13.11.05

பாலை நிலத்து ஒட்டகம்

ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் "பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம்" என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு.சு.கி. ஜெயகரனின் கட்டுரைக்கு விடையாக பல மடலங்கள் கொண்ட ஒரு நூல் தொகுதியில் கூறப்பட வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

வெள்ளுவனின் அடிப்படைக் கருத்தாகிய இன்றைய தமிழகத்தில் பாலைவனம் இல்லை என்பதைச் சான்றுகளுடன் உறுதி செய்கிறது கட்டுரையின் முதல் பகுதி.

ஒட்டகத்தின் திரிவாக்கம் பற்றி விளக்குவது இரண்டாம் பகுதி. இன்றைய அகழ்வாய்வுச் சான்றுகளையும் காலக் கணிப்புகளையும் அடிப்படையாக்கக் கொண்டுள்ளார் திரு.ஜெயகரன். "பண்டை உலகின் ஒரு பெரும்பகுதி காலவோட்டத்தில் கடலினுள் மூழ்கியுள்ளது" என்ற உலகெங்கிலுமுள்ள மக்களின் பதிவுகளையும் மரபுவழிச் செய்திகளையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒருசாரரின் கருத்தையும் நம்பகமான ஒரு காலக்கணிப்பு முறையை இன்று வரை இன்றைய அறிவியல் துறை உருவாக்கவில்லை என்ற உண்மையையும் புறக்கணித்துவிட்ட ஒரு கூற்றாகும் அவருடையது. அத்துடன் உலகின் பெரும்பாலான விலங்குகள் முதல் நிலைத்திணைகள் (தாவரங்கள்) வரை ஒரு கோடியில் நீரில்லா வரண்ட பாலை முதல் இன்னொரு கோடியில் நீர் உறைந்த தாங்கவியலாக் குளிர் நிலமான பனிப்பகுதி வரை இடையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தட்பவெட்ப நிலைகளுக்குள் வாழ்ந்து திரிவாக்கம் பெற்றுள்ளன என்பதற்கான தடயங்களைக் காணமுடியும். அதனால், இன்று பசுமைச் சூழலுக்கும் பொருந்தியதாக விளங்கும் முழுமை பெற்ற ஒட்டகம் பாலைவனத்தில் தோன்றி அங்கேயே திரிவாக்கம் பெறவில்லை என்பதால் மட்டும் மனிதன் தோன்றிய பின் இருந்த ஒரு பாலை நிலத்தில் ஒட்டகமும் இருந்திருக்கிறது என்பது பொருந்தாக் கூற்றாகி விடாது. அதுவும் அந்த விலங்கைக் குறிக்கும் சொல்லைக் கொண்ட மிகப்பழைய இலக்கண நூலைக் கொண்ட மொழியைப் பேசுவோர் இன்று வாழும் நிலத்தில் பாலைநிலம் மட்டுமல்ல, ஒட்டகமும் இல்லாதபோது, தென் அமெரிக்காவில் ஒட்டக இனத்தைச் சேர்ந்த லாமா (Llama) என்ற விலங்கு உள்ளது. எனவே ஒட்டகத்தின் திரிவாக்கத்தில் தென் அரைக் கோளத்துக்கும் ( Southern Hemisphere ) பங்குண்டு என்பதும், மூழ்கிய பாலைநிலத்தில் ஒட்டகம் இருந்ததென்ற செய்தி அந்தத் திரிவாக்க வட்டத்தை முழுமைப்படுத்தும் ஒரு தரவு என்பதும் தெளிவு.

வரலாற்று வரைவென்பது வெறும் தொல்பொருளாய்வல்ல. தொல்லாய்வு வரலாற்றின் துணைத்துறைகளில் ஒன்று மட்டுமேயன்றி அதுவே இறுதியும் உறுதியுமாகாது.

ஒட்டகம் வயிற்றில் நீரையும் திமிலில் கொழுப்பையும் சேமித்துள்ளது. இரட்டைதிமில் உள்ள சைபிரியப் புல்வெளி ஒட்டகத்துக்கு இன்று பாலை ஒட்டகத்துக்குக் கிடைப்பதைவிட புல்லாகிய உணவு எளிதில் கிடைக்கலாம். ஆனால் இன்றைக்கு 10,000 முதல் 62.000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய நான்காம் பனிப்படர்ச்சி காலத்தொடக்கத்தில் பனிப்படர்வு தெற்கு நோக்கி நகர நகர அதற்குக் கிடைத்த உணவு வளம் குறையக்குறைய அதன் சேமிப்புத் திறன் உயர்ந்ததன் விளைவாகவே இரட்டைத் திமில் உருவாகியிருக்க வேண்டும். இதே நிகழ்ச்சிகள் இன்று கடலாக மாறியுள்ள தென் அரைக்கோளப் பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும். ஆர்வமுள்ள நில இயங்கியலாளர்கள் முயன்றால் வட அரைக் கோளத்தில் பனிப்படர்வுக் காலங்களில் இருந்த மிகத் தாழ்ந்த கடல் மட்டத்தை வைத்து தென்னரைக் கோளத்தில் இன்ன கடலடித்தள மட்டங்களின் அடிப்படையில் கடலுக்கு மேலிருந்த நிலப்பரப்புகளை இனம் காணமுடியும். அவ்விடங்களில் குறிப்பாக மகரவரையில் (மகரரேகை அட்சம் 23½° தெ) உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாலைநிலம் பற்றியும் ஒட்டகம் பற்றியும் கூறும் தொல்காப்பிய முரண்பாட்டுக்குத் தீர்வு காண முடியும்.

குமரிக்கண்டம் என்ற பெயர் பற்றிய திரு. ஜெயகரனின் மனக்குறை வேடிக்கையாக உள்ளது. அமெரிக்க மூலக்குடிகளுக்கு "சிவப்பிந்தியர்" என்று ஐரோப்பியர் குட்டிய பெயரை நாம் பயன்படுத்தலாம் என்றால், பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் கடலினுள் முழுகிய நிலத்துக்கு குமரிக்கண்டம் என்று கா. அப்பாத்துரையார் பெயர் குட்டியதிலும் அதை நாம் பின்பற்றுவதிலும் தவறேதுமில்லை.

சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டப் பெயர் மட்டுமல்ல, முழுகிய நிலப்பரப்பு பற்றிய தெளிவான குறிப்புகள் இடம்பெறாததில் வியப்பேதுமில்லை. தவறு சங்க இலக்கியங்களில் தமிழர்களின் முழு வரலாறும் அடங்கியுள்ளது என்று கொள்வதில் தான். அது ஒரு தொகுப்பு. தொகுத்தோரின் நலன்கள் அதில் அடங்கியுள்ளன. குமரிக் கண்டத்தைக் கடல் கொள்ளக் கொள்ள மக்கள் கடல் மூலம் எளிதாகக் கடந்து உலகெலாம் பரந்து செல்ல நிலவழியில் இறுதியாக வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,

“அடலருந்துப் பின் குரவே
தளவே குருந்தே முல்லை என்ற
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
இந்நான் கல்லது உணவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒன்று ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை”

என்று கூறுகிறது.

உலகளாவலுக்கு ( Globalisation ) எதிராக, ஏழை நாடுகளின் பண்பாடு அழிகிறது என்று இன்று கூறவோரின் குரல் இப்பாடலில் எதிரொலிக்கவில்லையா? அரசர்களைப் போற்றிப் பாடியவரான மாங்குடி மருதனாரையும் மாங்குடிக்கிழாரையும் ஒருவர் என்று தொகுப்பாளர்கள் கருதிவிட்டதால் இப்பாடல் தொகுப்பினுள் இடம்பெற்று விட்டது.

கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று (இன்றைய நம் ஆட்சியாளர்களைப் போல்) வந்தேறிகளான சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். பறையர் மீதான ஒடுக்குமுறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. "பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்", இது இலக்கியத்துக்கு வெளியேயுள்ள சான்று.

குமரி என்ற பெண்ணைப்பற்றிய குறிப்பும் சங்கத் தொகுப்பில் இல்லை. "குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி" என்ற சங்கப்பாடல் வரியில் அயிரை என்ற நன்னீர் மீன்பற்றிய குறிப்பு குமரித்துறை என்பது ஒர் ஆற்றுத் துறைமுகம் என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது. மீன்பற்றி தெளிவில்லாத தொகுப்பாளரால் இது தவறுதலாக இடம் பெற்றிருக்க வேண்டும். "குமரித்துறைவன்" என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதுமட்டுமல்ல, பாண்டிய மரபே ஒரு பெண்ணிலிருந்து தான் தொடங்கியது என்ற உண்மையும் சங்கத் தொகுப்பில் மறைக்கப்பட்டுள்ளது. மதுராபதி, கொற்றவை (வேட்டுவவரி) ஆகிய பெண் தெய்வங்கள் சிவனின் முன் வடிவம் என்ற செய்தியைக் கூட சிலப்பதிகாரம் மறைமுகமாகச் சுட்டுகிறது. குமரிக்கோடு, குமரியாறு, குமரி ஆழ்கடல் (தொடியோள் பௌவம்) போன்ற செய்திகளையும் சிலப்பதிகாரம் தான் தருகிறது. இவற்றின் அடிப்படையில் கடல் கொண்ட நிலப்பகுதியைக் குமரிக்கண்டம் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. திரு.ஜெயகரன் எதிர்ப்பார்ப்பது போல் கடலடியில் பெயர்ப்பலகை எதையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை.

சந்திரகுப்த மௌரியன் அவையிலிருந்த கிரேக்கத்தூதன் மெகாத்தனி, பாண்டிய மரபு பாண்டியா என்ற கிரேக்கப் பெண்ணிலிருந்து தோன்றியதாக எழுதி வைத்துள்ளான். உலகின் அனைத்து அரசு மரபுகளும் தம் கடவுளர்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவது பண்டைக் கிரேக்க மரபு. திருவிளையாடல் புராணம் பாண்டிய அரசியாகிய தடாதகைப்பிராட்டி பற்றி கூறுகிறது. உண்ணாமுலையாகிய மணமுடிக்காத குமரியை, எந்தக் கோயிலிலும் கணவனுடன் இன்றி தனியாகவே அமர்ந்துள்ள தேவியைச் சிவன் மனைவியாக்கியது போல், பண்டைத் தமிழகப் பெண்ணரசிகளாகிய அல்லியையும் பவளக்கொடியையும் மகாபாரதத் தலைமக்களின் மனைவிகளாக்கி வைத்துள்ள மக்கள் இலக்கியங்களும் புதைத்துள்ள உண்மைகளை நீலக்கடற்கரை ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியன்னை தமிழர்களின் முதல் பேரரசை அமைத்தவள் ஒரு பெண்ணென்றும் அவள் பெயர் குமரி என்றும் கண்ணும் கருத்தும் உள்ளோருக்கு நன்றாகக் கேட்குமளவுக்கு உரக்கக் கூறுகிறாள்.

இந்த உண்மைகளைச் சங்க நூற் தொகுப்புகள் மறைத்த பின்னணியில் தான் இளங்கோவடிகள், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் போன்றோர் சங்கத் தொகுப்புக்கு வெளியில் தாமறிந்த உண்மைகளைப் பதிந்து வைத்துள்ளனர்.

சங்கநூல் தொகுப்பாளர்களைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் சங்க நூற்கள் உட்பட பண்டை இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள் தங்கள் நலன்களுக்கேற்றவாறு பாட வேறுபாடுகளைக் காட்டினர். 17 - 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அறிஞர்கள் நம் நாட்டினுள் தொகுத்து வைத்திருந்த நாட்டார் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த அறிஞர்கள் அவற்றில் பெரும்பான்மையாயிருந்த, தங்கள் கண்ணோட்டத்துக்கு ஒவ்வாதவற்றை அழித்துவிட்டனர். இன்றும் ஒடுக்கப்பட்டு மேலேழும்பி வரும் மக்களிடையிலுள்ள அறிஞர்கள் சிலர் தமக்கு ஏற்றவாறு கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் திரித்து வெளியிடுகின்றனர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட (1979) கோவை இருளர்களைப் பற்றிய வனாந்தரப்பூக்கள் என்ற நூலை எழுதிய "செங்கோ" என்பவர் தனக்கு ஏற்பில்லாத தரவுகளைப் புறக்கணித்திருப்பதாகக் கூறுகிறார். எனவே தொகுப்பு நூல்களுக்கு வெளியே உள்ளவற்றுடன் ஒப்பிட்ட நூல்கள் தரும் செய்திகளை உரைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தினுள் நுழைந்த குமரிக்கண்ட மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கடும் நெருக்கடி அரபிக்கடலோரம் பஞ்சாபிப் பாலை நிலத்தில் (அவந்தி நாட்டில்) கட்சு வளைகுடாவில் வீழ்ந்து பின்னர் மணலில் மறைந்த காயங்கரை (மணிமேகலை 9. பழம் பிறம்புணர்ந்த காதை) எனப்படும் கோக்ரா ஆற்றின் (டி,டி,கோசாம்பி - பண்டைய இந்தியா) கரையிலேறி காடு செறிவில்லாத மேற்குத் திசை நோக்கி சிந்துவெளி முதல் காந்தாரம் வரையும், காடுகளை அழித்துக் கொண்டு கங்கைக் கரைவழியாகவும் பரவியவர்கள் காயங்கரை ஆற்றின் நினைவாகவோ அல்லது குமரிக் கண்டத்தில் இருந்த ஓர் ஆற்றின் நினைவாகவோ சரயு ஆற்றைப் பற்றிய நினைவைப் பதிந்தவர்களின் (கங்கையின் ஒரு கிளையாற்றுக்கு கோக்ரா என்று பெயரிட்டுள்ளனர் - டி.டி.கோசாம்பி - பண்டை இந்தியா வரைபடம்) படைப்புகளும் தொகுப்புகளுமாகிய வேதங்களிலும் இராமாயணம், மகாபாரதம், தொன்மங்கள் போன்றவற்றிலும் தான் குமரிக்கண்டம் பற்றிய செய்திகளை விரிவாக அறிய முடிகிறது. உபநிடதங்கள், பிராமணங்கள் மற்றும் பிற சமற்கிருத இலக்கியங்களை ஆய்ந்தால் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பல்வேறு துறை வளர்ச்சிகளை அறிய முடியும். வேதமொழி, சமற்கிருதம், அதிலுள்ள தொன்மங்கள் ஆகிய அனைத்தும் சிந்து சமவெளி குறியீடுகளிலிருந்து தோன்றியவை என்ற இந்திய முன்னாள் தொல்வாய்வு இயக்குனர் எஸ்.ஆர்.ராவின் கருத்து இதற்கு அரண் சேர்க்கிறது.

அதனால்தான் பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர திட்சிதர் முதல் பாவாணர் வரை தமிழகம், குமரிக் கண்டம் ஆகியவை குறித்த செய்திகளுக்கு சங்க இலக்கியங்களை விட சமற்கிருதத் தொன்மங்களிலிருந்தே சான்றுகளைக் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏழேழ் நாடுகள் பற்றிய அடியார்க்கு நல்லார் கூற்றில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டுச் சாதி வரலாறுகள் அனைத்திலும் ஏழு மாதர்கள் அல்லது தாயர் பற்றிய குறிப்பு உண்டு. ஏழு முனிவர்கள் பற்றி தொன்மங்கள் கூறுகின்றன. முறையே ஏழு பெண்களை முதல்வர்களாகக் கொண்ட குக்குலங்கள் ("இனக்குழுக்கள்") அக்குக்குலப் பூசாரித் தலைவர்கள் ஆகியோரையே இவை குறிக்கும். இத்தலைவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்தவர்களே நம் தொன்மங்களில் வரும் இந்திர பதவி ஏற்றோர். இது போன்ற ஒரு நடைமுறை பண்டை எகிப்தியப் பதிவுகளில் உள்ளதாக ஜோசப் கேம்பெல் என்பார் எழுதிய Masks of Gods - Primitive Mythology - என்ற நூலில் உள்ளது. இத்தகைய குக்குல தெய்வங்களைப் பின்னுக்குத் தள்ளி குறிஞ்சி முதல் நெய்தல் வரையுள்ள மக்களை நில எல்லை அடிப்படையில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தவர்களே பொருளிலக்கணம் கூறும் ஐந்நிலக் கடவுள்களின் மனித மூலவர்கள். இது தான் உலகில் முதன்முதலில் தோன்றிய மண்ணின் மைந்தர் ஆட்சி. ஏழு பிரிவான நிலங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வேழு குக்குலங்களுக்கும் உரிய பகுதிகள் ஒன்றுக்குள் ஒன்றாக விரவிக்கிடந்தன என்பது அடியார்க்குநல்லார் உரையிலிருந்து தெரிகிறது.

விசை என்ற இதழில் வந்த "மூதாயர்கள்" என்ற கட்டுரை உலக மக்கள் அனைவரும் 5 முதல் 10 எண்ணிக்கைக்கு உட்பட்ட பெண்களின் வழி வந்தவர்கள் என்று கூறுவது இதற்குப் பொருந்துகிறது.

ஈழம் என்பது யாழின் திரிபே. இலங்கையை ஆண்ட இராவணனின் கொடி யாழே! ஈழத்துள் யாழ்ப்பாணம் இருப்பது ஒரு சான்று. யாழை மீட்டுவோர் பாணர்.

இராவணனின் இலங்கை கூட இன்றைய இலங்கை அல்ல. அது கடகவரையில் (அட்சரேகை வ.23°30ˈ தோராயமாக ) இருக்கும் உச்சையினிலிருந்து பழந்தீவு பன்னீராயிரம் எனப்படும் இலக்கத் தீவுகள் வழியாக மகரவரை (அட்சம் தெ.23°30ˈ தோராயமாக) முடிய ஓடிய பண்டைய மைவரை(Meridian) ஆகிய இலங்கை உச்சையினி மைவரையில் (தீர்க்க ரேகை 75°43ˈ கிழக்கு) இருந்த தென்னிலங்கையே அது. விரிவுக்கு தமிழியக்கம் இதழில் வந்துள்ள " தென்னிலங்கை" என்னும் எமது கட்டுரை காண்க.

இனி காதங்கள், தொலைவுகள் பற்றிய பகுதிக்கு வருவோம். தமிழ் மரபில் நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற அளவைகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் ஒரே பெயருள்ள அளவைகள் வெவ்வேறு மதிப்பை கொண்டுள்ளது. துறைக்குத் துறையும் இந்த மாறுபாடு உள்ளது. வானியலில் உள்ள நீட்டல் அளவை நில அளவையில் வேறுபட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் சரியான அணுகலுடன் முயன்றால் தெளிவான விடையைப் பெற இயலும். அபிதான சிந்தாமணி என்ற தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தில் "கணிதவகை" என்ற சொல்லின் கீழ் "பூப்பிரமாணம் அறிதல்" என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கும் வாய்ப்பாடு இதற்கு பொருந்தும்.

சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு (3960 அடி)
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம் (15840 அடி = 3 x 5280 = 3மைல்கள் )
(கூப்பிடு - காது - காதம்?)
காற்றில் ஒலியின் விரைவு நொடிக்கு 1089 அடி.
தோராயமாக 1100 அடி
ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு = 24 x 60 x 1100 = 1584000 அடிகள் = 100 காதங்கள்.
அதாவது ஒரு காதம் என்பது ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் 100 இல் ஒரு பங்கு.

இவ்வாறு நம் முன்னோர்கள் நில அளவைக்கு காற்றில் ஒலியின் விரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது புலனாகிறது.

அபிதான சிந்தாமணியில் மேலேயுள்ள வாய்ப்பாட்டில் கோல் 56 என்றிருப்பதை 55 என்று திருத்தி மேற்கொண்டுள்ளேன். ஏனென்றால் பண்டை உலக நில அளவையில் 11 அடிப்படையான ஓர் அலகாகும். நம்மூர் மாட்டு வண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼ அடியாகும். வட்டத்தின் சுற்றையும் பரப்பையும் கணிக்க உதவும் 22/7 என்ற கூட்டுத்திறனை அகற்றுவதற்காக இந்த விட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கணிதப்படி இந்த மாட்டுவண்டிச் சக்கரத்தின் சுற்று = x விட்டம் = 22/7 x 21/4 அடி = 66/4 அடி = 16.5 அடி x 4 = 66 அடி = இன்றைய நில அளவைச் சங்கிலியின் நீளம் x 10 = 660 அடி = 1 பர்லாங் x 8 = 5280அடி = 1 மைல். 66 அடி x 66 அடி = 4356 ச.அடி. = 10 சென்றுகள் x 10 = 43560 அடி = 1 ஏக்கர். குமரி மாவட்டத்தில் ஓர் ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் என்பது சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் நடைமுறையிலிருந்தது. 43560 அடி x 2½ = 108900 ச.அடி = 330 அடி x 330 அடி . இன்றுள்ள 10 மீட்டர் = 32.8 அடி என்றிருப்பதை 33 அடி எனக் கொண்டால் 10000 ச.மீ. கொண்ட எக்டேர் பண்டைத் தமிழ் ஏருக்குச் சமமாகும். 2.75 அடி கொண்ட, கையாட்சிக்கு உகந்த, நம்மூர் தச்சு முழக்கோல் x 4 = 11 அடி. 12 தச்சு முழக்கோல் = 33 அடி = 10 மீட்டர். இன்று சாலைகளின் நீளத்தை அளக்க சக்கரம் பதித்த ஒரு கோலைத் தள்ளிச் செல்வது போல் அன்று மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உழுதொழில் புவித்தாயின் வயிற்றைத் கிழிப்பது, எனவே உழவர்களாகிய தசியூக்கள், அதாவது "திராவிடர்கள்" இழிவானவர்கள் என்று கருதியோராகக் கூறப்படும் "ஆரிய "இன் மக்களின் பெயர் கலப்பை எனப் பொருள்படும் "ஏர்" என்ற கிரோக்கச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறிய மாக்சுமுல்லருக்கு ஏர் ஒரு தமிழ்ச்சொல் என்பது தெரிந்திருக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை ஆரியர் என்ற "இன” மக்கள் உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதும் அவர்கள் மாக்சுமுல்லரின் கற்பனையில் பிறந்தவர்கள் என்பதும் விந்தியத்துக்கு வடக்கில் உள்ள நிலப்பரப்பை ஆரியம் என்பது தமிழ் வழக்கு என்பதும் எமது நிலைப்பாடுகள். ஆரியர் என்று வழங்கப்படும் மரபுக்குப் பொருள் ஆரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தானே யொழிய ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதல்ல.

தமிழ் இலக்கியங்கள் கூறும் முதற் கடற்கோளுக்குப் பின் உருவான தலைநகரான கபாடபுரம் 26.12.2004 அன்று தாக்கிய பேரலையால் கடுமையான தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தீவின் காலே நகர் இருக்கும் ஏறக்குறைய 5° வடக்கு நிரைவரை(அட்சரேகை) யில் இருந்திருக்குமெனக் கொண்டால் (பொருளியல் உரிமை இதழில் 1,2,3 ஆம் இதழ்களில் வந்திருக்கும் " பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்" என்ற கட்டுரையில் இதன் விளக்கத்தைக் காண்க.) அங்கிருந்து மகரவரை வரை 5° + 23 ½ = 28½ பாகைகள்.

1 பாகை நிரைவரைகளுக்கிடையில் உள்ள தொலைவு மேகலைவரையில் (நிலநடுக்கோடு) 68°70ˈ முனைகளில் 6°41ˈ மைல்கள். சராசரி 69,055, 28½ பாகைகளுக்குத் தோராயமாக 1982 மைல்கள். தமிழ் இலக்கியங்களின் கூற்றுப்படி முழுகிய நிலப்பரப்பாகிய 700 காதங்கள் = 700 x 3 = 2100 மைல்கள். மகரவரைக்குத் தெற்கில் அண்டார்டிக் வட்டம் வரை நம் முன்னோர்கள் பரவியிருந்தமைக்கு நம் தொன்மங்களில் உறுதியான சான்றுகள் உள்ளன. இந்தத் தொலைவை திரு. ஜெயகரன் வழியில் குமரி முனையிலிருந்து அதாவது 8°வ. நிரைவரையிலிருந்து தொடங்கினால் 8 + 23½ = 31½ x 69.055 = 2175 மைல்கள். அதாவது கிட்டத்தட்ட மகரவரை வரைதான் வருகிறது.

உலகில் அறிவியலும் நாகரிகமும் வெள்ளையர்கள் உலக முழுவதும் பரவத்தொடங்கிய 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் தோன்றின போலும். மக்கள் தொகைப் பெருக்கமும் அதன் பின்னரே தொடங்கியது போலும். எனவே தொல் பழங்காலத்தில் 49 நாடுகள் இருந்திருக்க முடியாது ஏழு ஊர்களே (ஊராட்சியா, சிறப்புநிலை ஊராட்சியா, தேர்வுநிலை ஊராட்சியா, நகர ஊராட்சியா அல்லது "ஆட்சி" இல்லாத சிற்றூரா, அவர்தான் "கண்டுபிடித்துக்" கூற வேண்டும்.) இருந்திருக்க முடியும் என்றும் திரு. ஜெயகரன் கூறுகிறார். மக்கள் தொகை பற்றிய மால்தூசியக் கோட்பாட்டின் முன்னோடியாக, அதாவது அளவின்றிப் பெருகி விட்ட மக்கள்தொகையைப் போரால் அழித்து பூமாதேவியின் சுமையைக் குறைப்பது என்று பாரதப்போரின் நோக்கம் கூறப்படுகிறது. எனவே 49 நாடுகள் மகரக்கோடு வரையிலும் அதற்கு அப்பாலும் கூட இருந்தன என்று கொள்வதில் அறிவியலுக்குப் பொருந்தாத எதுவும் இல்லை.

1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார். வெள்ளைத் தோல் ஐரோப்பியர் தவிர வேறெவருக்கும் அறிவியல் பார்வை இருக்க முடியாது என்ற கண்ணோட்டத்தில் அவை வெளிஉலகங்களிலிருந்து வந்தவர்களின் எய்தல்கள் முடிவுக்கு வருகிறார். உலகில் பிற பகுதிகளில் உள்ள தொன்மங்களில் "கடவுளர்கள்" வானுர்திகளில் மேலேயிருந்தும் கப்பல்களில் கடலிலிருந்தும் வந்தனர் என்று கூறப்பட்டுள்ளபோது நம் நாட்டுத் தொன்மங்களில் அசுரர்களும் அரசர்களும் கந்தர்வாகளும் வானூர்திகளில் பறந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிற பகுதி மக்கள் பதிந்து வைத்துள்ள "கடவுளர்கள்" நம் நாட்டிலிருந்து அங்கு சென்றவர்கள் தாம் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு வான்வழியாகவும் கடல் வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று அவர்களுக்கு நாகரிகத்தைக் கற்பித்த "கடவுளர்கள்" மீண்டும் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றனர். ஆனால் ஒருவர் கூடத் திரும்பவில்லை. குமரிக்கண்டம் கடலில் மறைந்து போனதால் தங்கள் வாக்குறுதியைக் காக்க முடியாமல் போயிற்று என்று கொள்வதில் என்ன தவறு?

உலகில் பல காரணங்களால், மாபெரும் விண்கற்கள் வீழ்வது கடலடி நில நடுக்கங்கள், எரிமலைச் சீறல்கள். பெரும் பனிமலைகள் கடலினுள் சறுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளால் கடலலைகள் எழும்பி மக்களையும் நகர்களையும் காடுகளையும் எண்ணற்ற உயிர்வகைகளையும் அழித்து புதிய உயிர் வகைகள் மீண்டும் உருவானது பற்றிய செய்திகள் புவி இயங்கியல் போன்ற அறிவியல்களைக் கற்றவர்களுக்கு மட்டுமல்ல. இன்றைய ஊடகங்கள் மூலமாக ஒவ்வொரு சராசரிக் குடிமகனுக்கும் தெரியும். அவை போன்ற நிகழ்வுகள் மனிதன் தோன்றிய பின்னும் நிகழ்ந்தன என்பதற்கு எண்ணற்ற பதிவுகளும் வாய்மொழி மரபுகளும் உள்ளன. அதே நேரத்தில் ஐம்புலன்களால் அறிவனவற்றைத் தான் நம்புவோம். பகுத்தறிவைப் பயன்படுத்தும் உய்த்தறிவை (Inference) ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூறும் பூதவாதிகள் எனப்படும் பட்டறிவியர்களுக்கு (Empricists) கண்ணாரக் காட்டுவதற்காகத் தான் போலும் கொடுங்கடல் மீண்டும் ஒருமுறை வீங்கலை எனும் தன் பேய்க்கரத்தால் ஒன்றரை இலக்கத்துக்கும் மேற்ப்பட்ட மனித உயிர்களைத் தன்னுள் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை கடல் கொண்ட நம் தென்புலத்தார் அனைவருக்கும் நினைவேந்தல் செய்வோம்.

“நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்” - குறள் 373,

பூதவாதிகள் பற்றி மணிமேகலை கூறியதை நாம் கூற விரும்பவில்லை. திரு. ஜெயகரன் அவர்கள் புகழ்பெற்ற புவி இயங்கியல் அறிஞர் என்று கூறுகிறார்கள். உண்மையா….?!

(இக் கட்டுரை மார்ச் 2005 கணையாழி இதழில் வாசகர் கடிதம் பகுதியிலும் திண்ணை 07 ஏப்ரல் 2005 இணைய இதழிலும் வெளியாகியுள்ளது.)

1 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

நண்பர் குமரி மைந்தன் அவர்களுக்கு,

உங்கள் கட்டுரைகளை படித்துக்கொண்டு வருகிறேன். தமிழன் அறிவு குறித்தும் அவன் தொன்மை வாழ்விடம் குறித்தும் உங்களின் ஆய்வுகள் என்னுடைய பழைய நிலைப்பாட்டை அசைக்கின்றன(ஜெயகரன் கருத்துதான் சரியானது என்பதுதான் என்னுடைய நிலையாக இருந்தது) முன்னர் இரண்டு பின்னூட்டங்களை இட்டிருந்தேன் ஆனால் ஏனோ நீங்கள் அவைகளை பதிப்பிக்கவில்லை. பரவாயில்லை என்னுடைய ஐயங்களை உங்கள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி
senkodithamizhan@gmail.com

மடலிடுவீர்கள் என காத்திருக்கிறேன்.

தோழமையுடன்,
செங்கொடி.