28.6.09

தேசியம் வெல்லும் .....12

காந்தியமும் அமெரிக்காவும்:

இந்தியை உயர்த்திப் பிடித்து தன்னை ஓர் இந்துவாக முன் நிறுத்தி இந்திய மக்களைப் பனியா - பார்சிக் கும்பலுக்கு அடிமையாக்கிய காந்தியைப் போல் அமெரிக்க புசுவின் செயற்பாடு மேற்காசிய நாட்டு மக்களுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான மோதலை கிறித்துவ - முகம்மதிய மதங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக காட்டுவதாக அமைந்துள்ளது. இது ஏற்கனவே அரபு நாட்டுத் தலைமைகளின் பணம் செய்த வேலையை இன்னும் எளிதாக்கிவிட்டது. ஏற்கனவே தத்தம் தேசியங்களிலிருந்து தங்களை அயற்படுத்திக்கொண்டு முகம்மதியத் தேசியம் என்ற மாயைக்குள் சிக்கியவர்களின் தவறான நிலைப்பாட்டுக்கு இது வலுச் சேர்த்துள்ளது. இது அரபு நாடுகளின் ஆவல்களுக்கும் பொருந்திவருவதே. வல்லரசுகள்க்கு எதிரான ஒரு விசையாக உலக முகம்மதிய மக்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஒரு புரட்சிகரத் தலைமை முகம்மதியத் தேசியத்துக்கு இல்லை. அரபு நாடுகளின் அரசர்கள்தாம் அந்த இடத்தில் இருக்கின்றனர். எனவே அது ஒரு மாயமானாகத்தான் இருக்கும். அவர்களது குறிக்கோளோ முகம்மதிய அனைத்துலகியம் என்ற பெயரில் தங்கள் தலைமையில் அமெரிக்காவோடு சேர்ந்து ஒரு கூட்டு வல்லரசை நிறுவுவதாகும். இவர்களின் திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி இருக்கவே இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவர் தன் பதவி ஏற்பின் போது பேசியதும் அதே வேளையில் அரேபியத் தலைவர்கள் தங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசியவையும் நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச்செல்கின்றன.

இன்று முற்றி நிற்கும் பொருளியல் நெருக்கடியில் அண்மை ஆண்டுகளில் உருவான “உலகளாவுதலின்” விளைவாகத் தங்களிடம் குவிந்த மாபெரும் பணக் குவியலைக் கொண்டு அரபுத் தலைவர்கள் அமெரிக்காவின் மதிப்புக்குச் கட்டியம் கூறும் கட்டடங்களையும் நிறுவனங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்காவின் குரல்வளையில் அவர்கள் கைவைத்துவிட்டார்கள் என்றொரு மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த அரபுப் பெருந்தலைகள் தங்களிடம் குவிந்த பணத்தைக் கொண்டு தங்கள் சொகுசு வாழ்க்கையைத்தான் மேம்படுத்தியிருக்கிறார்களே அன்றி தங்கள் அறிவியல் - தொழில்நுட்பத்திறனை மேம்படுத்த ஒரு மின்னணுவளவு கூட முயலவில்லை. அதாவது போர் வலிமை இன்னும் வெள்ளைத் தோலர்களிடம்தான் அளவுமீறிய நிலையில் உள்ளது. எனவே அரபுத் தலைவர்கள் முயன்றாலும் வெள்ளைத் தோலர்களை எதிர்கொள்ள இயலாது. அமெரிக்காவுக்கு எதிர்முகம் காட்டி நிற்கும் ஈரான் அரபு நாடல்ல, அது பாரசீகர்களின் நாடாகும். அந்நாட்டை அரபுத் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

இந்தச் சூழ்நிலையில் அந்தந்த மண் சார்ந்த தேசியங்கள் முதலில் தங்கள் தேசங்களிலுள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இணைந்து நின்றும் உலகளவில் ஒருங்கிணைந்தும் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக்காக நாம் மேலே கூறிய செயல் திட்டத்துடன் இயங்கும் மார்க்சியக் கட்சியின் கீழ் இயங்கி ஒவ்வொரு தேசிய மக்களையும் தங்கள் பொருளியலை அயலவர்களிடமிருந்து விடுவிக்கும் இறுதி இலக்கை எட்டுவதுதான் தேச விடுதலையின் அறுதி நோக்கம் என்பதை மறந்துவிடாமல் போராடும் போதுதான் அந்தந்த மண் சார்ந்த தேசியம் வலுப்பெறும். வல்லரசியத்தின் வேர்களும் கிளைகளும் பரவியிருக்கும் இடங்களிலெல்லாம் அவை வெட்டி எறியப்படும். வல்லரசியத்துக்குத் தேசியங்களிலிருந்து பாயும் மீத்த மதிப்பு வாய்க்கால்கள் அடைபடும்; வல்லரசியம் விழும். இதை நேர்மையும் சிந்தனைத் தெளிவும் தத்தம் தேசியங்கள் மீது பற்றும் கொண்ட மார்க்சியர்களும் முகம்மதியத் தோழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகில் நெடுந்தொலைவால் பிரிக்கப்பட்டிருக்கும் பாலத்தீனமும் ஈழமும் ஒரே நேரத்தில் வல்லரசியத்தின் இரு வேறு கைக்கூலிகளான இசுரேலாலும் இந்தியாவாலும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு தேசிய மக்களையும் ஒற்றுமையுடன் செயற்படவிடாமல் பிரித்து வைக்கும் வல்லரசுகளின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு முகம்மதிய உலகியம் பேசும் கும்பல்களை இனம்கண்டு ஒதுக்க வேண்டும்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: