28.6.09

தேசியம் வெல்லும் .....9

யாரைத்தான் நம்புவது மக்கள் நெஞ்சம்?

குணாவைக் குறித்து இன்னும் தொடர்ந்து செல்வதானால், க.ப.அறவாணன் போல் ஐராவதம் மகாதேவன் போல், நம் பல்கலைக் கழகங்கள் போல் தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் சமணர்களிடமிருந்துதான் வந்தன என்ற கேடு பயக்கும் கருத்தை மிகத் திறமையாக முன்வைத்துள்ளார் அவர். சமணர்களை ஆசீவகர்கள் என்றும் அவர்கள் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் போன்றும் அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை உடையவர்கள் என்றும் அவர்கள்தாம் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே வானியல் அறிவைத் தந்தவர்கள் என்றும் அவரை நம்பும் தமிழ், தமிழக, தமிழ்த் தேசிய ஆர்வலர்களை நம்ப வைத்துவிட்டார். உண்மையில் ஆசீவகர்கள் எனப்படுவோர் பிறந்த மேனியோடு திரியும் மனம் பேதலித்த அம்மணர்கள்; அமண்பேய்கள் என்று சம்பந்தர் இழித்துரைத்த, ஒற்றர்களாகவும் தமிழகத்தைப் பொருளியலில் சுரண்டிய வெளிவிசைகளின் திரையாகவும் செயற்பட்ட, திசைகளையே ஆடையாகக் கொண்டவர்கள் எனப் பொருள்படும் திகம்பரர் என்ற பெயரால் அறியப்படும் சமண சமயப் பிரிவினர். சிவனியர்களை வந்தேறிகள் என்று இன்று குணா முன்வைக்கும் ஆய்வுரையைப் பழம் வரலாற்றுடன் ஒப்பிடும் போது சமணர்களாகிய இன்றைய பனியாக்களை நம் கண் முன் கொண்டு நிறுத்தவில்லையா?

அன்று அம்மணர்களைத் தமிழ் மண்ணிலிருந்து அகற்றிய சிவனியம் அயலிலிருந்து வந்ததென்றால், “நம்மவர்”களான அம்மணர்களை “வந்தேறி”களான சிவனியர்கள் வெளியேற்றினர் என்று அன்றைய வரலாற்றுக்குப் பொருள் கொள்வதா? அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தை மிகுந்த விரைவில் கைப்பற்றிக் கொண்டிருக்கும் சமணர்களாகிய மார்வாரிப் பனியாக்களைத் தமிழகத்தின் மூலக் குடிகள் என்றும் தமிழகத்தைத் அவர்களிடம் விட்டுவிட்டு குணா ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தும் தமிழகத்தினுள் வாழும் “வந்தேறி”களை வெளியேற்றுவது என்றும் பொருள்கொள்ள வேண்டுமா?

வரலாறு, மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமை என்பவை அவற்றுக்கு உரிமைகொண்டாடும் மக்களின் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளையே சார்ந்துள்ளன. அப்படித்தான் இன்று இந்தியப் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பனியாக்களே தமிழகத்துக்குப் பண்பாட்டுக் கொடை வழங்கியவர்கள் என்ற “வரலாற்று வரைவு” நம் பல்கலைக் கழகங்களின் மூலம் சம்பளம் பெறுவோர், பெற வாய்ப்பிருப்பதாக நம்புவோர்களின் மண்டையில் படிந்திருக்கிறது. அது போலவே வெள்ளைத் தோலர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவையே மேன்மையானவை என்ற கருத்தும் படிந்துள்ளது. இந்நிலையில் குணாவின் “ஆய்வுரை”களைக் காட்டி ஆசீவகத்தைத் தன் உட்பிரிவுகளில் ஒன்றாகக் கொண்ட சமணத்தைச் சார்ந்த தாங்களே இம்மண்ணுக்கு உரியவர்கள், பிறரெல்லாம் வந்தேறிகள், அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று தங்கள் பொருளியல், அரசியல், படையியல் வலிமையைக் காட்டி அச்சுறுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இன்னுமொரு முகாமையான கேள்வி, வானியலையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் கடலோடிகளும் வாழ்வின் அனைத்துத் தொழிற்பிரிவினரும் வான் குறித்த அறிவியலில் தங்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வாய்ப்பிருக்கும் போது எந்தவொரு தொழிலுக்கும் உரிமை கொண்டாட முடியாத, ஒரு மெய்யியலுக்கு மட்டும் உரியவர்களாக குணா முன்வைக்கும் இந்த ஆசீவகர்கள் எப்படித் தமிழர்களின் ஒட்டுமொத்த வானியலுக்கும் உரிமை கொண்டாட முடியும்? குணாவின் இந்த “ஆய்வு முடிவு” எஞ்சாமையாக அறவாணன், ஐராவதம் அணுகலோடு ஒத்துவருவது எப்படி? இந்த “ஆய்வுக்காக”த்தான் அவரையும் நெடுஞ்செழியனையும் ஒரே இடத்தில் சேர்த்து இருத்தினார்களா? அமர்த்தியவர்கள் யார்? தமிழக மக்களின் நிலையைக் கண்டு இரங்குவதா, கலங்குவதா, அழுவதா, ஆத்திரப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை அம்மா!


(தொடரும்)

0 மறுமொழிகள்: