28.6.09

தேசியம் வெல்லும் .....13

வெற்றி உறுதி:

ஈழ விடுதலைப் போராளிகள் இன்று பெருமளவில் தற்சார்பு பெற்றுவிட்டார்கள். அவர்கள் அதைக் கொண்டே தங்கள் தேசிய எதிரிகளை முறியடிப்பார்கள். ஒருவேளை எதிர்பாராத பின்னடைவுகள் வந்தாலும் அவர்களுக்கு உதவ நாம் உலகத் தமிழர்களிடையில் தமிழுக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை யூதர்களின் தாய் மொழிக்கும் யூதர்களுக்கும் நேர்ந்த இன்று பாலத்தீன மக்களுக்கு நேர்ந்துள்ள வரலாற்று அவலம் போன்று நேராமல் இருக்க வேண்டுமாயின் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தன்னாட்சி உரிமையுள்ள தாயகம் வேண்டும் என்பதைப் பரப்புவோம். குமுதம் - தீராநதி திசம்பர் இதழில் திரு. அ.முத்துலிங்கம் கூறியுள்ளது போல் தமிழ் வாழ அதற்கு ஓர் நாடு வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களிடையில் பரப்பப்பட்டுவரும் நச்சுக் கோட்பாடான மொழி முதன்மைக் கோட்பாட்டைக் கைவிட்டு மண் முதன்மை - பொருள் முதன்மைக் கோட்பாட்டைக் கைக்கொண்டு செயற்படுவோம். பொருளியல் உரிமைகளையும் பொருளியல் விடுதலையையும் முன்வைத்து அந்தக் களத்தில் முற்போக்குச் சிந்தனையும் குமுகத்தில் புரட்சித்தன்மையுள்ள மாற்றத்தையும் சாதி, சமய வேறுபாடற்ற மனித உறவுகளைக்கொண்ட புதிய குமுகத்தைப் படைக்கும் குறிக்கோளுடையவர்களை முன்னணிப் படையாகக் கொண்டு அவர்களின் பின்னால் தமிழக மக்களை அணிதிரட்டுவோம்.

இன்று தமிழகத்திலும் உலகிலும் வாழும் தமிழக மக்களிடையில் திராவிட, தமிழ் இயக்கங்கள் பரவவிட்ட ஒதுக்கீடு, மொழி முதன்மை போன்ற, தேசியத்துக்கு, தேசியப் பொருளியலுக்கு, தேசியப் பொருளியல் உரிமைக்கு எதிரான நஞ்சுகளினால் புதிய கருத்துகளும் சிந்தனைகளும் வேர்கொள்ள முடியாத அக வறுமை நிலவலாம். ஆனால் காலம் நாள்தோறும் உலகையும் அதனோடு சேர்த்து தலைமுறையையும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. களர் மிகுந்த நிலத்தில் அதனை உண்ணும் உயிரிகள் தோன்றலாம். வானிலிருந்து புது ஆற்றல்கள் பாயலாம். மண்ணின் மீது பொழிந்த அயற்பொருட்களிலிருந்து மண் புதுவளம் பெறலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் விதைகளை ஊன்றுவோம். அவை இன்றே கூட முளைக்கலாம். விதையூன்றும் இந்தச் செயற்பாடே ஒரு புரட்சிகர நடவடிக்கைதான். அதை மனமும் உடலும் சோர்வின்றி செய்து கொண்டிருப்போம். வெற்றி பெறுவோம்.

உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவோம்!


ஈழத் தமிழர்களுக்கு உதவுவோம்!

தமிழகத் தேசியத்தை வளர்த்தெடுப்போம்!

உலகில் ஒடுக்கப்படும் தேசியங்களை ஒருங்கிணைப்போம்!

தேசியம் வெல்லும்!

மார்க்சியம் வெல்லும்!

மனிதம் வெல்லும்!

(சிற்சில மாற்றங்களுடன் தமிழினி பிப்பிரவரி 2009 இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது)


0 மறுமொழிகள்: