சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 2

பதிகம்

குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

5.ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு
அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
காண விட்புலம் போயது
இறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென

10.அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்
யானறி குவன் அது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்

15.நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்

20.மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்

25.பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்

30.கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி

35.நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய
பலர்புகழ் பத்தினி யாகும் இவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

40.கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ1 ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்

45.முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின்
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்

50.வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லென2க்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென

55.அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்

60.நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர்
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்

65.மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுந்தென

70.மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை

75.ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு

80.வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

85.வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

90.இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.

பொழிப்புரை:

அரசியல் வாழ்வைத் துறந்து திருக்குணவாயில் என்னும் கோட்டத்தில் தங்கியிருந்த, மேற்குத் திசை அரசனாகிய செங்குட்டுவன் எனும் சேர அரசனுக்கு இளங்கோவாகிய, அதாவது தம்பியாகிய அடிகளுக்கு மலையில் வாழும் குறவரெல்லாரும் திரண்டு சென்று பொன்போலும் பூவினை உடைய வேங்கை மரத்தின் நன்மை தரும் அடர்த்தியான நிழலில் ஒரு முலையை இழந்தவளாய் வந்து நின்ற ஓர் அழகிய பெருமை மிக்க பத்தினிக்காக தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது சுற்றத்தார் நெருங்கி வந்து அவளுடைய காதலுக்குரிய கணவனை அவளுக்குக் காட்டி அவளோடு அவர்கள் எமது கண் காண விண்னை நோக்கிச் சென்றது ஓர் இறும்பூதாக இருந்தது என்பதனை நீ அறிந்தருள்க என்றனர்.

அப்போது அவன் பக்கத்தில் இருந்த இனிய தமிழ்ப் புலவனாகிய சாத்தனார் இது குறித்த செய்திகளை நான் அறிவேன் என்று கூறத் தொடங்கினான். ஆத்தி மாலையை உடைய சோழனது பழைய நகரங்களுள் நீங்காத சிறப்பை உடைய புகார் என்னும் நகரத்தில் கோவலன் என்னும் பெயருடைய ஒரு வாணிகன் அவ் வூரிலுள்ள நாடகத்தைப் போற்றிக் கொண்டாடும் நாடகப் பொதுமகளோடு கூடி ஆட்டம் போட்டதன் விளைவாக அரிய செல்வம் எல்லாம் அழிந்துபோக கண்ணகி என்ற பெயர் கொண்ட அவனது மனைவியின் இனிய ஓசையமைந்த சிலம்பை விற்க விரும்பி பாடல் பெற்ற சிறப்பை உடைய பாண்டியனது பெரும்புகழ் பெற்ற மாட மதுரையினுள் நுழைந்தான்.

சிலம்பை எடுத்துக்கொண்டு பெருமை மிக்க வாணிகர் தெருவில் சென்றவன் பொற்கொல்லன் ஒருவனைக் கண்டு அவனிடம் அதைக் காட்டினான்.

கோப்பெருந்தேவியாகிய பட்டத்து அரசிக்கு அன்றி இந்தச் சிலம்பு வேறெவருக்கும் பொருத்தமாக இருக்காது, எனவே இங்கே இரு என்று சொல்லித் தான் போய் தான் முன்பு திருடிக் கொண்ட ஒலிக்கின்ற பரல்களை உடைய சிலம்பை வேறொரு கள்வன் கையில் கண்டேன் என்று கூறினான்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் ஆதலால் எதனையும், மொட்டு விரிந்த வேப்ப மாலையை அணிந்த பாண்டியன் ஆராயாமல் செயலாற்றல் உள்ள காவலர்களைக் கூவி அழைத்து அந்தத் திருடனைக் கொன்று அந்தச் சிலம்பை இங்கே கொண்டு வாருங்கள் என்று கூறினான்.

அவ்வாறு கொலைப்பட்ட கோவலன் மனைவி இருப்புக் கொள்ள முடியாதவளாய் நெடிய கண்கள் நீரைச் சொரிந்து பத்தினி ஆதலால் பாண்டியன் அழிந்து போகுமாறு செய்து முத்தாரம் அணியும் மார்பில் இருக்கும் முலையின் முகத்தைத் திருகி அதில் தோன்றிய நின்று எரியும் தீயில் நிலைபெற்ற மதுரையை எரித்த பலரும் புகழும் பத்தினியாகும் இவள் என்று சாத்தனார் கூறினார்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் என்று கூறினீர், அவர்களுக்கு வினையின் பயன் யாது என்று இளங்கோ அடிகள் கேட்டார்.

பெருமை மிக்கவரே கேளுங்கள்! தளராத சிறப்பை உடைய பழம் பதியாகிய மதுரையில் உள்ள கொன்றை மாலை அணிந்த சடைமுடியை உடைய கடவுளாகிய சிவன் உறையும் வெள்ளி அம்பலத்தில் உள்ள பொது இடமாகிய மண்டபத்தில் நடு இரவின் இருட்டில் படுத்திருந்தேன். தாங்குவதற்கு அரிய துன்பத்தை அடைந்த வீர பத்தினியின் முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி கொதிக்கின்ற நெருப்பாகிய சீற்றத்தை முலையால் விளைவித்தவளே, உங்களது முற்றிய வினை இங்கு வந்து சேர்ந்தது ஆகையால் பசும் பொன்னாலான தொடிகளை அணிபவளே உன் கணவனோடு உனக்கு, குலையாத நல்ல புகழையுடைய சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்னும் வாணிகனின் மனைவி இட்ட சாபம் இப்போது வந்து மூண்டது ஆகையால், நீண்டு தழைத்த கூந்தலை உடையவளே உன் கணவனை, இன்றைக்குப் பதினான்காம் நாள் பகல் வேளை சென்ற பின் வானோர் வடிவில் அன்றி இவ் வுலகத்தார் வடிவில் காண்பது இல்லை என்ற மாற்றமில்லாத பொருளுரையை நான் கேட்டேன் என்று சாத்தனார் கூறினார்.

அரசு முறை செய்வதில் தவறிழைத்தோர்க்கு அறமே கூற்றுவனாக ஆவதும் புகழ்ச் சிறப்புடைய கற்புடைய பெண்ணை உயர்வான மக்களும் போற்றுதல் இயல்பு என்பதும் முன் வினை உருவம் பெற்று துரத்தி வந்து பயனை விளைக்கும் என்பதும் நுண்ணிய தொழில் அமைந்த சிலம்பு காரணமாக வெளிப்பட்டமையால் சிலப்பதிகாரம் என்னும் பெயரில் பாட்டை உடைய ஒரு செய்யுள் மூலம் நிலை நாட்டுவோம் என்று இளங்கோ அடிகள் சொன்னார்.

இது முடியுடை மூவந்தர்களுக்கும் உரியது, ஆகையால் அடிகள் நீங்களே இதனை அருளிச் செய்ய வேண்டும் (செய்வது சிறப்பாக இருக்கும்) என்றார் சாத்தனார்.

அதற்கு அவர் மண வாழ்த்துப் பாடலும் பெற்றோர் அவர்களை இல்லறத்தில் தனித்து இருத்திய காதையும நடனம் கற்ற நங்கை மாதவி அரங்கேறிய காதையும் அந்திப் பொழுதாகிய மாலையின் சிறப்பை உரைக்கும் காதையும் இந்திர விழாவை புகார் எடுத்த காதையும் விழா முடிவில் கடலாடிய காதையும் கடலாடிய பின் பூக்கள் இதழ் விரித்த கழிக் கானலில் பாடிய கானல் வரியும் இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும் கண்ணகி தான் கண்ட தீங்கை உடைய கனாவின் திறத்தைத் தேவந்திக்கு உரைத்த காதையும் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வினாவிய செய்திகளை உடைய சோழ நாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும் அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும் வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவையாகத் தெய்வமேறி ஆடிப் பாடிய வரியும், இதழ் விரிந்த மாலையை உடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரி சென்று தங்கிய காதையும் முழங்கும் முரசொலியை உடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் புகழ் மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரியிடம் கவுந்தி அடிகள் அடைக்கலம் கொடுத்த காதையும் கோவலன் கொலைக்களப்பட்ட காதையும் மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறைமையும் கோவலன் கொலையுண்ட தீய செய்தி கேட்டு கண்ணகி அரற்றிய துன்ப மாலையும் நண்பகல் பொழுதில் எல்லாரும் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரைச் சூழ வந்த ஊர் சூழ் வரியும் புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும் வழக்கில தோற்ற பாண்டியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய வகையும் கண்ணகியின் முலையிலிருந்து எழுந்த தீ தாவி எரித்த காதையும் மதுரைமா தெய்வம் தோன்றி பழம்பிறப்பை எடுத்து விளங்க உரைத்த கட்டுரை காதையும் மது ஒழுக மலர்ந்த மாலையை உடைய குறத்தியர் அவளைத் தெய்வமாக்கி வழிபட்டு ஆடிய குன்றக் குரவையும் என்ற இந்த இருபத்துநான்குடன் காட்சிக் காதையும் கல்லைக் கொண்ட கால்கோள் காதையும் அந்தக் கல்லில் கடவுளை எழுதி கங்கையாற்றில் நீர்ப்படுத்திய காதையும் பத்தினிப் படிமத்தைக் கடவுள் மங்கலம் செய்த காதையும் அவ்வாறு வாழ்த்திய கடவுள் செங்குட்டுவனும் அங்கு வந்திருந்த அரசர்களும் கேட்ட வரங்களை அருளிய காதையும் எனும் இம் முப்பதுமாகிய உரையும் பாட்டும் இடையிடையிட்ட காப்பியமாகிய செய்யுளை புகழமைந்த இளங்கோ அடிகள் அருளிச் செய்ய மதுரையில் உள்ள கூல வாணிகனான சாத்தன் என்னும் புலவர் கேட்டார் என்பது இச்செய்யுளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிந்து கொள்வதற்கு உதவும் பதிகத்தின் அடக்கம் என்க.

பதிகத்தில் உள்ள சிறப்புச் செய்திகள்:

1. நூலைப் பற்றிய அறிமுகம் பதிகம்
2. நூலில் சொல்ல இயலாத செய்திகளைக் கூறுவது பதிகம்.
3. நூலின் தன்மைகளைத் தருவது பதிகம்.
4. நூலின் பயன் பற்றிக் கூறுவது பதிகம்.
5. நூலின் அமைப்பு பற்றிக் கூறுவது பதிகம்.
6. நூலின் வரலாறு பற்றிக் கூறுவது பதிகம்.
7. நூலின் உள்ளடக்கம் பற்றிக் கூறுவது பதிகம்.

சிலப்பதிகாரம் தோன்றிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலாயினும் சிலர் வேண்டுமென்று உள்நோக்கத்துடனும் பலர் அறியாமையாலும் திறனாளர்கள் சிலர் பிழைப்பதற்காகவும் கூறுவதுபோல் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்று வைத்துக்கொண்டாலும் சிலப்பதிகாரப் பதிகத்துக்கு இணையான ஒன்றை அன்றைய உலகின் எந்த இலக்கியத்திலும் காண முடியாது.

ஆனால் வையாபுரியாரின் கூற்றை வலியுறுத்தும் பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் பணமும் இசைவுகளும் பெற்று இயங்கும் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாட நூல்கள் எழுதுவோரும் பட்டங்கள் பெறுவதற்காக ஆய்வேடுகள் வரைவோரும் சிலப்பதிகாரம் எட்டாம் நாற்றாண்டில் தோன்றியது; அதன் பதிகத்தையும் வஞ்சிக் காண்டத்தையும் வேறு எவரோ எழுதிச் சேர்த்துவிட்டனர் என்று கூறுகின்றனர். தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு என்ற அனைத்துத் துறைகளிலும் வையாபுரியாரின் கூற்றுகள் மீது, தங்கள் பேராசான் என்று அறிவித்துக் கொள்ளும் காரல் மார்க்சின் மீது வைத்திருப்பதை விட மிகுதியான நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து வகை பொதுமையினரும் இந்தக் கண்ணோட்டத்தைத் தங்கள் அடிப்படை அணுகலாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றினால்தான் முற்போக்குச் சிந்தனை கொண்டிருப்பதாகத் தம்மை பிறர் மதிப்பார்கள் என்பதாலும் வையாபுரியாரின் கருத்துக்குப் பலரிடத்தில் உடன்பாடு உள்ளது.

மதுரை யாதவர் கல்லூரியில் பணியாற்றிய ப-ர்.இராமசாமி என்ற தமிழ்த்துறை விரிவுரையாளரை 1981-82 இல் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் பண்டிதர் பட்டத்துக்கான ஆய்பொருள் பதிகம் என்பதுதானாம். அவர் கூறினார், சிலப்பதிகாரப் பதிகத்தில் நூலில் இல்லாத செய்திகள் இருப்பதால் அதை இளங்கோவடிகள் எழுதவில்லை என்று வாதிட்டார். நூலில் சொல்ல முடியாத செய்திகளைச் சொல்வதுதான் பதிகத்தின் நோக்கமே என்று நான் எடுத்துக்கூறியும் அந்த விரிவுரையாளரின் கருத்து மாறவில்லை. ஒருவேளை ஆய்வேடுகளின் தொடக்கத்தில், ஆய்வின் ஒட்டு மொத்தக் கருத்தை தொகுத்துக் கூறும் தொகுப்புரையை (Synopsis) பதிகம் என்று தவறாகக் கொண்டுவிட்டார் போலும். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்களையும் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வழிநடத்தப்போகும் எதிர்காலத் தமிழகத்தையும் நினைக்கும் போது ஒரு புறம் மறுக்கமாகவும் இன்னொரு புறம் துயரமாகவும் நடுக்கமாகவும் உள்ளது.

நன்னூல் முதல் நூற்பா, முகவுரை, பதிகம், அணிந்துரை, நுன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்று பதிகத்ததுக்குரிய வெவ்வேறு பெயர்களைத் தந்துள்ளது.
முன்னுரை, அறிமுகம் போன்ற பெயர்கள் பின்னாளில் சேர்ந்துள்ளன.

சிலப்பதிகாரப் பதிகத்தைப் பொறுத்தவரை ஒரு கருத்து உள்ளது. சிலப்பதிகாரத்துக்குப் புலவர் சாத்தனாரும் மணிமேகலைக்கு இளங்கோவடிகளும் பதிகம் எழுதினர் என்பது. மேலோட்டமாக நோக்கினால் அது பொருத்தமாகவே தெரிகிறது. ஆனால் இவ் விரு நூல்களின் பதிகங்களைப் படிக்கும் போது அவற்றின் நடை அந்த அந்த ஆசிரியர்கள் நூல்களின் பொது நடையையே ஒத்து இருப்பது தெரிகிறது. எனவே தம் தம் நூலுக்கு அந்தந்த ஆசிரியர்களே பதிகம் எழுதினர் என்று கொள்வது பொருத்தமாகும். இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு செய்தி சிலப்பதிகாரம் பதிகத்தில் கூறப்படுகிறது. அது, மதுரை நிகழ்ச்சிகளைக் கூறிய போது சாத்தனார் கோவலனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருமாறு காவலர்களுக்குப் பாண்டியன் ஆணையிட்டதைச் சொல்லுகையில், வினை விளை காலமாதலின் சினையலர் வேம்பன் தேரான் ஆகி என்று அவர் கூறியதைச் சுட்டிக் காட்டி வினை விளை காலமென்றீர் யாதவர் வினையென்று இளங்கோவடிகள் கேட்டதும் அதற்குச் சாத்தனார் விடை கூறியதும் அவர்கள் இருவரும் மட்டுமே அறிந்தவை. உடனிருந்தவர் யாராவது கேட்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அப்படி அவர்கள் எழுதிச் சேர்த்திருந்தாலும் இளங்கோ அடிகள் காலத்தில் பெரும்பாலும் அவரது ஆணையால் அல்லது இசைவுடன்தான் செய்திருக்க வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் நாம் பார்க்கவேண்டும். மதுரையில் நடந்தவை ஒரு மக்கள் எழுச்சியாக இருந்து அதை அடக்க சேரன் செங்குட்டுவன் சென்றுகொண்டிருந்த வழியில் சாத்தனார் குறுக்கிட்டு அது ஒரு பெண்ணின் கற்புத்தீயால் நிகழ்ந்தது, மக்கள் எழுச்சி இல்லை என்று கூறி அவனைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். உண்மையில் அங்கு நடந்தவை என்று இளங்கோ அடிகள் அறிந்தவற்றுக்கு மாறாகச் சாத்தனார் கூற்று இருந்ததால் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டு விடையையும் பதிகத்தில் குறித்து கதையின் இந்தப் பகுதிக்குச் சாத்தனார்தான் பொறுப்பு என்று மறைமுகமாகக் கூறுவதாகக் கொள்ள இடமிருக்கிறது.

இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். மணிமேகலை காட்டுகிறவாறு புத்த சமய வெறியரான சாத்தனார் சிவன் கோயிலான வெள்ளியம்பலத்துக்கு ஏன் போனார், அதுவும் ‘நள்ளிருளில் கிடந்து’ என்ன செய்தார் என்ற கேள்விகளுக்கு நிறைவான விடை எதையும் நம்மால் காண முடியவில்லை.

மதுரையில் நடந்தது மக்களின் எழுச்சிதான் என்பதைச் சுட்டும் குறிப்புகளையும் நூலி்ல் இளங்கோ அடிகள் குறிக்காமல் விடவில்லை.

நாம் அவற்றை அந்தந்த இடங்களில் பார்க்கலாம்.

இலக்கியத்துக்கு குமுகப் பயன் உண்டா என்பது 20, 21, ஆம் நூற்றாண்டுகளில் தமிழக இலக்கியவாணர்கள் நடுவில் எழுந்திருக்கும் கேள்வியாகும். 20 ஆம் நூற்றாண்டின் முன்பாதியில் “கலை கலைக்கா, கலை வாழ்க்கைக்கா?” என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு விடை சொல்ல வந்த சாமி. சிதம்பரனார், தன் சிலப்பதிகாரத் தமிழகம் என்ற நூலில் (சுடர் பிரசுரம், திருவல்லிக்கேணி சென்னை- 5, இலக்கிய வரிசை 6, 1958) “இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்று சொல்லுவோர் பிறபோக்குவாதிகள். நாட்டில் தோன்றும் புதிய சமுதாய - அரசியல் கருத்துகளைக் கண்டு அஞ்சுகின்றவர்கள். இன்றுள்ள சமுதாய அமைப்பு மாறினால், அரசியல் அமைப்பு மாறினால் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களுக்குப பிடிக்காத கொள்கைகள் இலக்கியங்களில் இடம்பெறுவதைக் கண்டு நடுங்குகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சல்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்பது” என்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதே சிக்கல் வேறொரு வடிவத்தில் முன்வைக்கப்பட்டது. இலக்கியத்துக்கு தூய இலக்கியம் என்றும் பரப்பல் இலக்கியம் என்றும் ஒரு வகைப்பாடு முன்வைக்கப்பட்டது. தூய இலக்கியம் என்பது எந்த விதக் குமுகக் குறிக்கோள்களையும் முன்வைக்காது மெய்ப்பாட்டுச் சிறப்பு ஒன்றையே தடம் பிடித்துச் செல்லும்; அந்த மெய்ப்பாட்டுச் சிறப்பே அந்த இலக்கியத்தைக் காலங்களை வென்று நிலைத்து நிற்க வைக்கும். அதே வேளையில் பரப்பல் இலக்கியத்தில் மெய்ப்பாட்டுச் சுவையே இருக்காது; வெறும் கொள்கைப் பரப்பலே இருக்கும்; எனவே அதனால் காலத்தை வென்று நிற்க முடியாது என்பது அவர்களது கூற்று.

இதற்கு மறுப்பு கூறுவோர் , “தூய” இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்போர், நிலவுகின்ற அரசியல் - குமுகியல் நிலைமைகளை மறைமுகமாகப் போற்றி மாற்றங்களை எதிர்ப்பதைத் தம் படைப்புகளில் ஐயமின்றிச் செய்கின்றனர். எனவே அவையும் பரப்பல் செய்கின்றன என்பதாகும். எம் நிலைப்பாடோ, இவர்கள் கூறும் சுவை மிகுந்த “காலத்தை வென்று நிற்கும்” இலக்கியங்களை வெறும் திண்பன்டங்கள் என்றால் பரப்பல் இலக்கியங்கள் மருந்து போன்றவை, அவற்றின் நோக்கம் காலத்தை வென்று நிலைத்து நிற்பதல்ல, அது படைக்கப்படும் காலத்தில் குமுகத்துக்குத் தேவைப்படும் என்று படைப்போன் கருதும் கருத்துகளை முன்வைப்பதேயாகும் என்பதாகும்.

அதே வேளையில் வாழ்வுக்கான இலக்கியங்கள் என்று அழைத்தாலும் சரி பரப்பல் இலக்கியங்கள் என்று சொன்னாலும் சரி தமிழில் காலத்தை வென்று நிற்கும் இந்த வகைப்பாட்டினுள் வரும் இலக்கியப் படைப்புகள் குறைந்து இரண்டாவது உண்டு. ஒன்று திருக்குறள். இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் மனித வாழ்வுக்காக அறங்கள் பலவற்றைத் தன்னுள்ளே கொண்டிருப்பதுடன்3 ஈடில்லாத மெய்ப்பாட்டுச் சிறப்பும் உடையது. ஓர் அறநூலை இத்தனை இலக்கியச் சிறப்புடன் படைக்க முடியும் என்பதே உலக மக்கள் யாவரினும் தமிழ் மக்களுக்குத் தனிப்பெரும் பெருமையைத் தருவதாகும்.

இன்னொரு இலக்கியம் சிலப்பதிகாரக் காப்பியம் ஆகும். அதன் பதிகத்திலேயே இளங்கோ அடிகள் நூலின் நோக்கத்தை ஐயத்திற்கிடமின்றிக் கூறி விட்டார் இவ்வாறு:

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்...
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்...

அத்துடன் பதிகத்தில் குறிப்பிடாத ஒன்றை நூலின் பயனாக நூற்கட்டுரையில், தமிழகத்தின் பருப்பொருட் பண்பாட்டை ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம் காட்டுவார் போல் காட்டிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

இப்படி இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல இலக்கணமும் கூட இலக்கியங்களின் நோக்கம் மனிதனை மேம்படுத்துவதுதான் என்று வரையறுத்துள்ளதையும் காணலாம்.
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.
மரத்தை வாள் கொண்டு அறுக்கும் முன் கழிவாகத்தக்க புறவெட்டு என்பதனை முடிந்த அளவு சுருக்கி நல்மரப் பகுதியை மிகுப்பதற்கு முதலில் ஒரு நூலைக் கரி கரைந்த நீரில் நனைத்து அறுக்க வேண்டிய மரத்தில் பிடித்து அடித்து அடையாளமிட்டுக் கொள்வர். அதைத்தான் மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல் என்று கூறுகிறது மேலேயுள்ள நன்னூல் நூற்பா எண் 25.

அகத்தியர் என்ற ஆசிரியர் பெயர் அகத்தியம் என்ற இலக்கணத்தை வகுத்தவரின் பெயர் என்றும் கூறலாம். அகப்பொருள் அகத்தியல் → அகத்தியம் → அகத்தியர் என்று திரிந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் தொல் பழங்காலத்திலேயே இலக்கியத்தின் நோக்கம் மனிதனை மேம்படுத்தவதுதான் என்ற கருத்து தமிழ் மரபில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது புலனாகிறது. இதற்காக நாம் சிறப்பாகப் பெருமைப்படத் தேவையில்லை. இதில் கூறப்பட்ட பொருள் இறையனார் அகப்பொருளில் உள்ளதாகும் என்று கூறுகிறது வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் பதித்துள்ள நன்னூல் விருத்தியுரை, (பாரி நிலையம், சென்னை-1 1971, பக். 65). மனிதனின் முயற்சிகளும் செயல்களும் மனித குலத்தை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டுமென்பதுதானே பகுத்தறிவு உடைய எந்த ஒருவருடையவும் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்ல என்றொரு குரல் எழுவது அதுவும், உலக அளவில் என்பதுதான் மறுக்கம்.

சில சிறந்த எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றிய இந்த எதிர்நிலைக் போக்கைப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய படைப்புகளில் அவர்களது கருத்து என்று நாம் அறிவதற்கு மாறான, அதாவது குமுகம் பற்றிய பரிவுடனும் கவலையுடனும் குமுகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் கருத்துகள் அடித்தளமாக அமைந்திருப்பதை அடிக்கடி பாக்கிறோம். இது அவர்களது அடிப்படை மன இயல்பின் நனவிலி வெளிப்பாடாகும். வெளிப்படையான அவர்களது சிந்தனைக்கு மாறான உள்ளுணர்வின் வெடிப்பாகும்.

இனி பதிகத்தின் உள்ளத்தினுள் செல்வோம்.

குணவாயில் கோட்டத்தில் அரசு துறந்திருந்த என்ற வரியில் அரசு துறத்தல் என்பது இல்லறம் துறத்தல் ஆகுமா என்பது தெரியவில்லை. பெண்களைப் பற்றியும் காமம் பற்றியும் மக்கள், நிலம், கடல், இயற்கை, கலைகள் பற்றியும் அவருடைய விரிந்த அறிவு துறவு பூணுவதற்கு முந்திய வாழ்க்கையின் பட்டறிவுகளிலிருந்து மட்டும் கிடைத்திருக்க முடியுமா என்றொரு கேள்வியை நம் முன் வைக்கிறது.

குணவாயில் என்பது வஞ்சியின் கீழ்த்திசையிலுள்ள திருக்குணவாயில் என்னும் ஊர் என்கிறார். அடியார்க்கு நல்லார். “குணவாயில் கோட்டத்து” அரசு துறந்திருந்த என்பது, அவர் முன்பு குணவாயில் கோட்டம் எனும் சேர நாட்டின் ஒரு பகுதியின் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கலாம். அரசர்கள் தங்கள் ஆண் மக்கள் பட்டம் ஏறுவதற்கு முன் அவர்களை நாட்டின் ஒரு பகுதிக்குப் பொறுப்பாளராக வைத்திருப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் நட்டின் ஆள்வினை குறித்த பட்டறிவுகளைப் பெற முடியும். போர்களிலும அவர்கள் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது. நாட்டின் ஒரு பிரிவின் ஆள்வினைத் தலைவர் என்ற வகையில்தான் இமயவரம்பன் அவையில் தமையன் செங்குட்டுவனோடு இருந்த போது நிமித்திகன் தன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்.

அரசு துறந்த என்ற கூற்றை இந்தப் பொருளில் எடுத்துக்கொண்டால் குணவாயில் கோட்டத்தில் அரசுப் பொறுப்பைத் துறந்து அங்கேயே வாழ்ந்து வந்தார் இளங்கோவடிகள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் ஒரு சிறப்பு இந்தக் காப்பியத்தில் நிகழ்ச்சிகள் நேர்கோட்டில் சொல்லப்படுவதில்லை என்பதாகும். இங்கு அரசு துறந்திருந்த என்று மொட்டையாகச் சொல்லியுள்ள அடிகள் தான் ஏன் “அரசு” துறந்தார் என்பதை நூலின் இறுதியில் வாழ்த்துக் காதையில் விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய உத்தியை நூல் முழுவதும் பார்க்க முடியும். அவற்றை அங்கங்கே சுட்டிக் காட்டுவோம்.

குன்றக் குறவர் என்பதில் வரும் குன்றம் செங்குன்றம் என்னும் மலை என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். அது கண்ணகி மதுரையிலிருந்து சென்ற வையைக் கரை வழியே அதன் ஒரு கிளை தோன்றும் முனையாகும். அந்த முனையின் எதிர்ப்புறத்தில்தான் பெரியாற்றின் ஒரு கிளையின் முனை உள்ளது. அந்த மலைப் பகுதியை வண்ணாத்திப் பாறை என்று அந்த வட்டாரத்து மக்கள் அழைப்பதாக 20-04-2008 அன்று சித்திரை வெள்ளுவாவன்று கண்ணகிக் கோட்டத்துக்குச் சென்றிருந்த போது அறிய முடிந்தது. இப்பொழுது கண்ணகிக் கோட்டம் என்று காட்டப்படும் இடம் இளங்கோவடிகள் கூறும் இடமல்ல என்ற எமது இந்தக் கருத்து பற்றிய விரிவுக்கு சேணுயர் சிலம்பில்…. என்ற தலைப்பில் தமிழினி 2008 மே இதழ் கட்டுரை பார்க்க.

காவிரிப்பூம்பட்டினம் என்பது காவிரி புகும் பட்டினம் என்பதிலிருந்து திரிபடைந்திருக்கலாம். புகார் என்பது புகு + ஆறு என்பதன் மரூஉவாய் இருக்க வேண்டும். பூம்புகார் என்பது பொலிவுடைய ஆறு புகும் பட்டினம், அதாவது ஆறு புகும் பொலிவுடைய பட்டினம் என்றும் பொருள்படலாம்.

கோவலன் என்ற பெயருக்கு ஆயன் என்பது பொருள். கோவலன் என்பதை விரித்தால் மாட்டை மேலாண்மை செய்ய வல்லவன் என்று பொருள் தரும். சமற்கிருதச் சொல் என்று பொதுவாகக் கருதப்படும் கோபாலன் என்ற சொல்லின் ஒரு வடிவமே கோவலன். இன்றும் மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு மிகப் பெரும்பாலோர் ஆயர்களையே சார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரத்திலும்

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத... (அந்திமாலை சிறப்புச் செய்காதை 15-16)
என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆக, வாணிக வகுப்பைச் சார்ந்த ஒருவனுக்கு ஆயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குரிய பெயரைச் சுட்டியிருப்பது மக்கள் தொழில்களில் மாறிமாறி ஈடுபட்டிருந்ததைக் காட்டும் தடயமாகக் கொள்ள முடியுமா அல்லது வெவ்வேறு தொழில் சார்ந்தவர்களிடையில் தொழில் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு அன்று கடைப்பிடிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. அல்லது நிலம் வழி வாணிகம் பொதிமாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியதால் ஆயர்களே நிலவழி வாணிகர்களாக மலர்ந்ததன் ஓர் எச்சமாகக் கோவலனின் பெயரைக் கொள்ளலாமா?

கண்ணகி என்ற பெயர் ஓர் அரிய பெயராகத் தோன்றுகிறது. கண்ணகி என்பதை கண் + நகை, அதாவது நகைக்கும் கண்களை உடைய இனிய பெண் என்று பொருள் படுமா என்பது கருதத்தக்கது. நான் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் கதைத் தலைவியின் இதே பெயருக்கு கதைத் தலைவன் இத்தகைய விளக்கம் கொடுப்பதாக ஓர் உரையாடல் வருகிறது. கண்களை நகையாகக் கொண்டவள் என்றும் விளக்கலாம்.

கணிகையொடு ஆடிய (வரி 15-16க்கு) என்பதற்கு தன் பொறுப்புகளை மறந்து களியாட்டம் நடத்திய என்று பொருள்.

சில்லரிச் சிலம்பு (வரி 25) சில அரிகளை - பரல்களை உடைய சிலம்பு என்று வேங்கடசாமியார் உரை கூறுகிறார். “சில்” என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி தரும் பொருட்களில் ஆரவாரம், ஒலிக்குறிப்பு, நுண்மையான என்பவை உள்ளன. “சில்லரி” என்ற சொல்லுக்கு சிலம்பின் பருக்கைக் கல் என்று பொருள் உள்ளது. எனவே சில்லரிச் சிலம்பு என்பதற்கு ஒலிக்கின்ற நுண்ணிய பரல்களைக் கொண்டது அல்லது ஓலிக்கின்ற பரல்களைக் கொண்டது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கன்றிய காவலர் (வரி29) என்பதில் வரும் “கன்றிய” என்ற சொல்லுக்கு தழும்பேறிய, மிகுந்த, முதிர்ந்த என்ற பொருட்களும் “கன்றுதல்” என்ற சொல்லுக்குரிய பொருள்களில் கன்றல், இரங்கல், கோபித்தல், விசனப்படல், அடிப்படுதல், சினக் குறிப்பு கொள்ளுதல், மனமுருகுதல், நோதல், வாடுதல், முற்றுதல் என்ற பொருட்களும் கன்றல் என்ற சொல்லுக்குள்ள பொருள்களில் சினத்தல், கடுப்பு என்பவையும் உள்ளன.

வேங்கடசாமியார் அடிப்படுதல் என்ற பொருளைக் கொண்டுள்ளார். அடிமட்டத்திலுள்ள கீழ்நிலைக் காவலர் அல்லது கீழ்த்தரமான காவலர் என்று கொண்டுள்ளார். அடியார்க்குநல்லார் “கன்றிய காவலர் என்றார், அவரும் முன்னர்த் தீது செய்யார் என்பது தோன்ற” என்று கூறியிருக்கிறார். பாண்டியன் ஊழ்வினைப் பயனால் தன் நல்லியல்பை மறந்து செயற்பட்டான் என்ற கருத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால் பாண்டியனின் நடவடிக்கைகள் அத்தகைய ஓர் இயல்பை அவனுக்குக் காட்டவில்லை. எனவே பட்டறிவு மிகுந்த முதிர்ந்த கொடுமையான காவலர்கள் என்றுதான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அரசர்களுக்கு அண்மையில் அப்படிப்பட்டவர்கள்தாம் அமர்த்தப்படுவார்கள்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது (வரி 91) என்ற வரியில் சிலப்பதிகாரம் தமிழகம் முழுவதையும் நிலைக்கானாகக் கொண்ட காப்பியம் என்பதைப் பதிகமும் உறுதிசெய்கிறது. அதற்கேற்றாற் போல்தான் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் பெரும் பிரிவும் உறுதி செய்கின்றன. எனவே பதிகமும் வஞ்சிக் காண்டமும் பின்னர்ச் சேர்த்தது என்பதற்கான அறிகுறி நூலில் எங்குமே இல்லை. இக் காண்டங்களுக்கிடையிலான இசைவு பற்றிய தெளிவான சான்றை அது வருமிடத்தில் சுட்டுவோம்.

காதைகளின் தலைப்புகள் ஏறக்குறைய அனைத்தும் பல்வேறு மகளிரின் செயற்பாடுகளையே குறிப்பதைக் காணலாம். இந்த வகையிலும் சிலப்பதிகாரம் ஒரு பெண்ணியக் காப்பியம் என்பதைப் பறைசாற்றி நிற்கிறது.

காதை என்ற சொல்லுக்கு, “கதையை உடையது காதையாம் ஆதலாலும்” என்ற அடியார்க்குநல்லாரின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் வேங்கடசாமியார் அவர்கள். ஆனால் காது என்ற சொல் அடிப்படையில் காதை என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும். அது பின்னர் கதை என்று திரிந்திருக்க வேண்டும். முதலில் இலக்கியங்கள் ஒருவர் சொல்ல பிறர் கேட்க நிகழ்ந்து பின்னர் எழுத்து உருவான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பேசுதல் என்பதைக் “கதைத்தல்” எனும் ஈழத்துச் சொல் வழக்கை நோக்க.

அடிக்குறிப்புகள்:

1. சிலப்பதிகாரம், 22, 18,

2. சிலப்பதிகாரம், 23, 173-4,

3. காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளும் திருக்குறளில் உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


13.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 1

மனந்திறந்து……….

தமிழகத்து நிகழ்ச்சிகளைக் கூறும் காப்பியம் என்பதால் சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பதிப்பித்த சிலப்பதிகாரம் கழக வெளியீட்டை 1970இல் வாங்கிப் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நான் முழுமையாகப் படித்தது சிலப்பதிகாரம் மட்டும்தான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

1980களின் தொடக்கத்தில் மதுரையில் ஓர் அறையில் நான் தங்கியிருந்த போது இன்னோரறையில் தங்கியிருந்த அக் கட்டடத்துக்குப் பொறுப்பாளரான ஏசுதாசு என்பவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மதுரை தீக்கிரையாகி மன்னனும் அரசியும் மாண்டு 14 நாட்களுக்குப் பின்னரே கண்ணகி தேவருலகம் செல்கிறாள். அதன் பின்னரே சேரன் செங்குட்டுவன் மலைவளங்காண வருகிறான். அப்போதுதான் ஒரு பெண் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து தேவருலகம் சென்றதைக் குன்றக் குறவர்கள் சொல்ல, அப்போது அரசனுடன் இருந்த சாத்தனார் கோவலன் – கண்ணகி குறித்த செய்திகளைச் சொல்கிறார். அப்படியானால் அண்டை நாட்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை சேரன் அறியாமல் இருந்தான் என்பது நம்பும்படி இல்லை. எனவே சிலப்பதிகாரக் கதை வெற்றுக் கற்பனை என்று அவர் கூறினார்.

அவர் கேட்ட கேள்வி ஞாயமானதே, அதுவும் சேரன் செங்குட்டுவன் வடநாடு செல்வது குறித்து அங்குள்ள அரசர் அனைவருக்கும் ஓலை விடச் சொன்ன போது நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா(காட்சிக் காதை வரி. 173 – 4), எனவே தலைநகரில் பறையறைந்தால் போதும் அனைத்து அரசர்களுக்கும் செய்தியை அந்நந்நாட்டு ஒற்றர்கள் தெரிவித்து விடுவார்கள் என்று அமைச்சன் அழும்பில் வேள் கூறும் ஓர் அரசிடை உறவு நிலை உருவாகிவிட்ட சூழலில் என்பதில் எனக்கு எந்த ஐயமும் எழவில்லை.

ஆனால் சிலப்பதிகார நிகழ்ச்சி கற்பனையல்ல என்று கூறுவதற்கு தமிழகத்திலும் வெளியேயும் குறிப்பாக கேரளத்திலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படியானால் நண்பர் கேட்ட கேள்விக்கு விடையை மனம் தேடியது.

அப்போது மார்க்சியம் எனக்கு வழிகாட்டியது. தனி மனிதர்களுக்கும் குமுகத்துக்கும் உள்ள உறவைப் பற்றிய மார்க்சியப் புரிதலே அது. குமுகம் தன் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அங்கு தோன்றும் ஒரு தனி மனிதனின் செயற்பாடுகளைப் பற்றிக்கொண்டு மக்கள் அம் மனிதனின் பின் திரண்டு தங்கள் நெடுநாள் கொதிப்பை ஆற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் அது. கண்ணகியின் நேர்வில் இது போன்ற பின்னணி இருந்ததா என்ற கேள்வி என்னுள் எழுந்த போது ஆம் என்று விடை தந்தது கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற ஊர் சூழ்வரியின் 29ஆம் வரி, அதாவது தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்தைத் தேடிப்போன கண்ணகியின் பின்னே ஆர்ப்பரிக்கும் மக்களின் கூட்டம் ஒன்று தொடர்ந்து சென்றது என்ற செய்தி மேலும் என் தேடுதலை ஊக்கியது. அதன் பயனாக உருவானதே மதுரையை எரித்தது யார்? என்ற என் கட்டுரை .

சேரன் செங்குட்டுவன் படையோடு வந்து அமரத்தக்க, மலை மீதிருக்கும் பெரியாற்றின் கரை பெரும்பாலும் வண்டிப்பெரியாறாகத்தான் இருக்கும். அதாவது வஞ்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட ஓரிடம் இது. மதுரையில் மக்கள் கலகம் மூண்டு அரசனும் அரசியும் கொலைப்பட்டுவிட்டனர் என்பதறிந்து அதை அடக்கவென்று புறப்பட்டவனுக்கு வழியில் குறவர் சொன்ன சேதியும் சாத்தனார் மதுரையில் மக்கள் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றி கூறியதும் மதுரையில் நெடுஞ்செழியனின் தம்பி வெற்றிவேற்செழியன் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதும் அவனது வேலையை எளிதாக்கிவிட்டது. மதுரையில் நடந்தது மக்கள் கலவரமல்ல, ஓரு பத்தினிப் பெண்ணின் சினத்தீயின் விளைவே என்று மக்களைத் திசைதிருப்ப கண்ணகிக்குக் கோயில் எடுப்பதென்றும் அதற்குச் சிலை செய்ய இமயம் செல்வதென்றும் அந்தச் செல்கையின் போதே தமிழ் மன்னர்களை இழிவாகப் பேசிய “ஆரிய” மன்னர்களைத் தண்டிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மக்களைத் திசைதிருப்ப கோயில் கட்டுவதும் சிலை நிறுவுவதும் மணிமண்டபம் அமைப்பதும் ஆகிய நடைமுறையை நம் ஆட்சியாளர்கள் அன்றே தொடங்கிவிட்டதையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அதாவது மதுரைக் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றித்தான் சேரன் செங்குட்டுவன் பெரியாற்றங்கரையில் அறிந்தான் என்பதுதான் நண்பர் சேசுதாசு எழுப்பிய கேள்விக்கு விடையாக எனக்குக் கிடைத்தது.

இந்தத் தேடலில் எனக்குத் தெரிய வந்தது வெளிப்படையாகக் கூறப்படும் கதைக்கு மாறான இன்னொரு கதை நூலினுள் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அரசர்களின் கொடுங்கோன்மைகள், இயலாமைகள், மக்களிருந்து அயற்பட்டுவிட்ட சமயத் தலைமைகள் என்ற நுட்பமான செய்திகள் ஒருபுறம் என்றால் மக்களிடமிருந்து அரசர்கள் முற்றிலும் அயற்பட்டு நின்ற சூழலில் அம்மண அநாகரிகர்கள் இங்குள்ள மலைவாழ் மக்களையும் முல்லை நில மக்களையும் அரசர்களுக்கு எதிராகத் திரட்டி தமிழர்களின் பண்பாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் தடந்தெரியாமல் அழித்துவிடுவார்கள் என்பதை முன்னறிந்து எழுத்தில் புதைக்கத்தக்கவை அனைத்தையும் புதைப்பதற்காக இளங்கோவடிகள் இக் கதையைப் பயன்படுத்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அப் பண்பாட்டுக் கூறுகளை, குறிப்பாக இசை – நாடகங்களைப் பொறுத்தவரை தன் நூல் ஒரு பாடநூலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காதைகளில் பகுதி பகுதியாகப் பிரித்துவைத்துள்ளார். அவ்வாறு அன்று பெரியாற்றங்கரையில் தீர்மானிக்கப்பட்டதற்கு மாறாக உண்மைகளை வெளிப்படையாக அடிகள் எடுத்துவைத்திருந்தால் இன்று இந் நூல் நமக்குக் கிடைக்காதபடி அழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய இலக்கிய உத்திக்கு எடுத்துக்காட்டாக உருசிய நாடகமான INSPECTOR GENERALஐக் கூறலாம். சார் மன்னனின் ஆட்சிக் குறைபாடுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி அவனைக் குலுங்கக் குலுங்க நகைக்கவைத்த ஆசிரியரின் உத்தியை இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால் இளங்கோவடிகள் எடுத்துக்கொண்ட பணி இதனோடு ஒப்பிட மிக மிகக் கடினமான ஒன்று. அதை அவர் மிக மிகச் சிறப்பாக முடித்துள்ளது அவரது மிகுந்த திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமல்ல தமிழ் மண் மீதும் மக்கள் மீதும் அவருக்கு இருந்த கலப்பில்லாத ஈடுபாட்டையும் காட்டுகிறது.

அவர் அஞ்சியது போலவே அம்மணர்களால் அழிக்கப்பட்ட நாகரிகத்தைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் தத்தம் துறைகளைக் கைவிட்டுவிட அல்லது நாட்டை விட்டே வெளியேறிவிட, பின்னர் அம்மணத்திலிருந்து விடுபட்ட பல்லவர்களும் பிறரும் கோயில்களைக் கட்ட முற்பட்ட போது புதிதாக உருவான கலைஞர்கள், குறிப்பாக சிற்பக் கலைஞர்கள் பழையவர்களின் தரத்திற்கு உயரவில்லை என்பது வட இந்தியாவிலும் தமிழர்க்குரியனவாகக் கூறப்படும் கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளில் அண்மை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோயில்களோடு இப்போது தமிழகத்தில் இருக்கும் கோயில்களை ஒப்பிடும் போது தெரிகிறது. நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆடலுக்கு ஆந்திரத்தின் கணிகையர் இறக்குமதியாயினர். பாடலுக்கு மூவர் எனப்படும் தெலுங்கு இசை முன்னவர்களை அகற்றி தமிழிசை மூவரை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் வெற்றி பெறவில்லை.

நாடகம் என்ற கலையைப் பற்றி இளங்கோவடிகள் தந்துள்ள வரையறைகளைத் திரைத்துறையினர் உன்னிப்பாகப் பயின்று பின்பற்றுவார்களாயின் அவர்களின் படைப்புத் திறன் மேம்பட வாய்ப்புண்டு.

ஆனால் அடிகள் கடைப்பிடித்த ஒன்றை மட்டும் இன்று தவறாமல் கையாள்கிறார்கள். அதாவது ஒவ்வொரு படத்திலும் ஐந்து பாடல் காட்சிகள், அதற்குக் குறையாத எண்ணிக்கையில் ஆடல் காட்சிகள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்ற கலவை வாய்பாட்டைத்தான் குறிப்பிடுகிறேன்.

இவ்வாறு கண்டவற்றை ஒரு நூலாக்க வேண்டும் என்று விரும்பிய நான் என் வாழ்க்கைச் சூழலில் இவ்வளவு பெரும் பணியை நிறைவேற்ற முடியுமா என்ற மலைப்பில் இருந்தேன்.

குடும்பப் பொறுப்புகளில் பெரும்பாலானவை முடிந்துவிட்ட நிலையில் எஞ்சியிருந்த மகளின் திருமணத்திற்காக குமரி மாவட்டத்தில் சொந்த ஊரிலுள்ள சொத்துகளை விற்க திருநெல்வேலியிலிருந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சொந்த ஊர் சென்றேன். அங்கு ஈத்தாமொழி தியாகராசன் என்ற நண்பர் தன் அமைப்பாகிய இலக்கியச் சோலையின் சார்பில் சனிக்கிழமை தோறும் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். அந் நிகழ்ச்சியில் விசுவதிலகம் என்ற ஓய்வுபெற்ற பள்ளியாசிரியர் கம்பராமாயண வகுப்பு நடத்தினார். அதைப் பார்த்த நான் சிலப்பதிகார வகுப்பு நடத்தும் என் விருப்பத்தை நண்பர் தியாகராசனிடம் வெளியிட்டேன். அதை உடனே ஏற்றுக்கொண்ட நண்பர் வியாழக் கிழமை தோறும் தமிழ்க் கேணி என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந் நிகழ்ச்சிகள் வல்லன்குமாரன்விளை வழக்கறிஞர் இராசகோபால் அவர்களுக்குச் சொந்தமாக கோட்டாற்றில் இருந்த வளாகத்தில் அமைந்திருந்த அவரது அலுவலகத்தில் நடைபெற்றன.

வகுப்பில் பேசுவதைப் பதிவு செய்து பின்னர் அதை எடுத்தெழுதுவது என்பது எனது திட்டமாக இருந்தது. அதற்காக மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றும் நண்பர் தங்கராசு ஒரு நாடாப் பதிவியையும் நாடாச் சுருள்களையும் வாங்கித் தந்தார். ஆனால் பதிந்தவற்றை எடுத்தெழுத ஆள் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. எனவே பதிவுசெய்து கொண்டோம். அந்தப் பணியை நிகழ்ச்சிக்கு தவறாது வந்துகொண்டிருந்த பள்ளியாசிரியர் திரு.எட்வின் பிரகாசு ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 100 வகுப்புகள் நடந்து நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது.

சிறிது காலத்துக்குப் பின் நாகர்கோயிலில் நான் ஓர் அலுவலகம் அமைக்க வேண்டி வந்தது. அங்கு மீண்டும் ஒரு முறை வகுப்பு நடத்தினேன். இப்போது பேச்சை நேரடியாக கணினியில் பதிந்தோம். அந்தப் பொறுப்பையும் நண்பர் எட்வின்தான் ஏற்றுக்கொண்டார். வகுப்புகளை மீண்டும் ஒருமுறை நடத்தும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்ட போது அடுத்த நாள் பேச இருப்பவற்றுக்கு முதலில் குறிப்புகள் எடுத்தேன். இந்தக் குறிப்புகளை தட்டச்சர் கொண்டு தட்டச்சு செய்து அதை மேம்படுத்தி கணினியில் பதிந்துகொண்டோம். இதற்கிடையில் நான் முடித்து வைத்திருந்த COLLEGE OF ENGINEERING MANUAL - IRRIGATION by Col.W.M.ELLIS என்ற தமிழக அரசு வெளியீட்டின் தமிழாக்கத்தைத் தங்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் சங்க(பொ.ப.து.) பொறுப்பாளர்கள் கூறி அதனை முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டதால் அதற்கான வரைபடங்களைக் கணினியில் வரைவதற்கும் புத்தக வடிவமைப்புக்கும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நானும் நண்பர் எட்வினும் செலவு செய்ய வேண்டியிருந்தது. எனக்கும் என் துணைவிக்கும் உடல்நலக் குறைவினால் இன்னும் மூன்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு இந்தப் பணியை முடித்துள்ளேன்.

இதை எழுதுவதற்காக நான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்களில் எவற்றையும் பார்க்கவில்லை. மேலே குறிப்பிட்ட வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையில் தரப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே என் கருத்துகளை முன்வைத்துள்ளேன். கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்ததற்கான காரணங்களாக என் இளமையில் நான் படித்த சிலரது கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் யார் யார் என்பது இப்போது நினைவிலில்லை. வகுப்புகளில் கலந்துகொண்டோர் தாங்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் என் தேடலை ஊக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, கோவலன் – கண்ணகியின் புணர்ச்சியை பாம்புகளின் புணரச்சியோடு ஒப்பிட்டு அடிகளார் கூறியிருப்பது அருவருப்பான உவமை என்று நாகர்கோயிலைச் சார்ந்த பேரா.சுந்தரலிங்கம் குறிப்பிட்டதைக் கூறலாம். வகுப்புகளில் தவறாது கலந்துகொண்டு அன்றன்றைய நிகழ்ச்சி முடிவில் கருத்துரைகள் வழங்கிய பேராசிரியர் சிவமுருகன் அவர்களின் வழிகாட்டல் பெரிதும் பயன்பட்டது. பள்ளியாசிரியர் ஆபிரகாம் லிங்கன், புலவர் கா.சு.பிள்ளை, தங்க துமிலன், சின்னத்தம்பி, தங்கசாமி, புலவர் வே.செல்லம் முதலியோரும் கருத்துகளை வழங்கியுள்ளனர்.

இந்த நூலை எழுதும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அறிந்ததும் நண்பர் தமிழினி வசந்தகுமார் அதைத் தான் வெளியிட விரும்புவதாகக் கூறி புலவர் ஆ.பழனி அவர்கள் எழுதி தான் வெளியிட்ட சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு என்ற நூலை அதிலுள்ள கருத்துகள் எனக்குப் பயன்படும் என்று தந்து உதவினார். அதில் சில அரிய செய்திகள் எனக்குக் கிடைத்தன.

சாதிப் பின்புலம், அரசியல் பின்புலம், உயர் பதவிகளில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்ட குடும்பப் பின்புலம் முதலியவற்றுடன் கண்டிப்பாகப் பணப் பின்புலமும் உள்ளவர்களுக்கு, சராசரிக் குடிமகன் எண்ணிப் பார்க்க முடியாத உயர் சம்பளத்துடன் பலவகைப் படிகளுடன் கணிசமான சட்டத்துக்குட்பட்ட பக்க வருமானங்களுடன் ஓய்வூதியமும் சட்டத்துக்குப் புறம்பான வரும்படிகளும் ஈட்ட வாய்ப்புள்ள பதவிகளைத் தரும் நிறுவனங்களாக இன்றைய பல்கலைக் கழகங்கள் ஒடுங்கிக் கிடக்கின்றன.

இந்தப் பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக நல்கைக் குழு மூலமும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பெருந்தொகைகள் வருகின்றன. அவற்றில் ஒரு தம்பிடியைக் கூட பல்கலைக் கழகச் சம்பளப் பட்டியலில் கையைழுத்திட்டுச் சம்பளம் வாங்குவோர் தவிர வேறெவருக்கும் எந்தத் திட்டத்துக்காகவும் வழங்குவதில்லை என்பதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அசாம் மாநிலத்தில் பேராய்வு(Survey)த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, செங்கம் கு.வெங்கடாசலம் என்ற பெரியவர் சிந்து சமவெளி அகழ்வில் கிடைத்த எடைக் கற்களை ஆய்ந்து அவற்றின் எடைகள் தமிழர்களிடம் இருந்த காணி வாய்பாட்டில் இருப்பதைக் கண்டறிந்தார் தமிழகத்திலுள்ள இந்த வாய்பாடு நீட்டல், முகத்தல், நிறுத்தல் ஆகிய அனைத்துக்கும் பொதுவாக இருப்பதை வெளிப்படுத்தினார். மாட்டு வண்டி செய்யும் கொல்லுத்தொழில் வல்லோரிடமிருந்துதான் அவர் வண்டிப் பைதா(சக்கரம்)வின் ஆரை, சுற்றளவு ஆகியவற்றை அறிந்து பிரிட்டீசு நீட்டலளவையில் தொடரி(சஙஙகிலி), படைசால்(பர்லாங்கு) ஆகியவற்றுக்கும் அவற்றுக்குமுள்ள உறவை வெளிப்படுத்தினார். பண்டைத் தமிழ்க் கணித நூலான கணக்கதிகாரம் பற்றிய ஆய்வை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்துவதற்கு இசைவு கேட்டு அப்போது துணை வேந்தராக இருந்த, தமிழ்ப் பேராசிரியர்களில் ஒரு சாரரால் மிகவும் போற்றப்படும் ப-ர்.திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவரோ “எங்கள் பேராசியர்களே அதைச் செய்வர்” என்று திருப்பிவிட்டார் அவரை. அவர் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காகச் செயற்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்து தன் செயற்பாடுகளைத் திருப்பிக்கொண்டார்

இந் நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட காரணம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் சென்ற நூற்றண்டின் தொடக்கத்திலும் சிங்காரவேலு முதலியார், நா.கதிரைவேற்பிள்ளை போன்றவர்கள் தமிழ் இலக்கிய – இலக்கணங்கள், நிகண்டுகள், மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த நூற்கள், சமற்கிருத நூற்கள், தொன்மங்கள், இற்றை அறிவியல் ஆகியவற்றிலிருந்து கடுமையான உழைப்பில் முறையே அபிதான சிந்தாமணி, தமிழ்மொழி அகராதி என்ற கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிட்டனர். மு.ஆபிரகாம் பண்டிதர் தானே இசை மாநாடுகள் நடத்தி கர்நாடக இசைக்கு மூலம் பழந்தமிழ் இசைதான் என்பதை இந்நிய அளவில் நிலைநாட்டியதுடன் கருணமிர்த சாகரம் என்ற அரிய ஆய்வுநூலையும் வெளியிட்டார். தொடக்க முயற்சிகளாகிய முதல் இரண்டு கலைக்களஞ்சியங்களையும் எத்தனையோ வகைகளில் மேம்படுத்த வேண்டியுள்ளது. பல்லாயிரங்கள் என்று சொல்லும் வகையில் பண்டிதர்(முனைவர்)களை நம் பலைகலைக் கழகங்கள் படைத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களில் எவரும் இத் திசையில் சிந்திக்கவில்லை. மலையாளத்தில் அத்தகைய சான்றுகளைக் காட்டும் கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துவிட்டதென்று நண்பர் செயமோகன் கூறினார்.

இந்த நூலை நான் எழுதிய போது வாசனைப் பொருள்களைப் பொறுத்தவரை பெயர் முரண்பாடுகள் பல வெளிப்பட்டன. இதில் முடிவு எடுக்க முடியாததால் மேற்படி கலைக்களஞ்சியங்களும் கழகத் தமிழ் அகராதியும் தந்துள்ள பொருள்களை பட்டியலிட மட்டும்தான் என்னால் முடிந்தது. இது பற்றி தமிழ் மருத்துவக் குடும்பத்தில் தோன்றி இன்றும் மருத்துவம் பார்க்கும் பள்ளி ஆசிரியர் நண்பர் திரு.ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் கூறிய போது அவர் கொடுத்த பட்டியலை இணைத்துள்ளேன். உண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவக் கல்லூரிகள் போன்றவை இந்தத் திசையில் செயற்பட வேண்டும். ஆனால் பிற “தொழிற்” படிப்புகளுக்கு இடம் கிடைக்காமல் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்து பட்டம் பெற்றுவிட்ட இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உயர் சம்பளத்தில் வேலையும் வெளியே தனித் தொழிலும் செய்ய வாய்த்த பின் மேற்கொண்டு உடம்பையோ மனதையோ ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

எவரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வது என் நோக்கமல்ல. மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகளின் இயற்கையான ஆர்வங்கள், திறைமைகளை இனங்கண்டு படிப்பு – செயலறிவு என்று மாற்றி மாற்றி கல்வியைப் புகட்டி ஒவ்வொரிடமிருந்து பெறத்தக்க மீப் பெரிய ஆற்றலை வெளிப்படுத்தி நாட்டுக்குக் கிடைக்கத்தக்க மீப் பெரிய மனித வளத்தை உருவாக்குவதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலிருந்தே சிந்திக்கும் திறனை அழிக்கும் ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து வல்லரசியத்துக்குத் தேவைப்படும் சிந்திக்கத் தெரியாத மனித இயந்திரங்களை உருவாக்கும் இன்றைய கல்வி முறையின் பால் நம் கவனத்தை ஈர்க்கவே இதை இங்கு கூறுகிறேன்.

நூல்களை அதிகாரம் அதிகாரமாகப் படித்து செய்தியை உள்வாங்கித் தேர்வில் விடை எழுதுவதற்குப் பகரம் வரி வரியாகப் பிரித்து மாணவனின் புரிதல் திறனைக் கருவறுக்கும் கேள்வி வங்கி முறை என்றும் நான்கு விடைகளைக் கொடுத்து ஒற்றையா இரட்டையா என்று எழுதவைக்கும் புறவகை (Objective type) வினாக்கள் முறையும் பள்ளிக் கல்வியின் போதே மாணவர்களின் சிந்தனைத் திறனை முடக்கிவிடுகின்றனர். இரண்டாண்டு மூன்றாண்டுகளுக்குரிய பாடங்களை மனதில் வைத்து இறுதித் தேர்வில் எழுதுவதை நிறுத்தி பருவமுறை என்று கல்லூரிக் கல்வியைப் பயனற்றதாக்கினர். ஆய்வேடுகளில் மாணவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் முன்னவர் ஒருவரை மேற்கோள் காட்டுவது இன்றியமையாதது, அதாவது மாணவர் தன் சொந்தக் கருத்து அல்லது முடிவு என்று எதையும் கூறிவிடக்கூடாது என்பது கண்டிப்பான நடைமுறை. எனவே ஆய்வேடுகள் என்பவை வெறும் செய்தித் தொகுப்புகளாகவே இருக்கின்றன. இந்தப் பின்னணியில் ஆய்வேடு எழுதிக் கொடுத்து பணம் ஈட்டும் ஒரு கூட்டமே பல்கலைக் கழகங்களின் தாழ்வாரங்களில் ஆட்சி செலுத்துகிறது. இந்த உத்திகள் அனைத்தும் அமெரிக்காவின் வழிகாட்டுதலில் புகுத்தப்பட்ட நடைமுறைகள். இவ்வாறு திரட்டப்பட்ட புலனங்களை(தகவல்களை) வரிசைப்படுத்துவதற்கு என்றே கணினிப் பணியாளர்கள் அமெரிக்காவுக்கு தொடக்க காலங்களில் தேவைப்பட்டார்கள். அதற்கேற்பவே நம் ஆட்சியாளர்களை கல்வித் துறைக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை என்றும் இங்கிருந்து ஊழியர் படை செல்வதற்கு மனிதவள ஏற்றுமதி என்றும் இழிவான பெயர் சூட்ட வைத்தனர் அமெரிக்க ஆண்டைகள். ஆனால் அமெரிக்கக் கல்வி முறை மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதாகத்தான் இன்றும் இருக்கிறது. ஆங்கிலர் நம்மை ஆண்ட போது அங்கே வழக்கிலிருந்த கல்வி முறையைத்தான் இங்கும் கடைப்பிடித்தார்கள். ஆனால் அங்கிருந்த வளர்ச்சி நிலைக்கும் இங்கிருந்த நிலைக்கும் இருந்த எட்டிப்பிடிக்க முடியாத ஏற்றத்தாழ்வால் அக் கல்வியும் நமக்குப் பயனளிக்கவில்லை.

கடலாடு காதையில் அடிகளார் தரும் இன்னொரு பட்டியல் மாதவி சூடிய அணிகலன்கள் பற்றியது. இது பற்றி தெரிந்துகொள்ளப் பொருத்தமானவர் திரு.செந்தீ நடராசன் என்று அவரை நண்பர் ஆபிரகாம் லிங்கனுடன் சென்று பார்த்தோம். அவர் சில அணிகலன்களின் படத்தை வரைந்து விளக்கங்களுடன் தந்தார். கடலாடு காதையில் மட்டுமல்ல சிலப்பதிகாரம் முழுவதிலும் கூறப்படும் பலவேறு அணிகலன்களை அவற்றை அணிந்து காணப்படும் சிலைகளின் புகைப்படங்களுடன் விளக்கும் ஒரு தனி நூல் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

இந் நூல் இன்றைய வடிவம் பெறுவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற மேலே கூறப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனக்கு மாணவர் போலவும் பல சூழல்களில் வழிகாட்டியாகவும் விளங்கும் நண்பர் ம. எட்வின் பிரகாசு அவர்களுக்கு நன்றி கூறுவது எனக்கு நானே நன்றி கூறுவதாக அமையும் என்றாலும் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் தமிழினி வசந்தகுமார் அவர்கள் என் மீது அளவற்ற நம்பிக்கையுடன் இந் நூல் முடிவடையும் முன்பே வெளியிட முன்வந்ததற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அவருக்கு அறிமுகம் செய்ததன் மூலம் தமிழினி இதழில் படைப்புகள் வெளிவரக் காரணமான நண்பர் செயமோகன் அவர்களுக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடன் பெரிது.

இறுதிக் கட்ட வகுப்புகளின் போது அவ்வப்போது நான் எழுதி வந்த குறிப்புகளையும் அவற்றில் அவ்வப்போது செய்யும் மாற்றங்களையும் பொறுமையுடன் தட்டச்சு செய்து உதவிய திருமதி பிந்துமதி நாகரானுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நூல் ஒரு கருத்துப் போரை உருவாக்கும் என்று நம்புகிறேன். நின்று நிலைத்துவிட்ட கருத்துகளையும் கொள்கைகளையும் மறுபார்வைக்கு உட்படுத்துவது குமுகம் முன்னேறி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை என்பதில் உறுதியாக இருக்கும் நான் அறிஞர் பெருமக்களிடமிருந்து வளமான எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
குமரிமைந்தன்.
திருமங்கலம் (மதுரை மாவ.)
26 - 07 - 2014.

5.7.09

மதுரையை எரித்தது யார்? .....3

சிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.

தமிழக் மூவேந்தரும் கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில்
[1] தமக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து அண்டை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டதாகவும் அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்து வைத்திருக்கிறான். கலிங்க நாட்டில் அப்போது சமணம் அரச மதமாயிருந்தது.

ஏற்கனவே துவக்கத்தில் நாம் கூறிய விருந்தில் மன்னர் இவ்வாறு வெளியே இருந்து வந்த சமணத்தைத் தழுவியவரும் காஞ்சியில் ஆட்சி செய்தவருமான திரையர்களாயிருக்கலாம். இவர்களே பின்னர் வடமொழி தழுவி தங்கள் பெயரைப் பல்லவர் என்றாக்கிக் கொண்டார். (பல்லவம்-திரை-கடல் அலை) வரிச் சுமையால் நொந்து போயிருந்த கறை கெழு மாக்களும் சமணர்களுமாகிய வணிகர்களிடையில் உள்ள அறை போகு குடிகளை(காட்டிக் கொடுப்போரை)ப் பயன்படுத்தி இப்படையெடுப்பு நடைபெற்றதால் சமணர்கள் தமிழக அரசர்க்கு வேண்டாதாராயினர்.

இதனாலேயே கவுந்தியடிகளும் புகாருக்கு வெளியே தோன்றி மதுரைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். பார்ப்பனரும் எயினரும் ஆயரும் வேடரும் மன்னன் வாழ்க எனக் கூறினும் கவந்தியும் கோவலனும் ஒரு போதும் மன்னனை வாழ்த்தவில்லை. இவ்வாறு சமணர்கள் அரசர்க்குப் பகையாயிருந்தாலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆயர் முதுமகள் மாதரி காவுந்தியைக் கண்டடி தொழலும் அவர் அடைக்கலமாகத் தந்த கோவலன்-கண்ணகியைப் போற்றிப் புரந்ததும் அவர்கள் மாண்டதறிந்து தான் உயிர் விட்டதும் இதற்குச் சான்றாகின்றன.

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்......... (16:28)


என்று மாதரி கோவலனை மதித்துக் கூறுகிறாள். (மக்கள் மீது சமணத்துக்கு இருந்த இந்த செல்வாக்கு 7-ஆம் நூற்றாண்டில் 8000 சமணர்களைச் சம்பந்தர் கொலை செய்த கொடுமைக்குப் பின்னரும் நெடுநாள் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது).

கோவலன் சமணனாயிருந்ததே அவன் சாவுக்குக் காரணமாகியதோ என எண்ணத் தோன்றுகிறது. சமணர்களைப் பகைவன் ஒற்றர்களாகத் தமிழ் மன்னர்கள் கருதிய காலமது. (கல்கியின் சிவகாமியின் சபதமும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது இங்கு கருதிப் பார்க்கத் தக்கது.) கோவலனை ஒற்றன் என்று கருதியதாலேயே அவனை மூதலிப்பு (உசாவல்) இன்றிக் கொல்ல பாண்டியன் ஆணையிட்டிருக்க வேண்டும்.

கோவலனின் முற்பிறப்புச் செய்தியில் வரும் நீலியின் கணவன் சங்கமன் என்ற வாணிகன் ஒற்றன் என்றே கொலைப்பட்டான் என்ற சேதியும் ஒப்பு நோக்கத்தக்கது. இதை மறைமுகமாக கோவலன் பற்றிய தன் பழம் பிறப்புக் கதையில் சாத்தனார் வெளியிட்டார் போலும். முற்பிறப்பில் பரதானாயிருத்த கோவலன் சமணத்தை வெறுப்பவனாயிருந்ததால் அவன் சமணனாகிய சங்கமனை ஒற்றனாகப் பிடித்தான் என்கிறது சிலப்பதிகாரம்

விரத நீங்கிய வெறுப்பின (ன்) ஆதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன்.......
23: 155-156

இவ்வாறு சோழ நாடு அரசுரிமைப் போராலும் பாண்டிய நாடு மக்களின் கசப்பாலும் வெளிநாட்டாரின் படையெடுப்புகளுக்கு ஆட்படும் நிலையிலிருந்த வேளையில் சேர நாட்டில் இளங்கோ வாழ்ந்தார். அவர் தமிழகத்தி நிகழ்பவற்றை நன்கு எடைபோட்டு வைத்திருந்தார். இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தது போன்றே அரசியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். மூவேந்தர் ஒற்றுமையுடன் மக்களின் ஒற்றுமையும், மன்னர்களோடு அவர்களின் ஒத்துழைப்பும் தான் தமிழகத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்திருந்தார். பொதுமக்கள் மீதும் அவர்களின் பண்பாடு மீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். எனவே தான் தன் நூலில் சங்க இலக்கியங்களின் தொகுப்பினுள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களான கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை, கந்துக வரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியவற்றைப் பெய்து வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் கலைகளை அறிந்து கொண்ட அவருக்கு எளிய மக்களோடு நெருங்கிய தொடர்பிருந்திருக்க வேண்டும்; மக்கள் மீது மிகுந்த செல்வாக்கிருந்திருக்க வேண்டும். அவர் தங்கள் மன்னராக வேண்டுமென்று மக்களில் பலர் விரும்பியுமிருக்கலாம். இத்தகைய அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு சேர மண்ணில் அரசுரிமைப் போரைத் தூண்டும் முயற்சியே, நிமித்திகள், இளங்கோவடிகளே அரசராவார் என்று கூறிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் பகைநாட்டு அரசுகளை வீழ்ந்த இத்தகைய உத்திகளை அர்த்தசாத்திரம் பரிந்துரைக்கிறது. அரசியலில் தெளிவும் தமிழர் நலத்தில் நாட்டமும் கொண்ட இளங்கோவடிகள் உரிய முறையில் நிமித்திகள் சூழ்ச்சியை முறியடித்ததையே அவரது துறவு குறிப்பிடுகிறது. ஆனால் அவரது ஈகம் தமிழகத்தில் அவர் விரும்பிய பலனைத் தரவில்லை என்றே வரலாறு காட்டுகிறது. குறுகிய காலத்தினுள் மூவேந்தர் ஆட்சியும் அழிந்து களப்பிரர் ஆட்சி தோன்றியது.

இவ்வாறு அரசகுலத்தில் தோன்றியதும் கதை நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததுமே நடந்தவற்றை அப்படியே கூற முடியாமல் இளங்கோவடிகளைத் தடுத்திருக்க வேண்டும். தம் போன்ற அரச குலத்தினரின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே பாண்டியன் ஆட்சியை ′வளையாத செங்கோல்′ என்று பலமுறை கூறுகிறார். இது சேக்சுபியரின் சூலியசு சீசர் நாடகத்தில் அந்தோனி ′But Brutus is an honourable man′ என்று பலமுறை கூறுவதை ஒத்தது. இருப்பினும் பாண்டியன் ′கோல் வளைந்தது′ என்றும் கூறுகிறார். இருந்தாலும் உலகுக்குக் கூறப்பட்ட மதுரை நிகழ்ச்சிகளுக்குள் கூறப்படாத ஒரு வரலாறும் இருக்கிறதென்று காட்ட தாமே சிலப்பதிகாரம் எழுதத் துணிந்தார் எனலாம். ஆனால் மக்கள் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை அவர் விரும்பினார் என்று கூற முடியாது. ′அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்′ என்று ஆட்சியிலிருப்போர்க்கு எச்சரிப்பதே போதுமென்று கருதினார். (அறம் என்ற சொல்லுக்கு சமுதாய நீதி, அதாவது மக்களின் கூட்டு விருப்பம் என்றும் ஒரு பொருள் உண்டு) மொத்தத்தில் இளங்கோவடிகள் ஒரு குடியாட்சி முடியரசியரே (Democratic Monarchist)

அரசர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாமென்று ஐயுறத்தக்க தடையமொன்று சிலம்பில் உண்டு. சாத்தனார் மூலம் மதுரையில் நடந்ததை அறிந்த செங்குட்டுவன்

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லென ...
(25: 203-204)


என்று கூறுவதைக் காணலாம்.

இளங்கோவடிகள், வேதவியாசர், வால்மீகி போன்று தான் கதையில் தோன்றும் உத்தியைக் கையாண்டுள்ளார் என்று கூறவது பொருந்தாது. எடுத்துக்காட்டாக வேதவியாசர் மகாபாரதத்தில் தவிர்க்க முடியாத பங்கேற்றுள்ளார். பாண்டவர் மற்றும் கவுரவர்களின் தந்தையர்க்கு அவர் தான் தந்தை. கவுரவர்களின் தாயின் கருச்சிதைவுற்ற போது அதை 100 பாண்டங்களில் திரட்டி குழந்தைகளாக்கியது அவரே. இவ்வாறு வியாசரில்லை யென்றால் மகாபாரதக் கதையே இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அவர் வாழ்க்கையின் ஒரு முகாமையான நிகழ்ச்சி கதையில் வெளிப்படுகிறது; அது கதையில் இடம் பெறாவிடினும் கதைக்கு எந்தப் பாதிப்பும் மாற்றமும் நேராது. சில நிகழ்ச்சிகளுக்குத் தானே சான்றாகும் விளைவு தான் சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏற்றுள்ள பங்குக்கு உண்டு.

இவ்வாறு சிலப்பதிகாரம் தமிழகத்தில் மிக முகாமையான ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் கட்டற்ற முடியாட்சியராக மாறிவருகிறார்கள். பார்ப்பனர்கள் அரசர்களின் துணையுடன் வருண முறையைப் புகுத்தப் பார்க்கிறார்கள். விளைப்புக் கருவிகளை உடைமைகளாகப் பெற்றிருந்த வேளாளருக்கும் விளைப்பு ஆற்றலைக் கொண்டிருந்த உழைப்போருக்கும் பண்டங்களின் பங்கீட்டைக் கையாண்ட வாணிகருக்கும் குமுகாயத்திலிருந்த இடம் மறுக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். விளைப்புப் பாங்குடன்(Mode of production) எவ்வித உறவு மில்லாத ஒட்டுண்ணிகளான அரசும், மதமும் தலைமைதாங்க முயன்றன. விளைப்பு விசைகளுக்கும்(Productive forces) விளைப்பு உறவுகளுக்கும்(Productive Relations) இடையில் போராட்டம் நிகழ்ந்து சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குப் பகரம் பொருட்டுறை அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. வகுப்புகளாகப் பிளவுண்டிருந்த மக்கள் வருணங்களாகப் பிளவுறுவதை ஏற்கவில்லை; இதற்கு ஆணித்தரமான சான்றைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல முதுமகள் தன் மகள் ஐயையை நாத்தூண் நங்கை (16:19) அதாவது கண்ணகியின் நாத்தனார் என்று கூறுகிறாள்.

இன்னும் வாழ்த்துக் காதையில் ஐயையை மாமி மடமகள் (8) என்றும் கூறுகிறாள்.

மேலும் பார்ப்பன மங்கை தேவந்தியும், காவற்பெண்டு, அடித்தோழி ஆகிய உரிமைச் சுற்றத்தாரும்(அடிமையரும்) வேறுபாடின்றி கண்ணகியைத் தோழி என்றே அழைக்கின்றனர். பொருட்டுறை வேறுபாடு குமுகியலியல் வேறுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நிலையையே இது காட்டுகிறது.

அதே வேளையில் பார்ப்பனரும் அரசரும் சேர்ந்து வருணத்தைப் புகுத்தினர். வெவ்வேறு வருணத்தார்க்கு வெவ்வேறு வீதிகள் வகுத்தனர். இத்தெருக்களை அடையாளந் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட படிமங்களைத் தான் வருணப் பூதங்களென்று குறிப்பிட்டார் போலும். இத்தெருக்களையும் அவற்றின் அடையாளங்களையும் புரட்சியாளர்கள் அழித்ததைத் தான்,

நாற் பாற் பூதமும் பாற் பாற் பெயர
......................................................
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்
கா வெரியூட்டிய நாள் போற் கலங்க.......
(22:108-112)


இவ்வாறு தனித்துக் குறிப்பிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

பார்ப்பாரறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி யெனு மிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர் கென்று ......
(21:53-55)


கண்ணகி கூறியதாகக் கதை கூறுகிறது. ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட நால்வேறு தெருவும் கலங்குவதாகவும் கூறுகிறது.

இனி அழல் 'தீத்திறத்தார்' யார் யாரைச் சேர்கிறது என்று பார்ப்போம்.

1) கோமகன் கோயில் - அரண்மனை (22:14)


2) (பார்ப்பனர் உள்ளிட) வருண முறையை ஏற்றுக்கொண்டோர் வாழும் தெருக்கள் (22:110:112)

3) மறவோர் சேரி - போர் வீரர்களின் சேரி (22:114)

4) யானை, குதிரைக் கொட்டில்கள் (22: 117-118)

5) கணிகையர் ஆடரங்கு (22:142)

6) கூல மறுகு (22:109)

7) கொடித் தேர் விதி. (22:109)

இவ்வாறு மேற்கூறிய இடங்களிலுள்ள பெண்கள் குழந்தைகள், விலங்குகள், முதியோர் நீங்கலான ஆடவர் தீயால், அதாவது புரட்சியால் தாக்குண்டனர், அதாவது அரண்மணை, நால் வருணத் தெருக்கள், படைமறவர், சேரி, யானை குதிரைக் கொட்டில்கள், கணிகையரின் ஆடரங்குகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அரசனும், வருணமேந்திகளும் அவர்களின் இன்ப நுகர்ச்சிக்களமாகிய கணிகையர் வீதிகளுமே அதிகத் தாக்குதலுக்குள்ளாகின்றன. உண்மையில், பெருமனைக் கிழத்தியர், குடும்பப் பெண்கள், மகிழ்கின்றனர். (22:133).

இவ்வாறு மன்னனின் கட்டற்ற ஆட்சியையும் வருணமுறைப் புகுத்தலையும் எதிர்த்து மக்கள் நிகழ்த்திய(பூர்சுவாப் புரட்சி) புரட்சி முறியடிக்கப்பட்டது. பின்னோக்கித் திரும்பிய தமிழக வரலாற்றைத் தடுத்து நிறுத்த மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 நூற்றாண்டுகளுக்கான தமிழக வரலாற்றில் இந்த பின்னோக்கிய ஓட்டம் நிற்கவில்லை என்பது வரலாறு விரிவாகக் கூறுகிறது. இந்தத் துயர வரலாற்றுத் திருப்புமுனையைக் காட்டும் எல்லைக்கல்லாக சிலப்பதிகாரம் நிற்கிறது.


அடிக்குறிப்பு:

[1] அண்மையில் வெளியான் ஒரு செய்தியின்படி இந்தக் கூட்டணி கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. பார்க்க: அந்த 1300 ஆண்டுகள் (கி.மு. 1465 - 165) ,மா. கந்தசாமி. கட்டுரை, கணையாழி, பிப்ரவரி, 2005, பக். 41-45

மதுரையை எரித்தது யார்? .....2

இந்தக் கலகத்தை நடத்தியதில் ஏதாவதொரு குறிப்பிட்ட வகுப்பு ஈடுபட்டதாகக் காண முடியுமா என்று ஆய்ந்தால், காண முடியும் என்று தோன்றுகிறது.

நெடுஞ்செழியன் மாண்டதை அடுத்து கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் மதுரைக்கு வந்து பொற்கொல்லர் ஆயிரவரை நங்கைக்கு(கண்ணகிக்கு)ப் பலி கொடுத்தான் என்று சிலம்பு கூறுகிறது. பொற்கொல்லன் சூழ்ச்சியால் கோவலன் கொலைப்பட்டான் என்பதால் தான் இது நிகழ்ந்திருக்குமென்று தோன்றவில்லை.

நகைத் தொழில் மதுரையில் மிகப் பெருந்தொழிலாயிருந்திருக்க வேண்டும்.

நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர (16:106) வந்த பொற்கொல்லனிடம் நூற்றுவர்க்குக் குறையாத நுண்வினைக் கொல்லர்கள் பணியாற்றிருக்க வேண்டும். இன்று 5 பேருக்கு மேல் வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தொழிற் கட்டங்களுக்கு உட்படுகின்றன. நூறு பேருக்கு மேல் வைத்திருக்கும் இப்பொற்கொல்லன் ஒரு பெரும் தொழில் முதலாளியாகிறான். இத்தகைய ஒரு தொழில் முதலாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த மன்னன் தொழிலாளர் பகைவனாயிருப்பது தவிர்க்க முடியாதது. நகரில் இவனைப் போன்ற பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும். நகரில் மட்டுமின்றி நாடு முழவதும் இவனன்றி இன்னும் பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பொன் மாற்று அறிவதற்கென்றே ′பொன்வாரியங்கள்′ இருந்ததற்கான சான்றுகள் உள. இவ்வாறு மன்னன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பொற்கொல்லர்கள் ஒன்று திரண்டு மதுரைக் கலவரத்தை(அல்லது புரட்சியை) முன்னின்று நடத்தியிருக்கலாம். அது நாட்டுப் புறங்களிலும் பரவத் தொடங்கியிருக்கலாம். அக்கலகங்களுக்குத் தலைமை தாங்கியோரே இவ்வாயிரம் பொற்கொல்லாராயிருந்திருக்க வேண்டும்.

அடுத்து இந்நிகழ்ச்சியில் புலவர் சாத்தனாரின் பங்கு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சாத்தனார் மதுரைப் புரட்சியின் இயக்கு தலைவராயிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு சேர அரசு குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பது போல் தோன்றினாலும் மணிமேகலை காட்டுகிறபடி பொதுவாக அரசகுலத்தின் மீது வெறுப்பு இருப்பது தெரிகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் பாண்டிய நாடு சேரனுக்கு உட்பட்டிருந்தது.

தென் னரிட்ட திறை யொடு கொணர்ந்து..... (26:169)

எனவே தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் கலக மேற்பட்டால் அதை அடக்க வேண்டியது சேரனின் கடமையும் தேவையுமாகிறது. அந்த நோக்கத்துடனேயே பெரியாற்றின் கரை மீது செங்குட்டுவன் பாடியிறங்குகிறான். அவனுக்கு கண்ணகி வரலாறு தெரிந்திருக்கவில்லை. கண்ணகி வந்து வானுலகெய்திய செய்தியை வேட்டுவர் கூறிய பிறகு தான் அவன் கண்ணகியைப் பற்றி அறிகிறான். அவள் மதுரைக்கு எரியூட்டியதைச் சாத்தனார் மூலமே அறிகிறான்.

கதையின் படி, மதுரை எரிந்த பதினான்காம் நாள் கண்ணகி இறக்கிறாள். அதுவரை மதுரையில் நடந்தது, அதாவது மதுரை எரிந்தது செங்குட்டுவனுக்குத் தெரியாதிருக்க முடியாது.

நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா........
(25:173-174)

என்றவாறு ஒற்றர் மூலம் அச்செய்தி அவனுக்கு உடனே கிடைத்திருக்க வேண்டும். கண்ணகி முலைமுகத் தெழுந்த தீ தான் மதுரையை எரித்தது என்பதை சாத்தனார் மூலமே அவன் அறிய முடிந்த தென்றால், மக்களால் தான் மதுரை எரியுண்டது என்றே அவன் அதற்கு முன்பு அறிந்திருக்க வேண்டும். (கண்ணகி பற்றி ஒற்றர்கள் கூறவில்லை யென்றால், கண்ணகி பற்றிய நிகழ்ச்சி அல்லது அவளேற்ற பங்கு அவ்வளவு முகாமையில்லாத ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரே அவளைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டும்.) அந்தக் கலகத்தைக் தேவைப்பட்டால் அடக்கலாம் என்ற நோக்கத்துடனேயே பாண்டிய நாட்டெல்லை யருகில் அவன் பாடி யிறங்கியிருக்க வேண்டும். இவ்வாறு பாண்டிய நாட்டு எல்லை நோக்கி செங்குட்டுவன் வருவதையறிந்து தான் போலும் சாத்தனார் அவனருகில் சென்று சேர்ந்திருக்கிறார். அவன் பாண்டிய நாட்டினுள் நுழைந்து புரட்சியில் ஈடுபட்டவர்களை அழித்து விடுவதைத் தவிர்க்க இதைச் செய்திருக்கலாம். வேட்டுவர்கள் கண்ணகியைப் பற்றிய சேதியைச் சொன்ன நேரம் பார்த்து பழம் வினை குறித்த தன் புனைகதையை எடுத்துவிடுகிறார், அதாவது மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சியல்ல, ஒரு பத்தினிப் பெண் நிகழ்த்திய இறும்பூதே(அற்பதம்) அது என்று. அதனால் தான் 'யாதவர் வினையென' என்ற பதிகத்தின் கேள்வி மூலம் அப்புனைகதையின் மறையத்தை இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.

இக்கதையைக் கேட்ட செங்குட்டவன் ஒன்றேல் மதுரையில் கலகமொன்றும் நிகழவில்லை, ஒரு பத்தினிப் பெண்ணின் தெய்வ ஆற்றலே மன்னவனைக் கொன்று மதுரையை அழித்தது என்று நம்பியிருக்க வேண்டும்; அன்றேல், மதுரையில் நடந்தவாறு, அதாவது மக்கள் மன்னனையும் அரசியையும் கொன்று நகரத்தைத் தீக்கிரையாக்கியது போன்ற போக்குகள் தன்னாட்டுக்கும் பரவாமல் தடுக்க இக்கதை உதவுமென்று கருதியிருக்க வேண்டும். முதலில் கூறியது போல் செங்குட்டுவன் நம்பியிருந்தால் பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் எடுப்பதன் மூலம் மக்களின் பரிவைப் பெறவோ, நம்பவில்லையாயின் மக்களின் கவனத்தைக் திருப்பவோ இமயத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு, இங்கு தான் மதுரை நிகழ்ச்சியின் அலுவலகக் கூற்று(Official Version) உருவாகியிருக்க வேண்டும்.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக் காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறது.

இறுதியாக, இவ்வாறு புறத்தே ஒரு கதையும் அகத்தே ஒரு கதையும் வைத்து எழுதிய இங்கோவடிகள் யார் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. நாம் மேலே அணுகியுள்ள முறை சரியாக இருந்தால் ஒரு விடையும் காண முடியும் போல் தோன்றுகிறது.


(தொடரும்)

மதுரையை எரித்தது யார்? .....1

வடிவத்துக்காகவே பல இலக்கியங்கள் போற்றப்படுகின்றன. சில இலக்கியங்கள் அடக்கத்தை அறியமாட்டாமையால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தது சிலப்பதிகாரம். இந்நூல் தலைசிறந்த இலக்கிய உத்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. அவற்றுள் ஒன்று இற்றை இதழியலை (Modern Journalism) ஒத்தது.

அதாவது சிலப்பதிகார ஆசிரியர் தாம் கூறிய சேதிகளில் ஏறக்குறைய அனைத்துக்கும் யாரோ ஒருவருடைய கூற்றை எங்கோ ஓரிடத்தில் சான்றாகக் காட்டுகிறார். எடுத்துக் காட்டாக, புகாரில் நடந்தவற்றுக்கு தேவந்தி, செவிலி, காவற்பெண்டு, மாடலன் முதலியோரையும் மதுரையில் நிகழ்ந்தவற்றுக்கு புலவர் சாத்தனார், ஐயை முதலியோரையும் சான்று காட்டுகிறார். இன்னும் இது போன்று பல சான்றுகளை ஊன்றிப் படிப்போர் நூல் நெடுகிலும் காண முடியும்.

இவ்வாறு தன் நூலுக்கு சான்றுகளைக் காட்டுவது தற்செயலானது என்றோ அல்லது வெறும் உத்தி என்றோ தள்ளிவிடத் தோன்றவில்லை. தான் கூறும் கதையில் உண்மையில் அவருக்கே ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது மக்கள் அறிந்த சேதிகளுக்கு மாறுபாடாகத் தாம் எடுத்துவைக்கும் கதைக்காக அவர் தம் மீது பிழையில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இவ்வுத்தியைக் கையாண்டிருக்க வேண்டும். அவ்வாறு அவர் வெளிப்படையாகக் கூறும் கதைக்கு மாறுபட்டதாக வேறு கதை ஏதாகிலும் இந்நூலுக்குள் புதைந்து கிடக்கிறதா, அவ்வாறாயின் அக்கதை யாது என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

பதிகத்தில் இளங்கோவடிகள் சாத்தனாரிடம் ஒரு கேள்வி போடுகிறார்.

வினைவிளை காலமென்றீர் யாதவர்
வினை விளை வென்ன...
(பதிகம் 37-38)

இந்த வினையும் விளைவும் பற்றி கட்டுரை காதை, நூலில் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால் அங்கு தோன்றாத ஒரு சேதியை இக்கேள்வி பதிகத்தில் வெளிப்படுத்துகிறது.

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளீருள் கிடந்தேன்

என்று தொடங்கி மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குப் பழம்பிறப்புரைத்ததும் அப்பழம்பிறப்பு வினையின் விளைவே கோவலன் கொலையுண்டது என்றும் கூறியதைத் தான் கேட்டதாக சாத்தனார் விடை கூறுகிறார். (பதிகம் 39-54)

இவ்வாறு கட்டுரை காதை முழுவதற்கும் சாத்தனாரைப் பொறுப்பாக்கி விடுகிறார் இளங்கோவடிகள். அப்படியானால் சாத்தனாரின் கூற்றில் அடிகளுக்கு ஐயமேற்படக் காரணம் இருந்ததா? இருந்திருக்கலாமென்றே தோன்றுகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர் அரசுகளும் மிகக் குழப்பமான நிலையிலிருந்தமை நூல் முழுவதும் படிக்கும்போது தெரிகிறது. அதனை மிக நுணுக்கமாக ஓரிடத்தில் ஓர் உவமை மூலம் காட்டுகிறார் அடிகள். அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் கதிரவன் மறைந்ததால் கவிந்த இருளை நிலவு தோன்றி அகற்றுவதை,

கறை தெழு குடிகள் கை தலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி
வலம்படு தானை மன்னரில் வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
.............................................................
மல்லல் மூதூர் மாலை வந்திறுத் தென
இளையராயினும் பகையரசு கடியும்
செருமான் தென்னர் குல முதலாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
............................................................
மீனரசாண்ட வெள்ளி விளக்கத்து.....
(4: 10-26)

சோழர் கதிரவன் குலமென்பதும் பாண்டியன் நிலவுக் குலமென்பதும் மரபு. இங்கு கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்ததை வலம்படு தானை மன்னரில் வழி என்பதன் மூலம் சோழப் பேரரசன் இயற்கை யெய்தி புதிய அரசன் பட்டமேறாத இடைக்காலத்தைக் குறிக்கிறது எனலாம். கரிகாலன் காலத்துக்குப் பின் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிகளுக்கிடையில் கலகம் நிகழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் சிலம்பு கூறும் ′விருந்தின் மன்னர்′ (புதிய மன்னர்) சோழ குலத்தவராக இருக்க முடியாது. இலக்கியங்கள் மறைக்கும் நிகழ்ச்சி ஏதோ ஒன்று அதில் அடங்கியிருக்க வேண்டும். அரசு வலுவிழந்திருந்த போது புதிதாகத் தோன்றிய சிற்றரசு ஒன்றின் அரசன் புகார் மீது படையெடுத்து அதைப் பிடித்திருக்க வேண்டும். உள்நாட்டுக் குழப்ப நிலையை அவன் பயன் படுத்தியிருக்க வேண்டும். இவ்வெதிரியை முறியடிக்க, பாண்டியன் ஒருவன் சோழ அரசனுக்கு உதவியிருக்க வேண்டும். அது தான் ′இளையோராயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல்′ என்று நிலவைக் கூறுகிறார். (இவ்வாறு இளமையிலேயே பகைவர்களைச் கடிந்தவனாக ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே கூறப்படுகிறான். இவன் தான் கோவலனைக் கொலைக்களப் படுத்திய நெடுஞ்சழியன்.)


இவ்வாறு முகாமையான ஒரு வரலாற்றுச் செய்தியை ஓர் உவமையினுள் நுண்மையாக இளங்கோவடிகள் மறைந்து வைத்திருப்பதைக் காணும் போது இவர் மூலக்கதையிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் புதைத்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் உருவாகிறது.

உண்மையில் அத்தகைய ஒரு நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் மறைந்திருக்கவே செய்கிறது. சிலப்பதிகாரக் காலம் சங்க காலத்தின் இறுதிக் காலம். சங்க இலக்கியங்களினுள் வரி விதிப்பைப் பற்றி கிழார்களாகிய புலவர்கள் குறைபட்டு அரசனுக்கு அறிவுரை கூறுவோராகக் காணப்படுகின்றனர். அதே வேளையில் அரசர்களை வானளாவப் புகழ்ந்து அளவிறந்த பரிசில்களைப் பெறும் புலவர்கள், குறிப்பாகப் பார்ப்பனப் புலவர்கள் பெருகி வருகின்றனர். இது, வாணிகர், வேளாளர் முதலிய மக்கட் குழுவினருடன் கலந்து முடிவெடுக்கும் தன்மையிலிருந்து அரசன் மாறுபட்டு, மக்களிடமிருந்து விலகி, கட்டற்ற முடியாட்சிக்கு மாறியதையே காட்டுகிறது. இச்சூழ்நிலையில் தம்மை இடித்துரைப்போரை விடத் தம்மைப் போற்றிப் புகழுவோரே அரசர்களுக்கு இனியோராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு சங்க கால இறுதியில் பார்ப்பனர்கள் அரசர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பெறகின்றனர். இதற்கு ஒரு பதமாக:

தடம் புனற்கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி......
(23:118-121)

என்பது காணப்படுகிறது.

இவ்வாறு கட்டில்லா முடியாட்சியின் விளைவுகள் பல துறைகளிலும் பெருகுகின்றன. இப்போது போரிடுவது மக்களுக்குப் பகைவரிடமிருந்து பாதுகாப்பளிப்பது, பஞ்சம் வந்த வேளையில் வளமிக்க நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறுவது என்ற நோக்கம் மாறி மன்னர்தம் புகழ் ஒன்றே குறியாகிறது. போர்களில் அயல்நாடுகளைக் கொள்ளையடித்து தன் அரண்மனையை வளப்படுத்தியும் படைத்தலைவருடனும் படைவீரர்களுடனும் பங்கிட்டும் கொண்டனர் அரசர்கள். தலைநகரில் இவ்வாறு சேர்ந்த செல்வம் ஆடம்பர விளையாட்டுகளில் செலவாயின. விலை மகளிரால் தலைநகர் நிறைந்தது. இதனை மதுரையில் கோவலன் நுழைந்ததும் காட்டுகிறார் இளங்கோ.

வையமுங் கவரியும் மணிக் கால் அமளியும்
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப.......
(14:126-129)

சிறப்புரிமைகளைப் பெற்ற விலைமகளிரை அரசன் உருவாக்கியிருந்தான்.

செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு
வையங்காவலர் மகிழ் தரு வீதியும்........
(14:144-145)

எனவும்

முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை (14:146)

எனவும் கணிகையர் வீதிப் பெருமையும் வீட்டுப் பெருமையும் கூறுவார் போல் அரசனும் சுற்றமும் கணிகையர் வீடுகளுக்குச் செல்வதை அடிகள் குறிப்பாக உணர்த்துகிறார்.

அடுத்து, கொலைக் களக் காதையில்,

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன்
ஊடலுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன் மேலிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக ..........
(16:131-136)

அரசன் பரத்தையர் வீடு சென்றானென்று வெளிப்படக் கூறவில்லை யாயினும் மேலே காட்டியவற்றிலிருந்து அரசன் செயலையும் அதற்காக தேவி ஊடியதையும் குறிப்பாகக் காட்டுகிறார் அடிகள்.

பொற்கொல்லன் திறம் பற்றி யாருக்கும் ஐயமில்லை. அவன் ஒரு கொடியவன், கயவன். ஆனால் அவனுக்கு கோப்பெருந்தேவி கோயில் வாயில் வரை சென்று அரசனைக் காணும் அளவுக்கு உரிமையிருந்தது. அரசனின் ஆட்சித் திறத்தை அவனை அண்டியிருப்போரைக் கொண்டு அளவிடலாம். ′உன்னைத் தெரிந்து கொள்வதற்கு உன் நண்பனைத் தெரிந்து கொண்டால் போதும்′ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப அரசன் ஆட்சி செய்த வகையைத் தெளியலாம்.

இத்தகைய ஓர் அரசனின் தலைநகரில் சிலம்பை விற்று அதை முதலாக்கி வாணிகம் செய்யவென்று வந்த வெளியூர் வாணிகன் ஓருவன் அரசன் ஆணையால் முறைகேடாகக் கொல்லப்படுகிறான். அவன் மனைவியோ இக்கொடுமையை அறிந்து வாளாவிருக்கவில்லை, கொதித் தெழுகிறாள். கையில் மீதமிருந்த சிலம்புபொன்றை ஏந்தி வீதியில் முறையிட்டுக் கொண்டே வருகிறாள்.

பொதுவாக இக்காட்சியைப் பற்றி, கண்ணகி வீதியில் தன்னந்தனியாகத் திரிந்ததாகவே பலரும் கருதுகிறன்றனர். உண்மையில் அவளைத் தொடர்ந்து ஒரு பெரும் கூட்டம் திரண்டு விட்டதை,

கம்பலை மாக்கள் கணவனைத் தான்காட்ட (19:29) என்று ஆசிரியர் காட்டுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

அவள் கணவனைக் கண்டதையும் அவனோடு பேசியதையும் அரசனைக் கண்டு முறை கேட்பேன் என்றதையும் ஒரு பெரும் மக்கட் கூட்டம் பார்த்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தது என்பதை இவ்வொரு சொல் விளக்குகிறது.

இவ்வாறு தன்னையும் வெட்டுண்டு கிடக்கும் தன் கணவனையும் சூழ்ந்து தெருவில் குழுமி நின்ற கம்பலை மாக்காளை (கம்பலை = ஒலி, ஆரவாரம்) நோக்கி,

பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டு கொல்
(19:48-52)

என்று வினவுகிறாள்.

"நீங்கள் பெண்கள் தானா?"
"நீங்கள் சான்றோர் தானா?" என்று கேட்கிறாள்.

இவ்வாறு மாலைக் கதிரவன் மறைந்த பொழுதிலிருந்து மறுநாள் காலை அரசவை கூடும் வரை அவள் மதுரை நகரின் வீதியைக் சுற்றிச் சுற்றி வருகிறாள். இதற்குள் அவளைப் பின் தொடர்ந்து பெருங்கூட்டம் கூடியிருக்க வேண்டும். இதுவரை கேள்வி கேட்பாரின்றி காட்டாட்சி நடத்திய அரசன், அவன் படையினர், காவலர், அவனை அண்டியிருந்த கொடியவர் ஆகியோரின் கொடுமைகளால் கொதிப்படைந்திருந்த அவன் கொட்டத்தை(கொற்றத்தை?) அடக்கவும் கேள்வி கேட்கவும் தங்களுக்குத் தலைமை தாங்க வந்த தெய்வமாகக் கண்ணகியை மக்கள் கண்டனர்.
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்

தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்....... (19:19-20)

செம்பொற் சிலம் பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந் தெய்வம் வந்ததிது வென் கொல்..........
(19:23-24)

மன்பழி தூற்றும் குடியதே மாமதுரை....... (19:28)

என்பவற்றைக் காண்க.

அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்று நாளிதழ்களில் வந்தது. ஒரு தெருவில் மருத்துவர் ஒருவர் குடியிருந்தார். அவருக்கும் அத்தெருவில் குடியிருந்தோர்க்கும் நாட்பட்ட பிணக்குகள் இருந்து வந்தன. ஆனால் அவரை எதிர்க்க வழியின்றி இருந்தனர் அவர்கள். ஒரு நாள் மருத்துவர் வீட்டுக்கு சுமையுந்தில்(லாரியில்) செங்கல் வந்தது. எல்லோரிடமும் சச்சரவிடும் மருத்துவர் செங்கல் இறக்கும் தொழிலாளரோடும் சச்சரவு வளர்த்தார். விளைவு, மருத்துவர் வீட்டைத் தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கினர். இவ்வளவு நாளும் சினத்தை அடக்கி வைத்திருந்த தெருமக்களும் அவர்களுடன் சேர்ந்து மருத்துவர் வீட்டைத் தீவைத்துக் கொளுத்தித் தீர்த்தனர்.

இது தான் மதுரையில் நடந்தது. நெடுநாட்களாக அரசனும் அவனைச் சார்ந்தவர்களும் மக்களுக்கு இழைத்த தனித்தனிக் கொடுமைகளுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த மக்களை ஒன்றுதிரட்டும் கருவாக கண்ணகி செயற்பட்டாள். அந்த மக்களால் கொளுத்தப்பட்ட தீ தான் கண்ணகி மூட்டிய தீ.

(தொடரும்)