8.7.07

நில உடைமைக் குளறுபடிகள் - 2

அடுத்து நம் சமுதாயத்தில் நிலவும் சில மரபுகளும் நிலங்களைத் தளையிட்டிருக்கின்றன. இம்மரபுகள் இந்துச் சட்டமென்ற பெயரில் சட்ட வடிவமும் பெற்றுள்ளன.

அவற்றில் முதலாவது வாரிசுரிமைச் சட்டம். ஒருவருக்குத் தன் மூதாதையர்களிடமிருந்து பெற்றச் சொத்துகள் இருந்து அவருக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்றே அக்குழந்தை அச்சொத்துக்கு உரிமையாளராகிவிடுகிறது. இக்குழந்தை உரிய வயதுக்கு வரும் வரை அச்சொத்தை விற்கும் உரிமை பெற்றோருக்கு இருந்தாலும் வயதுக்கு வந்த பின்னர் அந்த விற்பனையை அம்மகவு ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். எனவே இடைக் காலத்தில் அந்நிலத்தை வாங்க விரும்புவோர் இச்சிக்கலினால் தயங்குவர்.

குழந்தையின் படிப்புச் செலவு என்று காரணம் காட்டிச் சிலர் விற்கின்றனர். இத்தகைய விற்பனை கூட பின்னர் மறுக்கப்படுகிறது. குழந்தையின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதனைப் பத்திரத்தில் காட்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இதனாலும் சிக்கல் தீர்ந்து விடுவதில்லை.

நீதி மன்றத்தில் இசைவு பெற்று விற்பது தான் சிக்கலில்லாத முறை. ஆனால் அது ஒரு நீண்ட நெடும் நடைமுறை. அதனால் பெரும்பாலோர் இதை நாடுவதில்லை.

இந்தச் சிக்கலின் விளைவாக விற்பனை தாமதமாவதுடன் விலையும் குறைந்து போகிறது.

பெற்றோர் ஊதாரித்தனத்தால் சொத்துகளை விற்று அடுத்த தலைமுறையினரை வறுமையில் ஆழ்த்திவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மரபு உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு குடும்பத்தினரனைவரும் நிலம் சார்ந்து குடும்பம் சார்ந்து வாழ்ந்து வந்தபோது இருப்போரில் மூத்தோரே நடைமுறைத் தலைவராக இருந்து வந்தார். எனவே முதியவர்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைத்தன. ஆனால் இன்று மக்கள் நிலத்திலிருந்து அயற்பட்டு பல்வேறு வகையில் தத்தம் வாழ்வைக் கழித்து விடுகிறார்கள். இதனால் முதியவர்களின் நடைமுறைத் தலைமை தேவையற்றதாகிவிடுகிறது. அத்துடன் மரபு சார்ந்த இந்தச் சட்டம் சொத்துகளைப் பொறுத்தவரை முதியவர்களை வலுவற்றவர்களாக்கி விடுகிறது. இதுதான் இன்று எண்ணற்ற பெற்றோர் தம் மக்களால் கைவிடப்பட்டு இரந்துண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.

இன்னொரு மரபுச் சிக்கல் நிலத்தை உயில் மூலமாகவோ, தீர்வுப்பத்திரம் (Settlement) மூலமாகவோ எழுதிவைப்போர் அந்த நிலத்தை விற்கவோ வில்லங்கம் செய்யவோ கூடாது என்று எழுதி வைத்து விடுகின்றனர். தம் வாரிசுகள் ஊதாரித்தனமாகச் சொத்தை அழித்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடைப்பிடிக்கும் இந்த உத்தி அவ்வாரிசுகள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அச்சொத்து உதவாமல் செய்து விடுகிறது.

சொத்துசிதறாமல் இருக்கச் செய்யப்படும் இன்னொரு ஏற்பாடு சொத்தை ஏதாவதொரு தெய்வத்துக்கு எழுதி வைத்து வாரிசுகளைப் பொறுப்பாளர்களாக அமர்த்துவது. இந்த முறையில் சொத்து கையிலிருந்தால், அதில் நல்ல வருமானமும் இருந்தால் பொறுப்பாளர் பதவிக்காக வழக்கு மன்றம் சென்று செலவழிப்பது, அல்லது வறுமைப்பட்டு விற்க வேண்டிவந்தால் இந்தச் சிக்கல் தடையாயிருப்பது. அத்தகைய நேர்வுகளில் பத்திரம் பதியுமுன் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் வழங்குவதற்குள் அத்துறையினர் சரியாகக் 'கறந்து' விடுவர். நீண்ட காலம் அலைய வேண்டியும் வரும்.

சிலர் ஏதாவது தெய்வத்துக்குக் கட்டளை என்று எழுதிவைத்து அந்நிலத்தை விற்பதில் சிக்கலை ஏற்படுத்திச் செல்லும் உத்தியைச் கையாண்டுள்ளனர். இங்கும் மேற்கூறிய சிக்கலெல்லாம் உண்டு. சில வேளைகளில் பதிவுத் துறையினருக்குச் சில்லரையைக் கொடுத்து விலையாவணத்தைப் பதிந்து விடுவதும் உண்டு. இந்நேர்வுகளில் விற்பவர் உரிய விலையை வலியுறுத்த முடியாது.

அடுத்து பதிவுச் துறையை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்று எந்தப் பத்திரத்தையும் பதிந்து விடுவது ஒரு புறம். இன்னொரு புறம் முத்திரைத்தாள் சட்டம். பதிவுத் துறை ஒவ்வொரு நிலத்துக்கும் சந்தை விலையை நிறுவுகிறது. வாங்குவோர் குறைவான விலை கொடுத்தாலும் பதிவுத் துறை நிறுவியுள்ள விலையின் அடிப்டையில் முத்திரைத்தாள் வாங்கினால் தான் பத்திரம் கைக்குக் கிடைக்கும்.

குறைவாகப் போட்டால் பத்திரம் கைக்கு வராது என்பது இதன் பொருளல்ல. மறுப்புப் பத்திரம் என்ற விதியின்படி பதிவு செய்தால் வருவாய்த் துறையில் அதற்கென அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு தனி அலுவலர் உசாவி குறைந்த ஒரு தொகையை நிறுவுவார். அதைச் செலுத்திப் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு குறைக்கப்படும் தொகையில் 10 விழுக்காடு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் இது பற்றிக் கேட்டால், மாதத்துக்கு அல்லது ஆண்டுக்கு இவ்வளவு மதிப்புக்கு முத்திரைத் தாள் விற்கவேண்டுமென்று அரசு குறியளவு நிறுவியிருக்கிறதாம்; எனவே அவர்கள் நிலத்தின் மதிப்பை உயர்த்த வேண்டியிருக்கிறதாம். ஒருவேளை வருவாய்த் துறையின் முத்திரைத்தாள் சிறப்பு அலுவலருக்கும் "பேழைக் குறியளவு" ஏதாவது நிறுவப்பட்டிருக்குமோ?

ஒரு நிலத்துக்கு நஞ்சை அல்லது புஞ்சை என்று பதிந்தால் அதன் மதிப்பு குறைவு. கட்டிட மனை என்று பதிந்தால் கூடுதல். இதிலும் பதிவுத் துறையினர் 'விளையாட' முடியும்.

அண்டையிலுள்ள கேரள மாநிலத்தில் இதுபோன்ற கெடுபிடிகள் இல்லை. அதனால் அந்த மாநிலம் ஒன்றும் வறுமைப்பட்டுப் போய்விடவில்லை. மாறாக இங்கிருந்து பலர் அங்கு சென்று பத்திரங்களைப் பதிந்து வருகின்றனர். அதனால் தமிழ் நாட்டரசுக்கு வருவாய் இழப்பு. அத்துடன் அந்தப் பத்திரத்தைத் தமிழக அரசு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் பதியப்படும் பத்திரம் இன்னொரு மாநிலத்தால் மறுக்கப்படுவது முறையா என்ற கேள்விக்கு விடை இல்லை.[1]

ஒரு பதிவு அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதியப்பட வேண்டுமாயின் அப்பதிவு அலுவலக எல்லைக்குட்பட்ட ஒரு நிலம் அதில் அடங்கியிருக்க வேண்டுமென்ற விதி இருக்கிறது. எனவே கேரளத்தில் பதியப்படும் பத்திரங்களை எழுதும் எழுத்தர்கள் கற்பனையாக ஒரு நிலத்தைக் குறிப்பிட்டுவிடுகின்றனர். இதனால் பல பத்திரங்கள் செல்லாதவையாகிவிடுகின்றன.

ஒரு நிலத்தைப் பொறுத்தவரை அதில் செய்யப்படும் விலை, ஒற்றி, அடமானம், பாகப்பிரிவினை, உயில் போன்ற வில்லங்கங்கள் பதிவு அலுவலகத்தில் பதியப்பட்டிருக்குமாயின் அவற்றை வில்லங்கச் சான்றிதழ் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்நேர்வுகளில் பதிவலுவலகத்தில் முறையாகப் பதியப்படாத வில்லங்கங்கள் சான்றிதழில் இடம்பெறா.

அதே நேரத்தில் பதிவு அலுவலகத்தில் பதிவு பெறாமல் வங்கிகள் நிலத்தின் மீது கடன் கொடுக்கின்றன. வழக்கு மன்றங்கள் கடன்களுக்காக சொத்தைப் பிணைக்கின்றன. இவையெல்லாம் பதிவுத் துறை வில்லங்கச் சான்றிதழ்களில் தெரிவதில்லை. இத்தகைய நேர்வுகளில் மூலப் பத்திரத்தைக் கேட்டுப் பெறலாம். ஆனால் மூலப் பத்திரம் தொலைந்து போயிற்று, இதோ நகல் என்று கூறி ஏமாற்றி விடுவதும் உண்டு.

இவ்வாறு நிலவுடைமை என்பது எண்ணற்ற குளறுபடிகளுக்கு ஆளாகி நிற்கிறது. நிலம் வைத்திருப்போரின் அமைதியை இந்தக் குளறுபடிகள் குலைத்து அவர்களது பொருளியல் செயற்பாடுகளுக்குத் தடங்கல்களாக அமைகின்றன.

நிலம் ஒரு மக்களின் பொருளியலுக்கும் பண்பாட்டுக்கும் அடிப்படையானது. முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின் இயல்பெனப் பொருளிலக்கணம் (தொல்காப்பியம்) கூறுகிறது. அகழ்வாரையும் அகழாதாரையும் தாங்குவது நிலம். அத்தகைய நிலம் ஒரு மக்களின் பொருளியல் காரணிகளில் முதன்மையானதாகும். அதன் இயக்கம், அதாவது கொடுக்கல் வாங்கல் எவ்வித உராய்வும் இன்றி எளிதாக நடைபெற வேண்டும். அவ்வாறு இல்லாத குமுகம் முன்னேற முடியாது. ஆனால் நம் நாட்டில் நிலத்தின் இயக்கம் கடுமையாகத் தளைப்பட்டிருக்கிறது.

ஒரு மக்களின் நிலம் தளைப்பட்டிருப்பது அம்மக்கள் தளைப்பட்டிருப்பதன் குறியீடும் காரணமும் விளைவுமாகும். மக்கள் மீது மறைமுகமாக, அவர்களறியாமலே விழுந்திருக்கும் இத்தளைகளைக் கீழ்க்கண்டவாறு அகற்ற வேண்டும்.

1. விரிவான நில அளவை செய்யப்படாத பகுதிகள் உடனடியாக அளவை செய்யப்பட வேண்டும்.


2. பாதைக்குத் தவிர பிரிவின்றிப் பங்கு ஒழிக்கப்பட வேண்டும்.

3. அனைத்து நிலங்களும் அளவை செய்யப்பட்ட நிலையில் நிலப் பதிவேடுகள் புதுப்பிக்கப்படும் போது ஆவணங்களை மட்டுமே பார்க்க வேண்டும். மனுதாரர்கள் கேட்டால் மட்டுமே களத்தில் அளக்க வேண்டும்.

4. உள்ளூர் உசாவல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. பத்திரங்களின் அடிப்டையில் கட்சிக்காரர்களின் இசைவுடன் உட்பிரிவு செய்ய வேண்டியது அளவைத் துறையின் கடமை. வரப்பிருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு ஒழிக்கப்பட வேண்டும்.

6. அளவைத் துறை பதிவுத் துறையின் கீழ் இயங்க வேண்டும்.

7. பட்டா மாற்றுதலும் பதிவுத் துறையின் பொறுப்பாக வேண்டும்.

8. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பிறந்தவுடன் ஒரு குடியுரிமைப் பதிவேடு வழங்கப்பட வேண்டும். அதில் அவருடைய சொத்துரிமைகள் பதியப்பட வேண்டும். அவர் பங்கு பெறும் ஆவணம் ஒவ்வொன்றும் அதில் குறிக்கப்படல் வேண்டும்.

9. வருவாய்த் துறைக்கு வரி தண்டுவது தவிர நிலவுடைமையில் எந்தப் பங்கும் இருக்கக் கூடாது.

10. அனுபவ பாத்தியதை என்ற பெயரில் பிறர் சொத்தைப் பறிக்க முயல்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.

11. ஏற்கனவே வில்லங்கம் இருந்து அதைப் புறக்கணித்து ஆவணம் பதியும் அலுவலர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

12. தேவையற்ற புறம்போக்கு நிலங்களை உடனுக்குடன் ஏலம் விட வேண்டும். அரசின் தேவைகளுக்கு நிலம் வாங்கும் போது நிலவும் சந்தை விலையை வழங்க வேண்டும். இதில் வாணிக நோக்கம், பொதுநோக்கம் என்ற பாகுபாடு தேவையில்லை.

13. வருமான வரி மூலதனத்தை முடமாக்குவதற்குப் பயன்படுவது போல் நில உச்சவரம்பு நிலத்தை முடமாக்குவதற்கே பயன்படுகிறது. எனவே நில உச்ச வரம்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

14. நகர, ஊரமைப்பு இயக்ககம் ஒரு மனைப் பிரிவுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் அப்பகுதிக்கு பெருந்திட்டம் ஒன்றை வகுத்துப் பொது நோக்கங்களுக்கான இடத்தை அதில் மொத்தமாகக் குறித்து அந்த நிலங்களை விலைக்கு வாங்கிவிட வேண்டும். அத்துடன் பொது நோக்கங்களுக்கு 10 நூற்றுமேனி என்றிருப்பதைக் குறைக்க வேண்டும். தனித்தனி மனைப் பிரிவுகளில் பொது நோக்கங்களுக்கான இடம் ஒதுக்கத் தேவையில்லை. மொத்தமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்கா முதலியன அமைக்கும் பணியையும் அத்துறையே மேற்கொள்ள வேண்டும்.

15. இந்து சமயச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள வாரிசுரிமைச் சட்டம் கைவிடப்பட வேண்டும். விற்பனை, வில்லங்கம் செய்யத் தடைசெய்து பத்திரங்கள் பதியப்படக் கூடாது. அதேபோல் தெய்வத்தின் பேரில் சொத்தை வைத்து உரிமையாளரை மேலாளராக்கும் பத்திரங்களும் பதியப்படக் கூடாது. சுருக்கமாகக் கூறினால் சொத்தை நுகர்வோருக்கு அச்சொத்தின் மீது தடங்கலற்ற அனைத்துரிமையும் இருக்க வேண்டும். சொத்தின் கைப்பற்றுக்கும்(Possession) ஆவணத்துக்கும் முரண்பாடு இருக்கக் கூடாது.

16. நீதி மன்றங்கள் கடன்களுக்காக ஒரு சொத்தைப் பிணைத்தால் அந்த உண்மை பதிவு அலுவலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு அது ஒரு வில்லங்கமாகப் பதியப்பட வேண்டும். ஒரு சொத்தின் மீது பதிவலுவலகத்தில் பதியப்படாத எந்தவொரு வில்லங்கமும் அது வழக்கு மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இருந்தாலும் செல்லுபடியாகக் கூடாது. வங்கிகளுக்கும் இதிலிருந்து விலக்கு இருக்கக் கூடாது. மூலப் பத்திரத்தை வைத்திருப்பது உரிமையாகிவிடக் கூடாது.

17. முத்திரை மதிப்பிற்காக சொத்துகளுக்கு அரசே விலை நிறுவும் முறை கைவிடப் படவேண்டும்.

18. முத்திரைக் கட்டணமும் பதிவுக் கட்டணமும் சேர்ந்து சொத்தின் மதிப்பில் 5 நூற்றுமேனிக்கு மிகாமலிருக்க வேண்டும்.[2]

19. ஒரு சொத்தின் பத்திர மதிப்பிற்கு மேல் அதன் மீது வில்லங்கம் செய்தால் அது செல்லுபடியாகக் கூடாது. குறைந்த மதிப்பைக் காட்டி அதனை அவர் பதிந்திருந்தால் அவர் தாமாகவே முன் வந்து கூடுதல் மதிப்பைக் காட்டி அதற்குரிய முத்திரைக் கட்டணத்தையும் செலுத்தினால் ஏற்றுக்கொண்டு அதன் மதிப்பிற்கேற்பு வில்லங்கம் செய்யலாம். பத்திர மதிப்பை இந்த நோக்கத்திற்காக கணக்கிடும் போது அந்த பத்திரம் பதியப்பட்ட ஆண்டையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியுறாமல் தேங்கி நிற்பதற்கும் வளர்ச்சிக்கு வெளித் தூண்டல் தேவையாயிருப்பதற்கும் காரணங்கள் என்னென்ன என்பதற்கு நிலவுடைமைக் குளறுபடிகள் ஓர் எடுத்துக்காட்டாகும். வரலாற்று வழிப்பட்டனவும் இரு நூறாண்டுக் கால அடிமைத்தளமும் மத்திய காலத் தேக்க நிலைப் பண்பாடுகள் இன்னும் தொடர்வதுமே காரணங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நாம் இனங்கண்டு அகற்று முயலவேண்டும்.

இறுதியாக நம் நீதி அமைப்பைப் பற்றிய இரு ஐயப்பாடுகள்:

1. நிலவுடைமைகளைப் பொறுத்து வருவாய்த் துறை ஆவணங்களுக்கும் பதிவுத் துறை ஆவணங்களுக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் பற்றி நீதி மன்றங்கள் ஒன்று மாற்றி ஒன்று, மாற்றி மாற்றித் தீர்ப்பளிக்கின்றன என்று கூறினோம். இது குறித்து நீதியமைப்பு ஒரு நிறைவான தீர்மானத்துக்கு இதுவரை ஏன் வர இயலவில்லை?

2. ஏறக்குறைய15 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் பெண்ணைக் கேலி செய்தது தொடர்பாக நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தபோது அவ்வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குற்றச்சாட்டுக்குத் தெளிவான சான்று இருந்தும் அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று அரசு தன் முறையீட்டில் கேட்கவில்லையாதலால் தம்மால் அவர்களைத் தண்டிக்க முடியாமல் போயிற்று என்று நீதிபதிகள் கூறினார்கள். நீதி மன்றத்துக்குத் தற்சார்பு உண்டா என்ற கேள்வியை அல்லவா இது எழுப்புகிறது? மேல்முறையீட்டு வரைவை முன்வைக்கும் ஓர் அரசு அலுவலக எழுத்தர் நினைத்தால் நீதிபதிகளின் கைகளைக் கட்டிப்போட்டுவிடலாம் போலிருக்கிறதே!

அடிக்குறிப்பு:

[1] இவ்வாறு கேரளத்தில் பதியப்படும் பத்திரங்களின் அடிப்படையில் அச்சொத்துக்கு பட்டா மாற்றுதல் முதலியவை வேண்டுமாயின் கேரளத்தில் செலுத்தியது போக இங்கு நிறுவப்பட்டிருக்கும் வழிகாட்டி மதிப்பின்படியுள்ள முத்திரைக் கட்டணத்தில் குறைபடும் கட்டணத்தை இங்கு செலுத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் கேரளத்தில் பத்திரம் பதியும் வழக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

[2] முன்பு 13 நூற்றுமேனியாக இருந்தது இப்போது 9 ஆகக் குறைந்துள்ளது. இந்தக் குறைப்பு கூட ஆளுவோர் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்ட சூழ்நிலையில் நிகழ்ந்திருக்குமோ?

நில உடைமைக் குளறுபடிகள் - 1

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது பற்றி 10.2.94 தினமணியில் ஒரு செய்திக் கட்டுரை வெளிவந்தது. இந்தத் தேக்கத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று நீதிபதிகள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. காலியான இடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய பணி அமர்த்தல்கள் நடைபெறவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை புதிய அமர்த்தல்களுக்குப் பிற துறைகளைப் போல் பணம் கேட்கப்படுகிறதா? ஏனென்றால் சில துறைகளில் பதவி உயர்வுகளுக்குப் பணம் கேட்டதால் அப்பதவி உயர்வுகளை எதிர்பாத்து நின்றோர் கணக்குப் பார்த்து ஆதாயமில்லை என்று வாளாயிருந்து விட்ட நேர்வுகள் பல உண்டு.

இன்னொரு புறம், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் மிகப் பெரும்பாலானவை உரிமையியல் வழக்குகளே என்பதை மேற்படி செய்திக் கட்டுரை தெளிவாகக் காட்டுகிறது. உரிமையியல் வழக்குகளில் இந்தப் பெருக்கத்துக்கான ஒரு பின்னணியை ஆய்வதே நம் நோக்கம்.

நம் நாட்டில் சொத்துடைமை ஆவணங்கள் இரு துறைகளின் பொறுப்பில் உள்ளன. ஒன்று ஆவணப் பதிவுத்துறை, இன்னொன்று நில அளவைத் துறையின் உதவியுடன் வருவாய்த் துறை. சொத்துடைமை, இன்னும் குறிப்பாக நிலவுடைமை ஆவணங்களில் இவை செய்து வரும் குளறுபடிகள் தான் உரிமையியல் வழக்குகளின் பெருக்கத்துக்கு முதன்மைக் காரணம்.

பதிவுத் துறையில் உள்ள ஒரு நடைமுறை என்னவென்றால் தகுந்த பணம் கொடுத்துவிட்டால் யாரும் தமக்கு உரிமையில்லாத வேறு யாருடைய சொத்தை வேண்டுமானாலும் இன்னொருவருக்கு விலை, ஒற்றி, அடமானம் என்று எந்த வகை வில்லங்கம் வேண்டுமானாலும் செய்து பத்திரம் பதிந்து கொடுத்து விடுவது. ஒரு சொத்து உண்மையில் யாருடைய உடைமையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவணங்கள் பதிவாளர்களின் வசம் இருந்தாலும் அவர்கள் மீது பொறுப்புச் சுமத்தும் வழக்கம் இல்லையாதலால் இதை அவர்கள் தயக்கம் இன்றிச் செய்து ஆதாயம் பெறுகின்றனர்.

அதேபோல் வருவாய்த் துறையினர் பட்டா எனும் பட்டயத்தை வழங்குகின்றனர். இதற்கென்று நெறிமுறைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் இங்கும் தகுந்த பணத்தை வழங்கிவிட்டால் ஒருவருடைய பெயரிலிருக்கும் நிலத்தை முதலில் கூட்டுப் பட்டா என்ற பெயரிலும் பின்னர் தனிப் பட்டாவாகவும் சில நாட்களில் இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிடுகின்றனர்.

இதில் நிலஅளவைத் துறையினரின் பங்கு மிகப் பெரியது, கொடியது. ஒரு பகுதியை மறுஅளவை செய்யும் போது, நிலவுடைமைகளைத் தம் விருப்பம் போலக் குறித்துக் கொள்கின்றனர். அதனால் பாதிக்கப்படுபவர் அதைச் சரி செய்வதற்கு நீண்ட நெடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதில் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. தளர்ந்து, சோர்ந்து கைவிட்டு விடுவது தான் வழக்கம். இது எப்படி நேர்ந்தது?

ஆங்கிலேயர் நம் நாட்டைக் கைப்பற்றிய போது இங்கு நிலவரி முறை மிகக் குழப்பமாக இருந்தது. வேளாண் வகை(ரயத்துவாரி), இனாம் வகை, காணிப்பற்று(மிராசுதார்)வகை, படையாட்சி(பாளையங்கள்)வகை என்று பல வகையாக இருந்தது. அவற்றில் வேளாண் வகை என்பது அரசே நேரடியாக வரி தண்டுவதாக இருந்தது. ஆனால் அங்கும் பல இடங்களில் நிலம் பிரிவில்லாத பங்குகளாக அவரவர் கைப்பற்றில் உள்ள நிலம் அவரவர் விருப்பம் போல் விற்கப்பட்டும், வில்லங்கம் செய்யப்பட்டும் வந்தாலும் அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் இல்லை.

காணியாட்சி நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுக் காணியாளர் மூலம் வரி அரசுக்குச் செலுத்தப்பட்டது. படையாட்சி நிலங்களுக்கு வரி என்றில்லாமல் கப்பமாக தண்டப்பட்டது.

இவற்றில் வெள்ளையர் காணியாட்சியை ஒழித்தனர். படையாட்சிப் பகுதிகளைத் தம் அரசியல் வசதிக்கேற்பப் பறிமுதல் செய்து வேளாண் வகையாக மாற்றவோ புதிய இடையாட்சிகளிடம்(சமீன்தார்களிடம்) ஒப்படைக்கவோ அல்லது இருந்த படையாட்சிகளை இடையாட்சிகளாக மாற்றவோ செய்தனர்.

வேளாண் வகை, காணியாட்சி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படையாட்சி நிலங்களை வெள்ளையர் அளந்து தீர்வை நிறுவினர். இவ்வாறு நிறுவுவதற்காக உள்ளூர் மக்களைத் திரட்டி அவர்களைக் கலந்து முடிவெடுத்து உடைமைகளை முடிவு செய்தனர். இந்த முறைக்கு உள்ளூர் உசாவல்(Local Enquiry) என்று பெயர்.

விடுதலைக்குப் பின்னர் இனாம்களும் இடையாட்சிகளும் ஒழிக்கப்பட்டு வேளாண் வகையாக மாற்றப்பட்ட போதும் இந்த 'உள்ளூர் உசாவல்'முறை பேருதவியாக இருந்தது. இவை அனைத்தும் வருவாய்த் துறையாலும் அதனோடிணைந்திருந்த அளவைத் துறையாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். இப்போது அனைத்து நிலங்களும் அளக்கப்பட்டு வரி நிறுவப்பட்டுத் தீர்வுக்கு(Settlement) வந்த பின்னரும் இந்த உள்ளூர் உசாவலை வைத்துக் கொண்டு இவ்விரு துறையினரும் சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆவணங்களைப் புதுப்பித்தல்(UDR) என்ற பெயரில் அவர்கள் செய்யும் அழிம்புகள் சொல்லிமாளாது. மறுஅளவைகள் நடந்தபோது ஊரிலுள்ள செய்தியறிந்த திறமைசாலிகளுடன் இணைந்து யார்யார் நிலங்களையெல்லாமோ அத்திறமைசாலிகளுக்குப் பட்டயம்(பட்டா) போட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதே பழக்கத்தின் தொடர்ச்சியாக இப்போது எங்காவது அளவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் அங்கெல்லாம் ஆட்களைத் தேடிப் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டயம் போட்டு விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பதறிக் கொண்டு அலைவது தான் மிச்சம். பத்திர ஆவணத்திற்குப் புறம்பாக எப்படிப் பெயர் மாறியது என்று கேட்டால் 'அண்டை உசாவலில்' தெரிய வந்தது என்கின்றனர். அண்டை வீட்டில், மேல்மாடியில் அல்லது கீழ்த்தளத்தில் வாழ்பவர் ஆணா பெண்ணா என்று கூட அறிய முடியாத இன்றைய உலகில் வழியில் செல்வோரிடம் சொத்துடைமைச் செய்திகளைத் திரட்டுகிறார்களாம். எப்படிக் காது குத்துகிறார்கள் பார்த்தீர்களா! "இவன்களுக்குச் சரியாக அளந்து போட்டால் நமக்கு என்ன ஆதாயம்? இப்படி நம்மைத் தேடிக் கொண்டு வருவான்களா?" என்று கூசாமல் கேட்கிறார்கள். பலருக்கு இவ்வாறு தங்கள் நிலத்தை வேறு பெயர்களுக்குப் பட்டயம் போட்டிருப்பதுகூடத் தெரிவதில்லை. விலைப் பத்திரம் தங்கள் கைகளில் இருக்கிற உறுதியில் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பட்டயத்தை அல்லது பத்திரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒருவர் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவர் வழக்கு மன்றம் ஏறுகிறார். நீதி மன்றங்கள் ஒன்று மாற்றி ஒன்று பத்திரம் வைத்திருப்பவர்க்கும் பட்டயம் வைத்திருப்பவர்க்கும் சார்பாக மாற்றி மாற்றித் தீர்ப்பளித்து வழக்குகளைச் சாகாமல் காப்பாற்றி வைத்திருக்கின்றன.

அடுத்தது, ஒரு நிலம் விற்பனையின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அதற்காகப் பட்டய மாற்றம் செய்வதும் பகுதியாக விற்கப்பட்டிருந்தால் அதை உட்பிரிவு செய்வதும் ஆகும்.

உட்பிரிவு செய்வதில் வெள்ளையர் காலத்தில் முன் அளவு ஆவணங்கள் இல்லாமையால் இருக்கின்ற வரப்புகளை அப்படியே குறித்து உட்பிரிவு செய்தார்கள். இந்த விதியை இப்போது பல வரைபடங்கள் உள்ள நிலங்களுக்கும் கையாளுகிறார்கள் அளவைத் துறையினர். ஒரு பத்திரம் பதியும்போதே உட்பிரிவுக்கும் கட்டணம் தண்டப்பட்டு விடுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைந்துள்ள அளவரை(Sureyer) அணுகும்போது அவர் முதலில் கேட்கும் கேள்வி "வரப்பு இருக்கிறதா?" என்பது தான். தான் வாங்கியுள்ள பரப்புள்ள நிலத்தை அளந்து கண்டுபிடித்து அதற்கு வரம்பிடுவதற்கான தொழில்நுட்ப அறிவுரையைப் பெறுவது தான் நிலத்தை வாங்கியவரின் உடனடி நோக்கம். அவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன் அவர் திகைத்துத் தடுமாறுகிறார். ஏதோ செய்யத் தகாத குற்றத்தைச் செய்து விட்டவர் போல் கலங்குகிறார். இவ்வாறு சிக்கலைக் கிளப்பிய பின்னர் அளவர் சிக்கலுக்குத் தீர்வையும் சொல்கிறார். அதாவது பணம் கொடுத்தால் வரப்பில்லாமலே உட்பிரிவு செய்யப்படும். இந்தத் தொகை ஆயிரக்கணக்கு என்ற அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளது.

பட்டயம் மாற்ற வேண்டுமானாலும் அதே அளவு தொகை கேட்கிறார்கள். இதில் நில உச்சவரம்புப் பிரிவினருக்கும் பங்குண்டு. கொடுக்கவில்லை என்றால் ஏதாவது சிக்கல் உண்டாக்கி ஆளை மண்டியிட வைத்துவிடுவார்கள்.

அனுபவ பாத்தியதை என்ற சட்டப் பிரிவும் இவ்வாறு தெளிவில்லாமலிருந்த எல்லைகளின் விளைவுதான். ஆனால் இன்று அது திருடுவோருக்குப் பரிசளிப்பதாகவும் அப்பாவிகளுக்குத் தண் டனையாகவும் ஆகிவிட்டது.

ஒரே சொத்தை ஒருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவருக்கும் விற்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விற்பனையைப் பதியும் முன்னரே பதிவுத் துறையினரால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் 'தகுந்த' கூலியைப் பெற்றுக் கொண்டு பதிந்து விடுகிறார்கள். இந்த வழக்குகளும் நீதி மன்றங்களில் குவிக்கின்றன.

தமிழ் நாட்டில் இன்று தீர்வைப்பணி(Settlement) முடிவுற்றது போல் தோன்றினாலும் பல இடங்களில் இன்றும் "பிரிவின்றிப் பங்குகளாக" நிலங்கள் கிடக்கின்றன. பயிர்ச் செய்கை தொடர்ந்து நடைபெறும் இடங்களில் அவரவர் கைப்பற்றுகள் விற்பனைகள் மூலம் கைமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தரிசாக விழுந்து விட்ட நிலங்களில் எவெரெவர் பங்கு எங்கிருக்கிறதென்பதைக் கண்டுபிடிக்க முடியாதாகையால் ஏதாவது நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீர் செய்யவில்லையென்றால் அவை என்றும் தரிசுகள் தாம். அவற்றில் எவராவது துணிந்து இதுதான் தன்பகுதி என்று விற்றுவிட்டார் என்றால் உடனே பிற பங்காளிகள் அனைவரும் வாங்கியவரைப் பிய்த்தெடுத்து விடுவார்கள்.

இன்று தேக்கு மரக் காடுகள் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு மக்களிடம் பணம் பெற்று நாடெங்கும் பல நிறுவனங்கள் நிலங்களை வாங்கியிருக்கின்றன. அவையனைத்தும் மேலே கூறிய சிக்கல்களில் சிலவற்றையேனும் சந்தித்தே ஆக வேண்டியிருக்கும். ஆனால் அவர்களின் முன்முயற்சிகளினால் இந்த முட்டுக்கட்டை நிலையை அகற்ற முடியும்.

புறம்போக்கு நிலங்கள் என்று பல்வேறு நோக்கங்களுக்காக பெரும்பரப்பு நிலங்கள் ஒவ்வோர் ஊரிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இடம்பிடித்தால் அதற்குத் தண்டத் தீர்வை என்றும் தண்டிவிடுகிறார்கள். இருந்தாலும் அவ்வாறு விதிப்பதற்குக் கையூட்டு வழங்க வேண்டும். திடீர் திடீரென்று அகற்றியும் விடுவார்கள். மீண்டும் பணம் கொடுக்க வேண்டும். புறம்போக்கு எனும் திட்டம் சட்டத்தை வாடகைக்கு விட்டு (அரசூழியர்கள்) பணம் பண்ணுவதற்கான சட்டங்களில் ஒன்று.

முன்னாள் திருவிதாங்கூர் சமத்தானத்தில் மிகுதியாக உள்ள புறம்போக்கு நிலங்களை அவ்வப்போது ஏலம் விட்டுவிடுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை.

ஆங்கிலேயர்கள் நம் குமுகத்தில் தீவிரமான மாற்றங்களைச் செய்யவில்லை. இன்னொரு 1857ஐச் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் புதுச்சேரியின் பிரஞ்சியரும் சமத்தானங்களும் நல்ல மாற்றங்கள் பலவற்றைச் செய்தனர். திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மாறிய குமரி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சிறந்த வருவாய்த் துறை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. மதியழகன் விரும்பினார். ஆனால் பின்னர் அவர் சிக்கிக் கொண்ட அரசியல் புயலில் அவரது அருமையான திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. முன்பு தன்னாட்சியுடைய சமத்தானத்தின் ஒரு பகுதியாயிருந்த குமரி மாவட்டம் இன்று பன்றியுடன் சேர்ந்த கன்றாகி விட்டது. புதுவை மாநிலத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

நிலவுடைமையாளரை அச்சுறுத்தும் இன்னொரு அரசு நடவடிக்கை வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்தலாகும் இவ்வாரியம் செயற்படும் இடங்களில் எங்கெங்கு ஒரளவு விலை மதிப்புள்ள நிலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் கையகப்படுத்தும் முன்னீடுகள் முன் வைக்கப்படும். நிலவும் சந்தை மதிப்பிலிருந்து மிகக் குறைந்த விலையே வழங்கப்படுமாதலால் நிலவுடைமையாளர்கள் பதறியடித்துக் கொண்டு அதிகாரிகளை அணுகுவர். இறுதியில் ஏக்கருக்கு எவ்வளவென்று பேரம் பேசி மேலேயுள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டால் முன்னீடு கைவிடப்படும். நிலத்தின் மதிப்பில் 10விழுக்காடு "வெட்ட"வேண்டுமென்பது "மரபு". வாணிக நோக்கமற்ற பொதுப் பணிக்காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் கையாளப்பட வேண்டும் என்று விதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் வாணிக அடிப்படையில் செயற்படும் வீட்டு வசதி வாரியத்துக்கு இச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? உலக வங்கி அதில் முதலிட்டிருக்கிறது என்பதாலா?

மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தருவது தான் வீட்டுவசதி வாரியத்தின் பணி. அப்படியிருக்க முறைப்படி நகர ஊரமைப்பு இயக்குனரகத்தின் இசைவைப் பெற்று மனைப்பிரிவு செய்து கல்லிடப்பட்ட இடங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அடிப்படை என்ன? வீடுகள் கட்டி குடியிருந்த மனைகளையும் அளந்து மக்களை மிரட்டுகிறார்களே நிலம் கையகப்படுத்தும் துறை ஊழியர்கள், இது அரசுக்குத் தெரியுமா? அல்லது ஒவ்வொரு கட்டத்திலும் மேலையுள்ளவர்களுக்கு இவ்விவ்வளவு வந்துவிட வேண்டுமென்று விழுக்காடு நிறுவியிருக்கிறார்களா?

வீட்டுவசதி வாரியத்தின் இந்த நடவடிக்கைகளால் மக்களின் மனதில் தோன்றியிருக்கும் எண்ணம் என்னவென்றால் இன்றைய சாலைப் போக்குவரத்தின் நிலையில் வெளியில் சென்றவருக்கு எப்போது சாவு வரும் என்று எதிர்பார்க்க முடியாதோ அதேபோல் நிலம் வைத்திருப்போர் அது என்று பறிபோகும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்பது தான்.

வேளாண் நிலங்களை வீடுகட்டுவதற்குப் பயன்படுத்தும் முன் அவை வேளாண்மைக்குத் தகுதியற்றவை என்ற சான்றிதழை வேளாண் துறையிடம் பெறவேண்டுமென்று ஓர் அரசாணை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வீட்டு வசதி வாரியம் உட்பட அரசுத் துறைகளுக்கும் பிற அரசுசார் நிறுவனங்களுக்கும் இவ்வாணை பொருந்தாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அடுத்து வருவது நில உச்சவரம்பு. வருமான வரியைப் போலவே நில உச்ச வரம்பும் பெருநிலவுடையார்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி நிலமற்றோருக்குக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த ஒரு திட்டமாகும். ஆனால் இதுவரை எந்த நிலமும் கைப்பற்றப்பட்டதாகவோ, கைப்பற்றப்பட்ட நிலம் எவருக்கும் கொடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் அதிகப்படி(உபரி) நிலங்களென்று சில நிலங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றை உடையோர் பயன்படுத்தாமல் ஆக்கிவைத்துள்ளனர். எவ்வாறு வருமானவரி, மூலதனத்தை முடக்கிப் போடப் பயன்படுத்தப் பயன்படுகிறதோ அவ்வாறே நில உச்சவரம்பு, நிலத்தை முடக்கிப்போடப் பயன்படுகிறது.

உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலங்கள் ஒரு புறம் முடங்கிக் கிடக்க மறுபுறம் அரசு அலுவலகங்கள் கட்டவும் ஏழைகளுக்கு இலவசப் பட்டா வழங்கவும் சில இடங்களில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் அமைக்கவும் பாசனக் குளங்களே பாழடிக்கப்பட்டு வருகின்றன. அரசின் அளவுகோல்கள் விந்தையானவை!

நில உச்சவரம்பு என்பது ஒரு மாயை. அதனால் எவரும் பயன்பெறவில்லை. மாறாகக் குத்தகை ஒழிப்பு மூலம் பயிர்த் தொழில் செய்த எண்ணற்ற குத்தகையாளர்கள் நில உடமையாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் நிலத்தின் மீதுள்ள அவர்களது பிடிப்பு உறுதிப்பட்டுள்ளதால் நிலத்தின் விளைதிறன் முன்னேறியுள்ளது. இப்புதிய நிலவுடைமையாளர்கள் தங்களது எளிய பண்பாட்டுப் பின்ணனியினால் உருவான சிக்கனத்தினால்(வாழ்வுச் செலவுக் குறைவு, சொந்த உழைப்பு, நேரடிக் கண்காணிப்பு, எனவே தொழில் நுட்பத் தேர்ச்சி) உச்சவரம்பை மிஞ்சிய நிலங்களின் சொந்தக்காரர்களாகியுள்ளனர். இவற்றில் கணிசமானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இவர்கள் உச்சவரம்புச் சட்டங்களிலிருந்து தப்புவதற்காகக் கைக்குழந்தைகள் மீது கூட நிலங்களை வாங்குகின்றனர். அக்குழந்தைகள் வயதுக்கு வரும் வரை அந்நிலங்கள் மீது கடன் பெறல், விற்றல், வில்லங்கம் செய்தல் என்று அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விலங்கிடப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது நஞ்சைப் பகுதிகளில் நிலையாகும். புஞ்சைப் பகுதிகளில் சிறு நிலவுடைமையால் எந்தப் பயனுமில்லை. பொதுவாகவே சிறு உடைமைச் சொந்த உழவனாயிருப்பதை விட வேளாண் தொழிலாளியாயிருப்பதே ஆதாயமும் மன அமைதிக்கு உகந்ததுமாகும். அனைவருக்கும் நிலத்தைப் பங்கிடுவதென்ற முழக்கம் வேளாண்மையின் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லாத வெற்றுச் சிந்தனையாளர்களின் வரட்டு முழக்கம். தாழ்த்தப்பட்டவர்கள் நிலவுடைமையினுள் நுழையாமலேயே நிமிர முடியும். சிறு உடைமையாளராவது விடுதலையல்ல. புதிய பல அடிமைத்தனங்களுக்கும் விலங்குகளுக்கும் ஆளாவதாகும். எனவே அனைவருக்கும் நிலம் என்ற குறிக்கோள் கைவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

நிலவுடைமையாளரை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும் இன்னொரு துறை நகர ஊரமைப்புத் துறை. ஒரு நிலப் பகுதி திட்டப் பகுதி என்று இத்துறையால் அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன்பின் அதில் எந்தக் கட்டுமானம் கட்ட வேண்டுமாயினும் சென்னையிலுள்ள இயக்குநராக ஒப்புதல் பெறவேண்டும். (இவ்வித ஒப்புதல்களை அந்தத் துறை அமைச்சரின் வாய்மொழி ஒப்புதல் இன்றி வழங்குவதில்லை என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது.) இதைவிடக் கொடுமையானது பல ஏக்கர் நிலங்களைத் திறந்தவெளி, பூங்கா, பசுமைப் பகுதி, சாலைவளைவு என்றெல்லாம் அறிவித்து விடுவார்கள். அந்த நிலங்களில் எந்தக் கட்டுமானமும் கட்ட இயலாது. இதுபோன்ற இடங்களுக்கு அத்துறையோ அரசோ எவ்வித இழப்பீடும் தருவதில்லை. இதைப்போல் தேவையற்ற இடங்களிலெல்லாம் கூட வாணிகப் பகுதி, தொழிற் பகுதி என்று பெரும் பரப்புகளை ஒதுக்கீடு செய்துவிடுவார்கள். இவ்விடங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துவிடும். ஆனால் இவ்வாறு செய்யப்பட்ட "ஒதுக்கீட்டுக்கு" "ஒதுக்கீடு விலக்கம்" செய்யும் அதிகாரம் இயக்ககத்துக்கு உண்டு. இதில் பெருமளவு பணம் கைமாறும். இங்கும் நிலத்தின் மதிப்பில் திட்டவட்டமான விழுக்காடுகள் உண்டு.

மனைப்பிரிவுத் திட்டங்களில் 10விழுக்காடு பூங்காக்கள் என்று விடப்படுகிறது. இவ்விடங்களைப் பராமரிப்புக்காகச் ஒப்புதலளிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களையே பராமரிக்க வக்கற்ற நிலையிலிருக்கும் நம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இவ்வாறு பெரும் பரப்புகளை ஒப்படைப்பது செத்தவன் கையில் வெற்றிலை கொடுப்பது போன்ற பயனற்ற செயலாகும். அத்துடன் திட்டமிடப்பட்ட வீடமைப்புகளுக்கு நடுவில் இத்தகைய வெற்றிடங்கள் சேரிகளை உருவாக்கத்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திட்டப்பகுதியென்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அது நஞ்சையாயிருந்தாலும் அதில் கட்டிடம் கட்டுவதற்குள்ள தடை தாமே விலகிவிடும். எனவே இங்கும் ஊழலுக்கு வாய்ப்புண்டு. (ஊழலுக்காகவே இவ்வாணை இத்தனை விலக்குகளுடன் இயற்றப்பட்டதோ?)

(தொடரும்)

1.7.07

ஒதுக்கீடும் ஏழ்மையும்

கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் சாதிவழி ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் தமிழகம் தான். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரும்பணியை இம்மாநிலம் தொடங்கிவிட்டது.

தமிழகத்தை முன்னோடியாக வைத்து இந்திய அரசியல் சட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ஒதுக்கீட்டுக்கு வகைசெய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தைப் போல் பிற்பட்டோருக்கு அது கிட்டவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு "தற்காலிக" அரசு தன்னைக் காத்துக் கொள்வதற்காக எதிர்பாராத ஒரு நேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அளவில் பணி ஒதுக்கீட்டு முறையை ஏற்று ஆணை வெளியிட்டது. ஆனால் அதனாலேயே அவ்வரசு பதவியை இழந்தது. காலத்தின் கட்டளைப்படி அமைந்த இந்த ஆணையைப் பின் வந்த அரசுகளால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதன் வலிமையைக் குறைக்கும் நோக்கில் அதற்குப் பல மறுப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள் இந்த ஒதுக்கீட்டு முறையை விரும்பாதோர். அவற்றில் முதன்மையானது ஒதுக்கீட்டின் பலன்கள் அந்தந்தச் சாதி மக்களில் மேல் மட்டத்திலுள்ளோர்க்கே கிடைக்கும் என்பது. இந்த மறுப்பு உண்மை தான். ஆனால் ஒதுக்கீட்டு முறையால் இழப்பெய்தும் சாதியினரிலும் மேல் தட்டினருக்குத் தான் இந்த இழப்பு ஏற்படுகிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒதுக்கீட்டினால் பயன் பெறும் சாதியினராயினும் இழப்பெய்தும் சாதியினராயினும் மிகவும் விரும்பிப் பயிலும் துறைகள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலியன. இத்துறைகளில் இன்று முதியோராக உள்ளவர்களில் ஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்களைப் பற்றிய ஓர் உண்மையை ஆய்ந்து பார்ப்போம். அன்று அவர்கள் பெற்றோர் வாழ்ந்த பொருளியல் நிலையில் இன்று அவர்கள் இருந்திருந்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளியிறுதி வரை கூட படிக்க வைத்திருக்க முடியாது, ஏனென்றால் அன்று குடும்பங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் இன்று போல் செலவுக்குரிய தேவைகள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒரு கீழ்நிலை நடுத்தரக் குடும்பம்கூடத் தன் மகனை ஒரு பொறியாளராக்கிவிட முடிந்தது.

இன்று அது முடியாது. எனவே ஒதுக்கீட்டினால் இன்று ஏழைகள் பயன்பெற முடியாது. ஒதுக்கீடு தொடர்பான சச்சரவு இரு கட்சியிலுமுள்ள மேல் மட்டத்தினரிடையில்தான். இதில் தங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்று காட்டுவதற்காக ஒவ்வொரு குழுவினரும் தங்களிடையிலுள்ள ஏழைகளைத் துணைக்கழைக்கின்றனர். பிராமணர்கள் புரோகிதர்களையும் அர்ச்சர்களையும் காட்டுகின்றனர். பணக்கார நாடார்கள் நேற்று வரை சாணார்களென்று தாங்களே ஒதுக்கி வைத்திருந்த பனையேறிகளைக் காட்டுகிறார்கள். அதுபோலவே யாதவர்களும் நாடோடிக் கோனார்களைக் காட்டுகிறார்கள். முக்குலத்தோர் தம்மிடையேயுள்ள நாட்டார் கள்ளர் போன்றோரைக் காட்டுகின்றனர்.

மேல்மட்டத்தினர் இவ்வாறு ஒற்றுமைக்கரம் நீட்டும்போது இவர்களது குமூக ஏற்பை ஒரு காலத்தில் வேண்டி நின்று ஒதுக்கப்பட்ட ஏழை பிற்படுத்தப்பட்டோரோ இன்று தங்களைக் காட்டி மேல்மட்டத்தினர் பயனைத் தட்டிச் சென்றுவிடக் கூடாது என்று தமக்குத் தனி அடையாளம் காட்டும் வகையில் பிரிவினை முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

இது ஓர் அபாய அறிகுறி. முன்பு ஒதுக்கீடு உட்சாதி எல்லைகளை மங்க வைத்து சாதிகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைக்கும் திசையில் மக்களை இட்டுச் சென்றது. இன்று அதே ஒதுக்கீடு சமூகத்தைப் பழைய நிலை நோக்கித் திருப்பி வரலாற்றைத் தலைகீழாக்கப் பார்க்கிறது. எனவே நாம் மக்களிடையில் ஒற்றுமையையும் நாட்டின் முன்னேற்றத்தையும் எய்தத்தக்க ஒரு வழியைத் தேட வேண்டியவர்களாகவுள்ளோம்.

75 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி தன் சாதிவாரி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்தபோது கிடைத்த கல்வி வாய்ப்புகளும் அரசு வேலை உட்பட எழுத்தறிவு தேவைப்பட்ட அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் ஓர் இசைவு இருந்தது. காலஞ் செல்லச் செல்ல கற்றோர் தொகை வேலை வாய்ப்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாக மிஞ்சி இன்று ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் போய்விட்டது. நாம் வெளிப்பட ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இல்லையாயினும் கல்வியென்பது வேலைவாய்ப்புக் கருவியல்ல. பண்பாட்டின், மக்களாட்சியின் இன்றியமையாத் தேவை என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த உண்மையை நாம் மனமாரப் புரிந்துகொண்டோமாயின் நம் கல்வி முறையின் வடிவமும் உள்ளடக்கமும் தாமே மாற்றமடையும்.

இன்னொரு பக்கத்தில் அரசு வேலைவாய்ப்பு என்பது தனது உச்சத்தை அடைந்து இறங்கு நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக பொருளியல், வாணிக முயற்சிகளில் அரசுத்துறை பெரும் பின்னடைவுகளையும் குறைகூறல்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியாருடைமையாக்குதல் என்ற பெயரில் இந்தியப் பொருளியல் அயலுடைமையாகிவிடாமல் மக்களுடைமையாவதற்கு (அதாவது உள்நாட்டு மக்களுக்கு உடைமையாவதற்கு) நாம் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆனால் இத்தேவையை மக்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அரசு என்பது மக்களை உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தது பாதுகாத்தல் என்ற நிலையிலன்றி வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு நிறுவனம் என்ற நிலையில் நெடுநாள் நீடிக்க முடியாது என்பதை அரசின் அன்றாட நடவடிக்கைகளும் அதனால் மக்கள் அடையும் இன்னல்களும் தெளிவாக்கி வருகின்றன. எனவே கல்விக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் உள்ள தொடர்பு முறிய வேண்டிய கால கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம்.

இப்போது இரண்டு கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாக உள்ளோம்.

1. அரசுப் பணியாளர்களுக்கும் (உள்நாட்டு)தனியார் துறைப் பணியாளர்களுக்கும் இடையில் உள்ள சம்பளம் மற்றும் சலுகைகளிலுள்ள மாபெரும் ஏற்றத் தாழ்வு.

2. ஏழை நாடாகிய இந்தியாவில் அரசை விட்டால் அதற்கிணையாக எவ்வாறு (உள்நாட்டுத்) தனியார் வேலை வாய்ப்பை அளிக்க முடியும்?

முதலில் இரண்டாம் கேள்விக்கு விடை கூறுவோம்.

நம் நாடு ஒர் ஏழை நாடென்பது ஒரு பெரும் மாயை. வருமான வரித் துறையை முற்றாக ஒழித்து விட்டால் அதனால் முடமாக்கப்பட்டு இருண்ட மூலைகளில் கருப்புப் பணமென்ற பெயரில் பதுங்கிக் கிடக்கும் செல்வம் வெள்ளைப் பணமாகி மாபெரும் மூலதனமாகும். இன்று உலக வங்கியிடம் கடன் வாங்கும் இந்தியா உலக வங்கிக்கே கடன் கொடுக்க முடியும்.

சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், உரிமங்கள், இசைவுகள், ஒதுக்கீடுகள் என்ற எண்ணற்ற பெயர்களிலும் வகைகளிலும் தளையிடப்பட்டு தோன்றவோ வளரவோ வழியற்றுப் போன இந்நாட்டு மக்களின் தொழில் முனைவு உணர்வு. அத்தளைகள் அகற்றப்பட்டு மக்களுக்கு ஒரு சிறு தூண்டுதலும் கொடுக்கப்பட்டால் நம் நாடு ஒரு தொழில் வள நாடாவதற்குத் தடையேதுமில்லை.

அவ்வாறு ஒரு சூழலை உருவாக்கிவிட்டால் வேலைவாய்ப்புகள் பெருகும். அதே நேரத்தில் எங்கோ வெளியிலுள்ள சந்தையைத் தேடி உள்நாட்டு மக்களின் வாங்கும் ஆற்றலை அழிப்பதில் வெற்றி கண்டுவிட்ட நம் அரசின் அரக்கக் கோட்பாட்டைக் கைவிட்டு உள் நாட்டிலுள்ள மிகப் பெரும் மக்கள் தொகையையே சந்தையாக்கும் நோக்குடன் அவர்களது வாங்கும் ஆற்றலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டால் அரசூழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வு நீங்கும்.

கிராமக் கைத் தொழிலைப் பேணுதல் எனும் பெயரில் சாதியடிப்படையிலான தொழில்களை நிலைநிறுத்துதல் மக்களைப் பழைய சாதியப் பண்பாட்டிலும் ஏழ்மைச் சிறுமையிலும் அமிழ்த்தும் முயற்சியாகும். மண்பானை வனையும் குலாலர்களும் பனை ஏறும் நாடார்களும் ஆடுமேய்க்கும் இடையர்களும் செருப்பு தைக்கும் செம்மார்களும் முடி திருத்தும் நாவிதர்களும் மலம் அள்ளும் துப்புரவாளர்களும் மாடு வைத்திருக்கும் உழவர்களும் நெடுநாள் மரபுத் தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. மாற்றம் நோவைத் தருவதாயினும் அதை ஏற்றே ஆகவேண்டும். மாற்றத்தின் நோவையும் அதன் கால நீட்சியையும் குறைக்கத்தான் முடியும். மாற்றத்தைக் தவிர்க்கும் முயற்சி தரும் நோவும் இழப்பும் மாற்றத்தினால் ஏற்படுபவற்றை விட மிகக் கடுமையாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட., பிற்படுத்தப்பட்ட மக்களின் குமூக மதிப்பை உயர்த்துவதற்கு "உபரியாக" உள்ள நிலத்தைப் பங்கு போட்டுக் கொடுத்தால் போதும் என்று சிலர் உரத்த குரலில் சேர்ந்திசை பயிலுகின்றனர். "உபரி" நிலம் எங்கே உள்ளது? அப்படி இருக்கும் நிலத்தை எல்லோருக்கும் பகிர்ந்தால் ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும்? அவ்வாறு கிடைக்கும் நிலம் தன் உடைமையாளரை வாழவைக்குமா அமிழ்த்துமா? பணக்கார நாட்டு மக்கள் இதுபோன்ற நில உடைமைகளினால் தான் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து நிற்கிறார்களா? அல்லது நம் நாட்டிலுள்ள உயர் சாதியினர் அனைவருக்கும் நில உடைமை தான் அடிப்படையா? உண்மையில் சிறு நில உடைமை தாங்க முடியாத அடிமை விலங்கு. உழைப்புக்கேற்ற கூலியும் ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகளின் தாக்கமின்மையும் இருந்துவிட்டால் அதுவே உண்மையான பொருளியல் விடுதலை.

பெரும் பெரும் நிலம் மற்றும் தொழில் உடைமைகளும் மக்களின் வாங்கும் ஆற்றலின் திட்டமிட்ட வளர்ச்சியும் நம் நாட்டின் ஏழை மக்களின் நிலையைக் கட்டாயம் உயர்த்தும்.

உலக வாணிகத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய மண்ணில் வேர் கொண்டு எழுந்த ஆடம் ஸ்மித்தின் ஏற்றுமதிப் பொருளியல் கோட்பாடுகள் போலியான சோசலிசம் இவற்றைக் கைவிட்டு இந்தியாவுக்கேற்ற உள்நாட்டு நுகர்வுப் பொருளியல் கோட்பாட்டை உருவாக்குவோம். ஏழ்மையை விரட்டியடிப்போம். இதுதான் ஒதுக்கீட்டினால் பயன்பெற முடியாத ஏழை மக்கள் எய்த முடியாத ஒன்றுக்குப் பாடுபட்டு புதிய சாதிப் பிரிவினைகளை உருவாக்காமல் அதே நேரத்தில் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபட்டு உண்மையான சமத்துவம் நோக்கிச் செல்லும் ஒரே வழியாகும்.

சராசரிக் குடிமகனுக்கும் தமக்கு இணையான வசதிகள் கிடைக்கும் வரை அரசூழியர்களுக்கும் புதிய சலுகைகள் வழங்காமலிருக்க வேண்டியதும் இன்றியமையாததாகும். இந்தச் சலுகை ஏற்றத்தாழ்வு தான் ஒதுக்கீட்டிற்கு இந்த அளவு அழுத்தத்தைக் கொடுக்கிறது.

மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை இனங்கான முற்பட்டுள்ள ஓர் உசாவல் குழு செயற்படும் ஒரு சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. தொடக்கத்தில் நாம் கூறியது போல் தத்தம் சாதித் தொகுப்பில் (முன்பு விலகியிருந்த பல சாதியினர் இன்று ஏதோவோர் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒருபெயர் கொண்ட குழுக்கள்) உள்ள மிக ஏழையினரைக் காட்டித் தாமும் மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்று கேட்க ஆயத்தமாகி வருகின்றனர்.

ஏறக்குறைய ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு மேல் மட்டத்து மக்களின் விகிதம் கணிசமாக உள்ள வகுப்பினர் எவரும் மிகப் பிற்பட்டோராக வகைப்படுத்தப்படக் கூடாது. அப்படி யாராவது ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டிருந்தால் அது கட்டாயம் திரும்பப் பெறப்படல் வேண்டும்.

இப்படி ஓர் அளவுகோல் வைத்திருந்து, நாட்டின் பொதுப் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டி விட்டால் வேலை வாய்ப்பு பற்றிய முடிவில்லாத கேள்விக்கு விடை கிடைக்கும்.

உண்மையிலேயே வசதி படைத்தோரைக் கணிசமான அளவில் கொள்ளாத சாதிகளை மட்டுமே மிகப் பிற்படுத்தப்பட்டவை என வகைப்படுத்துவதே முறை. அது மட்டுமல்ல. இவ்வாறு இனங்காணப்பட்ட மக்கள் குழுக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு நிலைகளில் தீவிரமான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி சச்சரவுக்கு இடமாகவும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கும் ஒதுக்கீடு என்ற நடைமுறையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் செயற்பட வேண்டும். விசாரனைக் குழு இதைச் செய்யுமா? அல்லது அரசியல் காற்று எப்படி வீசுகிறதோ அப்படியே சாயுமா? இரண்டாம் வாய்ப்புத் தான் மிகுதி.

இறுதியாக ஒன்று. பிறப்புயர்வைக் காட்ட புறச் சின்னங்களை அணிந்திருப்போரும் சாதி உயர்வைக் காட்ட உணவுமுறை போன்ற போலிப் பண்பாட்டுக் கூறுகளை உயர்த்திப் பிடிப்போரும் அவற்றைச் கைவிட்டுத் தாமும் பிற மக்களைப் போன்று பிறப்பாலும் பண்பாட்டாலும் சமமானவர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்காதவரை ஒதுக்கீடு ஒரு பொருளியல் அல்லது பகுத்தறிவு சார்ந்த சிக்கலாகவன்றி உணர்ச்சி சார்ந்த ஒரு சிக்கலாக நிலைத்து நிற்கும். ஒதுக்கீட்டை எதிர்ப்போர் இதை உணர்ந்து கொள்வது வரலாற்றின் கட்டாயம்.

(கட்டுரை முடிப்பில் சிறுமாற்றம்)

மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களை இனங்கான முற்பட்டுள்ள ஒரு விசாரனைக் குழு செயற்படும் ஒரு சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்த இடத்தில் முற்பட்ட தன்மை பிற்பட்ட தன்மை ஆகியவற்றுக்கான ஒரு தெளிவான அளவுகோலை வரையறுப்பது இன்றியமையாதது. பிற்பட்ட தன்மை எனப்படுவதற்குப் பொருளியல் காரணியையும் கனக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் கூறிய பொழுது அதை ஏற்றுக் கொள்ள மறுத்துப் பொருளியல் பிற்பட்ட தன்மை வேறு சமுகவியல் பிற்பட்ட தன்மை வேறு என்று மண்டல் ஆணைய ஆதரவாளர்கள் கூறினர். அப்படியானால் சமூக முற்பட்ட தன்மை, பிற்பட்ட தன்மை ஆகியவற்றைக் தீர்மானிக்கும் அளவுகோல்கள் யாவை? இதுபற்றி யாரும் இதுவரை கேள்வி எழுப்பவுமில்லை; எனவே விடை காணவுமில்லை.

சமூக முற்பட்ட தன்மைக்கும் பிற்பட்ட தன்மைக்கும் அளவு கோல்கள் உள்ளனவா? உள்ளனவாயின் அவை யாவை?

நம் சமுதாயத்தில் உயர் சாதியினருக்கென்று சில பண்பாட்டு மரபுகள் உள்ளன. அவை:

1. பூணூல் அணிதல்
2. புலாலுணவு மறுத்தல்
3. இறந்துபோன மூதாதையருக்குத் திவசம் கொடுத்தல்
4. புரோகிதர், அல்லது குருக்கள் வைத்துத் தீ வளர்த்து அதை வலம் வந்து மணம் புரிதல்.
5. பெண்ணுக்கு மணவிலக்குக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையில்லாதிருத்தல்.

மேற்கூறப்பட்ட இந்த அளவுகோல்களைக் கொண்டு தோராயமாகக் கீழ்க்கண்டவாறு ஒதுக்கிட்டுக்குரிய குழுக்களைத் தீர்மானிக்கலாம்.

1. பூணூல் அணிவோரும் புலால் மறுப்போரும் முற்பட்ட குழுக்கள்.
2. பூணூலும் புலால் மறுப்பும் இன்றி இறந்து போன மூதாதையருக்குத் திவசம் கொடுப்பவர் பிற்படுத்தப்பட்ட குழுக்கள்.
3. பூணூல், புலால் மறுப்பு, திவசம் கொடுத்தல் இன்றி தீவலம் வந்து மணவினை முடிப்பதுடன் பெண்ணுக்கு மணவிலக்குக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையுடையோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர்.
4. பூணூல், புலால் மறுப்பு, திவசம் கொடுத்தல், தீவலம் வந்து மணவினை முடித்தல், ஆகியவை இன்றி பெண்ணுக்கு மணவிலக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையுடைய குழுக்கள்: தாழ்த்தப்பட்டோர்.

இந்தத் தொகுப்புக்கு இன்றைய நடைமுறையில் ஒத்துவரும் குழுக்களும் அவ்வாறு தம்மை மாற்றியமைத்துக் கொள்வதாகக் தத்தம் சமூக அமைப்புகள் மூலம் வெளிப்படையாக அறிவிப்போரும் அவற்றிற்குரிய ஓதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறலாம் என்று வகுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய சமுதாய மரபுகள் நம் வரலாற்றில் சாதியமைப்புகள் உருவான காலத்தில் அவற்றோடு தோன்றிய செயற்கை மரபுகள் ஆகும். அவற்றைக் கைவிட்டு உண்மையான சமூக நீதி கிடைக்க வேண்டுமாயின் அச்செயற்கை மரபுகள் கைவிடப்பட வேண்டும். அச் செயற்கை மரபுகள் கைவிடப்பட ஒரு தூண்டு கோலாகவும் உண்மையான மக்கட் பண்பாடு மேன்மை பெறவும் நான் தொகுத்துத் தந்திருப்பது போன்ற அடிப்படையில் கல்வி இட ஒதுக்கீடு செய்வது தான் நம் சமூக ஏற்றத்தாழ்வின் பண்பாட்டு வேர்களைக் மெல்லி அழிக்கும் உண்மையான வழியாகும்.


(இக்கட்டுரை திரு. முல்லைமுருகன் அவர்களோடு இணைந்து எழுதப்பட்டது.)

வீட்டைக் கட்டிப் பார்

உலகிலுள்ள நாடுகளெல்லாம் எதிர்நோக்கும் ஒரு பெரும் சிக்கல் மக்களுக்குக் குடியிருக்க வீடுகள் கட்டுவதாகும். நம் நாட்டிலும் அச்சிக்கல் உண்டு. இச்சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவ்வப்போது சில திட்டங்களை நடுவண் அரசும் மாநில அரசுகளும் ஊரறியப் பறைசாற்றுவதுண்டு. ஆனால் நடைமுறையில் அரசு செய்யும் செயல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இச்செயல்கள் நகர ஊரமைப்புத் துறை மூலமாக ஒரு புறமும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்னொரு புறமும் நடைபெறுகின்றன.

ஒரு குடிமகன் தனக்கு ஒரு வீடு கட்டுவதற்காக ஒரு வரைபடம் போட்டு அதற்கு உரிய உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறும் நடைமுறை நாளுக்கு நாள் சிக்கலாக்கப்பட்டு வருகிறது. இப்படிச் சிக்கலாக்குவதற்கு உள்ளூர் திட்டக் குழுமம் என்றொரு அமைப்பு பயன்படுகிறது.

ஒப்பேற்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்குத் தான் கட்டிட வரைபடம் ஒப்பளிக்கப்படும் என்ற கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு ஒப்பேற்றைப் பெறாத மனைப் பிரிவுகளிலும் வரைபடங்களுக்கு ஒப்பளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களிடம் கையூட்டு பெறப்படுகிறது. அதேவேளையில் உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு ஒரு பகுதியைத் "திட்டப் பகுதி" என்று அறிவித்துவிட்டால் ஒரு கட்டிட மனைக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஒரு முறை சென்னையிலிருக்கும் நகர ஊரமைப்பு அலுவலருக்கு உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் மனுச்செய்து உட்பிரிவு ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட இசைவு பெற வேண்டும். மூன்றாவதாக உள்ளூராட்சியிடம் வரைபட உரிமம் பெறவேண்டும்.

இதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டணங்களும் கையூட்டுகளும் உண்டு. அலைச்சல்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் கணக்கில்லை.

இந்த நிலைமையில் இந்த உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த நகராட்சியின் தலைவரும் உறுப்பினர் - செயலராக நகரமைப்பு அலுவலரும் இருந்து வந்தனர். புது ஏற்பாட்டின்படி உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்டங்களுக்கு ஒரே உறுப்பினர் செயலாகராத் திருநெல்வேலியிலுள்ள மண்டல நகரமைப்புத் துணை இயக்குநரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இனி ஒரு வரைபடத்துக்கான திட்ட இசைவு மனுவோ ஒரு மனைப் பிரிவு அல்லது மனை உட்பிரிவு மனுவை நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பும் மனுவோ அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தான் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தந்த மாவட்டத் தலைநகருக்கும் உறுப்பினர் - செயலர் வரும்போதுதான் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் திருநெல்வேலியிலிருந்து உறுப்பினர் - செயலரின் வருகைக்காக மனுக்களும் மக்களும் காத்திருக்க வேண்டியிருக்கும். மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நாளுக்கு நாள் உயரப் பறந்துகொண்டிருக்கும் விலைவாசியின் முன்னால் இந்த நாள் கடத்தும் நடைமுறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கட்டட விதிகளில் சூழ்நிலைக்கும் நடைமுறைக்கும் பொருந்தாதவை பல உண்டு. அத்துடன் திடீர் திடீரென்று புதுப்புதுச் சுற்றறிக்கைகளின் மூலம் நடைமுறைக்கு ஒவ்வாத புதுப்புது விதிகளை நகர ஊரமைப்பு இயக்குநர் புகுத்துவார். இந்த விதிகளுக்கு விலக்குகள் அளிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் இவ்விலக்குளைப் பெறுவதற்குச் சென்னையிலுள்ள நகரமைப்பு இயக்குநர்(DTP) அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம் வரை வீடுகட்டுவோர் சென்று அவற்றைத் "தள்ளி" விட வேண்டும் என்பதிலிருந்து இதன் கடுமை புரியும்.

அடுத்த காலங்கடத்தும் இடம் வீடுகட்டக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களாகும். வீடுகட்டுவதற்குக் கீழ்க்கண்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்கள்
2. அரசு அலுவலகங்கள்
3. ஆயுள் உயிர் காப்பீட்டுக் கழகம்
4. வங்கிகள்
5. வீட்டு வளர்ச்சி நிதியளிப்புக் கழகம்(HDFC)
6. மேற்படி கழகத்திடமிருந்து பணம்பெற்றுக் கடன் வழங்கும் சில தனியார் நிறுவனங்கள்
7. மாநில வீட்டுவசதி வாரியம்

இவற்றில் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்களில் கடன் மனுச்செய்யும் நடைமுறை எளிது. உள்ளாட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வீட்டு வரைபட நகல்களும் கடன் தொகையைத் தீர்மானிப்பதற்கேற்ற மதிப்பீடும் தேவை. அடுத்துக் கட்டடம் கட்டப்படவேண்டிய மனை மீது கடன் பெறுபவர்க்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள், வரைபடங்கள், மதிப்பீடுகளை ஆய்வு செய்து அச்சங்கத்தின் வழக்கறிஞர் கருத்துரை வழங்குவார். கருத்துரை வழங்கிய பின் கடனுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும். ஒப்பளிப்புக்குப் பின்னர் கட்டட மனையையும் கட்டப்படவிருக்கும் கட்டடத்தையும் சங்கத்திற்குக் கடன்பெற விருப்பவர் அடமானம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

இதுவரை அனைத்தும் எளிதாக முடிந்துவிடும். இனிமேல் தான் சிக்கல். வீடமைப்புக் கூட்டுறவு சங்கங்களுக்கெல்லாம் ஒரு நடுவண் சங்கம் சென்னையில் இருக்கிறது. உள்ளூர்ச் சங்கத்தின் கையிருப்பில் கடன் கொடுக்கத் தேவையான பணம் இருந்தாலும் நடுவண் சங்கம் ஒப்பளித்தால் தான் கடனைக் கொடுக்க முடியும். இந்த நடுவண் சங்கம் எந்த நொடியில் வேண்டுமாயினும் மனுக்கள் வாங்குவதையும் கடன் தவணைகள் வழங்குவதையும் நிறுத்தி உள்ளூர் சங்கங்களுக்கு ஆணையிட முடியும்.

கூட்டுறவு சங்கங்களில் அரசு இயந்திரத்தின் தலையீடு எப்போதுமே உண்டு. நேர்மையாக நடக்க விரும்பும் சங்கங்கள் கூட அரசு அதிகாரிகளின் நெருக்குதல்களினால் ஊழல் புரிய நேர்வதுண்டு.

2. அரசு அலுவலகங்கள் எனும் போது நடுவண், மாநில அரசுகள் வெவ்வேறு நெறிமுறைகைளக் கையாள்கின்றன. நடுவணரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்க்கு எளிதில் கடன் கிடைத்து விடுகிறது. மனைப்பிரிவு ஒப்பளிக்கப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்பு பெற்ற வீட்டு வரைபடம் இருந்தால் போதும் கடன் வழங்கப்பட்டுவிடும். அத்துடன் மனுச் செய்த ஆறு மாதங்களில் கடன் வழங்கப்பட்டுவிடும். நடுவணரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இதுவே நடைமுறை.

ஆனால் மாநில அரசின் கதையே வேறு. வீட்டுமனை நகரமைப்புத் துறையில் ஒப்பளிப்பைப் பெற்ற மனைப்பிரிவில் உள்ளதாயிருக்க வேண்டும். அத்தகைய மனைப்பிரிவில் உள்ளூராட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்துடன் மனுச் செய்ய வேண்டும். கடன் கொடுப்பது திடீர் திடீரென்று நிறுத்தி வைக்கப்படும். நீண்ட நாட்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட கடன் வழங்கல் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனுச் செய்தவர்களுக்கே இப்போது கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இது தான் நிலை.

உடனடியாக ஒரு வீடு வேண்டுமென்று விரும்புவோருக்குப் பயனில்லை இதனால். எனவே அவர்கள் வேறு கடன் நிறுவனங்களையே நாடவேண்டி வருகிறது. இருந்தால் இருக்கட்டும், கட்டி வாடகைக்கு விடலாம் என்று கருதுபவர்களுக்கே மாநில அரசின் இந்தக் கடன் கொள்கை உதவும்.

3. மூன்றாவதாக வருவது உயிர்க் காப்பீட்டுக் கழகம். காப்பீட்டாளர்களுக்கு வீடு கட்டும் கடன் வசதி செய்து கொடுக்கிறோம் என்று இக்கழகம் வாக்களிக்கிறது. கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீடு செய்ய வற்புறுத்துகிறது. அத்தொகைக்குக் காப்பீடு செய்து முடித்ததும் அதன் ஆர்வம் மங்கி விடுகிறது. காப்பீட்டுக் கழகத்தில் நடைமுறை கீழ்க்கண்ட வாறாகும்.

முதலில் கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீட்டில் சேர வேண்டும். பின்னர் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்புப் பெற்ற வரைபடத்துடனும் மதிப்பீட்டுடனும் மனுச் செய்யவேண்டும். கழகத்தில் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற வேண்டும். அதன் பின்னர் கழகத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரின் கருத்தினைப் பெற வேண்டும். இவ்வளவுக்கும் பிறகு மனு மண்டல அலுவலகம் செல்லும். அங்கும் ஒரு முறை வேறொரு வழக்கறிஞரின் கருத்து பெறப்படும். அவர் குறைபாடுகள் எவற்றையேனும் சுட்டிக்காட்டினால் மீண்டும் ஒரு முறை திரும்பவரும். அதனைச் சரிசெய்ய வேண்டும்.

மீள அனுப்பப்பட்ட மனு மீண்டும் சில சிக்கலான அலுவலக நடைமுறைகளுக்காகப் பலமுறை மண்டல அலுவலகத்துக்கும் உள்ளூர் அலுவலகத்துக்கும் போய்த் திரும்பும். இதற்குள் பெரும்பாலான கடன் கேட்போர் தம் சொந்தப் பணத்திலும் அங்கிங்கு புரட்டியும் வீட்டைக் கட்டி முடித்து விடுவார்கள். அல்லாதவர் பாடு திண்டாட்டம் தான்! இதனால் தவறாமல் ஆதாயம் அடைபவர்கள் முகவர்கள் தாம்!

ஒப்பளிக்கப்பட்ட பின்பும் சிக்கல் தீர்ந்துவிடாது. மதிப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதிதான் கடனாகக் கொடுக்கப்படும். மீதித் தொகையின் விகிதத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கடன் வேண்டுபவர் முதலில் கட்டட வேலை செய்து அதனைக் கழகப் பொறியாளர் ஏற்கச்செய்ய வேண்டும். இதற்காக அப்பொறியாளருக்கு ஒவ்வொரு முறையும் கழகம் கணிசமான தொகையைக் கடன் வேண்டுவோர் மீது சுமத்தும். எனவே விவரம் அறிந்தோர் உயிர் காப்பீட்டுக் கழகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

4. வங்கிகள் கடன் கொடுப்பதாகக் கொள்கை அளவில் கூறிக்கொள்ளும். ஆனால் அக்கடன்கள் மூலம் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களும் தான். வீட்டுக் கடன் என்பதில் மட்டுமல்ல அரசுடைமை வங்கிகளிலிருந்து‌ கிடைக்கும் நன்மைகளில் பெரும்பாலானவற்றில் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் உரிமை உண்டு என்பது நடை முறை உண்மை.

5. எச்.டி.எஃப்.சி. எனும் நிதியளிப்புக் கழகத்தின் நடைமுறை எளிதானது. உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறப்பட்ட வரைபடம், மதிப்பீடு, மனையின் உரிமை பற்றிய ஆவணங்கள், வருமானத்தைப் பற்றிய சம்பளச் சான்றிதழ் அல்லது வருமானவரி ஆண்டறிக்கை இவற்றை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு வருமானம் போதுமா போன்ற வழிமுறைகளை அது நிறைவு செய்தால் உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.

மாவட்டத் தலைநகரங்களுக்கு மாதம் ஒரு நாள் வருகைதரும் கழகத்தின் அலுவலர்கள் மூலமாகவே கடன்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இன்னொரு கடன் நிறுவனத்திடம் கடன் நிலுவை இருந்தாலும் அதைச் செலுத்திப் போக அக்கடன் வேட்பாளரால் மாதந்தோறும் கட்ட இயலக்கூடிய தொகைக்கு இக்கழகம் கடன் வழங்குகிறது. இது இக்கழகம் மட்டுமே காட்டும் சலுகையாகும். இக்கழகத்தின் நடைமுறையைக் கூர்ந்து பார்த்தால் வீடு கட்டுதல் என்பதை விட வட்டிக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெறல் என்பதிலேயே அது குறியாயிருப்பது புலப்படும்.

6. இக்கழகத்திடம் கடன்பெற்றுக் கழகத்தில் அதே எளிய நடை முறைகளுடன் அதே வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.

7. இறுதியில் வருவது மாநில வீட்டுவசதி வாரியம். இந்நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தனியாருக்கு வீடுகட்டவும் மனைகளை அமைத்துச் சாலை, குடிதண்ணீர், வடிகால் வசதி, புதை சாக்கடை முதலிய வசதிகளோடும் மக்களுக்கு அளித்தது.

அண்மைக் காலத்தில் இதன் நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்துள்ளன. எல்லா நகரங்ளைச் சுற்றியும் வீடமைப்பதற்கென்று தனியார் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையில் இக்கையகப்படுத்தலிலிருந்து தப்புவதற்கென்று பெருந்தொகை, கைக்கூலியாகவும் கைமாறுகிறது. அத்துடன் வணிக நோக்கில் செயற்படும் இக்கழகத்திற்கு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்துவது முறைகேடு என்ற குரலும் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மனை அல்லது வீடு முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திப் பின்னர் மாதத் தவணைகளில் மீதித் தொகையைச் செலுத்துதல் என்ற அடிப்படையில் பொது மக்களுக்குக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் சொத்தை ஒப்படைக்கும் ஆவணத்திலுள்ள ஒரு கட்டுப்பாடு கட்டடங்களில் கட்டுமானம் தரமாயில்லை என்று மறுப்புரை கூற அவற்றைப் பெறுவோருக்கு உரிமை இல்லை என்பது. இது எப்படி இருக்கு?

அன்றியும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என்ற ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திப் போலிச் சான்றிதழ்களைப் வைத்து வீடு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தனித்தனி மனுக்கள் அளித்துக் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வீடு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் பத்து வீடுகள் வரை கிடைக்கிறது. உண்மையான ஏழைகளுக்கும் வீடு தேவைப்படுவோருக்கும் வீடுகள் கிடைப்பது அரிது.

மேற்கூறிய கடன் நிறுவனங்களில் செயற்பாட்டைத் தொகுத்து ஆய்ந்தால் பொதுமக்கள் கடன் பெற்று வீடு கட்டவோ கட்டிய வீட்டைத் தவணை முறையில் பெறவோ வேண்டுமென்றால் ஒன்று எச்.டி.எஃப்.சி.யை நாட வேண்டும் அல்லது வீட்டுவசதி வாரியத்தை நாட வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் நெருக்கப்படுகிறார்கள் என்பது பெறப்படும். அது மட்டுமல்ல! இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 85 பங்கு உலகவங்கி மூலதனத்தில் எச்.டி.எஃப்.சி. தொடங்கப்பட்டதென்பதும் மாநில வீட்டுவசதி வாரியத்தில் இப்போது பெருமளவு உலகவங்கி முதலீடு உள்ளதென்பதையும் கவனத்தில் கொண்டால் நாம் பெறும் விடை யாது? இவ்வாறு உலக வங்கியின் முதலீடு இவ்விரு நிறுவனங்களிலும் நுழைந்த பின்னர்தான் வீடுகட்டும் கடனில் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு வருமானவரி கணிப்பில் கழிவுண்டு என்ற விதி சேர்க்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வேளாண் நிலங்களில் வீடுகள் கட்டக் கூடாது என்று இரண்டாண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு உண்டு என்பதையும் கட்டட விதிகளில் சிக்கலானவற்றுக்கு அரசே விலக்கு அளித்து விடுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை விளங்கும்.

மறைமுகமாகவும் நேரடியாகவும் பூட்டப்பட்டுள்ள விலங்குளையும் அகற்றினால் இந்தியாவிலுள்ள பொதுமக்களாலும் எச்.டி.எஃப்.சி., வீட்டுவசதி வாரியம் போன்ற அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை அவற்றைவிடவும் சிறப்பாகவும் நல்ல தரத்துடனும் செய்ய முடியும். அதன் மூலம் இவ்வரசு நிறுவனங்களைப் போல் பல நூறு மடங்கு இந்திய மக்களுக்கு வீடுகட்டும் பணியில் சிறப்புடனும் வீறுடனும் ஈடுபட்டு நிறைவேற்ற முடியும்.

ஆனால் விலங்குகள் ஒடியும் நன்னாள் எந்நாளோ?

(21.10. 93 தினமணியில் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.)

18.6.07

வருமான வரி தேவையா?

இந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம் தான் தாராளமாக்கலின் விளைவு என்றால் அத்தகைய தாராளமாக்கலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

மக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதுமான தளை, வருமான வரியாகும். பொருளியலைத் தாராளமாக்கல் பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான குறைந்த பட்ச வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/-ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ்வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந்நிலையில் 1993-91ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் குறைந்த பட்ச வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இவர் ஆளும் பேரவைக் கட்சித் தொழிற்சங்கத் தலைவர் என்பது முக்கியம். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். இந்த ஆண்டும் இக்கோரிக்கை தொடர்கிறது. ஆனால் நம் நிதியமைச்சர் மன்மோகன் சிங் வருமான வரி வரம்பில் மாற்றமேதுமிருக்காது, வேண்டுமானல் மிகுதி வரியைக் (சர்ஜார்ஜ்) குறைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வருமான வரி தேவைதானா? இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை? வருமான வரி தொடரத்தான் வேண்டுமா? அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

நாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ, அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவ்வாறு வளர்ச்சியோ அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் ஏற்றுமதியாகும் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்படும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

1) வெள்ளையராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு ஓரு முற்போக்குச் சாயம் ஏற்றப்பட்ட பின்னர் தான் கெடுபிடிகள் தோன்றின. வருமானத்தில் 97.5 சதவீதம் வரை வரிவிதிக்கும் கொடுமை அரங்கேறியது. இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலி மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்குட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர்? எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கியது.

2) தனிமனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் லாபம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் தான். ஆனால் அவ்வாறு திரளுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்கை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைத்தது.

3) இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா? அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கிச் சமூகத்தின் அடித்தளம் வரை ஊடுருவி விட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ஓர் உலகப் பொருளியல்ச் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.

4) வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஓரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

5) வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனது நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமேயாகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்?

இன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத்தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணமாகும். தன் தலை நரைக்காமைக்கு சங்கப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று.

6) மத்திய அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டி வைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது.

ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது அவர்களை வெறுமே அச்சுறுத்தி அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். இதற்கும் வருமான வரித்துறை பயன்படுகிறது.

7) வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஓரே சிந்தனையே பெரும் சிந்தனையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம், வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர்குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.

8) வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஓத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஓரு காவலர் தொலைபேசியில் நின்று கொள்வார். முன் வாசல் பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர்மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவம் மத்திய காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.

தீவட்டிக் கொள்ளையின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று மக்கள் ஓதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம் தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் வேதனை.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தை ஆழ்ந்து அலசினால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடி உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வளவு தீங்குகளுக்கும் காரணமான இந்த வருமான வரியின் அளவுதான் என்ன? 1993-94 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இரூந்து வந்தது.

இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் சம்பளப் பட்டியலில் கையெழுத்திட்டுப் பெறும் ஊழியர்களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி இறக்குமதி உதவித்தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். அதுபோகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவு தான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.

வருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காகப் பொதுமக்களையும் பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஓளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில் நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.

எனவே, வருமான வரித்துறை முற்றாக ஓழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின் (தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்) பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஓழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.

″ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு.............. மக்கள் பொதுவாகத் தாம் திரும்பிய இடமெல்லாம் சாவையோ வரிகளையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று உணரும் நிலை வேண்டும்″ என்றார் நாகரிகத்தின் கதை என்ற புகழ் பெற்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று மேதை வில் டூராண்ட். இன்றைய இந்திய நிலைமைக்கு எவ்வளவு துல்லியமான விளக்கமாக இது அமைந்துள்ளது!

பின் குறிப்பு:-

வருமான வரித்துறை இப்பொழுது எளிய பெட்டிக் கடை உட்பட அனைத்துத் தொழில் மற்றும் வாணிக நிலைய உரிமையாளரையும் ஆண்டுக்கு ரூ. 1400/- வருமான வரியாகச் செலுத்தி ′′தேடுதல் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு′′ அறிவுரை வழங்கி அதற்கென ஓரு படிவத்தையும் வழங்கி வருகிறது. இது நம் மக்களின் அடிப்படைப் பொருளியல் உரிமையில் மிச்ச மீதியையும் பறிக்கும் ஓரு கடுமையான அச்சுறுத்தலாகும். நமது அமைதியான வாழ்வுக்கும் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விடப்பட்டுள்ள நேரடி அறைகூவலாகும். இவ்வறைகூவலை நாம் ஓன்றிணைந்து எதிர் கொண்டு முறியடிப்பது அனைத்து மக்களின் மன அமைதிக்கும் பொருளியல் வாழ்வுக்கும் இன்றியமையாததாகும்.

வரி செலுத்துவோர் சங்கத்தில் இணைந்து பயனடைவீர்.

(4-2-1991 தினமணி இதழில் வெளியான குமரிமைந்தனின் இக்கட்டுரை பொருளில் மாற்றமின்றி சில சொற்கள் மாற்றப்பட்டு பின்குறிப்புடன், திருநெல்வேலியிலிருக்கும் வரி செலுத்துவோர் சங்கத்தால் - பதிவு எண். 25/93 - துண்டறிக்கையாக வெளியிடப்பட்டது. தற்போது இங்கு வெளியிடப்படுகிறது.)

17.6.07

குமரிக் கண்ட அரசியல்

காலத்தின் சுவடுகள் - குழப்பத்தின் முடிவுகள்
சு.கி. செயகரனின் குமரி நில நீட்சி என்னும் நூலுக்கான எதிர்வினைகள் இந்த தளத்தில் இடம்பெறும்


குமரிக் கண்ட அரசியல் வலைப்பதிவில் காணப்படும் கருத்துகளில் சில இங்கே.

//குமரிக்கண்டம் பற்றிய அனைத்தும் தழுவிய ஒரு பெருநூல் எழுத வேண்டும், அதற்கான கருப்பொருட்களைத் தேட வேண்டும், அப்போது செயகரனின் குமரி நிலநீட்சி நூலில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கும் விடைகாண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலைப் படிப்பதையே தள்ளிப்போட்டு வந்தேன். ஆனால் ஒரு சூழலில் இந்நூலைப் படிக்க வேண்டி வந்தது. படித்த பின் தான் தெரிந்தது, நூலினுள் ஆசிரியர் தந்துள்ள செய்திகளே குமரிக் கண்ட கோட்பாட்டுண்மையை மேலும் உறுதியான தளத்தில் நிறுத்தப் போதுமானவை என்பது.//

//தமிழார்வலர்களும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தமிழறிஞர்களும் குமரிக் கண்டம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றையும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறியிருப்பவற்றையும் மட்டுமே பெரும்பாலும் தொகுத்துத் தந்துள்ளனர். செயகரனோ குமரிக் கண்டக் கோட்பாட்டை மறுப்பவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது பேரா.பண்டிதர் க.ப. அறவாணன் போன்று ஏற்றுக்கொள்வது போல் பாய்ச்சல் காட்டுபவர்களின் ஆக்கங்களில் ஈரெட்டாக இருப்பவற்றையும் வெறுமே தொகுத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே தன் கருத்துகளையும் பதிந்துள்ளார். அக்கருத்துகள் எதிலுமே அறிவியல் அல்லது புவியியங்கியல் சாயலே இல்லை. புவியியங்கியல் செய்திகள் என்று அவர் தந்திருப்பவை ஒன்றேல் காலங்கடந்தவை அன்றேல் அரைகுறையானவை, பொய்யானவை, ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. எனவே அவரது நூல் பற்றிய இத்திறனாய்வில் அவர் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மீதான திறனாய்வு ஒரு முகாமையான இடத்தைப் பெறும். அடுத்து அவரது போலி அறிவியல் - புவியியங்கியல் முக்காடு கிழித்தெறியப்படும்.//

//ஓர் எச்சரிக்கை! குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்துமாக்கடல் எனப்படும் குமரிமாக்கடலினுள் அகழ்வாய்வு செய்யும் வேண்டுகோளைத் தமிழார்வலர்கள் முன்வைக்குமாறு சீண்டுவதற்கென்றே குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பழித்துரைக்கும் இதுபோன்ற நூல்கள் வெளியிடப்படுகின்றனவோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கடல் அகழ்வு இன்றியே குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவிட முடியும். அகழாததால் குமரிக் கண்டக் கோட்பாடு நிலைக்காமல் போனாலும் தாழ்வில்லை. நம் மண் மீதும் கடல் மீதும் அயலவர் எவரும் மேலாளுமை செய்வதற்கு நம் ஆர்வக் கோளாறுகள் காரணமாகி விடக்கூடாது! கடந்த காலத்தை விட நம் எதிர்காலம் முகாமையானது. இதுவே நம் அனைத்து நடவடிக்கைகளின் நடுப்புள்ளியாய் அமைய வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே நான் வரலாற்றை அணுகுகிறேன். உலக வல்லரசியத்திலிருந்து உலக மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு கருவியாகவே நான் என் வரலாற்று வரைவை முன் வைக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன்.//

விதைக்காமல் "அறுவடை" நடைபெறுமா?

தமிழக அரசின் தளர்வில்லா நெருக்குதலால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளிலும் பிற கட்டடங்களிலும் மழை நீர் அறுவடை அமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. மழை நீரை அறுவடை செய்வதற்கான பயிராகிய மழைநீரைத் தான் இப்போது தமிழக மக்கள் எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் நிலைத் திணைகளாகிய தாவரங்களைப் போலவே வானத்தை நோக்கி நிற்கிறார்கள். தனித் தனிச் சமய வழிபாடுகள், கூட்டு வழிபாடுகள், வேள்விகள், நடத்துகின்றனர். கழுதைகளுக்கு, பருந்துகளுக்கு, மரங்களுக்கு மணம் நடத்திப் பார்க்கிறார்கள். ஆனால் மழைதான் பெய்யவில்லை. திரளும் மேகம் மேலே நின்று நம் மாநிலத்தைப் பார்த்துவிட்டு இடி, மின்னல் எனும் வழக்கமான முணுமுணுப்புகள் கண்சிமிட்டல்கள் கூட இன்றி அப்பால் நகர்ந்து விடுகின்றன. ஏன்?

காடுகள் அழிக்கப்பட்டது தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் காடுகள் மழைப் பொழிவில் ஆற்றும் பங்கு தான் என்ன? பொதுவாகக் கூறப்படுவது போல் மரங்களுக்கு மேகத்தையோ மழையையோ ஈர்க்கும் மந்திர ஆற்றல் கிடையாது. காற்றில் கலந்திருக்கும் நீராவியின் செறிவால் காற்றின் அழுத்தம் உயர்கிறது. நீராவியின் விகிதம் "ஈரிப்பு"(Hcemidity) அல்லது ஆவி அழுத்தம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட ஈரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றிலுள்ள ஆவி நீர்த்துளியாக மாறும். இதனைத் "துளிநிலை" என்பர். காற்றின் வெப்பநிலை உயருந்தோறும் "துளிநிலை"யும் உயரும். அதாவது குறைந்த வெப்ப நிலையில் துளி நிலையை ஏற்படுத்தம் ஈரிப்பு விகிதம் வெப்பநிலை உயர்ந்தால் துளிநிலையை ஏற்படுத்தாது. இந்த வகையில் காடுகள் காற்றின் வெப்ப நிலையை மட்டுப் படுத்துவதில் பங்காற்றுகின்றன. காற்றின் வெப்பம் உயருந்தோறும் நிலைத் திணைகள் தங்கள் இலைத்துளைகளின் வழி நீராவியை வெளியேற்றி அந்த வெப்பத்தைச் சமன் செய்கின்றன. காற்றில் ஏற்கனவே உள்ள நீராவியுடன் அது கடலைக் கடந்து வரும் போது சுமந்து வரும் நீராவியும் நிலைத் திணைகளால் வெளியிடப்படும் நீராவியும் அதனால் குறையும் வெப்பமும் துளிநிலையைத் தூண்டி மழைப்பொழிவு எளிதாகிறது.

காடுகள், ஒரு குளத்தில் அமைந்துள்ள மறுகால் போன்று செயற்படுகின்றன. பெருமழைகளின் போது குளத்தின் கொள்ளவுக்கு மேல் நீர் தேங்கி குளத்தை உடைக்காமல், உரிய நேரத்தில் மிகுதி வெளியேற்றிக் குளத்தை மறுகால் காப்பது போல் வெப்பம் மிகுந்து அதனால் காற்றில் துளிநிலை உருவானது தடைபட்டு அளவுக்கு மீறி நீராவி காற்றில் தங்கி அதன் விளைவாகப் பெரும் புயல்களும் பேய்மழைகளும் உருவாகி அழிவுகளை விளைவிக்காமல் காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது துளிநிலைக்குக் கொண்டு வந்து மழையைப் பொழிவிப்பதில் காடுகள் முதன்மைப் பணி ஆற்றுகின்றன. இதனால் நீண்ட வரட்சிகளும் பேய்மழைகளுமான பாலைவனங்களின் நிலைமை உருவாகாமல் காடுகள் தடுக்கின்றன.

இத்தகைய விளைவைத் தருவதற்கு கதிரொளி ஊடுருவ முடியாத அடர்காடுகளால் தான் முடியும். உயர்ந்தோங்கிய மரங்கள், அவற்றிற்கிடையில் உயரம் குறைந்த பல்வேறு வகைச் செடிகள், அவற்றைப் பின்னிப் பிணைந்து மரங்களின் உச்சி வரை படர்ந்து செல்லும் கொடிகள் என்ற நிலைத் திணைப் பன்மையம் இதனால் தான் சூழிலியர்கள் எனப்படும் இயற்கைச் சமநிலைக் காப்பாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.

காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது மழையாக்கும் காடுகள் வளர்க்காமல் வெறும் மழை நீர் அறுவடை அமைப்புகளை மட்டும் உருவாக்கினால் சீர்மை அழிந்த மழைப் பொழிவு பேய் மழைகளை உருவாக்கி அவ்வமைப்புகளை ஒரே நேரத்தில் அழித்துவிடும்.

எனவே பாதுகாக்கப்பட்ட காடுகளை நிலைப்படுத்த வேண்டும். மரங்கள், தோட்டப்பயிர்கள், எவையாயினும் காடுகளை அவற்றுக்காகப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். இன்று தோதகத்தி உட்பட அனைத்து வகை மரங்களையும் சமநிலத்தில் உருவாக்கி வரலாறு படைத்துள்ளனர் தமிழக வனத்துறையினர். ஆற்றுப் படுக்கைகளில் பொதுப் பணித் துறையின் துணையுடன் இவ்வருஞ்செயல் நிகழ்ந்துள்ளது. அனைத்து வகைத் தோட்டப் பயிர்களையும் பசுமைக் குடில்கள் மூலம் இயலச் செய்து மனித குலத்துக்கே வழிகாட்டியுள்ளனர் இசுரேலியர்கள். எனவே தமிழகத்திலுள்ள தரிசுநிலங்கள் அனைத்திலும் மரக்காடுகளும் பசுமைக் குடில் தொழில் நுட்பத் தோட்டங்களும் அமைப்பதில் பொருளியல் வலிமையுள்ள உள்நாட்டுத் தொழில் முனைவோரை ஈடுபடுத்தி முழு ஊக்குவிப்பையும் அரசு வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் அனைவரையும் சம நிலத்துக்குக் கொண்டு வந்து இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். மழைச் சீர்மை அழிந்து பஞ்சம் ஏற்பட்டு பஞ்சைகளாய், அடிமைகளால் நாட்டை விட்டோடுவதை விட திட்டமிட்ட மறுவாழ்வு உறுதியானது; தன்மானத்துக்குப் உகந்தது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் அவற்றின் காவல் ஊழியர் தவிர்த்த எவரும் நுழைவது மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் உயிர்த்துணையாகிய நீரைத் தரும் மழையைப் பொழிவிக்கும் ஒரு பொறியாக பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கருதினால் இது ஒரு கடும் தண்டனை என்று யாரும் கருத முடியாது.

மழைநீர் அறுவடை அமைப்புகளைக் கட்டுவதால் இயல்பு மீறிய பெருமழை நீரை அறுவடை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, பாறையைத் துளைத்து நீரை உறிஞ்சும் "உயர்" ஆழ்த்துளைக் கிணறுகளால் உறிஞ்சப்பட்ட நீரையும் மீண்டும் உட்செலுத்த முடியாது. நீரை வாங்கி உட்செலுத்துவதுடன் தன்னிடமும் வைத்திருக்கும் புரைமையுடைய நீர்கொள்ளி மண் வகைகளினுள் அல்லது அத்தகைய நீர்கொள்ளிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாறையடி நீர் கொள்ளிகளின் தான் மழைநீர் அறுவடை அமைப்புகள் மூலம் நீரைத் திரட்டி வைக்க முடியும். எனவே தமிழக்த்தை நிலத்தடி நீர் கொள்ளல் என்ற அடிப்படையில் நிலத்தடி மண்ணை முழுமையாக ஆய்வு செய்து மண்டலங்களாகவும் உள்மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிலும் மழைநீர் எளிதில் உட்சென்று, உறிஞ்சப்படும் நீரை மழைப் பொழிவால் எளிதில் மிட்கும் ஆழத்தை வரையறுத்து அதற்கு மிகாமல் துளைக்கிணறுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை மாநில அரசு நேரடியாகச் செயற்படுத்து முடியாது. உள்ளாட்சிகள் தாம் இதற்குப் பொருத்தமான அமைப்பு. அதுவும் உள்ளாட்சிகளுக்கும் மக்களுக்கும் இன்றிருப்பதை விட பலமுனைகளிலும் நெருக்கமான உறவு வேண்டும். எனவே மழைநீர் அறுவடை என்பது மழையே "விதைப்பது" விதைத்ததை முளைக்க வைப்பது, முளைத்ததை அறுவடை செய்து உரிய வகையில் திரட்டி வைப்பது, திரட்டியதை வீணாகாமல் பகுத்தறிவுடன் பயன்படுத்துவது ஆகிய பல உறுப்புகளைக் கொண்ட நடைமுறையாகும். அடிப்படையான இந்த ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளாமல் மழை நீர் சேமிப்பு அமைப்பு என்ற பெயரில் தமிழ் நாட்டு அரசு வடிவமைத்துக் கொடுத்துள்ள அமைப்பை உருவாக்குவது பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் தற்காலிகத் தொய்வடைந்த தொழிலகங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாகச் சுருங்கி விடும்.

(இப்போது தமிழக அரசு பிறப்பித்து நிறைவேற்றியிருக்கும் "தலைக்கவச ஆணை"க்கு இணையானது இது.)

அந்த ஆறடி நிலம் யாருக்கு?

"ஆறடி நிலம்" என்ற தலைப்பில் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்‎‎சுடாய் எழுதிய சிறுகதை உலகப் புகழ்பெற்றது. அந்தக் கதையின் தலைவனிடம் ஒரு பகலெல்லைக்குள் அவன் ஓடிச் சுற்றிவரும் நிலமெல்லாம் அவனுக்குச் சொந்தம் என்று கூறுகிறார்கள். அவன் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கதிரவன் மேலை வாயிலில் வீழ்வது வரை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான். இறுதியில் ஓடிக்கொண்டே விழுந்து உயிரை விட்டான். இப்போது அவனுக்குத் தேவை ஆறடி நிலம் தான் என்று கதை முடிகிறது.

இன்றும் இங்கே ஒரு சிலர் ஓடி ஓடி இறுதியில் ஆறடி இடம் தான் கிடைத்திருக்கிறது. அவர்கள் டால்சுட்டாயின் கதைத் தலைவனைப் போல் பேராசை கொண்டு ஓடியவர்களல்லர். குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்ட ஓர் இடம் வேண்டும்; அந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் ஓடினார்கள். இடம் கிடைத்துவிட்டது. அதில் ஆறு அடிக்குள் தான் வீடு கட்டவேண்டும் என்கிறார் ஒருவர். ஆறடி நிலம் என்பது வீடு கட்டுவதற்கு உகந்ததல்லவே. அதற்காக நாம் இந்த இடத்துக்கு அலையவில்லையே என்று கலங்கி நிற்கிறார் நம் கதைத் தலைவர்.

புரியவில்லையா? வீட்டுவசதி வாரியத்தில் பணம் கட்டிப் பதிந்து காத்திருந்து குலுக்கலில் சிக்கன வகை(E-Type) மனையைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறோம்.

இந்தச் ″சிக்கன வகை″ மனைகளின் பொதுவான அளவு நீளத்தில் 40 அடிகளும் அகலம் 16 அடிகளும் ஆகும். இந்த மனையில் முன்னால் 5 அடிகளும் பின்னால் பத்தடிகளும் திறவிடம் விட வேண்டும். நீளத்தில் மீதி இருப்பது 25 அடிகள். ஆனால் பக்கத்தில் பத்தடிகள் திறவிடம் விட வேண்டும். இது இந்த மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளித்த நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள விதி. மீதி இருப்பது ஆறு அடி தான். வீடு கட்டுவதற்கென்று ஆடி ஓடி அலைந்து திரிந்த நம் கதைத் தலைவருக்கு இப்போது நிரந்தர ஓய்வுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் வீட்டுவசதி வாரியத்தாரும் நகர ஊரமைப்பு இயக்ககத்தாரும்.

இந்த மனையில் முன்புறம் 5 அடி விட்டு முழு அகலத்துக்கும் 8¼ அடிக்கு 9½ அடி அளவில் ஒரு அறையும் 6 அடிக்கு 3¾அடியில் கழிவறையும் குளியலும் இணைந்த அறையும் வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. இது நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள மனைப்பிரிவு நிபந்தனைக்கு மாறானது. ஆனால் இந்த விதிக்கு தனக்கு மட்டும் வீட்டுவசதி வாரியம் விலக்குப் பெற்றுள்ளது.

இப்போது மனையையும் ஒற்றையறை வீட்டையும் பணம் கட்டி குலுக்கலில் பெரிய பரிசு அடித்து விட்டது என்ற மனத் திளைப்பில் பெற்ற நம் கதைத் தலைவர் ஒரு கடன் வாங்கி இன்னொரு அறை கட்டுவோம் என்று எண்ணி வரைபடம் ஒப்புதலுக்குக் கொடுத்தால் விதி மீறல் என்கின்றனர் நகராட்சியினர். முறையீடு செய்தால் மீண்டும் மீண்டும் திருப்பியனுப்பிவிடுகின்றனர் நகர ஊரமைப்பு இயக்ககத்தார். வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு மனையைப் பெற்றவருக்கு ஏன் வழங்கப்படவில்லை? நகராட்சி விதிப்படி மனிதர் வாழும் ஒரு அறை கட்ட குறைந்தது 8¼ அடி வேண்டும். இரண்டு சுவர்க் கனங்ளைச் சேர்ந்தால் 9¾ அடி தேவை. இந்த அகலமாவது கிடைக்குமாறு ஏன் மனையின் அளவை நிறுவவில்லை? அல்லது ஒப்பளிக்கப்பட்ட மனையின் அளவில் இந்த 9¾ அடி கிடைக்குமாறு மனைப்பிரிவு விதிகளை ஏன் வகுக்கவில்லை? அல்லது வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு ஏன் மனையைப் பெற்றவருக்கு விரிவு படுத்தப்படவில்லை? அவர் தனியாகக் கேட்கும் போது அது மீண்டும் மீண்டும் ஏன் மறுக்கப்படுகிறது?

வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் உயர் வருவாய்ப் பிரிவு, நடுத்தர வருவாய்ப் பிரிவு, கீழ்நிலை வருவாய்ப் பிரிவு, சிக்கனப் பிரிவு என்று நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் பரம ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட சிக்கன வகை மனைகளுக்குத் தான் இந்தச் சிக்கல். பிற வகைகளில் அவரவர் தேவைக்கு வீடுகட்டிக் கொள்ளும் அளவுக்கு மனைப் பரப்பு உண்டு. இந்தச் சிக்கன வகையில் அது இல்லை.

இன்னும் விந்தை என்னவென்றால் சொந்தப் பணத்தை வைத்து ஒப்புதல் பெறாமல் வீடு கட்டுவோரை யாரும் தடுப்பதில்லை. கடன் தேவைப்படும் உண்மையிலேயே ஏழையான மக்களுக்குத் தான் இந்த ஆறடி நிலம். ஏழைகளுக்கு வாழ்வளிப்பது என்ற பெயரில் அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்பதை மிகத் துல்லியமாகத் தெளிவுபடுத்தும் ஒரு சிறந்த குறியீடு இந்த ஆறடி நிலம்.

(இக்கட்டுரை 1990களில் எழுதப்பட்டது
.)

5.6.07

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 5

இந்திய அரசியலில் தலைமையமைச்சருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கும் உள்ள முரண்பாடு விடுதலையடைந்த இந்தியாவின் தொடக்க நாளிலிருந்தே தொடர்வது. நேரு-பட்டேல் முரண்பாடு தொடங்கி வாசுபேய்- அத்துவானி வரை இது முடிவடையவில்லை. அது போல் முகலாயர்களின் தலைநகராகிய பழைய தில்லியாயினும் இன்றைய புதுதில்லியாயினும் தந்தையை மகன் கொல்வது, உடன்பிறந்தாரைக் கொல்வது, மகனைத் தாயும் தாயை மகனும் கணவனை மனைவியும் கொல்வது பற்றிய செவிவழிச் செய்திகளை நாம் அறிகிறோம். இவ்வளவு இழிவில்லையாயினும் நேருவுக்கும் மொரார்சி தேசாய்க்கும் இடையிலான போட்டியை திசைதிருப்ப வேண்டியும் மொரார்சியை, அவர் பொறுப்பிலிருந்த நி‌தியமைச்சகத்தில் அவர் செயற்பாடுகளால் பொதுவாக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பைத் தணிக்கவும் அதே போன்று மாநிலங்களில் நிலவிய உட்கட்சியிப் பூசல்களைத் தடம் மாற்றவும் காமராசர் திட்டம் என்பது வகுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பதவியிலிருக்கும் மூத்த கட்சித் தலைவர்கள் பதவியைக் கைவிட்டுக் கட்சிப் பணிக்கு வர வேண்டும். காமராசர் தான் வகுத்த ‌திட்டத்தின் படி தானே முதலில் பதவி விலகினார். அதே நேரத்தில் அவர் அனைத்திந்திய பேரவைக் கட்சிக் குழுவின் தலைவராக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வில் அவரது கட்சிப் பற்று என்று கூறப்படும் கட்சி வெறியும், அதாவது கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்காத மனப்பான்மைக்கு உள்ள அதே அளவு பங்கு அன்றைய இந்திய மற்றும் பேரவைப் கட்சியின் அரசியல் சூழலுக்கும் உண்டு.

பின்னர் நேரு மறைந்தார். இப்போதும் தலைமையமைச்சர் பதவியை மொரார்சி விரும்பினார். ஆனால் கட்சியின் பெரும்பான்மையினர் அதை விரும்பவில்லை. எனவே காமராசர் உரிய வகையில் "காய்களை நகர்த்தி" நேர்மையும் எளிமையும் மிக்கவர் என்று பெயரெடுத்த லால்பகதூர் சாத்திரியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அவர் காலத்தில் உணவு விளைச்சல் குறைவாலும் வழக்கமான இறக்குமதியை நிறுத்தியதாலும் விடுதலை பெற்ற இந்தியா அதுவரை கண்டறியாத பஞ்சத்தால் மக்கள் வாடினர். கிழமைக்கு ஒருநாள் பட்டினி கிடக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறி அதன் மூலம் மக்களிடம் நற்பெயர் பெற்ற வரலாற்று விந்தை இந்தியாவில் அரங்கே‌‌றியது. இந்தப் பின்னணியில் புகுத்தப்பட்ட ''பசுமைப் புரட்சி''யும் உழவர்கள் மீது பூட்டப்பட்ட விலங்குகளும் இன்னும் உடைபடவில்லை. இந்திய வேளாண்மை இழி தொழிலாக்கப்பட்டது. வேளாண் குடியினர் தொழிலிலும் தீண்டத்தகாதவராக்கப்பட்டனர்.

தன்னால் பதவியில் அமர்த்தப்பட்டவர், தனக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்று எதிர்பார்த்த காமராசருக்கும் லால்பகதூருக்கும் முரண்பாடுகள் தோன்றின. அந்த நேரத்தில் இந்திய-பாக்கித்தான் போரில் அமைதிப் பேச்சு நடத்த சோவியத்து நாட்டின் தாசுக்கண்டு சென்ற லால்பகதூர் அங்கு மாரடைப்பில் உயிரிழந்தார். அது ஒர் அரண்மனைக் கொலை என்று எதிர்க்கட்சியினரும் லால்பகதூரின் மனைவியும் குற்றக் சாட்டினர்.

மீண்டும் மொரார்சி தலைமையமைச்சர் பதவிக்கு ஆயத்தமானார். காமராசர் தன் முயற்சியால் நேருவின் மகளாகிய இந்திரா காந்தியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அரசர்களை உருவாக்குபவர் (கிங்மேக்கர்) என்ற தன் பட்டத்தை அதன் மூலம் அவர் உறுதி செய்தார். இந்த உச்சியை அடைந்த அன்றே அவரது வீழ்ச்சியும் தொடங்கியது. தன் கண் முன்னால் தன் தலைவரின் அரவணைப்பில் வளர்ந்தவர் தானே, தனக்குக் கட்டுபட்டு நடப்பார் என்று எதிர்பார்த்தார் காமராசர். ஆனால் தன் ஆட்சியில் எவரும் தலையிடுவதை இந்திரா விரும்பவில்லை. எனவே பேரவைக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் அவருக்கும் முரண்பாடுகள் அரும்பி வளர்ந்தன.[1] இந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. பேரவைக் கட்சி காமராசரின் பழைய நெருங்கிய தோழரான சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது. இந்திரா மராட்டிய மாநிலத்தின் ஆளுநராயிருந்த வி.வி. கிரியை நிறுத்தியதோடு கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டளைக்குப் பணியாமல் மனச்சாட்சியின் படி வாக்களிக்கலாம் என்று அறிவித்தார். பதவியிலிருப்போர் சொல்லுக்குத் தானே எப்போதும் மதிப்பு! கிரி குடியரசுத் தலைவரானார். பேரவைக் கட்சியினுள் இந்திராவின் பின்னணியின் நின்ற இண்டிகேட் என்றும் மூத்த தலைவர்களைக் கொண்ட சிண்டிகேட் என்றும் பிளவு உறுதியானது. கட்சியின் நடவடிக்கையில் இந்திரா பேரவை என்ற கட்சி உருவானது. பதிவுகளில் இந்திரா தலைமையிலான கட்சி இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(இந்திரா)எனவும் மூத்த தலைவர்களின் பிரிவு இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(நிறுவனம்) எனவும் அழைக்கப்பட்டன. இது நடந்தது 1969இல்.

இதற்கிடையில் தமிழகத்தில் புரட்சிகரமான கொள்கைகளைப் பேசித் தலைமையோடு முரண்பட்டு தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாத்தரை தன் அளவுகடந்த பதவி வெறியால் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுத் தன் கட்சியின் அறிவிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து கொள்கை‌‌‌‌‌‌யில்லாக் கூட்டணியை முதன்முதல் இந்தியாவில் தொடங்கி வைத்தார். அண்ணாத்துரையால் குல்லூகப் பட்டர் என்று ஏசப்பட்ட ஆச்சாரியாரும் ஆச்சரியாரால் தன் முதல் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்ட பொதுமைக் கட்சியினரும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிக்கட்சியாக முதன் முதலில் விடுதலை பெற்ற பின் தமிழகத்தில் பேரவைக் கட்சியில்லாத ஆட்சி அமைத்தது. இது 1967இல் நடைபெற்றது. ஆங்கிலர் ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்த போது தலைமை ஆளுநர் (கவர்னர் செனரல்) பதவியை மவுண்டு பேட்டன் கோமகனிடமிருந்து பெற்ற தன்னை ஒதுக்கிவிட்டு இராசேந்திரப் பிரசாத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்கித் தன்னை இழிவுபடுத்திய பேரவைக் கட்சியின் மீதும் முதலமைச்சாராயிருந்த தன்னை வெளியேற்றிவிட்டு அந்த அரியணையில் அமர்ந்த காமராசரின் மீதும் ஒரே நேரத்தில் பழி தீர்த்துக் கொண்டார் ஆச்சாரியார்.

பேரவைக் கட்சி தமிழகத்தில் தோல்விடைந்ததற்கும் தி.மு.க.வெற்றி பெற்றதற்கும் காமராசருக்கு அடுத்து முதலமைச்சராயிருந்த பேரவைக் கட்சியின் பத்தவச்சலத்தின் முரட்டுத் தனம் ஒரு ‌காரணம். அதனால் தான் தி.மு.க. தன்னை வளர்த்துக் கொள்வதற்கென்று அறிவித்த இந்தி எதிர்ப்பு இயக்கம் அரசுக்கும் மக்களுக்குமான போராக வடிவம் பெறத் தொடங்கியது. தொடங்கி வைத்த தி.மு.க.வினரும் பிற கட்சித் தலைவர்களும் மக்களை அமை‌திப்படுத்த வேண்டியிருந்தது. உண்மையில், போராட்டம் முனைப்படைந்ததும் அதைக் கண்டு அஞ்சிய தி.மு.க.தலைமைகள் ஒடி ஒளிந்து கொண்டன. ஆனால் தேர்தல் அறுவடையை விட்டு வைக்கவில்லை. அந்த இந்திப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவரான பெ.சீனிவாசன் காமராசரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்தார். தேர்தலில் முதன்முதலில் தோல்வியைச் சந்தித்தார் காமராசர். இதன் பின்னர் தான் பேரவைக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிற மாநிலங்களில் இந்திராவுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ ஆதரவு இருந்திருக்கலாம். ஆனால் தமிழகத்தில் முற்றிலும் காமராசரைப் பின்பற்றிய பழைய பேரவை எனப்படும் நிறுவனப் பேரவைக்கே முழுமையான ஆதரவு இருந்தது. அண்ணாத்துரைக்குப் பின் பதவிக்கு வந்த கருணாநிதி பாராளுமன்றத்தில் இந்திராவுக்கு முழுப் பெரும்பான்மை இல்லாத சூழலைப் பயன்படுத்தித் தன் ஆதரவை நல்கி, தான் நடத்திய ஊழல்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டார். இவ்வாறு பிறரின் அருளில் ஆட்சி புரிவது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. எனவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு ஆணையிட்டார். தி.மு.க பதவியேற்றதும் முதல் ஆறு மாதங்கள் வரை பொறுத்திருந்து புதிய ஆட்சியின் சீர்த்துவத்தைப் பார்த்த பிறகு தான் கருத்துக் கூறுவோம் என்று அறிவித்த காமராசர் கருணாநிதியின் ஊழல்களைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். பேரவைக் கட்சி மீது என்னென்ன குற்றச்சாட்டுகளைத் ‌தி.மு.க. சுமத்தியதோ அவற்றை இன்றும் முனைப்பாகச் செய்தது தி.மு.க. அத்தடன் ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த பேரவைக் கட்சியினர் புதிதாகச் சொத்துகளைச் சேர்த்தது பொதுமக்கள் கண்களுக்குப் பளிச்செனத் தெரியவில்லை. ஆனால் அன்றாடங் காய்ச்சிகளாக இருந்த தி.மு.க.வினர் திடீரென மகிழுந்து வாங்கியதும் சிக்கலை உணர்ந்த அண்ணாத்துரை, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மக்கள் மகிழுந்து அன்பளிப்பு விழா என்று ஊழலுக்கு விழா எடுத்தார். இதனால் எல்லாம் மக்களின் வெறுப்பை ஈட்டத் தொடங்கியதால் கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலைப் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தத் திட்டமிட்டார். தமிழ்நாட்டின் மொத்தப் பாராளுமன்றத் தொகுதிகளும் இந்திராவுக்கும் மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளும் கருணாநிதிக்கும் என்று தொகுதிப் பங்கிடு செய்தனர். 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 183ஐ அதாவது 78 நூற்றுமேனி இடங்களைப் பெற்று தி.மு.க இந்தியாவிலேயே வரலாறு படைத்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் கருணாநிதி தமிழகத்தின் அடிப்படை உரிமைகளான காவிரி நீர், கச்சதீவு ஆகியவற்றை விலை பேசியது. இந்திராகாந்தி தன் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னோடியாக வங்கிகளை அரசுடைமையாக்கல், மன்னர் மானியம் ஒழித்தல் போன்ற ''நிகர்மை''(சோசலிச)த் திட்டங்களை அறிவித்து பொதுமை, நிகர்மை கட்சியினரையும் இளம் துருக்கியர் என்ற பெயரில் பேரவைக் கட்சியினுள் இருந்த நிகர்மைச் சார்பினரையும் தன் பால் ஈர்த்துக் கொண்டார்.

பொதுமைக் கட்சி ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை அமைப்பதைத் திட்டமாகக் கொண்டது. சோவியத் உருசியாவைத் தலைமையிடமாகக் கொண்டது. நிகர்மைக் கட்சி அதே இலக்கை அமைதி வழியில் எய்துவது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டது. ஆனால் இரண்டின் செயற்திட்டங்களும் ஒன்றே.

1. நிறுவனங்களை அரசுடைமையாக்குதல்,
2. தொழிலாளர்களுக்குக் கூடுதல் கூலி, சலுகைகள் வழங்குவது,
3. அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசே எடுத்துக் கொள்வது,
4. நில உச்சவரம்பு கொண்டு வருதல்,
5. நிலமனைத்தையும் உழவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பவையும்
பிறவும்.

இத்திட்டங்களைப் பின்பற்றிய சோவியத் நாடு இன்று இல்லை. அதன் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளும் சீனமும் பாதை மாறிவிட்டன. அமெரிக்கா இத்திட்டத்தைத் தன் நாட்டில் கடைப்பிடிக்கவே இல்லை. ஆனால் உலகை இன்று ஆட்டிப் படைக்கும் வல்லமையை அது பெறக் காரணமாயிருந்த முதலாளிய விளைப்பு முறையை ஏழை நாடுகள் கடைப்பிடித்தால் தன் ஆதிக்கத்துக்கு அறைகூவல் வரும் என்பதால் தான் அந்நாடுகளில் தன் கட்டுப்பாட்டில் நிகர்மைக் கட்சியை வளர்ப்பதுடன் எண்ணற்ற பொதுமைக் கட்சிப் பிரிவுகளையும் பெரும் செலவில் ஏழை நாடுகளில் பேணி வருகிறது. நிகர்மை அல்லது பொதுமைக் கோட்பாட்டைப் பின்பற்றிய நாடுகள் தோல்வியடையக் காரணம் பெரும்‌பாலரான பொதுமக்களின் பொருளியல் முயற்சிகளை நசுக்கிவிட்டு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களுமான ஆட்சியாளர்களே அனைத்தையும் கொள்ளையடித்தது தான். சோவியத்தும் நம் நாடும் சான்றுகள். அத்துடன் மாநிலங்களின் பொருளியல் அடிப்படைகள் நடுவணரசின் கைக்குச் சென்றுவிடுவதால் கூட்டாட்சிக் கோட்பாடு மீறப்படுகிறது. எனவே பொருளியலில் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் பொருளியல் உரிமைகளை மீட்பது தான் நம் நாட்டு மக்களின் மீட்சிக்கான ஒரே வழி.

1967இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற காமராசர் அதே ஆண்டு இயற்கை எய்திய நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினரும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காகப் போராடிய திருவிதாங்கூர் தமிழ் நாடு பேரவைக் கட்சியின் தலைவராக இருந்து பின் தன் கட்சியைப் பேரவைக் கட்சியோடு இணைத்தவருமான குமரித் தந்தை எனப்படும் திரு.ஏ.நேசமணி அவர்கள் காலமானதால் வந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

குமரி மாவட்டத்தில் சாணார்களாயிருந்து நாடார்கள் என்ற புதுப்பெயருடன் புதுச் சாதியாக உருவெடுத்த மக்களும் பிற சாதியினர் அனைவரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளனர். தீண்டத்தகாதவர்களாயிருந்து தம் உழைப்பின் மூலம் முன்னேறி மேனிலையடைந்த நாடார்களுக்கும் பிறருக்கும் உள்ள முரண்பாடே அங்கு முதன்மை முரண்டாக இருந்தது. ‌திருவிதாங்கூர் தமிழர் போராட்டம், திராவிட அரசியல் ஆகியவற்றின் பயனாக இவ்விரு முரண்பட்ட மக்கள் குழுக்களும் பண்டைய முரண்‌பாடுகளை மறந்து நெருக்கமடைந்து வந்தனர். சாதிக்கு வெளியே ஒரு விரிந்த பார்வை, அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வு என்று அவர்களது மனப்பான்மை மேம்பட்டு வந்தது. இந்தக் கட்டத்தில் தன் சாதி மக்கள் தான் உறுதியான தேர்தால் அடித்தளம் என்று நினைத்து காமராசர் இங்கு போட்டியிட்டார். தமிழகத் தலைவராயிருந்து இந்தியத் தலைவராக உயர்ந்து விட்ட காராசர் இதன் மூலம் ஒரு மாவட்டத் தலைவராகத் தாழ்ந்துவிட்டார் என்று இத்தேர்தல் நேரத்தில் ஒர் அரசியல் நோக்கர் கூறியது முற்றிலும் உண்மை. காமராசரின் அரசியல் வாழ்வில் அவர் சந்தித்த வீழ்ச்சிகளில் அவராகவே ஏற்படுத்திக் கொண்ட இந்த வீழ்ச்சி தான் மிகப் பெரியது.

தமிழக அரசியலில் தொகுதி மக்களில் பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தும் சாதி அரசியலைத் தொடங்கி வைத்தவர் காமராசர் என்று எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தி.மு.க. குற்றம் சாட்டியதுண்டு. (தான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை தானே கடைப்பிடிப்பதும் தன் தவறுகளுக்கு மறுப்பாகப் பிறர் செய்யும் அதே தவற்றைச் சுட்டிக் ‌காட்டுவதும் கருணாநிதியின் கூச்சமற்ற இயல்பு) அதை ஐயமின்றி இச்செயல்மூலம் நிறுவினார் ‌காமராசர். அது மட்டுமல்ல, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்லாமலும் மக்கள் தொண்டாற்ற முடியும் என்று வருங்காலத் தலைமுறையினர்க்குத் தன் செயல் மூலம் தானே எடுத்துக்காட்டாக வரலாறு தனக்குத் தந்த ஓர் அரிய வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

தான் அதிகாரத்திலிருந்த காலத்தில் குமரி மாவட்டத்தின் மீது காமராசர் ஒரவஞ்சவையாக நடந்து கொண்டார் என்று குமரி மாவட்ட மக்கள் கருதினர். குமரி மாவட்ட நாடார்களுக்குத் தன் அமைச்சரவையில் ஒர் இடம் அல்லது நேசமணிக்குத் தில்லியில் ஓர் அமைச்சர் பதவி வாங்கித் தர வேண்டுமென்று விரும்பினர். சாதி அடிப்படையில் அமைந்த குமுகத்தில் இந்த எதிர்பார்ப்பைக் குறை கூறுவதற்கில்லை. இவற்றில் எதையும் செய்யாததைத் தவறென்று கூற முடியாது. ஆனால் பல நிலைகளிள் நேசமணியை இழிவுபடுத்தினார் என்ற குமுறல் குமரி மாவட்ட மக்களுக்கு உண்டு. அதனால் தான் வாழ்ந்த காலத்தில் நேசமணியை இழிவுபடுத்தியவர் இன்று பதவிக்காக அவரது கல்லறை நிழலில் ஒதுங்குகிறார் என்று எதிர்க்கட்சியினர் தேர்தலில் போது குற்றம் சாட்டினர். இவ்வளவு இருந்தும் குமரி மாவட்ட நாடர்கள் நம் சாதிப் பெரியவர், நம்மை நம்பி, நம்மை நாடி வந்துவிட்டார் என்று பெருந்தன்மையுடன் ''அப்பச்சி'' என் றுசெல்லப் பெயர் சூட்டி தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். ஆனால் நெருங்கி வந்த முரண்பட்ட இரு சாதிக் குழுவினரும் இப்போது பழைய பகையை நிலைக்குத் திரும்பினர். அவர்களிடையில் துளிர்விட்டுக் கொண்டிருந்த பரந்த பார்வை, அரசியல் விழிப்புணர்வு, உலகப் புரிதல் அனைத்தும் சாதிவெறியின் முன் கருகிப்போயின. இதன் மூலம் அதிகாரத்தில் இருந்த காலத்திலும் அதை இழந்த காலத்திலும் அவர் குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் செய்த தீங்கையும் .இரண்டகத்தையும் வரலாறு மன்னிக்கவே செய்யாது. அது மட்டுமல்ல 1962 வரை நாயக்கர்களைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட விருதுநகர்த் தொகுதியில் அம் மக்களின் முழு ஆதரவேபொடு வெற்றி பெற்று வந்தவர், தான் தோற்றது அரசியல் சூழலின் மாற்றத்தால் தான் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்று வாதிட்டால் அவரது அரசியல் மேதமை கேள்விக்குள்ளாகிறது. தேர்தல் வெற்றியே அவரது குறிக்கோள் என்றால் அவரது கொள்கை உறு‌தியும் கேள்விக் குள்ளாகிறது.

இன்று காமராசரின் ஆட்சியை மீட்போம் என்று கூறுகிறவர்களுக்குச் சில உண்மைகளைக் கூறுவது இங்கு இன்றியமையாததது. இன்றைய இந்தியாவின் சீர்கேடுகளின் வேர் மூலம் காந்தியாரிடமிருந்தே தோன்றுகிறது. காந்தியும் நேருவும் எல்லாத் துறைகளிலும் எதிரெதிரான கண்ணோட்டம் உள்ளவர்கள். காந்தி பழமையைப் போற்றுபவர்; நேரு புதுமை நாடுபவர். அப்படியிருந்தும் தனக்குப் பின் பேரவைக் கட்சித் தலைவராக, இந்தியாவின் தலைமையமைச்சராக நேருவைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? நேருவின் உறுதியற்ற மனப்பாங்கு அவரது மெலிவு. தனது பதவி, உயர்நிலை ஆகியவற்றுக்கு அறைகூவல் வருமாயின் எவருடைய நெருக்குதலுக்கும் பணிந்து விடும் அவரது இயலாமை ஆகியவையே வெளித்தோற்றத்தில் புதுமை விரும்பிகளை ஈர்ப்பதற்கும் நடப்பில் பழமையைக் காப்பதற்கும் பொருத்தமான தேர்வு என்று காந்தியார் முடிவெடுத்தார். முதற்கோணல் முற்றும் கோணல். உலகில் எல்லா வளமும் மிக்க நாடாயிருந்தும் 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் உலகின் கடைக்கோடியில் நிற்கும் நாடாக இந்தியா தேய்வதற்கு இது தான் காரணம். இந்தத் தேய்வை நிரப்புவதற்கோ மாற்றியமைப்பதற்கோ இன்று நாட்டில் அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ தலைவர்களோ கோட்பாடுகளோ இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. அவற்றை உருவாக்குவது இளந்தலைமுறையினரின் தலை மீது காலம் சுமத்தியுள்ள கடமை.

தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வரலாற்று வரைவென்பது கடந்த காலத்தை நோக்கியதல்ல. எதிர்காலத்தைக் குறித்து நிற்பது. அது கடந்த காலத்தில் நாமும் நம் முன்னோர்களும் செய்த அருஞ்செயல்கள், செய்த தவறுகள், அவர்கள் கூறிய கருத்துகள், வகுத்த கோட்பாடுகள், அவை உருவான சூழல், இன்று நேர்ந்துள்ள சூழல் மாற்றம், அதற்கேற்ப கருத்துகளிலும் கோட்பாடுகளிலும் தேவைப்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு நிகழ்காலகத்திலுள்ளவர்களுக்கும் எ‌திர் காலத் தலைமுறையினருக்கும் வழி காட்டுவதாயிருக்க வேண்டும். வரலாற்று வரைவாளனது முடிவுகள் மீது அனைவருக்கும் உடன்‌பாடின்றிப் போகலாம். அவை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் மு‌காமையான தரவுகள் மறைக்கப்படாமல் தரப்படுதல் இன்‌‌றியமையாதது. வருங்காலத்தவர் அந்தத் தரவுகளிலிருந்து தாமே முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு; அதாவது அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. தொலைநோக்கு, வருவனவற்றை முன் கூட்டியே ஆய்ந்த‌‌றிவதும் அவ்வாறு அறிந்தவற்றுக் கேற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்வதும் அவனது இயல்பல்ல. விதிவிலக்கான அத்தகையவர்களின் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதோடு அவர்களை ஏளனம் செய்வதும் தண்டிப்பதும் கூட அந்த விலங்கின இயல்பு. ஆனால் மேற்கொண்டு எப்பக்கமும் நகர முடியாத நெருக்கடிகள் வரும் போது அத்தகைய முன்னறிவுடையோர் கருத்துகளைத் தேடி அவர்கள் அ‌‌றிவுரையைப் போற்றுவதும் அதன்படி நடக்க முயல்வதும் அவனது ''பகுத்தறிவு''. அப்போது கூட பண்டை அறிஞர்கள் கூறியவற்றை அறிந்து வைத்துக் கொண்டு தாம் கண்டறிந்தவையாகப் பொய்யுரைத்து ஏமாற்றுபவர்களை பெரும்பாலும் நம்பிச் செல்வதும் உண்டு. இவ்வாறு வரலாறு என்பது வளைவு நெளிவுகள் நிறைந்த ஒரு சிக்கலான ‌பாதை. அதற்குச் சரியான வழி காட்டியாக நின்று உதவுவது விருப்பு வெறுப்பற்ற, உண்மைகளை மறைக்காத ஈவு சாய்வற்ற வரலாற்று வரைவுதான்.

காமராசரைப் பற்றிய இந்த அலச‌‌லில் அவரிடம் உள்ள குறைகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்களில் தனித்து உயர்ந்து அடித்தள மக்களுடன் இணைந்து நிற்கும் பெருமை மிகு தலைவர் ‌காமராசர் என்பதில் ஐயமில்லை. வரலாறு அவரை மறக்காது.

அடிக்குறிப்பு:

[1] காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3 இல் அடிக்குறிப்பு [1] காண்க.

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 4

காமராசரின் கல்விப் பணியையும் அதனை நிறைவேற்றியதில் அவர் கடைப்பிடித்த உத்தியையும் பார்த்த நாம் அவரது தொடர்ந்த அரசியல் செயற்பாடுகளைப் பார்ப்போம்.

சென்னை மாகாணம் என்று ஆங்கிலர்களால் பெயர் வைக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னடம். மற்றும் மலையாளம் பேசும் மக்களைக் கொண்ட கணிசமான பகுதிகளைத் தன்னகத்தே கொண்டதுமான தமிழ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டு பிரிந்து சென்றதும் மலையாள, கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சியோடு மலையாளப் பகுதிகளைச் சேர்த்துக் கேரளம் என்றும் மைசூர் மாகாணத்தோடு கன்னடப் பகுதிகளைச் சேர்த்து கர்னாடகம் என்றும் புதிய மாநிலங்களாக வடிவெடுத்த பின்னும் தமிழகம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்படுவதிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான வேட்கை தமிழக மக்களுக்கு இருந்தது. அதனை ஒரு வேண்டுகையாக வைத்து காமராசரின் ஊராகிய விருதுநகரையும் அவரது சாதியாகிய நாடார் சாதியையும் சேர்ந்த சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு வேண்டுகை(கோரளிக்கை)ப் பட்டியல் போட்டுக் கொடுத்துப் பின்னணியில் நின்றவர்கள் பொதுமைக் கட்சியினர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததும் முதன்மையானதும் தமிழ்நாடு பெயர் மாற்றமாயினும் பொதுமைக் கட்சியின் பொதுவான அனைத்துத் திட்டங்களின் நிறைவேற்றங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இது பொதுவாக எவருக்கும் தெரியாது.

சங்கரலிங்கனாரின் குடும்ப வாழ்க்கை‌‌‌‌‌‌யில் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்ச்சியின் விளைவாக அவருக்கும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், உறவினர்களுக்கும் பிளவு ஏற்பட்டு நெடுநாள் தனி வாழ்க்கையின் இறுதியில் நம் பண்டை மரபின் படி வடக்கிருத்தல் என்ற உத்தியாக இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை அவர் மேற்கொண்டிருப்பார் என்பது மக்கள் செங்கோல் என்ற மாதிகை(மாத இதழ்)யின் சங்கரலிங்கனார் சிறப்பிதழில், குழந்தைப் பருவம் முதல் அவராடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சாலினி இளந்திரையனார் எழுதிய கட்டுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் அவர் பெரும்பாலும் எஞ்‌‌‌சிய வேண்டுகைகளுக்காகத் தொடர்ந்து ''வடக்கிருந்து'' உயிர் துறந்திருப்பார் என்று உறுதியாகக் கருத இடமிருக்கிறது. வெறும் பெயர் மாற்றங்களும் சிலை வைப்புகளும் மண்டபங்கள் கட்டுவதும் மொழிக்கு அரசியல் சட்டத்தில் சிறப்பிடம் கொடுப்பதிலும் அதனைச் செவ்வியல் மொழி என்று ஏற்றுக் கொள்வதிலும் மட்டும் ஒரு மக்கள் குழு மேம்பாடடைந்துவிடாது என்பது உண்மை தான். அதே நேரத்தில் பொதுமைக் கட்சியினர் வைத்திருந்த, இன்றும் வைத்திருக்கும் குறிக்கோள்கள் ஒரேயடியாக அல்லது ஒரே படியில் எய்தக் கூடியவையல்ல என்பதையும் அதற்குப் பல படிகளைக் கொண்ட சீரிய திட்டமும் தேவை என்பதையும் கருதியே அவ்வாறு கூறினோம்.

சங்கரலிங்கனாரின் தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை நிறைவேற்றப்பட்டு அவர் பிற வேண்டுகைகளை முன் வைத்து உயிர் துறந்திருந்தாலும் இன்று சங்கரலிங்கனாரின் சாவுக்குப் காரணமான கொலைகாரர் என்ற வரலாற்றுக் கறை காமராசருக்கு ஏற்பட்டிருக்காது. அவரது இந்தச் செயலுக்குக் காரணம் ஒரே ஊர், ஒரே சாதியினரிடையில் வழக்கமாக உள்ள நட்புணர்வு, பொறாமை உணர்வுகள் ‌காரணமாயிருக்க முடியாது. இன்னொரு முகாமையான காரணமும் இருக்க வேண்டும். தூய நேரிய அர‌‌‌சியல் வாழ்வு வாழ்ந்தவரான ‌காமராசரிடம் இருந்த மாபெரும் குறை அவரது கட்சி வெறியாகும். பொதுமைக் கட்சியினரின் பிடியில் இருந்த சங்கரலிங்கனாரை ஒருமுறை சந்தித்துப் பேசக் கூட முன்வராத காமராசரின் முரட்டுப் பிடிவாத்துக்கு அவரது இந்தக் கட்சிவெறியே காரணமாகயிருக்கக் கூடும்.

மொழியடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப்பட்ட போது திருவிதாங்கூரில் இருந்த தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு சேர வேட்கை கொண்டு போராடினர். திரவிதாங்கூர்-கொச்சியை ஆண்ட வெறியர்களின் கொடுங்கோன்மைக்கும் கொலைவெ‌‌றிக்கும் ஈடுகொடுத்து வெற்றிக் கனியைப் பறிக்க இருந்த வேளையில் தேரிகுளம், பீர்மேட்டுப் பகுதியைப் பற்றி ''குளமாவது மேடாவது'' என்ற இழிபெயர் பெற்ற சொற்றொடர், அயல் மாநிலங்களைப் பேரவைக் கட்சி ஆண்டதாலும் தன்னால் ம‌திக்கப்படும் கட்சித் தலைவர்களை வங்கத்தின் பி.சி.இராய் போன்று எதிர்த்து நிற்கத் துணியாத, தலைமைக்குக் கட்டுப்பட்ட காமராசரின் மனநிலையின் வெளிப்பாடு தான் என்று தோன்றுகிறது. எல்லாம் இந்தியாவினுள் தாமே இருக்கின்றன என்பது வெறும் மூடுதிரை என்றே தோன்றுகிறது. வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. வெற்றி பெற்றதற்குக் காரணம் தன் அரசியல் போட்டியாளரான சத்தியமூர்த்தியின் மாணவரும் அவரைவிட வலிமையாகத் தன் நேரடி அரசியல் எதிரியாக வளர்ந்துவிட்டவருமான காமராசரின் போட்டியாளரும் தனது நம்பிக்கைக்குரிய தொண்டருமான ம.பொ.சி.யை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கு அப்போது முதலமைச்சாராயிருந்த ஆச்சாரியார் விரும்பியதே காரணமாகலாம் (ம.பொ.சி.யின் தன்வரலாறான எனது போராட்டங்கள் பார்க்க.)

கட்சியின் நலனுக்குக் கொள்கைகளைக் காவுகொடுப்பதோ, கட்சி நலன் என்ற ஒன்றைத் தவிர வேறு கொள்கை - கோட்பாடற்று இருப்பதோ அரசியல் தலைவர்களிடம் இயல்பாகக் காணக்கூடிய குறைபாடு தான். புரட்சிகரத் தலைவர்கள் எனப்படும் உலக வரலாற்றுப் பெருமக்களிடம் கூடக் காணக்கிடப்பது தான். கொள்கைப் போர் என்பதும் தனி மனிதப் போட்டி என்பதும் ஒன்றிலிருந்தொன்று பிரித்துணர முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடப்பதும் வரலாற்று இயல்பு தான். உலகில் அரும்பெரும் செயல்களும் வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்வுகளும் வரலாற்றுப் போக்கையே மாற்றும் புரட்சிகர நிகழ்வுகளும் உயர்ந்த நோக்கங்கள் இன்றி, தன்னலமும் தன்முனைப்பும் அதிகார வெறியும் கொலைவெறியும் மனப்பிறழ்ச்சியும் கொண்ட தலைவர்களால் நிகழ்ந்திருப்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும. இவ்வாறு காமராசரின் தவறான நிலைப்பாட்டின் விளைவால் தமிழகத்தின் நிலப்பரப்புகளை நாம் இழந்திருக்கிறோம்் குமரி மாவட்டத்தில் பத்மபாநபுரம் அரண்மனை, குமரி முனையில் இருக்கும் சுற்றுலா வளமனை ஆகியவற்றை இழந்துள்ளோம். கேரளத்தினர் எடுத்துச் செல்ல முயன்ற அரும்பொருட்களைசக் குமரி மாவட்டத் தலைவர்களின் வீரம் மிக்க எதிர்ப்பின்றி காப்பாற்றியிருக்க முடியாது. குமரி மாவட்டததைப் பொறுத்த வரை ‌காமராசரின் அணுகல் பரிவுடன் இருக்கவில்லை என்பது காய்தல் உவத்தலின்றி அணுகுவார்க்குப் புலப்படும் உண்மை.

உலக வரலாற்றில் பொதுவாக, வேறொரு நாட்டு எல்லைக்குள் வரலாற்றுக் காரணங்களால் சிக்கிக் கொண்ட ஒரு மொழி, இனம், சாதி அல்லது சமயம் போன்ற பொருளியல் சாராதவையும் அடையாளங்களாக மட்டும் கொள்ளத் தக்கவையுமான உறவுகளைக் கொண்ட மக்கள் தங்கள் தாய் நிலம் என்று கருதி வேறொரு நிலப்பரப்புடன் இணைய முற்படும் போது அந்தத் தாய்நில மக்கள், அதிலும் அரசியல்வாணர்கள் அதை விரும்புவதில்லை. தங்கள் உறவுடைய மக்கள் தங்களோடு இணைய வருகிறார்கள் என்று மகிழ்வதற்குப் பகரம் தங்கள் வாய்ப்புகளுக்குப் போட்டியாக வருகிறார்கள் என்றே கருதுகின்றனர். விரும்பி இணையும் மக்களுக்குப் பழைய வாழ்க்கையை விட புதிய இணைவு உண்மையிலேயே நன்மையாக அமைந்தாலும் ''தாய்''நிலத்தின் காழ்ப்புணர்வு நெடுநாள் நீடிக்கவே செய்யும். இதற்கு எடுத்துக்காட்டாக பாக்கித்தானைக் கூறலாம். சமயத்தின் அடிப்படையில் நிலத்தொடர்பு, பொருளியல் அடித்தளம் ஆகியவற்றை மீறி, கிழக்கு வங்க மக்கள் பாக்கித்தானில் இணைந்தனர். மேற்குப் பாக்கித்தானியர்களே தலைவர்களாகவும் ஆளும் கணத்தவராகவும் தொடர்ந்த சூழ்நிலையில் வங்க மக்களின் மக்களாடசி உரிமைகள் பறிக்கப்பட்டதால் அவர்கள் தொடங்கிய சட்டத்துக்குட்பட்ட போராட்டம் ஆயுதந் தாங்கிய ஒன்றாக மாற, அன்றைய இந்தியத் துணைக் கண்ட,. உலக அரசியல் சூழலால் இந்திய அரசு இடையில் புகுந்து அதன் பயனாக புதிய வங்கதேசம் உருவாதை நாம் அறிவோம். இன்று எஞ்சியுள்ள பாக்கித்தானிலும் பஞ்சாபி முகம்மதியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்து போன்ற மாகாண மக்கள் போராடுவதையும் இன்று இந்தியாவினுள்ளிருக்கும் பகுதிகளிலிருந்து இந்திய-பாக்கித்தானியப் பிரிவினையின் போது இடம்பெயர்ந்து சென்றோரின் வழி வந்தவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களால் நாள்தோறும் மக்கள் உயிர்ப் பலியாவதையும் இடைவிடாத வன்முறைகள் தொடர்வதையும் பார்க்கிறோம். ஆனால் தாய்த் தமிழகத்தோடு இணைந்ததனால் குமரி மாவட்ட மக்கள் எய்திய நன்மைகள் அளப்பரியவை என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் தொடக்க காலத்‌தில் குமரி மாவட்ட மக்கள் சென்னை மாகாணத்தவரை விடக் கல்வியறிவில் மேம்பட்டவர்கள்; வருவாய்த்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து அமைப்புகளும் மேம்பட்டவை. மேலதிகாரி-கீழ்நிலை அதிகாரிகளிடையில் உள்ள உறவு அடிமைத் தன்மையில்லாதது ஆகிய ‌காரணங்களால் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் குமரி மாவட்ட இணைவை விரும்பவில்லை. அப்போது கல்வி அமைச்சராயிருந்த ‌‌‌சி.சுப்பிரமணியம் குமரி மாவட்டத்தில் தொடரி இணைப்பு போல் அமைந்திருந்த பள்ளிகளைப் பார்த்து அசூயையடைந்து அவற்றில் பலவற்றை மூடிவிடலாம் என்று முடிவெடுத்ததாகவும் காமராசர் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்பட்டதுண்டு. மக்களுக்குக் கல்வியளிப்ப‌தில் காமராசருக்கிருந்த ஆர்வத்தின் ஒரு வெளிப்பாடு இது. அத்துடன் தமிழகத்தில் மக்களின் எழுத்தறிவை வளர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளிலும் அவரது மதிய உணவுத் திட்டத்திலும் குமரி மாவட்டத்தில் சி.பி. இராமசாமியார் மேற்கொண்ட கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தின் வெற்றிப் பட்டறிவுக்கு முகாமையான பங்கு இருக்க வேண்டும். அதனாலும் காமராசருக்குக் குமரி மாவட்டத்தின் மீது பரிவுணர்வு இருந்திருக்கலாம்.

(தொடரும்)