ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

துவரையம்பதி

முரண்பாடுகள் தாம் வளர்ச்சியின் ஊக்கு விசையாகச் செயற்படுகின்றன. இது இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் மட்டமல்ல வரலாற்று ஆய்வுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும்.

தமிழகப் பண்டை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.

1. தமிழகத்தின் வாழ்வியலை இலக்கண வடிவத்தில் கூறும் தொல்காப்பியத்தில் இரு நிலப்பகுப்புகளான நெய்தல், மருதம் ஆகியவற்றின் தெய்வங்களான வருணன், இந்திரன் ஆகியவை ஆரியர்களுக்குரியதென்று சொல்லப்படும் வேதங்களில் காணப்படுவது.


2. இரண்டாம் தமிழ்க் கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த அரசர்களில் துவரைக் கோமான் என்பவன் குறிப்பிடப்படுகிறான். துவரை என்பது இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாவினுள் ஏறக்குறைய கி.மு.1000 ஆண்டில் முழுகிய ஒரு நகரமாகும். சிசுபாலன் என்ற தன் பகையரசனுக்கு அஞ்சி வடமதுரையைத் துறந்து வந்த கண்ணபிரான் இங்கு ஒரு நகரை அமைத்து ஆண்டான் என்பது வரலாறு. இவ்வாறு வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசன் எவ்வாறு கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் அமர முடிந்தது?

இந்தக் கேள்வியைச் சிலர் எழுப்பினாலும் அதற்கான விடையைத் தேடி எவரும் இன்றுவரை புறப்படவில்லை. அது போலத் தான் வருணன், இந்திரன் பற்றிய கேள்வியும். முரண்பாடுகளைக் கண்டு மிரண்டு அவற்றைப் புறக்கணித்துவிடும் நம் ஆய்வாளர்களின் போக்கினால் தமிழ் மக்கள் வரலாற்றின் மீது கவிந்துள்ள இருள் இன்னும் நீங்காமல் உள்ளது.

இந்த முரண்பாடுகளில் ஒன்றை, அதாவது துவரைக் கோமான் என்ற சொற்களிலுள்ள துவரை நகரம் எது என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

துவரை என்ற சொல் துவாரகை என்ற சொல்லின் தமிழ்ச் சுருக்க வடிவம். துவாரகை என்று சொல் துவார் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. துவார் என்ற சமற்கிருதச் சொல்லுக்குக் கதவு என்று பொருள். அப்படியாயின் துவாரகை என்ற சொல்லுக்குக் கதவகம் என்று பொருள் சொல்லலாம். மொழிஞாயிறு தேவநோயப்பாவாணர் அவர்கள் கதவபுரம் என்ற ஒரு சொல்லை வடித்துக் கையாளுவார். அச்சொல் கபாடபுரம் என்பதன் தமிழ் வடிவமாகும். கபாடம் என்பது சமற்கிருதச் சொல் என்று கருதி அவர் இச்சொல்லைக் கையாண்டார். இந்தக் கபாடபுரம் என்ற சொல்லுக்கும் துவாரகை என்ற சொல்லுக்கும் உறவு இருக்கிறதல்லவா? எனவே துவரை என்ற சொல் கபாடபுரத்தையே குறிக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரலாம். இப்போது கபாடபுரமாகிய பாண்டியனின் தலைநகரில் அமைந்திருந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் துவரைக் கோமான் அரசனாக அமர்ந்திருந்ததில் முரண்பாடு எதுவும் இல்லை.

சிக்கல் இத்துடன் தீர்ந்து போகவில்லை. இந்தக் கதவம் பற்றித் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ் இலக்கிய வட்டத்துக்கும் வெளியிலும் நமக்கு ஆர்வமூட்டும் சில சிறப்பான செய்திகள் உள்ளன.

இவற்றுள் ஒன்று பாபிலோனியாவிற்குரியது. கில்காமேஷ் காப்பியம் எனப்படும் இதுவரை கிடைத்துள்ள உலகின் மிகப் பழைய காப்பியத்திலுள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட அசூர்பானிப்பாலின் நூல் நிலையத்திலிருந்து இது கிடைத்தது. பின்னர் கி.மு.22-21ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாபிலோனிய அரசன் அம்முராபியின் தொகுப்புகளிலிருந்தும் கிடைத்தது. இக்காப்பியம் சுமேரியர்களுக்கு உரியதாகும். புகழ்பெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வாளரும் எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியம் இக்காப்பியத்தைத் தமிழாக்கியுள்ளார்.

இக்காப்பியக் கதை பின் வருமாறு.

ஊருக் என்ற சுமேரிய நகரத்தைச் சுற்றிப் பெரிய சுவரெழுப்பிய சுமேரியத் தொன்ம அரசன் கில்காமேஷ். இவன் மூன்றிலிரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான். இவன் அழகில் அவன் நாட்டு மகளிர் மயங்கினர்.

அருரு என்ற பெண் தெய்வத்தால் படைக்கப்பட்டவன் எங்கிடு. இவன் உடலெங்கும் மயிரடர்ந்திருந்தது. தோல் ஆடையே அணிந்திருந்தான். காட்டில் விலங்குகளோடு விலங்காக நான்கு கால்களிலும் நடந்து புல்லை மேய்ந்து நீரில் விளையாடி வாழ்ந்திருந்தான்.

இவனைப் பற்றி அறிந்த கில்காமேஷ் அழகிய ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பினான். இருவரும் ஆறு நாட்கள் சேர்ந்திருந்தனர். அப்பெண்ணோடு நகருக்குள் நுழைந்த எங்கிடுவுடன் கில்காமேஷ் சண்டையிட்டு வென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான்.

இசுத்தார் என்ற பெண் தெய்வம் தன் மீது கொண்ட காதலை கில்காமேஷ் ஏற்க மறுத்ததனால் அவனைப் பழிவாங்குவதற்காக எங்கிடுவுக்கு நோயுண்டாக்கிக் கொன்றுவிடுகிறாள். துயரத்தால் துடித்த கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவரக் கிளம்புகிறான். தன் முன்னோனான உட்நாப்பிட்டிமைத் தேடிச்செல்கிறான். இந்த உட்நாப்பிட்டிம் வெள்ளத்திலிருந்து தப்பிய ஒரே மனிதன். யூத மறைநூலின் நோவாவின் மூலவடிவம். இவன் மரணமற்றவன்.

அவனைச் சந்திக்க நெடுந்தொலைவு நிலத்தின் மீது செல்கிறான். வானாளாவி நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு பெரும் சூரியக் கதவத்தைக் கடந்து ஒரு சுரங்கத்தின் வழியாகப் 12 மைல்கள் செல்கிறான். இக்கதவம் இரண்டு பூதங்களால் காக்கப்படுகிறது. இவன் உட்நாப்பிட்டிம் வழியினன் ஆனதாலேயே உள்ளே அனுமதிக்கப்படுகிறான். சுரங்கம் ஒரு கடற்கரையில் சென்று முடிகிறது. அங்கிருந்த ஓர் கன்னித் தெய்வத்தின் உதவியுடன் நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவை அடைகிறான். அவனிடமிருந்து வெள்ளத்தைப் பற்றிய கதையை நேரடியாக அறிகிறான். சாவாமையைத் தரும் ஒரு பழமரக் கன்றைப் பெற்றுவிட்டுத் திரும்புகிறான். வழியில் கீழே வைத்துவிட்டுக் குளிக்கச் செல்லும் போது பாம்பு ஒன்று அக்கன்றைத் திருடிச் சென்றுவிடுகிறது. இப்படிச் செல்கிறது இக்கதை.

இதே போன்ற கதவம் ஒன்று இயமனைப் பற்றிய இந்தியத் தொன்மங்களில் கூறப்படுகிறது. இயமனும் மரணமற்றவென்பது மரபு.

இவை மட்டுமல்ல இது போன்ற பல சூரியக் கதவங்கள் உலகமெல்லாம் தொல்லாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே கதவபுரம் எனப் பொருள் படும் கபாடபுரமும் அதன் இன்னொரு பெயரான துவாரகையும் வெறும் கற்பனை அல்ல. அதன் நினைவுகள் உலகின் பல பகுதிகளில் எழுத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நினைவாக அது போன்ற கதவங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கதவபுரத்தைப் பற்றி இராமாயணம் கூறுகிறது. ஆனால் தமிழனின் பண்டை வரலாற்றுக்கு ஒரே மூலமாக நாம் கொள்ளும் கழக நூல் தொகுப்பில் இதைப் பற்றி ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. இது இக்கழகத் தொகுப்பே ஏதோ காரணத்தால் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களின் ஒரு முயற்சியோ என்ற கசப்பான, ஆனால் தவிர்க்க முடியாத ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

ஒரு வெள்ளக் காலத்துக்குப் பின் துவரை என்ற பெயர் பெற்ற கதவபுரத்தைக் தலைநகராகக் கொண்டமைந்த தமிழகத்திலிருந்து அடுத்த வெள்ளத்திலிருந்து தப்புவதற்காக வெளியேறிய ஒரு மக்கள் கூட்டம் இன்றைய குசராத் மாநிலத்திலமைந்திருந்த அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையை அடைந்தனர்.

இச்செய்திகள் மணிமேகலையின் பழம்பிறப்புணர்ந்த காதையிலிருந்து பெறப்பட்டனவாகும். (இந்தக் காயங்கரை ஆறு கோக்கரா எனும் பெயரால் குறிக்கப்பட்டது. பின்னர் அவ்வாறு பாலை மணலில் மறைந்து போனது. கங்கையின் ஒரு கிளையாறும் கோக்ரா என்ற பெயர் பெற்றுள்ளது.) காந்தாரம் என்ற நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அவன் உறவினனான பிரம தருமன் என்ற முனிவன் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை பரப்பான நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் கடலினுள் புகும். ஆதலால் மாவும் மாக்களும் உடன் கொண்டு வேற்றிடம் செல்லுமாறு பணித்ததாக மணிமேகலை கூறுகிறது.

காந்தாரம் என்பது இன்று ஆப்பாகனித்தானத்தைச் சேரந்த ஒரு பகுதியாகும். பூருவ தேசம் என்பது பாண்டவர்களின் முன்னோர் பெயரைக் கொண்டதாகும். எனவே இப்பெயர்கள் முழுகிய குமரிக் கண்டப் பகுதிகளுக்கு உரியவை என்று நாம் முடிவு செய்யலாம்.

இவை நம் மரபுகளை உயர்த்திக் கூறுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளிலிருந்து நமக்குச் சார்பாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட செய்திகள் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. கதவபுரம் எனப் பொருள்படும் துவாரகை எனப் பெயர்கொண்ட நகரம் இப்பகுதியில் இருந்ததும் வேதங்களிலும் வடஇந்தியத் தொன்மங்களிலும் தெய்வங்களாகக் கூறப்படும் வருணனும் இந்திரனும் தமிழக ஐந்நிலத் தெய்வங்களாயிருப்பதும் நமக்கு மறுக்க முடியாச் சான்றுகளாகின்றன.

துவரை என்ற இச்சொல்வழக்கு இறையனார் அகப்பொருள் உரையில் மட்டும் காணக்கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு வரை குமரி மாவட்ட மக்களின் நாவில் பயின்றும் வரப்பட்டிருக்கிறது. சாமிதோப்பில் பள்ளி கொண்டிருக்கும் முத்துக்குட்டி அடிகளின் பெருமை கூறும் அகிலத் திரட்டு அம்மானை இம்மண்ணின் மக்களின் முன்னாளைய நிலமாக இருந்து கடலில் அமிழ்ந்து போன துவரையம்பதி மீண்டும் துவங்கும் என்று வலியுறுத்துகிறது. இதனால் கடலில் முழுகிய, முதல் வெள்ளத்துக்குப் பின் பாண்டியரின் தலைநகராயமைந்த, கதவபுரத்தைத் துவரையம்பதி என அழைக்கும் மரபு குமரி மாவட்ட மக்களிடையில் சென்ற நூற்றாண்டு வரை நிலவியது என்பதை நாம் அறிகிறோம்.

இக்கட்டுரையில் கில்காமேஷ் காவியம் பற்றிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் எழுதிய நகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலமாகிய கிழக்கு நமக்கு வழங்கிய கொடை (Story of civilisation - Our Oriental Henitage) என்ற நூலிலிருந்தும் அமெரிக்காவிலிருக்கும் செருமானிய ஆய்வாளரான புகழ் பெற்ற எரிக் வான் டெனிக்காவின் கடவுளரின் தேர்கள்? (Charists of Gods?) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை.

எரிக் வான் டெனிக்கான் ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இன்றைய நாகரிகத்தை மிஞ்சிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்கள் வெளி உலகத்திலிருந்து இங்கு வந்து மாபெரும் செயல்களை ஆற்றியுள்ளனர், பெருவெள்ளங்கள் கூட அவர்களை திட்டமிட்டு உருவாக்கியவை என்றெல்லாம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல இது போன்று இன்னும் நான்கைந்து நூல்களையும் எழுதியுள்ளார். இப்பிற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கட்டுரையாசிரியருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு நூலிலிருந்து கிடைக்கும் தரவுகளிலிருந்தே நம் புராணங்களில் காணப்படுவற்றில் நம்பத்தகாதவை என்று நாம் ஒதுக்கித் தள்ளிய பல செய்திகளை இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.

நமக்கு ஏற்படும் இன்னொரு எண்ணம் என்னவென்றால் குமரிக் கண்டம் நம் முக்கழக வரலாறு குறிப்பிடுவது போல் இரண்டே கடற்கோள்களுக்கு ஆட்படவில்லை என்பதாகும். மிக உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மக்களைக் கொண்டு அண்டார்ட்டிகா வரை பரந்திருந்த ஒரு நிலப்பரப்பு பகுதி பகுதியாக கடல் கொள்ளப்பட மக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்லச் செல்ல நாகரிகம் சிறிது சிறிதாக நலிந்து இன்றைய இடத்துக்கும் நிலைக்கும் தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதாகும்.

இச்செய்திகளைத் தடம் பிடிக்க எரிக்வான் டெனிக்கான் போன்றவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் தொகுத்துத் தந்துள்ள எண்ணற்ற ஆய்வாளர்களின் ஆக்கங்களுடன் இந்தியப் தொன்மச் செய்திகளையும் ஒப்பிட்டு நாம் ஆய வேண்டும். குறிப்பாக நம் தொன்மச் செய்திகளில் வரும் கந்தர்வர்கள், விஞ்சையர் எனப்படும் யாழோர், கருடபுராணம் ஆகியவை மிகக் கவனமாக ஆயப்பட வேண்டும்.

குமரிக் கண்ட ஆய்வு என்பது வெறும் புவியியல் ஆய்வு மட்டுமல்ல. உண்மையில் புவியியல் ஆய்வு என்பது இவ்வாய்வின் மிகச் சிறியதும் கடைசியானதுமான கூறே. மிகப் பெரும் பகுதியும் முகாமையானவையும் உலகெலாம் பரந்து விரிந்து சிதறிக் கிடக்கும் பண்பாட்டுச் செய்திகளே. அச்செய்திகளைச் சுட்டிகாட்டும் ஒரு கருவியாகத் ″துவரையம்பதி″ அமைந்திருக்கிறது.

14.7.09

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

5.7.09

மதுரையை எரித்தது யார்? .....3

சிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.

தமிழக் மூவேந்தரும் கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில்
[1] தமக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து அண்டை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டதாகவும் அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்து வைத்திருக்கிறான். கலிங்க நாட்டில் அப்போது சமணம் அரச மதமாயிருந்தது.

ஏற்கனவே துவக்கத்தில் நாம் கூறிய விருந்தில் மன்னர் இவ்வாறு வெளியே இருந்து வந்த சமணத்தைத் தழுவியவரும் காஞ்சியில் ஆட்சி செய்தவருமான திரையர்களாயிருக்கலாம். இவர்களே பின்னர் வடமொழி தழுவி தங்கள் பெயரைப் பல்லவர் என்றாக்கிக் கொண்டார். (பல்லவம்-திரை-கடல் அலை) வரிச் சுமையால் நொந்து போயிருந்த கறை கெழு மாக்களும் சமணர்களுமாகிய வணிகர்களிடையில் உள்ள அறை போகு குடிகளை(காட்டிக் கொடுப்போரை)ப் பயன்படுத்தி இப்படையெடுப்பு நடைபெற்றதால் சமணர்கள் தமிழக அரசர்க்கு வேண்டாதாராயினர்.

இதனாலேயே கவுந்தியடிகளும் புகாருக்கு வெளியே தோன்றி மதுரைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். பார்ப்பனரும் எயினரும் ஆயரும் வேடரும் மன்னன் வாழ்க எனக் கூறினும் கவந்தியும் கோவலனும் ஒரு போதும் மன்னனை வாழ்த்தவில்லை. இவ்வாறு சமணர்கள் அரசர்க்குப் பகையாயிருந்தாலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆயர் முதுமகள் மாதரி காவுந்தியைக் கண்டடி தொழலும் அவர் அடைக்கலமாகத் தந்த கோவலன்-கண்ணகியைப் போற்றிப் புரந்ததும் அவர்கள் மாண்டதறிந்து தான் உயிர் விட்டதும் இதற்குச் சான்றாகின்றன.

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்......... (16:28)


என்று மாதரி கோவலனை மதித்துக் கூறுகிறாள். (மக்கள் மீது சமணத்துக்கு இருந்த இந்த செல்வாக்கு 7-ஆம் நூற்றாண்டில் 8000 சமணர்களைச் சம்பந்தர் கொலை செய்த கொடுமைக்குப் பின்னரும் நெடுநாள் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது).

கோவலன் சமணனாயிருந்ததே அவன் சாவுக்குக் காரணமாகியதோ என எண்ணத் தோன்றுகிறது. சமணர்களைப் பகைவன் ஒற்றர்களாகத் தமிழ் மன்னர்கள் கருதிய காலமது. (கல்கியின் சிவகாமியின் சபதமும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது இங்கு கருதிப் பார்க்கத் தக்கது.) கோவலனை ஒற்றன் என்று கருதியதாலேயே அவனை மூதலிப்பு (உசாவல்) இன்றிக் கொல்ல பாண்டியன் ஆணையிட்டிருக்க வேண்டும்.

கோவலனின் முற்பிறப்புச் செய்தியில் வரும் நீலியின் கணவன் சங்கமன் என்ற வாணிகன் ஒற்றன் என்றே கொலைப்பட்டான் என்ற சேதியும் ஒப்பு நோக்கத்தக்கது. இதை மறைமுகமாக கோவலன் பற்றிய தன் பழம் பிறப்புக் கதையில் சாத்தனார் வெளியிட்டார் போலும். முற்பிறப்பில் பரதானாயிருத்த கோவலன் சமணத்தை வெறுப்பவனாயிருந்ததால் அவன் சமணனாகிய சங்கமனை ஒற்றனாகப் பிடித்தான் என்கிறது சிலப்பதிகாரம்

விரத நீங்கிய வெறுப்பின (ன்) ஆதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன்.......
23: 155-156

இவ்வாறு சோழ நாடு அரசுரிமைப் போராலும் பாண்டிய நாடு மக்களின் கசப்பாலும் வெளிநாட்டாரின் படையெடுப்புகளுக்கு ஆட்படும் நிலையிலிருந்த வேளையில் சேர நாட்டில் இளங்கோ வாழ்ந்தார். அவர் தமிழகத்தி நிகழ்பவற்றை நன்கு எடைபோட்டு வைத்திருந்தார். இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தது போன்றே அரசியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். மூவேந்தர் ஒற்றுமையுடன் மக்களின் ஒற்றுமையும், மன்னர்களோடு அவர்களின் ஒத்துழைப்பும் தான் தமிழகத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்திருந்தார். பொதுமக்கள் மீதும் அவர்களின் பண்பாடு மீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். எனவே தான் தன் நூலில் சங்க இலக்கியங்களின் தொகுப்பினுள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களான கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை, கந்துக வரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியவற்றைப் பெய்து வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் கலைகளை அறிந்து கொண்ட அவருக்கு எளிய மக்களோடு நெருங்கிய தொடர்பிருந்திருக்க வேண்டும்; மக்கள் மீது மிகுந்த செல்வாக்கிருந்திருக்க வேண்டும். அவர் தங்கள் மன்னராக வேண்டுமென்று மக்களில் பலர் விரும்பியுமிருக்கலாம். இத்தகைய அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு சேர மண்ணில் அரசுரிமைப் போரைத் தூண்டும் முயற்சியே, நிமித்திகள், இளங்கோவடிகளே அரசராவார் என்று கூறிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் பகைநாட்டு அரசுகளை வீழ்ந்த இத்தகைய உத்திகளை அர்த்தசாத்திரம் பரிந்துரைக்கிறது. அரசியலில் தெளிவும் தமிழர் நலத்தில் நாட்டமும் கொண்ட இளங்கோவடிகள் உரிய முறையில் நிமித்திகள் சூழ்ச்சியை முறியடித்ததையே அவரது துறவு குறிப்பிடுகிறது. ஆனால் அவரது ஈகம் தமிழகத்தில் அவர் விரும்பிய பலனைத் தரவில்லை என்றே வரலாறு காட்டுகிறது. குறுகிய காலத்தினுள் மூவேந்தர் ஆட்சியும் அழிந்து களப்பிரர் ஆட்சி தோன்றியது.

இவ்வாறு அரசகுலத்தில் தோன்றியதும் கதை நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததுமே நடந்தவற்றை அப்படியே கூற முடியாமல் இளங்கோவடிகளைத் தடுத்திருக்க வேண்டும். தம் போன்ற அரச குலத்தினரின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே பாண்டியன் ஆட்சியை ′வளையாத செங்கோல்′ என்று பலமுறை கூறுகிறார். இது சேக்சுபியரின் சூலியசு சீசர் நாடகத்தில் அந்தோனி ′But Brutus is an honourable man′ என்று பலமுறை கூறுவதை ஒத்தது. இருப்பினும் பாண்டியன் ′கோல் வளைந்தது′ என்றும் கூறுகிறார். இருந்தாலும் உலகுக்குக் கூறப்பட்ட மதுரை நிகழ்ச்சிகளுக்குள் கூறப்படாத ஒரு வரலாறும் இருக்கிறதென்று காட்ட தாமே சிலப்பதிகாரம் எழுதத் துணிந்தார் எனலாம். ஆனால் மக்கள் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை அவர் விரும்பினார் என்று கூற முடியாது. ′அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்′ என்று ஆட்சியிலிருப்போர்க்கு எச்சரிப்பதே போதுமென்று கருதினார். (அறம் என்ற சொல்லுக்கு சமுதாய நீதி, அதாவது மக்களின் கூட்டு விருப்பம் என்றும் ஒரு பொருள் உண்டு) மொத்தத்தில் இளங்கோவடிகள் ஒரு குடியாட்சி முடியரசியரே (Democratic Monarchist)

அரசர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாமென்று ஐயுறத்தக்க தடையமொன்று சிலம்பில் உண்டு. சாத்தனார் மூலம் மதுரையில் நடந்ததை அறிந்த செங்குட்டுவன்

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லென ...
(25: 203-204)


என்று கூறுவதைக் காணலாம்.

இளங்கோவடிகள், வேதவியாசர், வால்மீகி போன்று தான் கதையில் தோன்றும் உத்தியைக் கையாண்டுள்ளார் என்று கூறவது பொருந்தாது. எடுத்துக்காட்டாக வேதவியாசர் மகாபாரதத்தில் தவிர்க்க முடியாத பங்கேற்றுள்ளார். பாண்டவர் மற்றும் கவுரவர்களின் தந்தையர்க்கு அவர் தான் தந்தை. கவுரவர்களின் தாயின் கருச்சிதைவுற்ற போது அதை 100 பாண்டங்களில் திரட்டி குழந்தைகளாக்கியது அவரே. இவ்வாறு வியாசரில்லை யென்றால் மகாபாரதக் கதையே இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அவர் வாழ்க்கையின் ஒரு முகாமையான நிகழ்ச்சி கதையில் வெளிப்படுகிறது; அது கதையில் இடம் பெறாவிடினும் கதைக்கு எந்தப் பாதிப்பும் மாற்றமும் நேராது. சில நிகழ்ச்சிகளுக்குத் தானே சான்றாகும் விளைவு தான் சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏற்றுள்ள பங்குக்கு உண்டு.

இவ்வாறு சிலப்பதிகாரம் தமிழகத்தில் மிக முகாமையான ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் கட்டற்ற முடியாட்சியராக மாறிவருகிறார்கள். பார்ப்பனர்கள் அரசர்களின் துணையுடன் வருண முறையைப் புகுத்தப் பார்க்கிறார்கள். விளைப்புக் கருவிகளை உடைமைகளாகப் பெற்றிருந்த வேளாளருக்கும் விளைப்பு ஆற்றலைக் கொண்டிருந்த உழைப்போருக்கும் பண்டங்களின் பங்கீட்டைக் கையாண்ட வாணிகருக்கும் குமுகாயத்திலிருந்த இடம் மறுக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். விளைப்புப் பாங்குடன்(Mode of production) எவ்வித உறவு மில்லாத ஒட்டுண்ணிகளான அரசும், மதமும் தலைமைதாங்க முயன்றன. விளைப்பு விசைகளுக்கும்(Productive forces) விளைப்பு உறவுகளுக்கும்(Productive Relations) இடையில் போராட்டம் நிகழ்ந்து சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குப் பகரம் பொருட்டுறை அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. வகுப்புகளாகப் பிளவுண்டிருந்த மக்கள் வருணங்களாகப் பிளவுறுவதை ஏற்கவில்லை; இதற்கு ஆணித்தரமான சான்றைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல முதுமகள் தன் மகள் ஐயையை நாத்தூண் நங்கை (16:19) அதாவது கண்ணகியின் நாத்தனார் என்று கூறுகிறாள்.

இன்னும் வாழ்த்துக் காதையில் ஐயையை மாமி மடமகள் (8) என்றும் கூறுகிறாள்.

மேலும் பார்ப்பன மங்கை தேவந்தியும், காவற்பெண்டு, அடித்தோழி ஆகிய உரிமைச் சுற்றத்தாரும்(அடிமையரும்) வேறுபாடின்றி கண்ணகியைத் தோழி என்றே அழைக்கின்றனர். பொருட்டுறை வேறுபாடு குமுகியலியல் வேறுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நிலையையே இது காட்டுகிறது.

அதே வேளையில் பார்ப்பனரும் அரசரும் சேர்ந்து வருணத்தைப் புகுத்தினர். வெவ்வேறு வருணத்தார்க்கு வெவ்வேறு வீதிகள் வகுத்தனர். இத்தெருக்களை அடையாளந் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட படிமங்களைத் தான் வருணப் பூதங்களென்று குறிப்பிட்டார் போலும். இத்தெருக்களையும் அவற்றின் அடையாளங்களையும் புரட்சியாளர்கள் அழித்ததைத் தான்,

நாற் பாற் பூதமும் பாற் பாற் பெயர
......................................................
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்
கா வெரியூட்டிய நாள் போற் கலங்க.......
(22:108-112)


இவ்வாறு தனித்துக் குறிப்பிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

பார்ப்பாரறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி யெனு மிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர் கென்று ......
(21:53-55)


கண்ணகி கூறியதாகக் கதை கூறுகிறது. ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட நால்வேறு தெருவும் கலங்குவதாகவும் கூறுகிறது.

இனி அழல் 'தீத்திறத்தார்' யார் யாரைச் சேர்கிறது என்று பார்ப்போம்.

1) கோமகன் கோயில் - அரண்மனை (22:14)


2) (பார்ப்பனர் உள்ளிட) வருண முறையை ஏற்றுக்கொண்டோர் வாழும் தெருக்கள் (22:110:112)

3) மறவோர் சேரி - போர் வீரர்களின் சேரி (22:114)

4) யானை, குதிரைக் கொட்டில்கள் (22: 117-118)

5) கணிகையர் ஆடரங்கு (22:142)

6) கூல மறுகு (22:109)

7) கொடித் தேர் விதி. (22:109)

இவ்வாறு மேற்கூறிய இடங்களிலுள்ள பெண்கள் குழந்தைகள், விலங்குகள், முதியோர் நீங்கலான ஆடவர் தீயால், அதாவது புரட்சியால் தாக்குண்டனர், அதாவது அரண்மணை, நால் வருணத் தெருக்கள், படைமறவர், சேரி, யானை குதிரைக் கொட்டில்கள், கணிகையரின் ஆடரங்குகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அரசனும், வருணமேந்திகளும் அவர்களின் இன்ப நுகர்ச்சிக்களமாகிய கணிகையர் வீதிகளுமே அதிகத் தாக்குதலுக்குள்ளாகின்றன. உண்மையில், பெருமனைக் கிழத்தியர், குடும்பப் பெண்கள், மகிழ்கின்றனர். (22:133).

இவ்வாறு மன்னனின் கட்டற்ற ஆட்சியையும் வருணமுறைப் புகுத்தலையும் எதிர்த்து மக்கள் நிகழ்த்திய(பூர்சுவாப் புரட்சி) புரட்சி முறியடிக்கப்பட்டது. பின்னோக்கித் திரும்பிய தமிழக வரலாற்றைத் தடுத்து நிறுத்த மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 நூற்றாண்டுகளுக்கான தமிழக வரலாற்றில் இந்த பின்னோக்கிய ஓட்டம் நிற்கவில்லை என்பது வரலாறு விரிவாகக் கூறுகிறது. இந்தத் துயர வரலாற்றுத் திருப்புமுனையைக் காட்டும் எல்லைக்கல்லாக சிலப்பதிகாரம் நிற்கிறது.


அடிக்குறிப்பு:

[1] அண்மையில் வெளியான் ஒரு செய்தியின்படி இந்தக் கூட்டணி கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. பார்க்க: அந்த 1300 ஆண்டுகள் (கி.மு. 1465 - 165) ,மா. கந்தசாமி. கட்டுரை, கணையாழி, பிப்ரவரி, 2005, பக். 41-45

மதுரையை எரித்தது யார்? .....2

இந்தக் கலகத்தை நடத்தியதில் ஏதாவதொரு குறிப்பிட்ட வகுப்பு ஈடுபட்டதாகக் காண முடியுமா என்று ஆய்ந்தால், காண முடியும் என்று தோன்றுகிறது.

நெடுஞ்செழியன் மாண்டதை அடுத்து கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் மதுரைக்கு வந்து பொற்கொல்லர் ஆயிரவரை நங்கைக்கு(கண்ணகிக்கு)ப் பலி கொடுத்தான் என்று சிலம்பு கூறுகிறது. பொற்கொல்லன் சூழ்ச்சியால் கோவலன் கொலைப்பட்டான் என்பதால் தான் இது நிகழ்ந்திருக்குமென்று தோன்றவில்லை.

நகைத் தொழில் மதுரையில் மிகப் பெருந்தொழிலாயிருந்திருக்க வேண்டும்.

நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர (16:106) வந்த பொற்கொல்லனிடம் நூற்றுவர்க்குக் குறையாத நுண்வினைக் கொல்லர்கள் பணியாற்றிருக்க வேண்டும். இன்று 5 பேருக்கு மேல் வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தொழிற் கட்டங்களுக்கு உட்படுகின்றன. நூறு பேருக்கு மேல் வைத்திருக்கும் இப்பொற்கொல்லன் ஒரு பெரும் தொழில் முதலாளியாகிறான். இத்தகைய ஒரு தொழில் முதலாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த மன்னன் தொழிலாளர் பகைவனாயிருப்பது தவிர்க்க முடியாதது. நகரில் இவனைப் போன்ற பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும். நகரில் மட்டுமின்றி நாடு முழவதும் இவனன்றி இன்னும் பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பொன் மாற்று அறிவதற்கென்றே ′பொன்வாரியங்கள்′ இருந்ததற்கான சான்றுகள் உள. இவ்வாறு மன்னன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பொற்கொல்லர்கள் ஒன்று திரண்டு மதுரைக் கலவரத்தை(அல்லது புரட்சியை) முன்னின்று நடத்தியிருக்கலாம். அது நாட்டுப் புறங்களிலும் பரவத் தொடங்கியிருக்கலாம். அக்கலகங்களுக்குத் தலைமை தாங்கியோரே இவ்வாயிரம் பொற்கொல்லாராயிருந்திருக்க வேண்டும்.

அடுத்து இந்நிகழ்ச்சியில் புலவர் சாத்தனாரின் பங்கு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சாத்தனார் மதுரைப் புரட்சியின் இயக்கு தலைவராயிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு சேர அரசு குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பது போல் தோன்றினாலும் மணிமேகலை காட்டுகிறபடி பொதுவாக அரசகுலத்தின் மீது வெறுப்பு இருப்பது தெரிகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் பாண்டிய நாடு சேரனுக்கு உட்பட்டிருந்தது.

தென் னரிட்ட திறை யொடு கொணர்ந்து..... (26:169)

எனவே தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் கலக மேற்பட்டால் அதை அடக்க வேண்டியது சேரனின் கடமையும் தேவையுமாகிறது. அந்த நோக்கத்துடனேயே பெரியாற்றின் கரை மீது செங்குட்டுவன் பாடியிறங்குகிறான். அவனுக்கு கண்ணகி வரலாறு தெரிந்திருக்கவில்லை. கண்ணகி வந்து வானுலகெய்திய செய்தியை வேட்டுவர் கூறிய பிறகு தான் அவன் கண்ணகியைப் பற்றி அறிகிறான். அவள் மதுரைக்கு எரியூட்டியதைச் சாத்தனார் மூலமே அறிகிறான்.

கதையின் படி, மதுரை எரிந்த பதினான்காம் நாள் கண்ணகி இறக்கிறாள். அதுவரை மதுரையில் நடந்தது, அதாவது மதுரை எரிந்தது செங்குட்டுவனுக்குத் தெரியாதிருக்க முடியாது.

நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா........
(25:173-174)

என்றவாறு ஒற்றர் மூலம் அச்செய்தி அவனுக்கு உடனே கிடைத்திருக்க வேண்டும். கண்ணகி முலைமுகத் தெழுந்த தீ தான் மதுரையை எரித்தது என்பதை சாத்தனார் மூலமே அவன் அறிய முடிந்த தென்றால், மக்களால் தான் மதுரை எரியுண்டது என்றே அவன் அதற்கு முன்பு அறிந்திருக்க வேண்டும். (கண்ணகி பற்றி ஒற்றர்கள் கூறவில்லை யென்றால், கண்ணகி பற்றிய நிகழ்ச்சி அல்லது அவளேற்ற பங்கு அவ்வளவு முகாமையில்லாத ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரே அவளைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டும்.) அந்தக் கலகத்தைக் தேவைப்பட்டால் அடக்கலாம் என்ற நோக்கத்துடனேயே பாண்டிய நாட்டெல்லை யருகில் அவன் பாடி யிறங்கியிருக்க வேண்டும். இவ்வாறு பாண்டிய நாட்டு எல்லை நோக்கி செங்குட்டுவன் வருவதையறிந்து தான் போலும் சாத்தனார் அவனருகில் சென்று சேர்ந்திருக்கிறார். அவன் பாண்டிய நாட்டினுள் நுழைந்து புரட்சியில் ஈடுபட்டவர்களை அழித்து விடுவதைத் தவிர்க்க இதைச் செய்திருக்கலாம். வேட்டுவர்கள் கண்ணகியைப் பற்றிய சேதியைச் சொன்ன நேரம் பார்த்து பழம் வினை குறித்த தன் புனைகதையை எடுத்துவிடுகிறார், அதாவது மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சியல்ல, ஒரு பத்தினிப் பெண் நிகழ்த்திய இறும்பூதே(அற்பதம்) அது என்று. அதனால் தான் 'யாதவர் வினையென' என்ற பதிகத்தின் கேள்வி மூலம் அப்புனைகதையின் மறையத்தை இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.

இக்கதையைக் கேட்ட செங்குட்டவன் ஒன்றேல் மதுரையில் கலகமொன்றும் நிகழவில்லை, ஒரு பத்தினிப் பெண்ணின் தெய்வ ஆற்றலே மன்னவனைக் கொன்று மதுரையை அழித்தது என்று நம்பியிருக்க வேண்டும்; அன்றேல், மதுரையில் நடந்தவாறு, அதாவது மக்கள் மன்னனையும் அரசியையும் கொன்று நகரத்தைத் தீக்கிரையாக்கியது போன்ற போக்குகள் தன்னாட்டுக்கும் பரவாமல் தடுக்க இக்கதை உதவுமென்று கருதியிருக்க வேண்டும். முதலில் கூறியது போல் செங்குட்டுவன் நம்பியிருந்தால் பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் எடுப்பதன் மூலம் மக்களின் பரிவைப் பெறவோ, நம்பவில்லையாயின் மக்களின் கவனத்தைக் திருப்பவோ இமயத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு, இங்கு தான் மதுரை நிகழ்ச்சியின் அலுவலகக் கூற்று(Official Version) உருவாகியிருக்க வேண்டும்.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக் காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறது.

இறுதியாக, இவ்வாறு புறத்தே ஒரு கதையும் அகத்தே ஒரு கதையும் வைத்து எழுதிய இங்கோவடிகள் யார் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. நாம் மேலே அணுகியுள்ள முறை சரியாக இருந்தால் ஒரு விடையும் காண முடியும் போல் தோன்றுகிறது.


(தொடரும்)

மதுரையை எரித்தது யார்? .....1

வடிவத்துக்காகவே பல இலக்கியங்கள் போற்றப்படுகின்றன. சில இலக்கியங்கள் அடக்கத்தை அறியமாட்டாமையால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தது சிலப்பதிகாரம். இந்நூல் தலைசிறந்த இலக்கிய உத்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. அவற்றுள் ஒன்று இற்றை இதழியலை (Modern Journalism) ஒத்தது.

அதாவது சிலப்பதிகார ஆசிரியர் தாம் கூறிய சேதிகளில் ஏறக்குறைய அனைத்துக்கும் யாரோ ஒருவருடைய கூற்றை எங்கோ ஓரிடத்தில் சான்றாகக் காட்டுகிறார். எடுத்துக் காட்டாக, புகாரில் நடந்தவற்றுக்கு தேவந்தி, செவிலி, காவற்பெண்டு, மாடலன் முதலியோரையும் மதுரையில் நிகழ்ந்தவற்றுக்கு புலவர் சாத்தனார், ஐயை முதலியோரையும் சான்று காட்டுகிறார். இன்னும் இது போன்று பல சான்றுகளை ஊன்றிப் படிப்போர் நூல் நெடுகிலும் காண முடியும்.

இவ்வாறு தன் நூலுக்கு சான்றுகளைக் காட்டுவது தற்செயலானது என்றோ அல்லது வெறும் உத்தி என்றோ தள்ளிவிடத் தோன்றவில்லை. தான் கூறும் கதையில் உண்மையில் அவருக்கே ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது மக்கள் அறிந்த சேதிகளுக்கு மாறுபாடாகத் தாம் எடுத்துவைக்கும் கதைக்காக அவர் தம் மீது பிழையில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இவ்வுத்தியைக் கையாண்டிருக்க வேண்டும். அவ்வாறு அவர் வெளிப்படையாகக் கூறும் கதைக்கு மாறுபட்டதாக வேறு கதை ஏதாகிலும் இந்நூலுக்குள் புதைந்து கிடக்கிறதா, அவ்வாறாயின் அக்கதை யாது என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

பதிகத்தில் இளங்கோவடிகள் சாத்தனாரிடம் ஒரு கேள்வி போடுகிறார்.

வினைவிளை காலமென்றீர் யாதவர்
வினை விளை வென்ன...
(பதிகம் 37-38)

இந்த வினையும் விளைவும் பற்றி கட்டுரை காதை, நூலில் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால் அங்கு தோன்றாத ஒரு சேதியை இக்கேள்வி பதிகத்தில் வெளிப்படுத்துகிறது.

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளீருள் கிடந்தேன்

என்று தொடங்கி மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குப் பழம்பிறப்புரைத்ததும் அப்பழம்பிறப்பு வினையின் விளைவே கோவலன் கொலையுண்டது என்றும் கூறியதைத் தான் கேட்டதாக சாத்தனார் விடை கூறுகிறார். (பதிகம் 39-54)

இவ்வாறு கட்டுரை காதை முழுவதற்கும் சாத்தனாரைப் பொறுப்பாக்கி விடுகிறார் இளங்கோவடிகள். அப்படியானால் சாத்தனாரின் கூற்றில் அடிகளுக்கு ஐயமேற்படக் காரணம் இருந்ததா? இருந்திருக்கலாமென்றே தோன்றுகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர் அரசுகளும் மிகக் குழப்பமான நிலையிலிருந்தமை நூல் முழுவதும் படிக்கும்போது தெரிகிறது. அதனை மிக நுணுக்கமாக ஓரிடத்தில் ஓர் உவமை மூலம் காட்டுகிறார் அடிகள். அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் கதிரவன் மறைந்ததால் கவிந்த இருளை நிலவு தோன்றி அகற்றுவதை,

கறை தெழு குடிகள் கை தலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி
வலம்படு தானை மன்னரில் வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
.............................................................
மல்லல் மூதூர் மாலை வந்திறுத் தென
இளையராயினும் பகையரசு கடியும்
செருமான் தென்னர் குல முதலாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
............................................................
மீனரசாண்ட வெள்ளி விளக்கத்து.....
(4: 10-26)

சோழர் கதிரவன் குலமென்பதும் பாண்டியன் நிலவுக் குலமென்பதும் மரபு. இங்கு கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்ததை வலம்படு தானை மன்னரில் வழி என்பதன் மூலம் சோழப் பேரரசன் இயற்கை யெய்தி புதிய அரசன் பட்டமேறாத இடைக்காலத்தைக் குறிக்கிறது எனலாம். கரிகாலன் காலத்துக்குப் பின் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிகளுக்கிடையில் கலகம் நிகழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் சிலம்பு கூறும் ′விருந்தின் மன்னர்′ (புதிய மன்னர்) சோழ குலத்தவராக இருக்க முடியாது. இலக்கியங்கள் மறைக்கும் நிகழ்ச்சி ஏதோ ஒன்று அதில் அடங்கியிருக்க வேண்டும். அரசு வலுவிழந்திருந்த போது புதிதாகத் தோன்றிய சிற்றரசு ஒன்றின் அரசன் புகார் மீது படையெடுத்து அதைப் பிடித்திருக்க வேண்டும். உள்நாட்டுக் குழப்ப நிலையை அவன் பயன் படுத்தியிருக்க வேண்டும். இவ்வெதிரியை முறியடிக்க, பாண்டியன் ஒருவன் சோழ அரசனுக்கு உதவியிருக்க வேண்டும். அது தான் ′இளையோராயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல்′ என்று நிலவைக் கூறுகிறார். (இவ்வாறு இளமையிலேயே பகைவர்களைச் கடிந்தவனாக ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே கூறப்படுகிறான். இவன் தான் கோவலனைக் கொலைக்களப் படுத்திய நெடுஞ்சழியன்.)


இவ்வாறு முகாமையான ஒரு வரலாற்றுச் செய்தியை ஓர் உவமையினுள் நுண்மையாக இளங்கோவடிகள் மறைந்து வைத்திருப்பதைக் காணும் போது இவர் மூலக்கதையிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் புதைத்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் உருவாகிறது.

உண்மையில் அத்தகைய ஒரு நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் மறைந்திருக்கவே செய்கிறது. சிலப்பதிகாரக் காலம் சங்க காலத்தின் இறுதிக் காலம். சங்க இலக்கியங்களினுள் வரி விதிப்பைப் பற்றி கிழார்களாகிய புலவர்கள் குறைபட்டு அரசனுக்கு அறிவுரை கூறுவோராகக் காணப்படுகின்றனர். அதே வேளையில் அரசர்களை வானளாவப் புகழ்ந்து அளவிறந்த பரிசில்களைப் பெறும் புலவர்கள், குறிப்பாகப் பார்ப்பனப் புலவர்கள் பெருகி வருகின்றனர். இது, வாணிகர், வேளாளர் முதலிய மக்கட் குழுவினருடன் கலந்து முடிவெடுக்கும் தன்மையிலிருந்து அரசன் மாறுபட்டு, மக்களிடமிருந்து விலகி, கட்டற்ற முடியாட்சிக்கு மாறியதையே காட்டுகிறது. இச்சூழ்நிலையில் தம்மை இடித்துரைப்போரை விடத் தம்மைப் போற்றிப் புகழுவோரே அரசர்களுக்கு இனியோராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு சங்க கால இறுதியில் பார்ப்பனர்கள் அரசர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பெறகின்றனர். இதற்கு ஒரு பதமாக:

தடம் புனற்கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி......
(23:118-121)

என்பது காணப்படுகிறது.

இவ்வாறு கட்டில்லா முடியாட்சியின் விளைவுகள் பல துறைகளிலும் பெருகுகின்றன. இப்போது போரிடுவது மக்களுக்குப் பகைவரிடமிருந்து பாதுகாப்பளிப்பது, பஞ்சம் வந்த வேளையில் வளமிக்க நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறுவது என்ற நோக்கம் மாறி மன்னர்தம் புகழ் ஒன்றே குறியாகிறது. போர்களில் அயல்நாடுகளைக் கொள்ளையடித்து தன் அரண்மனையை வளப்படுத்தியும் படைத்தலைவருடனும் படைவீரர்களுடனும் பங்கிட்டும் கொண்டனர் அரசர்கள். தலைநகரில் இவ்வாறு சேர்ந்த செல்வம் ஆடம்பர விளையாட்டுகளில் செலவாயின. விலை மகளிரால் தலைநகர் நிறைந்தது. இதனை மதுரையில் கோவலன் நுழைந்ததும் காட்டுகிறார் இளங்கோ.

வையமுங் கவரியும் மணிக் கால் அமளியும்
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப.......
(14:126-129)

சிறப்புரிமைகளைப் பெற்ற விலைமகளிரை அரசன் உருவாக்கியிருந்தான்.

செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு
வையங்காவலர் மகிழ் தரு வீதியும்........
(14:144-145)

எனவும்

முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை (14:146)

எனவும் கணிகையர் வீதிப் பெருமையும் வீட்டுப் பெருமையும் கூறுவார் போல் அரசனும் சுற்றமும் கணிகையர் வீடுகளுக்குச் செல்வதை அடிகள் குறிப்பாக உணர்த்துகிறார்.

அடுத்து, கொலைக் களக் காதையில்,

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன்
ஊடலுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன் மேலிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக ..........
(16:131-136)

அரசன் பரத்தையர் வீடு சென்றானென்று வெளிப்படக் கூறவில்லை யாயினும் மேலே காட்டியவற்றிலிருந்து அரசன் செயலையும் அதற்காக தேவி ஊடியதையும் குறிப்பாகக் காட்டுகிறார் அடிகள்.

பொற்கொல்லன் திறம் பற்றி யாருக்கும் ஐயமில்லை. அவன் ஒரு கொடியவன், கயவன். ஆனால் அவனுக்கு கோப்பெருந்தேவி கோயில் வாயில் வரை சென்று அரசனைக் காணும் அளவுக்கு உரிமையிருந்தது. அரசனின் ஆட்சித் திறத்தை அவனை அண்டியிருப்போரைக் கொண்டு அளவிடலாம். ′உன்னைத் தெரிந்து கொள்வதற்கு உன் நண்பனைத் தெரிந்து கொண்டால் போதும்′ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப அரசன் ஆட்சி செய்த வகையைத் தெளியலாம்.

இத்தகைய ஓர் அரசனின் தலைநகரில் சிலம்பை விற்று அதை முதலாக்கி வாணிகம் செய்யவென்று வந்த வெளியூர் வாணிகன் ஓருவன் அரசன் ஆணையால் முறைகேடாகக் கொல்லப்படுகிறான். அவன் மனைவியோ இக்கொடுமையை அறிந்து வாளாவிருக்கவில்லை, கொதித் தெழுகிறாள். கையில் மீதமிருந்த சிலம்புபொன்றை ஏந்தி வீதியில் முறையிட்டுக் கொண்டே வருகிறாள்.

பொதுவாக இக்காட்சியைப் பற்றி, கண்ணகி வீதியில் தன்னந்தனியாகத் திரிந்ததாகவே பலரும் கருதுகிறன்றனர். உண்மையில் அவளைத் தொடர்ந்து ஒரு பெரும் கூட்டம் திரண்டு விட்டதை,

கம்பலை மாக்கள் கணவனைத் தான்காட்ட (19:29) என்று ஆசிரியர் காட்டுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

அவள் கணவனைக் கண்டதையும் அவனோடு பேசியதையும் அரசனைக் கண்டு முறை கேட்பேன் என்றதையும் ஒரு பெரும் மக்கட் கூட்டம் பார்த்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தது என்பதை இவ்வொரு சொல் விளக்குகிறது.

இவ்வாறு தன்னையும் வெட்டுண்டு கிடக்கும் தன் கணவனையும் சூழ்ந்து தெருவில் குழுமி நின்ற கம்பலை மாக்காளை (கம்பலை = ஒலி, ஆரவாரம்) நோக்கி,

பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டு கொல்
(19:48-52)

என்று வினவுகிறாள்.

"நீங்கள் பெண்கள் தானா?"
"நீங்கள் சான்றோர் தானா?" என்று கேட்கிறாள்.

இவ்வாறு மாலைக் கதிரவன் மறைந்த பொழுதிலிருந்து மறுநாள் காலை அரசவை கூடும் வரை அவள் மதுரை நகரின் வீதியைக் சுற்றிச் சுற்றி வருகிறாள். இதற்குள் அவளைப் பின் தொடர்ந்து பெருங்கூட்டம் கூடியிருக்க வேண்டும். இதுவரை கேள்வி கேட்பாரின்றி காட்டாட்சி நடத்திய அரசன், அவன் படையினர், காவலர், அவனை அண்டியிருந்த கொடியவர் ஆகியோரின் கொடுமைகளால் கொதிப்படைந்திருந்த அவன் கொட்டத்தை(கொற்றத்தை?) அடக்கவும் கேள்வி கேட்கவும் தங்களுக்குத் தலைமை தாங்க வந்த தெய்வமாகக் கண்ணகியை மக்கள் கண்டனர்.
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்

தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்....... (19:19-20)

செம்பொற் சிலம் பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந் தெய்வம் வந்ததிது வென் கொல்..........
(19:23-24)

மன்பழி தூற்றும் குடியதே மாமதுரை....... (19:28)

என்பவற்றைக் காண்க.

அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்று நாளிதழ்களில் வந்தது. ஒரு தெருவில் மருத்துவர் ஒருவர் குடியிருந்தார். அவருக்கும் அத்தெருவில் குடியிருந்தோர்க்கும் நாட்பட்ட பிணக்குகள் இருந்து வந்தன. ஆனால் அவரை எதிர்க்க வழியின்றி இருந்தனர் அவர்கள். ஒரு நாள் மருத்துவர் வீட்டுக்கு சுமையுந்தில்(லாரியில்) செங்கல் வந்தது. எல்லோரிடமும் சச்சரவிடும் மருத்துவர் செங்கல் இறக்கும் தொழிலாளரோடும் சச்சரவு வளர்த்தார். விளைவு, மருத்துவர் வீட்டைத் தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கினர். இவ்வளவு நாளும் சினத்தை அடக்கி வைத்திருந்த தெருமக்களும் அவர்களுடன் சேர்ந்து மருத்துவர் வீட்டைத் தீவைத்துக் கொளுத்தித் தீர்த்தனர்.

இது தான் மதுரையில் நடந்தது. நெடுநாட்களாக அரசனும் அவனைச் சார்ந்தவர்களும் மக்களுக்கு இழைத்த தனித்தனிக் கொடுமைகளுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த மக்களை ஒன்றுதிரட்டும் கருவாக கண்ணகி செயற்பட்டாள். அந்த மக்களால் கொளுத்தப்பட்ட தீ தான் கண்ணகி மூட்டிய தீ.

(தொடரும்)