29.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 21. தமிழ்த் தேசியம்

தேசிய உணர்வென்பது இயற்கையானது. தேசியம் நிலத்தின் எல்லை அடிப்படையில் அமைவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. காட்டில் வாழும் மான்களில் சில வகைகள் தாம் வாழும் எல்லைகளை அடையாளம் இட்டுப் பேணுகின்றன என உயிர் நூலார் கூறுகின்றனர். நம்மூர் நாய்களும் இத்தகைய வாழ்வெல்லைகளை வகுத்துள்ளன. ஒரு நாயின் எல்லையினுள் புதிதாக ஒரு நாய் நுழைந்து விட்டால் அந்த எல்லைக்குரிய நாய் உடனே அதனைத் துரத்துவதற்கு முயலும். அண்டை நாய்களும் சேர்ந்து அதனை கடித்துத் துரத்திவிடும்.

இது போன்றே மனிதக் குழுக்களும் எல்லைகளை வகுத்துப் பேணுவதில் கருத்தாக இருந்து வந்துள்ளன. தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், வெள்ளங்கள், உணவு மூலங்கள் தீர்ந்து போதல், மக்கட் பெருக்கத்தால் புதிய இடங்களைத் தேடுதல், போர்கள் மூலம் மக்களை வெளியேற்றல் அல்லது கைப்பற்றிய இடங்களில் குடியேறுதல் என்று இவ்வாறு எண்ணற்ற காரணங்களால் நிகழும் இடைவிடா இடப்பெயர்ச்சிகளின் ஊடாக எல்லைகளைப் பேணுதலும் நடைபெற்று வந்துள்ளது.

மனிதர்கள் ஒரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினர் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களது மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகமெல்லாம் பரவிய போது ஆங்காங்கேயுள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக் கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.

அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடித் தத்தம் எல்லைகளை மீறிய போது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பகுதியில் இருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடித்ததிலிருந்தும் போர்கள் உருவாயின. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இந்தப் பேரரசுகள் தம் மொழிகளைப் பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்ற போது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி தங்கள் மொழியைத் தம்மை அடக்கியாள்பவரின் மொழியிலிருந்து மாறுபடுத்தித் தம்மை இனங்கண்டு கொள்ளவும் செய்தது. இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம். சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழின் சேரநாட்டுத் திசைமொழி (Dialect) மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் இன்றும் நாட்டுப்புறத்து மலையாளிகளிடம் பழைய கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.

அதே போன்றே சிறுபான்மையினராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்களின் தாக்குதலின் எதிரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களிலுள்ள பின்னொட்டுகள் இத்தகைய ஓர் ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இதை முழுமையாக ஆயவேண்டும்.

இந்தியாவிலுள்ள தேசியங்களின் இயல்பை அறிந்து கொள்வதற்கு நாம் சிறிது தொல்பழங்காலத்திலுள் நுழைய வேண்டும்.

கடலில் முழுகிய குமரிக் கண்டம் பற்றி இந்நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளோம். நம் பண்டை இலக்கியங்களில் காணக்கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் மக்களிடையில் வழங்கும் மரபுகளிலிருந்தும் இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே ஒரு பெரும் நிலப்பரப்பு, நாடுகளும் மக்களுமாக இருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட கடல்கோள்களினால் அழிந்து போனதாக அறிகிறோம். இதற்கு வெளிநாடுகளில் வழங்கும் மரபுச் செய்திகளும் துணைநிற்கின்றன. உயிர்நூலாரில் ஒரு சாராரும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர். நிலத்தியலார் பெரும் நிலப்பரப்பு கடலில் முழ்கியதை ஒப்புக்கொண்டாலும் கால அளவை வைத்துப் பார்க்கும் போது அப்போது மனிதன் தோன்றியிருக்க முடியாது என்று வாதிடுகின்றனர். ஆனால் இந்தக் கால வேறுபாடு உலகில் பல பகுதிகளுக்கும் பொதுவாகக் காணப்படுகிறது. ஆங்காங்கு அவ்வப்போது நடைபெற்ற பல நிலத்தியல் நிகழ்வுகளை மக்கள் பதிவு செய்து வைத்துள்ளனர் அல்லது மரபுகளில் தேக்கி வைத்துள்ளனர். ஆனால் அந்நிகழ்ச்சிகள் மனிதன் வாழ்ந்த காலத்துக்கு முன்னர் நடைபெற்றவை என்று நிலத்தியலார் கூறிவருகிறார்கள். அப்படியானால் மனிதன் தோன்றிய காலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை என்பது புலனாகிறது. மனிதன் தோன்றிய காலம் கொஞ்சங் கொஞ்சமாகப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சில இலக்கம் ஆண்டுகளாயிருந்து அண்மையில் ஆப்பிரிக்காவில் 2½ கோடி ஆண்டுகளுக்கு முந்திய ஒரு மனித எலும்புக் கூடு கண்டிபிடிக்கப்பட்ட பின்பு மிகப் பின்னோக்கி நகர்ந்துள்ளது. எனவே உலக முழுவதும் நிலவிவரும் மரபுகளின்படி குமரிக் கண்டத்தில் மக்கள் வாழ்ந்தது உண்மை தான் என்பதை ஒரு நாள் நிலத்தியலாளர் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

முழுகிப் போன குமரிக் கண்ட மக்கள் எந்த நாகரிக நிலையிலிருந்தார்கள் என்ற கேள்வி தானே எழும். இதற்கு விடையிறுப்பதற்கான தடயங்கள் இல்லாமலில்லை. இதற்கு கீழே தரப்படும் குறிப்புகள் உதவும்.

1) தொல்காப்பிய இலக்கண நூல் காட்டும் மொழியியல் மேன்மை, அதன் பொருளிலக்கணத்தின் பின்னணியிலுள்ள மிக முதிர்ந்த வளர்ச்சி நிலை.
2) கந்தருவர்களைப் பற்றி பிறிதோரிடத்தில் கூறியிருப்பவை.
3) எரிக் வான் டெனிக்கானின் நூல்களில் அவர் காட்டியுள்ள பண்டைக்கால அணு ஆற்றல் ஊழி.
4) 64 கலைகளின் பட்டியல் காட்டும் அறிவியல்- தொழில்நுட்ப வளர்ச்சி.

இந்தத் தடயங்களிலிருந்து உலக முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட ஒரு பெரும் நாகரிக வளர்ச்சியைக் குமரிக் கண்ட மக்கள் எய்தியிருந்தனர்; உலக முழுவதும் வாணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்; உலகமெலாம் குடியிருப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்; குமரிக் கண்டம் முழுக முழுக அக்குடியிருப்புகளில் நாகரிக வளர்ச்சி குன்றி வரலாற்றுத் தடங்களை மட்டும் விட்டுவிட்டு அந்நாகரிகங்கள் மறைந்தன என்பவற்றை உணர முடியும்.

குமரிக் கண்டம் முழுக முழுக இந்தியத் தீவக்குறையில் (தீபகற்பத்தில்) கிழக்குக் கடற்கரையோரத்திலும் மேற்குக் கடற்கரையோரத்திலும் குமரிக் கண்ட மக்கள் குடியேறினர். மேற்குக் கரையோரத்தில் குடியேறியமைக்குத் தெளிவான சான்று மணிமேகலையில் உள்ளது. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதையில் இது கூறப்பட்டுள்ளது.

“பிரமதருமன் எனும் முனிவன் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அறங்கூற அணுகினான். அப்போது அவன் அத்திபதியை நோக்கி ‘நாக நாட்டின் நானூறு யோசனைப் பரப்பாய நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் பெரும் பாதலம் புகும்; ஆதலால் மாவும் (விலங்குகள்) மாக்களும் (மனிதர்கள்) உடன் கொண்டு வேற்றிடம் செல்க’ என்று கூறினான். அவனும் அங்ஙனமே புரிந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு அவந்தி நாட்டின் காயங்கரை என்னும் ஆற்றின் கரையில் பாசறை அமைத்திருந்தான். பிரமதருமன் கூறியபடியே ஏழாம் நாள் நிலநடுக்கம் உற்று அந்நிலப்பரப்பு பாதாளத்துற்றது”.

அவந்தி நாடென்பது குசராத்துக்கும் மராட்டியத்திற்கும் எல்லையில் உள்ள பகுதியைக் குறிப்பதாகும். அங்கு முன்பு கோக்ரா என்ற ஆறு ஓடிக் கடலில் வீழ்ந்து கொண்டிருந்தது. பின்னர் அது மணலுள் மறைந்து போய்விட்டது. (கங்கையின் கிளையாறுகளில் ஒன்றுக்குக் கோக்ரா என்று பெயர்.) மணிமேகலை காயங்கரை ஆறு என்று குறிப்பிடுவது இந்தக் கோக்ராவைத் தான். கங்கைச் சமவெளியில் மிகப் பின்னாளில் தான் மக்கள் குடியேறினர். கங்கைக் கரையில் மிக அடர்த்தியான காடுகள் இருந்ததே அதற்குக் காரணம். இரும்புக் கோடரி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அந்த அடர்ந்த காட்டை அழிக்க முடிந்தது. அவ்வாறு பரவிய மக்கள் தான் கங்கையின் கிளையாற்றுக்குக் கோக்ரா என்ற பெயரைச் சூட்டியிருப்பர். அதற்கு முன் சிந்து சமவெளியில் பாலைக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட மென்காடுகளிலேயே நாகரிகம் தழைத்தது. அந்த வழியாகப் பரந்த மக்கள் வடமேற்கில் நகர்ந்து இமயமலையில் குடியேறினர். தாம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த நாட்டின் நினைவாக அதற்குக் காந்தாரம் என்று பெயர் சூட்டினர். மகாபாரதத்தின் பாண்டவர்கள் புருரவ மரபினரென்பதை ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டும்.

இலங்கைத் தீவுக்கு நாகத்தீவு என்றொரு பெயருண்டு. இது அதன் தொடர்ச்சியாக இருந்து கடலினுள் மறைந்த நாகநாட்டிலிருந்தே பெறப்பட்டிருக்கும்.

சிலப்பதிகாரம் நாகநாட்டின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறது. புகார் நகரம் நாகநாட்டின் நாகம் கரோடு வைத்தெண்ணப்படும் சிறப்புடையாது என்பது அது.

நாகநீள் நகரொடு நாகநாடதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார் நகரது....
[1]

இது கடலில் முழுகிய நாகநாட்டின் சிறப்பு பற்றிய நினைவினடிப்படையிலான குறிப்பாகும்.

இவ்வாறு குடியேறிய மக்களுக்கும் முழுகாது எஞ்சி நின்ற குமரிக் கண்ட அரசுகளுக்கும் தொடர்புகள் தொடர்ந்திருக்கும். ஒருவேளை இங்கிலாந்திற்கும் அங்கிருந்து வெளியேறிக் குடியேறிய அமெரிக்க மக்களுக்கும் இடையில் ஏற்பட்டது போன்ற கசப்புணர்வு உருவாகியிருக்கலாம். இதற்கும் நமக்குத் தடையம் கிடைக்கிறது.

சிந்தாற்றங்கரையில் போலவே குமரிக் கண்ட மக்களால் யூப்பிரட்டி, டைகரி ஆற்றிடை நிலத்தில் உருவாக்கப்பட்ட சுமேரிய, பாபிலேனிய நாகரிகங்களிலிருந்து உருவாகிய அசிரிய நாகரிகக் காலந்தொட்டு காந்தாரப் பகுதி மூலம் இந்தியாவுக்குள் படையெடுப்புகள் நடைபெற்றதற்கு கி.மு.9 ஆம் நூற்றாண்டிலிருந்து வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.[2] பின்னர் பாரசீகப் பேரரசின் காலத்தில் சிந்து சமவெளி அப்பேரரசின் ஒரு மாநிலமாகவே ஆகிவிட்டது. அலக்சாண்டர் சிந்து சமவெளியைக் கைப்பற்றிய போது அது கிரேக்கர்களின் ஆதிக்கத்தினுள் வந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் குமரிக் கண்டத்திலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற மக்களுக்கும் வெளியிலிருந்து வந்த மக்களுக்கும் ஏற்பட்ட மொழிகள் கலப்பினால் சங்கதம் (சமற்கிருதம்) உருவானது. முதல் சங்கதப் பல்கலைக் கழகமான தச்சசீலம் காந்தாரத்திலேயே இருந்தது. இவ்வாறு வடக்கிலுள்ள புதிய பண்பாடு உருவானது.

இப்புதிய பண்பாட்டிலிருந்து உருவான ஓர் இலக்கியமே இராமாயணம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் தசரத சாதகத்தில் எளிமையாகக் கூறப்பட்ட கதை கிரேக்க நாட்டு ஓமர் எழுதிய இலியட் காப்பியத்தை அடியொற்றி இந்துமாக் கடலிலிருந்த ஒரு தீவையாண்ட மன்னனெருவனால் சீதை தூக்கிச் செல்லப்பட்டதாக நீண்டது. அத்தீவையாண்ட மன்னன் அரக்கன் என்று கூறப்பட்டான். அவனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் இழிவான பெயர்கள் சூட்டப்பட்டன் இராவணன் (இராவண்ணன்), மண்டோதரி(பானைவயிறி), சூர்ப்பனகை(முறம்பல்லி), கும்பகர்ணன்(குடக்காதன்) முதலியன.

இது பண்டைய குமரிக் கண்ட மக்களின் மீது வட இந்தியருக்கிருந்த மட்டிலா வெறுப்பைக் காட்டுகிறது. இதற்கு ஒருவேளை குமரிக் கண்ட வாணிகர்கள் கையில் வடநாட்டுப் பொருளியல் சிறைப்பட்டிருந்தது காரணமாகலாம். பின்னர் புத்தமும் சமணமும் வளர்ச்சியடைந்த போது அவற்றை வீழ்த்தப் பார்ப்பனர்கள் வெளியாரை, குறிப்பாகக் கிரேக்கரையே துணை கொண்டனர். பார்ப்பனத் தெய்வங்களுக்குக் கிரேக்கர்கள் கொடைகள் கொடுத்து அத்தெய்வங்களின் அன்பர்களாக மாறியதிலிருந்தே புத்த சமணத்துக்குப் பிற்பட்ட பார்ப்பன எழுச்சி தொடங்கியது.

குமரிக் கண்ட மக்களின் மீதிருந்த வெறுப்பிலிருந்தே வடக்கில் முதன்முதல் தேசிய உணர்வு உருவானது. குமரிக் கண்டம் முழுக முழுகத் தரைவழி வடக்கே நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடியேறிய சேர, சோழ, பாண்டியர்கள் முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது அசோகளின் தந்தை பிம்பிசாரனின் படையெடுப்பையே. அவர்கள் உள்நாட்டுக் குறுநில மன்னர்களின் ஒத்துழைப்பினால் அப்படையெடுப்பை முறியடித்தனர். தொடர்ந்து வரும் படையெடுப்புகளிலிருந்து தந்காத்துக் கொள்வதற்காக சேர, சோழ, பாண்டியர்கள் தமக்குள் ஒரு கூட்டணி அமைத்திருந்தனர். இக்கூட்டணி 123 ஆண்டுகள் நீடித்திருந்ததாகக் கலிங்க மன்னன் காரவேலன் தன் கல்வெட்டொன்றில் கூறுகிறான். அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் அவன் கூறுகிறான். என்ன உத்தியை அவன் கையாண்டான் என்பது தெரியவில்லை. ஆனால் இந்தச் செய்திகளெல்லாம் கழகச் செய்யுள்களில் காட்டப்படவில்லை. ஆனால் மோரியப் படையெடுப்பைப் பற்றி ஓரளவு விரிவான செய்திகள் உள்ளன.

சேரன் செங்குட்டுவன் காலத்தில் அவனும் நடு இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவியிருந்த சாதவாகன மன்னன் சதகர்னியும் நெருங்கிய நண்பர்கள். வங்காளத்தைச் சேர்ந்த பால மரபின் கனக-விசயர்களைச் சிறைபிடிக்கச் சென்ற சேரன் செங்குட்டுவனின் படைக்கு அனைத்துதவிகளையும் அவன் வழங்கினான்.[3]

கழகக் காலத்தில் மூவேந்தர்களிடையிலும் இடைவிடாத போர்கள் நடைபெற்றன. போர்களின் வெற்றி தோல்விகளை முடிவு செய்வோர் பெரும்பாலும் குறிஞ்சி நிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களாயிருந்தனர். சில குறுநில மன்னர்கள் மூவேந்தர்களுக்கிணையாகத் தம் வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். எனவே மூவேந்தர்களும் ஒருங்கிணைந்து கிட்டத்தட்ட அனைத்துக் குறுநில மன்னர்களையும் அழித்துவிடடனர்.

குறுநில மன்னர்களுக்கு வேந்தர்களின் உடைகளில் மணிமூடி தவிர்த்த அனைத்தும் உண்டு. சிலப்பதிகார வரண பூத விளக்கத்தில் வாணிகப் பூதத்தின் உடைகளும் அவ்வாறே கூறப்பட்டுள்ளன. எனவே வாணிகரின் தூண்டல் குறுநில மன்னர்களை அழித்ததின் பின்னணியில் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எல்லைகளில் குறுநில மன்னர்களின் வடிவில் இருந்த பாதுகாப்பரண்கள் மூவேந்தர்களாலேயே வீழ்த்தப்பட்டன.

கோவலனைக் கொன்றதற்காகச் செங்குட்டுவனிடம் முறையிடுவது போல் கண்ணகி சேரநாட்டு எல்லையை அடைந்துள்ளாள் என்று கூறுவதன் மூலம்[4] வாணிகர் சாத்தனார் பாண்டியன் மீது படையெடுத்து அவனைத் தண்டிக்கக் குறிப்பால் வேண்டுகிறார். வாணிகராகிய அவருக்கு ஒரு பேரரசு அமைவது தம் வகுப்பு நலனுக்கு உகந்தது என்று தோன்றியிருக்கலாம். கண்ணகிக்குப் பொதிகைமலையில் கல்லெடுத்து அதனைக் காவிரியில் நீர்ப்படை செய்யலாமென்றும் அவனுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் அவனோ வடநாட்டிற்குச் செல்வதென்றே முடிவெடுத்தான்.

இலங்கைக் கயவாகுவால் மணிமேகலையின் துணையோடு சோழநாடு சூறையாடப்பட்டது. அதே கயவாகுவைக் கண்ணகி கோயில் நடுகல் விழாவுக்குச் செங்குட்டுவன் வரவழைத்திருந்தான். இது செங்குட்டுவனிடத்தில் தேசிய உணர்வு குன்றியிருந்ததையே காட்டுகிறது.

செங்குட்டுவனிடம் மங்கியிருந்த தேசிய உணர்வு இளங்கோவடிகளிடம் நிரம்பி வழிந்தது. உலகின் தலைசிறந்த காப்பியமாகிய அவரியற்றிய சிலப்பதிகாரத்தில் அது பொங்கி வழிவதை நம்மால் காண முடிகிறது.

அத்தேசிய உணர்வை அதன் பின் நெடுநாட்களுக்கு நம்மால் தமிழகத்தில் காண முடியவில்லை. கி.பி.1682 முதல் 7 ஆண்டு காலம் ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் இந்தத் தேசிய உணர்வு மீண்டுமொருமுறை தலைநீட்டி மறைந்தது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீழ்ந்த கட்டபொம்மனிடம் தெளிவான தேசியக் கண்ணோட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால் அவனைத் தொடர்ந்து குமரியிலிருந்து மராட்டம் வரை விரிந்த ஒரு கட்டணி அமைத்த மருதுபாண்டியரின் சீரங்கம் அறிக்கையில் தெளிவான தேசியம் வெளிப்படுகிறது.[5]

இறுதியில் இந்த நூற்றாண்டில் தமிழ்த் தேசியம் மலர்ந்து நிற்கிறது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்.

உலகில் தோன்றும் அனைத்துத் தேசிய எழுச்சிகளைப் போலவே தமிழ்த் தேசிய எழுச்சியும் தமிழ் பேசும் மக்களில் மிக உயர்ந்த இடத்திலிருந்தவர்களிலிருந்தே தோன்றியது. பார்ப்பனர்கள் தான் தமிழ்த் தேசியத்திற்குப் பள்ளியெழுச்சி பாடினர் என்றால் அது தவறாகாது.

பல நூறாண்டுக் காலமாக தமிழகத்தில் தெலுங்கர்களும் பின்னர் மராத்தியர்களும் ஆட்சி செலுத்தினர். எனவே கோயில்களில் இடம்பெற்ற இலவசக் கல்விக் கூடங்களிலும் அரசுப் பணிகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. உள்நாட்டினரான தமிழ்ப் பார்ப்பனர்கள் இதனால் மனக்கசப்படைந்து இருந்தனர். அதன் விளைவாக ஆரிய - திராவிடக் கோட்பாடுகள் உருவான போது பார்ப்பனரில் ஒரு சாரர் அதற்கு எதிராகப் பேசினர். அவர்களில் தலையாயவர் வி.ஆர். இராச்சந்திர தீட்சிதர் ஆவார். தமிழர்களின் தோற்றமும் பரவலும் எனும் நூலில் தமிழகத்திலிருந்து வெளியேறிச்சென்ற தமிழர்களே உலகெங்கிலுமுள்ள நாகரிகங்களை உருவாக்கினர் என்று அவர் வாதிட்டார். பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் இரா. இராகவய்யங்கார் மு. இராகவையங்கார் போன்றோர் தமிழிலக்கிய ஆய்வுகளை நிகழ்த்தினர். மறைமலையடிகள் வளப்படுத்திய தனித்தமிழ் இயக்கத்துக்கு வழிகாட்டியவர் தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று தமிழ்ப்படுத்திக் காட்டிய சூரியநாராயண சாத்திரி எனும் பார்ப்பனரே.

குமரிக் கண்டக் கோட்பாடு உட்படப் பழந்தமிழகப் பெருமைகளையும் சங்கத இலக்கியங்களிலுள்ள கீழ்மைகளையும் திராவிட இயக்கத்தினருக்குச் சுட்டிக் காட்டும் வகையில் சர்வ வருண சமரச விளக்கம் போன்ற நூல்களை எழுதியவரும் ஒரு பார்ப்பனரே. வெள்ளையரை ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடுவதில் இந்தியர்களின் ஒற்றுமைக்குத் தடையாயிருக்கும் சாதி வேற்றுமைகளைக் களையவேண்டுமென்ற நோக்கத்தில் தன் சாதிப்பட்டத்தை விடுத்து பாரதி என்று புதுப்பட்டம் புனைந்து கொண்ட சி.பி.இராசகோபால பாரதி என்ற இவர் விதவா விவாக விளக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்து சீர்திருத்தர் கழகம் என்ற பெயர் கொண்ட அமைப்பின் உறுப்பினர் அவர். தமிழக வரலாறு, ஆரிய - திராவிடக் கோட்பாடுகள், வரணங்கள், சாதிகள், சங்கத மொழியிலுள்ள சான்றுகள் ஆகியவற்றில் இவர் இந்நூற்களில் தந்துள்ள செய்திகளின் எல்லையை இன்றைய திராவிட இயக்கத்தினர் இன்னும் தாண்டவில்லை.

இவ்வாறு பார்ப்பனர்கள் வகுத்துத் தந்த கோட்பாடுகளிலிருந்து தான் திராவிட இயக்கம் தன் பயணத்தைத் தொடங்கியது. ஆனால் அது தன் பயணப் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கும்போதே பார்ப்பனர் அதற்கு எதிரிகளாகி விட்டனர்.

இது உலக வரலாற்றில் காணப்படும் பொதுக் கூறு தான். உருசியாவில் சார் மன்னனை எதிர்த்து முதன்முதலில் போர்க்கொடி தூக்கியவர்கள் உயர்குடியினர் தான். அந்த இயக்கம் மக்களை நோக்கிப் பரவத் தொடங்கியதுமே உயர்குடியினர் அதன் எதிரிகளாகி விட்டனர்.

இந்தியாவில் பேரவைக் கட்சியைத் தொடங்கியவரே ஓய்வு பெற்ற ஓர் ஆங்கில அதிகாரி தான். ஆங்கிலேயர் ஆட்சி மீது மக்களுக்குப் பெரும் வெறுப்பு ஏற்படாமல் காப்பதற்காகவே அக்கட்சியைத் தோற்றுவிப்பதாகத் தான் அவர் வெள்ளை அரசாங்கத்திற்கு எழுதினார். ஆனால் தொடங்கி 35 ஆண்டுகளுக்குள் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு விடுதலை தர வேண்டுமென்ற முழக்கத்தை அக்கட்சி முன்வைத்துவிட்டது.

அண்மையில் தமிழகத்துக்குள்ளேயே நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்போம். திருவிதாங்கூர் மாகாணத்திலிருந்த தமிழ் பேசும் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய இயக்கம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனப்படும். இதன் தலைவராக நாம் அறிவது நேசமணி அவர்களையே. இவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் எனப்படும் மேற்சாதியைச் சேர்ந்தவர்களாகும். பி.எசு.மணி என்பவரும் மற்றும் சிலரும் தான் இவ்வியக்கத்தின் கருவாய் அமைந்தவர்கள். இவ்வியக்கத்துக்குத் தேவையான வரலாற்றுக் கோட்பாட்டை உருவாக்கியது சேரநாடும் செந்தமிழும் என்னும் நூல். இந்நூலாசிரியர் திரு. சாதாசிவம் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்கள்.
[6]

இந்த இயக்கம் சிறிது வலுவடைந்த போது அதில் கிறித்தவ நாடார்களும் ஏழை நாடார்களை ஒடுக்கி அரசுக்கு ஊழியம் செய்ய வைத்த ஊர்த்தலைவர்களான முதல் பற்று நாடான்களையும்[7] பொறுத்துக் கொண்ட இவர்கள் எளிய குடும்பங்களில் பிறந்து படித்து வந்த நாடார்கள் இயக்கத்தில் நுழையத் தொடங்கியதும் ஆளுக்கொரு காரணம் கூறிக்கொண்டு வெளியேறி விட்டனர். பின்னர் அச்சாதியினர் முழுவதும் திருவிதாங்கூர் மலையாளிகளுடன் சேர்ந்து நின்றனர். இயக்கத்தை நாடார் காங்கிரசு என்றனர்.

அது போலவே திராவிடர் இயக்கமாகிய நயன்மைக் கட்சியிலிருந்த உயர்சாதியினர் அனைவரும் அவ்வியக்கத்தில் கீழ்ச்சாதியினர் சேரத் தொடங்கியதுமே வெளியேறிவிட்டனர். பெரியார் அவ்வியக்கத்தில் தலைமையை ஏற்கும் போது வெள்ளாளர்கள் எவருமே அங்கு இல்லை.[8]

அதே போல் உருசியாவிலும் உயர்குடி மக்களை அடுத்து மக்களாட்சி கேட்டுப் போராடத் துணிந்த நடுத்தர மேல்தட்டு மக்களே பாட்டாளியக் கட்சிகளுக்கு அடிகோலினர். ஆனால் உண்மையான பாட்டாளிகளின் ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டத்தை லெனின் முன்வைத்த போது அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
[9]

எனவே இந்த வரலாற்றியல் நிகழ்முறை தான் தமிழகத்திலும் நடைபெற்றது. ஆனால் பெரியார் கைகளுக்குக் கட்சியின் தலைமை வந்ததும் கட்சியின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் வந்தது.

நயன்மைக் கட்சி மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடுச் சட்டம் மட்டும் கொண்டு வரவில்லை. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும் நடவடிக்கைகள் எடுத்து அண்மைக் காலம் வரை தமிழகத்தில் இருந்த பல தொழில் நிறுவனங்களின் தோற்றத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது.

ஆனால் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே தன் செயல்திட்டமாக்கினார். பார்ப்பனர்களுக்கு ஆதரவு வடநாட்டு முதலாளிகளாகிய பனியாக்களிடமிருந்து கிடைக்கிறது என்பதற்காகத் தான் பார்ப்பன-பனியா கூட்டு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஆனால் இந்தப் பனியாக்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அவர் அசைக்கவில்லை. பம்பாயின் பணப்பெருக்கு தென்னகத்தின் பொருளியலை விழுங்கிவிடுகிறது என்பதை விளக்கும் அண்ணாத்துரையின் பணத் தோட்டம் நூலையும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற ழுழக்கத்தையும் பெரியார் எப்படி எதிர்கொண்டார் என்று தெரியவில்லை. பெரியாரும் அண்ணாத்துரையும் பிரிந்ததற்கும் இம்முழக்கத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பதும் தெரியவில்லை. ஆனால் தி.மு.க. அந்த முழக்கத்தை வைத்து வளர வளர சென்னையிலுள்ள மார்வாரிகளுக்குக் கலக்கம் பிறந்தது. அவர்கள் திராவிடர் இயக்கத் தொண்டர்களால் தாக்கப்படுவர் என்ற நிலை உருவானது. இதைத் திசை திருப்பத்தானோ என்னவோ உணவு விடுதிகளில் உள்ள “பிராமணாள்” என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அம்பி விடுதி என்ற பார்ப்பனர் உணவு விடுதி முன்பு இப்போராட்டம் ஒன்றரையாண்டு நீடித்தது. அடுத்து பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தவரும் சும்மாயிருக்கவில்லை. மார்வாரிகளுக்கெதிராயிருந்த தம் தாக்குதலை நடுவணரசுக்கு எதிராகத் திருப்பினர். பம்பாயின் மூலதனம் தமிழகத்தைத் தாக்குகிறது; எனவே தமிழகப் பொருளியலை அதன் தாக்குதலிலிருந்து காக்கப் போராட வேண்டும் என்ற நிலை ஓசைப்படாமல் கைவிடப்பட்டது. நடுவணரசின் ஐந்தாண்டு திட்டங்களில் தமிழகத்துக்கு உரிய பங்கு வேண்டும் என்ற வகையில் மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டது.

இது போன்ற முழக்கங்களை முன் வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடந்ததென்ன? பேராயக் கட்சி ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அலுவலகத் தமிழ் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றது. எண்ணற்ற ஆங்கிலவாயில் மழலையர் பள்ளிகள் உருவாயின. நேர்மைக் கட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மீனாட்சி ஆலை, சங்கர் சிமென்றாலைகள் போன்ற எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் கைகளுக்குப் பறிபோயின. அதற்கு நடுவணரசு நிறுவனங்களான உயிர் காப்பீட்டுக் கழகமும் அரசுடைமை வங்கிகளும் தொழில் வளர்ச்சி நிறுவனங்களும் தமிழக அரசும் துனை நின்றன. அத்துடன் இந்தியப் பெருமுதலாளிகளுடன் தமிழக அரசு கூட்டில் புதிய தொழில் நிறுவனங்களும் உருவாயின.

திராவிடர் கழகம் பொருளியல் அணுகுமுறையைத் திட்டமிட்ட வகையில் தவிர்க்கிறது. ஒருமுறை நெல்லையில் இந்நூல் ஆசிரியர் சில திராவிடர் கழக இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் இளைஞரணித் தலைவரைச் சந்தித்துத் தமிழகத்தின் பொருளியல் பற்றிய சிக்கல்களைக் கையிலெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தார். ஆனால் அதையறிந்து மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர் அம்முயற்சியிலீடுபட்ட இளைஞர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அத்துடன் அவ்விளைஞர்களின் அத்தகைய முயற்சிகள் கைவிடப்பட்டன. பொருளியல் அணுகுமுறையைப் பற்றிப் பேசுவோரைத் தவிர்ப்பதற்காக “பொதுமையினர்; ஊடுருவுகின்றனர்” என்ற எச்சரிக்கை அடிக்கடி விடுதலை இதழில் வெளிவரும்.

மதுரையிலுள்ள சில திராவிட இயக்க அன்பர்களின் முமயற்சியால் அனல் வீச்சு என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. அதில் ஒரு முறை நேர்மைக் கட்சியின் அருஞ்செயல்கள் பற்றிய ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அக்கட்சியின் ஆட்சியில் பண்பாட்டுத் துறையிலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிலும் அது மேற்கொண்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தனவேயன்றி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியில் அதன் செயற்பாடுகள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை.

இவ்வாறு பொருளியலை மறந்து போவது ஒரு வகை வகுப்புக் கண்ணோட்டம். அதைப் பற்றி நாம் அடுத்த அதிகாரத்தில் விரிவாக ஆய்வோம். ஆனால் திட்டமிட்டுப் பொருளியலைப் புறக்கணிப்பது என்பதற்கு ஏதாவது தனிநலன்க இருக்க வேண்டும்.

இதைக் கண்டுபிடிப்பதற்கு இந்தப் பொருளியல் புறக்கணிப்பால் பயன்பெறுவோர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். நாம் மேலே விளக்கிய வரலாற்று நிலைமைகளில் நமக்கு மனக்கண் முன் தோன்றுவோர் மார்வாரிகளே.

இது சரியாக இருக்க முடியுமா என்று ஆய்ந்து பார்ப்போம். திராவிட இயக்கம் பார்ப்பனர்களைத் தன் எதிரியாக முன் வைத்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக மதமாற்றம் எனும் உத்தியையும் முன் வைத்தது. வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்பியக்கங்களாக விளங்கிய புத்த சமண-சமயங்களைப் பாராட்டவும் செய்தது. புத்த சமயத்தவர் இன்று தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால் செல்வமும் செல்வாக்கும் மிக்க மார்வாரிகள் சமணர்கள். இந்த அடிப்படையில் மார்வாரிகளுக்கும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அண்ணாத்துரை தன் திராவிட நாடு இதழில் ஒரு பொங்கல் மலரில் எழுதிய பவள பற்பம் எனும் குறம்புதினத்தில் அதன் கதைத் தலைவி சமண சமயத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் தொண்டாற்றுவதாகக் காட்டுகிறார். அது போல் பல ஆண்டுகளாகவே மார்வாரிகளோடு தனக்குத் தொடர்புண்டு என்று அவர்கள் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கூறினார் முதலமைச்சராயிருந்த கருணாநிதி.

அ.தி.மு.க.வில் நல்ல செல்வாக்குடன் இருந்த உக்கம்சந்து என்ற மார்வாரி மார்வாரிகள் சங்கத்தில் முகாமையான பொறுப்பாளர். ம.கோ.இரா. முதலமைச்சராயிருந்த போது தமிழகத்துப் பொருளியல் நலன்களை அயலவர்களுக்கு விற்பதாகிய நுழைவுவரியைப் பொறுத்த வரை ம.கோ.இரா.வும் கருணாநிதியும் தம் உண்மை உருவை மக்கள் முன் காட்டி நின்றனர். வாணிகப் பெருமக்கள் துணிந்து களத்தில் இறங்கியதால் அந்த இடையூறு அகன்றது.

இவை அனைத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதை உணர நமக்குத் தனித்திறமை தேவையில்லை. மார்வாரிகளுக்குச் செய்து கொடுக்கும் வசதிகளுக்கு நம் திராவிடத் தலைவர்களும் பிற தமிழகத் தலைவர்களும் பங்கு பெற்று வருகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பெரியார் அத்தகைய தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறு நெருடல். பெரியார் இறக்கும் போது திராவிடர் கழகத்திடம் இருந்த பணம் உரூ.125 கோடி என்று திரு. வீரமணி அவர்கள் ஒருமுறை அறிவித்ததாகத் தெரிகிறது. 1974இல் உரூ125 கோடி என்பது மிகப் பெரிய தொகை. எடைக்கு எடை வெள்ளி நாணயம், உருபாய் நாணயத்தாள் மாலைகள் என்று என்ன தான் தொண்டர்களிடம் தண்டினாலும் இத்தொகை நமக்கு மலைப்பாகத் தான் இருக்கிறது.

1989, 1991 தேர்தல்களின் போது பார்ப்பனப்பெண் என்று அடையாளம் காட்டப்பட்ட செயலலிதாவின் முன் அவர் ஆட்சிக்கு வந்த பின் மண்டியிட்டுக் கிடக்கும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி தான் செயலலிதாவிடமிருந்து 5 இலக்கம் உரூபாய்கள் நன்கொடை வாங்கியதை நயப்படுத்துவதற்காக முன்பொரு நாள் ஆச்சாரியார் தன்னை இந்தியப் பொது ஆளுநர் (Governor General) பதவியிலிருந்து இறக்கியதை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டுமென்று எசு.எசு. வாசன் மூலம் கொடுத்தனுப்பிய ஒரு “நன்கொடையை”ப் பெரியார் ஏற்றுக் கொண்ட உண்மையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பெரியார் ஆச்சாரியாரின் வேண்டுகோளை நிறைவேற்றவில்லையாம். தான் கோட்பாட்டளவில் தாக்கும் தலைவரிடமிருந்தே பணம் பெற்றுக்கொள்ளும் பழக்கம் பெரியாருக்கு இருந்தது என்பதற்கு இது ஆணித்தரமான சான்று. அப்படியிருக்க தான் போற்றிப் புகழும் சமண சமயத்தைச் சார்ந்த மார்வாரிகளிடமிருந்து பணம் பெறுவதில் அவருக்கு எந்தவிதமான தயக்கமும் இருந்திருக்க முடியாது.

பெரியார் பல வகைகளில் புதிராகவே இருக்கிறார். சாதியத்தை எதிர்த்துத் தொடக்க காலங்களில் வன்முறைகளுக்குக் கூட அஞ்சாமல் களத்திலிறங்கிப் பணிபுரிந்த பெரியார் முகுகுளத்தூர் கலவரத்துக்கு முன்னும் பின்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ஆனால் எண்ணிக்கையிலும் போர்க்குணத்திலும் குறைந்தவர்களான பார்ப்பனர்களை தரக்குறைவாகப் பேசுவதில் அவர் தளராத இன்பங் கண்டார்

வன்முறை மூலம் நாட்டை வலுப்படுத்துவது என்று கட்டாட்சி (பாசிச) இயக்கம் கண்டவன் முசோலினி. அவன் கட்சிக்கொடி சிவப்புப் பின்னணியில் கருப்பு வட்டம். கட்சியினரின் உடை கறுப்பு. பெரியார் தன் கட்சிக்கு அமைத்த கொடி கறுப்புப் பின்னணியில் சிவப்பு வட்டம். கட்சியினருக்கு அதே கறுப்பு உடை. ஆனால் இந்த உடைக்கும் கொடிக்கும் உரிய செயல்திட்டம் எதுவும் என்றும் தீட்டப்படவே இல்லை.

1933 இல் ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் பொதுமை நோக்கிய குறிக்கோள் ஒன்றை அறிவித்தார் பெரியார். ஆனால் ஆங்கில அரசு அடக்குமுறையை ஏவி அவரையும் பிற தலைவர்களையும் சிறையிலடைத்ததும் திட்டத்தைப் பின்வாங்கி சிறையிலிருந்து மீண்டார். பின்னர் அந்தப் பேச்சே இல்லை.

பார்ப்பனைரை ஒழிப்பேன் என்று சூளுரைத்துக் கிளம்பிய பெரியார் இராசகோபாலாச்சாரியாரைத் தன் முழு எதிரியாகக் கூறுவார். ஆச்சாரியார் என்ன கூறகிறாரோ அதற்கு நேர் எதிராகவே நாம் செயற்பட வேண்டும் என்று ஒரு மொட்டை விதியைக் கூடக் கட்சியினருக்கு அமைத்துக் கொடுத்தார். ஆனால் அதே ஆச்சாரியாரைத் தன் உயிர் நண்பர் என்று கூறிக்கொண்டு தன் வாழ்விலும் இயக்கத்தின் வாழ்விலும் முகாமையான கட்டங்களில் ஆச்சாரியாரின் அறிவுரைகளை நாடியிருக்கிறார். இவற்றைத் திராவிட இயக்கத்தின் மீது பரிவு கொண்டிருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தாய்மதத்தினரின் வீடுகளில் ஓம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். கிறித்துவர்களின் வாயில்களில் இயேசு இவ்வீட்டின் தலைவர் என்பது போன்ற சொற்கள் இருக்கும். முகம்மதியர்களின் வீடுகளில் அரபி எழுத்துகள் காணப்படும். அதே போல் திராவிடர் கழகத் தோழர்களின் வீடுகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற சொற்களைக் காணலாம்.

இந்தச் சொற்களின் உண்மையான பொருள் என்ன? தமிழகம் அயலாருக்குரியதல்ல என்பதா அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டும் தமிழகத்தில் உரிமையில்லை என்பதா? இது மண்ணைக் குறிக்கிறதா “இனத்தை”க் குறிக்கிறதா? சிந்தித்துப் பார்த்தோமாயின் இனத்தையே குறிப்பிடுகிறது என்பது தெரியும். பார்ப்பனர் என்பவர் “ஆரிய இனம்” என்ற கண்ணோட்டத்தில் ஆரியர்களாகிய பார்ப்பனர்களுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்பது தான் இதன் பொருள். பார்ப்பனர் தவிர வேறு யார் தமிழகத்தின் மீது உரிமை கொண்டாடினாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.

இவர்களின் கவலை பார்ப்பனர்களை வெளியேற்றுவது என்ற தொடக்க நிலையிலிருந்து எப்போதோ மாறிவிட்டது. தமிழகத்து அரசுப் பணிகளில் பார்ப்பனர்களைப் போல் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் என்றோ வந்தாயிற்று. இன்று இந்த நிலை வளர்ந்து இந்திய அரசுப்பணி வரையில் பார்ப்பனரல்லாதோருக்கு ஒதுக்கீடு வேண்டும் என்று தமிழக எல்லையை மீறிச் சென்று விட்டது. அதற்காக ஆங்கிலம், இந்தி அல்லது வேறெந்த மொழியை வேண்டுமானாலும் அது தமிழர்களுக்குப் பரிந்துரைக்கும். தமிழ்நாடு தமிழருக்கே என்ற சொற்கள் என்றோ வெற்றுச் சொற்களாகி விட்டன.

திராவிடர் இயக்கம் ஒரு தேசிய இயக்கமல்ல. ஒரு காலத்தில் அது ஒரு தேசிய இயக்கம் போல் மிகக் குறுகிய காலம் தோற்றம் தந்தது. உண்மையில் அது ஒரு காட்டிக் கொடுக்கும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஒரு தேசிய இயக்கத்தின் வேர்கள் அதன் மண்ணின் மீது இறங்கியிருக்க வேண்டும். அரசுப் பணி என்ற ஒட்டுண்ணிப் பிழைப்புக்கு என்றுமே மண்ணில் வேர் கிடையாது. அரசுப் பணியில் வாழ்ந்துவிட்ட பார்ப்பனர்களுக்குத் தேசியமே கிடையாது. இன்று தமிழர்களாயிருப்பார்கள், நாளை இந்தியர்களாக மாறிவிடுவார்கள், மறுநாள் அமெரிக்கர்களாகிவிடுவார்கள். அவர்களைப் போன்றோரே வெள்ளாளர்களும். இவ்விரு சாதியினரும் நிலம் படைத்தோராயிருந்த காலத்தில் கூட நிலத்தில் கால் ஊன்றியவர்களில்லை. நிலத்துக்கு எட்டாத் தொலைவிலிருந்து கொண்டு கீழ்ச்சாதியினரைப் பிழிந்து வாழ்ந்தோரே. இந்த ஒட்டுண்ணிப் பண்பாட்டுக்கு வாழ்த்துப்பாடி கீழ்ச்சாதி மக்களின் வேர்களையும் பிடுங்குவதில் ஏறக்குறைய முழு வெற்றி பெற்றுவிட்டது திராவிட இயக்கம். அந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் எதிரியாகத் திகழ்கிறது திராவிட இயக்கம்.

ஒரு தேசிய இயக்கத்தின் இலக்கணத்தையும் அதன் பல்வேறு விரிவாக்கக் கட்டங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பகுத்தாய வேண்டும். அதை அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

இந்த அதிகாரத்தை முடிக்கும் முன் திராவிட இயக்கத்தின் இன்னொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட வேண்டும். திராவிட இயக்கத்தினர் தம்மை இறைமறுப்பாளர்களென்று கூறிக்கொள்கின்றனர். “கடவுள் இல்லை. இல்லவே இல்லை” என்று கூறுபவர்கள் அவர்கள். ஆனால் பெரியாரே “நம்மவர்” என்று கூறிக் குன்றக்குடி அடிகளின் அடிபணிந்து (கால்களில் விழுந்து) வணங்கியதாவும், “பிறர் பார்ப்பனராகிய சங்கராச்சாரியார்களின் காலில் விழுந்து வணங்கித் தமிழனின் தன்மானத்தை அழிக்கிறார்கள்; நான் தமிழராகிய அடிகளார் முன் விழுந்து வணங்குவதால் தமிழர்களின் மதிப்பை உயர்த்துகிறேன்” என்று கூறித் திருநீற்றை வாங்கிப் பூசிக் கொண்டாராம்.

புத்த சமயம், சமண சமயம், கிறித்துவம், முகம்மதியம் முதலிய சமயங்களுக்கு மாறுவதைத் திராவிடர் கழகம் பரிந்துரைக்கவும் செய்கிறது. கடவுள் இல்லாத சமயம் எது? புத்தருக்கும் மகாவீரருக்கும் கடவுளுக்கிருக்கும் ஆற்றல்கள் அனைத்தும் அவரவர் சமயங்களில் கற்பிக்கப்பட்டுள்ளனவே! மேலே கூறிய எந்தச் சமயத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை? அப்படியானால் இந்தக் குழறுபடிக்குக் காரணம் என்ன? திராவிடர் கழகத்தினர் தங்களையே சிறிது ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

திராவிடர் இயக்கம் பார்ப்பனர்களைப் பிற மேற்சாதியினர் குறிப்பாகச் சிவனிய வெள்ளாளர் எதிர்த்ததிலிருந்து தோன்றியது. அது பின்னாளில் கீழ்ச்சாதியினரையும் அரவணைத்துக் கொண்டது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்குச் சாதி ஒழிப்பு என்ற புதிய வடிவத்தைக் கொடுத்தது. சாதிப் பற்றாளர்கள் சமய நம்பிக்கைகளையும் நூல்களையும் காட்டி சாதிகள் கடவுளால் வகுக்கப்பட்டன என்றனர். இயல்பாகவே பார்ப்பனர்கள் தான் இந்நம்பிக்கைகளின் காவலர்களாகவும் அவற்றை உயர்த்திக் கூறும் நூல்களின் பாதுகாவலர்களாகவும் அமர்த்தப்பட்டிருந்தனர். எனவே எதிர்ப்பு நம்பிக்கைகளின் மீதும் கடவுள்களின் மீதும் திரும்பியது. இறைமறுப்பு, மூடநம்பிக்கையொழிப்பு என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

இனி ஒரு முரண்பாடு தோன்றுகிறது. சாதியொழிப்பை விரும்புவோரெல்லாம் இறைமறுப்பாளர்களாக இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் அது நடைபெறக்கூடிய ஒன்றல்ல. எனவே பார்ப்பனர் தலைமையல்லாத சமயங்களை நாடிச் செல்ல வேண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க குன்றக்குடி மடம் போன்ற சிவனிய மடங்களெல்லாம் கார்காத்தார் எனும் சிவனிய வெள்ளாளப் பிரிவினரிடமே உள்ளன. அம்மடங்களின் கீழ் எண்ணற்ற கோயில்களும் உள்ளன. அக்கோயில்களில் பார்ப்பனப் பூசாரிகளே சங்கதத்தில் மந்திரஞ் சொல்லி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். இங்கும் இந்த முரண்பாட்டுக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. “இந்து” சமயத்தில் சாதி வேறுபாடு இருக்கிறது என்பது தான் இவர்களது உண்மையான குறையாயிருந்தால் சாதிய வேறுபாட்டையும் எண்ணற்ற கடவுள்களையும் ஒழித்த ஒரு புதிய சமயத்தை உருவாக்குவதற்குத் தேவையான எல்லா உத்திகளையும் வகுத்திருக்கலாமே. அயல் மதங்களைப் பரிந்துரைத்தவர்கள் இதைச் செய்வதில் எந்த முரண்பாடும் இருந்திருக்காதே. இவ்வாறு முரண்பாடுகளின் நிலைக்களனாய் திராவிட இயக்கம் இருந்து வந்திருப்பதனால் தான் அதன் மீது நமக்கு ஐயம் ஏற்படுகிறது.

திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான நயன்மைக் கட்சியில் தமிழகத்தின் பொருளியல் நலன்களைத் தம் நலன்களாகக் கொண்ட வகுப்புகள் பங்கு கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை இன்று வடக்கின் தாக்குதலுக்கு முன் வீழ்ந்து அதனிடம் அடிமைப்பட்டுப் போயின. எஞ்சியவை பெரியார்-அண்ணாத்துரைக் கும்பலை நம்பி நம்பி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஒரு விடிவு நாளும் கண்களுக்குப் புலனாகாமல் இருட்டில் பதுங்கிக் கிடக்கின்றன. இந்தக் கும்பல் அவ்வப்போது காட்டும் தேசியப் பொய்யுருவை நம்பி இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த தேசிய உணர்வுள்ள எண்ணற்றோர் இலவு காத்த கிளிகளாக வாழ்ந்து மாய்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் ஒரு ஒளிமிக்க விடிவு காலம் பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்:

[1] சிலம்பு. மங்கல வாழ்த்துப் பாடல் 21-22

[2] நாகரிகத்தின் கதை - கீழைநாடுகள் நமக்களித்த சொத்து , வில்தூரன்

[3] பால மரபினர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தான் இன்றைய வரலாற்று வரைவின்படி முதன் முதல் தென்படுகின்றனர். எனவே சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே எழுதப்பட்டது என்று நம் நாட்டு “முற்போக்கர்கள்” கூறுகின்றனர். வரலாற்றில் அரச மரபுகள் உருவாவதும் மறைவதும் பல நூற்றாண்டுகள் சென்ற பின் மீண்டும் தலை தூக்குவதும் இயல்பே. சோழ மரபே இதற்குச் சிறந்த சான்று. அது போல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டளவில் பால மரபு இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக சிலப்பதிகாரச் செய்திகயைக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் வரலாற்றாய்வாளர்களின் தாழ்வுணர்ச்சியும் “முற்போக்கர்களின்” தமிழ்ப் பகை உணர்வும் இந்திய வரலாற்றை வளப்படுத்தக் கிடைக்கும் இது போன்ற எத்தனையோ சான்றுகளை வலியுறுத்தாமல் புறக்கணித்து விடுகின்றன. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்திய வரலாறு எழுதிய சி.எசு.சீனுவாசாச்சாரி, எம்.எசு. இராமசாமி அய்யங்கார் போன்றோர் இவ்வகையில் நம் போற்றுதலுக்குரியோர்.

[4] சிலம்பு. - காட்சிக் காதை

[5] South Indian Rebellion, Dr. Rajayyan.

[6] கவிமணி அவர்களை ஒரு சிறந்த குழந்தைப் பாவலராகத் தான் உலகம் அறியும். ஆனால் அவர் ஒரு சிறந்த வரலாற்றாய்வாளர். குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்வெட்டுகளை அவரே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவர் ஆய்வின் வெளிப்பாடாகத்தான் சேரநாடும் செந்தமிழும் என்ற நூல் பிறந்தது. இன்று புகழ் பெற்று விளங்கும் படூர். பத்மனாபன் அவர்களின் ஆய்வுகளுக்கும் அடித்தளமாய் அமைவது கவிமணி அவர்களின் ஆய்வுகளே. ஏனோ தெரியவில்லை கவிமணி அவர்களை ஒரு வரலாற்றாய்வாளர் என்று உலகுக்கு அறிவிப்பதை அவர் சாதியரான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் விரும்பவில்லை.

[7] ஊர்த்தலைவர்கள்.

[8] ஆனால் வெளியேயிருந்து அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டனர். ஆரியர் - திராவிடர் என்ற கோட்பாட்டினால் வெள்ளாளர் திராவிடப் பக்கம் வருகின்றனர். எனவே ஒதுக்கீட்டில் முற்பட்டவர் என்ற வகைப்பாட்டில் அவர்கள் வந்தாலும் பார்ப்பனரல்லாத திராவிடர் என்ற வகையில் திராவிடர் கழகத்தின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. முற்பட்ட சாதியாருக்கெதிராக எழுந்த அலையில் வெள்ளாளர்கள் மிகத் திறமையாகச் செயற்பட்டு பதுங்கித் தப்பிவிட்டனர். ஒதுக்கீட்டுக்கு முன்பிருந்த உயர்பதவி வாய்ப்புகளில் அவர்களுக்கு இன்றும் குறைவேதுமில்லை. இருப்பினும் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக இரா.சே.ச. விலும் பெரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த வகையில் திராவிட இயக்கம் சிவனிய வெள்ளார்களின் இயக்கமே என்ற சில மார்க்சியர்களின் கூற்றில் அதிகத் தவறில்லை. இவ்வாசிரியர் பொதுமை என்ற ஏட்டில் எமுதியுள்ள “சிவத்தம்பியின் அரசியற் பின்னணி” என்ற கட்டுரையிலும் விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் எனும் நூலிலும் மார்க்சியர்களின் இந்தத் திறவாய்வு கடுமையாகச் சாடப்பட்டுள்ளது. அதில் இப்போதும் மாற்றமில்லை. திராவிடர் இயக்கம் தொடங்கி வளர்ந்து தொய்வுற்ற காலத்தில் பொதுமை இயக்கமும் தமிழகத்தில் செயலாற்றி வருகிறது. தமிழகப் பார்ப்பனர்களால் கோட்பாட்டுப் பின்னணி வகுக்கப்பட்டு மேற்சாதியினரால் இயக்கமாக்கப்பட்டு எளிய மக்களின் இயக்கமாக வளர்ந்து வந்த திராவிட இயக்கத்துக்கு உளவியல் ஊக்கம் தந்து அதைச் சரியான பாதையில் திருப்பிவிடாமல் வெளியே நின்று அதன் வேரில் வென்னீருற்றியவர்கள் பொதுமையினரே. இவ்வியக்கம் தன்னிடமிருந்த புரட்சிகரக் கூறுகளனைத்தையும் கைவிட்டுப் பதவி வெறியென்ற ஒன்றன்றி வேறு குறிக்கோளில்லா நிலையை அடைந்தபோது அதனுடன் தேர்தல் கூட்டு வைத்து ஆதாயம் தேடியவர்களும் இதே பொதுமையினரே. தமிழகத்துப் பொதுமையினர் பற்றி அடுத்துவரும் ஓர் அதிகாரத்தில் விரிவாக விளக்குவோம்.

[9] இவ்வாறு மேல் வகுப்புகளிலிருந்து கீழ் நோக்கி இயக்கங்கள் இறங்கும் நிகழ்முறையை லெனின் உருசிய குமுகியல் மக்களாட்சியின் இரு போர்முறைகள்(Two Strategies of Russian Social Democracy) என்ற நூலில் விளக்குகிறார். மேலுள்ள வகுப்புகளை முரண்பாடுள்ள புரட்சிகர வகுப்புகளென்றும் பாட்டாளிய வகுப்பை முரண்பாடில்லா புரட்சிகர வகுப்பென்றும் குறிப்பிடுகிறார். ஒரு முழக்கத்தை அல்லது நிறுவனத்தை குமுகத்திலுள்ள மிகப் பிற்போக்கான வகுப்புகள் கூட ஏற்றுக்கொண்டுவிட்டதென்றால் அம்முழக்கம் காலங்கடந்து விட்டதென்றும் அது தன் புரட்சித் தன்மையை இழந்துவிட்டதென்றும் பொருள். எனவே அடுத்த கட்டத்துக்குரிய மூழகத்துக்கு புரட்சியாளர்கள் முன்னேற வேண்டும் என்கிறார். இதற்கு ஓர் எதிர்நிலை எடுத்துக்காட்டாக இன்றைய தொழிற்கழகங்களையும் பொதுத்துறையையும் கூறலாம்.

0 மறுமொழிகள்: