தமிழ்த் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.7.09

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

12.7.09

தமிழக நிலவரம்(2009) .....5

ஆற்றுநீர்ச் சிக்கலைப் பற்றிச் சிலவற்றைக் கூற வேண்டும்.

இச்சிக்கலில் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை நாம் 1956 நவம்பர் 1ஆம் நாள் இழந்த நிலப்பரப்புகளுக்குள்தாம் இழக்கும் நீருரிமைக்குரிய கட்டமைப்புகள் உள்ளன. எனவே அந்நிலப்பரப்புகளை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் குறிக்கோள்களில் முகாமையான ஒன்று.

அதே வேளையில் இது குறித்து சில செய்திகளைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். 1964இல் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு வரட்சியைப் பயன்படுத்தி, வழக்கமாகச் செய்து வந்த உணவுத் தவச இறக்குமதியை நிறுத்தி, அந்த வகையில் தவிர்த்திருக்கத்தக்க செயற்கையான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தி உழவர்கள் மீது மிகக் கொடுமையான ஒடுக்குமுறைகளை ஏவினார். உணவுத் தவச(தானிய)ங்களின் நடமாட்டத்துக்குப் பெரும் கட்டுப்பாடுகள், உழவர்களும் வாணிகர்களும் அரிசி ஆலைகளும் உணவுத் தவசங்களை வைத்திருப்பதற்குக் கொடுமையான கட்டுப்பாடுகள், அரசு கொள்முதல் நிலையங்களிலும் உரிமம் பெற்ற வாணிகர்களுக்கும்தான் உணவுத் தவசங்களை உழவர்கள் விற்கமுடியும் என்ற நிலை, உணவுத் தவசத்தில் சில்லரை வாணிகத்தை ஒழித்தல் என்று தொடங்கிய கொடுமை இன்றும் தொடர்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு கோடி கோடியாக ஊழல் வருமானம் சேர்கிறது. இதில் பங்கு பெறுவதற்காக நடுவரசு அவ்வப்போது மாநிலத்துக்கு மாநிலம் உணவுத் தவச நடைமாட்டத் தடையை நீக்குவதாக அறிவிக்கும். உடனே மாநிலங்கள் தங்கள் ஊழல் பங்கை உரியவர்களிடம் சேர்க்கும். இது இன்றுவரை தொடர்கிறது. முடையிருப்பு என்ற பெயரில் நடுவரசும் மாநில அரசுகளும் பல கோடி தன்கள் உணவுத் தவசங்களை வாங்கி வெட்டவெளியில் போட்டு பெருமளவில் அழிய விட்டுக் கள்ளக் கணக்கு எழுதி அதிலும் கொள்ளையடிக்கிறார்கள். இந்தக் கொடுமை நின்று போகாமல் நம் பொதுமைக் கட்சிகள் கண்கொத்திப் பாம்புகள் போல் கண்காணிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தக் கெடுபிடிகளெல்லாம் செயற்கையானவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1977இல் பதவியேற்ற சனதா அரசு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியதும் பங்கீட்டுக் கடைவிலைக்கும் வெளிச் சந்தை விலைக்கும் இடைவெளியின்றி பங்கீட்டுக் கடைகள் ஏறக்குறைய செயலிழக்கும் நிலை வந்தது. அமெரிக்கக் கையாளான இராசநாராயணன் வகையறாக்கள் அந்த ஆட்சியைக் கவிழ்க்க, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா அக்கட்டுப்பாடுகளை மீண்டும் புகுத்தினார்.

பொதுமைத் தோழர்களைப் பொறுத்தவரை, அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் அரசின் கீழ் வர வேண்டும்; அரசூழியர் படை பெருக வேண்டும்; சங்கங்களை அமைக்க வேண்டும்; அவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும்; அதில் பங்குபெற வேண்டும்; கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் போராட வேண்டும்; கிடைத்ததிலும் பங்கு பெற வேண்டும். தொழில்கள் நட்டமடைந்தால் மக்களின் வரிப் பணத்தை “மானியமா”கக் கொடுக்க வேண்டும்; வருமான வரியை முடுக்கிவிட்டு பனியாக்களுக்குப் போட்டியாகத்தக்க பல்வேறு தேசியங்களின் மூலதனத்தை முடக்க வேண்டும். மாதத்துக்கு 70,000க்கு மேல் சம்பளமும் அதற்கு மேல் கிம்பளமும் எத்தனையோ பக்க வருமானமும் வரவுவைக்கும் உயரதிகாரிகள் அவ்வளவையும் வாங்கி கிழமைக்கு ஏழு மணி நேரம் மட்டும் பணி செய்ய வேண்டிய பேராசிரியர்கள் தலைமையில் சங்கங்களும் கலை – இலக்கியப் பேரவை, முற்போக்கும் இலக்கிய மன்றங்களும் அமைத்துப் “பாட்டாளியப் புரட்சி” பற்றி நீட்டி முழங்க வேண்டும். பத்தாயிரம் உரூபாய் ஈட்டுவதற்கு நாய் படா பாடு படும் சிறுதொழில் செய்வோனையும் சிறு வாணிகனையும் சுரண்டல்காரன், கொள்ளை அடிப்பவன், அரத்தக் காட்டேரி என்று ஈவிரக்கமின்றி வசைபாடி அவன் உள் வலிமையை அழித்து அடித்தாலும் அழமுயலாத திருடன் மனநிலையில் அமிழ்த்தி தேசிய ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் விருப்பம் போல் நம் செல்வங்களைக் கொள்ளை கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? எந்த மூலையில் எந்தக் கடையின் முன்னால், எந்த அலுவலகத்தில் கையேந்திக் காத்துக்கிடந்தால் என்ன? எவன் எந்த நாட்டைக் கொள்ளையடித்தால் என்ன?

நில உச்சவரம்பால் 10 ஆயிரம் கணக்கில் நிலம் வைத்திருந்த பெரும் முதலைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். 100 ஏக்கருக்கு உட்பட்டவர்கள்தாம் இல்லாமல் ஆனார்கள். அதனால் வேளாண்மையில் வலிமையான அரசியல் விசைகள் இல்லாமல் போயின. எனவே நீர் வரத்துகளில் அண்டை மாநிலங்கள் கைவைத்த போது எழுந்து நின்று போராடும் வலிமை வேளாண் மக்களுக்கு இல்லாமல் போயிற்று.

இந்நிலையில் 1990களின் நடுப்பகுதியில் கரூர் பூ.அர.குப்புசாமி அவர்கள் காவிரி நீர் தொடர்பாகத் திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உழவர்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொடுமைகளை விளக்கி இந்தச் சிக்கலையும் சேர்த்து முன்னெடுத்தால்தான் காவிரிச் சிக்கலில் உழவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறினேன். கலந்துகொண்ட வேளாண் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரியவர் குப்புசாமி அது குறித்து எதுவும் கூறவில்லை. அடுத்து அவர் கரூரில் கூட்டிய கட்டத்தில் உழவர் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தொண்டு நிறுவனங்கள்தாம் கலந்துகொண்டன. உழவர்களின் சிக்கல்களுக்கு சீமை உரங்கள் மட்டும்தான் ஒரே காரணம் என்று அவர்கள் அடித்துக்கூறினர்.

பின்னர் எமது இயக்கத்தின் சார்பில் பெரியாற்று அணை நீர் உரிமைப் போராட்டம் குறித்து கம்பம் உழவர் சங்கத் தலைவர் அப்பாசு என்பவரிடம் அவர் வீட்டில் சந்தித்து எம் கருத்தை எடுத்துரைத்தோம். அடுத்த நாள் காலையில் எங்களை அவர் வரச்சொல்ல, சென்ற போது வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்கள் எங்களைத் திட்டி விரட்டினர்.

அதன் பின்னர் மதுரையில் பெரியாற்று நீருரிமை குறித்து ஒரு மாநாடு நடந்தது. அதை திரு.தியாகு அவர்கள் ஒருங்கிணைத்தார் என்று நினைவு. அதில் அந்த அப்பாசும் கலந்து கொண்டார். அவர் தி.மு.க. என்று அறிந்தேன். மாநாட்டு மலருக்காக மதுரை திரு.வி.மாறன் கட்டுரை கேட்டிருந்தார். விடுத்தேன். மாநாட்டில் என் கருத்துகளை எடுத்துரைத்தேன். அனைவரும் பாராட்டினர். மாநாட்டு மலர் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பூ.அர.குப்புசாமியும் கலந்துகொண்டார். பின்னர் அப்பாசு அவர்கள் கேட்டதற்கு இணங்க பெரியாற்று ஆணையைக் கட்டிய ஆங்கிலப் பொறியாளர் பென்னிக்குயிக்குக்கு ஒரு சிலை வைத்துக்கொடுத்தார் கருணாநிதி. பெரியாற்று அணை நீருக்கு நமக்குக் கிடைத்த விலை இந்தச் சிலைதான். ஆனால் கருணாநிதிக்கோ கேரளத்தில் இரண்டு மூன்று தொ.காட்சி வாய்க்கால்கள் கிடைத்தன. நமக்குத் தெரியாமல் என்னென்னவோ, எத்தனை எத்தனையோ! தி.க. தலைவர் கி.வீரமணி செயலலிதாவின் காலடியில் இருந்த போது கருணாநிதியைக் குறைசொல்ல ஒரு வாய்ப்பாகக் காவிரிச் சிக்கலை எடுத்துவைப்பவராகச் செயற்பட்ட பூ.அர.குப்புசாமி, “மானமிகு” வீரமணி கருணாநிதியின் காலடிக்கு வந்ததும் ஓய்வுக்குப் போய்விட்டார்.

மதுரை மாநாடு உண்மையில் பூ.அர.குப்புசாமியின் முயற்சிக்கு இணையாக தி.மு.க. சார்பில் நடத்தப்படதுதான். இரண்டும் ஒரு நாடகத்தின் இரண்டு அங்கங்கள். தமிழகத்திலுள்ள “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் கருணாநிதி பக்கம் இருந்ததற்கு இம்மாநாடும் ஒரு சான்று.

தஞ்சையிலும் ஒரு பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் நடந்தது. நானும் கலந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். இது குறித்து த.தே.பொ.க.தலைவர் மணியரசனுடன் மடல் போக்குவரத்தும் வைத்துக்கொண்டேன். எந்தப் பயனும் இல்லை. இங்கும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு எந்தத் “தமிழ்த் தேசிய” அமைப்பும் முன்வரவில்லை.

இதற்குக் காரணம்தான் என்ன? நாம் மேலே குறிப்பிட்டவாறு “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகளின் கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். தாம் வாழும் மண்ணின் மீது மனத்தளவில் வேர் கொள்ளாதவர்கள் இவர்கள். ஊர்ப்புறங்களிலிருந்து வெளியேறிய பார்ப்பனர்கள் அனைந்திந்தியப் பணிகளிலும் பெரும் நிறுவனங்களின் ஆட்சிப் பணிகளிலும் இடம் பிடித்தனர். அவர்களோடு இவர்கள் ஒதுக்கீட்டின் மூலம் பங்குக்காகப் போட்டியிடப் போராடுகின்றனர். வெளிநாடுகளிலும் பார்ப்பனர்களோடு இதே போட்டி உள்ளது. அதனால் பார்ப்பனர்களே அவர்களின் முதல் எதிரி, பெரிய எதிரி. (எலிக்கு பூனைதான் உலகிலேயே பெரிய விலங்காம் தோழர் லேனின் அடிக்கடி சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டு இது.) அவ்வாறு தமிழகத்திலுள்ள பார்ப்பனரல்லா “கீழ்” (பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட) சாதிகளில் மேல்தட்டிலுள்ள ஒட்டுண்ணி வாழ்க்கையை நாடுவோரின் நலன்களை நிகரளிப்பவர்களாகவே இந்தத் தலைவர்கள் விளங்குகின்றனர்.

இந்த ஒட்டுண்ணிப் பணிகளில் இடம் பிடிப்பதற்காகப் போராடிப் பெற்ற ஒதுக்கீட்டினால்தான் தமிழக மக்கள் அணு அணுவாகச் சிதைந்து சிதறிக் கிடக்கிறார்கள். ஒதுக்கீட்டுக்கான போராட்ட காலத்தில் பார்ப்பனர் தவிர்த்த அனைத்துச் சாதியினரும் தம் சாதிவெறியைச் சிறிது அடக்கி வைத்திருந்தனர். ஆனால் ஒதுக்கீடு கிட்டியதும் முதலில் வெள்ளாளர் உட்பட பிற மேல்சாதியினர் தமக்கு வரும் இழப்பை ஈடுகட்ட அரசுடைமை நிறுவனங்களில் இடம்பிடித்துத் தப்பித்துக்கொண்டனர். அத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் படித்தவர்களை வெளிக்கொணர முடியாததால் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டால் எந்தப் பெரும் சிக்கலும் உருவாகவில்லை. ஆனால் படித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்து அதற்கு வேலைவாய்ப்புகள் ஈடுகொடுக்க முடியாதபோது சிக்கல்கள் உருவாயின. முதலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையில் மாணவர்கள் மட்டத்தில் மோதல்கள் வெடித்தன. அடுத்து பிற்படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்றொரு வகைப்பாட்டுக்காகப் போராட்டம். தாழ்த்தப்பட்டோரில் பறையர், பள்ளர்களிடையில் பிளவு. கிறித்துவர்களிடையில் மேல்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிளவு. புதிய புதிய சாதி அமைப்புகள். தங்கள் சொந்த நலன்களைக்காகவும் மேல்மட்டத்தினர்க்கு ஒதுக்கீடு கிடைக்கவும் அடித்தள மக்களுக்குச் சாதிவெறியூட்டிப் பிற சாதி மக்களோடு மோதவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக்கி விலை பேசி விற்கும் தலைவர்கள் ஒவ்வொரு சாதியிலும் சாதிப் பிரிவிலும் உருவாகிவிட்டது என்று தமிழகத்தில் மக்கள் அணு அணுவாகப் பிளக்கப்பட்டுள்ளனர். சமயங்களுக்குள்ளும் புதிது புதிதாகப் பிளவுகள் தோன்றிவருகின்றன. பிற மொழி பேசும் மக்களிடையிலும் இதே நிலை.

ஒரு நெருக்கடித் தீர்வாக மட்டும் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வென்ற உடனேயே நம் தலைவர்கள் நாணயமானவர்களாக இருந்திருந்தால் அனைவருக்கும் கல்விக்காகப் போராடி திட்டங்களும் தீட்டியிருப்பார்கள். அதுதான் போகட்டும் இன்றைய “சாதி ஒழிப்புப் புரட்சியாளர்”கள் அந்தத் திசையில் சிந்திக்கவாவது செய்திருக்கிறார்களா? செய்யாமல் போனாலும் போகட்டும், கேடாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடும் “தமிழீனத் தலைவர்”தானே 1க்கு 20 ஆக இருந்த ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1க்கு 40 ஆக்கியது? கருணாநிதிதானே பள்ளிகளில் காலியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமலும் தொடக்கப்பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக்கியும் குழந்தைகளை ஆங்கில வாயில் பள்ளிகளுக்குத் துரத்தியது? இன்று புதிய புதிய “திட்டங்களி”ன் பெயரில் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவே இல்லாத நிலையை உருவாக்கி பண்டை வரணமுறையைப் புகுத்திக்கொண்டிருப்பது? கருணாநிதியின் பின்னர் அணிவகுத்து நிற்கும் உங்களுக்கு சாதி ஒழிப்பைப் பற்றியும் வருணமுறை ஒழிப்பைப் பற்றியும் பேச என்ற தகுதி இருக்கிறது? சாதி சார்ந்த, வருணம் சார்ந்த உங்கள் மனச்சாய்வை இது காட்டவில்லையா? சொந்தச் சாதி ஏழை மக்கள் உங்கள் மட்டத்துக்கு உயரவிடாமல் தடையாயிருப்பது நீங்கள் தானே?

மக்களுக்கு எதிராக அரசூழியரை ஊட்டி வளர்க்கும் கருணாநிதி அவர்களுக்கு இடையிலும் பல்வேறு பிரிவுகளை உருவாக்கித் தீர்க்க முடியாச் சிக்கல்களாக்கி வைத்துள்ளார். இதனால் முழுத் தமிழ்க் குமுகமே எண்ணற்ற குழுக்களாகப் பிளவுண்டு ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பது தவிர வேறு நோக்கில்லாமல் போயிற்று. அதனால் ஆட்சியாளர்கள் அயலாருடன் சேர்ந்து நடத்தும் கயமைகள் மக்களின் கவனத்துக்கு வராமலே போகிறது. மார்வாரியையும் மலையாளியையும் விட அண்டை வீட்டுக்காரனே முதல் எதிரியாகத் தெரிகிறான் நமக்கு. அப்படியிருக்க ஈழத்தவரை அழிக்கும் இராசபக்சே மீதோ அவர்களுக்குத் துணையாக இருக்கும் கருணாநிதி மீதோ சோனியா மீதோ நமது கவனம் எப்படிச் செல்லும்?

அண்டை மாநிலங்களைப் பொறுத்தவரை சென்னை மாகாணத்திலிருந்த அண்டை மாநில மொழி பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்கள் தொடர்பாக வந்த மனப் புகைச்சலுடன் பண்டை வரலாற்றுத் தொடர்ச்சியான பகைமையும் உண்டு. இதனையே மூலதனமாகக் கொண்டு அங்கு ஆண்டுவரும் இந்தியக் கட்சிகள் அதைப் பகையாக்கி அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறார்கள். ஆனால் வல்லரசியம், தில்லியின் மேலாளுமைகள் என்ற வகையில் பல நெருக்கடிகள் அம்மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களுக்கும் இருக்கின்றன. எனவே உண்மையான தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் சென்றால் அங்கெல்லாம் தேசிய நலன்களைக் கொண்ட குழுக்கள் வெளிப்பட்டு பகைமை உணர்வுகளைத் தணிக்க முனையும். ஒத்துழைப்புகள் உருவாகும்.

நம் நாடு என்னதான் வல்லரசிய ஊடுருவலால் முதலாளிய நாடு போன்று தோன்றினாலும் அத்தோற்றம் மிக மேலோட்டமான ஒரு போர்வையே. வளர்ச்சி என்பது உண்மையில் வீக்கமே. உண்மையில் அடித்தளத்தில் நிலக்கிழமைக் கூறுகளும் குக்குல(இனக்குழு)க் கூறுகளுமே மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை உடைத்து தேசிய முதலாளியத்தை நோக்கிச் செல்லும்போதுதான் சாதியற்ற நிலைமைக்கான அடித்தளம் உருவாகும்.

தேசிய அரசியல் விடுதலையாயிருந்தாலும் பொருளியல் விடுதலையாயிருந்தாலும் இன்றைய தமிழகத்தில் அதற்கான முலவிசை நிலக்கிழமைக் குமுகத்திலுள்ள முற்போக்கு விசைகளே. அவை வளர்ந்து தேசிய முதலாளியத்தை வளர்த்துப் புரட்சிகரமான பாட்டாளியரை உருவாக்குவது வரை முதலாளியரும் பாட்டாளியரும் இணைந்து தேசிய எதிரிகளையும் நிலக்கிழமைக் கூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் வெளியிலிருந்து இறக்குமதியான பாட்டாளியக் கோட்பாடு தேசிய முதலாளியம் உருவாகத் தடையாக இருக்கிறது. அதனை மாற்றவே நாம் பங்கு வாணிகம் என்ற சூதாட்டம் இல்லாத பங்கு மூலதனத்தில் பாட்டாளியரும் முதலாளியரும் கூடி இயங்கும் ஒரு கூட்டுடைமை முதலாளியத்தைப் பரிந்துரைக்கிறோம்.

“தமிழ்த் தேசிய” இயக்கங்களும் “தமிழ்” இயக்கங்களும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு மாற்றாக ஈழவிடுதலைப் போரைப் பார்த்தும் காட்டியும் மனநிறைவடைந்து வந்தன. இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் பிற அரங்குகளிலும் தமிழக விடுதலை (அது என்னவோ கிட்டிப்புள் விளையாட்டு என்பது போல் – அதுதானே நம் “மரபு” விளையாட்டு) பற்றி அல்லது தமிழ்மொழி வளர்ச்சி, அதற்கு எதிரான நிலைமைகள் பற்றிப் பேசுவர். இறுதியில் ஈழத்துவிடுதலைப் புலிகளின் வெற்றி முழக்கம் பற்றி நெடுமாறன் விரிவான ஒரு உரை நிகழ்த்துவார். தன்னால் இயலாதவன் அடுத்தவன் புணர்வதைப் பார்த்தோ அதைப் பற்றிப் பேசக் கேட்டோ உணர்ச்சியும் உவகையும் மனநிறைவும் கொள்வது போல நம் “தமிழ்த் தேசியர்கள்” மெய்ம்மறந்து மெய்சிலிர்த்துப் போவார்கள். இதுதான் ஆண்டுகள் பலவாகத் தமிழகத்தில் “தமிழ்த் தேசிய”ச் செயற்பாடு. இது உள்நாட்டின் மீது வேர் கொள்ளாத ஒரு நிலைப்பாட்டின் விளைவும் வெளிப்பாடுமன்றி வேறென்ன? ஈழத் தேசிய வெற்றி தமிழ்த் தேசிய வெற்றிக்குக் கொண்டு செல்லும் என்று முடித்துக் கூற முடியாது. ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டம் வலிமை பெற்றிருந்தால் அது கட்டாயம் இந்திய ஆட்சியாளரையும் கருணாநிதியையும் தடுத்து நிறுத்தியிருக்கும். ஈழத் தேசிய வெற்றிக்குக் கைகொடுத்திருக்கும். இன்றைய கையறு நிலை ஏற்பட்டிருக்காது என்பது உறுதியிலும் உறுதி.

எதுவுமே எப்போதுமே காலங்கடந்ததாகி விடாது. காலம் எப்போதுமே புதிய வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருக்கும். உன்னிப்பாகப் பார்த்து முன்னேறுவோம்! வெல்வோம்!

தேசிய விடுதலை என்பது அரசியல் விடுதலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியிருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை பொருளற்றது, பயனற்றது.

பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை தில்லியிலிருக்கும் அதிகாரத்தைச் சென்னைக்குக் கொண்டு வரும்; கருணாநிதி, செயலலிதா வகையறாக்கள் கேள்வி கேட்பின்றிக் கொள்ளையடிப்பார்கள் அவ்வளவுதான்,

நாம் மக்களுக்கான பொருளியல் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம்! அரசின் ஆட்சியாக இருப்பது மக்களின் ஆட்சியாக மாற வேண்டுமென்று கேட்கிறோம்! இந்திய மக்கள் அனைவருக்கும் பொருளியல் உரிமைகள் வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு நாம் நம் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

தமிழக நிலவரம்(2009) .....4

1950கள் வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஊர்ப்புறங்களிலும் கோயில்களைச் சுற்றித் தங்கள் கூட்டாளிகளான தேவதாசிகளுடன் வாழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். கோயில் நிலங்கள் தவிர சொந்த நிலங்களும் வைத்திருந்தனர். குத்தகைப் பயிரிடுவோரிடம் நிலவுடைமையாளர் என்ற வகையிலும் கோயில் பூசாரிகள், கோயிலில் இலவயச் சோறு உண்பவர்கள் என்ற வகையிலும் அடங்காத திமிருடன் நடந்துகொண்டனர். அத்துடன் தேவதாசிகளைக் காட்டி ஆங்கிலரிடம் பெற்ற அரசுப் பதவிகளை வைத்துப் பெரும் நிலக்கிழார்கள், சமீன்தார்களையும் மிரட்டிவந்தனர். இதற்கு எதிர்வினையாக நயன்மைக் கட்சியும் பின்னர் தன்மான இயக்கமும் ஒரு புறமும் பொதுமை கட்சிகளின் உழவர் போராட்டங்களும் மறுபுறமும் அவர்களது செல்வாக்கை இழக்கவைத்தன. விட்டால் போதும் என்று கண்டவிலைக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்தார்கள். அவர்களுக்கு அதுவரை அடியாட்களாக இருந்த “போர்ச் சாதிகள்” எனப்படும், வந்தவர்களுக்கெல்லாம் அடிமைசெய்து தம் சாதி மேலாளுமையை நிலைநிறுத்தக் காத்திருக்கும் கூட்டம் அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றியதுடன் அவர்களிடமிருந்து எளிய மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் வசப்படுத்திக்கொண்டது.

இன்று ஊர்ப்புறங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பார்ப்பனர்களின் குடியிருப்புகள் அழிந்து போய்விட்டன. அவற்றில் புதிதாக மேனிலையடைந்த சாதியினர் குடியேறிவிட்டனர். எதிரில் வந்தால் ”ஒத்திப்போ” என்று பிறரைத் துரத்திய பார்ப்பனப் பெண்களைக் கழிந்த இரண்டு தலைமுறை மக்கள் அறியமாட்டார்கள். ஆனால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றாலோ கையை நீட்டிப் பேசினாலோ அடிக்க வரும் “போர்ச்சாதி”களை, அதாவது எளியவர்களைக் கொடுமைப்படுத்தும் நாயினும் கீழான கோழைகளைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, இன்று கூட திருநெல்வேலி மாவட்டத்தின் சில மூலைகளில், பல்வேறு தொழில்களும் வாணிகமும் செய்து சிலர் படித்து வேலாக்கும் சென்று நாலு காசு பார்த்தவுடன் நாங்கள் ஆண்ட மரபினராக்கும் என்று தம்பட்டமடிக்கும் மேலடுக்கினைக் கொண்ட நாடார் சாதியினர் மறவர் தெருக்களில் செருப்பணிந்தோ மீதிவண்டியிலோ செல்ல முடியாது என்பதை? ஏதோ சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்கும் தோழர்களே, குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, குளத்தில் குளிக்க, சுடுகாட்டுக்குப் போகும் பாதையில் செல்ல உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக, ஒடுக்கும் உங்கள் சாதியினருக்கு எதிராகப் போராட நீங்கள் ஒரு நாளாவது எண்ணியதுண்டா? உங்கள் சாதியாரின் வெறியை உலகின் கண்ணிலிருந்து மறைக்கத்தான் நீங்கள் பார்ப்பனர்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்களா? அல்லது உங்கள் மனச்சான்று உள்ளுணர்வைத் தாக்கி உங்கள் சிந்தனை திசைமாறிப் போய்விட்டதா? சொல்லுங்கள்!

மார்வாரியும் மலையாளியும் நம் நிலங்களைப் பறிக்கிறார்கள் என்று அவ்வப்போது கூறிக் கொள்வீர்கள். ஆனால் மார்வாரிகளின் விளைப்புப் பொருள்களுக்குப் போட்டியாக வளர்ந்துவிட்ட தமிழக மக்களின் தொழில்களை நசுக்கவென்று வருமான வரித்துறையை அந்த மார்வாரி ஏவிவிடுவதற்கு எதிராக என்றாவது நீங்கள் குரல் கொடுத்ததுண்டா? அல்லது வருமான வரித்துறையின் உண்மையான பயன்பாடு பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமா? வருமானவரியால் முடக்கப்படும் பணம் கள்ளப்பணமா? அதாவது சட்டத்துக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட பணமல்லவே அது! அது மூலதனச் சந்தையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை விதிவிலக்குகள்? கொஞ்சம் படித்துப் பாருங்கள் தோழர்களே! ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களிலும் தனியார்களிடத்திலும் மட்டும் வேட்டை நடத்துகிறார்களே அது ஏன்? அரசு தன் வருமானத்துக்கு இவ்வாறு மக்களின் வீட்டையும் நிறுவனங்களையும் பகல் கொள்ளையர் போல் சுற்றி வளைத்து சுவரை உடைத்து பேழையைப் பிளந்து படுக்கையைக் கிழித்து தரையைக் குடைந்துதான் வரி தண்ட வேண்டுமா? தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையில் மிகக் காட்டுவிலங்காண்டித்தனமான இந்த ஒடுக்குமுறை உங்கள் சிந்தையில் உறைக்கவில்லையே ஏன்? “பாட்டாளியப் புரட்சி” வெற்றிநடை போடுகிறது என்றல்லவா மகிழ்ந்து போவீர்கள்? உங்கள் நடவடிக்கைகள் மக்களைச் சார்ந்தவையல்ல, ஆட்சியாளரைச் சார்ந்தவை.

தமிழக எல்லைக்குள் எவர் பணம் ஈட்டினாலும் அது தமிழக மக்களுக்கு உரியது. அதன் பயன் தமிழக மக்களுக்குச் சேரவேண்டும். அதற்கு ஒரே வழி அது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் நுகர் பொருட்களையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து தந்து அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் தமிழகத்தில் முதலீடாக வேண்டும். அதற்குத் தடையாக எந்த வடிவில் யார் என்ன செய்தாலும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்ப்பதோ, சரியான செயல் என்று கோட்பாட்டுச் சான்று தேடுவதோ தமிழகத் தேசியத்துக்கு இரண்டகம் செய்வதாகும். இது தமிழகக் குடிமக்களைக் குறித்ததே அன்றி அயலாரைக் குறித்தல்ல. தமிழகத்தில் தொழில் நடத்தும் உரிமை 1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்திலிருந்து அன்றும் இன்றும் ஆதாயத்தை வெளியில் கொண்டு செல்லாதவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

மார்வாரியும் மலையாளியும் மட்டுமல்ல தமிழகத்து நிலங்களைக் கொள்ளையடிப்பது. அயல்நாட்டு நிறுவனங்களின் பெயரில் மூலதனமிட்டிருக்கும் கருணாநிதி குடும்ப வகையறாக்களும்தான். இந்தியப் பொதுமைக் கட்சிகள் தங்கள் அருஞ்செயலென்று மார்த்தட்டிக் கொள்வது நில உச்சவரம்புச் சட்டங்களை. உண்மையில் அமெரிக்க அமைப்பான நிகர்மை(சோசலிச) அனைத்துலகியத்தின் நெருக்குதல் மூலம் நிறைவேறியவையாகும் அவை. அவற்றில் உணவுப் பொருள் வேளாண்மைக்கு மட்டுமே உச்சவரம்பு என்பதைப் புரிந்து கொள்க. அதனால்தான் வருமான வரியால் தமிழக மக்கள் நசுக்கப்பட அத்துறையைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் மார்வாரியும் மலையாளியும் கருணாநிதியின் கூட்டமும் இங்கு நிலங்களை வாங்கிக் குவிக்க முடிகிறது. அதற்கு நபார்டு எனப்படும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியும் ஊழல் துணையிருந்து பெரும் பகற்கொள்ளை நடப்பதை அறிவீர்களா தோழர்களே!

நில உடைமையைப் பொறுத்தவரை சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சிற்றுடைமை வேளாண்மை என்றும் சோறு போடாது. ஆதாயம் கிடைக்காது என்பதோடு ஆண்டு முழுவதும் வேலையும் கொடுக்காது. சிற்றுடைமையாளன் வேறு சொந்தத் தொழில் இல்லையானால் கூலித் தொழிலாளி என்ற நிலையிலிருந்து உயரவே முடியாது.

தொழிற்புரட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பெரும்பண்ணை முறை புகுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பல எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடித் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிந்தது. இங்கு கடனுக்காகவும் விளைந்ததை விற்பதற்காகவும் ஏழை உழவன் தெரு நாயினும் கீழாகத் துயருறுகிறான். குத்தகை ஒழித்தால் உழவனுக்கு இழப்பீடு வழங்கத் தமிழ்நாட்டுச் சட்டத்தில் இடமிருக்கிறது. அதைப் பங்கு மூலதனமாக்கி அவனை உழைப்பாளியாகவும் கூட்டுடைமையாளனாகவும் ஆக்கலாம். அதற்கு தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் தன் செயல்திட்டத்தில் வகை செய்கிறது

மரபுத் தொழிலை மீட்டெடுப்பது பற்றி தோழர்கள் உரக்கப் பேசுகிறார்கள். மரபுத் தொழில் என்பதே நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்துக்கு உரியது. சாதி - வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைப்பில் பல்வேறு குழுவினர் அவரவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட வகையில் வாழ்வதற்கு வடிவமைக்கப்பட்டவை அவை. இன்று குமுகக் கட்டமைப்பு பெருமளவில் மாறியுள்ளது. மக்களின் தேவைகள் பழைய சிறைக்கூண்டுகளை உடைத்துவிட்டுப் பரவலாகிவிட்டன. அவற்றுக்கு ஈடு கொடுக்க மரபுத் தொழில்கள் உதவா. ஆனால், மரபுத் தொழில்கள் என்ற இந்த முழக்கத்தை வலியுறுத்துவது, வெளியிலிருந்து வரும் நெருக்கல்களை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல்கள் உள்ளே உருவாவதை உளவியலில் தடுக்கும் ஒரு முயற்சியாக முடிய வாய்ப்பிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பங்கள் அயலிலிருந்து மூலப்பொருட்களைத் தேவையாக்குகின்றன. இருக்கும் பல மூலப்பொருட்களை இல்லை என்றே அறிவித்துள்ளார்கள் நம் ஆட்சியாளர்கள். அயலார் அவற்றைக் கண்டு ஆட்சியாளருக்கு பங்கும் கொடுத்தால் அவற்றை எடுத்து அவர்களுக்கு வழங்குவார்கள், அல்லது இங்கேயே பயன்படுத்தி பண்டங்களைச் செய்து ஏற்றுமதியும் செய்து கழிக்கப்பட்ட கடைத் தரத்தை நம் மக்களுக்கு விற்கவும் செய்வார்கள். நம் மரபுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றுபவை. அவற்றை இன்றைய அறிவியலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பெருந்தொழில்களாக வளர்த்து நம் மக்களின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.

இங்கு மரபுத் தொழில்களுக்கும் மரபுத் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுத் தொழில்நுட்பங்களை மூத்த தலைமுறையினரிடமிருந்தும் ஆகம நூல்களிலிருந்தும் எளிதில் திரட்டிவிட முடியும்.

பெருந்தொழில்கள் என்றதுமே சுற்றுச் சூழல் சிக்கலை முன்வைக்கின்றனர் நம் தோழர்கள். இங்கு நாம் ஒரு அடிப்படையான உண்மையை மனங்கொள்ள வேண்டும். இன்று நம் நாட்டில் பெருந்தொழில் என்ற பெயரில் உள்ளது முதலாளிய விளைப்பு அல்ல, வல்லரசிய விளைப்பு ஆகும். அயலவருக்காக நம் நிலம், நீர், ஆற்றல்வளங்கள், சுற்றுச் சூழல்கள் பாழாக்கப்படுகின்றன. திண்டுக்கல்லிலும் இராணிப்பேட்டையிலும் பதப்படுத்தும் தோல் நமக்குப் பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்தும் செருப்பும் பைகளும் நெகிழி(பிளாட்டிக்)யால் செய்யப்படுகின்றன.

திருப்பூரில் செய்யப்படும் ஆடைகளும் அவ்வாறே. தூத்துக்குடியில் டெர்லைட் ஆலையில் தூய்மைப் படுத்தப்படும் செம்புக் கனிமம் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு பணிமுடிந்த பின் திருப்பியனுப்பப்படுகிறது. சூழல் சீர்கேடு மட்டும் நமக்கு. அதுபோல் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வடிவில் நம் மின்சாரமும் குடிநீரும் தூய்மையான காற்றும் இன்னும் என்னென்னவோ மறைமுகமாக ஏற்றுமதியாகின்றன. கல்லும்(சல்லி வடிவில்) மணலும் கருங்கல்லும் என்று எண்ணற்ற வகை மீளப்பெற முடியா இயற்கை வளங்கள் கணக்கின்றிக் கடத்தப்படுகின்றன. நாம் பரிந்துரைப்பது நம் நாட்டில் நம் மூலதனத்தில் நம் தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மக்களின் தேவைகளுக்காக நாமே பண்டங்களை விளைப்பதும் பணிகளைச் செய்வதுமாகும். அதற்கு நம் பண்டைத் தொழில்நுட்பங்களைத் தேடியெடுத்து இன்றைய அறிவியல் வளர்ச்சிநிலைக்கு ஏற்ப மேம்படுத்திப் பயன்படுத்துவதை. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பற்றிய கட்டுரைகளும் எழுத்துகளும் ஒவ்வொரு மூலிகையையும் எந்தெந்த நோய்க்கு எப்படி எப்படிப் பக்குவப்படுத்தலாம் என்று விளக்குகின்றன. அவற்றின்படி பயன்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு மருந்து செய்யும் கட்டமைப்பு வேண்டும், வீட்டிலுள்ள ஒருவர் மருந்து செய்யும் பக்குவத்தைக் கற்க வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மூலிகையில் அடங்கியிருக்கும் குறிப்பிட்ட நோய் தீங்கும் உரிப்பொருளை இனங்கண்டு பிரித்து மாத்திரையாகவோ குளிகையாகவோ, நீர்மமாகவோ கடைகளில் விற்றால் அலோபதி மருந்துகள்போல் பயன்படுத்துவார்களே! இன்றைய சூழலுக்கு அதுதானே பொருந்தும்? எந்த ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல், எதையும் கணக்கிலெடுக்காமல் மரபு, மரபு என்று மந்திரம் போடுவது ஏன்? பழைய சாதி சார்ந்த தொழில்நுட்பங்களை வைத்து அந்தக் கட்டமைப்பை மீட்கும் ஒரு அவாவின் தன்னுணர்வற்ற வெளிப்பாடா? அல்லது தாங்களே தவிர்க்க முடியாத மாற்றங்களைத் தங்களை விடத் தாழ்ந்த படியிலுள்ளோரும் மேற்கொள்வதைப் பொறுக்க முடியாத உள்ளுணர்வின் எரிச்சலா?

நம் தேவைகளுக்காக இயங்கும் பெருந்தொழில்களால் வெளிப்படும் கழிவுகள் சூழல்கேடுகள் ஏற்படும் அளவுக்கு இருக்காது. இருந்தாலும் அவற்றை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்கொண்டுவிடலாம். தேவை மக்கள் உதிரத்தைக் குடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாத ஓர் அரசும் இன்று போல் ஆட்சியாளர்களுக்கு விலைபோகாத “ அறிவாளிகளு”மே.

உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தாத, அதைக் கண்டுகொள்ளவே செய்யாத ஒரு சூழலைப் பார்ப்போம். உலகில் ஆண்டு முழுவதும் பெரும் ஏற்றத்தாழ்வில்லா வெப்பநிலையைக் கொண்டது தமிழ்நாடு. அந்த வெப்பநிலையை மின்னாற்றலாக்குவதற்குத் தேவைப்படும் அளமியம்(அலுமினியம்) தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் “கதிரவ” மின்னாற்றலைப் பயன்படுத்துங்கள் என்று எழுதிவைத்திருப்பர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று அரசு சாராயக் கடையில் எழுதி வைத்திருப்பது போல. மின் செலவை மிகுக்கும் தொ.கா.பெட்டியையும் எரிவளி இறக்குமதியை மிகுக்கும் வளி அடுப்பையும் இலவயமாக கோடி கோடியாக வழங்குவர். ஆனால் கதிரவ மின்னாக்கலுக்கு ஒரு தம்பிடி கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த கறுப்பு அறிவியல் கதிரவன் அப்துல் கலாம் கூட காட்டாமணக்கைப் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுவார். பதவியிலிருந்து இறங்கிய பின் எங்கோ கதிரவ ஆற்றலைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி. “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இது போன்ற சிக்கல்களைப் பேசுவதே இல்லை. தாம் இழந்து விடுவோம் என்று அஞ்சும் சாதி மேலாளுமையை மீட்பதற்காக அல்லது பேணுவதற்காக மரபு பற்றிப் பேசுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மின்சாரம் உருவாக்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கன்னெய்யம்(பெட்ரோலியம்), எரிவளி ஆகியவற்றில் 20 நூற்றுமேனிக்குக் குறையாமல் கிடைக்கும் தரகு, அவற்றுக்கு டாலரில் பணம் திரட்ட இங்கிருந்து ஏற்றுமதியாகும் மூளை வளம் உள்ளிட்டற்றின் மீது கிடைக்கும் தரகு ஆகியவைதான் குறி. அவர்கள் எப்படி உள்நாட்டு வளங்களை உள்நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவர்? இப்படி எதை எடுத்தாலும் தரகு பார்க்காமல் இருந்தால் தேநீருக்கு வக்கில்லாமல் அலைந்தவர்கள் 70 ஆண்டுகளில் 2 இலக்கம் கோடிக்கு மேல் சொத்துள்ள குடும்பத்தின் தலைவராக எப்படி முடியும்? தமிழனை ஈழத்தில் கொன்றழிக்கத் துணையிருந்துவிட்டுப் பாராளுமன்றத்தில் கட்சி பா.ம. உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றால் போதும், இங்கிருக்கும் “தமிழ்த் தேசியர்” களுக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிரெடுத்துவிடும், மன்னிக்க, குளிர்ந்துவிடும்!

மொழியைச் சுமப்பது அதைப் பேசும் மனிதன். மண் இல்லாமல் எப்படி மரம் இல்லையோ அப்படி மனிதன் இல்லாமல் மொழி இல்லை. மனிதனோ உணவின் பிண்டம் என்றார் நம் முன்னோர் (திருமூலரா?).


பார்ப்பனியம் என்பதே ஒட்டுண்ணி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது உடலுழைப்பை, குறிப்பாக, பண்டம் படைத்தல், பணிகள் செய்தல், பண்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாணிகம் போன்றவற்றை வெறுத்து வெள்ளை வேட்டி வேலை செய்வதைப் பெருமையாகக் கருதுவது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகர்களின் எழுச்சியின் போது கிடைத்த பட்டறிவிலிருந்து கடல் வாணிகர்களையும் உள்நாட்டு வாணிகர்களையும் கருவறுத்தனர் நம் ஆட்சியாளர் – பூசாரியர் கூட்டணியினர். அதனால்தான் அரேபியரும் ஐரோப்பியரும் வாணிகர்களாக இங்கு நுழைந்தபோது இங்கு அவர்களை எதிர்க்க விசை எதுவும் இல்லாது போயிற்று. இன்று வல்லரசியத்தின் ஊதுகுழலாகச் செயற்படும் பொதுமைக் கட்சியினரும் உள்நாட்டு வாணிகத்துக்கு எதிராக இருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் அமர்ந்துகொண்டு கொடுமை செய்வதற்கு எதிராகக் கொண்டுவந்த ஒதுக்கீட்டு முறை ஒட்டுண்ணி வாழ்க்கையின் மீதான பார்ப்பனர், வெள்ளாளரின் ஈர்ப்பை முழுக் குமுகத்துக்கும் பொதுவாக்கிறது. அந்த வெறியை மிகுப்பதாக அரசூழியர்க்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் கருணாநிநியின் செயல் அமைகிறது. அதனால் மக்களின் வருவாய், குறிப்பாக படித்துவிட்டுச் சில்லரை வேலைக்குப் போகும் மக்களின் வருவாய் அதனுடன் ஒப்பிட மலைக்கும் மடுவுக்கும் ஆயிற்று. அதோடு பன்னாட்டு முதலைகளின் புலன(தகவல்)த் தொழில்நுட்ப வளர்ச்சி அந்தத் திசையில் மக்களை ஈர்த்தது. ஆக, இன்று நன்றாக வாழ வேண்டுமென்றால் அயல்நாடு செல்ல வேண்டும் அல்லது அயல்நாட்டு நிறுவனத்தில் உள்நாட்டில் வேலை பார்க்க வேண்டும்.

இன்னொரு புறம் தமிழகம் உட்பட எல்லாத் தேசியங்களின் பொருளியலும் இந்திய அரசுடனும் வல்லரசியத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே நடுவரசிடமோ வெளி முகவாண்மைகளுடனோ மாநில அரசு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் மாநில மொழி உதவாது. அத்துடன் பொருளியலே ஏற்றுமதி இறக்குமதி சார்ந்தாக மாறியுள்ள நிலையில் எழுத்துப் பணிகளுக்கு மாநில மொழி உதவாது. இந்தப் பொருளியல் நெருக்குதலின் காரணமாக நம் விருப்பங்களையும் மீறி புதிய தலைமுறையினர் தாய்மொழிகளைக் கைவிட வேண்டிய உளவியல் நெருக்கலில் உள்ளனர். இது இந்தியா மட்டுமல்ல, உலகளாவுதலின் விளைவாக உலக முழுவதும் உருவாகியுள்ள நிலையாகும். இதிலிருந்து விடுபட இன்று உலகைப் பிடித்துள்ள பொருளியல் நெருக்கடியும் அதன் விளைவாக அயல்பணி வாய்ப்புகள் குறைவதும் பணக்கார நாடுகளில் பொருளியல் நெருக்கடியின் விளைவாக இனவெறி வளர்ந்து வருவதும் மிகவும் கைகொடுக்கும். தற்சார்புப் பொருளியல், அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சந்தையாக உள்நாட்டு அடித்தள மக்களை பொருளியல் வலிமையுள்ள நுகர்வோராக வளர்த்தெடுப்பது, அதாவது மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது போன்ற குறிக்கோள்களை முன்வைத்து ஊக்கமுடன் செயற்பட இதுவே சரியான நேரம். அதனோடு தாய்மொழி வளர்ச்சியையும் இணைத்தால் பொருளியலை அடுத்து தேசியத்தின் முகாமையான கூறான தேசியமொழி ஆட்சிக் கட்டில் ஏறுவதும் நிகழும். வேறு எந்த மந்திரத்தாலும் தமிழை அழிவிலிருந்து மீட்க முடியாது.


(தொடரும்)

8.7.09

தமிழக நிலவரம்(2009) .....3

பார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.

ஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா? இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.

சிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.

தொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).

அதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.

மேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.

இவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்
அவன்கட் படுமே
என்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.

திருவள்ளுவரே,
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.

ஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.

சிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.

எனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்புரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.

வருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.

சாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.

நம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை? அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்?

சரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது! இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா? ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள்? மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர்? சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா?

ஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.




(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....2

இன்றைய உலகச் சூழலில் உலகிலுள்ள ஆளும் கணங்களெல்லாம் அஞ்சி நடுங்குவது தேசிய விடுதலை இயக்கங்களைக் கண்டுதான். அவற்றில் பலவற்றை மார்க்சிய - இலெனியக் குழுக்கள் கையிலெடுத்துக் கொண்டு சிதைத்து ஆட்சியாளர்களின் ஆயுதத் திருட்டு விற்பனைக்குத் துணைபோகிறார்கள். மற்றவை முகம்மதிய மதவெறியர்களிடம் சிக்கி முகம்மதியர்களிடமிருந்தே அயற்பட்டு நிற்கின்றன. அது போன்ற அடையாளங்கள் எதுவுமின்றி நிலம், அதன் மக்கள் என்ற தெளிவான, அறிவியல் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடிய இயக்கமும் மக்களும் ஈழத்தவர்களே. அதனால்தான் உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அப்போராட்டத்தை முடக்கிவைத்துள்ளனர்.

தேசிய விடுதலைப் போர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமையானது. சென்ற நூற்றாண்டில் உலகப் போர்களில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் குடியேற்ற நாடுகளும் அரைகுறை அரசியல் விடுதலை பெற்றன. பொருளியல் வழியில் இன்று மறைமுக அரசியல் அடிமைத்தனத்துள் அவை உள்ளன. சோவியத்து வலிமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீட்டில்தான் வங்காளதேசம் அமைந்தது. ஆனால் இருவர் கைகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. இருவருக்கும் அது ஒரு கசப்பான பாடம். தென் அமெரிக்காவும் சிம்பாபுவேயும் அமெரிக்கத் தலையீட்டில் அதன் பொம்மைகளின் அரசுகளை அமைத்தன. செர்பியா போன்றவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தலையீட்டினால் விடுதலை பெற்றன. அத்தகைய எந்தத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கியுள்ளன. மனித உரிமைகள் பெயரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒரு நாடகம். தன் மீதான குற்றத்தைத் தானே உசாவ சிங்கள அரசைக் கேட்டுக்கொள்வது என்ற கோமாளித் தனம்தான் மேற்கு நாடுகள் முன்வைத்த தீர்மானம். திட்டமிட்டபடி அதை உலகம் பார்த்திருக்கவே முறியடித்தாயிற்று. ஈழத்தின் மீளமைப்புக்கு சிங்களர்க்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவ்வரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஈழத்தவர்களுக்கு எதிராகச் சிங்கள அரசுக்கு வலுயூட்டுவதுதான் உண்மையான நோக்கம்.

உலகில் இன்று தேசிய உரிமைச் சிக்கல் வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இல்லாதநாடு ஒன்று கூட இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கூட இப்போதைய பொருளியல் நெருக்கடியில் அது வெளித்தோன்றலாம். ஆத்திரேலியாவில் தோன்றி, இங்கிலாந்தைத் தொட்டுள்ள “இனவெறி” அமெரிக்காவில் தற்காலிகமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அது வெடித்து அடுத்த கட்டமாக தேசியங்களின் முரண்பாடாக வெளிப்படலாம். எனவேதான் உலகின் அனைத்து அரசுகளும் இணைந்து நிற்கின்றன.

பிற நாடுகளை ஈழத்தவர்க்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவைச் சுற்றி சீனம் அமைக்கும் தளங்களில் ஒன்று ஈழத்தில் இருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவைச் சுற்றி வளைக்க அமெரிக்கா இட்ட திட்டத்தை அதன் கூட்டாளியும் அடியாளுமாகிய சீனம் நிறைவேற்றுகிறதோ என்றொரு ஐயம். இந்தத் திட்டத்துக்கு இந்திய ஆளும் கும்பல், கருணாநிதி உட்பட விலை போயிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நேரு குடும்பம் இன்று வெளிநாட்டுக் குடும்பம் ஆகிவிட்டது. ”உள்நாட்டு”த் தலைவர்களின் மகன், மகள், மருமகன், மருமகள், அல்லது அவர்களுடன் பேரன் - பேத்திகள், ஏன், நம்மூர் அரசூழியர்கள், பேராசிரியர்கள் கூட பிறங்கடைகளுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அந்நாடுகளில் குடியேறி விடலாமே! இன்னும் இங்கு இருப்பது கூட அவ்வளவு பாதுகாப்பல்லவே!

இவர்கள் இப்படிப் போய்விட்டால் கூட நல்லதுதான். இங்கு கசடுகள் கழிந்த குமுகத்தைப் புத்தம் புதிதாகக் கட்டியெழுப்பலாமே!

ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் ஓடிப்போய்விடப்போவதில்லை. ஒருவேளை போர் வந்தாலும் போர்க்களத்தில் நிற்கப்போவது இராகுலும் தாலினுமா? உயிரை விற்றுக் குடும்பத்தைக் காப்பதற்கு ஆயத்தமாகத்தான் வயிறு காய்ந்த ஒரு பெரும் படையைக் குடிமக்கள் என்ற பெயரில் தீனி போடாமலே வளர்த்துவைத்துள்ளோமே!

போர் வரவேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை. வராவிட்டாலும் சீன அச்சுறுத்தல் என்ற பெயரில் சீனத்திடமிருந்தே கூட ஆயுதம் வாங்கித் தரகு பார்த்துவிடுவோமே!

இந்தப் பின்னணியில் எந்த ஒரு தேசியமும் தனித்து விடுதலைப் போரை நடத்த முடியாது. தேசியங்களுக்குள் உறுதியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு தேசியத்தின் மக்களிடையிலும் எய்தத்தக்க மிகப் பெரும் ஒற்றுமையை எய்தியாக வேண்டும். அதற்கு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைக் கையிலெடுத்து அவர்களை ஆளுவோருக்கு எதிராக நிறுத்த வேண்டும். ஆனால் “தமிழ்த் தேசிய”, இயக்கங்களும் “தமிழ்” அமைப்புகளும் மக்களைப் பற்றித் துளிக்கூட கவலைப்படவில்லை. அவர்கள் ஆளுவோரின் பின்னால் நிற்கிறார்கள். மக்களும் ஆளுவோரின் பின்னால் நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலே விளக்கியவாறு 2009 தேர்தலின் போது ஒன்றிரண்டு பேரவைக் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்துவிட்டுத் தாங்கள் கருணாநிதியின் கையாட்கள் என்பதைப் பறையறையாமல் அறிவித்தனர்.


(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....1

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய அரசு மற்றும் கடற்படை உதவியுடன் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது குறித்து தமிழீனத் தலைவர் தில்லிக்கு மடல்கள் தீட்டி அதைப் பற்றி தாளிகைகளுக்குத் தெரிவிப்பதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பணம் விளையும் அமைச்சகங்கள் கேட்பதற்காகத் தில்லிக்குப் போவார், ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி தீர்மானம் போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விலகல் மடல்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80,000 கோடி ஊழல் குற்றச் சாட்டைக் கைவிட வைக்க அவற்றை வைத்து மிரட்டவும் செய்வார்.

சிவசங்கரமேனனையும் எம்.கே.நாராயணனையும் வரவழைத்து ஈழத்தவர்களை அழிப்பதற்கும் தமிழக மக்களை ஏய்ப்பதற்கும் அறிவுரைகள் வழங்குவார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகளை எதிர்த்து குறிப்பிடத்தக்க குரல் எதுவும் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து எழவில்லையே ஏன்? மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் போது ஒரு சில ஆயிரங்கள் என்ற அளவில்தானே இவர்களால் தொண்டர்களை ஈர்க்க முடிகிறது, அது ஏன்? அந்த ஒரு சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இவர்களுக்குப் பணம் வந்துவிடுகிறது. உண்ணா நோன்பிருந்த வழக்கறிஞர்களிடையில் காவல்துறையினரைக் கொண்டு கருணாநிதியும் சுப்பிரமணியம்சாமியும் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லையே ஏன்? தன்னெழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களோடு தொடர்பு கொள்ளவும் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? இவை அனைத்துக்கும் முடிவுரை கூறுவது போல் “ஈழச் சிக்கலால் தமிழகத் தேர்தல் களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை” என்று கருணாநிதியின் திருமகன் தாலின் அறிவித்தாரே, அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வந்தது? “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் அனைத்துமே எப்போதுமே கருணாநிதியுடன் இணங்கியே வந்துள்ளதுதான் இதற்கெல்லாம் காரணம். உள்ளே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளியிலிருந்து கூர்ந்து நோக்குவோருக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பக்கம் கருணாநிதியின் “மனிதச் சங்கிலி” என்றால் இன்னொரு பக்கம் நெடுமாறனின் “மனிதச் சங்கிலி” என்று ஈழத்தவர்க்கான தமிழகத்தின் எதிர்வினை கூத்தாடிகளின் தெருக்கூத்தாகிப் போனது.

“தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகளின் இன்றைய திரைத்துறை மின்னல்களான சீமான் வகையறாக்களின் துணையோடு நெடுமாறன் தலைமையில் பேரவைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் தேர்தல் பரப்புரை செய்தனரே, அதன் பொருள் கருணாநிதியின் செயல்பாடுகளில் இவர்களுக்கு முழு உடன்பாடு என்பதா அல்லது அது கருணாநிதியின் நடவடிக்கைகளில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற இவர்களின் கணிப்பின் வெளிப்பாடா?

தேர்தல் முடிவுகளில் ஈழத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசித்திரிந்த பேரவைக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வென்ற வேட்பாளரைச் சரிக்கட்டி சிதம்பரம் மட்டும் “வென்றாரே” அது பற்றிய “ஆதாய – இழப்புக் கணக்கை”க் கொஞ்சம் பார்ப்போமா?

சின்னப் பயல்கள் போல் “கிளாய்த்து”க்கொண்டு(கேட்டது கிடைக்கவில்லை என்றால் முறுக்கிக்கொண்டு சிறுவர்கள் மூலையில் போய் அமர்ந்துகொள்வதை இச்சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்) தில்லியிலிருந்து திரும்பிவந்தாரே தமிழீனத் தலைவர் தன் “சுற்றத்தாருடன்”, அவரைத் தட்டித் தடவிச் சரிக்கட்ட தில்லியிலிருந்து தூதுவர்கள் வந்ததும் கேட்ட அமைச்சகங்களெல்லாம் இவரைவிடக் கூடுதல் உறுப்பினர்களை வத்திருந்த வங்கத்து மம்தாவை விட முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதும் எதனால்? நெடுமாறன் வகையறாக்கள் இன்னும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; நான் நினைத்தால் பேரவைக் கட்சியையே தமிழகத்தில் தடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்ததனால்தானே? அப்படி இல்லாமலா தமிழக அமைச்சரவையில் இடம் கேட்கச் சென்ற பேரவைக் கட்சியினரிடம் இனி கருணாநிதிதான் உங்கள் தலைவர் என்பது போல் சொல்லி விடுப்பார் “தலைவி”?

அரசியலில் பழமும் தின்று பல கொட்டைகளையும் போட்ட, எதிர் எதிர்ப் பக்கங்களிலும் இருந்து ஆதாயங்களைப் பெறுவதில் கைதேர்ந்த தமிழகத்து “மாவீரனு”க்கு(நா, கண், காது கூசுகிறதா? எமக்கும் மனமும் எழுதுகோலும் கூசத்தான்கின்றன பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!) இந்தக் கணிப்பெல்லாம் இல்லாமலா இருக்கும்?

இவையெல்லாம் ஒரு முன்னேற்றப்படிதானே என்று மகிழ்ச்சி காட்டிய “தோழர்” மு.தனராசு வகையறாக்களுக்கெல்லாம் கூட “இவையெல்லாம்” முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?

இந்த நாடகத்தில் “வாழும் கலை” ரவிசங்கர், செயலலிதா, வைக்கோ, இராமதாசு ஆகியோரின் இடம் எது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் களத்தில் செயலலிதா பணம் ஏதும் இறக்கவில்லை என்று கூறப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

நாடகமே உலகம்! தமிழகமே நாடக மேடை! உலகத் தமிழர்களோ நாடகக் காட்சிகளை உண்மைகள் என்று நம்பும் ஏமாளிகள்!

கோடிகளில் கோடிகள் புரள்கின்றன. உலகத் தமிழர்களின் வாழ்வு அதனாலேயே பிறழ்கின்றது.

இரண்டிலக்கம் ஈழத்தவர்களையும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கூசாமல் கொடியவர்கள் கொன்ற பின்னரும் தமிழகத்தில் நிலவிய இந்த பிண அமைதியை நினைத்துப்பாருங்கள்! நாளை, நாள்தோறும் பெருகிவரும் மார்வாரி ஆதிக்கம் ஓர் ஊரில் பசித்துக் கிடக்கும் நம் மக்களையே கூலிப்படையினராக்கி நம் மக்களைத் தாக்கினால் ஓடிச் சென்று நம்மவர்களுக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி ஐயா நம்ப முடியும்? தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேரும் வெளியே இரண்டு கோடிக்கு மேலும் இருந்தும் மொத்தமுள்ள எட்டரைக் கோடிப் பேரும் ஆளற்றவர்களாக தனித்தனி மனிதர்கள் என்றல்லவா அம்மா ஆகிப்போனோம்!

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கான விடையைத் தேடுவோம்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் குழுக்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதியின் அறிவுரையால் அமைந்தவை. ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஒரு துறை சார்ந்த சிலர் அணுகினால் சங்கம் அமைத்துக்கொண்டு வரச் சொல்லுவார். சங்கம் அமைத்துப் பணம் திரட்டிக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்தால் சில வேண்டுகைகள் நிறைவேறும். பணம் திரட்டுவோர் ஒன்றுக்கு இரண்டாகத் திரட்டித் தமக்கு எடுத்துக் கொள்வர். இவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவார்களா?

இன்னொரு வகை, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இங்கு சங்கங்களை அமைத்து நம் ஆட்சியாளரோடும் தொடர்பு வைத்திருப்போர். தமிழ்நாட்டு மீனவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். அதனால்தான் சிங்களர் பறித்த ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றோ இரண்டோ இலக்கங்களைக் கொடுத்து நம் மீனவர்களைக் கருணாநிதி அரசால் அமைதிப்படுத்த முடிந்தது. ஆனால் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் என்ன செய்தன? ஓராண்டுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாநாட்டில் இப்பொருள் பற்றி நான் பேசத் தொடங்கியதுமே எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாகச் சீட்டு வந்தது. பின்னர் பேசிய ஒருவர் நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வெளியே சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

“தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோர் ஒன்றாகக் கலந்துதான் செயற்படுகின்றனர். அவர்கள் தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கின்றனர். ஒரு எடுத்துக்காட்டு மேலே நாம் சொன்னது. இன்னொன்று தமிழகத்தைக், தமிழகப் பொருளியலைக் குலைக்கக் கருணாநிதி அரசு நிகழ்த்தும் தொடர் மின்வெட்டு. 1974இல் இருந்தே தமிழகத்தில் தேவையில்லாமல் மின்வெட்டைக் கொண்டுவந்து தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு என்று ஊழலைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதி. அன்றிலிருந்து எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று எவரும் அறியமுடியாத நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத பகிர்மானக் குளறுபடிகள். இங்கு பற்றாக்குறை என்று கூறிக்கொண்டே அயல் மாநிலங்களுக்கு மின்சார விற்பனை. இன்று அயல் மூலதனம் என்ற பெயரில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் என்றும் பல்வேறு வளாகங்கள் என்றும் கூறிக்கொண்டு ஆளுவோர் தங்கள் சொந்த மூலதனத்தில் நடத்தும் தொழிலகங்களுக்குத் தடையில்லா மின்சாரம். சிறு, குறு தொழில்கள் இன்றைய பகிர்மானக் குழப்பத்திலும் காலம் குறிப்பிடாத, குறிப்பிட்ட காலத்தைக் கடைப்பிடிக்காத மின்வெட்டால் இயங்க முடியாமல், போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போக அதனால் ஆதாயம் அடையும் போட்டிக் குழுக்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டும் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கொடுமையைக் குறித்து “தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பேசும் எவராவது ஒரு மூச்சு விட்டிருக்கிறாரா? அதே நேரத்தில் செம்மொழி அறிவிப்பு, திருவள்ளுவர் சிலை, பாவாணர் சிலை, பாவாணர் கோட்டம் என்று மொழியின் பெயரைக் கூறிக்கொண்டு உண்மையில் மக்களின் வாழ்வுக்கு பயன்படாத வேலைகளுக்காகக் கூக்குரல் இட்டு அதை நிறைவேற்றினார் இதை நிறைவேற்றினார் என்று கூறி கருணாந்திக்குப் பாராட்டும் நன்றியும் கூறித் திரியும்”தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோரால் தமிழக மக்களுடன் என்ன தொடர்பை ஏற்படுத்த முடியும்? மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கும் இவர்களால் தமிழர்களுக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ என்ன நன்மை செய்ய முடியும்?


(தொடரும்)

5.7.09

விடுதலை பெற.....

08-09-1995,
ஆதளவிளை.

அன்புடன் அண்ணாச்சிக்கு,

வணக்கம்.

தீவட்டி இதழை பாளை இளைஞர் பீட்டர் மூலம் உங்களுக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தொ.பேசி மூலம் கேட்டபோது நீங்கள் சென்னை சென்றிருப்பதாக அறிய முடிந்தது.

தாராமதி இதழ் கட்டுரைகளைப் படித்தேன், மார்க்சியம் கட்டுரை எழுதி முடித்து வைத்திருக்கிறீர்களா? அக்கட்டுரை வந்த தாராமதி இதழ்கள் இருக்கின்றனவா?

நீங்கள் எழுதியிருந்த தமிழ்த் தேசியம் கட்டுரையின் ஒரு பகுதி விடுதலை பெற..... என்ற தலைப்பில் தீவட்டியில் வெளியிடப்பட்டதற்கு கடிதமொன்று வந்துள்ளது.


இதற்கு விடை மடல் எழுத வேண்டும். அடுத்த இதழில் வெளியிட 2 (அ) 3 பக்க அளவில் நிற்குமாறு ஒரு கட்டுரை தேர்ந்தெடுத்து வையுங்கள் அல்லது எழுதுங்கள்.

அன்புடன்
அசுரன்
தீவட்டி, "விடியல் இல்லம்" ஆதள விளை, வெள்ளமடம் (அஞ்), குமரி – 629 305.


===============

கடிதம்:

குமரிமைந்தன் எழுதிய விடுதலை பெற... என்ற கட்டுரையினை வாசிக்கும் போது தீவட்டியின் நோக்கம், குறிக்கோள் என்ன என அறிய ஆர்வம் ஏற்படுகிறது.

தேசிய இனச் சிக்கலில் ஒடுக்கும் தேசம்/ஒடுக்கப்படும் தேசியம் என இரு கூறுகள் இருக்கும். இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசியமாக தமிழ் தேசியம் உள்ளது. ஆனால், அதே சமயம் ஒடுக்கும் தேசமாக இந்திய தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக, தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே ′இந்திய தேசிய′ மாயையாகும்.

இதில் பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியினை பெறுவதற்கான போராட்டமே வகுப்புரிமைப் போராகும். இன்றைய சமுகம் சாதி எனும் கொடிய அமைப்பால் மக்களை பிரித்து வைத்துள்ளது. இத்தகைய சாதியினை ஒழிக்க வழிதான் என்ன? மனிதனின் பிறப்பு என்பதும் அவனது தொழில் என்பதையும் அவனது சாதியே நிர்ணயிக்கிறது. சாதியின் பெயராலேயே அவனுக்கு தரப்படும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எனவே, எந்தச் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியின் பெயரால் உரிமைகளைப் பெறுவதே வகுப்புரிமை எனப்படும் இட ஒதுக்கீட்டு முறையாகும். இதனைக் கொச்சைப்படுத்தி வெறும் வேலைவாய்ப்பு என சுருக்கியுள்ளார் குமரிமைந்தன்.

மேலும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாக பார்ப்பனர்களே உள்ளனர். எனவே பார்ப்பனர்களே நமது எதிரிகள். மேலும் பிற மாநிலத்தவர் இங்கு சுரண்டுவதும் கண்டிக்கத் தக்கதே. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பன ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.


மேலும், பொருளியல் விடுதலையும், மண் விடுதலையும் மட்டுமே ஒரு நாட்டின் விடுதலையைப் பெற்றுத் தராது. மக்கள் விடுதலை மட்டுமே உண்மையான விடுதலையாக அமையும். மண்ணுக்கு மட்டும் விடுதலை வாங்கி எவ்வித பயனுமில்லை. வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற ′விடுதலை′ என்பது மண்ணுக்கான விடுதலையே மக்களுக்கான விடுதலை அல்ல. பெரியார் கூற்றுப்படி ′மேடோவர்′ செய்யப்பட்ட ′அதிகார மாற்று′ ஆகும்.

மக்களுக்கான விடுதலை என்பது மக்களைச் சாதியத் தளையிலிருந்து விடுவித்து, பெண்ணடிமையை ஒழித்து, பெறும் விடுதலையே சிறந்ததாகும்.

சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக SC/BC ஒற்றுமையை வசப்படுத்துவதே, ஏற்படுத்துவதே சரியானதாகும். அதற்கான வழிமுறை இட ஒதுக்கீட்டு முறையே ஆகும்.

எனவே, தமிழ் தேசியத்திற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பு (SC/BC ஒற்றுமை), பெண் விடுதலை, போன்றவற்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

பூ. மணிமாறன்
மதுரை.

=================

விடை மடல்:

தமிழக் மக்களைத் திராவிட இயக்கம் எவ்வளவு குழப்பி வைத்துள்ளது என்பதற்குத் தோழர் மணிமாறனின் கடிதம் ஒரு சிறந்த சான்றாகும்.

1. இந்தியத் தேசியம் ஒடுக்கும் தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே இந்தியத் தேசியம்.


2. பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவதே ஒதுக்கீட்டின் நோக்கம். வேலைவாய்ப்பு தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்பது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

3. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பனர்களின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

4. மண்ணின் விடுதலை என்பது மக்களின் விடுதலை அல்ல.

5. சாதியை ஒழித்து, பெண்ணடிமையை ஒழித்துவிட்டுத்தான் தேசிய விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

6. சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்ததப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகும்.

முதலில் தேசிய ஒடுக்குமுறையின் நோக்கம் பற்றிய தோழரின் கருத்து என்னவென்பதே குழப்பமாக இருக்கிறது. ஆனால் இதில் முதலில் தெளிவு வேண்டும்.

1. தேசிய ஒடுக்குமுறையின் இறுதி நோக்கம் பொருளியல் சுரண்டலே. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேச மக்களின் உழைப்பினையும் செல்வங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மார்வாரிகள், அவர்களுக்கும் துணைபுரிந்து வல்லரசுகளுக்கும் இந்நாட்டின் செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்து அதில் பங்கு பெற்று இந்நாட்டின் மீது முழு ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்திய அரசின் அதிகாரக் கூட்டம். அந்த அதிகாரக் கூட்டத்துக்கு மூடுதிரையாக அமைந்து இந்தத் தேசியக் கொள்ளையில் பங்கு போடுவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

இந்த அதிகாரிகள் கும்பலில் பார்ப்பனர்கள் பெரும்பான்மையினர். பிற சாதியினர் இந்த அணியில் சேர்ந்தாலும் கொள்ளை நோக்கத்தில் மாறுபடுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துவோர் பார்ப்பனரே, பிற சாதியைச் சேர்ந்த கட்சியினரிடமும் இந்தக் கொள்ளையிலோ அல்லது அதற்குத் துணைபோவதிலோ மாற்றமில்லை.

2. மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவது தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்று உறுதிபடக் கூறுகிறார் தோழர். ஆனால் அதற்கு ஒதுக்கீடு ஏன் என்று தான் தெரியவில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வி இருந்தால் தானே அனைவரும் கல்வி பெற முடியும். ஆனால் கல்வியை விரிவுபடுத்து, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக்கு வகை செய் என்ற முழக்கத்தை இந்த ஒதுக்கீட்டுப் போராளிகள் இதுவரை முன் வைக்கவில்லையே ஏன்? தோழர் சிந்தித்துப் பார்க்கட்டும். கல்வி விலைப் பொருளாகிறதே. நாளுக்கு நாள் கீழ்மட்டத்து மக்களின் வறுமை பெருகுகிறதே; கல்வியின் செலவு உயர்கிறதே; பணம் படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே இதற்கு எதிராக இந்த ஒதுக்கீட்டு முழக்கம் செயல்படுகிறதா? கல்வியை இன்னும் ஒரு சலுகையாகக் காட்டுவது தானே ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் உட்பொருள். ஆகவே ஒதுக்கீடு என்ற முழக்கம் தானாகவே கொச்சைப்பட்டு நிற்கிறது. இன்று வேறு யாரும் அதைக் கொச்சைப்படுத்தத் தேவையில்லை. எனவே அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்ற போராட்டமே மறுக்கப்பட்ட கல்வியை அனைவரும் பெறுவதற்குரிய வழி.

3. தமிழகத்துப் பார்ப்பனர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூட முதலிடத்திலில்லை. தொழில் முதலாளிகள் என்ற நிலையிலும் தமிழக மக்களில் அவர்களுக்குத் தான் முதலிடம். (அவர்களுக்கு இணையாகவோ அல்லது அடுத்த கட்டத்திலோ செட்டியார்களும் அதற்கடுத்து நாடார்களும் வரக்கூடும்.) அவர்களது தொழில் நிறுவனங்களை விழுங்க மார்வாரிகள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தொழில் நிறுவனங்களின் ஆள்வினைக்கு (நிர்வாகத்துக்கு)த் தேவையான கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் என்பதாலேயே பார்ப்பனர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் அயலவர்க்குத் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே காலங்காலமாக விற்றுவிற்றே ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும் தமிழகத்திலுள்ள வெள்ளாளர்களும். இதுவும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்றாகும்.

4. மண்ணின் விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல. பொருளியல் விடுதலை தான் உண்மையான மக்களின் விடுதலை. மண்ணின் வளத்தின் மீதும் அந்த வளத்திலிருந்து உருவாகும் செல்வத்தின் மீதும் அந்த மக்களுக்குக் கிடைக்கும் தடையற்ற உரிமை தான் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமை. அந்த உரிமையிலிருந்துதான், அந்த உரிமைக்கான போராட்டத்தின் போதுதான், அந்தப் போராட்டம் கூர்மை பெற்று உச்ச கட்டத்தை அடையும் போதுதான் அனைத்து மக்களின் ஒற்றுமையின் தேவை அனைவராலும் உணரப்பட்டு அதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அம்முயற்சிகள் தாம் உண்மையான மக்கள் ஒற்றுமையை உருவாக்கும்.

5. மண்ணின் உரிமைக்கான, அதாவது பொருளியல் உரிமைக்கான போராட்டத்தில்தான் சாதிய ஒழிப்புக்குரிய களம் உருவாக முடியும். அப்போராட்டத்தில்தான் பெண்ணடிமைக் கருத்துகள் தளரும். பொருளியல் உரிமையோடு அனைவருக்கும் கல்வியும் கைவந்து வேலைவாய்ப்புகள் மட்டின்றிப் பெருகிப் பெண் தன் காலில் நிற்கும் சூழலில்தான் பெண் உரிமை முழுமை பெறும். சாதிகள் தொழிலடிப்படையில் அமைந்தவை தானே. அத்தொழில்கள் சிதைந்து அனைவரும் ஈடுபடத்தக்க பெருந்தொழில்களால்தான் சாதியத்தின் தொழிலடிப்படை முடிவுக்கு வரும். அது மட்டுமல்ல இன்று இருக்கின்ற ஊர்களின் அமைப்பே சாதித் தகர்ப்புக்குத் தடையானவையாகும். இந்த ஊர் மக்கள் தங்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறுமளவுக்குப் பொருளியல் வேகம் பெற்றால்தான் சாதியம் கலைந்து சிதையத் தேவையான பின்னணி உருவாகும். இந்த உண்மைகள் நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும். அதுவரை சாதி ஒழிப்பும் பெண்ணடிமை ஒழிப்பும் வெற்றுக்கனவாகவும் வெறும் முழக்கமாகவும் தானிருக்கும்.

6. சாதிய ஒழிப்புக்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகுமாம். இதற்கு ஏதாவது வசிய மருந்து வைத்திருக்கிறாரா தோழர். இன்று பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தான் முரணி நிற்கின்றனரா? பிற்படுத்தப்பட்டோர் என்ற வகைப்பாட்டினுள் வரும் அனைத்துப் பிரிவினரும் ஒதுக்கீட்டில் தத்தமக்கு அதிகப் பங்கு வேண்டும் என்பதற்காகத் தானே தனித்தனிச் சங்கங்கள் அமைத்து அனைவருக்கும் சாதி வெறியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் கண்ணையும் காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டுள்ளாரா? அல்லது நாம் அவ்வாறு பொத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இல்லாத அல்லது அருகி வரும் வேலை வாய்ப்புக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிகளாகப் பிரிந்தும் சாதிகள் உட்சாதிகளாகப் பிரிந்தும் சண்டை போடுவது அவருக்குப் புரியவில்லையா?

தாழ்த்தப்பட்டோரிலும் வேலை வாய்ப்புக்காகவும் சாதிய ஒடுக்குமுறையினாலும் தம்முள் பள்ளர், பறையர், சக்கிலியர் எனப் பிரிந்து நிற்பதைத் தோழர் அறியாரா?

பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. சாதியக் கொடுமைகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டும் தான் காரணமா? இந்த மக்களின் குருதியோடு கலந்து விட்ட ஒரு செயற்பாட்டின் உச்சியிலிருப்போர் தானே பார்ப்பனர். மக்களுக்குள் நிலைத்துவிட்ட இந்தச் சாதிக் கொடுமையின் அடையாளம் தான் பார்ப்பனர்களே ஒழிய வேறில்லை. சாதியம் அனைத்து மக்களிலும் நிலைத்து நிற்கிறது. இந்தச் சாதியம் இந்த நூற்றாண்ணில் இருமுறை தமிழகத்தில் இளகியது. ஒருமுறை ′இந்திய′ விடுதலைப் போரின் போது, மறுமுறை திராவிட இயக்கம் தமிழக அதாவது திராவிட விடுதலையையும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போதும் அந்த ஒதுக்கீடு என்று கிடைத்ததோ அன்றே அதில் பங்குச் சண்டைக்காகச் சாதிச் சங்கங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கி விட்டன. எனவே இன்றைய நிலையில் இல்லாத வேலை வாய்ப்புக்காக வலிந்து ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்துவது தமிழ்க் குமுகத்தைச் சிதைத்து அழித்துவிடும்.

கண்முன் நடப்பது தமிழக வளங்கள் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுச் செல்வத்தை வைத்திருப்போர் மார்வாடிகளாலும் வல்லரசு விசைகளாலும் இந்திய மாநில அரசுகளாலும் ஒடுக்கப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதுமாகும். அந்தச் செல்வத்துக்குத் தமிழக மக்கள் அனைவரும் உரிமையுள்ளவர்கள். அதற்காகப் போராடுவோம். அப்போராட்டத் தீயில் சாதி வேற்றுமைகளைப் பொசுங்க வைப்போம். இதைத் தன்னுணர்வுடன் திட்டமிட்டுச் செய்வோம்.

பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் மட்டும் வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை. எண்ணற்ற தங்கள் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் பெறுகிறார்கள். அதே போல் பிற சாதியினரும் சாதி வேறுபாடின்றி தங்கள் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தங்களிடமிருக்கும் வளங்களைத் திரட்டித் தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தடையாக நிற்கும் அரசின் சட்ட திட்டங்களையும் கட்டுத்திட்டங்களையும் எதிர்த்து அனைவரும் சாதிவேறுபாடின்றிப் போராடி வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த ஒதுக்கீடு என்ற மாயமான் பிற சாதிகளிடையில் செய்யும் சிதைவு வேலையைப் பார்த்தீர்களா? தமிழகத்தில் பார்ப்பனர்களை அடுத்துச் செல்வம் படைத்தவர்களாகிய நாடார்கள் பணம் திரட்டி மாநாடு கூட்டி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோரென்று அறிவிக்கக் கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைக்கும் இன்று அவர்கள் எய்தியிருக்கும் உயர் நிலைக்கும் அவர்களை பந்தயத்தில் முதலில் வந்தவன் போன்று இறுமாப்பெய்தித் தங்களை முற்பட்டவர்களென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு தமிழக மக்களின் ″பிற்பட்டோர் மனப்பான்மை″யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிப்பதற்காகக் கையூட்டு கொடுக்கவும் இன்று அவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இது எவ்வளவு கொடுமை? இந்த ″பிற்படுத்தப்பட்டோர் மனக்கோளாறு″ நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறது பார்த்தீர்களா? ″நாங்கள் எவருக்கும் சளைத்தவரில்லை″ என்று ஒவ்வொரு குழுவினரும் போட்டி போட்டு முன்னேறி வெளி எதிரிகளை அடித்துத் துரத்த வேண்டிய ஒரு சூழலில் என்னைப் பிற்படுத்து, மிகப்பிற்படுத்து என்று கைக்கூலி கொடுத்துக் காலைப் பிடித்துத் தன்மானமிழந்து கெஞ்சும் நிலைக்கு இந்த ஒதுக்கிட்டு முழக்கம் தமிழக மக்களைக் கொண்டு நிறுத்தியிருப்பது உங்கள் மனதைக் கலக்கவில்லையா? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புரட்சிகரமாக இருந்த இந்த முழக்கம் தமிழக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிச் சாதி வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நெருங்க வைத்தது. அப்போதே பொருளியல் உரிமைகளுக்காகவும் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியிருந்தால் ஒதுக்கீட்டிலும் வெற்றியடைந்திருப்போம்; ஒட்டு மொத்தமான வேலைவாய்ப்பிலும் நிறைவை எய்தியிருப்போம்; தமிழக மக்களின் உரிமைகள், தன்மானம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

கானல் நீரைத் தேடி ஓடும் மான்களாகத் தமிழக மக்கள் திசையறியாமல் ஓடுவது மனதை வாட்டுகிறது தோழரே. அருள்கூர்ந்து அவர்களுக்குச் சரியான வழி காட்டுங்கள்.

குமரிமைந்தன்.

28.3.08

தமிழ்த் தேசியம் ... 28

மனந்திறந்து... 18

ஒரு கட்டுரைக்கு எழுதிய முன்னுரை அதைவிட நீண்டதாய் அமைந்துவிட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பு மிக விரிவான பார்வையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகியதாக, அரசியல் அரங்குக்குள் அதன் எல்லை சுருங்கி விட்டது. அதன் முழுப் பரிமாணங்களையும் படிப்போர் முன் வைக்க வேண்டிய கடமையை மனதில் தாங்கித்தான் என் சொந்தப் பட்டறிவுகளை எடுத்து வைத்ததன் இன்னொரு பயனாக அதை நிறைவேற்றியுள்ளேன். இன்று பலர் நினைப்பது போல மொழியும் பண்பாடும் மட்டும் தேசியமல்ல, மொழி தேசியத்தின் அடையாளமாகச் சில இடங்களில் பயன்படக்கூடும், பயன்படாமலும் போகும். ஆனால் பண்பாடென்பது பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்து மாறத்தக்கது. இவை தவிர்த்த பிற தேசியக் கூறுகளை இம்முன்னுரையில் ஓரளவு நான் சுட்டிக் காட்டியுள்ளேன், சுருக்கமாக.

மொழிவளர்ச்சிக்கு அதைப் பேசும் மக்களின் பொருளியல், அதாவது அறிவியல் - தொழில்நுட்பம், பண்ட விளைப்பில் வளர்ச்சி முதலியவை இன்றியமையாதவை. அதே வேளையில் எந்த மொழியைக் கொண்டும் பொருளியல் வளர்ச்சியை எய்தலாம். இந்தியாவிலும் ஏழை நாடுகளிலும் பொருளியல் வளராமல் போனதற்கு மொழிச் சிக்கலல்ல காரணம். வல்லரசியப் பொருளியல் ஒடுக்குமுறையே காரணம். எனவே உண்மையும் நேர்மையுமுள்ள மொழி உணர்வாளர்கள் பொருளியல் உரிமைப்படையில் முன்னணிப் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் பொருளியல் வளர்ச்சிக்கு மொழி ஈடுகொடுக்க முடியாமல் போகும்.

இங்கே நான் பொதுவாழ்வில் ஈடுபட்ட, ஈடுபட்டுள்ள எத்தனையோ பேரைப் பற்றிய கடுமையான திறனாய்வுகளை முன்வைத்துள்ளேன். அவர்களில் பலருடன் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். பொதுவாழ்வில் எனக்கு முதலடி எடுத்துக் கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் என் ஆக்கங்கள் அச்சு வடிவம் பெறச்செய்து பெருமைப்படுத்திய குணாவும் அவர்களைப் போன்று பல்வேறு அளவுகளில் என் பொதுவாழ்வுப் பணியில் உதவியவர்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். ஆனால் அவர்களும் நானும் மேற்கொண்டுள்ள பணி முழுமை எய்த வேண்டும் என்ற உறுதியின் முன் என் நன்றியுணர்ச்சி நிற்க முடியவில்லை. அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று தமிழுணர்வு, தமிழ்த் தேசிய உணர்வு உடையவர்கள் அதற்காகப் பாடுபடுவர்கள் என்று அறியப்பட்டவர்களில் என்னுடன் ஏதோவொரு வகையில் உறவு கொண்டவர் அனைவரையும் பற்றிய திறனாய்வுகளை எழுதும் போது இப்படி அனைவர் மீதும் குறை சொல்கிறோமே, அது நம் பணியில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ, நம் பக்கம் வரத்தக்கவர்களை எதிரணியில் நிறுத்தி விடுமோ, நம் இயல்பு பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி விடுமோ என்ற மயக்கமும் தயக்கமும் இருந்தது. இருப்பினும் நமது பட்டறிவுகளை நமக்குத் தெரிந்த உண்மைகளை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த தவிப்புக்கான காரணத்தை அறியும் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகக் கிடைத்த உண்மை இது தான்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அயல்மொழியினரின் ஆதிக்கத்தின் எதிர்ப்பாகத் தமிழர் நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழ் பேசும் பார்ப்பனரின் பங்கு முகாமையானது; அது விரிவடைந்து பார்ப்பன எதிர்ப்பாகத் திரிபடைந்து பார்ப்பனர் தவிர்த்த மேற்சாதியினரின் கோட்பாடாக நயன்மைக்கட்சி அரசியல் தோன்றியது. அதில் மும்பை மார்வாரி மூலதனத்தின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த தமிழகப் பொருளியல் விசைகளின் பங்கும் ஊடு இழையாக, ஆனால் வெளிப்படத் தெரியாமல் மறைந்திருந்தது. பெரியாரின் முனைப்பான பார்ப்பன எதிர்ப்பில் அது களத்திலிருந்து அகன்றது. ஆனால் அவரது இந்திப் போராட்டத்தில் தமிழகத் தேசிய உணர்வுகள் திட்டவட்டமான வடிவில் வெளிப்பட்டன. ஆனால் பெரியார் அதனை நேர்மையாகக் கையாளவில்லை. பொருளியல் ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்து வைத்த அண்ணாத்துரையும் அதனைத் திசைதிருப்பி இந்திய அரசின் முதலீடுகளில் பங்கு என்று மாற்றினார். இதனால் தமிழ்த் தேசியப் பொருளியல் விசைகளுக்கான அரசியல் அரங்கமே இல்லாமல் போய்விட்டது. எனவே தமிழ்த் தேசியம் என்றது ஒரு சிறு ஒட்டுண்ணி வகுப்பின் அரசு வேலைவாய்ப்புகள், அரசியல் மூலம் கிடைக்கும் ஊழல் ஆதாயங்கள் அவற்றுக்காகப் பார்ப்பனரை எதிர்ப்பதும் தாங்களே போட்டிக் குழுக்களாக மாறித் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தில்லி அரசின் முன் மண்டியிட்டுக் கிடப்பது என்றும் முடங்கிப்போய்விட்டது. அதனுடன் ″மார்க்சிய″த்தின் பெயரால் செயற்பட்டவர்களின் குறுக்கீடு. இன்று இந்த இரண்டு இயக்கங்களும் மயங்கிச் சேர்ந்த ஒரு விரிவான ஒட்டுண்ணிக் கும்பலின் கையில் தமிழகத் தேசியம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வகுப்புகளின் முழக்கம் தான் மொழி - பண்பாடு குறித்த தமிழ்த் தேசியம்.

தேசிய ஒடுக்குமுறையின் உண்மையான நோக்கம் பொருளியல் சுரண்டலே. அது மக்களின் மொழி - பண்பாடுகளை அழித்தும் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மொழி - பண்பாடுகளைக் காக்கிறோம் என்று கூறி உள்நுழைந்ததும் அதைச் செய்ய முடியும். மார்வாரிகளும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) இயக்கத்தினரும் சேர்ந்து காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியது, அண்மையில் சென்னையில் நடைபெற்ற பா.ச.க. மாநாட்டில் திருவள்ளுவர் பெயரில் அரங்கம் அமைத்தது போன்ற செயற்பாடுகளையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆய்வாளர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் தூக்கிப் பிடித்ததையும் இன்று சப்பானியர் மொழி அடிப்படையில் உறவு கொண்டாடுவதும் இது போன்ற மொழி - பண்பாட்டு ஆர்வலர்கள் மூலம் மக்களின் பரிவுணர்வைப் பெற்றுத் தம் சுரண்டல் கொள்ளைக்கான எதிர்ப்பைத் திசைதிருப்பத்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அயலாரின் பொருளியல் ஆதிக்கம் முழுமை பெற்றபின் நாம் என்ன பாடுபட்டாலும் மொழியைப் பாதுகாக்க முடியாது, மேம்பட வேண்டிய பண்பாடு தரம் தாழ்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த மொழி - பண்பாட்டுத் தேசிய விசைகளின் முற்றுகையை உடைத்து அடித்தள மக்களின் பொருளியல் உரிமைகள் மீது வேர்கொண்ட ஓர் உண்மையான தேசியப் போராட்டத்தினுள் தமிழகத்தை இட்டுச் செல்ல வேண்டிய உடனடித் தேவை உள்ளது. இந்த அடிப்படைப் பொருளியல் வகுப்புகள் இன்று நேற்றல்ல, தொல்காப்பியக் காலத்திலிருந்தே தமிழகத்து ஒட்டுண்ணி வகுப்புகளால் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஒதுக்கல், ஒடுக்கல் அடிப்படையில்தான் தமிழக - இந்தியப் பண்பாடே நிலைகொண்டுள்ளது. பொருளியல் உரிமை, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஆங்கில - ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் இந்தியப் பண்பாட்டில் ஏற்பட்ட சிறுசிறு அசைவுகளைக் கூட ″விடுதலை″க்குப் பின் வந்த பிற்போக்குக் கும்பல்கள் தடுத்து நிறுத்திவிட்டன. எனவே இந்த எதிர் விசைகளை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பார்க்கும்போதுதான் தமிழ்மொழி - பண்பாடு ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் நிற்கும் விசைகள் மீது நம் திறனாய்வு வெளிப்படுகிறது. இந்த விசைகளில் குணா போன்ற நேர்மையும் உண்மையான ஈடுபாடும் கொண்டவர்களும் உண்டு; நெடுமாறன் போன்று ஆதாயம் தேடும் தன்னல விசைகளும் உண்டு. தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு எம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்று அரைக்கிணறு தாண்டும் பேரா. தொ.பரமசிவம் போன்றோரும் உண்டு. 100 பேர் சேர்ந்து அரைக் கிணறு தாண்டினாலும் 50 கிணறு தாண்ட முடியாது அரைக்கிணறு தான் தாண்ட முடியும். அரைக்கிணறு தாண்டுவது தாண்டாமலே வாளாயிருப்பதைவிடத் தீங்கு பயப்பது. அதற்குப் பகரம் தன் முழு வலிமையையும் திரட்டி முழுக்கிணறு தாண்டுவோருக்குப் பக்கத்துணை நின்று வலுச்சேர்க்க வேண்டும். அதுதான் அவர்கள் மனதில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளுக்கு நாணயமாகச் செயற்படுவதாகும். இவர்களைத் தவிர கடலாழம் கண்டாலும் மன ஆழம் காணமுடியாத ஆழம் மிக்க ந. அரணமுறுவல் போன்றோரும் உண்டு. அரணமுறுவல் ஒருவேளை தீங்கற்றவராயிருக்கலாம். ஆனால் நாம் மிகக் கண்காணிப்பாக இருக்க வேண்டியவர்கள் இவர் போன்றோர் நிறைய உண்டு.

இந்த வகையில் தமிழகத் தேசியப் போராட்டத்தின் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒட்டுண்ணிகளாகிய நடுத்தர வகுப்புச் சிந்தனையாளர்களிடமிருந்து அதனைப் படைப்புச் செயலில் ஈடுபட்டு நம் பொருளியல் வலிமையைப் பெருக்கி தமிழக மக்களின் வாழ்நிலையும் பண்பாடும் மேம்படப் பாடுபடவேண்டிய முதலாளிகள், தொழிலாளர்கள், வாணிகர்கள் ஆகியோரின் தளத்துக்கு இட்டுச்செல்லும் நிகழ்முறையில் இந்தத் திறனாய்வு வெளிப்பட்டுள்ளது என்ற தெளிவு எனக்கு ஏற்படுகிறது. நான் உணராமலே செய்திருக்கும் இப்பணியின் வரலாற்று முகாமையும் சிறப்பும் இப்போது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தெளிவில் எனக்குள் தோன்றிய தயக்கங்களும் மயக்கங்களும் நீங்கிப் பெருமிதத்துடன் இந்த முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்ட நிலையில்லா வகுப்புகளிடம் ஓர் அடிப்படை இயல்பு முனைப்பியமாகும்(தீவிரவாதமாகும்). அதாவது தமிழகத்தை ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று முழங்குவர். அடித்தள மக்களுடன் ஒன்றிணையும் மனப்பாங்கு இல்லாமையால் அவர்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த இயலாமையின் வெளிப்பாடு தான் இந்த முழக்கம். அதே நேரத்தில் கருணாநிதி போன்ற பச்சை இரண்டகர்களைக்கொண்டு ஓர் ஆணையை வெளியிடவோ ஒரு சிலையைத் திறக்கவோ வைத்து அவர்களை வானளாவப் பாராட்டித் தம்மைப் பின்பற்றுவோரைக் குழப்புவர். (வெங்காலூரில் நெடுமாறனை வைத்து, அங்குள்ள தமிழர்களைத் திரட்டித் திருவள்ளுவர் சிலையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். அது நெடுமாறனின் ஒரு வெற்றியின் அடையாளமாக அவர் கழுத்தில் விழுந்த மாலையாக்கப் போகிறாரா அல்லது திருவள்ளுவர் சிலையை ஓர் அடையாளமாகக்கொண்டு அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒன்றுதிரளும் மக்களைக் கொண்டு கருநாடகத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்கிறாரா குணா என்பதைக் காலம் காட்டட்டும்.[1] இவர்களிடையில் சிக்கித் தமிழ்த் தேசிய உணர்வு படைத்தவர்கள் திணறுவதை, ஓடி ஓடி உருக்குலைவதை, இளைத்துக் களைத்துச் செயலிழப்பதைக் கடந்த ஒன்றிரண்டு தலைமுறைகளாகக் கண்டுவருகிறோம்.

எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் விடுதலை மூலமே தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ″இந்திய விடுதலை″ மூலம் இந்திய மக்கள் ஒடுக்கப்படுவதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! தமிழக மக்களுக்குப் பொருளியல், மொழியியல் உரிமைகள் கிடைப்பது இந்தியக் கட்டமைப்புக்குள் இயலுமானால் அதுவே தமிழகம் அரசியல் விடுதலை பெறுவதை விட நல்லது என்று கருதுகிறோம். அது இந்தியக் கட்டமைப்புக்குள் முடியுமா அல்லது அரசியல் விடுதலைதான் தீர்வா என்பதை யாமோ தமிழக மக்களோ முடிவு செய்ய முடியாது. அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் இந்திய ஆளும் கணங்கள்தாம். இந்தியக் கட்டமைப்புக்குள் தேசியங்கள் தங்கள் பொருளியல், மொழியியல் விடுதலையைப் பெற முடியாது என்பதை ஆளும் கணங்கள் தங்கள் செயல்கள் மூலம் காட்டிவிட்டார்களாயின் அதன் பின் தமிழகத்திலும் இந்தியாவின் பிற தேசங்களிலும் அரசியல் விடுதலைப் போர்களை எந்த விசையாலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே நாங்கள் திறந்த மனதுடன் உள்ளோம். அதாவது தமிழகம் அரசியல் விடுதலை பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்பதோ அல்லது இந்தியா முழுமையாகத் தொடரத்தான் வேண்டுமா என்பதோ இன்று எமது விடையைத் தேடி நிற்கும் கேள்விகளல்ல. இருக்கும் கட்டமைப்புக்குள் தமிழக மக்களின் பொருளியல் - மொழியியல் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டக்களத்தில் இறங்குவதைத்தான் எமது உடனடிப் பணியாகக் கொண்டுள்ளோம்.

என் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கு மார்க்சியத்தின் இயங்கியலில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஒரு அமைப்பு அல்லது இயக்கம் வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி மூப்படையும் போதே அதை அழித்து அந்த இடத்தைப் பிடிக்கும் அதனுடைய பின்னடி அதன் உள்ளேயே உருவாகிவிடும் என்பது அது. அதனடிப்படையில் என் கருத்துகளைப் பதிந்து வெளிப்படுத்தி வருகிறேன். அந்த கருத்து விதைகள் தனக்காகக் காத்திருக்கும் பக்குவப்பட்ட மண்ணில் விழும் வரை காத்திருப்பேன். நான் மறைந்து விட்டாலும் அந்த விதைகள் தனக்குத் தேவையான களத்தைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதுவரை நீங்கள் படித்த, தனிமனிதனான என் கணிப்புகளில் குற்றங்குறைகளும் தவறுகளும் இருக்கலாம். அவற்றை என்னைப் போல் திறந்த மனதுடன் திறனாய்ந்து தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வேன். பிறவற்றுக்கு விளக்கம் கூறி என் கடமையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னுடைய பணி ஒட்டுமொத்தக் குமுகத்தின் பணியாக மேம்பட உதவுங்கள்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க வாய்ப்பின்றி குணாவின் நூல் மூலம் மட்டும் அறிந்தவர்கள் முழுக் கட்டுரையையும் படித்தபின் என் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைவிட்டு என்னைப் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பாராட்டியதுடன் நில்லாது அதனை நூலாக வெளியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து உதவ முன்வந்த அவர்களுக்கும் ஊக்கமளித்த இயக்கத் தோழர்களுக்கும் சிறப்புற அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் என் நன்றி. [2] தன் நூலின் மூலம் இக்கட்டுரை அச்சாகும் முன்பே அதன் மீது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த குணாவுக்கும் நான் அனைவருக்கும் மேலாகக் கடமைப் பட்டுள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முற்றும்)

அடிக்குறிப்புகள்:

[1] நாம் ஐயுற்றவாறே நடந்தது. திட்டமிட்டவாறு சிலையைச் சுற்றிக் குழுமினார்கள். கர்னாடகக் காவல்துறையினர் அவர்களைத் தளையிட்டுச் சிறையிலடைத்துவிட்டு மாலையில் விட்டுவிட்டனர். நாம் கணித்தவாறே ஒரு கிழமை சென்று அவர் நடத்திய போராட்டத்தின் வெற்றிக்காக வெங்காலூர்த் தமிழர்கள் அவருக்கு உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிவிழா நடத்திச் சிறப்பித்தனர். வெங்காளூர்த் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு அவர்களது அணுகல்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குணாவைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள்தாம் மிகையானவையேயன்றி அவர் மீது பிழையில்லை. அவர் அறைக்குள்ளிருந்தும் சிறைக்குள்ளிருந்தும் படித்த நூல்கள் தந்த செய்திகள் மற்றும் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழக மக்களுக்கும் வெங்காலூர்த் தமிழர்களுக்கும் உள்ள சிக்கல்களைப் பார்த்து நூல்கள் எழுதினாரேயொழிய அவர் நிலத்தின் மீது ஏறிநின்றதில்லை; அப்படி ஏறிநிற்பது பற்றி அவர் சிந்தித்ததுமில்லை என்பது அண்மையில் அவரைச் சந்தித்த போது நான் புரிந்துகொண்டது.

[2] தமிழ்த் தேசியம் கட்டுரையை நூலாக வெளியிடுவதற்கு நண்பர் ஒருவர் விரும்புவதாக தோழர் தமிழ்மண்ணன் கூறியதை அடுத்து இந்த முன்னுரையை நான் எழுதினேன். இதை அந்த நண்பர் படித்தபின் நூலை வெளியிட மறுத்துவிட்டார். எனவே உண்மைகளை எந்தப் புனைவுமின்றி ஏற்றுக்கொள்ளும் அகநிலை தமிழக மக்களுக்கு ஏற்படும் காலத்தை அல்லது அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ஒருவரை எதிர்பார்த்து இப்படைப்பு காத்திருக்கிறது.

தமிழ்த் தேசியம் ... 27

மனந்திறந்து... 17

திருவள்ளுவர், திருக்குறள் ஆகிய பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளும் தனியாள்களும் செயற்படுகின்றனர். அவற்றுக்கு திருவள்ளுவருக்காகவும் திருக்குறளுக்காகவும் தங்கள் ஆற்றலுக்கு மிஞ்சி செலவு செய்யவும் ஆயத்தமாக பல நூறாயிரம் பேர் உள்ளனர். இது 2007ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் நாள் குமரிமுனையில் நடைபெற்ற விழாவில் தெரிந்தது. (எண்ணற்ற போலிகளும் நடமாடுகின்றனர். சான்றுக்கு குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் திருச்சபை என்ற அமைப்பின் பெயரில் புலவர் கு. பச்சைமாலுக்கும் ஆதிலிங்கம் என்பவருக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழாயடிச் சண்டையைக் கூறலாம்.) இவ்வாறு திரளும் பணத்தைக் கொண்டு தமிழகத்துக்குத் தேவையான மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், மூலப்பொருட்களின் இயல்புகளைத் தெரிந்து அவற்றிலிருந்து பண்டங்கள் செய்வதற்கு அடித்தளமான தரவுகளைத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வகம் முதலியவற்றைத் தொடங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் திருவள்ளுவரை ஒரு கடவுளாக்கி முற்றோதுதல், சிலைகள், படங்களின் வாணிகம் என்று தங்கள் செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்கின்றனர். தமிழ் பெயரில் இயங்கியவர்கள் இறந்தால் இழவு, பதினாறு கொண்டாட்டங்களுக்குக் கூட்டமாகப் போய்ச் செலவு செய்கின்றனர். தொடக்கத்திலேயே பணக் கணக்கு வைத்துக் கொள்வதில் பணப் பொறுப்பாளராக இருப்பவர்க்கும் மா. செ. தமிழ்மணி – அரணமுறுவல் கூட்டணிக்கும் கடும் மோதல். இப்போது சரிக்கட்டிக்கொண்டார்கள்.

மா.செ. தமிழ்மணியைப் பொறுத்த வரையில் அதி முனைப்பிய இறைப்பற்றாளர். கேரளம், கருநாடகம் என்றெல்லாம் கோயில்களுக்குச் சுற்றுவார். அவரை தனித்தமிழ் பேசும் இரா. சே. ச. (ஆர்.எசு.எசு.) என்று அழைப்பதுவே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

குமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை பற்றி தாறுமாறான செய்திகள் வந்து கொண்டிருந்த ஒரு சூழலில் குமரி மாவட்டத்தில் புலவர் திரு. பச்சைமால் தலைமையில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் நானே பொறுப்பேற்றுக் கொண்டு நாகர்கோவிலில் இயங்கும் தென்பாண்டித் தமிழர் பேரவையின் திரு.சொ.நன்மாறனின் உதவியோடு திருவள்ளுவர் சிலையை விரிவாகப் புகைபடங்கள் எடுத்து விளக்கமாக ஒரு கட்டுரையும் எழுதினேன். அதனை அவருடைய வழக்கம் போல் பயன்படுத்தாமல் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டார் பச்சைமால். அந்த நிலையில் தோழர் ம.எட்வின் பிரகாசுவின் உதவியுடன் ஒரு புத்தகமாக அதை வடிவமைத்தேன். அதனை மிகத் தயக்கத்தின் பெயரில் வெளியிட்டது அறக்கட்டளை. ஆனால் திரு.பொன்.மாறன் வண்ணத்தில் அடித்துத்தர ஒப்புக் கொண்ட தொகைக்குக் குறையாத செலவில் (சரியாக எவ்வளவு செலவு செய்தனர் என்று தெரியவில்லை) கறுப்பு- வெள்ளையில் வெளியிட்டனர்.

குறள் போல் சிலையும் காலத்தை வெல்லும் என்ற தலைப்பிலான அந்த வெளியீட்டில் திருவள்ளுவர் சிலையை அடையாளமாகக் கொண்டு தமிழக மக்களுக்காக எந்தெந்த வகையில் செயல்படலாம் என்று சில குறிப்புகளைக் காட்டியிருந்தேன்.

என் இடையறாத வற்புறுத்தல்களின் பயனாகவும் திரு.அரணமுறுவல் அவர்களுக்குள் பதுங்கியிருக்கும் முற்போக்கு எண்ணங்களாலும் திருவள்ளுவர் அறக்கட்டளை நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு களத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பாக கொஞ்சம் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். தடுமாற்றம் இன்றி தடம் மாறாமல் நடை பயில வாழ்த்துகள்.

மா.செ.தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தை விட்டு அரணமுறுவல் பக்கம் வந்துவிட்டார் என்றால் பறம்பை அறிவன் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் போய் ஒட்டிக்கொண்டார்.

தன் பிள்ளைகள் சொந்தக்காலில் நின்று தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளியலை ஈட்டவென்று எந்த முறையான முயற்சியையும் பெருஞ்சித்திரனார் எடுக்கவில்லையா அல்லது தனித்தமிழ் ஆர்வலர்களின் பொதுவான நடைமுறையாகிய ″தமிழ்க் குடும்பம்″ என்று அவர்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்ளும் கோட்பாட்டை அவர்தான் தொடங்கி வைத்தாரா என்று தெரியவில்லை. அவரது மக்கள், மருமக்கள் என்று அனைவரும் ″தமிழால் வாழ்வது″ என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையாரின் செல்வாக்குக்கு ஆட்பட்ட வசதி படைத்த ஆர்வலர்களை அணுகி பணம் திரட்டி செந்தமிழ் அடுக்ககம் கட்டி முடித்தனர். அடுத்து அவரது ஆண் மக்களுக்குள் புகழ்பெற்ற எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கட்டுப்படுத்தும் மூத்தோர் காலத்துக்குப் பின் பிள்ளைகளிடையில் வரும் பங்குச் சண்டை போல் வந்தது போலும். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகன் பூங்குன்றன் தந்தையார் விட்டுச் சென்ற தமிழ் நிலம் இதழைத் தொடர்ந்து நடத்த ஆசிரியர் குழுவில் பணியாற்ற வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் என்னைக் கேட்டார். (தமிழ் நிலம் அவர் பங்காக ஒதுக்கப்பட்டிருந்தது போலும், பறம்பை அறிவன் முன்பு சொல்லி இருக்கிறார்.) நானும் ஒப்புக்கொண்டேன். அப்புறம் பேச்சு மூச்சில்லை. ஆனால் அதுவரை பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகன் இறைக்குருவனார் தென்மொழியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது மாறி ஆசிரிய உரையில் பூங்குன்றனின் பெயர் இடம் பெற்றது. சரிதான் பங்கு படிந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

பூங்குன்றன் அறிவியல் மன்றம் என்ற பெயரில் ஒன்று வைத்திருந்தார். எரிநீர் இராமரைத் தமிழக ஆட்சியாளர்கள் சிறையிட்டு வாட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் வழங்குவது என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை அவரது மன்றத்தின் மூலம் நடத்துமாறு கேட்டேன். ஒப்புக் கொண்டுவிட்டு நழுவி விட்டார்.

பாட்டாளியர் கோட்பாட்டைப் பற்றிக் கொண்டு ″புரட்சிகர″மாகப் பேசி எழுதி வருபவர் பெருஞ்சித்திரனாரின் இன்னொரு மகன் பொழிலன். கொள்கை அறிக்கை என்றெல்லாம் குறுநூல்கள் வெளியிடுவார். தவறாமல் எனக்கும் விடுப்பார். அவர் தந்தையார் இயற்கை எய்தியபோது துயரம் கேட்கச் சென்றிருந்தேன். என் ஆக்கங்களின் ஒரு தட்டச்சுப்படியை அவரிடம் கொடுத்து வந்தேன். நான் கூறியவற்றை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த பொழிலன் இன்றுவரை அவற்றிலிருந்த கருத்துகள் பற்றி ஒரு சொல் கூடக் கூறியதில்லை.

அவர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்று ஓர் அமைப்பையும் அதன் சார்பில் உழைக்கும் மக்கள் தமிழகம் என்ற இதழையும் நடத்தினார். பின்னர் தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் உரிமை முழக்கம் என்ற ஓரு இதழையும் தொடங்கினார். இடையில் அந்த இதழ் தொய்வடைந்தது. தென்மொழியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன, இனி தொடர்ந்து வெளிவரும் என்ற அறிவிப்புடன்.

பொழிலனுடைய அணுகல் மார்க்சிய-பெரியாரிய–அம்பேத்காரிய–மாவோயியம் என்ற கலப்பில் உருவான ஒரு மாய மை. அந்த மையை நீங்கள் பூசிக் கொண்டால் உங்களைப் பார்ப்பவர்களுக்கு உங்கள் ஒரு கையில் ஏ.கே. 47 வரிசையில் மீ இற்றை(நவீன) துப்பாக்கியையும் இன்னொரு கையில் குண்டுமிழி செலுத்தியையும்(Rocket launcher) உடல் முழுவதும் மாலைகளாகத் தோட்டாக்களையும் உடைகளிலெல்லாம் வகை வகையான எறிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு அரசுப் படைகளை அழிப்பதற்காகக் களத்தில் நிற்பவராகத் தோற்றமளிப்பீர்கள். உங்களுக்கே அப்படித் தோன்றும். இந்த மாய மையுடன் இப்போது சூழலியல் உட்பட்ட ″தொண்டு″ நிறுவனங்களின் வாடையையும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நாள்தோறும் பெரும் படகுகள் சென்றுகொண்டிருக்கும் போது கேடுறாத சேதுக் கால்வாய்ப் பகுதி கடலின் சூழல் அவற்றை விடப் பெரிய சிறு கப்பல்கள் செல்வதற்காக 5 மீட்டர்வரை ஆழம் தோண்டுவதால் எல்லாமே அழிந்து போகும் என்று கூக்குரலிடுகிறது அவரது உழைக்கும் மக்கள் தமிழகம். அங்கே இருக்கிற மணல் திட்டுதான் ஓங்கலையிலிருந்து கேரளத்தைக் காத்தது என்று ஒரு வாதம். தினமலர் வகையறாக்கள், நமக்கு சாலையும் இருப்புப் பாதையும் போதுமே, கப்பல் வழி எதற்கு என்று கேட்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து செல்லும் அடிமாடுகள் கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு கொச்சித் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்து மணல், சல்லி போன்றவையும் நாகை, திரூவாரூர் மாவட்டக் கடற்கரையிலுள்ள மீன் கூட அங்கே கொண்டுசெல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகக் கடற்கரை துறைமுகங்கள் இணைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றால் கேரளமும் கொழும்பும் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காக, பெரியாற்று நீரையும், பொள்ளாச்சித் தொடர்வண்டிப் பாதைப் பகுதியைப் பறித்துக் கொண்டது போல் தமிழகத்துக் கப்பல் போக்குவரத்து வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கத்துடன் வைக்கப்படுவதே இந்தச் சூழல் கேடு பூச்சாண்டி.

தமிழகத்தில் மீன் பிடித் தொழில்நுட்பம் மேம்பட்டால் தமிழகக் கடற்கரை வரை வந்து மீன் வளத்தை அள்ளிச் செல்லும் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு இழப்பு என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். கட்டுமரம், தோணி இவற்றுடன் பழங்குடியினராக தமிழகக் கடற்கரை மீனவர்களை அமிழ்த்தி வைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா சார் தொழிற் சங்க அமைப்புகள் ஓங்கலையில் உருவான குழப்பத்தைப் பயன்படுத்தி உள் நுழைந்து மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினரென்று அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகையை வைத்துப் பண்டைக் காலத்தைப் போலவே அவர்களை உள்நாட்டு மக்களிடமிருந்து அயற்படுத்துகின்றன. அவ்வாறுதான் மலைவாழ் மக்கள் சமநிலத்துக்கு வந்து பிறரைப் போல் கல்வி கற்று மேம்படுவதைத் தடுத்து அவர்களை மலைசார் பழங்குடிகள் என்று வகைப்படுத்த வேண்டும் என்று அவர்களையும் அயற்படுத்த இந்த அயல் விசைகள் முயன்று வருகின்றன. மலையில் அயலவன் அமர்ந்துவிடுவான், கடற்கரையில் வெளிநாட்டான் புகுந்து விடுவான் என்று கூறுகிறவர்கள் உள்நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதுதானே! இவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு உதவுகிறவர்கள் இதை அவர்களுடைய பணியாகப் வைக்கவில்லை. உண்மையில் அயல் நாட்டானின் ஆட்கள்தாமே இவர்கள்!

பெருஞ்சித்திரனாரின் இறுதிக் காலத்தில் அவரைச் சிறையில் அடைக்கக் காரணமாயிருந்த மாநாட்டில் ″தன் தீர்மானிப்புரிமைத் தீர்மானம்″ உருவாக்கிய ″அறிவுசீவி″களில் முதன்மையானவர் அ.மார்க்சு எனப்படும் பேராசிரியர். இவர் மார்க்சிய–லெனினிய சிந்தனையாளர் என்று சொல்லப்படுபவர். எசு. வி. இராசதுரைக்கு நிலையான பணி எதுவும் இல்லை. ஆனால் இவர் கல்லூரிப் பேராசிரியர். துணைவியாரும் பேராசிரியர் என்று தெரிகிறது. இந்த வருமானங்களோடு ″தொண்டு″ பக்கத் தொழில். ″விளிம்பு நிலை″, ″பின் இற்றையியம்″(பின் நவீனத்துவம்) என்று புதிது புதிதாகப் புகுத்தப்படுபவற்றைப் பயன்படுத்தி ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதாகக் காட்டி மக்களிடையில் பிளவுகளை ஏற்படுத்தப் பணியாற்றுபவர். அவ்வாறுதான் பல்வேறு சாதிக்குழு மக்களிடையில் பேச்சு வழக்கில் உள்ள மொழி வேறுபாடுகளை வைத்து ″பல தமிழ்கள்″ என்று ஒரு கருத்தைத் தென்மொழியில் முன்வைத்தார். கடும் எதிர்ப்பு வந்ததோ என்னவோ, பின்னர் அவரது ஆக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. இப்போது புது கட்டமைப்புகளுடன் இதழ்கள் அந்தக் குடும்பத்திலிருந்து வெளிவரும் சூழலில் அண்மையில் வந்துள்ள உரிமை முழக்கம் இதழில் அவருடைய கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அத்துடன் ″தீராநதியில் .... அ.மார்க்சு″ என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனாரின் வழியில் சிறந்த ″வாரிசு″ பொழிலன் என்று கொடைக்கானல் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றிருப்பதைக் காட்டிச் சான்று வழங்கியிருக்கிறார். இவற்றிலிருந்து பெருஞ்சித்திரனார் குடும்பம் செல்லும் திசையை ஒருவாறு உய்த்தறிய முடிகிறது. மக்களிடமிருந்து அயற்பட்ட கோட்பாடுகளுடன் களத்தில் இறங்குவோர் இறுதியில் பிழைப்புக்காக மண்டியிட வேண்டிய இடம் அயல்நாட்டுப் பணத்தைப் புழக்கத்தில் விடும் ″தொண்டு″ நிறுவனங்கள் என்ற எமது கருத்துக்கு இன்றைய பெருஞ்சித்திரனார் குடும்பம் இன்னொரு சான்று.

அறியா விடலைப் பருவத்தில் முற்போக்கு இளைஞர் அணி(R.Y.L.) போன்ற மா.லெ. குழுக்கள் ஏற்றிய வெறியால் கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரக் குண்டுவெடிப்பில் சிறைப்பட்டு ″உரூ3000/- அளவுக்குத்தானே இழப்பு, அதற்கு 10 ஆண்டுகள் சிறையா?″ என்று கேட்கும் இரங்கத்தக்க நிலைக்கு வந்து, பாவலர் கலியபெருமாள், ″தோழர்″ தியாகு போன்றோர் சென்ற தடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழலில் திரு. பறம்பை அறிவன் அந்தக் குடும்பத்தில் சேர்ந்திருக்கிறார்.

திரு. அ.மார்க்சு பற்றிய என் ஒரு பட்டறிவையும் இங்கு பதிந்து கொள்வது நலம். முகிழ் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய மார்க்சு, சோழர் காலத்தில் தமிழகத்தில் தனியார் உடைமையே கிடையாது. கோயில்களுக்கு நிலம் வழங்கிய ஆவணங்களில் ″பொது நீக்கி″ என்றே காணப்படுகிறது. பொது உடைமையாக இருந்த நிலங்களிலிருந்து மக்களைத் துரத்திவிட்டு அவற்றைக் கோயில்களுக்கு அரசர்கள் வழங்கினர் என்றார். தமிழகம் மிகக் காலந்தாழ்ந்தே நாகரிகத்தினுள் நுழைந்தது என்பதை வலியுறுத்தும் ″மார்க்சியர்″களின் ஒரு வித்தை இது.

அவர் பேசி முடித்த பின் நான் கேட்டேன், சொத்துகளை அயல்படுத்தல்(alienation) அதாவது பிறருக்கு வழங்குதல் என்ற நடைமுறை தனிச் சொத்துடைமையின் இலக்கணம்; அவ்வாறு தனியாட்கள் கோயில்களுக்கு நிலங்களைக் கொடையாகக் கொடுத்ததைக் காட்டும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளனவே; இவை தனியார் சொத்துடைமையைக் காட்டவில்லையா என்று. அவர் தடுமாறி ஆமாம் ஆமாம், அப்படியும் இருந்தது, இப்படியும் இருந்தது என்றார். இவ்வாறு அறியாத மக்கள் முன் பொய் பேசும் ″அறிவு சீவி″களில் அவரும் ஒருவர்.

என்னுடன் இணைந்திருந்த காலத்திலும் திரு.பறம்பை அறிவன் பல சூழ்நிலைகளில் ″தொண்டு″ நிறுவனங்களிடம் இட்டுச் சென்றுள்ளார். எனக்கு அது ஒரு நெருடலாகவே இருந்தது. அவருக்கு அவர்களுடன் நெருக்கமான உறவிருந்தது உண்மை. இப்போது அவருக்கு உணவும் உறையுளும் கிடைக்கக் கூடிய ஒரு அமைப்பு கிடைத்துவிட்டது. வாழ்க!

அவரது நடவடிக்கையால் ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் பொருளியல் உரிமை என்றொரு இதழைத் தொடங்கி 20 இதழ்கள் வெளிவரத் தூண்டுதலாக இருந்த அவரது தொடர்புக்கு நன்றி கூற வேண்டும். புதியவர்கள் பலருக்கு நான் அறிமுகமானேன்.

(தொடரும்)