12.7.09

தமிழக நிலவரம்(2009) .....4

1950கள் வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஊர்ப்புறங்களிலும் கோயில்களைச் சுற்றித் தங்கள் கூட்டாளிகளான தேவதாசிகளுடன் வாழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். கோயில் நிலங்கள் தவிர சொந்த நிலங்களும் வைத்திருந்தனர். குத்தகைப் பயிரிடுவோரிடம் நிலவுடைமையாளர் என்ற வகையிலும் கோயில் பூசாரிகள், கோயிலில் இலவயச் சோறு உண்பவர்கள் என்ற வகையிலும் அடங்காத திமிருடன் நடந்துகொண்டனர். அத்துடன் தேவதாசிகளைக் காட்டி ஆங்கிலரிடம் பெற்ற அரசுப் பதவிகளை வைத்துப் பெரும் நிலக்கிழார்கள், சமீன்தார்களையும் மிரட்டிவந்தனர். இதற்கு எதிர்வினையாக நயன்மைக் கட்சியும் பின்னர் தன்மான இயக்கமும் ஒரு புறமும் பொதுமை கட்சிகளின் உழவர் போராட்டங்களும் மறுபுறமும் அவர்களது செல்வாக்கை இழக்கவைத்தன. விட்டால் போதும் என்று கண்டவிலைக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்தார்கள். அவர்களுக்கு அதுவரை அடியாட்களாக இருந்த “போர்ச் சாதிகள்” எனப்படும், வந்தவர்களுக்கெல்லாம் அடிமைசெய்து தம் சாதி மேலாளுமையை நிலைநிறுத்தக் காத்திருக்கும் கூட்டம் அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றியதுடன் அவர்களிடமிருந்து எளிய மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் வசப்படுத்திக்கொண்டது.

இன்று ஊர்ப்புறங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பார்ப்பனர்களின் குடியிருப்புகள் அழிந்து போய்விட்டன. அவற்றில் புதிதாக மேனிலையடைந்த சாதியினர் குடியேறிவிட்டனர். எதிரில் வந்தால் ”ஒத்திப்போ” என்று பிறரைத் துரத்திய பார்ப்பனப் பெண்களைக் கழிந்த இரண்டு தலைமுறை மக்கள் அறியமாட்டார்கள். ஆனால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றாலோ கையை நீட்டிப் பேசினாலோ அடிக்க வரும் “போர்ச்சாதி”களை, அதாவது எளியவர்களைக் கொடுமைப்படுத்தும் நாயினும் கீழான கோழைகளைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, இன்று கூட திருநெல்வேலி மாவட்டத்தின் சில மூலைகளில், பல்வேறு தொழில்களும் வாணிகமும் செய்து சிலர் படித்து வேலாக்கும் சென்று நாலு காசு பார்த்தவுடன் நாங்கள் ஆண்ட மரபினராக்கும் என்று தம்பட்டமடிக்கும் மேலடுக்கினைக் கொண்ட நாடார் சாதியினர் மறவர் தெருக்களில் செருப்பணிந்தோ மீதிவண்டியிலோ செல்ல முடியாது என்பதை? ஏதோ சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்கும் தோழர்களே, குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, குளத்தில் குளிக்க, சுடுகாட்டுக்குப் போகும் பாதையில் செல்ல உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக, ஒடுக்கும் உங்கள் சாதியினருக்கு எதிராகப் போராட நீங்கள் ஒரு நாளாவது எண்ணியதுண்டா? உங்கள் சாதியாரின் வெறியை உலகின் கண்ணிலிருந்து மறைக்கத்தான் நீங்கள் பார்ப்பனர்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்களா? அல்லது உங்கள் மனச்சான்று உள்ளுணர்வைத் தாக்கி உங்கள் சிந்தனை திசைமாறிப் போய்விட்டதா? சொல்லுங்கள்!

மார்வாரியும் மலையாளியும் நம் நிலங்களைப் பறிக்கிறார்கள் என்று அவ்வப்போது கூறிக் கொள்வீர்கள். ஆனால் மார்வாரிகளின் விளைப்புப் பொருள்களுக்குப் போட்டியாக வளர்ந்துவிட்ட தமிழக மக்களின் தொழில்களை நசுக்கவென்று வருமான வரித்துறையை அந்த மார்வாரி ஏவிவிடுவதற்கு எதிராக என்றாவது நீங்கள் குரல் கொடுத்ததுண்டா? அல்லது வருமான வரித்துறையின் உண்மையான பயன்பாடு பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமா? வருமானவரியால் முடக்கப்படும் பணம் கள்ளப்பணமா? அதாவது சட்டத்துக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட பணமல்லவே அது! அது மூலதனச் சந்தையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை விதிவிலக்குகள்? கொஞ்சம் படித்துப் பாருங்கள் தோழர்களே! ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களிலும் தனியார்களிடத்திலும் மட்டும் வேட்டை நடத்துகிறார்களே அது ஏன்? அரசு தன் வருமானத்துக்கு இவ்வாறு மக்களின் வீட்டையும் நிறுவனங்களையும் பகல் கொள்ளையர் போல் சுற்றி வளைத்து சுவரை உடைத்து பேழையைப் பிளந்து படுக்கையைக் கிழித்து தரையைக் குடைந்துதான் வரி தண்ட வேண்டுமா? தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையில் மிகக் காட்டுவிலங்காண்டித்தனமான இந்த ஒடுக்குமுறை உங்கள் சிந்தையில் உறைக்கவில்லையே ஏன்? “பாட்டாளியப் புரட்சி” வெற்றிநடை போடுகிறது என்றல்லவா மகிழ்ந்து போவீர்கள்? உங்கள் நடவடிக்கைகள் மக்களைச் சார்ந்தவையல்ல, ஆட்சியாளரைச் சார்ந்தவை.

தமிழக எல்லைக்குள் எவர் பணம் ஈட்டினாலும் அது தமிழக மக்களுக்கு உரியது. அதன் பயன் தமிழக மக்களுக்குச் சேரவேண்டும். அதற்கு ஒரே வழி அது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் நுகர் பொருட்களையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து தந்து அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் தமிழகத்தில் முதலீடாக வேண்டும். அதற்குத் தடையாக எந்த வடிவில் யார் என்ன செய்தாலும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்ப்பதோ, சரியான செயல் என்று கோட்பாட்டுச் சான்று தேடுவதோ தமிழகத் தேசியத்துக்கு இரண்டகம் செய்வதாகும். இது தமிழகக் குடிமக்களைக் குறித்ததே அன்றி அயலாரைக் குறித்தல்ல. தமிழகத்தில் தொழில் நடத்தும் உரிமை 1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்திலிருந்து அன்றும் இன்றும் ஆதாயத்தை வெளியில் கொண்டு செல்லாதவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

மார்வாரியும் மலையாளியும் மட்டுமல்ல தமிழகத்து நிலங்களைக் கொள்ளையடிப்பது. அயல்நாட்டு நிறுவனங்களின் பெயரில் மூலதனமிட்டிருக்கும் கருணாநிதி குடும்ப வகையறாக்களும்தான். இந்தியப் பொதுமைக் கட்சிகள் தங்கள் அருஞ்செயலென்று மார்த்தட்டிக் கொள்வது நில உச்சவரம்புச் சட்டங்களை. உண்மையில் அமெரிக்க அமைப்பான நிகர்மை(சோசலிச) அனைத்துலகியத்தின் நெருக்குதல் மூலம் நிறைவேறியவையாகும் அவை. அவற்றில் உணவுப் பொருள் வேளாண்மைக்கு மட்டுமே உச்சவரம்பு என்பதைப் புரிந்து கொள்க. அதனால்தான் வருமான வரியால் தமிழக மக்கள் நசுக்கப்பட அத்துறையைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் மார்வாரியும் மலையாளியும் கருணாநிதியின் கூட்டமும் இங்கு நிலங்களை வாங்கிக் குவிக்க முடிகிறது. அதற்கு நபார்டு எனப்படும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியும் ஊழல் துணையிருந்து பெரும் பகற்கொள்ளை நடப்பதை அறிவீர்களா தோழர்களே!

நில உடைமையைப் பொறுத்தவரை சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சிற்றுடைமை வேளாண்மை என்றும் சோறு போடாது. ஆதாயம் கிடைக்காது என்பதோடு ஆண்டு முழுவதும் வேலையும் கொடுக்காது. சிற்றுடைமையாளன் வேறு சொந்தத் தொழில் இல்லையானால் கூலித் தொழிலாளி என்ற நிலையிலிருந்து உயரவே முடியாது.

தொழிற்புரட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பெரும்பண்ணை முறை புகுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பல எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடித் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிந்தது. இங்கு கடனுக்காகவும் விளைந்ததை விற்பதற்காகவும் ஏழை உழவன் தெரு நாயினும் கீழாகத் துயருறுகிறான். குத்தகை ஒழித்தால் உழவனுக்கு இழப்பீடு வழங்கத் தமிழ்நாட்டுச் சட்டத்தில் இடமிருக்கிறது. அதைப் பங்கு மூலதனமாக்கி அவனை உழைப்பாளியாகவும் கூட்டுடைமையாளனாகவும் ஆக்கலாம். அதற்கு தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் தன் செயல்திட்டத்தில் வகை செய்கிறது

மரபுத் தொழிலை மீட்டெடுப்பது பற்றி தோழர்கள் உரக்கப் பேசுகிறார்கள். மரபுத் தொழில் என்பதே நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்துக்கு உரியது. சாதி - வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைப்பில் பல்வேறு குழுவினர் அவரவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட வகையில் வாழ்வதற்கு வடிவமைக்கப்பட்டவை அவை. இன்று குமுகக் கட்டமைப்பு பெருமளவில் மாறியுள்ளது. மக்களின் தேவைகள் பழைய சிறைக்கூண்டுகளை உடைத்துவிட்டுப் பரவலாகிவிட்டன. அவற்றுக்கு ஈடு கொடுக்க மரபுத் தொழில்கள் உதவா. ஆனால், மரபுத் தொழில்கள் என்ற இந்த முழக்கத்தை வலியுறுத்துவது, வெளியிலிருந்து வரும் நெருக்கல்களை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல்கள் உள்ளே உருவாவதை உளவியலில் தடுக்கும் ஒரு முயற்சியாக முடிய வாய்ப்பிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பங்கள் அயலிலிருந்து மூலப்பொருட்களைத் தேவையாக்குகின்றன. இருக்கும் பல மூலப்பொருட்களை இல்லை என்றே அறிவித்துள்ளார்கள் நம் ஆட்சியாளர்கள். அயலார் அவற்றைக் கண்டு ஆட்சியாளருக்கு பங்கும் கொடுத்தால் அவற்றை எடுத்து அவர்களுக்கு வழங்குவார்கள், அல்லது இங்கேயே பயன்படுத்தி பண்டங்களைச் செய்து ஏற்றுமதியும் செய்து கழிக்கப்பட்ட கடைத் தரத்தை நம் மக்களுக்கு விற்கவும் செய்வார்கள். நம் மரபுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றுபவை. அவற்றை இன்றைய அறிவியலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பெருந்தொழில்களாக வளர்த்து நம் மக்களின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.

இங்கு மரபுத் தொழில்களுக்கும் மரபுத் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுத் தொழில்நுட்பங்களை மூத்த தலைமுறையினரிடமிருந்தும் ஆகம நூல்களிலிருந்தும் எளிதில் திரட்டிவிட முடியும்.

பெருந்தொழில்கள் என்றதுமே சுற்றுச் சூழல் சிக்கலை முன்வைக்கின்றனர் நம் தோழர்கள். இங்கு நாம் ஒரு அடிப்படையான உண்மையை மனங்கொள்ள வேண்டும். இன்று நம் நாட்டில் பெருந்தொழில் என்ற பெயரில் உள்ளது முதலாளிய விளைப்பு அல்ல, வல்லரசிய விளைப்பு ஆகும். அயலவருக்காக நம் நிலம், நீர், ஆற்றல்வளங்கள், சுற்றுச் சூழல்கள் பாழாக்கப்படுகின்றன. திண்டுக்கல்லிலும் இராணிப்பேட்டையிலும் பதப்படுத்தும் தோல் நமக்குப் பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்தும் செருப்பும் பைகளும் நெகிழி(பிளாட்டிக்)யால் செய்யப்படுகின்றன.

திருப்பூரில் செய்யப்படும் ஆடைகளும் அவ்வாறே. தூத்துக்குடியில் டெர்லைட் ஆலையில் தூய்மைப் படுத்தப்படும் செம்புக் கனிமம் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு பணிமுடிந்த பின் திருப்பியனுப்பப்படுகிறது. சூழல் சீர்கேடு மட்டும் நமக்கு. அதுபோல் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வடிவில் நம் மின்சாரமும் குடிநீரும் தூய்மையான காற்றும் இன்னும் என்னென்னவோ மறைமுகமாக ஏற்றுமதியாகின்றன. கல்லும்(சல்லி வடிவில்) மணலும் கருங்கல்லும் என்று எண்ணற்ற வகை மீளப்பெற முடியா இயற்கை வளங்கள் கணக்கின்றிக் கடத்தப்படுகின்றன. நாம் பரிந்துரைப்பது நம் நாட்டில் நம் மூலதனத்தில் நம் தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மக்களின் தேவைகளுக்காக நாமே பண்டங்களை விளைப்பதும் பணிகளைச் செய்வதுமாகும். அதற்கு நம் பண்டைத் தொழில்நுட்பங்களைத் தேடியெடுத்து இன்றைய அறிவியல் வளர்ச்சிநிலைக்கு ஏற்ப மேம்படுத்திப் பயன்படுத்துவதை. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பற்றிய கட்டுரைகளும் எழுத்துகளும் ஒவ்வொரு மூலிகையையும் எந்தெந்த நோய்க்கு எப்படி எப்படிப் பக்குவப்படுத்தலாம் என்று விளக்குகின்றன. அவற்றின்படி பயன்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு மருந்து செய்யும் கட்டமைப்பு வேண்டும், வீட்டிலுள்ள ஒருவர் மருந்து செய்யும் பக்குவத்தைக் கற்க வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மூலிகையில் அடங்கியிருக்கும் குறிப்பிட்ட நோய் தீங்கும் உரிப்பொருளை இனங்கண்டு பிரித்து மாத்திரையாகவோ குளிகையாகவோ, நீர்மமாகவோ கடைகளில் விற்றால் அலோபதி மருந்துகள்போல் பயன்படுத்துவார்களே! இன்றைய சூழலுக்கு அதுதானே பொருந்தும்? எந்த ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல், எதையும் கணக்கிலெடுக்காமல் மரபு, மரபு என்று மந்திரம் போடுவது ஏன்? பழைய சாதி சார்ந்த தொழில்நுட்பங்களை வைத்து அந்தக் கட்டமைப்பை மீட்கும் ஒரு அவாவின் தன்னுணர்வற்ற வெளிப்பாடா? அல்லது தாங்களே தவிர்க்க முடியாத மாற்றங்களைத் தங்களை விடத் தாழ்ந்த படியிலுள்ளோரும் மேற்கொள்வதைப் பொறுக்க முடியாத உள்ளுணர்வின் எரிச்சலா?

நம் தேவைகளுக்காக இயங்கும் பெருந்தொழில்களால் வெளிப்படும் கழிவுகள் சூழல்கேடுகள் ஏற்படும் அளவுக்கு இருக்காது. இருந்தாலும் அவற்றை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்கொண்டுவிடலாம். தேவை மக்கள் உதிரத்தைக் குடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாத ஓர் அரசும் இன்று போல் ஆட்சியாளர்களுக்கு விலைபோகாத “ அறிவாளிகளு”மே.

உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தாத, அதைக் கண்டுகொள்ளவே செய்யாத ஒரு சூழலைப் பார்ப்போம். உலகில் ஆண்டு முழுவதும் பெரும் ஏற்றத்தாழ்வில்லா வெப்பநிலையைக் கொண்டது தமிழ்நாடு. அந்த வெப்பநிலையை மின்னாற்றலாக்குவதற்குத் தேவைப்படும் அளமியம்(அலுமினியம்) தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் “கதிரவ” மின்னாற்றலைப் பயன்படுத்துங்கள் என்று எழுதிவைத்திருப்பர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று அரசு சாராயக் கடையில் எழுதி வைத்திருப்பது போல. மின் செலவை மிகுக்கும் தொ.கா.பெட்டியையும் எரிவளி இறக்குமதியை மிகுக்கும் வளி அடுப்பையும் இலவயமாக கோடி கோடியாக வழங்குவர். ஆனால் கதிரவ மின்னாக்கலுக்கு ஒரு தம்பிடி கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த கறுப்பு அறிவியல் கதிரவன் அப்துல் கலாம் கூட காட்டாமணக்கைப் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுவார். பதவியிலிருந்து இறங்கிய பின் எங்கோ கதிரவ ஆற்றலைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி. “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இது போன்ற சிக்கல்களைப் பேசுவதே இல்லை. தாம் இழந்து விடுவோம் என்று அஞ்சும் சாதி மேலாளுமையை மீட்பதற்காக அல்லது பேணுவதற்காக மரபு பற்றிப் பேசுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மின்சாரம் உருவாக்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கன்னெய்யம்(பெட்ரோலியம்), எரிவளி ஆகியவற்றில் 20 நூற்றுமேனிக்குக் குறையாமல் கிடைக்கும் தரகு, அவற்றுக்கு டாலரில் பணம் திரட்ட இங்கிருந்து ஏற்றுமதியாகும் மூளை வளம் உள்ளிட்டற்றின் மீது கிடைக்கும் தரகு ஆகியவைதான் குறி. அவர்கள் எப்படி உள்நாட்டு வளங்களை உள்நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவர்? இப்படி எதை எடுத்தாலும் தரகு பார்க்காமல் இருந்தால் தேநீருக்கு வக்கில்லாமல் அலைந்தவர்கள் 70 ஆண்டுகளில் 2 இலக்கம் கோடிக்கு மேல் சொத்துள்ள குடும்பத்தின் தலைவராக எப்படி முடியும்? தமிழனை ஈழத்தில் கொன்றழிக்கத் துணையிருந்துவிட்டுப் பாராளுமன்றத்தில் கட்சி பா.ம. உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றால் போதும், இங்கிருக்கும் “தமிழ்த் தேசியர்” களுக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிரெடுத்துவிடும், மன்னிக்க, குளிர்ந்துவிடும்!

மொழியைச் சுமப்பது அதைப் பேசும் மனிதன். மண் இல்லாமல் எப்படி மரம் இல்லையோ அப்படி மனிதன் இல்லாமல் மொழி இல்லை. மனிதனோ உணவின் பிண்டம் என்றார் நம் முன்னோர் (திருமூலரா?).


பார்ப்பனியம் என்பதே ஒட்டுண்ணி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது உடலுழைப்பை, குறிப்பாக, பண்டம் படைத்தல், பணிகள் செய்தல், பண்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாணிகம் போன்றவற்றை வெறுத்து வெள்ளை வேட்டி வேலை செய்வதைப் பெருமையாகக் கருதுவது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகர்களின் எழுச்சியின் போது கிடைத்த பட்டறிவிலிருந்து கடல் வாணிகர்களையும் உள்நாட்டு வாணிகர்களையும் கருவறுத்தனர் நம் ஆட்சியாளர் – பூசாரியர் கூட்டணியினர். அதனால்தான் அரேபியரும் ஐரோப்பியரும் வாணிகர்களாக இங்கு நுழைந்தபோது இங்கு அவர்களை எதிர்க்க விசை எதுவும் இல்லாது போயிற்று. இன்று வல்லரசியத்தின் ஊதுகுழலாகச் செயற்படும் பொதுமைக் கட்சியினரும் உள்நாட்டு வாணிகத்துக்கு எதிராக இருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் அமர்ந்துகொண்டு கொடுமை செய்வதற்கு எதிராகக் கொண்டுவந்த ஒதுக்கீட்டு முறை ஒட்டுண்ணி வாழ்க்கையின் மீதான பார்ப்பனர், வெள்ளாளரின் ஈர்ப்பை முழுக் குமுகத்துக்கும் பொதுவாக்கிறது. அந்த வெறியை மிகுப்பதாக அரசூழியர்க்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் கருணாநிநியின் செயல் அமைகிறது. அதனால் மக்களின் வருவாய், குறிப்பாக படித்துவிட்டுச் சில்லரை வேலைக்குப் போகும் மக்களின் வருவாய் அதனுடன் ஒப்பிட மலைக்கும் மடுவுக்கும் ஆயிற்று. அதோடு பன்னாட்டு முதலைகளின் புலன(தகவல்)த் தொழில்நுட்ப வளர்ச்சி அந்தத் திசையில் மக்களை ஈர்த்தது. ஆக, இன்று நன்றாக வாழ வேண்டுமென்றால் அயல்நாடு செல்ல வேண்டும் அல்லது அயல்நாட்டு நிறுவனத்தில் உள்நாட்டில் வேலை பார்க்க வேண்டும்.

இன்னொரு புறம் தமிழகம் உட்பட எல்லாத் தேசியங்களின் பொருளியலும் இந்திய அரசுடனும் வல்லரசியத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே நடுவரசிடமோ வெளி முகவாண்மைகளுடனோ மாநில அரசு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் மாநில மொழி உதவாது. அத்துடன் பொருளியலே ஏற்றுமதி இறக்குமதி சார்ந்தாக மாறியுள்ள நிலையில் எழுத்துப் பணிகளுக்கு மாநில மொழி உதவாது. இந்தப் பொருளியல் நெருக்குதலின் காரணமாக நம் விருப்பங்களையும் மீறி புதிய தலைமுறையினர் தாய்மொழிகளைக் கைவிட வேண்டிய உளவியல் நெருக்கலில் உள்ளனர். இது இந்தியா மட்டுமல்ல, உலகளாவுதலின் விளைவாக உலக முழுவதும் உருவாகியுள்ள நிலையாகும். இதிலிருந்து விடுபட இன்று உலகைப் பிடித்துள்ள பொருளியல் நெருக்கடியும் அதன் விளைவாக அயல்பணி வாய்ப்புகள் குறைவதும் பணக்கார நாடுகளில் பொருளியல் நெருக்கடியின் விளைவாக இனவெறி வளர்ந்து வருவதும் மிகவும் கைகொடுக்கும். தற்சார்புப் பொருளியல், அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சந்தையாக உள்நாட்டு அடித்தள மக்களை பொருளியல் வலிமையுள்ள நுகர்வோராக வளர்த்தெடுப்பது, அதாவது மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது போன்ற குறிக்கோள்களை முன்வைத்து ஊக்கமுடன் செயற்பட இதுவே சரியான நேரம். அதனோடு தாய்மொழி வளர்ச்சியையும் இணைத்தால் பொருளியலை அடுத்து தேசியத்தின் முகாமையான கூறான தேசியமொழி ஆட்சிக் கட்டில் ஏறுவதும் நிகழும். வேறு எந்த மந்திரத்தாலும் தமிழை அழிவிலிருந்து மீட்க முடியாது.


(தொடரும்)

0 மறுமொழிகள்: