5.6.07

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3

கல்வி போன்ற பணித்துறை அல்லது அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்ற அரசே பணத்தை அச்சிட்டுச் செலவிடலாம். மக்களிடமிருந்து வரிப்பணத்தையோ நன்கொடைகளையோ எதிர்பார்க்க வேண்டிய‌தில்லை என்பது 1930களில் வல்லரசுகள் கடைப்பிடித்தது வெற்றி கண்ட உத்தியாகும் இதற்குப் பற்றாக்குறைப் பணமுறை(Deficit Financing)என்று பெயர். இவ்வாறு செய்வதால் பணவீக்கம் எனப்படும் கூடுதல் பணப்புழக்கம் மக்களிடையில் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்து ஏழையரின் வாங்கும் ஆற்றல் குறையும் என்பது பொதுவாகப் பரப்பப்படும் கருத்து. இது ஒரு முழு உண்மையல்ல. பணவீக்கம் என்பது ஒரு நாட்டு மக்களிடம் உள்ள மொத்தப் பணப் புழக்கத்துக்கும் அந்நாட்டில் மக்கள் வாங்கத் தக்கதாகக் கிடைக்கும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். பண்டக் கையிருப்புக் கேற்பப் பணப்புழக்கமும் கூடினால் ஏழையரிடமும் பணம் புரண்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் அதன் தொடர்ச்சியாகப் பண்ட விளைப்பு ஊக்கம் பெறும். நாட்டின் வேளாண் - தொழில்துறைகளுடன் பொதுப்பொருளியலும் வளர்ச்சியடையும். பண்டக் கையிருப்புக்கும் பணப் புழக்கத்துக்கும் இடையிலான சமநிலை குலைவுறும் போது தான் பணவீக்கம் அல்லது பணமின்மை ஏற்பட்டு இரு நேர்வுகளிலும் ஏழையர் மட்டும் துயருறுவர். அ‌திலும் இந்தியா போன்று ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்கென்றே தேவையற்ற கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வேளாண்-தொழில்-வாணிக மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடுவோரால் ஆளப்படும் ஏழை நாடுகளில் இது நடைபெறுவது உறுதி. இணை நல்கை போன்ற கோணல் நடைமுறைகளைக் கடைப்பிடித்தற்காக நாம் காமராசரைக் குறைகூற முடியாது. சிறந்த படிப்பாளியும் தன் தந்தையுடன் இளமை முதலே உலகைப் பலமுறை வலம் வந்து உலக அரசியல்- பொருளியல் நிகழ்வுகளை அறிந்தவருமான இந்திரா காந்தியின் தவறான பொருளியல் அணுகல்களின் தீயவிளைவுகளைப் பற்றிக் கேட்ட போது ''நான் என்ன செய்வேன், பொருளியல் வல்லுநர்கள் சொன்னபடி செய்தேன்'' என்று கூறினார்[1] என்றால், தன் காலத்தில் உலகிலுள்ள அரசுத் தலைவர்களில் ஒப்பற்ற படிப்பாளியும் உயர்ந்த குறிக்கோள்களைப் பேசித் திரிந்தவருமான நேரு அயல்நாட்டுப் பொருளியல் வல்லுநர்களின் தவறான, அதாவது பணக்கார நாடுகளுக்கு ஆதாயமும் ஏழை நாடுகளுக்கு இழப்பும் தரும் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுக்கக் காரணமாயிருந்தார் என்றால், அத்தகைய பின்னணியில்லாதவரும் மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் உண்மையான அதிகாரங்களற்று நடுவணரசின் நேரடியான மற்றும் மறைமுகக் கட்டுப்பாடுகளுக்காட்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக காமராசரின் செயலுக்கு அவரை முழுப்பொறுப்பாளியாக்க முடியாது.

ஒரு நாட்டின் முதன்மையான அரசியல் கோட்பாடுகளில் முகாமையான இடம் பெற்றுள்ள இந்தப் பற்றாக்குறைப் பணமுறை குறித்த பொதுமைக் கட்சியினரின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

பொதுமைக் கட்சியின் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் 19ஆம் நூற்றபொண்டில் வாழந்த செருமனியர்களான காரல் மார்க்சும் அவரது நண்பரும் தோழருமான பிரடரிக் ஏங்கெல்சும் ஆவர். தொழிற்புரட்சியில் முதலிடத்தைப் பெற்று கதிரவன் மறையாத மாபெரும் உலகப் பேரரசான பிரிட்டனில் வாழ்ந்தவர்கள். தனியுடைமையின் மிக உயர்ந்த நிலையான முதலாளியம் என்ற விளைப்பு முறையில் அன்று உச்சத்தில் இருந்த இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளியத்தால் உருவான மக்களில் பெரும்பாலோரான தொழிலகப் பாட்டாளி மக்களுக்கும் முதலாளியர்க்கும் இடையிலான முரண்பாடுகளைத் தடம்பிடித்து அனைத்துச் செல்வங்களும் அனைத்து மக்களுக்கும் பொதுவாகும் வகையில் தனியுடைமையின் அனைத்து வடிவங்களும் ஒழிந்த பொதுமைக் குமுகமே மனித இனத்தின் முழுமையான விடுதலைக்கும் உய்வுக்கும் வழி என்று கூறினர். அன்றைய ஐரோப்பாவில் நாடெங்கும் பண்டங்கள் விற்பனையன்றித் தேங்கிக் கிடக்க, வேலையின்மையால் கூலி கிடைக்காமல் தம் உயிர்வாழ்வுக்கு இன்‌‌றியமையா உணவுப் பொருட்களைக் கூட வாங்க இயலாமல் ஏழைகள் செத்து மடியும் ''பொருளியல் மந்தம் அல்லது நெருக்கடி'' எனப்படும் கொடிய நிகழ்வுகள் சரியாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருந்த அடிமை நாடுகளிலும் இந்தப் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. இது பற்றிய மார்க்சின் விளக்கம் பின் வருமாறு.

ஒரு பாட்டாளி ஒவ்வொரு நாளும் தன் உயிர் வாழ்வுக்குத் தேவையாவை போன்று பல மடங்கு பண்டங்களைச் செய்கிறான்; ஆனால் அவனுக்கு வழங்கப்படும் கூலி அவன் அடிப்படைத் தேவைக்கான பண்டங்களை வாங்குவதற்குப் போதாது; பெரும்பாலன மக்கள் பாட்டாளியராக உள்ள நாடுகளில் இவ்வாறு விளைப்புக்கும் விற்பனைக்கும் உள்ள இடைவெளி மிகும்போது பண்டஙகள் வளிற்பனையின்றித் தேங்குகின்றன; செய்த பொருள் விற்றுமுதலாகாமல் தேங்கும் போது மேற்கொண்டு விளைப்பில் ஈடுபடப் பணம் இன்றி முதலாளியர் முதலில் விளைப்பைக் குறைப்பர்; அடுத்துக் கதவடைப்புச் செய்வர்; இதனால் படிப்படியாக பாட்டாளியரின் பணப்புழக்கம் மேலும் குறைந்து விற்பனையும் குறைந்து இறுதியில் ஒட்டுமொத்த வேலையிழப்பும் உச்சநிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன; பின்னர், விளைப்பே இல்லாத நிலையில் தேங்கிய பண்டங்கள் பணம்படைத்தோரால் சிறிது சிறிதாக விற்பனையாகத் தொடங்குகின்றன; பண்ட விளைப்பும் சிறிது சிறிதாக உயர்கிறது; அதற்கேற்பப் பாட்டாளிகளிடம் பணப்புழக்கம் உயர்கிறது; அது பண் விற்பனையை உயர்த்தி, இவ்வாறான சூழற்‌‌‌சியால் விளைப்பும் விற்பனையும் மீண்டும் உச்ச நிலையை அடைந்து மிண்டும் அனைத்தும் இறங்குமுகமாகிப் பட்டினிச் சாவுகள் நிகழ்சின்றன. மனித நேயமுள்ளோரைக் கலங்க வைக்கும் இக்கொடும் சுழல் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பலர் வெவ்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். அத்தகைய ஒரு தீர்வு தான் மால்த்தூசு என்ற பிரித்தானிய கிறித்துவ மதகுரு முன்வைத்த மக்கள் தொகைப் பெருக்கம் பற்‌‌றிய கோட்பாடு. புவியின் விளைதிறனை மிஞ்சிய மக்கள் தொகையே இந்தப் பட்டினிச் சாவுகளுக்குக் காரணம்; எனவே குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதை மார்க்சு மறுத்தார். இப்பட்டினிச் சாவுகள் பண்டங்களின பற்றாக்குறையினால் ஏற்படவில்லை; ஒரு புறம் மாபெரும் பண்டக்குவியலும் இன்னொரு புறம் பட்டினிச் சாவுகளும் நிகழக் காரணம் மக்களுக்கிடையிலான செல்வப் பங்கீட்டுக் கோளாறு தான் காரணம் என்றார். ஒரு சிலரிடம் உலகில் அனைத்துச் செல்வங்களும் திரண்டிருப்பதை மாற்றி அனைத்துச் செல்வங்களும் அனைத்து மக்களுக்கு பொதுவாக வேண்டும் என்றார். இது நிகழ வேண்டுமாயின் பாட்டாளிகள் ஆயதமேந்திப் போராட வேண்டும் என்றார். அத்தகைய ஒர் ஆயுதப் புரட்சி இந்தப் பட்டினிச் சாவுகளின் விளைவாகத் தான் நிகழும் என்றும் கணித்தார்.

மார்க்சு குடும்பக் கட்டுப்பாட்டுத் ‌திட்டத்துக்கு எதிரானவர் என்று அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வோர் கூறுகின்றனர். உலகின் வளங்களுக்கும் அவற்றைப் பங்குபோட்டுக் கொள்வோருக்கும் உள்ள உறவைப் பற்றி அவர் அலசியதாகத் தெரியவில்லை. பொருளியல் மந்தம் நெருக்கடி என்ற வடிவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் பட்டினிச் சாவுகளுக்கு பண்டங்களின் பற்றாக்குறையோ மன்ணின் விளைதிறனை மிஞ்சிய மக்கள் தொகையோ காரணமல்ல, செல்வப் பங்கிட்டிலுள்ள குறைபாடு தான் என்பதே அவரது வாதம்.

பாட்டாளியின் உழைப்பின் பயனாகிய விளைப்பின் மதிப்பு ஏற்றத்துக்கும் அவனுக்கு வழங்கப்படும் கூலியின் மநிப்புக்கும் உள்ள வேறுபாட்டால் முதலாளி‌‌‌‌‌‌யின் கைக்குச் செல்லும் மதிப்பை மீத மதிப்பு என்றார் மார்க்சு. இதைப் பற்றி அலசும் அவரது கோட்பாட்டுக்கு மீத மதிப்பிக் கோட்பாடு என்று பெயர்.

பத்தாண்டுகளுக்கொருமுறை தவறாமல் நிகழ்ந்து வந்த பட்டினிச் சாவுகளால் மார்ச்சு கணித்துக் கூறியபடி பாட்டாளிய இயக்கம் உலகெங்கும் விரைந்து வளர்ந்தது உண்மை. அதிலும் 1933-இல் தொடங்கிய பொருளியல் நெருக்கடி கொடியது. அந்த ஆண்டில் தான் பட்டினிச்சாவுகளிலிருந்து உழைக்கும் மக்களைக் காப்பதற்காக அமெரிக்காவில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன, பொதுமைக் கட்சியும் அங்கு வலுவாக வேர்கொள்ளத் தொடங்கியது. ஆனால் பட்டினிச் சாவுகளும் பொதுமைக் கட்சியின் விரைந்த வளர்ச்சியும் அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகளிலும் அவற்றைப் சாந்திருந்த அடிமை நாடுகளிலும் ஒரு முடிவை எய்தியதும் இந்தப் பொருளியல் நெருக்கடியின் போது தான். இதற்குக் காரணமானவர் கெயின்சு என்ற இங்கிலாந்தைச் சோந்த பொருளியல் மேதை. அவரது கோட்பாட்டின் சாரம் இது தான்:

தொழில்கள் இருவகையானவை, ஒன்று விளைப்பு சார்ந்தது, இன்னொன்று விளைப்பு சாராத பணித்துறைகள்; எடுத்துக்காட்டாக, கல்லுடைத்தல், சல்லியாக்கல், மணல் எடுத்தல், செங்கல், சிமென்று செய்தல் போன்றவை விளைப்புத் துறைகள் என்றால் கட்டுமானத்துறை இப்பண்டங்களை நுகரும் பணித்துறை; பருத்தி வேளாண்மை, நூற்றல், நெய்தல், ஆடை செய்தல் போன்றவை ஒரு முனையில் விளைப்பும் மறு முனையில் பணியும் சார்ந்தவையாய் ஒரே பண்டத்தைப் பல்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் விளைத்து நுகரும் தொடரியின் கண்ணிகளாகின்றன; அதே வேளையில் சாலைகள், பாசன அமைப்புகள் அமைத்தல், செப்பமிடல், பராமரித்தல், மின்சாரம் போன்றவை சிறிதளவு விளைப்பும் பெருமளவு பணியும் சார்ந்தவை. கடல்வழி, நிலவழிப் போக்குவரத்து ஆகியவற்றின் அனைத்து உறுப்புகளிலும் சிறிதளவு நுகர்வும் பெருமளவு பணியும் அடங்கியுள்ளன; சுற்றுலாவும் அத்தகையதே; கலை இலக்கியப் படைப்புத் துறையில் மக்களை மகிழ்வித்தல் என்ற பணி மட்டும் அடங்களியுள்ளது; சாலை, கட்டுமானங்களைப் போல் நேரடி நுகர்வு இல்லாத துறைப் பிரிவுகள் அவற்றில் பணியாற்றுவோருக்குக் கூலி மூலம் உண்டாக்கும் பணப்புழக்கம் அவர்களது வாங்குதிறனைக் கூட்டி மறைமுகமான நுகர்வை ஏற்படுத்துகிறது; அத்துடன் அவர்களுக்குப் பலவகையான பணிகளை வழங்கும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பணப் புழக்கத்தின் மூலமாகவும் நுகர்வை உண்டாக்குகிறது; எனவே பொருளியல் நெருக்கடி காலங்களில் விளைப்பு சாராத்துறைகளில் அரசே தலையிட்டு பணத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டு அப்பணத்தை இத்துறைகளில் செலவிடுவதன் மூலம் பணப்புழக்கத்தை உருவாக்கிப் பொருளியல் மந்த நிலையை முறியடிக்க வேண்டும் என்பது தான்.

கெயின்சின் இந்தத் திட்டத்தை ஐரோப்‌பாவிலிருந்த ஆட்சித் தலைவர் எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்போது அமெரிக்காவின் குடியரசுத் தலைவராயிருந்தவர் இதனை ஏற்றுக் கொண்டு செயற்படுத்தினார். முதன் முதலில் சாலைகளில் படிந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிச் சேற்றை அகற்றும் பணியைக் கொடுத்தார். வேலையற்றிருந்தோருக்கு இதன் மூலம் கிடைத்த கூலி தொடங்கி வைத்த பணப்புழக்கம் பொருளியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடித்து நேரான விரைவுச் சாலைகள் முதற்கொண்டு அனைத்து அடித்தளக் கட்டுமானங்களையும் செய்து முடித்தனர். இதனால் ஏற்பட்ட பணப்புழக்கமும் நுகர்பொருள் தேவையும் அமெரிக்கப் பொருளியலை அனைத்து முனைகளிலும் மிகக் குறுகிய காலத்தில் உயர்த்தியது.

முதலாளிய விளைப்பு முறையின் இயல்புக்கேற்ப அரசு அச்சிட்டு வெளியிட்ட பணப்புழக்கத்தின் விளைவான நுகர்பொருள் விளைப்பின் உயர்வு அப்பணத்தை இறுதியில் முதலாளியரின் கைகளில் கொண்டு சேர்த்தது. முதலாளிகள் தங்களுக்கிடையிலான போட்டியை எதிர்கொள்ள மலிவாகப் பொருட்களை விளைக்கவும் அவற்றின் தரத்தை உயர்த்தவும் புதிய புதிய பொருட்களைப் படைக்கவுமான ஆய்வுகளில் செலவிட்டனர். இதன் மூலம் உள்நாட்டுப் போட்டி என்ற நிலையிலிருந்து உலக அளவில் போட்டியிட்டு முதலிடம் பெறவும் அமெரிக்காவால் முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் உலகப் போரின் இரண்டாம் கட்டம்(ஒரே உலகப் போர் தான் நடைபெற்றது என்றும் 1919இல் தொடங்கியது அதன் முதற்கட்டம் என்றும் 1939இல் தொடங்கியது இரண்டாம் கட்டம் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதற்கட்டப் போரின் முடிவும் ஒப்பந்தமும் செருமனிக்கு வெளியே பிரான்சில் இடம்பெற்றதையும் இரண்டாம் கட்டப் போர் செருமனியின் தலைநகர் வரை சென்று "எதிரி" முழுமையாக முறியடிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.)தொடங்கி விட்டது. அதன் விளைவாக இடம் பெயர்ந்து அமெரிளிக்காவில் குடியேறிய முதலாளியர், குறிப்பாக யூதர்கள் இந்த நல்வாய்ப்பான சூழலில் அமெரிக்‌காவின் தொழில் வளர்ச்சியை உச்சத்துக்குச் கொண்டு சென்றனர். இவ்வாறு அமெரிக்கா இன்று உலகின் ஒரே வல்லரசாக உயர்ந்ததில் பற்றாக்குறைப் பணமுறைக்கு முதன்மையான இடம் உண்டு. ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை அடிமை கொண்டு அந்நாட்டு மக்களை வேட்டையாடிக் கொன்றும் கொள்ளையடித்தும் சுரண்டியும் குறைந்தது 150 ஆண்டுகளாவது பாடுபட்டு எய்திய வளர்ச்சியை மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா எய்த முடிந்தது இந்தப் பற்றாக்குறைப் பணமுறை உத்தியால் தான்.

ஆங்கிலர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்தில் இங்கு விளைப்பு விசைகள் போதிய அளவு வளரவில்லை என்பதும் அதனால் பற்றாக்குறைப் பணமுறை பணவீக்கத்தை விளைவிக்கும் என்பதும் உண்மை தான். ஆனால் அதைப் பின்பற்றுவதன் மூலமாயினும் மக்களிடம் நன்கொடை தண்டி பள்ளிகளைத் தொடங்குவதாயினும் அவற்றால் ஏற்படும் பணப்புழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றே. அதே நேரத்தில் இந்திய அரசு பற்றாக்குறை பணமுறையைக் கடைப்பிடிக்‌காமலும் இல்லை. இதை ஆச்சாரியார் போன்றோர் கடுமையாக எ‌திர்த்தனர் என்பதும் உண்மை. கல்வி முதலிய அடிப்படைக் கட்டமைப்புகளின் மூலம் அடித்தன மக்கள் மேம்பாடடைவதைப் பொறுக்க முடியாமலேயே அவர் இந்த எதிர்ப்பபைக் காட்டியிருக்க வேண்டும்.

பற்றாக்குறைப் பணமுறையை எதிர்க்கும் அல்லது அதன் நற்கூறுகளை மறைக்கும் நம் நாட்டுப் போலி, கூலிப் பொருளியல் ''வல்லுநர்கள்'' உலக வங்கி முதல் அயல்நாட்டு நிறுவனங்கள் வரை வெளிநாட்டு மூலதனத்தை இறக்குமதி செய்தும் அதற்கு ஈடாக உள்நாட்டுப் பண்டங்களை ஏற்றுமதி செய்தும் மக்களுக்குக் கிடைக்கத் தக்க பண்டங்களின் அளவைக் குறைத்தும் அதற்குத் தொடர்பில்லாத ஒர் உயர் மட்டப் பணப்புழக்கத்தை உண்டாக்கியும் வல்லரசுகளின் நெருக்குதலால் நினைத்தவாறெல்லாம் ரூபாயின் மதிப்பைக் குறைத்து அதன் வாங்கும் ஆற்றலை அழித்தும் உள்நாட்டு விளைப்பு விசைகளின் கழுத்தை நெறித்துத் கொலை செய்வதைக் கண்டிப்பதில்லை. அவ்வாறு கண்டிக்கும் நேர்மையான பொருளியலாரைப் புறக்கணிக்கவும் பல்வேறு வகைகளில் தண்டிக்கவும் தயங்குவதில்லை. அவர்களை ஆதரிக்கும் மக்கள் தொடர்பு ஊடகங்களைத் தண்டிக்கவும் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர் ஆட்சியாளர்கள். பொதுமைக் கட்சியினரைப் பொறுத்தவரை மார்க்சோடு நேர்மையான பொருளியல் சிந்தனை என்பது மனித குலத்தில் முற்றுப்பெற்றுவிட்டது என்றே கருதுகின்றனர். மதத் தலைவர்கள் தங்கள் முற்காணியரகள்(தீர்க்கத்தரிசிகள்) அல்லது இறைத்தூதர்களுக்குப் பின் இன்னொருவர் தோன்றுவதில்லை என்று நம்புவது போன்றது தான் இதுவும். பெரியார், முத்துக்குட்டி அடிகள், போன்றோரின் அடியார்கள் அவர்களது காலத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிலெடுக்க மறுப்பது போன்றதே கெயின்சின் கோட்பாட்டை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்மையில் கெயின்சின் கோட்பாடு மார்க்சின் மீத மதிப்புக் கோட்பாட்டின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே. இத்தகைய ஒரு பின்னணியில் காமராசரின் செயற்பாடுகளுக்காக அவரைக் குறை கூறுவது சரியல்ல. கல்விக் கண்ணைத் திறந்த அவரது அரும்பணியின் பெருமை இதனால் சிறிதளவும் பாதிக்கப்படாது.

ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்க முன்வராத எழுத்தறிவைப் பெற வீடு தோறும் நாளொன்றுக்கு ஒரு பிடி அரிசி பெற்றுக் கல்வி கற்ற வரலாறுடையது தமிழ்நாடு. சி.பி. இராமசாமியாரின் பகல் கஞ்சியுணவுத் திட்டத்துடன் இணைந்த கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தைத் திருவிதாங்கூர் சமத்தானத்தில் கண்டது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்துத் தீட்டப்பட்டது தான் காமராசரின் பள்ளிக் கல்விச் சீரமைப்பு இயக்கமும் இன்று திராவிடத் தெருநாய்களின் சண்டையில் சிக்கித் தவிக்கும் சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியான காமராசரின் மதிய உணவுத் திட்டமும். இவ்வாறு அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட அனைவருக்குமான பொதுக் கல்வித் திட்டம் ஊழல் அரசியல் பேய்களின் பண வேட்கையாலும் கல்வி வாணிகர்களின் கொள்ளை முயற்சியாலும் ஏழைகளுக்கும் இதுவரை நடைபெற்ற ஒதுக்கீட்டு முறையின் பயனைத் தீண்டாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எட்டாக்கனியாகி நிற்கிறது. ஆங்கிலர் வருகைக்கு முன் இரண்டு சாதியினர்க்கே உரியதாயிருந்த கல்வி இன்று அனைத்துச் சாதிகளிலிருந்தும் உருவாகியுள்ள புதிய மேட்டுக்குடிகளான புதுச் சா‌திகளுக்கு மட்டும் கிட்டும் நிலை உருவாகி விட்டது. சிறுபான்மையினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறப்புரிமை இருப்பதை எதிர்த்து மதவெறியைக் கிளப்பி நாட்டைக் கொலைக்களமாக்கி ஆட்‌‌‌சியில் அமர்ந்து விட்டவர்கள், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாட்டையே கொள்கையளவில் எதிர்க்கும் வருண முறைக் கோட்பாட்டினர். அது பற்றிய உணர்வற்றவர்கள் பொதுமக்கள்; ஏனென்றால் எழுத்தறிவின் பயனை நுகர்ந்தறியாதவர்கள் அவர்கள். அவர்களது உழைப்பின் பயனை நுகரும் நம் குமுகம் அந்த உழைப்பையும் உழைப்போரையும் மதிப்ப‌தில்லை. அவர்களது உழைப்பில் அடங்கியுள்ள அறிவியல் கூறுகளையும் தொழில்நுட்பத்தையும் அகழந்தெடுத்துப் ‌பாடத்திட்டங்களில் சேர்த்து அவற்றை வளர்த்தெடுத்து அத்தொழில்களையும் அவற்றில் ஈடுபடுவோரையும் மதிக்கும் பண்பாடற்றது நம் குமுகம். இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த மீண்டுமொரு முறை பிடியரிசித் திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு மக்களாகவே இத்தொழில்களுக்கான பயிற்சி இணைந்த கல்விச்சாலைகளைக் திறந்து ஆட்சியாளர்களை நெருக்கி இணங்க வைக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம் என்பது காமராசரின் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

கல்விப் பணிக்குப் புறம்பாக நன்கொடை தண்டுதல், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப் பண்டுவத்துக்கு ஆள் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு அதில் நிறுவப்பட்ட குறியளவை எய்த முடியாததால் தண்டிக்கவும் பட்ட நெருக்குதால் கல்விப் பணிக்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டதால் கல்வித் துறை சாராத அலுவலர்களின் அனுமதிப்புக்கு ஆளான நிலையில் தான் முன்பு குமுகத்தின் நேர்மையான பெருமை சான்ற வழிகாட்டிகளாயிருந்த ஆசிரியர் பெருமக்கள் தங்கள் தன்மதிப்பை இழந்து தங்களையே தரம் தாழ்த்‌திக் கொண்டு தரகர்களாகவும் கந்துவட்டிக்காரர்களாகவும் மாறி கல்வியை ஒரு சந்தைப் பொருளாக மாற்றினர், அதுவும் மிகக் குறுகிய காலத்தில் என்பதும் உண்மை.


அடிக்குறிப்பு:

[1]தான் பதவிக்கு வந்த நான்கே மாதங்களில் கட்சித் தலைவர்களையோ அமைச்சரவை உறுப்பினர்களையோ கலக்காமல் அமெரிக்காவுடனும் உலகவங்கியுடனும் பேசி இந்திய உரூபாயின் மதிப்பை 57% இந்திரா காந்தி குறைத்தார். அதிலிருந்து தான் அவருக்கும் காமராசருக்குமான இடைவெளி விரிந்தது என்று கூறப்படுகிறது. பார்க்க: இந்திரா சகாப்தம், தினமணி கதிர் 11-11-1984. அன்று தொடங்கிய இந்தியப் பொருளியலின் வீழ்ச்சியைத் அதைத் தூக்கி நிறுத்த வேண்டுமாயின் ஒரு அரசியல் புரட்சியே தேவைப்படும் என்பது இன்றைய நிலை. இந்திராவின் இந்த நடவடிக்கையில் கணிசமான பணம் கைமாறியிருக்கும் என்பது உறுதி. தேர்தல் செலவுகளுக்காக உள்நாட்டுச் சுண்டைக்காய் முதலாளிகளிடம் கையேந்துவதை விட அமெரிக்க, உலகவங்கி முதலைகளிடம் தாராளமாக எளிதில் சேர்த்துவிடலாமே! அப்போது அவர் திட்டமிட்டிருந்த தேர்தலையும் அதற்குத் தேவைப்படும் பணத்தைத் திரட்டும் வழியையும் அப்போது அவர் நெருக்கமாக இருந்த அமெரிக்காவே அறிவுறுத்தியிருக்கும்.

0 மறுமொழிகள்: