13.11.05

ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து -- ஒரு குறிப்பு

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான 'ஐந்தாவது மருந்து' என்ற சிறுகதையினை இணையத்தில் இருந்து நண்பர் ஆபிரகாம் லிங்கன் மூலம் பெற்று படித்தேன். குமரிக்கண்டம் பற்றிய என் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு உள்வாங்கி அவற்றைக் கதையில் வெளிப்படுத்தியுள்ள பாங்கினை கண்டு நான் பெருமையும் பெருமகிழ்வும் எய்துகிறேன். உங்களுக்கு என் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தமருத்துவம் என்னும் தமிழ் மருத்துவம் முதலில் நிலைத்திணைகள் [தாவரம். சிறுகதையின்படி அசீவம்] விலங்குகள் [சீவம்] பிறகு பொன்மங்கள் [ரசாயனங்கள்] என்ற வரிசையில் முன்னேறியது என்ற கூற்று சரியாக இருக்கலாம். வேறு வரிசையிலும் இருக்கலாம். உங்கள் கதையை ஒரு தொடக்கநிலை கருத்தாகக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அணுவியல் மருத்துவம் [ரசக்கூட்டு - பொன்மங்களின் அணுவியல் கூட்டை மாற்றுதல் பொன்மாற்று [பம்மாத்து!] மிகப்பழைமையான ஒர் அறிவியல் ஆய்வாகவே தெரிகிறது.

நோய்களை உண்டாக்கும் நுண்மங்களும் அவற்றுக்கு எதிராக மனிதன் தரும் மருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு முன்னேறுகின்றன என்பது உண்மையே. நோய்களும் மருந்துகளும் மட்டுமல்ல இயற்கையில் உள்ள அனைத்து கூறுகளிலுமே இப்படி எதிரிணைகளின் போராட்டம் இடைவிடாது நடைபெறுகிறது என்பது மார்க்ஸிய இயங்கியலாகும். எனவே கதையில் தளவாய் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாகக் காட்டுவது உங்களிடம் நான் பொதுவாகக் கண்ணுறும் ஓர் இயலாமை கண்ணோட்டடத்தின் விளைவாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் கதையில் சரியாக குறிப்பிடுவதுபோல மனிதன் என்பவன் இயற்கைவிதிகள் எனப்படுவனவற்றை இயற்கைப்படைப்புகளே மீறி இயற்கை தன்னைப்பற்றி முழுமையாகத் தன்னுணர்வுடையதாக மாற்றிக் கொண்ட ஓர் அமைப்பு. அது எப்படியெல்லாம் தன்னாலும் சூழல்களாலும் உருவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றதோ அது போலவே இன்னும் வாழும்.

பால்வினை நோய்களுக்கு முதன்மைக் காரணமாகிய தன்னினப் புணர்ச்சி நானறிந்தவரை வரலாற்றில் முதலில் பெண்களின் முற்றதிகாரத்தை எதிர்த்து ஆண்கள் பிரிந்துசென்று காடுகளுக்குள் தலைமறைவுக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் இருபாலரிடமும் உருவாகியிருக்கலாம். மோசே விடுவித்துச்சென்று பின்னர் யூத இனமாக வடிவெடுத்த எகிப்திய அடிமைகளிடம் அப்பால்வினை நோய்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் அவர் முகமதியர் சுன்னத் என்றழைக்கும் முந்தோல் அகற்றும் சடங்கைத் தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து மறவர்களில் இப்பழக்கம் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
எயிட்சு என்றழைக்கப்படும் தேய்வு நோயைப்பொறுத்தவரை எனக்குப் பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன. முதலில் பல்மருத்துவரைக்கூடத் தாக்கும் என்ற அளவுக்குக் கிலியூட்டப்பட்ட இந்நோய் இப்போது ஆணுறை அணிந்தால் போதும் என்ற அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நானறிந்தவரை பால்வினைநோய்கள் பிற உறுப்புகளின் தொடர்பால்கூட பரவமுடியும். குறிப்பாக வாய். இவ்வாறு ஆணுறை பெண்ணுறை மூலம் தடுத்துவிடலாம் என்ற செய்தியை பரப்புவதானது தவறான விளைவுகளை உருவாக்கும். ஆசிரியர்களே மாணவர்களிடம் இச்செய்தியைப் பரப்புகிறார்கள் என்பது மேலும் தவறானதாகும்.

எச் ஐ வி என்ற நுண்ணுயிரிக்கும் தேய்வுநோய்க்கும் தொடர்பில்லை என்ற வாதமானது இன்று ஒருதரப்பினரால் -- குறிப்பாக பிரெஞ்சு மருத்துவ ஆய்வாளர்களால் -- தொடக்ககாலம் தொட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த நுண்ணுயிரி உள்ளன என்ற அளவிலேயே இந்நோய்க்குரிய அறிகுறிகளுடன் அதை தொடர்புபடுத்தி நோயாளி காணத்தொடங்கிவிடுவான். அதன் பின் அவனால் அதன் தாக்குதலை தடுக்க இயலாது. இந்த அச்சத்தை பயன்படுத்தி அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தை பரப்புகைக்காக நம் நாடுகளுக்கு வெளியிடுகிறார்கள்.

நானறிந்தவரை இந்நோய்க்குரிய அறிகுறிகள் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளன. நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்துவீட்டு இளைஞர் ஒருவர் இனம்காண முடியாத ஒரு நோயால் சிறிது சிறிதாக மெலிந்து இறந்தார் அவருக்கு 'என்புருக்கி ' என்று மருத்துவர் சொன்னார்கள். அக்காலத்தில் நீரிழிவு உட்பட பல நோய்கள் அப்படி பொதுப்பேரில் சொல்லப்பட்டன. இவருடைய நோய் அதுவல்ல. அவரால் எவருக்கும் அந்நோய் பரவவில்லை. நம் நாட்டில் பல்லாயிரம் நோய்களைப்பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப்பற்றிய அறிவு மக்களிடையே இல்லை.'தமிழ்' மருத்துவர்களிடமும் இல்லை. எனவே எந்தெந்த நோய்கள் பழைமையானவை எவை இன்றைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மூலம் உருவானவை என்று வரையறுத்துக்கூறும் முறை இல்லை. ஆனால் மெத்தப்படித்தவர்களாக அறியப்படும் ஒரு சிறு தொழில் கூட்டத்தினரின் பல கூற்றுகளை நாம் மறுத்தாகவேண்டியுள்ளது.

(கடிதம் - திண்ணை டிசம்பர் 9, 2004.)

0 மறுமொழிகள்: