5.6.16

ஒழிப்போம் வருமான வரியை - 1



ஒழிப்போம் வருமான வரியை!
                                        குமரிமைந்தன்
                                                     காணிக்கை
          1980 – 81இல் பெரியாற்று அணை மேம்பாடு என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தைச் செலவு செய்து ஆட்சியாளர்கள் வரவு வைக்கும் ஒரு நிகழ்முறையாக வலுவாக இருந்த அணை மீது மணலையும் சிமின்றையும் சல்லியையும் கொட்டிக்கொண்டிருந்த பணிக்குழுவில் ஒருவனாக அணைக் களத்தில் இருந்த காலத்தில் என்னைப் போன்றே அங்கிருந்த பொ-ர்.ரவீந்திரன் அவர்களால் 1981இல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது தோழர் இரா.செல்வரசு அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போது அவருடன் இணைந்து செயற்பட்ட ஈழப் புரட்சிகர அமைப்பு(ஈரோசு)த் தோழர்களுடன் என்னை “நேர்கண்டு” தங்கள் அணியில் ஏற்றுக்கொண்டனர். பின்னர் நான் மதுரைக்கே மாறி வந்தேன். அதன் பின் நாங்கள் அடிக்கடி சந்திக்க முடிந்தது.

            பொதுமைக் கோட்பாட்டில் அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருந்த இவ்விரு குழுவினரும் தமிழகத்தில் தேசியப் புரட்சியை பொதுமைப் புரட்சியாக நடத்தும் திட்டத்துடன் ஆங்காங்கே அணிகளைக் கட்டி வந்தனர்.  அப்போது அவர்கள் எதிர்கொண்ட ஒரு கோட்பாட்டுக் கேள்வி தமிழகத்தின் புரட்சிகரப் பாட்டாளியர் யார் என்பதே. வேளாண் தொழிலாளர்களா அல்லது கைத்தறித் தொழிலாளர்களா என்ற குழப்பத்தில் சிக்கி அவர்களது செயல்பாடுகள் நிலைகுத்திப் போயின.

            இந்தக் கேள்வி பற்றி நானும் தோழர் செல்வரசு அவர்களும் நிறைய நேரம் கலந்துரையாடினோம். அப்போது நான் முன்வைத்த கருத்து புரட்சிகரப் பாட்டாளி என்பவன் பெரும் தொழிற்கூடங்களிலும் பெரும் பண்ணைகளிலும் பணியாற்றும் ஒருங்கிணைந்த உழைப்பாளிகளின் தொகுதியே; அதற்கு நாட்டின் மிகப் பெரும்பான்மைத் தொழில்களும் வேளாண்மையும் மிகச் சிறுபான்மையினரான முதலாளியர் கைகளில் வர வேண்டும். அதற்கு முதலாளியப் புரட்சி நடைபெற வேண்டும். அந்த முதலாளியப் புரட்சி வராமலிருப்பதற்காகவே பனிய – பார்சிகள் தவிர்த்த வேறு எவர் கைகளிலும் மூலதனம் திரண்டுவிடாமல் வருமான வரியையும் அவர்கள் தொழில்கள் எதையும் தொடங்கிவிடாமல் இருக்க தொழில் உரிமம் வழங்குவதைச் சிக்கலாக்கியும் மூலப்பொருள்கள் அனைத்தையும் பனியாக்களின் முற்றாதிக்கத்தினுள் கொண்டும் வைத்துள்ளனர். அது மட்டுமல்ல விளைத்த பண்டங்களைக் கூட பனியாக்களை மீறி பிறர் சந்தைப் படுத்த முடியாது. எனவே பொருளியல் உரிமைப் போராட்டமே நமது அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

            கோட்பாட்டளவில் என் கருத்துகளை ஏற்றுக்கொண்ட தோழர் அவற்றை அணியினர் முன் எடுத்து வைத்தார். அன்றுவரை பாட்டாளியப் புரட்சிக் கனவில் மிதந்துகொண்டிருந்த, பெரும்பாலும் தொழிலாளர்களைக் கொண்ட அணியினரால் இந்தத் “திரிபு வாதத்தை” ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தோழரின் மன அமைதியைக் குலைத்தது.

இருப்பினும் என் அணுகல் அடிப்படையில் நான் உருவாக்கிய தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்துக்கு மதுரையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை நண்பர் பொன்.மாறனுடனும் பிற தோழர்களுடனும் இணைந்து சிறப்புறச் செய்ததுடன் திரு.பழ.நெடுமாறன் அவர்களுடனும் பல முறை பயனெதுவும் தராத கலந்துரையாடல்களில் மட்டுமல்ல வேறு பல இயத்தவர்களுடன் நடைபெற்ற உரையாடல்களிலும் என்னுடன் இணைந்து பணியாற்றினார்.

ஈழத் தோழர்களுடன் நிறைய நேரத்தைச் செலவிட்டு வந்த தோழர், அவர்கள் மிக இயல்பாகக் கைக்கொள்ளும் மது உண்ணலில் பங்கெடுத்து வந்ததில் அவர் முயற்சிகளில் ஏற்பட்ட தடங்கல்கள் தந்த மன உளச்சல்களும் இணைந்து அவரை மீளமுடியாக் குடியராக்கிவிட்டது. தமிழகம் அறிவாற்றலும் தெளிவான முற்போக்குச் சிந்தனையும் கடுமையான உழைப்பும் உயர்ந்த தலைமைப் பண்புகளும் கொண்டு களமிறங்கிய ஒப்பற்ற ஒருவரை அன்றே இழந்துவிட்டது.

            தோழரைப் போல் தமிழக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு களமிறங்கி அப் பணியினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு இரையாகி ஊருக்குத் தெரியாமல் மறைந்தவர்கள் ஆங்காங்கே எத்தனையோ பேர். அதே நேரம் தமிழ்த் தேசியத்தைப் பேசிக்கொண்டே தமிழ்த் தேசியப் பகைவர்களுக்குக் கைக்கூலிகளாகச் செயற்பட்டுத் தமிழக இளைஞர்களைத் திசை திருப்பும் எண்ணற்ற பேர் கோடிக்கணக்கில் வளம் திரட்டி வாழ்கின்றனர். இந்த இரு நிலைகளையும் கண்டு மனம் சிதறாமல் தமிழகம், தமிழக மக்கள், தமிழ் மொழி ஆகியவற்றின் மேன்மையைக் குறியாகக் கொண்டு தோழர் இரா.செல்வரசு செல்ல நினைத்த திசையில் தொடர்ந்து செல்வோம் என்று கூறி தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் சார்பில் இவ்வெளியீட்டைத் தோழர் இரா.செல்வரசு அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறோம்.       
                                                        
மனந்திறந்து….
            தேசிய ஒடுக்குமுறையாளர்களின் அறுதியும் இறுதியுமான நோக்கமே பொருளியல் சுரண்டல்தான். இதனைப் புரிந்துகொள்ளாமலும் புரிந்தும் மறைத்தும் ‘மொழி, பண்பாடு, இனம் என்ற கற்பனை ஆகியவற்றைக் காப்பதற்காகத் தமிழ்த் தேசிய விடுதலை’ என்று இன்று களத்திலுள்ளவர்கள் பலர் கூறுகின்றனர். அரசியல்வாணர்கள், அதிகாரிகள், பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும் இந்திய அரசின் உயர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு என்ற, மாநில மக்களின் பொது நலனுக்கு எதிரான நோக்கத்தைக் கொண்டவர்கள் கூடத் தங்களைத் தமிழ்த் தேசியப் போராளிகளாக எண்ணிக் களத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களாக, ஆள்வினையாளர்களாக (நிர்வாகிகளாக) வருவதுதான் உயர்ந்த வாழ்க்கை என்ற பார்ப்பனியக் கோட்பாடு தாங்கள் அறியாமலேயே தங்களை ஆட்டிப் படைக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அனைவருக்கும் கல்வி - அனவருக்கும் வேலே வாய்ப்பு என்ற குறிக்கோள் அவர்கள் சிந்தனையைத் தொடவே இல்லை. அறிவியலாளர்களும் தொழில்நுட்பர்களும் தொழில்திறன் உழைப்பாளர்களும் தூய உடல் உழைப்பாளர்களும் தொழில்முனைவோரும் வாணிகர்களும்தாம் ஒரு தேசியத்தின் உண்மையான உடலும் சதையும் மூளையும் நரம்பும் என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன் ஈழம் உட்பட தமிழகத்துக்கு வெளியில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்றால் தமிழக மக்கள் முதலில் இந்திய அரசும் வல்லரசியமும் நம் மீது தொடுத்திருக்கும் பொருளியல் ஒடுக்குமுறைப் படையெடுப்புக்கு எதிராக ஓரணியில் ஒன்றிணைவதுதான் ஒரே வழி என்பதற்கு நேர் எதிராக தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஈழச் சிக்கலை முன் நிறுத்தித் தமிழகத் தேசியத்தின் உண்மையான சிக்கல்களிலிருந்து ஆர்வமும் ஊக்கமும் நெஞ்சுரமும் கொண்ட இளைய தலைமுறையினரின் கவனத்தைத் திசை திருப்புவது மாபெரும் பணப் பின்னணியுடன் நடைபெறுகிறது. இந்தக் காரணங்களால் மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தமிழகத் தேசிய அமைப்புகளின் தலைமைகள் மக்களிடமிருந்து அயற்பட்டு நிற்பதே தங்கள் போராட்ட உத்தி என்று திட்டமிட்டவர்கள் போல் செயற்படுகிறார்கள்.

            தேசிய உரிமைப் போராட்டத்தை ஒரு பண்பாட்டுப் போராட்டமாகப் பார்த்து பொருளியல் உரிமைப் போராட்டம் என்பது பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்குமான போராட்டம் என்ற  மாவோயியர்களின் விளக்கம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஒரு சாரரிடையில் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் மார்கசு நிலக்கிழமைப் பொருளியல் ஊழியைத் தாண்டி உருவாகும் முதலாளிய குமுகத்திலிருந்துதான் பொதுமைப் புரட்சி ஊழி தொடங்கும் என்று அறுதியிட்டுக் கூறியதை 20ஆம் நூற்றாண்டில் நிலக்கிழமைக் குமுக நிலையிலிருந்த உருசியா, சீனம் ஆகியவற்றில் நடத்திய பொதுமைப் புரட்சிகளின் தோல்வி மெய்ப்பித்துக் காட்டியுள்ளது. இன்று நிலக்கிழமைக் குமுக இயல்புகளில் முகாமையான ஒன்றான சாதிச் சண்டைகளால் சிதறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை முதலாளியக் கட்டத்தினுள் இட்டுச் சென்ற பின்னர்தான் இங்கு பாட்டாளியப் புரட்சியைப் பற்றிச் சிந்திக்க முடியும். முதலாளியக் கட்டத்தினுள் செல்ல வேண்டுமாயின் இங்கு தேசிய முதலாளியப் புரட்சி நடைபெறுவது இன்றியமையாதது. அது நிகழ்ந்துவிடாமல், முதலாளியத்துக்கு இன்றியமையாததாகிய மூலதனத் திரட்சியைக் கருவறுக்கும் வருமான வரியை ஒழிப்பது இன்றியமையாதது.

            உலகில் வெற்றி பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் அங்கு முதலாளியம் வேரூன்றிய பின்னர்தான் உருவாயின. எடுத்துக்காட்டு: சோவியத் உருசியாவினுள் அடைபட்டுக் கிடந்த தேசியங்கள். பொதுமைச் செயல்திட்டம் என்ற பெயரில் நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் சுருட்டிய அந்தந்த தேசியத்துக்கு உள்பட்ட பொதுமைக் கட்சியினர், அதிகாரிகளின் பணத்திரட்சிதான் அங்குள்ள தேசியப் போராட்டத்துக்கு உரமூட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையிலும் நாம் வருமான வரியை ஒழித்தாக வேண்டியவர்களாக உள்ளோம்.

பொதுமைப் புரட்சி நடைபெறுகிறதோ இல்லையோ இன்று உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் இன்றி வெளிநாடுகளை நோக்கித் தமிழக மக்கள் ஓடுவதும் படிப்பென்றால் வெளிநாட்டில் ஒரு வேலைக்கு என்றும் படைப்பென்றால் ஏற்றுமதிக்கு என்றும் தாய்நாட்டையும் தாய்நாட்டு மக்களையும் மறந்து தாய்மொழியை இவற்றுக்குப் பயன்படாத ஒன்று என்று பழித்துப் புறக்கணித்து ஓடுவதற்கு வழி செய்யும் உலகளாவுதலையும் உள்நாட்டுப் பணமதிப்பை அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையையும் முடுவுக்குக் கொண்டுவரும் இயக்கத்தின் தொடக்கப் புள்ளி என்ற வகையிலும் வருமான வரி ஒழிப்பு இன்று தவிர்க்க முடியா வரலாற்றுத் தேவையாகிவிட்டது.   

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் வல்லரசியர்களுக்கு விற்க முனைந்து செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகள், அதிகாரிகள், பனியா – பார்சி கும்பலின் கொடுமைகளுக்கு ஆளாகி நாள்தோறும் புதுப்புது வடிவச் சுரண்டலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்கள் அல்லலுறும் இன்றைய நிலையில் இந்தக் கொடுமைகளுக்கு ஆணிவேர் என்று சொல்லத்தக்க வருமான வரி என்ற நஞ்சைப் பற்றிய உண்மைகளை தமிழக மக்களுக்கு, குறிப்பாக தமிழ்த் தேசியப் போராளிகளுக்கு எடுத்துரைப்பதில் மனநிறைவடைகிறேன். அதுவும் மதுரை வட்டாரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையில் நான் வேர் கொள்வதற்கு நீரூற்றிய தோழர் செல்வரசு அவர்களின் இழப்பு என்ற மீற இயலாத் துயரத்தின் நினைவாக இதனைக் காணிக்கையாக்குவதன் மூலம் என் மனத்துயரை ஆற்ற முயல்கிறேன்.
தோழமையுடன்
திருமங்கலம்(மதுரை மாவ.)                                                                                                             
29 - 07 - 2013                                                                                                                  
                                                                                                                                    குமரிமைந்தன்
1
            இந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம்தான் தாராளமாக்கலின் விளைவு என்றால் அத்தகைய தாராளமாக்கலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

            மக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதும் வருமான வரியாகும். பொருளியலைத் தாராளமாக்குவது பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான கீழ்வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/- ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ் வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந் நிலையில் 1993-91ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் கீழ்வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க  பேரவைக் கட்சி சார் தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். இந்த ஆண்டும் இக் கோரிக்கை தொடர்ந்தது. ஆனால் நம்’ பண அமைச்சர் வருமான வரி வரம்பில்  மாற்றமேதும் செய்யவேயில்லை. ஆனால் மேலே கூறப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை ஒரு மாநில ஆளுநர் பதவியைக் கொடுத்து களத்திலிருந்து அகற்றினர் என்ற உண்மை வருமான வரி என்பதனை இந்திய ஆளும் கூட்டம் தம் நிலைப்புக்கு எவ்வளவு இன்றியமையாததாகக் கருதுகிறது என்பதற்கான ஐயந்திரிபற்ற சான்று. 

            இந் நிலையில், இந்த வருமான வரி தேவைதானா? இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் குமுகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை? வருமான வரி தொடரத்தான் வேண்டுமா? அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

            நாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அப்படிக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்பட்டு ஏற்றுமதியாகும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

            1) ஆங்கிலராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு நிகர்மை(சோசலிச), பொதுமைக் கட்சியினர் ஒரு முற்போக்குச் சாயத்தைப் பூசிய பின்னர்தான் கெடுபிடிகள்  தோன்றின. 1974இல் இந்திரா “நெருக்கடி நிலை” அறிவித்த பின்னர் அதற்கெதிராக உருவான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அதற்கு ஒத்துழைப்பு அளித்த பணம் படைத்த அரசியல்வாணர்கள் சிலரையும் இதழ் முதலாளிகள் சிலரையும் ஒடுக்குவதற்கென்றே வருமானத்தில் 97.5 சதவீதம் வரை உம்பர்(சூப்பர்) வரி விதிக்கும் கொடுமை அரங்கேறியது. ஆனால் இக் காலகட்டத்தில்தான் எங்கோ கிடந்த திருபாய் அம்பானி திடீரென்று 5000 கோடி உரூபாய்கள் சொத்துக்களுடன் முளைத்தெழுந்த இறும்பூது(அற்புதம்)ம் அரங்கேறியது என்பது குறிப்படத்தக்கது.  இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலியும் மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர்? எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம்  ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கும் நிகழ்முறையும் தொடங்கியது.

            2) தனிமனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் ஆதாயம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம்தான். ஆனால் அவ்வாறு திரளுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், அதனால் உருவாகும் நுகர்வு உயர்வு வடிவிலான வாழ்க்கைத்தர உயர்வு, அதன் விளைவான பணப்புழக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் தொழில் வளர்ச்சி என்ற ஓர் ஆக்க வழிச் சுழல் உருவாகி நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்கை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைக்கிறது.

            3) இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா? அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கிக் குமுகத்தின் அடித்தளம் வரை ஊடுருவிவிட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ர் உலகப் பொருளியல் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.

            4) வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட, ஏறக்குறைய அனைவருமே பனியா – பார்சி – வல்லரசியம் சார்ந்தவர்களாகிய முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஒரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
அ. டாட்டா நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அணிகலன்(ஆபரணம்) துறையில் நுழைந்தது. இவர்கள் எதிர்பார்த்த ஓட்டம் இல்லை. எனவே குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதிலும் பலனில்லை போலும்.  இது இந்தியா முழுவதும் நிகழ்ந்திருக்கும் என்றும் தோன்றுகிறது. எனவே அடுத்த ஆண்டு வரவு – செலவுத்தத் திட்ட அறிக்கையில் டாட்டா போன்ற வணிக அடையாளம் கொண்ட நிறுவன நகைகளுக்கு விளைப்பு(உற்பத்தி) வரியிலிருந்து விலக்கணித்தனர். இந்தியா முழுவதும் நகைத்துறையினரிடம் எழுந்த கொந்தளிப்பால் இப்போது அந்தச் சலுகையை விலக்கிக்கொண்டுள்ளனர்.

ஆ. பனியாக்கள் விளைத்த நிர்மா என்ற சவர்க்கார(சோப்பு) விற்பனை கொடிகட்டிப் பறந்த வேளையில் சில உள்ளூர்ச் சரக்குகள் அதன் சந்தையைக் கைப்பற்றிக்கொண்டிருந்தன. அப்போது தமிழ்நாட்டு சவர்க்காரத் தொழில் சார்ந்தவர்கள் மீது தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு கோடி உரூபாய்களை அள்ளிச் சென்றனர் எனபது தாளிகை(பத்திரிகை)ச் செய்தி. ஆனால் “நிர்மா” மீளவில்லை என்பது வேறு கதை.

இ. நரமசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் பனியாக்கள் பெருமளவில் அசையாச் சொத்து(வீடு – மனை)த் துறையில் கால் வைத்தனர். அவர்களுக்காகவே நரசிம்மராவ் அரசு நகர்ப்புற நிலவரம்புச் சட்டத்தை மீளப்பெற்றுக்கொண்டது.

  
      ().அப்போது நடுவரசில் பண அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பொறுப்பிலிருந்த இந்திய ஏம(ரிசர்வு) வங்கி தமிழகத்தில் அப்போது நன்முறையில் செயற்பட்டுவந்த 36 பண நிறுவனங்கள் வலுவிழந்த நிலையில் உள்ளன என்று தாளிகையில் விளம்பரமே செய்தது. அடுத்த நாளே அவற்றில் முதலீடு செய்த அனைவரும் வாயில்களில் வரிசையில் நின்றனர் நங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்காக. உலகில் எந்த ஒரு வங்கிக்கும் இத்தகைய ஒரு சூழலில் என்ன நேரும்? அனைத்தும் வீழ்ந்தன.

      ().மேற்கூறப்பட்ட பண நிறுவனங்கள் அப்போது நல்ல ஆதாயம் ஈட்டத் தொடங்கியிருந்த அசையாச் சொத்தான மனைப்பிரிவு வாணிகத்தை நம்பியே முதலீட்டார்களைக் கவரும் நல்ல வட்டியை முதலீட்டார்களுக்கு உறுதியளித்திருந்தன. ஆனால் பரவலாக யாருக்கும் தெரியாத ஒரு நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கியது. இந்த அசையாச் சொத்து வாணிக நிறுவனங்களில் புகுந்து அவர்களிடம் மனைகள் வாங்க முன்பணம் கொடுத்திருப்போரின் செய்திகளைத் திரட்டி அவர்கள் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்புறம் யார் அந்தத் திசையில் காலெடுத்து வைப்பர்? சென்னையில் நெல்லையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தந்த செய்தி இது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் சென்னையில் கட்டுமானப் பணிகள் நிலைகுத்தி நிற்பதாக அவர் கூறினார்.

      (). நெல்லையில் கந்துவட்டித் தொழில் மூலம் பேரளவில் பணம் ஈட்டிய ஒருவர் தன் சாதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர் பொறுப்பில் சென்னையில் கட்டுமானப் பணியில் காலெடுத்து வைத்தார். நெல்லையில் அவர் வீட்டிலும் அந்தப் பொறியாளரின் வீடு, அலுவலகங்களிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் “தேடுதல்” வேட்டை நடந்தது. அண்ணன் பெட்டியைக் கட்டி நெல்லைக்கு மீண்டார். இப்போது ஒரு திரையரங்க வளாகத்தை அமைத்துக்கொண்டு வழக்கமான வட்டித் தொழிலையும் செய்து வருகிறார்.

      (). மதுரையில் பரிசுச் சீட்டு நடத்திப் பெரும் பணம் ஈட்டிய கே.ஏ.எசு.சேகர் என்பவர் ஒரு கட்டத்தில் கட்டுமானத் தொழிலில் காலடி எடுத்துவைத்தார். பரிசுச் சீட்டுத் தொழிலில் பல வகையான முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த எந்தச் சூழலிலும் கண்டுகொள்ளாமல் இதுவரை இருந்த மாநில, நடு அரசுகளின் விற்பனை வரி, வருமான வரித் துறைகள் அவர் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. தாங்க முடியாமல் அந்த இளம் தொழில் முனைவர் நெஞ்சு வெடித்து இறந்த அவலம் எளிதில் மறக்க முடியாதது.

            இப்படி நாடு முழுவதும் பனியாக்களின் முற்றுரிமைக்காக கட்டுமானத் துறையில் மட்டும் நசுக்கப்பட்ட முனைவுகள் எத்தனையோ? நெஞ்சு வெடித்து மாண்டவர்கள் எத்தனை பேரோ?

                  ().தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த “ஜீவி” எனப்படும் வெங்கடேசுவரன், குஞ்சுமோன் ஆகியோரின் திடீர்ச் சாவுகள்தாம் மறக்கத்தக்கனவா?
           
            5) வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனது நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமேயாகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்?

            இன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத் தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, நெஞ்சக நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணங்களாகும். தன் தலை நரைக்காமைக்கு கழகப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று. இந்த வகையில் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

அ.  நான் நெல்லையில் கட்டுமானத்துறையில் பணியாற்றிய போது எனக்கு அறிமுகமான ஒரு வாணிகர் முகம்மதியரான இன்னொரு வாணிகரின் கட்டடத்தில் சில பணிகள் செய்வது தொடர்பாகத் தன் கடை ஊழியருடன் என்னை அவரிடம் விடுத்தார். என்னுடன் வந்த ஊழியர் என்னை அறிமுகம் செய்வதில் சிறிது தடுமாறினார். நான் விளக்கிச் சொன்னேன். அவர், என் உடையையும் தோற்றத்தையும் அந்த ஊழியர் தடுமாறியதையும் கண்டு நான் வரித்துறையைச் சேர்ந்தவனோ என்று நடுங்கிப் போய் விட்டதாகவும் நெஞ்சு இன்னும் படபடப்பதாகவும் கூறினார். நாள் முழுவதும் இவர்களை நினைத்து மன அமைதி குலைந்து வாழ வேண்டியிருப்பதாகவும் அதனால் தனக்கு நெஞ்சாங்குலை(இருதய) நோயும் நீரிழிவும்(சர்க்கரை வியாதி) தாக்கியுள்ளதாகவும் மனம் நொந்து கூறினார்.

ஆ. அதே நெல்லையில் லாலா சத்திரம் முக்கு எனுமிடத்தில் சதன் அங்காடி என்ற பெயரில் தேநீர்க் கடையோடு இணைந்த பல்பொருள் அங்காடி ஒன்றை வெளியூர்க்காரர் ஒருவர் நடத்திவந்தார். ஒரு தேநீர்க் கடையில் தேநீர் போடுபவராக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் என்று அவரைப் பற்றிக் கூறினர். ஒரு நாள் அவர் வீட்டிலும் கடையிலும் ஒரே நேரத்தில் “வேட்டை” நடத்தினர் வருமான வரித்துறையினர். ஆடிப்போய்விட்டார் நண்பர். நெஞ்சகத் தாக்குதலுக்கு உள்ளானார். போதுமடா சாமி வாணிகம் என்று தன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்குக் குடும்பத்துடன் வண்டியேறிவிட்டார் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த அவர்.
           
இவை தனிப்பட்ட முறையில் தனக்கு அறிமுகமான தனியாள்களுக்கு நடந்த கொடும் பட்டறிவுகள் பற்றிய ஒரு தனி மனிதன் பதிவுகள். ஒட்டுமொத்த தமிழகத்திலும் மொத்த இந்தியாவிலும் தொழில் வாணிகத் துறைகளில் ஈடுபட்டிருப்போரில் எத்தனை எத்தனை இலக்கம் பேர் எத்தனை எத்தனை மன அழுத்தங்களாலும் நாட்பட்ட நோய்களாலும் இரக்கமற்ற இந்த வேட்டை நாய்களால் அலைக்கழிப்புக்கு ஆளாகி இருப்பார்கஎள் என்பதை எண்ணிப்பாருங்கள்.  

            6) நடு அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டிவைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்று:

ஒப்பில்லா நடிகர் என்று அனைவரும் போற்றுகிற சிவாசி கணேசன், தான் திரையுலகில் காலெடுத்து வைத்த காலத்தில் கட்சிப் பரப்பலுக்குப் பேருதவியாய் இருப்பார் என்று அத் துறையில் தன்னை இறக்கி உதவிய தி.மு.க.வின் அன்றைய “பகுத்தறிவு”க் கொள்கைகள் தன் பன்முக வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதை உணர்ந்து திருப்பதி சென்று மொட்டை போட்டு சிக்கலை உருவாக்கி வெளியேற்றப்பட்டாரே அன்றி வேறெந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர் மீது வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டை நடத்திய போதுதான் பணம் ஈட்டுவதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பது அவருக்குத் தெரிந்தது. கர்மவீரர் என்றும் கறைபடாத அரசியலாளர் என்றும் பெருந்தலைவர் என்றும் பலரும் போற்றுகிற காமராசரிடம் அப்போது அவரைக் கைகாட்டி விட்டனர். அவ்வாறுதான் அவரது பேரவைக் கட்சி நுழைவு நடைபெற்றது என்பது வரலாறு. இவ் வகையில் ஆண்ட கட்சிப் பரப்பலுக்கென்று தமிழ்த் திரை உலகின் உச்சியில் இருந்த ஒரு நடிகரை வருமான வரித்துறையின் மிரட்டலால் பெற முடிந்தது.

அது மட்டுமல்ல அவர் தம்பி என்று குறிப்பிட்ட இராசீவ் காந்தி(இந்தியாவை ஆள்வதற்கென்றே “ஆண்டவன்” படைத்துள்ள குடும்பத்தின் இளவரச“ரை”த் தம்பி என்று அழைக்க எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?) தன்னை இழிவு படுத்தியது பொறுக்காமல் புதிய ஒரு கட்சியை(தாயக மறுலர்ச்சிக் கழகம்?) உருவாக்கிய போது அவர் வெளியிட்ட அறிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தனது அனைத்துப் பட உரிமைகளையும் விற்று வருமான வரிப் பாக்கிகள் எதுவும் இல்லாமல் அடைத்துவிட்டுத்தான் புதுக் கட்சியைத் தொடங்கியதாகக் கூறியதுதான் அந்த அறிக்கை. இனி வருமான வரித்துறையைக் கொண்டு எந்த ஆளும் கட்சியும் தன்னை மிரட்ட முடியாது என்று ஆளுவோருக்கு கிட்டத்தட்ட நேரடியாக விடுத்த அறைகூவலாகும் இது.

ஆளும் கட்சிகள் பிற கட்சிகளை, குறிப்பாக மாநிலக் கட்சிகளை வருமான வரித்துறையைக் கொண்டு எவ்வாறு மிரட்டுகிறார்கள் என்பதற்கு ஓர் எதிர்மறை உத்தியைக் கையாண்டு வரலாற்றில் பதிந்த ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு இது. இன்று நடுவண் உளவு வாரியத்தை (சி.பி.ஐ.)யும் வருமான வரித்துறையையும் கொண்டு நடுவரசு மாநில ஆட்சியாளர்களை மிரட்டுவதாக முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டுவது வெளிப்படையான சான்று. அவரும் அவருடைய கட்சியின் ஆட்சியும் ஊழிலில் திளைப்பது உலகறிந்த உண்மை என்பதால் அது மக்கள் நடுவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.       

            ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது அவர்களை வெறுமே அச்சுறுத்தி அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். இதற்கும் வருமான வரித்துறை பயன்படுகிறது. இதற்கு வெளிப்படையான ஒரு சான்று சுக்ராம் நேர்வாகும்.

   வரம்பில்லாமல் பணம் கொட்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது வருமானத்துக்கு மீறி 53 கோடி உரூபாய்கள் அளவில் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை நடவடிக்கையில் இறங்கியது. இந் நிலையில் அவரது கட்சியுடன் பாரதீய சனதா கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. அதன் பின் வருமான வரித்துறை வருவாய்க்கு மிஞ்சிய கள்ளப் பணம் 53 கோடி உரூபாயை கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று விளக்கம் கொடுத்து அதற்கு வரியாக 17 கோடி உரூபாய்களைப் பிடித்து மீதி 36 கோடியை நல்ல பணமாக ஆக்கித் தந்தது. கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்கும் ஒரு நேர்வல்ல இது; சிறை, சொத்து பறிப்பு போன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டிய ஊழல்கள், முறைகேடுகள், கொலை, கொள்ளை போன்ற, குற்றச் செயல்களின் மூலம் ஈட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஒரு நேர்வாகும். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் மனதில் நன்கு பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.   

            7) வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஒரே சிந்தனையே பெரும் சிந்தனையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம் வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர் குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.

            8) வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஒத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஒரு காவலர் தொலைபேசியில் நின்று கொள்வார். முன் வாசல் பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். படுக்கைகளைக் கிழிப்பதும் தளத்தைத் தோண்டிப் பார்ப்பதும் கூட “இயல்பான” தேடுதல் உத்திகள். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். தூத்துக்குடியில் இத்தகைய ஒரு “தேடுதலின்” போது கிடைத்த செல்வம் எப்படிக் கிடைத்தது, மனைவி பரத்தமை செய்து ஈட்டியதா என்று வேட்டை நாய்கள் கேட்டதாகவும் இல்லத் தலைவி கூனிக் குறுகுமாறு வீட்டின் தலைமகன் “ஆம்” என்றதும் ஓர் 20 ஆண்டுகளுக்கு முந்திய செய்தி. இவ்வாறு நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. கணக்கில் வராத விலை மிகுந்த ஆடம்பரப் பொருள்களை வேட்டை நாய்கள் கணக்கில் காட்டாமலே எடுத்துக்கொள்ளும். இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர் மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.

            தேடுதல் வேட்டையின் இந்த வடிவம் இருண்ட காலம் எனப்படும் இடை நூற்றாண்டுகளில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.

            பகற்கொள்ளை, தீவட்டிக் கொள்ளைகளின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று நம் பொதுமைத் தோழர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயப் படிவத்தால் மக்கள் ஒதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம்தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் கொடுமை.

            தேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தை ஆழ்ந்து அலசினால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடி உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. தன் இரவு நகர் ஆய்வின் போது ஐயத்தின் அடிப்படையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான் என்பதற்காகத் தனி மனித உரிமைக்கு ஊறு செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி அதற்காகத் தன் கையையே வெட்டிக்கொண்ட பாண்டிய அரசனின் கதையில் வெளிப்படும் தனி மனித உரிமையை மதிக்கும் அரசனின் பண்பு ஓங்கி இருந்த நம் மண்ணில் அரசின் நடைமுறை வருமானத்துக்காக மக்களின் தனி மனித உரிமையைக் காலில் இட்டு மிதிக்கும் அதிகாரத்தை வழங்கும் ஒரு வரி விதிப்பு மக்களாட்சி நடப்பதாகக் கூறப்படும் இன்று தேவைதானா?

0 மறுமொழிகள்: