29.8.18

திசைமாறிய கல்வி

திசை மாறிய கல்வி:
குமரிமைந்தன்
உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று "ஆணை" இட்டிருக்கிறது. உண்மையில் இந்த நுழைவுத்தேர்வு என்பதுதான் என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். அதற்கு முன் கல்வி என்றால் என்ன பார்ப்போம்..

கல்வி என்பது கரையிலா ஒரு பெருங்கடல், 'கல்வி கரையில' என்றார் பண்டைப் புலவர். ஒரு குழந்தையாகப் பிறந்து முதுமையாகிச் சாவது வரையிலும் தொடர்வது கல்வி. அப்படியானால் கல்வி என்ற பெயரில் கட்டிடங்களில் இருந்து பெறப்படுவது யாது? அது எழுத்தறிவின் மூலம் கற்பது. இவ்வாறு் எழுத்தறிவின் மூலம் கற்பதை செயலறிவின் மூலம் மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இன்றைய கல்வி முறையில் உள்ளதா?

இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

பல்லாயிரக்கணக்கில் வானூர்திகள் செயற்படும் இந்தியாவில் ஒரு வானூர்தியைக் கழுவிவிடுவதற்கு(சர்வீசு என்கிறார்களே அந்தப் பராமரிப்புக்கு)க் கூட ஓர் அமைப்பு இல்லை என்பது இழிவுகூர் அண்மைச் செய்தி. அப்புறம் வானூர்தியியல்(aeronautics) படிப்பு என்று வைத்து அங்கு என்னதான் கிழிக்கிறார்கள்? புத்தகங்களில் இருந்து பாராமல் படித்து தேர்வில் கக்குகின்றனர். இதில் எவன் புத்தகத்தில் இருப்பதை எழுத்து பிசகாமல் தாளில் எழுதித் தருகிறானோ அவன் அறிவாளி. படித்ததைச் சிந்தனையில் வாங்கி சொந்தச் சொற்களில் எழுதுகிறவன் அறிவு குறைந்தவன். இதில் கொடுமை என்னவென்றால், மதிப்பெண் வழங்குபவனுக்கும் செய்திகள் சிந்தனையில் ஏறியிருக்காது, அவனும் பாராயணம் பண்ணி வந்தவனே. கோயில்களில் மந்திரம் சொல்வதில் அத்யயனம் என்று ஒன்று உண்டு. அதன் பொருள், ஒன்றன் பொருள் புரியாவிடினும் அதனை ஒலிப்பு மாறாமல் ஓதுதல் என்பதாகும். இதுதான் இன்றைய கல்விமுறையின் உள்ளடக்கம்.

உடலுழைப்பவரும் கைத்தொழில் வல்லோரும் இழிபிறவிகள் என்பது பண்டைத் தமிழக - இந்திய மரபு. தொல்காப்பியமே அதைத்தான் கூறுகிறது. பார்ப்பனர் என்றும் வெள்ளாளர் என்றும் கூறப்படுவோர் உச்சியில் அமர்ந்துகொண்டு மடங்கள் மூலமாகவும் கோயில்கள் மூலமாகவும் இலவய உணவு, உடை, உறையுள் வசதிகளுடன் படித்து ஆள்வினை(நிர்வாக)ப் பதவிகளிலும் படையணித் தலைவர்களாகவும் ஆட்சி புரிந்தது மட்டுமின்றி மக்களின் தாய்மொழிகளை இழிக்கவும் ஒழிக்கவும் செய்தனர்.

அத்துடன் பார்ப்பனர்கள் தாங்கள் பூசை செய்த கோயில்களிலிருந்த தேவதாசிகளைப் பயன்படுத்தி எளிதில் பதவிகளைப் பிடிக்க முடிந்தது. ஆங்கிலர் காலத்திலும் அதுதான் நடந்தது. வடக்கத்தி பனியாக்கள் முன்னாள் சென்னை மாகாணத்தின் பொருளியலைக் கைப்பற்ற முனைந்த காலகட்டத்தில் இங்குள்ள மேற்குடியினர் தாங்களும் தொழில்முனைவுகளில் ஈடுபட முயன்று அரசின் ஒப்புதல்களைப் பெற அலுவலகங்ககளுக்குச் சென்ற போது அலுவல்கங்கள் முழுவதையும் தம் கைப்பிடிக்குள் வைத்திருந்த பார்ப்பனர்களின் ஆடிய பேயாட்டம்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் வித்தானது. பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரசு எனப்படும் பேரவைக் கட்சியின் வளர்ச்சியால் கவலை அடைந்திருந்த ஆங்கில அரசு கொடுத்த வாய்ப்பால் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகிய நயன்மை(நீதி)க் கட்சி பல பெருந்தொழில்கள் தமிழகத்தில் உருவாக வழியமைத்தது மட்டுமின்றி கல்வியிலும் அரசுப் பணியிலும் ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, தேவதாசி முறையை ஒழித்தது.

காலவோட்டத்தில் நயன்மைக் கட்சி செல்வாக்கிழக்க அது பெரியார் கைக்கு வந்தது. பார்ப்பன - பனியா எதிர்ப்பு என்று கூறிவிட்டு பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே கையிலெடுத்துக்கொண்டார் பெரியார். ஆக பார்ப்பனியம் எனப்படும், உடலுழைப்பையும் தொழில்வல்லாரையும் இழிவுபடுத்தும் தமிழ் - இந்தியப் பார்ப்பனியம் இன்று முழு வலிமையுடன் தமிழகத்தை வேறு எந்த மாநிலத்தையும் விட பிடித்தாட்டுகிறது. அதன் உச்ச கட்டமாக வேலை இல்லாமல் கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போது சில்லரை வேலைகளைச் செய்யக்கூட அயல் மாவட்டத்தினர் இங்கு சிற்றூர்கள் வரை இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது இங்கு யார் கண்களையும் உறுத்தவில்லை, எவர் கருத்திலும் தைக்கவுமில்லை. ஏற்கனவே இங்கு நுழைந்து அனைத்து வாணிகத் துறைகளையும் பிடித்துவிட்ட மார்வாரிகளோடு இந்தப் புது வந்தேறிகளும் சேர்ந்து எதிர்காலத் த்மிழகத்தில் உருவாகப் போகும் சிக்கல்கள் அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை.

இது இப்படி இருக்க, இதற்குத் தீர்வுதான் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

கல்வி வாழ்க்கை முழுவதும் தொடர்வது என்றால் இன்றைய கல்வி நிலையங்களில் புகட்டப்படும் எழுத்தறிவால் பயனே இல்லையா என்ற கேள்வி எழும். எழுத்தறிவுக்கு மனித வரலாற்று வளர்ச்சியில் முதன்மையான பங்கு உண்டு. அது என்ன? ஒவ்வொரு தலைமுறையும் தன் பட்டறிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் என்ற இன்றியம்மையாத பணியை எழுத்தறிவு செய்கிறது. நம முன்னோர் தாம் பட்டறிந்தவற்றை நமக்கு இட்டுச் செல்ல அவற்றை அடுத்த கட்டத்துக்கு நாம் உயர்த்தி எழுதி வைக்க, வரும் தலைமுறையினர் அதை உள்வாங்கி நாம் எய்தியதை விட ஓர் உயர்ந்த கட்டத்துக்கு தாம் மேலெழ என்றவாறு மனிதக் குமுகத்தை எழுத்தறிவு உயர்த்துகிறது. ஆனால் இந்தத் தொடர்நிகழ்வு எழுத்தறிவால் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே அதன் விடையாக இருக்கிறது. ஏனென்றால் நமது கல்விமுறையின் அமைப்பு அத்தகையது.

மனப்பாடம், பாராமல் படித்தல், பாராயணம் என்ற சொற்களால் குறிக்கப்படும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இப்படிப்பட்டவர்களின் மூளை அமைப்பு ஒரு சரக்கறை எனப்படும் கிடங்கு போன்றது. நீங்கள் ஒரு பொருளை உள்ளே போட்டால் அதை எந்த மாற்றமும் இன்றி மீண்டும் எடுத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

வேறு சிலரின் மூளையமைப்பு பாராயணம் செய்யப் பொருத்தமற்றதாக, ஆனால் படித்ததன் உள்ளடக்கத்தை உள்வாங்கும் திறன் பெற்றதாக இருக்கும். மூளையினுள் சென்ற சரக்கு வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு தளங்க்ளில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் போது திரட்டப்பட்டிருக்கும் செய்திகள் கருத்துகளின் இணைவு(association of ideas) என்ற நிகழ்முறையில் செயற்பட்டு விடை கிடைக்கும். இது மேலே சொல்லப்பட்ட மனப்பாடத் திறனைவிட மேம்பட்டது. ஒரு தொழிலகம் போன்றது. இன்று கணக்கு விடையின் ஒவ்வொரு அடியையும் கூட பாராமல் படித்து கக்குவோராகிய முதல் வகையினர் முன் அவர்களைவிட திறன்மிக்கோராகிய இரண்டாம் வகையினர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். இந்த இரு திறன்களும் ஒருவரிடமே வாய்க்கப்பெறுவது மிக அரிது.

இனி, இவ்விரு வகையினரும் வேலை வாய்ப்புத் தேர்வுகளுக்குச் செல்லும் போது பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் பொது அறிவு என்ற தலைப்பில் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டவையே. ஆக இங்கும் மனப்பாடக்காரர்கள்தாம் வெற்றி பெறுவார்கள். இவர்களுக்குத் தங்கள் வலுக்குறைவு, அதாவது சொந்த சிந்தனைக் குறைவு நன்றாகவே தெரியும். அதனால் மேலே உள்ளவர்கள், அதிகாரிகளாயினும் அரசியல்வாணர்களாயினும் அவர்களுக்கு இசைந்து தலையாட்டித் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் மட்டுமல்ல நல்ல பலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். அதாவது பதர்களைப் பானையில் போட்டு அவித்து நெல் குத்திக்கொண்டிருக்கிறது இந்தியக் குமுகம்.

சொந்தச் சிந்தனை உள்ளவன் தன்னம்பிக்கை உள்ளவனாக இருந்தால் மேலே உள்ளவர்கள் தவறான செயல்களில் தங்களை ஈடுபடச் சொல்லும் போது அது குறித்த உண்மையான செய்திகளைக் கூறி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு வாழ்க்கையில் பின்தங்கிப் போகிறார்கள். உண்மையான திறமையுள்ள தனிமங்களெல்லாம் புறந்தள்ளப்பட்ட தமிழக, இந்தியக் குமுகம் உலகின் கடைக்கோடியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சிக்கலை ஆங்கிலர் எப்படி எதிர்கொண்டனர் என்று பார்ப்போம்.

ஆங்கிலராட்சிக் காலத்தில் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்பத்துறையினருக்கும் தனிச் சிறப்பு அளித்து பொது ஆள்வினைத்துறையாகிய வருவாய்த்துறையை ஒதுக்கி வைத்திருந்தனர். ஊருக்கு ஊர் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக இருந்த I.B. எனும் ஆய்வு மாளிகையில் ஒரு மாவட்ட ஆட்சியர் இருந்தாலும் பொதுப்பணித்துறைப் பொறியாளர் வந்தால் காலிசெய்து கொடுக்க வேண்டும். இன்று அந்த வளமனைகள் அனைத்தும் வருவாய்த்துறையினரிடம் அமைச்சர்களும் அரசியல்வாணர்களும் வைப்பாட்டிகளுடன் கும்மாளம் அடிக்கும் இடங்களாக மாறிவிட்டன. இப்போது ஆட்சியர் அலுலகத்தில் நடக்கும் பாசன மாநாடு அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியாளர் அங்கு வந்து கலந்துகொள்வார்.

அன்று பாசன மூலங்களான ஆறுகள், ஓடைகள், குளங்கள் கால்வாய்கள் அணைகள் போன்றவற்றை ஆய்வுசெய்து வரைபடங்கள் பதிவேடுகள் உருவாக்கும் பொறியாளர்களுக்கு எண்ணற்ற வசதிகள் செய்துகொடுத்தனர். ஆங்கிலர் 100 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் உருவாக்கித் தந்த அளப்பரிய மலைக்க வைக்கும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கூட மகா எத்தன் காந்தியின் வழிவந்தவர்களுக்குத் துப்பில்லை. மார்வாரிகள் - குசராத்தியர் தவிர பிறர் அனைவரும் இராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும வாழ வேண்டும் என்றுதான் சொல்லிவிட்டானே அந்தக் கொடியவன்.

இன்று இத்தகைய ஆவணங்கள் உருவாக்கத் தேவைப்பட்டால் ஊழல் செய்து மேலிடத்துக்குக் காசு பெற்றுக் கொடுக்காத நேர்மையாளர்கள், அல்லது கிடைத்தது அனைத்தையும் தானே சுருட்டிவிட்டு மேலே எதுவும் தராதவர்கள் என்று கழித்துப்போட்டவர்களைத்தான் அப்பதவிகளில் அமர்த்துவர். எந்த வசதியும் செய்து கொடுக்கமாட்டார்கள், பயணப்படி கூட ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் உருவாக்கும் ஆவணங்கள் அனைத்தும் போலியாகத்தான் இருக்கும். இது போன்ற பின்னணிதான் இத்தனூண்டு சிறிய இங்கிலாந்து இம்மாம் பெரிய இந்தியாவை இங்குள்ள போர்வீரர்களைக் கொண்டே கைப்பற்றியதன் கமுக்கம்.

படிப்பினை: உடலுழைப்புக்கும் உள்நாட்டு அறிவியல் - தொழில்நுட்பத்துக்கும் மதிப்பளித்து ஊக்கமூட்ட வேண்டும். ஆங்கிலன் இதில் தன்னாட்டான அடிமை நாட்டான் என்று வேற்றுமை பாராட்டவில்லை. இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வாழந்து நோபல் பரிசை ஆங்கிலன் காலத்தில்தான் சி.வி.இராமனால் வாங்க முடிந்தது. பெரும் அணைகளையும் கட்டுமானங்களையும் ஆங்கிலர் காலத்தில் வாழ்ந்த இந்தியரான பொறியாளர் விசுவேசுவரய்யாவால்தான் இயற்ற முடிந்தது. பின்னுள்ளவை எல்லாம் அயலவனுக்குப் பணம் கொடுத்து அதில் தரகு பெற்ற பொறுக்கி அரசியல்வாணர்களின் கைவண்ணமே. பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற தமிழகத்து இராமானுசத்தின் மேதைமை வெள்ளையர்கள் இல்லையென்றால் இந்தக் குமுகக் குப்பையினுள் புதையுண்டு போயிருக்குமே! இவ்வாறு நமது கல்வி முறை தரகு பெறும் கூட்டத்திடம் சிக்கி திசை அறியாமல் திகைத்து நிற்கிறது. இந்த முட்டுக்கட்டையிலிருந்து எப்படி மீள்வது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது குறிப்பிட்ட திறன்களோடும் குறைகளோடும் பிறக்கின்றன. திறன்களை வளர்த்து குறைகளைக் களைந்து குமுகத்துக்கு மிக அதிகமாகப் பயன்படும் ஒரு குடிமகனாக அக்குழந்தையை உருவாக்க வேண்டியது கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த குறிக்கோளை மனதில் கொண்டு பார்த்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் மிகத் திறமையான குழந்தை உளவியல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பது விளங்கும். ஒரு குமுகத்தின் அனைத்துக் குழந்தைகளின் திறமைகளையும் வளர்த்து குறைபாடுகளை, குறிப்பாக நடத்தை மற்றும் உளவியல் குறைபாடுகளை நீக்குவது அக்குமுகத்துக்கு ஒரு மீ உயர்வான மனித வளத்தை வழங்கும். அதனை உருவாக்க அக்குமுகம் தன் வருமானத்தில் எவ்வளவு கூடுதலான விகிதத்தையும் செலவிடலாம்.

ஆசிரியப் பணி என்பது அயர்வூட்டும் ஒரு பணி. பிற வேலைகளில் வீட்டிலிருந்து புறப்பட்டோம், அலுவலகம் அல்லது வேலைக்களம் சென்றோம், வேலை செய்தோம், திரும்பினோம் என்று முடிந்துவிடும். ஆனால் ஆசிரியர் பணி, குறிப்பிட்ட அகவை உடைய வெவ்வேறு தொகுப்பிலான மாணவர்களைக் குறிப்பிட நேரம் கட்டுப்படுத்தி கற்பித்தல் என்ற தொழிலைச் செய்வது மிக எரிச்சலூட்டும் பணியாகும். எனவே படித்து வேறு வேலை கிடைக்காதவர்கள் நாடும் பணியாக ஆசிரியர் பணி உள்ளது. அதே நேரத்தில் அந்தந்த அகவைக் குழந்தைகளின் உளவியலில் நல்ல தெளிவுள்ளவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு உளவியல் அழுத்தங்கள் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உளவியல் கலந்துரைகள் வழங்கி உளவியல் அழுத்தங்கள் ஏதாவது இருந்தால் அதைத் தளர்த்த வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில் வெளிப்படையான உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்களுக்கே கலந்துரை மூலம் பண்டிதம்(சிகிச்சை) செய்யும் உளவியல் மருத்துவர் நம் நாட்டில் ஒருவர் கூடக் கிடையாது. நோயாளியின் உணர்வுகளை மரத்துப்போக வைக்கும், அதாவது சிக்கல்களிலிருந்து தப்பி ஓட வைக்கும் மனநிலையை உருவாக்கும் ஒரு வகை மயக்கம் தரும் மாத்திரைகளையே அவர்கள் தருகிறார்க்ள். இந்தப் பின்னணியில் நம் உளவியல் மருத்துவத்துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரவும் வேண்டியுள்ளது. இந்த ஆயத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடக்கக் கல்வியிலிருந்து எப்படி கல்வித் துறையைச் சீரமைக்கலாம் என்று பார்ப்போம்.

குழந்தை தாயின் மடியிலிருந்து இறங்கி உட்காரத் தொடங்கியதும் இயற்கையோடு உறவாடத் தொடங்குகிறது. தன் சிறுநீரையே தொட்டும் தரையில் தேங்கி நற்கும் சிறுநீரைக் கையால் தப்பியும் வாயில் வைத்துச் சுவைத்தும் பார்க்கிறது.(இப்போது சிறுநீரை உறிஞ்சவென்று பஞ்சு அட்டைகள் வந்துவிட்டதால் இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது). அதைப் போலவே மலத்துடனும் குழந்தைகள் விளையாடுகின்றன.

குழந்தை தவழ்ந்து வாயில்படி வழியாக இறங்கி வெட்டவெளிக்கு வந்து அங்கிருக்கும் அனைத்து வகைப் பொருள்களையும் தொட்டும் சுவைத்தும் தன் அறிவை வளர்த்துக்கொள்கிறது. குழந்தையின் இச்செயல்களைக் கூர்ந்து கவனித்தோமாயின் மனிதன் குரங்கு நிலையிலிருந்து மேல் நோக்கி நகர்ந்த போது தன்னைச் சுற்றியிருந்த உலகை எவ்வாறு அணுகி நுணுகி ஆய்ந்து இயற்கையில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்திருப்பான் என்பது நம் மனக்கண் முன்னால் ஓடும். சித்தர்கள் எனப்படும் செயல்வீரர்கள்(குண்டிலினி எனப்படும், உட்கார்ந்து உலகை அளப்பது பற்றிக் கூறியுள்ள போலிகளை அல்ல, மருத்துவம், வானியல் பற்றிய நம் அறிவியல்களைத் தோற்றுவித்தவர்கள் பற்றி) காடு மேடுகளெல்லாம் அலைந்து மூலிகைகளின் வேர் முதல் விதை வரை ஆய்வு செய்தவர்களும், இடுகாடு, சுடுகாடுகளுக்குச் சென்று பிணங்களை அறுத்துக் கூறுபோட்டு உடலியல், நரம்பியல், எலும்பியல் என்று வகுத்தறிந்தவர்களும் இன்றைய மேலையர் நாகரிக வளர்ச்சியில் ஆப்பிள் பழம் வீழ்வதைக் கண்டு ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் முதற்கொண்டு புளோரின் என்ற வளியின் மணத்தை அறிய உயிரை விட்ட அறிவியலாளர் வரை நம மனக்கண் முன்னால் வருவர். எனவே குழந்தைகளின் இந்த ஆய்வுகளுக்கு நாம் வாய்ப்பளிக்கும் அதேவேளையில் அவர்களின் இந்த விளையாட்டை பாதுகாப்பு எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குழந்தைகள் உரிய பருவம் எய்தும் போது மண்ணில் விளையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். மாசு மிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும். அது போல் பள்ளியிலும் குழந்தைகளை இயற்கைச் சூழலில் நடமாட விட்டு அவர்கள் இயற்கையோடும் தன்னையொத்த பிள்ளைகளோடும் ஆசிரியர்களோடும் நடந்துகொள்ளும் முறைகளை வைத்து அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மனச்சாய்வுகள், விருப்பு - வெறுப்புகள், வலிவு மெலிவுகள் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். உரிய அகவையில் மொழிப்பயிற்சியும் அளிக்க வேண்டும்.

மொழிப்பயிற்சியில் எந்த முறை சிறந்ததென்று பார்ப்போம்.

ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்வரை குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன் வீட்டில் ஓர் ஆசிரியரை வரவழைத்து அவர் பூசை செய்து ஒரு பனை ஓலை ஏட்டில் எழுத்துகளை எழுதி தரையில் அரிசியை அல்லது மணலைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து ஒன்றிரண்டு எழுத்துகளை எழுதுவார். இதற்கு ஏடு தொடங்கல் என்று பெயர். அந்த ஏட்டை துப்பாக்கியைத் தோளில் சார்த்திச் செல்வதைப் போல் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்வர். அங்கு முதலில் ஆனா, ஆவன்னா சொல்லித்தருவர். குறிலுக்கு 'னா'வும் நெடிலுக்கு 'வன்னா'வும் பின்னிணைப்புகளாக வரும். உயிரெழுத்துகள் ,பின்னர் மெய்யெழுத்துகள், இறுதியில் உயர்மெய் எழுத்துகள் ஆகியவை சொல்லித்தரப்படும். அதனோடு கூடவே ஒன்று, இரண்டு என்று எண் வரிசையும் கற்பிக்கப்படும். எழுத்துகளுக்கு அரிச்சுவடி என்றும எண்ணுக்கு எண்சுவடி என்றும் சிறு புத்தகங்கள் உண்டு. எண்சுவடியில் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என்று வாய்பாடுகள் உண்டு. அவை அனைத்தையும் ஏளக்குறைய அனைத்துப் பிள்ளைகளும மனப்பாடம் செய்துவிடுவர். மழலைப் பருவத்தில் படித்த அவ்வாய்பாடுகளும் அரிச்சுவடியும் நினைவு ஆற்றலை இழக்கும் முதுமையில் கூட மூளையில் பதிந்திருக்கும். இதன் அடுத்த கட்டமாகத்தான் அணில், ஆடு போன்று எழுத்துக்கும் சொல்லுக்கும் உள்ள உறவுகள் பயிற்றுவிக்கப்படும்.

நாள் செல்லச் செல்ல, பிரிட்டனின் செல்வாக்கு இந்தியாவில் குறைந்து அமெரிக்கச் செல்வாக்கு ஏறியது. எனவே 'புரட்சி'கர மாற்றங்களை அமெரிக்காவின் கையாட்களான ஆட்சியாளர்கள் புகுத்தினர். ஒரு குழந்தையின் இயற்கை ஆற்றல்களை அழிக்கும் ஒரு விரிவான திட்டத்தின் தொடக்கமாகும் இது. இப்போது மனப்பாடம் செய்யும் குழந்தையின் ஆற்றல் முழுவதும் செயலுக்கு வராமல் முடக்கப்பட்டது. அணில், ஆடு என்பதிலிருந்தே எழுத்துக கல்வி தோடங்கப்பட்டது.

இப்பொழுது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. பாராமல் படித்தல் அல்லது மனப்பாடம் செய்தல் என்பது சிந்திக்கும் ஆற்றலைச் சிதறடித்துவிடும் என்றாயே, இப்போது அது ஓர் ஆற்றல் அதைப் பேண வேண்டும் என்கிறாயே என்பது அது. அதற்கான விடை இதோ:

ஒரு குழந்தை பேசத் துவங்கும் போது முதலில் அம்மா என்ற சொல்லைக் கற்றுக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டத்தில் அக்குழந்தை ஓயாமல் அம்மா, அம்மம்மம்மா என்று கூறிக்கொண்டே இருக்கும். திடீரென்று உரக்க அம்மா என்று கத்தும் ஓடிப்போய்ப் பார்த்தால் அது சொல்பயிற்சிதான் என்பது புரியும். ஒரு அவயல்கிளவி(கெட்ட வார்த்தை) அதற்குக் கிடைத்தாலும் அதையும் அவ்வாறே கையாளும். ஆக இது மூளை பயன்பாட்டு வளர்ச்சியில் ஒரு கட்டம். அதை நாம் பயன்படுத்தாமல் போனால் பயன்பாட்டுக்கு வராத அந்தத திறன் நமக்கு வாய்க்காமலே போகும். இப்போது ஒரு சராசரி கூட்டலையே செய்து முடிக்க குழந்தைகள் படும்பாடு பார்க்க முடியவில்லை. சிறிது மேல் வகுப்புகளுக்குப் போகும் போது கணித்தான்(கால்குலேட்டர்) போன்ற கருவிகளைக் கையாளத் தொடங்கிவிடுகின்றனர். இந்தக் கருவிகளைச் செய்து சந்தைக்கு விடும் அயல்நாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களால்தான் கல்வி முறையில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன். இந்த மாற்றங்கள் நம் நாட்டு நிலைமைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப நாம் மேற்கொண்டவையல்ல.

அடுத்து கல்விக்கூடம் அமைய வேண்டிய சூழலைப் பார்ப்போம்.:

இன்று உலகளவில் கல்வி என்பது உடலுழைப்பின்றி இருக்கையில் அமர்ந்து செய்யும் "வேலை" ஒன்றைப் பெறுவதற்காகத் தம்மைத் தகுதி பெறச் செய்வதாகவே கருதப்படுகிறது. அண்மையில் சத்துணவுப் பணியாளராகிய ஒரு பெண்ணிடம் பேசும் போது பத்தாவது படிக்கும் தன் மகளை இ.ஆ.ப. தேர்வுக்கு ஆயத்தப்படுத்தப் போவதாகக் கூறினார். பொதுவாக இது போன்ற பட்டங்கள் இப்போது மரபு வழி வருவது இயல்பாகிவிட்டது. அதற்கு அடுத்தபடி அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு. அங்கொன்றும் இங்கொன்றும் ஏழைகளில் ஒருவர் வந்துவிட்டால் நாட்டிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் அதனை ஊதிப் பெருக்கி முயற்சியுள்ள அனைவருக்கும் இது போன்ற பட்டங்கள் காத்திருப்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகின்றன. மகளை தொழிற்பயிற்சி எதிலாவது சேர்க்குமாறு நான் கூறிய போது அந்தப் பெண் தன்னை நான் இழிவுபடுத்தியது போல் உணர்ந்தாள். இதற்காக நான் அவளைக் குறைகூறுவதற்கில்லை. இன்றைய நடைமுறைச் சிந்தனை நிலை அது.

இன்று நம் நாட்டில் எல்லாமே கலைந்து ஒரு புதிய மறுசீரமைப்புக்காகக் காத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து பெரும் நிலக்கிழார்களின் நிலங்கள் அங்கு குத்தகைக்குப் பயிரிட்ட குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவர்களுக்குக் கிடைத்த துண்டுதுக்காணி நிலங்களில் பயிரிட்டு தங்கள் வயிற்றுப்பாட்டை பார்க்க முடியாமல் வயல்களை விற்றுவிட்டு நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளை நோக்கிச் சென்றனர் அக்குடியானவர்கள். நிலங்களை வாங்கிய புதுப்பணக்காரர்கள் பெரும் பண்ணைகளை உருவாக்கி கருவிகள் மூலமும் புதிய தொழில்நுட்பங்கள் மூலமும் வேளாண்மையை வளர்த்தனர். பழைய இருப்பிடங்கள் கலைந்து புதிய நகரமைப்பு உத்திகளில் புதிய நகரங்கள் உருவாயின.

இங்கிலாந்தில் நிலக்கிழார்கள் பண்ணையாள்களைத் துரத்திவிட்டு கம்பிளி ஆட்டுப்பண்ணைகளை உருவாக்கினர். உணவு அமெரிக்காவிலிருந்து வந்தது. பண்ணைகளிலிருந்து வெளியேறிய பண்ணையாட்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கும் புதிய தொழில் நகரங்களும் குடியிருப்புகளும் உருவாயின.

ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில இருந்தது அழிந்திருக்கறது புதியது உருவாகவில்லை. உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இங்கு எவருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. அதை உருவாக்கவும் அதன் உருவாக்கத்திலேயே புதிய கல்வி முறையை, உண்மையான கல்விமுறையை வளர்த்தெடுக்கவும் ஆன உத்தியை வகுக்க முயல்வோம்.

கல்வியில் மாற்றம் கொண்டுவர நாம் எங்கிருந்து தொடங்குவது?

எந்த உயிரும் வாழ்வதற்கு முதல் தேவை உணவு, அது நிறைவேறிய பின் அடுத்துத்தான் மானம் காக்கும் உடையும் உடலைக் காக்கும் உறைவிடமும். இவை நிறைவேறினால்தான் மனிதன் சிந்திப்பான். மனிதன் வயிறு நிறைந்தால்தான் சிந்திப்பான் என்றார் மார்க்சு. ஆனால் தமிழகத்தானுக்கு பட்டினி அச்சம் இன்றும் அகலவில்லை, அதனால்தான் அவனது சிந்தனை பணம் சேர்ப்பதில் மட்டும் நிலைத்துவிட்டது. அறிவுசீவிகள் என்போரும் அறிவை விற்பதற்காகவே சீவிவிடுகிறார்கள்.

1917இல் நடைபெற்ற உருசியப் புரட்சிக்குப் பின் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான ஐரோப்பியர்கள் அவற்றைப் பூட்டிவிட்டு ஓடிவிட தொழிலாளர்கள் திக்கு தெரியாமல் திகைத்து நின்றனர். லெனின் அவர்களை அணுகி தொழிற்சாலைகளை அவ்வவற்றின் தொழிலாளர்களே கூட்டாக எடுத்து நடத்த அறிவுரை கூறினார். அவர்களுக்கு உணவுக்கு என்ன செய்வது? உழவர் பெருமக்களை அணுகி தங்கள் விளைபொருட்களில் ஒரு பகுதியை நகரத்திலுள்ள தொழிலாளருக்கு அரசு நிறுவும் விலைக்குக் கொடுத்துவிட்டு மீதியை வெளிச்சந்தையில் விற்றுக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். தொழிற்சாலைகள் அவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் என்றும் கூறினார். இவ்வாறுதான் அங்கு நிலைகுத்திப்போன பொருளியல் நடவடிக்கைகள் மீட்கப்பட்டன. இந்தப் பின்னணியில் நாமும் உணவை உருவாக்கும் வேளாண்மையிலிருந்து தொடங்குவோம்.

நம் நாட்டில் பாட்டாளிகளின் கட்சி எனப்படும் பொதுமைக் கட்சி நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு என இரண்டு முழக்கங்களை முன்வைத்தது(1962க்கு அப்புறமே இரண்டாக அக்கட்சி உடைந்தது. வலது கட்சி உருசிய கைக்கூலி, இடது கட்சி சீனத்தின் அதன் மூலம் அமெரிக்காவின் கையாள்). அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை(சோசலிச) அனைத்துலகியம் என்ற அமைப்பின் கீழ் இயங்கிய கட்சி இந்தியாவில் இருந்த ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளான நிகர்மைக் கட்சி. பொதுமைக் கட்சிக்கும் நிகர்மைக் கட்சிக்கும் செயல்திட்டத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. தொடக்கத்தில் ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதாக இருந்த பொதுமைக் கட்சியின் முழக்கம், 1953இல் தாலின் இறந்த பின்னர் தேர்தல் மூலம் அக்குறிக்கோளை எய்துவதாக மாற்றப்பட்டது.

இந்த இரண்டு கட்சிகளும் வைத்த குத்தகை ஒழிப்பை அரசு ஏற்றுக்கொண்டு ஒரு சட்டம் இயற்றியது. அதன் படி ஒரு குத்தகை உழவன் ஒழுங்காக வாரம் அளந்துவந்தால் அவனிடமிருந்து நிலத்தைப் பிடுங்க முடியாது. மூன்று முறை தகுந்த காரணமின்றி வாரம் செலுத்தவில்லை என்றால் பிடுங்கிவிடலாம் எனபதாகும். அத்துடன் உடைமையாளன் நிலத்ததை விற்றால் விற்ற பணத்தில் 50%ஐ குத்தகை உழவனுக்கு வழங்கிவிட வேண்டும், அல்லது பாதி நிலத்தை அவனுக்கு வழங்க வேண்டும் அல்லது பாதி நிலத்துக்குப் பண்த்தை வாங்கிவிட்டு மொத்த நிலத்தையும் உழவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது. நிலத்தில், செலவுகள் அனைத்தையும் தானே நேரடியாக ஏற்றுக்கொண்டு வேளாண்மை செய்பவனுக்கே நிலம் உரிமையாக இருக்க வேண்டும் என்பது குத்தகை ஒழிப்பின் அடிப்படை நோக்கம். அப்படியானால்தான நிலத்தின் முழு விளைதிறனும் செயலுக்கு வரும் என்பது அடிப்படை. ஆனால் இங்கு குத்தக்கை ஒழிப்புச் சட்டம் என்பது குத்தகை நிலைப்புச் சட்டமாகவே பிறவி எடுத்தது.

அடுத்து நில உச்சவரம்பு. நன்செய் நிலங்கள் 12½ ஏக்கர்களும் புன்செய் நிலங்கள் 25 ஏக்கர்களும் என வரம்பு நிறுவப்பட்டது. அதற்கு மிஞ்சிய நிலங்களை இனங்கண்டு கைப்பற்ற என்று வருவாய்த்துறையில் தனிப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் குளங்களில்தாம் கட்டப்பட்டனவே அன்றி நில உச்சவரம்பில் கைப்பற்றியவை என்று ஒரு சதுர அடி கூட சுட்டப்படவில்லை. நம் பொதுமைக் கட்சித் தோழர்களோ, ஏழைகளுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் இலவய வீட்டுமனைகளுக்காக குளங்கள், வாய்க்கால்கள், சாலைப் புறம்போக்கு நிலங்களைத்தான் காட்டினார்களே அன்றி தங்கள் அருஞ்செயலாக மார்தட்டிக்கொண்ட நில உச்சவரம்புச் சட்டத்தின் படி மீட்கப்பட்ட நிலம் என்று ஒரு காலடி தடத்தைக்கூடக் காட்டவில்லை.

இந்தப் போலி குத்தகை ஒழிப்பு, நில உச்சவரம்பு நடைமுறையில் நிலங்கள் பொருளியல் வலிமையற்ற ஏழைபாழைகளிடம் துண்டுதுக்காணி நிலங்களாக வந்த சூழலில்தான் அமெரிக்காவின் போர்டு அறக்கட்டளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 13 மாவட்டங்களை எடுத்துக்கொண்டு அங்கு இலவயமாக, வீரிய வகைகள் என்ற பெயரில் ஒட்டுவகை நெல்கள், சீமை உரம், பூச்சி மருந்துகளை இலவயமாக வழங்கி கொஞ்சம் கூடுதல் விளைச்சலைக் காட்டியது. இந்தத் திட்டத்துக்கு முனைப்பான ஊரக வளர்ச்சித் திட்டம (I.R.D.P. - Intensive Rural Development Programme) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக போர்டு அறக்கட்டளை வெளியேறிவிட நாடு முழுவதும் அரசே மானிய விலையில் விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் வழங்கும் முனைப்பான வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை(I.A.D.P.) நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

காவிரிப் படிகைப் பகுதி முழுவதும் தஞ்சை என்ற ஒரே மாவட்டமாக இருந்த அந்தக் காலகட்டத்தில்(1950 - 60களில்) கிட்டத்தட்ட 90,000 ஏக்கர்கள் நன்செய் நிலங்கள் கொண்ட குன்னியூர் சாம்பசிவ ஐயர், அதற்கடுத்து இன்றைய சி.கே.வாசனின் தந்தையான சி.கே.மூப்பனார் ஆகிய கருப்பையா மூப்பனார் என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்த பெருநில பூதங்களுக்குத் தங்கள் நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதே தெரியாது. இன்று வி.ஏ.ஓ. எனப்படும் ஊர்க் கணக்குப்பிள்ளையாகிய கர்ணத்துக்கு இணையாக ஒவ்வொரு வருவாய் ஊரிலும் ஒவ்வொரு கோயில் அல்லது மடத்து நிலங்களுக்கும் ஒவ்வொரு பண்ணையார் நிலங்களுக்கும் தனித்தனி கணக்குப்பிள்ளைகள் உண்டு. நிலங்கள் குத்தகை, உள்குத்திகை என்று ஒன்றுக்கு மேற்பட்ட கைகளுக்குச் சென்று இறுதியில் பயிர் செய்யும் உழவன் கையில் ஓர் ஏக்கர், அரை ஏக்கர் அளவுக்கு வந்து சேரும்.

நில உச்ச வரம்புச் சட்டத்தை ஏமாற்ற போலிப் பெயர்களில் நிலத்தை மாற்றினார்கள் இப்பெரும் பண்ணையார்கள்.(பிற்காலத்தில் இப்போலி உடைமைகளை இனங்கண்டு மீட்பதற்காக ம.கோ,இரா. காலத்தில் கொண்டு வந்த சட்ட்ததுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் பார்த்துக்கொண்டார் வாசனின் தந்தை கருப்பசாமி மூப்பனார்.)

இந்தக் கால கட்டத்தில் 50, 100 ஏக்கர்கள் நிலம் வைத்துச் சொந்தப் பயிர் செய்த சிறு பண்ணையார்கள் வேளாண்மையில் அறிவியலைப் புகுத்தும் அவாவில் அப்போதுதான் புதிதாகத் தொடங்கியிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்து வெளியே அவர்கள் வந்த போது நிலங்கள் சிதறடிக்கப்பட்டு அவர்கள் கைகளை விட்டுப்போயிருந்தன. அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேளாண் வளர்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் சீமை உர, பூச்சி மருந்து நிறுவனங்களின் படைப்புகளைப் பரிந்துரைக்கும் முகவர்களாக முடக்கப்பட்டனர்.

இதற்கு அடுத்த கட்டமாகத்தான் கொடுங்கோலன் லால் பகதூர் சாத்திரி வேளாண் விளைபொருள் நடமாட்டத்துக்கும் இருப்பு வைக்கவும் நல்ல விலை தருவோருக்கு விற்கவும் தடை விதித்து வேளாண்மையை ஒரு தீண்டத்தகாத தொழிலாக்கினான்.

வயலுக்குப் போகாத பெரும் பண்ணையார்கள் சென்னையில் இசை அரங்குகளிலும் பரத்தையர் ஆட்டங்களிலும் கூட்டங்களிலும் கூத்தடிக்க இந்த சிறு பண்ணையார்களின் வருமானம் சென்னையில் முதலீடாக, பனியாக்களுக்குப் போட்டியாக நுழைந்ததைப் பார்த்த பின்தான் நம் பாட்டாளியப் புரட்சியாளர்களான பொதுமைக் கட்சியினரும் அமெரிக்க முகவர்களான நிகர்மைக் கட்சியின்ரும் நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புப் போராட்டங்களில் இறங்கினர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஆக தாழ்த்தப்பட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினரில் ஏழைகள் கைகளில் இன்று வேளாண்மை சிக்கி ஆட்சியாளர்களின் வகைவகையான கொடுமைகளால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த அழகில் நம் பொதுமைப் புரட்சியாளர்கள் வேளாண் தொழிலாளர்களைத் திரட்டி கூலி உயர்fவுப் போராட்டங்களை நடத்தி வெந்த புண்ணில் ஈயத்தை உருக்கி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று நிலம் வைத்திருக்கும் உழ்வன் கூலி வேலைக்குப் போகாமல் தன் அன்றாடப் பாட்டை ஓட்ட முடியாது. கணிசமாக நிலம் வைத்திருக்கும் வசதியுள்ளவர்களும் வேறு தொழில் ஒன்றில் ஈடுபடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வரும் பெருமைக்காகவே இவர்கள் வயல் வைத்திருக்கின்றனர். இன்று அவர்களும் அருகி வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் முதலில் வயிற்றுக்குச் சோறிடும் வேளாண் தொழிலை மீட்கும் ஓர் உத்தியை முன்வைத்து அதைச் சார்ந்து தோன்றி கிளைத்து வளரும் ஒரு கல்வி முறையைச் சிந்திப்போம்.

நில உச்ச வரம்பு தவச(தானிய) வேளாண்மைக்கு மட்டுமே. பெருந்தோட்டங்களுக்கும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட வாணிகப் பயிர்களுக்கும் பொருந்தாது என்ற உண்மையை நம் பாட்டாளியப் புரட்சியாளர்கள் சட்டத்தினுள் புகுந்து அறிந்துகொள்ள முடியாத எளிய மக்களிடமிருந்து மறைத்தார்கள். இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாலிநோக்கம் பகுதியில் டாட்டாக்கள் அந்தக் காலத்திலேயே 20,000 ஏக்கர்கள் வாங்கி உப்பளம் நடத்தி தமிழக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் உடல் நலத்துக்க் கேடுதரும் அயோடின் உப்பை மக்களின் தலைகளில் கட்டுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் 100 அல்லது 200 ஏக்கர்களுக்குக் குறையாத பண்ணைகளை உருவாக்க வேண்டும். நிலங்களை விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அண்டை நில உடைமையாளர்களை ஒருங்கிணைத்து பங்கு முதலீட்டு முறையில் பண்ணையை உருவாக்க வேண்டும். பணத்தையும் அவ்வாறே திரட்ட வேண்டும். படித்து உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பெற்றோரை அணுகி இந்த முன்முயற்சியை எடுக்க வேண்டும். அவர்களே பண்ணையில் முன்னோடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆடு மாடுகள் புக முடியாத அளவில் சுற்றி வலிமையான வேலி அமைக்க வேண்டும். அவற்றில் குறைந்தது 10%க்குக் குறையாத பரப்பில் ஓர் ஓரத்தில் காடு வளர்க்க வேண்டும். ஒன்றை ஒட்டி ஒன்றாக பண்ணைகள் அமையும் போது அவற்றிலுள்ள காட்டுப்பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக்கிடக்குமாறு அமைய வேண்டும். பாறை மிகுதியாக உள்ள இடங்களில் ஆல், அத்தி அரசு, முருங்கை, முள்முருங்கை, உசிலை போன்ற பசும் மரங்களை நட்டால் அவற்றின் வேர்க்ள் பாறைகளைப் பிளந்து மண்ணை மெனமையாக்கும். ஆனால் தொடக்க நிலைகளில் இத்தகைய நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.

பண்ணையில் ஆடு மாடுகளுக்குத் தொழுவங்கள் அமைக்க வேண்டும். தொழுவங்களில் நாட்டுவகை கால்நடைகளைத்தான் வளர்க்க வேண்டும். அவற்றின் தீவன்த்துக்கு அங்கேயே தீவனப் புற்களையும் மரங்களையும் வளர்க்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் ஒன்றோ பலவோ கிணறுகள் அமைக்க வேண்டும். மாட்டுச் சாணத்திலிருந்து எரிவளி எடுத்து அடுப்புக்கும் விளக்குக்கும் முடிந்தால மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்தலாம்.

நிலக்கிடப்புக்கு ஏற்றாற் போல் ஒரு சிறு குளம் அமைக்க வேண்டும். அண்டை ஊர்களில் சேரும் மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்றையும் அமைக்கலாம். அதிலும் காடு வளர்க்கலாம். இவை அனைத்தும் அந்நிலத்தில் விழும் மழை நீரை நிலத்தின் மேலும் அடியிலும் பிடித்துவைத்து மண்ணின் நில நீர் வளத்தைப் பெருக்கும்.

எஞ்சியுள்ள நிலத்தில் நீர் வளத்துக்கு ஏற்ப நன்செய்யோ புன்செய்யோ பயிர் வளர்க்க வேண்டும். நன்செய் நிலங்களில் கூட அவ்வப்போது புன்செய்ப் பயிர்களை மாற்றுப்பயிராக இட வேண்டும்.

கிடைக்கும் விளைபொருட்களை அப்படியே சந்தைக்கு விடுக்கக் கூடாது. முடிந்த அல்லது பகுதி முடிந்த பொருளாகவோதான் விடுக்க வேண்டும். பண்ணையின் ஒட்டுமொத்த அணுகல், அதில் பணியாற்றுவோர் ஆண்டு முழுவதும் வேலை செய்வதாக இருக்க வேண்டும். அதனால் ஊழியர்களுக்கு, பண்ணையில் மிகக் குறைந்த இடம் பிடிக்கக் கூடிய அதே வேளையில் தூய்மையான சூழலில் பராமரிக்கத்தக்க அடுக்ககம் போன்ற வீடுகள் அமைக்க வேண்டும்.

இது போன்ற ஒரு திட்டம் தொடங்குவதானால் முதலில், நம்பகமான நீர்வளமும் வளமான மண்ணும் உள்ள இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னோடியான இத்திட்டம் தோல்வியில் முடிந்து பிறர் எவரும் இம்முயற்சியில் ஈடுப்படுவதைத் தடுப்பதாக அமைந்துவிடக்கூடாது.

உடனடியாக ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த முன்னோடித் திட்டத்துக்குப் பொருத்தமானவர்களல்ல. இதை வெற்றியுடன் நிறைவேற்றுவதன் மூலம் பிறரையும் இது போன்ற முயற்சிகளில் இறங்க ஊக்கமூட்டுவதை ஒரு குமுகப் பணியாக மேற்கொள்ளும், பொதுப்பணியில் நாட்டமும் பொருளியல் வலிமையும் உள்ளவர்கள்தாம் ஈடுபட முடியும்.

வெளிநாடுகளிலிருந்து தன்னார்வத்தொண்டு என்ற பெயரிலோ அரசுகளிடமிருந்தோ பணம் பெற்று இத்திட்டத்துக்கு முயலக் கூடாது. அயலகத்தில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த, தமிழக நலம் நாடுவோர் இம்முயற்சியில் பங்கேற்பவராக இருப்பதை வரவேற்கலாம்.

இந்த இயற்கைக் களத்தின் பின்னணியில் மழலைகளின் கல்வியை, அதாவது மழலைகள் இயற்கையையும் அவர்களை நாமும் அறிந்துகொள்ளும் "தொடக்க"க் கல்வியைத் தொடங்க வேண்டும்.

மழலையர் பள்ளி தொடங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மேலே, பக்.4இல் குறிப்பிட்டுள்ளது போல் சிறந்த குழந்தை உளவியல் வல்லுநர்களாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விளையாட்டே கல்வியாக, வேலையாகத் தொடக்கக் கல்வி அமைய வேண்டும். வீட்டைச் சுற்றிலும் நிலமும் அவற்றில் மரங்கள், செடிகளை வளர்ப்பதுமாக உள்ள வீட்டுக் குழந்தைகள் ஒரு பருவத்தில் மூத்தோர் குடங்கள், வாளிகளில் நீர் ஊற்றுவதைப் பார்த்துத் தாமும் அதைச் செய்ய அடம் பிடிக்கும். அப்போது அவர்களுக்குச் சிறு குடங்களோ வாளிகளோ வாங்கிக் கொடுத்து தண்ணீர் பிடித்து ஊற்ற விடுவது உண்டு. அது போல் பெரியவர்கள் மண்வெட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் பார்த்து தாமும் அதே மண்வெட்டியைப் பிடித்து வெட்ட முயல்வர். கால்களில் மண்வெட்டி காயங்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சிறு மண்வெட்டிகளான களைக்கொத்திகளை வாங்கிக் கொடுத்து விளையாட விடுவது உண்டு. அதைப் போல் இந்தப் பருவத்தில் எண்ணையும் எழுத்தையும் கொஞ்ச நேரம் சொல்லிக்கொடுத்துவிட்டு சிறிது நேரம் வேலைகள் நடக்கும் இடத்தில் நடமாட விட்டு அவரவருக்குப் பிடித்த வேலைகளை விளையாட்டுப் போல் செய்ய விட வேண்டும். பாடவும் ஆடவும் நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படும் போது அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அவர்க்ளது திறன்கள், மனச்சாய்வுகள், அடுத்தவரோடு பழகுதல், சேர்ந்து இயங்குதல் போன்ற இயல்புகள் என்று அனைத்தையும் அளவிட்டு மதிப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு அகவை ஏற ஏற கொஞ்சம் கொஞ்சமாகக் கனத்த கருவிகளைக் கையாண்டு கனத்த வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். எழுத்தறிவைப் பொறுத்த வரை, எண்ணுக்கும் எழுத்துக்கும் அடுத்தபடி அக்குழந்தைகள் வாழும் வட்டாரம், மாவட்டம் குறித்த புவியியல், நிலவளம், வேளைண்மை, தொழில்கள், வரலாறு குறித்த பாடங்களை நடத்த வேண்டும். சுவையான கதைகள், விடுகதைகள், செய்யுள்களுக்கு உரிய இடம் வேண்டும். விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

அக்கம் பக்கங்களில் இத்தகைய பண்ணைகள் பெருகப் பெருக பண்ணைகளில் பயன்படும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிமனைகள் உருவாகும். மாணவர்களை அப்பணிமனைகளில் பயிற்சி பெற விடுத்து அதில் ஈடுபாடு காட்டுவோரை அத்துறையில் திருப்பிவிட்டு அதற்குரிய கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். குடியிருப்புகள் பெருகும் போது மருத்துவ வசதி தேவைப்படும். அதற்கு உருவாகும் மருத்துவ மனைகளில் மாணவர்களைப் பயிற்சி பெற விடுத்து அதில் சிறப்பு ஈடுபாடு உள்ளோரை அந்தத் துறைக்குத் திருப்பி விட வேண்டும். அது போல்தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காடு வளர்ப்பு என்று ஒவ்வொரு துறைக்கும். ஒட்டுமொத்தத்தில், ஒரு கட்டடப் பொறியாளன், கட்டட வேலையில் கையாளாக இருந்து அத்துறையில் சான்றுப் படிப்பு படித்து அடுத்து கொத்தனாராக, கம்பி கட்டுவோனாக, தச்சனாக, மின்னியல் பணியாளனாக, வெள்ளையடிப்பானாகக் களத்தில் பயிற்சி பெற்று தான் விரும்பும் துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதி அத்துறையில் பட்டயப்படிப்பு படித்து முடித்து, களத்தில் மேற்பார்வையாளனாகப் பயிற்சி பெற்று தான் விரும்பும் சிறப்புத்துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதித் தான் பட்டப் படிப்பினுள் நுழைய வேண்டும். அதைப்போல் ஒரு மருத்துவரிடம் குறைந்தது துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றியவர்தான் உரிய படிப்பு படித்து ஒரு செவிலியருக்கான நுழைவுத்தேர்வு எழுதி செவிலியராகி அப்படித்தான் படிப்படியாக மருத்துவப் பட்டப் படிப்புக்குள் நுழைய வேண்டும்.

பணத்தையும் செல்வாக்கையும் வைத்து 22 அகவைக்குள் பொறியாளராகவும் மருத்துவராகவும் வேளாண் பட்டந்தாங்கியாகவும் இ.ஆ.ப. ஆகவும் வரும் அறப்பிஞ்சுகளால் நாட்டை நிரப்பும் இன்றைய நடைமுறை முடிவுக்கு வர வேண்டும். எழுத்துப் படிப்பில் நாட்டமின்றி ஆனால் தொழிலில் ஆர்வமும் திறமையும் உரியோரை இனங்கண்டு அவர்களுக்கு உயர் கல்வி அல்லது பயிற்சி அளித்து சான்று, பட்டயம், பட்டம் முதலியன வழங்குவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். வெவ்வேறு பணிநிலைகளில் உள்ளோருக்கான சம்பள வேறுபாடு எல்லைப்படுத்த வேண்டும். அப்படியானால்தான் சம்பளத்துக்காகப் பட்டங்கள் பெற முயல்வோரின் மறைமுகத் தலையீடுகள் இரா.

நாடு முழுவதுமுள்ள வேளாண்மை, காடுவளர்ப்புக்குள்ள நிலங்கள் இவ்வாறு முழுப் பயன்பாட்டுக்கு வரும் போது பெரும் பணிமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று உருவாவது தவிர்க்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் மின்னணுவியலையும் அவற்றுக்குத் துணையாக, இணையாக வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றைத் திட்டமிட்டு கண்டிப்பான வரைமுறைகளின் கீழ் வடிவமைக்க வேண்டும். பண்ணைகளுக்குள் அமையும் கட்டடங்கள் தவிர எந்தக் கட்டடமும் உரிய நகரமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தமிழகத்தில் தகுந்த மண்டல தலைநகரங்களை உருவாக்க வேண்டும். அவை மழைநீரை எளிதில் வழிய விடக்கூடிய உயர்ந்த இடங்களில் அமைய வேண்டும்.

இந்த நகரங்களை வளைவுகளற்ற நேர்ச்சாலைகளால் இணைக்க வேண்டும். இதனால் இடப்பெயர்ச்சி அதாவது செல்கைகளுக்கு(பயணங்களுக்கு) எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவதுடன் எரிபொருளும் மிச்சமாகும். இணைப்புச் சாலைகளும் நேர்ச்சாலைகளாகவே இருக்க வேண்டும். இந்த நேர்ச் சாலைகளை முடிவுசெய்யும் போது அவை நிலத்தின் முகடுகள் வழியாச் செல்வதற்காக வளைவதற்கு முன்னுரிமை கொடுக்கவும் வேண்டும். இதன் மூலம் பாலங்களுக்கான செலவுகள் குறையும், விளை நிலங்கள் சாலைகளுக்காக அழிக்கப்படா.

இந்தச் சாலைகளை ஒட்டிக் குடியிருப்புகள் இருக்கக் கூடாது. குறைந்தது இரண்டு கிலோமீற்றர் தொலைவுக்குக் காடுகளாக இருக்க வேண்டுமென்ற நகரமைப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் அதை 500 மீற்றர்கள் என்று வரையறுக்கிறோம். இந்தக் காடுவளர்ப்பு சாலைப் பரப்பில் உருவாகும் வெப்பத்தைத் தணித்துச் சூழலை இனிமையாக்கும்.

பொதுவாக எந்தச் சாலையையும் தொட்டுக் குடியிருப்புகள் அமைவது நல்லதல்ல. அது குடியிருப்போருக்கும் சாலையில் சொல்வோருக்கும் இடர்களைத் தரும். தெருக்களில் வாயில்களைக் கொண்ட வீடுகள், கடைகள் கூட இருக்கக் கூடாது. வளாகங்களுக்குள் வீடுகளும் அவற்றுக்கு உடனடித் தேவைகளுக்கான கடைகளும் அமைந்து வெளிச்செல்வழி மட்டும் தெருவில் அமைய வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் பாதிவரை நெடுஞாசாலைகளை ஒட்டிய குடியிருப்புகள் அறவே இல்லை. அச்சாலைகளை பெருநகர்களை ஊருக்கு வெளயில்தான் கடந்தன. நகர்களுக்கு வெளியிலும் ஊர்கள் சாலைகளிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவு உள்ளடங்கியே இருந்தன. அதனால்தான் வழிச் செல்வோருக்கு உணவுக்கும் உறைவிடத்துக்கும் சத்திரங்களைப் பண்டை ஆட்சியாளர்கள் அமைத்துப் பேணினர். இன்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் அவற்றின் இடிபாடுகளைக் காணலாம். அது போல் நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஊட்டல்கள்(ஓட்டல்கள்) விடுதிகள் போன்ற கட்டமைப்புகளை குறிப்பிட்ட தொலைவு இடைவெளிகளில் உருவாக்க வேண்டும். இன்னும் நெருக்கமான இடைவெளிகளில் வழி நெடுக கழிவறைகளை உருவாக்கி முறையாகப் பேண வேண்டும்.

பழைய நகரங்களில் பாளையங்கோட்டையின் நகரமைப்பை என்னால் இனங்காண முடிந்தது. தென்மேற்கு மூலையில் கட்டபொம்மன் சிலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மெரீனா சிற்றுண்டியகம் என்னுமிடத்தில் வடக்கே திரும்பி யோவான் கல்லூரி முன்புறம் வழியாக நேரே திருச்செந்தூர் சாலையில் சேர்கிறது. கட்டபொம்மன் சிலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சாலை சித்த மருத்துவக் கல்லூரியை ஒட்டி மேற்குப் புறமாகச் செல்லும் தெரு வழியாகத் திருச்செந்தூர்ச் சாலையைச் சென்றடைகிறது. இதுதான் பாளையங்கோட்டையின் நான்கு எல்லைகளும். இந்தச் சாலையை ஒட்டி மேற்கில் உயிர்க் காப்பீட்டுக் கழக அலுவலகம், வ.உ.சி. விளையாட்டரங்கம், நகராட்சி அலுவலகம், கண்காட்சித் திடல், சித்த மருத்துவக் கல்லூரி என்று தோடரும் பகுதி முன்பு காடுகளாகப் பராமரிக்கப்பட்டவை. அவ்வாறே பாளையங்கோட்டைச் சந்தையிலிருந்து கிழக்கேயும் மேற்கிலும் உள்ள பகுதிகளும் காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து தெற்கே செல்லும் சாலையிலிருந்து யோவான் கல்லூரிச் சாலைக்கு இடையிலுள்ள பகுதிகளும் தெற்கில் தூய சேவியர் பள்ளியைத் தொடர்ந்து கட்டபொம்மன் சிலை வரை உள்ள பகுதியும் காடுகள். சேவியர் பள்ளிக்குப் பின்புறம் இருக்கும் திடல்கள், இடுகாடுகள், கிறித்துவக்கோயில், அஞ்சலகம் என்று மேற்கே வரை மாடுகள் தங்கும் மந்தைவெளி, அதற்கு வடக்கே ஆயர்கள் குடியிருப்பு. அதறகு வடக்கே ஒரு சிவன் கோயில், ஒரு பெருமாள் கோயில், அவற்றுக்குரிய தேர் வீதிகள், மாடத்தெருக்கள், இரண்டுக்கும் நடுவே ஒரு சந்தை(அந்தச் சந்தை இப்போது தெருவாகிவிட்டது). நகரின் ஒரு பக்கச்சாலையிலிருந்து எதிர்ப் பக்கச்சாலைக்குச் செல்வதற்கு நேரான இரண்டிரண்டு குறுக்குச்சாலைகளும்.

திருச்செந்தூர் சாலைக்கு வடக்கே கிழக்கில் கசாப்புத் தொழில் செய்வோரான சீவு இடையர்கள், பள்ளர் – பறையர் குடியிருப்புகள், மேற்கில் செம்மார் குடியிருப்புகள், வட கிழக்கில் சக்கிலியர் குடியிருப்புகள் என்று இனம்காண முடிகிறது. இதில் இந்தக் காட்டுப் பகுதி நகரைச் சுற்றிலும் பாதுகாத்ததையும் நெடுஞ்சாலைக்கும் நகருக்கும் இடையில் காடு நான்கு பக்கச்சாலைகளிலும் இருந்ததையும் சுட்டுவதற்காகவே இதை விரிவாகக் கூறினேன். இது போன்று சாதி அடிப்படையிலோ தோழில் அடிப்படையிலோ சமய அடிப்படையிலோ இன்றி ஒரு நகரமைப்பை நாம் உருவாக்க வேண்டும். முதலாளிய அமைப்பில் தொழிலாளி தொழிற்சாலையினுள்ளும் பண்ணைகளினுள்ளும்தான் அவன் ஒரு தொழில் தொடர்பானவன். அதைவிட்டு வெளியில் வந்தவுடன் அவன் ஒரு சராசரி குடிமகன். இந்த அடிப்படையை மனதில் கொண்டு நாம் நகரங்களை அமைக்க வேண்டும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.



0 மறுமொழிகள்: