26.9.08

2008 ஆகத்து தமிழினி பற்றி

திரு. கரு.ஆறுமுகத்தமிழன் இன்னும் கற்காலத்தில் இருக்கிறார். இந்திய அரசியல் தலைவர்கள் உள்நாட்டுத் தொழில் முனைவோரை பணத்திற்காக எதிர்நோக்கிய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இந்திரா - இராசீவ் காலத்திலிருந்தே கட்சிக்குப் பணம் பெற இறக்குமதி, அதுவும் ஆயுத இறக்குமதியையும் அயல்நாட்டு ஒப்பந்தங்களையும்தான் சிறப்பாக நம்பியிருக்கிறார்கள். அம்பானிகளை இப்போதைக்கிப் பயன்படுத்திக் கொண்டனர். கையிருப்பும் சேரும் போது நேரு குடும்பத்தை எதிரணியால் எதில்கொள்ள முடியவில்லை. ″சக″ தமிழனின் குருதி நாளும் சிந்தப்படுவதைக் கண்டு கருணாநிதிக்குப் பொறுக்க முடியாமல் போய்விடும் என்ற அவருடைய கற்பனை மிகச் செழுமையானதுதான். அந்தக் கூட்டத்துக்குத் தமிழர்களை விற்றுத் திண்றுதான் பழக்கமே அன்றி வேறில்லை. ″சக″ தமிழர்கள் 400 பேர் குருதி சிந்தியும் வராத வருத்தம் புதிதாக எங்கிருந்து வரும்? மக்களுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சினால்தான் அவர்களுக்கு விடிவு. தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதில் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் நேரடிப் பட்டறிவு உண்டு.

பண வீக்கம் கட்டுரையில் பணவீக்கத்தைப் பற்றிய அடிப்படை சரியாகக் கூறப்படவில்லை. மக்களிடத்தில் மிகுதியாகப் புழங்கும் பணம் பண்டவிளைப்பு, பணிகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்குத் திருப்பிவிடப்பட்டால் பண்டங்கள், பணிகளின் நுகர்வு நோக்கிப் பாய்வது குறையும். விலைவாசி நஞ்சாக ஏறாது.

பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் கட்டுரை களத்தின் நடைமுறைகளுக்குப் பொருந்தவில்லை. 31-12-2006 வரையுள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. கணக்கு எடுக்கப்பட்ட நாளில் கடனாளி செலுத்தியது போக நிலுவையில் நின்ற தொகை மட்டும் தள்ளுபடியானது. 9/2006 இல் பெற்ற கடனுக்கு 1/2008 வரை நான் கட்டிய தொகை போக எஞ்சியதற்கு தள்ளுபடி கிடைத்தது. அரசின் அறிக்கைகளில் உள்ள குளறுபடிகள் அப்படியே கட்டுரையில் இடம் பெற்றுவிட்டன.

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளில் முதலாவது இன்று ஆளுவோர் தூக்கிப்பிடிக்கும் கோடுபாடுகளின் அடிப்படையில் பணவீக்கத்தைப் பேசுகிறது. அதே போல் இரண்டாமவர் கட்டுரை உழவனுக்கு ஆட்சியாளர் வைத்துள்ள தீர்வுகளிலேயே ஒட்டுப்போட முயல்கிறது. அந்தந்தச் சிக்கல்களின் அடி ஆழங்களில் செல்வது என்ற சிந்தனை வட்டத்திற்கு மிகத் தொலைவில் இருவரும் நிற்கின்றனர்.

பரிதிமாற் கலைஞர் உண்மையில் ஒரு பிறவி மேதை என்பது அ.க.பெருமாளின் கட்டுரையைப் படித்த பின்தான் தெரியவருகிறது. அலக்சாண்டர், ஏசு, விவேகானந்தர், கணிதமேதை இராமானுசம் போன்று குறுகிய வாழ்நாளில் மலைப்பூட்டும் அருஞ்செயல்களை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் அனைவரின் அகவையும் இறக்கும் போது கிட்டத்தட்ட 32. கட்டுரையின் இறுதி மேற்கோள் சிறப்பு. அ.கா பெருமாளுக்குப் பாராட்டுகள்.

இந்துவைப் பற்றிய அமலா சத்தியசீலனின் கொதிப்பு புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அணுவிசை ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கான எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டிருந்தால் அவரது நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடங்கை வகையினர் அதில் மனத்தூய்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது இறுதியில்தானே தெரிந்தது?

உலக வணிக அமைவனம் - காத்திருக்கும் கழுகு. ″தோகா″ என்று எழுதினால் கிடைக்கும் அதே ஒலிக்கு ஏன் ஒரு கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒற்றெழுத்து முன்வராமல் இடையிலும் கடையிலும் தனித்து வரும் உயிர்வல்லெழுத்து மென்மையாகவே ஒலிக்கும். காகம், தக, வசம், பேசு, படம், தவிடு, கதவு, ஓது, கூபம், கோபி, மறம், கூறு. வல்லரசு நாடுகள் வலியுறுத்துகின்றன என்பதால் அதை மறுக்காமல் ஏன் ஏழைநாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.

உள்ளூர் மடம் ராச சுந்தரராசனின் மாறுபட்ட படைப்பு. பண்டை மரபுகளை நினைவூட்டுவது சிறப்பு.

சிறுகதை ஈழத்து நடையில் மனதை உருக்குவதாக இருந்தது ஈழத்தில் அந்தக் காலகட்டத்தில் (எண்பதுகளுக்கு முன்பே) இப்படியொரு வறுமையா?

″அட்டம்″ நன்றாக வந்திருக்கிறது அட்டம் என்றால் பொருட்கள் அடுக்கி வைக்கும் Rackக்குக் கான குமரிமாவட்ட வழக்குச் சொல். சட்டம்(ஆறு), சத்தம்(ஏழு) அட்டம் (எட்டு) என்பவை முறையே கதவு நிலை, ஒலியின் ஏழு பிரிவுகள், அட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திய குறியீட்டு வழக்கு.

ஏகம் - ஒன்றையே நினைப்பது - ஏக்கம் – ஒன்று

துவைதம் – துமித்தல் – பிரித்தல் – இரண்டு

த்ரிதம் - திரி – முப்புரி அறாது, சொலவடை – மூன்று

சதுர(ம்) – நான்கு பக்கங்கள் உள்ள வடிவம் – சதுரம் - நான்கு

பஞ்ச(ம்) - ஐந்தாம் திணை – பாலை – பஞ்சம் – ஐந்து

சஷ்ட(ம்) – பழங்காலக் கதவு நிலை - சட்டம் – ஆறு (சட்டம் நிலைக் கல் படியின் மீது ஊன்றப்படும்.)

சப்த(ம்) – ஏழாக ஒலிப்பது – ஏழிசை – சத்தம் – ஏழு

அஷ்ட(ம்) – பொருட்களை அடுக்கிவைக்கும் பல்கையால் ஆன தளவாடம் - அட்டம் – எட்டு

நவம், தசம் – ஒன்று முதல் பத்து வரை மட்டும் எண்ணிக்கை அறிவு வளர்ச்சிக் கட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஒன்று என்று தொடங்குவதற்கு மாறாக இலாபம் என்று இன்று வாணிகர்கள் தொடங்குவது போல் அன்று விளைச்சலில் பத்திலொரு பங்காகிய உழவனுக்குரிய தசக்கூலியை முதலில் வைத்து பத்தாவதாகப் பத்தை வைத்திருக்கிறார்கள். உழவன் கூலியை இறுதியில் அளந்தால் பழைய பத்தைப் பழைய பத்து என்று பொருள்படும் தொல் பத்து → தொன்பது → ஒன்பது என்றானது. இது பழையது எனப் பொருள்படும் தொண்டு என்ற சொல்லாலும் இதைக் குறிப்பிடுவர். இதற்கு எதிர்ச் சொல்லான புதுமை என்ற பொருள்தரும் நவம் என்ற சொல்லை சமற்கிருதம் என்ற செயற்கை மொழியை உருவாக்கியோர் வடித்திருக்கின்றனர். எனவே பத்து தசமாயிற்று.

அட்டமி என்பதற்கு பிரதமை, துவிதை, திரிதியை, சதுர்த்தி என்றிருக்க வேண்டும். ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பவை முறையே 11, 12, 13, 14 ஆகியவற்றைக் குறிக்கும். அட்டமி அன்று கடலில் ஏற்றவற்றம் மிகக் குறைவாக இருக்கும். அன்று கடற்செலவுக்கு மிக ஏற்ற நாள். கடலுக்கு வெளியிலும் அவ்வாறுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்று கதிர், நிலவு ஆகியவை புவியுடன் ஒப்பில் செங்கோணத்தில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசைகளின் நிகரவிளைவு (Equivalency) மிகக் குறைவாகவே இருக்கும். கடலோடிகளை இழிவு படுத்துவதற்காகவே அந்நாளைத் தீய நாளாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக 8 ஒலிகள் உள்ள இசையை (ச, ரி, க, ம, ப, த, நி, ச – Octaves) ஏழாகவும், எட்டாகிய மெய்ப்பாட்டை நவரசம் என்றும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக ஆய்ந்தால் பல துறைகளிலும் இதனுடைய ஊடுருவலைத் தடம்பிடிக்க முடியும்.

திசைகளில் கன்னித் திசை(மூலை) என்பதை அண்மைக் காலமாக நிருதி என்று கூறத்தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில் திரட்டித் தந்துள்ள செய்திகள் மிகப் பயனுள்ளவை. நம் மரபு இலக்கியங்களையும் தொன்மங்களையும் நோக்கித் திரும்புமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் சரியானது.

செல்வ புவியரசனின் கொதிப்பு ஞாயமானது. சீவாவைப் பற்றிய கணிப்பு மிகத் துல்லியமானது. கருணாநிதியையும் செயகாந்தனையும் குறித்து அவர்கள் கூறுகின்ற கோட்பாடுகளுக்குப் பொருத்தமற்ற வெளிப்பாடுகள் அவர்களது இலக்கியப் படைப்புகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பே.

பாதசாரியின் தடப்பதிவும் சிறப்பு

பணக்கார நாட்டு மக்கள் ஏன் செல்ல உயிரிகளை வளர்க்கிறார்கள் என்பதற்கு சுற்றம் சூழ... ஒரு நல்ல விளக்கம். வீட்டில் தனித்திருக்கும் என் மனைவி கோழி வளர்ப்பதை நான் ஊக்குகிறேன்.

″துயர நகரம்″, நகசாகி, இரோசிமா, போல் போபாலையும் எவ்வாறு ஆய்வுக் களமாக அமெரிக்கா கையாண்டது என்பதற்கான ஆவணம். சப்பான் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் துயரங்களை ஆற்ற முன்வந்தனர். நம்மவர்கள் ″ஆய்வாளர்″களுக்குத் துணைநின்றனர்.

தான், தன் குடும்பம் என்பவற்றுக்காக எதையும் செய்யத் தயங்காத இராமதாசின் செயல்கள் காட்டுவிலங்காண்டித்தனமானவை. இவர் போன்றோரது செயல்களைத் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் உருப்படாது. கண்மணிக்கு செயமோகனின் அறிவுரை பாராட்டத்தக்கது.

பாமயனின் கட்டுரை எப்போதுமே அரைக்கிணறு தாண்டுவதுதான். Critical Realism.

யானையை அழித்த பிரான்(அசுரனை என்பது தேவையில்லை) ஒரு பெரும் உண்மையை வெளிப்படுத்துகிறது. யானைத் தோல் போர்த்து என்று கொற்றவையைத்தான் சிலம்பு போற்றுகிறது. அவளது அருஞ்செயல்களைச் சிவனுக்கு ஏற்றியிருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் தமிழினியின் களம் விரிவடைந்துள்ளது. பாராட்டுகள்.

0 மறுமொழிகள்: