சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.7.09

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20000 ⁄-ரூபாய்கள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லாம் சேர்ந்து விரைவில் குழந்தைத் தொழிலாளர்களை "ஒழித்து" விடுவார்கள் போல் தோன்றுகிறது. இந்நேரத்தில் நமக்கு எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

1. குழந்தைகள் ஏன் உடலுழைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்?

இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால் நம் வேளாண்மை வீழ்ந்துவிட்டது. நிலம் தரிசாகப் போடப்பட்டுப் பாலைவனமாக மாறி வருகிறது. அதன் விளைவுதான் நீண்ட வறட்சியும் திடீர் வெள்ளங்களும். அதனால் பெரியவர்களின் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இருப்பவை எல்லாம் குழந்தைகளைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் தாம். எனவே குடும்பத்தை நடத்தப் பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

வேலையில்லா நிலையில் பெற்றோர்கள், குறிப்பாக ஆடவர்கள் குடிப்பதற்கும் பரிசுச் சீட்டு வாங்குவதற்கும் கூட இக்குழந்தைகளின் உழைப்பையே சுரண்டுகின்றனர். பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட சாராயம், பரிசீச் சீட்டு போன்றவற்றில் அவ்வருமானம் கரைந்து போனதால் ஏற்படும் வறுமையும் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கான ஒரு முகாமையான காரணம்.

2. குழந்தை உழைப்பைத் தடை செய்துள்ள அரசு அதன் விளைவாகிய குடும்ப வருமான இழப்பை ஈடு செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

ஒன்றுமே இல்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியதுடன் அதற்குச் தோதான ஒரு மனநிலையைப் பொதுமக்களிடையில் ஏற்படுத்துவதற்காக அரசே நேரடியாகவும் தன் ஆளுகையின் கீழிருக்கிற மற்றும் மக்களுக்கு(தனியாருக்கு)ச் சொந்தமான பொதுத் தொடர்பு வகைதுறைகளின் மூலமாகவும் "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் மூலமாகவும் பலவகைகளிலும் கருத்துப் பரப்புவதற்குப் பல கோடி உரூபாய்களைச் செலவு செய்வதோடு சரி.

3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

முதலாவதாக, உழைப்பிலிருந்து விடுபட்ட குழந்தைகளும் அவர்களது உழைப்பை நம்பி வாழும் குடும்பமும் இப்போது கிடைக்கும் அரைவயிற்றுக் கஞ்சியிலிருந்தும் "விடுபடுவர்". அதன் தொடர்ச்சியாகப் பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும். மக்களின் இடப்பெயர்ச்சி கூடும்.


மானத்தோடு உழைத்துப் பிழைத்து வந்த சிறுவர்கள் இனி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டியிட்டு எச்சில் இலைகளுக்காகச் சண்டை போடுவர். குப்பைகளில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகும்.

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவர். குமுகப் பகைக் கும்பல்களுக்கு ஆள் வலிமை சேரும். விலைமகளிராக மாறும் சிறுமிகளின் எண்ணிக்கை பெருகும். இத்துறைத் தரகர்களுக்கு நல்ல வேட்டையாகும்.

இரண்டாவதாகக் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து மலிவாகப் பண்டங்கள் செய்த நிறுவனங்கள் வெளிப்போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படும். தொழில் குறிப்பிட்ட பகுதிகளில் அழித்து போகும். எனவே அங்குள்ள பெரியவர்களுக்கிருக்கும் வேலைவாய்ப்புகளும் அழிந்து போகும். அப்பகுதிகள் ஆளற்ற பாலைவனங்களாகும். இப்போது பெருகி வரும் வழிப்பறிகளும் கொள்ளைகளும் இனிமேல் விரைந்து பெருகும்.

மூன்றாவதாக இத்தொழில்களின் மூலம் செய்யப்பட்ட பொருட்களைச் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக வெளிச்செலாவணித் தேவை கூடும்.

நான்காவதாகச் சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் கூலியும் குறையும். இவ்வாறு குறைவதால் மிச்சப்படும் தொகை இச்சட்ட மீறலை மறைப்பதற்கான கையூட்டாக ஆட்சியாளரைச் சென்றடையும்:

4. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வளவு முனைப்புக் காட்டும் ஆட்சியாளரின் உள்நோக்கம் என்ன?

முன்பு "நெருக்கடி நிலை"யின் போது மக்களிடையில் "பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக" ஊதிய முடக்கம், பஞ்சப்படி முடக்கம் எல்லாம் செய்தார்களல்லவா அதே நோக்கம் தான். அதாவது மக்களின வாங்கும் ஆற்றலைக் குறைப்பது தான். அதாவது தங்கள் தேவைகளை வாங்க இயலாத வறியவர்களாக்குவது தான். இதன் மூலம் மிஞ்சும் பண்டங்களை ஏற்றுமதி செய்யலாம். இப்போது ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சம் டன் உணவுத் தவசங்களை(தானியங்களை) இன்னும் கூட்டலாம்.

குழந்தைத் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வழக்கமான தரகு கிடைக்கும். இறக்குமதியால் ஏற்படும் வெளிச் செலாவணிக்காக புதிதாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் தரகு கிடைக்கும்.

5. "தொண்டு" நிறுவனங்களின் உள்நோக்கம் என்ன?

இத்"தொண்டு" நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்தும் உலகின் பெரும் தொழிற்பேரரசுகள் நடத்தும் அறக்கட்டளைகளிலிருந்தும் பணம் பெறுவதால் அப்பேரரசுகள் செய்யும் கருவிகளை இறக்குமதி செய்வதற்குத் தோதான சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகின்றன. குழந்தைகளுக்குக் குறைவான கூலி கொடுத்து ஏழை நாடுகள் மலிவாக பண்டங்களைப் படைத்துத் தங்களுடன் போட்டியிடுவதிலிருந்து அவற்றைத் தடுப்பது முகாமையான நோக்கம்.

6. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்போர் தான் வேலைக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20,000⁄-உரூபாய்கள் மறுவாழ்வுக்காக வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கும்?

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் தண்டமாகும் இது. குழந்தைகள் வேலையிழக்கும் வேகத்தை இது கூட்டும். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்போர் தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கம், மாந்தநேய உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு அவர்களைத் தெருவில் இறக்கிவிடத் தூண்டும்.

7. குழந்தைத் தொழிலாளர் பற்றிய இந்த நிலைப்பாடு சரிதானா?

பதின்மூன்று அகவைக்குட்பட்ட குழந்தைகள் உழைத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை வருந்தத்தக்கது தான். ஆனால் குழந்தைகளின் உழைப்பில் குடும்பம் வாழ வேண்டுமென்றிருக்கும் நிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே இன்றி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குழந்தை உழைப்புக்கு எதிராக முனைப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறு மட்டுமல்ல இரக்கமற்ற கொடுஞ் செயலுமாகும். அதே வேளையில் உடலுழைப்பு இழிவானது என்ற உணர்வு எழுத்துறிவுடன் கூடவே பள்ளிகளில் உருவாகி விடுகிறது. இது நெடுங்காலமாகப் பெருந்திரள் மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதன் விளைவாகும். அத்துடன் உழைப்போருக்கு உரிய ஊதியமோ குமுக மதிப்போ இல்லை. அதனால் இன்று இருக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீண் பொழுது போக்குவதுடன் குமுகத்துக்குத் தொல்லை தருபவர்களாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள். எனவே இதில் ஒரு மாற்றத்தின் தேவையுள்ளது. குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து உடலுழைப்பையே தவிர்த்து வருவதால் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களிடத்தில் உழைப்பை ஏற்றுக்கொள்ள ஓர் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. அதை மாற்ற எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு மூன்றாண்டுக் காலம் உடலுழைப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க வேண்டும். மூன்றாண்டு உடலுழைப்பிற்குப் பின் மேற்படிப்புக்கு மாணவன் கட்டணம் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு மட்டத்தில் மனமும் உடலும் முற்றிப் போகாவாகையால் உழைப்பு பற்றிய சிந்தனையிலும் உடல் வணக்கத்திலும் எதிர்ப்பு இருக்காது.

கட்டிடத் தொழிலிலாயினும் வேறு எந்தக் தொழிலிலாயினும் ஈடுபடுவோருக்கு அத்தொழில் குறித்த அடிப்படைத் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தொழில்களின் தரம் மேம்படுவதுடன் புதியன படைக்கும் ஆர்வமும் உண்டாகும்.


8. இது பற்றி மேலையாடுகளின நிலை என்ன?

மேலை நாடுகளில் பதினபருவம்(Tennage) எனப்படும் பதின்மூன்று அகவை எட்டிய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர். அப்போதிலிருந்து பெற்றோரைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் அகலுகின்றனர். பகுதி நேர உழைப்பின் மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது அவர்களின் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாகிறது. தன்னம்பிக்கை, குமுகத்துடன் நெருக்கமான உறவு, பொது அறிவு, குமுக உணர்வு ஆகியவற்றை வளர்க்கப் பெருந்துணை புரிகிறது. மாறாக நம் நாட்டு இளைஞர்கள் பெற்றோர் நிழலிலேயே நெடுங்காலம் ஒதுங்கி, ஒடுங்கி உடலியல், உளவியல் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சியின்றி இருவகைகளிலும் மெலிந்து போகின்றனர்.

9. இது குறித்து நம் பண்டைமரபுகள் ஏதேனும் உண்டா?

உண்டு. சில சாதியினர் தங்கள் மகன்களைத தங்களையொத்த பிற தொழில் நிறுவனங்களில் கூலி வேலைக்குப் பயிற்சியாளர்களாய் அனுப்புவதுண்டு. மாதவி ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின் பன்னீரண்டாம் அகவையில் அரங்கேறியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மகாபாரதத்தில் நளாயினி கதையில் வரும் ஆணி மாண்டவியர் வரலாற்றில் ஒரு குறிப்பு உள்ளது. தவறுதலாகத் தான் கழுவேற்றப்பட்டதற்கு எமனிடம் விளக்கம் கேட்கிறார் ஆணி மாண்டவியர். அதற்கு, அவர் சிறுவனாயிருக்கும் போது ஒரு முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதன் விளைவே அது என்று கூறுகிறான் எமன். பதின்மூன்று அகவைக்குள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடையாதென்ற அறநூல் கூற்றைத் காட்டித் தவறிழைத்த எமனுக்குச் சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து பதின்மூன்று அகவையடைந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தக்கவர் என்ற கருத்து மிகப் பண்டை நாட்களிலேயே நம் குமுகத்தில் நிலவியது தெளிவாகிறது.

10. குழந்தைத் தொழிலாளர் குறித்த நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, ஏழைச் சிறுவர்களின் வாழ்வின் அடிப்படையையே தகர்க்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் அரசும் இணைந்து அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களது வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்க அம்முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைத் தொழிலாளர் கல்வி நிலையங்கள் அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க நிலவுச்சவரம்பு, வேளாண் விளைபொருள் ஆணையம், உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், உணவுப் பொருளின் வாணிகத்தில் உரிம முறை, வருமான வரி போன்ற தடைக்கற்களை உடனடியாக அகற்றி வேளாண்மைக்கு மறு உயிர் கொடுத்து பெரியவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

வருமானவரியை முற்றாக ஒழித்து உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு போன்ற தடைக் கற்களை அகற்றி உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியும் உள்ளூர் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தும் தொழில் வளர்ச்சியை பாய்ச்சல் நிலைக்குக் கொண்டு வந்து அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.

சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.

மூன்றாவதாக, குழந்தைத் தொழிலாளர்களை அகற்ற உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உள்நாட்டில் உருவான கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.

நான்காவதாக, அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கும் உலக வங்கியிடம் நாட்டை அடகு வைக்கக் கூடாது. இத்தொடக்கக் கல்வி முழுவதும் அரசாலேயே செல்வநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எட்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு உடலுழைப்புக்குப் பின் மேற்படிப்புக்குத் தகுதியான ஏழையர் தவிர அனைவரிடமும் கட்டணம் பெற வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகப் போலி மாந்தநேயத்தைக் காட்டி நம் பொருளியல் நடவடிக்கைகளில் தலையிடும் வெளியுதவி பெறும் "தொண்டு" நிறுவனங்களின் நடவடிக்கைகளை மிகக் கூர்மையாகக் கண்காணித்து அவர்களது இது போன்ற அழிம்பு வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

5.7.09

வெற்றிடம்

'இந்தியா'வினுள் அயல்நாட்டு மூலதனம் இறங்குவதற்கெதிராகப் "பொதுமை"யினர் அடிக்கடி வெற்றுக் கூச்சல் எழுப்புவதைப் பார்க்கிறோம். இவர்களது இந்தக் கூக்குரல் நேர்மையாயிருந்தால் அவர்கள் இரு கேள்விகளுக்கு விடை கூறியாக வேண்டும். நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் அதன் விளைவான வளமைக்கும் முதலீடு என்ற ஒன்று தேவையா இல்லையா, அந்த முதலீட்டுக்கு வெளி மூலதனத்தை இங்கே நுழைய விடுவதைத் தவிர வேறு வழிகள் ஏதாவது உள்ளனவா என்பனவே அந்தக் கேள்விகள்.

ஆனால் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் பொருளியல் வளர்ச்சிக்கு முதலீடு தேவை என்பதும் 'இந்திய' அரசால் அந்தத் தேவையை நிறைவேற்ற முடியாது என்பதும். அப்படியானால் வெளி முதலீடு தான் ஒரே வழியா என்ற கேள்வியும் எழுகிறது.

இல்லை என்பதே நம் விடை. நம் நாட்டில் மூலதன வாய்ப்பு மிகப் பெரிதாக உள்ளது. அது கருப்புப் பணம் என்ற முத்திரையிடப்பட்டு பதுங்கிக் கிடக்கிறது.

உண்மையில் கருப்புப் பணம் என்பது என்ன?

'கருப்புப் பணம்' என்ற சொல்லைக் கேட்டவுடனேயே அது ஏதோ சட்டத்துக்குப் புறம்பான வழியில் சேர்ந்த பணம் என்ற எண்ணம் தான் நம் கருத்தில் எழுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

போபர்சு ஊழலில் சுருட்டப்பட்ட பல நூறு கோடி உருவாக்களையோ பங்குச் சந்தை ஊழலில் திருடப்பட்ட பல்லாயிரம் கோடி உருவாக்களையோ போன்றதல்ல கருப்புப் பணம் எனப்படுவது. இன்றைய சட்டங்கள் ஏற்றுக் கொள்ளும் விதிகளின் படி ஈட்டப்பட்ட பணம் தான் கருப்புப் பணம் எனும் முத்திரை குத்தப்படுகிறது. ஒருவன் வருமான வரித்துறைக்குக் காட்டாமல் மறைக்கும் பணம் கருப்புப் பணமாகிறது.

அதே நேரத்தில் ஒரு போலி நிறுவனத்தைப் பெயருக்கு நடத்துவது போல் நடிக்கும் ஒரு வழிப்பறிக்காரன் தன் தேட்டைகளைத் தன் போலி நிறவனத்திலிருந்து வந்த வருமானமாகக் காட்டிவிட்டு அரசு நிறுவும் ஏதோவொரு நூற்றுமேனியை வருமான வரியாகக் கட்டிவிட்டானானால் அவன் பணம் "வெள்ளை"யாகிவிடுகிறது.

ஆனால் பாடுபட்டு உழைத்துச் சிந்தித்துத் திட்டமிட்டுப் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவன் தன் ஈட்டத்தை ஒரு திருடன் தன் தேட்டையை ஆட்சியாளர்களிடம் பங்கு போட முன் வருவது போல் பங்கு போட முன்வரமாட்டான். எனவே ஆட்சியாளரின் வரம்பு மீறிய வருமான வரி விதிப்பை எதிர்ப்பதாகவே "வரி ஏய்ப்புகள்" நடைபெறுகின்றன.

இதனால் தான் தங்கள் தேட்டைகளை ஆட்சியாளர்களுடன் பங்குபோடுவதில் எந்தத் தயக்கமும் தேவைப்படாதக் குமுகப் பகைவர்கள் மட்டும் இன்றைய நிலையில் ஆதிக்கர்களாகச் சிறப்புப் பெற முடிகிறது.

உண்மையில் வருமான வரித்துறை குமுகத்தில் உருவாகும் பணத் திரட்சியைக் கருப்புப் பணமாக மாற்றும் பணியையே செய்து வருகிறது. அத்துறைக்கு வேண்டும் சம்பளம் முதலான செலவுகளை மாதச் சம்பளம் பெறுவோரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. ஆசிரியர்கள், அரசூழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்ற வகையினர் தான் உண்மையிலேயே வரி கட்டுகின்றனர். அண்மை ஆண்டுகளில் பெருந்தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் வருமான வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் தான் ஐ.என்.டி.யூ.சி.த் தலைவராயிருந்த திரு. இராமானுசம் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துமாறு கேட்டார். இவர் தொல்லை தருவார் என்பதற்காக அவரை ஆளுநராக்கி அப்புறப்படுத்திவிட்டனர் பேரவைக் கட்சியினர்.

இவ்வாறு செயற்கையாக உள்நாட்டு மூலதனத்துக்கு ஓர் வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை ஈடுசெய்வதாகக் கூறித்தான் 'இந்திய' அரசு வெளி மூலதனத்தை இறக்குமதி செய்வதாகக் கூறி நம்மை ஏமாற்றுகிறது.

ஆனால் ஆட்சியாளரின் ஏமாற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் பொதுமையினரின் ஏமாற்று மிகத் திறமையானது. ஏனென்றால் இவர்கள் வெளியார் - உள்நாட்டினர் என்றெல்லாம் பாகுபடுத்துவதில்லை. "தனியார்" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவர். ஆட்சியாளர்கள் மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஒடுக்கி அயலாருக்கு நாட்டின் வளங்களை விற்றுத் தமக்குக் காசாக்குவதற்காகத் திட்டமிட்டுச் செயற்படும் போது தனியாருக்குக் கொடுக்காதே என்ற இவர்களின் கூப்பாடு உள்நாட்டு மக்களைப் புறக்கணிப்பதற்கு ஆட்சியாளருக்கு ஒரு சாக்காகவும் மக்கள் மனதில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்குவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் அயலாருக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுப்பதற்கெதிராக இவ்வெற்றுக் கூச்சலால் எதையுமே செய்ய முடிவதில்லை.

எனவே இம்மண்ணின் வளங்கள் வெளிநாட்டு மூலதனப் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், உள்நாட்டின் வேலை வாய்ப்புகள் பெருகி இளைஞர்களின் எதிர்காலம் ஒளிபெற வேண்டுமென்றால் உள்நாட்டு விளைப்பு பெருகி அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறையுள் என்ற நிலையை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் இந்தச் செயற்கை மூலதன வெற்றிடம் நிரப்பப்படல் வேண்டும். கருப்புப் பணம் ஆக்கப்பட்டுள்ள பணத் திரட்சி வெள்ளையாக மாற்றப்படல் வேண்டும். அதற்கு முதன்முதல் தேவை வருமான வரித்துறையின் ஒழிப்பு. தமிழகத்து இளைஞர்களே உங்கள் பார்வையை வருமான வரித்துறைக்கு எதிராகத் திருப்புங்கள். பதுக்கப்பட்டிருக்கும் பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்களை மூலதனமாக்கி உங்கள் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் போராட்டத்தை வருமானவரித் துறை ஒழிப்புப் போராட்டத்திலிருந்து தொடங்குங்கள்.

2.6.08

சேணுயர் சிலம்பில்....

செந்தமிழ் நாடாக இருந்த சேர நன்னாடு இடைக்காலத்தில் வல்லரசுச் சோழர்களின் அதிகாரத்தின் எதிர்வினையாகத் தமிழ் மொழியைக் கைவிட்டு, கலப்புத் தமிழாக இருந்ததற்கு எழுத்தச்சன் என்பவர் வகுத்துத் தந்த அகர வரிசையை ஏற்றுக்கொண்டு இன்றைய மலையாள மொழியை உருவாக்கிக் கொண்டது. அந்தப் புதிய மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான போராட்டம் அவை இரண்டும் சந்திக்கும் நில எல்லை நெடுகிலும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்றில், வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்புள்ள இறுதிக் காலத்தில் கொள்ளையையே நோக்கமாகக் கொண்டு இடைவிடாத போர்களை அரசர்கள் என்ற பெயர் தாங்கிய கொள்ளையர்கள் நடத்தியதால் ஒரே மொழி பேசும் மக்கள் பல்வேறு அரசுகளின் எல்லைகளுக்குள் சிதறிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறுதான் தமிழகத்தின் பல பகுதிகள் திருவிதாங்கூர், கொச்சி, ஆந்திரம், கன்னடம் ஆகிய மாநிலங்களில் சிக்கிக் கொண்டன.

இது தமிழ் மொழி பேசுவோர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. மலையாளிகள், தெலுங்கர்களை மட்டும் கொண்ட பகுதிகள் முன்பு பழைய சென்னை மாகாணத்துக்குள் சிக்கிக் கிடந்தன.

விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாகாணங்கள் அமைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களின் ஆதரவைத் திரட்டியது காந்தியின் பேரவைக் கட்சி. அதன் அடையாளமாகத் தன் கட்சிக் கிளைகளுக்கு எதிர்கால மொழிவழி மாகாணங்களின் பெயரை விடுதலைக்கு முன்பே வைத்து விட்டது. அவ்வாறு தெலுங்கர்களின் பகுதிக்கு ஆந்திரப் பைதிர(பிரதேச)ப் பேரவைக் குழு என்றும் தமிழர்களின் பகுதிக்கு தமிழ் நாடு பேரவைக் குழு என்றும் பெயர் கொடுத்திருந்தது.

ஆனால் விடுதலைக்கும் பின்னர் பேரவைக் கட்சி தன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது. அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்கள் ஆந்திர மக்கள். பொட்டி சீறி இராமுலு என்பவர் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டதன் விளைவாக உருவான புரட்சிகரமான மக்கள் எழுச்சிக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அதில் சென்னை மாகாணப் பகுதிகளுடன் ஐதராபாத் போன்ற சமத்தானங்களும் சேர்ந்திருந்தன. தமிழகத்துக்குரிய சித்தூர், புத்தூர், நல்லூர், திருத்தணி, திருப்பதி என்னும் பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழக மக்களிடமிருந்து உருவாகிய எதிர்ப்பைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. ம.பொ.சி. மட்டும் திருப்பதிக்கும் திருத்தணிக்கும் போராடி திருத்தணியை மட்டும் மீட்டார்.

அவ்வாறு வெள்ளையருக்கு முந்திய கொள்ளைப் போர்களின் விளைவாகத் திருவிதாங்கூருக்குள் சிக்கிக் கொண்டவை தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்கள். இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பகுதி தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற மேற்கு வட்டங்களில் வாழ்ந்த மக்கள் மலையாளிகளின் கொடுமைகளினாலும் கிழக்கு வட்டங்களில் வாழ்ந்தவர்கள் அரசுப் பணிகளில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்தப் போராட்டத்தைத் தனித்தனியாகத் தொடங்கி வைத்தனர். இந்தப் போராட்டம் இந்த 6 அல்லது 7 மாவட்டங்களில் மட்டும் கூர்மை அடைவதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு.

திருவிதாங்கூர் சமத்தானத்தை விடுதலைக்கு முன் ஆண்ட மன்னர்களுக்குத் திவானாக இருந்தவர்களில் நடைமுறையில் இறுதியாக இருந்தவர் சி.பி. இராமசாமி ஐயர். (இவருக்குப் பிறகு உன்னித்தான் என்பவர் மிகக் குறுகிய காலம் பதவியில் இருந்தார்.) இவர் தமிழ் நாட்டில் வந்தவாசியைச் சேர்ந்த அத்துவைதப் பார்ப்பனர். அத்துவைதக் கோட்பாட்டின் படியே சாதி வேறுபாடுகளைப் புறக்கணித்துச் செயற்பட்டவர். ஆனால் தமிழர்கள் மேல் பரிவுகொண்டவர். திருவிதாங்கூர் சமத்தானத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த தெற்கு வட்டங்களில் ஆய்வு முன்னோடி என்ற பெயரில் கட்டாய இலவயக் கல்வித் திட்டம், மதுவிலக்கு, கன்னியாகுமரி -திருவனந்தபுரம், நாகர்கோயில் - ஆரல்வாய்மொழி சிமென்றுச் சாலைத் திட்டம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தினார். நாகர்கோயில் நகரமைப்புத் திட்டம் என்ற பெயரில் நாகர்கோயிலை நடுவாக வைத்து இரண்டு சுற்றுச் சாலைகள் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்து நிலம் கையகப்படுத்தி முடித்து வேலை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ″விடுதலை″ வந்தது. பொதுமைத் தோழர்களின் கடுமையான எதிர்ப்பினால் சி.பி. இராமசாமியார் அகற்றப்பட்டார், திட்டம் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்சியில் வருவாய்த் துறையினர் பட்டையம் போட்டு விற்றது போக சுற்றுச் சாலைகளுக்காகக் கையகப்படுத்தியதில் பெரும்பான்மை நிலங்களும் இன்றுவரை புறம்போக்காகத்தான் கிடக்கின்றன. கன்னியாகுமரி -திருவனந்தபுரம், திருநெல்வேலி - திருவனந்தபுரம் போன்ற புறவழிச் சாலைகளுக்கு மிக வசதியாக இந்த நிலங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆட்சியாளர்கள் ஏனோ புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த முனைந்துள்ளனர் என்று தெரிகிறது.

சி.பி. இராமசாமியார் திட்டமிட்ட இன்னொன்று பெருஞ்சாணி அணை. அதுவும் வேலை தொடங்கப்பட்டு அடிப்படை தோண்டிய நிலையில் ″விடுதலை″ பெற்றோம். காட்டு நிலத்தைக் கைப்பற்றிப் பெருந் தோட்டம் போட்டிருந்த ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்காக அணை மேல் நோக்கி நகர்த்தப்பட்டு ஒரு குளமாக முடிந்துள்ளது. முன்பு தோண்டிய அணை அடிப்படையை(வாணத்தை) இப்போது கூட நாம் பார்க்க முடியும்.

இங்கு நாம் கூற வந்தது சி.பி. இராமசாமியாரின் கட்டாய இலவயக் கல்வியைப் பற்றித்தான். 1946 - 47 கல்வியாண்டுத் தொடக்கத்தில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அண்மை இடங்களில் வாழும் ஐந்து அகவை நிரம்பிய குழந்தைகளை உடனடியாகப் பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பெற்றோர்களை வலியுறுத்தினர். சேர்க்காத பெற்றோர்க்குத் தண்டனை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் காலையில் 1, 2 வகுப்புகளுக்கும் மாலையில் 3 - 5 வகுப்புகளுக்கும் என்று மாற்று முறை வகுக்கப்பட்டது. முன் 3 + 2 = 5 மணியாக இருந்த பள்ளி நேரம் 3 + 3 = 6 என்று கூட்டப்பட்டது. கூடுதல் கட்டடங்களைக் கட்டி புதிய ஆசிரியர்களை அமர்த்தியது வரை இந்த நடைமுறை செயல்பட்டது.

ஏழைக் குழந்தைகளுக்கு நண்பகல் தேங்காய்த் துருவல் இட்ட செழுமையான உளுந்தங்கஞ்சி தேங்காய்த் துவையலுடன் வழங்கப்பட்டது. தாய்மொழியில் கல்வி கற்ற தமிழ்ப் பகுதி மக்கள் விரைந்து கல்வியில் சிறந்த மக்களாக உயர்ந்தார்கள். 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது.

திருவிதாங்கூரில் ஆட்சி மொழி மலையாளம். அதனால் புதிதாகப் பயின்று வந்த மாணவர்களுக்குத் திருவிதாங்கூரில் வேலைவாய்ப்பு கிடைக்காது. அடிமனதில் பதுங்கியிருந்த இந்த உள்ளுணர்வுதான் தென் திருவிதாங்கூர் மக்களைத் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற உறுதியான போராட்டத்துக்கு உந்தித் தள்ளிய அடிப்படைக் காரணமாகும்.

இதற்கு மாறாக ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்த இலங்கையிலும் கர்னாடகத்திலும் வாழ்ந்த தமிழர்கள் அப்போது போலவே எப்போதும் தாம் வாழும் இடங்களில் தொடர்ந்தும் அதிகாரிகளாக இருப்போம் என்று மெத்தனமாக இருந்தனர். இலங்கை அரசு நேரடியாகவே ஒடுக்குமுறையில் இறங்கியதாலும் அவர்களுக்கு நல்ல தலைமைகள் அமைந்ததாலும் காலம் கடந்தாவது களத்தில் இறங்கினர். கர்நாடகத்தில் அரசு அடியாட்களை ஏவி விட்டு கண்டு கொள்ளாமல் இருந்தது, தமிழ் மக்களுக்கு வீரார்ப்புள்ள ஒரு தலைமை கூட அமையாதது ஆகிய காரணங்களால் அவர்கள் கன்னடரிடம் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் வளர்ச்சி தடைப்பட்ட நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் படித்த ஒட்டுண்ணி வகுப்புகளாலேயே தொடங்கப்படுகின்றன. அவை மொழி, பண்பாடு என்ற களங்களிலேயே இயங்குகின்றன. நல்ல வேலை கொடுத்து விட்டால் இந்த வகுப்பு யார் எவர் என்று பார்க்காமல் அவர்கள் காலில் எந்தக் தயக்கமும் இன்றி விழுந்துவிடும்.

நிலம் அதன் வளம், அதில் உழைக்கும் மக்கள் அவர்களது உழைப்பு வளம், அவர்களால் உருவாக்கப்படும் செல்வப் பெருக்கம், அந்தச் செல்வப்பெருக்கத்தை மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து கொடுத்தல் என்று பொருளியல் உரிமைகளுக்கான போராட்டம்தான் நிலையான பயனை மக்களுக்குத் தரும்.

பொருளியல் உரிமைகள் என்றவுடன் நம் பொதுமைத் தோழர்கள் பாட்டாளியம் அதாவது கூலி உயர்வு பற்றி மட்டும் பேசுவார்கள். மாட்டுக்குத் தீனி போட்டு வளர்த்துச் செழுமையாக்கி பாலைக் கறந்து குடிப்பதற்குப் பகரம் பால் மடியை அறுத்துச் சுவைப்பதில் குறியாக இருப்பவர்கள் இவர்கள்.

இந்தப் பின்னணியில்தான் கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டமும் பெரியாற்று அணையும் ஏலம், மிளகு, தேயிலை, காப்பி, கிராம்பு, இலவங்கம் என்று எண்ணற்ற விலை மதிப்பு மிக்க பண்டங்கள் விளையும் தோட்டங்களும் அமைந்திருக்கும் பகுதியாகிய தமிழர்கள் மிகுந்து வாழும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களை அடக்கிய இடுக்கி மாவட்டத்திலிருந்து உரிமைக்குரல் உரிய வலிமையோடு எழும்பவில்லை. இங்கு உழைப்பவர்கள் அனைவரும் உள்ளூர்த் தமிழர்கள். நில உடைமையாளர்களில் கம்பம் போன்ற அண்மையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தொலைவிலிருக்கும் பெருந்தோட்ட முதலாளிகளும் பெரும்பான்மை. இவ்விரு சாரருக்கும் இம்மாவட்டம் தமிழகத்தில் சேர வேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு பொறியாளனாக, பெரியாற்று அணையில் 1980 இல் ″பழுது″ ″பார்க்கும்″ பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்து 6 மாதங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் 172 அடி உயரமுள்ள அணையில் அடி முனையில் சிறிது ஈரமும் கொஞ்சம் பாசியும் மட்டும் படிந்திருந்தது, அந்த அணை நாட்டிலுள்ள வேறெந்த அணையையும் விட உறுதியானது என்ற உண்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க கேரள - தமிழக ஆட்சியாளர்கள் முறையே தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும் சொந்த ஆதாயங்களுக்காகவும் தமிழக மக்களின் வேளாண்மையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல தமிழக - கேரள எல்லை நெடுகிலும் மலை முகட்டுக்கு மேற்கே சிறு சிறு அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பித் தமிழகத்துக்குப் பாய்ச்சி வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் தமிழகச் சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் இடைக்கிழார்களும்(சமீன்தாரகளும்). எனவே அந்த அணைப் பகுதி ஒவ்வொன்றும் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆனால் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு கேரள ஆட்சியாளர்கள் பழைய எல்லைக் கற்களைப் பிடுங்கி இந்த அணைகளுக்குக் கிழக்கே நட்டு வைத்திருப்பதுடன் அணைகளை உடைத்துத் தண்ணீரை மேலைக் கடலுக்குள் கொண்டு விடுகின்றனர். அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் ச.ம.உ.., பா.உ.., கட்சிக்காரர்கள், பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் குறிப்பாகத் ″தமிழ்த் தேசிய″த் தலைவர்களிடமெல்லாம் முறையிட்டுப் பார்த்துவிட்டனர். காவிரி, பெரியாற்று அணைச் சிக்கல்களில் போல் குரல் எழுப்பிவிட்டு கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு அவர்கள் அமைந்துவிட்டனர். இவ்வாறு செல்வதறியாமல் திகைத்து நிற்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற அன்று பாண்டிய மன்னனின் கொடும்பிடிக்குள் சிக்கிக் கிடந்த மக்களை மீட்க சிலம்பைக் கையிலேந்திய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் நெடுவேள் குன்றத்தில் எடுப்பித்த கோயிலுக்கு அவள் திருமுன் எங்கள் மனக்குறைகளை எடுத்துரைக்கச் சென்றிருந்தோம்.

பாண்டியனாகிய கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள் போல் தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லான் நின்னாட் டகவையின் அடைந்தனள் நங்கையென்று(காட்சிக் காதை 87 – 90) சாத்தனார் செங்குட்டுவனை நோக்கி, தவறிழைத்த பாண்டியனைத் தண்டிக்குமாறு வேண்டிய போது சிக்கலைத் திசை திருப்பி கண்ணகிக்குக் கோயில் எடுத்தது போல் இன்றி மதுரையில் செய்தது போல் எமக்குத் தலைமை தாங்கி இழந்தவற்றை மீட்டுத்தர வழிகாட்டுவாய் என்று கேட்கச் சென்றிருந்தோம்.

இந்த ஆண்டு சித்திரை வெள்ளுவா அன்று (20-04-2008) காலையில் கம்பத்திலிருந்து குமுளி வழியாக மங்கல மடந்தைக் கோட்டத்துக்குச் சென்று அங்கிருந்து மறுபுறம் தமிழக எல்லை வழியாகக் கம்பத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு சென்ற பட்டறிவு இருப்பதாகவும் கூறி நண்பர் தமிழினி வசந்தகுமார் 18-04-2008 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தொலை பேசினார். கண்ணகிக் கோட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் என்றால் இதுவரை நேரில் சந்தித்திராத வகுவைப் பார்த்துப் பேச முடியும் என்பது மறுபுறம். அத்துடன் தமிழினியுடன் தொடர்புடைய இலக்கியவாணர்கள் பத்துப் பேருக்கு மேல் வருகிறார்கள் என்பது என் ஆர்வத்தை மேலும் கூட்டியது. நண்பர் எட்வின் பிரகாசுடன் அவர் குறிப்பிட்டவாறு காலை 5.00 மணிக்குக் கம்பத்தில் இருப்பேன் என்று உறுதி கூறிவிட்டு எட்வினுக்கும் கூறினேன்.

நேரடியாக கம்பம் செல்லும் பேருந்தில் இடம் கிடைக்குமா, எத்தனை மணிக்குப் புறப்படும் என்ற கேள்விகள் எழுந்ததால் 19-04-2008 மாலை 6.45க்குப் புறப்பட்ட சேலம் பேருந்தில் ஏறினோம். இரவு 12.15க்கு திருமங்கலம் வந்தோம். அங்கிருந்து இரவுப் பணி பேருந்தில் ஏறி ஆரப்பாளையம் சென்று போடி வண்டியில் ஏறி அது புறப்பட 02-00 மணி ஆனது. இந்த ஒன்றே முக்கால் மணி நேர இழப்பும் இரவுப் பேருந்தில் இரட்டைக் கட்டணம் தண்டி நம்மிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் பண வெறியால் ஏற்பட்டதுதான். தடமில்லா(ஓம்னி)ப் பேருந்துகள் சுற்றுச் சாலையில் செல்லாமல் நகருக்குள் செல்லும் போது ஏற்படாத இரவு சாலை நெருக்கடி அரசுப் பேருந்துகளால் மட்டும் ஏற்படுமா? சுற்றுச் சாலைச் சுங்கம் தடமில்லாப் பேருந்துகளுக்குக் கிடையாதா? மக்களின் காலத்தின் மதிப்பை மதியாத அரசுப் பொறி என்று ஒழியும்?

காலை 5.00 மணிக்குத் திட்டமிட்டபடி கம்பம் சென்று சேர்ந்துவிட்டோம். காலைக்கடன்களை முடித்த பின் மொத்தம் பதின்மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு 9.00 மணி அளவில் குமுளியில் சிற்றுண்டியை முடித்துவிட்டோம். மலையுந்துகள்(சீப்புகள்) கோயிலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றன. 12 பேர் கட்டாயம் ஏற வேண்டும் என்று அங்கு ஒரு குழு நின்று கண்காணித்தது. ஒவ்வொரு நடைக்கும் அக்குழுவுக்குத் தரகு உண்டாம். ஒரே வண்டியில் செல்ல முடியாது என்பதுடன் கூட்டமும் நெருக்கியடித்தது. எப்படியோ வெவ்வேறு வண்டிகளில் சென்று சேர்ந்தோம். கல் பாவிய தடம். எதையும் பார்க்க முடியாத பெரும் புழுதிச் செம்மல். உடம்பு, உடைகள், வைத்திருந்த பொருட்கள் என எல்லாமே அடையாளம் தெரியாமல் புழுதி நிறம் கொண்டன. கோயில் சென்றதும் இறங்கி உடலையும் உடைகளையும் உதறியவுடன் தூசி அகன்றது. மக்களின் நீண்ட வரிசை கோயில்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கோயிலின் சிதைந்து கிடந்த வளாகத்தினுள் நுழைந்தோம்.

இரண்டு கோயில்கள் இருந்தன. ஒரு மூலையில் நாகர் பீடம் ஒன்று ஏறக்குறைய 5′×5′×5′ அளவுள்ள கோயிலுக்குள் இருந்தது. பிற இரண்டு கோயில்களினுள்ளும் காத்திருந்து நுழைந்து பார்க்க நேரம் போதாது என்பதால் பார்க்கவில்லை .

கல்லால் ஆன சிதைந்த நிலையிலிருந்த சுற்றுச் சுவரில் ஒரு கல்வெட்டு. 12ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பொறித்த கல்வெட்டு என்று கூறினார்கள். கோயில்களில் ஒன்று இராசராசன் கட்டிய சிவன் கோயில் என்றும் இன்னொன்று கண்ணகி கோயில் என்றும் ஒருவர் இல்லை என்றும் கூறினர். தினமணி(21-04-08) இதழ் வளாகத்தினுள் இருக்கும் கேரள மாநிலப் பகுதியில் இருப்பது துர்க்கைக் கோயில் என்றும் தமிழ்நாட்டுப் பகுதிக்குள் இருப்பது கண்ணகி கோயில் என்றும் கூறுகிறது.

தமிழன்பர் ஒருவர் இமயமலையில் உறுதியான கல்லே கிடையாது என்றும் தான் நேபாளம் சென்றிருப்பதாகவும் அங்கே சுக்காம்பாறை கற்கள்தாம் இருப்பதாகவும் அடித்துக் கூறிக் கொண்டிருந்தார். எனவே சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கொண்டு வந்த கல் சிலை செய்யப் பயன்பட்டிருக்க முடியாது, வெறும் புடைப்புச் சிற்பம் செய்யத்தான் பயன்பட்டிருக்கும். எனவே இங்கு அவன் நிறுவிய சிலை சிதைந்து போயிருக்கும் என்று முடிவு கூறினார். கடவுள் எழுதவோர் கல் என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டதற்கு இதுதான் பொருள் என்றும் கூறினார்.

ஆனால் அவர் கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உலகிலுள்ள பாறைகளை உருகு பாறைகள், உருமாற்றப் பாறைகள், அடுக்குப் பாறைகள் என்று இன்றைய நூலோர் வகைப்படுத்தியிருந்தாலும் எவ்விடத்திலும் தூய்மையான ஒரே வகைப்பாட்டினுள் எந்தப் பகுதியின் பாறைகளும் வரமுடியாது. புவியின் கடந்த 450 கோடி ஆண்டுகள் வாழ்வில் நிகழ்ந்த இடையறா புவியியங்கியல் மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் வான் வெளியின் தாக்கங்கள் ஆகியவற்றின் விளைவாக உருகுபாறை உருமாற்றப்பாறையாகி இருக்க முடியும். உருமாற்றப் பாறையிலிருந்து அடுக்குப் பாறை உருவாகியிருக்கலாம். அத்துடன் இமயமலையின் உருவாக்கம் ஏறக்குறைய 8½ கோடி ஆண்டுகளுக்குள் என்று புவியியங்கியல் இன்று கணித்துக் கூறினாலும் அதிலுள்ள பாறைகள் அதற்கு எத்தனை கோடி ஆண்டுகள் முந்தியவை என்று வரையறுத்துக் கூறும் அளவுக்கு அதன் பரப்பு சிறியதல்ல. எனவே காலநிலையை எதிர்த்து நிற்கும் கல்லே இமயமலையில் கிடையாது என்று கூறுவது தீர ஆராயாத ஒரு அரைகுறை முடிவு.

கருங்கல்லுக்குப் பெயர் பெற்றதாகக் கூறப்படும் தமிழகத்தில் மாமல்லபுரம் கற்கோயில்களும், சென்னை உயர் நீதி மன்றக் கட்டடமும் இன்னும் எத்தனையோ காலத்தை வென்று நிற்கும் இயற்றங்களும் உள்ளன. ஆனால் நேற்று கட்டப்பட்ட குமரி முனை விவேகானந்தர் மண்டபத்தின் வெளிப்புறத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் பரவலாக கடற்காற்றால் அரிப்பேற்பட்டுள்ளது. ஏன், புகழ் பெற்ற கணபதிச் சிற்பியால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வடிக்கப் பயன்பட்டிருக்கும் கல்லே தரமானதாக இல்லை. அண்டையிலுள்ள மைலாடியில் உலகின் சிறந்த கருங்கல் இருந்தும் அம்பாசமுத்திரத்தை ஏன் தேடிச் சென்றனர் என்று தெரியவில்லை. குமரி அம்மன் கோயிலின் கிழக்கு வாயிலை எப்போதுமே அடைத்து வைத்திருப்பதற்கு அம்மன் சிலையிலுள்ள மூக்குத்தியிலுள்ள வைரத்தின் ஒளிர்வால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை திரும்பி பாறைகளில் மோதுவதைத் தவிர்க்க என்று காரணம் சொல்லப்பட்டாலும் கடற்காற்றைத் தாங்கும் தன்மையுள்ள கல்லால் சிலை செய்யப்படாததுதான் உண்மையான காரணமா என்றொரு ஐயமும் எமக்கு உண்டு. ஆனால் கண்ணகிக் கோட்டம் என்று அடையாளம் காணப்பட்ட கட்டுமானத்தில் கல் தேர்வு மிகச் சிறப்பாக உள்ளது.

கண்ணிகியின் சிலை புடைப்புச் சிற்பம் இல்லை முழுமையான சிலையே என்பதற்கு,

மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி....

என வரும் சிலப்பதிகார வரிகள் (நடுகற்காதை: 224 - 230) தெளிவான சான்றாகும்.

கோயில்களின் பக்கத்திலே நின்ற போது அவை அமைந்திருப்பது அந்தப் பகுதியிலுள்ள மலை உச்சிகளில் மிக உயர்ந்தது என்பது புரிந்தது. ஆனால் சிலப்பதிகாரம், பத்தினிக் கோட்டம் அமைந்திருந்ததை விட உயர்ந்த ஒரு மலை உச்சி இருந்ததான குறிப்பைத் தருகிறது.

வரந்தரு காதையில் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் தெய்வமேறி மாடல மறையோனை நோக்கிக் கூறிய,

மங்கல மடந்தைக் கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்
பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய
ஆணிகயம் பலவுள ...

இவ்வரிகள்(53 - 56) கண்ணகிக் கோட்டம் மலை உச்சியில் இருக்கவில்லை அதாவது கண்ணகி கோட்டம் இருந்த இடத்தை வேறாகவும் மிக உயர்ந்த மலைஉச்சியாகிய சேணுயர் சிலம்பை வேறாகவும் கூறுகிறது என்ற குறிப்பைத் தருகிறது.

கோயில்களை மலை உச்சிகளில் கட்டுவது ஓர் அரசியல் நடவடிக்கை. குறிஞ்சித் தெய்வம் முருகன். ஆதலால் மலை உச்சிகளில் முருகன் கோயில்கள் இருப்பது இயற்கை. ஆனால் மலை உச்சிகளில் உள்ள பெருமாள் கோயில்கள் திட்டவட்டமான அரசியல் நடவடிக்கையே. அதுபோல் முகம்மதியப் பெருமக்களின் சமாதிகளையும் சிலுவைகளையும் மலை உச்சிகளில் நிறுவுவதும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் இராசராச சோழன் நிறுவியதாகக் கூறப்படும் இன்றைய பத்தினிக் கோட்டத்தையும் அணுகத் தோன்றுகிறது.

திரும்பி கீழே இறங்கும் போது எதிர்ப்பட்ட ஒருவரிடம் இங்கு வேங்கை மரம் உள்ளதா என்று கேட்டபோது இன்னும் தாழ்ந்த மட்டத்தில் தான் உள்ளது என்று கூறினார். அவர் மலையாளி என்பது தெரிந்தது. அவரிடம் கண்ணகி வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்திருந்த வரலாற்றைக் கூறிய போது இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு அப்பால் சற்றுப் பள்ளமான இடத்தில் ஒரு காட்டுப் பகுதி இருக்கிறது, அங்கு வேங்கை மரங்கள் இருக்கலாம், அங்கு கட்டடம் இடிந்த கற்கள் கிடக்கின்றன என்று கூறினார். எனவே இப்போதைய கோயிலுக்கு அண்மையில் உள்ள காடடர்ந்த பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது தேவை. அடுத்த ஆண்டு வரும்போது அதற்குரிய ஆயத்தங்களுடன் வரவேண்டும் என்று வகு அவர்களிடம் வேண்டியுள்ளேன்.

திரும்பும் போது குமுளி செல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இறங்க வேண்டும் என்பது முதல்முறை என்னை இது தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் போதே வகு கூறியது. உடன்வந்தவர்கள் என்னை மலையுந்தில் குமுளி வழியில் விடுத்து விடலாம் என்று கூறினர். வகுவுக்கு அதில் உடன்பாடில்லை என்பதைத் தெரிந்ததால் மட்டுமல்ல, அந்த அறைகூவலான வழியில் நடந்து பார்த்து விட வேண்டும் என்ற ஒரு விருப்பமும் என்னுள் இருந்ததால் ஒரு மலை உச்சியை ஏறி இறங்கும் போது குத்தான வழியைத் தவிர்த்து சிறிது மென்சாய்வான வழியைக் கண்டு நடந்தோம். அது போல் மூன்று மலைகளை ஏறி நான்காவது மலையின் முன் மார்புப் பகுதியில் ஒரு சாய்வான இடத்தில் தாண்டி அங்கிருந்த மலை மாளிகைப் பகுதியிலிருந்து பார்த்த போது ஓர் அரிய காட்சியைக் கண்டோம். நான்கு மலை முகடுகள் ஒன்று தாண்டி ஒன்றாக அதே நேரத்தில் அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது தொடர்ச்சியான ஒரே நீண்ட மலைபோல் சிறு வளைவுகளுடன் தோன்றியது. அதில் முதல் வளைவுக்கும் இரண்டாம் வளைவுக்கும் இடைப்பட்ட பகுதி யானையின் தலையும் பிடரியும் போன்ற தோற்றம் தந்தது. அதைத்தான், பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை என்று அடிகள் சொல்லோவியமாக்கியுள்ளார். இந்தப் பிடர்த்தலைத் தோற்றத்தை நாங்கள் நிலத்தில் இறங்கிப் பேருந்திலிருந்து மலையைப் பார்த்த போதும் காண முடிந்தது. இங்கு காணப்படும் ஐந்து மலை உச்சிகளையும் அஞ்சுமலை என்று இப்பகுதியினர் வழங்குகின்றனர் என்ற செய்தியையும் அறிந்துகொள்ள முடிந்தது.

காட்சிக் காதையில் இந்த மலை முகடுகளை வைத்துத்தான் போலும் நூற்று நாற்பது யோசனை பரப்புள்ள யானை மீது இந்திரன் பெயர்வது போன்ற பெரியாற்றின் கரை என்று (வரிகள் 10 - 30) விளக்குகிறார் அடிகள்.

திரும்பும் போது எங்கள் கருத்தைக் கவர்ந்தது மலை மீது மரங்கள் அருகிக் காணப்பட்டதும் அதே நேரத்தில் மரமாக வளரத் தக்க பல மரங்கள் மிஞ்சிப் போனால் 5 அடிகள் உயரத்துக்குள் குறுகிப் போய் ஆங்காங்கே சிறு சிறு தொகுப்பாகக் காணப்பட்டதும் எஞ்சிய இடங்களில் உள்ள புல்வெளியில் அண்மையில் பெய்துள்ள மழையில் மண் கரைந்து புல்லுடன் பாறையிலிருந்து பெயர்ந்து உதிரும் நிலையில் இருந்ததும்தான். இதைப்பற்றி சிந்தித்த போது நமக்குக் கிடைத்த விடை அவ்வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் யானை, காட்டெருமை மற்றும் தழையுண்ணிகளின் பெருக்கத்துக்கு ஈடு செய்யும் வகையில் அங்கு தேவையான பரப்பிலும் அடர்த்தியிலும் காடுகள் இல்லை என்பதுடன் நிலைத்திணைகளையும் தழையுண்ணிகளையும் சமன் செய்யும் எண்ணிக்கையில் ஊனுண்ணிகளான கொல்விலங்குகளும் இல்லை என்பதுமாகும்.

முன்பு கேரள மாநிலத்தில் ஓரளவு நிலவுடைமை வைத்திருந்த அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளை, குறிப்பாக சுமை தூக்குவதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இன்று சரக்கூர்திகள் அந்தத் தேவையை நிறைவு செய்துவிடுவதால் இப்போது மலைகளிலிருந்து யானைகளை ″அறுவடை″ செய்வதில்லை. முன்பு அறுவடை செய்யப்பட்ட யானைகளின் தீவனத்தை மனிதர்கள் திரட்டிக் கொடுத்ததால் காட்டு யானைகள் அழிக்கும் அளவுக்கு தழைவளம் அழியவில்லை. இன்று தானாகக் காட்டினுள் மேயும் யானைகளால் அழிவு பெருமளவில் இருக்கும். யானையின் இந்த இயல்பை விளக்கும்,

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்.....

என்ற பிசிராந்தையாரின் புறனானூற்று 184ஆம் பாடல் கூற்று சூழியல் நோக்கிலும் அரசியல் நோக்கிலும் தமிழகம் எண்ணிப் பெருமைகொள்ளத்தக்கது.

கண்ணகி கோயில் பகுதியில் புலிகள் காப்பகம் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இயற்கைச் சமநிலை குலைந்துள்ளது தெரிகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து காட்டுப் பரப்புக்கும் தழையுண்ணிகளுக்கும் ஊனுண்ணிகளுக்குமான விகித முறையை அறிவியல் அணுகலில் நிறுவி அதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது மாநில - நடுவரசுகளின் சூழியல், கானியல் துறைகளின் பொறுப்பு.

தமிழக எல்லையைப் பொறுத்தவரை இந்த மலைப் பகுதியில் மட்டுமல்ல, பெரும்பாலான பிற இடங்களிலும் கான் பகுதியில் பெருமளவு நீலகிரி மரங்களே உள்ளன. அவை நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி அதனை எண்ணையாக மாற்றி வானில் விடுபவை. அந்த எண்ணெய் ஆவி மீண்டும் மழையாக நிலத்தில் இறங்குவதில்லை. இது தமிழக நீர்வளத்தைப் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நீலகிரி மரங்களை அகற்றிவிட்டு நமக்குரிய காட்டு மரங்களை உடனடியாக வளர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

புவி வெப்பமாதல் என்ற பெயரில் வல்லரசிய தொழில் நுட்பங்களை சந்தைப் படுத்துவதற்காக இன்று உலகளாவிய அளவில் பெரும் கூக்குரல் எழுப்பும் சூழியல் ″சிங்கங்களு″க்கு புவி வெப்பமடைவதற்கு இதுவும் ஒரு முகாமையான காரணம் என்பது தெரியுமா?

பொதுப் பணித்துறைப் பொறியாளனாக குமரி மாவட்டம் முதல் வேலூர் மாவட்டம் வரை காடுகளுக்குள் அலைந்த காலத்தில் அங்கு நான் உணர்ந்து மகிழ்ந்த குளுமையை இந்தச் சேணுயர் சிலம்பு சென்று திரும்புவது வரை ஓரிடத்தில் கூட உணரவில்லை.

குருதி அடைப்பால் சிறிது தொலைவு நடந்தாலும் நெஞ்சுவலியுடன் வாழ்ந்துவரும் நான், ஒரு கிலோ மீற்றர் கூடத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நடப்பதைத் தவிர்த்து வந்திருக்கும் நான் ஒரே மூச்சில் ஏறக்குறைய 8 கிலோ மீற்றர் தொலைவுக்கு குத்துச் சரிவுடனும் நல்ல தடம் இல்லாமலுமிருந்த மலைச்சரிவில் இறங்கி பளியங்குடியில் சமநிலத்துக்கு வருவதுவரை தொடர்ந்து ஊக்கிய திரு. வசந்தகுமார் அவர்களுக்கும் மகன் போல் தோள் தந்த தோழர் எட்வின் பிரகாசுக்கும் துணையாக வந்த சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.

சமநிலத்துக்கு வந்து கால் ஊன்றி நின்றதும் என் உடல் சுமையைத் தாக்குப் பிடித்து நின்று என்னைக் காத்த என் கால் செருப்புகளைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற உணர்வு எற்பட்டது.

எமது மனதை மிகவும் வருத்தியது தமிழ் பேசிய மக்களைக் குறிவைத்து குடிநீர் கொண்டுசென்ற ஞெகிழிக் குப்பிகளை சூழல்கேடு என்ற காரணம் சொல்லி நீருடன் பறித்து எறிந்த, குமுளி வழியில் கீழிறங்கிய தமிழ் மக்களை மலையுந்தில் ஏறவிடாமல் தடுத்து மலையாளிகளை மட்டும் ஏற்றிவிட்ட, தமிழகப் பகுதியில் இருக்கும் கோயிலில் கட்டியிருந்த தோரணங்களையும் பெயர்ப் பலகைகளையும் மட்டும் அறுத்தெறிந்த கேரளக் காவல்துறையினருடையவும் அரசுடையவும் காட்டுவிலங்காண்டித்தனமும் தமிழக ஆட்சியாளர்களின் நாட்டை விற்றுச் சுருட்டும் இயல்பை அறிந்திருந்தும் அவர்கள் நம் சிக்கல்களைத் தீர்த்துவைக்கட்டும் என்று நாம் காத்திருப்பதும்தான்.

(இக்கட்டுரை தமிழினி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

1.6.08

உலகத்தின் கூரையிலே விரிசல்

அண்மைக் காலத்தில் திபேத் மீண்டும் ஒரு முறை உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. 1959இல் தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்ததும் அவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் வழங்கியதும். ″இந்தி - சீனி பாய் பாய்″ என்று கட்டி அணைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நட்பு வருகை தந்த சீனத் தலைவர்கள் இந்தியா மீது சீனத்தின் ″மக்கள் விடுதலைப் படை″யை ஏவியதும், அதனால் இந்தியப் பொதுமைக் கட்சியில் ஒரு சாரார் சீனத்துக்குச் சார்பாகக் குரலெழுப்பியதும் அதனால் கட்சிக்குள் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்ததும் இறுதியில் சீனச் சார்பாளர் பிரிந்து இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியை அமைத்ததும் போர் முடிவில் சீனம் இந்திய எல்லைக்குள் புகுந்து கணிசமான பரப்பைக் கைப்பற்றித் தன் வசம் கொண்டு சென்றதும் பழங்கதைகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை திபேத் ஒரு தனிநாடு, அதைக் கைப்பற்றியது இந்தியாவும் சீனமும் வகுத்துக் கொண்ட பஞ்ச சீலக் கொள்கைக்கு முரண்பட்டது என்பது நிலை. சீனமோ வரலாற்றில் திபேத் சீனத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தலை லாமா சீனக் குடிமகன். எனவே எங்கள் நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல் தலைவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் கொடுத்தது எங்கள் உள்நாட்டுச் சிக்கல்களில் தலையிடுவதாகும் என்று வாதிட்டது. தலை லாமா தொடர்ந்து இந்தியாவிலேயே தர்மசாலா என்ற இடத்தில் ஒரு நாடு கடந்த அரசை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வுகளில் உள்ள வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மனிதன் வாழும் பீட நிலங்களில் மிகுந்த உயரத்தில் உள்ளது திபேத். அதன் சராசரி எழுமம் 4900 மீற்றர்கள் - 16,000 அடி. எனவே அதனை உலகத்தின் கூரை என்று அழைக்கின்றனர். இதனை நடு ஆசியாவின் ஒரு பகுதி என்று சிலரும் தெற்காசியப் பகுதி என்று இன்னொரு சாரரும் கூறுகின்றனர்.

திபேத்தில் வழங்கும் ஒரு பழங்கதை, கடல் மேலெழும்பி வந்துகொண்டிருந்ததாகவும் அப்போது கடவுள் வங்கத்தில் உடைப்பை உண்டாக்கி நீரை வடியவிட்டதுடன் நாகரிகம் மிக்க மக்களை விட்டு குரங்கு மனித நிலையிலிருந்த தங்களுக்கு நாகரிகம் கற்பித்ததாகவும் கூறுகிறது. இது இந்திய நிலத்துண்டு தெற்கிலிருந்து ஆசியப் பகுதி நோக்கி வந்து அதனுடன் மோதி இமயமலையை உருவாக்கிய புவி இயங்கியல் நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. இவர்கள் கூறும் கடல் டெத்தீசு கடல் என்று புவி இயங்கியலாளர்கள் குறிப்பிடும் கடலாகலாம். வங்காளத்தில் உடைப்பெடுத்துச் சென்ற இடமே இன்றைய கங்கைக் கழிமுகமாக உருவாகி இருக்க வேண்டும்.

இந்தப் புவி இயங்கியல் நிகழ்ச்சி நடந்தது ஏறக்குறைய 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நூல் கூறுகிறது.

இந்த நிகழ்வைத் திபேத்திய மக்கள் கண்டிருப்பதால் 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகில் நாகரிகம் உள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ள முடியுமா?

திபேத்தியப் பழங்கதை பற்றிய செய்தி திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதியுள்ள குமரி நில நீட்சி என்ற நூலில் உள்ளது.
திபேத்தை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை அரசர்கள் ஆண்டுள்ளனர். சில வேளைகளில், அவர்களின் ஆட்சி தெற்கே வங்காளத்திலிருந்து வடக்கே மங்கோலியா வரை பரந்திருக்கிறது. இப்பகுதிகளில் வலிமையான அரசர்கள் இன்றி வெறும் குறுநில மன்னர்கள் ஆண்ட காலங்களில் இவை நிகழ்ந்திருக்கலாம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் பேரரசுகள் உருவாவதும் அவை அழிந்து குறுநில மன்னர்களும் படைமானியத் தலைவர்களும் செல்வாக்குப் பெறுவதும் மாறி மாறி நிகழ்ந்துள்ளதைக் காண முடியும்.

இதற்குத் தலைமாறாக, சீனத்தில் வலிமையான அரசுகள் உருவான போது திபேத் அவர்களுக்கு அடங்கிய பகுதியாக மாறியதும் உண்டு. இவ்வாறு சீனத்தினுள் ஏற்பட்ட அரசியல் சூறாவளிகளில் திபேத்தும் அலைக்கழிந்து வந்தது. சீனத்திலும் திபேத்திலும் வரலாற்றுக் காலத்தில் புத்த சமயத்தில் பிளவுகளும் பூசல்களும் தொடர்ந்து இடம் பெற்றன. அவற்றின் விளைவுகள் திபேத் அரசியலிலும் ஏற்பட்டன.

16 ஆம் நூற்றாண்டின் மங்கோலியர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு புத்த சமயப் பிரிவின் தலைமைக் குருவான லாமா சானம் கியாட்சோ என்பவனை மங்கோலியனான அல்டான் கான் என்பவன் வரவழைத்து அவனுக்கு தலை லாமா என்ற பட்டத்தை வழங்கினான். இவன் தலை லாமாக்களில் மூன்றாமவனாவான். தலை லாமா என்பவர் புத்தர்களில் ஒருவரான அவலோகிதேசுவரரின்[1] தோற்றரவாக(அவதாரமாக)க் கருதப்படுகிறவர். அவரை சமயத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் சீன அரசு பயன்படுத்தியது.

1903 இல் பிரிட்டனின் படைத் தலைவன் எங்கசுப்பண்டு என்பவன் ஒரு படையுடன் வந்து திபேத்தியப் படைத் தலைவனுக்கு ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஏறக்குறைய 1300 திபேத்திய வீரர்களைக் கொன்று குவித்தான். கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்சாந்தர் இந்தியாவிலும் பின்னர் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்கள் உலக முழுவதும நடத்திய அதே காட்டு விலங்காண்டித்தனத்தைத் திபேத்திலும் செய்தனர். திபேத்தியர்களோடு ஒரு தரப்பான ஓர் ஒப்பந்தத்தை ஆங்கிலரே வகுத்துக் கொண்டனர். திபேத் மக்கள் வாழ்ந்த பகுதிகளை இந்தியாவுக்குள்ளும் இருக்குமாறு மக்மோகன் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டனர். ஏற்கெனவே திபேத் மக்கள் தலை லாமாவின் கட்டுப்பாட்டிலிருந்த லாசாவைத் தலை நகராகக் கொண்டிருந்த பகுதிகள் நீங்கலாக சீனாவின் வேறு சில மாகாணங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர்.

உலகில் பெரும்பாலான மொழித் தேசியங்களும் ஆட்சியாளர்களின் கொள்ளைப் போர் வெறியினால் இவ்வாறு சிதைந்து கிடக்கின்றன. ஐரோப்பாவில் செருமானியர்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் ஒரே அரசின் கீழ்வர முடிந்தது. ஆனால் அந்த ஒருங்கிணைவுக்கு அவர்களின் தலைவர்கள் கையாண்ட உத்திகளின் விளைவாக அவர்கள் இரு உலகப் போர்களை உருவாக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் மா சே துங் தலைமையில் நடைபெற்ற சீனப் புரட்சிக்குப் பின் 1951 இல் சீன மக்கள் விடுதலைப் படை திபேத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதற்கு தலை லாமா எந்தத் தடையும் சொல்லவில்லை. உள்ளூர் மேற்குடியினர் வரவேற்றனர். இது தலை லாமாவுக்கும் அவர்களுக்கும் இருந்த முரண்பாடுகளின் விளைவு. திபேத் அரசுக்கும் சீன நடுவரசுக்கும் உள்ள உடன்பாட்டின்படி தலை லாமாவின் கட்டுப்பாட்டில் இருந்த, லாசாவைத் தலைநகராகக் கொண்ட நிலப்பகுதிக்குப் பெருமளவு தன்னாட்சி இருக்கும் என்று வரையறுக்கப்பட்டது.

1956இல் சீன அரசு மேற்குடியினரிடத்திலும் புத்த மடங்களிலும் இருந்த நிலங்களைப் பிடுங்கி அவற்றில் வாரத்துக்குப் பயிரிட்ட உழவர்களுக்குப் பகிர்ந்தளித்தது. அதற்கு எதிர்ப்பு முதலில் திபேத்துக்கு வெளியிலிருந்த திபேத்திய மேற்குடியினரிடத்திலிருந்தும் மடங்களிலுமிருந்தும் தொடங்கி லாசாவுக்குப் பரவியது. அதற்குப் பின்புலமாக அமெரிக்க நடுவண் உளவு நிறுவனம் (சி.ஐ.ஏ.) செயல்பட்டது. அந்த எதிர்ப்புகளை 1959இல் சீன அரசு கடுமையாக ஒடுக்கியது. பல்லாயிரக்கணக்கான திபேத்தியர்கள் கொலைப்பட்டனர். தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்தார். திபேத்திலும் சீனாவிலும் உள்ள திபேத்தியர்கள் சீன அரசை எதிர்த்து நடத்திய வன்முறை போராட்டங்கள் இடைமுறிந்து போகாமல் உதவி வந்த ந.உ. நி. 1972இல் அதைத் திடீரென்று நிறுத்தியது. அதற்குக் காரணம் வாட்டர் கேட் ஊழல் புகழ் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத் தலைவர் மா சே துங்குடன் உடன்பாடு கொண்டதுதான்.

இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் திபேத்தியர்கள் தோல்வியடைந்த தங்கள் 1959 போராட்டத்தின் நினைவு நாளைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச்சு 10 அன்று திபேத்தில் புத்தத் துறவிகள் பட்டினிப் போராட்டங்கள், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். சீனப் படை மடங்களைச் சூழ்ந்து கொண்டு போராட்டங்களை ஒடுக்கியது.

இது தலை நகர் லாசாவிலும் வன்முறை எதிர்ப்புகளை உருவாக்கியது. சந்தைகள் கொளுத்தப்பட்டன. அரசு அலுவலகங்களும் தீயணைப்பு ஊர்திகளும் அழிக்கப்பட்டன, மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. சீனர்களின் கடைகளும் ஊர்திகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் 100 பேருக்கு மேல் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

திபேத்துக்கு முழு விடுதலை வேண்டுமென்ற வேண்டுகைக்குத் தலைமை தாங்குபவராகத் தோற்றமளித்த தலை லாமா 2005 இல், அவ்வேண்டுகையைக் கைவிட்டால், பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாக சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவோ அழைத்தபோது தாங்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் பண்பாடு, சமயம் ஆகியவற்றில் தங்களுக்கு முழுத் தன்னாட்சி வேண்டுமென்றும் சொன்னார். தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றை இது நமக்கு நினைவூட்டுகிறது.

2007 சனவரியில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் திபேத்தியர்கள் பண்டை வரலாற்று நினைவிலேயே மூழ்கி இருக்காமல் திபேத் சீனத்தின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்றும் அதையே சொல்லி வருகிறார். ஆனால் நாடுகடந்த அரசில் அவரோடு இடம் பெறும் பெரும்பாலான பிறரும் குறிப்பாக இளைஞர்களும் திபேத்திலும் (இதனை திபேத்திய தன்னாட்சிப் பகுதி என்று குறிப்பிடுவர்) சீனத்தினுள்ளும் வாழும் திபேத்தியர்களும் இதை ஏற்கவில்லை. அதாவது இப்போது முரண்பாடுகளில் தலை லாமாவுக்கும் திபேத்தியர்களுக்கும் இடையிலான முரண்பாடு முகாமை பெற்று வருகிறது.

அமெரிக்கா, தலை லாமாவின் மனப்போக்கை மாற்றுவதில் மிகுந்த பங்காற்றியிருக்க வேண்டும். அதனால்தான் அண்மையில் அவரை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து மதிப்புச் செய்துள்ளது. 2008 மார்ச்சு 14க்குப் பிறகு பேசிய தலை லாமா திபேத்தியர்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிடவில்லையானால் தான் தன் பதவியிலிருந்து விலகி ஒரு சராசரிக் குடிமகனாகத் திபேத்தில் வாழ்வேன் என்று திபேத்தியர்களைப் பார்த்து மிரட்டியதிலிருந்து நமக்கு இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படுகின்றன..

இப்போது அமெரிக்கா – தலை லாமா கூட்டணியில் வெளித்தோன்றாத கூட்டாக சீனமும் இணைந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டணியின் நோக்கம் திபேத்தியர்களிடையில் தலை லாமாவின் பக்கம் சாயத்தக்க ஒரு குழுவை உருவாக்கி திபேத்திய மக்களுக்கு இரண்டகம் செய்வதற்குத் தலை லாமாவுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் தலை லாமா முழு விடுதலை கேட்கவில்லை என்று சொன்னாலும் அவர் உள்ளத்தில் அந்த நோக்கம் மறைந்துள்ளது என்று சீனம் குற்றம் சாட்டி வருகிறது. தலை லாமா திபேத்திய மக்களுக்கு நாணயமாகப் பாடுபடும் ஒரு தலைவர் என்ற ஒரு பொய்ப் படிமத்தை திபேத்திய மக்களிடையில் உருவாக்கி அவரது முழுத் தன்னாட்சிச் சரக்கைச் சந்தைப்படுத்தப் பார்க்கிறது சீனம். அப்படியானால் தலை லாமாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாத அளவுக்கு அவரை மிஞ்சிய விசைகள் திபேத்தியர்களிடையில் உருவாகிவிட்டன என்று தோன்றுகிறது.

சென்ற நூற்றாண்டிலிருந்து நம் நினைவுக்கு உட்பட்ட காலத்துக்குள்ளேயே இது போன்ற இரண்டகங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. அவற்றைத் தொடங்கிவைத்தவர் காந்தி. தமிழ்நாட்டில் வ.உ.சி. இந்தியத் தேசிய விடுதலை விரும்பிகளின் முழு ஒத்துழைப்புடன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டி அவர்களது சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வென்று நின்றதால் தங்களுடைய வல்லரசின் அடித்தளமான பொருளியல் சுரண்டலுக்கு வந்த இந்த அறைகூவலை எதிர்கொள்ள தென்னமெரிக்காவிலிருந்த காந்திக்கு கெய்சர் - இ - இந்த் (Kaisar - I – Hind, இந்தியாவின் பேரரசர் – 1876 முதல் 1947 வரை பிரிட்டிஷ் பேரரசருக்குரிய ஒரு விருது பார்க்க Chambers Twentyeth Century Dictionary-1972) என்ற பட்டத்தை வழங்கிக் கொண்டு வந்து இறக்கி, அவரது ஒப்பற்ற திறமையைப் பயன்படுத்தி அன்றைய முனைப்பியத் தலைர்வகள் ஒவ்வொருவரையும் அவரவர்க்குரிய வெவ்வேறு உத்திகளில் அகற்றியது ஆங்கிலப் பேரரசு.

தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் உருசியாவின் உதவியுடன் வலிமை பெற்று வருவதைக் கண்டு 25 ஆண்டுக் காலம் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவுடன் பேசி அவரை வெளியில் கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்தி அங்கு தனக்குள்ள பொருளியல் நலன்களைக் காத்துக் கொண்டது அமெரிக்கா.

சிம்பாபுவே, பாலத்தீனம் என்று எத்தனையோ நிகழ்வுகள், அவற்றின் தொடர்ச்சியில் ஒன்றுதான் திபேத்தில் இப்போது நடைபெறுகிறது. அமெரிக்காவின் இந்த உத்தியின் சிறு சிறு திவலைகள்தாம் நம் நாட்டில் மரண தண்டனை பெற்றுச் சிறையிலிருந்த அதிமுனைப்பியர்களிடம் பேசி இணக்கம் கண்டு வெளியில் கொன்டுவந்து ஆட்சியாளர்களின் உதவியோடு அவர்களைத் தமிழ்த் தேசியம் பேச வைத்து ஏமாற்றும் ″மனித உரிமைத்″ ″தொண்டு″ செய்யும் பெரிய மனிதர்களின் நடவடிக்கைகள் என்பதை இங்கு இடைக்குறிப்பாகக் குறித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவின் இது போன்ற திருவிளையாடல்கள் ஊடுருவ முடியாத ஒரு பாசறையாக ஈழ விடுதலைப் போராட்டம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

மொழியை அடையாளமாகக் கொண்டு தொடர்ச்சியுள்ள நிலப்பரப்புகளில் வாழும் தேசிய மக்களின் எழுச்சிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெளிப்படத் தொடங்கின. முதலாளி – பாட்டாளி முரண்பாடுதான் ஒரே முரண்பாடு என்று கருதிக் கொண்டிருந்த மார்க்சும் ஏங்கெல்சும் பாட்டாளிகளுக்கு நில எல்லைகள் கிடையாது என்றுதான் நினைத்தனர். ஆனால் ஐரிசு மக்கள் விடுதலை வேண்டி போராட்டங்கள் நடத்திய போது இங்கிலாந்தினுள் ஐரிசுத் தொழிலாளர்களை ஆங்கிலத் தொழிலாளர்கள் தாக்கியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலத் தொழிலாளர்கள் ஐரிசுத் தொழிலாளர்களோடு இணைந்து நின்று ஐரிசு விடுதலைக்குப் போராடினால்தான் இரு தேசியத் தொழிலாளர்களும் விடுதலை பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்ததனர். எதுவும் நடைபெறவில்லை.

உருசியப் புரட்சியில் முதன்மையான பங்கேற்றவர்கள் மாருசியர்களால் சுரண்டப்பட்டுவந்த உருசியப் பேரரசின் பிற தேசிய மக்கள்தாம். அவர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்தீர்மானிப்புரிமை வழங்கப்படும் என்று லெனின் அளித்த உறுதி மொழியை நம்பித்தான் தங்கள் இன்னுயிர்களை ஈந்து அவர்கள் புரட்சியை வெற்றிபெற வைத்தனர். லெனின் தன் வாக்குறுதிக்கு நாணயமாக நடந்துகொள்ள முயன்றாலும் அவர் படுக்கையில் இருந்த போதே தேசிய ஒடுக்கல் முனைப்படைந்துவிட்டது. அதன் விளைவாக அவர் உருவாக்கிய ஒன்றிணைந்த சோவியத் உருசியா முக்கால் நூற்றாண்டு கூட நிலைக்க முடியவில்லை.

ஐரிசுப் புரட்சிக்கு முன் பல்வேறு நாடுகளுக்குள் சிதறிக் கிடந்த சிலாவிய மக்கள் தாங்கள் வாழ்ந்திருந்த நிலப் பரப்புகள் ஒருங்கிணைந்த தேசமாக விடுதலை பெற வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை வரலாற்றிலிருந்து மறைந்துவிட்ட தேசியங்கள் என்று மார்க்சும் ஏங்கல்சும் அப்போது புறக்கணித்தனர். ஆனால் அத்தேசியங்களின் விடுதலைப் போர்களின் ஒரு பக்க விளைவாகவே முதல் உலகப் போர் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு தேசிய அரசியல் எல்லைகளைப் பெற்ற அவை சோவியத் உருசியா உடைந்ததும் அதன் மேலாளுமையிலிருந்தும் விடுபட முடிந்திருக்கிறது. ஆனால் பொருளியல் மேலாளுமையிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் செக்கோசுலொவேக்கியாவைத் துண்டு துண்டாக உடைத்து கொசவோவாவைத் தன் படைத்தளமாக்கிக் கொண்டுள்ளது அமெரிக்கா.

செர்பியர்கள் வாழ்ந்த பகுதிகளை இணைத்து ஒரு நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்ட முனைப்பியர்கள் அங்கு வந்த ஆத்திரிய இளவரசனைக் கொன்றதிலிருந்து முதல் உலகப் போர் தொடங்கியது. அப்போர் 1919 இல் முடிவுற்ற போது 27 ஆக இருந்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த போதும் பல புதிய நாடுகள் உருவாயின. ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் ஒவ்வொன்றாக அரசியல் விடுதலை பெற்றன. ஆனால் இந்த முன்னாள் அடிமை நாடுகளுக்குள் முந்திய காலங்களில் அரசர்கள் நடத்திய இடைவிடா கொள்ளைப் போர்களால் பிய்த்தெறியப்பட்ட எண்ணற்ற தேசியங்கள் சிக்கிக் கிடக்கின்றன. முன்னாள் வல்லரசுகள் தம்மோடு இணக்கம் கண்டவர்களின் கைகளில் அந்நாடுகளை ஒப்படைத்து வெளியேறிய போது தங்களின் பிரித்தாளும் உத்தியைத் தொடரும் நோக்கத்துடன் அவற்றை அப்படியே வைத்துச் சென்றனர். அவ்வாறுதான் தனித்தனியாக ஆங்கிலரின் கட்டுப்பாட்டினுள் இருந்த சிற்றரசுகளை புதிதாக உருவான இந்திய அரசு படை கொண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. அந்தத் தேசியங்கள் இந்தியாவில் நடத்திய போராட்டங்களின் பயனாக மொழிவழி மாநிலங்கள் என்ற ஓர் இடைநிலை மாற்றம் அரைகுறையாக நிகழ்ந்துள்ளது. அத்தகைய ஒரு கட்டத்தில் இன்றைய திபேத் உள்ளது. தலை லாமா – அமெரிக்கா – வென் சியா போ முக்கோணக் கூட்டணியின் திட்டப்படி ஒரு பண்பாட்டுத் தன்னாட்சி, அதாவது மடங்களுக்குப் பழைய சொத்துகளைத் திருப்பித் தருதல் முதலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் முழுமையான விடுதலைக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்பது தலை லாமாவின் வாக்குறுதி. அப்படி நடந்தால் மதத்தலைமை சாராத அல்லது தலை லாமாவுக்குப் போட்டியான புத்த சமய விசைகள் முழு விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்வர். அது மூன்றாம் உலக நாடுகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நான்காம் உலக[2] மக்களின் விடுதலைக்கான உலகம் தழுவிய போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைந்து ஒடுக்குவதற்காக இதே போன்ற 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சூழலில் ஆத்திரேலியத் தலைமை அமைச்சர் மெட்டர்னிக் உருவாக்கிய மேற்கு பேலியாத் திட்டம் உதவாதது போலவே இரைசீவ் காந்தி உருவாக்கிய தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்புப் பேரவையும்(சார்க்) எதையும் செய்ய முடியவில்லை, வாணிகச் சுரண்டல் ஒத்துழைப்பைத் தவிர.

சீன – அமெரிக்க உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை மற்றவர் நம்பவில்லை. சீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் அமெரிக்கா ஊடுருவி வருகிறது. நிக்சன் தொடங்கிவைத்து 700 வானூர்திகளில் வந்திறங்கிய பில் கிளின்றன் காலம் வரை வலுப்பெற்ற இந்த உறவில் சீனப் பொருளியல் எந்த அளவுக்கு அமெரிக்காவின் பிடிக்குள் இருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க டாலரோடு ஒப்பிட இந்திய உரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும் அதே வேளையில் விலைவாசி ஏற்றம் காரணமாக உரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ந்துள்ளது என்ன பொருளியல் விந்தையோ தெரியவில்லை.[3] அதே நேரத்தில் சீனச் சரக்குகள் கொள்ளை மலிவாக இங்கு குவிகின்றன. இந்தியா - அமெரிக்கா, அமெரிக்கா – சீனம், சீனம் – இந்தியா என்ற முக்கோண பணமதிப்பு விகிதங்களில் ஏதோ சித்துவேலை நடக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்கா, இந்தியா, சீனம், உருசியா ஆகியவற்றுக்கு இடையிலுள்ள உறவுகளில் பெரும் ஊசலாட்டங்கள் நிலவுகின்றன. அமெரிக்காவோடு கள்ள உறவு வைத்து உருசியாவின் அணுக்குண்டுகளை அழித்த எல்த்சினின் அழிம்பிலிருந்து உருசியா மீண்டு வருவதாகத் தெரிகிறது. ஐரோப்பாவில் உருசியாவைக் குறிவைத்து அமெரிக்கா புதிதாகத் தளம் அமைத்தால் உருசியா தாக்கும் என்ற புதினின் அறிவிப்பை ஒரு சுட்டியாகக் கொள்ளலாம்.
இந்திய – அமெரிக்க அணு ஆற்றல் உடன்பாட்டைப் பொதுமைக் கட்சியினர், குறிப்பாக சீனச் சார்பான மார்க்சியக் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பது சீன அரசின் அறிவுரையின் பேரிலாகலாம். அத்துடன் தன்னால் பதவியைப் பிடிக்க முடிந்த கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா தவிர வேறெங்கும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் மகமை தண்டுவதிலும் கூட்டணி பகரம் பேசுவதிலும் காலங்கழித்தவர்கள் திடீரென்று ஊரூருக்கும் கட்சி மாநாடுகள் நடத்தத் தொடங்கியிருப்பது, பாராளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பிடித்து சீனத்துக்குச் சார்பான இந்திய நிலையை உருவாக்கவா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்களால் மக்களின் உண்மையான சிக்கல்களைத் தடம் பிடித்து அவர்களின் ஏற்பைப் பெற முடியுமா என்பது ஐயமே.

தேசிய விடுதலைப் போர் ஒரு மக்களிடையில் உருவானால் அவர்கள் முதலாளியத்தினுள் நுழையத் தொடங்கியுள்ளனர் என்பது அதன் பொருள். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது கூலி பெற்றுக் கொண்டு திசைதிருப்புவதற்காகவே பொருளியல் உரிமைகளுக்கான முழக்கங்களை முன்வைக்காமல் அந்தத் தேசியத்திலுள்ள படித்த ஒட்டுண்ணிக் கூட்டம் அதை மொழி, பண்பாட்டு, சமய விடுதலைப் போராட்டமாகத் திரிக்கின்றனர். இவர்களது இரண்டகத்தைப் பயன்படுத்தி ″புரட்சிகர″த் தனிமங்கள் அதை பாட்டாளியப் புரட்சியாக்கிச் சிதைக்கின்றனர்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் இன்றைய வல்லரசுகளுக்குள் எதிர்பாராத ஒரு பெரும் மோதல் வெடித்து, அனைவரிடமும் அணுகுண்டு இருந்தால் அது வெறும் அட்டைப் புலிதான் என்ற மா சே துங்கின் புகழ் பெற்ற கூற்று பலித்து உலகம் பிழைத்திருந்தால் நான்காம் உலக நாடுகளுக்கு அரசியல் விடுதலை கிடைக்கலாம். ஆனால் பொருளியல் உரிமையை முன்னெடுத்துப் போராடினால் அந்த விடுதலை எளிதாகலாம். அதுவரை இந்த மக்களின் போராட்டம் தொடரும். இன்று திபேத்தில் போன்று விடுதலை வேண்டிப் போராடி உலகத்தின் கவனத்தை அவ்வப்போது கவரும் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்கு இதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.


(இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

அடிக்குறிப்புகள்:

[1] அவலோக முனிவர் என்ற சொல்லில் அபிதான சிந்தாமணி ″இவர் சைனர். அகத்தியருக்குத் தமிழாசிரியர் என்பர். இவர் இருக்கை பொதிகையில் என்பர். இவரை அவலோகிதர் என்றும் கூறுவர்″ என்று குறிப்பிடுகிறது.

[2] இந்த நான்குலகக் கோட்பாட்டை நானறிய முதன்முதலில் முன்வைத்தவர் நண்பர் வெங்காளூர் குணா. இன்று அவர் அந்தக் களத்தையே விட்டு விலகி முழு சாதி வெறி சார்ந்த ஆய்வுகளுக்குள் முழுகிப் போனார்.

[3] உரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும் போது டாலர்களைக் கொண்டுவந்து கூடும் போது எடுத்துச் செல்கின்றனர் அமெரிக்கர்கள் என்று கூறுகிறார் எம் நண்பர் திரு.மோகன்தாசு. ஒருவேளை பச்சை அட்டை வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் ஏம வங்கியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்யலாமல்லவா?
அது போலவே சுற்றுலா வரும் அமெரிக்கர்கள் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் சூன்-சூலை மாதங்களில் டாலரைப் பெருமளவில் முதலிட்டு பங்குகளை வாங்கி திரும்ப திசம்பர் மாதத்துக்குப் பின் விலை ஏறும் போது விற்றுக் காசு பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று இன்னொரு நண்பர் கூறுகிறார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பண அமைச்சர் சிதம்பரம் முற்பட்ட போது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு காட்டியதால் முயற்சியைக் கைவிட்டாராம். நமது ஐயம், நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னது எதையோ எதிர்பார்த்த மிரட்டலா அல்லது எதிர்ப்பைக் காட்டியவர்கள் பச்சை அட்டைக்காரர்களா என்பதுதான்.

4.9.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...3

பெரியார் எடுத்துக்கொண்ட குமுகக் குறிக்கோள்களை ஒரு நேர்மையான தலைவன் எடுத்துக் கொண்டிருப்பானானால் அவன் வீடிழந்து நாடிழந்து தலைமறைந்து ஆயுதத்தையே துணைகொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் பெரியாரோ அவரைப் போற்றிப் புகழும், வாழ்த்தி வணங்கும் ஒரு தொண்டர் குழாமுடன் சங்கராச்சாரி எவ்வாறு வலம் வருகிறாரோ அவ்வாறே வாழ்ந்திருந்தார்.

தான் வெறும் சீர்திருத்தர்தான்; அரசியல்வாணரல்ல என்ற சாக்குச் சொல்லி வாய்வீச்சு வீசி எதிரிகளுக்கு விழிப்புணர்வும் ஒற்றுமையும் உறுதியும் ஏற்படுத்தித் தந்நுவிட்டார். நேரடியான, தீவிரமான, குறிப்பாகச் சொல்வதனால் வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தொண்டர்கள் முனைந்த போதெல்லாம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதே நேரத்தில் ஆட்சியாளர்களுடன் இணக்கமாக இருந்து பலன்களும் பெற்றார்.

தான் மக்களுக்குச் சிந்திக்க மட்டும் கற்றுத்தருவதாகவும் செயற்பட வேண்டியது அவர்கள் பொறுப்பென்றும் தந்திரமாகப் பேசி செயற்படாத, வெறும் வாய்ப்பேச்சு அரசியலைத் தமிழகத்தில் புகுத்தி அரசியல் இவ்வளவு இழிநிலை அடையக் காரணமாயிருந்தார்.

குப்பையை அகற்றுவோம் என்று கூவி அழைத்து மக்களைத் திரட்டிக் குப்பையைக் கிளறி மட்டும் விட்டு நாட்டை நாறவைத்து விட்டார்.

இன்று கல்வி இவ்வளவு பரவிய பிறகும் கல்வி என்பது மக்களின் பிறப்புரிமையல்ல அது ஒரு சலுகை என்ற கருத்து மக்களிடையிலிருந்து விலகாததற்குப் பெரியார் ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை வைக்காததுதான் காரணம்.

பண்ட விளைப்பு, தொழில் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தைக் கற்றோர் கல்லாதோர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவர் மனங்களிலிருந்தும் துடைத்தெறிந்துவிட்டு உடலுழைப்பற்ற ′வேலைக்கு′ மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக ஓடுவதற்கும் எந்தமொழியைக் கற்கலாம் என்று பித்துப் பிடித்தலைவதற்கும் ஒதுக்கீடு என்ற மிகச் சிறு வேலைவாய்ப்புள்ள ஒன்றின் மீது 75 ஆண்டுகாலம் மக்களின் மனத்தை இழுத்துப் பிடித்து வைத்தே காரணம்.

கோயில் சொத்துகளை அவற்றைப் பயிர் செய்துவரும் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோராகிய குத்தகையாளருக்கே சொந்தமென்று முழங்கி இந்து சமயத்தின் ஆணிவேரில் கைவைத்திருந்தால் இன்றைய கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். தேர், திருவிழா, குடமுழக்கு, சம்ரோச்சனம், வேள்வி, அருளாசி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். பார்ப்பனனின் பூணூல் அறுந்து அதைத் தொடர்ந்து மேற்சாதியினரின் கட்டமைப்பும் உடைந்து இந்து சமயமே உருமாறிப் போயிருக்கும்.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்டோர் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராடுவதன் அடையாளமாக சிற்றூர்களிலெல்லாம் கோயில்களை நிறுவி பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் போட்டிபோட்டுத் திருவிழாக்கள் நடத்தி பண்பாட்டிலும் பொருளியலிலும் பெருஞ்சிதைவு ஏற்படுத்துவதற்குப் பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்து பார்ப்பனருடன் மறைமுகமாகவும் பிற மேல் சாதிக்காரர்களுடன் திராவிடர் என்ற பெயரிலும் வைத்துக் கொண்ட உறவு தானே காரணம்? அத்துடன் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இருக்கவும் மாநிலத்துக்கு வெளியே மண்டல் ஆணையத்துடன் இணைத்துக்கொண்டதும் தாழ்த்தப்பட்டோரில் உயர்நிலையிலுள்ளோர் அம்மக்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகத் தூண்டிவிடக் காரணமாகிறது. உங்களை நேரடியாகக் கேட்கிறேன், உங்களுக்கு ஒன்றுபட்ட மக்களைக் கொண்ட, ஒற்றுமையுடன் மண்ணின் உரிமைக்காகப் போராடும் தமிழகம் வேண்டுமா, அல்லது வெளிமாநிலங்களிலும் நடுவணரசிலும் வேலை வாய்ப்புகள்(அவை எத்தனை?) வேண்டுமா?

இன்றைய நிலையில் இந்த மண்ணின் மக்கள் மேல் படர்ந்து நின்று அவர்களை எழ விடாமல் அழுத்திக் கொண்டு கட்டிதட்டிப் போனவை மூன்று.

1. அடிமை மனப்பான்மையை மக்கள் மனதில் புகுத்திப் பொருளியலிலிருந்து அடிமைப்பணி நோக்கி மக்களின் மனநிலையைத் திருப்பி வைத்துவிட்ட திராவிட இயக்கம்.


2. மார்க்சியத்தை ஏழைநாடுகளின் நலனுக்கு எதிராகவும் வல்லரசுச் சுரண்டலுக்கு ஏற்பவும் திரித்து இந்நாடுகளில் நடைபெறும் தொழில் முயற்சிகளைக் கருக்கலைத்து விட்டு வல்லரசுகள் நுழையும்போது கதிரவனை நோக்கிக் குலைக்கும் நாய்களைப் போல் வெற்றுக் கூச்சலிடும் பொதுமையினரின் போலி மார்க்சியம்.

3. தமிழக வரலாற்றையும் பழம் தொன்மங்களை(புராணங்களை)யும் தோண்டிப் புதைத்துத் தமிழனை வரலாறில்லாதவனாகச் செய்துவிட்ட கழக(சங்க) நூல் தொகுப்புகள்.

தமிழக மக்கள் மேல் கவிந்து பாறையாக இறுகிப் போன இம்மூன்று அடுக்குகளை உடைத்தெறிய என்னாலான முயற்சிகளைச் செய்து வருகிறேன். தொடர்பான என் எழுத்தாக்கங்கள் சிலவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இன்றைய நிலையில் நாடார்கள் செய்யத்தக்கவை;

1. நாடார்களை மிகப் பிற்படுத்தப்பட்டனர்களாக அறிவிக்க வேண்டுமென்று பணந்திரட்டி நம்மை இழிவுபடுத்தும் கங்காராம் துரைராசு வகையறாக்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நாம் சலுகைகளால் உயரவில்லை; தன்முயற்சியால் தான் உயர்ந்தோம்; எனவே எங்களை முற்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி மருத்துவம் செய்தல். இவ்வாறு செய்வதால் நமக்குப் பெரும் இழப்பு ஏதுவும் இல்லை. ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பயன்கள் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்ற ஆதாயத்துடன் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் இரு வகைப்பாட்டினுள்ளும் அடங்கியுள்ள எண்ணற்ற சாதிப்பிரிவுகளும் உட்பிரிவுகளும் உடைந்து சிதறும் போக்கு உருவாகியுள்ளதால் முழுக் குமுகத்துக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பு மிகப் பெரிது. அரசு வேலைவாய்ப்புகள் அருகத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் ஒதுக்கீடு எனும் மாயமான் மாபெரும் குமுகச் சாபக்கேடு. அதைத் தெரிந்து தமிழக மக்கள் விடுபடுவதற்கு இத்தகைய ஒரு தீர்மானம் மிக உதவியாயிருக்கும்.

2. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற முழக்கத்துடன் நம் ஆற்றலுக்கேற்ற வகையில் எண்ணற்ற தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி அவற்றுக்கு ஒப்புதலும் நல்கையும்(Grant) தருமாறு மக்களைத் திரட்டிப் போராடல். மிகப்பிற்பட்டோர் சலுகைக்குக் கைக்கூலியாகத் திரட்டப்பட்ட பணம் இதற்குச் செலவாகலாம்.

3. இது முதன்மையானதும் இன்றியமையாததுமாகும். உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைத் தாக்கி வெளி மூலதனம் நுழைவதற்குக் காரணமாகவும் அரசியலாளர்கள், அதிகாரிகளின் அதிகார, பொருளியல், அட்டுழியங்களுக்கு மூலமாகவும் விளங்கும் வருமானவரியை எதிர்ப்பதும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு, சுற்றுச்சுழல், மாசுத்தடுப்பு, சிறார் உழைப்புத்தடுப்பு என்பன போன்ற "உயர்ந்த" ஆனால் போலியான அரசின் உத்திகளை எதிர்த்துப் போராடுவது. இதில் நாடார்கள் தலைமைப் பங்காற்றும் பொருளியல் நிலைமையில் உள்ளனர். முக்குலத்தோரில் இதே நலன்களை உடையவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர், குறிப்பாக ஆற்றுப்படுகைப் பள்ளர்களும் அவ்வாறே. மேல் சாதிக்காரர்கள் ஆதரவும் கிடைக்கும். பூனைக்கு மணிகட்டுவோர் யாரென்பதே கேள்வி. அதனை நாம் செய்யலாம்.

4. வேளாண் விளைபொருள் விலை ஆணையத்தை ஒழிக்க, நெல், கோதுமை, வாணிகத்துக்கு வாணிக உரிம முறையை ஒழிக்க, ஆண்டுக்கு ஒன்றே கால் கோடி டன் உணவுப் பொருளை முடையிருப்பு என்ற பெயரில் மக்கள் பணத்திலிருந்து வாங்கி வைத்து அழிக்கும் நடுவணரசின் ″பதுக்கல் ஒழிப்பு″(!) நடவடிக்கையை ஒழிக்க, உணவுப் பொருள் நடமாட்டத்துக்குக் கடத்தல் என்று பெயரிட்டு உணவுப் பொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளோரை வேட்டையாடும் கயமையை எதிர்க்க ஆயத்தப்பட வேண்டியுள்ளது. (ஆனால் இது நாடார்களின் உடனடிச் சிக்கல்ல. அவர்களுக்கு வேளாண்மை முகாமைத் தொழிலல்ல. ஆனால் நாம் இதை முன்வைத்தாக வேண்டும்).

நமக்கிருந்த குமுக இழிவுக்கெதிராகப் போராடி வெற்றிமுகத்தை என்றோ கண்டுவிட்டோம். பொருளியல் ஒடுக்குமுறையை இனம்காணவும் அதற்காகப் போராடவும் தவறிவிட்டோம். அதுதான் நமக்கு மட்டுமல்ல முழுத் தமிழ்நாட்டுத் தேக்கத்துக்கும் மூலகாரணம். முன்னர் குமுக இழிவுக்கெதிராக போராட்டத்தில் நம் பொருளியல் வலிமை எவ்வாறு பின்னணியாக நின்றதோ அவ்வாறே தமிழகத்தின் பொருளியல் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்திலும் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியின் முன்னோடிகளாகிய நம் பங்கு, அதனைத் தொடங்கி வைக்கும் நம் பணி துவங்கட்டும்.

உங்கள் நூலிலிருந்து நீங்கள் ஆழமான பெரியார்ப் பற்றாளர் என்பது புரிகிறது. அத்துடன் ஒதுக்கீடு, சாதி ஓழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ்த் தூய்மை ஆகியவற்றுக்குள்ள முதன்மையைப் பொருளியலுக்கு நீங்கள் வழங்காததும் தெரிகிறது. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டேன், நீங்கள் வாழும் இடத்தின் சூழ்நிலை ஒருவேளை உங்களைச் செயலுக்குத் தூண்டும் என்ற நம்பிக்கையில்.

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...2

பாண்டியனாரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவைப் பற்றியும் தரிசு நிலங்களை விளை நிலங்களாகவோ காடுகளாகவோ மேம்படுத்த வேண்டியது பற்றியும் தாம் சென்றவிடமெல்லாம் மக்களுக்கு (நாடார்களுக்கு) அறிவுரை கூறியிருப்பதை அறிய முடிந்தது. அவரது சட்டமன்ற உரைகளிலும் மேடைப் பேச்சுகளிலும் இதுபோன்ற பொருளியல் மேம்பாட்டுக் கருத்துகள் என்னென்ன இருந்தன என்று அறிய விரும்புகிறேன்.

பாண்டியனாரின் இன்னொரு சிறப்பு நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பார்ப்பனர், வெள்ளாளர், நாயக்கர், மறவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக நாடார்கள்-தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஒன்று அமைக்கும் முயற்சியே. இதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது தங்கள் நூலிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நாடார்கள் நடத்திய பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமளித்தல், கூட்டுணவு, (சம்பந்தி போசனம்) ஆகியவை, அத்துடன் பொதுக் குளங்கள், கிணறுகள், சுடுகாடு, அவற்றுகுரிய பாதைகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றுவதற்காகச் சட்டமன்றத்தினுள்ளும் வெளியிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

இந்தப் பின்னணியில் சராசரிப் பொருளியல் வலிமை பெற்ற நாடார்களின் அடிப்படை மன உணர்வாகிய குமுக உரிமைகளைப் பெறுதல் பாண்டியனாரின் பிற நோக்கங்களைப் பின்னடையச் செய்தனவா என்ற கேள்வி எழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்ச்சிகள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அறைகூவலாகப்பட்டது. அத்துடன் நீதிக்கட்சியுடன் பாண்டியனாருக்கிருந்த நெருக்கமான உறவும் அவர்களுக்குப் பெரியாரின் தொடர்பை எளிதாக்கின. பெரியாருக்கு ஆதரவளித்தார்களா அல்லது பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று இனம் பிரித்துக் காண முடியாமலிருந்தது.

தன்மான இயக்கத்துக்காகப் பெரியாரும் மற்றோரும் கலந்து கொண்ட கூட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்போக்கினர் ஏற்படுத்திய தடங்கல்களையும் தாக்குதல்களையும் மீதுற்று நிகழ்ச்சிகளை வெற்றி பெறச்செய்வதிலும் பெரியாரின் இயக்கம் தமிழ் மண்ணில் ஆழமாகவும் அகலமாகவும் வேர்கொள்வதிலும் நாடார்கள் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பயனை எய்தத்தானோ என்னவோ பெரியார் பாண்டியனாருக்கு ஏறக்குறைய தனக்கிணையான ஓர் இடத்தை இயக்கத்தில் கொடுத்தார்.

ஆனால் பாண்டியனாரைப் பெரியார் பின்னாளில் புறக்கணித்தாரோ என்ற ஐயமேற்படுகிறது. பாண்டியனார் மாண்டபோது அவர் பற்றிய செய்திகளைத் திராவிட நாடு இதழில் படித்திருக்கிறேன். அப்போதுதான் சவுந்திரபாண்டியன் என்று ஒருவர் இருந்திருக்கிறார், அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் அரும்பணியாற்றி இருக்கிறார்; சேலத்திலோ, வேறெங்கோ நடைபெற்ற ஒரு மாநாட்டின் ஒரு தீர்மானத்தால் என்று நினைவு - அவர் வெளியேறியிருக்கிறார் என்பனவெல்லாம் தெரியவந்தன.

அவற்றை உங்கள் நூல் தரும் தரவுகளுடன் நினைத்துப் பார்க்கையில், உலகில் இயக்கங்கள் மக்களின் மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகள் நோக்கி நகரும் நிகழ்முறை விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கையில், தனிமனிதர்களான தலைவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னணியாக நிற்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்த விதிகளைக் கையாண்டு பார்க்கையில் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிப் பல ஐயுறவுகள் எழுகின்றன.

தன்மான இயக்கத்தினுள் பெரும் முழக்கத்துடன் நாடார்களின் நுழைவும் நாடார் - தாழ்த்தப்பட்டோர் என்ற முழக்கத்துடன் நாடார்கள் என்ற வலிமையான பின்னணியுடன் நிற்கும் பாண்டியனாரால் தன் தலைமைக்கு அறைகூவல் வருமென்று பெரியார் கருதினாரா? பாண்டியனாரின் முகாமையை நீர்த்தப் போகச் செய்யத்தான் வெள்ளாளர்களை நாடினாரா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

பாண்டியனார் விலகிய பின்னும் நாடார்கள் பிடி தன்மான இயக்கத்தில் வலிமையாக இருந்ததா? அண்ணாத்துரையுடன் வெளியேறிய கும்பலில் நாடார் எதிர்ப்பினர் மிகுந்திருந்தனரோ? தி.மு.க.வின் ஐம்பெருந் தலைவர்களைப் பாருங்கள். அண்ணாத்துரை தவிர நெடுஞ்செழியன், அன்பழகன் இருவரும் சிவனிய வேளாளர்கள், (சிவனிய முதலியார்களும் வேளார்களும் ஒரே சாதியினர்.) மதியழகன் கவுண்டர் அவரும் கொங்கு நாட்டு வேளாளரே, சம்பத் கன்னட நாயக்கர். மற்றும் தி.மு.கழகத்தின் பிற முன்னணித் தலைவர்களில் ஆசைத்தம்பியைத் தவிர பிறரெல்லோரும் மேல் சாதியினரே. குமரி மாவட்டத்து மனோகரன் கூட அங்கு நாடார்களை இழிவாக நடத்தும் ஈழவச் சாதியைச் சேர்ந்தவரே.

தன்மான இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட நாடார்கள் மட்டுமல்ல மாநிலத்தின் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த ஐம்பெருந்தலைவர்களில் இல்லை என்பதைக் கவனிக்க.

பெரியாருக்கும் மறைமலையடிகளுக்கும் சமரசம் ஏற்பட்ட நாளிலிருந்தே நாடார்களும் அவர்களைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோரும் இயக்கத்தினுள் நுழைந்து செல்வாக்குப் பெறுவதைத் தடுத்து நிறுத்தும் திட்டம் செயற்படத் தொடங்கிவிட்டது.

சாதி என்ற வகையில் அண்ணாத்துரையைப் பற்றியும் கருணாதியியைப் பற்றியும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதி அடுக்குகளில் ஒன்றைச் சார்ந்தவர்களென்பது அது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியினர். அதாவது பொட்டுக்கட்டும் சாதி எனப்படும் அக்குலப் பெண்டிருக்குக் கடவுளின் பெயரால் கோயிலில் தாலி கட்டுபவன் பார்ப்பனப் பூசாரி. கோயில் நிகழ்ச்சிகளில் இறைத் திருமேனியைத் தொடுவது போன்று அவனுக்கிருக்கும் உரிமைகள் எல்லாம் அவளுக்கும் உண்டு. அவள் சாகும்போது அவளுக்குக் கருமாதி செய்பவனும் அவனே. இந்த வகையில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதிகள். ஏதோ காரணத்தால் சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்நூற்றாண்டு தொடக்கத்திலும் இவ்விரு சாதியார்க்கும் இடையில் ஏதோ பூசல் ஏற்பட்டு கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி இழிவு படுத்துவதன் மூலம் அது வெளிப்பட்டது. அதே நேரத்தில் வசதியும் திறமையும் படைத்த தேவதாசிப் பெண்கள் மெல்ல மெல்லப் பார்ப்பனச் சாதியினரால் உட்செரிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் வளைத்துப் போட்டுக்கொண்டனர். இன்று கருணாநிதியின் குடும்பமும் இந்து கத்தூரிரங்கய்யங்கார் குடும்பமும் ஓசையின்றி மணவுறவினுள் இணைந்துகொண்டது தற்செயலானதல்ல.

கருணாநிதியின் சாதிக்கு மேளக்காரர்கள் என்றொரு பெயரிருப்பதால் தென்மாவட்டங்களில் நாதசுரம், தவில், இசைக்கும் நாவிதர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும் அவரை நாவிதர் என்றே கருதிக்கொண்டுள்ளனர். இவ்வாறு பார்ப்பனரில்லாதாரில் மிக உயர்ந்த சாதியினராகிய அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்றொரு போலித் தோற்றத்தில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அரசியல் செய்து விட்டார்.

நாடார் மகாசன சங்கத்தார் பாண்டியனாரைக் கைவிட்டுவிட்டுக் காமராசரைப் பற்றிக்கொண்டனர் என்று கூறியுள்ளீர்கள். ஒருவேளை திராவிட இயக்கம் பொருளியல் துறையில் எந்தக் கவனமும் செலுத்தாததும் பாண்டியனாரைக் கைகழுவிவிட்டதன் மூலம் நாடார்களைக் கைகழுவி விட்டதும் காரணமாயிருக்க வேண்டும். தங்கள் பொருளியல் குமுகியல் - நலன்களுக்கு அரசியலை விட்டு விலகி இருந்த பாண்டியனாரை விட அரசியல் செல்வாக்கில் உயர்ந்து வந்த காமராசர் உகந்தவர் என நாடார்களில் பெரும்பான்மையினர் கருதியிருக்க வேண்டும்.

பாண்டியனாரின் செல்வாக்கை உடைப்பதற்காகக் காமராசரைத் தூக்கிப்பிடித்தவர்கள் பேரவைக் கட்சியினர் மட்டமல்ல, பெரியாரும்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று கூறித் தூக்கிப் பிடித்தது அவர் தானே!

தி.மு.க.வில் நாடார்களைப் புறந்தள்ள முக்குலத்தோருக்கு முதன்மை கொடுத்த பெருமை கருணாநிதியையே சாரும். தன்மான இயக்கத்தின் அரும்பணியினாலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டாலும் பயன்பெற்றுத் தம் குமுகியல் உரிமைகளைப் பெறத் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைதூக்கியதன் எதிர்விளைவே முதுகுளத்தூர் கலவரம். இந்தக் கலவரத்தில் முன்னறிவிப்பு ஏற்கனவே முத்துராமலிங்கத் தேவரால் திராவிடர் கழகத்தின் முன் அறைகூவலாக வைக்கப்பட்டுவிட்டது. விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்ற பிற்போக்கர்களின் தலைமையில் இந்த அறைகூவலை அவர் வைத்தார். அதனை இயக்கத்தின் தலைமையில் பெரியார் எதிர்கொண்டிருந்திருப்பாரேல் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் கூட்டு வலுப்பட்டு சாதிவேறுபாடுகளை மறந்து அம்மக்கள் நெருங்கிவர வாய்ப்பிருந்திருக்கும். பன்னூறாண்டுக் காலமாக ஆட்சியாளர்களுக்கும் மேற்சாதியினருக்கும் அடியாட்களாகச் செயற்பட்டு பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒடுக்கி வந்த முக்குலத்தோரின் ஆதிக்க மனப்பான்மை சிதைந்திருக்கும். ஆனால் பெரியார் அதைச் செய்யாமல் நழுவிவிட்டார். எனவே முதுகுளத்தூர் கலவரத்தின்போது தாழ்த்தப்பட்டோர் தனித்துவிடப்பட்டனர். அரசு தலையிட வேண்டியதாயிற்று. அப்போது முதல்வராயிருந்த நாடாராகிய காமராசர் கலவரத்தை நடத்திய மறவர்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, மறவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. இது அவரது அரசியலுக்கும் உயர்சாதி மனப்பான்மைக்கும் பொருத்தமாக இருந்தது.

திராவிடர் கழகத்திலும் அதன் மூலம் தி.மு.க.விலும் இடம்பெற்ற அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி ஆகியோர் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார்களாயிலும் அன்றைய குமுகியல் சூழலில் மறவர்களின் விழுக்காடு இயக்கத்தினுள் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க.வில் அவர்களின் நுழைவு பெருமளவில் இருந்ததன் காரணம் கருணாநிதி மறைமுகமாக பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலனுக்கெதிராக முக்குலத்தோரைத் தாங்கிப் பிடித்ததே.

இனி, பாண்டியனாரைப் பற்றிய சில ஐயங்கள்:

சிந்தனையிலும் செயலிலும் புரட்சிகரமானவராகவும் வீறும் எடுப்பும் மிக்கவராகவும் வீரத்திலும் ஈகத்திலும் ஈடிணைற்றவராகவும் இருந்து அவர் அரசியலில் தொட்டாற்சுருங்கியாக இருந்தாரா? அதனால்தான் ஒரேவொரு உறுப்பினர் நம்பிக்கையில்லை என்று கூறியவுடன் மாவட்டக் கழகப் பதவியைத் துறந்தாரா? அவருடைய இத்தன்மையைப் புரிந்துகொண்டு அவரை வெளியேற்றுவதற்கென்றே சேலம் மாநாட்டு அல்லது இன்னொரு மாநாட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?

திராவிடர் கழகம் என்ற பெயரை எதிர்த்த கி.ஆ.பெ. முதலியோரோடு சேர்ந்து ஒரு தனிக்கட்சி அன்று தொடங்கும் இன்றியமையாமையைப் புரிந்துகொண்டு வரலாற்றுத் திருப்புமுனையான அக்கட்டத்தில் தலைமையேற்றுப் பாண்டியனார் செயற்பட்டிருப்பாரானால் தமிழக வரலாறு இன்று உயர்ந்திருக்கும். ஆனால், ′′ஆனால்′′களை எண்ணி ஏங்கி என்ன பயன்?

இவ்வாறு நடந்தவற்றையெல்லாம் அலசினால் பெரியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முடிவுகள்:

1. அவர் துடிப்பான ஒரு மனிதர்.


2. தன் வாழ்வில் ஏற்பட்ட ஓர் நிகழ்ச்சியால் அல்லது நிகழ்ச்சிகளால் பார்ப்பனர்களை ஒழித்தே தீர்வது என்று புறப்பட்டிருக்கிறார்.

3. அவர் எதிர்பாராத ஆதரவும் அத்துடன் கொடும் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.

4. நாடார் என்ற பணம் படைத்த மக்களின் பேராதரவு அவருக்குப் பெரும் செல்வமாகக் கிடைத்துத் தொடக்கவிசையைக் கொடுத்து அவரது அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தியது.

5. குறிக்கோள் பரவலாகி வெள்ளாளர்களுடன் மோதல் உருவாகி அவர்கள் வெளியேறிவிட்ட சூழ்நிலையில் இயக்கத்தில் பெருகிவந்த நாடார்களின் செல்வாக்கும் அதன் தொடர்ச்சியும் காரணமான பாண்டியனாரின் செல்வாக்கும் அவரை அச்சுறுத்த அவர் முதலில் மறைமலையடிகளிடமும் பின்னர்? வெள்ளாளர்களாகிய மடத்தடிகளிடமும் இணக்கம் கொண்டார் ( பார்க்க: திராவிடர் இயக்கமும் வெள்ளாளரும்).

6. பேச்சிலும் கருத்துகளிலும் வீரமும் அஞ்சாமையும் இருந்தாலும் பெரும் மோதல்கள், அரசு ஒடுக்குமுறைகள் (சிறைக்காவல்கள் அத்தகையவை அல்ல) நெருங்கும்போது பின்வாங்கிவிடும் கோழைத்தனம் இருந்தது.

7. எதிரிகளிடம் பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாசனிடம் அவர் பணம் வாங்கியதாக வீரமணியே அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்க.

8. அவர் முன்வைத்த குறிக்கோள்கள் பல தரப்பார் அவருக்குப் பணம் தர முன்வரும் வாய்ப்பிருந்தது.

(அ) பார்ப்பனர்

(ஆ) மார்வாடிகள்

(இ) மடத்தலைவர்கள்

(ஈ) தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள், குறிப்பாக தெலுங்கர்கள்

(உ) அயல் மதத்தினர்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான தமிழக வரலாற்றாசிரியர்களான தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழகத்தில் அவர்களைவிடச் செல்வாக்குடனிருந்த தெலுங்கு, மராட்டிப் பார்ப்பனர்களுக்கெதிராகவே செயற்பட்டனர். பெரியாரின் ′திராவிட′ அரசியல் பார்ப்பனரிடையிலிருந்த இந்தப் பிளவை மழுங்கச் செய்து அவர்களை வலிமையாக ஒற்றுமைப்படுத்தி தமிழக நலன்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது; தமிழர்கள் நில உணர்விழந்து மயங்கவைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது.

பணம் வாங்கிப் பழக்கமுள்ள பெரியாரிடம் இத்தரப்பினரெல்லாம் பணத்தை அள்ளிக் குவித்தனால்தான் ஒரு வாழ்நாளில் அவரால் 125 கோடி உரூபாய்கள்ச் சேர்க்க முடிந்தது.

(தொடரும்)

26.8.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...1

மதிப்புக்குரிய பேரா. பு. இராசதுரை அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு எனும் நூலைப் படித்தேன். திராவிட இயக்கத்தைப் பற்றி நான் அறியாத பல புதிய செய்திகள் கிடைத்தன.

திராவிட இயக்கமும் வேளாளர்களும் எனும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் நூலையும் படித்தேன். இரு நூல்களிலுமிருந்து திராவிட இயக்கத்தில் பெரியாரின் செயற்பாடுகள் பற்றிய சில தெளிவுகள் கிடைத்தன.

நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் இரு முனைகளில் செயலாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலான பதவிகளையும் கோயில்கள் மூலமாகவும் நேரடியாகவும் பெரும் நிலவுடைமைகளையும் தம் ஆதிக்கத்தில் வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு எதிராகவும் வடக்கிலுள்ள மார்வாரிகள் தமிழகப் பொருளியலின் மீது செலுத்திவந்த ஆதிக்கத்துக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அக்கட்சியிலிருந்த பணக்காரர்களால் பேரவைக்கட்சி(காங்கிரசு) மக்களிடையில் எழுப்பிவிட்ட தேசியப் புயலை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் பேரவைக்கட்சியில் அடைக்கலம் புகுவதே தங்கள் பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் ஆதிக்க நிலைபேற்றுக்கும் தோதானது என்று கண்டு அணி மாறிவிட்டனர். 1917-இலிருந்தே நாடார் மகாசன சங்கத்துடன் நீதிக்கட்சிக்கு இருந்த தொடர்பும் பாண்டியனார் மூலம் நாடார்கள் நீதிக்கட்சியினுள் பெருகியதும் மேற்சாதியினரான அவர்களை அங்கே இருக்க முடியாமல் செய்தன. இது உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களிலும் நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இதில் நமக்குத் தெரியாத செய்தி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குச் செய்து வந்த பணிகள் நீதிக்கட்சியால் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டனவா அல்லது பின்னாளில்போல் வெறும் வாய்ச்சவடால் நடைபெற்றதா அல்லது எதுவுமே செய்யப்படவில்லையா என்பதுதான்.

அடுத்து வருவோர் வெள்ளாளர்கள். பார்ப்பனர் எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்புக்கு மாறி, சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமயத்தை மறுப்பதாக கட்சி வடிவெடுத்தபோது வெள்ளாளர் வைணவம் எனப்படும் மாலியத்துக்கு எதிராகப் பெரியாரைத் திருப்பிவிட்டார்கள். ஆனால் சிவனியத்தின் மீதும் பெரியாரின் பார்வை சென்றபோது வெள்ளாளர் நடுவில் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. ஆனால் அவை தணிக்கப்பட்டு அவர்கள் எதுவும் ஊடுருவ முடியாத கோட்டையாகத் தம் சாதியமைப்பை அமைத்துக் கொண்டார்கள். நாடார்கள், கோனார்கள், தாழ்ந்த சாதிகளிலிருந்த சில வெள்ளாக்கட்டு மேற்கொண்டோரைச் சேர்த்துக் சைவசபைகளை அமைத்துத் தம் அரணை வலுப்படுத்திக்கொண்டனர். (இந்தச் சைவசபைகள் இப்போது செயற்படவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு வழிவழியாகப் புலாலுண்ணாதவரே உண்மைச் சிவனியர் என்ற ஒரு புதிய விதியை - வேதாந்த தேசிகர் தென்கலை மாலியர்களைப் புறந்தள்ள மேற்கொண்ட உத்திபோல - புகுத்தினர். மூக்குடைபட்ட தாழ்ந்த சாதி வெள்ளாளக் கட்டினர் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பை அமைத்தனர். வெள்ளாளர் போன்ற ஒரு வகுப்பினரின் ஆதரவு இந்தப் புதிய சபைக்கு இல்லாததாலும் பழைய சபை மேற்கொண்டு வெள்ளாளருக்குத் தேவைப்படாததாலும், அதாவது தன்மான இயக்கத்தால் வந்த இடர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாலும் இருசபைகளும் இல்லாமல் போயின). அதாவது தமிழகச் சூழ்நிலையில் வெள்ளாளர்களின் பொருளியல், குமுகியல், இடத்துக்கு ஏற்றவாறு எத்தனை உறுப்பினர்களை ஒரு புரட்சிகர இயக்கத்தில் முழு உறுப்பினராகத் தரமுடியுமோ அவர்களைத் தவிர பிறரனைவரும் ஓரணியில் நின்றுகொண்டனர். வெள்ளாளர்கள் அனைத்து நடைமுறைக் கருதுகோள்களின் படி திராவிட இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர்.

ஆனால் பெரியார் அவர்களை விடவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இவரே அவர்களை நாடி நின்றார். இந்தி எதிர்ப்புக்குக் காசு உதவுங்கள் என்று மடத்தலைவர்களைக் கேட்டார்.

இந்த இடத்தில் வேளாளர்களின் பொருளியல் பின்னணியை அலசிப்பார்க்க வேண்டும். நிலவுடைமைகள் முன்பு அவர்களிடம் பெருமளவு இருந்தாலும் ஆங்காங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அவர்களில் பெருந்தொழிற் குடும்பங்கள் குறைவு. அவர்களுடைய வாழ்க்கைமுறை குத்தகை வருமானத்திலிருந்து உடல் நோகாமல் உண்டும் அவ்வருமானம் இல்லாதவர்கள் கணக்கெழுதுதல் போன்ற எளிய ஆனால் உடலுழைப்பில்லாத பணிகளில் ஈடுபட்டும் அருமுயற்சிகளைத் தவிர்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். சிவன் கோயில்களைச் சார்ந்து தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு தம்மைப் பிறரிலிருந்து அயற்படுத்தித் தம் மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்வதாகிய கற்பனை இன்பத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் கோயில்களும் மடங்களும் தமிழ்நாட்டு நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய்நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவும் சொந்தமாகக் கொண்டவை. நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு ஆகிய நிலச் சீர்திருத்தங்களிலிருந்து விதிவிலக்குகளால் தப்பித்துக் கொண்டிருக்கின்றன இச்சொத்துகள். பெரியாரிடமிருந்து பிரிந்து ஓடிய பொதுமை எண்ணம் கொண்ட சீவா போன்றோர் அமைத்த தமிழகப் பொதுமைக் கட்சியில் வெள்ளாளரே மிகுதியாக இருந்தனர். ஆனால் பெரியார் இராமமூர்த்தியைப் பெரிதுபடுத்திக் காட்டிப் பொதுமைக் கட்சியின் வஞ்சனைகளுக்குப் பார்ப்பனச் சாயம் பூசி அங்கிருந்த வெள்ளாளரையும் காத்தார். இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகப் பிரிவில் வெள்ளாளர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றிலிருந்து கோயில் சொத்துக்கு விலக்களிக்கப்பட்ட போது இம்′′மார்க்சியர்கள்′′ எந்த எதிர்ப்பும் சொல்லாதது தங்கள் சாதி நலன்களின் அடிப்படையிலேயே. பெரியார் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை.

பெரியார் சமயத்துக்கு எதிராகவும் கோயில்களுக்கெதிராகவும் தொடங்கிய போராட்டத்தை வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாகச் சுருக்காமல் பரந்து விரிந்த நிலையில் மேற்கொண்டிருப்பாரேயானால் (வெங்கடாசலபதி பெரியார் பரந்து விரிந்த அளவில் மேற்கொண்டதாக குறிப்பிடுவது உண்மையல்ல. பரந்து விரிந்த அளவில் மக்கள் அவரை மொய்த்தனர். ஆனால் பெரியார் பொய்த்து விட்டார்.) இன்று கோயில்களோ மடங்களோ அவற்றின் சொத்துகளோ இருந்திருக்கா. அச்சொத்துகளைக் காப்பதற்காக மடத்தடிகளுடன் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கு இந்திப் போராட்டம் உதவியதா? அன்றைய நிலையில் வேளாளர்களையும் மடத்தலைவர்களையும் அவர் ஏன் அழைத்தார். நீதிக்கட்சி அப்போது வலிமை குன்றியிருந்ததா? அல்லது முதல்வர் பதவியேற்ற ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினாரா?

பெரியார் - ஆச்சாரியார் இருவரும் தங்கள் பொதுவாழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அரசியலில் எதிரிகளாகவும் தனிவாழ்வில் நண்பர்களாகவும் இருந்துவந்துள்ளதின் கமுக்கம் என்ன? அவர்களின் தனிமனிதப் போட்டிக்காகவே திராவிடர் இயக்கத்தை அல்லது இந்தி எதிர்ப்பைத் தொடங்கினாரா? (இந்தி எதிர்ப்பில் உண்மையான தமிழ் மொழிப்பற்று அல்லது இந்தி மீது வெறுப்பினால் அவர் ஈடுபடவில்லை என்பதற்கு குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஏராளமான சான்றுகளைக் காட்டுகிறது.) வெள்ளாளர்களைப் பொறுத்தவரையில் அதுவும் மடத்தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர் மிகப் பரிவுடன் நடந்து கொண்டார். குன்றக்குடியார் மடத்தலைவர்களுக்கும் அவருக்கும் பாலமாகச் செயற்பட்டார்.

திராவிட இயக்கம் வெள்ளாளர் இயக்கம் அல்ல என்று வெங்கடாசலபதி கூறுவது உண்மையில்லை. பெரியார் இறுதிவரை வெள்ளாளர்களுக்கு அரண் செய்திருக்கிறார். உயிர்க் காப்பீட்டுக் கழகம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள் என்று அரசுசார் நிறுவனங்களில் பார்ப்பனர்களுடன் வெள்ளாளர்கள் நுழைந்தபோது இவர் கண்டுகொள்ளவில்லை, வெளியில் சொல்லவில்லை. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இன்று வெள்ளாளர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அது பெரியார் இட்ட பிச்சை. இதற்குப் பார்ப்பனர் எதிர்ப்பு, திராவிடக் கோட்பாடு என்ற மூடுதிரைகள் பயன்பட்டன. வெள்ளாளர்கள் ஒரு பெரும் கண்டத்திலிருந்து பெரியார் உதவியால் தப்பிவிட்டார்கள்.

இனி நாடார்களுக்கு வருவோம்.

நாயக்கர்கள் மதுரையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் ஒதுங்கிய மக்கள் நாடார்கள். தேரிகளாயமைந்திருந்து வளமற்றிருந்த அப்பகுதியில் அவர்கள் பெரும்பான்மையராயிருந்தனர். அரியநாதனால் பாளையங்களாக்கப்படுவதற்கு முன்பு பாண்டிய நாட்டு உள்ளாட்சிப் பிரிவுகளாகிய நாடுகளின் ஆட்சித் தலைவர் பட்டமான நாடான் எனும் பட்டத்தை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். வளமற்ற அம்மண்ணில் வளர்ந்திருந்த பனையிலிருந்து பதனீர் இறக்கி அதிலிருந்து கருப்புக்கட்டி செய்தனர். [பனைமரம் முதலில் கள்ளெடுக்கவே பயன்பட்டது. கரும்பிலிருந்து செய்யப்பட்ட வெல்லத்துக்கே கருப்புக்கட்டி என்ற பெயர் பொருந்துகிறது. பனை ஏறிக் கள்ளிறக்கிய மக்களைக் கட்குடிகள் என்று கழக (சங்க) இலக்கியங்கள் குறிப்பதாகக் கூறுவர். நாடார்களின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாட்டு வடிவிலான வலங்கையர் கதை ஒரு முனிவர் பனை ஏறும் ஒருவன் வீட்டில் தான் உண்ட சோற்றுக்குக் கைம்மாறாக இரும்பு அரிவாளைக் கொண்டு வரச்செய்து அதில் ஒரு பச்சிலைச் சாற்றைத் தடவி அதனை அடுப்புத் தீயில் சொருகி வைக்குமாறு கூறியதாகவும் அவ்விரும்பு தங்கமாகிவிட்டதாகவும் தொடர்ந்து அப்பனையேறி கிடைத்த இரும்பையெல்லாம் அதே முறையைக் கையாண்டு தங்கம் ஆக்கி பெரும் செல்வானாகி ஆட்சியமைத்ததாக்கவும் கூறுகிறது. பதனீரை அடுப்பில் வைத்துக் காய்த்துக் கருப்பட்டியாக்கும் தொழில்நுட்பம் தான் இக்கதையில் குறியீடாகக் கூறப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இது எப்போது நிகழ்ந்திருக்கும் என்று தெரியவில்லை. கள்ளர் என்பதற்கும் கள்ளுக்கும் உள்ள தொடர்பும் கருப்பணசாமி என்பதற்கும் கரும்பனைக்கும் உள்ள தொடர்பும் ஆராயத் தக்கன.]

கருப்பட்டி மற்றும் பனைபடு பொருட்களை விலையாக்காமல் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே வாணிகத்துக்கு வெளியே செல்ல வேண்டும். வழியில் மறவர்களின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே பெரும் எண்ணிக்கையிலான மாட்டுவண்டிகளைச் சேர்த்துச் செல்ல வேண்டியிருந்தது. சிறுவனாக இருக்கும்போது குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் இத்தகைய வண்டித் தொகுதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு புறப்பட்ட வண்டிகள் தங்கி ஓய்வு கொள்ள அமைந்த வண்டிப் பேட்டைகளிலிருந்து நாடார்கள் பரந்தனர் என்ற செய்தியை ஆர்டுகிரவ்ன் நூலில் படித்திருப்பீர்கள். மோசே பொன்னையா எழுதிய நாடார் வரலாற்றில் இப்பேட்டைகள் புத்தர்களால் நிறுவப்பட்டன என்கிறார்.

நெல்லை குமரி மாவட்ட நாடார்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் பிற பகுதியினரைப்போல் பிற சாதியினரிடையில் அடைபட்டுக் கிடக்கவில்லை. தாங்களே பெரும்பான்மையினராய் இருந்ததால் தாழ்வுணர்ச்சியின்றி நிமிர்ந்து நின்றனர். அதுவே அவர்கள் சென்று படிந்த இடங்களிலும் அவர்களது வளர்ச்சிக்குத் துணையாயமைந்தது. இருப்பினும் அரசின் கெடுபிடியால் மேற்சாதியினரின் கொடுங்கோன்மையைத் தாங்க வேண்டித்தான் இருந்தது.

பொருளியல் ஓரளவு மேன்மையடைந்தும் குமுகியல் இழிவுகளை எதிர்த்துப் போராடுதல் இயல்பு. ஆனால் நாடார் மகாசன சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்தக் கொண்ட பொருட்கள் அனைத்துமே பொருளியல் மேம்பாடு கருதியவை. தலைவர் உரையில்தான் கல்வி வளர்ச்சியின் மூலம் அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர் போன்ற தொழில்களிலும் காலூன்ற வேண்டும் என்ற நோக்கம் வெளிப்படுகிறது.

அதேபோல் தியாகராயச் செட்டியார் முழு அறிக்கையையும் படிக்க முடியவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின் அருஞ்செயல்கள் என்ற பட்டியலில் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நூலில்(தமிழக வரலாறும் பண்பாடும், பேரா.வே.தி.செல்லம்) குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாறு எழுதுவோரில் எவரும் பொருளியல் பகுதிக்கு உரிய இடத்தை அளிப்பதில்லை என்ற உண்மை இன்றைய தமிழகத்தின் பொருளியல் பின்னடைவுக்கும் வேலையின்மைக்கும் இளைஞரும் முதியோரும் படித்தோரும் படியாதோரும் வேலை தேடி நாட்டை விட்டோடும் நிலைமைக்கும் அடிப்படைக் காரணமாகும். நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

(தொடரும்)

குன்றக்குடி அடிகளாருக்கு மடல்

குன்றக்குடி அடிகளாருக்கு (அருணாசலத் தம்பிரான்) 06-01-95 நாளிட்ட மடல்

நாள்: 06-01-1995.

மதிப்பிற்குரிய அடிகளார் அவர்களுக்கு வணக்கம்.

இரு நாட்களுக்கு முன் தினமணியில் தாங்கள் எழுதியிருந்த கட்டுரை படித்தேன். முதலாளியம் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது எனவே அது வேண்டாம், கூட்டுறவு முறையே சரியானது என்றும் நம் மரபுகள் அதாவது மதிப்பீடுகள் முதலாளியத்தால் அழிந்து போய்விடும் என்றும் எழுதியுள்ளீர்கள். மாற்றம் வேண்டும் அதுவும் விரைந்த மாற்றம் வேண்டும் என்று எழுதிய நீங்கள்தான் மரபு அழிந்துவிடும் என்று அஞ்சுகிறீர்கள். இது தங்களிடம் காணப்படும் ஓர் இரட்டைத் தன்மை என்று நான் கருதுகிறேன். 1981 இல் மதுரை புதூர் பேரூந்து நிலையத்தில் ஓர் அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் நீங்கள் பேசியதை ஒரேயோரு முறை கேட்டேன். முயற்சி பற்றியும் உடலுழைப்பு பற்றியும் மிக உயர்வான கருத்துகளை நெடுநேரம் உதிர்த்துவிட்டு அம்மனுக்குப் பூசையிட்டால் மழை பெய்யும் என்ற மூடக்கருத்தைக் கூறி முடித்தீர்கள். இந்த இரட்டை நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே இரட்டை நிலைதான் இன்றும் உங்களிடம் காணக்கிடக்கிறது.

மாற்றம் என்பது அமைதியாக, அழகாக, சீராக, இனிமையாக நடைபெறுவதில்லை. ஒரு மகப்பேற்றின் போது தாய் அடையும் நோவும் வலியும் சில வேளைகளில் சாவும் நேர்வதுபோல் குமுகத்திலும் நேரும். சிற்றுயிர்கள், நிலைத்தினையாயினும் விலங்கினமாயினும் பேற்றின் போது மாண்டுவிடுகின்றன. உயர் உயிர்கள் மாள்வதில்லையாயினும் அவற்றின் உடலிலுள்ள கண்ணறைகள் ஒவ்வொன்றும் புதுப்பிக்கப்படுகின்றன. அவ்வாறுதான் குமுகம் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்தை ஈனும்போது அதன் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு தனியாளும் மாற்றம் பெறுகின்றனர். இதைத் தடுப்பதற்காக மாற்றத்தையே தள்ளிப் போடுவது குமுகக் கொலைக்கு ஒப்பாகும்; ஒரு தாயின் முற்றிய சூலை வெளியேறாமல் தடுத்தால் என்ன நிகழும்?

நாம் இன்று நிலக்கிழமைப் பண்பாட்டில் வாழ்கிறோம். அதன் இயல்பை வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் காண்கிறோம். பொருளியலில் முதலாளியத்தை நோக்கி இந்தக் குமுகம் நிற்கிறது. இம்முதலாளிய நிகழ்முறை முற்றுப்பெறுந்தோறும் தான் நிலக்கிழமைப் பண்பாடு அழிந்து உயர்ந்த ஒரு பண்பாட்டுத் தொகுதி உருவாகும். அதாவது பழைய ″மரபுகள்″ கட்டாயம் அழியும், அழிய வேண்டும். புதிய பண்பாட்டுத் தொகுதியில் பழைய மரபுகளில் சில மீண்டும் தோன்றும். ஆனால் அவை கட்டாயம் அகன்றே மீண்டும் தோன்றும். அதற்காக அழுது பயனில்லை. அவை அழிகின்றனவே என்று மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது பேதைமை மட்டுமல்ல குமுகப் பகைமை.

நம் குமுகம் முதலாளியத்துக்கு மாறுவதை உங்களைப் போன்ற உள்நாட்டு அறிவுச் சிந்தனையாளர்கள் மட்டும் தடுக்க நினைக்கவில்லை. நம்மைச் சுரண்டிக் கொழுத்து நிற்கும் வல்லரசியத்தின் அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டுத் தடுத்துவருகின்றன.

முதலாளியம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்கள். அதாவது மார்க்சியம் கூறும் பெருமரபு அல்லது செவ்வியல்(Classical) முதலாளியம், அதாவது சிற்றுடைமைகள் எல்லாம் அழிந்து குமுகத்தின் விளைப்பு விசைகள் அனைத்தும் விரல்விட்டு எண்ணத் தக்க ஒரு சிலரிடம் குவிதல், பிறரனைவரும் அவ்வொரு சிலரிடம் கூலி பெறும் உழைப்பாளர்களாக (மூளை மற்றும் உடல் உழைப்பாளர்களாக) மாறுவது.

இந்த நிகழ்முறையால் சிற்றுடைமையாளரும் சிறு முதலாளிகளும் அச்சிற்றுடைமை எனும் மினுக்கமுள்ள விலங்கினின்று விடுபட்டு நிமிர்ந்து நின்று தத்தம் தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்ள முடியும். முதலாளிய நாட்டுப் பொதுமக்கள் பண்பாட்டு வளர்ச்சி இவ்வாறு வாய்த்ததே.

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள கூட்டுறவுத் தந்தை ஓவனின் முயற்சிகள் தோற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கோ கூட்டுறவு பெயருக்குத்தான். உண்மையில் அரசின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் என்ற பெயரில் அடிமைகளை உருவாக்கி ஆட்டிப்படைத்து முதலாளியம் மூலம் கிடைக்கும் தொழிலாளர் நலன்கள் கூட மறுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

உலகில் அமீபா என்ற ஒற்றைக் கண்ணறை உயிர் தோன்றியது ஏறக்குறைய 100 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் மீஇன்னாளைய கண்டுபிடிப்புகளின் படி மனித இனம் உருவாக அதிலிருந்த 97 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் அறிவியல் கூறுகிறது. இந்த 97 கோடி ஆண்டின் திரிவாக்கத்தை ஒவ்வொரு குழந்தையும் தாயின் வயிற்றினுள் 270 முதல் 290 நாட்களில் எய்திவிடுகிறது. தவளைக் குஞ்சாய், மீனாய், குரங்காய் மாறித்தான் ஒவ்வொரு குழந்தையும் மனிதக் குழந்தையாகிறது. இந்த விதியே குமுகத்திலும் செயற்படுகிறது. அது தான் மார்க்சு நாம் குமுக விதிகளை அறிந்து கொள்வதால் எந்த விதமான சட்ட நடவடிக்கை அல்லது உத்தியாலும் குமுகம் இடையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடக்காமல் குறுக்கு வழியில் இன்னொரு கட்டத்தினுள் தாவிச் சென்று விட முடியாது; ஒரு புதிய கட்டத்தை ஈனுவதற்குரிய பேற்றுக்கால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்றார். இங்கும் அது தான்.

நம் நாட்டில் கூட்டுறவு அமைப்பு மூலம் மக்களை வாழவைக்கும் முயற்சி தோற்றுவிட்டது. நம் ஆளவந்தாரும் பொதுமைக் கட்சிகளும் இணைந்து நடத்திய சோசலிசம் எனும் போலி நிகர்மையும் வெளுத்துவிட்டது. அனைவரும் சேர்ந்து புரோகிதர்கள் போல் வருவோர் போவோரிடம் காணிக்கைக்காகக் கையேந்தும் இயற்கைக் குணமுள்ள அதே நேரத்தில் திமிர் பிடித்த அதிகாரக் கும்பலிடம் நாட்டின் பொருளியலையும் நாட்டுமக்களின் வாழ்வையும் ஒப்படைத்துவிட்டு மக்களுக்கு அறிவுரைகளும் அறவுரைகளும் கூறி மகிழ்கின்றோம். அயலவர்களுடைய மூலதனம் இங்கு புகுந்து நம் மக்களுக்குரிய இந்நாட்டு வளங்களனைத்தையும் வாரிக்கொண்டு போவதை எதிர்த்து வெறும் கூச்சல் போடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய மனமோ வகையோ அற்ற ″இடதுசாரி″ப் பொய்யர்களை நம்பி உள்நாட்டு மூலதனம், உள்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வகை காண்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

″மனிதம்″ என்பது மனித இனத்தின் இலக்குதானே யொழிய இன்னும் எங்கும் எய்தப்பட்வில்லை. அந்த மனிதத்தை எய்தும் வழியில் அவனை இழுத்துச் செல்வது தன்னலமே. பலரின் தன்னலம் ஒன்று சேரும் போது அது பொது நலமாகிறது. ஒரு பணக்காரன் அச்செல்வத்தைத் தன் வாழ்க்கை வசதிகளுக்காகச் செலவிடும் போது அதிலிருந்து விளைவது அவனது நலன்களை மட்டுமே. அதே நேரத்தில் மீண்டும் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ″தன்னலத்தில்″ தொழில்களில் முதலிடும் போது நாட்டின் தொழில்துறையை வளர்க்கிறான். அதற்காக அவன் உழைப்பை, சிந்தனையைச் செலவிடுகிறான். புதிய மூலதனத்தை உருவாக்குவதற்காக மூலதனத்தின் அடிமையாகிக் குமுகச் செல்வத்தை உயர்த்துகிறான். நமது இன்றைய ″நிகர்மை″ இதனைத் தடுத்து நிறுத்த வல்லமை பெற்றுள்ளது; ஆனால் வெளியாரின் வேட்டையைத் தடுத்து நிறுத்த முடியாத பேடிமையுடையது. தங்கள் போன்ற ஆழ்ந்த அறிவுடையோருக்கு இதுவே அனைத்தையும் விளக்கும்.

இந்த நாட்டு மக்கள் தங்களுடைய நிலக்கிழமை அடிமைத்தனத்திலிருந்து அடிமைச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது; தங்கள் வேட்டையும் தேட்டையும் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய - வரவு செலவுத் திட்டத்தைப் போல் பல மடங்கு செலவில் பல்லாயிரம் ′தொண்டு′ நிறுவனங்களை இங்கு செயற்படுத்துகின்றன வல்லரசுகள். அவற்றின் நிகழ்ச்சிகளில் நீங்களும் அறிந்தோ அறியாமலோ கலந்துகொள்கின்றீர்கள்.

தாங்கள் தங்களிடம் காணும் இரட்டை நிலையையும் மீறித் தொடர்ந்து வேறுபட்டு நிற்கிறீர்கள். போலி ஆன்மிகக் குட்டையில் மக்களை மூழ்கடிக்க இடைவிடாது முயலும் சமயத் துறையினரிடையில் பொருளியல் வாழ்வின் இன்றியமையாமையை எடுத்துரைத்து எழுஞாயிறாக ஒளிர்கிறீர்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருவாரூரில் திரு.வி.க. உருவத் திறப்புக்கு நண்பர் த.சரவணத் தமிழன் ஏற்படுத்தியிருந்த நிகழ்ச்சியில் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரசு முதலித் திட்டத்தைச் செயற்படுத்தாமைக்குக் கருணாநிதியைச் சபிக்கவும் நீங்கள் தயங்கவில்லை என்பதை நானறிவேன். நாம் வாழும்போது நம் பெயரும் புகழும் நம் செவிகளில் விழுந்தால் மட்டும் போதாது. நமக்குப் பின் நிலைத்து நிற்பது தான் உண்மையான புகழ். அதற்குச் சிலரது பகைமையையும் வெறுப்பையும் நாம் ஈட்டினாலும் இழப்பில்லை. இன்று நாம் வெறுக்கப்பட்டாலும் வரலாற்றில் நிலைத்து நிற்போம். புகழுக்காகத்தான் நாம் பாடுபட வேண்டுமென்பதில்லை. உண்மையான புகழ் தனியே வருவதில்லை. நாம் வாழும் மனிதக் குமுகத்தின் மேம்பாட்டைத் துணை கொண்டுதான் அது வரும்.

நல்வாழ்த்துகளுடனும் வணக்கங்களுடனும்
குமரிமைந்தன்.