24.9.07

தமிழ்த் தேசியம் ... 6

உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை

கடந்த 80 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வலுவான தேசிய உணர்வுகள் இருந்தாலும் ஓர் உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண வேண்டுமாயின் இன்னொரு தமிழர் தேசியமான ஈழத் தேசியத்தின் வரலாற்றை ஆய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தியா பல தேசியங்ளைக் கொண்ட நாடு. இலங்கையோ இசுரேலைப் போல் இரு தேசியங்களை மட்டுமே கொண்டது. எனவே இந்தியாவைப் போல் அனைத்துத் தேசியங்களையும் கடந்த தேசிய ஒடுக்குமுறையாளர்கள் இல்லை. இந்தியாவைப் போல் மறைமுக ஒடுக்குமுறை இல்லை. பெரும்பான்மை தேசிய இனம் நேரடியாவே தன் ஒடுக்குமுறையைச் செயற்படுத்துகிறது.

நெடுநாட்களாகவே கல்வியிலும் ஆட்சிப் பணியிலும் நிலைத்துவிட்ட தமிழ் மேற்சாதியினர் சிங்களவர் மீது என்றும் மேலாண்மை செலுத்தலாம் என்ற இறுமாப்பில் வெள்ளையர் வெளியேறிய போது தம் நலன்களளைப் பாதுகாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதிலும் கூடச் சிங்களர்களுக்குத் துணைநின்றனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பெரும்பான்மையினர் சிறுகச் சிறுகத் தமிழ்ப் பகுதிகளில் குடியேறித் தமிழர்களை அவர்களின் மரபுப் பகுதிகளிலும் சிறுபான்மையராக்கி இறுதியில் இளைஞர்களின் கல்வியிலும் கைவைத்தபோது தான் சூழ்நிலையின் கடுமையை உணர்ந்தனர். ஆயுதத்துடன் தோன்றிய எதிரியை ஆயுதம் கொண்டு எதிர்க்க வேண்டியதாயிற்று. ஆயுதப் போராட்டமென்ற கடைதலில் உருவான வெணணெய் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். ஆயுதத்துடன் நிற்கும் எதிரிக்கு முதல் மறுமொழி ஆயுதம் தான், அதன் பின்னரே கோட்பாடுகளும் கொள்கைகளும் என்ற தூய இயங்கியலில் அவ்வியக்கம் ஊசலாட்டமின்றிச் செயற்பட்டதால் அது இன்று களத்தில் காலுன்றி, வேரூன்றி நிற்கிறது.

பிறரெல்லாம் ஏன் ஒடினார்கள்? பிறரெல்லாம் படித்து வேலை தேடி ஒட்டுண்ணி அடிமை வாழ்க்கை வாழப் புறப்பட்டவர்கள். அதற்கும் வழியில்லை என்றபோது ஆயுதம் தூக்கிப் பார்த்தனர். எனவே மக்களுடன் பிணைப்பு ஏற்படவில்லை. எதிரியிடமே சரணடைந்து விட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கமோ எளிய மக்களின் அடிப்படையான நிலத்தைப் பிடுங்கிய, பிடுங்க இடைவிடாது முயலும் எதிரியை எந்தத் தொய்வுமின்றித் தாக்கி வந்தது, வருகிறது. எனவே அதற்கு மக்களின் முழு ஆதரவும் உள்ளது. ஈழத்தில் உழைக்கும் இறுதித் தமிழன் இருக்கும் வரை அவனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருக்கும்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேசிய முயற்சிகள் அனைத்துமே மொழி, பண்பாடு குறித்தனவாகும். இங்கு அவை இரண்டுமே வெளிப்படையாக அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன. பொருளியல் சுரண்டலும் அடிமைத்தனமும் மிக மறைமுகமாகவும் சோசலிசம், சமூகநீதி, ஒப்புரவு, குழந்தை உழைப்பு எதிர்ப்பு, மாசுக் கட்டுப்பாடு, சிறு தொழில்களைப் பாதுகாத்தல், பணக்காரரிடமிருந்து ஏழைகளைக் காத்தல், நில உச்சவரம்பு, நிலச்சீர்திருத்தம் என்ற ″உயர்ந்த″ நோக்கங்களின் பெயரால் நடைபெறுவதால் அதனை இனங்கண்டுகொள்ளும் தெளிவும் அதனை மக்கள் முன் எடுத்து வைக்கும் துணிவும் யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் பெரியார் தொடங்கி நெடுமாறன் வரை மார்வாரிகளின் பிடியில் சிக்கியவர்கள். எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாண்டு மார்வாரிகளைக் காத்து வருகிறார்கள்.

மார்வாரிகளின் ஆதிக்கத்துக்கெதிராகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் சிவகாசி, விருதுநகர் முதலாளிகள் குமரி அனந்தன், நெடுமாறன் முதலியவர்களை ஆதரித்தனர். ஆனால் அவர்களின் உதவியால் அரசியலில் வளர்ந்த பின் இத்தலைவர்கள் மார்வாரிகளிடமே தங்களை நம்பிய முதலாளிகளின் நலனுக்கு விலைபேசிவிட்டார்கள். எனவே இம்முதலாளிகள் நம்பிக்கையிழந்து எதிரியிடமே மண்டியிட்டுவிட்டார்கள். அண்மையில் மார்வாரி நிறுவனங்கள் முன் மறியல் செய்யும் நெடுமாறனின் போராட்டம் கூட மார்வாரிகளை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்சியேயன்றி வேறில்லை, ஏனென்றால் பல முறை இவர் இது போன்ற முயற்சிகளைத் தொடங்கிவிட்டுக் காணாமல் போயுள்ளார்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: