4.12.17

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடறகரை - 1

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 1.

மனந்திறந்து………..

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை என்ற இந் நூல் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறப்பிதழுக்காக கட்டுரையாக எழுதப்பட்டது. இறுதியில் ஒரு நூலாகும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. சிறப்பிதழில் ஒரு பகுதி மட்டும் வெளியானது.

இந் நூலில் கடற்கரையில் என்னென்ன மாற்றங்கள் தேவையென்று கூறியுள்ளோமோ அம் மாற்றங்கள் நிகழ ஏற்பட்ட வாய்ப்புகளுக்கு எதிராக கடற்கரை வாழ் மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் ஒரு சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் சுனாமி என்றழைக்கப்படும் ஓங்கலை எழுந்து கடற்கரையை அழித்துத் தாண்டவமாடியது.

இன்று தமிழகக் கடற்கரை வாழ் மக்கள் தங்கள் அடுத்த இலக்கு பற்றி முடிவெடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். ஆட்சியாளர்களும் மக்கள் நலம் நாடிகளும் கூட குழம்பி நிற்கின்றனர். இந் நிலையில் ஏறக்குறைய பதினைந்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந் நூல் தோராயமான ஒரு வழியைக் காட்டும் என்பது உறுதி. இன்னும் திட்டவட்டமான நடவடிக்கைகளை நாமும் வகுத்துச் செயற்பட வேண்டும் என்று தமிழக மக்களையும் அவர்களை முன் நின்று வழி நடத்த வருமாறு மக்கள் நலம் நாடுவோரையும் வேண்டுகிறேன்.

திருமங்கலம் (மதுரை மாவ.) அன்புடன்
17 - 01 – 2014 குமரிமைந்தன்.
பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை
குமரிமைந்தன்

தமிழகத்துக்கு ஒரு நீண்ட கடற்கரை உண்டு. அந்தக் கடற்கரைக்கு ஒரு நீண்ட வரலாறும் உண்டு. அக் கடற்கரையில் வாழும் மீனவர்களுக்கும் ஒரு நீண்ட, பெருமை மிகு வரலாறு உண்டு. தமிழர்களின் முதன்மைத் தாயகமாகிய குமரிக் கண்டத்தில் ஒரு மாபெரும் பேரரசைத் தோற்றுவித்து அதை உலகமெல்லாம் பரவச் செய்தவர்கள் மீனவர்களே! தமிழர்களின் முதல் அரசை நிறுவிய பாண்டியர்கள் மீனவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களது கொடியும் மீனே. பாண்டியரின் குலதெய்வமாக இன்று மதுரையில் கொலுவிருக்கும் தெய்வத்தின் பெயரும் மீனாட்சி என்பதே!

இந்தச் சான்றுகள் நமக்குக் கூறும் செய்தி, கடல் வாணிகம் கடற்படைகள் மூலம் அண்டையிலும் தொலைவிலும் இருந்த மக்களையும் நாடுகளையும் தொடர்பு கொண்டு அவற்றைத் தம் ஆளுகையினுள் கொண்டு வந்து முதன்முதலில் வரலாற்றில் ஒரு பேரரசை நிறுவியவர்கள் நெய்தல் நிலத்தவரான குமரிக் கண்ட மீனவர்கள் என்பதாகும். அது மட்டுமல்ல, கடற்கரையிலிருந்து உள்நாட்டுடன் தொடர்பு கொள்ள ஆறுகள் போன்ற நீர்வழிகளே முதலில் பயன்பட்டன. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளிருப்பதும் வழி என்ற சொல் வழிதல் என்ற நீரின் பண்பின் அடிப்படையில் அமைந்திருப்பதும் இதற்குச் சான்றுகள்.

மீனவர்களைப் பரவர்கள், பரதவர்கள், பரதர்கள் என்று அழைக்கிறோம். பரவை என்பது கடலைக் குறிக்கும் சொல். பரந்திருப்பதால் அது பரவை எனப்பட்டது. பரவையைத் தங்கள் செயற்களமாகக் கொண்டு தாமும் பரந்து திரிந்ததால் அவர்கள் பரவர் எனப்பட்டனர். அச் சொல் பரதர், பரதவர் என்ற திரிபுகளைக் கொண்டது.

குமரிக் கண்டத்திலிருந்து வட இந்தியாவுக்கு மேற்கு, கிழக்குக் கடற்கரைகள் வழியாகக் பெயர்ந்த மக்களால் புனையப்பட்டவை இராமாயண, மகாபாரதக் கதைகள். குமரிக் கண்டத்தில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள், ஆட்சித் தலவைர்கள் ஆகியோரின் நினைவுகளையும் அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் புதிய இடத்தில் குடியேறிய பின் ஏற்கெனவே தங்களுக்கு முன்னால் அங்கு குடியேறியிருந்த மக்களையும் அவர்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட போராட்டங்களையும் கலந்து புனையப்பட்டவை அவை. அவற்றுள் முந்தியதாகக் கொள்ளத்தக்கது மகாபாரதம். அது குமரிக் கண்டச் செய்திகளை நிறையவே தன்னகத்தில் கொண்டுள்ளது. அவற்றுள் முதன்மையானது குரு மரபினர் எனப்படும் கவுரவர் - பாண்டவரின் முன்னவர்களில் ஒருவரானான பரதன் என்னும் அரசன் பெயரிலிருந்து பரத நாடு, பரத கண்டம் என்ற பெயர்கள் வந்தன என்று கூறப்படுவது. பரதர் நாடு, பரதர் கண்டம் என்பதை மறைக்கத்தான் இக் கதை கூறப்பட்டதோ என்று தோன்றுகிது. இந்தப் பரதன் சகுந்தலைக்கும் துசியந்தன் என்ற மன்னனுக்கும் பிறந்தவனாம். அவளைத் திருமணமின்றியே கூடியவன் (யாழோர் மணம் - கந்தருவ மணம்) அவளை மறந்து விட அவளுக்கு அவன் கொடுத்த மோதிரத்தை ஆற்றிலிருந்து மீட்டுவந்த இரு மீனவர்கள் மூலம் அவன் நினைவு மீண்டு அவளை ஏற்றுக் கொள்வதாகக் கதை செல்கிறது . இங்கு ஒரு வகையில் மீனவர்களின் தொடர்பு வெளிப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, கவுரவர் - பாண்டவர்களின் பூட்டியான (பாட்டன், பாட்டிகளின் தாய் பூட்டி - கொள்ளுப்பாட்டி) பரிமளகந்தி எனப்படும் மச்சகந்தி ஒரு மீனவப் பெண் என்கிறது மகாபாரதம். மகாபாரதப் போர் உண்மையில் மீனவர்களிடமிருந்து அரசியல் ஆதிக்கம் மருத நில மக்களின் கைகளுக்குப் போய் அவர்களிடமிருந்து முல்லை நிலமக்களாகிய ஆயர்களுக்கு மாறியதைக் குறிப்பதேயாகும். கண்ணனான ஆயர் குலத்தவனுக்கு உதவுபவனான அருச்சுனன் எனப்படும் மருதன் மருத நிலத் தெய்வமாகிய இந்திரனுக்குப் பிறந்தவன் என்கிறது மகாபாரதம்.

இராமாயணமும் மீனவர்களுக்கும் உள்நாட்டினருக்குமான அதிகாரப் போட்டியைக் கோடி காட்டுகிறது. பரதனுக்குப் பட்டம் சூட்டுமாறு அவன் தாய் கேட்பதும் அதன் மூலம் ஏற்படும் முரண்பாடுகளும் சிக்கல்களும் அதற்குத் தடயங்களாகும். அத்துடன் இராவணனுடனான இராமனின் போர் இராமனைப் பற்றிய மூலக்கதையான தசரத சாதகத்தில் இல்லை. சீதையைத் தூக்கிச் செல்வதும் அவளை மீட்பதற்கான போரும் கிரேக்கர்களுடன் வட இந்தியர்களுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் சேர்க்கப்பட்டு வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டது. ஆனால் அதில் குரங்கைக் குலக்குறியாக்க கொண்ட தென்னிந்திய மக்கட் குழுவினரைப் பற்றிச் சொல்கிறது. வானில் பறந்து இலங்காபுரிக்குச் சென்ற அனுமன் கடந்து சென்ற இடங்களின் விளக்கம் இராவணனின் இலங்காபுரி இன்றைய ஈழத்து இலங்கைத் தீவல்ல, அது ஆத்திரேலியாவின் பக்கத்தில் இருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது. தசரத சாதகம் இராமனின் தலைநகர் காசி (வாரணாசி) என்கிறது, இராமாயணம் அயோத்தி என்கிறது. அண்மையில் ஓர் ஆய்வாளர் அது மேற்காசியாவில் இருந்தது என்கிறார். உண்மையில் அவன் குமரிக் கண்டத்தில்தான் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் அவன் பெயரோடு தங்கள் இடங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டார்கள். எகிப்தின் பாரோவர்கள்(பரவர்கள்?) எனப்படும் அரசர்கள் ராம்சே என்று பெயர் வைத்துக்கொண்டனர். தசரத சாதகம் இராமனின் மனைவியாகிய சீதை அவன் உடன்பிறந்த தங்கை என்கிறது. பரோவர்களும் தங்கள் உடன்பிறந்த பெண்களையே மணந்து கொண்டனர் என்பது வரலாறு. எகுபதியர்கள் குமரிக் கண்டத்திலிருந்து குடியேறியவர்கள் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர்கள் கருத்து . முதல் மனிதர்களாக கிறித்தவமும் முகம்மதியமும் கூறும் ஆதாம், ஏவாள் ஆகியோரின் மகன்களாகிய காயின், ஆபேல் ஆகிய இருவருக்கும் இரட்டையர்களாக உடன் பிறந்த பெண்களில் ஆபேலுடன் பிறந்தவளான அக்கிளிமா அழகு மிகுந்தவளாக இருந்ததால் அவளை மணக்க விரும்பிய காயின் ஆபேலைக் கொன்றதாக ஒரு கருத்து உள்ளது (விக்கிபீடியா – ஆங்கிலம் Cain and Abel பார்க்க).

பாண்டிய அரசு குறைந்தது நான்கு மரபினரால் ஒன்றன் பின் ஒன்றாக ஆளப்பட்டது. முதலாமவர் மீனவராகிய நெய்தல் நில மக்கள், அடுத்தவர் இந்திரனைத் தெய்வமாகக் கொண்ட மருத நிலத்தோர், மூன்றாவதாக வந்தோர் ஆயர்களாகிய முல்லை நிலத்தோர், முல்லை நிலத்தினரை அகற்றிவிட்டு வந்தவர்கள் வேடர்களாகிய குறிஞ்சி நிலத்தவர். இந்த உண்மைகளை நாம் ஆரியருக்குரியவை என்று தவறாகக் கருதி ஒதுக்கும் வேதங்கள், தொன்மங்கள், பிற சமற்கிருதம், பிராகிருதம், பாலிமொழி நூல்கள், தொல்காப்பியம், நம் கழக(சங்க) இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றிலிருந்து நுணுக்கமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எகிப்திய, சீன வரலாறுகளிலும் இதே போன்ற எண்ணிக்கைகளில் அரச மரபுகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றை விரிவாகவும் நுணுக்கமாகவும் பகுத்தாய்ந்தால் குமரிக் கண்டத்தில் பாண்டிய அரசில் இடம் பிடித்த மரபுகளை அங்கேயும் தடம்பிடிக்க இயலக் கூடும்.

நம் உய்த்துணர்விலிருந்து (அனுமானத்திலிருந்து) தெளிவுப்படுத்தப்பட வேண்டியவை ஒருபுறமிருக்க, இன்னும் தெளிவான தரவுகளடிப்படையிலும் மீனவர்கள் பற்றிய சில செய்திகளை நாம் தொகுக்க வேண்டியுள்ளது. கடல் மூலம் ஐரோப்பாவுக்குச் சென்று கிரேக்கர்களுக்கு நாகரிகத்தை அறிமுகம் செய்தவர்களும் அ முதல் ன வரை 16 எழுத்துகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்களும் பீனீசியர்கள் என்பது வரலாறு. இவர்கள் இந்தியாவின் தென்கோடியிலிருந்து கடல்வழி சென்றவர்கள்; நடுக்கடலில் காற்றின் திசையறிந்து பாய்மரங்களின் உதவியோடு கலம் செலுத்தினர். அண்மைக் காலம் வரை இப்போலாசு என்ற கிரேக்க மாலுமிதான் முதன் முதலில் பருவக் காற்றுகளின்(மன்சூன்கள்) உதவியுடன் நடுக்கடலில் கப்பல் செலுத்திய மாலுமி என்று கூறிவருகின்றனர். ஆனால் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பினிசீயரிகள் அந்த உத்தியைக் கண்டுபிடித்தவர்கள். தென்னையையும் பனையையும் மேற்காசியப் பகுதிகளில் அறிமுகம் செய்தவர்கள். நண்ணில(மத்தியதர)க் கடலின் கிழக்குக் கரையோரத்தில் வாழ்ந்தவர்கள். உலகின் மிகத் தொன்மையான கடலோடிகள். எகிப்திய அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கிணங்க ஆப்பிரிக்கக் கண்டத்தைக் கப்பல் மூலம் வலம் வந்தவர்கள். வெள்ளையர் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் நன்னம்பிக்கை முனையை அவர்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்தவர்கள். வெடிமருந்து, கண்ணாடி ஆகியவற்றைக் சீனர்களுக்கு முன்பே கண்டுபிடித்தவர்கள். கடல் வாணிகம், கடற்கொள்ளைகள் மூலமாக ஏழு கடல்களையும் கட்டி ஆண்டவர்கள். ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பெயர்கள் இரண்டு பினீசீயப் பெண்களின் பெயர்களிலிருந்து வந்தனவாகக் கூறப்படுகின்றன. கிரேக்கத் தொன்மங்களில் இடம்பெறும் பல மாந்தர்கள் பினீசியர்களே. ஓமரின் இலியட் காப்பியித்தில் வரும் எலனின் கடத்தலும் அதைத் தொடரும் போரும் பினீசீயர்கள் நடத்திய ஒரு பெண் கடத்தலின் தொடர்விளைவுகளே என்றும் கூறப்படுகிறது. கிரேக்கர்களுடன் நடத்திய ஒரு கடற் போரின் போது வீசிய ஒரு பெரும் சூறாவளியின் விளைவால் இவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அலக்சாந்தரால் இவர்கள் வரலாற்றிலிருந்தே மறைந்து போயினர். ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கறுப்பின மக்களை ஆப்பிரிக்கக் கண்டத்தில் பிடித்து உலகெங்கும் குறிப்பாக, அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு சென்று வாணிகம் செய்தவர்கள் ஐரோப்பாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஐபீரியத் தீவக்குறை(தீபகற்பம்)யில் அமைந்துள்ள பெயின், போர்ச்சுக்கல் நாட்டினரே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந் நாட்டு மக்களைப் பினீசீயர்கள் பிடித்துப் போய் உலகமெல்லாம் அடிமைகளாக விற்றனர் என்பது ஒரு வரலாற்று விந்தை. இந்தியாவின் தென்கோடியாகிய தமிழகம் அல்லது குமரிக் கண்டத்திலிருந்து சென்ற இவர்களது சிறப்பு என்னவென்றால் இவர்கள் சிவந்த படகுகளில் சென்றனர் என்பதாகும். இந்தச் செய்தி நமக்குத் தெரியவந்ததும் நம் கவனத்துக்கு வருவது செம்படவர் (செம்படகர்?) என்ற பெயரில் ஒரு மீனவர் பிரிவு நம்மிடையில் உள்ளது தான். இவர்களது பண்பாட்டை ஆய்வுக்குட்படுத்தினால் பினீசீயர்களைப் பற்றிய புதிய செய்திகள் நமக்குக் கிடைக்கலாம். இன்று இவர்கள் உள்நாட்டு நீர்நிலைகளின் மீன்பிடிக்கும் சாதியாராக வாழ்கின்றனர்.

சிலப்பதிகாரக் காலம் வரை தமிழகத்தில் மீனவர்கள் செல்வாக்குடன் வாழ்ந்திருக்கின்றனர். கடல் வாணிகர்கள் பரதர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்களை மன்னவர் பின்னவர் என்றே அது குறிப்பிடுகிறது. கடல் வாணிகர்கள் நாயக்கர்கள் என்றே அழைக்கபட்டனர்(நாவாய் → நாய்க்கன்). கண்ணகியின் தந்தையின் பெயர் மாநாய்கன் என்பதாகும். உள்நாட்டு வாணிகர்களாகிய சாத்துவர்களும் அரசனுக்கு இணையான செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாசாத்துவான் எனும் நிலவாணிகனின் மகன் கோவலன். ஆனால் கடல்வாணிகர், நில வாணிகர்களின் பட்டங்களை இந்த வரையறைக்குள் கண்டிப்பாக நிறுவ முடியவில்லை. மணிமேகலையில் வரும் சாதுவன் ஒரு கடல் வாணிகன். கோவலன் தான் ஈடுபட்ட கடல் வாணிகத்தில் தான் வறுமை எய்தியதாகவும் மாதவி எனும் வஞ்சகம் நிறைந்த பொய்மகளோடு உறவாடியதால் முதாதையர் திரட்டி வைத்திருந்த மலைபோலும் செல்வத்தை இழந்தேன் எனவும் இருபொருட் படும்படி, தான்,
சலம் புணர் கொள்ளை சலதியோடாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த... தாகக்
கண்ணகியிடம் கூறினான். சலம் என்பதற்கு நீர், வஞ்சகம் என்றும் சலதி என்பதற்கு பொய்ம்மை நிறைந்தவள், கப்பல் என்றும் இரு பொருட்கள் உண்டு. (இவ்வாறு இரு பொருட்கள் இருப்பதை எமக்குச் சுட்டிக் காட்டியவர் புலவர் த.ச.தமிழனார்) கோவலனின் இந்தச் சொல்திறனைப் பார்த்துத்தான் கண்ணகி புன்முறுவல் காட்டினள் என்று இளங்கோவடிகள் குறிப்பாக உணர்த்தினாரோ?

தமிழகக் கடற்கரையையும் அங்கு வாழ்ந்த வாணிகர் குல மக்களையும் பற்றிச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இவ்வளவு விரிவாகக் கூறுகின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் எனப்படும் கழக இலக்கியங்களில் கடலோடிகளைப் பற்றிய குறிப்புகள் அரிதாகவே காணக்கிடக்கின்றன. 1862 அகத்துறைப் பாடல்களில் பெரும்பாலானவை பாலை எனப்படும் காதலர் பிரிவு பற்றியவை. அவற்றுள் கடல்வழிப் பிரிவு பற்றிய பாடல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்கிறார் பர்.வ.சுப.மாணிக்கனார், தமிழர் காதல் என்ற தன் பண்டிதர் பட்ட ஆய்வேட்டில்.

போர்களையும் காதலையும் பற்றி விரிவாகக் காணப்படும் கழக இலக்கியத் தொகுப்பில் கடல் வாணிகர்களைப் பற்றிய செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது அவற்றைத் தொகுத்தவர்களின் கைவண்ணமே. உண்மையில் தமிழக வரலாற்றை இருட்டடிப்பதே கழக நூல் தொகுப்பின் நோக்கம் என்று தெரிகிறது. வட இந்தியாவில் குமரிக் கண்ட மக்கள் பெருமளவில் குடியேறிய போது ஏற்கனவே அங்கே வாழ்ந்த மக்களுக்கும் புதிதாகக் குடியேறியவர்களுக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஏதோவொரு வகையில் பதிந்து வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அச் செய்திகளை முற்றிலும் இருட்டடித்துள்ளனர். அதே போல் ஆட்சியாளர்களின் வரம்பற்ற அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்திய வாணிகர்கள் பற்றிய செய்திகளையும் இருட்டடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, பாண்டிய அரசின் முதல் மரபைத் தோற்றுவித்த பெண்ணான குமரியின் பெயரையும் அவர்கள் புறக்கணித்தனர். சிலப்பதிகாரம் மதுராபதி என்ற பெண் தெய்வத்தைத்தான் பாண்டியர் குல முதல்வி என்று கூறுகிறது. அவர்களை மீறி வந்த குறிப்பு தான் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி (குமரித் துறையிலுள்ள அயிரை மீனை அள்ளி உண்ட நாரைகள்) என்ற வரி. அயிரை என்ற மீன் நன்னீரில் வாழ்வது. எனவே குமரியம் பெருந்துறை ஓர் ஆற்றின் கரையில் அதாவது குமரியாற்றின் கரையில் அமைந்திருந்தது என்பது புலனாகிறது. (ஒரு கருத்தரங்கில் இவ் வரியைச் சுட்டிக் காட்டியவர் ப-ர்.க.ப.அறவாணன்). குமரி மலையைப் பற்றியும் அதனைக் கடல் கொண்டது பற்றியும் கூறும் சிலப்பதிகார வரிகளிலிருந்துதான் குமரிக் கண்டம் என்ற பெயரையே நம்மால் எய்த முடிகிறது. அதே போல் குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய தமிழகத்தினுள் குடிபெயர்ந்த சேர, சோழ. பாண்டியர்களுக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள் முறையே பறையர், துடியர், பாணர், கடம்பர் எனப்படும் பெயர்களைப் பெற்ற குடித் தலைவர்களின் கீழ் வாழ்ந்த உள்நாட்டு மக்கள். இவர்களைப் பற்றிய குறிப்பு நூற்தொகுப்பாளர்களை மீறி வந்துள்ளது. இக் குடித் தலைவர்களில் எதிர்த்து நின்றவர்களை ஒடுக்கி அவர்கள் இழிந்தவர்களாக அழுத்தப்பட்டு நெடுநாட்களுக்குப் பின்னுள்ள ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்ற பாக்களே தொகுக்கப்பட்டுள்ளன. அதனால் இம் மக்களைப் பற்றிய செய்திகள் ஒன்றோடொன்று மயங்கி ஒருவரை மற்றொருவரிடமிருந்து பிரித்துக்காண இயலாத நிலையில் நம்மைக் குழப்புகின்றன. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றிலிருந்துதான் நாம் இன்றைய தமிழகத்தின் மூலக் குடிகளைப் பற்றியும் கடலோடிகளைப் பற்றியும் செய்திகளை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது.

பறையர், துடியர், பாணர் என்ற மூன்று குடிகளுக்கும் பொதுத்தன்மை அவர்களது பெயர்களோடு ஏதோவோர் இசைக் கருவி இணைந்துள்ளது. பறை→ பறையர், துடி (உடுக்கு) → துடியர், யாழ் → பாணர். இவ்வாறு தொல்பழங்குடிகளில் இசைக் கருவிளோடு தொடர்புடையவர்களை சாமன்கள் என்று மாந்தநூலார் குறிப்பிடுவர். இவர்கள் தத்தம் குடியிருப்புகளின் பூசகத் தலைவர்கள். இவர்கள் பல்திற ஆற்றல் படைத்தவர்கள். இவர்களது அடிப்படை ஆற்றல் வசியமாகும். இதனை எய்த இவர்கள் நம் தொன்மங்களில் முனிவர்கள் மேற்கொண்டனவாகக் கூறப்படும் “தவமுறைகளை”த் தங்கள் உடலை வருத்தி மேற்கொள்வதால் எய்தினர். மருத்துவத்துக்காக அந்த ஆற்றலைப் பயன்படுத்தினர். அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தங்களுக்கு அவர்களால் தீங்கு விளைவிக்க முடியும் என்று மக்கள் நம்பினர்; அதனால் அவர்களுக்கு அடங்கி வாழ்ந்தனர். வசியம் செய்வதற்காகவே அவர்கள் இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர். இன்றும் குறி சொல்வோரில் பெரும்பாலோரும் பேயோட்டுவோரும் பல்வேறு இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். சாமன் என்ற சொல் உருசிய மொழி சார்ந்தது. சாம்பன் (பறையன்) என்ற தமிழ்ச் சொல்லுக்கும் சாம வேதம் எனப்படும் மறை நூலுக்கும் இச் சொல்லோடு தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நான்கு வேதங்கள் இறுதியில் வரும் அதர்வண வேதம் பிறருக்குத் தீங்கிழைக்கப் பயன்படும் மந்திரங்களை (பிளாக்மேசிக்) கொண்டிருப்பதாகக் கூறுவர். இசைக் கருவிகளோடு தொடர்புடைய இந்த மூன்று வகைக் குடியினரோடு இணைத்துக் கூறப்படும் கடம்பர்களும் இம் மூவரைப் போன்று சாமன்களாகவே இருந்திருக்க வேண்டும். மூவேந்தர்கள் குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த போது சாமன்களாகிய இந் நான்கு பெயர்களிலமைந்த தலைவர்களின் கீழ் திரண்ட உள்நாட்டுக் குடிகளே அவர்களை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். இந்த உண்மையைக் கழக நூல் தொகுப்பாளர்களின் பார்வைக்குத் தப்பி இடம்பெற்று விட்ட இந்த வரிகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்த நால்வரில் கடம்பர் எனப்படுவோர் கடலோடும் ஒரு மக்கட் குழுவினர் என்பதற்குக் கழக இலக்கியத்தில் சான்று உள்ளது. இன்றைய கோவா மாநிலத்துலுள்ள மக்கள் இந்தக் கடம்பர்களின் வழிவந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பண்டைத் தமிழகத்தின் மேற்குக் கடற்கரையாகிய இன்றைய அரபுக் கடலில் கடற் கொள்கைகளில் ஈடுபட்டுவந்தனர், அதனால் தமிழகத்தோடு வாணிகத் தொடர்பு வைத்திருந்த உரோமர்களுக்கு ஏற்பட்ட இடையூற்றை நீக்க சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பற்படை கொண்டு அவர்களது வலிமையை அழித்தான் என்று கழக இலக்கியமும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. கிழக்குக் கடற்கரையில் கடம்பர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பதுமாசூரனோடு முருகன் போரிடும் போது அவன் கடம்ப மரமாக மாறி நின்றான் என்றும் அதனை வேல் கொண்டு முருகன் அழித்தான் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. அதனால் கடம்பன் என்றும் முருகன் அழைக்கப்படுகிறான். இது கிழக்குக் கடற்கரையில் கடம்பர்க்கள் ஒடுக்கப்பட்டதைக் குறிக்குமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு புதைந்து கிடைக்கும் வரலாற்று உண்மைகளைத் தடம் பிடிப்பதற்கு உறுதுணையாகப் பல தடயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. கடல் மேல் செலவு(பயணம்) மேற்கொள்வோர் இழிகுல மக்கள் என்று மனுச் சட்டம் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் வலங்கை, இடங்கை என்று இருவகைச் சாதிக் குழுக்கள் இருந்தன. இந்தப் பாகுபாடு 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. ஆங்கிலர்தாம் இதற்கு முடிவுகட்டினர். இவ் விரு வகுப்பினரும் தம்முள் இடைவிடாத கொலைவெறித் தாக்குதல்களை ஏறக்குளைய 900 ஆண்டுகள் நடத்திவந்தனர். இவர்களது பிணக்குகளுக்கு அடிப்படையாயிருத்தவை விருதுகள் எனப்படும் 72 உரிமைகளே. செருப்பணிதல், குடைபிடித்தல், குதிரையில் செல்லல், பல்லக்கில் செல்லல், வாள்போன்ற ஆயுதங்கள் வைத்திருத்தல், நடைபாவாடை என்ற பெயரில் நடப்பதற்குத் துணி விரித்தல், தலைக்கு மேல் துணி பிடித்துச் செல்லும் மேற்பாவாடை, முன் சங்கு, பின் சங்கு, ஒற்றைச் சங்கு, இரட்டைச் சங்கு ஊதல், பெண்கள் முன்னும் பின்னும் சதிராடல், தோளில் துண்டு அணிதல், தலைப்பாகை அணிதல், பூணூல் அணிதல் என்று நீள்கிறது இந்தப் பட்டியல். இவ் வுரிமைகளை மக்களில் ஒரு சாரருக்கு மறுப்பது என்பது இன்றைய தீண்டாமையை விடக் கொடியது. வாணிகர்களும் கடலோடிகளும் இடங்கைச் சாதியினராக ஒதுக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் கப்பல் மூலம் இங்கிலாந்துக்குச் செலவை மேற்கொண்ட இராசாராம் மோகன்ராய் சாதி விலக்கப்பட்டதையும் கணிதமேதை இராமானுசம் இங்கிலாந்து செல்ல அவரது தாயின் உறுதியான பிடிவாதம் தேவைப்பட்டது என்பதையும் குமரி அம்மன் கோயில் நுழைவு காந்திக்கு மறுக்கப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்த இருட்டடிப்பின் பின்னணியில் தமிழகக் கப்பல் வாணிகர்களைப் பற்றிய பல வரலாறுகளையும் கதைகளையும் நாம் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலம் அறிகிறோம். மணிமேகலைத் தெய்வம் கோவலனின் குலதெய்வமான கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விட கடலில் தத்தளித்த கோவலனின் முன்னோன் ஒருவனைக் கடலின் காவல் தெய்வமான மணிமேகலைத் தெய்வம் காப்பாற்றிக் கரை சேர்த்தது. இதே கதை புத்த சாதகக் கதைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அதில் வரும் வாணிகன் புத்தரின் முற்பிறப்பாகச் சொல்லப்படுகிறான். தாய்லாந்து இளவரசனுக்கும் இதே கதை கூறப்படுகிறது. இவற்றின் மூலம் தமிழகக் கப்பல் வாணிகர்களின் பண்டை நாள் செல்வாக்கும் பெருமையும் நமக்குத் தெரியவருகின்றன. மணிமேகலையில் சாதுவன் என்ற தமிழகக் கப்பல் வாணிகன் கப்பல் உடைந்து, நக்க நாகர்கள் எனும் காட்டுவிலங்காண்டிகள் வாழும் தீவில் ஒதுங்கி அவர்களோடு உறவு கொண்டது கூறப்படுகிறது. நிக்கோபார்த் தீவுகள் எனப்படும் நக்குவாரித் தீவுகளுக்கு அப் பெயரைத் தமிழகக் கடல் வாணிகர்களே சூட்டியுள்ளனர். (நக்குவாரித் திவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய் வகை இன்றும் நக்குவாரித் தேங்காய் என்றே அழைக்கப்படுகிறது. நக்க என்றால் ஆடையில்லாத என்று பொருள்; நேக்கட் என்ற ஆங்கிலச் சொல்லின் மூல வடிவம் இது. நக்க நாகர்கள் ஆடையின்றி இருந்ததோடு மனிதனைக் கொன்று உண்பவராகவும் இருந்தனர். இன்றும் நிக்கோபார் தீவுகளின் மூலக்குடிகளின் உடை அன்றைய நிலையிலிருந்து பெரும் மாற்றம் எதையும் பெற்றுவிடவில்லை.)

இவ்வாறு கடல் மீதான நம் ஆட்சி உள்நாட்டு அரசர் - பார்ப்பனர் கெடுமதியால் அழிக்கப்பட்டது. நம் கடல் வாணிக வகுப்புகள் அழிக்கப்பட்டன. உள்நாட்டு ஒடுக்குமுறைக்குத் தப்பிய நம் கடல் வாணிகர்கள் இந்தோனேசியா, மலேயா போன்ற கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து வாணிகம் செய்தனர். அதே போல் நிலவழி வாணிகர்கள் தமிழக எல்லைக்கு வெளியே கழகங்கள் அமைத்துச் செயற்பட்டனர். சோழப் பேரரசு காலத்தில், குறிப்பாக இராசேந்திரன் அக் கழகங்கள் மேல் படைசெலுத்தி அழித்தான். இந்தோனேசியத் தீவுகளான சாவகம் (சாவா) சுமத்திரா(கடாரம்) போன்ற தீவுகள் மீது படையெடுத்து அங்கிருந்த தமிழகக் கடல் வாணிகர்களை ஒடுக்கினான். இன்று பண்டை நாகரிகத் தொடர்ச்சியுள்ள மக்களில் மிக எளிதாக மதமாற்றத்துக்கு உள்ளாவோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள்தாம். கிழக்காசிய நாடுகளில் முகம்மதியத்தைத் தழுவியுள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் தமிழர்கள்தாம். அதனால்தான் அங்குள்ள முகம்மதியர்களின் பெயர்களோடு தமிழ் தழுவிய “இந்து”ப் பெயர்களைக் காண முடிகிறது. இதற்குக் காரணமே நம் நாட்டில் தொழில் - வாணிகம் சார்ந்த மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையே.

இது போன்ற ஒடுக்குமுறைப் பின்னணியில்தான் தங்கள் புதிய சமயமாகிய முகம்மதியத்தை அரபு வாணிகர்களால் எளிதாகக் கடற்கரையில் வாழ்ந்த தமிழகக் கப்பல் வாணிகர்கள் ஏற்க வைக்க முடிந்தது. அவர்கள் மரக்கலராயர்கள் என்ற சொல்லின் மருவாகிய மரைக்காயர் என்று அழைக்கப்படுகின்றனர். அரேபியர்களின் சிறப்புப் படைப்பும் முகாமையான வாணிகப் பண்டமுமான போர்க் குதிரைகளைப் பழக்கிப் பயன்படுத்தும் தமிழக அரசர்களின் குதிரைப்படை வீரர்களை மதமாற்றி இராவுத்தர்களாக்க முடிந்தது. இவ்வாறுதான் தில்லியின் மாலிக்காபூர் மதுரையின் வீரபாண்டியன் மீது போர் தொடுத்த போது போரின் நடுவில் வீரபாண்டியன் படையிலிருந்த 30 ஆயிரம் முகம்மதிய வீரர்கள் கட்சி மாறி மாலிக்காபூர் பக்கம் ஓடித் தங்கள் தாய்மண்ணுக்கு இரண்டகம் செய்ததன் மூலம் தமிழகத்தின் உரிமை வாழ்வுக்குப் பேரிடியாகிய வரலாற்று அவலம் நிகழ்ந்தது.

இவ் விரு சாரார் தவிர தமிழகத்தின் ஏற்றுமதிப் பண்டங்களில் முதன்மை பெற்ற துணியை நெய்து வாழ்ந்த சாலியப் பள்ளர் என்ற மக்களும் பெருமளவில் மதம் மாறினர். இந்த மதமாற்றங்களால் ஒடுக்கப்பட்ட இந்த மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. நாளடைவில் அரபு வாணிகர்கள் கடற்கரையோரங்களில் சூறையாடல், தீவைத்தல், பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தல் என்று பேயாட்டம் ஆடினர். உள்நாட்டு மக்களும் அவர்களுக்கு இடையூறு விளைவித்தனர். மனுச் சட்டத்தின்படி ஆட்சி செய்த நம் அரசர்களால் மீனவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு இருதலைக் கொள்ளி எறும்புகளாக வாழ்ந்த மீனவ மக்கள் இன்னொரு மதமாற்றத்துக்கு உள்ளாயினர். இந்த மதமாற்றம் தூய சபேரியார் என்ற பழஞ்சபை (கத்தோலிக்க)த் துறவியாரால் மேற்கொள்ளப்பட்டது. அத் துறவியார் போர்த்துக்கல் நாட்டைச் சேர்நதவர். தமிழக மீனவர்கள் போர்த்துக்கல் நாட்டு மன்னரின் குடிமக்களானால் அவர்களுக்கு அவர் ஆயதங்கள் வழங்கிப் பாதுகாப்பார் என்ற வாக்குறுதியின் பேரில் அவர்கள் மதமாற்றம் பெற்றனர் என்று வரலாறு கூறுகிறது. உண்மையில் இது மதமாற்றமல்ல, ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்நிலத்தை எங்கோ நெடுந்தொலைவில் உள்ள இன்னொரு அரசரின் ஆளுகையின் கீழ்க் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியாகும். இதற்காக நாம் மதம் மாற்றியவர்கள் மீதும் மதம் மாறியவர்கள் மீதும் சீற்றம் கொள்வதில் பொருளில்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கி மக்களின் மனநிலையைச் சிதைத்து வைத்திருந்த உள்நாட்டு ஆதிக்க விசைகள் மீதுதான் நம் சீற்றம் பாய வேண்டும். இன்று இரா. சே.ச. (இராட்டிரீய சுயம் சேவக் சங்கம் – ஆர்.எசு.எசு.) தலைவர், இந்தியாவிலுள்ள முகம்மதியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் முன்னோர் ஒரு காலத்தில் “இந்து”க்களாக இருந்தனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்கிறார். அப்படி ஒப்புக்கொள்வதில் நமக்கு அட்டி யொன்றுமில்லை. ஆனால் அதற்கு முன்னால் அவர்களின் முன்னோர்கள் மதம் மாறியதற்குக் காரணம் இன்று குற்றம் சாட்டுவோரின் முன்னோர்கள் அவர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைதான் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, சாதியும் வருணமும் “இந்து” சமயத்தின் மிக உயர்ந்த அடிப்படைக் கோட்பாடு என்று இன்று கூறுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். சாதி உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் பூணூல், புலாலுணவை இழிவாகக் கூறுதல், மக்களின் தாய்மொழிகளை இழிவுபடுத்திச் சமற்கிருத்தைத் தேவ மொழி என்று கூறும் ஆணவம், மக்களைச் சாதி, வருண அடிப்படையில் பிரித்து வைக்கும் சிறு தெய்வம் மற்றும் ஆகம வழிபாட்டு முறைகள் என்று “இந்து” சமயத்தைக் காலத்துக்கும் நாகரிகமடைந்த ஒரு மக்கள் குழுவுக்கும் மக்களாட்சி அமைப்புக்கும் பொருந்தாமல் ஆக்கி வைத்திருக்கும் கூறுகளைக் கைவிட்டு அனைத்து மக்களையும் சரிசமமாக மதிக்கும் ஒரு புதிய சமயமாக இந்தச் சமயத்தை மறுவடிவமைக்க முன்வர வேண்டும். அத்துடன் நாட்டை அயலவர்க்கு ஒட்டுமொத்தமாக விலை பேசும் பா.ச.க.வும் அதன் “தாராள”ப் பொருளியல் கோட்பாட்டை எதிர்ப்பது போல் பாய்ச்சல்(பாவலா) காட்டி விட்டு மரபுத் தொழில்களைப் பாதுகாப்பது போல் நடித்து, இக் கால மிக உயர் அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் உருவாகாமல் உளவியலில் தடுத்து வெளிவிசைகளுக்கு திரைமறைவில் துணைபோகும் “சுதேசி” விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தும் இரா.சே.ச.வின் குருமூர்த்தியும் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவரட்டும். தற்சார்புள்ள அத்தகைய ஒரு பொருளியல் உருவாகி நாட்டில் வளம் மலிந்து மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டால் வெளிநாட்டுப் பணத் துணையுடன் மதமாற்ற வருவோருக்கு சப்பானில் போல், சீனத்தில் போல் தோல்விதான் கிடைக்கும்.

முகம்மதியமும் கிறித்தவமும் மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகள் முழு வெற்றி பெற முடியவில்லை. அவ்வப்போது புதுப்புதுக் கதைகளைப் புனைந்து பொய்யான இறும்பூதுகளை (அற்புதங்களை) நிகழ்த்திக்காட்டி சிறு சிறு கோயில்களை உருவாக்கி அவற்றில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களில் தலைமைப் பண்புள்ள சிலரைப் பிடித்து சில பொறுப்புகளை அல்லது வரிசைகளை (மரியாதை, முதல் மரியாதை என்பது போல்) அவர்களுக்கு வழங்கி எதிர்கொண்டனர் “சாதி இந்துக்கள்” எனப்படுவோர். நெல்லை மாவட்டம் உவரியிலிருக்கும் சுயம்புலிங்கசாமி கோயில், குமரி மாவட்டம் மண்டைக்காட்டம்மன் கோயில், நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயிலிலிருக்கும் சங்கரநாராயண சாமி கோயில் என்று பட்டியலிட்டால் தமிழகக் கோயில்களில் கணிசமான ஒரு விகிதம் இந்த வகைப்பாட்டில் அடங்கிவிடும். புதிய சமயங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் காலத்தில் அவர்களது அதிகாரத்துக்கு அடங்கியும் அதனால் கிடைக்கும் பொருளியல் நலன்களுக்காகவும் பிறர் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவும் மதம் மாறியோர் பெருமளவில் உண்டு. பெரும் நிலவுடைமைகளைக் கொண்டிருந்த மேற்சாதி நிலக்கிழார்கள் அவற்றைப் பாதுகாத்துக்கொள்ள மதம் மாறினர்; அவ்வாறு புதிய மதங்களிலும் பழைய ஆதிக்கங்களைத் தொடர்ந்தனர். இன்று மத வெறி இயக்கங்களைக் கட்டி வளர்ப்பதில் இவர்கள் தலைமை தாங்குகின்றனர், அல்லது பின்னணி கொடுக்கின்றனர்.

இவ்வாறு மக்கள் திசைக் கொருவராய் பிரிந்து நிற்கும் சூழ்நிலையில் 1076 கிலோமீற்றார் நீளம் கொண்ட வளமிக்க தமிழகக் கடற்கரை கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமும் அதன் கடற்பகுதியும் வளம் மிக்கவை. இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை உலகில் வேறு எங்கும் இல்லாதது, அதிலுள்ள ஏற்ற வற்றங்கள் மிகக் குறைவானவை. உயிர்கள் பல்கிப் பெருகவும் விரைந்து வளரவும் மிகத் தோதானவை. நிலத்தில் போலவே நம் கடலினுள்ளும் எண்ணற்ற மீன்வகைகள், நிலைத் திணைகள் (தாவரங்கள்) அவை தவிர்த்த பிற உயிர்வகைகள் என்று மிக உயர்ந்த பல்லுயிர்த் திரட்சி உள்ளது. அவற்றை நாம் பேணிக் காக்கவும் இல்லை, முழுமையாகப் பயன்படுத்துவும் இல்லை.

கடலோடுதல் போன்றே தமிழக மீன்பிடித் தொழிலும் பழமையானது. கடல் தொடர்பான மீனவர்களின் தொழில்நுட்ப அறிவும் ஒப்பற்றது. கடலில் வீசும் காற்றுகள், நீரோட்டங்களின் தன்மைகள், அலைகளின் வகைகள், நீர் கொள்ளும் நிறத்தின் அடிப்படையில் மழை, புயல் போன்ற பருவநிலைகளை முன்கணித்தல், வெவ்வேறு பருவ நிலைகளில் கிடைக்கும் மீன்வகைகள், மீன்கள் முட்டையிடல், பொரித்தல் போன்ற அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி, கரையிலிருந்து எவ்வளவு தொலைவில் அல்லது நீர் மட்டத்திலிருந்து எவ்வளவு ஆழத்தில் எந்ததெந்தக் காலத்தில் என்னென்ன மீன்வகைகளும் பிற கடல் உயிரிகளும் கிடைக்கும் போன்ற எண்ணற்ற புலனங்களை நன்கறிந்தவர்கள் மீனவர்கள், எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்த வகை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள். அத்துடன் கனம் குறைந்த வகை மரங்களைச் சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட கட்டுமரங்கள் எனப்படும் மிதவைகளில் கடலினுள் நெடுந்தொலைவு சென்று மீன் பிடிக்கும் திறன் பெற்றவர்கள். விண்மீன்களின் துணையுடன் திசையையும் நேரத்தையும் கணித்து தம் கடற்செலவை நெறிப்படுத்தப் பயின்றவர்கள். உயிரைப் பணயம் வைத்துத் தொழில் செய்யும் துணிவைத் தம் வாழ்க்கைச் சூழலால் பெற்றவர்கள்.

தமிழர்களின் பண்பாட்டில் மட்டுமல்ல உலக மக்களின் பண்பாட்டிலும் நம் மீனவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. உலகமெல்லாம் தமிழர்களின் நாகரிகத்தைச் சுமந்து சென்று பரப்பியவர்கள் என்பதோடு உப்பின் பயன்பாட்டைக் கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தியவர்கள் அவர்களாகும். கடற்கரையில் இயல்பான நிலைமையில் அலை எட்டும் தொலைவுக்கு அப்பால் ஏற்றவற்றங்களின் போது அல்லது புயல்கள், ஓங்கலைகளின் போது கடல் நீர் தேங்கிய குட்டைகளில் உப்பு செறிந்திருக்க, அதில் செத்து ஒதுங்கிய மீன்கள் நீர் வற்றிய போது அழுகாமல் சிதையாமல் காய்ந்திருப்பதைப் பார்த்து உப்பு என்ற பதிய பண்டத்தைக் கண்டார்கள். உயிர்களின் சதைகள் சிதைவதைக் கடலுப்பு தடுக்கிறது என்பதைக் கண்டறிந்து கருவாடு தொடங்கி எண்ணற்ற ஊறுகாய் வகைகள் தோன்றவும் தோல் பதனிடும் தொழில் தோன்றவும் காரணமானவர்கள். இவ்வாறு பதனிடப்பட்ட தோலிலிருந்து தோலாடைகள் உருவான பின்னர்தான் உலகின் பனிப் பகுதிகளில் மனிதன் குடியேறியிருக்க முடியும். கருவாட்டை “உணங்கல்” என்று கேரளத்தில் கூறுவர். சிலப்பதிகாரமும் அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால் உணங்கல் என்பது கருவாட்டில் ஒரு வகைதான். உப்பிடப்பட்ட மீனை வெய்யிலில் உலர்த்துவதால் கிடைப்பது அது. சிறிய மீன்கள் தாம் இவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த மசியல்(மசாலா)ப் பொருளும் சேர்க்காமல் சுட்டோ பொரித்தோ உண்ணலாம். அதே நேரத்தில் பெரிய மீன்களைப் பதப்படுத்த மணலில் குழிகளைத் தோண்டி மீன்களின் வயிற்றைப் பிளந்து குடல் போன்ற பகுதிகளை நீக்கி உள்ளே உப்பைத் திணித்து உப்பினுள் இட்டுப் புதைப்பார்கள். இதற்குக் குழியுப்பு முறை என்று பெயர். இவ்வாறு கிடைக்கும் கருவாட்டுக்கு ஊதைக் கருவாடு என்பது பெயர். இதைச் சமைப்பதற்கு மசியல் பொருட்களின் துணையும் சமையல் கலையில் தேர்ச்சியும் தேவை.

கடல் அறிவியல் - தொழில்நுட்பம் பற்றி மேலே குறிப்பிட்டவற்றில் இன்று எத்தனை நூற்றுமேனி(விழுக்காடு) நம் நாட்டு மீனவர்களிடம் எஞ்சியுள்ளது என்பதைக் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. புதிதாக நுழைந்த விசைப் படகுகள், அவற்றுக்கு ஏற்ற வலைகள் போன்றவற்றின் போட்டியின் முன்னால் பழைய உத்திகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பின்னணியில் ஓர் இரண்டுங்கெட்டான் நிலை உருவாகியுள்ளது. புதிய கருவிகளின் வரவால் பழைய தொழில்நுட்பக் கூறுகள் கைவிடப்பட்டு அவற்றை அறியாத ஒரு புதிய தலைமுறை மீனவர்கள் உருவாகிவிட்டனர். புதிய தொழில்நுட்பம் மேலை நாடுகளில் உருவானதற்குப் பின்புலமான வலிமைமிக்க பொருளியல் சூழல் நம் நாட்டில் இல்லை. எனவே அப் புதிய தொழில்நுட்பத்தை அதன் முழுமையான வடிவில் இங்கு கடைப்பிடிக்கவும் முடியவில்லை. இந்தத் தொழில்நுட்ப வெறுமைச் சூழல் கடல்தொழில் துறையில் மட்டுமல்ல, நம் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது, அது பொருளியல் சார்ந்ததாயினும் சரி பண்பாட்டுக் களமாயினும் சரி. இந்த நிலைமைக்கு இங்குள்ள ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணைபோகும் பல்வேறு அரசியல் கோட்பாடுகளும்தாம் காரணம். குறிப்பாகப் பாட்டாளியர் கோட்பாடாகச் சிதைக்கப்பட்ட மார்க்சியத்தின் பெயரால் இயங்கும் இயக்கங்களின் பங்கு இதில் பெரிது.

தமிழக மக்களில் கடல் மீனை விரும்பி உண்போரின் விழுக்காடு மிகக் குறைவு. கடல் மீன் கருவாட்டை விரும்பி உண்போர் கூடக் கடல் மீனை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் உண்டு. கடற்கரையிலிருந்து தலைச் சுமையாகத்தான் முன்பு மீன் உள்நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் மிதிவண்டியும் பயன்பட்டது. பேருந்துகளில் மீனையோ கருவாட்டையோ கொண்டு செல்ல விடுவதில்லை. எனவே கடல் மீனின் பயன்பாட்டு எல்லை கடற்கரையிலிருந்து 15 கிலோமீற்றர்களுக்கு உள்ளாகத்தான் இருந்தது. கருவாட்டைத் தலைச் சுமையிலும் வண்டிகளிலும் பின்னர் சரக்குந்துகளிலும் எங்கு வேண்டுமாயினும் கொண்டுசெல்ல முடியுமாதலால் அது எல்லாக் காலங்களிலும் நாடு முழுவதும் கிடைத்தது. எனவே அதை உண்ணும் பழக்கமும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் எட்டியிருந்தது. கருவாடு, தவிர ஆறு, ஏரிகள் குளங்களிலிருந்து கிடைக்கும் நன்னீர் மீன்களே உள்நாட்டில் பயன்பட்டன. கடற்கரையை ஒட்டிய மக்களுக்கு நன்னீர் மீன் சமையலில் தேர்ச்சியில்லாதது போலவே உள்புற மக்களுக்குக் கடல்மீன் சமையலில் பயிற்சி இருக்கவில்லை. இப்போது பனிக்கட்டியைப் பயன்படுத்திக் குளிர்வித்து உந்துவண்டிகளில்(வேன்கள்) விரைந்து கடவப்படுவதால் கடல் மீனை உட்புற மக்களும் பரவலாக உண்ணத் தலைப்பட்டுள்ளனர். கடற்கரையை ஒட்டிய மக்கள் தாங்களே சிறு மீன்களைச் செதில் நீக்கி அறுத்துச் சமையலுக்கு ஆயத்தம் செய்யக் கற்றவர்கள். உட்புற மக்களுக்கு இதில் சில்லரை வாணிகனின் உதவி தேவைப்படுகிறது. அத்துடன் சிறு மீன்களை விடப் பெரிய மீன்களைச் சில்லரை வாணிகனிடமிருந்து துண்டு செய்து வாங்கிவிட்டால் பொரித்து உண்பது எளிதாக இருக்கும். எனவே உட்புறப் பகுதிகளில் பெரிய மீன்களை விரும்பி வாங்கிகுன்றனர். ஆனால் ஏழைகள் விலை மலிவு, சமையலில் எளிமை மற்றும் சிக்கனம் கருதியும் சிறிய மீன்களையே விரும்புகின்றனர்.

பொதுவாக துலை, நளி(ஐப்பசி, கார்த்திகை) மாதங்கள் மீன் ஏராளமாகப் “படும்”. (மீன் அறுவடையை மீன்பாடு என்று கூறுவர்.) கடந்த காலங்களில் சாளை (மத்தி என்றும் அழைக்கப்படும்), நவரை, இறால், நெத்திலி(நெய்த் தொலி, நெய்த்தலை இவற்றின் மருவல் என்ற இரு கருத்துகள் உள்ளன) போன்றவை இம் மாதங்களில் குவிந்து கிடக்கும். அக் காலங்களில் கடற்கரையை அடுத்து வாழும் மீனவரில்லா மக்கள் கடற்கரைக்குச் சென்று இச் சிறுமீன்களை இலவயமாகப் பெற்று நெருப்பில் சுட்டுப் பனை வெல்லத்துடன் சேர்த்து உண்பர். இயல்பான காலங்களிலும் இது நடப்பதுண்டு. இன்று வெளிநாட்டு மீன்பிடிக் கலங்கள் நம் நாட்டுக் கடல் எல்லையினுள் முன்பு திருட்டுத் தனமாக இப்போது நம் ஆட்சியாளரின் ஒத்துழைப்புடன் நுழைந்து மீன்களை அள்ளிச் செல்கின்றன. (ஆனால் இதுவெல்லாம் தமிழ் நாட்டு மீனவர்களை எல்லை மீறியதாகக் கூறிச் சுட்டுக் கொல்லும் இந்தியக் கரைக்காவல் படையினரின் “கண்களில் படுவதில்லை”!) அத்துடன் உந்து வண்டிகள் மூலம் இங்குள்ள மீன்கள் தொலைவான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவதால் முன் போன்று கடற்கரையை அடுத்துள்ள மக்களுக்குச் செழிப்பாக மீன் கிடைப்பதில்லை.

இவ்வாறு தாராளமாக மீன்படும் துலை, நளி மாதங்களில்தான் காலரா என்றும் வாந்திபேதி என்றும் அழைக்கப்படும் கக்கல் கழிச்சல் நோய் நம் நாட்டை 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாக்கி ஆண்டு தோறும் பல்லாயிரவரைப் பலிகொண்டு வந்தது. அதிகமான மீன்பாடு இந் நோய்த் தொற்றை விரிவும் விரைவும் படுத்தும். அதைத் தடுப்பதற்காக அரசினர் காவல் துறையினரைக் கடற்கரைக்கு விடுத்து கடலிலிருந்து வரும் மீனைப் பறித்துக் குழிகளைத் தோண்டிப் புதைத்து அழித்தனர். இப்போது அந் நோய் தடுக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இவ்வாறு அளவுக்கு மீறி வரும் மீனை அழுக வைத்து கோழி, பன்றி போன்றவற்றுக்குத் தீவனத்துக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

நம் நாட்டினரின் மீன் சமையல் தன் முழுவீச்சை எட்டவில்லை. சமையல் குறிப்புகளைத் தரும் இதழ்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் புலாலுணவுச் சமையலைப் புறக்கணிக்கின்றன. தப்பித் தவறி ஏதாவது தந்துவிட்டால் ஏதோ தகாத செயலைச் செய்து விட்டாற்போன்று நெளிகின்றன. உண்ணும் உணவின் அடிப்படையில் மனிதர்களிடையில் ஏற்றத்தாழ்வைப் பாராட்டும் தாங்கெட்ட பண்பாடு “தமிழ்ப் பண்பாடு”. புலாலுண்பதை குடித்தல், புகைத்தல், பரத்தையரை நாடுதல் போன்ற தீய பழக்கங்களுக்குச் சமமாகப் பேசுவது அந்தப் பண்பாடு. சாதியப் பண்பாட்டைப் போலவும் கோயிலில் மக்களைச் சாதி அடிப்படையில் பிரித்து வைக்கும் நம் சமயப் பண்பாட்டையும் போலவும் நமது உணவுப் பண்பாடும் ஒழிக்கப்பட வேண்டியதாகும். தங்களைப் புல்லுணவினர் என்று கூறிக் கொள்ளும் மேற்சாதியினரான பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் அவர்களைப் போலச்செய்யும் பிறரும் விலங்குணவான பாலையும் அதிலிலிருந்து கிடைக்கும் மோரையும் தயிரையும் வெண்ணெய்யையும் நெய்யையும் சுவைத்துச் சுவைத்துச் சப்பிச் சப்பி உண்டுகொண்டுதான் பிறரைப் புலாலுணவினர் என்று இழித்துக் கூறுகின்றனர். நாமும் சொந்தச் சிந்தனையின்றி அறிவு மழுங்கிய நிலையில் புலாலுண்பதன் மூலம் ஏதோ தகாததைச் செய்துவிட்டது போன்று தலைகுனிந்து நிற்கிறோம். அந்தத் தாழ்வு மனப்பான்மையை நாம் கைவிட வேண்டியது உடனடித் தேவை. மீன் சமையலில் பல்வகைகளையும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கி மீனுணவைப் பரப்ப வேண்டும்.

புலாலுணவுக்கு எதிரான இன்று முடுக்கிவிடப்பட்டுள்ள பரப்புரையின் மூலவர்கள் நம் நாட்டு மேற்சாதியினர் மட்டுமல்ல, இங்குள்ள மீனையும் இறைச்சியையும் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உலக வாணிகக் குழுக்கள் இதில் முழு ஈடுபாடு கொண்டுள்ளன. அவைதாம் இந்தப் பரப்பலுக்குத் தேவையான பொருளியல் பின்புலத்தை அளிக்கின்றன. அவற்றின் நோக்கம் நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவரும் புலாலுணவில் இறங்கிவிட்டால் இவர்களின் ஏற்றுமதி வாணிகம் படுத்துவிடுமே என்ற அச்சத்தில் எழுந்ததுதான். மாட்டிறைச்சித் தடைச் சட்டமும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் கருவிகளே. நம் நாட்டில் சிறுகச் சிறுகப் பரவி வரும் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஏற்றுமதியாளர்களிடையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் உழவுக்கும் சரக்குப் போக்குவரத்துக்கும் மாடு பயன்படுவது மிகவும் சுருங்கிவிட்டது. தமிழகத்து ஆமாடு(பசு)கள் பால் கறப்பதற்காக வளர்க்கப்படவில்லை. காளைகளை ஈனுவதற்காகவே வளர்க்கப்பட்டன. அதனால்தான் கறவைக்கு என்று ஒன்றிரண்டு உள்ளூர் வகைகளைத் தவிர பிறவனைத்தும் கலப்பினங்களாக உள்ளன. இந்த நிலையில் மாட்டை இறைச்சியாக உண்ண வேண்டும் அல்லது ஏற்றுமதி செய்ய வேண்டும். இதில் சிக்கலை ஏற்படுத்திவிட்டால் மாட்டின் விலை வீழ்ந்து விடும். அதன் மூலம் ஏற்றுமதியாளருக்கு மலிவாக மாட்டிறைச்சி கிடைக்கும். அந்த மிச்சத்தில் ஒரு பகுதியை இந்தப் “பசுவதை” எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டால் போதும்.

இயற்கை உணவு இயக்கம் என்று ஒன்றைச் சிலர் நடத்துகின்றனர். காய்கறிகளைச் சமைக்காமல் பச்சையாக உண்ண வேண்டுமாம். இது நடைமுறைக்கு உகந்ததல்ல, ஏனென்றால் காய்கறிகளைப் பச்சையாக உண்ண வலிமையான பற்கள் தேவை. பல் வலிமை குன்றியவர்கள் இதைக் கடைப்பிடிக்க முடியாது. ஆனால் இயற்கை உணவு என்ற பெயரில் இவர்கள் உண்ண வற்புறுத்துவது புலாலல்லாத காய்கறிகளைத்தான். ஆனால் நாம் கேட்கிறோம், மீனும் முட்டையும் இறைச்சியும் காய்களையும் கனிகளையும் கீரைகளையும் போல் இயற்கையில் உருவாகின்றவைதாமே, சீமையுரங்களைப் போல் செயற்கையானவை அல்லவே. அப்படிப் பார்த்தால் காய்கறிகளின் விளைப்பில்தான் புலால் வகைகளின் விளைப்பைவிடக் கூடுதலாகக் செயற்கை இடுபொருட்கள் உள்ளன.

புலாலுணவை உண்போரும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள், கிருத்திகை, காருவா (அமாவாசை) நாட்கள், ஆடவை, கன்னி, நளி, சிலை (ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி) ஆகிய மாதங்கள் என்று புலாலுண்ணாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். இம் மாதங்களைப் பொறுத்தவரை அவற்றில் தொற்றுநோய்கள் பரவும் என்ற காரணத்தால் பண்டை நாளில் புலாலுணவு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அந் நோய்கள் இன்று தடுக்கப்பட்டுவிட்டன. அத்துடன் புலால் மட்டுமல்ல, காய்கறிகள் விற்கும் அங்காடிகளைக் கூடத் தூய்மையாகப் பேண வேண்டும்மென்று வலியுறுத்த வேண்டிய தேவையுள்ளது. செவ்வாய், வெள்ளி நாட்கள் தெய்வத்துக்கு உகந்த நாட்கள் என்று புலாலுணவைப் புறக்கணிப்பதும் பொருத்தமற்றது. செவ்வாய். வெள்ளி ஆகிய நாட்களில்தாம் சிறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றைப் பலியிட்டுச் சமைத்துப் படைத்துத் தாமும் உண்கின்றனர் மக்கள். அந்த வகையில் செவ்வாயும் வெள்ளியும் கூடப் புலாலுணவுக்கு ஏற்ற நாட்கள்தாம். சோம(திங்கள்) விரதம் என்றும் கிருத்திகை, காருவா நாட்களிலும் நோன்பிருப்பது உடலுழைப்பிலும், தொழில்களில் ஓடியாடியும் ஈடுபடுவோருக்குப் பொருந்தாது. அவர்கள் உண்ணாமல் இருந்தால் குடல் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. உழைக்காமல் மூன்று வேளையும் உண்டு திண்ணைகளில் தூங்கி அல்லது ஊர் வம்பு பேசிக் காலத்தைக் கழிப்போருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்து வேலை செய்வோருக்கும்தான் பொருந்தும். புலாலுணவினர்க்குத் தீங்கு தரும் கொழுப்புச் சத்து உடலில் சேர்ந்து செஞ்சாங்குலை(இதய) நோய், குருதிக் கொதிப்பு போன்றவை உண்டாவதாகத் தவறான ஒரு கருத்து புகுத்தப்பட்டுள்ளது. புலால் கொழுப்பை விட நிலைத்திணை(தாவர)க் கொழுப்புதான் கூடுதல் தீங்கு விளைவிப்பவை என்பது இன்றைய மருத்துவ அறிவியல் நிலை. அதிலும் மீன், கோழி போன்றவற்றின் கொழுப்பு ஏற்கெனவே குருதி நாளங்களில் உள்ள தீங்கான கொழுப்புப் பொருட்களின் படிவைக் கரைத்துவிடத்தக்கது என்கின்றனர். அத்துடன் நம்மைப் போல் பல மடங்கு சத்தான உணவு வகைகளையும் புலாலுணவையும் உட்கொள்ளும் பணக்கார நாட்டு மக்களை விட நம் நாட்டு மக்களை இத்தகைய நோய்கள் மிகுதியாகத் தாக்குவது ஏன்? நம் மக்கள் மீது பழைய பண்பாட்டின் கிடுக்கிப்பிடி சிறிதும் அகலாத நிலையில் புதிய புதிய சுமைகள் ஏறி நிற்கும் குடும்ப, குமுகச் சூழல்களும் தங்கள் ஞாயமான ஒவ்வொரு நடவடிக்கைளிலும் முயற்சிகளிலும் அரசின் தலையீடுகளை எண்ணி எப்போதும் அச்சவுணர்வோடும் பதற்றத்தோடும் நாளைக் கழிக்க வேண்டிய பொருளியல் - அரசியல் சூழலும்தாம் காரணங்கள்.

பொய்யான காரணங்ளைச் சொல்லி மக்களை மீன் போன்ற புலாலுணவு உண்பதைத் தடுத்து சுவையும் சத்துமுள்ள பலவகை மீன்களை வெளிச்செலவாணி என்ற போலிக் காரணம் காட்டி ஏற்றுமதி என்ற பெயரில் கடத்துகின்றனர் ஆட்சியாளர்களும் அவர்களின் கூட்டாளிகளான ஏற்றுமதி வாணிகர்களும். எந்தக் காரணத்தைச் சொன்னாலும் வறுமையில் வாழும் மக்களைக் கொண்ட நம் நாட்டில் மக்களுக்குப் பயன்படத்தக்க எந்தப் பண்டத்தையும் ஏற்றுமதி செய்வது அவர்களுக்குச் செய்யும் இரண்டகமேயாகும்.

அண்மை ஆண்டுகள் வரை மீனவர்கள் கடற்கரையில் ஒதுக்கப்பட்டு அவர்களை அடுத்து வாழும் மக்களால் முற்றுகையிடப்பட்டுச் சிறைப்பட்டாற் போன்ற நிலையில் வாழ்ந்தனர். அவர்களது நிலை தீண்டத்தகாதவர் நிலையை ஒத்திருந்தது. மீனவப் பெண்கள் காலையில் எழுந்து மீனைத் தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றனர். சில பணக்கார வீடுகளுக்கு மீனை வழக்கமாக வழங்கிவிட்டு அறுவடையின் போது நெல்லாகப் பெற்றுக்கொண்டனர். அவர்களது நிலங்களில் விளையும் புளி, காய்கனிகள் போன்றவையும் கிடைக்கும். மீன் கொடுக்கும் போது அவ் வீடுகளில் பழைய சோறோ வேறு பண்டங்களோ கிடைத்தால் உண்டனர். பிறரிடம் காசுக்கு விற்கின்றனர். மீன் விற்ற பின்னர் திரும்புகின்றனர். அவர்களைப் பேருந்துகளில் ஏறவிடவில்லை; எனவே நடந்தே போய்த் திரும்ப வேண்டும். உணவு விடுதிகளில் அவர்களை விடவில்லை. எனவே வழியில் காய், கனிகள் என்று எது கிடைத்தாலும் நடுத் தெருவில் நின்று உண்டு பிறருடைய ஏளனத்துக்கு ஆளாக வேண்டிய நிலை. வீடுகளில் தாங்கள் பயன்படுத்தும் கலன்களில் உணவோ நீரோ அவர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை.

அண்டை மக்களுடன் மோதல் வந்தால் இவர்கள் நாட்டின் உட்பகுதிக்குச் செல்ல முடிவதில்லை. தங்களுக்கு வேண்டிய பண்டங்களை வாங்க முடிவதில்லை. தப்பி ஓட வேண்டி வந்தால் கடல் தவிர வேறு போக்கிடமில்லை. கடந்த 1982ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் மோதல் ஏற்பட்ட போது இது தெற்றென விளங்கியது. நாடார்களால் சூழப்பட்ட மீனவர்கள் பெண்டுகள் பிள்ளைகளுடன் கட்டுமரங்களிலேறி தூத்துக்குடி போன்ற இடங்களில் தஞ்சம் புக வேண்டி வந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முன் போல் பெண்கள் மீன் கொண்டு வந்து விற்க முடியவில்லை. அதனால் மூன்று வேளைகளும் மீன் உண்டு பழகிய நாடார்களும் இடருழந்தார்கள்.

முன்பு தலைமீது கடகம் எனப்படும் பனை ஓலைப் பெட்டிகளில் மீன் சுமந்து விற்ற பெண்களின் தலைமுறை மறைந்துவிட்டது. அலுமினியம் அல்லது துருவேறாத உருக்குக் கலன்களில் மீனை அடைத்துக் கைகளில் தூக்கிச் செல்லும் புதிய தலைமுறை தோன்றிவிட்டது. அவர்களைப் பேருந்துகளில் ஏற்றிக் கொள்கிறார்கள், உணவு விடுதிகளில் விடுகிறார்கள். மகிழ்ச்சியூட்டத்தக்க மாற்றம்தான் இது. இந்தக் கலவரத்துக்கு அடிப்படையே நாடார்கள் மீனவர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைகள்தாம். இன்று அது மட்டுப்பட்டுள்ளது.

மீனவர்களின் பொதுவான இருப்பே வறுமைதான். அவர்கள் வாழ்வது குடிசைகள் அல்லது சிறு வீடுகளில்தான். மீன்பாடு குறைவான நாட்களில் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்க்க கருவாட்டையாவது விற்க வேண்டும். அதற்காக வீடுகளில் எப்போதும் கருவாட்டைச் சேர்த்து வைத்திருப்பார்கள். அக் கருவாட்டின் நெடி அவர்கள் மீதும் அவ் வீட்டிலிருக்கும் பண்டங்கள் மீதும் வீசும். அவர்கள் வெளியில் செல்லும் போது என்னதான் நறுமண எண்ணெய்கள் தடவிக் கொண்டாலும் அவற்றையும் மீறிக்கொண்டு இந்த நெடி, குறிப்பாக அவர்களது உடைகளிலிருந்து பக்கத்திலிருப்போரைத் தாக்கும். இது அவர்களிடையில் ஒரு தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற ஒரு நிலையிலிருந்து அவர்கள் மீள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.

தன்(சுய) தொழில், சிறு - குறுந்தொழில்கள், சாதி சார்ந்த மரபுத் தொழில்களில் ஈடுபடுவோர் அந்தத் தொழிலையே முழுமையான வாழ்க்கைச் சூழல் ஆக்கிக்கொள்கின்றனர். அவர்களது வாழிடம் அந்தத் தொழிலில் முகாமையான பங்கேற்கிது. கன்றுகாலிகள் வளர்ப்போர், குறிப்பாக மாடு வளர்ப்போர் தங்கள் வீட்டோடு இணைந்த தொழுவங்களிலேயே அவற்றை வளர்க்க வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் குடியிருக்கும் தெருக்களில் மாட்டுச் சாணமும் சிறு நீரும் கலந்த சேறு காணப்படுகிறது. கொசுக்களின் வளர்ப்பிடமாக மாறி அவர்களின உடல் நலைனைக் கெடுக்கிறது. மழைக் காலங்களில் அத் தெருக்கள் நரகக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன. அவ்வாறுதான் குயவர்கள் வண்ணார்கள் செம்மார்கள், பன்றி வளர்க்கும் சக்கிலியர்கள் என்று அனைத்துத் தொழில் மக்களின் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இத்தகைய சாதி சார்ந்த தன்தொழில், சிறு - குறுந்தொழில்களை முதன்மையாகக் கொண்ட பொருளியல் அமைப்பு நிலக்கிழமை(feudal)ப் பொருளியல் அமைப்பு எனப்படும். இந்த அமைப்பில் இந்த மக்களின் உழைப்பை வாணிகர்களும் கந்து வட்டிக்காரர்களும் சுரண்டுவர். தொழிலில் ஈடுபடுவோர் தனித்தனியாகச் செயற்படுவதாலும் இவர்கள் சார்ந்து நிற்க வேறு அமைப்பு இல்லாததாலும் சுரண்டுவோரை எதிர்த்து வாழ முடிவதில்லை. இவ் விரு சாரரிடமிருந்து அவர்களைக் காப்பதென்ற பெயரில் கூட்டுறவு சங்கங்களையும் வாரியங்கையும் ஆட்சியாளர்கள் அமைத்துள்ளனர். கடன்கள், மானியங்கள் என்றும் வழங்குகின்றனர். ஆனால் இங்கு ஆட்சியாளர்கள் ஊழலும் கையூட்டும் என்று வாணிகர்கள், கந்து வட்டிக்காரர்கள் நடத்தியதை விட மிகுதியான சுரண்டல்களில் ஈடுபடுவதுடன் இழப்புகளைச் சரிசெய்வது என்ற பெயரில் பொதுமக்கள் பணமான அரசுப் பணத்தையும் ஏப்பம் விடுகின்றனர். அரசியல் கட்சிகளும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஆட்சிப் பொறியும் இந்தச் சுருட்டலைப் பங்கிடுகின்றன. இவ்வாறு சாதி சார்ந்த தன்தொழில் சிறு - குறுந்தொழில்களில் தன்மானமுள்ள வாழ்க்கையை நடத்த முடியாது என்பது உறுதியாகிறது. இந்த நெருக்கடியிலிருந்து விடுபட உழைக்கும் மக்களுக்கு வரலாறு காட்டியிருக்கும் வழிதான் முதலாளியம், இங்கு பணியிடம் உழைப்பாளியின் வாழிடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. குறிப்பிட்ட வேலை நேரம் முடிந்த பின் மிகுதி நேரமெல்லாம் பாட்டாளியின் ஆளுகையில் உள்ளது. பணியிடத்தில் அவர்களுக்கு ஓய்விடங்களும் கழிவறை, குளியலறைகளும் பணி நேரத்தில் அணிந்து கொள்ள சிறப்பு ஆடைகளும் உள்ளன. தொழில் தொடர்பான இடர்களைக் களைவதற்கான காப்பு ஏற்பாடுகளை தொழில் நிறுவனமே அமைத்துத் தருகிறது. ஆக, அன்றாட வேலையிலிருந்து விடுபட்டவுடன் தொழிலாளி எந்தத் தொழிலில் உள்ளார் என்பதைக் காட்டும் அடையாளம் மறைந்து போகிறது. அத்துடன் தங்கள் ஊதியம், பண நலன்கள், பணி நலன்கள் போன்றவற்றுக்காகப் போராடத் தேவையான ஒருங்கிணைப்பைத் தொழிற்சாலை என்ற கட்டமைப்பே உருவாக்கித் தருகிறது.

இத்தகைய முதலாளிய முறைக்கு மாறுவதற்கு இன்றுள்ள தடைகளைப் பார்ப்போம். கடல் இன்றுவரை மீனவர்களின் ஆளுகையில் இருந்து வந்துள்ளது. இங்குள்ள மக்கள் நாட்டின் பிற பகுதியினரைப் போல் எண்ணிக்கையில் பெருகியுள்ளனர். விசைப்படகுகளின் போட்டி, அயல்நாட்டு மீன்படிப் படகுகள் நம் கடல் எல்லைக்குள் நடத்தும் மீன் திருட்டு, இலங்கைக் கடற்படையும் “நம்” கடலோரக் காவற்படையும் நடத்துகின்ற காட்டுவிலங்காண்டித் தனமான தாக்குதல்கள் ஆகியவற்றால் கட்டுமர மீனவர்களுக்குக் கிடைக்கத்தக்க மீன்வளம் மிகவும் சுருங்கிவிட்டது. அதனால் கட்டுமர மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் தொடங்கிய மோதல் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த கட்டுமர மீன்வர்களுக்கிடையிலான மோதலாக வளர்ந்து இன்று ஒரே ஊரைச் சேர்ந்த பல்வேறு குழுக்களுக்கிடையிலான மோதலாகப் பேயுருக் கொண்டுள்ளது. எந்தெந்த வலைகளை எந்தெந்த பருவங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பொது மரபை உடைப்பதாலும் மோதல்கள் நிகழ்வதைப் பார்க்கிறோம். இந்த வரையறைகள் உரிய பருவத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதையும் குஞ்சுகள் பேணப்படுவதையும் நோக்கமாகக் கொண்டவை. வயிற்றுப்பாடு திண்டாட்டமானவுடன் விதை நெல்லை அவித்துண்ணும் வயிறு காய்ந்த உழவனைப் போல் இவர்கள் செயற்படுகின்றனர். நிலத்தில் எல்லை கட்ட முடியும், ஆனால் கடலில் ஒவ்வொரு மீனவனுக்கென்றும் கடலைப் பிரித்துப் பட்டயம்(பட்டா) போட முடியுமா? அந்தப் பட்டயத்துக்கு மீன்கள்தாம் கட்டுப்படுமா? ஆக இந்த மோதல்கள் அனைத்தும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் வளத்தை நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் பங்குபோட வேண்டிய சூழ்நிலையின் விளைவுகளாகும். இந்தச் சூழ்நிலை மீனவர்களிடையில் மட்டுமல்ல, தமிழகத்து அனைத்து மரபுத் தொழில்களிலும் உருவாகி விட்டது. சாதிச் சங்கங்களும் அவற்றுக்குள் போட்டிச் சங்கங்களும் சாதிக் கட்சிகளும் அவற்றுக்குள்ளும் போட்டிக் கட்சிகளும் ஒவ்வொரு சாதிக்கும் தோன்றுவதன் காரணங்களில் முகாமையான ஒன்று இது. சாதிகளின் வரலாற்று அடிப்படை தொழில்தானே!


அடிக்குறிப்புகள்:
1.சகுந்தலையைக் கூடும் முன் துசியந்தன் அசரீரி எனப்படும் உருவிலித் தெய்வத்தைச் சான்று வைத்ததாகவும் சகுந்தலை அரசவைக்கு மகனோடு வந்த போது இந்த நிகழ்வை அவையோர்க்கு எவ்வாறு சொல்வது என்று தயங்கி மறந்து போனதாகப் பாசாங்குடன் உருவிலி வரட்டும் என்று காத்திருந்ததாகவும் அவ்வாறே உருவிலி வந்து கூறியதாகவும் ஒரு கதை வேறுபாடு உண்டு.
2.தமிழ் மொழி அகராதி - மிசிரத்தானம் – துருக்கரால் மிசிரு என்று வழங்கப்படுபகின்ற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியரால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகின்றது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற் சென்று அந்தத் தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று. மிசிரம் – கலப்பு. Mixing?
3.பினீசியர்களைப் பற்றிய செய்திகளை அறிய எசு.வி.எசு. ராகவன் என்பார் எழுதியுள்ள இரோடோட்டசு எனும் நூலும் சியார்சு தாம்சன் என்பார் கிரேக்க நாடகங்கள் பற்றி எழுதியுள்ள Athens and Aeschilles என்ற நூலும் உதவும்.
4.மாநக்கவரம் என்பது இராசேந்திரன் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் பெயர்.
5.புவியுடன் ஒப்பிட நிலவும் கதிரவனும் இருக்கும் நிலைகளால் உருவாகும் கோணத்திற்கு ஏற்ப ஓர் விளைவு(resultant) ஈர்ப்பை அவை இரண்டும் இணைந்து புவியின் மீது நிகழ்த்துகின்றன. அதற்கு ஏற்ப கடலலைகள் உயர்கின்றன. இந்த உயர்வு புவிக் கோளத்தின் எதிர் எதிர்க் கோடிகளில் நிகழ்கின்றன. அதற்குச் செங்கோணத்தில் இந்த உயர்வுக்கு இணையான ஒரு தாழ்வும் உருவாகிறது. புவி தன்னைத் தானே சுற்றும் போது இந்த உயர்வுகளும் தாழ்வுகளும் புவியைச் சுற்றி வருவகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்திலும் இரு முறைகள் இவ்வுயர்வுகளும் தாழ்வுகளும் இடம்பெறுகின்றன. புவியின் எதிரெதிர்ப் பக்கங்களில் கதிரவனும் நிலவும் வரும் வெள்ளுவா(நிறைமதி) நாளிலும் ஒரே பக்கமாக வரும் காருவா(இருள்மதி) நாளிலும் புவியின் மீது மிகக் கூடிய விளைவு ஈர்ப்பு இருக்கும் ஆதலால் அந் நட்களில் இவ் வுயர்வு தாழ்வுகள் மிகக் கூடுதலாகவும் கதிரவனும் நிலவும் புவியுடன் ஒப்பிடச் செங்கோணமாக இருக்கும் எட்டாம் பக்கல்(அட்டமி) அன்று விளைவு ஈர்ப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்று உயர்வு தாழ்வுகள் மிகக் குறைவாகவும் இருக்கும் அதனால் எட்டாம் பக்கல் அன்று கடலோடிகளுக்கு மிகத் தோதான நாள். அதனாலேயே, கடலோடிகளை இழிவுபடுத்தவே அட்டமியை ஒரு தீய நாளாக காட்டுகின்றனர். எட்டாக இருந்த இசைச் சுரங்களை ஏழு என்று திரித்துள்ளனர். எட்டாக இருக்கும் மெய்ப்பாடுகளை “நவரசம்” என்று மாற்றியுள்ளனர் ஒடுக்கும் வகுப்பார்.
6.மரக்கறி உணவினர், “சைவ” உணவினர்.


0 மறுமொழிகள்: