12.7.09

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடி திட்டங்கள்:

1. மூலதனம்:

· வருமான வரியை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· இரண்டாம் நிலை பங்குச் சந்தையை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· பங்குகள் மறு விற்பனையை வெளியிடும் நிறுவனங்களே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். மறுவிற்பனை விலையே பங்குகளின் புதிய முகமதிப்பாக வேண்டும்.

· 10 கோடி உரூபாய்க்கு மேல் மூலதனமுள்ள நிறுவனங்கள், 51 நூற்றுமேனிக்கும் குறையாத மூலதனத்தைப் பங்கு முதலீட்டின் மூலமே பெற வேண்டும்.

· வங்கிகள் பங்குகள் மூலமோ கடன்கள் மூலமோ தொழில் முதலீட்டில் இறங்கக் கூடாது.

· தமிழகத்தில் வெளியார் யாரும் முதலிடக் கூடாது.

· வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடனைக் கொடுப்பவர்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டியுடன் சட்டப் பாதுகாப்பு வேண்டும். கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்குச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும்.

2.நிலமீட்பு:

மாநிலங்கள் சீரமைப்பின் போது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட

· நெய்யாற்றின்கரை, செங்கோட்டையில் பாதி, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகியவற்றைக் கேரளத்திடமிருந்தும்,

· சித்தூர்,புத்தூர், நெல்லூர், திருப்பதி, ஆகியவற்றை ஆந்திரத்திடமிருந்தும்,
· வெங்காலூர், தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவற்றைக் கன்னடத்திடமிருந்தும்,

· கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்தும் மீட்க வேண்டும்.

3. குடியுரிமை:

· 1.11.1956க்குப் பின் தமிழகத்திலும் தமிழகத்துக்குரிய மேற்கூறப்பட்ட பகுதிகளிலும் குடியேறியவர்களுக்குத் தமிழகத்தில் குடியுரிமை கூடாது. அவர்கள் தமிழகத்திலும் தமிழகத்திற்குரிய பகுதிகளிலும் நிலங்கள் வாங்கவோ தொழில்கள் தொடங்கவோ வாணிகம் செய்யவோ உரிமை கூடாது. ஏற்கனவே நிலம் வாங்கியவர்கள், தொழில்கள் தொடங்கியவர்கள், வாணிகம் செய்தவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். 1.11.1956க்கு முன்பே வெளியிலிருந்துவந்து தொழில் வாணிகம் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டுசென்றவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்படும்.

4. நிலவுடைமை:

· நில உச்சவரம்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

· குத்தகைப் பயிர்முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
உடமையாளருக்கும் பயிரிடுவோருக்கும் 50:50 என்ற வாய்பாட்டைக் கையாள வேண்டும். இதில் கோயில்களுக்கோ அறக்கட்டளைகளுக்கோ பிற நிறுவனங்களுக்கோ எந்த விலக்கும் கூடாது.

· உரிமை மாற்று ஆவணமின்றி பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமைமாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத்துறையின் பொறுப்பில் விட வேண்டும்.

· பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி விலை நிறுவுவதைக் கைவிட வேண்டும்.

5. வேளாண்மை:

· வேளாண் விளைபொருட்களைத் தமிழகத்தின் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ, அண்டை மாநிலங்களுக்கோ கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து கொண்டுவருவதற்கும் எந்தத் தடையும் கூடாது.

· வேளாண் விளைபொருட்களில் வாணிகம் செய்ய உரிமம் பெற்ற வாணிகர் முறையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கு உரிமை வேண்டும்.

6. தொழில்வளம்:

· தொழில் தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

· ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஓர் அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிம அலுவலகம் தொடங்க வேண்டும். தேவையானால் மக்களே அவற்றை அமைக்க வேண்டும்.

7. வாணிகம்:
· சில்லரைக் கடைகளில் எந்த வகையான வரியும் தண்டக் கூடாது. எல்லாப் பொருட்களையும் அனைத்து வரிகளும் அடங்கியவாகிய பொதியல்களாகவே விற்க வேண்டும். அவ்வாறு பொதிய முடியாப் பண்டங்கள் இருந்தால் அவற்றுக்கு வரிகளை நீக்க வேண்டும்.

· வாணிகர்கள் அமைப்பாக இணைந்து கூட்டாக பெரும் வாணிக வளாகங்களை அமைப்பதை ஊக்க வேண்டும். நாகர்கோயில் அப்டா சந்தையை ஒரு முன்னோடி அமைப்பாகக் கொள்ளவேண்டும்.

· டாலரின் நாணய மதிப்பை உரூ.30 ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும்.(நம் நாணய மதிப்புக்குச் சமமாக்குவது இறுதி இலக்கு.)

8. பண்பாடு:

· சாதிக்கு பார்ப்பனர், ஆரியர் என்ற பிறர் மீது குற்றம் கூறி நம்மிடையே உறைந்திருக்கும் சாதிவெறியை மறைப்பதைக் கைவிட்டு தத்தம் சாதிகளுக்குள் இருக்கும் சாதி ஆதிக்க வெறியை ஒவ்வொருவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.

· ஆணுக்குப் பெண் இளைத்தவள் என்று அவளுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தும் நம் பண்பாட்டை எதிர்த்து மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பெண்களிடையில் பரப்பல் செய்ய வேண்டும்.

· பல நூறு தன்கள் எடையுள்ள மரக்கட்டை மீது பொம்மையை வைத்து இழுக்கும் மடமையும் கயமையும் நிறைந்த, வருணக் குமுக அமைப்பைக் காட்டும், ஆகமக் கோயில்களை இடித்து நிரவி அனைவரும் சமமாக அமர்ந்து தமிழ் மொழியில் வழிபாடு நிகழ்த்தும் சமய நெறியைப் புகுத்த வேண்டும்.

· பண்டம் விளைப்போரையும் உழைப்போரையும் வினைசெய்து மீண்டும் மீண்டும் பிறந்து உழலும் தீவினையாளர்கள் என்று இழிவுபடுத்தி குண்டியிலிருந்து ஆற்றலை எழுப்பி கடவுளாகலாம் என்று கூறும் உலகில் எங்குமில்லாத கடைகெட்ட ஒட்டுண்ணிக் “குண்டிலினி”க் கோட்பாட்டை அடியோடு ஒழிக்க வேண்டும்.

· ஊருக்கு இளைத்தவனாக அனைவருக்கும் ஏளனத்துக்குரியவனாகத் தமிழனை ஏமாளியாக்கும், இங்குள்ள ஏமாற்றுக்காரர்களுக்கு வாழ்வளிக்கும் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற மடைமையைக் கைவிட்டு தமிழகமே எம் ஊர், தமிழக மக்களே எம் உறவினர் என்ற உறுதியான நிலையை எடுக்க வேண்டும்.


9. கல்வி:

· கட்டாய இலவயக் அகல்வி முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

· தொடக்கக் கல்வி முழுவதும் பத்தாம் வகுப்பு வரை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

· தமிழகம் முழுவதும் பிற மொழிப்பாடங்கள் தவிர தமிழே பாடமொழியாக வேண்டும்.

· உடலுழைப்பு தொடர்பான அனைத்துத் தொழில்களும் குறித்த பாடத்திட்டங்கள் கல்வித் துறையில் புகுத்தப்பட வேண்டும்.

· இளஞ்சிறார்களின் திறமை, மனச்சாய்வு அறிந்து அவர்களை இளங்காணும் உளவியலில் தேர்ந்த ஆசிரியர்களையே மழலை மற்றும் தொடக்க நிலை வகுப்புகளுக்கு அமர்த்த வேண்டும். இயற்கையான திறமைகளை வளர்க்கவும் தீங்கான மனப்போக்குகளை நீக்கவும் தொடக்கக் கல்வியை இந்த வகையில் திட்டமிட வேண்டும்.

· துறைக் கல்விகளில் சான்றிதழ் கல்வி → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டயம் → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டப் படிப்பு என்று இடை முறித்து வழங்க வேண்டும். பணிகளில் நேரடி உயர்பதவி முறையை ஒழிக்க வேண்டும்.

· ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20க்குக் குறையக் கூடாது. அதாவது ஒரு வகுப்பறையல் ஓர் ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

10. சட்டம்:

· இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.

· முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அரசியல் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

11. தேர்தல்:

· வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

· நிறுவப்பட்ட தகுதிகளை உடைய குடிமக்களிலிருந்து அனைத்து வகை ஆள்வினையாளர்களையும் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஊராட்சியின் நடவடிக்கைகளை அதனுள் அடங்கிய குடிமக்களின் ஊர்க்கூட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

· தேர்தல்களை நடத்துவதற்கென்று தனியான ஊழியர்களுடன் நிலையான ஓர் ஆணையம் இயங்க வேண்டும்.


தொடர்புக்கு:
குமரிமைந்தன்
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
72அ. என்.சி.ஓ. நகர், சவகர் நகர் 12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம் - 625 706, பேசி: 97906 52850.
மின்னஞ்சல் kumarimainthan@gmail.com

திரு. பொன். மாறன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (மதுரைக் கிளை)
80ஏ, மேலமாசி வீதி, மதுரை - 625 001, பேசி: 94439 62521.

திரு. இரா.தமிழ்மண்ணன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (பறம்புக்குடி கிளை),
3/538, எம்.சி.ஆர்.நகர், பொன்னையாபுரம், பறம்புக்குடி - 623 707, பேசி: 97893 04325.

0 மறுமொழிகள்: