15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

1 மறுமொழிகள்:

சொன்னது…

SAATHY MUTHALIL YAARAAL? EPPOTHU? EATHANAAL? URUVAAKKAPPATTATHU, ENPATHAI MUTHALIL THELIVAAGA UNARUNGAL Mr KUMARIMAINTHAN......PLS......