6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (9)

இணைப்பு - 2


நாள்: 9 - 5 - 2000

அன்புக்குரிய திரு. குமரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்.

''குமரி மாவட்டம் ஒரு பகுப்பாய்வு'' (குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு என்றிருந்திருக்க வேண்டும்.) என்னும் தங்கள் அச்சில் வராத நூலை இன்றுதான் படித்தேன். கலவரத்தைப் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். நான் கவனிக்க மறந்த, அல்லது அலட்சியப்படுத்திய சில முக்கியமான பகுதிகளை மிக அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள். பல அம்சங்களில் நமக்குள் அழுத்தமான கருத்தொற்றுமை இருக்கிறது. சில இடங்களில் நாம் முரண்படுவது போல் தோன்றுகிறது. இந்த முரண்பாடுகள் குறித்து தங்களிடம் விரிவாகப் பேச வேண்டும்.

1. சாணாப்பள்ளர் எங்கு வாழ்கிறார்கள்? அவர்கள் தொழில் என்ன? அவர்களுக்கும் சாணார்களுக்கும் உறவு உண்டா?

2. சமணர், சாணார், என்ற திரிபு ஏதாவது குறிப்புகள் உள்ளனவா?

3. ஐவர் ராசா கதை நூல் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

4. பஞ்ச பாண்டியர் பதினாலாம் நூற்றாண்டு இங்கு வந்து குடியேறியதற்கு இலக்கிய, வரலாற்று, வாய்மொழி சான்று ஏதும் உள்ளதா?

5. நாயர் பெண்கள் குப்பாயம் அணிந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். வரலாற்று ஆதாரமா? வாய்மொழி ஆதாரமா!

6. சாவின் போது ''பட்டம் கெட்டும்'' நிகழ்ச்சி எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் எங்கள் பக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. பட்டம் கெட்டாமல் பிணம் தூக்க மாட்டார்கள். இன்றும் அப்படிதான்.

7. கல்குளம் விளவங்கோடு நாடார்கள் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தமைக்கான உடனடிக் காரணங்கள் - உங்களிடம் ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா?

8. தோள்ச்சீலை கலவரம் மூன்றாம் கட்டம் - இந்துநாடார் தோள்ச்சீலை போட்ட போது கிறிஸ்தவ நாடார் தடுத்து நிறுத்திய கலவரம், இது பற்றிய ஆதாரங்கள் ஏதாவது வகையில் உங்களிடம் இருக்கிறதா?

9. புழுக்கைச் சாணார்கள் இஸ்லாமுக்கு மாறியது வரலாற்று குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா?

10. நாயக்கர்களின் அதிகார விரிவின் போது நாடார்கள் உயிர்க்கு பயந்து இஸ்லாமில் சேர்ந்ததாகச் சொல்ல கேட்டிருக்கிறேன். (நீங்கள் சொல்லவில்லை) உங்களிடம் இது பற்றி ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா?

11. நாடான், சாணான், வேறுபாடு அற்புதமாக சொல்லிருக்கிறீர்கள்.

12 குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் தமிழர் உணர்வு வளர்ந்த கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

13. நாயக்கர் காலத்தில் அரிய நாயக முதலியார் நாடார்களை பதவி இறக்கி அந்த இடங்களில் பாளையக்காரர்களை குடி அமைத்தார். இந்த செய்தி இன்னும் விரிவாக எனக்கு வேண்டும்.

14. பக்கம் 16, பத்தி 3, வரி 3 இவர்கள் சாணார்களோடு சேர்ந்து -------- போது தான் நான் விட்டு வைத்திருக்கும் வார்த்தை என்னவென்று புரியவில்லை.

15. பால பிரஜாபதி அடிகளாரைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். முதல் அவர் இரா.சு.சே.சா. ஆதரவு எடுக்க காரணமென்ன? உங்களிடம் விவாதிக்க விரும்புகிறேன்.

16. அத்திக்கடை பள்ளிவாசல் நிகழ்ச்சி நான் அறியாதது.

17. ஈத்தாமொழி நாடார் பற்றி உங்கள் மதிப்பீடு அருமை.

18. ஈத்தாமொழிக்கு பிர்லா குடும்பம் வந்தது அதிர்ச்சி தருகிறது. ஆதாரம் திரட்ட முடியுமா?

19. நாடார் வலிமையை உடைக்க வடக்கு முதலாளிகள் முயற்சி. நான் இதுவரை யோசிக்காத புதிய செய்தி.

இரண்டாம் பகுதி ''குமரி மாவட்டத்தின் இருப்பெரும் மக்கள் பிரிவினர்'' இனிதான் படிக்க வேண்டும். படித்து விட்டு தனியாக எழுதுகிறேன்.

தங்கள் கட்டுரையைப் பற்றி தங்களுடன் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் பேச வேண்டும்.

அன்புடன்
பொன்னீலன்.

0 மறுமொழிகள்: