6.1.08

தமிழ்த் தேசியம் ... 24

மனந்திறந்து... 14

இந்த முன்னுரையை முடிக்கும் முன் குணாவுக்கும் எனக்கும் உள்ள இன்றைய உறவு நிலையையும் அவர் பற்றிய என் உணர்வு நிலையையும் கூறுவது இன்றியமையாதது என்று கருதுகிறேன். நாங்களிருவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கிறது. குணாவின் திராவிடத்தல் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள் என்ற என் திறனாய்வு நூலைப் படித்த பேரா.தொ. பரமசிவம் கூட குணாவின் கருத்தோட்டத்தை ஒட்டி நான் எழுதியுள்ளதாகக் கூறினார். எனவே எங்களிடையில் உள்ள உறவுமுறையைத் திட்டவட்டமாக வெளிப்படுத்த வேண்டியவனாக உள்ளேன்.

நான் அவரை அறிந்த போது அவர் தமிழ் மீதும் தமிழகம் மீதும் தமிழ்ப்பண்பாடு மீதும் அசைக்க முடியாத பற்றுடைய மார்க்சிய - மாவோயியக் கோட்பாட்டுச் சிந்தனையாளராக அவரை மதித்தேன். அதற்கு முந்திய அவரது அரசியல் வரலாறு எனக்குத் தெளிவாகத் தெரியாது. ″நெருக்கடி நிலை″க் காலத்தில் நக்சலிய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ″மிசா″ சிறையில் இருந்தார் என்பது தெரியும். அப்போதுதான் தமிழர் மெய்யியல் என்ற சிறந்த நூலை அவர் எழுதினார். அதற்கு முன் நான் படித்தது மார்க்சிய இயங்கியல் எனும் நூலை. இயக்கவியில் என்றிருந்த மொழிபெயர்ப்பை இயங்கியல் என்று திருத்தி இன்று முழுப்பயன்பாட்டுக்கு வரக் காரணமாயிருந்தவரும் அவரே. தன் கருத்துகள் நூல் வடிவில் வெளிவருவதற்கும் இயக்கமாகச் செயற்படவும் உருவாக்கிய தமிழக ஆய்வரண் என்ற அமைப்பை அவர் உருவாக்கியிருந்தார். அதன் மூலம் தான் பஃறுளி முதல் வையை வரை, விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற என் படைப்புகளை அவர் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். தமிழகத் தேசிய விடுதலை குறித்தும் தமிழகப் பொருளியல் விடுதலை குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். தேசிய விடுதலை பற்றிய ″மார்க்சியர்களின்″ இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து மார்க்சியக் கூடாரங்களில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்திய பெருமை அவருக்கே உரியதாகும். ஆசிய நாடுகளில் முதலாளியம் வளர்ச்சியடைய முடியாது என்ற பொருள்படும் மார்க்சின் ″ஆசியப் பாங்கு″க் கோட்பாட்டை மறுத்து தமிழகத்தில் தொல்காப்பியக் காலந்தொட்டு நிலக்கிழமைப் பொருளியல் வேர் கொண்டு விட்டதென்று நிலைநாட்ட ஆசியப் பாங்கு(Asiatic Mode) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். கந்துவட்டி மூலதனம் தொழில் மூலதனமாக வளர முடியாது என்று எங்கோ ஓரிடத்தில் மார்க்சு கூறியதை ஏற்றும் ஓரிடத்தில் அவர் எழுதியிருக்கிறார். யூதர்களின் கந்து வட்டி மூலதனம் தொழில் மூலதனமாக வளர்ந்து செருமானியருக்கெதிராக நின்றதால்தான் இட்லர் அவர்களை அழிக்க முயன்றான் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி நம் நாட்டில் கந்துவட்டி மூலதனம் மட்டுமல்ல தேசியங்களின் அனைத்து வகைச் செல்வத் திரட்சிகளும் தொழில் மூலதனமாக மாற முடியாமல் ஆட்சியாளர்களின் கெடுபிடிகளும் ″மார்க்சியர்″ - மார்வாரிகளின் கூட்டணியும் தடுத்துள்ளன என்ற உண்மையை அவருக்கு நான் எழுதினேன். பாட்டாளியக் கோட்பாட்டின் மீது அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது, இன்றும் அது இருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி இருந்தவர் திடீரென்று வேறு ஒரு திசைக்குத் திரும்பினார். அதன் பின்னணி வெங்காலூர்த் தமிழர்கள் மீது கன்னட வெறியர்களும் கர்நாடக அரசும் நிகழ்த்திய வன்முறைக் கொடுமைகள் தாம். இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் உள்ள திராவிடக் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் நடந்துகொண்ட முறை குணாவுக்கு வெறுப்பூட்டியது. எனவே அவர் திராவிடக் கோட்பாட்டைப் பற்றி மறு ஆய்வு செய்யத் தொடங்கினார். திராவிட இயக்கத்தில் முன்னாள் சென்னை மாகாணத்திலும் இன்றைய தமிழகத்திலும் உள்ள தலைவர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின், குறிப்பாகத் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருப்பதைக் கண்டார். அதே போன்று இன்று கர்னாடகத்தில் அங்குள்ள தெலுங்கர்கள் தமிழர்களுக்கெதிராக அங்குள்ள கன்னடர்களுடன் சேர்ந்து நிற்பதையும் கண்டார். பெரியார் தன் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பதில் பிடிவாதமாக இருந்ததை அறிந்தார். எனவே திராவிடக் கோட்பாட்டை உடைப்பது தமிழ்த் தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு வந்தார். எனவே திராவிடத் தேசியக் கோட்பாட்டைத் தகர்க்கத் தொடங்கினார். அதன் தொடக்கமாகச் சில கட்டுரைகளும் இந்தியத் தேசியமும் திராவிடத் தேசியமும் போன்ற நூல்களும் வெளிவந்தன. தொடக்கத்தில் அவரது கட்டுரைகளைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தமிழ் நிலம் இதழில் வெளியிட்டார். அவ்வாறு வெளியிட்டதற்கும் ஒரு சிறு வரலாற்றுப் பின்புலம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

பாவாணரும் அவரது தனித்தமிழ்க் கோட்பாடும் சொல்லாய்வுக் கட்டுரைகளும் பரவலான ஈர்ப்பைப் பெறுவதற்குப் பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழ் மூலம் பெரும்பங்காற்றியுள்ளார். பாவாணரது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த ஆதரவும் கொடுக்காத நிலையில் அதைப் பற்றாளர்களின் ஒத்துழைப்புடன் பங்கு முயற்சி மூலம் மேற்கொள்ளும் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவரும் அவரே. இறுதியில் பெரு முயற்சிகளுக்குப் பின் அரசு சார்பில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குக் கருணாநிதி அரைமனதுடன் இசைந்தார். திருவாரூரில் இயற்றமிழ் பயிற்றகம் மூலம் ஆசிரியர்களுக்கும் பிறருக்கும் தமிழ்ப் புலவர் தேர்வுப் பயிற்சியளித்தும் இலக்கண நூல்கள் யாத்தும் தமிழ்ப் பணியாற்றி வந்த பாவாணர் பின்பற்றாளர் புலவர் த.சரவணத் தமிழன் திருவாரூரில் திரு.வி.க.வுக்கு நிறுவியிருந்த மார்பளவுச் சிலை திறப்பின் போது அவர் வலியுறுத்தியதன் அடிப்படையில் விழாவில் உரையாற்றிய குன்றக்குடி அடிகளார், மேடையிலிருந்த கருணாநிதியை நோக்கி, இதைக் கூட செய்யவில்லையானால் நீங்கள் விளங்கமாட்டீர்கள் என்று சாவமிட்டதன் பின் அதே மேடையில் அறிவிக்கப்பட்டு வேண்டாத பிள்ளையாய் வாழ்ந்த அத்துறையில் பாவணர் தன் பணியைத் தொடர்ந்தார்.[1] இந்நிலையில் பாவாணரின் இறுதி நாட்களில் பெருஞ்சித்திரனார் அவர் மீது குறைகள் கூறத் தொடங்கினார். செ.சொ.பி. அகரமுதலி உருவாக்குவதை விட வீடு கட்டுவதில் அதிகக் கவனம் செலுத்துகிறார் என்றார். அது ஓரளவு உண்மை தான். இறைவன் தன்னை இந்தச் சொ.பி.அகரமுதலியை உருவாக்குவதற்காகவே படைத்துள்ளான்; அதை முடிக்குமுன் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற அசைக்க முடியாத மூடநம்பிக்கையை அவரே பலமுறை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் பெருஞ்சித்திரனார் அக்காரணத்தால் மட்டும் இந்நிலையை எடுத்தாரா என்று உறுதியாகக் கூற முடியவில்லை, ஏனென்றால் பாவாணர் காலமானதும் பெருஞ்சித்திரனார் ஒரு படி மேலே சென்று, பாவாணரின் சொல்லியல் ஆய்வு முறை தனக்கு உடன்பாடில்லை, அவர் வேர்ச் சொற்களை மனிதன் படைத்தான் என்றதாகவும் தான் அவை தாமே தோன்றின என்பதாகவும் கூறினார். யாரோடும் யாருக்கும் கருத்து முரண்படும் உரிமை உண்டு. ஆனால் முரண்படும் கருத்து எதிர்க்கருத்துக்கு மேம்பட்டதாயில்லாவிட்டாலும் இணையாகவாவது இருக்க வேண்டும். பெருஞ்சித்திரனாரின் கருத்து பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒன்று. எனவே அவரது நிலைப்பாட்டைக் கண்டித்து வெங்காலூரிலிருந்து வெளிவந்த மீட்போலை என்ற இதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளிவருவதற்கு குணாவின் தூண்டுதல் உண்டு. அதே நேரத்தில் பாவாணருக்குப் பின் செ.சொ.பி.அகரமுதலித் திட்டத்தின் பொறுப்பு இயக்குநராக அதுவரை பாவாணரின் கீழ்ப் பணியாற்றி வந்த பேரா.இரா.மதிவாணன் அமர்த்தப்பட்டார். அவர் அப்பணிக்குத் தகுந்தவரல்ல என்று தென்மொழி வாயிலாகப் பெருஞ்சித்திரனார் கூறத் தொடங்கினார். பாவாணர் தன்னைத்தான் தனக்குப் பின் இயக்குநராக அமர்த்த வேண்டுமென்று விரும்பினார் என்று மதிவாணன் எதிர்வழக்காடினார். பெருஞ்சித்திரனார் அந்தப் பதவியில் தான் அமர விரும்பினார் என்று எண்ணத் தோன்றியது. அதே நேரத்தில் பெருஞ்சித்திரனாரின் மருமகனான ப.அருளி அவர்கள் தமிழறிஞர் ந.சுப்புரெட்டியார் தலைமையில் சொற்பிறப்பியல் ஆய்வுச் சொற்பொழிவுத் தொடர் ஒன்று நடத்தினார். சுப்புரெட்டியார் நானறிந்த வரையில் தனித்தமிழ்க் கொள்கையையோ பாவாணரின் மொழி ஆய்வு அணுகலையோ ஏற்றுக்கொள்ளாதவர். நான் இதனைச் சுட்டிக்காட்டி செ.சொ.பி.அகரமுதலித் திட்டத்துக்கு இயக்குநர் பதவிக்குத் தானோ அருளியோ வரவேண்டுமென்று விரும்பினால் தென்மொழி அன்பர்களைக் கூட்டி ஒரு தீர்மானம் போட்டு விடுத்தால் அப்போதைய முதல்வர் ம.கோ.இரா. வாக்கு வங்கிக்காகக் கட்டாயம் அதை ஏற்பார்; அதை விடுத்து எதிரி முகாமில் அடைக்கலம் புகுவது முறையல்ல என்று திரு.ப.அருளிக்கு எழுதினேன். பெருஞ்சித்திரனாருக்கு இது குறித்து ஏதாவது எழுதினேனா என்பது நினைவில்லை. ஆனால் அருளி தன் சொற்பிறப்பியல் ஆய்வுத் திறனைப் பாருங்கள் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எழுதினார். இந்த வகையில் எங்களிடையில் ஒரு சிறு மடல்வழிப் போர் நடைபெற்றது.

பெருஞ்சித்திரனாருக்குத் தொண்டர்களை அணிதிரட்டிப் போரிடும் எண்ணமோ அதில் நம்பிக்கையோ, அந்தத் திறனோ இருந்ததில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் அவர் இறுதிவரை கருணாநிதியை நோக்கிக் கெஞ்சுவதும் மன்றாடுவதும் வேண்டுகோள் விடுப்பதும் மிஞ்சிப் போனால் எச்சரிக்கை விடுப்பதும் சாவம் கொடுப்பதுமாகத் தன் காலத்தை முடித்துக் கொண்டார். அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏறக்குறைய ஓரிலக்கம் நெஞ்சங்களைத் தன் வாழ்நாளில் ஒரேயொரு போராட்டத்திலாவது முறையாக அவர் ஈடுபடுத்தவில்லை.

பேரா.இரா. மதிவாணன் வீரசிவனிய வகுப்பைச் சேர்ந்தவர். கன்னடத்தை வீட்டுமொழியாகக் கொண்டவர். இருப்பினும் தமிழ் மீது அவர் வைத்திருந்த நேயமும் பற்றும் ஐயத்திற்கப்பாற்பட்டவை என்பது என் கருத்து. ஒரு கிரேக்க நாடகத்தில் இடம் பெற்றிருந்த சில உரையாடல்கள் கன்னட மொழியிலமைந்தவை என்ற ஒரு கன்னட மொழியறிஞரின் கருத்தை மறுத்து அவை தமிழ் மொழி உரையாடல்கள் என்று விளக்கி, கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் என்ற தன் நூலில் காட்டியவர். சொற்பிறப்பியலாய்வு குறித்தவரையில் அவர் பாவாணரின் இடத்தைப் பிடிக்கத் தகுந்தவர் என்றும் என்னால் கூற முடியவில்லை. அவர் அப்பதவியில் இறுதி வரை அமர்ந்திருந்தது பெருஞ்சித்திரனாரின் அணுகல் பிழையால் தான் என்பது என் கருத்து.

பேரா.மதிவாணனிடம் சொல்லாய்வுக்கும் அகராதித் தொகுப்புக்கும் பொருந்தாத ஓர் அணுகலை நான் கண்டேன். செந்தமிழ்ச் செல்வி இதழில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக தமிழில் மக்கள் வழக்கிலிருக்கும் பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லொன்றைக் குறிப்பிட்டு அது பற்றி அவருக்கு மடல் எழுதினேன். பல நாள் எங்களுக்கிடையிலிருந்த மடல் தொடர்பை அன்றிலிருந்து அவர் நிறுத்திக் கொண்டார். ஒரு சொல்லாய்வாளனுக்கும் அகராதி தொகுப்பாளனுக்கும் எந்தச் சொல்லும் தீண்டத்தகாததாய் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. எவ்வாறு ஒரு மனிதன் அல்லது விலங்கின் எந்த ஒரு நோயையோ அல்லது உறுப்பையோ தீண்டத்தகாதது என்று ஒரு மருத்துவன் ஒதுக்க முடியாதோ, ஒதுக்கக் கூடாதோ அதைப் போன்றது தான் இதுவும். அவையல் கிளவி, இடக்கர் அடக்கல், கொச்சை வழக்கு, ″கெட்ட வார்த்தை″ என்று எந்தச் சொல்லையும் அவன் ஒதுக்கக் கூடாது. ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் உள்ள விரிவான அகராதிகளில் மக்களிடம் புழங்கும் அனைத்துக் ″கொச்சை″ச் சொற்களும் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். ஆனால் இந்த வகையில் தமிழ் அகராதித் தொகுப்பாளர்களிடமும் சொல்லாய்வாளர்களிடமும் இந்த அடிப்படைக் குறைபாடு இருக்கிறது. பாவாணரிடம் இந்தக் குறைபாடு இருந்ததா என்று உறுதியாக என்னால் கூற முடியவில்லை; ஏனென்றால் அவரவது அனைத்துப் படைப்புகளையும் படிக்க எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அவருக்கும் தமிழக வரலாற்று அணுகலைப் பொறுத்த வரையில் ஒரு மேல்தட்டு நடுத்தர வகுப்பு மனப்பான்மை, அதாவது வெள்ளாளக்கட்டு எனப்படும் பூணூல் கழித்த பார்ப்பனியக் கண்ணோட்டம் இருந்தது. ஆயினும் அவரது இந்தக் கண்ணோட்டமோ அல்லது சமயம் சார்ந்த மூடநம்பிக்கையோ அவரது சொல்லாய்வுத் திறன் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது என் கணிப்பு. நானறிந்தவரையில் பாவாணரை அடுத்துத் தமிழ்ச் சொற்பிறப்பாய்வில் ஆற்றல் மிக்கவராக நான் கண்டது புலவர் இளங்குமரனைத்தான். தனக்குப் பிறமொழி அறிவு (ஆங்கிலம்) போதவில்லை என்றோ என்னவோ அவர் அப்பணியைத் தொடரவில்லை. அவர் இன்று திருக்குறள் தவச்சாலை நிறுவித் தன் கவனத்தை அத்திசையில் திருப்பியிருப்பது தமிழ்ச் சொல்லாய்வுக்கு ஒர் இழப்பென்று நான் கருதுகிறேன். திரு.ப.அருளி அவர்களைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அவரிடம் முனைப்பாகத் தெரிந்தது சொல்லாய்வுத் திறனை விட ஆரவாரமிக்க ஒரு நடை. ஆழமான ஆய்வுக்குப் புறம்பானது அது என்பது என் கருத்து. ஆய்வும் அவ்வளவு சிறப்பாகப் படவில்லை. தொடர்ந்து அவரது படைப்புகளை நான் படிக்கவில்லை. பாவாணரின் வாழ்நாளில் பெருஞ்சித்திரனார் அருளிக்கு அகர முதலித் திட்டத்தில் இடம் கேட்டிருக்கக் கூடுமோ அதற்கு அவர் இசையாததால் தான் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதோ என்ற ஐயம் எனக்கு இதை எழுதும் போது ஏற்படுகிறது.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பேரா. மதிவாணன் மீது ஏற்பட்ட மனத்தாங்கலால் தான் பெருஞ்சித்திரனார் குணாவின் கட்டுரைகளுக்குத் தன் இதழில் இடமளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் நான் விரித்துச் சொல்லும் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் பல்வேறு வரலாறுகளை எழுதுவோர் அவற்றில் இடம்பெறும் பெருமக்களின் ″மறுபக்கங்″களைக் காட்டுவதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் உண்மையான கொள்கைப் பிழை, கோட்பாட்டுப் பிழைகள் எவையெவை அவற்றில் தனிமனிதப் பிழைகளின் பங்கு என்ன எனப் பின்வரும் தலைமுறைகளுக்குத் தெரியாமல் போகிறது. அதனால் பிழைகள் ஒன்றன் மீதொன்றாகச் சுமையேறிக் குமுகத்தைத் தலைத்தூக்க முடியாமல் செய்துவிடுகின்றன. இன்றைய தமிழக இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் சமகால வரலாற்றுக் குமுக நிகழ்வுகளைப் படம்பிடிக்காதது[2] போல் வரலாற்று வரைவிலும் ஒன்றேல் தலைவர்களைக் கடவுள்களாகவும் இயக்கங்களைச் சமயங்களாகவும் கொண்டாடுகின்றனர் அன்றேல் முற்றிலும் இருட்டடிப்புச் செய்கின்றனர். இதனால் தமிழக மக்களிடம் இயல்பாகவே ஒரு குறைபாடு, அறிவின்மை, அடிமை மனப்பான்மை, கோழைக்குணம், உணர்வின்மை போன்றவை இருப்பதாக அவர்களே தங்களைத் தாழ்த்தி மதிக்கக்கூடும். இன்றைக்கே அத்தகைய ஓர் உணர்வு பலருக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது. 1965 இந்திப் போராட்டத்தை மாணவர்களிடமிருந்து பொதுமக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டபோது ஓடி ஒளிந்து தமிழக மக்களின் நலன்களைக் காட்டிக்கொடுத்த அண்ணாத்துரை - கருணாநிதி கும்பல் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்கு மட்டும் அதனைப் பயன்படுத்திக்கொண்ட கயமையையும் உரிமைகளைக் காக்கவென்று அணிதிரண்ட தமிழக உழவர்களின் போராட்டத்தினுள் நுழைந்து போராட்டம் வெற்றி இலக்கை நெருங்கிவந்த நேரத்தில் அவர்களை பணக்கார உழவர்கள் என்றும் சிறு - குறு உழவர்கள் என்றும் பிரித்து போராட்டத்தைச் சிதறடித்து அமெரிக்க வல்லரசிய ஒற்றனான நக்சலியப் பிரிவுத் தலைவன் வினோத் மிசிராவின் கூலிப்படையாகிய நக்சலியக் குழுக்களையும் அதுபோலவே தமிழகத் தேசிய இயக்கத்தினுள் புகுந்தும் ஊடுருவியும் வல்லரசியம் வகுத்துத்தரும் பல்வேறு உத்திகளையும் கையாண்டு தமிழகத் தேசிய முதலாளியப் புரட்சி நோக்கி தமிழக மக்களின் கவனம் சென்றுவிடாமல் திசைதிருப்பும் பிற மாவோயியக் குழுக்களையும்[3] திராவிட இயக்கத்தினுள் கொள்கைப்பிடிப்பு, நேர்மை, நாணயம் போன்ற தன்மைகளைக் கொண்டிருந்தோரை பொறுக்கிகளாக்கி அப்படி ஆக மறுத்தோரை ஒதுக்கி ஒழித்து தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் ஒரு நிறுவனமாக அந்த இயக்கத்தை சிதைத்ததுமின்றி புதிதாகத் தோன்றும் இயக்கங்களிலும் ஊடுருவி அங்கிருந்தும் தனக்கேற்றவகையில் அணிசேர்த்துவரும் கருணாநிதியின் செயல்களையும் அந்த நிகழ்முறையில் உருவான ம.கோ.இரா., செயலலிதா, இராமதாசு, வைக்கோ, நெடுமாறன்[4] போன்றோரின் உண்மையான முகங்களையும் ஒவ்வொரு இயக்கத்தின் அல்லது பெருமக்களின் பொதுவாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் சமகாலத்தவரும் வரும் தலைமுறையினரும் தெளிவாக அறிந்து இந்தச் சூழலுக்கேற்ற வருங்கால உத்திகளை வகுத்துக்கொள்ளும் வகையில் வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறேன்.

அத்துடன் நம் மக்கள் சாதிகளாகப் பிரிந்து நிற்பதற்கு நிகராக இயக்க வரலாற்றையும் சாதிக் கொன்றாகப் பிய்த்தெடுக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. நாடாரான ப-ர்.பு.இராசதுரை, சுயமரியாதை இயக்கத்தில் நாடார்களின் பங்கு என்ற நூலில் நாடார்களைப் பற்றி மட்டும் கூறுகிறார். அதில் ஈ.வெ.ரா.வுக்கும் கி.ஆ.பெ.விசுவநாதத்துக்கும் நடந்த மோதலை ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன் தீர்த்து வைத்தார் என்று கூறுகிறார். ஆனால் அந்தப் பூசல் என்னவென்று அவர் கூறவில்லை. திராவிட இயக்கமும் வெள்ளாளரும் என்ற நூலில் வெள்ளாளர்களைப் பற்றிப் பேசுவதால் இதை விளக்கவில்லை என்று கூறி நூலாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி விட்டுவிடுகிறார். ஆக, தமிழக மக்களுக்கு உண்மையான முழு வரலாறுகளை அறியும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதைச் சொல்வதற்காக நான் தொடர்ச்சிகளை விட்டுத் தடம் மாறி நடைபோட்டமைக்கு என்னைப் பொறுத்தருள்க.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] இந்ததச் செய்தியைப் புலவர் த.ச. தமிழன் என்னுடன் நேருரையாடலின் போது கூறினார்.

[2] 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு இலக்கியம் எதுவும் தமிழில் படைக்கப்படவில்லை என்ற குறையை ப-ர்.க.ப.அறவாணன் ஒரு மேடைப்பேச்சின்போது குறிப்பிட்டார்.

[3] உருசியாவின் தாலின் காலமான பின் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை தனக்கே கிடைக்கும் என்று மாவோ கண்டுவந்த கனவைக் குருச்சேவ் கலைத்ததால் மாவோவுக்கும் உருசியாவுக்கும் உருவான பகை, குருச்சேவ் தாலின் மீது அளவுமீறிச் சேற்றைவாரி இறைத்ததால் உலகப் பொதுமை இயக்கத்தினரில் கணிசமான ஒரு பகுதியினர் உருசியாவுக்கு எதிராக மாறியது என்ற ஒரு சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா சீனத்தோடு நட்பை வளர்த்துக்கொண்டது. மாவோவின் சிந்தனைகள் என்ற பெயரில் பணக்காரர்கள் நிறைந்த இந்தியா போன்ற, ஆனால் பொதுமை, நிகர்மை இயக்கங்களால் திட்டமிட்டு நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்திலிருந்து முதலாளியக் கட்டத்தினுள் நுழையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட ″ஏழை″நாடுகளின் எதிர்காலமான நாட்டுப்பற்றும் நேர்மையும் துணிவும் போராட்ட உணர்வும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி அவர்கள் நாடுகளில் அரைநிலக்கிழமையியமும் அரைமுதலாளியமும் நிலவுகின்றன; எனவே ஊர்ப்புறங்களிலும் நகரங்களிலும் உள்ள பணக்காரர்களை ″அழித்தொழித்தால்″தான் அங்கெல்லாம் பொதுமைக் குமுகம் மலரும் என்று உருவேற்றி அவர்கள் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுத்துச் சந்தியில் கொண்டுவந்து நிறுத்தியது அமெரிக்க உளவு முகவம். நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ″ஏழை″நாடுகளின் காவல்துறைகளும் படைகளும் அந்நாடுகளின் எதிர்கால நம்பிக்கைகளாக மலர்ந்திருக்க வேண்டிய அம்மலர்களை காக்கை குருவிகளைப் போல் அழித்தொழித்தன. இந்த இழப்பு மொத்தத்தில் பல பத்திலக்கங்கள் இருக்கும். இலங்கையில் மட்டும் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் துணையோடு வேட்டையாடப்பட்ட சிங்கள இளைஞர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலக்கத்தைத் தாண்டும்.

இன்னொருபுறம் அறிவுத்துறையில் திறனுள்ள இளைஞர்ளை இனங்கண்டு தாளிகைகள் நடத்த உதவியது உளவு நிறுவனம். பல இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பிடிநிலையை உருவாக்கவேண்டிய பருவத்தில் நாட்டுக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசியும் இதழ் நடத்தியும் அண்டையிலுள்ள செல்வாக்குள்ள மக்களைப் பகைத்து குமுகத்திலிருந்து அயற்பட்டு நின்றனர். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் உளவு நிறுவனம் தன் உதவியை நிறுத்திவிட்டு இயன்றால் இதழையும் இயக்கத்தையும் நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்று நட்டாற்றில் விட்டுவிட்டது. உளவு நிறுவனம் அளித்த உதவியை நம்பி மணம் செய்து பிள்ளைகுட்டியென்றான பின் இப்போது என்ன செய்வது? இப்போது அதே உளவு நிறுவனமே மாற்றுவழியையும் காட்டியது. அதுதான் ″தன்னார்வத் தொண்டு″. இன்னொன்று, திட்டங்கள் என்ற பெயரில் நூல்கள் எழுதுவது. இதற்குச் சான்றாக எசு.வி.இராசதுரையைக் கூறலாம். இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, தொண்டு என்ற பெயரில் அமெரிக்கா நம் நாட்டு மக்கள் மனதில் விதைக்க விரும்பும் தவறான கருத்துகளை விதைப்பதும் அவர்களை இந்நிறுவனங்கள் மூலம் தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதும். அறிவுத்தளத்தில் குமுகத்தில் தங்களைச் சிந்திக்கத் தெரிந்தோர் என்று கருதிக்கொண்டிருப்போரின் சிந்தைகளில் தான் விரும்பும் கருத்துகளை விதைப்பது. தமிழகத்தின் எல்லைக்குள் செயற்படும் இத்தகையோர் தமிழ்த் தேசியம் பேசுவதுதான் நாம் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

ஆயுதம் தாங்கி அழித்தொழிப்பில் ஈடுபட்டார்கள் என்றோ கைக்குண்டு, நாட்டுத் துப்பாக்கி போன்றவற்றைச் செய்தார்கள் என்றோ குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை அமெரிக்க உளவு நிறுவனத்தின் இன்னொரு படைப்பான குடிமை உரிமைகளுக்கான மக்கள் பேரவை(பி.யு.சி.எல்.) மூலம் தாங்கள் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியை எழுதிவாங்கி பிணையில் வெளியேவிட்டு அவர்களைத் தமிழ்த் தேசியம் பேசவிட்டிருக்கின்றனர். புலவர் கலியபெருமாள், தியாகு போன்றவர்கள் இவ்வகையினர். தமிழ்த் தேசியம் பேசுகின்ற எசு.வி.இராசதுரை எனப்படும் க.மனோகரன், பேரா.கல்யாணி போன்றவர்கள் கு.உ.ம.பே.யின் செயல்மறவர்கள். தியாகு தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நடத்துவதால் ″தமிழ்த் தேசியர்″களால் மிகவும் போற்றப்படுபவர். இதில் என்ன தவறு என்று பலரும் நினைக்கக் கூடும். அதற்கு விடை காணும் முன் நாம் சிறிது சீன வரலாற்றினுள் சென்றுவர வேண்டும்.

1960களில் திடீரென்று ஒருநாள் மா சே துங், சீனப் பண்பாடு சீரழிந்துவிட்டது; பண்பாட்டு எதிரிகளைக் களையெடுக்கவேண்டும் என்று ஓர் இயக்கம் தொடங்கினார். உடனே ″பண்பாட்டுப் புரட்சி″ அறிவிக்கப்பட்டு மாபெரும் ″களையடுப்பு″ வெறியாட்டம் அரங்கேறியது. (இது பற்றிய கூடுதல் செய்திகளுக்கு, பார்க்க ஆசிரியரின் மார்க்சியம் - ஒரு பட்டறிவுப் பார்வை, வேங்கை பதிப்பகம், மதுரை, 2000.) உடனே இங்குள்ள தோழர்களும் பண்பாட்டுப் புரட்சி மந்திரத்தை உருப்போடத் தொடங்கிவிட்டனர். வெறும் பொருளியல் நடவடிக்கைகளால், அதாவது பொருளியலியம்(Economism) எனப்படும் கம்யூன்கள் எனப்படும் குமியங்களை நிறுவி அவற்றின் கீழ் நிலங்களையும் தொழில்களையும் கொண்டுவருவதால் (ஏழை நாடுகளில் கூலி உயர்வு, பிற சலுகைகளுக்கான போராட்டம்)மட்டும் பொதுமைக் குமுகத்தை அமைத்துவிட முடியாதாம்; பழைய பண்பாட்டைத் தூக்கிப் பிடிப்போரான மா சே துங்கின் அரசியல் எதிரிகளையும் ஒழித்தாக வேண்டுமாம். இது வல்லரசியத்துக்கு மிகத் தேவையான, மிக வாய்ப்பான ஒரு முழக்கமாகும். நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளியத்தினுள் சென்று பின்னர் பொதுமைக்குள் நுழையாமல் நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் நுழையத் திட்டமிட்டது தான் பொதுமைக் கட்சிகள் ஆண்ட நாடுகளின் சீரழிவுக்குக் காரணம் என்ற உண்மையான காரணம் மறைக்கப்பட்டு பண்பாட்டுக் கோளாறுதான் ஏழைநாட்டு மக்களின் துயரங்களுக்கெல்லாம் காரணம்; எனவே தோழர்களே பண்பாட்டுப் புரட்சி செய்ய வாருங்கள் என்ற அறைகூவலுடன் அமெரிக்கா பணத்தை அள்ளியிறைத்துக்கொண்டிருக்கிறது. எனவே தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்துவது தமிழ் தேசிய விடுதலைக்கு இன்றியமையாத பணி என்று தியாகு போன்ற தமிழ்த் தேசிய மறவர்கள் நம்புகிறார்கள் போலும், அல்லது பிறரை நம்பவைக்கிறார்கள் போலும். பொருளியல் விடுதலை என்ற உண்மையான சிக்கலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவது வல்லரசுகளுக்கு மட்டுமல்ல நம்மை நேரடியாகச் சுரண்டும் மார்வாரிகள் போன்ற உள்நாட்டு விசைகளுக்கும் இன்றியமையாத ஒரு தேவைதானே! அதனால்தான் போலும் தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்தும் ஒருவருக்கு, அவர் பெயர் சரியாக நினைவில்லை, பெயர் தெரியாதவர்களும் மார்வாரிகளின் பெயரையொத்த பெயர் கொண்ட, ஆனால் பள்ளி நடத்துபவருக்கு அடையாளம் தெரியாதவர்களும் இலக்கக் கணக்கில் பணத்தை நன்கொடையாக அள்ளிவிடுகிறார்கள். மார்வாரிகளும் இரா.சே.ச.வினரும்(ஆர்.எசு.எசு.) நேரடியாகவே தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நடதுகிறார்கள் என்ற தாளிகைச் செய்திகள் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை அமைப்பதே தமிழ்த் தேசியப் போராட்டம் என்று கூறுகிறவர்களின் ஏமாற்றைக் காட்டப் போதுமானது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ″பண்பாட்டு விடுதலை″யை ஒரு முகாமையான களமாகக் காட்டுகிறவர்களின் உண்மை உருவை அறியவேண்டுமாயின் பண்பாட்டுத் தேசியம் என்ற பெயரில் சோவியத்துப் புரட்சிக்கு முன்பு அங்குஎழுப்பப்பட்ட முழக்கத்தைக் கண்டித்து லெனின் எழுதியிருப்பவற்றைப் படித்துப் பாருங்கள்.

[4] இப்போது தொல்.திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

0 மறுமொழிகள்: