, பழுக்க வைப்பது, சந்தைக்குக் கொண்டுபோவது, அங்கிருந்து சில்லரைக் கடைக்கு வருவது, சில்லரைக் கடையிலிருந்து நுகர்வோரின் வீட்டுக்கு வருவதுவரை அதை மென்மையான, பக்குவமாகக் கையாள வேண்டிய பொருள் என்று எவருமே கருதாமல் குப்பை கூளத்தைக் அள்ளிக் கொட்டுவது போலவே கையாளுகின்றனர்.

சரக்கி(லாறி)களில் பண்டங்களை ஏற்றி இறக்கும் ″சுமை தூக்கும்″ தொழிலாளர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு முட்டைகளை அந்தந்தப் பொருளுக்கேற்ற பக்குவத்துடன் கையாண்டதைக் காண முடிந்தது. ஆனால் இன்று, ″பாட்டாளியக் கோட்பாடு″ வலுப்பெற்று சங்கங்களும் அமைந்த பின் அவர்களது கொடியே கொக்கிப் படத்தைக் கொண்டதாக மாறிவிட்டது. கொக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருக்கும் சரக்கையே ஒற்றைக் கையால் கொக்கியை ஓங்கி ஒரு குத்துக் குத்தி ஒற்றைக் கையாலேயே இழுத்துப் போடும் இந்தப் பொறுப்பற்ற செயலைப் பார்க்கும் போது அந்தக் கொக்கி நம் நெஞ்சில் குத்தியது போன்ற நொம்பலத்தை உணர்வோம்.

பாளையங்கோட்டையிலிருக்கும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு அலுவலர் ஒரு முறை ஒரு கனத்த சிலையை ஒரு கை வண்டியில் ஏற்றி அலுவலகத்துக்கு விடுத்தார். வண்டிக்காரன் அலுவலகம் வந்ததும் வண்டியின் முன்பக்கத்தைத் தூக்கி சிலையை உருட்டிவிட்டான். சிலை இரண்டாக உடைந்துவிட்டது அலுவலர் கேட்டார், என்னப்பா சிலையை உடைத்துவிட்டாயே என்று, ஆமாம், உடைந்துவிட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய? இது விடை.

நாம் மேலே கூறிய வாழைக் குலையின் நேர்வுக்கு வருவோம். அதிகக் கேடு இல்லாமல் ஒப்பேறிய 20 நூற்றுமேனியும் வெளிநாட்டினருக்கும் நாட்டின் உயர் அடுக்கிலிருக்கும் ஒரு மிகச் சிறுபான்மையினருக்கும் போகும். இறுதியில் ஏழைகளாகிய சுமை தூக்கிகள் போன்றவர்களுக்கு அழுகல்கள்தானே வந்து சேரும்! இவர்கள் கொக்கியால் சாக்கைக் கிழிக்கும் போது சிந்தும் சீனியும் மாவும் அரிசியும் கோதுமையும் போன்ற பண்டங்களைக் கூட்டிப் பெருக்கி அவையும் இந்தக் கடைக்கோடி மக்களுக்குத்தானே போய்ச் சேரும்? இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார்? அவர்கள் தங்களது அடையாளமாக வைத்திருக்கும் கொக்கி இறுதியில் குத்துவது அவர்களது வயிறுகளைத்தான் என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? ″பாட்டாளி″க் கட்சிகளின் தலைவர்கள் கூறுவார்களா? மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். பாட்டாளிகள் அனைவரிடமும் இருந்தும் மகைமை தண்டுவதும் தேவைப்படும் போது ஆர்ப்பாட்டம் செய்யவும் ஊர்வலம் போகவும் குறைந்த அளவில் ஒரு ″தொண்டர் படை″ யும் போதுமே அவர்களுக்கு.

பாட்டாளி என்பவன் கலைந்த தலை, அழுக்கேறிய கிழிந்த உடை, குளிக்காத உடம்பு, குடித்துச் சிவந்த கண்கள், பொறுப்பற்ற கொச்சையான பேச்சு, அடிதடி, வன்முறை, ஊதாரித்தனம் இப்படித்தான் பாட்டாளியக் கட்சியரும் ஊடகங்களும் அவனது படிமத்தைப் படைத்து உலவவிட்டுள்ளன. அவனும் அதைப் பார்த்து அவ்வாறே தன்னைத் ″தகவமைத்து″க் கொள்கிறான்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது?

ஈடு வைக்கப்பட்ட சொத்துகளை விற்பது என்பதை எடுத்துக் கொண்டால் நாம், இந்தியர்கள், இதில் கைதேர்ந்தவர்கள். நம் நாட்டுப் பெருமக்கள் வாங்கிய பல இலக்கம் கோடி உரூபாய்களை இந்திய அரசுடைமை வங்கிகள் ″வாராக்கடன்″களாகக் அறிவித்துள்ளன அல்லவா? அதன் உள்ளரங்கம் என்ன?


அரசியல் கட்சிப் பெருமக்கள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்துப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பார்கள். திரும்பச் செலுத்த மாட்டார்கள். வங்கி முறைப்படி அடமானச் சொத்தைத் திறந்த ஏலத்துக்குக் கொண்டுவரும். பெருமகனாருடைய சொத்தை எவரும் ஏலம் கேட்கப் போக மாட்டார்கள், கேட்க முடியாது, கேட்டால் கேட்டவர் உயிருடன் இருக்க மாட்டார். அதுதான் வாராக்கடனின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடன் வாங்கியவரும் கொடுத்தவரும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது, இராயப் பேட்டை ″ஒருவருக்கொருவர்″ (பரசுப்பர) பணப் பண்டு போல்.

இப்படிப்பட்ட வாராக்கடன்கள் அந்த வங்கியில் பணம் சேமிக்கும் அல்லது வைப்பில் இட்டிருக்கும் பொதுமக்களை வெளிப்படையாகப் பாதிப்பதில்லை. இந்த இழப்புகளைத் தள்ளுபடி செய்வதில் உருவாகும் இழப்பு அனைத்துக் குடிமக்களையும் பாதிக்கும்.

இவ்வாறு பண்டத்தின், பணியின் நிழலாகிய பணம், பணத்தின் நிழலாகிய பல்வேறு பத்திரங்கள், சான்றிதழ்கள் என்று மெய்ம்மையிலிருந்து விலக விலக மக்களின் பண முதலீடுகளுக்குப் பாதுகாப்பு குறைகிறது. இவ்வாறு நிழல்களின் அடுக்கு கூடும் தோறும் அரசின் பொறுப்பு பெரிதாகிறது. எனவே அத்தகைய ஆவணங்களை வழங்குவதனை எல்லைப்படுத்தி அதற்கு இணையான பணத்தை அத்தகைய நிறுவனங்கள் நாம் முன்பு குறிப்பிட்டது போல நிலையான கண்காணிப்பு நிறுவனத்திடம் செலுத்தும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] None too big to fall, Business world, 13 october 2008, P.32.

முதலாளியமும் வல்லரசியமும் .....3

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிறு நில உடைமைகளை ஒன்றிணைந்து பெரும் பண்ணைகள் உருவாவதற்குத் தடங்கலாக இருக்கும் நிலவுச்சவரம்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும். குத்தகை வேளாண்மைக்கு முடிவுகட்ட வேண்டும். குத்தகைப் பயிரிடுவோருக்கு தாங்கள் பயிரிடும் நிலத்தில் பாதியை உரிமையாக்க வேண்டும். நேரடியாகப் பயிரிட முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டும். அல்லது அரசு அவற்றை விலைக்கு வாங்கிப் பண்ணையாளர்களுக்கு ஏலத்தின் மூலமோ தன்வரைவுகள் (டெண்டர்கள்) மூலமோ விற்றுவிட வேண்டும்.

சிறுதொழில்களுக்கான ஊக்குவிப்புகளைக் கைவிட வேண்டும். உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு வேண்டும். பாதிக்கப்படும் சிறுதொழில் முனைவோருக்கு உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பணியைப் பெருந்தொழில்கள் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.

அது போல் கைவினைத் தொழிலில் ஈடுபட்டிருப்போரையும் பெருந்தொழில்களில் பங்கேற்கத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கும் மீட்பு உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு நாட்டின் அனைத்து மக்களையும் முதலாளிய நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அதன் பயன்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும்.

ஏழை நாடுகளில் மனித உறவுகள் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளன. உழைப்பவர்களை எவ்வளவு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்துவது இங்கு மரபு. எனவே தொழில்நுட்ப உயர்வால் தொழிலாளர்களின் உடலுழைப்பின் கடுமை குறைவதை நம் ஒட்டுண்ணி வகுப்பினர் வெறுக்கின்றனர்.

குமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரத்தில் ஒரு மாட்டுச் சந்தை வரவிருந்ததை நாட்டார்கள் எனப்படும் ஊர்த்தலைர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக ஒரு குறிப்பு உள்ளது. (நாஞ்சில் நாடு, ப-ர் தே.வேலப்பன் 2000, பக்.19, மேற்கோள், குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, புலவர். கு.பச்சைமால், 2001, பக்.38.) அதாவது மனிதனை வைத்து கலப்பையை இழுக்கும் போது உண்டாகும் கிளுகிளுப்பு இல்லாமல் போகும் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாடு செத்துப் போனால் இன்னொன்று வாங்கப் பணம் செலவாகும். மனிதன் செத்தால் செலவில்லாமல் இன்னொருவன் தானாகவே வந்து நிற்பான். நோய் நொடி என்றும் தீவனம், தொழுவம், அதைப் பராமரித்தல் என்றும் செலவுகள் கிடையாது. எல்லாவற்றையும் விட பெரும்பான்மை மக்களை அடக்கி வைக்க இது தவிர அவ்வளவு எளிய வழி வேறு இல்லை.

இன்று மட்டும் என்னவாம்? ″நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு உடலில் குறைவான ஆடையுடன் வேலை செய்வதுதான் உகந்தது″ என்று கூற ஒரு படித்த கூட்டம், ஒட்டுண்ணிக் கூட்டம், எந்தச் சாதியிலிருந்து வந்ததாயிருந்தாலும் நிலையாக நம்மிடையில் உள்ளது. ஆனால் இந்தக் கூட்டம் காலில் உறையணி(சூ), முழுக்கால் சட்டை, முழுக்கைச் சட்டை, முகத்தில் கருப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து நிழலில் பணியாற்றும் கூட்டம்.

உண்மையில் எந்த தட்பவெப்பமாக இருந்தாலும் காற்று, மழை, வெயில், புழுதி, சேறு, வானிலிருந்து இறங்கும் பல்வேறு கதிர்வீச்சுகள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெட்ட வெளியில் பணி புரியும் ஒவ்வொருவரும் தங்கள் உடலை உரிய போர்ப்பினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த மேதாவிகளின் ″அறிவுரைகளை″ எவரும் ″சட்டை″ செய்யவில்லை என்பது மகிழ்ச்சி. முன்பு வெற்றுடம்புடன் வேலை பார்த்த பணிகளிலெல்லாம் ஆடவரும் பெண்டிரும் சட்டை, தொப்பிகளுடன் வேலை பார்க்கின்றனர்.

முன்பு மேலே துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு, உடன் வரும் கையாள் ஒருவன் குடை பிடிக்க வரும் பண்ணையாரைக் கண்டதும் வயலிலோ வெளியிலோ வேலை செய்யும் கூலியாள் தலையிலிருக்கும் தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு அல்லது முன்னங்கையில் தொங்கப் போட்டுக்கொண்டு குனிந்து வணங்கினான். இன்று தொழிலாளர்கள் அருகிப் போய் உழுவுந்தில் ஓட்டுவோன் உயரத்தில் சட்டை தொப்பியுடன் அமர்ந்திருக்க முன்னாள் பண்ணையாரின் பிறங்கடைகள் இன்று கீழே நின்று அவனை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறதென்றால் அதனைச் செய்தது புதிய தொழில்நுட்பம்தானே?

மலை உச்சிகள் வரை இந்த வளர்ச்சி எட்ட வேண்டும். அப்போதுதான் மனிதனை மனிதன் மதிக்க வேண்டிய கட்டாயம் நம் மேற்குடியினருக்கும் படித்த ஒட்டுண்ணிகளுக்கும் வரும்.

இதே மனப்பான்மையிலிருந்து வந்தவர்கள்தாம் நம் பொதுமைத் தோழர்கள். இவர்கள் பின்னால் கைகட்டி நிற்பவர்களாக வேளாண் கூலிகள், ஒருங்கிணைவு பெறாத பல்வேறு தொழிலாளர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்காக இலவய மனைப்பட்டா என்ற பெயரில் தோழர்கள் அசையாகச் சொத்து வாணிகம் செய்ய வேண்டும் அல்லது அதில் தரகு பார்க்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தொழில்களில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டிருந்தால் அங்கு வேலை நிறுத்த நெருக்கடியை உருவாக்கி பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் நுழைய வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.

முதலாளியத்தின் வளர்ச்சியை ஊக்கி நிலக்கிழமைப் பொருளியலின் மனித நேயமற்ற உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பாட்டாளியக் கட்சியினர் பழைய நிலக்கிழமைப் பொருளியலையும் குமுக அமைப்பையும் சாதி சார்ந்த தொழில்களையும் நிலைப்படுத்துவதற்காக செம்மார்களுக்கும் சக்கிலியர்களுக்கும் செருப்புத் தைக்கும் கருவிகளை இலவயமாக வழங்கவும் வண்ணார்களுக்கு தேய்ப்புப் பெட்டி இலவயமாக வழங்கவும் முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.

இது போதாதா, பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியிலிருந்து வந்த கருணாநிதிக்கு? மக்கள் தாங்களாகவே ஊர்ப்புறங்களிலிருந்து, சாதி சார்ந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறி நகர்களிலும் புதிய குடியிருப்புகளிலும் கலந்து வாழத் தொடங்கி சாதியத்தின் ஒரு முகாமையான கூறு நொறுங்குவது பொறுக்காமல், தோழர்களின் துணையோடு நெசவாளர்களின் குடியிருப்பு என்றும் விசுவகர்மர்களின் குடியிருப்பு என்றும் தாழ்த்தப்பட்டோருக்கான குடியிருப்பு என்றும் இலவயங்களைக் காட்டி மீண்டும் சாதி சார்ந்த குடியிருப்புகளை அமைத்துக் கெடுத்து வைத்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதில் கைக்கூலி. ஆளும் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் தோழர்களுக்கும் மக்களிடமிருந்து ″அன்பளிப்பு″. புரட்சி ஓங்குக!

1953இல் தாலின் காலமானார். அவருக்குப் பின் உலகில் மூத்த பொதுமைத் தலைவரான தனக்குத்தான் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை கிடைக்கும் என்று மா சே துங் எதிர்பார்த்தார். ஆனால் தாலினுக்குப் பின் வந்த குருச்சேவ் தனக்கே அப்பொறுப்பை வைத்துக்கொண்டார். அத்துடன் தாலினை மனிதத் தன்மையைக் கைவிட்டு நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தினார். பாடம் செய்து வைத்திருந்த அவர் உடலை எடுத்துப் புதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரில் இட்லருக்கு இறுதி அடி கொடுத்ததிலும் அவரது படையெடுப்பிலிருந்து சோவியத்தின் தொழில் துறையைக் காப்பதற்காக ஐரோப்பாவை ஒட்டி மேற்கு எல்லை அருகில் செறிந்திருந்த தொழிலகங்களை முழுமையாகப் பெயர்த்தெடுத்து கிழக்கிலிருந்த தேசங்களுக்குக் கொண்டு சென்று சோவியத் நாட்டின் கட்டமைப்பை, உலகப் பொதுமை இயக்கத்தின் மதிப்பை நிலைநாட்டியவர் என்று உலகப் பொதுமை இயக்கத்தின் பெரும்பான்மையினர் தாலின் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். எனவே குருச்சேவ் மீது உலகப் பொதுமை இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வெறுப்புற்றனர். இதைப் பயன்படுத்தி மா சே துங் உருசியத் தலைமை மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். இவ்வாறு சோவியத்துக்கும் சீனத்துக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்த திட்டமிட்டது அமெரிக்கா. மா சே துங்கை ஒரு கடவுள் போலவும் பொதுமைச் சீனத்தை ஒரு தேவருலகமாகவும் தீட்டிக் காட்டியது. இந்தப் பரப்பலில் சியார்சுத் தாம்சன் போன்ற அறிவுசீவிகள் முன்நின்றனர். சீனத்தில் ஈரும் பேனும் மூட்டைப்பூச்சியும் பரத்தைமையும் முற்றாக ஒழிந்து போயின என்றெல்லாம் கூட நம் நாட்டுத் தாளிகைகள் செய்திகளைத் தாங்கி வந்தன ஒரு காலகட்டத்தில்.

இந்தக் காலகட்டத்தில் காதல் பாக்கள் யாத்துக் கொண்டிருந்த மா சே துங்கை அவரது அரசியல் எதிரிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைத்த நிலையில் அவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடினார். பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் தன் ஆதரவாளர்களைத் திரட்டித் தன் அரசியல் எதிரிகளை ஒடுக்கினார்.

இந்த நேரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத்துக்குச் செலவு மேற்கொண்டு மா சே துங்குடன் உரையாடினார்.

இந்தப் பின்னணியில் உருவானவர்கள்தாம் மூன்றாம் அணி என்று கூறப்படும் அறிவு ″சீவி″களும் நக்சலிய வடிவிலான ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களும்.

முரண்பாடுகள் பற்றி ஏற்கனவே மா சே துங் எழுதியிருந்த கருத்துகளுக்கு முரணாக எப்போதும் அக முரண்பாடுகளே முதன்மையானவை என்ற கருத்து அவர் பெயரால் முன்வைக்கப்பட்டது. ″முதல்″ உலகப் போரின் பின்னணியில் உருசியப் புரட்சியும் இரண்டாம் உலகப் போரின் தொடர்சசியாக உருசிய உதவியுடன் சீனப் புரட்சி நடைபெற்றதும் ஆன உலகப் பொதுமை இயக்கத்தின் மீமுகாமையான பட்டறிவுக்கும் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பட்டறிவதற்கும் முற்றிலும் எதிரான முன்வைப்பாகும் இது.

இதன்படி ஏழை நாடுகளில் நிலவுவது அரை நிலக்கிழமையியமும் அரை முதலாளியமுமே; அவற்றை அழித்தால்தான் அதாவது உள் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் பொதுமைக் குமுகத்தை அமைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே புரட்சியாளர்களின் பணி உள்நாட்டிலுள்ள நிலக்கிழார்களையும் சிறு முதலாளிகளையும் அழித்தொழிப்பதுதான் என்று புகட்டப்பட்டது. இங்கிருந்த நிலக்கிழமையாளர்களும் சிறுதொழில் முனைவோரும் பெரும்பாலும் உயர்சாதி மற்றும் பிற்பட்ட சாதியினராக இருப்பர். அவர்களது குமுகியல் - பொருளியல் ஒடுக்குதல்களால் கொதிப்புற்றிருந்த அடித்தள மக்களிலிருந்து வெளிவந்த படித்த நல்லுணர்வுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்கள் கையில் துப்பாக்கியையும் கொடுத்தது அமெரிக்காவின் ந.உ.மு. (நடு உளவி முகவாண்மை - சி.ஐ.ஏ.) சீனத்தின் வழியாக.

இந்தியாவில் சாரு மசூம்தார் தொடங்கி வைத்த நக்சலிய அமைப்பு, இலங்கையில் சனதா விமுக்தி பெரமுன, அர்சென்றீனாவில் ஒளிரும் பாதைகள் போன்றவை பெருமளவில் வளர்ச்சியடைந்தவை. உள்நாட்டு வளங்களில், மக்களில் வேர்கொள்ளாமல் அயல்விசையாகிய ந.உ.மு.வால் ஊட்டப்பட்டுச் செயற்பட்ட இந்த இயக்கங்கள் இயல்பாகவே தேசியங்களின் வலுமிக்க விசைகளிடமிருந்து அயற்பட்டே நின்றன. தேசிய விடுதலைக்குப் பின்னணியில் நிற்க வேண்டிய சிறு உடைமை, சிறு முதலாளிய விசைகளுக்கு எதிராக அதே தேசியத்திலுள்ள உணர்வும், அறிவும் நேர்மையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களை நிறுத்தினர். அவர்களுக்குப் பதுங்க இடமில்லை. அவர்களுக்குக் காட்டப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் சேரிகள் வலுக்குறைந்தவை. அடுத்த வேளை கஞ்சிக்காக ஒடுக்குவோரின் வாயிலில் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஆக, மொத்தத்தில் வெட்ட வெளியில் அமைந்திருந்த கட்டபொம்மன் கோட்டை போன்று இந்த இளைஞர்களைஅவ்கள் நாட்டு காவல்துறைகள் தெரு நாய்களைப் போல் சுட்டுவீழ்த்தின. தமிழ்நாட்டுத் தமிழரசன், போலி மனித நேயத்தால் உயிரைப் பறிகொடுத்தார்.

தமிழகத்தில் இந்த இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காகத் திராவிட இயக்கத்திலிருந்தும் தனித்தமிழ் இயக்கத்திலுமிருந்து கவடில்லாத இளைஞர்களைப் பொறுக்கி எடுத்துக் களத்தில் விட்டுக் களையெடுப்பது போல் களைந்தனர்.

இலங்கையில் ஒன்றரை இலக்கம் இளைஞர்களை இரண்டு கட்டங்களில் இலங்கைக் காவல்துறையும், போர்ப்படையும் கூலிப்படைகளும் அழித்து ஒழித்தனர். அந்தக் காலகட்டங்களில் இந்தியப்படை இலங்கையின் பாதுகாப்புக்காகப் பயன்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் உலக மூன்றாம் அணியின் செயற்பாடு ஏழை நாடுகளின் தேசியத் தற்கொலை என்றே கூற வேண்டும்.

ஆயுதம் தாங்கி மட்டுமல்ல, பேனா தாங்கிய கூட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவு″சீவி″கள் மார்க்சின் நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியே மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். இருத்தலியம்(Existentialism), அமைப்பியம்(Structuralism), அயலாதல்(Alienation) போன்ற கருத்துகளை முன்வைத்தனர். தமிழகத்தில் எசு.வி.இராசதுரை, வெங்காளூரைச் சேர்ந்த தமிழவன் என்போர் இக்கருத்துகளைத் தங்கள் மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் மூலம் தமிழில் வழங்கினர். இது தவிர ந.உ.மு. மூலம் எண்ணற்ற தாளிகைகளுக்குப் பணம் வழங்கப்பட்டு அவை பாட்டாளியக் கோட்பாடுகளை இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் இலவயமாக வழங்கிவந்தன. இந்த இதழ்களை நடத்தியோர் வேறு பணிகளை நாடாமல் இந்த அயல் பணத்தை நம்பித் திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் என்று ஆன நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர்களுக்குப் பணம் வழங்கிய ந.உ.மு.வின் நிழல் நிறுவனங்கள், ″இனி நீங்களே உங்கள் இதழை நடத்திக் கொள்ளுங்கள்″ என்று பண உதவியை நிறுத்திவிட்டன.

இதழாளர்களில் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர பிறரனைவரும் திகைத்துத் திண்டாடிவிட்டனர். நல்ல வாய்ப்புகள் கிடைத்த ஓரிருவர் தவிர பிறரனைவரும் செய்வதறியாமல் தெருவுக்கு வந்த நிலையில் அவர்களை நாடித் ″தொண்டு நிறுவனங்களை″ அமைக்கும் பணியில் ந. உ.மு. ஈர்த்தது. அமெரிக்காவின் அட்டுழியங்களைத் திட்டுவதற்கென்று அமெரிக்காவே கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்தத் ″தொண்டு நிறுவனங்கள்″, குறிப்பாக பழஞ்சபை (கத்தோலிக்க), சீர்த்திருந்த சபைக் கிறித்துவம் சார்ந்தவை, பாட்டாளியக் கோட்பாட்டை இளைஞர்கள் நடுவிலும் பொதுவாக ஏழைகள் நடுவிலும் பரப்புவதைத் தங்கள் நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றாகக் கொண்டுள்ளன. நாம் அக்டோபர் 2008 தமிழினியில் குறிப்பிட்டிருந்த மதுரை இறையியல் கல்லூரியின் தியாபலசு அப்பாவு என்ற பரட்டடைச் சாமியார் கலை வடிவங்களில் பாட்டாளியக் கோட்பாட்டைப் பரப்புவதைப் பணியாகக் கொண்டவர். ஏசுவே ஒரு பொதுமைப் போராளி என்பது இவர்களது பரப்பல்.

இந்தத் ″தொண்டு″ நிறுவனங்கள், சமய வடிவிலும் பிறவழியிலும் ″ உலகில் ஏழைகள் நிறைந்த பெரும் பணக்கார நாடான″ இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் நுழைந்துள்ளன. 2004 திசம்பர் 26 ஆம் நாள் தமிழகத்தை உலுக்கிய சுனாமி எனப்படும் ஓங்கலைப் பேரழிவை அடுத்து கிறித்துவர்கள் அல்லாத மீனவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நுழைந்து படகு வைத்திருப்போருக்கும் அதில் பணியாற்றுவோருக்கும் இடையில் பகைமையை வளர்த்துவிட்டுள்ளது அமெரிக்க சார்பான தொழிற்சங்க அமைப்பு. இந்த அமைப்புதான் முதன்முதலில் ″அமைப்பு சாரா″த் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நல வாரியங்கள் அமைப்பதில் தமிழக அரசுக்கும் ″இந்திய″, ″இந்திய மார்க்சிய″ பொதுமைக் கட்சிகளுக்கும் வழிகாட்டியது.

இப்பொழுது இந்த ″வழிகாட்டிகள்″ பரப்பிவரும் ″கொள்கை″ கடற்கரையிலுள்ள மீனவர்களுக்கு கடல்சார் பழங்குடிகள் என்றும் மலையில் வாழும் மக்களுக்கு மலைசார் பழங்குடிகள் என்றும் பெயரிட்டு அவர்களைப் பிற மக்களிலிருந்து பிரித்து அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகளும் சிறப்புரிமைகளும் வழங்க வேண்டுமாம். அவர்களுடைய வாழ்க்கைமுறை, அதாவது ″பண்பாடு″ பேணப்பட வேண்டும் என்பது, அதாவது அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு மக்களுடனுள்ள உறவு முறைகளையும் மாறாமல் பேண வேண்டுமாம். என்னென்ன வகைப்பாடுகளாகப் பிரித்துத் தனித்தனிச் சிற்றறைகளில் நாட்டு மக்கள் அனைவரையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டுள்ளார்களோ தெரியவில்லை. வின் தொலைக்காட்சியில் டி.எசு.எசு.மணியின் நிகழ்ச்சிகளை ஊன்றிப் பாருங்கள் தெரியும்.

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வாழும் காணிக்காரர்களிடையிலிருந்து படித்து கிறித்துவத்தைத் தழுவி சாமியாராக இருக்கும் ஒருவர் ஓர் அரங்கில் உரையாற்றினார். அவர் தங்கள் மக்களின் சிக்கல்களை எடுத்துரைத்தார். அவர் தொண்டு நிறுவனம் மூலம் தம் சாதி மக்களுக்குத் ″தொண்டுகள்″ செய்து வருவதாகக் கூறினார். நான் கேட்டேன், உங்களைப் போலவே படித்து நல்ல உடையணிந்து சமநிலத்தில் வாழ்பவர்கள் போலவே அவர்களும் மேம்பட அவர்களைப் சமநிலத்துக்குக் கொண்டுவர ஏன் முயலக் கூடாது என்று. அவர் விடை கூறத் திணறிக் கொண்டிருந்த போது அரங்குக்குள் இருந்த மேல்சாதிப் பெரியவர்கள் ஒரே குரலாக, ″அவர்களது பண்பாடு என்னாவது?″ என்று எனக்கு விடையிறுத்தனர், இவர்கள் என்னவோ தங்கள் அப்பன்களும் பாட்டன்களும் கட்டிக்காத்த பண்பாடுகளை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பது போலவும் இவர்களது மக்களும் பிறங்கடைகளும் இவர்கள் மேடைகளில் போற்றிவரும் "பண்பாடுகளை"க் காப்பதற்காகவே அமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை பறந்து திரும்புவதையும் போல.

ஆக, "பண்பாட்டைப் பாதுகாப்பது" என்ற இந்த முழக்கமும் சாதி உயர்வு பறிபோய்விடக் கூடாது என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். இது போன்று எத்தனையோ தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவர முடியும்.


(தொடரும்)

முதலாளியமும் வல்லரசியமும் .....2

மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.

உருசியா ஐரோப்பாவின் பிற்போக்கின் குப்பைத் தொட்டி என்று கூறப்பட்ட ஒரு நாடு. அங்கு சார் மன்னனின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியது. ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலாளிய வேட்டையை அங்கும் நடத்தினர். அதன் விளைவாக உருசியாவின் மேட்டுக்குடிகளிடையில் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன. அது ஒரு கட்டத்தில் வன்முறை சார்ந்ததாக, சாரை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் வளர்ந்து நின்றது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் மரண தண்டனை அடைந்த இளைஞர்களில் ஒருவர் லெனினின் தமையன். இந்த நிகழ்ச்சி லெனினை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்ததில் முகாமையான பங்கேற்றது.

மக்களாட்சிக்காகப் போராடியவர்களிடையில் மார்க்சியம் பரவியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்து கிடந்த இயக்கங்களை ஒன்று திரட்டி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சிக் கட்சி என்ற அமைப்பு உருவானது. 1903இல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பெரும்பான்மையினர் கட்சி(போல்சுவிக்) சிறுபான்மையினர் கட்சி(மென்சுவிக்) என்று இரண்டாகப் பிரிந்தது. பெரும்பான்மை - சிறுபான்மை என்றது, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அணி பிரிந்து நின்ற போது இருந்த பேராளரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை இதற்குத் தலைகீழாக இருந்தது.

1905இல் இரண்டு பிரிவினரும் முன்வைத்த செயல்திட்டங்களை அலசி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சி கட்சியின் இரு போர்த்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார். அதில் இப்பொழுது நடக்க இருக்கும் புரட்சியில் முதலாளியருக்கே கூடுதலான நன்மைகள் கிடைக்கும்; ஆனால் பாட்டாளியருக்குத் தாங்கள் அமைப்பு வழியில் செயற்படுவதற்கான உரிமைகள் கிடைக்கும்; இது ஒரு புதுவகை மக்களாட்சி என்று அறிவித்தார்.

ஆனால் 1913இல் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உருசியாவில் முழுமையான முதலாளியம் உருவாகி விட்டது என்று நிறுவும் வகையில் உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அவரது போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் லெனின் எழுதிய குறுநூல் ஒன்று மிக முகாமையானது. முதலாளியத்தின் மீஉயர்ந்த படிவம் வல்லரசியம் (Imperialsim is the Highest Form of Capaitalism) என்பது அதன் பெயர். மார்க்சின் காலகட்டத்துக்குப் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டிணைவுகளை (Cartels) உருவாக்கி இருந்தன; அவற்றுக்கிடையில் உலகை மறு பங்குவைக்க அவை முயன்று கொண்டிருந்தன; இந்தப் போட்டியிலிருந்து ஓர் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் முன்கணித்தார். அது போலவே நடந்தது.

உலகப் போரைத் தொடங்கிய செருமனியின் வரலாறு பல பாடங்களைக் கொண்டது. உலகத்தின் கூரையில் விரிசல் என்ற கட்டுரையில் (தமிழினி, ஏப்பிரல், 2008) குறிப்பிட்டது போல் செருமன் மொழிபேசும் மக்கள் பல அண்டை நாடுகளுக்கிடையில் பிரிந்துகிடந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை அந்தந்த நாடுகளிலிருந்து பிரித்து ஒரே நாடாக்குவதற்குப் பாடுபட்டவர் இளவரசர் பிம்மார்க்கு. ஆனால் இந்தியாவைப் போலவே வெவ்வேறு பகுதி மக்களுக்கிடையில் உணர்வு ஒன்றிய ஒற்றுமை உருவாகவில்லை. அதற்காக, பிம்மார்க்கு வேண்டுமென்றே பிரான்சின் அரசனாக இருந்த மூன்றாம் நெப்போலியனை அவன் அவையிலேயே இழிவுபடுத்தி ஒரு போரை உருவாக்கினார். அதன் மூலம் செருமனி உறுதியான நிலையடைந்தது.

இந்தப் பின்னணியில் நாடு பிடிப்பதில் இங்கிலாந்தும் பிரான்சும் உலகமெல்லாம் போரிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து பிரான்சைத் திசைதிருப்ப, பிரிட்டனின் தலைமை அமைச்சாராயிருந்த பிட்சு என்பவர் செருமனிக்குப் பணம், படைக்கலன்கள், கருத்துரைகளை வழங்கி பிரான்சின் மீது ஏவிவிட்டார். நீண்டநாள் நடைபெற்ற இந்தப் போருக்காகப் பிரான்சு வெளியே இருந்த தன் படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இந்தியாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் இங்கிலாந்துக்கு அடுத்தபடி கூடுதலான குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்தது பிரான்சுதான். ஐரோப்பாவில் செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்தபோது உலகையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டு முடித்துவிட்டன. தான் இங்கிலாந்தால் கொடுமையாக, இழிவாக ஏமாற்றப்பட்டுவிட்டதைச் செருமனி அப்போதுதான் உணர்ந்தது. இந்தச் சூழலில்தான் மாக்சுமுல்லர் மனித இனத்துக்கே கேடு பயக்கும் தன் ஆரிய இனக் கோட்பாட்டை முன்வைத்தார். ஆரியர்களின் உடலமைப்பு என அவர் விரித்துரைத்தது முழுமையாகச் செருமானியரை மனதில் கொண்டே ஆகும். இதைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் உலகில் உள்ள தூய்மையான, கலப்பற்ற ஆரிய இன மக்கள் செருமானியரே, அவர்களே, உலகை ஆளத் தகுந்தவர்கள் என்ற இனவெறி அரசியலை இட்லர் உருவாக்கினார்.

ஆக உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதையும் இங்கிலாந்தைப் பழிவாங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, தன் நாட்டை ஒற்றுமைப்படுத்த பிரான்சுடன் பகைமை உணர்வை வளர்த்த பிம்மார்க்கின் செயலால் செருமனி ஒரேயொரு குடியேற்ற நாடுகூட பெறாமல் போனது. செருமனியைப் பிரான்சின் மீது ஏவிவிட்டுத் தான் உருவாக்கிய பேரரசை அதே செருமனியின் தாக்குதலில் நிலைகுலைந்த இங்கிலாந்து இழந்து நிற்கிறது. தான் உருவாக்கிய உலகப் போரின் இறுதியில் தானே இருகூறாக உடைந்து அரைநூற்றாண்டு காலம் செருமனி துண்டுபட்டுக் கிடக்க வேண்டி வந்தது.

உலகப் போரின் உச்ச கட்டத்தில் உருசியப் புரட்சி நடைபெற்றது. போரில் உருசியாவை ஈடுபடுத்திய சார் மன்னனால் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை வழங்க முடியவில்லை. எனவே போர்க்களத்தைக் கைவிட்டு ஓடிவந்த படைவீரர்கள் திரும்பிவந்து நாட்டினுள் நடமாடிக்கொண்டிருந்தனர். நாட்டில் வறுமையும் பிணியும் தாண்டவமாடின. இந்த நிலையில் ″சிறுபான்மை″க் கட்சியினர் புரட்சி செய்து சாரைத் தளை செய்து மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டனர். இது 1917ஆம் ஆண்டு பிப்ருவரியில் நடைபெற்றதால் இதனை பிப்ருவரிப் புரட்சி என்பர். புரட்சி தொடங்கிய போது லெனின் சாரின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் அங்கிருந்து உருசியாவுக்குச் சென்றார். அவர் பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்குச் செருமனி ஏற்பாடு செய்தது என்று வரலாறு கூறுகிறது. அங்கு புரட்சி நடந்து அரசின் வலிமை குறைந்தால் தன் படையெடுப்பு எளிதாக இருக்கும் என்பது செருமனியின் கணிப்பு.

உருசியா சென்றடைந்த லெனின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் சில திட்டங்களை முன்வைத்தார். புதிய அரசியலமைப்பு அவை கூட்டப்பட வேண்டும், புரட்சியை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சோவியத்துகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பவை முகாமையான திட்டங்கள். இவற்றை அரசு ஏற்காவிட்டால் புரட்சி நடத்த வேண்டும் என்றார். இதுபற்றி ஆய்ந்து முடிவு செய்வதற்காக 1917ஆம் ஆண்டு அக்டோபர் 26
[1] ஆம் நாள் அனைத்து சோவியத்துகளின் பேராளர்களின் குழு கூட இருந்தது. ஆனால் லெனின் தன் கட்சியினருக்கு ஓர் அறிவுரை வழங்கினார். 25 ஆம் நாள் இரவிலேயே புரட்சியை நடத்திவிட வேண்டும். அதற்கு முன்பு நடந்தால் சோவியத்துக்களின் பேராளர்கள் புறப்பட்டு வரமாட்டார்கள். 26ஆம் நாள் விடிந்துவிட்டால் பேராளர்கள் வந்து சேர்ந்துவிடுவர். அப்போது அவர்கள் இசைவு இன்றி புரட்சி நடத்த முடியாது என்று கூறினார். எனவே 25 ஆம் நாள் இரவே அமைச்சர்களைத் தளையிட்டு பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான செயின்று பீட்டர்சுபர்க்குத் தொழிலாளர்களும் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த படைவீரர்களும் கொண்ட ஒரு குழு கிரெம்ளின் அரண்மனையைக் கைப்பற்றியது. அடுத்த நாள் சோவியத்துகளின் பேராளர் கூட்டத்தில் புரட்சி நடந்துவிட்டது; நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று புரட்சியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது. சிறுபான்மைக் கட்சியினருக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து உருசியா முழுவதும் பழமையாளர்களுக்கும் புரட்சியாளருக்கும் போர் நடந்து 1919இல் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் இது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த புரட்சி என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆட்சி கைக்கு வந்த பின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் கேட்டபடி அரசமைப்புச் சட்டப் பேரவை கூட்டப்படவில்லை. லெனினின் வரைவான சட்டமே நடைமுறைக்கு வந்தது.

உருசியப் புரட்சி பாட்டாளியரின் புரட்சி என்று கூறப்பட்டாலும் ″பாட்டாளியரின் முன்னணிப் படையாகிய″ பொதுமைக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடந்த தேசியங்களின் விடுதலைப் போரின் வடிவமாகவே அது இருந்தது.

உருசியாவின் நிலவுடைமைகள் அனைத்துமே மாருசியா எனப்படும் நடுப் பகுதியின் உயர்குடியினரின் சொத்துகளாகவே இருந்தன. ஆங்காங்குள்ள மக்கள் அந்நிலங்களில் பயிரிட்டுத் தங்கள் ஆண்டைகளான மாருசியர்களுக்கு வாரம் அளக்கும் கொத்தடிமைகளாகவே இருந்தனர். மாருசியா தவிர்த்த பெரும்பாலான தேசங்களும் அவற்றுக்கு, ″பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்னாட்சி″ வழங்குவதாக வாக்குறுதி அளித்துத்தான் அத்தேசியங்களின் குடிமக்களைப் புரட்சியினுள் இட்டுவந்தார் லெனின். அந்த வகையில் உருசியாவில் நடைபெற்றது நிலக்கிழமை விளைப்பு முறையை எதிர்த்து நடந்த முதலாளியப் புரட்சியே. அதைத் தொடர்ந்து நிலங்கள் உழவர்களுக்கு உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடைமையாளர்கள் தமக்குள் ஒப்புக்கொண்டோ மூலதனத்தால் வாங்கப்பட்டோ இணைந்து பெரும் பண்ணைகள் ஆகியிருக்க வேண்டும். பெரும்பான்மை முன்னாள் உழவர்களும் அப்பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணைகளைத் தங்கள் கூட்டு ஆளுமையில் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த இயல்பான மாற்றத்துக்கு இடம் தராமல் அதிகாரிகளும் கட்சியினரும் கட்டாயப்படுத்தி அல்லது பேசி இணங்கவைத்துக் கூட்டுப் பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும அமைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். முதலாளியச் சுரண்டலை விடக் கீழான ஊழல் சுரண்டல் உருவானது. தேசிய மக்கள் போராடினர். அது ஒடுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த போது லெனின் நோய்ப் படுக்கையில் இருந்ததால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

சீனத்திலும் ″புதிய சனநாயகப் புரட்சி″, ″ஒன்றிய கூட்டணி″ என்றெல்லாம் பேசினாலும் இறுதியில் அரசின் ஊழல்தான் ஆட்சி செய்தது. இவ்வாறு, உருசியாவின் ஊர்ப்புறப் பொது நிலஉடைமை அடிப்படையிலான பழங்குமுகத்திலிருந்து நேரடியாக பொதுமைக்கு வரமுடியுமா என்ற மார்க்சின் குழப்பத்துக்கு வர முடியாது என்ற விடை உருசியாவிலிருந்தும் முதலாளியத்துக்குள் நுழையாமல் பொதுமைக் குமுகத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் முதலில் சொன்னதற்குச் சான்று உருசியாவுடன் சீனத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

முதலாளிய உருவாக்கமும் வல்லரசியமும்:

இயற்கையான வரலாற்று ஓட்டத்தில் உருவானது ஐரோப்பிய முதலாளியம். ஆனால் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பா உலகின் பிறநாடுகளின் மீது செலுத்திய வல்லரசிய மேலாளுமை. முதலாளியத்துக்குத் தேவையான மலிவான மூலப்பொருட்களையும் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்த பண்டங்களுக்குச் சந்தையையும் ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகள் தந்தன. ஆனாலும் முதலாளிய வளர்ச்சி ஐரோப்பியப் பெருங்கொண்ட மக்களுக்கும் குடியேற்ற நாடுகளின் மக்களுக்கும் நலம் பயப்பதாக இல்லை.

பொதுவாக ஒரு மனிதன், தன் உழைப்பினால், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைப் போல் பலமடங்கு பண்டங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன். மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இந்தப் படைக்கும் ஆற்றல் மேலும் உயர்கிறது. அவன் தேவைக்கு மிஞ்சியதை, முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் வாணிகனும் கந்துவட்டிக்காரனும் பறித்துக்கொள்கின்றனர். நம் நாட்டில் கூட்டுறவுகள், அரசுடைமை, வங்கிக் கடன்கள், ஊழல் ஆகியவை மூலம் ஆட்சியாளர்கள் பறித்துக்கொள்கின்றனர். முதலாளியத்தில் முதலாளி தன் தொழிலகத்தினுள் பறித்துக்கொள்கிறான். இந்த மிகுதிப் பண்டத்தை, அதன் மதிப்பாகிய மிகுதி மதிப்பை, அதாவது மீத்த மதிப்பைப் பெற வேண்டுமானால் அப்பண்டங்களை விற்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பாட்டாளிகளாகிவிட்ட முதலாளியக் குமுகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு இந்த மிகுதிப் பண்டங்களை வாங்க பெரும்பான்மை மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்ட அக்குமுகத்தால் முடியாது. எனவே பண்டங்கள் தேக்க மடையும். எனவே தொழிலகங்கள் விளைப்பைக் கட்டுப்படுத்தும். மக்களின் வாங்குதிறன் இன்னும் குறையும். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தொழிலகங்களும் மூடப்படும். பாட்டாளிகளின் பட்டினிச் சாவுகள் பெருகும். எங்கும் பண்டங்களின் தேக்கம்; வாங்கத்தான் மக்களிடம் பணம் இருக்காது.

விளைப்பு நின்று போனதால் மேலடுக்கிலுள்ள மக்களின் நுகர்வால் பண்டங்களின் தேக்கம் சிறிது சிறிதாகக் குறையும். மீண்டும் சிறுகச் சிறுக தொழிலகங்கள் திறக்கும். வாங்கும் திறன் மீளும். மீண்டும் விளைப்பும் வளமும் உச்சத்துக்குச் சென்று மீண்டும் இறங்கும். இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டுகொண்டிருந்தது. இவற்றை மாபெரும் பின்வாங்கல்கள் என்றும் மாபெரும் பொருளியல் நெருக்கடிகள் என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் பாட்டாளியப் புரட்சிகள் நடைபெறும் என்று மார்க்சும் ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். ஆனால் அடிமை நாடுகளைச் சுரண்டிய செல்வம் அங்கு பெரும் சிக்கல்கள எழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் தொழிலாளர் தலைவர்களைக் குறை கூறினர்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளில் சான் மேனார்டு கெயின்சு என்பவர் இந்த பின்வாங்கல் நச்சுச் சூழற்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை அறிவித்தார். அது மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் அடுத்த கட்டத்தினுள் பொருளியல் சிந்தனையைக் கொண்டுசெல்வது.

மார்க்சு பண்ட விளைப்பு சார்ந்த தொழில்களையும் அது சார்ந்து உருவாகும் தேக்க நிலைமையையும் மட்டுமே கூறினார். கெயின்சு பண்ட விளைப்பு சாரா, அதே நேரத்தில் பண்டங்களை நேரடியாகவும் கூலி பெறும் தொழிலாளர்களின் வாங்கும் திறனைப் பெருக்குவதன் மூலம் மறைமுகமாகவும் இருவழிகளிலும் நுகர்வை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசு பணத்தாள்களை அச்சிட்டு முதலிட வேண்டும் என்று கூறினார். அதாவது அதுவரை இயற்கை தன் வழியே செல்லட்டும் என்று பொருள்படும் laissez - faire என்ற அணுகலைக் கைவிட்டு அரசு தலையிட வேண்டும் என்றார்.

இதனை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. செருமனியின் இட்லர் ஏற்றுச் செயற்பட்டிருக்கலாம். 1919இல் முடிவுற்ற″முதல்″
[2] உலகப்போரின் முடிவில் செருமனி மீது விடுத்த பொருளியல் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களைச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கின. வீசி எறிந்துவிட்ட செருப்புகளிலிருந்த தோலை வேகவைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சூழலில்தான் இட்லரின் நடவடிக்கைகளுக்கு ஒரு தகுந்த களம் அங்கு அமைந்தது. கெயின்சின் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லையாயின் மிகக்குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தத்தக்க ஒரு வலிமையையும் வளர்ச்சியையும் அந்நாடு எய்திருக்க முடியாது.

கெயின்சின் கோட்பாடு வல்லரசு வடிவம் எடுத்துவிட்ட முதலாளியத்தினால் உருவாகும் நெருக்கடிகளை ஒரு தேசிய முதலாளியத்தால் தீர்க்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. தொழில்கள் இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களே இல்லாமல் மாபெரும் பொருளியல் வல்லரசாக வளர்ந்து நிற்கும் சப்பானைப் போல் அல்லாமல் அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்த வெளி உதவியும் இன்றிப் பொருளியல் நெருக்கடிகளை உருவாக்காத ஒரு தேசிய முதலாளியத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.

அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து பிற பணக்கார நாடுகளிலும் உருவாகியிருக்கும் பொருளியல் நெருக்கடிகளால் மிகப் பாதிப்படைய இருப்பவை பாக்கித்தானம், இந்தியா, சீனம் போன்று பெருமளவு ஏற்றுமதி சார்ந்து, அத்தனாலேயே தாம் வளர்ந்துவிட்டதாகக் கொட்டம் அடிக்கும் நாடுகள்தாம் எனபது சரியான கணிப்புதான். இந்தியாவின் மொத்த வாணிகத்தில் எற்றுமதி 40 நூற்றுமேனிக்கும் மேல் என்றொரு கணிப்பு கூறுகிறது. இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

நாட்டிலுள்ள அனைவரின் வாங்குதிறனை உயர்த்தி இங்கு உருவாகும் அனைத்துப் பண்டங்களுக்கும் பணிகளுக்கும் இங்ககேயே சந்தையை உருவாக்குவதுதான் ஒரே வழி. அனைவரின் வாங்குதிறனை உயர்த்த நம்நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடற்கரை முதல் மலை முகடு வரை இடைவெளி இன்றிப் பரவலாக வேண்டும். அத்தகைய, மூலப்பொருள் இறக்கிமதி தேவைப்படாத, சந்தைக்காக ஏற்றுமதியை நம்பி இருக்காத தேசிய முதலாளியம்தான் ஒரே வழி.

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] புரட்சிக்கு முன்பு உருசியாவில் சூலியன் ஆண்டுமுறை நடப்பிலிருந்தது. புரட்சிக்குப்பின் அது கிரிகோரியன் ஆண்டு முறைக்கு மாற்றப்பட்டது. பார்க்க, தமிழன் கண்ட ஆண்டு முறைகள், தமிழினி, பிப்ருவரி 2008 எனவே புதிய ஆண்டுமுறையின் படி இது நவம்பர் 7 ஆனது.

[2] நடைபெற்றது இரண்டு உலகப் போர்கள் அல்ல, ஒன்றேதான் என்கிறார் Dynamic Europe நூலின் ஆசிரியர், C.F.Strong. முதல் உலகப் போர் பிரான்சில்தான் முடிந்தது அது முதல் கூட்டம். இரண்டாம் கட்டத்தில் செருமனிக்குள் தேசப்படைகள் நுழைந்ததுதான் போரின் இறுதி என்கிறார் அவர் தன் நூலில்.