8.7.09

தமிழக நிலவரம்(2009) .....2

இன்றைய உலகச் சூழலில் உலகிலுள்ள ஆளும் கணங்களெல்லாம் அஞ்சி நடுங்குவது தேசிய விடுதலை இயக்கங்களைக் கண்டுதான். அவற்றில் பலவற்றை மார்க்சிய - இலெனியக் குழுக்கள் கையிலெடுத்துக் கொண்டு சிதைத்து ஆட்சியாளர்களின் ஆயுதத் திருட்டு விற்பனைக்குத் துணைபோகிறார்கள். மற்றவை முகம்மதிய மதவெறியர்களிடம் சிக்கி முகம்மதியர்களிடமிருந்தே அயற்பட்டு நிற்கின்றன. அது போன்ற அடையாளங்கள் எதுவுமின்றி நிலம், அதன் மக்கள் என்ற தெளிவான, அறிவியல் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடிய இயக்கமும் மக்களும் ஈழத்தவர்களே. அதனால்தான் உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அப்போராட்டத்தை முடக்கிவைத்துள்ளனர்.

தேசிய விடுதலைப் போர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமையானது. சென்ற நூற்றாண்டில் உலகப் போர்களில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் குடியேற்ற நாடுகளும் அரைகுறை அரசியல் விடுதலை பெற்றன. பொருளியல் வழியில் இன்று மறைமுக அரசியல் அடிமைத்தனத்துள் அவை உள்ளன. சோவியத்து வலிமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீட்டில்தான் வங்காளதேசம் அமைந்தது. ஆனால் இருவர் கைகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. இருவருக்கும் அது ஒரு கசப்பான பாடம். தென் அமெரிக்காவும் சிம்பாபுவேயும் அமெரிக்கத் தலையீட்டில் அதன் பொம்மைகளின் அரசுகளை அமைத்தன. செர்பியா போன்றவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தலையீட்டினால் விடுதலை பெற்றன. அத்தகைய எந்தத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கியுள்ளன. மனித உரிமைகள் பெயரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒரு நாடகம். தன் மீதான குற்றத்தைத் தானே உசாவ சிங்கள அரசைக் கேட்டுக்கொள்வது என்ற கோமாளித் தனம்தான் மேற்கு நாடுகள் முன்வைத்த தீர்மானம். திட்டமிட்டபடி அதை உலகம் பார்த்திருக்கவே முறியடித்தாயிற்று. ஈழத்தின் மீளமைப்புக்கு சிங்களர்க்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவ்வரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஈழத்தவர்களுக்கு எதிராகச் சிங்கள அரசுக்கு வலுயூட்டுவதுதான் உண்மையான நோக்கம்.

உலகில் இன்று தேசிய உரிமைச் சிக்கல் வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இல்லாதநாடு ஒன்று கூட இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கூட இப்போதைய பொருளியல் நெருக்கடியில் அது வெளித்தோன்றலாம். ஆத்திரேலியாவில் தோன்றி, இங்கிலாந்தைத் தொட்டுள்ள “இனவெறி” அமெரிக்காவில் தற்காலிகமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அது வெடித்து அடுத்த கட்டமாக தேசியங்களின் முரண்பாடாக வெளிப்படலாம். எனவேதான் உலகின் அனைத்து அரசுகளும் இணைந்து நிற்கின்றன.

பிற நாடுகளை ஈழத்தவர்க்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவைச் சுற்றி சீனம் அமைக்கும் தளங்களில் ஒன்று ஈழத்தில் இருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவைச் சுற்றி வளைக்க அமெரிக்கா இட்ட திட்டத்தை அதன் கூட்டாளியும் அடியாளுமாகிய சீனம் நிறைவேற்றுகிறதோ என்றொரு ஐயம். இந்தத் திட்டத்துக்கு இந்திய ஆளும் கும்பல், கருணாநிதி உட்பட விலை போயிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நேரு குடும்பம் இன்று வெளிநாட்டுக் குடும்பம் ஆகிவிட்டது. ”உள்நாட்டு”த் தலைவர்களின் மகன், மகள், மருமகன், மருமகள், அல்லது அவர்களுடன் பேரன் - பேத்திகள், ஏன், நம்மூர் அரசூழியர்கள், பேராசிரியர்கள் கூட பிறங்கடைகளுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அந்நாடுகளில் குடியேறி விடலாமே! இன்னும் இங்கு இருப்பது கூட அவ்வளவு பாதுகாப்பல்லவே!

இவர்கள் இப்படிப் போய்விட்டால் கூட நல்லதுதான். இங்கு கசடுகள் கழிந்த குமுகத்தைப் புத்தம் புதிதாகக் கட்டியெழுப்பலாமே!

ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் ஓடிப்போய்விடப்போவதில்லை. ஒருவேளை போர் வந்தாலும் போர்க்களத்தில் நிற்கப்போவது இராகுலும் தாலினுமா? உயிரை விற்றுக் குடும்பத்தைக் காப்பதற்கு ஆயத்தமாகத்தான் வயிறு காய்ந்த ஒரு பெரும் படையைக் குடிமக்கள் என்ற பெயரில் தீனி போடாமலே வளர்த்துவைத்துள்ளோமே!

போர் வரவேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை. வராவிட்டாலும் சீன அச்சுறுத்தல் என்ற பெயரில் சீனத்திடமிருந்தே கூட ஆயுதம் வாங்கித் தரகு பார்த்துவிடுவோமே!

இந்தப் பின்னணியில் எந்த ஒரு தேசியமும் தனித்து விடுதலைப் போரை நடத்த முடியாது. தேசியங்களுக்குள் உறுதியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு தேசியத்தின் மக்களிடையிலும் எய்தத்தக்க மிகப் பெரும் ஒற்றுமையை எய்தியாக வேண்டும். அதற்கு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைக் கையிலெடுத்து அவர்களை ஆளுவோருக்கு எதிராக நிறுத்த வேண்டும். ஆனால் “தமிழ்த் தேசிய”, இயக்கங்களும் “தமிழ்” அமைப்புகளும் மக்களைப் பற்றித் துளிக்கூட கவலைப்படவில்லை. அவர்கள் ஆளுவோரின் பின்னால் நிற்கிறார்கள். மக்களும் ஆளுவோரின் பின்னால் நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலே விளக்கியவாறு 2009 தேர்தலின் போது ஒன்றிரண்டு பேரவைக் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்துவிட்டுத் தாங்கள் கருணாநிதியின் கையாட்கள் என்பதைப் பறையறையாமல் அறிவித்தனர்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: