29.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 4. திருமண உறவுகள்

திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கீழ்ச்சாதிகளில் பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமண உரிமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஆடவனை விடப் பெண்ணுக்கு இதில் அதிக உரிமை உண்டு. அது மட்டுமல்ல, நாட்டுப் புறங்களில் கீழ்ச்சாதி மக்களிடையில் நகர்ப்புறத்து மக்களிடை நிலவுவது போன்று பெண்ணின் “கற்பு” பற்றிய அவ்வளவு “பதற்றம்” இல்லை. சீதனம் அவர்களிடையில் பெரும்பாலும் வேண்டிய அளவு வசதி படைத்தோரிடையே மட்டுமே உண்டு. மணப்பெண்ணுக்கு மணமகன் பரியம் கொடுப்பது இன்றும் பெருவழக்காக உள்ளது.

திருமண உறவுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு நம் குமுகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நிலவுகிறது. மேற்சாதிகளில் பெண் பொதுவாக இரண்டே வகைக் கடமைகளை நிறைவேற்றுகிறாள். ஒன்று, ஆடவனின் சொத்துகளுக்கு உரிமை பெறத்தக்க அவனுக்கே உரிய மக்களைப் பெறுவது; இன்னொன்று வீட்டில் அடிமைத் தொழில் புரியும் “இல்லத்தரசி”யாகவும் அவனுக்கு இன்பம் அளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும் இருப்பது. அவன் விரும்பும் வகை இன்பத்தை அவளால் வழங்க முடியவில்லை என்று அவன் கருதினால் வேறு பெண்களிடம் அதை அவன் நாடுவதை அவள் தடுக்க முடியாது. ஆனால் அதே பெண் தன் கணவனிடமிருந்து தனக்கு வேண்டிய இன்பத்தைப் பெற முடியாத போது இன்னொரு ஆடவனை அவள் நாட முடியாது (திருட்டுத்தனமாக உறவுகள் உரிமைகளாகா). அதே நேரத்தில் “கணவனுக்கே உரிய” குழந்தைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண் தன் திருமணத்துக்கு முன்போ அல்லது கணவனைச் சாவிலோ சச்சரவிலோ பிரிந்த பிறகோ கூட இன்னொரு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது.

ஆனால் கீழ்ச்சாதிப் பெண் இத்தகைய கொடிய ஒடுக்குமுறைக்கு ஆளாவதில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் மணவிலக்குச் செய்து கொள்ளலாம். சாதியார் பஞ்சாயம் கூடி மணவிலக்குச் செய்து வைப்பர். மணவிலக்குப் பெற்ற பெண்ணும் கைம்பெண்ணும் மீண்டும் மணம் செய்து கொள்ளலாம். முந்திய திருமணத்தில் பிறந்த குழந்தைகளை அவள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

கீழ்ச்சாதிகளில் ஓரளவு சொத்துடைமை இருந்தாலும் அவர்களுக்குச் சோறு போடுவது அவர்களது உழைப்பு தான். திருமணத்தால் ஆடவனுக்குக் குடும்பத்தில் வரும் அதிகச் செலவை மனைவியாக வருபவள் உழைத்து ஈட்டி விடுகிறாள். அத்துடன் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பேணுவதும் பெரும்பாடல்ல, ஏனென்றால் மிக இளம் பருவத்திலேயே அக்குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் உழைத்து ஈட்டத் தொடங்கி விடுகின்றனர். அதனால் கீழ்ச்சாதிகளிடையில் திருமணம் நடத்தப் பெரும்பணம் திரட்ட வேண்டும் என்பதற்காகக் காலங்கடத்தத் தேவையில்லாததால் ஆணும் பெண்ணும் பருவமடைந்த உடனேயே மணம் முடித்து விடுகின்றனர். அத்துடன் மணப்பெண் ஏற்கனவே மணமானவளா, குழந்தைகள் உள்ளவளா என்பதும் பெரும் கேள்வியல்ல, ஏனென்றால் குழந்தைகளோ மனைவியோ அவனுக்குத் தனிச் சுமை எதையும் கொடுக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதற்கென்று பெரும் செல்வம் எதுவும் இல்லாததால், ஆண் தனக்கேயுரிய குழந்தை வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.

மாறாகப் பணம் படைத்தோராகிய மேல் சாதியினரிடையில் மேலே கூறப்பட்டது போல் சொத்துரிமைக்காகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதோடு மனைவி ஆடவனுக்குப் புதிய சுமைகளைக் கொண்டு வருகிறாள். நம் குமுகத்தில் ஒருவனுடைய வாழ்க்கைத் தரம் அவன் மனைவியிடம் காணப்படும் ஆடம்பரத் தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடப் பெறுகிறது. இந்தத் “தோற்றத்தை”ப் பேணி வருவதற்கும் குழந்தைகளை “நல்ல நிலைமைக்கு”க் கொண்டு வருவதற்கும் தேவையான அடித்தளம் உருவாவதுவரை ஆடவன் காத்திருக்க வேண்டியுள்ளது. பெண்ணிடமிருந்து முடிந்த அளவு சீதனத்தைக் கறப்பதற்காகப் பல பெண்களைப் பார்த்துத் தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அக்கம் பக்கத்தில் பெண்ணே இல்லாதது போல் நாடு நகரம் கடந்து பெண் தேட வேண்டியுள்ளது. இதனால் ஆண், பெண் இருவர் திருமணங்களுக்கும் காலம் கடந்து கொண்டே போகிறது. (இதனால் ஏற்படும் உடன் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்).

கீழ்ச்சாதிகளில் மணவிலக்கு மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதால் மணப் பொருத்தத்துக்கென்று சோதிடம் போன்ற மிக நுணுக்கமான பொருத்தங்கள் பார்த்துக் காலத்தை வீணாக்குவதில்லை. கோயில்களில் “பூக்கட்டிப் போட்டு”த் திருவுளம் அறிவதோடு சரி. “பூவா, தலையா” பார்ப்பதற்கு இணையானதே இது. ஆனால் மேற்சாதிகளில் மணமக்களுக்குள் முறிவோ, கணவன் சாவோ பெண்ணை நிலையான வாழாவெட்டியாக்கிவிடும். எனவே பன்னிப் பன்னிப் பொருத்தம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழ்ச் சாதிகளில் மணவிலக்கு, மறுமணம் ஆகிய உரிமைகள் இருந்தாலும் அவர்களில் பொருளியலில் உயர்ந்து விட்டவர்களிடையில் பெண் இந்த உரிமைகளைக் கொண்டாட முடிவதில்லை. ஏனென்றால் இங்கு பெண் கணவனுக்குச் சுமையாகிறாள். எனவே “கைபடாத கனிகள்” கிடைக்க வாய்ப்பிருக்கும் போது அவன் ஏன் “எச்சிற் கனிகளை” நாட வேண்டும்? அதே நேரத்தில் இருக்கிற வளவாழ்வை விட்டு ஏழ்மை நிலையிலுள்ள ஒரு கணவனையே நாட வேண்டி வரும் என்பதால் பெண் தன் மணவிலக்கு-மறுமண உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை. எனவே இங்கு பார்ப்பனியம் எனப்படும் “வெள்ளாளக் கட்டு” தன் முழு வலிமையோடு செயற்படுகிறது.

எனவே பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புவோர் அதனை இன்றும் நம் குமுகத்தில் கடைப்பிடித்து வரும் கீழ்ச்சாதியினரின் பண்பாட்டைப் பற்றிக் கொண்டே அப்பணியைத் தொடங்க வேண்டும்.

பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமண உரிமைகள் பற்றிக் கூறும்போது அது வரைமுறையில்லாத புணர்ச்சியைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் வரைமுறையில்லாமல் பெண் யாருடனும் எப்போதும் தன் விருப்பம் போல் உறவு கொள்ளலாம் என்பது இதன் பொருளில்லை.

பெண்ணுரிமை என்பதற்கு “ஒரு பெண் ஓர் ஆடவன் மேல் ஏற்பட்ட விருப்பம் தவிர்த்த வேறெந்தப் பொருளியல் அல்லது குமுகச் சூழலாலும் அவனோடு உறவு கொள்ளக் கட்டாயத்துக்கு உள்ளாகாமலிருப்பதே” என்றார் லெனின். விலைமகளிர் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பல பெண்கள் பெற்றோரின் நெருக்குதலுக்குப் பணிந்தும் பல பெண்கள் வளமான வாழ்வுக்காகவும் தம் விருப்பத்துக்கு மாறான ஆடவர்களுடன் உறவு கொள்ள நேரிடுகிறது. அதே போல் மனம் ஒன்றாத கணவனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிலையிலும் பல பெண்கள் உள்ளனர்.

மறுபுறம் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் ஓர் ஆடவன் தொடர்புறும் போது அதன் விளைவு ஆடவனை உலகுக்குக் காட்டிக் கொடுப்பதில்லை. பெண் மட்டும் அதன் விளைவுக்குப் பலியாகிறாள். தாய்மையே பெண்மையின் சிறப்பு என்று மேலுக்குப் பறைசாற்றும் நம் குமுகம் மணமாகாத பெண்ணின் தாய்மையை எண்ணிப்பார்க்க முடியாத அளவு இழிவுபடுத்துகிறது. இந்த நிலையை மாற்ற சோவியத்து நாட்டு அரசு திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற பெண்களைத் “திருமணமாகாத அன்னையர்” என்று அழைத்து அவர்களுக்கு வாழ்க்கைப் பணமும் வழங்குகிறது. இருந்தாலும் அங்கு அத்தகைய பெண்களைப் பற்றிய பழைய கருத்துகள் இன்றும் வலிமையாக இருப்பதால் சில கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டிருப்பனவாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் கருவுறும் பெண்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துணியாமல் அடிக்கடிக் கருக்கலைப்புச் செய்து கொள்வதால் மலடாகி விடுவதாகவும் அதனால் அங்கு, அதிலும் குறிப்பாகத் தொழில் வளர்ச்சி மிகுந்த உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பெண்களுக்குப் பாலியல் உறவில் ஆண்களோடு சரிசமமான உரிமை தேவை என்பது, குறிப்பாகப் பெண்கள் மனதில் பதியும் படியாக உணர்த்தப்பட வேண்டும்.
[1]

இன்று பல பெண்கள் படித்து மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போனாலும் கூட பெண்ணின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. பெண்ணின் வாழ்வு மேம்பட வேண்டுமென்பதிலோ பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ சிறிதும் கவலை கொள்ளாதவரும் எதிர்ப்பவர்களும் கூட படித்த, வேலை பார்க்கும் பெண்களையே மணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். படிக்கும் பெண்களைப் பற்றியும் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து கொண்டே தன் தங்கை, மனைவி அல்லது மகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தம் தங்கை, மனைவி, மகள் ஆகியோரைப் பணத்திற்காகப் பிறரின் காட்சிப் பொருளாகவோ, விலைமகளிராகவோ பயன்படுத்தினால் என்ன மனநிலையிலிருப்பார்களோ அதே மனநிலையில் தான் அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார்கள். நாளுக்கு நாள் நஞ்சு போல் ஏறிவரும் கொடும் விலைவாசியும் அணைபோட்டுத் தடுக்கமுடியாத ஆவலாதிகளும் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதில் ஏற்படும் கட்டுக் கடங்காச் செலவுகளும் கட்டாயப் படுத்தி ஆடவர்களை இந்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. படித்த பெண் இதனால் உண்மையில் விடுதலை பெறவில்லை. மாறாக முன் எப்போதையும் விட அதிகத் தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளாள். கல்வி பெற்று வேலை வாய்ப்புகளும் பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று திரு.வி.க.வும், மு.வ.வும் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நிகழ்வுகள் அமைந்துள்ளன. கல்வியும் வேலை வாய்ப்பும் இன்று உரிமைகளாயில்லை, சலுகைகளாகவே உள்ளன. இச்சலுகைகளைப் பெற அவளது பெண்மை முன்னிலும் பன்மடங்கு பல வேளைகளில் இழிவுபடுத்தப்படுகிறது. படித்து வேலை பார்க்கும் பெண் தன் வேலை, தன் குடும்பம் என்ற இரண்டு சிறைகளினுள் அடைக்கப்பட்டுத் தன் பண்பாட்டு வளர்ச்சி முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையில் நிற்கிறாள். இதிலிருந்து அவளை விடுவிக்கப் பெண் விடுதலை என்ற பெயரில் செயற்படும் இயக்கங்கள் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகின்றன.

மாறாக, நாட்டுப்புறத்திலும் நகர்ப்புறங்களிலும் வாழும் படிப்பால் பிழைக்காத கீழ்ச்சாதிப் பெண்களில் ஏறக்குறைய எல்லோருமே உழைக்கிறார்கள். வேளாண்மை, கட்டுமானத் தொழில், நெசவு, பீடிசுற்றுதல், தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில், பனைஓலைத் தொழில், பாய்முடைதல் மற்றும் எண்ணற்ற வகை வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் ஆண்களை விடப் பெண்களே மிகுதி. இவ்வகைக் குடும்பங்கள், பெரும்பாலானவை பெண்ணின் உழைப்பாலேயே வயிற்றைக் கழுவுகின்றன. இன்று பெரும்பாலான ஊர்ப்புறத்து ஆடவர்களுக்கு வேலைவாய்ப்பு அருகி வருகிறது. எனவே பெண் ஈட்டும் பணத்தில் தான் குடிப்பதற்கும் சூதாட்டத்துக்கும் திரைப்படத்துக்கும் ஆடவன் செலவு செய்கிறான். பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டு ஆடவன் மட்டும்தான் இவ்வாறு செய்கிறான் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு விதியாகவே செயற்படுகிறது என்பது பெண்களுக்குத் தெரிவதில்லை. பெண்ணின் இந்த அறியாமையினால் இன்னொரு வகைத் தீமைக்கும் அவள் ஆளாகிறாள். தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஏதோவொரு தொழில் செய்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவதாக அவள் கருதுவதால் தன் உழைப்பின் உண்மையான மதிப்பை உணராமல் ஏதோ கிடைத்தவரை ஆதாயம் என்று நினைக்கிறாள். எனவே அவளது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகிறது. தன் உழைப்பினால்தான் குடும்பமே நடைபெறுகிறது என்பதை உணராததால் அவள் தன் உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்படுகிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் ஆணுக்கு அடங்கியவள் என்று அவள் காதில் ஓதப்பட்டவை, அவள் பார்க்கும் திரைப்படங்கள், எப்போதாவது அவள் படிக்கும் அல்லது கேட்கும் கதைகள் இவையனைத்தும் சேர்ந்து அவளைத் தன் உரிமைக்காகப் போராடாமல் தடுத்து வைத்துள்ளன. குடும்பப் பொருளியலில் அவள் ஆற்றும் பங்கைப் புலப்படுத்தி, தான் உள்ளாக்கப்படும் சுரண்டலுக்கெதிராகப் போரிட அவளை ஆயத்தப்படுத்தும் போது தான் தன் அடிமை விலங்கனை உடைத்தெறியத் தேவையான தெளிவு அவளுக்குப் பிறக்கும். படிப்பால் பிழைக்கும் பெண்களின் விடுதலைக்கும் வழி பிறக்கும்.

ஒரு குமுகத்திலுள்ள ஆண்-பெண் உறவுநிலைக்கும் அக்குமுகத்திலுள்ள மக்களின் ஒற்றுமைக்கும் ஒரு தொடர்புண்டு. தனிக் குடும்பத்தின் வளர்ச்சி பற்றி ஆய்ந்த ஏங்கல்சு குமுகியல் ஆய்வாளர்களின் ஒரு முடிவைச் சுட்டிக் காட்டுகிறார்.[2] இவ்வாய்வாளர்கள் விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து எந்த ஒரு இனத்தினுள்ளும் கூடி வாழ்தலும் பாலியல் பொறாமையும் எதிர்விகிதத்தில் அமைந்துள்ளன என்பதே அது. பாலியல் பொறாமை குறைவாக உள்ள இனங்கள் பெருங்கூட்டங்களாக வாழ்கின்றன; பொறாமை மிகுந்த இனங்கள் தனித்தனிக் குடும்பங்களாக வாழ்கின்றன என்பது இதன் பொருள். பெரும்பாலான மனித இனங்களும் இன்று தனித்தனிக் குடும்ப அமைப்பில் இருந்தாலும் பலவற்றில் அக்குடும்பங்கள் நெகிழ்ச்சி உள்ளனவாய் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பியர்களிடையில் மணவிலக்கு, மறுமணம் போன்ற இறுக்கமில்லாத திருமண விதிகள் மட்டுமல்ல திருமண உறவை மீறிய பாலியல் உறவுகளும் இயல்பானவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கூட்டுணர்வு அவர்களின் வலிமைக்கு ஒரு முகாமையான காரணமாகும்.

அதே நேரத்தில் நம் நாட்டிலும் திருமண உறவை மீறிய பாலியல் உறவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் பாலியல் ‘உரிமம்’ சில குறிப்பிட்ட சாதிகளின் உள்ளே மட்டுமே கிடைக்கிறது. இது அந்தச் சாதியின் ஒற்றுமை உணர்வை வளரச் செய்கிறது. அதே நேரத்தில் அந்தச் சாதியினர் பிற சாதியினருடன் தமக்குள்ள பிரித்துணர்வையும் இது இறுக்குகிறது. இப்படிச் சில சாதிகளில் தமக்குள் அடங்கிய இந்தப் பாலியல் உரிமம் நாடு அல்லது தேசியம் என்ற அளவிலான ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறது. எனவே பெண்ணுக்கு நாம் விரும்பும் பாலியல் ‘உரிமம்’ என்பது சாதி வரம்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான தேசியம் என்ற வலிமையான உணர்வு தோன்றி வளர வழி ஏற்படும்.

இந்த இடத்தில் புலாலுணவு, பெண்ணுரிமை என்ற இரு பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் பெரியார் மேற்கொண்ட நிலையையும் அவற்றை அவர் அணுகிய முறையையும் நாம் சற்று நோக்க வேண்டும். புலாலுணவுக்கு மேற்சாதியினர் காட்டிய எதிர்ப்பை முறியடிக்கும் முறையில் தான் நடத்திய தீமிதிப்பு (பூக்குளி) நிகழ்ச்சிகளில் பன்றி இறைச்சியை அவரது தொண்டர்கள் உண்டார்கள். பெண்ணடிமையின் அடையாளமாகிய தாலியை அகற்றுவதை அவர் ஓர் இயக்கமாக நடத்தினார். ஆனால் புலாலுணவின் மேன்மையையும் எளிமையயும் பற்றியோ நாட்டுப் புறங்களில் பெண்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றியோ மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துப் பரப்பலை அவர் செய்யவில்லை. அவரது அணுகல் ஒருவகை “அடாவடி” அல்லது மறுப்பியல் (Nihilist) அணுகலாகவே இருந்தது. அவரது இயக்கம் மேற்சாதியினரை அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கியதாகவே அமைந்தது.

ஆண்-பெண் உறவுகளில் சீதனம், வரதட்சினை என்பவற்றைப் பற்றி ஒரு விரிவான ஆய்வு செய்யவில்லையெனில் அது முழுமையாகாது.

குமுகம் உடையாமல் இயற்கையிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்களைத் திரட்டி நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த நாட்களில் பெண்ணே குடும்பத் தலைவியாயிருந்தாள். ஆடவர் இரண்டாம் நிலையிலிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல மனிதனின் அறிவியலும் தொடர்புகளும் விரிவடைந்த நிலையில் இந்தக் குமுகக் கூட்டுழைப்பிலிருந்து ஆடவன் விடுபட்டான். வாணிகம், படைப் பணி, அரசுப் பணி போன்றவற்றுக்காக ஆடவர்கள் குமுகத்திலிருந்து பிரிந்தபோது பெண்ணும் அவனுடன் செல்ல வேண்டியவளானாள். எனவே குடும்பத்திலுள்ள அவளது சொத்தின் பகுதிக்கு இணையாக அசையும் சொத்துக்கள் சீதனமாக, பெண்ணின் சொத்தாக அவளுக்கு வழங்கப்பட்டன. அவை பெரும்பாலும் வீட்டுப் புழக்கப் பொருட்களாகவும் அணிகலன்களாகவும் இருந்தன. நாள் செல்லச் செல்ல பணமும் இதனோடு வழங்கப்பட்டதுண்டு. இந்தப் பொருட்களெல்லாம் என்றுமே அவளுக்குரியனவே. ஒருவேளை மகப்பேறில்லாமல் அவள் இறந்து விட்டால் அவை அவளது பிறந்தகத்துக்கு உரிமையாகும். இது பார்ப்பனர் உட்பட அனைத்துச் சாதிகளிலும் இன்றுவரை நடைமுறை.

பெண்ணின் சீதனத்துடன் பணம் கொடுக்கப்பட்டால் அதற்கு ஈடாக ஏதாவதொரு சொத்தைப் பெண்ணின் பெயருக்கு எழுதிவைப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல கீழ்ச்சாதிகளில் நடைமுறையாக இருந்தது. ஆனால் அம்முறை இன்று வழக்கிழந்துவிட்டது. இன்று அது வரதட்சிணை (மணமகனுக்கு அளிக்கும் காணிக்கை) என்ற பெயரில் மணமகன் வீட்டாரால் கைக்கொள்ளப்பட்டு விடுகிறது.

வரதட்சிணை என்பது இன்றைக் குமுகக் கொடுமைகளில் மிக இழிவான ஒன்றாக நிலவுகிறது. கூடுதல் வரதட்சிணைக்காக மனைவியைக் கணவனும் அவனது உறவினர்களும் கொடுமைப்படுத்துவதும் அவளைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணம்செய்து வரதட்சினை பெறுவதும் இன்று அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. படித்து வேலை செய்தாலும், சீதனமும் வரதட்சிணையும் கொண்டு சென்றாலும் பெண்மகளின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. அத்துடன் கணவன் தன் பெற்றோர்களுடனும் உடன் பிறந்தோருடனும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் கணவனின் அன்பை அல்லது அவன் மீது ஆதிக்கத்தைப் பெறுவதில் மனைவிக்கும் அவனது தாய், உடன்பிறந்தோர் ஆகியோருக்கும் இடையில் ஏற்படும் போட்டியில் பெண் தன் கணவன் குடும்பத்துப் பெண்களாலேயே இரக்கமற்ற கொடுமைக்காளாகிறாள். இதன் விளைவாகக் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனமாகின்றனர். எனவே பெரும்பாலான நேர்வுகளில் கணவனின் பெற்றோர் கைவிடப்படுகின்றனர். ஆண்மகன் பொறுப்பிலேயே பெற்றோர் விடப்படுவதாலும் பெண்கள் கணவனோடு சென்று விடுவதாலும் இச்சூழ்நிலை தாய்தந்தையரை ஆதரவற்றவர்களாக்கி விடுகிறது. இது நம் நாட்டில் மிக இயல்பான நிகழ்ச்சியாகிவிட்டது. அரசூழியம் செய்து ஓய்வூதியம் பெறுவோர்க்குக் கொஞ்சம் பணமாவது கிடைக்கும். மற்றையோருக்கு அதுவும் கூட இல்லையாதலால் அவர்கள் இரவலர்களாக வேண்டியுள்ளது.

வரதட்சிணை எதிர்ப்பு என்பது பெண்ணுக்கு அவள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பங்கை இழக்கச் செய்யும் வகையில் ஆண்மக்களுக்கு ஆதாயம் தரும் முழக்கமாக மாறிவிடக்கூடாது. அதே நேரத்தில் அவளுக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கு அவளுக்கு உதவாமல் கணவனுக்கும் அவள் குடும்பத்தாருக்குமாகப் பறிபோய்விடவும் கூடாது. எனவே அவளது பணம் மணமகனுக்குக் கொடுக்கப்பட்டால் முன்பு கீழ்ச்சாதியினரிடையில் வழங்கியது போல் அதற்கிணையான ஈட்டாவணம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதியவர்களுக்கான பராமரிப்புக்கு வேறொரு ஏற்பாடு செய்யலாம். பெண்கள் தத்தம் வீடுகளிலிருந்து கொண்டு மனைவி வீட்டுக்குக் கணவன் வாழவரலாம் அல்லது ஒவ்வொருவரும் தத்தம் முதுமைக்கென்று தமக்குப் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் உருவாக வேண்டும்.

பெண் எதனால் இவ்வாறாக ஆதரவற்ற நிலைக்கு வருகிறாள்?
இதற்கு நேரடிக்காரணம் கற்பு, மறைமுகக் காரணம் தாய்மை.

திருமணத்துக்கு முன் ஆடவரோடு கூடுவது கற்புக்குக் களங்கம். ஆனால் அதற்குச் சான்று கருவுறுவதே. எனவே கருவுறுவதாகிய தாய்மையே அவளுக்குப் பகையாகிறது. மணமான பின் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் கருவுற்றால் அவள் கள்ள உறவு கொண்டிருந்தால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. அதுபோல் கணவன் இறந்த பின் கருவுற்றாலும் களங்கம். இவ்வாறு ஒரு பெண் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் போது கற்பு தவறிவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முயலப்படுகிறது. இந்தப் பதற்றத்தில் மணமகன் வீட்டார் வரைமுறையின்றி மனம்போன போக்கில் “வரதட்சிணை” கேட்கிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மணமகனின் உடன்பிறந்த பெண்களுக்கு வரதட்சிணை கொடுப்பதற்காகவே பல நேர்வுகளில் மணமகளின் வரதட்சிணை பயன்படுகிறது. இவ்வாறு மணமகனின் வரவும் செலவும் சரியாகவே போய்விடுகின்றன. எனவே வரதட்சிணை வாங்காமலிருந்தாலும் இதே சமநிலை உருவாகும். ஆனால் அதை எங்கே எப்போது தொடங்குவதென்பது தான் கேள்வி.

இவ்வாறு பெண் எப்போதும் கணவனுக்குக் கட்டுப்பட்டும் கணவன் இல்லாத போது அஞ்சி அஞ்சியும் வாழ நேரிடுவதற்கு கற்பு பற்றிய பதற்றமே காரணம் என்பது முடிவாகிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகள் தாங்க முடியாமற் போகும்போது இந்தக் கற்புக் கோட்பாடு தானே உடையும். அப்போது பெண்கள் உண்மையில் விடுதலை பெறுவார்கள்.

ஆண்-பெண் சமத்துவத்தின் முதற்படியாக நாம் செய்யக் கூடுவது கல்வி நிலையங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனி நிறுவனங்கள் இருக்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் அனைத்து நிலையிலும் கலந்து பழக அனுமதிக்கப்பட வேண்டும். இதன் பக்க விளைவாகக் கல்வி நிறுவனங்கள் சில சமய நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கும் நிலைமாறும்.


பேருந்துகளில் ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி இருக்கைகள் ஒதுக்கியிருக்கும் முறை மாற்றப்பட வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் ஒரு பிற்போக்கு முறையாகும்.
மனிதப் பிறவியில் தாய்மைக்குரிய அமைப்புகளுடன் விளங்குவதால் பெண் மேம்பட்டவள். ஆனால் இந்த மேம்பட்ட நிலையே அவளுக்குச் சுமையாக கழுத்திலும் காலிலும் கட்டித் தொங்கவிடப்பட்ட பாரமாக மாறிவிட்டது. இதிலிருந்து அவள் விடுவிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் தாய்மைக்காகவே வணங்கப்பட்டாள். பெண் கருவுற்ற பின்னரே அவளுக்கு மணமுடிக்கப்பட்டது. அவள் யாரால் கருவுற்றாள் என்பது ஆராயப்படவில்லை. அவளால் தாய்மை எய்த முடியுமா என்ற கேள்விக்கு விடையாகவே அவளது தாய்மை மதிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு கருவுறுவதே திருமணத்துக்கான அவளது தகுதியாகக் கருதப்பட்டது. அன்று பெண் ஆணின் ஈட்டத்தை அடையவிருக்கும் வழித்தோன்றல்களை ஈனும் கருவியாக இருக்கவில்லை. மாறாகத் தங்கள் குழுவுக்கு உழைக்கவும் அதைப் பாதுகாத்துப் போரிடவும் தேவையான குலப் பெருக்கத்துக்குத் தேவையானவளாகக் கருதப்பட்டாள். இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது பெண்ணுக்குச் செய்யப்படும் வளைகாப்பு தான் உண்மையான பழைய திருமணம். ஏனென்றால் முன்பு கணவன் இறந்தால் பெண் தன் கைவளையல்களை உடைத்தே கைம்மையினுள் நுழைந்தாள். கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறிய போது தன் கைவளையல்களைத்தான் உடைத்துக் களைந்துவிட்டுப் போகிறாள். வளைகாப்புதான் முந்தியல் திருமணச் சடங்கு என்பதற்கு இது ஒரு தடயமாகும்.

இன்றும் சில குக்குல மக்களிடையில் பெண் கருவுற்ற பின்பே திருமணம் நடைபெறுகிறது. பெண் கருவுறக் காரணமானவன் கணவனாவதில்லை. கோவை இருளர்களைப் பற்றிக் கூறும் வனாந்தரப் பூக்கள் எனும் நூலில் இது கூறப்படுகிறது.
[3]

இன்றைய குமுகத்தை ஆணாதிக்கக் குமுகம் என்று அழைக்கிறோம். ஆனால் மனித இனத்தின் தொடக்க காலத்தில் அது ஒரு பெண்ணாதிக்கக் குமுகமாக இருந்தது. ஆண் பெண் புணர்ச்சிக்கு வரைமுறை கிடையாது. எனவே எந்தக் குழந்தைக்கும் தந்தையை அறிய முடியாது. ஆகவே தாய் மட்டுமே அறியத்தக்க ஒரே பெற்றோர். உறவுகள் அனைத்தும் தாயின் வழியிலேயே இருந்தன. குலங்கள் தாயின் பெயரிலேயே அறியப்பட்டன. நம் நாட்டிலும் ஏழு பெண்களே அனைத்துச் சாதிகளின் மூலவர்களாகக் குறிப்பிடுப்படுகின்றனர்.

வரைமுறையில்லாத பாலுறவு நிலையில் இனப்பெருக்கத்துக்குப் பல பெண்களுக்கு ஒரே ஆண் போதுமானவன். ஆனால் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஏறக்குறைய சம எண்ணிக்கையிலேயே அமைவர். இதனால் ஆடவன் அன்றைய குமுகத்தில் அதிகப்படியானவனாகவே கருதப்பட்டான். பெண்கள் தத்தம் மக்கள் மீது தமக்கிருந்த செல்வாக்கினால் ஆடவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இது நாளடைவில் ஆடவர்களிடத்தில் எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள், பெண்களை எதிர்ப்பதற்கு ஒரு வகையான இயக்கத்தைத் தொடங்கினர். இதனைத் “தலைமறைவுச் சங்கங்கள்” என்று மாந்தநூலார் அழைக்கின்றனர். ஆடவர்கள் அண்டையிலுள்ள காடுகளுக்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினர். தத்தம் கூட்டத்தில் உள்ள சிறுவர்கள் பருவமெய்தியதும் அவர்களைக் கடத்தி வந்து அவர்களின் சிந்தனையைத் திருப்பித் தம்மோடு வைத்துக் கொண்டனர். இதனால் இருபாலருக்கும் நெருக்கடிகள் தோன்றின. அதிலும் ஆண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே மிகுதி. ஏனென்றால் பெண்களிடையில் எப்படியாவது சில ஆடவராவது எஞ்சியிருந்தனர். எனவே ஆண்கள் செயற்கையான பாலுறவு முறைகளை வளர்த்தனர். பெண்களிடையிலும் செயற்கை முறைகள் உருவாயின. அவற்றின் விளைவாகப் பாலியல் நோய்களும் உருவாயின. ஆண்குறியின் மேல்தோலை அகற்றுதல், பெண் குறியிலுள்ள நாக்குப் பகுதியை அகற்றல் போன்ற நடைமுறைகள் இப்பழக்கங்களின் பின்தொடர்ச்சியே. தன்னினப் புணர்ச்சிக்கு பல்வேறு சமயங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளும் இதன் விளைவேயாம்.

ஆடவர்களின் இந்தப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? ஒரு கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஆடவர்கள் பிற கூட்டத்தைச் சேர்ந்த பெண்களைத் தூக்கி வந்து கூட்டாகப் புணர்ந்தனர். பின்னர் நாளடைவில் ஒவ்வொரு கூட்டத்து ஆடவரும் பிற கூட்டத்து பெண்களுடன் உறவு கொள்ளும் புற மண வழக்கம் உண்டாகியது. அது மட்டுமல்ல முன்பு ஒரு தாயாதிக் குடும்பத்தினுள் நிலவி வந்த பாலுறவு மறைந்து அதன் இடத்தில் பல்வேறு வடிவங்களிலான மண உறவு முறைகள் உருவாயின.

மனித இனம் இயல்பில் வரைமுறையற்ற பாலுறவு கொண்டது. அதனால் ஏற்பட்ட இறுக்கமான ஒற்றுமை பிற உயிரினங்களை வெற்றி கொண்டு வளர்வதற்கேற்ற வலிமையை அதற்குக் கொடுத்தது. ஆனால் அதே வளர்ச்சியே நாளடைவில் அந்த ஒற்றுமைக்கு அறைகூவலாக அமைந்தது. அதற்கு விளைப்பு உத்திகளில் ஏற்பட்ட மேம்பாடுகளும் அதனால் ஏற்பட்ட விளைப்புப் பெருக்கமும் காரணமாக அமைந்தன. வாணிக வளர்ச்சி, அதனால் உருவான பாதுகாப்புச் சிக்கல்கள், வாணிகத்திற்குத் தேவைப்பட்ட படைப் பாதுகாப்பு அதன் வளர்ச்சியிலிருந்து உருவான அரசு போன்ற அமைப்புகள் குமுகக் கூட்டு உழைப்பிலிருந்து ஆடவரில் ஒரு பகுதியினரை விடுவித்தன. பெண்ணின் தாய்மை, அதன் தொடர்ச்சியான குழந்தையைப் பேணுதல் முதலியன அவளை இத்துறைகளில் ஆணுடன் போட்டியிட முடியாதவளாக்கின. சிறிது சிறிதாக பெண்ணின் தலைமை வலுவிழந்தது. ஆணின் நிலைமை வலுப்பெற்றது. அப்போதும் கூட ஆண்-பெண் உறவில் ஈரடுக்கு அமைப்பு ஒன்று இருந்தது. குழுவின் தலைவனின் குடும்பம் ஆண் தலைமையுடையதாகவும் மற்றவை பெண் தலைமையுடையவையாயும் இருந்தன. கேரளத்து நாயர்களின் முன்னாள் குடும்ப அமைப்பு இத்தகையது. தமிழகத்திலும் இத்தகைய அமைப்பு இருந்தமைக்குத் தடையங்கள் உள்ளன.

கூட்டுழைப்பிலிருந்து விடுபட்டு ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு உயர்ந்த ஆடவனுடன் வாழப் பெண்கள் புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்டவர்கள் கைவிடப்பட்ட போது நெருக்கடிகள் உருவாயின. விலைமகளிர் உருவாயினர். திருமணம் என்ற ஒப்பந்த முறையும் உருவானது. பெண் ஆடவனை அண்டி வாழ வேண்டியவளானாள்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
(தொல்காப்பியம்)

அதே போல் நிலத்தை ஆள்கின்ற நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் கூட துணைவியான பெண் அவனை அண்டி வாழ வேண்டியவளானாள். கூட்டுழைப்பில் வாழ்ந்த பெண்ணுக்கிருந்த தற்சார்போ, துணிவோ, வழிவகையோ அவளுக்கில்லை.

இவ்வாறு பெண்ணின் அடிமைத் தனத்தின் வடிவமாகத் தனிக் குடும்பம் உருவானது. பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்தன.


தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவின் பல்வேறு நிலைகளை நம்மால் உய்த்துணர முடிகிறது. காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு அவனைப் புணர்ந்து பிரிந்து செல்லும் “கூடல்” கட்டத்துக் குறிஞ்சித் திணை, தாம் விரும்பும் வரை மட்டும் சேர்ந்திருந்து வாழும் “இருத்தல்” கட்டத்து முல்லைத் திணை, வாணிகமோ, படைப்பணியோ, அரசூழியமோ செய்வதற்காகத் தம் கூட்டத்தை விட்டுச் செல்லும் ஆடவனுடன் பெண்ணும் “பிரிந்து” செல்லும் பிரிவு காட்டும் பாலைத் திணை, கணவன் பிற பெண்கள், அதாவது பரத்தையருடன் உறவு கொள்வதை அறிந்தும் அவனைப் பிரிந்து செல்லும் துணிவைத் தராத பொருளியல் சூழலில் “ஊடல்” செய்ய மட்டும் உரிமை கொண்டிருந்த மருதத் திணை, கணவனைப் பிரிவிலோ, சாவிலோ இழந்து விட்டால் அத்துடன் வாழ்வையே இழந்து பிரிவை நினைத்து இரங்கி வாழும் கைம்மை நிலையைக் காட்டும் நெய்தல் திணை என்பவை பொருளிலக்கணத்தின் மூலம் வெளிப்படும் கட்டங்களாகும். தொல்காப்பியத்தில் பெண்கள் கடற்பயணம் செய்யக் கூடாது என்ற தடையைக் காண்கிறோம். பெண்களின் குமுகச் செயற்பாடுகளில் இடப்பட்ட தடைகளுக்குத் திட்டவட்டமான ஒரு சான்றாகும் இது.

தமிழக மக்களின் பண்டை வரலாற்றின் சில மிக முகாமையான செய்திகளைத் தன்னகத்தே வைத்துள்ள சிலப்பதிகாரம் பெண்ணின் நிலைமையைப் பற்றிய சிறப்பான சில செய்திகளைக் கூறுகிறது.

1. குன்றக் குரவையில் குறவர் பெண்கள் தங்கள் காதலர்களையே மணம் செய்யவும் பிறரை மணம் செய்வதை விலக்கவும் வரமருளுமாறு கண்ணகியை வேண்டுகின்றனர். குறிஞ்சி நிலப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காட்டும் காட்சி இது.

2. தலைக்கோல் பெற்ற கணிகையாகிய மாதவி தன் குமுகக் கடமையாக இந்திர விழா போன்ற நிகழ்ச்சிகளில் ஆடச் செல்வதைக் கோவலன் விரும்பவில்லை. அதனை மீறி அவள் நடப்பதற்காக அவன் ஊடியிருந்ததைக் கடலாடு காதையில் காண்கிறோம்.

3. அதே போல் கோவலனிடம் தன் உள்ளடக்கிடக்கையை எடுத்துக் கூறிய கண்ணகி தனக்கு அவன் இழைத்த கொடுமைகளில் பெரியதாக அருளாளர்களையும் விருந்தினர்களையும் பேணுவதாகிய குமுகப் பணிகளைச் செய்யவொட்டாமல் தடுத்ததே என்று கூறுகிறாள் (கொலைக்களக் காதை).

4. கோவலன் கொலையுண்டதை அறிந்து கண்ணகி பெண்கள் மீது சுமத்தப்படும் கைம்மைக் கொடுமைகளை எடுத்துக் கூறி அத்தகைய கைம்மையைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறாள். அந்தச் சூளுரையின் விளைவு தான் அவளது தொடர்ந்த செயற்பாடுகள்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் பெண்ணுரிமை, பெண்ணடிமை போன்ற கருத்துகள் பற்றிய கலந்துரைகள் வெளிப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலையின் தலைவி திருமணம் இல்லாமலேயே வாழ்கிறாள். மக்கள்தொண்டு புரிகிறாள். அரசனை எதிர்த்து இயக்கமே நடத்துகிறாள்.

இதற்கும் மேலே சென்றுள்ளது குண்டலகேசி காவியம். அக்காவியத்தின் தலைவியாகிய வாணிக குலப்பெண் கொடியவனான கொள்ளையன் ஒருவனைக் காதலித்துப் பின்னர் அரசனால் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவனை மீட்டுத் திருமணம் புரிந்து கொண்டாள். பின்னர் ஒரு முறை அவர்கள் கேளிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த போது கணவனை விளையாட்டாகக் கொள்ளைக்காரன்தானே என்று கூறியதை அக்கொடியவன் மனதில் வன்மமாக வைத்திருந்தான். மலை வளம் காண்போமென அழைத்துச் சென்று மலை உச்சியிலிருந்து அவளை உருட்டி விடப் போவதாகக் கூறுகிறான். அவளோ அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து தானே முந்தி அவனை உருட்டி விட்டுக் கொன்று விடுகிறாள்.

இந்தக் கதையின் தலைவி, இக்கதையின் திரைப்படத் தழுவலாக வந்த ‘மந்திரிகுமாரி’யின் தலைவியைப் போலவோ “அந்த நாள்” தலைவியைப் போலவோ நாட்டுப்பற்றுக்காகத் தன் கணவனை “ஈகம்” செய்யவில்லை. தனக்காக, ஒரு மனிதப் பிறவியாகிய தன் உயிரைக் காத்துக் கொள்ளத் தன்னைக் கொல்ல வந்த கணவன் எனும் உறவு கொண்டவனாயினும் இன்னொரு மனிதப் பிறவியைத் தானே முந்திக் கொன்றாள். அவ்வாறு ஒரு மனிதப் பிறவியாகத் தனக்குள்ள தன்னுயிர் காக்கும் உரிமையைக் காத்து நின்றாள். அக்காவியமும் அவளைத் “தற்கொல்லியை முற்கொல்லி” என்று அழைத்து அவளுக்குள்ள உயிர்வாழும் உரிமையை வலியுறுத்துகிறது.

இக்கதைத் தலைவி துறவு மேற்கொண்டு புத்த சமயத்தைத் தழுவிப் பெரும் புகழ் பெற்றதாக அந்தக் கதை கூறுகிறது.

புத்த சமயத்தின் இக்கதைக்குப் போட்டியாகக் கணவனால் கொல்லப்பட்டுப் பேயாகிப் பின்னர் அவனைக் கொன்று பழிவாங்கிய நீலி மறுபிறவியில் நீலகேசியாகப் பிறந்து சமணத் துறவியாகிப் புகழ்பெற்றதாக நீலகேசி காவியம் கூறுகிறது.

இவையெல்லாம் பெண்ணுரிமை குறித்து அவ்வப்போது தோன்றிய இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகள் எந்த அளவுக்கு உண்மையில் பெண்களின் உரிமைகளின் வெளிப்பாடுகள் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றமும், பொருளியலில் ஓரளவு தற்சார்பும் பெற்ற நிலையிலும் கூட நம் இலக்கியம் பெண்ணுரிமையைப் பொறுத்த வரை இந்த உயரத்தை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு பெண்ணுரிமையைப் பொறுத்து ஒன்றோடொன்று போட்டி போட்ட இவ்விரண்டு சமயங்களும் பிற்காலத்தில் பெண்களைப் பாவப் பிறவிகளென்று கூறின.

சிவனியத்தின் எழுச்சிக்குப் பல்லாண்டு பாடியவர் காரைக்காலம்மையார். அதன் முன்னேற்றத்துக்குத் திலகவதி, மங்கையர்க்கரசி போன்ற பெண்கள் ஆற்றிய தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் வெற்றி பெற்ற சிவனியம் பெண்களை இழி பிறவிகளாகவே மதித்தது.

மாலியத்திற்கு ஆண்டாளின் பணி அளப்பரியது. ஆனால் வலுப்பெற்ற மாலியம் பெண்களை மதிக்கவில்லை.

இவையனைத்தும் சுட்டிக்காட்டுவது ஒரே உண்மையைத்தான். குமுக இயக்கங்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு உத்தியாகவே பெண்ணுரிமையை எடுத்துரைக்கின்றனவேயன்றி பெண்ணுரிமை மீதுள்ள ஆர்வத்தினாலல்ல என்பதே அது. இதைத் தான் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் கூறுகிறார். இந்த நிலையில் பெண்களே தலைமை தாங்கி நடத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து பணத்தையும் முழக்கங்களையும் இரவல் வாங்கிச் செயற்படும் இயக்கங்கள் என்று பல உள்ளன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வரதட்சிணை ஒழிப்பு என்ற முழக்கங்களை இவை வைக்கின்றன. பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு என்ற கேள்வி மெல்லியதாகவே கேட்கிறது.

பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு, அனைத்துத் தொழிலிலும் ஈடுபட உரிமை என்ற கேள்விகள் எழுந்தாலும் அதனுள்ளே இருக்கும் ஒரு பெரிய சிக்கல் பெரும் தடங்கலாக இருக்கிறது. இதன் விளைவாக உண்மையிலேயே பெண்ணுரிமையை விரும்புவோரும் விரும்புவோர் போலக் காட்டிக் கொள்வோரும் ஒரு குறையை முன் வைக்கிறார்கள். பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்க முன் வந்தாலும் அவர்கள் பின்னணியிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்பது தான் அந்தக் குறை. இப்படி ஒரு நிலைமை இருப்பது உண்மைதான். இதற்கு மூன்று காரணங்களை முகாமையாகக் கூறலாம்.

முதற்காரணம் ஒருவகைக் கூச்சம். இதுவரை வீட்டினுள்ளும் மிஞ்சிப் போனால் கல்வி நிலையங்களுக்குள்ளும் அடங்கிப் போயிருந்த பெண்கள் திடீரென்று வெளியில் வந்து தாராளமாகப் பழகுவதில் உள்ள கூச்சம். இந்தக் கூச்சம் பெரும்பாலான ஆடவர்களிடமும் கூட உண்டு. இதனாலேயே பலர் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் அதை அவர்கள் தவிர்க்கக் காரணமாகிறது. பெண்களிடையில் குமுகச் சூழலால் உருவான கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலகி அதனால் இக்கூச்சமும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இரண்டாவது காரணம் மெத்தனம். இப்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்குச் சில வசதிகள் இருப்பதாகக் கருதுகிறார்கள். தம் தலை மீது சுமைகள் எதையும் தாங்க வேண்டியதில்லை. பணம் ஈட்டல், அவற்றுக்கு ஏற்றவாறு செலவுகளை முறைப்படுத்தல், செலவுகளின் முன்னுரிமையை முடிவு செய்தல், பணம் ஈட்டுவதிலுள்ள ஒழுக்கம், தன்மானம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளல் போன்ற பொறுப்புகளிலிருந்து தப்புவது போன்றவை குடும்பத்தினுள் உள்ள வசதிகள்.

பேருந்துகள், திரைப்பட அரங்குகள் போன்றவற்றில் பெண்களுக்கென்று மட்டும் ஒதுக்கீடுகள், சில துறைகளில் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கருத்து நிலவுதல் போன்ற சிறப்புச் சலுகைகள் போன்றவை பெண்களை இன்று நிலவும் அமைப்பை உடைத்து விடுபட வேண்டுமென்ற வேட்கையைப் பரவலாக ஊட்டவில்லை.

மூன்றாவது காரணம் முகாமையானது மட்டுமல்ல பிற இரண்டு காரணங்களுக்கும் அடிப்படையானது. புறமனதில் வெளிப்படாமல் உள்மனதில் மறைந்து நின்று செயற்படுவது. அதை நாம் பெண்மை அச்சம் என்று குறிப்பிடலாம். தாய்மை அச்சம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்.

பெண் புறவாழ்வில் ஈடுபட்டால் பலதரப்பட்ட ஆண்களோடும் பழக வேண்டியிருக்கும். இரவு, பகல் என்ற வேறுபாடு, உள்ளூர், வெளியூர் என்ற வேறுபாடு இன்றிப் பழகவேண்டியிருக்கும். அத்தகைய சூழல்களில் அவள் விரும்பியோ விரும்பாமலோ திருமணத்திற்கு முன்பாக அல்லது திருமணத்துக்குப் புறம்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளநேரும். அது வெளிஉலகுக்குத் தெரியாமலிருந்தாலும் தாய்மை மூலம் வெளிப்படலாம். அதன் மூலம் அவள் குடும்ப வாழ்வும் குமுக வாழ்வும் பாதிக்கப்படுவது இன்றைய நிலையில் உறுதி. இன்று ஒரு பெண் பிற ஆடவர்களுடன் தன் தொழில் தேவைகளுக்காகக் கூட குமுகம் விதித்திருக்கிற வரம்புக்கு அதிகமாகப் பழகினால் அவள் மீது ஐயங்கொள்கிறது. குமுகக் கட்டுபாட்டை மீறுபவளென்று குற்றம் சாட்டுகிறது. அவளை ஒதுக்கி வைக்கிறது. பெண்கள் அவளை ஏளனம் செய்கின்றனர். ஆண்கள் அவள் பெண்மையை மலிவாகக் கருதுகின்றனர். வீட்டினுள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கணவனும் அவளை நம்ப மறுக்கின்றனர். அவள் தன்மானத்துடன் வாழ்வது இயலாமற் போகிறது. அளவிலாத் துணிவும் திறமையும் பெற்ற சிலர் இச்சூழலிலும் புறவாழ்வில் வெற்றி பெறுகின்றனர். பலர் பொருளியல், அரசியல் பின்னணியினால் நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் பற்றி இழிசொற்கள் கூறப்பட்டாலும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் எல்லையை அவர்கள் தாண்டி நிற்கிறார்கள்.

வரலாற்றில் குறிப்பாகப் பிற்போக்கு நிலவிய இடைக்காலத்திலும் பெண்கள் புறவாழ்வில் ஈடுபட்டுப் புகழெய்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் ஏதோவொரு விலைகொடுக்க வேண்டியிருந்தது. காரைக்காலம்மையார் பேயுருக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் சரியாகப் புரியவில்லை. ஆனால் பெண்ணென்ற வகையில் ஆண்கள் நெருங்க முடியாத ஓர் உருவத்தை அவர் பூண்டார் என்பது புலனாகிறது. ஒளவையார் என்ற பெயரில் அழைக்கப்படும் பெண்கள் கிழவிகளாகவே குறிப்பிடப்படுகின்றனர். முதுமை எய்திய பின்னர் தான் புறவாழ்வில் ஈடுபட்டனர் என்பது இதன் பொருளாயிருக்கலாம். திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் வீட்டினுள்ளிருந்தே தம்பியைச் சமயமாற்றம் கொள்ள வைத்ததன் மூலம் புகழ் பெற்றவர். அவரது புறவாழ்வு வீட்டினுள்ளேயே அடங்கிவிட்டது. கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி அரசனின் மனத்தை மாற்றியதினால் புகழ் பெற்றவள். ஆனால் அவளது ஒழுக்கத்தைப் பற்றிக் கேலி பேசுபவர்கள் உண்டு. மதுரை அரசி மீனாட்சி மகனின் பெயரால் நாட்டை ஆண்டவள். அதிகாரியாக இருந்த தாயுமானவரை அவளோடு தொடர்புபடுத்தியதால் அவர் துறவு பூண்டார். ஆனால் இக்குறைகள் பெரிதாய்ப் பேசப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களின் சமயச் சார்பு அவர்களைக் காத்து நிற்கிறது. ஆண்டாளுக்கு அரசனின் முழுத்துணையும் இருந்தது. ஆனால் அரங்கனோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்ற கதையின் பின்னால் என்ன ஒளிந்துகொண்டிருக்கிறதோ அறியோம்.

மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம். பணக்கார நாடுகளில் பெண்களின் நிலையைப் பார்ப்போம். புதினங்களின் மூலமாகவும், தாளிகைகளின் மூலமாகவும் அறிந்தவற்றைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

பொதுவாகவே ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின் பாலியல் பொறையுடைமை இருந்தது. ஒரு பெண் கணவனல்லாத ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரியவந்தால் ஆடவர் இருவரும் தனிப் போர் நடத்தி வெல்பவர் அப்பெண்ணை வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் அடிப்படையில் வானம் வசப்படும் என்ற தொடர்கதையை தினமணிகதிர் இதழில் பிரபஞ்சன் எழுதினார். ஆளுநர் டியூப்ளேயின் மனைவியின் மகள் (மனைவிக்கு டியூப்ளே இரண்டாம் கணவன்) வேறொருவனோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவனைக் கையும்களவுமாகப் பிடிப்பதற்காக அவளது கணவன் வருகிறான். மனைவியும் அவள் காதலனும் தனியறையில் கலவியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து நாகரிகத்துடன் பொறுமையாக வெளியில் காத்திருக்கிறான். அவர்கள் வெளியில் வந்த பின் மனைவியின் காதலனைத் தனிப் போருக்கு அழைக்கிறான். போரில் காதலன் பின்னடைய மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறான். செல்லப் பிள்ளையாக வளர்ந்து உலகம் அறியாதவளாக வாழ்ந்து விட்ட அப்பெண் மனம் கருகி உண்ணாமலிருந்து செத்துப் போகிறாள்.

கிறித்தவ சமயம் மணவிலக்கை ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் மணவிலக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் வழக்கு மன்றம் செல்லாமலே வழக்குரைஞர்கள் மூலம் மணவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். பொருட்படுத்தத் தேவையற்றவை என நமக்குத் தோன்றும் காரணங்களுக்கெல்லாம் கூட அங்கு மணவிலக்கு வழங்கப்படுகிறது. தன் துணை வேறொருவருடன் உடலுறவு கொள்வதைக் கண்டு அது அவருக்கும் தெரிந்துவிட்டால் இருவரும் உடனடியாக மணவிலக்குப் பெற்றுக் கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே வாழ்வர். ஆனால் தன் துணை இன்னொருவருடன் காதலுடன் பழகுவதைப் பொறுத்துக் கொள்வதும் அதைப் பிறர் அறிந்தாலும் மற்றவரை அதற்காக இழிவாக நினைப்பதும், தூற்றுவதும் இல்லை. கழகப் பாடல்களில் குறிப்பிடப்படுவது போல் “அலர்” எழுவது உண்டு.

இவ்வளவு இருந்தும் அமெரிக்கப் பெண்களுக்கு நிறைவு இல்லை. திருமணத்தையே தங்களுக்கு இடப்படும் விலங்காகக் கருதுகிறார்கள். என்னதான் கணவன்கள் கண்டும் காணாமலுமாக நடந்து கொண்டாலும் மனைவி தனக்கென்று நேரத்தையும் மனத்தையும் கொஞ்சமாவது ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அதற்குக் கூட அமெரிக்கப் பெண்கள் ஆயத்தமாயில்லை. அதே நேரத்தில் உடலின்பத்தையும் குழந்தைப் பேற்றையும் புறக்கணிக்கவும் விரும்பவில்லை. எனவே தன்னிடம் நெருங்கிப் பழகவரும் ஆடவர்களிடம் எவ்வளவு காலம் வேண்டுமாயினும் இருவரும் விரும்பும் வரையில் சேர்ந்து வாழலாம்; ஆனால் அவன் என்றும் தன்னை மணம் புரிந்து கொள்ளக் கேட்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கின்றனர்.

தமக்குப் பிறக்கும் குழந்தைகளை காப்பகங்களில் வளர்க்கிறார்கள். கிழமை இறுதிகளில் தங்களோடு வைத்துக் கொள்கின்றனர். அங்கு பொதுவாக வேலை வாய்ப்புகளில் பெரும் இடரில்லை. வேலையிலிருக்கும் போது உள்ள ஈட்டத்தைச் சேமித்து முதலீடுகள் செய்து வேலையில்லாக் காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு மீண்டும் தந்தை என்ற உறவு இல்லாமலே குழந்தைகள் வாழும் சூழ்நிலை உலகில் உருவாகிறது.


அண்மையில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவர் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதைத் துணிவுடன் ஊரறிய வளர்த்து வருகிறார். இதுவும் அந்த அமெரிக்கப் பாணிதான்.

இதனுடன் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் வாழும் ஓரினப் புணர்ச்சி இப்போது மேலைநாடுகளில் மலிந்து வருகிறது. பிரிட்டன் ஒலிபரப்புக் கழகம் புதுமண இணைகளுக்கு வழங்கி வந்த தேனிலவுச் செலவுச் சலுகையை இத்தகைய ஓரினப் புணர்ச்சியாளருக்கும் மணமின்றிச் சேர்ந்து வாழ்வோருக்கும் விரிவுபடுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

பெண் தன் உரிமைகளில் எதனையும் ஆடவரோடு பகிர்ந்து கொள்ள மனமின்மையும் ஆடவன் தன் மனைவிக்குச் சமஉரிமை வழங்க விரும்பாமையுமே இத்தகைய ஓரினத் திருமணங்களுக்குக் காரணங்கள்.

இந்த வேளையில் கிறித்தவ மறைநூலில் காணப்படும் ஒரு செய்தி ஆர்வ மூட்டுவதாக உள்ளது. மக்கள் மீண்டும் உயிர்த்தெழுதலைப் பற்றி ஏசுவிடம் கேட்டனர். ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒருவர் பின் ஒருவராகக் கணவர்கள் இறந்து போக மீண்டும் மீண்டும் ஏழு முறை மணக்கிறாள். உயிர்த்தெழுதலின் போது அவள் அந்த ஏழுவரில் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது அந்தக் கேள்வி.

அவர் கூறிய விடை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உயிர்த்தெழலின் போது கணவன் மனைவி போன்ற உறவுகள் இருக்காது என்பதே அந்த விடை. இந்த விடை இக்கட்டான ஒரு கேள்வியிலிருந்து நழுவுவதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்குமோ? இருந்திருக்க முடியாது. ஏனென்றால் விடை கேள்வியைவிடச் சிக்கலானதாகும். பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை என்ற சிக்கல்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளிலிருந்தே இத்தகைய ஒரு விடை பிறக்க முடியும். ஏசுபிரான் கூறிய இந்த நிலையை நோக்கியே பணக்கார நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

நம் பண்டைத் தொன்மங்களில் கந்தருவர் என்றொரு இன மக்கள் வருகின்றனர். அவர்களை யாழோர் என்றும் விஞ்சையர் என்றும் இயக்கர் என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அங்கு ஆடவரும் பெண்களும் மணமின்றியே கூடுவர். பொருளிலக்கணத்திலுள்ள குறிஞ்சித் திணைக்கு யாழோர் மணத்தையே தொல்காப்பியர் ஒப்பிட்டுக் காட்டுவார். தொன்மங்கள் இதைக் கந்தருவ மணம் என்று குறிப்பிடும். துசியந்தனும் சகுந்தலையும் காட்டில் கந்தருவ மணம் புரிந்து கொண்டனர் என்றே மகாபாரதம் கூறும். கந்தர்வர்கள் வானில் பறப்பவர்கள். அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் போல் அறிவியலிலும் செல்வத்திலும் உயர்ந்திருந்த இவர்களிடையில் அவர்களை விடவும் மேம்பட்ட ஆண்-பெண் உறவுகள் சுட்டப்படுவதைப் பார்க்கும் போது இவர்கள் புராண வடிவில் காட்டப்படும் உண்மையில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமோ என்ற ஐயுறவு நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் நாட்டில் கணவனில்லாமல் பெண்கள் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. ஆடவர்கள், அதிலும் குறிப்பாகப் படித்த ஆடவர்கள் பணத்துக்காக மனைவிகளைத் தீக்குளிப்பாட்டும் வழக்கம் பெருகி வருகிறது. எனவே பெண்கள் உயிருக்கஞ்சித் திருமணத்தைத் தவிர்க்க முற்படுவர். அதற்காகவே தம் சொந்தக் காலில் நிற்கும் பயிற்சியையும் அவர்கள் மேற்கொள்வர்.

பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதும் பிறக்கும் முன்பே கண்டறிந்து கருக்கலைப்பதும் இன்று பொது வழக்கிலிருப்பவை. இது நம் நாட்டுப் பெண்ணியர்கள் நடுவில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவர்களால் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நடைமுறை பெண் அளவுககு மீறிக் கொடுமைப் படுத்தப்படுவதின் விளைவே. இந்த விளைவே ஆணின் ஆதிக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாக முடியும்.

வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவளை ஆடவரிடமிருந்து விலகி நிற்கத் தூண்டும் அதே வேளையில் பெண் குழந்தைக் கொலையும் கருக்கலைப்பும் எதிர்கால ஆண்-பெண் சமநிலையைக் குலைத்துப் பெண் ஒரு அரும்பொருளாய் மாறி விடுவாள். ஆண் மண்டியிட்டுத் தான் ஆக வேண்டும்.

மனிதன் இன்னும் பெருமளவு விலங்காகவே வாழ்கிறான். எனவே அவனால் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடிந்தாலும் தன் செயல்களை மாற்ற முடிவதில்லை. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்த பின்னரே அவன் இக்கொலைகளை நிறுத்த முயல்வான்: அதன் பின்னர் தான் உண்மையான ஆண்-பெண் சமநிலை உருவாகும். அதுவரை பெண்ணுரிமை இயக்கங்களும் அயராது பாடுபடவேண்டும்.


அடிக்குறிப்புகள்:

[1] இப்பகுதி சோவியத்து நாடு உடைபடுவதற்கு முன் எழுதப்பட்டதாகும்.
[2] எப். ஏங்கல்சு குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை.
[3] நியூசெஞ்சுரி புத்தக நிலைய வெளியீடு.

28.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு

மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம் நாட்டு மரபு. இன்று மேற்சாதிகளாகக் கருதப்படும் சிலவற்றில் புலால் உண்பவர் இருந்தாலும் தாம் புலால் உண்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் அச்சாதிகளிலுள்ள பணக்காரர்கள் மிகக் குறியாயிருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்ச்சாதிகளில் சில விதிவிலக்குகள் நீங்கலாக அனைவரும் புலால் உணவினரே. மாடு, பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியைத் தவிர்ப்பவர் வேண்டுமானால் இருக்கலாம்.

இயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடியாகப் பெறுகிறான். எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும்.[1] அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கன மற்றதுமாகும். எனவே தான் மேற்சாதியினரால் பொருளியலில் தாழ்ந்துவிட்டோர் தாமாகவே புலாலுணவுக்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் பொருளியலில் உயர்ந்துவிட்ட கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் வகைவகையாகக் காய்கறிகள் வாங்கவும் சமைக்கவும் பணமும் நேரமும் வந்தவுடன் மரக்கறி உணவுக்குத் தாவி விடுகின்றனர்.

புலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

புலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது குமுக உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்ற பழமொழி வட மாவட்டங்களில் நிலவுவது இதற்குச் சான்று. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.

நம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை. மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்கு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.

பாலின் புலாலுணவுத் தன்மையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு நூல் திறம்பட எடுத்துக் கூறுகிறது. காய்கறி உணவுகள் இருக்கும் சமையலறையில் பூனை அவற்றில் எதனையும் நாடாது உறியிலிருக்கும் பால்படு பொருட்களையே நாடுவதையும், பால் கெட்டுப் போனால் அதிலிருந்து எழும் கெட்ட நாற்றத்தையும் சான்றுகளாக எடுத்துக்காட்டியிருக்கிறது அந்நூல். வருண ஒற்றுமை விளக்கம் என்பது நூலின் பெயர். ஆசிரியர் பெயர் இராசகோபால பாரதி என்பது. பாரதத்தின் மக்களெல்லோரும் பாரதி என்ற பட்டத்தை மட்டுமே சூட்ட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் இவர் தன் பெயருக்குப் பின்னால் பாரதி என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. நூலின் படிகளைப் பெரியாரின் குடியரசு இதழுக்கும் அனுப்பியுள்ளார். அவ்விதழ் மட்டுமல்ல வேறு பல இதழ்கள், தனி மனிதர்களின் திறனாய்வுகளையும் நூலில் வெளியிட்டுள்ளார்.

இருந்தும் பெரியார் இந்த உண்மையைத் தன் கருத்துப் பரப்பலில் சேர்க்கவே இல்லை. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் முடிவு இதுதான். பெரியார் புல்லுணவு உயர்ந்தது என்றிருக்கும் கருத்தை உண்மையாகவே உடைக்க விரும்பவில்லை. உண்மையான புல்லுணவாளர்கள் சைவ வெள்ளாளர்களும் சமணர்களுமே, பார்ப்பனர்களல்ல என்று நிலைநிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேள்விகளின் போது மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று வேதம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செய்திப் பரப்பல் மாட்டிறைச்சியின் பெருமையை எடுத்துரைத்து, ‘எனவே ஒரு காலத்தில் பார்ப்பனரே புலாலை உண்டனர், ஆகையால் நாமும் அதை உண்பதில் தவறில்லை’ என்று கூறுவதற்கல்ல. பார்ப்பனர்கள் உண்மையான புல்லுணவினர் அல்ல என்றும் உண்மையான புல்லுணவினர் யாரென்றும் குறிப்பிட்டுச் சொல்லும் ஓர் உத்தியேயாகும் இது.

இன்னொரு புறம் புலால் உணவுக்கெதிரான கருத்துப் பரப்பல் வல்லரசுச் சுரண்டலுக்குக் கருவியாக இன்று செயற்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறைச்சியையும் மீனையும் பிடுங்கிச் செல்வதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்திப் புல்லுணவின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. மனிதத் தேவைக்கு மிக அதிகமான அளவில் புலாலுணவு தின்று நோய்களுக்கு ஆளாகும் மேலை நாட்டினரைச் சான்று காட்டி “அறிவியலாளர்கள்” அறிவுரைகள் வழங்குவர். சில முகம்மதியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு தம் சாதிப் பண்பாட்டைக் காக்க எப்போதும் முனைந்து நிற்கும் கூட்டம் அதற்குப் பெரும் விளம்பரம் கொடுக்கும். மக்கள் தம்மால் இந்த “இழிந்த” புலாலுணவை விட முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமைந்து நிற்பர், அல்லது அதை விட்டு விடவும் செய்வர். இங்குள்ள ஆடும் மாடும் இறைச்சியாகி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்குள்ளோரின் உடலையும் பணப்பைகளையும் கொழுக்க வைக்கும். எனவே ஏழை எளியவர்க்கும் எளிதில் ஊட்டச்சத்தைத் தருவனவும் மனிதன் நேரடியாக உட்கொள்ள முடியாத புல்பூண்டுகளை உட்கொண்டு வளருவனவுமாகிய விலங்குகளின் இறைச்சி உணவே நமக்குப் பொருத்தமானது என்ற வகையில் புலால் உணவாகிய பண்பாட்டுக் கூற்றினை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தொல்பழங்காலத்திலேயே வாணிகம்(போக்குவரத்து), வேளாண்மை, பால்படு பொருட்கள் ஆகிய தேவைகளின் பொருட்டு மாட்டைக் கொல்வதற்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நம் நாட்டில் நடந்துள்ளமைக்குச் சான்றுகள் நம் பண்பாட்டில் விரவிக் கிடக்கின்றன. வேள்விகளில் மாடுகள் பலியிடப்பட்டதால் வேள்விகளை எதிர்த்துப் பல போர்கள் நடந்துள்ளமை புராணங்களிலிருந்து புலப்படும். தக்கன் வேள்வியை அழித்த உமையை(தக்காயணி)த் தவிர வேள்விகளை அழித்தோர் அனைவரும் அரக்கர்களாக்கப்பட்டனர். (வேள்விகளை அழித்தவளென்று இராமனால் கொல்லப்பட்டவளாகக் கூறப்படும் தாடகை கூடத் தென்தமிழ் நாட்டில் உள்ள ஓர் மலையின் பெயராக நிலவுகிறாள். உமையாக மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியாகிய தடாதகைப் பிராட்டியின் இன்னொரு வடிவம் தானோ இவளும்?) புத்த சமண சமயங்களும் வேள்வியை எதிர்த்து எழுந்தனவே.

இன்று போக்குவரத்திலும் வேளாண்மையிலும் மாட்டின் தேவை மிகக் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பாலுக்கு வளர்ப்பதை விடக் கன்று ஈனுவதற்கென்றே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அடிவாரத்துக்குக் கொண்டு வராமலே மேற்குத் தொடர்ச்சி மலையினுள் கன்றுகளை ஈனுவதற்கென்றே மாடுகளை அம்மலையின் அடிவாரத்திலுள்ள மக்கள் மலைத்தொடர் நெடுகிலும் வளர்க்கிறார்கள். முன்பு காளைக் கன்றுகள் வளர்ந்ததும் வண்டியிழுப்பதற்கும் உழவுக்கும் விற்கப்பட்டன. சமநிலத்திலும் இதுவே பெரும்பான்மை வழக்கம். கன்றுக்குப் பால் கொடுப்பதைத் தவிர மனிதத் தேவைக்காகப் பால் கறக்கப்படாமையால் தமிழ்நாட்டு மாடுகளில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பால்மடி வளர்ச்சியடையவில்லை. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள பால்மாட்டு இனங்கள் உருவாகவில்லை. அதே வேளையில், முன்பு போல் கன்று ஈனும் மாடுகள் ஈன்று கொண்டே இருக்கின்றன. கன்றுகள் அண்டையிலுள்ள கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றமதியாகின்றன.

இந்த நிலையில் மாட்டிறைச்சி மீது மக்களுக்கிருக்கும் தவறான கருத்துகளை மாற்றி அதனை உணவாகக் கொள்ளுவதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் மலிவு விலையில் அவர்களால் இறைச்சியைத் தாராளமாகப் பெற முடியும். உலகில் உடல் நிறத்திலும் தோற்றப் பொலிவிலும் உயரம், உடல் வலிமை, மூளை வலிமை ஆகியவற்றிலும் மேம்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டை இறைச்சியாக நேரடியாகவோ அல்லது பால், நெய் என்று மறைமுகமாகவோ உண்போரேயாவர். எனவே நம் மக்களும் வளமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டிறைச்சி உண்பதற்குத் தேவையான மாட்டையும் அதை உண்பதற்கான மன இசைவையும் வளர்த்தெடுப்பது தேவையாகும்.

சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்நாட்டில் அந்தணர் முதல் அடியோர் வரை இறைச்சியை உட்கொண்டதை அறிய முடிகிறது. அதில் இன்று போன்று இழிவுணர்ச்சி எதுவும் புலப்படவில்லை. சோற்றோடு இறைச்சியை வேகவைத்து உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. இன்று பிரியாணி என்று முகம்மதியார்கள் விரும்பி உண்ணும் உணவு வகை அன்று புலவுச் சோறு என்று வழங்கப்பட்டது. அதில் பயன்பட்ட மெல்லிய அரிசி இன்று புலவரிசி (புலவு அரிசி) என அழைக்கப்படுகிறது. இந்த உண்மைகளிலிருந்து இறைச்சிக்கெதிரான கருத்துகள் பிற்காலத்திலேயே உருவாயின என்பது புலப்படும். இவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

புலாலுணவுக்கெதிரான கருத்துப் பரப்பல்களிலொன்று விலங்குக் கொழுப்பு உடல் நலத்துக்குத் தீங்கானது என்பதாகும். அதில் அடங்கியிருக்கும் கொலற்றரால் எனும் பொருள் குருதி நாளச் சுவர்களில் படிந்து குருதியோட்டத்தைத் தடுத்து குருதிக் கொதிப்பிற்கும் நெஞ்சாங்குலை நோய்க்கும் மார்படைப்புக்கும் இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவக் கருத்தை எதிர்க்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. அத்துடன் விலங்குக் கொழுப்புகளை விட நிலத்திணைக் கொழுப்புகளே பெரும்பான்மையாகக் கொலற்றராலைக் கொண்டுள்ளன. மீன் கொழுப்பு உண்மையில் கொலற்றராலைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது. கோழிக் கொழுப்பில் கொலற்றரால் கிடையாது. ஆனால் நிலைத்திணைக் கொழுப்பில் நாட்டில் புழக்கத்திலிருப்பவற்றில் நல்லெண்ணைய் ஒன்று தான் கொலற்றரால் இல்லாதது. இந்நிலையில் விலங்குக் கொழுப்புக்கெதிரான இந்தப் பரப்பல் பொய்ம்மையானது, குறும்புத்தனமானது.

அதே நேரத்தில் நம் நாட்டு மக்களின் சராசரி கனலி (Calorie) நுகர்வோ உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. புலாலுணவு நுகர்வோ அதை விடவும் குறைவு. அப்படியிருக்க நம்மிடையில் “கொழுப்புச் சத்து மிகுதி தொடர்பான நோய்கள்” மட்டும் மிகுதி. இது ஏன்? அரேபியர்களும், ஆத்திரேலியர்களும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உருசியர்களும் உணவில் பெரும்பகுதியாகப் புலாலையே உட்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுடன் ஒப்பிட நம் மக்களுக்கு இந்நோய்கள் ஏன் மிகுதி?

இதற்குப் பொருளியல், குமுகியல் சூழல் தான் காரணம். இந்நாட்டில் ஆண்மகன் குடும்பம் எனும் மிகப்பெரும் தளையால் பிணைக்கப்பட்டவன். மனைவி அவன் கால்களுக்குக் கட்டுப்போடுகிறாள். தன் மக்களுடன் சேர்ந்து அவன் தோள் மீது அமர்ந்து கொள்கிறாள். நிலவும் சூழ்நிலையில் என்னதான் பாடுபட்டாலும் குடும்பத்தின் தேவைகளை அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. வெளிஉலகிலோ தலைவிரித்தாடும் ஊழல், ஏமாற்று, உழைப்புக்கு மதிப்பின்மை, நேர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு, உண்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பகைமைகள், அடாவடி அரசியல், உலகம், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு செய்யும் கயவர் கூட்டங்களுடன் காவல்துறையின் கூட்டு இவையனைத்தும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளியல் வாழ்வு, கல்வியியல், வேலைவாய்ப்பு என்ற அனைத்திலும் கைக்கூலியே நோக்கமாகக் கொண்ட சட்டதிட்டங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டும், அலைக்கழிக்கும் ஆட்சி முறை என்று அமைதியில்லா மனம்.

பெண்ணுக்கோ பிறந்ததிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படும் நிலை. பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடபுத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்துவிட்டு நடைமுறையில் பெற்றோர் நிகழ்த்தும் கொடுங்கோண்மை. அரசூழியம் போன்ற வேலைக்குச் சென்றால் அவ்வேலையுடன் அவ்வாறு செல்லாத பெண்கள் செய்யும் பணிகளில் இவளுக்கு எந்தச் சலுகையுமின்மை. அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் கணைவீச்சுகள், அதனால் பாதிப்புறும் அவளுக்கு மறுபுறத்தில் சற்றும் நெகிழ்ந்து கொடுக்காத காலத்துக் கொவ்வாத கற்பு நெறி அளவீடுகள். பழமையை விட்டுக்கொடுக்காத குமுகச் சூழ்நிலையில் மாறிவரும் நடைமுறைகளை நாடிப்போகும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமை என்று பலதிசை இழுவிசைகளுக்குள் அவளுக்கு அமைதியில்லா மனம்.

வேலைக்குச் செல்லாத பெண்கள் வெளி உலகின் கவர்ச்சிகள் இழுத்தாலும் அதற்கு இடங்கொடுக்க முடியாத மனச்சூழல். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உண்டாகும் இறுக்கம், பிறரெல்லாரும் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்வது போன்ற மாயத்தோற்றம் தன் மீதும் கணவன் மீதும் ஏற்படுத்துகின்ற வெறுப்பு என்று அனைவருக்கும் இந்தக் குமுகச் சூழல் அமைதியின்மையை உருவாக்கி விட்டிருக்கிறது.

வாணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு உட்பட்டாலும் வரித்துறையினரின் அதிலும் வருமானவரித் துறையினரின் அச்சுறுத்தல் அவர்களை விழிப்பிலும் தூக்கத்திலும் விரட்டுகிறது. இவற்றாலெல்லாம் நம் மக்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுக்குத் தொடர்பில்லாத நோய்கள் உருவாகின்றன.

புறநானூற்றில் பிசிராந்தையார் தனக்குத் தலை நரைக்காமைக்குக் கூறிய காரணங்கள் உயர்வு நவிர்ச்சியல்ல என்பதற்கு இன்றைய நம் நாட்டு மக்களே சான்று.

அதே நேரத்தில் புல்லுணவு உயர்வானதென்று கூறித் தம் மேன்மையை நிலைநாட்ட விரும்பும் பொய்ம்மையாளர் இச்சூழலை எல்லாம் மறைத்து புலாலுணவு தான் இதற்குக் காரணம் என்று கூறிப் பொய்ப் பரப்புகிறார்கள்.

அத்துடன் இயற்கை மருத்துவம் என்ற பெயரால் முகாம்கள் நடத்துவதில் பெரும் ஊக்கம் காட்டுகிறார்கள். வல்லரசு நாடுகள் இதற்குப் பெரும் பணம் செலவழிக்கின்றன.

வளர்ந்தவர்களையும், முதியவர்களையும் நோக்கியதென்ற பெயரால் பொதுத் தொடர்புக் கருவிகள் (வானொலி, தொலைக்காட்சி, தாளிகைகள், திரைப்படம்) மூலமாகச் செய்யப்படும் இப்பரப்பல் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைப் பற்றிக் கொண்டு “இதில் கொழுப்பிருக்கிறது”, “அதில் கொலற்றரால் இருக்கிறது” என்று சொல்லி சத்தான உணவு வகைகளைப் புறக்கணிக்க வைக்கிறது. அதனால் நடுத்தர வகுப்பினரின் வளரும் தலைமுறையே உடல் வலிமையிலும் மூளை வலிமையிலும் சுண்டிப்போய் விட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் வலுமிக்க வளருந் தலைமுறையின் நலனுக்காகவும் மக்களுக்கு இன்றியமையாத புலால், ஏற்றுமதி என்ற பெயரால் கடத்தப்பட்டு நமக்குக் கிடைக்காமற் போவதைத் தடுத்து நிறுத்தவும் புலாலுணவின் மேன்மையையும் புல்லுணவின் போதாமை, இயலாமைகளையும் மக்களிடம் வலிமையாகப் பரப்ப வேண்டும்.



அடிக்குறிப்பு:

[1] நம் நாட்டு மரபு மருத்துவ முறையிலும் சீன மருத்துவ முறையிலும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு நோயுற்றால் அல்லது வலிமை குன்றினால் கால்நடைகளின் அதே உறுப்பை உண்பதன் மூலம் அதனைச் சரி செய்ய முடியும் என்ற கருத்து உள்ளது. அதனை மேலைநாட்டு மருத்துவம் படித்த நம் நாட்டினர் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் கல்லீரல் பிழிவுகள் ((Liver extracts) போன்ற மருந்துகள் பயன்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

14.2.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 2. சமயம்

தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே நேரடியாகத் தம் தெய்வங்களை வணங்குவதைச் சிறுநெறி என்றும் வகுத்தனர்.[1] பெரும் கோயில்களில் தேர்த் திருவிழா, பார்ப்பனப் பூசாரிகளால் சமற்கிருதத்தில் போற்றி (அர்ச்சனை), ஆறுகால பூசை, நெய்வேதியம், வேள்வி, தேவரடியார்கள், காணிக்கை மற்றும் பெரும் நில மானியங்களோடுள்ள தெய்வங்களைப் பெருந்தெய்வங்களென்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூசை, தெய்வமாடுதல், பலிகொடுத்தல், நேர்த்திக் கடன் செய்தல் ஆகியவற்றோடு வணங்கப்படும் தெய்வங்களைச் சிறு தெய்வங்களென்றும் கூறும் மரபு இன்று நம்மிடம் உள்ளது. ஆனால் இவ்விரு நெறிகளையும் கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த வகைப்பாடு தலைகீழான தென்பது புலப்படும். பெரும்பான்மை மக்கள் வழிபடும் முறையைப் பெருநெறி என்றும் சிறுபான்மையினரின் நெறியைச் சிறுநெறி என்றும் அழைப்பது தான் சரியான நெறி. ஆனால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வழக்கிலுள்ள வகைப்பாட்டையே இங்கு நாம் பின்பற்றுகிறோம்.

மேற்சாதிக் கடவுள்களாகச் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சத்தி ஆகியோர் விளங்குகின்றனர். கீழ்ச்சாதிக் கடவுள்களாக மாரியம்மன், முத்தாரம்மன், காளி, இயக்கி, நீலி, திரவுபதை போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன், வண்ணாரமாடன், இயக்கிமாடன், கொம்பமாடன், பன்றிமாடன், மதுரைவீரன், முனியன், சடையன், சப்பாணி போன்ற ஆண் தெய்வங்களும் மற்றும் எண்ணற்ற குல தெய்வங்களும் குடும்பத் தெய்வங்களும் விளங்குகின்றன.

பெருந்தெய்வங்கள் எனப்படுபவை கூடச் சிறு தெய்வங்களாயிருந்து உருமாறியவையே. ஆண்குறி, பெண்குறி வணக்கங்கள் குறியியல் வடிவம் பெற்று இலிங்கமாக இணைந்தன. சங்க கால அகத்துறைத் தலைவியரின் கிண்டலுக்குள்ளாகிய, உயிர்ப்பலியுண்ட வேலன் இன்று முருகனாகிவிட்டான். இன்றும் இந்த நிகழ்முறை தொடர்கிறது. மாரியம்மன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பணக்கார” மாரியம்மன் கோயில்களெல்லாம் பெருந்தெய்வ வழிபாட்டு முறை நோக்கித் திரும்பிவிட்டன. சிறு தெய்வவழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய தென்பதற்குப் பெருந்தெய்வக் கோயில்களிலேயே சான்றுகள் உள்ளன. எல்லாக் கோயில்களிலுமிருக்கும் பலிபீடம் அத்தகைய சான்றுகளில் ஒன்று. இப்பலிபீடத்துக்கு எத்தனையோ ஆதனிய (ஆன்மீக) விளக்கங்களை மதவாணர்கள் தந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. பல கோயில்களில் பலியிடுவதற்கென்றே கொண்டு வரப்படும் விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விற்கப்படுவதை நாம் காண முடியும். உயிர்ப்பலியிட்டு குருதி சிந்துவதை எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தில் தோய்த்துப் பிழிவதன் மூலம் ஈடுசெய்வதைக் காணலாம். இந்து மத இயக்கத்தினர் பல ஊர்க்கோயில்களில் பெருந்தெய்வ வழிபாட்டைப் புகுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் முயற்சி வெற்றிபெறாது. குமுக அடித்தளத்தில் பண்பியல் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த காலங்களில் போலவே இன்றும் புதிது புதிதாகச் சிறு தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

கீழ்ச்சாதி மக்களின் சமய நெறியாகிய சிறு தெய்வ வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையாகிய பண்டப் படைப்போடு நெருங்கிய தொடர்புடையது. தாங்கள் படைத்த பண்டங்களைப் படையல் செய்து அவற்றை உண்டு வழிபட்டு தொடர்ந்து வரும் தங்கள் உழைப்புக்கு உரிய பலன் வேண்டி கூட்டாக வணங்குவது அவர்களது வழிபாட்டு முறை. தாங்கள் பலி கொடுக்கும் விலங்குகளையும் படையலிட்ட உணவையும் தங்கள் உறவினர்களுடன் உண்டு களிக்கின்றனர். வழிபாட்டைத் தாங்களே கலை வடிவில் நிகழ்த்துகின்றனர். அவர்களது வழிபாட்டில் பண்டங்களின் அழிவு மிகக் குறைவு. வழிபாட்டின் போதே தொடர்ந்து பருவ நிலைகள், செழுமை போன்றவற்றை அறிவதற்காகச் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். (இவை எந்த அளவுக்கு அறிவியலுக்கு உகந்தவை என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டில் “அறிவியல்” பயின்று விட்டதாகக் கொட்டமடிக்கும் எந்த மேதையும் இன்று வரை கருதியதில்லை. ஒருபுறம் அவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்குவோரும் மறுபுறம் அவற்றில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுகிறது என்று போற்றி ஒதுங்குவோருமே உள்ளனர்.) கீழ்ச்சாதியினர் தம் தெய்வத்திடம், அதாவது தெய்வமாடியாகிய ஒரு மனிதனின் மீது ஏறி அவனை ஆட வைப்பதாகத் தாங்கள் நம்பும் தெய்வத்திடம் தம் தாய்மொழியில் முறையிடவோ சண்டையிடவோ அல்லது அதைத் தூற்றவோ கூடத் தயங்குவதில்லை. அவர்களது வேண்டுதல்கள் எப்போதும் இவ்வுலகைப் பற்றியவையே. மேற்ச்சாதியான் தன் வளமையை உலகுக்குக் காட்டவும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் இவ்வுலகிலும் மேலுலகிலும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றும் அல்லது மக்களை ஏமாற்றிக் கோயிற் சொத்துகளையும் ஊராரையும் கொள்ளையடிக்கவும் “பெருந்தெய்வங்”களுக்குக் காணிக்கைகளும் “திருப்பணி”களும் வேடிக்கைகளும் செய்கிறான். சுரண்டப்பட்ட மனித உழைப்பும் நேரடியான மனித உழைப்பும் அளவற்று வீணடிக்கப்படுகின்றன. தனது “வேண்டுகோள்களை” இறைவனுக்குச் சொல்வதற்கென்று இடைத்தரகர்களை வைத்துத் தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் கூறுவதைக் கேட்டுப் பூரித்துப் போகிறான். மேலுலகில் முடிவில்லாத இன்ப விளையாட்டே அவனது இறுதிக் குறிக்கோள்.

இந்த இரண்டு முறைகளில் நாம் ஏன் கீழ்ச்சாதி மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்போம். உலகில் மனித வடிவில் வணங்கப்படும் தெய்வங்களில் பெரும்பாலானவை வீர வணக்கத்திலிருந்து உருவானவையே. கட்டுத்திட்டமான நெறிமுறைகளை உடைய யூத மதத்தின் யகோவா வணக்கம் மோசேயைச் சிந்திக்காமல் நடைபெறுவதில்லை. அதே போல் முகமது நபி இல்லாமல் அல்லா இல்லை. இயேசு ஆகிய மகன் இன்றி ஆண்டவர் ஆகிய “தந்தை” இல்லை. இவையெல்லாம் வீர வழிபாட்டின் திரிந்த வடிவங்களே.

தமிழகத்திலும் வீர வழிபாடு நினைவுக் கெட்டாத காலந்தொட்டு வருவது. வீரச்செயல் புரிந்தோருக்கு நடுகல் நடுவது நமது மரபு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் (தொல். பொருள் 60)

என்று அதற்கு இலக்கணமும் வகுக்கப் பட்டிருக்கிறது.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
(அகம் 131)

போன்ற விளக்கங்களும் காணக்கிடக்கின்றன.

இயற்கையை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு வழிகாட்டியோர், எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்தோர், மக்களுக்குத் தொண்டாற்றியோர், பெருமைக்குரிய முன்னோர், செயற்கரிய செய்தோர், போர்க்களத்தில் வீரமரணம் எய்தியோர், இயற்கையல்லா முறையில் இறந்தோர் சிறு தெய்வங்களாயினர். வன்கொலையாக இளம் பருவத்தில் வாழ்க்கையை நுகரா நிலையில் மாண்டோர், சூலியாக மாண்ட பெண்கள், கொல்லப்பட்டோர் ஆகியோர் பேய் வடிவில் தம் கொலைக்குக் காரணமானவர்களை அல்லது தொய்வுறாத தமது இளமைத் துடிப்பு காரணமாக பொதுமக்களைத் துன்புறுத்துவர் என்ற அச்சத்தாலும் வணங்கப்பட்டனர். மற்றும் நன்மை அல்லது தீமை செய்யும் விலங்குகள், மரங்கள் போன்று உயிருள்ளவையும் உயிரற்றவையாகிய ஆறுகள், மலைகள், கடல்களும், கோள்கள், நாண்மீன்கள் போன்ற வான் பொருட்களும் கூட வணக்கத்துக்கு உரியவையாகின்றன.

இவ்வாறு வீர வணக்கத்திலிருந்து தோன்றி அவற்றின் தோற்றச் சூழலிலிருந்து அயற்பட்டும் அயற்படுத்தப்பட்டும் பல சிறு தெய்வங்கள் “பதவி உயர்வு” பெற்றுப் பெருந் தெய்வங்களாகியுள்ளன. இந்தப் பதவி உயர்த்தம் அனைத்தும் அவற்றை வணங்குவோர் பொருளியலில் அல்லது அரசியலில் உயர்வடைந்ததன் விளைவாகவோ அல்லது அத்தகைய முயற்சிகளுக்குத் துணையாகவோ நடைபெற்றுள்ளன என்பது அவற்றின் வரலாறுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் புலப்படும். அரசியல் காரணியே முனைப்பாகச் செயற்பட்டுள்ளது பெரும்பான்மை.

நம் நாட்டில் சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்துப் பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள அல்லது சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாக்கப் பல முயற்சிகள் நடந்துள்ளன. புதிய சமயங்களின் பின்னணியில் புதிய ஆளும் வகுப்புகள் உருவான காலங்களில் அவற்றின் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து செல்வத்தில் அல்லது செல்வாக்கில் வளர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகிவிட்ட நிலையில் தோன்றிய தலைவர்களும் பொதுச் சீர்த்திருத்தத் தலைவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களைச் சிவன், காளி, திருமால் ஆகியோரோடு உறவுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை எய்த அவர்கள் முனைந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவின. புதிய கதைகளும் புராணங்களின் கட்டற்ற பெருக்கமுமே ஒரே பயனாக இருந்துள்ளது. பழைய தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் போது புதுப் புதுத் தெய்வங்களும் புதுப்புதுப் புராணங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும், ஒவ்வொரு தெய்வத்தின் வரலாற்றையும் அணுகி ஆய்வோருக்கு அவற்றின் மீது படிந்திருக்கும் சமய, அரசியல் சுவடுகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றிலிருந்து தெய்வங்களையும் தெய்வங்களிலிருந்து வரலாற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அணுகல் உதவும்.

நாகரீகத் தொடக்கத்தில் மனிதன் இயற்கையையும் பிற மனிதக் கூட்டங்களையும் எதிர்த்து இடைவிடாத போராட்டம் நடத்த வேண்டியிருந்த சூழ்நிலையில் அவனுக்கு இரு வகைகளிலும் அருந்தொண்டாற்றியவர்களின் நினைவை அவன் போற்றியதில் தவறேதுமில்லை. இன்றும் பொருளியலிலும் அதனால் அறிவு வாய்ப்பிலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளும், இயற்கை ஆற்றல்களை விட மனிதனின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட குமுக ஆற்றல்களின் முன் ஈடு கொடுத்து நிற்க முடியாத குமுகச் சூழல்களும் தலைவர் வழிபாட்டை உருவாக்கியது தவிர்க்க முடியாததாகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கத்தில் மக்களுக்கும் தனியாட்களான தலைவர்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாக இருந்து, பின்னர் அது பகை முரண்பாடாகவும் ஆனால் அகவறுமை காரணமாக மக்களால் புரிந்து கொள்ள முடியாமலும் மாறுகிறது. மக்களிடையில் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் குறையுந் தோறும், அதன் விளைவாகவும் காரணமாகவும் மக்களிடையிலுள்ள உறவுகள் மேம்படுந்தோறும் இந்தப் பகை முரண்பாடு மீண்டும் நட்பு முரண்பாடாக மாறும். அப்போது இந்தத் தலைவர் வழிபாடு என்பது சிறந்தோரைப் போற்றுதல் என்பதாக மாறும். இன்று பொருள் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குமுக அமைப்பிலிருந்து விடுபடும் போது மனிதனை இயக்கும் விசை குமுக ஏற்பு என்ற குறிக்கோளாகவே அமையும். எனவே அப்போது சிறந்தோரைப் போற்றுதல் என்பது குமுகத்தின் நலனுக்கு எதிராக இருக்க முடியாது.

சிறந்தோரைப் போற்றுதல் என்பதிலிருந்த சிறு தெய்வ வழிபாடாகி முழு முதற் கடவுள் வழிபாட்டிற் சென்று நிற்கும் இன்றைய நிலையிலிருந்து சிறந்தோரைப் போற்றுதல் என்ற நிலையைப் புதிய சூழ்நிலைகளில் எய்த வேண்டுமாயின் சிறு தெய்வ வழிபாட்டை நம் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு சிறு தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்வு செய்து அதன் உண்மையான குமுகக் குறிதகவை மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களது பண்பாட்டை உயர்த்த வேண்டும். ஆய்வு நிலையில் பேரா.நா. வானமாமலை சில அடிப்படைப் பணிகளைப் புரிந்து (சில தவறுகள், முற்கோள்கள்[2] இருந்தாலும்) வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த மக்களின் உண்மையான சிக்கல்களைக் கையிலெடுத்து அவற்றின் மெய்யான தீர்வுக்குச் சரியான வழிகாட்டி அவர்களை வழிநடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் இயக்கத்தால் தான் இப்பணியை முழுமையாக்கி நடத்தி வெற்றி பெற முடியும்.

இந்த இடத்தில் வரலாற்றில் “உயர்நிலை”த் தெய்வங்களைக் கைவிட்டு வீர வழிபாட்டுக்கு மாறிய ஒரு மக்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சப்பானியர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட “பேரரசு மீட்பியக்கம்” (Meiji Restoration) அதுவரை அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த மேற்சாதி மதமான புத்தத்தைப் புறக்கணித்து விட்டு வீர வழிபாட்டுச் சமயமான சிண்டோயியத்தை (Shintoism)த் தேசியச் சமயமாக்கியது. அதன் விளைவாக அதுவரை இழிவுபடுத்தப்பட்டு வந்த பெரும்பான்மையான கீழ்ச்சாதி மக்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் உடலுழைப்பின் மீது மதிப்பும் உருவாகி இன்றைய புதிய சப்பான் உருவாவதற்கு அடிப்படையான உளவியல் சூழ்நிலை ஏற்பட்டது. நம் நாட்டில் இத்தகைய வீர வழிபாடான சிறு தெய்வங்கள் கீழ்ச்சாதிகளிலிருந்து அல்லது அவர்களது வாழ்வில் தொடர்பு கொண்ட தனி மனிதர்களிலிருந்து உண்டானவை. எனவே அவ்வழிபாட்டை உயர்த்திப் பிடிப்பதென்பது அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதாகவும் பொருள்படும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகும். அதிலிருந்து புதிய குமுகத்தைப் படைப்பதில் அவர்களது முழு ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைக்கும்.

ஆனால் பழைய மதங்களை நாம் அப்படியே என்றென்றும் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சமயமில்லா, கடவுளில்லா, மூடநம்பிக்கைகளில்லா ஒரு குமுகத்தைப் படைக்க வேண்டுமென்பதே நம் இறுதிக் குறிக்கோள். ஆனால் அதை எய்துவதற்குள் சில இடைநிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இயற்கையாற்றல்களும் குமுக விசைகளும் மனிதனின் கட்டுக்குள் இல்லாமலிருக்கும் வரை கடவுள் நம்பிக்கை ஏதோவொரு வடிவத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். ஆனால் அது குமுக வளர்ச்சிக்குத் தடையாயில்லாத வகையில் இருக்க வேண்டும்.

பெருந்தெய்வ வழிபாடு முழுக்க முழுக்க மன்னராட்சி மற்றும் நிலக்கிழமை மற்றும் வருணக் குமுக அமைப்பின் எதிரொளிப்பாகவும் அதற்கு வலுவூட்டுவதுமாகவே உள்ளது. மன்னர்களுக்குச் செய்யும் 16 வகைப் பணிவிடைகள் (சோடச உபசாரம்) தேர் ஊர்தல், வாகன உலா, கொடியேற்றுதல் முதலிய அனைத்தும் அக்குமுக அமைப்பையே எதிரொளிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் பூசகருக்குக் கருவறை, அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்மண்டபம். வணிகருக்கும் வேளாளருக்கும் திருச்சுற்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வெளிப்புறம் என்று வருண முறையிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

நிறைய சொத்துகளும் பெரும் உண்டியல் வருமானமும் உள்ள கோயில்களில் கூட திருவிழாவின் போது பெரும்பான்மை நாட்களும் பல்வேறு தரப்பு மக்களால் திருப்பணி(உபயம்)யாகவே விழா நடைபெறுகிறது. கோயில் வருமானத்திலிருந்து செய்யப்படும் செலவு மிகக்குறைவே. கோயில் வருமானத்தை தக்கார், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இறுதியில் ஏதாவதிருந்தால் பூசகர் ஆகியோர் கொள்ளையிட்டுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள நன்செய் நிலங்களின் பரப்பில் நான்கிலொரு பங்கு திருக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் உடைமையாயிருக்கின்றன என்று ஒரு புள்ளிக் கணக்கு குறிப்பிடுகிறது. இவற்றின் பயன்பாடு குத்தகையாளான் முழு ஆதிக்கத்தினுள் சென்றால் வேளாண்மைச் செல்வம் பெருகும். அது போலவே பெரும்பரப்புகளில் கோயில்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களும். “ஊர் கூடித் தேரிழுத்தல்” என்ற ஒரு சொலவடையை பழமையாளர்கள் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர். ஆனால் உண்மையில் தேரிழுக்கும் போது வெளிப்படுவது நம் மக்களின் ஒற்றுமையல்ல, வேற்றுமைகளே. தேர் என்னும் பெயரில் மரக்கட்டைகளின் ஒருபெரும் குவியல் மீது ஒரு பொம்மையை வைத்து இழுக்கும் கேலிக்கூத்தே தேரோட்டம். இதில் பூணூலணிந்த பார்ப்பான் தேரில் வைத்து இழுக்கப்படுவான். முதல் வரிசை (மரியாதை)க்காரரென்றும் அறங்காவலரென்றும் தக்காரென்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் என்றும் மேன்மக்கள் வடத்தைத் தொட்டு “இசைவு” வழங்குவர். பிற மக்கள் உடல் வருந்தி இழுப்பர். கட்டை போடுவதற்கென்று தனிச் சாதியார். பெரும்பாலும் மேற்சாதியினர், போற்றி(அர்ச்சனை)த் தட்டைக் காணிக்கையுடன் நீட்டுவர். இவ்வாறு தேரிழுக்கும் நடைமுறையில் நம் குமுகத்தில் நிலவும் அனைத்துச் சாதி, வகுப்பு வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை எல்லாக் கோயில்களிலும் “ஊர் கூடித் தேரிழுத்து” வந்த மக்கள் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டிருப்பார்களானால் வாணிகத்துக்காக இந்நாட்டினுள் நுழைந்த ஐரோப்பியக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆளலாமென்ற எண்ணமும் அதன் அடுத்த கட்டமாக ஆளவேண்டுமென்ற அவாவும் அதனடிப்படையில் அதற்கான முயற்சிகளும் அதன் விளைவாக இருநூறாண்டு அடிமைத்தனமும் விளைந்திருக்காது. இது நிகழ்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய 250 ஆண்டுக்காலம் (1600 - 1850) “ஊர் கூடித் தேரிழுத்த நம் “ஒற்றுமை” எங்கே போய் ஒளிந்து கொண்டது?

பல நூறு தன்கள் எடையுள்ள மரத்தைத் தேர் என்று சொல்லி அதில் ஒரு பொம்மையையும் பார்ப்பனர்களையும் வைத்து இழுப்பதும், மக்களுக்கு உண்மையான ஆர்வமில்லா நிலையில் பாரதிய சனதா கட்சி, இந்து முன்னணி, இரா.சே.ச. போன்ற பழமையாளர்கள் தெருத் தெருவாக மக்களைக் கெஞ்சித் திரிவதும் தேவையற்ற கிறுக்குத் தனங்கள். தேர் மரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு விட்டுத் தேர்த் திருவிழாக்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி முறை நிலவுகிறது. அத்துடன் தனித்தனிச் சாதிகளுக்கு ஒரே தெய்வத்துக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் பல இடங்களில் தோன்றியுள்ளன. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றும் ஒரே கோயிலில் தனித்தனித் திருவிழாக்கள் அல்லது கொடைவிழாக்கள் நடத்தப்படும் அளவுக்கு இப்போராட்டங்கள் முன்னேறியுள்ளன.

மொத்தத்தில் நம் குமுகத்திலுள்ள வழிபாட்டு முறையே சாதிகளற்ற ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு உகந்ததாயில்லை. எனவே அனைத்து மக்களும் சமத்துவத்துடன் அமைதியாகக் கலந்து எளிமையாகத் தம் மன அமைதியைத் தேடும் வகையில் கிறித்தவம், முகம்மதியம் போன்ற சமயங்களில் உள்ளவாறு அகன்ற, காற்றோட்டமும் வெளிச்சமுமுடைய தூய வழிபாட்டு மண்டபங்களில் வழிபாடு செய்யும் வகையில் உள்நாட்டு மதத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துகளைப் பரப்பும் “ஆன்மிக”த் தலைவர் எவராவது உருவானால் அவருடன் தோளோடு தோள் நின்று அந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் பெருங்கோயில்கள் எடுத்து அவற்றுக்கு நிறைய நிலங்களும் எழுதி வைக்கும் பழக்கம் மன்னர்களிடையில் வேர் கொண்டது. சோழப் பேரரசின் காலத்தில் அரசின் ஓர் உறுப்பாகவே கோயில்கள் செயற்படத் தொடங்கிவிட்டன. மக்களிடம் வரி தண்டுவதிலிருந்து நலப்பணிகள் செய்வது, படையணிகள் பராமரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் கோயில்கள் ஈடுபட்டன. இன்றோ அத்தகைய பணிகள் எதுவுமில்லை. கடவுளுக்குப் படையல் செய்வது, இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என்ற அளவில் சிறிய பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் பெரும் பணம் சுரண்டப்படுகிறது. எனவே இயல்பாகவே நிலங்கள் குத்தகையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. இந்நிலங்களை கோயில்களுக்கு மீட்க வேண்டும் என்ற குரல் வலுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்குரல் கொடுப்பவர் எவருமில்லை.

மன்னராட்சிக் காலத்தில் அரசின் அனைத்துப் பணிகளுமே கோயில்கள் மூலம் செய்யப்பட்டதால் அதற்குத் தேவையான பொருளியல் அடிப்படைக்கு நிலங்கள் தேவைப்பட்டன. இன்றோ வழிபாடு தவிர கோயில்கள் வேறெந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.

பண்டைக் கோயில்களில் பெரும்பாலானவை முன்பு கருவறை மட்டும் இருந்து பின்னர் வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் ஒவ்வொரு சுற்றாக விரிவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே கட்டிட வடிவமைப்பு ஒழுங்கற்றதாகவும் உள்ளே செல்லச் செல்ல காற்றும் வெளிச்சமும் புக முடியாத நிலையில் இருளடைந்து வெளவால்களின் உறைவிடமாகி ஈரமும் நாற்றமும் கொண்டு விளங்குகின்றன. ஒரு நலமான வழிபாட்டுக்கு இவை தகுதியற்றவையாகிவிட்டன. எனவே இக்கோயில்களைத் தகர்த்து விடலாம். கோயிலின் சொத்துக்களைக் குத்தகையாளருக்குச் சந்தை விலையில் பாதி விலையை வாங்கிக் கொண்டு கொடுத்துவிடலாம். பொதுமக்களின் குத்தகைச் சொத்துகளில் இந்நடைமுறையே கையாளப்படுகிறது. இதன் மூலம் நிலங்களின் விளைப்புத் திறன் உயரும். அந்நிலங்களில் பயிரிட்டு வரும் கீழ்ச்சாதி மக்கள் இதனால் பயன் பெறுவர். ஆங்காங்கிருக்கும் சிறு தெய்வக் கோயில்களைக் கூட இடித்துவிட்டு ஒவ்வொரு பகுதிக் கென்று மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெறும் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் கொண்ட கோயில்களைக் கட்டலாம். கோயில் பராமரிப்புச் செலவை அவ்வப்பகுதி மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாம். நாள் செல்லச் செல்ல, குமுகம் முன்னேற முன்னேற இந்தக் கோயிலும் செல்வாக்கிழந்து கோயிலில்லா, கடவுளில்லா குமுகம் உருவாகும். கோயில்களைப் பராமரிக்க பணம் செலுத்துவதில் மக்கள் காட்டும் ஆர்வம் அல்லது ஆர்வமின்மையே சமயத்தின் அல்லது கோயிலின் தேவை அல்லது தேவையின்மையை அளக்கும் அளவு கோலாகிவிடும்.

அடிக்குறிப்புகள்:

[1] மிலட்டன் சிங்கர் எனும் மேனாட்டு அறிஞர் இக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று தெரிகிறது.
[2] முற்கோள் : Prejudice

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 1. அறிமுகம்

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச் சகதியினுள் சிக்கித் தடுமாறினர். பின்னர் சீனத்தில் மாசேதுங் பண்பாட்டுப் புரட்சியை நடத்திய பிற்பாடு அவரைப் பின்பற்றியோர் பீக்கிங்கில் பெய்த மழைக்கு இங்கு குடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு மழைவிட்ட பின்னரும் இங்கு குடை பிடிப்பது நிற்கவில்லை; பொருளியல் சிக்கல்களைத் தொழிற்சங்க வாணிகர்களின் மொத்த வேட்டைக் களமாக்கிவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பண்பாட்டுப் பணிகள் என்ற பெயரால் வெறும் கலை இலக்கியங்களைக் கிளறி அதிலேயே இன்பம் காணுகின்றனர். எழுதப் பேனாவும் தாளும் அச்சிட அச்சகமும் சுவர்களில் விளம்பரம் எழுதவும் விற்றுக் கொடுக்கவும் நன்கொடை தண்டவும் இளைஞர் கூட்டமும் இருப்பதால் இதழ்கள் நடத்துவதோடு தங்கள் “பண்பாட்டுப் பணி” நிறைவு பெற்றதாக நம்பிவிடுகின்றனர். அல்லது நம்பச் சொல்கின்றனர். இந்த நிலையில் பண்பாடு என்பது என்ன, பொருளியல் வாழ்வுக்கும் அதற்கும் உரிய உறவு என்ன, பண்பாட்டுப் பணியில் கலை, இலக்கியம் ஆகியவற்றின் இடம் யாது, தமிழகம் இன்றுள்ள நிலையில் பொருளியல், பண்பாட்டுக் கலை இலக்கியப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாகிறோம்.

பண்பாடு என்பதை மார்க்சியம் குமுகத் (சமுகத்) தன்னுணர்வு என்ற சொல்லால் குறிக்கிறது. இதில், ஒரு மக்களின் சமயம், உணவு முறை, திருமண உறவுகள், அவர்கள் அணியும் உடை, சட்டங்கள், அரசியல் அமைப்பு, மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், நம்பிக்கைகள், சடங்குகள், அவர்கள் கொண்டாடும் திருநாட்கள், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை அடங்கும். அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை படைப்பு விசைகளான பொருளியல் அடித்தளத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அதே வேளையில் பொருளியல் அடித்தளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையான வடிவங்களில் வடித்துக் காட்டுவனவாகக் கலையும் இலக்கியமும் செயற்படுகின்றன.

பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் தேக்கி வைத்து அவற்றை வளப்படுத்துவதிலும் அதன் மூலம் தான் வளர்வதிலும் மொழி செயற்படுத்துகிறது. கலை இலக்கிய வடிவங்களில் பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதில் மொழியே எலும்பும் சதையுமாகச் செயற்படுகிறது.

கலை இலக்கியம் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ப் பெரும் புலவர் இளங்கோவடிகள் கூறுகிறார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்(து) ஓங்கிய
பாடலும் எழாலும்[1] பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென்(று) அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநல் நீழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து ….,
த்

தன் நூலை முடிக்கின்றார்.
[2]

சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பற்றி லெனின் பருப்பொருளியமும் பட்டறிவுத் திறனாய்வும்[3] என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.
[4]

ஆனால் வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் பொருளுக்கும் கண்ணாடியில் அதன் நிழலுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. கலை இலக்கியங்கள் தங்கள் தாக்கத்தைக் குமுகத்தின் மீது ஏற்படுத்த முடியும். ஆயினும் அவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி அளவோடு இருந்தால் தான் இது நடைபெறும். இந்த எல்லையைத் தாண்டிக் கலை இலக்கியம் செல்ல முற்பட்டால் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் வேடிக்கைப் பொருளாக அல்லது கனவாக மாறிவிடும். வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள இந்த இடைவெளியும் நிலையானதல்ல. குமுக மாற்ற வேகத்திற்கேற்ப அது கூடிக் குறையும்.

பண்பாடு என்ற பெயரால் கலை இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பது இவ்வகையில் நிழலைப் பிடிக்க முயல்வது போன்றதே. இவ்வாறு பண்பாட்டைத் தொடாத கலை இலக்கிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு பண்பாட்டுச் சிக்கலினுள் நுழைவோம்.

ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் இருவேறு பண்பாடுகள் உள்ளன என்று லெனின் கூறினார். சொற்களில் கூறவதாயின் இவை இரண்டும் உழைக்கும் மக்களின் பண்பாடும் உடமை வகுப்பின் பண்பாடும் ஆகும். நம் நாட்டின் இப்பண்பாடுகள் எவ்வாறு நிலவுகின்றன என்று பார்ப்போம்.

நம் நாட்டில் சாதி அடுக்குகளுக்கும் பொருளியில் வகுப்பு அடுக்குகளுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஓர் ஒத்திசைவு உண்டு. எனவே மேற்கூறபட்ட இரு பண்பாடுகளும் சாதிப் பண்பாடுகளாகவே நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன் நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வரலாற்றுப் போக்கில் பொருளியலில் மேல் நிலையிலிருந்த பல மக்கள் குழுவினர் அரசியல் மாற்றங்களினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களிடம் முன்பு நிலவிய சில உடைமை வகுப்புப் பண்பாட்டுக் கூறுகள் அல்லது கருத்துக்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இன்றைய பொருளியல் நிலைமையின் காரணமாகப் பலர் இப்பண்பாட்டுக் கூறுகளைக் கைவிட்டாலும் இன்று நாம் அவற்றின் இடத்தில் கடைப்பிடிக்கும் புதிய கூறுகளைப் இழித்துக் கூறுவதன் மூலம் தம் முன்னாள் பண்பாட்டையே தாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த நிகழ்முறையை மனதில் கொண்டால் தான் நம் குமுகப் போக்கை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் மேற்சாதியினரும் கீழ்ச்சாதியினரும் அடிப்படையில் முற்றிலும் வேறுவேறான இரு பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் ஒரே மண்ணில் வாழ்வதாலும் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத தொடர்புகளினாலும் பல வேளைகளில் இவ்விரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் துல்லியமாக அறிய முடியாமல் கூட இருக்கும். பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்களால் கீழ்ச்சாதியினரால் சிலர் மேம்பாடு அடையும் போது மேற்சாதிப் பண்பாடுகளைக் கைக்கொள்கின்றனர். இந்த நிகழ்முறை நம் மண்ணில் தொன்று தொட்டே நிலவி வரும் ஒன்றாகும். இதனைப் புதுப்பார்ப்பனியம் என்று நம்மில் சிலர் அழைக்கின்றோம். இந்த நிகழ்முறையை நாம் புதிதாக அறிகிறோமே தவிர நிகழ்முறை புதிதல்ல. எனவே இதனைப் பார்ப்பனியம் என்றே அழைக்க வேண்டும். தான் தன் சாதியினரின் சராசரிப் பொருளியல் நிலையை விட உயர்வடையும் போது தன் சாதியினரையும் அவர்களுடைய பண்பாட்டையும் இழிவாக் கருதி மேல் சாதியினருடன், அவர்கள் எட்டி உதைத்தாலும் அவ்வாறு உதைத்த காலை கட்டிப்படித்துக் கொண்டு உறவாடுவதைத் தான் பார்ப்பனியம் என்று கூற வேண்டும். இதுவே பார்ப்பனர்களின் தொடர்ச்சியான மேலாண்மைக்கு உயிரூற்றாகவும் கீழ்ச்சாதியினரின் மீளா அடிமைத் தனத்துக்கு உரமாகவும் விளங்குகிறது.

பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வெளியே வந்தாலும் கூட நம் நாட்டிலுள்ள மேற்சாதியினர் உட்பட்ட “பார்ப்பனியர்கள்” (புதுப்பார்ப்பனர் என்பதைப் பார்ப்பனியர்கள் என்ற சொல்லால் குறிப்பதே சரி என்று கருதுகிறேன்.) அதை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வேறு வகை வாழ்க்கையில் புக முயன்றால் இந்தப் பார்ப்பனியர்கள் உடனே கூக்குரலிடுவர். வள்ளுவர் கூட,

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

(வேதத்தைப் பார்ப்பான் மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் தன் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது) என்று கூறினார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர் மழை
புருச னைக்கொன்ற பூவையர்க் கோர் மழை
வருசம் மூன்றும ழையெனப் பெய்யுமே.

என்று மழை தப்புவதற்கான காரணங்களை விவேக சிந்தாமணி தொகுத்துக் கூறுகிறது.

“குலவொழுக்கம் குன்றிய் பார்ப்பான் கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடப்படுகிறான். புத்தர் முதல் செயகாந்தன் வரை உண்மையான பார்ப்பனனின் இலக்கணத்தைக் கூறுவதன் மூலம் இதே கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய பண்பாடுகளில் பார்ப்பனர்களும் அவர்களை ஒட்டி பிற மேற்சாதியினரும் பின்பற்றுகிற ஒழுக்கங்களை ஆரிய ஒழுக்கங்கள் என்றும் கீழ்ச்சாதியினர் அவற்றைக் கைகொள்ளுவதைச் சங்கதப்படுத்துதல் (Sanskritisation) என்றும் கூறுகின்றனர் குமுக இயல் ஆய்வாளர்கள்.[5] ஆனால் சங்கதத்துக்கோ வேதத்துக்குரியவர் என்று நம்பப்படும் ஆரியர்களுக்கோ இந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் எந்தத் தொடர்புமில்லை. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை மேற்கொள்வோம்.

வேதங்களோ வேள்வி நடத்தும் பார்ப்பனரோ ஊன் உணவை விலக்கவில்லை. உயிர்க்கொலை வேள்விகளை நடத்துவதே வேதிய (வைதீக) சமயமாகிய பார்ப்பன சமயமாகும். இதனை எதிர்த்தவையே புத்தமும் சமணமும். புத்த தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாறு இதனைத் தெற்றென விளக்குகிறது. வேள்வியில் பலியிடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஆமாட்டை அவிழ்த்து விடுவித்துவிட்டான் என்பதற்காகப் பார்ப்பனர்களால் தன் பார்ப்பன வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவன் துரத்தப்படுகிறான். இதிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பார்ப்பனர்கள் வேள்விகளில் மாட்டை அடித்துத் தின்று வந்தார்கள் அல்லது அத்தகைய கருத்து நிலவியது என்பது புலனாகிறது. பண்டப் படைப்பு வளர்ச்சியாலும் வேளாண்மை மற்றும் வாணிக வளர்ச்சிகளின் தேவைக்காகவும் ஏற்பட்ட மாட்டு உழைப்பின் தேவையால் மாட்டு வேள்வி எதிர்ப்பு உருவாகியது. பின்னர் வாணிகர்களின் மதமாகிய சமணத்தால் உயிர்க்கொலை எதிர்ப்பாக மட்டுமின்றி மூக்கில் திரையும் கையில் மயிற்பீலியும் இருட்டறை வாழ்வுமாகக் கோணல் வடிவம் பெற்றதே மரக்கறி உணவின் தோற்றம். அதே போல் பெண்ணின் அப்பழுக்கற்ற கற்பு வேதங்களிலோ புராணங்களிலோ வேண்டப்படவில்லை. அரசர்களின் மனைவிகள் ஆண்பிள்ளை பெறுவதற்காகக் கணவனின் உடன்பிறந்தோர், தாயாதிகள், குலகுரு, யாராவது ஒரு துறவி அல்லது எந்த ஓர் ஆண்மகன், பலிகொடுக்கப்பட்ட குதிரை இவர்களுடனெல்லாம் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டனர். தலைமகன் உரிமை (Male primogeniture) என்ற அடிப்படையில் அரசன் இறந்த பின் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் குழப்பங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டிய ஒரு குமுகக் கடமையாக அவள் இவையனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. பார்ப்பனத் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் மணமகள் மணமகனுக்குத் தன்னை ஒப்படைக்கும் முன் யார் யாருக்கு உடமைப்பட்டவள் என்பது தொகுத்துக் கூறப்படுகிறது.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத் திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய “உயர்ந்த” பண்பாட்டுக் கூறகளை யெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு ஒவ்வொரு மேற்சாதிப் பண்பாட்டுக் கூறும் பணம் படைத்த பூரியப் பண்பாட்டுக் கூறு என்பதை நாம் பின்னால் விளக்குவோம். மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ்வொழுக்கங்கள் பார்ப்பனர்ககுரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல். பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல். கைம்பென் மறுமணத்தை மறுத்தல். மணவிலக்கு. மறுமணம் ஆகியவற்றை விலக்கல். உழைப்பை வெறுத்தல். சாதிவேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல். ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கையாள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது என்பதை இங்கு சொல்லி விடுகிறோம். எனவே மேற்சாதிப் பண்பாட்டு ஒழுக்கங்களைக் கீழ்ச் சாதியினர் கைக்கொள்ளும் செயல்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதை விட “பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவும் கருத்தைத் தெளிவாக விளக்குவதாகவும் அமையும்.

பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசும் நம் நாட்டிலுள்ள எந்தக் குழுவுக்கும் நாம் இங்கு கூற இருப்பவை தான் நம் நாட்டில் நிலவும் உண்மையான பண்பாட்டுக் கூறுகள் என்ற சிந்தனை கூடக் கிடையாது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். அடுத்து, அவர்கள் கூறும் புதிய பண்பாடு எது என்பதிலோ அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டுமென்பதிலோ சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் சில கலை, இலக்கியங்களைத் திறனாய்வதும் அக்கப்போர் அரசியல் பேசுவதும் “புதிய மக்களாட்சிப் புரட்சி” நடந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதும் தான். எதுவென்று தாங்களே அறியாதவர்கள், எங்கிருக்கிறோம் என்பதையும் அறியாத நிலையில் பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசுவது நம் நாட்டில் உள்ள இரங்கத்தக்க நிலைகளில் மிகக் கொடியது. நிற்கிற இடமும் அறியாமல் கடக்க வேண்டிய பாதையும் புரியாமல் இலக்கிலும் தெளிவில்லாமல் புதிய பண்பாட்டைப் பற்றிக் கூக்குரல் எழுப்பும் இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நமது தேடுதலைத் தொடர்வோம்.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நடக்க வேண்டுமாயின் முதலில் ஒரு காலை நின்ற இடத்தில் ஊன்றிக்கொண்டு மறுகாலைத் தூக்க வேண்டும். நமது குமுகத்தில் இருவேறு பண்பாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எதில் நாம் காலை ஊன்றிக்கொள்ள வேண்டும் எதிலிருந்து காலை நகர்த்த வேண்டுமென்று பார்ப்போம். ஒரு பாட்டாளி வகுப்புப் பண்பாட்டைப் படைப்பது நமது இலக்கு என்ற தெளிவிலிருந்து நாம் தொடங்க வேண்டும். நாம் மேலே கூறிய இரண்டு வகைப் பண்பாடுகளிலும் உழைக்கும் மக்களின் பண்பாடாக விளங்குவது கீழ்ச்சாதியினரின் பண்பாடே என்பதை நாம் காணலாம்.

பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வோம். இந்த ஆய்வில் முற்பட்ட சாதிகள் மேற்சாதிகளென்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் கீழ்ச்சாதிகளென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நாட்டுப்புறங்களில் நிலவுவற்றையும் மேற்சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நகர்ப்புறங்களில் நிலவுபவற்றையும் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இனி பண்பாட்டுக் கூறுகளை பார்ப்போம்.



அடிக்குறிப்புகள்:

[1] எழால் - யாழ்

[2] சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

[3] Materialism and Emprio Criticism

[4] சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மேலை உலகில் தோன்றி வளர்ந்தது. சங்கம் மருவிய காலத்துக்கு (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு) உரிய சிலப்பதிகாரத்தில் இலக்கியம் பற்றிய இத்தகைய தெளிவான கோட்பாடு உருவான குமுகச் சூழல் பற்றிப் பேசினால் நம் “மார்க்சியத்” தோழர்களுக்குக் எரிச்சல் வரும். சங்க காலத்தைக் குக்குலங்களின் (பழங்குடியினர்) காலமென்று காட்டவே அவர்கள் விரும்புவர். தொல்காப்பியத்தில் காணப்படும் எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் காட்டும் உயர்ந்த நாகரீகப் பின்னணியைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்காது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்ததென்று காட்டும் பார்ப்பனியச் சிந்தனை. இன்னொன்று குமுகம் எப்போதும் முன்னோக்கியே நகரும் என்ற தவறான கருத்து அல்லது பொய்யான வாதம். முதல் காரணமே பெரும்பாலும் இரண்டாம் காரணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பேரா.க.சிவத்தம்பி, பேரா. கைலாசபதி ஆகியோர் இச்சிந்தனைகளை வளர்த்துப் பரப்பிய மிகப்பெரும் “மார்க்சியர்கள்” என்ற பெருமைக்கு உரியவர்கள். இப்பணியைத் தொடங்கி வைத்த பேரா.நா.வானமாமலையையும் நாம் மறந்து விடக்கூடாது. மார்க்கியம் என்பது தமிழ்பப் பழிப்பு, தமிழ் ஒழிப்பு என்பதே என்ற மனப்பான்மையைப் பரப்பியோரில் இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

[5] சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச்சொல்லைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச் சண்முகனார் அதை “மேனிலையாக்கம்” என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழிமையும் விட மேம்பட்டவை என்பதைச் “சங்கதப்படுத்தல்” என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவே தான் “மேனிலையாக்கம்” என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் - ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

13.11.05

பாலை நிலத்து ஒட்டகம்

ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் "பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம்" என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு.சு.கி. ஜெயகரனின் கட்டுரைக்கு விடையாக பல மடலங்கள் கொண்ட ஒரு நூல் தொகுதியில் கூறப்பட வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

வெள்ளுவனின் அடிப்படைக் கருத்தாகிய இன்றைய தமிழகத்தில் பாலைவனம் இல்லை என்பதைச் சான்றுகளுடன் உறுதி செய்கிறது கட்டுரையின் முதல் பகுதி.

ஒட்டகத்தின் திரிவாக்கம் பற்றி விளக்குவது இரண்டாம் பகுதி. இன்றைய அகழ்வாய்வுச் சான்றுகளையும் காலக் கணிப்புகளையும் அடிப்படையாக்கக் கொண்டுள்ளார் திரு.ஜெயகரன். "பண்டை உலகின் ஒரு பெரும்பகுதி காலவோட்டத்தில் கடலினுள் மூழ்கியுள்ளது" என்ற உலகெங்கிலுமுள்ள மக்களின் பதிவுகளையும் மரபுவழிச் செய்திகளையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒருசாரரின் கருத்தையும் நம்பகமான ஒரு காலக்கணிப்பு முறையை இன்று வரை இன்றைய அறிவியல் துறை உருவாக்கவில்லை என்ற உண்மையையும் புறக்கணித்துவிட்ட ஒரு கூற்றாகும் அவருடையது. அத்துடன் உலகின் பெரும்பாலான விலங்குகள் முதல் நிலைத்திணைகள் (தாவரங்கள்) வரை ஒரு கோடியில் நீரில்லா வரண்ட பாலை முதல் இன்னொரு கோடியில் நீர் உறைந்த தாங்கவியலாக் குளிர் நிலமான பனிப்பகுதி வரை இடையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தட்பவெட்ப நிலைகளுக்குள் வாழ்ந்து திரிவாக்கம் பெற்றுள்ளன என்பதற்கான தடயங்களைக் காணமுடியும். அதனால், இன்று பசுமைச் சூழலுக்கும் பொருந்தியதாக விளங்கும் முழுமை பெற்ற ஒட்டகம் பாலைவனத்தில் தோன்றி அங்கேயே திரிவாக்கம் பெறவில்லை என்பதால் மட்டும் மனிதன் தோன்றிய பின் இருந்த ஒரு பாலை நிலத்தில் ஒட்டகமும் இருந்திருக்கிறது என்பது பொருந்தாக் கூற்றாகி விடாது. அதுவும் அந்த விலங்கைக் குறிக்கும் சொல்லைக் கொண்ட மிகப்பழைய இலக்கண நூலைக் கொண்ட மொழியைப் பேசுவோர் இன்று வாழும் நிலத்தில் பாலைநிலம் மட்டுமல்ல, ஒட்டகமும் இல்லாதபோது, தென் அமெரிக்காவில் ஒட்டக இனத்தைச் சேர்ந்த லாமா (Llama) என்ற விலங்கு உள்ளது. எனவே ஒட்டகத்தின் திரிவாக்கத்தில் தென் அரைக் கோளத்துக்கும் ( Southern Hemisphere ) பங்குண்டு என்பதும், மூழ்கிய பாலைநிலத்தில் ஒட்டகம் இருந்ததென்ற செய்தி அந்தத் திரிவாக்க வட்டத்தை முழுமைப்படுத்தும் ஒரு தரவு என்பதும் தெளிவு.

வரலாற்று வரைவென்பது வெறும் தொல்பொருளாய்வல்ல. தொல்லாய்வு வரலாற்றின் துணைத்துறைகளில் ஒன்று மட்டுமேயன்றி அதுவே இறுதியும் உறுதியுமாகாது.

ஒட்டகம் வயிற்றில் நீரையும் திமிலில் கொழுப்பையும் சேமித்துள்ளது. இரட்டைதிமில் உள்ள சைபிரியப் புல்வெளி ஒட்டகத்துக்கு இன்று பாலை ஒட்டகத்துக்குக் கிடைப்பதைவிட புல்லாகிய உணவு எளிதில் கிடைக்கலாம். ஆனால் இன்றைக்கு 10,000 முதல் 62.000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய நான்காம் பனிப்படர்ச்சி காலத்தொடக்கத்தில் பனிப்படர்வு தெற்கு நோக்கி நகர நகர அதற்குக் கிடைத்த உணவு வளம் குறையக்குறைய அதன் சேமிப்புத் திறன் உயர்ந்ததன் விளைவாகவே இரட்டைத் திமில் உருவாகியிருக்க வேண்டும். இதே நிகழ்ச்சிகள் இன்று கடலாக மாறியுள்ள தென் அரைக்கோளப் பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும். ஆர்வமுள்ள நில இயங்கியலாளர்கள் முயன்றால் வட அரைக் கோளத்தில் பனிப்படர்வுக் காலங்களில் இருந்த மிகத் தாழ்ந்த கடல் மட்டத்தை வைத்து தென்னரைக் கோளத்தில் இன்ன கடலடித்தள மட்டங்களின் அடிப்படையில் கடலுக்கு மேலிருந்த நிலப்பரப்புகளை இனம் காணமுடியும். அவ்விடங்களில் குறிப்பாக மகரவரையில் (மகரரேகை அட்சம் 23½° தெ) உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாலைநிலம் பற்றியும் ஒட்டகம் பற்றியும் கூறும் தொல்காப்பிய முரண்பாட்டுக்குத் தீர்வு காண முடியும்.

குமரிக்கண்டம் என்ற பெயர் பற்றிய திரு. ஜெயகரனின் மனக்குறை வேடிக்கையாக உள்ளது. அமெரிக்க மூலக்குடிகளுக்கு "சிவப்பிந்தியர்" என்று ஐரோப்பியர் குட்டிய பெயரை நாம் பயன்படுத்தலாம் என்றால், பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் கடலினுள் முழுகிய நிலத்துக்கு குமரிக்கண்டம் என்று கா. அப்பாத்துரையார் பெயர் குட்டியதிலும் அதை நாம் பின்பற்றுவதிலும் தவறேதுமில்லை.

சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டப் பெயர் மட்டுமல்ல, முழுகிய நிலப்பரப்பு பற்றிய தெளிவான குறிப்புகள் இடம்பெறாததில் வியப்பேதுமில்லை. தவறு சங்க இலக்கியங்களில் தமிழர்களின் முழு வரலாறும் அடங்கியுள்ளது என்று கொள்வதில் தான். அது ஒரு தொகுப்பு. தொகுத்தோரின் நலன்கள் அதில் அடங்கியுள்ளன. குமரிக் கண்டத்தைக் கடல் கொள்ளக் கொள்ள மக்கள் கடல் மூலம் எளிதாகக் கடந்து உலகெலாம் பரந்து செல்ல நிலவழியில் இறுதியாக வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,

“அடலருந்துப் பின் குரவே
தளவே குருந்தே முல்லை என்ற
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
இந்நான் கல்லது உணவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒன்று ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை”

என்று கூறுகிறது.

உலகளாவலுக்கு ( Globalisation ) எதிராக, ஏழை நாடுகளின் பண்பாடு அழிகிறது என்று இன்று கூறவோரின் குரல் இப்பாடலில் எதிரொலிக்கவில்லையா? அரசர்களைப் போற்றிப் பாடியவரான மாங்குடி மருதனாரையும் மாங்குடிக்கிழாரையும் ஒருவர் என்று தொகுப்பாளர்கள் கருதிவிட்டதால் இப்பாடல் தொகுப்பினுள் இடம்பெற்று விட்டது.

கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று (இன்றைய நம் ஆட்சியாளர்களைப் போல்) வந்தேறிகளான சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். பறையர் மீதான ஒடுக்குமுறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. "பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்", இது இலக்கியத்துக்கு வெளியேயுள்ள சான்று.

குமரி என்ற பெண்ணைப்பற்றிய குறிப்பும் சங்கத் தொகுப்பில் இல்லை. "குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி" என்ற சங்கப்பாடல் வரியில் அயிரை என்ற நன்னீர் மீன்பற்றிய குறிப்பு குமரித்துறை என்பது ஒர் ஆற்றுத் துறைமுகம் என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது. மீன்பற்றி தெளிவில்லாத தொகுப்பாளரால் இது தவறுதலாக இடம் பெற்றிருக்க வேண்டும். "குமரித்துறைவன்" என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதுமட்டுமல்ல, பாண்டிய மரபே ஒரு பெண்ணிலிருந்து தான் தொடங்கியது என்ற உண்மையும் சங்கத் தொகுப்பில் மறைக்கப்பட்டுள்ளது. மதுராபதி, கொற்றவை (வேட்டுவவரி) ஆகிய பெண் தெய்வங்கள் சிவனின் முன் வடிவம் என்ற செய்தியைக் கூட சிலப்பதிகாரம் மறைமுகமாகச் சுட்டுகிறது. குமரிக்கோடு, குமரியாறு, குமரி ஆழ்கடல் (தொடியோள் பௌவம்) போன்ற செய்திகளையும் சிலப்பதிகாரம் தான் தருகிறது. இவற்றின் அடிப்படையில் கடல் கொண்ட நிலப்பகுதியைக் குமரிக்கண்டம் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. திரு.ஜெயகரன் எதிர்ப்பார்ப்பது போல் கடலடியில் பெயர்ப்பலகை எதையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை.

சந்திரகுப்த மௌரியன் அவையிலிருந்த கிரேக்கத்தூதன் மெகாத்தனி, பாண்டிய மரபு பாண்டியா என்ற கிரேக்கப் பெண்ணிலிருந்து தோன்றியதாக எழுதி வைத்துள்ளான். உலகின் அனைத்து அரசு மரபுகளும் தம் கடவுளர்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவது பண்டைக் கிரேக்க மரபு. திருவிளையாடல் புராணம் பாண்டிய அரசியாகிய தடாதகைப்பிராட்டி பற்றி கூறுகிறது. உண்ணாமுலையாகிய மணமுடிக்காத குமரியை, எந்தக் கோயிலிலும் கணவனுடன் இன்றி தனியாகவே அமர்ந்துள்ள தேவியைச் சிவன் மனைவியாக்கியது போல், பண்டைத் தமிழகப் பெண்ணரசிகளாகிய அல்லியையும் பவளக்கொடியையும் மகாபாரதத் தலைமக்களின் மனைவிகளாக்கி வைத்துள்ள மக்கள் இலக்கியங்களும் புதைத்துள்ள உண்மைகளை நீலக்கடற்கரை ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியன்னை தமிழர்களின் முதல் பேரரசை அமைத்தவள் ஒரு பெண்ணென்றும் அவள் பெயர் குமரி என்றும் கண்ணும் கருத்தும் உள்ளோருக்கு நன்றாகக் கேட்குமளவுக்கு உரக்கக் கூறுகிறாள்.

இந்த உண்மைகளைச் சங்க நூற் தொகுப்புகள் மறைத்த பின்னணியில் தான் இளங்கோவடிகள், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் போன்றோர் சங்கத் தொகுப்புக்கு வெளியில் தாமறிந்த உண்மைகளைப் பதிந்து வைத்துள்ளனர்.

சங்கநூல் தொகுப்பாளர்களைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் சங்க நூற்கள் உட்பட பண்டை இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள் தங்கள் நலன்களுக்கேற்றவாறு பாட வேறுபாடுகளைக் காட்டினர். 17 - 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அறிஞர்கள் நம் நாட்டினுள் தொகுத்து வைத்திருந்த நாட்டார் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த அறிஞர்கள் அவற்றில் பெரும்பான்மையாயிருந்த, தங்கள் கண்ணோட்டத்துக்கு ஒவ்வாதவற்றை அழித்துவிட்டனர். இன்றும் ஒடுக்கப்பட்டு மேலேழும்பி வரும் மக்களிடையிலுள்ள அறிஞர்கள் சிலர் தமக்கு ஏற்றவாறு கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் திரித்து வெளியிடுகின்றனர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட (1979) கோவை இருளர்களைப் பற்றிய வனாந்தரப்பூக்கள் என்ற நூலை எழுதிய "செங்கோ" என்பவர் தனக்கு ஏற்பில்லாத தரவுகளைப் புறக்கணித்திருப்பதாகக் கூறுகிறார். எனவே தொகுப்பு நூல்களுக்கு வெளியே உள்ளவற்றுடன் ஒப்பிட்ட நூல்கள் தரும் செய்திகளை உரைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தினுள் நுழைந்த குமரிக்கண்ட மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கடும் நெருக்கடி அரபிக்கடலோரம் பஞ்சாபிப் பாலை நிலத்தில் (அவந்தி நாட்டில்) கட்சு வளைகுடாவில் வீழ்ந்து பின்னர் மணலில் மறைந்த காயங்கரை (மணிமேகலை 9. பழம் பிறம்புணர்ந்த காதை) எனப்படும் கோக்ரா ஆற்றின் (டி,டி,கோசாம்பி - பண்டைய இந்தியா) கரையிலேறி காடு செறிவில்லாத மேற்குத் திசை நோக்கி சிந்துவெளி முதல் காந்தாரம் வரையும், காடுகளை அழித்துக் கொண்டு கங்கைக் கரைவழியாகவும் பரவியவர்கள் காயங்கரை ஆற்றின் நினைவாகவோ அல்லது குமரிக் கண்டத்தில் இருந்த ஓர் ஆற்றின் நினைவாகவோ சரயு ஆற்றைப் பற்றிய நினைவைப் பதிந்தவர்களின் (கங்கையின் ஒரு கிளையாற்றுக்கு கோக்ரா என்று பெயரிட்டுள்ளனர் - டி.டி.கோசாம்பி - பண்டை இந்தியா வரைபடம்) படைப்புகளும் தொகுப்புகளுமாகிய வேதங்களிலும் இராமாயணம், மகாபாரதம், தொன்மங்கள் போன்றவற்றிலும் தான் குமரிக்கண்டம் பற்றிய செய்திகளை விரிவாக அறிய முடிகிறது. உபநிடதங்கள், பிராமணங்கள் மற்றும் பிற சமற்கிருத இலக்கியங்களை ஆய்ந்தால் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பல்வேறு துறை வளர்ச்சிகளை அறிய முடியும். வேதமொழி, சமற்கிருதம், அதிலுள்ள தொன்மங்கள் ஆகிய அனைத்தும் சிந்து சமவெளி குறியீடுகளிலிருந்து தோன்றியவை என்ற இந்திய முன்னாள் தொல்வாய்வு இயக்குனர் எஸ்.ஆர்.ராவின் கருத்து இதற்கு அரண் சேர்க்கிறது.

அதனால்தான் பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர திட்சிதர் முதல் பாவாணர் வரை தமிழகம், குமரிக் கண்டம் ஆகியவை குறித்த செய்திகளுக்கு சங்க இலக்கியங்களை விட சமற்கிருதத் தொன்மங்களிலிருந்தே சான்றுகளைக் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏழேழ் நாடுகள் பற்றிய அடியார்க்கு நல்லார் கூற்றில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டுச் சாதி வரலாறுகள் அனைத்திலும் ஏழு மாதர்கள் அல்லது தாயர் பற்றிய குறிப்பு உண்டு. ஏழு முனிவர்கள் பற்றி தொன்மங்கள் கூறுகின்றன. முறையே ஏழு பெண்களை முதல்வர்களாகக் கொண்ட குக்குலங்கள் ("இனக்குழுக்கள்") அக்குக்குலப் பூசாரித் தலைவர்கள் ஆகியோரையே இவை குறிக்கும். இத்தலைவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்தவர்களே நம் தொன்மங்களில் வரும் இந்திர பதவி ஏற்றோர். இது போன்ற ஒரு நடைமுறை பண்டை எகிப்தியப் பதிவுகளில் உள்ளதாக ஜோசப் கேம்பெல் என்பார் எழுதிய Masks of Gods - Primitive Mythology - என்ற நூலில் உள்ளது. இத்தகைய குக்குல தெய்வங்களைப் பின்னுக்குத் தள்ளி குறிஞ்சி முதல் நெய்தல் வரையுள்ள மக்களை நில எல்லை அடிப்படையில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தவர்களே பொருளிலக்கணம் கூறும் ஐந்நிலக் கடவுள்களின் மனித மூலவர்கள். இது தான் உலகில் முதன்முதலில் தோன்றிய மண்ணின் மைந்தர் ஆட்சி. ஏழு பிரிவான நிலங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வேழு குக்குலங்களுக்கும் உரிய பகுதிகள் ஒன்றுக்குள் ஒன்றாக விரவிக்கிடந்தன என்பது அடியார்க்குநல்லார் உரையிலிருந்து தெரிகிறது.

விசை என்ற இதழில் வந்த "மூதாயர்கள்" என்ற கட்டுரை உலக மக்கள் அனைவரும் 5 முதல் 10 எண்ணிக்கைக்கு உட்பட்ட பெண்களின் வழி வந்தவர்கள் என்று கூறுவது இதற்குப் பொருந்துகிறது.

ஈழம் என்பது யாழின் திரிபே. இலங்கையை ஆண்ட இராவணனின் கொடி யாழே! ஈழத்துள் யாழ்ப்பாணம் இருப்பது ஒரு சான்று. யாழை மீட்டுவோர் பாணர்.

இராவணனின் இலங்கை கூட இன்றைய இலங்கை அல்ல. அது கடகவரையில் (அட்சரேகை வ.23°30ˈ தோராயமாக ) இருக்கும் உச்சையினிலிருந்து பழந்தீவு பன்னீராயிரம் எனப்படும் இலக்கத் தீவுகள் வழியாக மகரவரை (அட்சம் தெ.23°30ˈ தோராயமாக) முடிய ஓடிய பண்டைய மைவரை(Meridian) ஆகிய இலங்கை உச்சையினி மைவரையில் (தீர்க்க ரேகை 75°43ˈ கிழக்கு) இருந்த தென்னிலங்கையே அது. விரிவுக்கு தமிழியக்கம் இதழில் வந்துள்ள " தென்னிலங்கை" என்னும் எமது கட்டுரை காண்க.

இனி காதங்கள், தொலைவுகள் பற்றிய பகுதிக்கு வருவோம். தமிழ் மரபில் நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற அளவைகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் ஒரே பெயருள்ள அளவைகள் வெவ்வேறு மதிப்பை கொண்டுள்ளது. துறைக்குத் துறையும் இந்த மாறுபாடு உள்ளது. வானியலில் உள்ள நீட்டல் அளவை நில அளவையில் வேறுபட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் சரியான அணுகலுடன் முயன்றால் தெளிவான விடையைப் பெற இயலும். அபிதான சிந்தாமணி என்ற தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தில் "கணிதவகை" என்ற சொல்லின் கீழ் "பூப்பிரமாணம் அறிதல்" என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கும் வாய்ப்பாடு இதற்கு பொருந்தும்.

சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு (3960 அடி)
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம் (15840 அடி = 3 x 5280 = 3மைல்கள் )
(கூப்பிடு - காது - காதம்?)
காற்றில் ஒலியின் விரைவு நொடிக்கு 1089 அடி.
தோராயமாக 1100 அடி
ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு = 24 x 60 x 1100 = 1584000 அடிகள் = 100 காதங்கள்.
அதாவது ஒரு காதம் என்பது ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் 100 இல் ஒரு பங்கு.

இவ்வாறு நம் முன்னோர்கள் நில அளவைக்கு காற்றில் ஒலியின் விரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது புலனாகிறது.

அபிதான சிந்தாமணியில் மேலேயுள்ள வாய்ப்பாட்டில் கோல் 56 என்றிருப்பதை 55 என்று திருத்தி மேற்கொண்டுள்ளேன். ஏனென்றால் பண்டை உலக நில அளவையில் 11 அடிப்படையான ஓர் அலகாகும். நம்மூர் மாட்டு வண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼ அடியாகும். வட்டத்தின் சுற்றையும் பரப்பையும் கணிக்க உதவும் 22/7 என்ற கூட்டுத்திறனை அகற்றுவதற்காக இந்த விட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கணிதப்படி இந்த மாட்டுவண்டிச் சக்கரத்தின் சுற்று = x விட்டம் = 22/7 x 21/4 அடி = 66/4 அடி = 16.5 அடி x 4 = 66 அடி = இன்றைய நில அளவைச் சங்கிலியின் நீளம் x 10 = 660 அடி = 1 பர்லாங் x 8 = 5280அடி = 1 மைல். 66 அடி x 66 அடி = 4356 ச.அடி. = 10 சென்றுகள் x 10 = 43560 அடி = 1 ஏக்கர். குமரி மாவட்டத்தில் ஓர் ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் என்பது சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் நடைமுறையிலிருந்தது. 43560 அடி x 2½ = 108900 ச.அடி = 330 அடி x 330 அடி . இன்றுள்ள 10 மீட்டர் = 32.8 அடி என்றிருப்பதை 33 அடி எனக் கொண்டால் 10000 ச.மீ. கொண்ட எக்டேர் பண்டைத் தமிழ் ஏருக்குச் சமமாகும். 2.75 அடி கொண்ட, கையாட்சிக்கு உகந்த, நம்மூர் தச்சு முழக்கோல் x 4 = 11 அடி. 12 தச்சு முழக்கோல் = 33 அடி = 10 மீட்டர். இன்று சாலைகளின் நீளத்தை அளக்க சக்கரம் பதித்த ஒரு கோலைத் தள்ளிச் செல்வது போல் அன்று மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உழுதொழில் புவித்தாயின் வயிற்றைத் கிழிப்பது, எனவே உழவர்களாகிய தசியூக்கள், அதாவது "திராவிடர்கள்" இழிவானவர்கள் என்று கருதியோராகக் கூறப்படும் "ஆரிய "இன் மக்களின் பெயர் கலப்பை எனப் பொருள்படும் "ஏர்" என்ற கிரோக்கச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறிய மாக்சுமுல்லருக்கு ஏர் ஒரு தமிழ்ச்சொல் என்பது தெரிந்திருக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை ஆரியர் என்ற "இன” மக்கள் உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதும் அவர்கள் மாக்சுமுல்லரின் கற்பனையில் பிறந்தவர்கள் என்பதும் விந்தியத்துக்கு வடக்கில் உள்ள நிலப்பரப்பை ஆரியம் என்பது தமிழ் வழக்கு என்பதும் எமது நிலைப்பாடுகள். ஆரியர் என்று வழங்கப்படும் மரபுக்குப் பொருள் ஆரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தானே யொழிய ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதல்ல.

தமிழ் இலக்கியங்கள் கூறும் முதற் கடற்கோளுக்குப் பின் உருவான தலைநகரான கபாடபுரம் 26.12.2004 அன்று தாக்கிய பேரலையால் கடுமையான தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தீவின் காலே நகர் இருக்கும் ஏறக்குறைய 5° வடக்கு நிரைவரை(அட்சரேகை) யில் இருந்திருக்குமெனக் கொண்டால் (பொருளியல் உரிமை இதழில் 1,2,3 ஆம் இதழ்களில் வந்திருக்கும் " பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்" என்ற கட்டுரையில் இதன் விளக்கத்தைக் காண்க.) அங்கிருந்து மகரவரை வரை 5° + 23 ½ = 28½ பாகைகள்.

1 பாகை நிரைவரைகளுக்கிடையில் உள்ள தொலைவு மேகலைவரையில் (நிலநடுக்கோடு) 68°70ˈ முனைகளில் 6°41ˈ மைல்கள். சராசரி 69,055, 28½ பாகைகளுக்குத் தோராயமாக 1982 மைல்கள். தமிழ் இலக்கியங்களின் கூற்றுப்படி முழுகிய நிலப்பரப்பாகிய 700 காதங்கள் = 700 x 3 = 2100 மைல்கள். மகரவரைக்குத் தெற்கில் அண்டார்டிக் வட்டம் வரை நம் முன்னோர்கள் பரவியிருந்தமைக்கு நம் தொன்மங்களில் உறுதியான சான்றுகள் உள்ளன. இந்தத் தொலைவை திரு. ஜெயகரன் வழியில் குமரி முனையிலிருந்து அதாவது 8°வ. நிரைவரையிலிருந்து தொடங்கினால் 8 + 23½ = 31½ x 69.055 = 2175 மைல்கள். அதாவது கிட்டத்தட்ட மகரவரை வரைதான் வருகிறது.

உலகில் அறிவியலும் நாகரிகமும் வெள்ளையர்கள் உலக முழுவதும் பரவத்தொடங்கிய 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் தோன்றின போலும். மக்கள் தொகைப் பெருக்கமும் அதன் பின்னரே தொடங்கியது போலும். எனவே தொல் பழங்காலத்தில் 49 நாடுகள் இருந்திருக்க முடியாது ஏழு ஊர்களே (ஊராட்சியா, சிறப்புநிலை ஊராட்சியா, தேர்வுநிலை ஊராட்சியா, நகர ஊராட்சியா அல்லது "ஆட்சி" இல்லாத சிற்றூரா, அவர்தான் "கண்டுபிடித்துக்" கூற வேண்டும்.) இருந்திருக்க முடியும் என்றும் திரு. ஜெயகரன் கூறுகிறார். மக்கள் தொகை பற்றிய மால்தூசியக் கோட்பாட்டின் முன்னோடியாக, அதாவது அளவின்றிப் பெருகி விட்ட மக்கள்தொகையைப் போரால் அழித்து பூமாதேவியின் சுமையைக் குறைப்பது என்று பாரதப்போரின் நோக்கம் கூறப்படுகிறது. எனவே 49 நாடுகள் மகரக்கோடு வரையிலும் அதற்கு அப்பாலும் கூட இருந்தன என்று கொள்வதில் அறிவியலுக்குப் பொருந்தாத எதுவும் இல்லை.

1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார். வெள்ளைத் தோல் ஐரோப்பியர் தவிர வேறெவருக்கும் அறிவியல் பார்வை இருக்க முடியாது என்ற கண்ணோட்டத்தில் அவை வெளிஉலகங்களிலிருந்து வந்தவர்களின் எய்தல்கள் முடிவுக்கு வருகிறார். உலகில் பிற பகுதிகளில் உள்ள தொன்மங்களில் "கடவுளர்கள்" வானுர்திகளில் மேலேயிருந்தும் கப்பல்களில் கடலிலிருந்தும் வந்தனர் என்று கூறப்பட்டுள்ளபோது நம் நாட்டுத் தொன்மங்களில் அசுரர்களும் அரசர்களும் கந்தர்வாகளும் வானூர்திகளில் பறந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிற பகுதி மக்கள் பதிந்து வைத்துள்ள "கடவுளர்கள்" நம் நாட்டிலிருந்து அங்கு சென்றவர்கள் தாம் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு வான்வழியாகவும் கடல் வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று அவர்களுக்கு நாகரிகத்தைக் கற்பித்த "கடவுளர்கள்" மீண்டும் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றனர். ஆனால் ஒருவர் கூடத் திரும்பவில்லை. குமரிக்கண்டம் கடலில் மறைந்து போனதால் தங்கள் வாக்குறுதியைக் காக்க முடியாமல் போயிற்று என்று கொள்வதில் என்ன தவறு?

உலகில் பல காரணங்களால், மாபெரும் விண்கற்கள் வீழ்வது கடலடி நில நடுக்கங்கள், எரிமலைச் சீறல்கள். பெரும் பனிமலைகள் கடலினுள் சறுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளால் கடலலைகள் எழும்பி மக்களையும் நகர்களையும் காடுகளையும் எண்ணற்ற உயிர்வகைகளையும் அழித்து புதிய உயிர் வகைகள் மீண்டும் உருவானது பற்றிய செய்திகள் புவி இயங்கியல் போன்ற அறிவியல்களைக் கற்றவர்களுக்கு மட்டுமல்ல. இன்றைய ஊடகங்கள் மூலமாக ஒவ்வொரு சராசரிக் குடிமகனுக்கும் தெரியும். அவை போன்ற நிகழ்வுகள் மனிதன் தோன்றிய பின்னும் நிகழ்ந்தன என்பதற்கு எண்ணற்ற பதிவுகளும் வாய்மொழி மரபுகளும் உள்ளன. அதே நேரத்தில் ஐம்புலன்களால் அறிவனவற்றைத் தான் நம்புவோம். பகுத்தறிவைப் பயன்படுத்தும் உய்த்தறிவை (Inference) ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூறும் பூதவாதிகள் எனப்படும் பட்டறிவியர்களுக்கு (Empricists) கண்ணாரக் காட்டுவதற்காகத் தான் போலும் கொடுங்கடல் மீண்டும் ஒருமுறை வீங்கலை எனும் தன் பேய்க்கரத்தால் ஒன்றரை இலக்கத்துக்கும் மேற்ப்பட்ட மனித உயிர்களைத் தன்னுள் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை கடல் கொண்ட நம் தென்புலத்தார் அனைவருக்கும் நினைவேந்தல் செய்வோம்.

“நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்” - குறள் 373,

பூதவாதிகள் பற்றி மணிமேகலை கூறியதை நாம் கூற விரும்பவில்லை. திரு. ஜெயகரன் அவர்கள் புகழ்பெற்ற புவி இயங்கியல் அறிஞர் என்று கூறுகிறார்கள். உண்மையா….?!

(இக் கட்டுரை மார்ச் 2005 கணையாழி இதழில் வாசகர் கடிதம் பகுதியிலும் திண்ணை 07 ஏப்ரல் 2005 இணைய இதழிலும் வெளியாகியுள்ளது.)

ஒரு மொழிபெயர்ப்பின் கதை

"தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி" என்ற திரு. தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03.07.1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது; அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்.

பொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான "பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது. பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி "பொறியியல் கதிர்" என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம். இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் "பொறியியல் கதிரில்" வெளியிட ஒப்புக் கொண்டார். எனவே நூலின் முதலதிகாரத்தை மொழிபெயர்த்து அனுப்பினேன். ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார். ராயல் அளவு எனப்படும் பெரிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும். எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது. அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப் புலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன. எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்.

சில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார். (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை). இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது. சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.

தமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார். அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். இந்தத் "தமிழ் வாணிகத்தை" நான் விரும்பவில்லை. பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை.

இதற்கிடையில் 1972 இல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு. பி. இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன். அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்குப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர். அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார். (எண் வேலை II-1/96787/78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார். (எண் 3/29699/81-1 நாள் 20.11.81)

வந்தது வினை. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர். தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர். (ந.க.எண் இ3/1793/081 நாள் 29.03.91). அத்துடன் தங்கள் "தொழிலில்" கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர். இறுதியில் போகிற போக்கில் "மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப்" பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு.பி. இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார். புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர். நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை.

1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு. ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்.

சில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ.சுப. மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன். தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார். தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்.

1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன். மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து, "நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை. ஆனால் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" இதழில் இம்மொழிப்பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார். அதற்குப் பயனேதும் இல்லை. எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது.

முதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும். இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது. இவ்விரண்டின் தலைவர்களும், சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர். இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் "ஒற்றுமையாகச்" செயற்பட்டு முறியடிப்பர். (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்).

இது போன்ற "சாதி"ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன. ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே - மருத்துவர்களும், வழக்கறிஞர்களும். மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்.

இந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர். அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர். அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன். சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் "தெரிந்து கொள்ளவில்லை," சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார். மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் "ஓ...." என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் "ஏம்பா இது குறித்து ஏதோ ‘பேப்பர்’ வந்தது போலிருக்கே" என்று கேட்டார். எனக்குப் புரிந்தது. "இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இது ஒரு தன் புராணமல்ல. ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது.

பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல.க. இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ.டு. Sulphur - சுற்பொறை. Phosphorous - பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் "தென்மொழி" இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார். காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார். "கடைசல் பொறிகள்" என்ற பெயரில் "லேத்"களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார். பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத "தினமணி"க் கட்டுரையாளர்கள் திரு.கே.என். இராமச்சந்திரன், நெல்லை சு. முத்து போன்றோர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர். நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ.மு. சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகராதியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார். அவர் தமிழப்புலவர் அல்லர். (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணியை அவருக்கு அளித்தது). இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்.

ஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர்" அரசு உருவாக்கிய "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர். அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர். தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர். வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்.

நமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள், சலுகைகள், மானியங்கள், கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் "பணப்பட்டுவாடா" செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது. அது போலவே "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் "பணப்பட்டுவாடா" உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது. அதற்கிசைய வெளியிலுள்ள "தமிழ்த் தொண்டு" அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன. இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் "புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று.

அறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை, உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை. அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள்தாம். இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ "தமிழ்ப்பணி" ஆற்றியவர்களல்ல. வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்.

அந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக, பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது. அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது. ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு. அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு, சம்பளமும் குறைவு, மதிப்பும் குறைவு. அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் "தென்மொழி" இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர். ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர். தமிழே அவர்களது "வாழ்வாகி" விட்டது.

பாவாணர், மற்றும் "தென்மொழி" மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம், கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் தமிழை “வளர்க்கும்” பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

என் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார். முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார். பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளிவாகவே வெளிப்படும். இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள், தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் போன்றோரிடமிருந்தே வருகிறது.

தமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை, பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும். அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது "பணப்பட்டுவாடா" உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்.

(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தென்மொழி இதழிலும் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தது. “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்.)

ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து -- ஒரு குறிப்பு

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான 'ஐந்தாவது மருந்து' என்ற சிறுகதையினை இணையத்தில் இருந்து நண்பர் ஆபிரகாம் லிங்கன் மூலம் பெற்று படித்தேன். குமரிக்கண்டம் பற்றிய என் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு உள்வாங்கி அவற்றைக் கதையில் வெளிப்படுத்தியுள்ள பாங்கினை கண்டு நான் பெருமையும் பெருமகிழ்வும் எய்துகிறேன். உங்களுக்கு என் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தமருத்துவம் என்னும் தமிழ் மருத்துவம் முதலில் நிலைத்திணைகள் [தாவரம். சிறுகதையின்படி அசீவம்] விலங்குகள் [சீவம்] பிறகு பொன்மங்கள் [ரசாயனங்கள்] என்ற வரிசையில் முன்னேறியது என்ற கூற்று சரியாக இருக்கலாம். வேறு வரிசையிலும் இருக்கலாம். உங்கள் கதையை ஒரு தொடக்கநிலை கருத்தாகக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அணுவியல் மருத்துவம் [ரசக்கூட்டு - பொன்மங்களின் அணுவியல் கூட்டை மாற்றுதல் பொன்மாற்று [பம்மாத்து!] மிகப்பழைமையான ஒர் அறிவியல் ஆய்வாகவே தெரிகிறது.

நோய்களை உண்டாக்கும் நுண்மங்களும் அவற்றுக்கு எதிராக மனிதன் தரும் மருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு முன்னேறுகின்றன என்பது உண்மையே. நோய்களும் மருந்துகளும் மட்டுமல்ல இயற்கையில் உள்ள அனைத்து கூறுகளிலுமே இப்படி எதிரிணைகளின் போராட்டம் இடைவிடாது நடைபெறுகிறது என்பது மார்க்ஸிய இயங்கியலாகும். எனவே கதையில் தளவாய் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாகக் காட்டுவது உங்களிடம் நான் பொதுவாகக் கண்ணுறும் ஓர் இயலாமை கண்ணோட்டடத்தின் விளைவாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் கதையில் சரியாக குறிப்பிடுவதுபோல மனிதன் என்பவன் இயற்கைவிதிகள் எனப்படுவனவற்றை இயற்கைப்படைப்புகளே மீறி இயற்கை தன்னைப்பற்றி முழுமையாகத் தன்னுணர்வுடையதாக மாற்றிக் கொண்ட ஓர் அமைப்பு. அது எப்படியெல்லாம் தன்னாலும் சூழல்களாலும் உருவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றதோ அது போலவே இன்னும் வாழும்.

பால்வினை நோய்களுக்கு முதன்மைக் காரணமாகிய தன்னினப் புணர்ச்சி நானறிந்தவரை வரலாற்றில் முதலில் பெண்களின் முற்றதிகாரத்தை எதிர்த்து ஆண்கள் பிரிந்துசென்று காடுகளுக்குள் தலைமறைவுக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் இருபாலரிடமும் உருவாகியிருக்கலாம். மோசே விடுவித்துச்சென்று பின்னர் யூத இனமாக வடிவெடுத்த எகிப்திய அடிமைகளிடம் அப்பால்வினை நோய்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் அவர் முகமதியர் சுன்னத் என்றழைக்கும் முந்தோல் அகற்றும் சடங்கைத் தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து மறவர்களில் இப்பழக்கம் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
எயிட்சு என்றழைக்கப்படும் தேய்வு நோயைப்பொறுத்தவரை எனக்குப் பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன. முதலில் பல்மருத்துவரைக்கூடத் தாக்கும் என்ற அளவுக்குக் கிலியூட்டப்பட்ட இந்நோய் இப்போது ஆணுறை அணிந்தால் போதும் என்ற அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நானறிந்தவரை பால்வினைநோய்கள் பிற உறுப்புகளின் தொடர்பால்கூட பரவமுடியும். குறிப்பாக வாய். இவ்வாறு ஆணுறை பெண்ணுறை மூலம் தடுத்துவிடலாம் என்ற செய்தியை பரப்புவதானது தவறான விளைவுகளை உருவாக்கும். ஆசிரியர்களே மாணவர்களிடம் இச்செய்தியைப் பரப்புகிறார்கள் என்பது மேலும் தவறானதாகும்.

எச் ஐ வி என்ற நுண்ணுயிரிக்கும் தேய்வுநோய்க்கும் தொடர்பில்லை என்ற வாதமானது இன்று ஒருதரப்பினரால் -- குறிப்பாக பிரெஞ்சு மருத்துவ ஆய்வாளர்களால் -- தொடக்ககாலம் தொட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த நுண்ணுயிரி உள்ளன என்ற அளவிலேயே இந்நோய்க்குரிய அறிகுறிகளுடன் அதை தொடர்புபடுத்தி நோயாளி காணத்தொடங்கிவிடுவான். அதன் பின் அவனால் அதன் தாக்குதலை தடுக்க இயலாது. இந்த அச்சத்தை பயன்படுத்தி அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தை பரப்புகைக்காக நம் நாடுகளுக்கு வெளியிடுகிறார்கள்.

நானறிந்தவரை இந்நோய்க்குரிய அறிகுறிகள் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளன. நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்துவீட்டு இளைஞர் ஒருவர் இனம்காண முடியாத ஒரு நோயால் சிறிது சிறிதாக மெலிந்து இறந்தார் அவருக்கு 'என்புருக்கி ' என்று மருத்துவர் சொன்னார்கள். அக்காலத்தில் நீரிழிவு உட்பட பல நோய்கள் அப்படி பொதுப்பேரில் சொல்லப்பட்டன. இவருடைய நோய் அதுவல்ல. அவரால் எவருக்கும் அந்நோய் பரவவில்லை. நம் நாட்டில் பல்லாயிரம் நோய்களைப்பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப்பற்றிய அறிவு மக்களிடையே இல்லை.'தமிழ்' மருத்துவர்களிடமும் இல்லை. எனவே எந்தெந்த நோய்கள் பழைமையானவை எவை இன்றைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மூலம் உருவானவை என்று வரையறுத்துக்கூறும் முறை இல்லை. ஆனால் மெத்தப்படித்தவர்களாக அறியப்படும் ஒரு சிறு தொழில் கூட்டத்தினரின் பல கூற்றுகளை நாம் மறுத்தாகவேண்டியுள்ளது.

(கடிதம் - திண்ணை டிசம்பர் 9, 2004.)

2.11.05

தமிழகத்தில் சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்

26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு அறியாததுமான பேரழிவுகளைத் தமிழகக் கடற்கரை வாழ் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகள் மீது நிகழ்த்தியது. அது நிகழ்த்திய பேயாட்டத்தில் கடற்கரையில் கிடத்தப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்டுமரங்களும் வள்ளங்களும் சேர்ந்துகொண்டன. எந்தப் பிணைப்புமின்றி மணல் மீது இழுத்துப் போடப்பட்டிருந்த இந்த மிதவைகள் நீரில் மிதந்து பெரும் பீரங்கிக் குண்டுகள் போல் அலையின் 1000கி.மீ. வேகத்தில் மனிதர்கள் மீதும் மரங்கள் மீதும் கட்டடங்கள் மீதும் மோதியிருக்கவில்லையாயின் உயிர், உடைமை, வீடுகளுக்கு இவ்வளவு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்காது. கடல் வரம்பிலிருந்து 500 கி.மீ. தொலைவுக்குள் கட்டுமானங்களை எழுப்பக் கூடாது என்ற இந்திய நீரியல் அமைச்சகத்தின் ஆணை கடைபிடிக்கப்பட்டிருந்தால் பாதிப்பு கட்டுக்குள் நின்றிருக்கும்.

குமரி, நெல்லை மாவட்டங்களின் கடற்கரையின் சிறப்பாகிய தேரிகள் எனப்படும் மணற் குன்றுகளிலிருந்து மணல் எடுக்கும் உள்நாட்டினருக்குத் துணை நின்று அந்த இடங்களில் கட்டிய வீடுகளும் மணல் தேரிகளின் முகடுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட இடங்களில் கட்டிய வீடுகளும் அவற்றிலிருந்த பல மக்களுடன் அழிந்து போயுள்ளன. நெல்லை குமரி மாவட்டக் கடற்கரையில் காணப்படும் அருமணல்கள் பல்லாயிரம் கோடி நேரடியாகவும், மணவாளக்குறிச்சி அருமண் தொழிற்சாலையில் பிரித்தெடுத்தும், ஏற்றுமதி செய்வதற்காக அகற்றப்பட்டதன் விளைவாக தேரிகள் அழிந்து போனதால் குளச்சலை அடுத்துள்ள பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் தளங்களாக வடிக்கப்பட்டுள்ள சொத்தவிளை கடற்கரையில் தேரி முகடுகள் அகற்றப்பட்டுவிட்டதால் கடல்நீர் தேரியைத் தாண்டி தென்னந்தோப்புகளுக்கு இடப்பட்டிருந்த சுற்றுச் சுவர்களைத் தகர்த்ததுடன் மக்களில் பலரையும் கொன்றுள்ளது.

கடற்கரை கடலினுள் துருத்தி நின்ற இடங்களை விட கடல் நிலத்தை நோக்கிக் கரையில் குழிவுகள் ஏற்படுத்தியிருந்த பிள்ளைத்தோப்பு போன்ற இடங்களில் அழிவு மிகுதி. அதேபோல் மீன்பிடி விசைப்படகுகளைப் பிணைத்துக் கட்டி வைப்பதற்குக் கட்டப்பட்ட தூண்டில் வளைவுகள் இருக்கும் இடங்களில் பாதிப்பு குறைவு.

இதுவரை கடலைத் தாயாகவும் கடற்கரையைத் தாய்மடியாகவும் கருதி நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த கடற்கரை மீனவர்களின் காலங்காலமாகவுள்ள நம்பிக்கையையும் இந்த பேரலை அடித்துச் சென்றுவிட்டது. எனவே அவர்களில் பலர் மீண்டும் கடற்கரையில் குடியேறவும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவும் மிகவும் தயங்குகின்றனர். உயிரிழந்த மீனவர்களில் ஏறக்குறைய 40% பகுதி சிறுவர்களூம் குழந்தைகளுமாவர். இவையனைத்திற்கும் பிறகு இன்றைய தலைமுறையினர் கடற்கரையில் குடியேறி பழைய முறைப்படி கட்டுமரங்களில் மீன் பிடிக்கப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்த நிகழ்வுகள் மற்றும் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் இன்றியமையா ஊட்ட உணவுகளில் தலையாயதாகிய மீனை வழங்குவதும் பல இலக்கம் மக்களின் உயிர்காக்கும் தொழிலுமாகிய மீன்பிடித் தொழிலை மீட்பது, கடலின் மீதுள்ள அச்சத்தை அகற்றும் வகையில் உரிய இடத்தை தேர்ந்தெடுத்து அவர்களைப் புதிய கடல் அலை தாக்க முடியாத இடங்களில் குடியமர்த்துவதுமாகிய இரு பகுதிகளாக நமது திட்டமிடல் அமைய வேண்டும். இவை இரண்டும் உடனடியாக ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டியிருந்தாலும் இவற்றை நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கோடு அணுக வேண்டும்.

1.குமரி மாவட்டத்தையும் நெல்லை மாவட்டத்திலுள்ள பகுதிகளையும் பொறுத்த வரை அங்கு இயற்கையாக உருவாகும் தேரிகள் காற்றில் கரையாதிருக்கவும் மணலின் படிமானத்தை ஊக்கவும் அங்கு இயற்கையாக வளரும் புல் இனத்தை வளர்த்து நட வேண்டும்.

2.தேரி உருவாகும் தன்மையை ஆய்ந்து இப்போது தேரி இல்லாத தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் தேரியை செயற்கையாக உருவாக்கிப் பராமரிப்பதற்கான வாய்ப்புகளை மதிப்பிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

3.தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஈத்தாமொழி, குளச்சல் போன்ற ஊர்கள் வழியாகச் செல்லும் மேற்குக் கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும் இடையில் மீனவர்கள் வாழும் ஊர்களை இணைக்கும் சாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படாத தேரிகளின் முகட்டிலேயே செல்கின்றன. அந்தச் சாலைகளுக்கும் கடலுக்கும் இடையில் தெருக்கள் அமைத்தோ இன்றியோ கட்டப்பட்ட குடியிருப்புகள்தான் பெருமளவு இடிந்ததும் மக்கள் மடிந்ததும். எனவே தேரிகளை முறைப்படி உருவாக்கி அவற்றின் இரு புறங்களிலும் குட்டைத் தென்னை மரங்களையும் மணற்புற்களையும் வளர்த்துப் பராமரித்தால் அச்சாலை தேரிகளின் பராமரிப்பிற்குத் துணை நிற்பதுடன் அதன் மீது செல்வோருக்குச் சாலையின் இருபுறங்களிலும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தென்னை மரங்களைக் குத்தகைக்கு விட்டுச் சாலைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்ட முடியும்.

4.கடற்கரையின் அமைப்புக் கேற்பவும் உள்நாட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலைத் தொடர்பிற்கு ஏற்பவும் உடனடியாகத் தூண்டில் வளைவுகள், சிறு மீன்பிடி துறைமுகங்கள், சிறு போக்குவரத்து துறைமுகங்கள் என்று முன்னுரிமை வரிசையில் கடடுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அவற்றில் விசைபடகுகள், சிறுமீன்பிடிக் கப்பல்கள், சிறு போக்குவரத்துக் கப்பல்கள் என்று தொழிலில் இறங்க முன்வருவோருக்கு வருமான வரி விலக்கு போன்ற ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். கட்டுமரங்களைத் தவிர்ப்பதற்கு, பழைய கட்டுமரத் தொழிலில் ஈடுபட்டிருந்தோருக்கு அவர்களது அகவைககு ஏற்ப ஓய்வூதியம் வழங்கல், வலைகள், தூண்டில்கள் போன்ற மீன்பிடி தளவாடங்களைப் பராமரித்தல் பணிகளில் ஈடுபடுத்தல், கூட்டாக சேர்ந்து தொழில் செய்ய முன்வருவோருக்கு விசைபடகுகள் வாங்க கடன் வழங்குதல், மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கும் பயிற்சியளித்தல்,பிடித்த மீனை உரிய பக்குவத்தில் சந்தைக்கு அனுப்புதல், ஊரகங்களிலும் நகரங்களிலும் துப்புரவுடன் பராமரிக்கத்தக்க கட்டமைப்புகளுடன் விற்பனை நிலையங்களை உருவாக்கி அவற்றில் மீன் விற்பனைக்குப் பயிற்றுவித்தல் என்று எண்ணற்ற வகையில் வேலை வாய்ப்பை அளிக்க முடியும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பதற்கு மீன்வளத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவை வகுக்கும் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தொழில்நுட்பப் பயிலகங்களில் பயிற்சியளிக்க வேண்டும். இன்று மீன்பிடித் தொழில் எய்தியிருக்கும் முன்னேற்றத்துடன் ஒப்பிட, உலகில் முதன்முதலில் மீன்பிடிக்க மனிதன் தொடங்கிய காலத்துக்குரிய தொல்பொருட்காட்சியகங்களில் வைக்க வேண்டிய காலங்கடந்து போன கட்டுமரங்களைக் கைவிட்டு அவற்றை விட மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள விசைப்படகுகள், சிறு மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்துவதால் இன்றுபோல் வெவ்வேறு பகுதி மக்களூக்கிடையில் உருவாகும் சச்சரவுகளுக்கும் மோதல்களுக்கும் வாய்ப்பு குறையும்.

5.தடுப்புச் சுவர் கட்டுவதற்கு 500 கிலோகிராம் வரையும் தூண்டில் வளைவுகள் அமைக்க 3 முதல் 5 டன்கள் வரையும் எடையுள்ள பெருங்கற்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் மைலாடி, பொற்றையடி, சுங்கான் கடை போன்ற எண்ணற்ற இடங்களில் கல்லுக்காகப் பாறைகளை உடைத்ததில் மண்மீது உயர்ந்து நின்ற மலைகளும், குன்றுகளும், பாறைகளும் காணாமல் போய்விட்டன. குமரி மாவட்டத்தில் மழை வளம் குன்றியதற்கு மேகத்தைத் தடுத்து மழையைப் பெய்வித்த மலைகள் குறைந்ததும் ஒரு காரணமாகும். இராதாபுரம் போன்ற அண்மையிலுள்ள நெல்லை மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததற்கு இது காரணமாகலாம். எனவே தேரிகளை உருவாக்கிப் பராமரிப்பதன் மூலம் தடுப்புச் சுவர்களைத் தவிர்க்க முடியும். தவிர்க்க இயலாத இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்களுக்கும் தூண்டில் வளைவுகளுக்கும் துறைமுகங்களுக்கும் நில மட்டத்திற்கு அடியிலிருந்து கற்களை எடுக்க வேண்டும். வேறுவழியில்லை என்றால் மட்டுமே நிலத்துக்கு மேலேயுள்ள பாறைகளை உடைக்க வேண்டும். அவ்வாறு இனி உடைக்கும் பாறைகளும், முன்பு உடைத்த பாறைகளும் இருந்த இடத்தில் இந்திய அரசு நில அளவை(G.I. maps) வரைபடத்தின் துணையுடன் நகராட்சி, ஊராட்சிகளில் எடுக்கப்படும் மட்காத திடக் கழிவுகளைக் கொட்டி பழைய உயரத்துக்கு புதிய மலைகளை உருவாக்கி குலைந்துவிட்ட இயற்கைச் சமநிலையை மீட்க வேண்டும்.

6.கல், மண், கனிமங்கள் போன்ற மீட்க முடியாத இயற்கைச் செல்வங்களை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுமதி செய்வது பொருத்தமான பொருளியல் அணுகுமுறையாகாது. அவை இனிவரும் தலைமுறையினருக்கும் உரிமையுள்ள அரும்பொருட்களாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டக் கடற்கரையிலிருந்து பல்லாயிரம் கோடி டன்கள் அருமணல் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (குமரி மாவட்டத் தேரிகள் அழிய இதுவும் ஒரு காரணமாகும்.) இதனுடன் கருங்கல் சல்லியும், ஆற்றுமணலும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதியாகும் பொருள்களில் முதலிடம் பிடிக்கின்றன. இந்த ஏற்றுமதியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

7.ஏறக்குறைய 6000 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்ட இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு கடல் வழியில் செல்வதற்கு உரிய நீர்வழி இல்லை. உள்நாட்டு மக்கள் மீன்பாடுள்ள இடங்களைத் தேடிச் செல்லவும் கடல் வழியில் பண்டங்களை நாட்டினுள் கொண்டு செல்லவும் கடலோரப் பாதுகாப்புக்கும் இது இன்றியமையாதது. பேரலைகள் தாக்கிய போது அத்தகைய ஒரு கடல் வாய்க்கால் இருந்திருந்தால் அதன் வழியாக அலை விசையின் ஒரு பகுதி கரைக்கு ஒரு போகாக திரும்பிச் செல்லும் வாய்பிருந்தது. எனவே அத்தகைய ஒரு கடல் வாய்க்காலை இந்தியக் கடற்கரையை ஒட்டி உடனடியாக அமைக்க வேண்டும்.

8.கிழக்கு கடற்கரையில் விசாகப்பட்டினம் - நாகப்பட்டினத்தை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அதில் விசாகப்பட்டினம் - சென்னைக்கு இடைப்பட்ட பகுதி இன்றும் பொருட் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. சென்னை மாநகர எல்லைக்குள் தூர்ந்து போய் சாக்கடையாக மாறி ஓர் சூழியல் சிக்கலாகி உள்ளது. சென்னைக்குத் தெற்கில் சில் இடங்களில் அந்த கால்வாயை காண முடிகிறது. குமரி மாவட்டத்தில் குமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை திருவிதாங்கூர் மன்னர்கள் உருவாக்கிய ஏ.வி.எம். வாய்க்காலைக் குளச்சலுக்குக் கிழக்கில் கதம்பை ஊறவைப்பதற்காகப் பயன்படுத்தியதால் அது முற்றிலும் தடமழிந்து கிடக்கிறது. பிற பகுதிகளிலும் முறையான பராமரிப்பில்லை. தற்போதைய பேரலை வாய்க்கால் இருந்த இடங்களில் வாய்க்காலுக்கும் கடலுக்கும் இடையில் குடியிருந்த மக்களை அடித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் புதைத்துவிட்டது. வாய்க்காலுக்கு வெளியே, கடலுக்கு எதிர்க்கரையிலுள்ள நிலப்பகுதிகள் குடியிருப்புகள் அமைந்திருந்தால் இந்த வாய்க்கால் அலையின் வேகத்தை மட்டுப்படித்தும் ஒரு காப்பரணாச் செயற்பட்டிருக்கும். எனவே ஏ.வி.எம். வாய்க்காலையும் பக்கிங்காம் வய்க்காலையும் முழுமையாக மீட்பது மட்டுமின்றி இந்தியக் கடற்கரை முழுவதும் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு உகந்த நீர் வழிப்பாதையாக அதை விரிவு செய்தால் பல்முனைப் பயன் அதற்கு உண்டு. அத்துடன் தேரி முகட்டில் போடப்படும் சலைக்கு இணையாக இந்த வாய்க்காலும் அமைந்தால், இந்தியக் கடற்கரை கண்ணைக் கவரும் உலகிலுள்ள சிறந்த கரையாக இந்தியக் கடற்கரை பொலிவுறும்.

இப்போது கடற்கரையில் வாழும் மக்களின், குறிப்பாக மீனவர்களின் குடியிருப்பு பற்றி பார்போம். அவர்களை

1.மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டோர்,

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் டவர் மற்றும் பெண்டிர்,

3.பிற தொழில்கள் செய்து கடற்கரையில் குடியிருப்போர்,

4.உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கப்பல்களிலோ, வேறு வகைகளிலோ பணிபுரிவோரின் குடும்பத்தினர்,

5.கடற்கரையில் கடைகள் முதலியவற்றை நடத்துவோர்,

என்று பெரும்போக்காக வகைப்படுத்தலாம்.

இன்னொரு வகையில், கட்டுமானத் தன்மையைப் பொறுத்து,

1.குடிசைகளில் வாழ்வோர் (குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை இது அரிதாகவே தென்படுகிறது.),

2.ஓட்டுக் கூரையுடன் மண் அல்லது செங்கல் சுவர்,

3.வலுவான கான்கிரீட் கட்டடங்கள்,

என்று வகைப்படுத்தலாம். இத்தகைய எந்த வீடாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து 500 மீட்டர்களுக்கு உட்பட்ட தொலைவிலுள்ளவற்றையும் பாதிப்புக்குட்படும் நிலமட்டம் (Velnerable level) என்பதனை விடத் தாழ்ந்த இடத்தில் உள்ள வீடுகளையும் அகற்றிவிட வேண்டும்.

1.இதுவரை வலை, தூண்டில் முதலிய மீன்பிடி தளவாடங்களையும் கருவாடு போன்ற மீன் பொருட்களையும் குடியிருப்புகளில் வைத்து வாழ்ந்ததை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். படகுகள் அல்லது மீன்பிடி கப்பல்களில் மீனைப் பிடித்து துறையில் சேர்த்துவிட்டு மீனவர் என்ற தொழில் அடையாளத்தை அத்துடன் இறக்கி வைத்துவிட்டு சராசரியான ஒரு குடிமகனாகக் குடியிருப்பினுள் நுழையும் புதிய சூழலை உருவாக்க வேண்டும். பிடித்த மினை வகைப்படுத்துதல், பிரித்துச் சந்தைக்கு விடுதல், மீன்பாடு மிகுந்த காலத்தில் மிகுதியாக உள்ள மீனைப் பதப்படுத்திச் சேர்த்து வைத்தல், ஊறுகாய், கருவாடு, ஓரளவு வேக வைத்துக் கலன்களில் அடைத்தல் போன்ற பணிகள், வலை, தூண்டில் போன்ற தளவாடங்களையும் மீன்பிடி கலன்களையும் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்யும் தனித்தனிப் பணியாளர்களும் தம் தொழில் நேரம் முடிந்ததும் தொழில் அடையாளத்தை அங்கேயே விட்டுத் தம் வீடுகளுக்குச் செல்லும் நிலை உருவாக வேண்டும். முதற்பகுதியில் நாம் குறிப்பிட்டிருக்கும் தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், விசைபடகுகள், கப்பல்கள் போன்ற கட்டமைப்புகள் இந்தச் சூழலை உருவாக்கித்தருவது மட்டுமல்ல தேவையும் ஆகும்.

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் ஆடவரும் பெண்டிரும் தாங்கள் செயற்படும் சந்தைப் பகுதி அருகில் குடியிருப்பை அமைத்துக் கொள்வது சிறப்பு. அவர்களது விருப்பத்தை அறிந்து அப்பகுதியில் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

3.பிற தொழில் செய்து கடற்கரையில் குடியிருப்போர் தாங்கள் தொழில் செய்யும் பகுதிகளுக்குத் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.குடும்பத்தார் கடற்கரையில் குடியிருக்க, தாம் வெளியில் பணியாற்றுவோரும் நகரங்களுக்கோ, வேறு தாம் விரும்பும் இடங்களுக்கோ தம் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது உண்மையான கட்டுமானப் பொறியியல் சிக்கல் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் கட்ட வேண்டிய தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், மீன் தொழில்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களும், 500 மீட்டருக்கு வெளியே கடலையடுத்து குடியிருப்பது ஏதோவொரு காரணத்தால் தேவைப்படும் மீனவர்கள் மற்றும் மீனவரல்லாதவர்களின் குடியிருப்புகளும் பற்றியதே.


1.இவ்வாறு புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், பாதிக்கத்தக்க மட்டத்தின் கீழ் உள்ள நிலங்களில் கட்டப்பட வேண்டியிருந்தால் கான்கிரீட் தூண்களாலான சட்டமிட்ட (Framed) அமைப்புகளாக, தரைத்தளம் ஊர்திகள் நிறுத்துமிடம் போன்ற பொதுப் பயன்பாட்டுடன் அதற்கு மேல் மூன்று தளங்களுக்குக் குறையாமல் கட்டப்பட வேண்டும். கட்டடங்கள் உயரம் கூடும் தோரும் அவற்றின் பாரத்துக்கு ஏற்ப அமைக்கப்படும் தூண்கள் இயல்பாகவே பேரலைகள், நில நடுக்கம் போன்ற தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மையை ஓரளவு எய்திவிடுகின்றன. எனவே இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக சிறிதளவே கூடுதல் செலவு இருக்கும்.

2.பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் ஒரே கட்டடத்தில் இருப்பது உயரிய நிலப்பயன்பாடு, சிக்கனமான கட்டுமானப் பொருட்செலவு, சூழியல் பராமரிப்பு எளிதாதல், குடியிருப்போரிடையில் இணக்கமான உறவு நிலவ வேண்டிய கட்டாயத்தினால் மக்களின் பண்பாட்டு மேம்பாடு போன்ற பல பயன்கள் உள்ளன.

3.பேரலையின் போது குடியிருப்புகளை இழந்தோருக்கும், அவ்வாறு பாதிப்பில்லாத 500 மீட்டருக்குள் வீடுகளைக் கொண்டோரும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறும் போது அவர்களது வீடுகளின் மதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்க வேண்டும். பின்னர் அவர்களது தேவை மற்றும் பொருளியல் வலிமைக்கு ஏற்றவாறு கடன் வழங்கு நிறூவனங்களில் கடன் ஏற்பாடு செய்து அவர்கள் விரும்பும் இடங்களில் வீடுகளைக் கட்டித் தரலாம். ஒவ்வொரு நேர்விலும் பாதிக்கப்பட்டோர், பயனாளிகள் என்ற இரு கோணங்களிலும் அவர்களைக் கலந்தே முடிவுகள் எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதில் விளக்கியுள்ளது போன்ற மீன்பிடி கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் குடியிருப்புகளும் உருவாவது வரை பாதிக்கப்பட்டபகுதி மக்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வீடுகள் நல்ல நிலையிலிருந்தால் அவற்றிலும் இல்லையெனில் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்படும் தற்காலிகக் குடியிருப்புகளிலும் குடியமர்த்தலாம்.