4.12.17

சாதியத்தின பண்பாட்டுச் சிக்கல் -

25. முதலாளியத்துள் நுழைவோம்! சாதியத்தை வெளியேற்றுவோம்!
சாதியமும் வருணமும் நிலக்கிழமைக் குமுகத்தின் இயல்புகள். இதை வரலாற்று நெடுகிலும் காணலாம். புரட்சிக்கு முந்திய பிரான்சும் ஒன்றாம் சார்லசுக்கு முந்திய இங்கிலாந்தும் 1852க்கு முந்திய சப்பானும் சாதிகளையும் வருணங்களையும் கொண்டிருந்தன என்பதும் புரட்சிக்குப் பின் உருவான முதலாளியப் புரட்சியால் பழைய குடியிருப்புகளை விட்டு முன்னாள் பண்ணையடிமைகளான பெரும்பான்மை மக்கள் பெயர்ந்து நகரங்களிலும் பெருந்தோட்டங்களிலும் உருவாகிக்கொண்டிருந்த முதலாளியத் தொழில்களைச் சுற்றியும் தோட்டங்களிலும் புதிய குடியிருப்புகளிலும் பழைய உறவுகளைக் கைவிட்டுத் தொழிலாளர்கள் என்ற ஒரே அடையாளத்துடன் ஒன்றுகலந்தன்னரென்பதையும் நாம் மேலே கண்டோம். வளரும் நாடுகளென தவறாகக் குறிப்பிடப்படும் வளர்ச்சி தடுக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில் நிலக்கிழமை மட்டுமல்ல அதற்கும் முந்திய விளைப்புமுறைகளிலும் குமுக உறவுகளிலும் தேங்கிக் கிடக்கும் நாட்டு மக்களிடையிலிருந்து சாதியம் மட்டுமல்ல மொழி, இன வழிப்பட்ட மக்களை அவர்கள் வாழும் நில அடிப்படையிலான தேசியங்களின் அடிப்படையில் அந்தந்த நிலத்ததுக்குரிய இயற்கை வளம் காலநிலைகளுக்கேற்ற அறிவியல் – தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தத்தம் பொருளியலை வளர்த்துக்கொள்ளும் உரிமைகளுக்காகப் போராடி முதலாளியத்தை வளர்க்க வேண்டும். இதற்காக நான் முன்வைக்கும் சில கருத்துகள்:

1. வருமான வரியை ஒழிக்க வேண்டும்.
2. தொழில்நுறுவனங்களுக்குக் வங்கிகள் கடன் வழங்கக் கூடாது. சேமிப்புக் கணக்குகள் பராமரித்தல், வீட்டுக்கடன், நகைக்கடன், வாடிக்கையாளர்களின் பண வரவு – செலவுகளைக் கையாள்தல் போன்றவற்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்போதிருக்கும் காப்பீட்டு நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் முகவர் முறையை ஒழித்து அத்துறையை வங்கிகளின் நேரடிப் பொறுப்பில் விட்டுவிடலாம். இந்தப் பணத்திலிருந்து அரசுக்குக் கடன் கொடுத்து, நிலவும் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் விகிதத்தில் வட்டி பெற வேபண்டும். முடிந்தால் உறுதியான பிணைகளுடன் தனியாருக்கும் கடன் கொடுக்கலாம். ஆனால் பிணைச் சொத்துகளை மதிப்பிடவும் விற்கவும் நம்பகமான கட்டமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.
3 இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 5 கோடிக்கு மேல் முதலீடு தேவைப்படும் தொழில் முனைவுகளுக்கு 51%க்குக் குறையாத மூலதனம் பங்குகள் மூலம் திரட்டப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டால் அவற்றை வாங்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் மூலதனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அவற்றை மறு விற்பனை செய்யும் போது கூடுதல் விலைக்கு விற்றால் பிற பங்குகளின் முக மதிப்பையும் அதற்குச் சமமாக உயர்த்த வேண்டும்.
4. மாவட்டத்துக்கு ஒரு அறிவியல் – தொழிலநுட்பக் காப்புரிமை அலுவலகம் வேண்டும். தொழில் தொடங்க இசைவு வழங்கும் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அளவில் வேண்டும்.
5. துண்டுதுண்டாகக் கிடக்கும் நிலங்களை ஒன்றிணைத்து கூட்டாண்மைப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். நில உடைமையாளர்களை நிலப்பரப்புகள், அவற்றின் தரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முதலிடுவோரின் தொகை அடிப்படையிலும் பங்கு முதலீட்டாளர்களாகக் கணக்கிட்டுப் பங்கு நிறுவனமாகப் பண்ணையை உருவாக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, நீர்வளம் - மண்வளத்துக்கேற்ற பயிர்களையிட்டு அவற்றை முடிந்த, பகுதிமுடிந்த பண்டங்களாக மேம்படுத்தி நிறுவனப் பெயரிட்ட பொட்டணங்களாக்கிச் சந்தைக்கு விட வேண்டும். 10 நூற்றுமேனி காடு வளர்க்க வேண்டும். மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்று உருவாக்கி அதில் முருங்கை, இலவு போன்ற மரங்களை நட்டு அது மழைநீரைப் பிடித்துவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தினுள் இறங்க வகை செய்ய வேண்டும். ஒரு சிறு குளமும் அமைக்க வேண்டும். எந்தப் பொருளையும் எரித்தழிக்கக் கூடாது, மறுசுழற்சி செய்ய வேண்டும்.. வேளாண்மைக்கு இடையூறு செய்யும் எலிகளையும் முயல்களையும் பிடித்து அவற்றின் இறைச்சியைச் சந்தைக்கு விட வேண்டும். மான் போன்றவற்றையும் காடுகளுக்கு உரிய வேலியிட்டு வளர்த்து இறைச்சியைச் சந்தைப்படுத்தலாம். தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பண்ணைகள் செயல்பட வேண்டும். பணியாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பண்ணையிலும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்ணைகள் இணைந்து மழலைப் பள்ளிகளை உருவக்க வேண்டும். இப்பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைத் தேவைக்கு ஏற்ப அமைக்க வேண்டும். மழலையிலிருந்து தொடங்கி பண்ணையின் சூழலில் இயற்கையைப் பார்த்து அறிவை வளர்த்துக்கொண்டே எழுத்தறிவைப் புகட்டும் கல்வி முறையை வகுக்க வேண்டும். குழந்தைகளின் அறிதிறன், ஆர்வங்கள், மனச்சாய்வு, ஆற்றல்கள், குறைபாடுகளை இனம் காணும் பயிற்சியுள்ள உளவியல் அறிந்தவர்களை மழலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளின் அகவைக்கேற்ப படிப்படியாக உடலுழைப்பில் பயிற்சி அளிக்க வேண்டும். எழுத்தறிவில் ஆர்வம் குறைந்த குழந்தைகளுக்கு உடலுழைப்புப் பயிற்சியில் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களுக்கு எப்போதாவது படிப்பில் நாட்டம் ஏற்பட்டால் அதை வழங்கவும் வழிவகை வேண்டும். நடுநிலைப் படிப்பு முடிந்ததும் உழைப்பு இணைந்த பகுதிநேரப் படிப்பைக் கையாள வேண்டும். அவ்வாறு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இடைநிறுத்தி குறிப்பிட்ட ஆண்டுகள் உடலுழைப்பிலீடுபட்டு தனக்கு ஆர்வமுள்ள படிப்பில் நுழைவுத்தேர்வெழுதி படிப்பைத் தொடரும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத் துறையாயிருந்தாலும் அத்துறையில் அடிப்படைத் தொழிலாளியாக நுழைந்துதான் படிப்படியாக படிப்பு → வேலை → நுழைவுத்தேர்வு → அடுத்த கட்டப் படிப்பு → வேலை என்றிவ்வாறு பட்டப்படிப்பு நோக்கி முன்னேற வேண்டும். மண்வெட்டியும் சுத்தியலும் பிடிக்கத் தெரியாத ஒருவன் பள்ளி இறுதித் தேர்வில் பங்கேற்கவோ அப்புறம் எழுத்தறிவு சார்ந்த எந்தப் படிப்பிலும் சேரவோ முடியாத நிலை வேண்டும். இதன் மூலம் நாட்டின் மனித வளத்தில் மிகப் பெரும்பான்மையும் வறுமையினாலும் ஊழலினாலும் செயலற்றுக்கிடக்க தகுதியில்லாதோர் உயர் படிப்புகளில் நுழைவதால் நாட்டுக்கு ஏற்படும் மனித வள வீண்டிப்பு முடிவுக்கு வரும். அது மட்டுமின்றி உடலுழைப்பு இழிவு எனும் நம் நெடுநாள் பண்பாட்டு நோய் குணமடைய இது ஒன்றே சிறந்த வழியுமாகும்.
வேளாண் பண்ணைகளை அடிப்படையாகக் கொண்ட சாலைகள், தொழிலகங்கள், நகரமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்று புதிய தமிழகம் உருவாக வேண்டும்.
இவ்வாறு சாதி – சமய அடிப்படையில் இனங்காணத்தக்க குடியிருப்புகளில் இன்று வாழும் மக்கள் அவற்றிலிருந்து வெளியேறி அடுக்குமாடிகளாய் அமைந்த புதிய குடியிருப்புகளில் குடியேற வேண்டும்.
6. அந்தந்த மாநிலத் தேவைகளை ஈடுசெய்யும் பயிர்களையும் மரங்களையும் மட்டும் மாநிலங்கள் வளர்க்க வேண்டும். நம் தேவைக்கு மேல் இருக்கும் தேயிலைத்தோட்டங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி நமக்குக் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
7. அவ்வாறே செய்பொருட்களைப் பொறுத்தும் அந்தந்த மாநிலத் தேவைகளை நிறைவேற்றும் தொழில்கள் தவிர பிற அனைத்தையும் உடனே மூட வேண்டும். இதனால் குறிப்பாக தேவையற்ற பண்டப் போக்குவரத்தால் இயற்கை வளங்கள் அழிவதும் சூழல்கேடுகளும் முடிவுக்கு வரும்.
சாலைகள், குளங்கள் அவற்றின் கரைகள், வாய்க்கால்கள், அவற்றின் கரைகள் முதலியவற்றை ஆண்டு முழுவதும் அழகுடனும் தூய்மையாகவும் பேணுதல், கழிவுகளை அகற்றி மறுசுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் பயனுக்குக் கொண்டுவருதல், முதியோரைப் பேணல் என்று நோக்கிய பக்கமெல்லாம் எல்லையற்ற வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. எனவே மேற்கூறிய மாற்றங்களால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமென்று அஞ்சத் தேவையில்லை.
8. சாதி அடிப்படையில் அமைந்த குலதெய்வக் கோயில்களைக் கைவிட்டு எந்த அடையாளமும் இல்லாத வழிபாட்டு மண்டபங்களில் எந்த ஓசையும் எழுப்பாமல் தான் விரும்பும் தெய்வத்தை மனதுக்குள் வழிபடும் முறையைப் புகுத்த வேண்டும். இந்த வழிபாட்டு மண்டபங்கள் நிலப்பரப்பு அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும். ஓரிடத்திலிருந்து வேறிடங்களுக்குப் பணிகள் நிமித்தமாகப் போவோர் தாம் செல்லுமிடங்களிலுள்ள மண்டபங்களைப் பயன்படுத்தலாம்.

9. திருமணங்கள் பதிவகங்களில்தான் நடைபெற வேண்டும். மண உறுதி(நிச்சயதார்த்தம்), மகப்பேறு, பெண் பூப்பெய்தல், குழந்தைகளுக்கு காதுகுத்தல் போன்ற விழாக்கள் தடைசெய்யப்பட வேண்டும்.
10. இறந்தோரை எரிப்பதை நடைமுறையாக்க வேண்டும். இறந்த பின் இரு வாரங்களுக்குள் விரும்புவோர் ஒரு நினைவேந்தல் நாள் கொண்டாடலாம். இவற்றில் மத அடிப்படையிலான எந்தச் சடங்குகளும் கூடாது.
11. எதற்காகவும் படிவங்களில் சாதி சமயம் மொழி பற்றிய கேள்விகள் இடம்பெறக்கூடாது. தமிழ்தான் கல்வி மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருக்கும். பிற மொழி பயில விரும்புவோருக்கு அம்மொழி கற்பிக்கப்படும். ஆனால் தமிழ்மொழியைக் கற்பது கட்டாயம்.
12. 01 – 11 – 1956இல் தமிழகம் அமைக்கப்பட்ட அன்று தமிழகத்துக்கு வெளியே வேரின்றி தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், அவர்கள் வழி வந்தோர், அவர்களை மணந்ததன் மூலம் இங்கு குடியோறியோறியோர் மட்டும் தமிழக முழுக்குடியுரிமை பெற்றோர் ஆவர். அவர்களுக்குத் தனியான குடிமக்கள் அட்டை வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் இங்கு நிலம், வீடு போன்ற அசையாச் சொத்து வைத்திருக்கவும் வாங்கவும் தொழில் தொடங்கவும் வாணிகம் செய்யவும் உரிமை உண்டு. வெளியிலிருந்து இங்கு கூலிவேலை செய்ய வருவோருக்குத் தனிக்குடியுரிமை அட்டை வழங்கப்படும். அவர்கள் அசையாச்சொத்து வாங்கவோ தொழில் வாணிகத் துறைகளில் ஈடுபடவோ முடியாது.
13. வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்படும். மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் ஊராட்சி முறையை அடிப்படை அலகுகளாகக் கொண்ட புதியதொரு மக்களாட்சி முறை கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட பொறுப்புகளுக்குரிய தேர்வுகளில் வெற்றி பெறும் முழுக்குடியுரிமை பெற்றோரிலிருந்து ஆள்வினையாளர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஊர்க்கூட்டங்களில் அவர்களது செயற்பாடுகள் திறனாயப்படும். ஆண்டுக்கொரு முறை ஊர்க்கூட்டத்தில் முடிந்த ஆண்டின் செயற்பாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்கள், வரவு – செலவுகள் குறித்த முன்னீடுகள் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். தமிழகத்தின் முழுக்குடியுரிமை பெற்றோர் மட்டும் இந்த நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். ஊர் என்ற ஆட்சி அலகுக்கு அடுத்ததாக சிறுவட்டம், வட்டம், மாவட்டம், மண்டலம், தமிழகம் என்ற ஆட்சியாளர்களுக்கு நிறுவப்படும் தனித்தனித் தகுதித் தேர்வுகள் ஒவ்வோர் ஊரிலும் நடத்தப்பட்டு அவற்றில் தேர்வானோர் அந்தந்த மட்டப் பதவிகளுக்கு நடைபெறும் குடவோலை முறைமூலம் தேர்வு செய்வப்படுவர். இவ்வாறு தேர்வாகும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும் அந்தந்தக் குழுக் கூட்டங்களில் தத்தம் ஊரின் நிலைப்பாடுகளை, தேவைகளை எடுத்துவைக்க வேண்டும். அதற்குரிய வரைவுகளை அந்தந்த ஊர்க்கூட்டங்கள் முடிவு செய்து வழங்கும். அங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகளை ஏற்பதா, மறுப்பதா அல்லது தேவை என்று கருதும் திருத்தங்கள் செய்வதா என்பதை ஊர்க்கூட்டத்தில் முடிவுசெய்து அடுத்த கூட்டத்தில் வாக்களித்து நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் தமக்குத் தேவை எனக் கருதும் மாற்றங்களை ஒட்டுமொத்த மாநில நலன்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.

3 அல்லது 5 ஆண்டுகளில் இந்த அரசியலமைப்புத் திட்டத்தின் பட்டறிவிலிருந்து தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
13. வரி விதிக்கும் அதிகாரம் ஊராட்சிகளின் ஒப்புதலுடன் மாநில ஆட்சியாளர்களுக்கு மட்டும் உண்டு. வரி தண்டும் அதிகாரத்தில் அடிப்படையானவை ஊராட்சிகளுக்கும் குறிப்பிட்ட சில மட்டும் மாநில அரசுக்கும் இருக்கும். இந்திய அரசுக்குக் குறிப்பிட்ட வரிகளை விதிக்கும் அதிகாரம் மட்டும் இருக்கும். தண்டும் அதிகாரம் எதுவும் இருக்காது.
14. பணம் அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் நடுவரசிடம் இருக்கும். ஊராட்சிகள் தங்கள் ஒவ்வோராண்டு வ – செ திட்டத்திலும் தங்கள் வரிவருவாய் போக புதிய திட்டங்களைச் செயற்படுட்ட கூடுதல் நிதி கேட்டால் அதனை வெளியிட்டு நடுவரசு வழங்க வேண்டும்.
❋ ❋ ❋

0 மறுமொழிகள்: