6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (10)

இணைப்பு - 3

நாள்: 15 - 5 - 2000.

அன்பு நண்பர் பொன்னீலன் அவர்களுக்கு வணக்கம்.

குமரி மாவட்டக் கலவரம் பற்றிய என் கட்டுரை குறித்த தங்கள் மடல் கிடைத்தது. நன்றி. தொடர்ந்த அஞ்சலட்டையும் பெற்றேன். தாங்கள் விடுத்துள்ள வினாக்களுக்கு விடையளிக்கின்றேன்.

1,2 சாணாப்பள்ளர்களைப் பற்றி என்னுடன் பணியாற்றிய பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பொறியாளர் நண்பர் கூறினார். அவர் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் தங்கி விட்டார். வரலாற்றாசிரியர்களும் பொதுவாகப் பிறரும் நம் பண்டை வரலரற்றின் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வரலாறு என்று நினைத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் ஊடாக ஏற்படும் மாற்றங்கள் தாம் உண்மையான வரலாறு (வரல்+ஆறு) ஆகும். இந்த வரல் ஆற்றைத் தடம் பிடிப்பது தான் உண்மையாக வரலாற்றுவரைவாகும். இந்த வகையில் சிவனிய எழுச்சியின்போது தாக்குதலுக்குள்ளான சமணர்கள் பள்ளர்களாகவும் பனையேறிகளாகவும் ஒடுக்கப்பட்டிருக்கலாம். இந்த ''அனுமானத்தின்'' பேரில் தான் சாணார்கள் என்ற சொல்லுக்கு சமணம் மூலமாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்துள்ளேன். அவர்கள் தெய்வம் பலி கொள்ளாதது ஒரு துணைக் கருத்தாகும். இது சரியா தவறா என்பதை உரிய நுண்ணிய ஆய்வுகளின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். களப்பணிகள் செய்ய என் இயலாமைகளால் இந்த உய்த்தறிவு (அனுமானம்) வெறும் ஊகம் என்ற மட்டத்தில் நின்று விடுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

3,4 தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ''மகட்பால் காஞ்சி'' சிறப்பிடம் பெறுகிறது. புதிதாக உயர்ந்து வரும் அரச மரபினர் பழைய மரபினரிடம் பெண் கேட்கும் போது அதனைத் தமக்கு நேர்ந்த இழிவாகக் கருதிப் பழைமையோர் மறுப்பதும் போர் முண்டுப் பழையோர் அழிவதும் அல்லது அடங்குவதும் வரலாறு. நம் நாட்டு மக்களின் இடப்பெயர்ச்சிகளில் இந்தப் பெண் கேட்டல் பெரும் பங்காற்றியுள்ளது. ஐவர் இராசக்கள் கதை இத்தகையது தான். வள்ளியூரைத் தலைநகராகக் கொண்ட குலசேகர பாண்டியனைத் தன் மகளை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்திய கன்னட மன்னன், அவன் மறுக்கவே அவன் மீது படையெடுத்து அதில் தோல்வியுற்ற குலசேகரன் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லும் போது தற்கொலை செய்து கொள்ள கன்னடன் மகளும் தற்கொலை செய்து கொண்டாள் என்பது கதை. இது போன்ற சூழல்களில் பாண்டிய மரபினர் நெல்லை குமரி மூலைநோக்கி ஒடி வந்திருக்கலாம். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் அப்பகுதிகள் கேரளர்களின் ஆதிக்கத்திலிருந்ததன. திட்டவட்டமான நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சாமிதோப்பு வழக்கறிஞர் தினகரன் கூறியது. இது அவர் குடும்பக் கதை. கடம்பூர் பகுதியில் உள்ள பெருங்குடி(பாண்டியர் மரபு என்று கூறினாரா என்பது நினைவில்லை. ஆனால் கயத்தாற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த குறுநில மன்னர்கள் தங்களைப் பஞ்ச பாண்டியர் என்று கூறினர் என்று கே.கே.பிள்ளையின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் நூல் கூறுகிறது. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1981வெளியீடு, பக்கம் 398,399 பார்க்க)யினரது வீட்டைச் சூறையாடப் போவதாகக் கட்டப்பொம்மன் ஓலை விடுத்திருந்தனாம். அப்போதைய மரபுப்படி பாளையக்காரர்களுக்குப் பணத்தட்டுப்பாடு வந்ததென்றால் இவ்வாறு ஓலை விடுப்பாராம். செல்வக் குடியினர் தங்கள் செல்வத்தையெல்லாம் கொடுக்க முன்வந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்வது வழக்கமாம். இது நிலவுடைமைக் குமுகத்தில் உலகமெலாம் நிலவிய ஒரு வழக்கம் என்று தெரிகிறது. பிரெஞ்சின் புகழ்பெற்ற புதின ஆசிரியர் அலெக்சாந்தர் டூமாவின் புதினம் மான்த் கிறித்தோவின் மன்னன் (Count de Mont cristo). இதனை மா.இல. நடராசன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைவு. நான் சுருக்கப்படாத அந்தப் புதினத்தின் ஆங்கில வடிவத்தையும் படித்திருக்கிறேன். அதில் கிடைத்த செய்தி தான் இது: போப்பாண்டவருக்குப் பணத்தட்டுப்பாடு வந்தால் தன் ஆட்சியின் கீழுள்ள பெருங்குடியினர் குடும்பம் ஒன்றை விருந்துக்கு அழைத்து நஞ்சிட்டுக் கொல்வாராம். பின்னர் சொத்தை எடுத்துக் கொள்வாராம். அழைப்பு வந்தவுடனே அழைப்புப் பெற்றவர்களுக்கு அது மரண ஓலை என்பது தெரிந்து விடும். அவ்வாறு அழைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் மறைத்து வைத்த செல்வங்கள் அக்கதையில் முகாமையான பங்கேற்கின்றன. (அலெக்சாந்தர் டூமா நெப்போலியன் போனப்பார்ட்டு காலத்தில் வாழ்ந்தவர். போனப்பார்ட்டின் ஆதரவாளர். எனவே அவர்களது அரசியல் கண்ணோட்டத்தின் படி போப்புக்கு எதிரானவர். அதனால் இத்தகைய பல உண்மைகள் அவரது புதினங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அன்று ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த இலக்கியப் படைப்பாளிகளின் துணிச்சலில் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளிடையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது துயரூட்டும் உண்மை.) ஆக வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்லது அவன் மரபினனான இன்னொரு கட்டபொம்மனோ தினகரன் அவர்களின் மூதாதைக்கு ஓலை விடுத்தானாம். இவர்கள் உடனே உயிரைக் காத்துக்கொள்ள அங்கிருந்து புறப்பட்டனராம். வழியில் அவர்களுக்கு ஏற்பட்ட கெடுதி ஒன்றைத் தன் உயிரைக் பொருத்து ஒரு செட்டிகுலப் பெண் நீக்கினாளாம். எனவே அவளைக் குல தெய்வமாக வழிபட்டு வந்தனராம். அய்யாவழிக்கு மாறிய பின் அவளது கோயிலையும் கதை ஏட்டையும் அழித்து விட்டனராம். இது அவர் வாய் மொழிக் கூற்று.

தளவாய் அரியநாதர் காலத்தில் அவருடைய எதிரிகளுக்கு வேணாட்டு மன்னன் அடைக்கலம் கொடுத்ததாக கே.கே.பிள்ளை மேலே சுட்டிய நூல் அதே பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

5. நாயர் பெண்கள் குப்பாயம் அணிந்திருக்கலாம் என்பது ஓர் உய்த்துணர்வு தான். இன்றை இரவிக்கை என்று கேரளத்துக்குச் சென்றது? தமிழகத்துக்குக் கூட அது எப்போது வந்தது? இதனைப் பழைய ஓவியங்களிலிருந்து தான் தீர்மானிக்க முடியும். கேரளத்தைப் பொறுத்தவரை ஓவியர் இரவிவர்மாவின் ஓவியங்களைக் கூட எவ்வளவு நம்ப முடியும் என்று தெரியவில்லை. அவரது தெய்வ ஓவியங்களில் தமிழகப் பெண்களின் ஆடைகள் தாம் காட்டப்பட்டுள்ளன.

குப்பாயம், மெய்ப்பை என்பன ஆண், பெண் இருபாலரின் சட்டையைக் குறிக்கும் பொதுப்பெயர். சட்டை என்றும் சொல் கூட பாம்புச் சட்டையிலிருந்து தான் வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

கேரள உடை மரபுப்படி உயர் சாதியினர் அணியும் உடைக்கு இணையாகக் கீழ்ச் சாதியினர் அணியக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே மேற்சாதியினரான நாயர் பெண்கள் அணிந்த அதே உடையை, தோள்சீலைப் போராட்டத்துக்கு உடனடிக் காரணமான குப்பாயத்தை வடிவமைத்த ஆங்கிலப் பெண் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். முகம்மதியப் பெண்கள் அணியும் குப்பாயத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. சாவின் போது பட்டம் கட்டுவது எம் பக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை எங்கள் ஊர் பொறியாளர் நடராசன் அரசுத் தடையிருப்பதால் வெளியே தெரியாமல் இது செய்யப்படுவதாகக் கூறினார். அதைத் தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

7. அகத்தீசுவரம் வட்டத்தை விட கல்குளம் விளவங்கோடு நாடார்கள் தாம் நாயர்களின் நேரடிக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள். நானறிந்த வரையில் அங்கு தான் கத்தோலிக்க நாடார்கள் மிகுதி. சவேரியார் தன் மதமாற்ற இயக்கத்தின் போது மதம் மாறினால் அவர்கள் பேர்த்துக்கீசிய மன்னரின் குடிமக்களாகலாம்; அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று வாக்களித்ததாக கே.கே.பிள்ளை தன் நூலில் கூறியுள்ளார். எனவே மீனவர்களுடன் சேர்ந்து சாணார்களும் கத்தோலிக்கத்தைத் தழுவியிருக்கலாம் என்பது என் கருத்து.

8. தோள்ச்சீலைப் போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் கிறித்துவ நாடார்கள் மீது இந்து நாடார்கள் தாக்குதல் நடத்திய செய்தியை அளித்தவர் புலவர் கு.பச்சைமால்.

9. காயல்பட்டினத்து முகம்மதியர்கள் தாங்கள் சாணார்களின் கொடுமைகளிலிருந்து தப்ப மதம் மாறிய பிழுக்கைச் சாணார்கள் என்று தன்னிடம் கூறியதாக தி.க. பொதுச்செயலர் கி.வீரமணி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அது போலவே சாணார்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள முகம்மதியர்களும் மாறியிருக்காலாம் என்று கருதுகிறேன். சாந்தான்செட்டிவிளை சுடலைமாடன் கோயிலுக்குத் தெற்கு வீட்டில் வாழும் சவுந்திரபாண்டியன் எனும் வழக்கறிஞர் (அவர் என் துணைவியார் மூலம் எனக்கு உறவு) தனக்கு வந்த பழைய இடலாக்குடி முகம்மதிய குடும்பத்துச் சொத்தாவணம் ஒன்றில் அவர்களது மூதாதையர் நாடார் (சாணார் என்றிருந்ததா என்று நினைவில்லை) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினர். அத்துடன் வடக்குச் சூரங்குடி முகம்மதியக் குடியிருப்பை ஒட்டியே இன்றும் பிழுக்கைச் சாணார் குடியிருப்பு ஒன்று உள்ளது. திருமணத்தின் மூலம் அவர்கள் இன்று பிறருடன் கலந்திருக்கலாம். வடக்குச் சூரங்குடியில் சாலையைக் குறுக்கிடும் வாய்க்காலுக்கும் குண்டல் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அவர்கள் உள்ளனர், ஈத்தாமொழிச் சாலையை ஒட்டியே.

10 & 13. அரியநாதர் பதவியிறக்கியது நாடார்களையல்ல, நாடா''ன்''களை. அதுவரை நாடு என்பது ஓர் ஆட்சி அலகாக இருந்தது. அதன் பொறுப்பிவிருந்தவன் நாடான். குமரி மாவட்டத்தில் சூரங்குடி (பிச்சகாலன் கதையில் வரும் நாடான்), அகத்தீசுவரம், ஒரு வேளை ஈத்தாமொழி போன்றவை அத்தகைய நாடுகளாக இருக்கக் கூடும். முயன்றால் பட்டியலிட்டு விடலாம். விருதுநகரில் வாழும் முனைவர் பு.இராசதுரை (இவர் நாடார், முகவரி: 6-251 - இராச வீதி, முதன்மைச் சாலை, அறிஞர் அண்ணா நகர், விருது நகர், 626001) நாடார் உறவின் முறை என்ற நூல் எழுதி உள்ளார். அவரிடம் கேட்கலாம், நூலை நான் படிக்கவில்லை. அவரிடம் படிகள் இல்லை. நூலகங்களில் பார்க்கலாம். பதவி ஒழிக்கபட்டதும் பதவி இழந்தோர் எதிர்த்தனர். சிலர் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு தமக்கு ஒத்துழைத்தோரில் சிலருக்கு அரியநாதர் பாளையங்கள் வழங்கியுள்ளார். சிங்கம் பட்டி, ஊத்துமலை, இராமநாதபுரம் போன்ற ''மறவர்'' பாளையங்கள் பழைய ''நாடான்''களுக்கு அளிக்கபட்டனவையாயிருக்கும் என்பது என் கருத்து. மறவர், நாடார் இரு சாதியினரும் பாண்டியன் பெயரைத் தம் பெயரோடு சேர்த்துப் கொள்வது இதனால் தான் போதும். (கல்வெட்டுகளை ஆய்ந்து நாடுகளைப் பட்டியலிட்டு நாட்டு வரைபடத்தில் குறிக்க முயன்றால் நாடுகளையும் நாடான்களையும் பட்டியலிட்டு நாடான்களைத் தடம் பிடிக்கலாம்.)

14. பக்கம் 16, பத்தி 3, வரி முன்றில் தெளிவில்லாத நூல் ''ஆளாகிய''.

என் அணுகல் பற்றி ஒரு சொல். குமுக இயக்கம் பற்றிய மார்க்சிய இயங்கியல் என்ற சரட்டில் எனக்கு கிடைக்கும் செய்திகளைக் கோர்க்கிறேன். செய்திகளின் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்ற தெளிவை அந்த மார்க்சியச் சரடு தருகிறது. அதிலிருந்து நான் சில முடிவுகளை எடுக்கிறேன். பின்னர் தேடும்போது அந்த இடைவெளிகள் நான் நினைத்தது போலவே நிரப்பப்படுகின்றன. மிகப் பெரும்பாலான என் முடிவுகள் சரியாக இருப்பதை நான் கண்டுள்ளேன். என் பொருளியல் எல்லைகள் மிகக் குறுகியவை. என்னால் நினைத்த இடங்களுக்குச் செல்லவோ நினைத்த நூல்களை வாங்கவோ நேரம் ஒதுக்க முடியவில்லை. அதே நேரத்தில் எனக்குக் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் நான் பெறும் முடிவுகள், பல வேளைகளில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் குறைபாடுடையவை என்று எனக்குத் தோன்றினாலும் எனக்குத் தோன்றிய எண்ணங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வால் அவற்றைப் பதிவு செய்கிறேன். வாய்ப்பும் வசதியும் வலிமையும் உள்ளவர்கள் இக்குறைபாட்டை நிறைவு செய்வார்கள், செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என் முயற்சிகள் தனி மனிதன் தொடர்பானவையல்ல, குமுகம் தொடர்பானவை. எனவே குமுகத்தின் பங்களிப்பும் அதில் வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லையென்று நான் கருதுகிறேன்.

பிறர் நுழையாத துறைகளில், நுழைய நினைக்காத, நுழையத் துணியாத வரலாற்றின் சந்து பொந்துகளில், வரலாற்றைச் செய்திகளின் தொகுப்பாகப் பார்க்கும் கட்டத்திலிருந்து நிகழ்முறைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கும் கட்டத்தினுள் தமிழகப் படிப்பாளிகளின் சிந்தனைகளை நெறிப்படுத்த முயல்கிறேன் என்ற வகையில் நான் மன நிறைவு பெறுகிறேன். தங்களுடன் விரிவான கலந்துரையாடல் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
குமரிமைந்தன்.

3 மறுமொழிகள்:

சொன்னது…

குமரிமைந்தனின் அறிவுபிரகாசம் [:-))))))))] அவரது குமரிக்கண்டம், குமரிகண்டத்தில் இருந்த ஆகாய விமானங்கள், எரிக் வான் டானிக்கன் என்ற மோசடி பேர்வழியை நாசா விஞ்ஞானி ஆக்கிய ஆராய்ச்சி வன்மை, மனிதன் பாம்பை பார்த்து தான் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான் என்கிற 'கோட்பாடு' ஆகியவற்றுடன் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஐயகோ! கொடுமையிலும் கொடுமை குமரி கண்ட ஒட்டக புலமை மண்டைக்காடு கலவரம் வரை வந்து மேய ஆரம்பித்துவிட்டதே! அய்யா குமரி மைந்தனுக்கு இந்த வயதிலும் இத்தனை நகைச்சுவை இருப்பது மதிக்கத்தக்கது. விரைவில் இவர் பாளையங்கொட்டை சேவியரில் பிரதான ஆராய்ச்சி ஐயா ஆகிவிடலாம். ஆனால் இந்த மனிதருக்கு உண்மை தேவை நல்ல மனநலம். வாழ்க.

சொன்னது…

காலங்காலமாக அடிமைத் தனத்தில் உழன்றும், உரிமைகளும், வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டும் நாய் வாழ்க்கை வாழ்ந்த குமரி மாவட்ட மக்கள் நிமிர்ந்த கதையைக் கேட்டால் அரைவிந்தர்களுக்கு எரிச்சல் வருவது இயல்பு தான். ஏனெனில் வலைத்தளம் வைத்து பார்ப்பனீய சிந்தனைகளையும், பிற மத விரோதங்களையும் பரப்புவதை மட்டும் செய்து கொண்டிருக்கும் சமூக சீர்திருத்த வாதிகள் அவர்கள் !

சொன்னது…

//ஆனால் இந்த மனிதருக்கு உண்மை தேவை நல்ல மனநலம். வாழ்க.
//
Sorry Arvind. Did not expect this from you.

Why would you attack him personally?

He may be totally wrong but please respect at least his age.

You have written yourside of the story and I guess Mr. Kumarimainthan did not come and say similar things in your blog.

Since Mr. Kumari Mainthan has published your comment I guess he has taken it well.

Anyone reading your comment might well know who needs a change in mind or heart.

Please remove the comment and repost it with appropriate words.