4.9.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...2

பாண்டியனாரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவைப் பற்றியும் தரிசு நிலங்களை விளை நிலங்களாகவோ காடுகளாகவோ மேம்படுத்த வேண்டியது பற்றியும் தாம் சென்றவிடமெல்லாம் மக்களுக்கு (நாடார்களுக்கு) அறிவுரை கூறியிருப்பதை அறிய முடிந்தது. அவரது சட்டமன்ற உரைகளிலும் மேடைப் பேச்சுகளிலும் இதுபோன்ற பொருளியல் மேம்பாட்டுக் கருத்துகள் என்னென்ன இருந்தன என்று அறிய விரும்புகிறேன்.

பாண்டியனாரின் இன்னொரு சிறப்பு நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பார்ப்பனர், வெள்ளாளர், நாயக்கர், மறவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக நாடார்கள்-தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஒன்று அமைக்கும் முயற்சியே. இதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது தங்கள் நூலிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நாடார்கள் நடத்திய பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமளித்தல், கூட்டுணவு, (சம்பந்தி போசனம்) ஆகியவை, அத்துடன் பொதுக் குளங்கள், கிணறுகள், சுடுகாடு, அவற்றுகுரிய பாதைகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றுவதற்காகச் சட்டமன்றத்தினுள்ளும் வெளியிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

இந்தப் பின்னணியில் சராசரிப் பொருளியல் வலிமை பெற்ற நாடார்களின் அடிப்படை மன உணர்வாகிய குமுக உரிமைகளைப் பெறுதல் பாண்டியனாரின் பிற நோக்கங்களைப் பின்னடையச் செய்தனவா என்ற கேள்வி எழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்ச்சிகள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அறைகூவலாகப்பட்டது. அத்துடன் நீதிக்கட்சியுடன் பாண்டியனாருக்கிருந்த நெருக்கமான உறவும் அவர்களுக்குப் பெரியாரின் தொடர்பை எளிதாக்கின. பெரியாருக்கு ஆதரவளித்தார்களா அல்லது பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று இனம் பிரித்துக் காண முடியாமலிருந்தது.

தன்மான இயக்கத்துக்காகப் பெரியாரும் மற்றோரும் கலந்து கொண்ட கூட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்போக்கினர் ஏற்படுத்திய தடங்கல்களையும் தாக்குதல்களையும் மீதுற்று நிகழ்ச்சிகளை வெற்றி பெறச்செய்வதிலும் பெரியாரின் இயக்கம் தமிழ் மண்ணில் ஆழமாகவும் அகலமாகவும் வேர்கொள்வதிலும் நாடார்கள் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பயனை எய்தத்தானோ என்னவோ பெரியார் பாண்டியனாருக்கு ஏறக்குறைய தனக்கிணையான ஓர் இடத்தை இயக்கத்தில் கொடுத்தார்.

ஆனால் பாண்டியனாரைப் பெரியார் பின்னாளில் புறக்கணித்தாரோ என்ற ஐயமேற்படுகிறது. பாண்டியனார் மாண்டபோது அவர் பற்றிய செய்திகளைத் திராவிட நாடு இதழில் படித்திருக்கிறேன். அப்போதுதான் சவுந்திரபாண்டியன் என்று ஒருவர் இருந்திருக்கிறார், அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் அரும்பணியாற்றி இருக்கிறார்; சேலத்திலோ, வேறெங்கோ நடைபெற்ற ஒரு மாநாட்டின் ஒரு தீர்மானத்தால் என்று நினைவு - அவர் வெளியேறியிருக்கிறார் என்பனவெல்லாம் தெரியவந்தன.

அவற்றை உங்கள் நூல் தரும் தரவுகளுடன் நினைத்துப் பார்க்கையில், உலகில் இயக்கங்கள் மக்களின் மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகள் நோக்கி நகரும் நிகழ்முறை விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கையில், தனிமனிதர்களான தலைவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னணியாக நிற்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்த விதிகளைக் கையாண்டு பார்க்கையில் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிப் பல ஐயுறவுகள் எழுகின்றன.

தன்மான இயக்கத்தினுள் பெரும் முழக்கத்துடன் நாடார்களின் நுழைவும் நாடார் - தாழ்த்தப்பட்டோர் என்ற முழக்கத்துடன் நாடார்கள் என்ற வலிமையான பின்னணியுடன் நிற்கும் பாண்டியனாரால் தன் தலைமைக்கு அறைகூவல் வருமென்று பெரியார் கருதினாரா? பாண்டியனாரின் முகாமையை நீர்த்தப் போகச் செய்யத்தான் வெள்ளாளர்களை நாடினாரா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

பாண்டியனார் விலகிய பின்னும் நாடார்கள் பிடி தன்மான இயக்கத்தில் வலிமையாக இருந்ததா? அண்ணாத்துரையுடன் வெளியேறிய கும்பலில் நாடார் எதிர்ப்பினர் மிகுந்திருந்தனரோ? தி.மு.க.வின் ஐம்பெருந் தலைவர்களைப் பாருங்கள். அண்ணாத்துரை தவிர நெடுஞ்செழியன், அன்பழகன் இருவரும் சிவனிய வேளாளர்கள், (சிவனிய முதலியார்களும் வேளார்களும் ஒரே சாதியினர்.) மதியழகன் கவுண்டர் அவரும் கொங்கு நாட்டு வேளாளரே, சம்பத் கன்னட நாயக்கர். மற்றும் தி.மு.கழகத்தின் பிற முன்னணித் தலைவர்களில் ஆசைத்தம்பியைத் தவிர பிறரெல்லோரும் மேல் சாதியினரே. குமரி மாவட்டத்து மனோகரன் கூட அங்கு நாடார்களை இழிவாக நடத்தும் ஈழவச் சாதியைச் சேர்ந்தவரே.

தன்மான இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட நாடார்கள் மட்டுமல்ல மாநிலத்தின் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த ஐம்பெருந்தலைவர்களில் இல்லை என்பதைக் கவனிக்க.

பெரியாருக்கும் மறைமலையடிகளுக்கும் சமரசம் ஏற்பட்ட நாளிலிருந்தே நாடார்களும் அவர்களைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோரும் இயக்கத்தினுள் நுழைந்து செல்வாக்குப் பெறுவதைத் தடுத்து நிறுத்தும் திட்டம் செயற்படத் தொடங்கிவிட்டது.

சாதி என்ற வகையில் அண்ணாத்துரையைப் பற்றியும் கருணாதியியைப் பற்றியும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதி அடுக்குகளில் ஒன்றைச் சார்ந்தவர்களென்பது அது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியினர். அதாவது பொட்டுக்கட்டும் சாதி எனப்படும் அக்குலப் பெண்டிருக்குக் கடவுளின் பெயரால் கோயிலில் தாலி கட்டுபவன் பார்ப்பனப் பூசாரி. கோயில் நிகழ்ச்சிகளில் இறைத் திருமேனியைத் தொடுவது போன்று அவனுக்கிருக்கும் உரிமைகள் எல்லாம் அவளுக்கும் உண்டு. அவள் சாகும்போது அவளுக்குக் கருமாதி செய்பவனும் அவனே. இந்த வகையில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதிகள். ஏதோ காரணத்தால் சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்நூற்றாண்டு தொடக்கத்திலும் இவ்விரு சாதியார்க்கும் இடையில் ஏதோ பூசல் ஏற்பட்டு கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி இழிவு படுத்துவதன் மூலம் அது வெளிப்பட்டது. அதே நேரத்தில் வசதியும் திறமையும் படைத்த தேவதாசிப் பெண்கள் மெல்ல மெல்லப் பார்ப்பனச் சாதியினரால் உட்செரிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் வளைத்துப் போட்டுக்கொண்டனர். இன்று கருணாநிதியின் குடும்பமும் இந்து கத்தூரிரங்கய்யங்கார் குடும்பமும் ஓசையின்றி மணவுறவினுள் இணைந்துகொண்டது தற்செயலானதல்ல.

கருணாநிதியின் சாதிக்கு மேளக்காரர்கள் என்றொரு பெயரிருப்பதால் தென்மாவட்டங்களில் நாதசுரம், தவில், இசைக்கும் நாவிதர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும் அவரை நாவிதர் என்றே கருதிக்கொண்டுள்ளனர். இவ்வாறு பார்ப்பனரில்லாதாரில் மிக உயர்ந்த சாதியினராகிய அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்றொரு போலித் தோற்றத்தில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அரசியல் செய்து விட்டார்.

நாடார் மகாசன சங்கத்தார் பாண்டியனாரைக் கைவிட்டுவிட்டுக் காமராசரைப் பற்றிக்கொண்டனர் என்று கூறியுள்ளீர்கள். ஒருவேளை திராவிட இயக்கம் பொருளியல் துறையில் எந்தக் கவனமும் செலுத்தாததும் பாண்டியனாரைக் கைகழுவிவிட்டதன் மூலம் நாடார்களைக் கைகழுவி விட்டதும் காரணமாயிருக்க வேண்டும். தங்கள் பொருளியல் குமுகியல் - நலன்களுக்கு அரசியலை விட்டு விலகி இருந்த பாண்டியனாரை விட அரசியல் செல்வாக்கில் உயர்ந்து வந்த காமராசர் உகந்தவர் என நாடார்களில் பெரும்பான்மையினர் கருதியிருக்க வேண்டும்.

பாண்டியனாரின் செல்வாக்கை உடைப்பதற்காகக் காமராசரைத் தூக்கிப்பிடித்தவர்கள் பேரவைக் கட்சியினர் மட்டமல்ல, பெரியாரும்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று கூறித் தூக்கிப் பிடித்தது அவர் தானே!

தி.மு.க.வில் நாடார்களைப் புறந்தள்ள முக்குலத்தோருக்கு முதன்மை கொடுத்த பெருமை கருணாநிதியையே சாரும். தன்மான இயக்கத்தின் அரும்பணியினாலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டாலும் பயன்பெற்றுத் தம் குமுகியல் உரிமைகளைப் பெறத் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைதூக்கியதன் எதிர்விளைவே முதுகுளத்தூர் கலவரம். இந்தக் கலவரத்தில் முன்னறிவிப்பு ஏற்கனவே முத்துராமலிங்கத் தேவரால் திராவிடர் கழகத்தின் முன் அறைகூவலாக வைக்கப்பட்டுவிட்டது. விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்ற பிற்போக்கர்களின் தலைமையில் இந்த அறைகூவலை அவர் வைத்தார். அதனை இயக்கத்தின் தலைமையில் பெரியார் எதிர்கொண்டிருந்திருப்பாரேல் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் கூட்டு வலுப்பட்டு சாதிவேறுபாடுகளை மறந்து அம்மக்கள் நெருங்கிவர வாய்ப்பிருந்திருக்கும். பன்னூறாண்டுக் காலமாக ஆட்சியாளர்களுக்கும் மேற்சாதியினருக்கும் அடியாட்களாகச் செயற்பட்டு பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒடுக்கி வந்த முக்குலத்தோரின் ஆதிக்க மனப்பான்மை சிதைந்திருக்கும். ஆனால் பெரியார் அதைச் செய்யாமல் நழுவிவிட்டார். எனவே முதுகுளத்தூர் கலவரத்தின்போது தாழ்த்தப்பட்டோர் தனித்துவிடப்பட்டனர். அரசு தலையிட வேண்டியதாயிற்று. அப்போது முதல்வராயிருந்த நாடாராகிய காமராசர் கலவரத்தை நடத்திய மறவர்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, மறவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. இது அவரது அரசியலுக்கும் உயர்சாதி மனப்பான்மைக்கும் பொருத்தமாக இருந்தது.

திராவிடர் கழகத்திலும் அதன் மூலம் தி.மு.க.விலும் இடம்பெற்ற அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி ஆகியோர் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார்களாயிலும் அன்றைய குமுகியல் சூழலில் மறவர்களின் விழுக்காடு இயக்கத்தினுள் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க.வில் அவர்களின் நுழைவு பெருமளவில் இருந்ததன் காரணம் கருணாநிதி மறைமுகமாக பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலனுக்கெதிராக முக்குலத்தோரைத் தாங்கிப் பிடித்ததே.

இனி, பாண்டியனாரைப் பற்றிய சில ஐயங்கள்:

சிந்தனையிலும் செயலிலும் புரட்சிகரமானவராகவும் வீறும் எடுப்பும் மிக்கவராகவும் வீரத்திலும் ஈகத்திலும் ஈடிணைற்றவராகவும் இருந்து அவர் அரசியலில் தொட்டாற்சுருங்கியாக இருந்தாரா? அதனால்தான் ஒரேவொரு உறுப்பினர் நம்பிக்கையில்லை என்று கூறியவுடன் மாவட்டக் கழகப் பதவியைத் துறந்தாரா? அவருடைய இத்தன்மையைப் புரிந்துகொண்டு அவரை வெளியேற்றுவதற்கென்றே சேலம் மாநாட்டு அல்லது இன்னொரு மாநாட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?

திராவிடர் கழகம் என்ற பெயரை எதிர்த்த கி.ஆ.பெ. முதலியோரோடு சேர்ந்து ஒரு தனிக்கட்சி அன்று தொடங்கும் இன்றியமையாமையைப் புரிந்துகொண்டு வரலாற்றுத் திருப்புமுனையான அக்கட்டத்தில் தலைமையேற்றுப் பாண்டியனார் செயற்பட்டிருப்பாரானால் தமிழக வரலாறு இன்று உயர்ந்திருக்கும். ஆனால், ′′ஆனால்′′களை எண்ணி ஏங்கி என்ன பயன்?

இவ்வாறு நடந்தவற்றையெல்லாம் அலசினால் பெரியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முடிவுகள்:

1. அவர் துடிப்பான ஒரு மனிதர்.


2. தன் வாழ்வில் ஏற்பட்ட ஓர் நிகழ்ச்சியால் அல்லது நிகழ்ச்சிகளால் பார்ப்பனர்களை ஒழித்தே தீர்வது என்று புறப்பட்டிருக்கிறார்.

3. அவர் எதிர்பாராத ஆதரவும் அத்துடன் கொடும் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.

4. நாடார் என்ற பணம் படைத்த மக்களின் பேராதரவு அவருக்குப் பெரும் செல்வமாகக் கிடைத்துத் தொடக்கவிசையைக் கொடுத்து அவரது அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தியது.

5. குறிக்கோள் பரவலாகி வெள்ளாளர்களுடன் மோதல் உருவாகி அவர்கள் வெளியேறிவிட்ட சூழ்நிலையில் இயக்கத்தில் பெருகிவந்த நாடார்களின் செல்வாக்கும் அதன் தொடர்ச்சியும் காரணமான பாண்டியனாரின் செல்வாக்கும் அவரை அச்சுறுத்த அவர் முதலில் மறைமலையடிகளிடமும் பின்னர்? வெள்ளாளர்களாகிய மடத்தடிகளிடமும் இணக்கம் கொண்டார் ( பார்க்க: திராவிடர் இயக்கமும் வெள்ளாளரும்).

6. பேச்சிலும் கருத்துகளிலும் வீரமும் அஞ்சாமையும் இருந்தாலும் பெரும் மோதல்கள், அரசு ஒடுக்குமுறைகள் (சிறைக்காவல்கள் அத்தகையவை அல்ல) நெருங்கும்போது பின்வாங்கிவிடும் கோழைத்தனம் இருந்தது.

7. எதிரிகளிடம் பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாசனிடம் அவர் பணம் வாங்கியதாக வீரமணியே அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்க.

8. அவர் முன்வைத்த குறிக்கோள்கள் பல தரப்பார் அவருக்குப் பணம் தர முன்வரும் வாய்ப்பிருந்தது.

(அ) பார்ப்பனர்

(ஆ) மார்வாடிகள்

(இ) மடத்தலைவர்கள்

(ஈ) தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள், குறிப்பாக தெலுங்கர்கள்

(உ) அயல் மதத்தினர்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான தமிழக வரலாற்றாசிரியர்களான தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழகத்தில் அவர்களைவிடச் செல்வாக்குடனிருந்த தெலுங்கு, மராட்டிப் பார்ப்பனர்களுக்கெதிராகவே செயற்பட்டனர். பெரியாரின் ′திராவிட′ அரசியல் பார்ப்பனரிடையிலிருந்த இந்தப் பிளவை மழுங்கச் செய்து அவர்களை வலிமையாக ஒற்றுமைப்படுத்தி தமிழக நலன்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது; தமிழர்கள் நில உணர்விழந்து மயங்கவைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது.

பணம் வாங்கிப் பழக்கமுள்ள பெரியாரிடம் இத்தரப்பினரெல்லாம் பணத்தை அள்ளிக் குவித்தனால்தான் ஒரு வாழ்நாளில் அவரால் 125 கோடி உரூபாய்கள்ச் சேர்க்க முடிந்தது.

(தொடரும்)

1 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

Sir,

Excellent analysis. However Mathiazagan was not a Kongu Velalar but a Vellala Pillai from Salem district. (like Rajaram, former speaker).

Otherwise, very original thoughts. Please write more; It would also be interesting and useful if you can write on the reasons behind the divide between Nadars of sivakasi/virudhunagar and tuticorin/tirunelveli. Even the recent TMB mess-up was due to the differences between them.