24.9.07

தமிழ்த் தேசியம் ... 5

அடுத்து வருவோர் மார்க்சிய இயக்கத்தினர்

மார்க்சியம் தேசிய விடுதலையை நோக்கமாகக்கொண்டு உருவானதல்ல. தேசிய இயக்கங்களுக்கு இனி உலகில் இடமில்லை என்ற நிலைப்பாட்டையே அதன் மூலவர்களான மார்க்சும் ஏங்கல்சும் கொண்டிருந்தனர். ஆனால் அயர்லாந்து மக்களின் போராட்டங்ளைக் கண்ட பின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் உலகில் ஓர் இடம் உண்டு எனற அளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

காலத்தின் கட்டாயமாக உருசியப் புரட்சியில் உருசியப் பல்தேசியங்களின் விடுதலை வேட்கை இரண்டறக் கலந்திருந்தது. அதை முழுக்கப் புரிந்து நேர்மையுடன் செயல்பட்ட உருசியத் தலைவர் லெனின் மட்டுமே.

சப்பானியப் படையெடுப்பையும் மேலை நாடுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்து சீனம் தேசிய விடுதலைப் போரை நடத்திய காலத்தில் மசேதுங் புதிய குடியாட்சிப் புரட்சி என்ற பெயரில் பாட்டாளிகள் அல்லாத வகுப்பினரையும் சேர்த்து வெற்றிபெற்றார். புதிய குடியாட்சிப் புரட்சியை லெனினும் வரையறுத்துச் செயற்படுத்தியிருந்தார்.

இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் இவ்வாறு பல தேசிய விடுதலைப் புரட்சிகள் மார்க்சியத்தின் பெயரில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் மார்க்சியத்தைக் கைப்பற்றிக்கொண்ட கூட்டம் தேசிய விடுதலையை வாயினால் கூறிக்கொண்டே அதற்கு எதிராகச் செயற்பட்டது, செயற்படுகிறது.

1960களின் பிற்பாதியிலும் 1970களிலும் தீவிர மார்க்சிய-லெனினியக் கட்சிகள் உருவான போது அவை திராவிடர் கழகம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றில் ஊடுருவி இளைஞர்களைக் கவர்ந்து அவர்களுக்கு வெறியூட்டி பாதுகாப்பில்லாத ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். மிக எளிதாக அரசின் துப்பாக்கிக்கு அவ்விளைஞர்கள் அனைவரும் பலியானார்கள்.
இந்த மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் மா சே துங்கின் பெயரில் செயற்பட்டாலும் உருசியாவுக்கும் சீனத்துக்கும் ஏற்பட்ட மோதலில் உலகிலுள்ள மாவோவின் ஆதரவாளர்களுக்குள் அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஊடுருவலால் உருவானவை. இன்றைய நிலையில் மார்க்சியத்தின் பெயரில் எந்த இயக்கம் தேசியப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினாலும் செயற்பாட்டில் அது உறவாடிக் கெடுப்பதாகவே அமைவது தமிழகத்தின் நெடுநாள் பட்டறிவாகும்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: