5.6.07

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் (1)

வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்போ தரவுகளின் பட்டியலோ அல்ல. அது உலக மக்கள், மக்கள் தொகுதிகள் அல்லது தனிமனிதர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இயற்கை, உலக உருண்டை ஆகிய அனைத்திலும் இடம் பெறும் மாற்றங்களையும் அம்மாற்றங்களின் பின்னணியில் நின்று அம்மாற்றங்களை நிகழ்த்தும் காரணிகளையும் தடம்பிடிப்பதாகும். தனிமனித வரலாறுகள் அம்மனிதர்களின் சிந்தனை மற்றும் செயல்திறன்கள், அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட முறை அவர்கள் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் இடையூறுகள் அவற்றை அவர்கள் சந்தித்த பாங்கு, அவர்கள் புரிந்த அருஞ்செயல்கள், தவறவிட்ட நல்வாய்ப்புகள், செய்யத் தவ‌‌றியவை, செய்த தவறுகள், எய்திய மேன்மைகள், அடைந்த இழிவுகள் என்று அனைத்தையும் தடம்பிடிப்பவை. அவர்களது வாழ்நாளில் அவர்கள் வ‌‌லிமையைப் பயன்படுத்திப் பயன்களைப் பெறுவதற்காக இல்லாத பெருமைகளை இட்டுக்கட்டியோ அவர்களின் எதிரிகளை மகிழ்வித்து ஆதாயம் பெறுவதற்காக அவர்களது குறைகளை மிகுத்துக் காட்டியோ அவர் சா‌‌ர்ந்த அல்லது அவரைச் சார்ந்த மக்கள் குழுக்களை மகிழ்வித்துப் பயன்பெற அவர்களின் ‌‌‌சிறப்புகளை அளவின்றி மிகைப்படுத்‌தியோ கூறுவது வராற்றுக்குச் செய்யும் இரண்டகம். ஒரு நாடு அல்லது மக்கள் தொகுதி அல்லது தனி மனிதர்களின் பட்டறிவுகளிலிருந்து எதிர்காலத் தலைமுறையினருக்குப் புதிய ‌பாதைகளை வகுத்துக்கொள்ள வழி‌காட்டுவதே வரலாற்றின் நோக்கமும் பயனுமாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு அருமுயற்சியும் கடும் உழைப்பும் தேவைப்படுவது போல் அவற்றின் பின்னணியில் நின்று இயக்கிய குமுக விசைகள் மற்றும் நிகழ்முறைகளையும் தடம்பிடிப்பதற்கும் வரலாறு தரும் படிப்பினைகளை இனம் காட்டுவதற்கும் கூட கடும் உழைப்பும் ஆழ்ந்த, ‌‌‌‌‌தெ‌‌‌ளிவான சிந்தனையும் தடம் புரளாத மெய்‌‌‌‌‌‌யியல் அணுகலும் தேவை. ஒரே வரலாற்றிலிருந்து வெவ்வேறு ஆய்வாளர்கள் தத்தமக்குரிய அணுகல்கள், கோணங்களின் அடிப்படையில் வெவ்வேறு முடிவுகளை எய்துவதுடன் வெவ்வேறு படிப்பினைகளையும் இனம் ‌காட்டுவர். இந்த வகையில் வரலாற்றுவரைவென்பது ஒரு மெய்யியல் வினைப்பாடுமாகும். அந்த அடிப்படையில் மாமனிதர் காமராசரின் வாழ்வின் சில நிகழ்ச்சிகளைத் தடம் பிடிக்க முயல்வோம்.

மிக எளிய குடும்பச் சூழலில் பிறந்து தன் உழைப்பாலும் கொண்ட கொள்கையில் கொண்டிருந்த ஈடுபாட்டாலும் உறுதியாலும் உயர்ந்த பதவிகளை மட்டுமின்றி அவற்றைப் பயன்படுத்திப் பல அருஞ்செயல்களை நிகழ்த்தியவர் என்ற வகையில் தற்கால இந்திய வரலாற்றில் ஒப்பற்ற மாமனிதராக வாழ்ந்து மக்கள் மனதில் நிறைந்தவர் காமராசர் என்பதில் ஐயமில்லை.

பள்ளியில் கல்வியைப் தொடர முடியாத வறிய சூழலிலும் இந்திய விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு சிறுவர்களைத் திரட்டி அவர்களுக்கு உணர்வூட்டி இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியை வளர்த்தெடுப்பதில் கடும் உழைப்பையும் கொள்கை உறுதியையும் ஈடுபாட்டையும் கொண்டிருந்த அவருக்குக் கட்சியின் அடிமட்டப் பொறுப்புகளைப் பெறும் வகையில் அமைந்த வாய்ப்புகளைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு பேரவை(காங்கிரசு)க் கட்‌‌‌சியின் குழுத் தலைவர் பதவியைப் பெற்றதிலும் பின்னர் முதலமைச்சரானதிலும் அன்றைய தமிழக குமுக - அரசியல் சூழல்களுக்குப் பெரும் பங்குண்டு. பெருமக்களின் வளர்ச்சியில் அவர்களது உள்ளார்ந்த ஆற்றல்களும் சிறப்பான பண்புகளும் அவர்களது முயற்சியும் உழைப்பும் எந்த அளவுக்கு பங்கேற்கின்றனவோ அதே அளவுக்கு அவர்கள் வாழும் காலச் சூழல்களும் அவற்றால் அமையும் நல்வாய்ப்புகளும் தற்செயல் நிகழ்வுகளும் பங்கேற்கின்றன.

அவர் காலத்தில் பேரவைக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இறங்கு முகத்தில் இருந்தது. மைலாப்பூர் குழு, எழும்பூர் குழு என இரண்டாகப் பிரிந்து நின்று பனிப் போர் நடத்திக் கொண்டிருந்த கட்டத்தின இறுதியில் காமராசரின் ஆசானான சத்தியமூர்த்தி இயற்கை எய்திவிட அவரது போட்டியாளரான ஆச்சாரியார் எனப்படும் இராசகோபாலாச்சாரியார் செல்வாக்குடன் இருந்தார். அதே வேளையில் பார்ப்பனரல்லாத பல தலைவர்களும் வளர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆச்சாரியாருக்குக் காந்தியாரிடம் நெருக்கமான உறவிருந்தது. ‌காந்தியின் மகனுக்கு ஆச்சாரியாரின் மகள் மனைவியுமாவாள். இந்த நிலையில் அவர் இங்குள்ள கட்‌‌‌சியின் பிற பெருமக்களை மதிப்ப‌தில்லை என்பதோடு சாதி உணர்வுடனும் நடந்து கொண்டார். அதனால் தமிழ்நாடு பேரவைக் கட்சி‌‌‌‌‌‌யின் குழுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவரை எதிர்த்து முறியடிப்பது என்று அனைவரும் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆனால் எதிர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? இங்கிருந்த பெருந்தலைகளெல்லாம் காந்தியாருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர்கள். அவர்கள் போட்டியிட்டால் காந்தியாரின் தலையீட்டால் பின்வாங்க வேண்டியிருக்கும். எனவே தமிழக எல்லைக்குள் கூடச் சரியாக அறிமுகமாகாமலிருந்த காமராசரை எதிர்வேட்பாளாராக நிறுத்துவதென்று அனைவரும் முடிவு செய்தனர். தலைவர் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் முகாமையானவர் என்று கருதப்பட்ட முத்துராமலிங்கர் கூட காமராசர் போட்டியிடுவதை ஆதரித்தார். இவ்வாறு அன்றைய வரலாற்றுச் சூழல் காமராசரை பேரவைக் கட்சியின் தமிழ்நாட்டுக் குழுத் தலைவராக்குவதில் உறுதுணையாக நின்றது.

விடுதலை பெற்று அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டுக் குடியரசு அறிவிக்கப்பட்ட பின் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதல் பொதுமைக் கட்சியினர் எதிர்பாராத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் தேர்வு பெற்றனர். பேரவைக் கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் அவர்கள் பொதுமைக் கட்சி ஆட்சி அமைப்பதை விரும்பவில்லை. எனவே குறுக்கு வழியில் இறங்கினர். வன்னியர்களின் வாக்குகளால் சில உறுப்பினர்களைப் பெற்ற உழைப்பாளர் கட்சித் தலைவர் இராமசாமிப் படையாட்சிக்கு அமைச்சர் பதவி அளித்து அவரது கட்சியைப் பேரவைக் கட்சியில் இணைய வைத்தனர்; தி.மு.க.வோடு எழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது ஆதரவால் வென்ற மாணிக்கவேலருக்கு அமைச்சர் பதவி கொடுத்துச் சேர்த்துக் கொண்டனர். தேர்தலில் போட்டியிடாதவரான ஆச்சரியார் பேரவைக் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு முதலமைச்சரானார். புழக்கடை மூலம் பதவியைக் கைப்பற்‌‌றியவர் ஆச்சாரியார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளானார். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அரசியலில் கூட நீண்டகால நோக்கில் தீய பல விளைவுகளுக்கு அடித்தளமிட்டது. கட்சிமாறல் எனும் அருவருக்குத் தக்க அரசியல் நடைமுறையை இந்திய அரசியலில் தொடங்கி வைத்தது இந்த நிகழ்ச்சி மூலம் தான். அறத்தின் வழியில் ஆண்டவர் என்றும் அரச முனிவர்(இராச ரிசி) என்றும் பலராலும் இன்றும் தவறாகப் போற்றப்படும் ஆச்சாரியார் உண்மையில் பதவிக்காக எதையும் செய்பவர் என்ற இன்றுவரை மறைக்கப்படும் உண்மைக்குச் சான்று பகருவதாக இந்நிகழ்வு அமைந்தது. பாட்டாளியரை ஆளுவோராக்குவதே தங்கள குறிக்கோள் என்று அறிவித்துக் கட்சி நடத்தும் பொதுமைக் கட்சியின் அன்றைய தலைவரும் பார்ப்பனரும் ஆன இராமமூர்த்தி முதலமைச்சரின் தேர்வை முடிவு செய்யும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்து பார்ப்பனராகிய ஆச்சாரியார் முதலமைச்சராவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததன் மூலம் அவர்களின் உண்மையான நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை மறைமுகமாக நிலைநிறுத்துவதே என்பதை உலகுக்குப் பறைசாற்றியது. இன்று பொதுமைக் கட்சியின் எண்ணற்ற பிரிவுகளிலும் பார்ப்பனரல்லாத தலைமைகள் வந்துவிட்டாலும் நடைமுறைகளிலும் கோட்பாடுகளிலும் பார்ப்பனர்களின் நலன் பாதிக்கப்படாத உத்திகளே நீடிக்கின்றன.

உலகில் முதன் முதலில் நாகரிகம் எய்தியவர்கள், உலகுக்கு நாகரிகம் வழங்கியவர்கள், உலகின் மொழிகளுக்கெல்லாம் தாயாகிய தமிழ் மொழியை உருவாக்கியவர்கள் என்று, அனைத்து நாகரிகக் கூறுகளுக்கும் முன்னோடிகள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழர்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களிடம் காட்டி வாக்குப் பெற்ற கட்சிகளைக் கைவிட்டுப் பதவிக்காக வேறுகட்சிக்கு மாறும் கட்சி தாவல் எனும் மக்களாட்சி முறையில் புகுந்துவிட்ட புற்றுநோய்க்கும் பின்னாளில், பதவி வெ‌‌றியொன்றே வாழ்வின் நோக்கமாகக் கொண்டியங்கியவரும் ஆனால் வெளியில் கண்ணியமிக்க அரசியல் தலைவர் என்று புகழப்படுபவருமான அண்ணாத்துரை தொடங்கி வைத்த அரசியல் கட்சிகளின் கொள்ளையில்லாக் கூட்டணிக்கும் தொகுதிகளில் பெரும்பான்மையாகவுள்ள சாதியைச் சார்ந்த வேட்பாளர்களைத் தேர்திலில் நறுத்திச் சாதிவெறியைத் தேர்தல் மூலம் வளர்த்ததிலும் அரசின் செலவில் செய்த பணிகளை ஏதோ தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செய்தது போல் பட்டியலிட்டுஅரசின் செலவில் தாளிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுப்பது, முதலமைச்சரின் பிறந்த நாளன்று நலத் திட்டங்களை அறிவித்து மக்களாட்சி என் ற பெயரில் நடக்கும் ஆட்சியில் மன்னர் கால ஆட்சிக் கூறுகளைப் புகுத்துவது, ''ஆளுயர''(ஆள் உயர - இந்த வக்கணை விளக்கம் கருணாநிதி வாயாலேயே கொடுக்கப்பட்டது) மாலை அணிவிப்பது, மேடைகளில் தலைவர்களைப் பாரரட்டுவதில் நீண்ட நேரத்தைச் செலவிடுவது, துண்டுகள் அணிவது தலைவர்களின் மிகப்பெரிய வெட்டுருவங்களை (கட்டவுட்கள்) வைப்பது வருகை தரும் தலைவர்களைப் போற்றி சாலை ஒரங்களை தட்டிகளால் நிறைப்பது, சாலை முழுவதையும் தோரணங்களால் நிரப்புவது, பல்வேறு தனியார் நிறுவனங்களையும் அரசு சார் நிறுவனஙகளையும் அரசூழியர் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும் அலங்‌கார வளைவுகள் வைக்குமாறு அரசு அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவது. அரசின் கடமைகளை நிறைவேற்றியதற்குக் கூட சங்கங்களைக் கட்டாயப்படுத்தி நன்றி அறிவிப்புகளைத் தாளிகை விளம்பரங்களாகவும் சுவரொட்டிகளால் பொதுமக்களின் சுவர்களையும் ஊர்ப்பெயர்களையும் வழிகளையும் காட்டும் அறிவிப்புப் பலகைகளையும் நிரப்புவது, தலைவர்களை வரவேற்று உள்ளூர் தலைவர்கள் சுவரொட்டிக்ள ஒட்டும் நிலையை உருவாக்கி அதைக் கடந்து கட்சிகளின் தனியாட்களின் பெயர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது. கட்சியினரின் இல்லங்களில் நடைபெறும் திருமணம், பூப்பெய்தல். சாவு போன்ற நிகழ்ச்சிக்கு வருகை தரும் கட்சித் தலைவர்களை வரவேற்பதற்குக் கூட ஊரிலுள்ள சுவர்களை சுவரொட்டிகளாலும் சாலைகளைக் கொடித் தோரணங்களாலும் வரவேற்பு வளைவுகளாலும் சாலை ஒரங்களைத் தட்டிகளாலும் நிறைத்து வழிகாட்டி இப்போது பொதுமக்களும் தங்கள் வீட்டு நிகழ்ச்‌‌‌சிகளுக்கு எண்ணற்ற சுவரொட்டி விளம்பரங்களைச் செய்யும் நிலையை ஏற்படுத்தி மக்கள் படிப்பதற்காக புத்தகங்களுக்குப் பயன்பட வேண்டிய தாளை வீண் ஆடம்பரங்களுக்குப் பயன்படுத்தித் தாளின் விலையை உயர்த்தவும் தாள் செய்யத் தேவைப்படும் மரங்களின் அழிவுக்கும் அதனால் மழைப் பொழிவு நிலை குலைந்து போவதற்கும் காரணமாயிருப்பது, நலத்‌திட்டங்கள், இலவயங்கள், மானளியங்கள் முன்னுரிமைக் கடன்கள் பெயரில் அரசுப் பணத்தை விடுவித்துக் கட்சியினரும் ஆட்சியாளரும் பங்கு போட வைத்து ஆட்சியாளரைக் கண்காணிக்கும் உரிமையுடையவராய் மக்கள் இருக்க வேண்டிய மக்களாட்சியில் அவர்களை ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களை எற்றுக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாக்கியது, இலவய வீட்டுமனை, வீடுகள் தருகிறோம் என்ற பெயரில் மக்களின் வாழ்வுக்கு அடித்தளமான ‌பாசன நீர், நிலத்தடி நீர் ஆகியவற்றைந் தேக்கி வைக்கவென்று உலகிலேயே முதன் முதல் தமிழர்கள் கண்டு பிடித்த அமைப்பான குளங்களை நிரப்பி மனைகளாக மாற்றியது என்று பட்டிய‌‌லிட்டால் எல்லையின்றி நீண்டுபோகும் இன்றைய இந்தியாவின தீங்குகளில் மிகப்பெரும்பாலானவற்றுக்கு முன்னோடியான ''பெருமை'' தமிழகத்தைச் சேரும். அவற்றின் ஒரு முதன்மையான தொடக்க விழாவாக அமைந்தது ஆச்சாரியார் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் அதன் பின்னணியில் நடைபெற்ற அரசியல் தில்லுமுல்லுகளும். ஒரு மாநிலத்தில் அல்லது நடுவணரசில் மக்களின் நேரடி வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரைச் சட்டமன்ற அல்லது பாராளுமன்றக் கட்சித் தலைவராக்கி முதலமைச்சர் அல்லது தலைமையமைச்கராக்கவும் அவர் அதே போன்று பிறரை அமைச்சர்களாக்கவும் வகை செய்து வாக்‌காளர் பட்டியலில் தன் பெயர் இடம் பெறுவதற்காக. பொறுப்பற்ற அதி‌காரிகளிடம் கெஞ்சியும் மல்லுக்கட்டியும் பின்னர் வேலை வினை கெட்டு வாக்குச் சாவடியில் காத்து நின்றும் வாக்களிக்கும் குடிமக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரையும் எந்த மனச்சான்று உறுத்தலுமின்றி இழிவு படுத்துவதாக அமைந்துள்ள அரசியலமைப்பின் இழிந்த இந்த முறையின் தொடக்க விழாவாகவும் ஆச்சாரியாரின் பதவியேற்பு அமைந்தது. காமராசரைப் பெருமைப்படுத்துகிறேபொம் என்ற எண்ணத்தில் அன்று ஆச்சரரியரரை முதலமைச்சராக்கியது தமிழ் நாடு பேரவைக் குழுவின் தலைவராயிருந்த காமராசரின் அருஞ்செயல் என்று கூறுகின்றனர். அரசர்களை உருவாக்குபவர் (கிங் மேக்கர்) என்ற பெருமையைக் காமராசருக்குப் பெற்றுத் தருதல் என்ற நோக்கில் இவர்கள் வலியுறுத்தும் இந்த உண்மை மூலம் இந்திய அரசியலில் மக்களாட்சிக் கோட்பாடு இழிவுபட்டு யாரும் எதிர்பார்த்திராத விரைவில் சீரழிந்து போனதில காமராசருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்று பறைசாற்றுகின்றனர்.

ஆச்சாரியாரின் ஆட்சிக் காலத்தில் அவர் பல்வேறு நன்மைகள் செய்தாலும் அவரது பார்ப்பனியச் சாதிவெறி அவற்றின் வழி அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய நற்பெயரை அழித்துவிட்டது, அவர் அறிவித்த குலக் கல்வித் திட்டம் அவரது அர‌‌‌சியல் வாழ்வுக்கு அறைகூவலாக அமைந்தது. இத்திட்டத்தைப் பெரியாரும் தி.மு.க.வும் முனைப்பாக எதிர்த்தனர். ஏழை. அடித்தள, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாதி மக்கள் கல்வி பெற ஆங்கிலர் காலத்தில் தொடங்கப்பட்ட பொதுக்கல்வி என்ற நடைமுறையின் அடிப்படையையே தகர்க்கும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாத மனநிலை பாதி, ஆச்சாரியார் மீதுள்ள பொதுவான வெறுப்பு பாதி என்ற நிலையில் தமிழ்நாடு பேரவைக் குழுவின் பெருந் தலைகளும் மக்களுடன் இணைந்து கொண்டனர். ம.பொ.சி. மட்டும் ஆச்சாரியாருக்குத் துணை நின்றார். ஆனால் அவரது முயற்சி எடுபடவில்லை. மக்களிடம் "வாங்கிக் கட்டிக் கொண்டது" தான் பலன். இறுதியில் கொல்லைப்புறமாக நுழைந்த ஆச்சாரியார் கொல்லைப்புறமாகவே வெளியேறினார். அடுத்து யாரை முதலமைச்சராக்கலாம் என்று பார்த்த போது சி.சுப்பிரமணியம், பத்தவச்சலம் ஆகியோர் கையைத் தூக்கினர். ஆச்சாரியரின் நோக்கங்களைத் தான் இவர்கள் நிறைவேற்றப் போகிறார்கள் என்பதோடு அவரது செல்வாக்கும் மறைமுகமாக நீடிக்கும் என்பதை உணர்ந்த த.நா.பேரவைப் பெருந்தலைகள் ''பச்சைத் தமிழர்'' காமராசர் என்ற பெரியாரின் முழக்கத்தின் பின்னால் மறைந்து நின்றனர். காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தமிழகத்தில் நிலவிய ‌பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் முரண்பாடு, ஆச்சரரியார் பேரவைக் கட்சியின் பிற பெருந்தலைகள் ஆகியோருக்கிடையிலான முரண்பாடு ஆகிய குமுகியல் - அரசியல் சூழல்களே காமராசரின் முதலமைச்சரென்னும் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் காரணமானது. முதல்வர் பதவிக்கு வேண்டிய தகுதி காமராசருக்கு இருந்தது என்று பிற்‌பாடு வரலாற்றால் மெய்ப்பிக்கப்பட்டாலும் அவர் படிப்பறிவில்லாதவர், ஆங்கிலம் அறியாதவர்; சி.சுப்ரமணியம் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்தவர் என்ற கருத்து பலரிடமும் இருந்தது. அவர் தேர்வு செய்யப்பட்டதை முமுமனதுடன் ஏற்றுக் கொண்டும் அவரது பதவியேற்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையான குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அவருக்காகத் தேர்தல் பணியாற்றியும் துணை நின்ற தி.மு.க.வினர் கூடப் பிற்காலத்தில் அவர் ஆங்கிலம் அ‌‌றியாதவரென்று எத்தனையோ வகைளில் கேலி பேசியுள்ளனர். ஆனால் கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் வரைவுகளிலிருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு அவருக்கு ஆங்கில அறிவு தன் பல்லாண்டு பொதுவாழ்விலிருந்து கிட்டியிருந்தது என்பது பலரும் குறிப்பிடும் உண்மை. ஆனால் அன்று அவரைப் பற்றித் தமிழக்தில் பொதுவாக நிலவிய பொதுக் கருத்தையும் மீறி அவர் அந்த நிலையை எய்தியதில் தமிழகத்தின் அரசியல் - குமுகியல் சூழலுக்கு ஒரு முதன்மையான பங்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.

மற்றொன்று விரித்தல் என்ற குற்றமாயினும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் பற்றி அறியாமையால் பலரும் அறிந்தே சிலரும் வைக்கும் ஒரு கருத்தை இங்கு அலச வேண்டியுள்ளது. நம் கல்வி முறை தொழிற்பயிற்சிக்கு உரிய இடமளிக்கவில்லை என்ற குற்றக்சாட்டு எழும் போது ஆச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் தொழிற் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டது தான்; அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் தாம் அதைத் திசைதிருப்பி விட்டனர் என்பது அவர்கள் வைக்கும் கருத்து. ஆனால் இது ஆராமையாலும் அறியாமையாலும் ஒரு சிலரால் குறுகிய மனப்பான்மையாலும் கூறப்படும் கருத்து. தொழிற்பயிற்சி என்பது பொதுக் கல்வியைப் போல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாய் இருக்க வேண்டும். அரை நாள் படிப்பும் அரை நாள் தந்தை செய்யும் தொழிலும் என்பது மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி அவர்கள் அழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் சாதியின் தொழிலடிப்படையை உறுதிப்படுத்துவதாக அமையும். அது மட்டுமல்ல, உடலுழைப்புத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் ஒருவேளை பள்ளிப் பருவத்தில் தந்தையின் தொழிலில் ஈடுபட முடியும். அலுவலர், ஆசிரியர், அதிகாரி, அரசியல்வாணர், ஆய்வாளர். எழுத்தாளர் போன்றோரின பளிள்ளைகள் என்ன செய்வர்? பள்ளிகளில் தொழிற்பயிற்சியளிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உடனடியாகக் கிடையாது. எனவே இடைக்‌கால ஏற்பாடாக இது திட்டமிடப்பட்டது என்று வாதிடலாம். அப்படி ஒரு நோக்கம் உண்மையிலேயே இருந்திருக்குமாயின் அத்தகைய அடிப்டைக் கட்டமைப்புகளைப் படிப்படியாக உருவாக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதுவரை நடைமுறையிலிருந்த அமைப்பைத் தொடர்ந்திருக்கலாம். திட்டம் செயல்படுத்தத் தொடங்கி நாள்தோறும் பிற்பகலில் பள்ளியை அடைத்து வைத்து ஆசரியர்களுக்கு வீணாகச் சம்பளம் கொடுக்கும் முட்டாள்தனத்தில் மிகப் பெரிய அறிவாளி என்று பரப்பப்படும் ஆச்சாரியார் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் தொழிற்பயிற்சி இணைந்த பள்ளிகள் என்று ஒன்று கூட உருவாக்கப்படவில்லை. காந்தியாரின் எண்ணத்தின் படி வடிவமைக்கப்பட்ட ஆதாரப் பயிற்சிப் பள்ளிகள் யார் காலத்தில் தொடங்கப்பட்டனவோ தெரியவல்லை. ஆனால் அவற்றை ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்துடன் ஒப்பிட்டோ, மாற்றாகவோ கூறுவதும் சரியல்ல. ஒவ்வொரு மாணவனும் தன் அன்றாடத் தேவைகளான சமைத்தல், துவைத்தல், சுற்றுச்சூழலையும் இல்லத்தையும் குடி‌‌‌‌‌‌யிருப்பையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல் என்று எதற்கும் அடுத்தவர் கையை நம்பியிருக்க கூடாது என்பது அதன் அணுகல். இதன் அடிப்படை நோக்கம், இழிவானவையாகக் கருதப்படும் சாதி சார்ந்த துவைத்தல், கழிவகற்றல், மயிர்வினை போன்றவவை பற்றி குமுகத்தில் நிலவும் கருத்துகளைத் துடைத்‌‌‌‌‌தெ‌‌‌றிவதே.

(தொடரும்)

0 மறுமொழிகள்: