28.6.09

தேசியம் வெல்லும் .....7

இருவேறு உலகங்கள்:

இன்று உண்மையில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்று அமெரிக்காவின் தலைமையிலான அனைத்து நாடுகள், மறுபக்கம் இந்த நாடுகளின் உள்ளே சிறைப்பட்டுக் கிடக்கும் எண்ணற்ற தேசங்கள்.

இவ்விடத்தில் தேசம் என்பது பற்றித் தோராயமான ஒரு வரையறையை முயல்வோம்.

தேசத்தின் அடிப்படை நிலம். நிலம் இன்றி, நில எல்லை இன்றி ஒரு தேசியத்துக்கு எந்த அடையாளமும் அடிப்படை ஆனதல்ல. நிலம், பொழுது ஆகிய இரண்டுமே முதற்பொருள் என்ற தொல்காப்பியத்தின் அடிப்படைக் கருத்தும் இதை வழிமொழிகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு விடுதலை பெற்ற நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அயல் மொழியான இந்தியைக் கூட பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டனர். காந்தியின் “இந்து” சமயப் பசப்பல்களைக் கூடப் பொறுத்துக்கொண்டனர்.

தமிழ்த் தேசிய எழுச்சியின் போது, அப்போது தேசத்தின் பொருளியலில் முன்னணியில் இருந்த தெலுங்கர்களில் பலர் தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக்கத் தயங்கவில்லை. சாதிப் பட்டங்களை மக்கள் புறக்கணித்தனர். நம்ப முடியா அடிப்படை மாற்றங்களை மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால் தலைமை தாங்கிய கயவர்கள்தாம் தேசியப் பொருளியல் சுரண்டலிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற குறிக்கோளை முன்வைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்து ஒதுக்கீடு, சிலை வைத்தல், மணிமண்டபம் அமைத்தல் என்று அனைத்து மட்டங்களிலும் மக்களை அணு அணுவாகப் பிளவுபடுத்தியும் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பொறுக்கிகளை வளர்த்தும் தங்களை வளர்த்துவிட்டுத் தமிழ்த் தேசத்தையே சிதைத்துப் சின்னாபின்னமாக்கி வைத்துள்ளனர். பொருளியல் விடுதலை அல்லது உரிமை என்ற குறிக்கோள் கைவிடப்பட்டதால் பிறமொழி பேசும் தமிழக மக்களிடையிலுள்ள பிற்போக்கினரின் கை ஓங்கி அனைவரும் இன்று பனியா – பார்சிகளிடம் கடன்வாங்கித் தொழில் செய்யவைண்டிய நிலைக்குத் தாழ்ந்துள்ளனர். அவ்வாறே செல்வம் படைத்த பிற சாதியினரும். அப்படியானால்தான் வருமானவரித் துறையினரின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது இன்றைய நிலை. தொழில் சாராத பிறர் வாக்குவங்கியாக மாற்றப்பட்டுள்ளனர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட வைக்கோ தெலுங்கு பேசும் தமிழக மக்களை உருவாக்கிய வாக்கு வங்கியை உடைக்க தெலுங்கரான விசயகாந்தை ஆயத்தப்படுத்திக் களத்தில் விட்டுள்ளார் தமிழீனத் தலைவர்.

தமிழக எல்லைகளை அண்டை மாநிலங்கள் உரிமை கோரும் போது அதற்கு எதிராக உருவாகியிருக்க வேண்டிய எழுச்சி கூட “தமிழ்த் தேசிய” இயக்கங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டது. எல்லை மாவட்டங்களில் வாழும் அண்டை மாநில மொழி பேசும் தமிழக மக்கள் மீது வெறுப்புப் பரப்பலை இந்த “தமிழ்” அமைப்புகள் தூண்டிவிட்டுள்ளன. அதனால் அண்டை மாநிலங்கள் அம்மக்களிடையில் தங்களுக்குச் சார்பான மனநிலையை எளிதில் உருவாக்க முடிகிறது, அண்டை மாநிலங்கள் தங்கள் விளைநிலங்களுக்கு வழங்கிய நீரை மறுத்த போது தாம் வாழும் தமிழகத்தின் அரசோ அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் மீது தங்கள் தாய்மொழியைக் காரணமாக வைத்துக் காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொட்டும் போது தாங்கள் வாழும் எல்லை மாவட்டத்தைத் தம் தாய்மொழி பேசும் அண்டை மாநிலம் உரிமை கேட்பதற்குத் துணையாக நின்று வென்றால் நம் வேளாண்மைக்கு நீரும் கிடைக்குமே என்று அண்டை மாநிலத்தாரின் பரப்பலுக்குப் பலியாகவும் கூடுமே.

தமிழக மீனவர்களை இலங்கைப் படையும் இந்திய அரசும் சேர்ந்து 400 பேருக்கு மேல் சுட்டுத் தள்ளிய பின்னும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்த மீனவ மக்களிடையிலிருந்து கூட ஓர் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. ஒப்பாரியுடன் பண உதவிதான் கேட்க வைத்துள்ளனர் அங்குள்ள தலைமைகள். இந்தத் தலைமைகள் ஆட்சியாளர்களுடன் கள்ள உறவில்லை, “நல்ல” உறவையே வைத்துள்ளனர். கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கு இத்தகைய “உதவிகள்”தாமே வாய்ப்பாக அமையும்?

தன் கணவன், தந்தை, மகன் ஆகிய எவருடைய உயிருக்கும் விலை வைத்துச் செயல்படும் தங்களைச் சேர்ந்த கங்காணிகளுக்கும் அவர்களை இயக்கும் ஆட்சியாளர்களாகிய கொடும் கொள்ளையர்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புமாறு அந்த அப்பாவிப் பெண்களுக்கு எடுத்துச்சொல்வார் யாருமில்லை. அது போல் தாக்குதலுக்கு ஆளாகி மக்கள் உயிரிழந்ததற்கு எதிர் நடவடிக்கையாகப் படகுகளை முடக்கிப் போட்டுத் தங்கள் பிழைப்பையும் மக்களின் உணவு வழங்கலையும் மட்டும் நிறுத்த வழிகாட்டும் தம் தலைவர்களைப் புறக்கணித்து நாட்டின் உட்பக்கம் திரும்பி ஆட்சியாளருக்குத் தம் குமுறல் சென்றடையும் வகையிலான போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்ட எவருமில்லை. ஒவ்வொரு நாளும் தாமும் தம் குடும்பமும் உயிர்வாழத் தம் உயிரையே பணயம் வைத்து கொடும் கடலோடு போராடி வாழும் மீனவர்களையே இவ்வளவு கோழைகளாக்கிவிட்டார்களே, அப்படி இருக்க சராசரித் தமிழ் மக்களின் மனநிலையை எப்படி ஆக்கியிருப்பார்கள்?

(தொடரும்)

0 மறுமொழிகள்: