28.6.09

தேசியம் வெல்லும் .....8

தேசிய மக்களும் வந்தேறிகளும்:

தேசியம் என்பதன் வரையைறை நில எல்லை என்பதை மறந்துவிட்டு மொழிதான் என்று நம் “தமிழ்” அறிஞர்களும் “தமிழ்” இயக்கத்தாரும் “தமிழ்த் தேசிய” இயக்கங்களும் இடைவிடாமல் முழங்கி நம் இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரின் மூளைகளையும் உலர் சலவை செய்து வைத்துள்ளனர். தமிழ்த் தேசியம், பொருளியல் சுரண்டல் பற்றிப் பேசி வந்த வெங்காளூர் குணா, சாதி வெறிபிடித்து அமெரிக்காவின் பண உதவியில் செயற்படும் விடுதலை இறையியல் கூட்டத்தின் கைக்கருவியாகி தமிழகத்தின் ஒவ்வொரு மக்கள் குழுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் வந்தேறிகள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கிறார். இறுதியாக அவர் கையில் எடுத்துக்கொண்டிருப்பது சிவனியத்தையும் சிவனியர்களையும். அவரது பின்னால் நின்றுகொண்டு அவரை ஊக்குவோரோ, தமிழக அடித்தள மக்களை நசுக்குவதற்குத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்யவென்று தம் தலைவர்களால் வெறியேற்றப்பட்டிருக்கும் முக்குலத்தோர் போன்ற “போர்ச் சாதிகள்” எனப்படுபவற்றைச் சேர்ந்த ஒரு படித்த கூட்டத்தினர். இவ்வாறு ஒடுக்கும் சாதியினரது தலைமைகளது பொதுவான வரலாறோ, தமிழகத்தின் மீது படை எடுத்த அயலவர்களுக்கு ஒத்துழைப்புத் தந்ததாகும். அப்படித்தான் இன்றைய ஆதிக்க நிலையை எய்தியுள்ளன தமிழகத்தின் உயர்சாதிகள் எல்லாம். இதில் ஓர் அவலம் என்னவென்றால், முதுகுளத்தூர் கலவரம் முடிந்த உடனே அதைப் பற்றி முதுகுளத்தூர் கலவரம் என்ற தலைப்பில் நூல் ஒன்று எழுதிய தினகரன் என்பவர் தனது பிரிவான காரண மறவர்களுக்கு எதிரான கொண்டயங்கோட்டை மறவர்கள் எங்கோ கன்னட தேசத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். நான் இப்போது குணா வகையறாக்களைக் கேட்கிறேன், தமிழகத்துக்கு உரியவர்கள் என்று புறநானூறு கூறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் எனப்படும் நான்கு வகையினரையும் தவிர்த்துப் பிறர் அனைவரையும் தமிழக எல்லைக்குள்ளிருந்து துரத்தி விடுவோமா? அப்படித் துரத்துவதானால் எந்தக் காலத்தில் இருந்த எந்தத் தமிழகத்தின் எந்த எல்லைக்கு வெளியே அவர்களைத் துரத்துவது?

தெலுங்கர் என்று குணாவுடன் சேர்ந்து அவரைத் தாங்கி நிற்கும் தமிழர் களம் வசைபாடி வந்த, வை.கோபாலசாமியாக இருந்து இன்று வைக்கோவாக மாறியுள்ள கலுங்குப்பட்டியாரை, ஈழத் தமிழர்களை ஒழித்தே தீர்வது என்று தமிழகத்தினுள் கச்சைகட்டிக் கூப்பாடு போட்டுத் திரியும், தமிழ்த் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவராகிய, சி.கே. வாசன் வகையறாவினரின் கொடுமதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்மையில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பாராட்டியது எப்படி?

எம்மைப் பொறுத்தவரை வைக்கோ என்று அவர் தில்லிக்குப் போனாரோ அன்றிலிருந்தே அவர் தன் பிற திராவிட இயக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்றும், “தமிழ்”, “தமிழ்த் தேசிய” அமைப்புகளினதும் இயக்கங்களினதும் தலைமைகளைப் போன்றும் பனியா - பார்சிகளின் சுரண்டல் என்ற அடிப்படைச் சிக்கலிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பும் அரசியலையே செய்துவருகிறார் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

இந்தக் கேள்விகள், குழப்பங்களிலிருந்து தெளிவதற்கு ஓர் அடிப்படையை நாம் உருவாக்க முடியும். அதாவது ஒரு தேசத்தின் இன்றைய எல்லையிலிருந்து ஒருவரைத் துரத்தினால் அவர் சென்று அடைவதற்கென்று பிறிதொரு தேசத்தில் அரத்த உறவினர்களோ நிலபுலன்களோ இருந்து தன் நிலம், தன் வீடு, தன் மக்கள் என்று சென்றடையவும் அங்குள்ளவர்கள் அவர்களைத் தங்கள் மக்கள் என்று தங்கள் தேசத்துக்குள் ஏற்றுக்கொள்ளவும் செய்வார்களானால் அப்படிப்பட்டவர்களைத் துரத்திவிடலாம். அப்படி இன்றி அயல் மண்ணில் உள்ள தங்கள் வேர்களை முற்றிலும் இழந்து தங்கள் அனைத்துப் பொருளியல், பண்பாட்டியல் வேர்களைத் தாங்கள் இன்று வாழும் தேசத்தில் கொண்ட அனைவரும் அத்தேசத்தின் மக்கள்தாம். நம் தேசத்தில் முதலீடுகள் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டு செல்வோர் இன்று இந்த மண்ணில் வேர் கொண்டவர்களாக இருந்தாலும் நம் தேசத்து மக்கள் ஆகமாட்டார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், இந்திய ஆளும் கூட்டமும் தமிழக அரசியல் இரண்டகர்களும் 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளில் உருவாக்கிய தமிழகத்தில் அன்றைய குடிமக்களாக இருந்த அனைவரையும் தமிழகத் தேசியக் குடிமக்களாக வரையறுக்கிறோம். அந்த நாளில் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்து இங்கு முதலிட்டு ஆதாயத்தை வெளியே எடுத்துச் செல்வோரைத் தமிழக மக்களாகக் கொள்ளக் கூடாது என்பதும் எமது உறுதியான நிலைப்பாடு. அத்துடன் அன்றைய நாளில் தமிழக அரசியல் இரண்டகர்கள் “விட்டுக்” கொடுத்ததால் நாம் பறிகொடுத்த நிலங்களும் தமிழகத் தேசத்துக்கு உரியவை. அதன் பின்னால் பறிகொடுத்த கச்சத் தீவும் தமிழகத் தேசத்துக்கு உரியது.

இது போன்ற ஒரு வரையறையில் நாம் மேலே கூறியுள்ளபடி உலக நாடுகள் அனைத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் தேசங்கள் அனைத்தும் ஓர் உலகமாகவும் வல்லரசியத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளெல்லாம் ஓர் உலகமாகவும் பிளவுண்டு கிடக்கின்றன. இந்தப் பிளவில் ஒடுக்கும் முதல் உலகம் தம்மிடையில் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ஒடுக்கப்படும் தேசியங்கள் அத்தகைய ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன. அந்த ஒருங்கிணைப்பு இல்லாமை அல்லது சிதறிய நிலைமைக்கு முகம்மதிய அனைத்துலகியக் கோட்பாட்டுக்கு முகாமையான பங்குண்டு. அமெரிக்கா தலைமையிலான வல்லரசியத்தோடு நெருக்கமான, இறுக்கமான உறவு வைத்துள்ள அரபு நாட்டுத் தலைமைகள் பாயவிடும் பணத்தில்தான் இந்த முகம்மதிய அனைத்துலகியம் இயங்கி வருகிறது. எனவே வல்லரசிய நலன்களுக்கு எதிராக ஒருபோதும் அது செயல்படாது. அதனை நம்பினால் ஒடுக்கும் தேசங்கள் ஒரு நாளும் தங்கள் அடிமை விலங்குகளைத் தகர்க்க முடியாது. அந்தந்தத் தேசங்களிலுள்ள முகம்மதியர்களை இந்த முகம்மதிய அனைத்துலகியம் தம் தேசிய விடுதலைக்காகப் போராடும் அணிகளுக்கு எதிராக நிறுத்தி அதன் போராட்ட வலிமையைச் சிதைத்துவிடும். இதற்கு மறுக்கவொண்ணாத சான்றாகத் திகழ்வது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.

தேசம் என்பது நில எல்லை அடிப்படையானது என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நில எல்லை கூட நிலையானதல்ல. மொழி, மதம், இனம் என்ற பொது அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நில எல்லைக்குட்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் பிற பகுதியினர் மீது மேலாளுமை செலுத்தினாலோ அவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது ஒன்றுபட்ட அந்நாட்டின் வளங்களில் அப்பகுதி மக்களுக்கு நயமாகக் கிடைக்க வேண்டிய பங்கைத் தராமல் தாமே எடுத்துக்கொண்டாலோ நாளடைவில் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட பகுதிகளின் மக்கள் தனித் தேசங்களாகப் புரிந்து செல்லும் முயற்சியில் இறங்குவார்கள். எனவே நாடு எனும் ஒரு நிலப்பரப்பிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமான உரிமைகளுடன் அந்த நிலப்பரப்பிலுள்ள அனைத்து வகை வளங்களின் மீதும் நயமான, சமமான பங்கும் கிடைத்தால் அந்த நாட்டின் நிலப்பரப்பு ஒரு தேசத்தின் நிலப்பரப்பாக மாறும். இந்த சம உரிமையாக்கம் விரிவடையும் போது எவருடைய கட்டாயம் அல்லது தூண்டுதலும் கூட இன்றி உலகமே ஒரு தேசமாக மாறும். எடுத்துக்காட்டாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக மாறியுள்ளதைக் கூறலாம். இந்தப் போக்கை இன்னும் விரிவாக்கினால் உலகமும் தேசமாக மாறும். மனித குலத்தின் குறிக்கோள் இதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பமும் முயற்சியுமாகும்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: