28.6.09

தேசியம் வெல்லும் .....11

சீனமும் 21ஆம் நூற்றாண்டின் புத்தன் அடிமைக் குமுகமும்:

மா சே துங் மரணமடைந்து, நால்வர் குழு வீழ்ச்சியடைந்த பின்னர் சீனத்தில் மார்க்சிய வழியில் முதலாளியத்தை எய்துவதாகக் கூறி அமெரிக்க மூலதனத்துடன் “மாபெரும் தொழில் புரட்சி” அங்கு நடைபெற்றுவருகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகளில், குறிப்பாகச் சுரங்கங்களில் ஏதச் சாவுகள் உலக அளவில் அங்குதான் மிகுதி. கொடுமைகள் தாங்காது மக்கள் படகுகளில் தப்பிச் சென்ற போது அவை மூழ்கியும் பெட்டகச் சரக்கிகளில் பதுங்கியவர்கள் நசுங்கியும் செத்த செய்திகள் வந்த வண்ணமாக இருந்ததை நாமறிவோம். திடீரென்று அச்செய்திகள் நின்று போயின. என்னதான் நடக்கிறது?

சீனத்தின் “வளர்ச்சியை” இந்திய மக்களுக்கு எடுத்து விளக்குவதற்காகப் பல்வேறு செய்தியாளர் குழுக்களை இங்குள்ள சீனச் சார்பாளர்கள் விடுத்துவைக்கின்றனர். அப்படிப் போய்வந்த செய்தியாளர்கள் பதிவு செய்தவற்றுக்கு மாறான செய்திகள் அவர்கள் மூலம் கசிந்துள்ளன. அவற்றின்படி, சீனத்தில் தொழிலாளர்கள் காவலிடப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களது நடமாட்டங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன, அதாவது, அவர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது; அவர்களது பிள்ளைகள் என்ன படிப்பது என்ன தொழில் செய்வது என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்யும். ஆனால் அவர்களுடைய உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதிகள் போன்றவற்றை அரசு அல்லது அவர்களின் உழைப்பைப் பெறும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. நம் நாட்டு அடித்தள மக்களுடையதை விட அவர்களது வாழ்நிலை, மனித உரிமைகளின் வெளிப்படையான பறிப்பு (நம் நாட்டில் அது மறைமுகமாக நடைபெறுகிறது என்பதுடன் அவர்களது “உரிமைகள்” எனப்படுபவை அவர்களது பண்பாட்டுச் சீரழிவை ஊக்குவனவாகவே உள்ளன) என்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பல படிகள் உயர்ந்தது என்பதாகும். இப்போதும் நம்முடைய கேள்வி, இவ்வாறு பறிக்கப்படும் மக்களின் மீத உழைப்பு, அதன் மீத மதிப்பு யாரைச் சேருகிறது; அதாவது பெரும்பங்கு யாருக்கு, சீன ஆட்சியாளருக்கா அல்லது அமெரிக்க வல்லரசுக்கா? இன்று என்ன நிலை? நாளை இதில் இவர்களுக்குள் இது குறித்து முரண்பாடு முற்றினால் அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுமா? எப்போது? இது மனித குலத்தைப் பொறுத்தவரை இன்று மிக மிக அடிப்படையான ஒரு கேள்வி.

ஆனால் ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60%க்கும் மேல் நம்பியிருக்கும் சீனம் உள்நாட்டுச் சந்தையை, அதாவது உள்நாட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துமா? அதாவது அந்த மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமும் பண்பாட்டுத் தரமும் உயர்வதற்கு ஏற்றுமதிக்குப் போக எஞ்சிய 40%யிலிருந்து ஏதாவது கிடைக்குமா? அப்படி உயர்த்த அமெரிக்கா இடம் தருமா என்ற கேள்விகளும் நம்முன் விடைதேடி நிற்கின்றன.

ஆனால் நாம் பரிந்துரைப்பது அந்தந்தத் தேசியத்தின் அனைத்துவகை மூலவளங்களையும் அங்கு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் மூலதனத்துடன் அங்குள்ள மூலப் பொருட்களின் உதவியுடன் உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்படும் தொழில்நுட்பங்களில் அம்மக்களே தங்கள் தேவைக்காக, அதாவது தங்கள் சொந்தத் தேசீயச் சந்தைக்கு என்று பண்டங்களைப் படைப்பதும் பணிகளை வழங்குவதுமான ஒரு செயல்திட்டத்தை. அதாவது நாம் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட பொருளியலை எதிர்க்கிறோம். அரசின் பொருளியல் தலையீடு அடிப்படைக் கட்டமைப்புகளை அளவு மீறாமல் அச்சிடப்பட்ட பணத்தாள்களை கொண்டு உருவாக்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் அளவு மீறுதல் என்பது மக்களின் நுகர்வுக்காக நாட்டில் கிடைக்கும் பண்டங்கள், பணிகளின் அளவுக்கு மிஞ்சியதாகப் பணத்தின் வழங்கல் சென்றுவிடக்கூடாது என்பதாகும்.

உலகத் தேசியங்களில் உள்ள மார்க்சியர்கள் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக் களத்தில் இத்தகைய ஒரு செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதுதான் உலக வராலாற்றை, மனித குல மேம்பாட்டின் அடுத்த கட்டத்தினுள் இட்டுச்செல்லும்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: